பழமொழி கூறும் பாடம்

– தேமொழி.

 

பழமொழி: செய்கொன்றான் உண்கென்னு மாறு

 

வெற்றிவேல் வேந்தன் வியங்கொண்டால் யாமொன்றும்
பெற்றிலே மென்பது பேதைமையே – மற்றதனை
எவ்வ மிலராகிச் செய்க அதுவன்றோ
செய்கென்றான் உண்கென்னு மாறு.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
வெற்றி வேல் வேந்தன் வியம் கொண்டால், ‘யாம் ஒன்றும்
பெற்றிலேம்’ என்பது பேதைமையே; மற்று அதனை
எவ்வம் இலர் ஆகிச் செய்க!-அது அன்றோ,
‘செய்க!’ என்றான், ‘உண்க!’ என்னுமாறு.

பொருள் விளக்கம்:
வெற்றியைத் தரும் வேலினை ஏந்திய மன்னவன் ஆணை இட்டால், நான் அதனைச் செயல் படுத்தும் திறனைப் பெற்றிருக்கவில்லை என்று சொல்லி மறுப்பது அறியாமையாகும். அவ்வாறின்றி அச்செயலை வருத்தமுறாமல் செய்க. அவ்வாறாகச் செய்தால், செய்க இச்செயலை என்ற மன்னவனின் கட்டளை உணவு உண்பதற்கு வழிவகுத்ததை ஒத்ததாகும்.

பழமொழி சொல்லும் பாடம்: தனக்குத் திறமையில்லை என்று வருத்தம் கொள்ளது, அதிகாரத்தில் உள்ளவர் இட்ட கட்டளையை மறுக்காது நிறைவேற்றுவது, பசியின்றி வாழும் வகையில் ஒருவரது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும். நம்மால் இது இயலாது என்று மனந்தளராது காரியமாற்றுவதால் விளையும் நன்மையைக் குறிக்கும் குறள்,

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். (குறள்: 611)

நமக்குக் கடினமான செயல் இது என்று மனச்சோர்வு கொள்ளாது, முயன்று செயலாற்றினால், அதன் விளைவு பெருமை தரத் தக்க வகையில் அமையும் என்று விளக்குகிறது.

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *