Year: 2015

  • மார்கழி மணாளன்  (1) திருவரங்கம்  -ஸ்ரீ ரங்கநாதர்  

     க. பாலசுப்பிரமணியன்

    33e89dd1-7c75-49c4-a6d6-e2a6c08d2020

    மார்கழி மணாளன் திருக்காப்பு

     

    வாழிய வாழிய வலக்கை சக்கரம்

    வாழிய வாழிய மலர்க்கை சங்கம்

    வாழிய வாழிய துளசி மோகனன்

    வாழிய வாழிய மார்கழி மணாளன் !

     

    வண்ணங்கள் ஆயிரம் கண்களில் துள்ளும்

    கண்ணனின் நினைவில் காலங்கள் வெல்லும்

    விண்ணவர் அனைவரும் வாழ்த்திடும் வகையில்

    வைகறை நித்தம் மங்கலம் மலர்ந்திடும் !

     

    திருவருள் பொங்கிடும்  திருவடி சரணம்

    பொன்னிரு பாதம்  இன்னுயிர் காக்கும்

    கண்ணிரு விழியில் கண்ணனை வைத்தால்

    கருத்தில் காரிருள் நீங்கிக் கதிரொளி வீசும் !

     

    பூவிரித்  தாமரை பொற்பதச் செல்வி

    பூரணன் நெஞ்சினில் நித்தம் வேள்வி !

    போதுமென்ற மனம் புகுந்திட வருவாள்

    போதாதவர்க்குப் பொன்னும்  தருவாள் !

     

    அரங்கனின்  அயர்வினை நீக்கிடும் காலை

    ஆலயம் நெஞ்சினில் அமைந்திடும் வேளை !

    மார்கழிக் காலையில் மாதவன் போற்றி

    மங்கலம் தங்கிட வாழ்வினில் வெற்றி !

     

    மார்கழி மணாளன்  (1)

     

    அரங்கத்தான் திருமேனி துயிலுறங்கத் தான்

    அஞ்சுதலை ஆதிசேடன் குடைப் பிடித்தான் !

    அன்னை இலக்குமியும் அடி போற்றத்தான்

    அரங்கத்தான் தாள் அகிலமெல்லாம் காப்பு. !

     

    ஆதவன் சுடரெல்லாம் கார்மேனி கவர்ந்திருக்க

    அங்கமெல்லாம் புதுநிலவாய்ப்  பொலிந்திருக்க

    அரக்கன்தம்பி ஆள்திசைக்கும்  அருள்கிடைக்க

    அலையாழி துயில் செய்யும் அரங்கத்தான் காப்பு !

     

    விண்ணவரும் மன்னவரும் கண்விழியில் காத்திருக்க

    வேதமுடன் பாசுரங்கள் விண்வெளியில்  ஒலித்திருக்க

    விழிகாண ஆவினங்கள் விருப்பமுடன் காத்திருக்க

    விழிமூடி விளையாடும் வைகுந்தன்  அருள்காப்பு !

     

    துயிலுறங்கும் தூயவன் நினைவெல்லாம்

    துயர்துடைக்கச்  சென்றதுவோ அகிலமெல்லாம்?

    தூங்காமல் தூங்குகின்ற தோற்றமுற்றான்

    துளசி மாலையணி  துவாரகையான் திருக்காப்பு! !

     

    ஆழ்வார்கள் சாசனங்கள் அவன் கேட்டும்

    அமர்ந்திடவே  ஆசனங்கள் ஏற்கவில்லை !

    காவிரிக் கருணையில் கழனிப்பாசனம் போல்

    காதல் கொண்டோருக்குக் கண்ணன் காப்பு !

     

    நீலக்கடலிலே நீண்ட சேஷத்திலே

    நித்திரை காட்டும் முத்திரை மோனத்திலே

    நீர்மேகக் கண்ணனவன்  பாதத்தையே

    நினைத்தவருக்கெல்லாம் அருட்காப்பு !

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    bd9ac91f-aa5d-4fcc-ab0f-8d9672ddeaae

    “மாதங் களில்அவள் மார்கழி, மாதவனிடம்,
    வேதக் கிளிதந்து வேண்டுகிறாள், -கோதை,
    திருப்பாவை செப்பி திருமணம் கொள்ள:
    கருப்பான வன்மடி காசு” ….கிரேசி மோகன்….

    காசு -தாலியைக் குறிக்கும் பழஞ்சொல்

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: செய்தானை ஒவ்வாத பாவையோ இல்

     

    செயிரறு செங்கோல் சினவேந்தன் தீமை
    பயிரறு பக்கத்தார் கொள்வர் – துகிர்புரையும்
    செவ்வாய் முறுவனற் சின்மொழியாய்! செய்தானை
    ஒவ்வாத பாவையோ வில்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    செயிர் அறு செங்கோல் சின வேந்தன் தீமை
    பயிர் அறு பக்கத்தார் கொள்வர்;-துகிர் புரையும்
    செவ்வாய் முறுவல் நல் சில் மொழியாய்!-செய்தானை
    ஒவ்வாத பாவையோ இல்.

    பொருள் விளக்கம்:
    குற்றமற்ற செங்கோலை ஏந்திய, சினம் கொண்ட மன்னவன் இழைக்கும் தீமைக்கு, குற்றமற்ற, அருகில் உள்ள அமைச்சர்களே பொறுப்பாவார்கள். பவளம் போன்ற செவ்விதழ் கொண்ட வாயில் புன்முறுவல் துலங்க இனிய சில மொழிகளைக் கூறும் பெண்ணே, (இது எவ்வாறெனில்) ஓவியர் தம் மனது விரும்பாத ஓவியத்தை வரைவதில்லை அன்றோ.

    பழமொழி சொல்லும் பாடம்:  ஓவியர் விரும்பியது போலவே அவர் தனது ஓவியப்பாவையை வரைவார், அது போல அமைச்சர் வழி நடத்துவதற்கு ஏற்பவே அரசனின் செயல்கள் அமையும். எனவே, அரசன் செய்யும் தீங்குகளுக்கு அருகிருந்து அவனை இடித்துரைத்துத் திருத்த வேண்டிய அமைச்சர்களே பொறுப்பாவார். அறிவுரை கூறவேண்டியவர் கடமையைப் பற்றிக் கூறும் வள்ளுவர்,

    அறிகொன்று அறியான் எனினும் உறுதி
    உழையிருந்தான் கூறல் கடன். (குறள்: 638)

    அறிஞர் சொல்லும் அறிவுரையையும் கேட்காத, சொந்த அறிவும் இல்லாத மன்னவனுக்கு, உடனிருக்கும் அமைச்சரே நல்வழி காட்டி அறிவுறுத்தக் கடமைப் பட்டவர் என்று கூறுகிறார்.

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 39

    சி. ஜெயபாரதன்.

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    “நேற்று காணப்பட்டது போல் இன்று நீ தோன்றுகிறாய். நாளையும் தோன்றுவாய், அடுத்த நாளும் தோன்றுவாய். முதன்முதலில் நான் கண்டது போலிருக்கிறாய் நீ. நேற்று நாம் வாழ்ந்தோம். இன்று நாம் வசிக்கிறோம். இதுவே தெய்வத்தின் நியதி. வானரங்களின் வாரிசுகளே ! உங்கள் உறுதி வாக்கு என்ன ?”
    கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
    ___________________

    விடுதலைத் தாகம்
    ___________________

    மனித இதயம் தவித்துக்
    கூக்குர லிடும் உதவி நாடி !
    மனித ஆத்மா தினமும்
    மன்றாடும்
    விடுதலைக்குப் போராடி !
    ஆயினும்
    புரிந்து கொள்வ தில்லை !
    கவனிப்ப தில்லை
    செவி சாய்ப்ப தில்லை
    அவலக் குரலுக் கெல்லாம் !
    புறக்கணிப்போம்
    புரிந்து கொள் வோனைப்
    பைத்தியம் என்று !
    விரைந் தோடுவோம்
    அவனை விட்டு !
    ___________________

    இரவுகள் கழிகின்றன !
    இப்படி நாம் வாழ்கிறோம்
    அறியா மையில் !
    அடுத்தெடுத்துப்
    பகற் பொழுதுகள் புலர்ந்து
    அணைத்துக் கொள்ளும்
    வரவேற்று நம்மை !
    ஆயினும்
    இரவுக்கும் பகலுக்கும்
    அஞ்சி அஞ்சித் தவிப்போம்
    நிரந்தரமாய் !
    ___________________

    இணைந்து கொண்டோம்
    இந்தப் புவியோடு
    இறைவனின் இதய வாசல்
    திறந்துள்ள போது !
    மிதிப்போம் காலால் நமது
    வாழ்க்கை உணவை
    வயிற்றுப் பசி நம்மை
    வாட்டும் போது !
    எப்படி இனிக்கிறது இவ்வாழ்வு !
    ஆயினும் வாழ்வுக்கு
    அப்பால் ஒதுங்குவான்
    அற்ப மனிதன் !
    ___________________

    Share
  • விதி வகுப்பது மனிதன்; நீதி வழங்குவது மாமனிதன் [1]

    `இன்னம்பூரான்
    15 12 15

    innam-edited

    ஆராய்ச்சிமணி அடித்தக் கறவைப்பசுவுக்கும், வண்ணாத்தியிடம் ஜஹாங்கீர் துப்பாக்கி நீட்டியதும் வகுக்கப்பட்ட விதியல்ல; நீதிபோதனை.

    மின்னிதழ்களிலும், மின்குழுமங்களிலும் தற்காப்புக் கருதி நான் நீண்டகாலம் எழுதுவதில்லை.‘நாவினால் சுட்டவடு..’ என்று தெரியாமலா சொன்னார், வள்ளுவர் பெருந்தகை? மதிக்கப்படாவிடினும், மிதிபட வேண்டாம் அல்லவா! இது நிற்க.

    சிந்தனையும் சொல்லும் இணைந்து செயல்படுபவை. ஆங்கிலத்தில் algorithm என்ற சொல் கொடி கட்டிப்பறக்கிறது; சாதனை படைக்கிறது; அதற்கு’ வழிமுறை’ என்று தமிழ்ப் பொருள் கூறப்படுகிறது. என்னுடைய கணிப்பில் அது மேலான,புடம் போட்ட வழிமுறை. நான் மதிக்கும் algorithm: ‘விதி வகுப்பது மனிதன்; நீதி வழங்குவது மாமனிதன்.’ என்பதே. இன்று ‘மருத்துவத்தின் மூன்று வி (நீ)திகள்’ என்ற தலைப்பில் சித்தார்த் முக்கர்ஜீ என்ற மருத்துவர் எழுதிய கட்டுரை ஒன்றை படித்ததின் விளைவாக எழுகிறது, இந்தத் தொடர். நான் விதித்துக்கொண்ட விதியை மீறி, நீதி பேசுகிறது. குறைப்பிரசவம் ஆனாலும் ஆகலாம். அப்போது விட்டு விட வேண்டியது தான். விதி யாரை விட்டது? இதுவும் நிற்க.

    சென்னை வெள்ளத்தில் நகரே சிதிலம் அடைந்தது. தமிழ்நாடு முழுதும் சேதம் அடைந்தது. மனம் பதைத்து, பல தடங்கல்களை கடந்து, மூட்டைகளை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு டிசம்பர் 7 அன்று எடுத்து சென்றால், அத்தியாவசிய பொருள்கள் மிகுதியாக வந்தன; மிகுதியாகப் போயின. செல்வந்தர்கள் பால் பாக்கெட்டுக்குக் கையேந்தினர். ஏழை பாழை தாராளமாக் வழங்கினர். பேதமில்லாத உலகம். எண்பதைத் தாண்டிய முதியோர்களுடன் பள்ளி மாணவர்கள் இணைந்து செயலாற்றினர்; நம் வீட்டு சிறுவர்/சிறுமிகளோ, உலகின் பலபகுதிகளிலிருந்து whatsapp மாயா மச்சீந்திரா உபாயங்கள் மூலம் உடனக்கடி அபயம் அளித்து வந்தனர். Blue Cross நிறுவனத்தின் Dawn அவர்கள் அசகாய வேலை செய்து உயிர் மீட்டனர். மற்றும் பல மனிதநேய நிகழ்வுகள், உருக்கமான செய்திகள், எண்மெய்ப்பாடுகளும், வளைய வந்த மனித அபிமானங்களும், சுவபாவங்களும், பல பாடங்களைக் கற்பித்தன. மேற்படி செயல்பாடுகளில் ஒன்று கூட விதிக்கு உட்பட்டவை அன்று. அன்றாட இயல்பு வாழ்க்கையில் இவை இடம் பெற்றிருக்கப்போவதில்லை. அவை நீதிதேவதையின் வழிமுறை.

