Month: February 2016

  • குறளின் கதிர்களாய்…(107)

     

    செண்பக ஜெகதீசன்

     

    வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க

    சொல்லே ருழவர் பகை.

         -திருக்குறள் -872(பகைத்திறம் தெரிதல்)

     

    புதுக் கவிதையில்…

     

    பகைத்திறம் தெரிந்துகொள்,

    வில்லேருழவராம்

    வீரர்தம்

    பகையைக் கொண்டாலும்

    பாதிப்பு அதிகமில்லை..

     

    சொல்லேருழவராம்

    கற்றறிந்தோர் பகையை மட்டும்

    எக்காரணத்தாலும் ஏற்றிடாதே…!

     

    குறும்பாவில்…

     

    வீரராம் வில்லேருழவர் பகையைவிடப்

    பெரிதும் கொடிது,

    சொல்லேருழவராம் அறிவுடையோர் பகை…!

     

    மரபுக் கவிதையில்…

     

    வில்லேர் உழவராம் வீரர்தமை

         வீணில் பகைத்தல் மிகக்கொடிதே,

    எல்லை யில்லாத் துன்பம்வரும்

         எளிதில் மீண்டிட வழியிலையே,

    அல்லல் அதனிலும் கூடவரும்

         ஆற்றல் எல்லாம் அழிந்துவிடும்,

    சொல்லேர் உழவர் அறிஞரவர்

         சார்ந்த பகைதான் வேண்டாமே…!

     

    லிமரைக்கூ…

     

    வீரரென்போர் உழுதிடுவர் வில்லால்,

    இவர்தம் பகையினும் கொடிது

    அறிஞர்பகை, அவருழவு சொல்லால்…!

     

    கிராமிய பாணியில்…

     

    ஒழவ மதிச்சிடு பகய மறந்திடு

    பகச்சிக்காத பகச்சிக்காத

    பாக்காமத்தான் பகச்சிக்காத..

     

    வில்லால உழுறுவந்தான்

    வீரமுள்ள படவீரன்,

    அவனநீ பகச்சாலும்

    சொல்லால உழுறவுன

    பகச்சிக்காத பகச்சிக்காத,

    படிச்சவனப் பகச்சிக்காத..

     

    அதால

    ஒழவ மதிச்சிடு பகய மறந்திடு

    பகச்சிக்காத பகச்சிக்காத

    பாக்காமத்தான் பகச்சிக்காத…!

     

    செண்பக ஜெகதீசன்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 195

    மதுரைக் காண்டம் – 07. ஆய்ச்சியர் குரவை

    ஒன்றன் பகுதி

    am

    கட்டவிழ்ந்த மலர்களால் ஆன மாலையைத்
    தன் கூந்தலில் அணிந்த நப்பின்னை,
    கதிரவனைத் தன் சக்கரத்தால் மறைத்த
    கடல் போன்ற வண்ணம் கொண்ட
    கண்ணனுக்கு இடதுபுறமாகவும்,
    திங்கள் போன்ற வெண்ணிற மேனியான்
    கண்ணன் தமையன்
    பலராமனுக்கு வலதுபுறமாகவும் நின்றாள்.

    அவளுடைய தாள ஒற்றுறுப்புகளைப்
    புறமிருந்து காத்து நிற்பவர்,
    மறைப்பொருளை ஆராய்ச்சி செய்தவரும்
    அதனை நன்கு உணர்ந்தவருமான
    நாரதர் ஆவார்.

    சிறுபுறக் கழுத்தாகிய
    பிடரை வளைத்து நிற்கும் நப்பின்னை,
    ஆண்மயிலின் புறக்கழுத்தை ஒத்த
    நீல நிறமுடைய கண்ணனுக்கு வலதுபுறமாகவும்,
    வெண்ணிற மலர்கள் ஒத்த மேனியுடைய
    கண்ணன் தமையன்
    பலராமனுக்கு இடதுபுறமாகவும் நின்றாள்.

    அவளுடைய தாள ஒற்றுறுப்புகளைப்
    புறமிருந்து காப்பவர்
    குயிலுவருள் சிறந்தவரும்
    பண்ணோடு இயைந்த தாளத்துக்கு ஏற்ப
    யாழிசை மீட்டுகின்ற
    நாரதர் ஆவார்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

    படத்துக்கு நன்றி:
    கூகுள்

    Share
  • மன அரங்கம்….

    கவிஜி

    திரையை விரித்துக் கொண்டு
    உள்ளே சென்று நடித்து விட்டு
    விடிந்ததும் வெளியேறி
    போகிறார்கள் நடிகர்கள்
    என்று நினைத்த காலத்தில்
    சினிமா சிலிர்த்தது…

    ப்ரொஜெக்டரில் தலைகீழாய்
    தெரிந்த காட்சிகளை
    குனிந்து குனிந்து
    பார்க்கையில் சினிமா
    பிரமாண்டம்….

    திரைக்குள் விழுந்த குத்துகளில்
    வெளியே அடி வாங்கியதாக
    உணர்ந்த
    காலத்தில் புரியாத லாஜிக் அழகு…

    ஒற்றைப் பொத்தானில்
    நிறுத்தி விட்டு
    ‘போரா இருக்கு’ என்று
    திரும்பி படுக்கையில்
    பால்ய சினிமாவின் இடையே
    கரண்ட் போனது போல
    அத்தனை பெரிய கூச்சல்…

    தூக்கமின்றி தவிக்கிறது
    மன அரங்கம்….

    கவிஜி

    Share
  • உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் நடத்திய செல்பேசிக் கணிமை 2016 – பன்னாட்டு பயிலரங்கம் – தொடக்க விழா

    செய்தி வெளியீடு :

    62f15411-9cb4-493f-b2c4-9d7c01f88b75

    உத்தமம் என்றழைக்கப்படுகின்ற உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் தமிழ்இணையக் கல்விக் கழகத்தின் கூட்ட அரங்கில் செல்பேசிக் கணிமை 2016 என்னும் பொருண்மையில் பன்னாட்டு பயிலரங்கத்தின் தொடக்க விழா 05.02.2016ஆம் நாள் காலை 10.00 மணிக்குத் தொடங்கியது.

    தொடக்க விழாவிற்கு முனைவர் நாகராசன் தலைமை தாங்கினார். திரு லோகசுந்தரம் முன்னிலை வகித்தார். உத்தமத்தின் தலைவர் இனியநேரு வரவேற்புரை ஆற்றினார். பன்னாட்டு பயிலரங்கின் நோக்கங்களை உத்தமத்தின் செயல் இயக்குநர் செல்வமுரளி எடுத்துரைத்து அறிமுகவுரையாற்றினார். தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணை இயக்குநர் முனைவர் தனலெட்சுமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

    தொடர்ந்து மாலை வரை பல்வேறு அமர்வுகள் நடைபெற்றன. இதில் இளங்கோவன் செல்பேசியில் பதிப்பங்கள் சந்தை மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில் “மின்பதிப்பில் இன்றையச் சந்தை நிலவரம் அதில் குறுஞ்செயலிகளுக்கான தேவை முதலியவற்றை விரிவாக எடுத்துரைத்ததோடு அவரின் Cadcraf நிறுவனத்தினர்  பத்திரிகைகளுக்கும் தற்பொழுது செய்து கொடுத்திருக்கும் குறுஞ்செயலிகளைச் செயல்படுத்திக் காட்டினார். மேலும், குறுஞ்செயலிகள் தயாரிப்பில் உள்ள பல்வேறு உத்திகளை எடுத்துரைத்தார்.  AJ.பாலசுப்பிரமணியம் தமிழ்க் குறுஞ்செயலிகளின் சந்தை மற்றும் வேலை வாய்ப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதில் மூர்ஸ் விதிகளின் அடிப்படையில் ஒரு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி அதனைப் புரிந்துகொண்டு சந்தைப்படுத்துதலின் தேவை ஆகியவற்றை விரிவாக விளக்கினார். தொழில்நுட்ப அறிவோடு மென்திறன்கள், நல்ல நுண்ணறிவுத் திறன் அதோடு குறிக்கோள் உள்ளவர்களால் மட்டுமே இன்றைய சந்தை நிலவரத்தில் வெற்றிப்பெற இயலும் என்பதனை எடுத்துரைத்தார்.

    பிரபல பத்திரிக்கையாளர் ஆழி. செந்தில்நாதன் செல்பேசிக் கணிமையும் மொழிக் கணிமையும் என்னும் தலைப்பில் பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.தொழில்நுட்ப வல்லுநர்கள் நுட்பவியலாளர்களுக்கு செலவு செய்கிறார்களே தவிர, மொழிபெயர்ப்பாளர்களுக்கோ உள்ளடக்க உருவாக்குநர்களுக்கோ செலவு செய்ய முன்வருதில்லை. உலக வணிகவியலாளர்கள் சந்தைப்படுத்துதலில் தாய்மொழியின் பங்கினை உணர்ந்து அவரவர் மொழியில் கொடுக்கவேண்டும் என்பதைப் புரிந்திருக்கிறார்கள். தமிழ்நுட்ப வணிகத்தினர் இதனைப் புரிந்துகொள்ளவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

    மைக்ரோ சாப்ட் நிறுவனம் சார்ந்த வெங்கடரங்கன் குறுஞ்செயலிகள் உருவாக்க தொழில்நுட்பம் என்னும் தலைப்பில் உரையாற்றினார். அதில் குறுஞ்செயலி உருவாக்கத் தொழில்நுட்பம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். எந்த இயங்குதளத்தைத் தேர்ந்தெடுப்பது, எந்த நிரல்மொழியில் எழுதுவது என்பது குறித்தும் பொது இயங்குதள நிரல் மொழிகள் எவை முதலான பல்வேறு தொழில் நுட்ப தகவல்களை எடுத்துரைத்தார்.

    எழுத்தாளர் என்.சொக்கன் தமிழ் ஆர்வலர்களும் செல்பேசி கணிமையும் என்ற தலைப்பில் உரையாற்ற்றினார். குறுஞ்செயலி உருவாக்கத்திற்கும் சந்தைப்படுத்துதலுக்குமான தகவல்கள் 24 கருத்துகளாகப் பட்டியலிட்டு விளக்கினார். பல ஆயிரம் மனிதர்கள் ஈடுபட்டுள்ள குறுஞ்செயலி உருவாக்கக் களத்தில் அதனை எவ்வாறு உற்றுநோக்கி சந்தையைப் புரிந்து தேவையானவற்றை உருவாக்குவதன் தேவையை விளக்கினார்.

    பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி அலைபேசிகளில் ஒளியுணரிகளை (OCR) இணைப்பது குறித்துப் பேசினார். OCR, ICR தமிழில் உருவாக்குவதில் தன்முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் பேராசிரியர் OCRஐ செல்பேசிகளில் இணைப்பதின் இன்றியமையாத் தேவையையும் தமிழ் ஓசிஆர் செயல்பாட்டில் உள்ள சிக்கல்கள் அதில் தொடர்ந்து செயல்பட்டு வெற்றிக்காண்பதன் தேவை ஆகியவற்றை விரிவாக எடுத்துரைத்தார்.

     உத்தமத்தின் தலைவர் இனிய நேரு அவர்கள் நன்றி கூறினார். அன்றைய நிகழ்ச்சிகளை பேராசிரியர் சாசலின் பிரிசிலில்டா தொகுத்து வழங்கினார்.. இந்த விழாவில் இலங்கையிலிருந்து சிவாஅனுராஜ், மலேசியாவிலிருந்து கிங்ஸ்டன், உத்தமத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் முனைவர் தி.நெடுஞ்செழியன், பன்னிருகை வடிவேலன், இல.சுந்தரம்,  அரவிந்தன் கிருஷ்ணமூர்த்தி, குணசீலன், பேராசிரியர்கள் காமாட்சி, பத்மநாபபிள்ளை, சிதம்பரம், பிரிசில்டா, கீதா, இரமேஷ் சாமியப்பா, ஆரோக்கிய செல்வி, , செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முருகசுவாமிநாதன், அகிலன் மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்ந்தவர்கள், அண்ணாப் பல்கலைக்கழகத் தொழில்நுட்பத் துறை மாணவர்கள் என சுமார் 100 பேர் இத் தொடக்கவிழாவில் கலந்துகொண்டனர்.

    06.02.2016 சனிக்கிழமை பயிலரங்கின் 2ஆம் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன. உத்தமத்தின் செயல் இயக்குநர் செல்வமுரளி அவர்கள் செல்பேசி நிரலாக்க அடிப்படை என்னும் பொருண்மையில் கருத்துரை வழங்கினார். திறன்பேசியின் பயன்பாடு, தேவைகள், அடிப்படைத் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்தார். அடுத்து, விஷூவல் டெக்னாலஜியின் ஆண்டிரய்டு நிரலாளர் திரு லோகேஷ்குமார் ஆண்டிரய்டு மென்பொருள் உருவாக்கப் பயிற்சி வழங்கினார். ஆண்டிராயிடின் வரலாறு, வளர்ச்சி, பயன்பாடு, தொழில்நுட்பம் குறித்து கருத்துரைகள் வழங்கினார். இந்தியா டு டேயின் கலைவடிவ இயக்குநரும் எழுத்துரு வல்லுநருமான நாராயணன் அவர்கள் கணினியில் எழுத்துருவின் வளர்ச்சி தமிழ் எழுத்துருகளின் வடிவமைப்பு குறித்து கருத்துகளை எடுத்துரைத்தார்.

    நீச்சல்காரன் தமிழ்க்கணினி பிழைத்திருத்திகள் வாணி மற்றும் நாவி குறித்து விளக்கினார். மேலும் தமிழர்களின் தொண்மை விளையாட்டான ஆடுபுலி ஆட்டம், மென்கோலங்கள் என்று பல்வேறு கலைகளை கணினி மயமாக்கும் உத்திகள் பற்றியும் கூறினார். தொடர்ந்து கணினி உத்திகள் ஆலோசகர் ஜி,வி,முத்துக்குமார் பொது நிறுவன தமிழ்க்கணிமைக் குறித்துக் கருத்துரை வழங்கினார். தேடல், தேவை, புதியச்சிந்தனை, கணிமையாக்கம், சந்தைப்படுத்துதலின் அவசியம் பற்றியும் உரையாற்றினார்.

    SSN கல்லூரி பேராசிரியர் நாகராஜன் “அலைபெசிகளின் TTS நுட்பத்தினை இணைக்கும் முறைக்குறித்து பயிற்சி வழங்கினார். செல்பேசிகளின் ஒலி நுட்பத்தின் அவசியம்பற்றியும் தெளிவுப்படுத்தினார்.

    இறுதியாக நிறைவு விழாவில லண்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சிவாப்பிள்ளை, இலங்கை கணிப்பொறியியல் நிறுவனர் அனுராஜ் அவர்கள் நிரைவுரை வழங்கினார். மென்பொருளையும் குறுஞ்செயலியையும் இலவசமாகக் கொடுக்க வேண்டாம். குறைந்த பணத்தில் வெளியிட வேண்டும் என்றார். இறுதியாகப்  பயிற்சியில் கலந்துகொண்ட  100 க்கும் மேற்பட்டோர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதியாக முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் நன்றியுரையாற்றினார். இக்கருத்தரங்கில் பெரியார் பல்கலைக்கழகம், அண்ணாத் தொழில்நுட்ப கல்லூரி, அண்ணாப் பல்கலைக்கழகம், ஜெருசலம் பொறியியல் கல்லூரி சவிதா பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் விழாவில் கலந்துகொண்டனர்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    மேல்கோட்டை செல்லப்பிள்ளை ….
    ——————————————————————

    691f80e4-fb2b-4fb9-9d11-e8a754feee62

    செல்லப் பயலவன் சீராயர் பாடிக்கு,
    கொல்லைத் திருத்துழாய் கோதைக்கு, -பிள்ளையிவன்
    மேல்கோட்டை மாமுனிக்கு மைசூர் மகராஜா,
    கால்கட்டும் கன்றுகேசவ் கைக்கு ….கிரேசி மோகன்….

    மேல்கோட்டை மாமுனி -உடையவர் ஸ்ரீ ராமானுஜர்….

    Share
  • பொறியியல் அற்புதச் சாதனை காலிஃபோர்னியா பொன்வாசல் தொங்குபாலம்

     (San Francisco Golden Gate Suspension Bridge)

    Golden gate bridge -1

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

     

    சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்!

    சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்!

    வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்

    மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்!

    பாரதியார் (பாரத தேசம்)

    ++++++++++++

    Golden gate bridge -14

    முன்னுரை: கி.மு. 2015 இல் ( ?) சீதா தேவியை மீட்க பாரத நாட்டுக்கும் இலங்கா புரிக்கும் அனுமார் படையினர் கட்டிய முதல் புராதனப் பாலத்தைப் பற்றி வால்மீகியின் இராம காவியம் கூறுகிறது. பதினெட்டு மைல் தூரம் நீண்ட பாறாங்கல் பாலத்தைச் சமீபத்தில் (அக்டோபர் 2002) துணைக்கோள் மூலம் விண்வெளிப் படமெடுத்த நாஸா [NASA] ‘இராம பாலம் ‘ [Adam ‘s Bridge] என்று அறிவித்து அகிலவலை முகப்புகளில் வெளியிட்டுள்ளது! பாக் நீர்ச்சந்தியில் [Palk Strait] (இராமேஸ்வரம்) தனுஷ்கோடி, தலைமன்னாரை இணைக்கும் இந்தப் பாறாங்கல் திட்டுகள் உச்ச அலை [High Tide] ஏறும் சமயத்தில் நாலடிக் கடல்நீரில் மூழ்கி விடுபவை! இவ்வூர்களுக்கு இடையில் பிரிட்டிஷ் இந்தியா முன்பு சிறிது தூரம் கட்டிய பாம்பன் பாலம், [Bamban Bridge] பலமுறைச் சூறாவளிப் புயல்களால் தகர்க்கப்பட்டுச் சாய்ந்து போனது!

    NASA’s Picture Rama’s Bridge

    இருபதாம் நூற்றாண்டில் பாரதியார் இலங்கா புரிக்கும் இந்தியா வுக்கும் பாலம் அமைக்க வேண்டும் என்று கண்ட கனவு மெய்ப்பிக்க வில்லை! அயோத்தியா புரியில் நமது இஸ்லாமிய சகோதரர்களை அடித்துக் கொல்லும் இராம பக்தர்கள், பிறந்த பூமியில் இராமர் கோயில் கட்டும் போர்த் திட்டத்தைக் கிழித்துப் போட்டு விட்டு, மெய்யாக இராமரின் பொற் பாதங்களைத் தொட்ட ஈழத் தீவிற்கு ஓர் பாலத்தைக் கட்டலாம்! பக்த கோடிகள் புனித பூமிக்குப் பாத யாத்திரை செய்து புண்ணியம் பெற வசதியாக இருக்கும்! இராமரின் புனித திருப்பாதங்கள் மட்டுமல்ல சீதா தேவி, இலட்சுமணன், அனுமான் ஆகியோர் அனைவரது பாதங்களும் பட்ட புண்ணிய பூமி, இலங்கை! அண்ட வெளியில் கட்டளை ஏவுகணைகளை அனுப்பி, அணுவைப் பிளந்து ஆராய்ச்சிகள் புரியும் பாரத நாட்டுக்கு, பதினெட்டு மைல் தூரப் பாலத்தைக் கட்டும் திறமை இல்லாமலா போய்விட்டது! இந்தியாவுக்கும், ஈழத்துக்கும் இணைப்பு ஏற்பட்டு வணிகம், தொழிற்துறை, கலாச்சாரம் பெருகும்!

    Golden gate bridge -17

    பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உலகெங்கும் பாலம் கட்டும் பணி துவங்கி ஓர் விஞ்ஞான மாயிற்று! தரணி விஞ்ஞானிகள் முதல் விஞ்ஞானி எனக் கருதும் காலிலியோ (1564-1642) தன் காலத்திலேயே கட்டிடக் கலைக்கு உத்திரங்கள், கூட்டுத் தளவாடங்கள் [Beams & Framed Structures] ஆகியற்றைப் பற்றி ஆராய்ந்து எழுதி வைத்துள்ளார். பதினேழாம் நூற்றாண்டின் இறுதியிலே பாலம் கட்டும் பணியாளர் பலர், கூட்டிணைப்பு உத்திரங்களைத் தயாரிக்கப் பொறியியல் கணிப்புகளைப் பயன்படுத்தத் துவங்கினர். அமெரிக்காவில் 1916 ஆண்டு முதல் 17 ஆண்டுகளாகப் போராடி இறுதியில் கலிஃபோர்னியாவின் ஆறு மாவட்டங்கள் சேர்ந்து கட்ட முடிவு செய்து, 35 மில்லியன் டாலர் நிதி ஏற்பாட்டில் 1933 ஜனவரி 5 ஆம் தேதி, ஸான் ஃபிரான்சிஸ்கோ பொன்வாயில் பாலத்தின் அமைப்பு வேலைகள் ஆரம்பமாயின.

    உலகின் ஒப்பற்ற நீண்ட தூரக் கடப்புப் பாலம்!

    உலகத்திலே கம்பீரமான தோற்றமுடன் கவின் மிகுந்த கடற்பாலமாகப் போற்றப்படுவது, ஸான் ஃபிரான்சிஸ்கோவின் பொன்வாயில் பாலம் [Golden Gate Bridge]. நீளத்தில் இரண்டாவது தொங்கு பாலம் [Suspension Bridge] எனக் கருதப்படும் இச்செந்நிறப் பாலம் ஸான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் உள்ள பொன்வாயில் நீர்ச்சந்தியில் [Golden Gate Strait] அமைக்கப் பட்டுள்ளது. மூன்று மைல் நீளமும், ஒரு மைல் அகலமும் கொண்ட அந்த நீர்ச்சந்திக்கு ‘பொன்வாயில் நீர்ச்சந்தி ‘ என்று 1846 இல் பெயரிட்டவர், அமெரிக்க இராணுவக் காப்டன் ஜான் ஃபிரிமான்ட் [John Fremont]. கிரைஸோசெராஸ் அல்லது பொன் கொம்பு [Chrysoceras or Golden Horn] என்னும் பெயருடைய துருக்கி இஸ்தான்புல் துறைமுகம் ஒன்றை ஒத்திருப்பதாகக் கருதிய, காப்டன் ஃபிரிமான்ட் நீர்ச்சந்திக்கு கிரைஸோபைலே அல்லது பொன்வாயில் நீர்ச்சந்தி எனப் பெயரிட்டார். பரந்த பசிபிக் கடலுக்குப் பாதை காட்டும் அந்த நீர்ச்சந்தியின் நாமமே, பிறகு அதன் மீது கட்டப்பட்ட தொங்கு பாலத்திற்கும் இடப்பட்டது!

    Golden gate bridge

    பாலங்களின் பணிகள் பலவிதம். நதிப்பாலம், மலைப்பாலம், கடற்பாலம், வீதிப்பாலம், குழிப்பாலம், நடைப்பாலம் எனப் பிரிவுபடும் பாலங்களின் தோற்ற மூலங்களைக் காண முற்படுவது சற்று சிரமமான முயற்சி! பாலங்கள் மீது கடந்து செல்பவை, வாகனங்கள், ரயில்தொடர் வண்டிகள், ஆயில் பைப்புகள், நீரனுப்புப் பைப்புகள், கழிவு திரவப் பைப்புகள் போன்றவை.

    பாலத்தின் வடிவங்களும் பலவிதம். அவற்றை முக்கியமாக ஐந்து பெரும் இனங்களாகப் பிரிவுக்கலாம். 1. உத்திரப் பாலம் [Beam Bridge] 2. நீள்வட்ட வளைவுப் பாலம் [Arch Bridge] 3. ஊஞ்சல் அல்லது தொங்கு பாலம் [Suspension] 4. ஒற்றைப்பிடி நெம்பு பாலம் [Cantilever Bridge] 5. முறுக்கு நாண் பாலம் [Cable Stayed Bridge].

    Several Cars moving

    இக்கட்டுரை இருபதாம் நூற்றாண்டின் உன்னதப் பாலம் கட்டும் சாதனைகளில் ஒன்றான உலகின் இரண்டாவது நீட்சி ஊஞ்சல் பாலமான கலிஃபோர்னியாவின் பொன்வாயில் பாலத்தைப் பற்றிய விபரங்களைக் கூறுகிறது.

    உலகத்தில் எல்லாவற்றுக்கும் நீளமான தொங்கு பாலம், ஜப்பானில் 1998 இல் கட்டி முடிக்கப்பட்ட ஆகாஷி கைகியோ பாலம் [Akashi Kaikyo Bridge]. அதன் நீளம் 2.5 மைல் [(13037 அடி) 3911 மீடர்]. கடற் கோபுரங் களுக்கு இடையே உள்ள மைய அகற்சி 1.25 மைல் [Center Span (6637 அடி) 1991 மீடர்]. எல்லாவித மாதிரிப் பாலங்களிலும் தொங்கு பாலமே [Suspension Bridge] அதிக அகற்சி தரத் தகுதி பெற்றது. கடலின் அடித்தளத்தில் ஆழத்தில் ஊன்றப்பட்ட இரண்டு கோபுரங் களின் மீது தொங்கும் இரும்புச்சர முறுக்கு நாண்களே [Twisted Wire Cables] பாலத்தின் நீளப்பாதை முழுவதையும் தாங்குகின்றன.

    Map -2

    பல்லாயிரம் அடி ஆழமுடைய பசிபிக் கடலில், மணிக்கு 5-10 மைல் வேக அலைக் கொந்தளிப்பும், புயற்காற்றும், பூகம்பமும் விளையாடும் பகுதிகளில் 8981 அடி நீளத்தில் பாலம் அமைப்பது, இமாலய இடர்களில் நீந்திச் சாதிக்கும் ஓர் அசுர சாதனை! சிக்கலான, சிரமமான அப்பாலத்தை முதலில் டிசைன் செய்த எஞ்சினியரிங் நிபுணரின் பெயர் ஜோஸஃப் ஸ்டிராவ்ஸ் [Joseph Strauss]. ஸ்டிராவ்ஸ் ஒரு மில்லயன் டன்னுக்கும் மேற்பட்ட காங்கிரீட்டைக் கொட்டி, மலைப் பாம்புகள் போன்ற இரண்டு கம்பி வடங்களை வலுவாகப் பற்றிக் கொள்ள உறுதியான ‘பிணைப்பு ஆப்புகளைக் ‘ [Anchorages] கடற்கரையில் கட்டினார். பாலத்தை 1937 இல் 27 மில்லியன் டாலர் செலவில், வாக்குத் தேதிக்கு ஐந்து மாதங்கள் பிந்தி, ஆனால் 1.3 மில்லியன் டாலர் மதிப்பீடுச் செலவுக்குக் குறைந்து, ஜோஸஃப் ஸ்டிராவ்ஸ் கட்டி முடித்து ஒரு மில்லியன் டாலர் வெகுமதியும், பாலத்தைக் கடந்து செல்ல ஆயுள் அனுமதியும் பெற்றார்! பிற்கால இணைப்புகளின் நிதிச் செலவையும் சேர்த்துக் கொண்டால், பாலத்தின் மொத்தச் செலவு 35 மில்லியன் டாலர் மதிப்பாகிறது. பிரதம எஞ்சினியராகப் பணியாற்றிய ஸ்டிராவ்ஸுக்கு உதவி செய்தவர், கட்டிடக்கலை நிபுணர் இர்விங் மாரோ.

    Golden gate bridge -11

    பொன்னூஞ்சல் வாயில் பாலத்தின் பிறப்பும், அமைப்பும்

    ஸான் ஃபிரான்சிஸ்கோவின் முதல் பாலம் 1844 இல் வில்லியம் ஸ்டர்கிஸ் ஹிங்கிலி [William Sturgis Hinkley] என்பவரின் ஆணைக்குக் கீழ் கட்டப் பட்டது. லகூனா ஸலாடாவை வளைகுடாவுடன் இணைக்கும் ஒரு சிற்றாறைக் கடக்கும் பாலம் அது. 450 சதுர மைல் பரவிய ஸான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாத் துறைமுகத்தின் சுற்றியுள்ள தளப்பரப்புகளை எட்டு முக்கிய பெருவீதிப் பாலங்களும் [Highway Bridges] இரண்டு ரயில்பாதைப் பாலங்களும் இணைக்கின்றன. அவற்றில் நான்கு பெரும் பாலங்கள் ஓக்லண்டு பாலம், பொன்வாயில் பாலம், ரிச்மண்டு -ஸான் ரஃபயால் பாலம், கார்குயினெஸ் பாலம் ஆகியவை உலகத் தொங்கு பாலங்களில் உன்னத மானவை! மற்ற பாலங்கள்: ஸான் மெட்டியோ-ஹேவேர்டு பாலம், டம்பார்ட்டோ பாலம், ஸூயிஸன் வளைகுடாப் பாலம் ஆகியவை. இவற்றில் 1936, 1937 இல் முடிவு பெற்ற இரண்டு பாலங்கள் சிறப்பானவை. பொன் வாயில் பாலம் ஸான் ஃபிரான்சிஸ்கோவையும் வடக்கே உள்ள மாரின் மாவட்டத்தையும் [Marin County] இணைக்கிறது.

    Golden gate bridge -20

    1916 ஆண்டு முதல் 17 ஆண்டுகளாகப் போராடி, இறுதியில் கலிஃபோர்னியாவின் ஆறு மாவட்டங்கள் சேர்ந்து பல ஆண்டுகளாகக் கட்ட முடிவு செய்து, 35 மில்லியன் டாலர் மொத்த நிதி ஏற்பாடு செய்து [1933 நாணய மதிப்பு] முடிவில் 1933 ஜனவரி 5 ஆம் தேதி வேலைகள் ஆரம்பமாயின. பொன்வாயில் பாலத்துக்கு மிகவும் உயர்ந்த கோபுரங்கள் [>850 அடி] தேவைபட்டன! கொந்தளிக்கும் கடலுக்குக் கீழே ஆழமான, அகண்ட தாங்கும் கடற்தூண் மேடைகள் [Piers] தேவைபட்டன! தடிப்பு மிக்க முறுக்குக் கம்பி நாண்கள், பெரும் வடங்கள் [Cables] அதிக நீளத்தில் தேவைப்பட்டன! மன உறுதி, பொறியியல் நுணுக்கத் திறம் உடைய எஞ்சினியர் ஜோஸஃப் பேயர்மன் ஸ்டிராவ்ஸ் [Joseph Baerman Strauss (1870-1938)] ஒருவர் தான், ஏறக்குறைய இரண்டு மைல் ஆழக்கடலைக் கடக்கும் ஓர் அரிய தொங்கு பாலத்தை டிசைன் செய்து, கட்டி முடிக்கும் இமாலயப் பணியைச் செய்ய முன்வந்தார்!

    Building the bridge

    ஸ்டிராவ்ஸ் ஓர் உன்னத கட்டிடத் தளவாட எஞ்சினியர் [Structural Engineer] மட்டும் அல்லர். அவர் ஒரு கவிஞர், தீர்க்க தரிசி. தாண்டிச் செல்ல முடியாத பெருந் தடைகளும், பிரச்சனைகளும், அபாய இடர்களும் மிகுந்த ஸான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடா புகுவாசலில், பொன்வாயில் தொங்கு பாலத்தை ஸ்டிராவ்ஸ் கட்ட முடியாது என்று பல எதிர்மறைவாதிகள் எதிர்த்து வாதம் புரிந்தனர். தொங்கு பாலத்தைப் பல்லாண்டுகள் கனவு கண்ட ஸ்டிராவ்ஸ், நாலரை ஆண்டுகளில் அதைக் கட்டி முடித்து, உலகப் பெருஞ் சாதனைகளில் ஒன்றாக ஸான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாவில் அமைத்துக் காட்டினார்.

    தொங்கு பாலத்தின் சுமைதாங்கும் நியதி வெகு எளிமையானது! மிகப் புராதன மானது! அது கலியுகத்தின் புதிய கண்டுபிடிப்பு அன்று! வலுவான கயிற்றை இருமுனைகளிலும் கட்டியோ அல்லது இரு கம்பங்களில் முடிச்சிகளிட்டோ தொங்கவிட்டு, துணிகளைக் காயப் போடுகிறோம். அதே நியதிதான் தொங்கு பாலத்தின் அமைப்பில் கையாளப்படுகிறது. ஆழமாய் ஊன்றிய அடிவாரக் காங்கிரீட் கடற்தூண் மேடை [Pier] மீது இணைக்கப் பட்டவை, இரண்டு உயர்ந்த இரும்புக் கோபுரங்கள். அவற்றின் தோள் மீது மலைப்பாம்பு மாலை போல் தொங்கும் இரு முறுக்குக் கம்பி வடங்கள். அவற்றில் செங்குத்தாய் இணைந்த இரும்புக் கம்பி நாண்கள்தான் பாலத்தைச் சுமக்கின்றன. இருபுறத்திலும் வடத்தின் முனைகள் பூமியில் ஊன்றிய உறுதி மிக்க ஆப்புமேடையில் [Anchorage] கட்டப் பட்டுள்ளன. கோபுரங்களின் தோள்மீது தொங்கும் அந்த நீள்வடங்கள் நன்கு இழுத்து விடப்பட்டு, பூகவர்ச்சி விசையால் [Gravitational Force] இயற்கையாக ‘விரிவளைவு வடிவில் ‘ [Parabolic Shape] ஆரம்போல் அமைகின்றன. கோபுரத்தின் இருபுறத்திலும் புகுத்தப்பட்ட பாலத்தட்டை [Bridge Deck] வடத்திலிருந்து தொங்கும் செங்குத்து முறுக்குக் கம்பி நாண்கள் தாங்கிக் கொள்கின்றன. கோபுரத்தின் பக்கத் தட்டுகளின் [Side Decks] எடையும், நகரும் பளுக்களும் [Live Loads], அவற்றின் நெம்பு இழுப்புகளும் [Bending Moments], நீண்ட மையத் தட்டின் பூர்வீக மேல்வளைவு வடிவை [Originally Kept Upper Curvature] அடிக்கடி மேலும், கீழும் ஏற்றி இறக்கி மாற்றம் செய்யும்.

