Year: 2015

  • பாம்பைக் கண்டால்…. 1

    நடராஜன் கல்பட்டு

    பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்!

    ஆமாம் எனக்கும்தான். பாம்பு பற்றிய பல கட்டுக் கதைகள் கூட சுவையாகத்தான் இருக்கும். எத்தனை திரைப்படம் பாம்பு பற்றி எடுத்தாலும் ஓடத்தான் செய்கிறது. அதென்னமோ பாம்பு என்று சொன்னாலே எல்லோருக்கும் கண்ணில் பளிச்சென்று ஒரு மின்னல் வந்து போகும் இல்லையா?
    சமீபத்தில்  தினமணியில் கண்ட ஒரு செய்தி:
    பாம்புக்கு காது கேட்குமா? தொடர்ந்து குறிவைத்து தாக்குமா? பாம்புக்கு வார்க்கப்படும் முட்டையும், பாலையும் அது குடித்து விடுகிறதா? கொம்பேறிமூக்கன் தன்னால் கடித்து இறந்தவரை எரிக்கும் வரை மரத்தில் மறைந்திருந்து பார்க்குமா? இவையெல்லாம் உதகையில் நடைபெற்ற பாம்புகள் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற பார்வையாளர்களிடமிருந்து கேட்கப்பட்ட கேள்விகள்.
     புவி வெப்பமடைதல் அபாய அளவுகளைக் கடக்கத் தொடங்கியதிலிருந்து அனைத்து பகுதிகளிலுமே தட்பவெப்பநிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பாம்புகளே இல்லையெனவும், அப்படியே இருந்தாலும் அவை விஷத்தன்மை அற்றவையே என்ற நிலைதான் மலை மாவட்டமான நீலகிரியில் இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும், சாலையோரங்களிலும் பாம்புகள் காணப்படுகின்றன.
     எனவே, நீலகிரி மக்களும் பாம்புகளைக் குறித்து தெரிந்து கொள்ளவும், அவை கடித்தால் உடனடி முதலுதவி என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளவும் சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. இதில் பாம்புகளைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டோர் முதல் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் பாம்புகளை பிடித்து அப்புறப்படுத்துவோர் வரை பல்வேறு தரப்பினரும்
     பங்கேற்றனர்.
     இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்த உதகை அரசு கலைக்கல்லூரியின் உதவி பேராசிரியரும், சென்னை பாம்பு பண்ணையின் முன்னாள் இணை இயக்குநருமான
     டாக்டர் கண்ணன் நம்மிடம் தெரிவித்ததாவது:
     “”பாம்புகள் என்றாலே ஒருவித பயம் உள்ளது. அதுதான் பாம்புகளைக் குறித்த பல்வேறு தவறான தகவல்களுக்கும் காரணமாகும். பயம், மூடநம்பிக்கை, குறைந்துவரும் வன வளம், வாழ்விடங்கள் குறைப்பு போன்றவை பாம்புகளின் அழிவுக்குக் காரணமாக அமைகின்றன.
     பாம்புகளுக்கு மனிதர்களைப்போல வெளிப்புற செவியில்லாமல் உட்புற செவி மட்டுமே உள்ளதால் அதிர்வுகளை மட்டுமே அவை உணரும். அவற்றிற்குக் காது கேட்காது. அதிர்வுகளுக்கு ஏற்ப நகரும். அதனால், இவை துரத்திச் சென்று மனிதர்களைக் கடிக்கும் என்பது கற்பனையானதே. அதேபோல, பாம்புக்கு மூளைத்திறன் குறைவு என்பதால் அவற்றால் சிந்திக்க முடியாது. எனவே, பாம்புக்கு முட்டையும், பாலும் வைத்தால் அதை அவை குடித்து விடுகின்றன என்பது நம்பிக்கைதானே தவிர, உண்மையல்ல.
     அதைப்போலவே கொம்பேறி மூக்கன் பாம்பு தான் கடித்து இறந்தவரை மயானத்தில் எரிக்கும் வரை அங்குள்ள மரத்தில் மறைந்திருந்து பார்க்கும் என கூறப்படுவதும் தவறானதாகும். கொம்பேறி மூக்கனுக்கு விஷத்தன்மையே கிடையாது. தவறான தகவல்களால்தான் பாம்புகளைக் குறித்து ஒரு பீதி நமக்குள் உள்ளது.
     பாம்புகள் உழவனின் நண்பர்களாவர். சராசரியாக ஒரு ஜோடி எலி ஆண்டுக்கு தனது குடும்பத்தில் 880 குட்டிகள் உருவாக காரணமாக அமைகின்றது. இவ்வாறு நூற்றுக்கண்க்கில் பெருகும் எலிகளை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாது. பாம்புகளால் மட்டுமே அவற்றை கட்டுப்படுத்த முடியுமென்பதால் தட்டுப்பாடில்லாமல் உணவு தானியங்கள் கிடைப்பதற்கு பாம்புகள் அவசியமானவையாகும்.
     குளிர் ரத்த பிராணியான பாம்புகளால் நீலகிரி போன்ற குளிரான பகுதிகளில் இருக்க முடியாது என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது நீலகிரி மலைப்பகுதியிலும் பல்வேறு வகையான பாம்புகள் வசிக்கத் தொடங்கி
     யுள்ளன.
     இந்தியாவில் 283 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றில் 62 வகை பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாகும். இவற்றில் 4 வகையான பாம்புகள் மனிதர்களின் வசிப்பிடங்களைச் சுற்றி மட்டும் வாழும் தன்மை கொண்டவை” என்றார்.

     இக்கருத்தரங்கில் பங்கேற்ற சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் டாக்டர் பூபதி கூறியதாவது:

     “”பருவநிலை மாற்றங்களால் பாம்புகளில் பல வகை ஏற்கெனவே அழிந்துவிட்டன. ஒருசில வகையான பாம்புகளும் அழிவின் விளிம்பில் உள்ளன.

     உலகிலுள்ள பாம்புகளில் 10 சத பாம்புகள் இந்தியாவில்தான் உள்ளன. தரையில் உள்ள பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாக இருந்தாலும், கடல் பாம்புகள் விஷத்தன்மையற்றவையாகும். பொதுவாக அவை யாரையும் கடிப்பதுமில்லை. விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பு கடித்தால் கண்டிப்பாக மரணம் என்பதும் தவறான தகவலாகும். பயத்தின் காரணமாகவே மனநிலை பாதிக்கப்பட்டு உயிரிழப்பிற்கு ஏதுவாகிறது.

     இந்தியாவில் சுனாமி ஏற்பட்ட பின்னர் நிகோபார் தீவுகள் ஒன்றரை அடி உயரம் கீழேயும், அந்தமான் ஒன்றரை அடி உயரம் உயர்ந்துவிட்டதாகவும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இதுபோன்ற மாற்றங்களும் பாம்புகளின் வாழ்விடங்களை அழிப்பதோடு அவற்றின் இடப்பெயர்ச்சிக்கும் ஏதுவாகிறது.
     எனவே, பாம்புகளைக் குறித்த பீதியை போக்கிக் கொள்வதோடு அவற்றைக் குறித்தும் தெரிந்து கொண்டால் பாம்புகளை நம்மால் காப்பாற்ற முடியும். இயற்கையின் சக்கரத்தில் பாம்புகளுக்கும் பிரதான இடமுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது” என்றார்.

     இந்த கருத்தரங்கைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக வெளியேற்றுவதைக் குறித்து வனத்துறையினருக்கான பயிற்சி முகாமும் நடத்தப்பட்டது.

    பாம்புகள் பற்றி திரு கல்பட்டு நடராஜன் ஐயா அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய மிக சுவாரசியமான தொடரினை அவரது அனுமதியின் பேரில் இங்கு அளிக்கிறேன்.  மிக்க நன்றி ஐயா.  அதன் முதல் பகுதி இங்கே:
    பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது, “கருடா சௌக்யமா? என்று.
    “அவரவர் இடத்தில் இருந்தால் எல்லோரும் சௌக்யமே”, என்றே கருடன் சொன்னது.
    சரி பாம்பின் இடம், அதான் வீடு, எது என்றால் புற்றென்றுதான் எல்லோரும் சொல்வார்கள்.  “அது என்ன பாம்பு தானாகக் கட்டிகொண்ட வீடா? அல்லது வாடகை வீடா?” என்றால் இரண்டும் இல்லை.  பலவந்தமாக ஆக்கிரமித்துக் கொண்ட வீடு அது.
    புற்று என்பது கறையான்கள தாம் வாழக் கட்டிக் கொண்ட வீடு.  அந்தப் புற்றுகளுக் குள்ளோ அல்லது எலி வளைகளுக் குள்ளோ புகும் பாம்புகள் வீட்டு சொந்தக் காரர்களைத் தன் உணவாக்கிக் கொண்டு மிக மிக சௌகரியமாகக் குடும்பம் நடத்தும்.
    வீட்டைக் கட்டியது நாங்கள். குடி வந்தவரோ கூசாமல் தின்கிறார் எங்களை என்கின்றனவோ இந்தக் கரையான்கள்?
    கரையான்
    எலிகளின் கதையும் இதேதான்.  பாம்புகளுக்கு மிகவும் பிடித்த உணவு எலிகளும் தவளைகளும்.
    நம் நாட்டில் உற்பத்தியாகும் தானியங்களில் சுமார் 20 முதல் 25 சத விகித வரையான தானியங்களைத் தின்று தீர்ப்பது எலிகள் என்கின்றனர் நிபுணர்கள்.  அந்த எலிகளின் வளைகளைத் தங்கள் வீடுகளாக்கிக் கொண்டு, எலிகளை உணவாக்கிக் கொண்டு, அவற்றின் பெருக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது பாம்புகள்.  இப்போது சொல்லுங்கள் பாம்புகள் நம் நண்பர்களா இல்லையா என்று.
    பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள்.  ஆனால் எல்லாப் பாம்புகளுமே உயிர் கொல்லும் விஷம் கொண்டவை அல்ல.  ஆனால் எவை கடித்தால் உயிருக்கு ஆபத்து, எவை கடித்தால் ஆபத்து இல்லை என்று எப்படித் தெரியும்?  அதனால் தான் பாம்பைக் கண்டவுடன் அதை அடித்துக் கொன்று விடுகிறார்கள் பலரும்.
    பாம்பு தானாகச் சென்று யாரையும் கடிப்பதில்லை.  நாம் அதைத் துன்புறுத்தினாலோ அல்லது தப்பிப் போய் மிதித்து விட்டாலோ தான் அது நம்மைக் கடிக்கும்.
    அன்டார்டிகா கண்டத்தைத் தவிற மற்ற எல்லாக் கண்டங்களிலும் பாம்புகள் உள்ளன. பாம்புகளில் கிட்டத்தட்ட சுமார் 3000 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றுள் சுமார் 534 வகைப் பாம்புகளே மிகக் கொடிய விஷம் கொண்டவை.
    இந்த மூவாயிரம் வகையான பாம்புகளில் பத்தே சென்டி மீடர் நீளத்தில் மண் புழு போன்றிருக்கும் செய்யான் பாம்பிலிருந்து (Leptotyphlops carlae)  அனகொண்டா என்ற 7.5 மீடர் பாம்பு, மற்றும் 9.0 மீடர் நீளமுள்ள மலைப் பாம்பு வரை உள்ளன.  பல ஆண்டுகளுக்கு முன் 15 மீடர் நீளம் வரை உள்ள பாம்புகள் (Titanoboa cerrejonensis) கூட இருந்தனவாம்.
    செய்யான் பாம்பு
    செய்யான் பாம்பிற்குக் கண் பார்வை கிடையாதாம்.
    இந்த செய்யான் பாம்பு மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான பார்படாஸில் மட்டுமே காணப்படுகிறது எனச் சொல்கின்றனர் பாம்பு பற்றி அறிந்தோர்.  ஆனால் இந்தப் பாம்பை நான் பல முறை பார்த்திருக்கிறேன் நம் ஊர்களிலும்.  இது எந்த அளவுக்கு நாம் நம்மைச் சுற்றி உள்ளவை பற்றிக் குறிப்புகள் எடுத்து வைக்கிறோம்,  அவற்றைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்கிறோம் என்பதைக் காட்டுகிறது.
    மிகச் சிறிய பாம்பினைப் பார்த்தோம்.  மிகப் பெரிய பாம்பைப் பார்க்க வேண்டாம்?  அதுதான் மலைப் பாம்பு,  சுமார் 9 மீடர் நீளம் வரை வளரக் கூடியது.
    மலைப் பாம்பு
    மலைப் பாம்பின் உணவு பறவைகள் மற்றும் சிறிய மிருகங்கள் ஆகும்.  வாயினால் கவ்விப் பிடித்த இரையினை தன் உடலால் சுற்றி வளைத்துப் பின்னர் தனது தசைகளை இறுக்கிக் கொண்டே போய் அவற்றின் உயிரை எடுத்து விடும்.  அந்த இறுக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும்.
    மலைப்பாம்பு அதன் உயிருக்கு ஆபத்து என்று வந்தாலொழிய தரையில் மெதுவாகத்தான் ஊர்ந்து செல்லும்.  மரத்தின் மீதும் ஏறும்.  தண்ணீரில் நன்றாக நீந்திச் செல்லும்.
    வயிறு புடைக்க உண்ட பின் சில நாட்கள் பட்டினி கிடக்கும் உண்ட இரையின் உடல் அளவு பொருத்து.  ஒரு பாம்பு இரண்டு வருடம் வரை பட்டினி கிடந்ததாகக் கூடக் குறிப்பில் உள்ளது.
    கட்டுரை என எழுதும்போது “நான்” வருவது தவிர்க்கப் பட வேண்டிய ஒன்று.  ஆனால் இது படித்துப் பட்டம் பெறுவதற்காக எழுதும் கட்டுரை அல்ல.  பாம்பைப் பற்றி ஒரு நிபுணர் எழுதப் போகும் கட்டுரையும் அல்ல.  பாம்பைப் பற்றி ஒரு பாமரன் எழுதப் போகும் கட்டுரை.  ஆகவே நடுவில் “நான்” நுழைவதை நீங்கள் மன்னித்துக் கொள்ளத் தான் வேண்டும்.
    திருச்சியில் சிங்காரத்தோப்பு என்று ஒரு இடம்.  அதில் உள்ள வீடுகள் எல்லாம் கிருஸ்துவர்களாக மாறிய முன்னாள் அந்தணர்கள் வீடுகள்.  அவர்கள் வீட்டில் பேசுவது  அக்ரகாரத் தமிழில்.  ஆடிக்கழைப்பது, தீபாவளி கொண்டாடுவது, தாலி கட்டிக் கொள்வது என எல்லாம் உண்டு.  ஆனால் பொட்டு வைத்துக் கொள்ள மாட்டார்கள்.  சர்ச்சுக்குப் போவார்கள். அவர்களில் ஒருவர் கலஞ்சென்ற தம்பு ஐயர்.
    தம்பு ஐயர் ஒரு பிராணிகள் விரும்பி.  அவர் வீட்டில் ஒரு நரி, ஒரு குரங்கு, ஒரு முதலை, கீரிப் பிள்ளைகள், சில முயல்கள், சில பாம்புகள், கிளி, காடை, கௌதாரி என்று பறவைகள் என ஒரு குட்டி மிருகச் சாலையே  வைத்திருந்தார். குறவர்கள் அவரது நண்பர்கள்.  தங்கு தடையின்றி விலங்குகளுக்கு ஆகாரம் வர வேண்டுமே அதற்காகத்தான்.
    அவரது பொக்கிஷங்களை பார்த்துக் கொண்டு வரும்பு போது பாம்புகள் வைத்திருக்கும் இடத்திற்கு வந்தேன்.  “பாம்பிற்கு என்ன உணவளிப்பீர்கள்? எப்படி அளிப்பீர்கள்?” என்று நான் கேட்க அவர், “இதோ பார்”, எனச் சொல்லி பக்கத்தில் இருந்த ஒரு மூங்கில் கூண்டிலிருந்து ஒரு கௌதாரியை எடுத்து பாம்பு ஒன்று இருந்த கண்ணாடிப் பெட்டிக்குள் போட்டர்.  அவர் போட்ட அதே கணம் மின்னல் வேகத்தில் மேலெழும்பி அந்தப் பாம்பு கௌதாரியைக் கவ்விப் பிடித்தது.  பின் தன் உடலால் கௌதாரியைச் சுற்றிக் கொண்டு அதனை இறுக்க ஆரம்பித்தது.  ஓரிரு நிமிஷங்களுக்குள் கௌதாரியின் மடங்கி இருந்த கால்களும் விரல்களும் நீண்டு விரிந்தன.  அதன் உயிர் பிரிந்தது.  ஆனால் பாம்பு அதன் பிடியை விடவில்லை.  சில மணி நேரங்கள் வரை அப்படியே இறுக்கிப் பிடித்து வைத்திருக்குமாம் அது..  அவரை ஏன் நான் பாம்பின் இரை பற்றிக் கேட்டடேன் என வருந்தினேன்.
    பின் அவர் வேறு ஒரு கண்ணாடித் தொட்டியில் இருந்த ஒரு குட்டி மலைப் பாம்பின் முதுகில் ரெண்டு தட்டுத் தட்டிக் கையில் எடுத்து அதை என் முன் கையில் வைத்தார்.  அது மெல்ல நகர்ந்து என் கையைச் சுற்றி கொண்டது.  பின் மெதுவாக என் கையை இறுக்குவதை உண்ர்ந்தேன்.  சில வினாடிகளில் அதன் இறுக்கம் அதிகமாகிக் கொண்டே போனது.  என் கையில் ரத்த ஒட்டம் நின்று போனதோ என்னவோ விரல்கள் மறத்துப் போக ஆரம்பித்தன.  நான், “அதை எடுத்து விடுங்கள்”, எனக் கத்தினேன்.  “நீயே எடு” என்றார்.  நான் வாலைப் பிடித்து எடுக்கப் போனேன்.  தம்பு ஐயர் என்னைத் தடுத்து நிறுத்தி முதலில் அதன் முதுகில் மெதுவாக ரெண்டு தட்டுத் தட்டி விட்டு எடு.  இல்லை என்றால் அது உன்னை கடிக்கலாம்.  பின அதன் வாய்க்குள் இருந்து உன் கையை எடுப்பது கடினம்”, என்றார்.   அவர் சொன்னபடி செய்து மெல்ல அதன் வாலைப் பிடித்து சுற்றிச் சுற்றி பாம்பை என் கையிலிருந்து கழற்றினேன்.  அன்று அனுபவத்தில் தெரிந்து கொண்டேன் பாம்பு எப்படி இறுக்கிப் பிடித்துத் தன் இரையைக் கொல்கிறது என்று.  உடும்புப் பிடி என்பார்களே அதை விடப் பல மடங்கு கெட்டியானது தான் பாம்புப் பிடி.
    அன்று இரவு உணவு உண்ணப் பிடிக்கவில்லை.  காரணம் ஓரு கொலை நடக்கத் துணை போன குற்ற உணர்வுதான்.