    மேல்தளத்து (அதாவது பாதுகாப்பாக இருந்த) மக்கள் ரூல் பேசினார்கள். அரசை கண்டித்தார்கள். ஆக்கிரமிப்புகளை பற்றியும், நீராதாரம் பற்றியும், ‘அத்தையும் செய்யலாம்; இத்தையும் செய்யலாம்’ என்று முடியா வழக்குகளை சகதியிலும், ஊடகங்களிலும், மின்/மின்னா குழுக்களிலும் பேசி வந்தனர். பிராவகத்து போராளிகளுக்கு இதெல்லாம் இரண்டாம் பக்ஷம். அவர்கள் விதியை மறந்தனர். நீதியை நாடினர்.

    வாழ்வியலில் நாம் சிரத்தையுடன் (பஹுகார்யமாக), அரைகுறை தகவல்களை வைத்துக்கொண்டு, பக்குவமான தீர்வுகளை நாடுகிறோம். வாகை சூட முடியவில்லை; பகை தான் புகைக்கிறது. சில உதாரணங்களுடன், இன்றைய பதிவை முடித்துக்கொள்கிறேன்.

    Lord Keynes said, ‘In the long run, we are all dead’. ஆம். நிரந்தரவாழ்க்கை யாருக்கும் கிடையாது. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள். நமது ஊர்களில் 99.99 % வீடுகளில் வாசற்படி தெருவை ஆக்கிரமித்து இருக்கும். நடைபாதைகள், சின்னச்சின்ன குருவிகளுடன் செத்துப்போயின. அரசு கட்டிடம் வாசலில் நடை பாதைக்கு முள்வேலி பாருங்கள்! இது குடிமகனின் செயலா! அரசின் கொடுமையா? ‘இன்று வீட்டுமனை விலை ஆகாயத்தைத் தொடுகிறது. ஏரிக்கரையில் ஒரு குட்டிப்பகுதியை கைப்பற்றி, குடிசை போட்டு, காரை வீடு; மாடி வீடு; பல தளங்கள், மாட மாளிகை, கூட கோபுரங்கள் என்று, கேட்ட லஞ்சத்தைக்கொடுப்பது விதிக்கும் முரண்; நீதிக்கும் முரணாக விதியை உலுக்கிவிட்டேன்.’ என்பவர்களின் முதலையீடுகளை, ஏன் உயர் அதிகாரி செல்வி அமுதா இடிக்கமாட்டார்? நீரை வெளியேற்ற வேண்டி,அவசர கட்டத்தில் சில சில உப விதிகள் அடிபட்டுப்போயிருக்கலாம். ஆனால் நீதி நிலைத்து நின்றதே.

    லஞ்ச லாவண்யத்தின் தீமைகளை பற்றி எமது சிறிய சிந்தனை வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. வாய்ச்சொல் வீரர்களை பற்றியும் பேச்சு எழுந்தது. லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் அநீதி; விதிக்கு முரண். இந்தியாவின் முதல் லஞ்சஒழிப்புச் சட்டத்தில் லஞ்சம் கொடுப்போருக்கும் தண்டனை உண்டு. ஆனால், வழிமுறை அவ்வாறு இல்லையே. இந்தியா முழுதும் நாம் நாட்தோறும் கண்ணாரக்காண்பது கோடிக்கணக்கான லஞ்சம், ஊழல், சால்ஜாப்பு, அரசியல் வாதிகளில் பலரின் தீவினைகள். இந்தப்பின்னணியில் ஏரி ஏன் உடையாது? நதி ஏன் பெருக்கெடுக்காது? கடல் ஏன் கொந்தளிக்காது? வீடு ஏன் முழுகாது? உயிர் ஏன் பிரியாது? ஒவ்வொரு கட்டுமானத்திலும் – ஏரிக்கரை, தூர் வாருதல், ரோடு, கட்டிடங்கள், பாலங்கள், அன்றாட பராமரிப்பு – இவைகளில் உள்ள குறைகள், ‘ஈயத்தைப் பார்த்து இளைத்ததாம் பித்தளை’ என்ற வகையில் இன்று சந்தி சிரிக்கின்றன. இவைகளெல்லாம் விதிகளின் கீழ்படிதலாக, நீதியை கற்பழித்துக் கட்டப்பட்டனவையே. சாணக்ய நீதிப்படி உரியகாலத்தில் விதி மீது சதி செய்தவர்களை கடுமையாக தண்டிக்காதவர்களையும் தண்டிக்க வேண்டும்.

    செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டதை உரத்த குரல் எழுப்பி கண்டிப்பவர்களும், அரசு உயர் அதிகாரியின் விளக்கங்களும் விதியை பற்றி விளாசலாம். நீதி எங்கே போயிற்று? முதற்கண்ணாக, தமிழ்நாடு சென்னையை விட பெரியது. தாமிரபரணி நதிக்கரையில் நடந்தது என்ன? கடலூர் மூழ்க, செம்பரம்பாக்கம் என் செய்தது?

    இரண்டாவதாக, நமக்கு பரந்த மனப்பான்மை வேண்டும். விசாலமான நோக்கு வேண்டும். இரக்க சுபாவம் வேண்டும். மருத்துவத்தில் முதலுதவி கொடுப்பது வரிசை விதியை விலக்கும் நீதி. அது போல ஏழைபாழைகளுக்கு முதலில் வாழ்வாதாரம் கொடுத்து எல்லாருக்கும் உடனடி உதவி கொடுக்க வேண்டும். நம்மால் ஏன் ராணுவம் போல் இயங்கவில்லை என்பதை பரிசீலனை செய்யவேண்டும். வெட்கக்கேடு! பரிதவிக்கும் மக்களை விட்டு, மேட்டுக்குடி வீஐபிகளை காப்பாற்ற சொன்னார்கள், அதிகார மையங்கள் என்று ராணுவம் கூறும் போது, நாக்கிப்பிடுங்கிக்கொண்டு சாகலாம் போல இருக்கிறது.

    எந்த எந்த அளவில் எந்த எந்த அன்றாட அரசு ஆணைகள் நிறைவேற்றப்படுகின்றன என்பது ஒரு பூடகமான விஷயம். இலைமறைவு; காய் மறைவு. விதியை மீறும் நீதி அழிப்பு. காங்கிரஸ் ஆட்சியிலேயே சென்னையில் வீடுகளை வாடகைக்கு விடும் தீர்மானங்களை அமைச்சர்கள் கையில். பிற்காலம் அது புழக்கடைக்கு வந்தது. எல்லாத்துறைகளிலும் அன்றாட தலையீடுகள் தான் பேயாட்டம் ஆடின. காவலராயினும், ஆசிரியராயினும், குமாஸ்தாவாயினும், பொறியாளராயினும், அந்தந்தத்துறைத்தலைவர்கள் கையாலாகதவர்களாயினர். உயர் அதிகாரிகள் கொள்கை வகுப்பதும், அதற்கு நேரமும், அடிப்படை ஞானமும் இல்லாத நிழல் மனிதர்களும், அவர்களின் கூடாநட்பு கொண்ட அமைச்சர்களும், அன்றாட வரத்துப்போக்குக்களில் விதி மீறி, நீதி தவிர்த்து நடமாடும் காலம் பழுத்தது. அணைகள் பாதுகாப்பையும், அரவணைப்பையும் காலங்காலமாக அந்தந்தத்தலத்தில் பொறுப்பும், பதவியும் வகிக்கும் உதவி பொறியாளர் தான் செய்கிறார் என்பதை தலைமை அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும்.

    இனி ஒரு விதியும் அதை வழிமுறை நடாத்தும் நீதியையும் கொணருவோம். மாநிலம் முழுதும் எல்லா பிராந்தியங்களும், நீர்நிலைகளும் பற்றிய முழு உண்மை நிலை, எந்த விதமான கலப்பில்லாமல், அசல் புள்ளி விவரங்களுடன், மெத்த விசாரணையின் அறிக்கையுடன் மக்களுக்குத் தெரியப்படுத்தப்படவேண்டும். அதற்கு முன்னால், பல விதங்களில் தண்டோரோ போட்டு மக்களின், அதிகாரிகளின், ஆர்வலர்களின் சாக்ஷியம் பெறப்படவேண்டும். அது நேர்காணலில் நடக்க வேண்டும். ஒவ்வொரு ஆவணத்தின் வரலாறு வேண்டும். Logging என்ற உடனடி தகவல் பதிவு செய்யப்பட்டதா என்ற விஷயத்துக்கு சத்தியபிரமாணமும் வேண்டும். மற்றபடி சான்றும் வேண்டும்.
    என்ன நிவாரணம் கிடைக்கிறதோ அதை விட, விதி வகுக்கும் திறனும், நீதி வழங்கும் மூதறிஞர்களும் கிடைப்பது தான் தேசத்தின் விதியை நிர்னயிக்கும்.

    நீதியில்லையேல் பீதி: நீதியில்லையேல் வீதி; நீதியில்லையேல் மீதியில்லை.
    -#-
    சித்திரத்துக்கு நன்றி:https://arthamullainiyamanam.files.wordpress.com/2013/05/074sattam.jpg

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • என் புத்தன்!

    -கவிஜி

    வண்ணங்களற்ற
    தேவதைகள்
    நீருக்குள்
    நிறம் கோக்கிறார்கள்…! 

    நிறங்களின் உதிரிகளாக,
    சிறுவர்கள்
    நீருக்குள்
    நாய் சுமக்கிறார்கள்…! 

    புத்தகம் வழியாக
    ஆள விரும்புகிறவன்
    நீருக்குள்
    மாலை செய்கிறான்…! 

    பகலும் இரவும்
    ஒன்றென்ற
    நீருக்குள்
    பாம்புகளும் மிதக்கின்றன! 

    இடம்பிடிக்க முடியாமல்
    கலங்கி நிற்கும்
    கிழவிக்கு இடம்தந்த
    தொழுநோய்க்காரன் ஒதுங்கிப்
    படுத்துக் கொள்கிறான்…! 

    பிச்சை புகினும்
    வாழ்க்கை தேடும் கண்ணில்லாதவன்
    இன்னொரு கண்ணில்லா,
    காலுமில்லாதவனிடமிருந்து
    நீரைத் தள்ளுகிறான்…! 

    குடித்துச் செத்தவன் வீட்டுக்
    கடைக் குட்டியும்
    ஓடி ஓடிச் சோறு போடுகிறது…! 

    முகநூல் வெட்டிக்கு மட்டுமல்ல
    மார்க்குக்கே
    புரியச் செய்தவன்
    மதங்களற்றவன்
    மற்றும்… சாதி அழித்தவன்…! 

    என் நகர்வலத்தில்
    மெல்லக் கலைகிறது
    என் புத்தன் வேஷம்…!

     

     

    Share
  • ஏதேன் தோட்டம்

    -கவிஜி

    எங்களூரில்
    ஒரு ஏதேன் தோட்டம்
    இருக்கிறது…

    ஆதாம் ஏவாள்கள்
    எந்த வீட்டிலிருந்தும்                             edengarden
    வரலாம்…

    ஆப்பிள்களுக்கு பதில்
    குறுஞ்செய்திகள்
    விளைந்து கிடக்கும்
    அலைக்கற்றைகளின் தோட்டம் அது…!

    சமிக்ஞைகளின்
    தவறவிட்ட அழைப்புகளாகப்
    புன்னகைக்கலாம்…
    ஒளிக்கண்கள்…!

    அடையாளங்கள்
    ஆடைகளின் நூலிழையில்
    பட்டாம் பூச்சிகள்
    செய்வது
    ரகசியச் செய்திகள்…!

    கண்டும் காணாமல்
    போய்விடும் மிருகங்கள்
    அப்படியே இருக்கும்வரைச்
    சாத்தானை அழைக்க
    வேண்டியிருக்காது…!