    Golden gate bridge -13

    பொன்வாயில் பாலத்தின் முக்கிய பரிமாணங்கள்

    பொன்வாயில் பாலத்தின் மொத்த நீளம் 6450 அடி. ஒவ்வொரு பக்கத் தட்டின் நீளம் 1125 அடி. பாலத்தின் மையத் தட்டு [Deck] 4200 அடி நீளத்துடன் கடல் மட்டத்துக்கு 220 அடி உயரத்தில் அமைக்கப் பட்டது. பாலத்தை நெருங்கும் பாதையின் நீளத்தையும் சேர்த்தால், பாலத்தின் மொத்த நீளம்: 8981 அடி [1.7 மைல்]. அகன்ற கடல் நடுவே இரண்டு கோபுரத் தாங்கிகள் முழு நீளப் பாலத்தின் தட்டை ஏந்திக் கொள்ளக் கட்டப் பட்டன. வடதிசைக் கோபுரத்தின் அடித்தளத்துக்கு உறுதியான பாறைத் திடல், கடல் அருகே வாய்த்தது. தென்திசைக் கோபுரந்தான் கரையிலிரிருந்து 1125 அடி தூரத்தில், மிகச் சிரமமோடு கடலில் அமைக்க வேண்டிய தாயிற்று. இரண்டு கோபுரங்களுக்கும் இடையே கடந்து, இரு முறுக்குக் கம்பி வடங்கள் [Twisted Wire Cables] தாங்கும் பாலத் தட்டின் தூரம் 4200 அடி! வடத்திலிருந்து தொங்கும் செங்குத்து முறுக்குக் கம்பிகள் பாலத் தட்டின் முழு எடையைத் தாங்கிப் பங்கிட்டுக் கொள்கின்றன. கோபுரத்தின் உயரம்: கடல் மட்டத்துக்கு மேல் 746 அடி! கோபுரத்தின் எடை: 4000 டன்!

    தென்திசைக் கோபுரம் அமர்ந்துள்ள கடற்தூண் மேடை [Pier] நீருக்குக் கீழ் 100 அடி ஆழத்தில் அமைந்துள்ளது! கடற்தூண் மேடை ஒன்றின் முகப்பு அளவு: நீளம் 185 அடி, அகலம் 90 அடி. உயரம் 144 அடி! ஒவ்வொரு கோபுரத்துக்கும் 64,000 டன் எடையுள்ள ஒரு கடற்தூண் மேடை. மையத் தட்டுக்கு வலது புறத்திலும், இடது புறத்திலும் கோபுரங்களுக்கு அப்பால் பக்க அகற்சி பாலத் தட்டுகள் [Side Spans] 1125 அடி நீளத்தில் உள்ளன. மையத் தட்டின் எடையும், ஓடும் வாகனங்களின் இயக்க எடைகளும், மையப் பகுதியில் உச்சமாகி ‘நெகிழ்வை ‘ [Deflection] உண்டாக்கும். கோபுரத்தின் இரண்டு வெளித் தொங்கு தட்டுகளும் [Overhang Deck Spans] மையப் பாலத் தட்டின் நடு நெகிழ்வைக் குறைக்க [To Reduce the Central Deflection], எதிர்வினை புரியும் நெம்புகோல் தட்டுகளாய் [Anti-Deflection Leverage Decks] பயன்படுகின்றன!

    Building the bridge -12

    நீண்ட மலைப் போன்ற வடம் ஒன்றின் நீளம்: 7660 அடி! வடத்தின் குறுக்கு விட்டம்: சுமார் 3 அடி (36ண அங்குலம்). அந்த மூன்றடி வடத்தின் உள்ளே இணையாகச் செல்லும், 61 நாண்கள் [Strands] கொண்ட 27,572 முறுக்குக் கம்பிகள் நுழைக்கப் பட்டுள்ளன! ஒவ்வொரு நாணிலும் 452 கம்பிகள் முறுக்கப் பட்டுள்ளன! அந்தக் கம்பிகளை ஒன்றாகக் கோர்த்தால் 80,000 மைல் நீளமாகி, அவற்றைக் கொண்டு பூமியின் மத்திமச் சுற்றளவை மூன்று தரத்துக்கு மேல் சுற்றி விடலாம்! இரண்டு வடங்களின் இடைத்தூரம்: 90 அடி! கோபுரத்தின் மீது வடங்கள் இழுக்கும் பளுவின் எடை: 55,350 டன்! வடத்தின் இழுப்பு அளவு கோபுரத்தின் இருபுறமும் ஏறக்குறைய தராசு போல், சமமாக இருக்க டிசைன் செய்யப் பட்டுள்ளதால், கோபுரம் ஏறக்குறைய செங்குத்தாக நிமிர்ந்து நிற்கிறது! கோபுரத்தின் தூரி வடங்கள், தூரியில் தொங்கும் செங்குத்து நாண்கள் மற்ற உபரிகளின் மொத்த எடை: 24,500 டன்!

    Building the bridge -13

    வடங்களை இறுகப் பற்றிக் கொள்ளும் ‘ஆப்பு மேடைகளை ‘ [Anchorage Blocks] பாலத்தின் இருபுறமும் கட்ட உறுதியான பாறைத் தளங்கள் வாய்த்தன. ஒவ்வொரு ஆப்பு மேடையும் 30,000 கியூபிக் கஜம் காங்கிரீட் ஊற்றப்பட்டு, இரும்புக் கம்பிகளால் உறுதியாக்கப் பட்டுள்ளது! ஊஞ்சலில் தொங்கும் செங்குத்து முறுக்குக் கம்பி நாண்களையும், அவை தாங்கும் நீள் பாலத் தட்டையும் இழுத்துத் தூக்கிக் கொண்டிருக்கும் இரண்டு மலைப்பாம்பு வடங்களையும், அழுத்தமாக வெகு ஆழத்தில் பதிக்கப் பட்ட ஆப்பு மேடைகளே பற்றிக் கொள்கின்றன!

    பொன்வாயில் பாலத்தின் மொத்த அகலம் 90 அடி. வாகனங்கள் செல்லும் வீதியின் அகலம்: 62 அடி. பக்க நடைபாதை: 10 அடி. தென்புறக் கோபுரத்தின் அடித்தளம் நீச்சக் கடல்மட்டத்துக்கு [Low Tide] 110 அடி ஆழத்தில் அமைக்கப் பட்டுள்ளது.

    Caisson Foundation

    பொன்வாயில் பாலத்தின் நெகிழ்ச்சியும், நெம்பு இழுப்புகளும்

    பாலத்தின் 6450 அடி நீண்ட பாதைத்தட்டு [இரண்டு பக்கத் தட்டுகள், ஒரு மையத் தட்டு] வெப்ப தட்ப உஷ்ண நிலை மாறுபாடுகளால் முறுக்குக் கம்பிகள், வடங்கள், இரும்புத் தளவாடங்கள், காங்கிரீட் வீதி ஆகியவற்றின் நீட்சிகள் [Elongations] கூடிக் குறைகின்றன. ஓடும் வாகனங்களால் நெம்பு இழுப்புகள் [Bending Moments] தொடர்ந்து வேறுபடும். கடற்புறக் காற்றடிப்பால் பாலத்தின் அனைத்து அங்கங்களும் அடிக்கடி அசைக்கப் படும்.

    பொன்வாயில் பாலத்தின் மீது செல்லும் வாகன நகர்ச்சி பளுக்கள் [Live Loads], புயல் காற்று தள்ளு விசை [Wind Loads], பூகம்ப நிலநடுக்க ஆட்டம் [Seismic Movements] போன்ற அபாயங்கள் உண்டாக்கும் நெகிழ்ச்சிகள் [Deflections], நெம்பு இழுப்புகள் ஆகியவற்றைக் கணித்து [புயல் வேகம்: மணிக்கு 100 மைல்] அதிக பட்ச எதிர்பார்ப்புக்குப் [Maximum Risk] பாலத்தின் அங்கங்களில் பாதுகாப்புகள் இணைக்கப் பட்டுள்ளன. வாகன நகர்ச்சிப் பளு [Live Load 4000 lbs per foot] உச்சமாக அடிக்கு 4000 பவுண்டு எல்லையில் டிசைன் செய்யப் பட்டுள்ளது.