    சரி என் கதையை விட்டு பாம்பின் கதைக்கே திரும்புவோம்.
    நகர்தல் : பாம்பின் கால் பாம்பறியும் என்பர்.  ஏனெனில்  பிறர் கண்களுக்குத் தெரியும் படியான புறக் கால்கள் இல்லை பாம்பிற்கு.  அதன் ஒவ்வொரு செதிளுமே இரு கால்கள்தான்.  அதன் உடலில் சாட்டை போல் நீளமான முதுகெலும்பில் இருந்து முளைத்துள்ள விலா எலும்புகள் தசைகள் உதவி கொண்டு செதிள் களை இயக்க பாம்பு இடம் விட்டு இடம் நகர்கிறது. மரம் ஏறுகிறது.  நீந்துகிறது.
    மெதுவாகச் செல்லும் போதும், மணல் பாங்கான இடங்களில் செல்லும்போதும் வளைந்து வளைந்து செல்லும் பாம்பு வேகமாக ஓட நினைத்தால் நேர் கோட்டிலே வெகு வேகமாகப் பறக்கும், வானில் அல்ல தரையில்தான்.  அப்படி நேர் கோட்டில் போகும்போது அதன் முதுகில் அலைகளென எழும்பி இறங்கும் அசைவுகள் முன்னிருந்து பின் செல்வதைக் காணலாம்.
    நுகர்தல் :  பாம்பிற்கு மிக நல்ல நுகரும் சக்தி உண்டு.  எலி போன்ற தன் இரை சென்ற பாதையினைக் கண்டறிவது இந்த மிகத் துல்லியமான நுகர் சக்தியால் தான்.  ஆனால் நம்மைப் போல் நாசிகளால் நுகர்வதில்லை பாம்புகள்.  பின் எப்படி நுகர்கின்றன அவை?
    ஒவ்வொரு வினாடியும் தன் இரண்டாகப் பிளந்த நாக்கினை வெளியே நீட்டி இப்படியும் அப்படியுமாக பல திசையிலும் திருப்புகிறதே அது ஏன் தெரியுமா?  நுகர்வதற்காகத் தான்.
    ஒலி கேட்டல் :   “மகுடியின் இசையில் மயங்கியது நாகம்” என்கிறார்களே அது உண்மையா என்றால் இல்லை.  பிடாரனின் கை அசைவுகளை கண் வாங்காது பார்ப்பது, பிடாரன் நம்மைத் தாக்க வருகின்றானா அல்லது நாம் அவனைத் தாக்க வேண்டுமானால் அதற்குத் தக்க தருணம் எது என்ற சிந்தனையில்தான்.
    “இடியேருண்ட நாகம் போல்….” இது எந்த அளவு உண்மை?  உண்மை.  நூற்றுக்கு நூறு உண்மை.  பாம்புகளுக்கு இடியின் ஒலியைக் கேட்கவும் முடியும்.  மற்ற ஒலிகளையும் கேட்கவும் முடியும்.  ஆனால் அவ்வாறு கேட்பதற்கு  நம்மைப் போன்று புறச் செவிகள் கிடையாது.  அகச் செவிகள் உண்டு.  அந்த அகச் செவிகள் அதன் உடலில் உள்ள ஒவ்வொரு செதிளோடும் நரம்புகள் மூலம் இணைக்கப் பட்டிருக்கும்.   ஒலிகள் தரையில் உண்டாக்கும் அதிர்வுகளைச் செதிள்களின் மூலம் உணர்ந்து ஒலிகளைக் கேட்டறிகிறது.
    ஒளி காணல் :  பாம்பின் கண்களுக்கு இமைகள் கிடையாது.  அவை எப்போதுமே திறந்திருக்கும், தூங்கும் போதும் கூட.  தூங்கும் போது வெளிச்சம் இடையூறாக இருக்குமே? என்ன செய்ய?  அப்போது பாம்பு தன் கண்களில் உள்ள பாப்பாவை (Pupa) இடைவெளி இல்லாது இறுக்க மூடிக் கொள்ளும்.
    விஷம் :  “பாம்பிற்குப் பல்லில் விஷம்.  தேளுக்குக் கொடுக்கில் விஷம்.   அந்த ஆளுக்ககு உடம்பு பூரா விஷம்.”  இந்தக் கூற்றுகள் எவ்வளவு தூரம் உண்மை?  பின்னது இரண்டும் நூற்றுக்கு நூறு உணமையாய் இருக்கலாம்.  முன்னது ஐம்பது சத வீதம் உண்மை.  பாம்புக்குப் பல்லில் விஷம் இல்லை.  அது விஷத்தினை வைத்தியர் ஊசி கொண்டு மருந்து ஏற்றுவது போல் பல்லின் வழியாக நம்முள் செலுத்துகிறது.  விஷம் இருப்பது அண்ணத்தின் மேலாக உள்ள பையில்.
    http://encarta.msn.com/media_701681865_761578341_-1_1/snake_fangs.html
    கிலு கிலுப்பை எனத் தன் வாலினால் சல சல ஒலி எழுப்பும் பாம்பு அதன் விஷப் பற்கள் வெளியே தெரிய
    பாம்பு தன் இரு விஷமேற்றும் பற்களை விமான ஓட்டி தரையை விட்டு மேலே விமானம் எழும்பிய உடன் சக்கரங்களை உள்ளிழுத்துக் கொள்வது போல உள்ளிழுத்துக் கொள்ளவோ, மடக்கிக் கொள்ளவோ முடியும்.  அது மட்டுமல்ல. விமான ஓட்டி உள்ளிழுத்த சக்கரங்களைப் பலகைகள் வந்து மூடிக் கொள்வது போல தசைகள் பக்க வாட்டில் இருந்து உள் நோக்கி நகர்ந்து அப் பற்களை மூடிக் கொள்ளும்.
    பாம்பின் விஷம் பிறரைத் தாக்குவதற்காகவோ அதன் தற்காப்பிற்காகவோ அல்ல. அது தன் இரையினைக் கொல்வதற்காகவோ அல்லது மயக்கமுறச் செய்வதற்காகவோ அல்லது இரையினை எளிதாக ஜீரணிப்பதற்குத் தயாராக்கவோ தான்.
    தோலுரித்தல் :  தோலுரித்தல் என்றதும் சிலர் மணி பர்ஸ், இடுப்புக் கச்சை இவை செய்வதற்காகத் தோலை உரிக்கிறார்களே அப்படி என்று எண்ணி விடாதீர்கள்.  பாச்சை, வெட்டுக்கிளி, இடையான், தேள் போன்ற சில பூச்சிகள் வளர்ச்சிக்குத் தடையாக மாறும் கெட்டி அடைந்த தோலின் புறச் செல்களிலிருந்து சட்டையைக் கழற்றி எறிவது போல வளியே எறிகின்றனவே அது பற்றிதான் சொல்கிறேன் இங்கு.  பாம்பு அவ்வப் போது தன் சட்டையைக் கழற்றிப் போடும்.
    பாம்பு சட்டை உரிப்பது வளர்ச்சிக்காக அல்ல.   அதனைக் கடித்து
    சத்தினை உரிஞ்சும் பேன் போன்ற பூச்சிகளிடமிருந்தும், வேறு பல கிருமிகளிடமிருந்தும் விடுதலை பெறவும், கீரல்கள் மிகுந்த மற்றும் இறந்து போன வெளி செல்களை விட்டெறியவும் தான்.
    சட்டை உரிக்கும் நேரம் வந்தால் வெளிப் புறச் செல்களுக்கு உள்ளாக அண்மையில் இருக்கும் செல்கள் திரவமாக மாறி வழுக்கலை அளிக்கிறது.  சட்டையின் வால் பக்கத்தை சொறசொறப்பான குச்சிகளில் ஒட்டச் செய்து அதிலிருந்து தன் உடலை மெல்ல வெளியே இழுத்துக் கொள்கிறது.
    நாக ரத்தினம் :  “வயது முதிர்ந்த பாம்புக்குக் கண் சரியாகத் தெரியாது.  அதன் தலையில் உள்ள விஷம் கெட்டி அடைந்து ரத்தினமாக மாறும்.  அதனை இரவில் பாம்பு கக்கிவிட்டு அந்த ரத்தினம் வீசும் ஒளியில் தன் வேலைகளைச் செய்யும்.”  இது உண்மையா, கட்டுக் கதையா?  பின்னது என்றே நான் சொல்வேன்.
    தொடரும்…
      
    Share
  • இலையுதிர்கால நாளொன்றில் …… !