    கடவுளாய்த் திறந்தே கிடக்கும்
    ஏதேன் தோட்டம்
    ஒவ்வொரு ஊரிலும்
    இருக்கிறது…
    உங்கள் ஊரிலும்
    இருக்கலாம்…!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    6a35dabc-9d03-4994-a1fa-176bd566ec57

    ’’முழங்கால் முடிச்சேறி, மொட்டையிட்டு மாலைத்
    தொழுங்கால் துயரம் தொலையும்: -முழங்கை
    வருடமாட் டுக்களிக்கும் வேய்ங்குழல் கண்ணன்,
    கருடனமர் கோவிந்தன் காண்’’….கிரேசி மோகன்….

    Share
  • ஆத்மநாதம்

     — நிர்மலா ராகவன்.

    “பின்னிட்டீங்க!”

    “ஒங்களாலேயே இன்னொரு தடவை இவ்வளவு அருமையா பாட முடியுமாங்கறது சந்தேகம்தான்!”  மேடையைவிட்டு இறங்கிய காமவர்த்தனியின் கையை இழுக்காத குறையாகப்  பிடித்துக் குலுக்கினார்கள் பலரும். அந்த ரசிகர்களின் முகத்திலிருந்தபரவசம் அவளையும் தொற்றிக்கொண்டது.

    “போதும். போதை தலைக்கேறிடப்போகுது”. யாரும் கவனிக்காத நிலையில் பக்கத்தில் நின்றிருந்த   கணவன் அடிக்குரலில் சீறினான். “வீடுன்னு ஒண்ணு இருக்கிறது நெனப்பிருக்கா, இல்லியா?”

    அவள் தடுமாறிப்போனாள். அவன் பேசியது யார் காதிலாவது விழுந்திருக்கப்போகிறதே என்ற பதைப்பு உண்டாயிற்று. அங்கிருந்து எங்காவது ஓடிவிட வேண்டும்போல உத்வேகம் எழ, “பாத்ரூம் எங்க இருக்கு?” என்று கேட்டு வைத்தாள்.

    உள்ளே இருட்டாக இருந்தது.

    “இதோ ஸ்விட்ச்!” என்றது ஒரு குரல். ஆண் குரல்.

    பகீரென்றது அப்பாடகிக்கு. “தாங்க்ஸ்” என்றபடி கையைச் சுவற்றின் மேல் நீட்ட, அவளுடைய கரத்தைப் பற்றியது அந்த ஆணின் வலுவான கை. அக்கையை  உதறிவிட்டு வெளியே ஓடினாள்.

    “போகலாங்க,” என்று படபடத்த மனைவியை அதிசயமாகப் பார்த்தான் கணவன். “சீக்கிரமா வந்துட்டே!” என்றான் போகிற வழியில.

    அப்போதுதான் அவள் அந்தத் தவறு செய்தாள்: “அதை ஏன் கேக்கறீங்க!” என்று அப்பாவித்தனமாக ஆரம்பித்து, எவனோ அந்த இருட்டறையில் தன் கையைப் பிடித்த பயங்கர அனுபவத்தைப் படபடப்புடன் விவரித்தாள். தனது கசப்பான அனுபவத்தை அவன்எப்படி எதிர்கொள்வான் என்று அவள் யோசிக்கவில்லை.  ஆனால், கண்டிப்பாக பழியை அவள்மேலேயே திருப்புவான் என்றுமட்டும் அவள் நினைத்தும் பார்க்கவில்லை.

    “அவன்மேல என்னடி தப்பு? நாலு பேர் பாக்கணும்னுதானே இப்படிப் பளபளன்னு டிரெஸ் செய்துக்கிட்டு, மேடை ஏறிப் பாடறீங்க ஒன்மாதிரி பொம்பளைங்க எல்லாம்!”  கணவனது ஒவ்வொரு வார்த்தையிலும் வன்மம் தொக்கி நின்றது. இந்தஅயோக்கியன்களின் பேச்சில் மயங்கி, எவனையாவது இழுத்துக்கொண்டு ஓடிவிட்டால் என்னாவது என்ற இனம்புரியாத அச்சம் அவனை அப்படிப் பேசவைத்தது. அவனுடைய தங்கை இப்படித்தானே கண்டவனோடு ஓடிப்போய், குடும்பத்துக்கு மாறாதஅவமானத்தை உண்டாக்கி இருந்தாள்! அது இந்த ஜன்மத்தில் மறக்கக்கூடியதா!

    இவளை இன்றோடு அடக்கி வைத்துவிட வேண்டும் என்று உறுதி செய்துகொண்டவனைப்போல், “நீ ஆசைப்பட்ட மாதிரியே, அதான் பத்து ஆம்பளைங்க பல்லை இளிச்சுக்கிட்டு ஒன் பின்னாலேயே வந்தாங்களே! பின்னே எதுக்கு என் முன்னாலபயந்தவமாதிரி நடிக்கிறே?” என்று தாக்கினான். தொடர்ந்து,  “ஆரம்பத்தில இப்படித்தான் கையைப் பிடிப்பான், அப்புறம், புடவைத் தலைப்பைப் பிடிச்சு இழுத்து.. !” என்று அடுக்கிக்கொண்டே போனான்.

    அவளுக்குப் பயம் வந்தது — தன்மேலேயே.

    குழப்பம் ஏற்பட்டது — கணவனது போக்கால்.

    ஏன் இவர் அப்பாமாதிரி இல்லை?

    அவளுடைய தந்தைக்குப் பாட்டுதான் உயிர். முப்பது மைல் சுற்றுவட்டாரத்தில் எங்கு சங்கீதக் கச்சேரி நடந்தாலும் தப்பாமல் போய்க் கேட்டு, ரசித்துவிட்டு வருவார். அருகிலிருக்கும் இடங்களுக்கு நான்கு வயதுக் குழந்தையாக இருந்த மகளையும்தோள்மீது படுக்கவைத்து ‘ஆட்டுக்குட்டி’ தூக்கிப்போவார்.

    அதனால்தானே, “நானும் பாட்டு கத்துக்கறேம்பா!” என்று அவள் கொஞ்சலாகக் கேட்டபோது, அவளை இசையில் ஈடுபடுத்தினார், “இன்னொருத்தர் வீட்டுக்குப் போகப்போற பொண்ணுக்கு எதுக்கு பாட்டும், கூத்தும்?” என்று அம்மா ஆட்சேபித்ததையும்பொருட்படுத்தாது!

    அப்போது குழந்தைத்தனமாக அம்மாமேல் ஆத்திரப்பட்டோமே, தன் ஆசைக்கு முட்டுக்கட்டை போடப்பார்க்கிறார்களே என்று!

    இவளது குற்றச்சாட்டைக் கவனமாகக் கேட்ட அம்மா,  “இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்!” என்று நொடித்தாள். “என்னதான் இருந்தாலும், தான் தொட்டுத் தாலிகட்டின பொண்டாட்டியை நாலு ஆம்பளைங்க தொட்டா, சூடு சொரணை இருக்கற எவன்சும்மா இருப்பான்?” என்று மாப்பிள்ளைக்கு வக்காலத்து வாங்கினாள்.

    ஏதோ கீழ்த்தரமான இச்சையுடன் தொட்டுப் பார்க்கவா எல்லாரும் கைகுலுக்கினார்கள்? அவளால் அதை ஏற்க முடியவில்லை. ஆனால், யாரும் அறியாது, அவள் கரத்தைப் பற்ற இருளில் ஒளிந்திருக்கவில்லை ஒரு கயவன்? குழப்பம் அதிகரித்தது.

    அப்பாவாவது தன் பக்கம் பேசுவார் என்ற நம்பிக்கையுடன், பெண் அவர்  முகத்தைப் பார்த்தாள். அவரோ,  தான் ஏதோ தவறு செய்துவிட்ட பாவனையில் குனிந்த தலையை நிமிர்த்தாது அமர்ந்திருந்தார்.

    வெகுநேரம் அங்கு கனத்த  மௌனம் நிலவியது.

    சாப்பிட ஆரம்பிக்கையில், ஒரு கவளம் சோற்றைக் கையில் எடுத்தவர், “இப்படியெல்லாம் கஷ்டப்படறதுக்கு, பாடாமலேயே இருக்கலாம்,” என்றார் ஆழ்ந்த வருத்தத்துடன்.

    “ஒனக்குப் பாட்டே கத்துக் குடுத்திருக்க வேண்டாம்!” என்று ஒத்துப் பாடினாள் அம்மா.

    பெற்றோர் இருவரும் ஒருசேரக் கூறியதை அப்படியே ஏற்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவளுக்கு.

    அப்போது அவளுக்குப் புரியவில்லை, இசை அவளுடைய உயிர்மூச்சிலேயே கலந்திருந்தது என்பது.

    பாட்டு கற்றுக்கொள்ள ஆரம்பித்து இரண்டு, மூன்று வருடங்களில் கீர்த்தனை பயில ஆரம்பித்தபோது, “உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்மா!” என்று புல்லரித்துப்போய் ஆசி கூறினார் அவளுடைய ஆசிரியர்.

    அவர் சொற்படி,  தினமும் விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து, முந்தைய நாளிரவு தாமிரக் குவளையில் பிடித்து வைத்திருந்த நீரைக் குடித்து குரல் தெளிவாக,  ஸ-ரி-க-ம-ப-த-நி-ஸ என்று சரளி வரிசையில் தொடங்கி, ஜண்டை வரிசை, அலங்காரம்முதலான ஆரம்பப் பாடங்களில் இருபது நிமிடங்களுக்குக் குறையாமல் அகார சாதகம் பண்ணிவிட்டு, ஆதி தாளம் அல்லது அட தாளத்தில் அமைந்த ஏதாவது ஒரு வர்ணத்தை மூன்று காலங்களில் பாடி குரல் வளத்தைப் பெருக்கிக்கொள்ள என்னபாடுபட்டிருப்பாள்!

    அந்த நிசப்தமான வேளையில், தான் மட்டும் விழித்துக்கொண்டு அதிசயமாக ஏதேதோ செய்வது பயமாக இருக்க, ஒவ்வொரு மூச்சு எடுத்து விடும்போதும், தன்னெதிரில் உள்ள பிள்ளையாருக்கு வாசமிகுந்த மல்லிகை மலரொன்றினைச் சாற்றுவதுபோல்கற்பனை செய்துகொள்ள, அதுவே தியானமாகி, மனத்திற்குப் பெரும் இதத்தைக் கொடுக்கவில்லை?

    கச்சேரி இருக்கும் நாட்களில் வேறு விதமான கட்டுப்பாடு! இரண்டு நாட்களுக்கு முன்னரே மௌன விரதம்தான், பாடும்போது எங்காவது தொண்டை கரகரப்பாக இருந்துவிடப் போகிறதே என்று. எண்ணையில் பொரித்த எதையும் சாப்பிட மாட்டாள். சுடுநீரில்ஒரு சொட்டு நெய்யைக் கலந்து அடிக்கடி குடிப்பாள், குரல் பிசிறில்லாமல், இனிமையாக இருக்க வேண்டுமென்று. தினமும் இரவில் சுண்டக் காய்ச்சிய பால் — ஒரு ஸ்பூன் தேன் கலந்து.

    “கச்சேரிக்கு போறதுக்கு முன்னால, வயிறு நிரம்ப சாப்பிடாதே. நான் ஒரு தடவை அப்படிப்போய், மூச்சுப்பிடிச்சுப் பாட முடியாம  திணறிட்டேன். அதுவே, வயிறு காலியா இருந்தாலும் கஷ்டம்தான்! குரலே எழும்பாது! கருமிளகு, ஜீரகம், பனங்கல்கண்டு –இதையெல்லாம் பொடிச்சுப்போட்டு, ரெண்டு லோட்டா ஜலத்தைக் காய்ச்சி, ஃபிளாஸ்கிலே மேடைக்கு எடுத்துண்டு போக மறந்துடாதே!”

    குருவின் பற்பல அறிவுரைகளையும்  தெய்வ வாக்காக ஏற்று, அப்படியே கடைப்பிடித்துதான் இவ்வளவு தூரம் முன்னுக்கு வந்திருக்கிறாள். அதுவே வாழ்க்கை முறையாகிவிட்டிருந்தது. கணவருக்குப் பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காகஎல்லாவற்றையும் தொலைத்துவிட்டு நிற்பது பெரிய வேதனையாக இருந்தது.