    Building the bridge -7

    கோபுரம் சாயும் போது பக்கவாட்டில் 12.5 அங்குலம், கடற்புறம் நோக்கி 18 அங்குலம், நிலப்புறம் நோக்கி 22 அங்குலம் நெகிழ்ச்சி அடைய டிசைன் செய்யப்பட்டுள்ளது. மணிக்கு நூறு மைல் வேகப் புயல் பாலத்தை நோக்கி அடிக்குமே யாகில், தள்ளப்படும் பாலத்தின் தட்டு பக்கவாட்டில் உச்சமாக 27 அடி ஆடும் என்று கணிக்கப் பட்டுள்ளது! அதே போன்று பூகம்ப ஏற்படும் சமயம் நிலநடுக்கத்தில், பாலத்தின் தட்டுப் பக்கவாட்டில் உச்சமாக 27.7 அடி ஊஞ்சல் ஆடினாலும், பழுது ஏற்படாதவாறு டிசைன் செய்யப் பட்டுள்ளது! பாலத்தின் இரண்டு பக்கத் தட்டுகள், மையத்தட்டு மீது ஓடும், வாகன நகர்ச்சி எடைகள் மாறுவதாலும், கோபுரத் தாங்கு முனைகளில் நெம்பு இழுப்புகள் மாறி ஏறி இறங்குவதாலும், மையத்தட்டின் நெகிழ்ச்சி உச்சமாக கீழ்நோக்கி 10.8 அடி, மேல்நோக்கி 5.8 அடி வரை நெகிழ்ச்சி அடைய டிசைன் செய்யப் பட்டுள்ளது!

    Building the bridge -6

    பொறியியல் நிபுணர் ஸ்டிராவ்ஸின் உன்னத சாதனை

    நூறாண்டுகளுக்கு முன்பிருந்த பொறியியல் திறமையில் முடியாத, பொன்வாயில் பாலம் போன்று நீண்ட பாலம் ஒன்றை 1937 இல் கட்டியது, நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஓர் அசுர சாதனை! பசிபிக் வளை குடாவில் அமைக்கப்படும் ஒரு பாலம் பெரும் புயல் காற்றையும், பேரலை அடிப்புகளையும், மூடுபனி மந்தாரங்களைத் தாண்டி பிழத்துக் கொள்ள வேண்டும்! பூகம்பப் பிரளய விளைவுகள் நிகழும் உள்மையத்திற்கு [Epicenter] எட்டுமைல் தூரத்தில் அமையும் அப்பாலம், நிலநடுக்க முறிவிலிருந்து தப்பிக் கொள்ள வேண்டும். அத்தகைய அபாய எதிர்பார்ப்பு இடர்கள் இருந்தாலும், அவை அனைத்தையும் தாங்கிப் பிழைத்துக் கொள்ளும் ஓர் உறுதியான பாலத்தை அமைத்திட முன்வந்தவர், பொறி நுணுக்க நிபுணர் ஜோஸஃப் ஸ்டிராவ்ஸ்.

    அமெரிக்கக் கட்டிடப் பொறியியற் துறைக் குழுவினர் பொன்வாயில் பாலம் நவீன உலகின் ஏழு விந்தைகளில் ஒன்று என்று பறைசாற்றுகிறார்கள். மற்ற ஆறு விந்தைக் கட்டிட அமைப்புகள்: 1. அமெரிக்காவின் ஹூவர் அணை [Hoover Dam] 2. கென்னடி விண்வெளி ஆய்வுக் கூடம் [Kennedy Space Center] 3. பனாமாக் கால்வாய் [Panama Canal] 4. அலாஸ்கா இடைப்புகு பைப் இணைப்பு [Trans-Alaska Pipeline] 5. மாநில இணைப்புத் தொடர்பாதைகள் [Interstate Highway System] 6. உலக வாணிப மையம் [World Trade Center] [2001 செப்டம்பர் 11 இல் தகர்ந்து போன இரட்டைக் கோபுரங்கள்]

    பொன்வாயில் பாலத்தின் நூதன டிசைனுக்கும், துணிச்சலான பணிக்கும் 1993 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கட்டிடக்கலைக் குழுவினர் [Society of American Registered Architects (SARA)] மகத்தான கட்டிடப் பரிசை [Distinguished Building Award] வழங்கினார்கள். அப்பரிசளிப்பு விழாவில் பிரதம எஞ்சினியர் ஜோஸஃப் ஸ்டிராவ்ஸ், கட்டிட டிசைன் நிபுணர் இர்விங் மாரோ ஆகியோர் இருவரும் பாராட்டப் பட்டனர்.

    பொன்வாயில் பாலத்தில் [1953-2001] புதுப்பித்த பணிகள்

    ஆரம்பமான 1938 ஆம் ஆண்டில் மட்டும் 3.5 மில்லியன் வாகனங்கள் பொன்வாயில் பாலத்தின் மீது பயணம் செய்துள்ளன! 1969-1993 ஆண்டுகளில் வருடத்திற்கு 32 மில்லியன் முதல் 39 மில்லியன் வாகனங்கள் வரை பாலத்தைக் கடந்திருக்கின்றன! ஸான் ஃபிரான்சிஸ்கோ பொன்வாயில் பாலத்தைக் காண வருவோர் தொகை, ஒவ்வொர் ஆண்டிலும் சராசரி 9 மில்லியன் என்று கூறப்படுகிறது!

    Building the bridge -5

    1951 இல் ஒரு பெரும் புயல் அடித்து, பாலத்தட்டின் நிலைநெறிக்குப் [Integrity] பங்கம் விளைத்திடப் பயமுறுத்தியது! புயல் காற்றில் அசுரத் தாக்குதலால், பாலம் புரண்டு சுருண்டு விடுமோ என்ற அச்சத்தை உண்டாக்கி விட்டது! உடனே பாதுகாப்புக் குழுவினர் எச்சரிக்கை செய்ய, மாவட்டங்கள் 3.5 மில்லியன் டாலர் செலவழித்து, 1953 இல் முழு நீளத்திற்கு (6450 அடி) பாலத்தின் கீழே பக்கவாட்டில் இரும்புச் சட்ட ஏற்பாட்டை [Lower Lateral Bracing System] இணைத்து, பாலத்தட்டுக்கு உறுதியான நிலை வடிவை அளிக்கப் பட்டது.

    1967-1969 ஆண்டுகளில் பொறியியல் குழுவினர் ஒரு பெரும் பராமரிப்பு சோதிப்புச் செய்தனர். உப்புக் கடல் சூழ்வெளியில் உள்ள செங்குத்து இரும்பு நாண்களில் துரு அரிப்பு [Corrosion in Suspender Ropes] இருப்பது அறியப்பட்டது. 9 மில்லியன் டாலர் செலவழித்து, அந்த நாண்கள் யாவும் நீக்கப்பட்டுப் புது நாண்கள் பிணைக்கப் பட்டன. (1980-1982) (1997-2001) ஆண்டுகளில் மூன்று முறை நிலநடுக்கக் காப்பு இணைப்புகள் [Seismic Retrofit Construction] பாலத்தின் அங்கங்களுக்குச் சேர்க்கப் பட்டன.

    Building the bridge -4

    பொன்வாயில் பாலத்தைத் தாக்கிய அசுரப் புயற்காற்றுகள்

    1937 மே 27 இல் பொன்வாயில் பாலம் ஆரம்ப தினம் கொண்டாடி, அடுத்த நாள் முதல் வாகனங்கள் இருபுறமும் கடந்து சென்றன. துவக்க நாளன்று சுமார் 200,000 பேர் விஜயம் செய்தார்கள். பொன்வாயில் பாலத்தைக் கட்டி முடித்த நாலரை ஆண்டுகளில் விபத்துகள் நேர்ந்து 11 பேர் உயிரிழந்தனர்! அதே சமயத்தில் கட்டமைப்பு வேலைகள் நடந்து வந்த போது, தவறி விழுந்த 19 பணியாளிகளைப் பாலத்துக்கு அடியில் கட்டி யிருந்த ‘பாதுகாப்பு வலை ‘ [Safety Net] காப்பாற்றியது குறிப்பிடத் தக்கது. அந்த 19 நபர்களின் பெயர்கள் ‘பாதி வழி நரகம் சென்றவர் குழு ‘ [Halfway-to-Hell Club] என்னும் பட்டியலில் பதிவாகி யுள்ளன!

    1951 டிசம்பர் முதல் தேதி மூன்று மணி நேரங்கள் வாகனப் பயணங்கள் நிறுத்தமாகிப் பாலத்தின் நுழை வாசற்கள் மூடப்பட்டன! காரணம் மணிக்கு 70 மைல் வேகத்தில் சூறாவளிப் புயல் ஒன்று அடிக்கப் போவதாய்க் காலநிலை அறிவிப்புகள் எச்சரிக்கைகள் விடுத்தன. 1937 இல் கட்டப்பட்ட ஊஞ்சல் பாலத்துக்கு அன்றைய தினம், இயற்கை மெய்யாகவே செய்த ஒரு சோதிப்புத் தேர்வாய் அது ஆகிவிட்டது! அன்று தாக்கிய பயங்கர புயல், மையப் பாலத் தட்டைப் பக்க வாட்டில் தள்ளி இங்குமங்கும் 24 அடி ஊஞ்சலாக ஆட்டியது [டிசைன் வரையரை 27.7 அடி]! பாலத்தின் மையத்தில் செங்குத்தாக 5 அடி மேலும், கீழும் ஏறி யிறங்கியது! நல்ல வேளையாக சிறிய பழுதுகள் மட்டும் நேர்ந்து, பாலத்துக்குத் தீவிர முறிவுகள் எதுவும் ஏற்பட வில்லை!