    பவள சங்கரி

     

    கொரிய மொழிபெயர்ப்புக் கவிதை

     

    An Autumn Day by Lee Si-young

    Photography by Lee Won-kyu
    Photography by Lee Won-kyu

     

    A dragonfly sat on the end of a persimmon branch
    and dozed off all day.
    Even with wind, it did not shake;
    even with a cold rain smacking the branch,
    it did not move over.
    When I quietly approached it,
    I was startled to see,
    right there, it had arrived in Nirvana.

     

    இலையுதிர்கால நாளொன்றில் …… !

    சீமைப் பனிச்சைக் கனி
    சீமைப் பனிச்சைக் கனி

    சீமைப் பனிச்சை மரக்கிளையின் நுனியிலொரு தும்பி
    பொழுதெல்லாம் மதிமயங்கிக்கிடந்தது.
    வளியின் வீச்சிலும் அசைவில்லை அதனிடம்;
    கிளையை உலுக்கியெடுக்கும் குளிர் மழைக்கும்
    அசைந்து கொடுக்கவில்லையது.
    மெல்ல அதனருகே நெருங்கிய தருணமதில்,
    அதிர்ந்து போனேன் அதன் நிலைகண்டு,
    ஆம், அங்கேயே அது பேரானந்த நிலையை எய்தியிருந்தது.
    가을날/ 이시영

    잠자리 한 마리가 감나무 가지 끝에 앉아
    종일을 졸고 있다
    바람이 불어도 흔들리지 않고
    차가운 소나기가 가지를 후려쳐도
    옮겨앉지 않는다
    가만히 다가가보니
    거기 그대로 그만 아슬히 입적하시었다

    படங்களுக்கு நன்றி

    https://ta.wikipedia.org/wiki/

    Share
  • மார்கழி மணாளன்  -3  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி  

    க.பாலசுப்பிரமணியன்

     f2bc8a78-423d-446a-a113-0094a4f2ee11

    குழலூதும் கண்ணனவன் வெண்ணை திருடும் கள்வனவன்

    கோதையர் தலைவனவன் கோவினத்தின் மன்னனவன்

    பாவங்கள் அழித்திடவே  தர்மங்கள் வாழ்ந்திடவே

    பாஞ்சஜன்யம் கையெடுத்தான் பார்த்தனுக்கு சாரதியாய்!

     

    ஆண்சிங்கம் போல் அவன் தோற்றம்

    ஆயிரம் ஆதவன் அவனில் அடக்கம்

    அங்கம் முழுதும் அமைதியே ஒளிரும்

    அகிலம் அனைத்தும் அவனைத் துதிக்கும் !

     

    போர்முனையில் அவன் முகத்தில் புன்னகை

    தேர்முனையில் அவன் தர்மத்தின் நம்பிக்கை

    சொந்தம்கண்டு சோர்வடைந்தான் தனஞ்ஜெயன்

    சொந்த மில்லையிது மாயையென்றான் மாதவன் !

     

    விண்ணிலும் மண்ணிலும் வேதங்கள் நான்கிலும்

    விளையும் பயிரிலும் உயிரிலும் உணர்விலும்

    நீரிலும் நெருப்பிலும் காற்றிலும் கதிரிலும்

    அண்ட சராசரங்கள் அனைத்திலும் நானே !

     

    நீயும் என்னுள் நின் நினைப்பும் என்னுள்

    நின் செயலும் வரும் பயனும் என்னுள்

    அண்ணன் தம்பி உறவுகள் அறுத்து

    கண்ணன் பாதங்களில் கவலைகள் விடுவாய் !

     

    காலமும் கடமையும் என்னுள் மறையும்

    காரணம் அறிந்தால் மனிதனும் தேவன் !

    கடமையைச் செய்வாய் விளைவினை விடுவாய்

    கண்ணன் மொழிந்தான்  கருணை பொழிந்தான் !

     

    அல்லிக்கேணியிலே அச்சுதன் தோற்றம்

    அமரர்கள் வாழ்த்தும் அற்புதக் கோலம் !

    ஆசையை அறுத்த பாச நெஞ்சங்களில்

    ஆதவன் ஒளியாய் அருள்வான் சாரதி !!

     

     

     

    Share
  • வளவன் கனவு – 24

    சு. கோதண்டராமன்

     மங்கையர்க்கரசி

    vallavan-kanavu

    மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
    பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
    பொங்கழ லுருவன் பூதநா யகன்நால் வேதமும் பொருள்களும் அருளி
    அங்கயற் கண்ணி தன்னொடு மமர்ந்த ஆலவா யாவது மிதுவே

    -சம்பந்தர்.

      அமைச்சரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்த பாண்டிய அரசி மங்கையர்க்கரசி நிலை கொள்ளாமல் அந்தப்புரத்தின் முன் முகப்பில் இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்தார். ‘கூப்பிட்ட உடன் வருவதற்கு அவர் என்ன பணியாளா? அவருக்கு எத்தனையோ முக்கியமான அரசாங்கக் காரியங்கள் இருக்கும். எப்படியும் வந்து விடுவார்’ என்று தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டாலும் அவரது மனம் தவித்தது.

    அமைச்சர் குலச்சிறையார் பழுத்த அனுபவம் உள்ளவர். மங்கையர்க்கரசியின் மாமனாரான சேந்தன் மாறவர்ம பாண்டியன் காலத்திலிருந்து இருந்து வருபவர். சிவபக்தி உள்ள சேந்தன் ஆலவாயில் கோவிலை விரிவுபடுத்தியதற்கு குலச்சிறையாரே காரணம். மங்கையர்க்கரசியின் கணவர் அரிகேசரி பராங்குச வர்மனும் முதலில் சைவ ஆதரவாளராகத்தான் இருந்தார். ஆனால் அரச பதவிக்கு வந்தபின் சமணர்கள் அவரைத் தங்கள் வலையில் வீழ்த்தினர். குலச்சிறையாருக்கு இது பிடிக்கவில்லை. ஆனாலும் தன் நிலை உணர்ந்து அடங்கி இருந்தார். மன்னனுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்று நாளும் சிவபெருமானை வேண்டிக் கொண்டிருந்தார். அவர்தான் தன் பிரச்சினைக்குத் தீர்வு காண வல்லவர் என்று அரசி நினைத்தார்.

    இதோ அமைச்சர் குலச்சிறையார் வந்துவிட்டார். “வாருங்கள், அமைச்சரே” என்றார் அரசி. “மன்னிக்க வேண்டும், அரசியாரே. அரசர் ஒரு முக்கியமான அரசாங்க வேலை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அதனால் உடனே வர முடியவில்லை. சொல்லுங்கள், என்ன விஷயமாகக் கூப்பிட்டீர்கள்?”

    “நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற அக்கறை சற்றும் இல்லாமல் அரசர் தன்னுடைய முத்தியைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்.”

    “அது ஒன்றும் புதிது அல்லவே. அது நீண்ட நாட்களாக நாம் எல்லோரும் கவலைப்படும் விஷயம் தானே.”

    “இல்லை. புதிதாகக் கவலைப்படுவதற்குக் காரணம் உள்ளது. நேற்று அவர் எங்கள் மகளுடன் பேசிக்கொண்டிருந்தார். எல்லாம் சமணத்தின் மேன்மை பற்றித்தான். குழந்தை மனதை அது மிகவும் கவர்ந்துவிட்டது. அவள், நானும் சமணத் துறவியாகித் தர்மத்திற்குத் தொண்டாற்றப் போகிறேன், அப்பா என்கிறாள். உண்மையில் அவள் துறவி ஆகிவிடுவாளோ என்று எனக்குக் கவலையாக இருக்கிறது அமைச்சரே.

    “நம் நாட்டில் பெண்களுக்குச் சுதந்திரம் இல்லை. பெற்றோர் விருப்பப்பட்ட மணமகனுக்குத்தான் அவள் வாழ்க்கைப்பட வேண்டியிருக்கிறது. அரச குலப் பெண்களின் நிலைமையோ இன்னும் மோசம். அரசியல் விளையாட்டில் அவர்கள் ஒரு பகடைக்காய். களப்பிரர்களை முறியடித்த பாண்டிய மன்னர் தன் மீது படையெடுத்து வரக்கூடாது என்பதற்காக என் தந்தை இவருக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டார். என் தந்தை சிவனுக்கு எழுபது மாடக்கோயில்கள் கட்டியவர். என் அண்ணன் புகழ்ச்சோழனோ தன் படைவீரர்கள் ஒரு சிவனடியாரைக் கொன்றதற்குத் தான் பொறுப்பேற்று உயிர் துறந்தவர். இத்தகைய பரம்பரைச் சைவர்களான சோழ வம்சத்தில் பிறந்த நான் இன்று ஒரு சமணரின் மனைவியாகக் காலம் தள்ளுகிறேன். என் குழந்தைகள் சைவத்தை விட்டு விலகிப் போய்விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது.”

    “தங்கள் தந்தையைப் பற்றிக் குறைவாக மதிப்பிடவேண்டாம், தேவி. அவர் சிறந்த ராஜதந்திரி. பாண்டிய மறவர்கள் அகிம்சைக் கொள்கையைக் கைக்கொண்டு வீரம் இழந்துள்ளனர். களப்பிரர்கள் தோற்றதற்குக் காரணம் அவர்களது வீரமின்மையே தவிர பாண்டியர்களின் படைவலிமை அல்ல.  எனவே பாண்டியனால் ஆபத்து எதுவும் வராது என்று உங்கள் தந்தைக்குத் தெரியும். பாண்டிய நாட்டைச் சமணத்திலிருந்து மீட்கத்தான் அவர் தங்களை இங்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.”

    “என்னால் பாண்டிய நாட்டை எப்படிச் சமணத்திலிருந்து மீட்க முடியும்? என் கணவரையே மீட்க முடியவில்லையே.”

    “அதற்கான காலம் கனிந்து வந்துவிட்டது, அரசியாரே. சோழநாட்டின் பெரும்பகுதி மக்கள் சைவத்தின்பால் ஈர்க்கப்பட்டுவிட்டனர். சென்ற வாரம் மறைக்காட்டில் உள்ள என் மகளைக் காணச் சென்றிருந்தபோது நான் இரு மகான்களை ஒருசேரத் தரிசிக்கும் பேறு பெற்றேன். ஒருவர் முதியவர். வாழ்நாளின் பெரும்பகுதியைச் சமணத் துறவியாகக் கழித்துவிட்டு இறையருளால் சைவத்தை ஏற்றவர். சிவனைப் போற்றி அவர் உருகி உருகிப் பாடும் பாடல்கள் கேட்பவர் நெஞ்சை எல்லாம் கனிய வைக்கும். மற்றவர் ஒரு பாலகன். நம் இளவரசர் வயதுதான் இருக்கும். இவரும் சிவனைப் போற்றி இசையோடு தமிழ்ப்பாடல்கள் பாடுகிறார். இசைக்கு வயப்படாதவர் யார்? எனவே மக்கள் பெரும் அளவில் அவர்களைக் காண வருகின்றனர். இவர்கள் பின்னால் செல்லும் கூட்டம் வர வர அதிகரித்து வருகிறது.

    “அப்படியா, என் மகன் வயது உள்ளவருமா பெரும் கூட்டத்தை ஈர்க்கிறார்?”

    “ஆம் தேவி. அவர் இறைவனை உள்ளம் கவர் கள்வன் என்கிறார், இவரும் ஒரு உள்ளம் கவர் கள்வன்தான். எந்த ஊருக்குப் போனாலும் அங்குள்ள கோவிலில் வழிபட்டுப் பதிகம் பாடுகிறார். அதில் அந்த ஊரின் இயற்கை அழகை வர்ணிக்கிறார். அதைக் கேட்கும் மக்கள், ஆம், நம் ஊர் அழகானதுதான், அதை நாம் இது வரையில் கவனிக்கவில்லையே என நினைக்கிறார்கள். அவர்கள் அந்த மன நிலையில் இருக்கும்போது சம்பந்தர் இத்தகைய ஊரில் வாழும்  இறைவன் இத்தகையவன் என்று அவரது தோற்றத்தையும் சிறப்பித்துப் பாடுகிறார். மக்கள் ஆம், இந்தத் தெய்வத்தையும் நாம் மறந்து விட்டோம் என நினைக்கிறார்கள். ஏழு பாடல்களில் சிவனின் தோற்றத்தை வர்ணித்துவிட்டு எட்டாவது பாடலில் அவரை அடையக் கல்வியோ, செல்வமோ, வீரமோ பயன்படாது. காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கிப் போற்றுவது ஒன்றே வழி என்பதை எடுத்துரைக்கும் வகையில் ராவணனின் கதையைக் கூறுகிறார். ஒன்பதாவது பாடல் தோறும் இறைவன் சோதி மயமானவன் என்பதை நினைவூட்டி, தீயைப் பார்க்கும் போதெல்லாம் இறைவன் நினைவு வரும்படிச் செய்து விடுகிறார் அந்தச் சொல் சித்தர். பத்தாவது பாடலில்,  சமணர் சொல் கேளாதீர், நான் பாடும் இந்தத் தமிழ்ப்பாடலைப் பாடி வினைகளை நீக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லும்போது கூட்டம் மகுடி முன் நாகம் போல அப்படியே அவருக்குக் கட்டுப்பட்டு நிற்கிறது. நான் என்னை இன்னாரென்று அறிமுகப்படுத்திக்கொள்ளாமல் எங்கள் பாண்டி நாட்டுக்கு வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். அவர் வருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். அவர் இங்கு வந்தால் சமணம் வீழ்வது திண்ணம்.”