    ‘வெளியில்தானே பாடக்கூடாது? சாமிக்கு முன்னால நாலு பாட்டு பாடினா என்ன!’ என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு, ஒரு நாள் சந்தியா காலத்தில், குத்துவிளக்கு ஏற்றிவிட்டுப் பாடத் தொடங்கினாள். போதிய பயிற்சி இல்லாததாலோ, மனம் ஒரு நிலைப்படாததாலோ, குரல் ஒத்துழைக்க மறுத்தது. ‘பாடப் பாட ராகம், மூட மூட ரோகம்!’ என்று சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்! துக்கமாக இருந்தது.

    இவள் குரல் கேட்டதுமே பூஜை அறைக்குள் எட்டிப் பார்த்த கணவன் கனகோபத்துடன், “ஆரம்பிச்சுட்டியா?” என்று இரைந்தபடி   வெளிநடப்பு செய்தபோது, பயம் அதிகரித்தது. அவன் வீடு திரும்பாமல், அப்படியே எங்காவது போய்விட்டால்?

    சுருதிப்பெட்டியை ‘கண்டா முண்டா’ சாமான்களுடன், ஸ்டோர் அறையின் ஒரு மூலையில் கொண்டு வைத்தாள். அடிக்கடி கண்ணில் பட்டால்தானே துயரம்!

    சொல்லி வைத்தாற்போல், மறுநாள் ஒருவர் அவளைத் தேடி வந்தார்.

    “எங்க சபாவிலே மும்மூர்த்தி விழா நடத்தறோம்மா. நீங்க வந்து தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி — இவங்க பாடின பாட்டை ஒரு  மணி நேரம் பாடணும். ஒங்களுக்கு நல்ல சிட்சை, பாடாந்திரம் எல்லாம் இருக்கு. சின்ன வயசு வேறயா!நல்லா மூச்சுப்பிடிச்சுப் பாடறீங்க. ஒங்க குரல்  இருக்கே– என்னத்தைச் சொல்றது, போங்க! போன ஜன்மத்தில சுவாமிக்குத் தேன் அபிஷேகம் பண்ணி இருப்பீங்க!” அவர் புகழப் புகழ, அவளுக்குப் பயம் வந்தது.

    கச்சேரிக்குமுன் ஒருவர். முடிந்தவுடன் ஐம்பது பேரா!

    ஒரு பெரிய மூச்சை உள்ளுக்கிழுத்துக்கொண்டு, “இப்போ சௌகரியப்படாதுங்க,” என்று அந்த சமாசாரத்துக்கு ஒரு முடிவு கட்டினாள்.

    சௌகரியமோ, இல்லையோ, பாடவேண்டிய அவசியம் வந்தது.

    இசைவழி தான் தெய்வங்களை ஆராதிப்பதைத் தடுத்த கணவர்மீது கோபங்கொண்டே அவர்கள் அவரைத் தன்னிடமிருந்து விலக்கி எடுத்துக்கொண்டுவிட்டார்கள் என்று தோன்றியது அவளுக்கு. அவளுடைய பெயரைக்கூட அல்லவா பழித்தான்!

    “இது என்ன இப்படி ஒரு பேரு வெச்சிருக்காங்க ஒங்க வீட்டிலே? காமவர்த்தனியாம் காமவர்த்தனி!”

    பள்ளிக்கூடத்தில் அவள் படித்தபோது, தேவி, மாலா, மகேஸ் என்று எல்லாப் பெயர்களிலும் மூன்று, நான்குபேர் இருந்தார்கள். ஆனால், இவள் பெயர் மட்டும் யாரும் கேள்விப்படாததாக இருந்தது. இப்போது கணவனும் அதைப்பற்றிக் கேட்கிறார்! உற்சாகமாக, “அது ஒரு ராகத்தோட பேருங்க! பந்துவராளின்னுகூட சொல்வாங்களே!” என்றாள்.

    ‘காமவர்த்தனி ராகம் இருக்கே, இது ஆயிரத்து இருநூறு வருஷங்களுக்கு முன்னேயே இருந்திருக்கு, ‘ராமக்ரிய’ங்கிற பேரில.  தாய் ராகமானதால, ஏழு ஸ்வரங்களும் இதில இருக்கு! கச்சேரி ஆரம்பத்தில பாடினா, கச்சேரி களை கட்டும்’. என்றோ தந்தைதன்னிடம் கூறியதை அட்சரம் பிசகாது கணவரிடம் தெரிவித்தாள். ஆனால் அவளுடைய பெருமையில் பங்குகொள்ளும் மனநிலையில் அவன் இருக்கவில்லை.

    “ஒன்னோட புத்திசாலித்தனத்தை எங்கிட்டயே காட்டறியா! நீ காமத்தில எப்படிங்கறது என் ஒருத்தனுக்கு மட்டும் தெரிஞ்சாப்போதும்,” என்று அவன் விகாரமாகச் சிரித்தபோது அவளுக்கு உடலெல்லாம் பற்றி எரிவது போலிருந்தது.

    பதினைந்து வயதாக இருந்தபோது, “காமம்னா என்ன அர்த்தம்பா?” என்று கேட்டதற்கு, “காமம்னா ஆசை. அது எந்த ஆசையா இருந்தாலும் சரி. ஆனா,  ஆண்-பெண் உடல் கவர்ச்சிக்கு மட்டும்னு பயன்படுத்தி, அதைக் கெட்ட  வார்த்தைமாதிரி ஆக்கிட்டாங்கஇந்தக் கதை,  கிதை எல்லாம் எழுதறவங்க!” என்று சொன்னார்.  குரல் அடித்தொண்டையிலிருந்து வர, அவரது முகம் இறுகி இருந்தது.

    அவளுக்கும் கோபம் வந்தது — தன்னுடைய அழகான பெயரை அசிங்கப்படுத்தியவர்கள்மேல்.

     singer2

    வாழ்க்கையே அலங்கோலமாக ஆகி விட்டபோதும் விதவைக்கோலம் பூணாது, எப்போதும்போல அலங்கரித்துக்கொண்டு, மீண்டும் கச்சேரி செய்யப்போனாள் காமவர்த்தனி.  தன்னை மறந்து பாடும்போது, அந்தந்த பாடல்களின் பொருளான தெய்வங்களேதனக்குள் ஐக்கியமாகிப் பாடுவதுபோல் நிறைவாக இருந்தது. கூடுமானவரை, ‘நான் ஒங்க ரசிகன்’ என்று சொல்லிக்கொண்டு அருகில் வந்து, தொட்டுத் தொட்டுப் பேசியவர்களைத் தவிர்த்தாள்.

    “வணக்கங்க! எனக்கு ஒங்க பாட்டு ரொம்பப் பிடிக்கும். அதுவும் இன்னிக்கு கரஹரப்ரியாவில ‘சக்கனிராஜ’ பாடினீங்களே! ஆகா! ‘ராஜ பாட்டை இருக்கும்போது, குறுக்குச் சந்திலே போவாங்களா?’ — இது பல்லவி. அனுபல்லவியிலே.. ‘பால் இருக்கையில்,யாராவது மதுவை நாடிப் போவாங்களா?’ அப்படின்னு தியாகராஜர் கேக்கறாரு. அற்புதங்க! என்னையே மறந்துட்டேன். விட்டிருந்தா, ரெகார்ட் பண்ணி, தினமும் கேட்டு ரசிச்சிருப்பேன்!”

    வழக்கமான ரசிகர் கும்பலில் அந்த இளைஞன் வித்தியாசமாக இருந்தான். அவள் வயதுதான் இருக்கும் அவனுக்கும்.

    பக்கத்திலிருப்பவரிடம், ‘இது என்ன ராகம்?’ என்று விசாரித்துத் தெரிந்துகொண்டுவிட்டு, ஒரு பாட்டுக்கும், இன்னொன்றுக்கும் இடையே கிடைத்த அவகாசத்தில், ‘காம்போதி என்னமா இருந்திச்சு!’ என்று முன்னாலிருப்பவரிடம் அளக்கும் சிலரின் பிரதிநிதிஇல்லை இவன். விஷயம் புரிந்து பேசுகிறான்.

    அவள் ஒருவித சுவாரசியத்துடன் அவனைப் பார்த்தாள். “பாடுவீங்களா?” என்று விசாரித்தாள்.

    “அதுக்கெல்லாம் குடுத்து வெச்சிருக்கணுங்க. நான் வெறும் பாத்ரூம் பாடகன்தான்”. அவன் உண்மையான வருத்தத்துடன் பேசுவதாகத்தான் தோன்றியது. “ஒங்களைமாதிரி யாராவது  தாளமும், சுருதியும்  இழைய, அர்த்தம் புரிஞ்சு, பாவத்தோட பாடினாரசிப்பேன்!”

    அடுத்தடுத்து அவளுடைய கச்சேரி எங்கு நடந்தாலும், முரளியும் தப்பாமல் வந்து கேட்டு, அக்குவேறு, ஆணிவேறாகப் பிரித்து விமரிசனம் செய்ய ஆரம்பித்தபோது, ‘இப்படி நமக்குப் பிடித்ததை இன்னொருவர் புரிந்துகொண்டு பேசினால், மனசுக்கு எவ்வளவுரம்மியமாக இருக்கிறது!’ என்று எண்ண ஆரம்பித்தாள்.

    ‘நமக்கு வாய்த்தவர் ஏன் இப்படி இல்லாமல் போனார்?’ என்ற ஏக்கம் காலங்கடந்து எழுந்தது.

    ‘எத்தனை நாளைக்கும்மா நீ இப்படி தனியாவே இருப்பே? எங்களுக்கு அப்புறம் ஒனக்குத் துணை வேண்டாமா?’ தந்தை அடிக்கடி அவள் மறுமணம் செய்துகொள்ளவேண்டிய அவசியத்தைப்பற்றி நாசூக்காகக் கேட்டது நினைவில் எழுந்து கிளர்ச்சியைஉண்டுபண்ணியது..

    இந்த முரளியைக் கல்யாணம் செய்துகொண்டால் என்ன? இருவருக்கும் இடையே பாலமாகப் பாட்டு இருக்கும், என்றென்றும்.

    ராகங்களின் அழகையும், பாடல்களின் அர்த்தங்களையும், அவைகளை இயற்றியவர்களின் பக்தியையும்  ஒத்த மனத்தோடு அசைபோடமுடிவது பெரும்பாக்கியம் என்று தோன்றியது. பரவசத்துடன் கண்ணை மூடிக்கொண்டாள். முரளியினுடைய பெண்மைகலந்த முகச்சாயலோ, ஆஜானுபாகுவான தோற்றமோ அதில் பிரதானமாகத் தெரியவில்லை.

    அவளுடைய எண்ணங்கள் அவன் மனத்திலும் எதிரொலித்து இருக்கவேண்டும்.  அடுத்துவந்த சந்திப்பில்,  “எனக்கு ஒங்ககிட்ட பிடிச்சது ஒங்க பாட்டு மட்டும் இல்லீங்க!” என்று அவசர அவசரமாகச் சொல்லிவிட்டு, ‘கோபித்துக்கொண்டுவிட்டாளோ!’ என்றபதைப்புடன் அவள் முகத்தைப் பார்த்தான் முரளி.

    அவள் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டாள்.

    “ஒங்க குரல், சங்கீத ஞானம், அடக்கம், பக்தி எல்லாமே பிடிச்சிருக்கு. ஒங்களைமாதிரி ஒரு பொண்ணுதான் என்னோட மனைவியா வரணும்னு எனக்கு ஆசை!” என்றான்.

    “என்னை மாதிரியா, இல்லே நானேவா?” என்று கேட்டாள் காமவர்த்தனி. பொங்கியெழுந்த உணர்ச்சிகளை அடக்க முயற்சித்ததில், குரல் பிசிறடித்தது.

    அவன் பூரிப்புடன் சிரித்தான். “நீங்க எப்படி எடுத்துக்குவீங்களோன்னுதான் சுத்தி வளைச்சுப் பேசினேன்!”

    “நான் பாடுவேன்கிறது மட்டும்தான் ஒங்களுக்குத் தெரியும். மத்த விஷயமெல்லாம்..!”

    “தேவை இல்லீங்க!” வன்மையாக மறுத்தான் முரளி. “இப்ப ஒங்க குரலைக் கேக்கறதுக்காக நாப்பது, அம்பது மைல் வரேன். ராத்திரி பகலா, எப்போ வேணுமானாலும் அதைக் கேட்டுக்கிட்டே இருக்கலாம்னு ஒரு நிலை வருமானா.., வாழ்க்கையில வேற என்னசுகம் வேணும், சொல்லுங்க!”

    அவளுக்கு அழுகை வந்தது. இவ்வளவு மனம்திறந்து பேசுகிறானே! தனக்குக் கொடுத்து வைக்கவில்லையோ!

    “என்னோட பூவையும், பொட்டையும் பார்த்து நீங்க ஏதோ தப்பா நினைச்சுட்டீங்க.  நான் விதவைன்னு தெரிஞ்சா, நாலுபேரு சுத்திச் சுத்தி வருவாங்கன்னு பயந்து, நான் போடற வேஷம் இது”.

    அவன் திகைப்பிலிருந்து மீளுமுன் அவள் அப்பால் அகன்றாள். கச்சேரியில் சிறப்பாகப் பாடிவிட்டோமென்ற பூரிப்பு இருந்த இடம் தெரியாது மறைய, அவள் மனம் கனத்திருந்தது.

    ஆனால், அடுத்த கச்சேரிக்கும் முரளி வந்தான்.

    அவளைப் பார்த்துச் சிரித்தான்.

    “ஒங்களுக்கு நல்ல துணையா இருப்பேன்னு நம்பறேன்,” என்றான். வாழ்க்கைத்துணையாக ஆனான்.

    அடுத்தடுத்து வந்த கச்சேரிகள் முடிந்ததுமே அவளுடைய இடுப்பைச்சுற்றித் தன் கரத்தை வளைத்துக்கொண்டு, உரிமையாக முரளி நடந்தது எந்த ஆணையும் மிரளவைக்கப் போதுமானதாக இருந்தது.

    அதையும் மீறி, “இன்னிக்கு ஒங்க பாட்டு அற்புதங்க, காமவர்த்தனி அம்மா. ஷண்முகப்ரியாவிலே, “சரவணபவ எனும் திருமந்திரம்தனை”ன்னு பாபநாசம் சிவனோட உருப்படி ஒண்ணு பாடினீங்களே, அப்படியே முருகன் சந்நிதியையே கண்ணு முன்னாலகொண்டு வந்துட்டீங்க!” என்று ஒரு முதியவர் பாராட்டியபோது, அவள் முகமெல்லாம் விகசித்துப்போயிற்று. தான் எதை எண்ணிப் பாடுகிறோமோ, அது கேட்பவரையும் போய் அடைவது என்ன பாக்கியம்!

    ஆனால், வீடு திரும்பியதும், சாப்பிட்டபடியே,  அவள் பாடிய ஒவ்வொரு ராகத்தையும், பாட்டையும் விரிவாக விமர்சித்து, விளையாட்டாக மதிப்பெண்களும் போடும் வழக்கத்தைக் கொண்டிருந்த முரளி அன்று எதுவும் பேசாது,  நேராகப் படுக்கப்போனபோது குழப்பம்தான் எழுந்தது.

    “ஒடம்புக்கு முடியலியா?” நெற்றியில் வைக்கப்பட்ட அவளது கையை முரட்டுத்தனமாக விலக்கினான் கணவன். படுக்கையில் எழுந்து உட்கார்ந்து, அவளை முறைத்தான். “நீ இனிமே எந்தக் கச்சேரியும் ஒத்துக்க வேணாம்!”

    யாரோ மென்னியைப் பிடிப்பதுபோல் இருந்தது அவளுக்கு. “ஏங்க? முந்தியெல்லாம் நீங்க..?” என்று குழறினாள்.

    “அது அப்போ. மத்தவங்க ஒன் கிட்ட, கிட்ட வந்து சிரிச்சுப் பேசறது எனக்குப் பிடிக்கல!” மறைந்த கணவனே வேறு உருவத்தில் வந்து மிரட்டியதுபோல் இருந்தது.

    ஒருமுறை இசையைப் பறிகொடுத்துவிட்டு, தனது ஆத்மாவின் நாதத்தைத் தொலைத்து நின்ற வேதனை போதாதா? அந்தக் கொடுமையுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், பூவையும், பொட்டையும் தொலைத்ததுகூடப் பெரிதாகத் தோன்றவில்லையே!

    காமவர்த்தனி அதிநிதானமாகத் தலையை நிமிர்த்தினாள். அவனுடைய கண்களை உற்றுப் பார்த்தாள்.  “ஒங்களுக்கும், என்னோட இசைக்கும் ஒரு போட்டி வெச்சா, நான் பாட்டைத்தான் தேர்ந்தெடுப்பேன். இனிமே இந்தப் பேச்சு வேணாம்!” தெளிவானகுரலில் அவளுடைய பதில் ஒலித்தது.

    இப்போதெல்லாம் தனியாகவே கச்சேரிகளுக்குப் போய்வருகிறாள் காமவர்த்தனி.

    யாராவது தெரிந்தவர்கள், “அவர் எங்கே, கண்ணிலேயே படறதில்லியே?” என்று  விஷமத்தனமாகவோ, வாய் உபசாரமாகவோ விசாரித்தால், “வீட்டில பிள்ளைங்களைப் பாத்துக்க ஆள் வேண்டாமா!” என்று அசட்டுச் சிரிப்புடன் சமாளிக்கிறாள்.

    தான் நினைத்ததில் உறுதியாக இருந்து சாதித்துவிட்டதில் அவளுக்கு நிறைவு ஏற்படவில்லை. மாறாக, வேதனைதான் எழுகிறது, ஒரு நல்ல ரசிகனை இழந்ததற்காக.

    நன்றி: சிறுகதைகள் டாட் காம்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    90ebd516-bea1-44c1-8edd-d5da6e001f58

     

    ”ஊதல் குழல்தொழில், ஊதி ய(ம்)அனன்யம்,
    ஓதல் மறைகீதை ஓய்வவர்க்கு: -போதலும்
    பின்பவ தாரமாய் பூமி புகுதலும்
    மண்பளு போக்கும் மனசு”….கிரேசி மோகன்….

    Share
  • மனிதம்

    தஞ்சை வெ.கோபாலன்

    காலை ஐந்து மணி; தூக்கம் கலைகிற நேரம். தலைமாட்டில் என்னுடைய மொபைல் போனை அலாரம் வைத்துவிட்டுத்தான் படுப்பேன். அது இன்னும் சில நிமிடங்களில் ஒலிக்கத் தொடங்கும். அப்போது அலார ஒலிக்கு பதில் மொபைல் போன் ஒலித்தது. என்ன இந்த நேரத்தில் எனக்கு தொலைபேசி அழைப்பு வருவது கிடையாதே. யாராக இருக்கும் என்று எடுத்துப் பார்த்தேன். அறிமுகமான எண்ணும் அல்ல, பெயரும் இல்லை, வெறும் எண்கள் மட்டுமே.

    எடுத்துப் பேசினேன். எதிர் முனையிலிருந்து சென்னையில் வசிக்கும் என் உறவினர் ஒருவர் பேசினார். அன்றிரவு அவருடைய தாயார் காலமாகிவிட்டதாகவும், என்னை உடனே புறப்பட்டு வந்து சேரும்படியும், அன்று மாலையே காரியங்கள் செய்துவிட வேண்டுமென்று அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்போர் சொல்வதாகவும் அவசரமாக செய்தி சொன்னார்.

    சாதரணமாக நான் போய் கலந்து கொள்ள வேண்டிய அளவுக்கு உறவு இல்லாவிட்டாலும், பழக்கத்தில் அவர் எனக்கு நெருங்கிய உறவைக் காட்டிலும் முக்கியமானவர் என்பதால் உடனே படுக்கையிலிருந்து எழுந்தேன். நான் தனி மனிதனாக வசித்து வந்தமையால் என் வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டியது இல்லை. ஆகையால் எழுந்து காலை வேலைகளையெல்லாம் முடித்துக் கொண்டு, ஏதாவது கிடைக்கும் பேருந்தைப் பிடித்து சென்னை போய்விடலாம் என்று புறப்பட்டேன்.

    காலை ஏழரை மணிக்கு ஒரு அரசு விரைவுப் பேருந்து புறப்பட தயாராக இருந்தது. பேருந்து நிலையத்திலிருந்த தேநீர் நிலையத்தில் ஒரு டீயை வாங்கிக் குடித்துவிட்டு வண்டியேறிவிட்டேன். கூட்டமேயில்லை, என்னையும் சேர்த்து ஏழெட்டு பேர் மட்டுமே வண்டியில் இருந்தனர். பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு, கையில் கொண்டு வந்திருந்த தினசரியைப் புரட்டிப் படிக்கத் தொடங்கினேன்.

    பேருந்து புறப்பட்டு விரைந்து கும்பகோணத்தை அடைந்து, அங்கு சில மணித்துளிகள் நின்றுவிட்டு மீண்டும் புறப்பட்டு விட்டது. மதியம் இரண்டு மணிக்கெல்லாம் சென்னைக்குப் போய்ச்சேர்ந்து விடலாம், எப்படியும் மாலை நான்கு மணி அளவில்தான் உடலை எடுப்பார்கள் என்று நினைத்து, செய்தி சொன்னவருக்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவரும் நான்கு மணிக்கு இங்கு இருப்பது நலம் என்றார். என் பயணம் தொடர்ந்தது.

    மதியம் இரண்டு மணிக்கு பேருந்து தாம்பரத்தில் நின்றது. அங்கு இறங்கி அங்கிருந்து வேறு நகரப் பேருந்தைப் பிடித்து நான் போகவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது கிட்டத்தட்ட மணி மூன்றை நெருங்கிவிட்டது. நேரே உறவினர் வசித்த பலமாடி குடியிருப்புப் பகுதிக்குள் சென்றேன். நம் ஊர் வழக்கப்படி அக்கம்பக்கத்து குடியிருப்புகளிலிருந்து பலரும் வந்து அங்கு கூடியிருப்பார்கள் என்று நினைத்திருந்த எனக்கு பெருத்த ஏமாற்றம்.

    குடியிருப்பின் வாசலில் கருப்பு நிறத்தில் ஒரு அமரர் ஊர்தி என்று எழுதப்பட்ட வண்டி நின்று கொண்டிருந்தது. அருகே உடலை எடுத்து உள்ளே வைக்கவென்று இருவர் காக்கி சீருடை அணிந்தவர்கள் நின்றிருந்தனர். அந்த வண்டியின் டிரைவர் வண்டியினுள் உட்கார்ந்தபடி புகை பிடித்துக் கொண்டிருந்தார்.

    உறவினரின் இல்லம் முதல் மாடியில் மாடிப்படியேறுமிடத்துக்கு எதிரிலேயே இருந்தது. வாயில் கதவு திறந்திருந்தது. வாசலில் ஒருவரையும் காணோம். உள்ளே நுழைந்தேன். அது இரண்டு அறைகள் கொண்ட வீடு. முதலில் நுழைந்ததும் ஒரு சிறிய ஹால். அங்குதான் இறந்தவரின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. அருகில் உறவினருடைய மனைவியும், அவர் மகளும், வேறு இரு பெண்களும் மட்டும் இருந்தனர். என்னைக் கண்டவுடன் அவர்கள் சற்று பெருத்த குரலெடுத்து அழ ஆரம்பித்தனர்.

    நான் உறவினரிடம் சென்று வேறு யார் வந்திருக்கிறார்கள், யார் வரவேண்டும், என்ன ஏற்பாடுகள் நடந்திருக்கின்றன என்பதையெல்லாம் விசாரித்தேன். அவர் என்னை வாசல் புறமாக அழைத்துச் சென்று மெல்லிய குரலில் வேறு யாரும் வருவதற்கில்லை. நாம் இருவர் மட்டும் தான். உள்ளே இருக்கும் பெண்கள் வீட்டில் இருப்பார்கள். சடங்குகள் செய்ய வாத்தியார் வருவார் அவ்வளவுதான் என்றார்.

    எனக்கு எங்கள் ஊர் நினைவு வந்தது. அது பெரிய நகரமும் அல்ல, மிகச் சிறிய கிராமமும் அல்ல. நடுத்தரமான அந்த சிறிய நகரத்தில் எல்லா வசதிகளும் இருந்தன. ஒரு வீட்டில் இதுபோன்ற இறப்பு ஏதேனும் நடந்து விட்டதென்றால், அக்கம் பக்கத்தார் அனேகமாக எல்லா வீட்டிலிருந்தும் வந்து விடுவார்கள். அவர்களில் சிலர் வந்து துக்கம் விசாரித்துவிட்டு உடனடியாகப் போய் விடுவார்கள். நெருங்கிய மக்களாக இருந்தால் வீட்டுப் பெண்களுடன் அண்டை அயலார் வீட்டுப் பெண்களும் உட்கார்ந்து விடுவார்கள்.