    Golden gate bridge -10

    1982 ஆம் ஆண்டு பொன்வாயில் பாலத்தின் மீது அடித்த குளிர்காலப் புயலில் [Winter Storm] மைய அகற்சிப் பாலத்தட்டு 6-7 அடி தணிந்தது! பொறியியல் மகத்துவமான பொன்வாயில் பாலம் மனிதரின் உன்னதச் சாதனையாக இருந்தாலும் புயல்களும், அலைகளும், பூகம்பங்களும் ஸான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதிகளை அடிக்கடித் தாக்குவதால், எஞ்சினியர்களும், பராமரிப்புப் பணியாளர் களும் அசுர வடிவான பாலத்தை அல்லும் பகலும் கண்காணித்துப் பழுதுகளை எப்போதும் செப்பணிட்டு வர வேண்டும்!

    Building the bridge -2

    தகவல்:

    1. Marvels of Engineering -The Builders By: National Geographic Society [1992]

    2. Inventing the Modern World Technology Since 1750, Science Museum [2000]

    3. Encyclopaedia Britannica, History & Construction of Bridges [1978]

    4. Golden Gate Bridge, Key Dates, History & Information.

    5. Structure of Golden Gate Bridge [www.structure.net/en/structures/data/str00029.php]

    6. Building Big Databank -Golden Gate Bridge, Details, Size, Construction Data etc

    7. The True Story of Design & Construction -Golden Gate Bridge

    8. Suspension Bridge Improvements, Operation & Maintenance.

    9. Suspension Bridges By Matsuo Bridge Company Ltd [1999]

    10.  http://www.aviewoncities.com/sf/goldengatebridge.htm

    11.  http://www.inetours.com/Pages/SFNbrhds/Golden_Gate_Bridge.html

    12.  https://en.wikipedia.org/wiki/Golden_Gate_Bridge  [February 4, 2016]

    ****

    S. Jayabarathan [jayabarathans@gmail.com] February 6, 2016]

    Share
  • தமிழ்[தாய்]மொழிக் கல்வி

    ஒரு அரிசோனன்

    mother child

    ஒரு குழந்தை தன் தாயின் கருப்பையிலிருக்கும்போதே தன் தாயிடமிருந்து மொழியைக் கற்கத் துவங்குகிறது என்று வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி கூறுகிறது[1].  முதலில் அழுவதையெ மொழியாகக் கொண்டிருக்கும் அம்மகவு, (more…)

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: இருள் நீக்கும் பல்மீனும் காய்கலாவாகும் நிலா

     

    ஆயிரவ ரானு மறிவில்லார் தொக்கக்கான்
    மாயிரு ஞாலத்து மாண்பொருவன் போல்கலார்
    பாயிரு ணீக்கு மதியம்போற் பன்மீனுங்
    காய்கலா வாகு நிலா.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ஆயிரவரானும் அறிவில்லார் தொக்கக்கால்,
    மா இரு ஞாலத்து மாண்பு ஒருவன் போல்கலார்;-
    பாய் இருள் நீக்கும் மதியம்போல், பல் மீனும்,
    காய்கலாவாகும் நிலா.

    பொருள் விளக்கம்:
    ஆயிரக்கணக்கான அறிவற்றவர் ஒன்று திரண்டாலும், பரந்து விரிந்திருக்கும் இப்பெரிய உலகில் மாட்சிமை பொருந்திய அறிவிற்சிறந்த ஒருவரைப் போல விளங்க மாட்டார். (அது போலவே) பரவியுள்ள இருளைப் போக்கும் வெண்மதி போல, பல விண்மீன்கள் ஒருங்கிணைந்தாலும் நிலவைப்போலக் காய்ந்து ஒளிதர அவற்றால் இயலாது.

    பழமொழி சொல்லும் பாடம்: அறியாமை கொண்டோர் ஆயிரமாயிரம் பேர் ஒன்று திரண்டாலும், அறிவில் சிறந்துள்ள ஒருவருக்கு ஒப்பாக மாட்டார். அறிவிற் சிறந்தவரின் சிறப்பை எடுத்துரைக்க விரும்பிய வள்ளுவர்,

    அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
    என்னுடைய ரேனும் இலர். (குறள்: 430)

    அறிவுடையவர் எல்லாச் செல்வமும் உடையவராக உலகத்தாரால் மதிக்கப்படுவார், அறியாமை சூழ்ந்தவர் ஒருவர் எத்தனைச் செல்வம் பெற்றிருப்பினும் அவர் ஒன்றும் இல்லாதவராகவே கருதப்படுவார் என்கிறார்.

    Share
  • தமிழா என்று மாறுமோ இந்த நிலைப்பாடு…..

    தமிழ்நேசன் த.நாகராஜ்

    05d125a3-aa99-4bc7-ade1-bb3e5203368d

    அவமானம் அவமானம்
    தமிழுக்கும் தமிழனுக்கும்
    அவமானம்!

    பரிகாசம் பரிகாசம்
    வந்தேரிகள் வந்திங்கே
    பரிகாசம்!

    அன்று
    நம் மாமன்னர்கள் ஆட்சியிலே
    தமிழ் மரபு காத்த நாடு..!

    இன்று
    வந்தேரிகள்ஆட்சியினால்
    தமிழ் அடங்கியிருக்கும் நாடு..!

    பார் புகழும் வண்ணம்
    நம் தமிழர் வாழ்ந்த
    அருந்தமிழ்நாடு..!

    வஞ்சகர்களின் வஞ்சகத்தால்
    வாய்ப்பிழந்தும் வாழ்விழந்தும்
    தவிக்கும் தமிழர்நாடு..!

    தூயத்தமிழை இழந்த நாடு
    தூய்மை தமிழனையும்
    இழந்த நாடு..!

    வீரத்தமிழ் சிங்கங்கள் வளர்ந்த நாடு
    முத்தாக முத்தமிழ் சங்கத்தினை வளர்த்த நாடு..!

    வரைப்படத்தில் மட்டுமினி தமிழ்நாடு
    வழக்கத்தில் ஏனோ மாற்றம்
    அயல்நாடு..!

    ஒடுங்கியிங்கே போனதே
    நம் பண்பாடு
    மாறுவதென்றோ
    இந்த நிலைப்பாடு..!

    தமிழா ! மாறுவதென்றோ
    இந்த நிலைப்பாடு..!

    – தமிழ்நேசன்”

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 52

    எல்ஸாஸ் சமூக அருங்காட்சியகம், ஸ்ட்ராஸ்போர்க், பிரான்சு

    முனைவர்.சுபாஷிணி

    ஐரோப்பாவில் அதன் அதிகாரப்பூர்வ பார்லிமண்ட் இருக்கின்ற நகரமாக விளங்குவது பிரான்சில் வடகிழக்கு நகரங்களில் ஒன்றான ஸ்ட்ராஸ்போர்க். இந்த ஐரோப்பிய பார்லிமெண்ட் ஒவ்வொரு ஆண்டும் 12 முறை கூடும் போதும் நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் ஐரோப்பிய நாடாளுமன்ற செயற்பாடுகள் பற்றிய பல்வேறு விடயங்கள் இங்கு அலசி ஆராயப்படுவது வழக்கம். பெல்ஜியம் ப்ரஸ்ஸல்ஸ் நகரில் இருக்கும் மற்றொரு ஐரோப்பிய பார்லிமெண்டின் பகுதியை விட முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக இந்த பார்லிமண்ட் அமைந்துள்ளது. இங்குதான் ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலும் நடத்தப்படுகின்றது என்பது இதன் சிறப்பை மேலும் புரிந்து கொள்ள உதவும்.