    “அப்படியா? நல்ல செய்தி சொன்னீர்கள். அவர்கள் வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருப்போம்.”

     தொடரும்

    Share
  • பழைய வீதி

    சந்தர் சுப்பிரமணியன்

     

    பாதி திறந்த சன்னலில்
    சதாசர்வ காலமும்
    தெரியும் கிழவியின் முகம்:

    ‘பாட்டி, பூக்காரன் போய்ட்டானா?’
    ‘இல்லை, இன்னும் போகலைம்மா’

    ‘பாட்டி, பால்காரன் வந்தா எங்க வீட்டிலே பால் ஊத்தச்சொல்லுங்க’
    ‘அவன் போயி அரை மணிநேரம் ஆவுது தாயி’

    ‘பாட்டி, கோவில் தேர் இந்த பக்கம் வந்தாச்சா?’
    ‘இல்லைம்மா, அதுக்காகத்தான் காத்திட்டு இருக்கேன்’

    ‘பாட்டி எங்க வீட்டுச்சுவரிலே யார் போஸ்டர் ஒட்டினாங்க தெரியுமா?’
    ‘கூழ் ஊத்தற பசங்க தாயி’

    பாட்டிக்குத் தெரியாமல்
    ஒருவரும் அந்தத் தெருவைக் கடந்ததில்லை –
    அவள் சாவுஊர்வலத்தைத் தவிர.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: செய்கொன்றான் உண்கென்னு மாறு

     

    வெற்றிவேல் வேந்தன் வியங்கொண்டால் யாமொன்றும்
    பெற்றிலே மென்பது பேதைமையே – மற்றதனை
    எவ்வ மிலராகிச் செய்க அதுவன்றோ
    செய்கென்றான் உண்கென்னு மாறு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    வெற்றி வேல் வேந்தன் வியம் கொண்டால், ‘யாம் ஒன்றும்
    பெற்றிலேம்’ என்பது பேதைமையே; மற்று அதனை
    எவ்வம் இலர் ஆகிச் செய்க!-அது அன்றோ,
    ‘செய்க!’ என்றான், ‘உண்க!’ என்னுமாறு.

    பொருள் விளக்கம்:
    வெற்றியைத் தரும் வேலினை ஏந்திய மன்னவன் ஆணை இட்டால், நான் அதனைச் செயல் படுத்தும் திறனைப் பெற்றிருக்கவில்லை என்று சொல்லி மறுப்பது அறியாமையாகும். அவ்வாறின்றி அச்செயலை வருத்தமுறாமல் செய்க. அவ்வாறாகச் செய்தால், செய்க இச்செயலை என்ற மன்னவனின் கட்டளை உணவு உண்பதற்கு வழிவகுத்ததை ஒத்ததாகும்.

    பழமொழி சொல்லும் பாடம்: தனக்குத் திறமையில்லை என்று வருத்தம் கொள்ளது, அதிகாரத்தில் உள்ளவர் இட்ட கட்டளையை மறுக்காது நிறைவேற்றுவது, பசியின்றி வாழும் வகையில் ஒருவரது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும். நம்மால் இது இயலாது என்று மனந்தளராது காரியமாற்றுவதால் விளையும் நன்மையைக் குறிக்கும் குறள்,

    அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும். (குறள்: 611)

    நமக்குக் கடினமான செயல் இது என்று மனச்சோர்வு கொள்ளாது, முயன்று செயலாற்றினால், அதன் விளைவு பெருமை தரத் தக்க வகையில் அமையும் என்று விளக்குகிறது.

    Share
  • இவன்

    – கவிஜி

    இவன் - ஒரு பக்க கதை- கவிஜி

    அவன், அந்த வீட்டின் பின்புற சுவற்றில் ஏறி உள்ளே குதித்தான்….

    மனக் கண்ணில் ஒருமுறை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து கொண்டான்…

    இதே வீடு தான்…

    குறைஞ்ச பட்சம் 200 சவரன் நகை இருக்கும்….வீட்டில் உள்ளவர்கள் அனைவருமே, திருப்பதிக்கு சாமி கும்பிட சென்றிருக்கிறார்கள்.. நம்பகமான இடத்தில் இருந்துதான் செய்தி கிடைத்திருக்கிறது… முதுகில் தொங்கிய பேக்கை ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டான்.. ஏனோ புன்னகை வந்தது,…

    சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான்…அந்த வீட்டை சுற்றி யாரும் இல்லை… பின் கதவை சில பல தொழில் நுட்பத்தோடு திறந்து, உள்ளே சென்றான்…. ஒரு பூனையைப் போல அவன் பாதங்கள் மிதந்தன… மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டே நகை இருக்கும் அறைக்குள் சென்றான்…. நேரத்தைப் பார்த்தான்..

    மணி நள்ளிரவு 2.30….

    எல்லாம் சரியாக நடக்க வேண்டும்…. போட்ட திட்டப்படி இம்மி பிசகாமல் அத்தனையும் நடக்க வேண்டும்….. மனதை ஒரு நிலைப் படுத்தினான்…. அறையில் ஓரமாய் இருந்த இன்னொரு பீரோவை ஒட்டி ஒரு ஜன்னல் இருந்தது…. மெல்ல ஜன்னலை திறந்து வெளியே பார்த்தான்… மஞ்சள் வெளிச்சத்தில் வீதி உறங்கிக் கொண்டிருந்தது…

    பேக்கை திறந்து வைத்துக் கொண்டான்…. வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்…. இன்னும் கொஞ்ச நேரத்தில் முடிய வேண்டும்… அறை முழுவதும் புழுக்கத்தால் ஒரு வித சூட்டுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தது….

    அவன், அனுமானத்தின் படி….அந்த இரு திருடர்களும் வீட்டுக்குள் நுழைந்து பீரோவுக்கு அருகில் வர..பேக்கில் இருந்த சைலன்சர் போட்ட துப்பாக்கி கொண்டு பட் பட் என்று சுட்டு விட்டு வந்த வழியே ஓடத் துவங்கினான்….

    நாளை இரவு கணுவாய் காலனிக்கு போக வேண்டும்… என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே ஓடிக் கொண்டிருந்த அவன்… இவன் என்ற ஆபரேசனில் நகரில் எங்கெல்லாம் கொள்ளை நடக்க இருக்கிறதோ அங்கெல்லாம் முன் கூட்டியே சென்று கொள்ளைக்காரர்களை போட்டுத் தள்ளும் ஸ்பெசல் ஆபீசர்….

    இவன்…

    கவிஜி

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 40

    சி. ஜெயபாரதன்.

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    “என் வாயில் சிதைந்த பல்லொன்று தொல்லை கொடுத்து வந்தது. பகலில் ஏனோ தொந்தரவு தரவில்லை. ஆனால் இரவின் அமைதியில், பல் வைத்தியர் தூங்கும் போது, மருந்துக் கடையை மூடிய பிறகு அது வலி கொடுக்க ஆரம்பித்தது !”
    கலில் கிப்ரான் (Decayed Teeth)
    ___________________

    காதல் தீப்பொறி
    ___________________

    அந்தக் கணத்தில் தான்
    வாழ்க்கையின் போதை ஊட்டம்
    விழிப் புணர்வி லிருந்து
    பிரிக்கிறது !
    முதல் எழும் அத்தீப்பொறி தான்
    இதய அரங்கில் பற்றி
    ஏற்று கிறது ஒளி !
    அதுதான்
    முதல் மந்திரக் கீதமாய்
    இதய வெள்ளி நாண்களில்
    மீட்டுகிறது !
    அந்தக் கணப் பொழுதில் தான்
    ஆத்மாவின் முன்னே
    கண்மலரும்
    காலத்தின் அணிவகுப்புத் தடங்கள் !
    கண்களுக் குள் காட்டும்
    காரிருளின் காட்சிகளை,
    மனச் சாட்சி யின்
    வினைகளை !
    அந்தக் கணம் தான்
    திறந்திடும் எதிர் காலத்தின்
    நிரந்தர ரகசியத்தை !
    அவையே மன்மதன் —
    காதல் தேவன் தூவிடும்
    மோக வித்துக்கள் !
    காதல் நிலத்தில் பயிரிட
    விதைப்பவை
    காதலியின் கண்கள்
    அன்புப் பார்வையால் ! பலனை
    அறுவடை செய்வது
    ஆத்மா !
    ___________________

    Share
  • பாரதியின் ஜீவன் முக்தியும் ஜயபேரிகையும் சொல்லும் உயர் சிந்தனைகள்

    — முனைவர்.சீ.இளையராஜா.

    பாரதியாரின் வேதாந்தப் பாடல்கள் தொகுதி 1930ஆம் ஆண்டு பதிப்பிக்கப் பெற்றதாகும். இத்தொகுதியில் காணப்பெறும் சில பாடல்கள் 1910ஆம் ஆண்டில் வெளிவந்த பாடல் தொகுதியிலும் காணக்கிடைக்கின்றன. பாரதியார் கவிதைகள் என்னும் ஒட்டுமொத்த தொகுதியில் முதலில் விநாயகர் நான்மணிமாலை, இரண்டாவதாகத் தோத்திரப் பாடல்கள், மூன்றாவதாக விளங்குவதுதான் இந்த வேதாந்தப் பாடல்கள் என்னும் தொகுதியாகும். வேதாந்தம் என்னும் சொல்லை இரண்டாகப் பிரித்தால் வேதம், அந்தம் என்ற இரு சொற்கள் கிடைக்கும். வேதம் என்ற சொல்லிற்கு மறை என்ற பொருளையும், அந்தம் என்ற சொல்லிற்கு முடிவு என்ற பொருளையும் உரைக்கின்றது ந.சி.கந்தையாவின் செந்தமிழ் அகராதி. வேதாந்தம் என்ற சொல்லிற்கு மறைகளின் முடிவு என்ற பொருள் கொள்ள வேண்டும். ஜீவன் முக்தியையும் ஜய பேரிகையையும் வேதாந்தத்தின் முடிவுகளில் ஒரு பகுதியாகப் பாரதியார் எண்ணுகின்றார்.

    1ஜீவன் முக்தியும் ஜய பேரிகையும்:
    ஜீவன் முக்தி என்ற தலைப்பை ஜீவன், முக்தி என்ற இரு சொல்லாகப் பகுக்கலாம். ஜீவன் என்ற சொல்லைத் தமிழ்ப்படுத்தினால் சீவன் என வரும். சீவன் என்னும் சொல்லிற்கு உயிர் என்ற பொருள் கிடைக்கிறது. முத்தி என்னும் சொல் திரிந்து இடைப்போலியாக முக்தி என்னும் சொல்லாகியுள்ளது. முத்தி என்னும் சொல்லிற்கு விடுபடுகை என்று பொருள் கிடைக்கிறது. அதாவது, விடுதலை என்ற விளக்கத்தைக் காணமுடிகிறது. ஜீவன் முக்தி என்றால் உயிர்களுக்கான விடுதலை என்பதை இத்தலைப்பு உணர்த்துகிறது.

    ஜய பேரிகை என்னும் சொல்லை ஜயம், பேரிகை என்னும் இரண்டு சொல்லாகப் பிரிக்கலாம். இதிலுள்ள ஜயம் என்ற சொல்லைத் தமிழ்ப்படுத்தினால் சயம் என்று வரும். இதற்கு வெற்றி என்னும் பொருள் கிடைக்கிறது. இதைப்போல் பேரிகை என்னும் சொல்லிற்கு மேளம் என்ற பொருள் கிட்டுகிறது. மேளத்தை முரசு என்றும் கூறுவர். ஜய பேரிகை என்ற சொல்லிற்கு வெற்றி முரசு என்ற பொருள் உணர்த்தப்படுகிறது. அதாவது, மனித குலம் வெற்றியை முரசு வாசித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் செயலை இத்தலைப்பு சுட்டுகிறது.

    ஜீவன் முக்தியின் உயர்சிந்தனைகள்:
    ஜீவன் முக்தி என்னும் இப்பாடலைப் பல்லவி, அனுபல்லவி, சரணங்கள் என்று எழுதியுள்ளார் பாரதியார். பல்லவியும் அனுபல்லவியும் முறையே இரண்டு அடிகளைக் கொண்டு இலங்குகின்றன. சரணங்கள் என்பதில் மூன்று பகுதியும் முறையே நான்கு வரிகள் கொண்ட பாடலாக உள்ளன.

    “ஜயமுண்டு பயமில்லை மனமே- இந்த
    ஜன்மத்தி லேவிடு தலையுண்டு நிலையுண்டு”

    என்ற வரிகளால் தம் ஜீவன்முக்தி என்னும் பாடலின் பல்லவியைத் தொடங்குகின்றார் பாரதியார். இந்த வரிகளில் மனிதனுக்கு வெற்றி உண்டு. பயம் கிடையவே கிடையாது என்று கூறி இந்தப் பிறவியிலேயே விடுதலையானது உண்டு. அது கிட்டியவுடன் மனித குலம் நிலைத்த புகழுடன் இப்புவியில் வாழும் வாழ்க்கையைப் பெற்று விளங்குகின்றது என்று கூறுகின்றார் பாரதியார்.

    “பயனுண்டு பக்தியி னாலே- நெஞ்சிற்
    பதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகையில்லை”

    என்ற அனுபல்லவி வரிகளில் மனிதகுலத்தைக் காக்கும் தெய்வமாக விளங்கும் சக்தியின் மீது பக்தி கொண்டு சரணடைந்தால் பயன் உண்டு. ஆனால், பகை என்ற ஒன்று இல்லவே இல்லை என்ற கருத்தை எடுத்துரைக்கின்றார் கவிஞர்.

    “புயமுண்டு குன்றத்தைப் போலே- சக்தி
    பொற்பாத முண்டதன் மேலே
    நியமமெல் லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை;
    நெறியுண்டு; குறியுண்டு; குலசக்தி வெறியுண்டு”

    என்னும் சரணங்களின் முதற்பகுதியாக விளங்கும் இப்பாடலில் மனித குலத்திற்கு மலையைப் போன்ற வலிமையுடைய தோள்கள் உண்டு. அந்தத் தோள்களுக்குக் கூடுதல் சக்தி சேர்க்கும் சக்தியின் அருளாகிய பொற்பாத ஆசீர்வாதமும் உண்டு. மனம் முழுவதும் சக்தியின் நினைவைக் கொண்டு நெறியுடன் குறிக்கோள் கொண்டு வாழும் மனித குலம் உண்டு எனக் கருத்துரைக்கின்றார் கவிஞர்.

    செல்வங்கள் சேர்க்கும் அறிவுண்டு. தீமைகள் யாவற்றையும் அடியோடு பெயர்த்து வீசும் சக்தி தெய்வத்தின் அருள் வலிமை உண்டு. செய்யும் தொழிலுக்குரிய விளைவைப் பெறும் ஆற்றல் உண்டு. குறை என்ற ஒன்று இல்லவே இல்லை.பொய் என்ற கடலை அழிக்க முருகக் கடவுளின் பாதுகாப்பு உண்டு என்பதை,

    “மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும்- தெய்வ
    வலியுண்டு தீமையைப் பேர்க்கும்
    விதியுண்டு; தொழிலுக்கு விளைவுண்டு; குறைவில்லை;
    விசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு”

    என்று இரண்டாம் பகுதியாக விளங்கும் பாடலில் மனித குலத்தின் இயல்பை முன்மொழிகின்றார் மகாகவி. இதில், சக்தித் தெய்வத்தின் துணையும் முருகக் கடவுளின் துணையும் மனித குலத்திற்குத் துணையாக நிற்பதைச் சுட்டுகின்றார்.

    மனிதர்கள் அனைவரும் துன்பம் என்னும் கடலில் சிக்கிக் கொண்டவர்களாக விளங்குகின்றார்கள். இவர்கள் சக்தியின் அருளென்னும் தோணியைப் பற்றிக் கொண்டால் துயரங்கள் யாவற்றிலிருந்தும் கடந்து, வாழ்வில் என்றும் இன்பமுடன் இந்தப் பூமியில் சிறப்புடன் மனிதர்கள் வாழலாம் என்ற சிந்தனையை,

    “அலைபட்ட கடலுக்கு மேலே- சக்தி
    அருளென்னுந் தோணியி னாலே
    தொலையெட்டிக் கரையுற்றுத் துயரற்று விடுபட்டுத்
    துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு”

    என்று சரணங்கள் என்னும் நிறைவுப் பகுதியாகிய இப்பாடலில் மனித குலம் வாழ்வில் நிறைவுடன் வாழ ஆன்மீகச் சிந்தனை அவசியம் என்ற கருத்தை நிறைக்கின்றார்.

    ஜய பேரிகையின் உயர்சிந்தனைகள்:

    “ஜய பேரிகை கொட்டடா- கொட்டடா
    ஜய பேரிகை கொட்டடா ”

    என்னும் இப்பாடலின் பல்லவியை மேற்கண்ட வரிகளால் தொடங்குகின்றார் மகாகவி. இதற்கு வெற்றி முரசைக் கொட்டி மகிழ்ச்சியுடன் வாழ் என்று பொருள் கொள்ளலாம்.

    அதன் பின்பு சரணங்களில் காணப்பெறும் முதற்பகுதியாகிய பாடலில் பயத்தை அடித்து அழித்தும், பொய்களை வாழ்வில் இல்லாமல் செய்தும், இந்த உலக வாழ்க்கையை மனிதர்கள் பேரின்பத்தை அளிக்கக்கூடிய அமுதம் என எண்ணி எண்ணி வாழ்ந்து மகிழ்ச்சியை அடையவேண்டும் என்றும், நற்பண்புகள் பலவற்றோடு இவ்வுலகில் மனித குலம் வாழ்ந்து காட்டுதல் ஒரு புதிய வேதம் ஆகும் என்றதொரு புதிய சிந்தனையை,

    “பயமெனும் பேய்தனை யடித்தோம்- பொய்மைப்
    பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்
    வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
    வேதவாழ் வினைக்கப் பிடித்தோம்”

    என்று கூறுகின்றார் பாரதியார். மேலும், இரண்டாம் பகுதியாக விளங்கும் பாடலில் பகல் பொழுதுகளில் சூரிய வெளிச்சத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் மனித குலத்தை மறைவாக அழித்துவரும் எமனைப் போன்ற வஞ்சனைகளைப் பயமின்றி அழித்தொழிக்கும் விழிப்புணர்வை மனிதர்கள் பெற்று விளங்குகின்றார்கள் என்ற சிந்தனையை,

    “இரவியி னொளியிடைக் குளித்தோம்- ஒளி
    யின்னமு தினையுண்டு களித்தோம்
    கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
    காலன் நடுநடுங்க விழித்தோம்”

    என்னும் பாடல் வரிகளில் மனித குலத்தின் ஆற்றலைச் சுட்டிக்காட்டியுள்ளார் பாரதியார்.

    சரணங்களின் நிறைவுப்பகுதியாக விளங்கும் பாடலில் இந்த உலகில் காணப்பெறும் உயர்திணை, அஃறிணைப் பொருள்கள் யாவும் சர்வ சமம் என்றதொரு உயர்சிந்தனையை,

    “காக்கை, குருவி யெங்கள் ஜாதி- நீள்
    கடலு மலையுமெங்கள் கூட்டம்
    நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
    -நோக்க நோக்கக்களி யாட்டம்”

    என்ற வரிகள் மூலம் உலகத்தார்க்கு உணர்த்துகின்றார் பாரதியார்.

    இந்த உலகமானது இன்பங்கள் நிறைந்தது. அதை இயற்கையின் மூலம் மனித இனத்திற்கு இறைவன் வழங்கியிருக்கின்றான். மனிதர்கள் இயற்கையை இரசித்து அனைத்தையும் சர்வ சம உயிர்களாக எண்ணி அவற்றையும் வாழச்செய்து, மகிழ்ச்சி கொண்டு வாழ்வில் வெற்றியடைய வேண்டும். இவ்வாறான நல்லதொரு வெற்றியை முரசு கொட்டி கொண்டாடி மகிழ வேண்டும் என்றதொரு பெருஞ்சிந்தனையைப் பாரதியார் பேசுகின்றார்.

    ஜீவன் முக்தியில் மனித வாழ்வில் ஏற்படும் பல்வேறு துயரங்களைக் கடக்க மனிதர்கள் இறைவழிபாட்டில் மனத்தினைச் செலுத்திச் செயல்படவேண்டும். இவ்வாறு, செயல்பட்டால் துயரங்களிலிருந்து மீண்டு, பேரின்பம் எய்தலாம் என்ற உயர் சிந்தனையைச் செப்புகின்றார் கவிஞர். இதைப்போல் ஜய பேரிகையில் பயம், பொய், வஞ்சனை போன்றவற்றை வாழ்க்கையில் அழித்து மனிதர்கள் வாழவேண்டும். இதைப்போல் உலகில் உள்ள உயிரினங்கள் யாவையும் சர்வசமம் என்ற எண்ணங்கொண்டு செயல்படவேண்டும். ஏனைய உயிர்களை மகிழ்ச்சியோடு இருக்கச் செய்து, அவற்றைக் கண்டு இரசித்து இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை மேற்கொண்டு பேரின்பத்தை மனித குலம் எய்தவேண்டும். இவைதாம் மனிதர்கள் தம் வாழ்வில் பெறும் பெரும்பேறு என்ற உயர்சிந்தனைக் கருத்துக்களை மனித குலத்திற்கு இவ்விரு கவிதைகள் மூலம் பாரதியார் சுட்டிக்காட்டுகின்றார்.

    (குறிப்பு: 11.12.2015 அன்று மகாகவி பாரதியாரின் 134ஆவது பிறந்தநாள். அதை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரை.சமர்ப்பணம்: பாரதிக்கு)

    முனைவர்.சீ.இளையராஜா,
    உதவிப்பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை,
    அ.வ.அ.கல்லூரி(தன்.),
    மன்னன்பந்தல்-609305
    மின்னஞ்சல்:ilayaraja20@gmail.com

    Share
  • உமர் கயாம் ஈரடிப் பாக்கள் – 6

     

    பாரசீக மூலம் :  உமர் கயாம் ​ரூ​பை​யாத் 

    ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

    தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா.   

    umar

    ​   ​

    வாழ்வு மீது மனிதர் வைக்கும் ஆழ்ந்த நம்பிக்கை
    நாச மாகும் அல்லது நன்கு முன்னேற்றம் அடையும்;
    பாலை வனத்தூசி முகம் மேல் பட்ட பனி போல்
    ஒளிதரும் ஓரிரு கணங்கள், மறைந்திடும் பிறகு.  

      

    16. The Worldly Hope men set their Hearts upon
           Turns Ashes — or it prospers; and anon,
           Like Snow upon the Desert’s dusty Face
           Lighting a little Hour or two — is gone. 

     

     பொற் காசுகளைப் பூட்டி வைத்தவர், அதனை
     மழைநீர் போல் காற்றில் வாரி இறைத்தார்,
     அப்படி இல்லா பொன் பூமிக்குத் திரும்புவர்,
     ஒருமுறை புதைத்த மனிதர் தோண்ட மீள்வர். 

     

    17.And those who husbanded the Golden Grain,
          And those who flung it to the Winds like Rain,
          Alike to no such aureate Earth are turn’d
          As, buried once, Men want dug up again.

     

    எண்ணிப் பார், சிதைந்த வழிப் பயணச் சத்திரத்தில்
    இரவு பகலே மாறி மாறிக் வாசற் கதவுக ளாகும்;
    சுல்தா னுக்குப் பின் சுல்தானின் பகட்டு மாளிகை
    எப்படி ஓரிரு ணிக்குள் சிதைந்தது அவனோடு !

     

    18. Think, in this batter’d Caravanserai
          Whose Doorways are alternate Night and Day,
          How Sultan after Sultan with his Pomp
          Abode his Hour or two and went his way.

     

     

    Share
  • இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-8

    -மீனாட்சி பாலகணேஷ்

    இமவான் தடமார்பில் தவழும் குழந்தை


    கண்முன் விரியும் ஒரு அழகான சொற்சித்திரம்

    இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவனுக்கு ஐந்து கரங்கள். இன்னொருவனுக்கு ஆறுமுகங்கள். இருவரும் அண்ணன் தம்பிகள். இன்னும் புரியவில்லையா? அண்ணன் ஐந்து கரத்து ஆனைமுகத்தோனான விநாயகன். தம்பி ஆறுமுகத்துப் பன்னிருகை வேலவன் எனப்படும் முருகன்.

    விநாயகனின் யானைமுகத்தில் சிறு தந்தம்- அது கீற்றுப்பிறைநிலா போல அழகாக இருக்கிறது. அதனைத் தடவியபடி அவன் தன்னுடன் விளையாடும் இளையவனான முருகனைப் பார்த்துக் கேட்கிறான்:

    “வேலா, உனக்கு அழகான ஆறுமுகங்கள் உள்ளனவே, எதற்காகவடா தம்பீ?”

    கொலைபுரியும் தொழிலைக் கொண்ட ஒளிவீசும் நீண்டவேலைக் கையில் ஏந்திக் கொண்டு குறிபார்த்து, மரங்களையும், கிளைகளையும், காய்ந்த இலைகளையும் இலக்காக்கி எய்து விளையாடிக் கொண்டிருக்கிறான் குமரன். விநாயகன் கேட்டதுதான் தாமதம்; வீச ஏந்திய வேலினைத் தாழ்த்திப் பிடித்தவன், இடுப்பில் கைவைத்துக்கொண்டு அண்ணனைப் பார்த்து ‘இடியிடி’யெனச் சிரித்தான். பின்பு, “அண்ணா, உனக்கு இதுகூடத் தெரியாதா? நம் தகப்பனாருடைய ஆறு முகங்களிலிருந்தும்* உண்டான பொறிகளிலிருந்து நான் பிறந்தபோது ஆறு குழந்தைகளாக வடிவம் கொண்டிருந்தேன் அல்லவா? இது உனக்குத் தெரிந்ததுதானே ஐங்கரா? ஆறு கார்த்திகைப்பெண்கள் என்னைச் சீராட்டினார்கள் அல்லவா? நம் தாயாரான பார்வதி அன்னை என்னைக் காண வந்தார். அவருடைய எல்லையற்ற அன்பிலும் பாசத்திலும் எனது ஆறுவடிவங்களையும் ஒருசேர அணைத்துக் கொண்டு கொஞ்சினாள் நம் அன்னை. ஆகவே நான் ஓருடலும் ஆறு தலைகளும் பன்னிரண்டு கைகளும் கொண்டவனானேன்.