    தெரு மனிதர்கள் அனேகமாக எல்லோருமே வந்து விசாரித்தாலும், சிலர் மட்டும் உடனே கிளம்பி விடுவார்கள். பழகியவர்கள் அங்கேயே தங்கி உடலை எடுத்துப் போய் எரிக்கும் வரை உடன் இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து விடுவார்கள். சம்பந்தப்பட்ட நபருக்கு இந்தத் தொல்லை ஒன்றும் இருக்காது. அவ்வப்போது பொருட்கள் வாங்க பணத்தை மட்டும் யாரிடமாவது கொடுத்து வைத்து விடுவார்கள். அவர் எல்லா செலவுகளையும் பார்த்துக் கொள்வார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்துவிட்டு பட்டணத்து வாழ்க்கையில் இறப்பு கூட அநாதையைப் போல அமைந்து விட்டதை எண்ணி மனம் வருந்தினேன்.

    “நீ ஒன்றும் கவலைப் படாதே, உன் கூட இருந்து காரியங்களை நான் கவனித்துக் கொள்கிறேன். நீ ஈமச் சடங்குக்கான காரியங்களை மட்டும் கவனி. மற்ற அனைத்தையும் நான் கவனிக்கிறேன் என்று சொன்னதும் அவருக்கு பெருத்த நிம்மதி.

    வாத்தியார் வந்து சேர்ந்தார். வாசற்படிக்கருகில் லேண்டிங் என்று சொல்லப்படும் பகுதியில் அமர்ந்து ஒரு வராட்டியில் அக்னியை கொண்டு வரச் செய்து தீ மூட்டினார். அப்போது மாடியிலிருந்து இருவர் வந்து, “இதெல்லாம் இங்கே செய்யக் கூடாது. மற்ற வீட்டுக் காரர்கள் மாடியிலிருந்து இறங்கி வருகின்ற இடம். அவரவர்கள் ஆபீஸ் முடிந்து வருகிற நேரம். பிள்ளைகள் பள்ளிக்கூடம் விட்டு வந்து விடுவார்கள், விளையாட வெளியே போகவுமாக இருப்பார்கள். இந்தக் காரியங்களையெல்லாம் உங்கள் வீட்டின் உட்பகுதியிலேயே வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்கள். சாஸ்திரி பதில் சொல்லும் முன்பாக அவர்களே அங்கிருந்த சாமான்களை எடுத்து உள்ளே வீசிவிடுவார்களோ என்று பயப்படும்படி அவர்கள் நடவடிக்கைகள் இருந்தன.

    “என்னய்யா, உலகத்துல நடக்கக்கூடாத காரியம் நடக்குது. இறந்தவங்க உடல் உள்ளே கிடக்கு. இந்த காரியங்களையெல்லாம் வீட்டு வாயிற்படிக்கு வெளியே வைத்துதான் செய்வது வழக்கம். வெளியே போறவங்க இதை பார்த்துக் கொண்டு போறதால அவங்களுக்கு என்ன சிரமம், வழியை மறிக்காம காரியம் நடந்தா உங்களை எந்த விதத்தில் பாதிக்கிறது?” என்றேன் நான்.

    “அதெல்லாம் நடக்காதுய்யா! நீங்க யாரு? இந்த குடியிருப்பு வாசிகளுடைய சங்கத்துத் தலைவன் நான், இவர் செக்ரட்டரி. எல்லா வீட்டுக் காரங்களுடைய செளகரியங்களைப் பார்த்துதான் நாங்க சொல்றோம். புதுசா வந்து நீங்க இங்கே நியாயம் பேச முடியாது” என்றார் தலைவர்.

    உறவினரோ என்னை பரிதாபமாகப் பார்த்து, “வேண்டாம்பா, விடு, அவங்களோட எதுக்கு வீண் வம்பு. நான் இங்கே குடிவந்து கொஞ்ச நாட்கள்தான் ஆயிற்று, அதனால் என்னால் அவர்களுடன் இந்த நிலைமையில் வாதாடிக் கொண்டிருக்க முடியாது. நாம் நம்ம காரியங்களை உள்ளேயே வைத்துக் கொள்ளலாம்” என்று சொல்லியபடி உள்ளே போய்விட்டார். வாத்தியாரும் நானும் அவர் பின்னால் உள்ளே சென்றோம். பின்னர் அவசர அவசரமாக காரியங்கள் நடந்தேறின. வழக்கமாக மூங்கில் வெட்டிக் கொண்டு வந்து பச்சை மட்டை முடைந்து கட்டி அதில்தான் உடலை வைத்து எடுத்துச் செல்வார்கள்.

    ஆனால் இங்கே உடலை சுமந்து செல்ல ஒரு அமரர் ஊர்தி வந்து நின்று கொண்டிருக்கிறது. மூங்கில், பச்சை மட்டை, கயிறு இவைகள் இல்லை. மண் சட்டிகள் மட்டும் இரண்டு வாத்தியார் கொண்டு வந்து உள்ளே வைத்து அக்னி மூட்டி தயார் செய்திருந்தார். வாகனத்துடன் சீருடை அணிந்து வந்திருந்த இருவர் மட்டும் ஒரு ஸ்ட்ரெச்சரைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்து உடலை எடுத்து அதில் வைத்துக் கொண்டு விறுவிறுவென்று போய் வாகனத்தில் ஏற்றி கதவை மூடிவிட்டனர்.

    பின்னால் தீச்சட்டியை ஏந்திக் கொண்டு வந்த உறவினரும் நானும் அதே வாகனத்தில் ஏறிக் கொண்டோம். வாத்தியார் மட்டும் நீங்கள் வந்து சேருங்கள், அதற்குள் நான் போய் மயானத்தில் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை செய்து வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

    பெண்கள் வாசல் வரை வந்து விழுந்து அழுது பிணத்தை வழி அனுப்புவார்கள் என்று எதிர்பார்த்தேன், அதெல்லாம் ஒன்றும் நடைபெறவில்லை. வாகனம் புறப்பட்டு விட்டது. அந்த குடியிருப்பு வாசல் அங்கு எதுவுமே நடைபெறாதது போல அமைதியாக இருந்தது. அன்றைய தினம் எல்லா காரியங்களும் முடிந்த பிறகு மற்ற நாட்கள் நடக்க வேண்டியதை கவனித்து செய்துவிடு, நான் ஊருக்குப் போகிறேன் என்று கிளம்பி வந்து விட்டேன்.

    இதெல்லாம் நடந்து ஒரு மாதம் ஆகியிருக்கும். தொலைக் காட்சிகளில் சென்னையில் பெருமழை, வெள்ளம் பல இடங்கள் நீரில் மூழ்கின என்றெல்லாம் செய்திகளைச் சொல்லிக் கொண்டும், நேரடிக் காட்சிகளைக் காட்டிக் கொண்டுமிருந்தார்கள். இவைகளையெல்லாம் பார்த்து என் உறவினர் கதி என்ன ஆயிற்றோ என்ற கவலை வந்து அவருக்கு போன் செய்தேன். சில முறை செய்தும் தொடர்பு கிடைக்காமல், கடைசியில் அவர் குரல் மறு முனையில் கேட்டது.

    “அங்கு மழை, வெள்ளம் என்கிறார்களே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? ஒன்றும் உங்களுக்கு பாதிப்பு இல்லையே?” என்று கேட்டேன்.

    அவர், “அதையேன் கேட்கிறாய். இங்கு அடையாற்று வெள்ளம் வீட்டினுள் புகுந்து முதல் தளம் முழுவதும் நீரினுள் மூழ்கிப் போய்விட்டது. நாங்கள் எல்லாம் மேலே மொட்டை மாடியில்தான் இருக்கிறோம். சோறு, தண்ணி எதுவும் கிடைக்கவில்லை, உயிர் பிழைத்தால் போதுமென்கிற நிலைமை” என்றார்.

    “உங்களை மீட்க யாரும் வரவில்லையா?” என்றேன்.

    “இது வரை யாரும் வரவில்லை, எப்படி வெளியேறப் போகிறோம் என்பதும் தெரியவில்லை ஒரே குழப்பமாக இருக்கிறது” என்றார்.

    உங்கள் குடியிருப்பின் தலைவர், செயலாளர் ஆகியோர் இருப்பார்களே, உங்கள் பாதுகாப்புக்காக அவர்கள் எதுவும் செய்யவில்லையா?” என்றேன்.

    “அவர்கள் எல்லாம் அடையாறு ஆற்றில் வெள்ளம் என்றதுமே தங்கள் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு இந்த இடத்தை விட்டு எங்கோ போய்விட்டார்கள். அவர்களுக்குத் தெரியுமாம், வெள்ளம் வந்தால் இந்தப் பகுதி தண்ணீருக்குள் மூழ்கிவிடுமென்று. அதனால் அவர்கள் ஓடியே போய்விட்டார்கள். இங்கு என்னைப் போல சமீபத்தில் குடி வந்தவர்கள் மட்டும் தான் விஷயம் தெரியாமல் மாட்டிக் கொண்டிருக்கிறோம்” என்றார் அவர்.

    ‘திருவையாறு பாரதி இயக்கத்தாரும்’, ‘சொர்க்கபூமி தஞ்சாவூர்’ என்ற அமைப்பு சார்பிலும் இங்கிருந்து நிவாரணப் பொருட்களை எடுத்துக் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து சென்னைக்கு லாரிகள் போகின்றன, அதில் தொண்டர்களாக நாங்கள் போகிறோம், நீங்களும் வருகிறீர்களா என்று பாரதி இயக்க நண்பர் ராஜராஜன் எனக்கு போன் செய்தார். எங்கே எங்கே என்று காத்துக் கொண்டிருந்த நான் அவர்களுடன் சேர்ந்து சென்னைக்கு வெள்ள நிவாரணப் பணிக்காகப் புறப்ப்ட்டு விட்டேன்.

    எங்கள் லாரியை சைதாபேட்டை அரசு அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்த அதிகாரிகள் எங்களுக்கு நாங்கள் நிவாரணப் பணியாற்ற வேண்டிய பகுதிகளைக் குறிப்பிட்டு அங்கு போகச் சொல்லி, கூடவே ஒரு அதிகாரியையும் அனுப்பி வைத்தார்கள். இறைவன் திருவுள்ளமோ என்னவோ, நாங்கள் பணியாற்ற வேண்டிய பகுதியில்தான் நான் முன்பு என் நண்பரின் தாய் காலமானபோது போன அதே பகுதிக்குப் போய்ச்சேர்ந்தேன். எங்கள் லாரி நண்பர் குடியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பு வாசலில் நின்றதும், அங்கு வாழ்ந்த மக்கள் எல்லாம் அடித்துப் பிடித்துக் கொண்டு வந்து நிவாரணங்களைப் பெற வந்து சேர்ந்தனர்.

    அந்தக் கூட்டத்தில் என் நண்பரும், அவர் மனைவியும்கூட தூரத்தில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவரும் என்னைப் அதிசயமாகப் பார்த்துச் சிரித்தார். கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு வந்து அங்கு இருக்கும் மொத்த குடியிருப்புகள், அதில் வசிக்கும் மொத்த பேர்களுடைய எண்ணிக்கை இவற்றையெல்லாம் அந்த தலைவரும், செயலாளரும் அடுக்கிக் கொண்டிருந்தனர். அனைவரையும் வரிசையில் நிற்கச் சொல்லி வற்புறுத்தினோம். அதற்குள் அந்தப் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த உள்ளூர் இளைஞர்கள் எங்கள் உதவிக்கு வந்து சேர்ந்தனர்.

    அவர்கள் உதவியோடு நிவாரணப் பொருட்கள் அடங்கிய பெட்டி, பாய், ஜமக்காளம், போர்வை, உணவுப் பொருட்கள், குடி தண்ணீர் பாட்டில் அனைத்தையும் ஒவ்வொருவருக்குமாகக் கொடுத்துக் கொண்டிருந்தோம். என் நண்பர் பொருட்களைப் பெற்றுக் கொள்ள நெருங்கியபோது, அவர் சொன்னார், “மற்றவர்களுக்கு உதவி செய்வதை பெரும் பாவமாகக் கருதியவர்கள் முதலில் வந்து வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள் அல்லவா? இனி எவருடைய வருத்தமும் இல்லாமல் என்னைப் போன்றவர்கள் கிடைத்ததை வாங்கிக் கொள்கிறோம்” என்று நாங்கள் கொடுத்த பொருட்களை கண்களில் நீர் வழிய வாங்கிக் கொண்டார் .