    “இதுவும் நன்றாக உள்ளது. ஏன் தெரியுமா? அப்பனும் அன்னையும் என்னைக் கொஞ்சும்போது எனது இத்தனை கன்னங்களிலும் முத்தம் கொடுத்து விளையாடுவார்களல்லவா? அதற்காகத்தான் எனக்கு இத்தனை முகங்கள்,” எனக் கைகளை விரித்துக்காட்டி மழலையில் மொழிந்தான் குமரன். அண்ணன் கணேசன் புன்னகை புரிந்து தலையை ஆட்டித் தம்பியின் வியாக்கியானத்தை ரசித்தான்.

    அருகிலேயே அமர்ந்து சிவபிரானும் அன்னையான மலைமகளும் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேருமலையை வில்லாக வளைத்த கணவராகிய பிரானோடு சேர்ந்து இதனைச் செவியுற்றாள் சைலக்குயில் (சயிலக்குயில்- மலையில் வசிக்கும் குயிலான பார்வதி) எனப்படும் அன்னை! குழந்தையின் மழலைகேட்டு இருவரின் ஆனந்தத்திற்கும் அளவேயில்லை! கணவரை நோக்கிப் புன்னகை சிந்தியவண்ணம் அழகாக மறுமொழி கூறிய தனது இளையமகனான குமரனை வாரியணைத்துக் கொண்டாள் பார்வதி அன்னை. இவளே காந்திமதி என்ற பெயரில் சாலிப்பதி எனும் திருநெல்வேலியில் எழுந்தருளியுள்ளாள்.

    அவன் தனது அண்ணனிடம் கூறியபடியே, “என் கண்ணே! எத்தனை அழகாகப் பேசினாய். இப்போதுதான் நானே உனது ஆறு தலைகளுக்கான விளக்கத்தினைப் புரிந்துகொண்டேன்,” என்றுகூறித் தனது அழகிய தலையைக் குனிந்து மடியில் அமர்ந்திருக்கும் குமரனை அவனது கொழுவிய கன்னங்களில் மாறிமாறி முத்தமிடுகிறாள்.

    இத்தகைய செயலைப்புரியும் காந்திமதித் தாயை ‘வருக வருகவே!’ எனக் குழந்தையாக்கித் தாய் அழைப்பதாக வித்துவான் சொக்கநாதப்பிள்ளை அவர்கள் திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் வருகைப் பருவப் பாடலாக இதனைப் பாடியுள்ளார்.

    (*சிவபிரானுக்கு ஐந்து முகங்கள்- சத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம்; இவற்றுடன் பரமஞானியரின் உள்நோக்குக்கு மட்டுமே புலப்படும் உள்முகமாக உள்ள அதோமுகம் என ஆறாவதுமுகம்).

    கண்முன் இலக்கியச்சித்திரம் விரிந்ததா? பாடலையும் காண்போம்:

    கலையை வளைத்த பிறைக்கோட்டைங் கரத்தோன்
    துணைவன் தனைநோக்கிக்
    கவின்தோய் முகமா றுன்னுருவிற்
    காணு நிமித்தங் கழறுகென
    கொலையை வளைத்த நெடுங்கதிர்வேற் குகவேள்
    நமையீன் றவர்உவகை
    கொழிப்ப வொருமித் தென்னைமுத்தங்
    கொண்டு விளையா டுதற்கெனலும்
    மலையை வளைத்த கணவரொடு மகிழ்கூர்ந்
    திளைய மதலைதனை
    வாரி யெடுத்து மடியில்வைத்திவ்
    வாறின்றுணர்ந்தே மெனப்பேசித்
    தலையை வளைத்து முத்தமிடுஞ் சயிலக்
    குயிலே வருகவே!
    சாலிப் பதிவாழ் காந்திமதித் தாயே
    வருக வருகவே!
    (நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் -வருகைப் பருவம்)

    வேறொரு இனியகாட்சியைக் காணச்செல்லலாமா?

    பிடிவாதம் செய்யும் ஒரு சிறு பெண்குழந்தை. அதனிடம் பொய்யாகச் சினம்கொண்டுபேசும் தாய்! சுவாரசியமாக இல்லை? என்னவென்றுதான் பார்ப்போமே வாருங்கள்.

    “வா கண்ணே! முகம்கழுவி, உன்னைச்சிங்காரிக்கிறேன்,” என ஆசையாகத் தாய் அழைக்கிறாள். குழந்தைக்கோ விளையாட்டு மும்முரம். சிறுசெப்புகளில் மண்சோறு சமைக்கிறாள். இலைகளைப் பறித்துப் பொரியல்செய்கிறாள். “அம்மா வா, நான் சமைத்த சோற்றைச்சாப்பிடு,” என்று மழலையில் கூறுகிறாள்.

    கையில் பட்டுப்பாவாடை, கழுத்திற்கான அணிகலன்கள், மை, திலகம் முதலானவற்றை ஏந்தியபடி தாயின் அருகில் பணிப்பெண் நிற்கிறாள். குழந்தையின் புழுதிபடிந்த உடைகளையும் கைகால்களையும் கண்ட தாய் சலித்துக்கொள்கிறாள்.
    “நான் அழைக்கஅழைக்க நீ வராமலே இருந்தால், நான் இங்கிருந்து போய்விடுவேன். உனக்கு முகம், கைகால் கழுவி, உனது அழகான வேல்போலும் விழிகளுக்கு மைதீட்டமாட்டேன். பிறைமதிபோன்ற நெற்றியில் அழகியதிலகத்தையும் எழுதமாட்டேன். அழகான மணிகளால் செய்யப்பட்ட இந்த ஆபரணத்தை உனக்கு அணிவிக்கமாட்டேன்.”

    குழந்தைக்கு அலங்காரம் செய்துகொள்ள ஆசை; பெண்குழந்தையல்லவா? அலங்காரப்பிரியை அவள்! தனது விளையாட்டை விட்டுவிட்டுவர மனமில்லாமல் தாயை ஏக்கத்தோடு பார்க்கிறாள். இதுதான் வாய்ப்பெனத் தாய் தனது அச்சுறுத்தல்களைத் தொடர்கிறாள்.

    “உன்னிடம் அன்பாகப் பேசவும் மாட்டேன் குழந்தாய்! புழுதிபடிந்த உன் முகத்தையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டேன் போ! அலங்காரம் செய்தபின் எனது முலைப்பாலையும் ஊட்டமாட்டேன். ஆசையாக எனது இடுப்பில் உன்னைத் தூக்கிவைத்துக்கொண்டு தேரோடும் வீதியில் சென்று வேடிக்கை காட்டுவேனல்லவா? அதையும் செய்யமாட்டேனடி பெண்ணே!”

    குழந்தைக்குத் தாளவில்லை! இவையனைத்தும் அன்னையிடம் அவளுக்குண்டான தினசரி சலுகைகள். எப்படி அவற்றை இழக்கமுடியும்? குழப்பத்துடன் அன்னையைப் பார்க்கிறாள்.

    அன்னையோ விடுவதாயில்லை! விரலால் எச்சரித்தபடி, “உனது சிவந்த கனிவாயில் முத்தமிட்டு உன்னைக் கொஞ்சமாட்டேனடி பார்த்துக்கொள்! அழகான மணிகள் குலுங்கும் தொட்டிலில் படுக்கவைத்து, உன்னை உறங்கவைக்கப் பாராட்டிச் சீராட்டித் தாலாட்டும் பாடமாட்டேன் தெரியுமா?” என்கிறாள்.

    இதற்குமேல் குழந்தைக்குத் தாங்கவில்லை. தனது செப்புகளை வீசியெறிந்து விட்டு உதடுகள்நெளிய அழுகைபொங்கிவர ஓடோடிவந்து தாயின் சேலையில் முகம் புதைத்துக்கொண்டு அவளை அணைத்துக்கொள்கிறாள்.

    தாயும் தனது பொய்க்கோபத்தினை விட்டொழித்து, குழந்தையை இறுக அணைத்துக்கொள்கிறாள். பார்க்கும் நம் முகங்களில் புன்னகை அரும்புகிறது இல்லையா?

    இவள் இமவானின் அகன்றமார்பில் (விசாலமான இமயமலையில்) தவழும் குழந்தையல்லவோ? இவளையா கோபிப்பது?

    ‘வருக வருக என் குழந்தையே! சாலிப்பதி எனப்படும் நெல்லையில் வாழ்கின்ற காந்திமதித்தாயே, விரைந்து வருகவே!’ என நாமும் பாடியவாறே குழந்தையை எண்ணத்தில் அணைத்துக் கொள்கிறோம். பாடல் இதோ:

    வாரா திருந்தா லினிநானுன் வடிவேல்
    விழிக்கு மையெழுதேன்
    மதிவாள் நுதற்குத் திலகமிடேன் மணியால்
    இழைத்த பணிபுனையேன்
    பேரா தரத்தி னொடுபழக்கம் பேசேன்
    சிறிதும் முகம்பாரேன்
    பிறங்கு முலைப்பா லினிதூட்டேன் பிரிய
    முடனொக் கலையில் வைத்துத்
    தேரார் வீதி வளங்காட்டேன் செய்ய
    கனிவாய் முத்தமிடேன்
    திகழு மணித்தொட் டிலிலேற்றித் திருக்கண்
    வளரச் சீராட்டேன்
    தாரார் இமவான் தடமார்பிற் றவழுங்
    குழந்தாய் வருகவே
    சாலிப் பதிவாழ் காந்திமதித் தாயே
    வருக வருகவே.
    பேராதரம்- மிகுந்த அன்பு; ஒக்கலை- இடை.
    (நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்

    வித்துவான் சொக்கநாதப்பிள்ளை)
    அன்னைத் தெய்வத்தைக் குழந்தையாக்கி இவ்வாறு வருந்தியும், வேண்டியும், உரிமையுடன் கோபித்தும், பின் கொஞ்சியும் அழைத்தால் அவள் வந்து அருள்செய்யாமல் இருப்பாளா?

    *****

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    Share
  • மார்கழி மணாளன்  2- (காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள்)

    க. பாலசுப்பிரமணியன்

     fcf83c72-1d36-44e4-a660-d6b0f85e3e61

    கையேந்தி வந்தவர் மெய் நிறையும்

    கண்ணிறைந்து அவர் மனம் நிறையும்

    கார்மேகம் நடு  நில் கதிரவன்போல்

    காஞ்சியிலே வரதனின் அருள்காட்சி !

     

    வருந்துயரும் வாராது சென்றுவிடும்

    வரதனின் அருட்பார்வை வென்றுவிடும் !

    பெருந்துயரும் பனிபோல நலிந்துவிடும்

    பெருந்தேவி துணைகண்ட பெருமானே! !

     

    அபயக்கரம் தரும் அருள் வெள்ளம்

    அதைப் பெருக்கும் சங்கு சக்கரம் !

    ஒளிவெள்ளம் அவன் திருமேனி

    விழிவண்ணம் வற்றாத அருள்கேணி !

     

    பல்லிக்கும் அருள்தந்த பரந்தாமன்

    அள்ளிக்கொடுக்கும் திருமங்கை மார்பன் !

    பன்னிரு ஆழ்வார் போற்றிய நாதன்

    பாரெல்லாம் காத்திடும் பேராளன் !

     

    அத்தியூரான் அவன் முக்தி தருவான்

    அலங்காரப் பிரியனவன் ஆனந்தன் !

    அலைபாயும் மனமடங்கக் கீதை சொல்வான் !

    அச்சமின்றி வாழ்ந்திடவே அருள் புரிவான் !

     

    குறையொன்றும் எனக்கில்லை நீயிருக்க

    குரலெடுத்துப் பாடுங்கள் கோவிந்தனை !

    குறையின்றிக் கொடுக்கின்ற வள்ளலவன்

    குழந்தைபோல் நம்மைக் காத்திடுவான் !

     

     

     

     

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 28

    புலவர் இரா. இராமமூர்த்தி.

    திருக்குறளில் ஏறத்தாழ ஒரே வகைச் சீர்களைக் கொண்ட குறட்பாக்கள் உள்ளன! அவை சிறு வேறுபாட்டுடன் அமையும் அழகை நாம் கண்டு சுவைக்கலாம்! அவ்வகையில் இரண்டு குறட்பாக்கள் ஒரே வகைச் சொற்களைக் கொண்டு அமைந்துள்ளன! அவை,

    எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு (355)

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு (423)

    என்பனவாகும். இவ்விரண்டு குறட்பாக்களும் ”எப்பொருள்” …… “அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்ற தொடர்களையே கொண்டு அமைந்துள்ளன! இவற்றின் பொருள், ”எத்தன்மைத்து ஆயினும்” ,”யார், யார்வாய்க் கேட்பினும்”, என்ற தொடர்களால் வேறு படுகின்றன! இவற்றின் வேறுபாட்டை முறையாகப் புரிந்து கொண்டால் உலகியல் அறிவும், ஆன்மிக அறிவும் வளரும்! முதல் குறட்பா பொருள்களின் புறத்தோற்றத்தைக் குறித்தது! ஐம்பெரும்பூதங்களாலான உலகப் பொருள்கள் நம் ஐம்புலன்களால் உணரப் பெறுகின்றன! உலகப் பொருள்கள் அனைத்தையும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புல அறிவுகளால் உணர்வதோடு, அவை உருவான வகை குறித்த தத்துவ அறிவுடன் உள் நோக்கி அறிவதே உலகியலறிவு பெறுதலாகும்! இதனைத் திருவள்ளுவர் உணர்த்துவதற்காகவே, முந்தைய பாட்டில்,

    “ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
    மெய்யுணர் வில்லா தவர்க்கு !” (354)

    என்று தெளிவு படுத்தியுள்ளார்! கம்பர்,

    “உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
    நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
    அலகி லாவிளை யாட் டுடை யாரவர்
    தலைவர்”

    என்று குறிப்பாகக் கூறியது தத்துவப் பொருளையேயாகும்! தாயுமானவர்,

    “பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைகின்ற
    பரிபூரணானந்தமே!”