    அப்போது நான் நண்பரிடம் சொன்னேன், “எல்லாம் நல்லபடியாக நடக்கும் வரை நான் பெரியவன், இவன் தாழ்ந்தவன், நான் நிரந்தரமானவன், இவன் இப்போது வந்தவன் என்றெல்லாம் ஏற்றத் தாழ்வு பார்த்தவர்களை யெல்லாம் இன்றைக்கு இறைவன், அனைவரும் அவர் சந்நிதியில் ஒன்றுதான் என்று நிரூபித்து விட்டான். சுற்றிலும் இருப்பவர்கள் மனங்கள் அழுக்குப் படிந்திருந்தாலும், நாம் நல்ல உள்ளத்தோடு இறைபணி யாற்றுவோம். நம்பியவர் கெடுவதில்லை. மனிதம் போற்றப்பட வேண்டியது” என்றேன்.

    தஞ்சை வெ.கோபாலன்,

    இயக்குனர்,

    பாரதி இலக்கியப் பயிலகம்,

    தஞ்சாவூர் 613007)

    Share
  • ஆன்மீகமும் நானும் (22)

    சிரத்தையும் சிரார்த்தமும்

    ஒருவர் இறந்த பின் அவரது பிள்ளைகள் இறந்தவர்களுக் கென வருடா வருடம் சிரார்த்தம் செய்கின்றனர் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைந்து சிரார்த்தம் செய்வோரின் குடும்பத்தினை வாழ்த்திடல் வேண்டும் என்பதற்காக. செய்யும் விதம் மதத்திற்கு மதம் வேறு பட்டாலும் செய்வதின் நோக்கம் ஒன்றுதான்.

    இது தேவையற்ற ஒன்று என்பது என் சொந்தக் கருத்து.

    சிலர் சொல்வார்கள் உங்கள் பெற்றோர்களை நினைவில் இருத்திக் கொள்ள ஒரு வழி இது என்று. வருடத்தில் ஒரு நாள்தான் அவர்களை நினைவுக்குக்குக் கொண்டு வரவேண்டும் என்றால் அந்த ஒரு நாள் தான் எதற்கு? தன்னைப் பெற்று, பாசத்தினைப் பொழிந்து, வியர்வையும் ரத்தமும் சிந்தி உழைத்து உங்களை ஆளாக்கியவர்களை என்றுமே அல்லவா மறக்காது நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்?

    சிலர் சொல்வார்கள் ஒருவர் இறந்த பின் அவருக்குச் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யா விட்டால் அவரது ஆத்மா சாந்தி அடையாது. அது உங்களை சபித்து விடும் என்று. வாழ்ந்த நாட்களில் பெற்றோரை மதிக்காது நடந்து கொண்டவர்கள் கூட இந்த பயத்தினால் வருடா வருடம் சிரார்த்தம் செய்வதுண்டு. எந்த ஒரு தாயும் தந்தையும் தன் குழந்தைகள் கஷ்டப் பட வேண்டும் என சபிக்க மாட்டர்கள், குழந்தைகள் அவர்கள் கண்களில் கண்ணீர் வருமாறு நடந்து கொண்டிருந்தாலும் கூட.

    ஒருவர் அவர் தாய் தந்தைக்கு உயிரோடு இருக்கும் போது அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தந்தால் மட்டும் போதாது. அவர்களைத் தங்களுடனேயே வாழ வைத்துக் கொண்டு, என்றுமே அவர்கள் சந்தோஷமாக வாழ வழி செய்ய வேண்டும்.

    கடைசியாக நான் இதுவரை எழுதி வந்ததின் சாராம்சம்

    1. இறைவனைக் காண / அவரிடம் உங்கள் முறையீடுகளை வைக்க இடைத் தரகர்கள் உதவி தேவை இல்லை.

    2. எங்கும் நிறை இறவைன் உங்களுள்ளும் இருக்கிறான்.

    3. வேத, சாஸ்திர, புராண, இதிகாசங்களைப் படிப்பதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் படித்தவற்றுள் உள்ள நல்ல விஷயங்களை உங்கள் வாழ்வில் முடிந்த வரை கடை பிடியுங்கள்.

    4. எல்லா உயிர்களிடத்தும் அன்புடன் பழகுங்கள்.

    5. உங்களால் ஆன உதவிகளைப் பிறருக்குச் செய்யுங்கள்.

    6. உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ளுங்கள்.

    உங்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பொங்கட்டும்!

    (முற்றும்)

    நடராஜன் கல்பட்டு

    Share
  • ஆன்மீகமும் நானும் (20)

    பேச்சும் நடை முறையும்

    இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே எழுதி இருந்தேன் எனது நோக்கம் யாரையும் என் வழிக்குத் திருப்புவதோ அல்லது யாருடைய மனதையும் புண் படுத்துவதோ அல்ல என்று. இனி வரும் இரு மடல்களைப் படிக்க உங்கள் மனதினை சற்றே திடப் படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இதைச் சொன்ன உடன் ஏதோ திகில் கதை சொல்லப் போகிறேன் என்று எண்ண வேண்டாம். சராசரி மனிதர்களின் கதை தான் சொல்லப் போகிறேன்.

    1992ல் ஒரு முறை டில்லியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன் எனது நாலரை வயது பேரனுடன். தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் எனக்கு நடு இருக்கையும் எனது பேரனுக்கு மேல் இருக்கையும் அளிக்கப் பட்டு இருந்தது.

    நாங்கள் பயணித்த பெட்டியில் சென்னையில் இருந்து ஹரித்துவார், டெல்லி என்று ஆன்மீகப் பயிற்சிப் பட்டரைக்காகச் சென்று விட்டுத் திரும்பும் சென்னை சின்மயா மிஷன் அன்பர்கள் சுமார் இருபது பேர் இருந்தார்கள். ஏறியதில் இருந்து பயிற்சிப் பட்டரையில் தாங்கள் அனுபவித்த இன்பம் பற்றிப் பேசி வந்தனர்.

    படுக்கும் நேரம் வந்தது. நான் என் அருகில் இருந்தவர்களிடம் கேட்டேன், “இந்தச் சிறுவனுக்கு மேல் இருக்கை கிடைத்திருக்கிறது. தூக்கத்தில் பிரண்டு கீழே விழுந்து அடி பட்டுக் கொண்டு விடுவான். உங்களில் யாராவது ஒருவர் கீழ் இருக்கையை அளிக்க முடியுமா?” என்று.

    “ஹூஹூம். முடியாது” என்றனர் அவர்கள். அன்றிரவு நடு இருக்கையில் பேரனை இடுக்கிக் கொண்டு படுத்து வந்தேன். மறு நாள் பொழுது விடிந்தது. நான் அவர்களிடம் கேட்டேன், “நீங்கள் பேசிக் கொண்டு வருவதில் இருந்து சின்மயா மிஷன் அங்கத்தினர்கள் நீங்கள் என்று தெரிகிறது. பகவத் கீதை படிப்ப துண்டல்லவா?”

    “கட்டாயம் தினசரி படிப்போம்.”

    “பக்தி யோகம் என்னும் பன்னிரெண்டாவது அத்தியாயம்?”

    “அது எங்களுக்கு மனப் பாடமாகத்த் தெரியுமே.”

    “அப்படியா? அதில் ‘அத்வேஷ்டா சர்வ பூதானாம் மைத்ரக் கருண ஏவச’ என்று ஒரு வரி வருகிறதே அதற்கு என்ன பொருள்?”

    “எல்லா உயிகளிடத்தும் நட்பையும் கருணையையும் தவிற வெறுப்பு காட்டக் கூடாது என்பது அதன் பொருள்.”

    “நேற்றிரவு இந்தச் சிறுவனுக்காக உங்களில் ஒருவரது கீழ் இருக்கையைக் கேட்டேன. அதைக் கொடுக்க யாருமே முன் வரவில்லை. பகவத் கீதையைப் பள்ளி மாணவன் வாய்ப் பாடுகளை மனனம் செய்வதுபோல் தினமும் படிப்பதினால் என்ன உபயோகம், அதில் உள்ள ஒரு வரியினைக் கூட உங்கள் வாழ்க்கையில் நடை முறையில் கொண்டு வர முடிய வில்லை என்றால்?”

    என் கேள்விக்கு பதில் இல்லை.

    சின்மயானந்தா உயிருடன் இருக்கும் போதே தயானந்தா பிரிந்து தனியாக ஆசிரமம் ஆரம்பித்தார். ஹரிநாமானந்தா காவி உடையைக் களைந்து விட்டு மணம் செய்து கொண்டு அமெரிக்கா பயணமானார். தஞ்சையில் இருந்த ஒரு பிரும்மச்சாரி தங்கி இருந்த வீட்டு எஜமானரின் இரு பெண் குழந்தைகளுக்குத் தாயான அவர் மனைவியை அழைத்துக் கொண்டு தனி ஆசிரமம் அமைக்கச் சென்று விட்டார். திருச்சியில் இருந்து மேல் பயிற்சிக்காக பம்பாய் சென்ற ஒரு பிரும்மச்சாரி தன் சக மாணவியைக் காதல் புரியத் தூண்ட, அவள் அதை வெறுக்க, அவள் முகத்தில் கத்தியால் அவர் குத்த, அது போலீஸ் வரை போய் விட்டது.

    இதையெல்லம் பார்த்த போது இவர்கள் போதிப்பது என்ன? நடந்து கொள்ளும் விதம் என்ன? படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயிலா? இவர்களும் நம்மைப் போன்ற சராசரி மனிதர்கள் தான் எனத் தோன்றியது.

    இறைவன் இருக்கிறான் எல்லாவற்றினுள்ளும். “அவனைக் காண / அடைய உன்னை நீயே கேட்டுப் பார் ‘நான் யார்?’ என்று. அந்தக் கேள்விக்கு விடை கண்டால் உன்னுள் உறையும் ஈசனை நீ காணலாம்” என்ற பகவான் ரமணரின் கூற்று எனக்கு சரியெனத் தோன்றியது.

    எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டு. உன்னால் முடிந்த உதவியைப் பிறருக்கு நீ செய். நேர்மையாகவும் உண்மையாகவும் இரு. இவையே நீ நற்கதி அடைய வழி செய்யும் த்யானம். படித்தால் மட்டும் போதாது வேத, புராண, இதிகாசங்களை. அவற்றில் நீ காணும் நல்லவற்றை உன் வாழ்க்கையில் நடை முறைக்குக் கொண்டு வா. அது தான் நீ செய்ய வேண்டிய பூஜை. இவ்வாறான முடிவிற்கு நான் தள்ளப் பட்டேன்.

    (தொடரும்….)

    நடராஜன் கல்பட்டு

    Share
  • ஆன்மீகமும் நானும் (19)

    நடராஜன் கல்பட்டு

    கொக்கென்று நினைத்தீரோ கொங்கணரே ?

    ank

    ஒரு ஊரில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஒருவன் தன் மனைவி, குழந்தைகளை விட்டு விட்டுக் காஷாயம் தரித்துக் காட்டுக்குச் சென்றான் தவம் செய்ய. காட்டில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து தவம் புரிந்தான். உணவு தேவைப் பட்ட போது அருகில் இருந்த ஒரு ஊருக்குச் சென்று பிச்சை யெடுத்து உண்டான். சில நாட்கள் கழிந்தன.

    ஒரு நாள் அவன் தவம் செய்து கொண்டிருந்த போது மரத்தின் மீது வந்தமர்ந்த் கொக்கு ஒன்று அவன் தலை மேல் எச்சமிட்டது. தவம் கலைந்த அவன் கோபக் கனல் வீச மேலே அண்ணாந்து பார்த்தான். அடுத்த கணம் கொக்கு எரிந்து சாம்பலாகிக் கீழே விழுந்தது.