    என்றதும் இந்த மெய்ப்பொருளையே ஆகும்! ஆகவே, ஐம்புலன்களால் அறியவும், உணரவும் படும் பொருளே மெய்ப்பொருள் என்பது திருவள்ளுவர் கருத்தாகும் ! அனைத்தும் அணுக்களால் ஆனவையே என்ற அறிவியல் கருத்தும், அணுவுக்கும் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் இருப்பவன் என்ற ஆன்மிகக் கருத்தும் இதனையே உணர்த்துகின்றன!

    பொதுவாக ஒருவன் எதனையும் அறிந்து கொள்ள வேண்டுமானால் மிகவும் தேவையான புலன்கள் கண்களும் செவிகளுமே ஆகும்! அதனால்தான், கல்வியறிவுக்கு மிகவும் தேவையானவை கட்புலனும், செவிப்புலனும் ஆகிய இரண்டே என்று கல்வியாளர்கள் கூறினர். கற்றறிவதுடன் கேட்டறிவதும் அறிவுபெறத் தேவையான முறைகளாகும்! இவற்றுள் கேட்டு அறிவது இரண்டு வகைப்படும்! அவை, கேள்வியால் பெறும் அறிவு , உபதேசத்தால் பெறும் அறிவு என்பனவாகும்! வள்ளுவர் கூறிய ‘ஐயறிவு’ க்குள் காணுதலும், கேட்டலும் அடங்கினவே எனினும், கேள்வி என்பது பிறரால் கூறப்படும் கருத்துக்கள் பற்றியதாகும்! இதனைத் திருவள்ளுவர், கல்வி, கேள்வி என்ற இரு அதிகாரங்களில் விளக்குகிறார். இவை, உலகியல் அறிவைப் பற்றிய அறிமுகமேயாகும்!

    இவை அனைத்திற்கும் மேலாக,எந்தக் கருத்தையும் பிறர் கூறக் கேட்டறியும் நாம், அவற்றை யார் கூறுகிறார் என்று ஆராய்ந்து, பெரியோர், சான்றோர், நல்லோர் கூறுவதைக் கேட்டல் வேண்டும்! அவை நமக்கு உற்றுழி உதவும்! அதனையே வள்ளுவர்,

    “இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
    ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்!” (415)

    என்கிறார்! நாம் சிறந்த அறிவுடன் விளங்கும் போதுதான் பிறர் கூறும் கருத்துக்களை ஆராய்ந்து தேவையானால் ஏற்போம்; தேவையில்லையானால் நீக்கி விடுவோம்! இதனையே ‘யார்’, ‘கேட்பினும்’ என்று திருவள்ளுவர் கூறுகிறார்! அக்கருத்தைக் கூறுவோர் யாவராயினும் அதனை ஆராய்ந்தே ஏற்போம்! அவ்வாறு கூறுவோர் சிறியவரானாலும், பெரியோரானாலும், அறிஞரானாலும், மூடரானாலும், நண்பரானாலும்,எதிரியானாலும் அவர் கூறுவதிலும் பயன்தரும் கருத்திருந்தால் ஏற்போம்; அப்படியில்லையானால் ஏற்கமாட்டோம்! இதனையே திருவள்ளுவர் ‘ யார்வாய்க் கேட்பினும்’ என்று கூறுகிறார்! அந்தக் கருத்தின் ‘உண்மைப்பொருளை’ ஆராய்ந்தறிவதே மெய்யறிவு என்கிறார்! ஆகவே யார் கூறுகிறார், என்பதை விடவும், அவர் என்ன கூறுகிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்! ஆகவே,

    “எப்பொருள் யார், யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு!”

    என்ற குறட்பா, உலகியல், அறிவியல் கருத்தைச் சார்ந்தது! அறிவியல் கருத்துக்கள் எப்போதும் மறுப்பின்றி ஏற்கப் படுவதில்லை அவை ஆராயப்பட்டு, மறுக்கப்படும் வரை ஏற்றுக் கொள்ளப் படும். இதனை,

    “சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
    வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து!” (645)

    என்ற குறள் அறிவியல் அணுகுமுறையைக் குறிக்கிறது! ஆகவே இந்த இரண்டு குறட்பாக்களுக்கும் ஆன்மவியல், மற்றும் அறிவியல் கருத்தை உணர்த்துகின்றன என்ற புதிய பொருளை உணர்ந்து கொள்கிறோம்!

    Share
  • அவன், அது , ஆத்மா (40)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)
    (மீ.விசுவநாதன்)
    அத்யாயம்: 40

    உறவுகளின் பலம்

    அவனுக்கு அக்கா பாலா என்ற ஸ்ரீபார்வதிக்கு நல்ல வரன் இராஜபாளையத்தில் தனக்குத் தெரிந்த நல்ல குடும்பத்தில் இருக்கிறதென்றும், பையன் எண்ணூர் “தர்மல் மின்நிலையத்தில்” வேலை செய்வதாகவும் அவனுக்குக் குடும்ப நண்பர்களான ஸ்ரீ ஆதிமூலவாத்தியார், மற்றும் அவரது மனைவி அம்மளுக்குட்டி மாமியும் அவனுக்குப் பெற்றோரிடம் தெரிவித்து, அவனுக்கு அக்காவின் ஜாதகத்தைப் பெற்றுச் சென்று, பிள்ளை வீட்டாரிடம் தொடர்பு கொண்டு பெண் பார்க்கும் நாளையும் ஏற்பாடு செய்தனர்.

    பெண் பார்பதற்காக இராஜபாளையத்தில் இருந்து பிள்ளையின் பெற்றோர்களும், பிள்ளையின் தாய்மாமா மாமியும் மாப்பிள்ளைப் பையன் ஹரிஹரன் அவர்களுடன் வருவதாகச் சொல்லி இருந்தனர். அவனுக்கு அப்பாவின் ஒன்று விட்ட சகோதரியும், அவனுக்கு அத்தை முறையுமான “சீதை அத்தை”யின் இல்லத்தில் வைத்துப் பெண்பார்க்க முடிவு செய்திருந்தனர். சீதை அத்தையின் வீடு பாளையம்கோட்டையில் இருக்கும் பெருமாள்புரத்தில் இருந்தது. பூச்செடிகளும், ஆரஞ்சு, சப்போட்டா போன்ற பழச்செடிகளும் நிறைந்த மிக அழகான வீடு. அவனுக்குப் பெற்றோர்கள் அவனையும், அவனுக்கு அக்காவையும் அடிக்கடி அந்த இல்லத்திற்கு அழைத்துச் செல்வார்கள். சீதை அத்தையின் கணவர் ஹரிஹர ஐயர் நல்ல கண்டிப்பும், கனிவும் கொண்டவர். அவர் ஒரு சிவில் கான்ட்ரேக்டர். குடும்ப உறவைப் பேணும் குணம் கொண்டவர். அவருக்கு இரு பெண்களும், ஒரு மகனும் உண்டு. மகன் மத்திய அரசாங்கத்தின் விமானப் பாதுகாப்புத் துறையில் வேலையில் இருந்தார். அனைவருக்கும் திருமணம் நடந்திருந்தது. அவரது மருமகள் சித்ரா சுப்பிரமணியம். சென்னையில் மிகப் பிரபலமான “ஸ்ரீனிவாசன் & கம்பெனி” லெதர் நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவரான ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரம் அவர்களின் மகள். அவனுக்கு சகோதரி பாலாவைப் பெண் பார்க்க வருகிறார்கள், அதுவும் தங்களது பெருமாள்புரம் வீட்டில் என்று அறிந்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக அவனுக்குப் பெற்றோர்களிடம்,” மாமா நீங்க கவலையே படவேண்டாம்…நாங்கள் கூட இருக்கிறோம்” என்று தைரியம் கொடுத்தவர்களில் திருமதி. சித்ரா சுப்பிரமணியமும் ஒருவர் என்றும், பெண் பார்க்கும் தினத்தில் வந்திருந்த பெரியோர்களுக்கு உணவினைத் தன்னுடைய திருமணத்திற்குத் தந்திருந்த வெள்ளிப் பாத்திரங்களில் வைத்துப் பரிமாறி மகிழ்ந்த “சித்ரா சுப்பிரமணியனின்” நல்ல குணத்தை இப்பொழுது கூட அவனுக்கு சகோதரி பாலா நன்றியோடு சொல்லுவாள். அவனுக்கு அக்காவின் திருமணம் 12.05.1974 என்று தேதி குறிக்கப் பட்டது. திருமணச் செலவுக்கு அவனுக்கு அப்பாவின் சேமநல நிதியில் இருந்து கொஞ்சம் பணம் கிடைத்தது. அவனுக்கு அம்மாவழித் தாத்தா கடனாகக் கொஞ்சம் பணஉதவி செய்தார். குடும்ப நண்பர்களான மும்பை R .S . மணி அவர்கள் அவனுக்கு அப்பாவிடம் மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர். அவர் திருமணத்திற்கு ஒருவாரம் முன்பு அவனுக்கு அப்பாவை சந்தித்து ரூபாய் மூவாயிரம் தந்து,” மீனாக்ஷி சுந்தரம் இந்தக் கவரில் மூவாயிரம் ரூபாய் இருக்கு…கல்யாணச் செலவுக்கு வைத்துக் கொள்ளும்…உமக்கு எப்பொழுது முடியுமோ அப்பொழுது திரும்பத்தந்தால் போதும்..கவலைப் படாமல் கல்யாணத்தை நடத்தும்” என்று சொன்ன பெருந்தகை. (அப்பொழுது ஒரு படி அரிசி இரண்டு ரூபாய்க்கும், தங்கம் ஒரு சவரன் இருநூற்றி ஐம்பது ரூபாய்க்கும் விற்ற காலம்.) R. S. மணி அவர்கள் மும்பை தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த ஆதிலக்ஷ்மணனின் ஷட்டகர் (சகலை). திருமணச் சமையலை “கிச்சன்” முன்னின்று செய்து கொடுத்தார். கைலாசம் ஐயரின் தம்பிதான் “கிச்சன்”. அற்புதமான சமயற்கலைஞர். அவர்களும் அவனுக்கு அப்பாவின் நெருங்கிய நண்பர்கள்தான். மூன்று நாட்களும் நல்ல சுவையாகச் சமைத்து அனைவரையும் மகிழ்வித்து விட்டார். பிள்ளை வீட்டர்களுக்கு ரொம்பவும் மகிழ்ச்சி. திருமணத்தில் ஸ்ரீ லக்ஷ்மண வாத்தியார் குடும்பத்தினரின் பங்கு நன்றியோடு நினைக்க வேண்டிய ஒன்று.

    வடக்கு ரதவீதியில் உள்ள அவனுக்கு அப்பாவின் பூர்வீக வீட்டின் வாசல் மற்றும் இரண்டு பக்கத்திலும் உள்ள நான்கு வீடுகளின் வாசல் அடைத்துப் பந்தல் போடப் பட்டிருந்தது. அவனுக்குச் சித்தப்பாக்கள், அத்தைகள், மாமா குடும்பங்கள், எம்.ஆர்.ஆதிவராகன், எம்.ஆர்.ராமநாராயணன் போன்ற நண்பர்களின் பக்க பலத்தோடு அவனுக்கு அக்காவின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.

    2f590b7a-f77d-462b-80e2-1a56b0b84e17

    திருமணம் முடிந்து அவனுக்கு அக்கா, அத்திம்பேர் மற்றும் பிள்ளை வீட்டாரின் குடும்பத்தினரை இராஜபாளயத்திற்கு அனுப்பி வைக்க அம்பாசமுத்திரம் சென்றிருந்தனர். அம்பையில் உள்ள பிரபலமான புகைப்பட நிறுவனம் “சித்ரா ஸ்டுடியோ”வின் வாசலில் பேருந்து வருவதை எதிர்பார்த்து பிள்ளைவீட்டார் நின்று கொண்டிருந்தனர். அது சமயம் அவனுக்கும், அவனுக்கு அக்காவுக்கும் ஆசிரியராக இருந்தவரும், அவனுக்கு அப்பாவின் நல்ல நண்பரும், ஸ்ரீ ஞானானந்த பாரதி சுவாமிகளின் பூர்வாச்ரம சகோதரருமான ப்ரும்மஸ்ரீ ஆர். சங்கர ஐயர் அவனுக்கு அக்காவையும், அத்திம்பேரையும் வாழ்த்துவதற்காகவே வந்து, தான் எழுதிக் கொண்டு வந்திருந்த ஒரு அருமையான கவிதையை அங்கு இருந்த அனைவரின் முன்பாக வாசித்து, அவனுக்கு அக்காவையும், அத்திம்பேரையும்,” நீங்கள் எப்பொழுதும் நிறைந்து வாழ வேண்டும்” என்று தான் கொண்டு வந்திருந்த மங்கள அக்ஷதையைத் தூவி ஆசீர்வாதம் செய்தார். அவரைப் போன்ற நல்ல உள்ளங்களின் ஆசீர்வாத பலத்தால் இன்றும் அவனுக்கு சகோதரியின் குடும்பம் மனத்திலும் நிறைந்து இருக்கிறது.