    புதுச் சாமியாருக்குச் சந்தோஷம் தாங்க முடிய வில்லை. ஆகா வந்து விட்டது எனக்கு அபார சக்தி என்று எண்ணியபடி ஊருக்குள் நுழைந்தார். ஒரு வீட்டின் கதவைத் தட்டி, “சாமியார் வந்திருக்கிறேன். பிச்சை போடுங்கள்” என்று உரக்கக் கத்தினார்.

    உள்ளிருந்து ஒரு குரல் வந்தது, “நான் என் கணவருக்கு போஜனம் அளித்துக் கொண்டிருக்கிறேன் சற்றுப் பொருங்கள். வருகிறேன்” என்று. சற்று நேரம் கழித்து மீண்டு கதவை பலமாகவே தட்டி, “சாமியார் வந்திருக்க்றேன். பிச்சை போடுங்கள்” என்று உரத்த குரலில் கத்தினார்.

    சற்று நேரத்திற்குப் பின் கதவு திறந்தது. கையில் அரிசியுடன் வந்த பெண்ணைப் பார்த்துக் கேட்டார் புதிய சாமியார், “எவ்வளவு நாழியாக நான் காத்திருப்பது?” என்று.

    பதிலுக்கு அந்தப் பெண் கேட்டாள், “என்ன என்னையும் கொக்கென்று நினைத்தீரோ?” என்று.

    “கொக்கை நான் எரித்தது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

    “அதுவா? பக்கத்து தெருவில் காதர் பாச்சா என்றொரு கசாப்புக் கடைக்காரர் இருக்கிறார். அவரிடம் போய் கேளுங்கள்” என்றாள் அவள்.

    காதர் பாச்சா வீட்டைத் தேடிக் கண்டு பிடித்த சன்யாசி. கதவைத் தட்டினார்.

    உள்ளிருந்து காதர் பாச்சாவின் குரல் கேட்டது, “செத்த இருங்க வந்தீட்டேன்.”

    சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் கதவைத் தட்டினார் சன்யாசி.

    “வாரேன்னு சொன்னேன் இல்லெ. செத்தப் பொறுமையா இருங்க.”

    பொறுமையிழந்த துறவி கதவில் இருந்த இடுக்கு வழியாக உள்ளே பார்த்தார். அங்கு அவர் கண்ட காட்சி, வயது முதிர்ந்த தந்தைக்குக் குளிப்பாட்டி, உடல் துடைத்து, ஆடை அணிவித்து நாற்காலியில் மெள்ள உட்கார வைத்துத் தட்டொன்றில் இருந்து உணவினை எடுத்து அவருக்கு ஊட்டிக் கொண்டிருந்தான் காத பாச்சா. பின் அவருக்க் வாய் கழுவி விட்டு, மெல்லத் தூக்கிப் படுக்கையில் படுக்க வைத்து விட்டு வந்து வாசல் கதவினத் திறந்தான் அவன்.

    கதவைத் திறந்ததும் கண்ணில் பட்ட சாமியாரைப் பார்த்துக் கேட்டானவன், “யாரு நீங்க? ஒங்களெ பக்கத்துத் தெரு வாசுகியம்மா அனுப்பினாங்களா? என்னா வேணும் ஒங்களுக்கு?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான் காதர் பாச்சா.

    துறவி, “அப்பா நான் தேடி வந்தது கிடைத்து விட்டது எனக்கு” என்று சொல்லி மீண்டும் வாசுகியமாள் வீட்டினை அடைந்து கதவைத் தட்டினார். அவள் கதவைத் திறந்ததும் அவள் கால்களில் விழுந்து வணங்கி, “தாயே சரஸ்வதி என் கண்களைத் திறந்து விட்டீர்கள். புரிந்து கொண்டேன் நான் ஒருவனின் முதல் கடமை அவனை நம்பி உள்ளோரைக் காப்பாற்றுதல் என்பதை” என்று .

    துறவியின் காஷாயம் பறந்தது. சாதாரண உடையில் தன் வீட்டை நோக்கிப் பயணித்தான் அவன்.

    (கருப்பு வெள்ளை படம் பிடித்தது ந.க.)

    (தொடரும்….)

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    டிசம்பர் 14, 2015

    இவ்வார வல்லமையாளர்

    அமுதா ஐ.ஏ.எஸ் மற்றும் கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ்

    amutha and kajalakshmi

     

    இவர்களைப் போன்ற இந்திய ஆட்சிப் பணியாளர்களே நமக்குத் தேவை என்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் மக்கள் ஒருமனதாகப் பாராட்டும் வண்ணம் சிறப்பாகப் பணியாற்றிய அமுதா ஐ.ஏ.எஸ் மற்றும் கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ். ஆகியோர் வல்லமையின் இவ்வார வல்லமையாளர்களாகப் பாராட்டப்படுகிறார்கள்.

    அரசு அதிகாரிகள் பேரிடர் காலத்தில் தங்கள் பணியை… கடமையை செய்ததற்குப் பாராட்டுகள் தேவையா என்பது இந்திய அரசியலைப் பற்றிய விவரம் தெரியாதவர்களின் கேள்வியாக இருக்கும். ஆனால் இந்திய அரசியல்வாதிகள் தங்கள் கடமைகளைச் செய்யும் அரசுப்பணியாளர்களுக்கு இடையூறு அளிக்காமல் இருந்ததாகக் கேள்விப்பட்டவரும் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. சீரிய முறையில் பணி செய்யும் அரசு அதிகாரிகள் தங்களது “வளர்ச்சிக்கு” இடையூறு தருபவர்கள் என்று முடிவு செய்து, சிறிய, பெரிய என்ற எந்த நிலையில் உள்ள “தலைவர்களும்” அதிகாரிகளை மிரட்டுவதும், அதிகாரிகள் “ஒத்துழைக்க” மறுத்தால், மேலிடம்வரை சென்று ஒத்துவராத அதிகாரிகளுக்கு “பணிமாற்றம்” என்ற “பரிசு” வழங்க ஏற்பாடு செய்வதும்தான் நமக்குத் தெரிந்த நடைமுறை.

    இதுபோன்ற முறையற்ற செயல்களினால், சென்னை நகரத்தின் வளர்ச்சி ஒரு திட்டமிடப்படாத வளர்ச்சியாகக் கடந்த அரைநூற்றாண்டாக ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் அகப்பட்டுக் கொண்டது. விளைவு: சென்னை வெள்ளம் அரசு இயந்திரம் உருவாக்கிய செயற்கைப் பேரிடர் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது. செல்வாக்கு உள்ளவர்கள் அரசு இயந்திரத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நீர்நிலைகளையும், நீரோட்டத்தின் வழித்தடங்களையும் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி பெரும் செல்வந்தர்களாகப் பொருளீட்டி விட்டார்கள். மனசாட்சியை விற்று சுயநலநோக்கில், அரசியல் ஆதாயம் தேடும் ஆட்சியாளர்களும் பாராமுகமாக நடந்து கொண்டார்கள், இதனால் துயருற்றது பொதுமக்கள். இப்பொழுதோ வெட்கமில்லாமல் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டுள்ளார்கள். அதற்குக் காரணமும் அடுத்து ஆட்சியைப் பிடிக்கும், அல்லது தக்க வைக்கும் எண்ணம் மட்டுமே.

    இவர்களது திருவிளையாடல்களினால் எழுப்பப்பட்டுவிட்ட ஆக்கிரமிப்புகளினால் ஒரு வார பெருமழையைத் தாங்கமுடியாமல் சென்னை வெள்ளக்காடானது, சேர்ந்த வெள்ளமும் வடிய வழியின்றித் தேங்கிப் போன நிலை. தூர்வாருதல் போன்ற பராமரிப்பு இன்றி குப்பைகூளங்கள் அடைத்து, அத்துடன் ஆக்கிரமிப்புகளால் பல இடங்களில் ஆறு, கால்வாய்களின் அகலம் சுருங்கிப் போயின. ஆக்கிரமிப்பு பகுதிகள் பெரும்பாலும் வியாபார நிறுவனங்களாகவும், கடைகளாகவும் இருந்தாலும், மணிமங்கலம் பகுதி கால்வாயை ஆக்கிரமித்து ஒரு கோவிலே கூட கட்டப்பட்டிருப்பது தெரிகிறது. அதை இடிக்க வேண்டாம் என்ற கோரிக்கையும் கூட வைத்துள்ளார்கள் அப்பகுதி மக்கள். அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற பொதுப்பணி துறை நீர்வழித்தடங்களிலும்; ஓட்டேரி நல்லா, கேப்டன் காட்டன் கால்வாய் உள்ளிட்ட மாநகராட்சி நீர்வழித்தடங்களிலும் அதிக ஆக்கிரமிப்புகள் உள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

    Capture

    வெள்ள பாதிப்பு கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஒன்பது மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஒருங்கிணைத்த தமிழக அரசு, இக்குழுவை மீட்புப் பணி, நிவாரணப் பணி, எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டது. இராணுவத்தின் துணையோடு இப்பணிகளை அரசு அதிகாரிகள் செயல் படுத்தினர்.

    இவர்களில் வெள்ள பாதிப்புக்கான சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா அவர்கள் தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் மக்களை மீட்டதுடன், மீண்டும் வெள்ளம் வந்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய்களில் இருந்து ஆற்றுக்குச் செல்லும் வழிகளைச் சீரமைக்கும் பணியில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துப் பல ஆக்கிரமிப்புகளை இடித்துத் தள்ள உதவியுள்ளார். இதனால் ஒருவாரம் வரை வடியாமல் தேங்கிய வெள்ளம் சிலமணி நேரங்களில் வடிந்துவிட்டிருக்கிறது. இவரது பணியை தடை செய்வதற்கு முயன்றவர்களை இவர் பொருட்படுத்தவில்லை. தாம்பரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் இவரது ஆணையினால் அகற்றப்பட்டதால் அப்பகுதியில் அடையாறு ஆற்றுக் கால்வாய்  முதலில் இருந்ததை விட மூன்று மடங்கு அகலமாகியுள்ளது.

    amutha 600-vikatan.com-picture

    கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ் அவர்கள் சென்ற அக்டோபரில்தான் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற ஒருமாதத்தில் அவர் மாவட்டம் வெள்ளப் பாதிப்பை எதிர்கொண்டது. முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் வெள்ளநீரில் களமிறங்கி இரவு பகல் பாராது மீட்புப் பணியையும் நிவாரணப் பணியையும் முன்னின்று நடத்தியுள்ளார் கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ். வெள்ள பாதிப்பிற்குக் காரணமான மாவட்டத்தின் பல்வேறு நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளும் இவரது உத்தரவின் பேரில் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன.

    kajalakshmi

    ஆக்கிரமிப்புகள் யாவும் அரசின் மெத்தனத்தினால் நிகழ்ந்தவை என்றாலும், பேரிடருக்குப் பின்னர் செய்யும் இது போன்ற பராமரிப்பு நடவடிக்கைகள் இழப்புகளை ஈடுகட்டப் போவதில்லை என்றாலும், இனியாவது வருங்காலத்தில் இழப்புகளை இந்த நடவடிக்கைகள் குறைக்கும் என எதிர்பார்க்கலாம். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அமுதா, கஜலக்ஷ்மி போன்றோரின் அதிரடி நடவடிக்கைகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்பதிலும் ஐயமில்லை. தனது பதவிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை சரிவரப் பயன்படுத்தத் தெரியாத பிற அரசு அதிகாரிகளுக்கு இவர்களது நடவடிக்கைகள் நல்லதொரு பாடமாக அமையுமாறு செயலாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அமுதா, கஜலக்ஷ்மி ஆகியோருக்கு வல்லமை இதழின் பாராட்டுகள்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     _____________________________________________

    தகவல் தந்து உதவிய செய்திகள்:
    அமுதா ஐ.ஏ.எஸ்
    அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்… அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்… வடிந்தோடும் வெள்ளநீர்!
    http://www.vikatan.com/news/coverstory/56265-encroachment-sequestration-amutha-ias.art

    அரசியல் கட்சியினரின் மிரட்டல்கள் எடுபடவில்லை தாம்பரம், முடிச்சூர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அமுதா ஐ.ஏ.எஸ். அதிரடி
    http://www.dailythanthi.com/News/State/2015/12/10001525/Amudha-removal-of-IAS-invasions-Action.vpf

    கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ்.
    அடையாற்றில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம் தூள் …தூள்:மாநகராட்சிக்கு வழிகாட்டுகிறார் காஞ்சிபுரம் கலெக்டர்
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=1404910

    Share