    “மணிமுத்தாறு பூங்காவில் “மன்னவன் வந்தானடி”

    14.05.1974 அன்று காலை ஒன்பது மணிக்கு கல்லிடைக்குறிச்சி தேரடித்தெருவில் உள்ள ஒரு சைக்கிள் கடையில் அவனும், அவனுக்கு நண்பன் பிரபுவும் வாடகைக்கு சைக்கிளை எடுத்துக் கொண்டு மணிமுத்தாறு நோக்கிப் புறப்பட்டனர். அவனுடைய ஊரில் இருந்து மணிமுத்தாறு அணை, அருவிக்கு ஒரு மணிநேரத்திற்குள் சைக்கிளில் சென்று விடலாம். ஒவ்வொரு முறையும் அவன் ஊருக்கு வரும்பொழுது செல்லக் கூடிய ஒரு இடமாகவே மணிமுத்தாறு அருவித்துறை இருக்கிறது. அன்று அவனும், பிரபுவும் சென்று வருவதற்கு ஒரு கூடுதல் காரணமும் இருந்தது. அது சிவாஜி கணேசன் நடித்த “மன்னவன் வந்தானடி” திரைப்படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு மணிமுத்தாறு அணை, பூங்காவில் நடை பெற்றுக் கொண்டிருந்தது. சைக்கிளை ஒரு ஓரமாக நிறுத்தி வைத்து விட்டு அவனும், பிரபுவும் படப்பிடிப்பைக் காண பூங்காவுக்குள் சென்றனர். கூட்டம் அதிகம்தான். அவனும், பிரபுவும் ஒரு திண்டின் மீது நின்று கொண்டு பார்த்தனர். சிவாஜி கணேசனும், மஞ்சுளாவும் ராஜ உடையில் இருந்தனர். ஒளிப்பதிவாளர் P. N. சுந்தரம் தனது காமிரா மூலமாக அந்த இடத்தின் ஒளி அமைப்பினைப் பார்த்துக் கொண்டிருக்க, நடன இயக்குனர் சலீம் அந்தப் பாடலுக்கான நடன அசைவுகளைக் கற்றுத் தர, இயக்குனர் P. மாதவன் ஸ்டார்ட் சொல்ல “காதல் ராஜியம் உனது, அந்தக் காவல் ராஜியம் எனது” என்ற வாலியின் பாடல் படமாக்கப் பட்டது. எம்.எஸ். விஸ்வநாதனின் இசையில் T M. S., P. சுசீலா பாடிய மிக இனிமையான பாடலது.

    அந்தப் படப்பிடிப்பைப் பார்த்த பிறகு அவனும், பிரபுவும் மணிமுத்தாறு அருவியைப் பார்க்கச் சென்றனர். அருவியைப் பார்த்துத் திரும்பி வரும் பொழுது தகரக்கொட்டகை என்னும் இடத்தில் உள்ள இறக்கத்தில் அவனுடைய சைக்கிளின் முன்சக்கரம் பிரபுவின் சைக்கிளின் பின்சக்கரத்தில் மெதுவாகத் தட்டியது. அடுத்த கணத்தில் இருவரும் அந்த இறக்கத்தில் உருண்டு விழுந்தோம். இருவரின் கைகளிலும், கால்களிலும் நல்ல சிராய்ப்புகள். இரத்தம் வழிய சைக்கிளை மெதுவாக ஓட்டிக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தோம். “கல்யாணத்திற்கு வந்த இடத்தில் இப்படி ரத்தக் குறியோட வந்து நிக்கறே..அப்படி என்ன சினிமா மோகம்” என்று அவனுக்கு அம்மா அர்ச்சனை செய்தாள். அவன் கூட ஒரு வாரம் ஊரில் தங்கி விட்டு, சென்னைக்குத் திரும்பினான்.

    “காதல் ராஜியம் உனது, அந்தக் காவல் ராஜியம் எனது” என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் மானசீகமாக அவன் மணிமுத்தாறு சென்று விடுவான்.

    17.12.2015

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (178)

    – சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே!

    இனிய வணக்கங்கள். அடுத்தொரு வாரம் அவசரமாய் ஓடி விட்ட நிலையில் உங்களுடன் மடல் வழி இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    உள்ளம் இருக்கிறதே! அது ஒரு விசித்திரமானது. அதிலே சதிராடும் உணர்வுகளின் காரணம் தெரியாமலே எண்ணங்கள் உருவெடுக்கும். அவ்வெண்ணங்களின் நதிமூலம் தேடினால் கிடைப்பது ஏமாற்றமே!

    இவ்வாரம் எனது அன்னையின் 16 வது சிரார்த்த தின வாரமாகும். ஆம், அவர் மறைந்து பதினாறு வருடங்கள் காற்றோடு கலந்து பறந்து விட்டது. அவரின் சுவாசம் கூட அவ்வகையில் தான் பறந்தோடியதோ? அன்னையின் எடை எமது இதயத்தில் எத்தகையது என்பதை அளந்து கூறக்கூடியவர்கள் யாராவது இருந்தால் அது அதிசயமே! என் அன்னையின் எண்ணங்கள் என் நெஞ்சில் நிழலாடும் போதெல்லாம் ஏதோ ஒரு உணர்வு என் நெஞ்சினை அடைத்துக் கொள்ளும். அவரின் பாசமிகு பார்வைகள், பரிவு மிகு மென்மையான வார்த்தைகள் எத்தகைய துயரோடு அவரை அணுகினாலும் அதனை ஒரு வினாடிக்குள் எம்முள் இருந்து களைந்தெறிந்து விடும் அவரின் தாய்மை ஆற்றல்கள் என்னைப் பிரமிக்க வைத்திருக்கிறது.

    நாம் இவ்வுலகை விட்டுச் செல்லும்போது எமது அடையாளமாக, அதாவது ஆங்கிலத்தில் legacy என்று கூறுவார்கள் … விட்டுச் செல்லப் போகிறோம் எனும் கேள்வி பலருக்கும் எழுவதுண்டு. ஆனால் ஒரு உண்மையான தாய்மையின் அடையாளச் சின்னமான அன்னையருக்கு அக்கேள்வி எழ நியாயமேயில்லை எனலாம். அவர்கள் தமது அடையாளமாக தமது சின்னமாக விட்டுச் செல்வது தாம் பெற்ற குழந்தைச் செல்வங்களையே! தமது கனவுகளை தமது உள்ளத்தினுள் புதைத்து விட்டு, தமக்காக ஆண்டவன் அருளிய குழந்தைச் செல்வங்களின் நலன் ஒன்றையே முதன்மையாகக் கொண்டு வாழ்ந்து முடித்து விடும் அவர்களின் தியாகத்தின் முன்னே எதுவுமே ஒப்பாகாது. இதை உணர்த்தும் முகமாகவே எமக்கு எமது முன்னோர்கள் தாம் படைத்த இதிகாசங்களில் குந்தியை, காந்தாரியை, கோசலையை, யசோதையை உதாரணங்களாகக் காட்டிச் சென்றுள்ளார்கள்.

    வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விடும் அவசரத்திலும் தாய்மையெனும் செல்வத்தை விட மற்றைய செல்வங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதினாலும் பல சமயங்களில் நாம் எமது அன்னையருக்குக் கொடுக்க வேண்டிய நியாயமான கெளரவத்தை அளிக்க வேண்டும் எனும் உண்மையை மறந்து விடுகிறோம். காலம் கடந்த பின்பு, காலன் அவர்களை எம்மிடமிருந்து பறித்துச் சென்ற பின்பு அவர்களின் மகிமை எம்முன்னே மகத்தான ஒளியாகப் பிரகாசிக்கிறது. என் அன்னை கடந்து வந்த பாதையை இப்போது பார்க்கும் போது அவர்களின் கால்களில் பதிந்த முட்களின் ரணங்களின் வலியின் கொடூரத்தை உணர்கிறேன். அதை உணர்ந்து கொண்டேன் என்று அவருக்குச் சொல்லும் சந்தர்ப்பத்தைத்தான் naan இழந்து விட்டேன்.

    இம்மடலின் முக்கிய நோக்கம், என் இனிய வாசக நெஞ்சங்களுக்கு அவர்தம் பெற்றோரின் பெருமையைக் காலம் கடந்திடாமல் உணர்ந்து கொள்ள வேண்டும் எனும் ஒரு ஞாபகமூட்டுதலே! அன்னைக்கான திதிக்கான கடமைகளை ஆற்றும் போதெல்லாம் அவ்வன்னை எனக்காகத் தான் ஆற்றிய கடமைகளின் மகத்துவம் புரிகிறது. “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” கவிஞர் வாலியின் வரிகள் மனதின் வலிகளைக் கொஞ்சம் இதமாய்த் தடவிக் கொடுக்கின்றன. என் அன்னைக்கு நான் சமர்ப்பிக்கும் அஞ்சலிக் கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே அவருக்கு நான் செய்யும் முக்கிய கடமையாகிறது.

    அம்மா

    அம்மா !
    எனும் இந்த
    மந்திரச் சொல்லினுள்
    அர்த்தங்கள்
    ஆயிரம் எனும்
    அற்புத உண்மைதனை
    அழியாமல் என்னிதயத்தில்
    பதித்து வைத்த
    அன்பு அன்னையே
    உன் பாதம் பற்றி
    வணங்குகிறேன்

    உன் உள்ளமெனும்
    உத்தம ஆலயத்தில்
    அன்பு எனும் நெய் ஊற்றி
    உன் சுவாசக் காற்று
    உனை விட்டு அகலும் வரை
    அணையாது பாதுகாத்த
    அன்புத் தெய்வம் நீயம்மா !

    மந்திரப் புன்னகையினால்
    மனதின் மந்தகாசங்களை
    மத்தாப்புக்களாக மாற்றும்
    மாபெரும் வித்தையின் நாயகி
    விதையாகி உந்தன் கருவறையில்
    முகிழ்த்தெழுந்த நாள்முதல்
    முழுமனிதனாய் வலம் வந்ததுவரை
    முற்று முழுதான தாயன்பின்
    தத்துவம் பயிற்றுவித்த
    தமிழன்னை நீயம்மா !
    வேதனையில் என் வதனம்
    வாடிடும் வேளை கண்டால்
    சோதனையில் உன் மனம்
    வெந்திடும் விந்தையறிவேன்
    சாதனையேதும் புரியாத
    சாதாரண மகன்தான் நானெனினும்
    சாதனை புரிந்தவன் போல்
    பெருமையில் பூரித்தவள் நீயம்மா !

    காலமெல்லாம் நிறைவேறா பல
    கனவுகளை உன்னுள்ளம் தாங்கிடினும்
    கண்களின் மணிகள் போல எமை
    காத்துக் கரையேற்றிய காவியத்தலைவி நீ !
    உன்னுள்ளம் நானறிவேன் அம்மா !
    உன் ஏக்கம் நானுணர்ந்தேன்
    வீண் கழித்துக் காலங்கள் பல
    மண்ணாக்கிய பொழுதுகள் பலவுண்டு
    கண்விழித்து வாழ்வின் பொருளுணரும் போது
    காற்றோடு காற்றாக நீயும்
    விண்ணேகி மறைந்து விட்டாய்

    நீ வாழும் போது நானுனக்கு
    கவிமாலை சாத்தவில்லை அம்மா !
    உன் உயிர் பிரியும் வேளையிலே
    உனக்காக நான் யாத்தேன் முதற்கவிதை
    அதுவே என் கவியுலகின் பிரவேசத்திற்கு
    முதல் படியானதம்மா ! இன்று
    நாளெல்லாம் பல கவிதை
    நான் பாடி முடிக்கின்றேன் ஆயினும்
    குயில் பாடும் இசை கேட்க செவியில்லை
    என்பது போல, என் கவி கேட்க
    தமிழ் தந்த என் தாயில்லையே !

    என் எழுத்துக்களின் ஜீவ நாடியாய்
    அன்னையும், தந்தையும் என் தெய்வங்கள்!
    என் விரல்கள் வழி வழிந்தோடும்
    எண்ணங்களின் நதிமூலம் எனை ஈன்ற
    என் அன்புத் தெய்வங்கள் தானென்பேன்
    அம்மா ! அம்மா ! என்று நானழைத்த பொழுதுகளும்
    தம்பி, தம்பி என்று நீ அணைத்த பொழுதுகளும்
    கண்ணுக்குள் என்றும் உறங்காத காட்சிகளாய்
    காலத்தின் முன் அழியாத சாட்சிகளாய்
    அன்னையுந்தன் பெருமை உரைக்கும்
    கல்பதிந்த எழுத்துக்களாய் மிளிரும்
    அன்னை உந்தன் சிரார்த்த தினமதில்
    அழியாத தெய்வமாய் உனை நிறுத்தி
    ஆலயத்தில் நான் செய்யும் ஆராதனைகள்
    அனைத்தும் அம்மா உன் பாதங்களில் இவன்
    வடிக்கும் கண்ணீர்ப் பூக்களே !
    நான் வாழும் காலவரை என் எழுத்துக்கு
    எனையீன்ற தமிழ்த்தாய் நீ வலு கொடுப்பாய்
    உனக்கெந்தன் அஞ்சலிகள் செலுத்துகிறேன்
    அன்னலஷ்மி எனும் அன்புத் தெய்வமே !

    amma appaa

    வணக்கத்துடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share