    2bad3b72-fe7c-4c8c-9775-3a27c5358631
    ஐரோப்பிய பார்லிமென்ஸ் – ஸ்ட்ராஸ்போர்க்

    ஐரோப்பாவின் அரசியலமைப்பிற்கு மையப் புள்ளியாக விளங்கும் இந்த மாநிலம் வரலாற்று பழமைக்குச் சிறிதும் குறைந்ததல்ல. ஏறக்குறை கி.மு.1500 ஆண்டு வாக்கிலேயே செல்ட்டிக் இனக்குழுவினர் இங்கு இருந்தமைக்குச் சான்றாக இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புக்கள் கிடைத்திருக்கின்றன. அதன் பிறகான ரோமானியப் பேரரசின் தாக்கம் இப்பகுதியில் அமைந்ததற்குச் சான்றாக இன்றளவும் காணப்படும் சுவர்களின் எச்சங்கள், அகழ்வாய்வுச் சான்றுகள், ரோமானிய தெய்வங்களின் சிலைகள், போர் கருவிகள் ஆகியனவை அமைந்திருக்கின்றன. ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இப்பகுதி ஜெர்மானியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட இடமாக அமைந்திருந்தது.

    இப்பகுதியில் புழக்கத்தில் இருந்த மொழி அல்சேட்டியன் என அழைக்கப்படுவது. இது இன்றைய ஜெர்மன், அதாவது டோய்ச் மொழியின் ஒரு வகை பேச்சு மொழி. இந்த மொழியை விட தற்சமயம் இங்கு பிரஞ்சு மொழியே விரிவாகப் பேசப்படுகின்றது.இதற்கு முக்கியக் காரணம், இப்பகுதி பிரான்சு நாட்டின் எல்லைக்குள் தற்சமயம் இருப்பதேயாகும். ஆயினும் எனது நேரடி அனுபவத்தில் காணும் போது இங்குள்ள மக்கள் ப்ரென்சு மொழியும் டோய்ச் மொழியும் என இரு மொழி தெரிந்தவர்களாகப், பேசக்கூடியவர்களாக இருக்கின்றனர்.

    a1
    ரைன் நதியால் சூழப்பட்ட ஸ்ட்ராஸ்பொர்க் நகரம்

    பிரான்சு நாட்டின் எல்லைக்குள் இருந்தாலும் எல்சாஸ் என அழைக்கப்படும் இப்பகுதி முழுமையாக பிரென்சு பண்பாடு மற்றும் கலாச்சரத்தை உள்வாங்கிய பகுதியாக இல்லை. அதே போல, ஜெர்மனியின் பல நூற்றாண்டு தாக்கம் இப்பகுதியில் இருந்தாலும் ஜெர்மானிய கலாச்சரமோ பண்பாடோ இங்கு நிலைபெற்றது என்றும் சொல்வதற்கில்லை. இப்பகுதி எல்சாஸ் என்ற தனித்துவத்துடன், இரண்டு பெரு நாடுகளுக்கிடையில் தனித் தீவாக விளங்குவதே இதன் தனிச் சிறப்பாக அமைகின்றது.

    இப்பகுதியின் மாறுபட்ட தன்மை மட்டுமே இதனைத் தனித் தீவாக அமைத்திருப்பதாக நினைத்துவிட வேண்டாம். எல்ஸாஸ் பகுதியின் முக்கிய நகரான ஸ்ட்ராஸ்பொர்க் நகரமே ரைன் நதி சூழப்பட்டு ஒரு தீவாகவே அமைந்திருக்கின்றது. இந்த நில அமைப்பு இந்த நகரத்தின் எழிலுக்கு ஒரு கூடுதல் தனிச்சிறப்பாக அமைந்திருக்கின்றது.

    எல்ஸாஸ் எனப்படும் பகுதி Alsace-Champagne-Ardenne-Lorraine என்ற மாவட்டப்பகுதியில் அமைந்திருக்கின்றது. எல்ஸாஸ் மக்களின் மொழி எப்படி தனித்துவம் வாய்ந்ததோ அதே போல இம்மக்களின் உடை யலங்காரம் வித்தியாசமானது. வீட்டு உபயோகப் பொருட்கள், சமையல் கருவிகள் விவசாயக் கருவிகள் ஆகீயனவும் இப்பகுதிக்குண்டான தனிச்சிறப்பைப் பிரதிபலிக்கும் வகையிலேயே இருந்திருக்கின்றன.

    a2

    ​காளானும், சீஸும் கலந்த ஃப்ளாம்கூகன்

    எல்ஸாஸ் பகுதிக்கான பிரத்தியேக உணவாக அமைவது ஃப்ளாம்கூகன். இது பீஸா போன்ற வகையில் அமைந்த ஒரு உணவு. ஆனால் மிகத்தட்டையாக மெலிதாக இருக்கும். இப்பகுதியில் மட்டுமன்றி ஜெர்மனியின் மேற்கு மானிலங்கள் பலவற்றில் பிரபலமாகிவிட்ட உணவு இது. அதிலும் குறிப்பாக இலையுதிர் காலத்து சாலை நிகழ்வுகளில் கிடைக்கக்கூடிய உணவு வகைகளில் இது கட்டாயம் கிடைக்கும்.

    a3

    எல்ஸாஸ் பற்றிய இவ்வகையான பல விசயங்களை உள்ளடக்கிய ஒரு தகவல் கூடமே இன்றைய பதிவில் இடம்பெறும் இந்த அருங்காட்சிகம். எல்ஸாஸ் அருங்காட்சியகம் என அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் ஸ்ட்ராஸ்புர்க் நகரின் மையப் பகுதியின் மையச் சாலையிலேயே அமைந்திருக்கின்றது. 1902ம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் உருபெற்றது. இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கும் கட்டிடமும் எல்சாஸ் கட்டிட அமைப்பில் அமைந்த ஒரு கட்டிடமேயாகும்.

    அருங்காட்சிகத்தின் உள்ளே சென்று காண்போமே..!

    தொடரும்…!

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (182)

    – சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.
    வருடம் பிறந்து மாதம் ஒன்றும் ஓடி மறைந்து விட்டது. ஒவ்வொரு வருட ஆரம்பத்தையும் ஒவ்வொரு எதிர்பார்ப்புகளோடு ஆரம்பிப்பதுதான் மனித வாழ்வின் யதார்த்தமாகிறது.

    லண்டன் மாநகரம், ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரங்களில் மிகவும் பிரசித்தி வாய்ந்த மாநகரமாகும், பல நிறுவனங்களின் தலைமை அலுவலகம் லண்டனில் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

    இந்த லண்டன் மாநகரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மாபெரும் பணி இம்மாநகர மேயரைச் சார்ந்ததாகும். தற்போது லண்டன் மாநகர மேயராக இருப்பவர் கன்சர்வேடிவ் கட்சியைச் சார்ந்த போரிஸ் ஜான்சன் (Boris Johnson) ஆவார். இவர் கடந்த இரண்டுமுறை லண்டன் மாநகர வாக்காளர்களினால் மேயராகத் தெரிவு செய்யப்பட்டார்.

    லண்டன் மாநகரத் தேர்தல் விதிகளுக்கமைய இருமுறைக்கு மேல் ஒருவர் மேயராகப் பதவி வகிக்க முடியாத காரணத்தினால் வருகின்ற மேமாதம் நடைபெற உள்ள தேர்தலில் தற்போதைய மேயர் போட்டியிட மாட்டார். லண்டன் மாநகரம் இங்கிலாந்து எனும் ஆங்கில நாட்டின் தலைநகரமாகும். ஆனால் மிகவும் வியப்புக்குரிய விடயம் என்னவென்றால் இங்கிலாந்தின் தலைநகரில் இங்கிலாந்து நாட்டின் தொன்மைக் குடிமக்களான ஆங்கிலேயர்கள் சிறுபான்மையினராக இருப்பதுவே !

    ஆமாம் லண்டன் மாநகரில் உள்ள ஜனத்தொகையில் ஆங்கிலேயரை விட வந்தேறிய குடிகளான பிறநாடுகளின் வம்சாவழியினரே அதிக அளவில் இருக்கின்றார்கள். இந்த ஜனத்தொகை வேறுபாட்டின் தாக்கம் லண்டன் மாநகர மேயர் தேர்தலில் எதிரொலிப்பது தவிர்க்க முடியாத ஒன்றெனலாம்.

    பொதுக் கருத்துக் கணிப்புகளின் படி இம்மாநகர மேயர் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி அல்லது எதிர்க்கட்சியான லேபர் கட்சியைச் சேர்ந்த வேட்பாளரே மேயராகத் தெரிவு செய்யப்படும் சாத்தியக்கூறு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    mayorகன்சர்வேடிவ் கட்சியின் சார்பாக கிங்ஸ்டன் பகுதி பாராளுமன்ற உறுப்பினரான ஸாக் கோல்ட்ஸ்மித் (Zac Goldsmith) என்பவரும் , லேபர் கட்சியின் சார்பாக சாடிக் கான் (Sadiq Khan) என்பவரும் போட்டியிடுகிறார்கள். இவர்களைத் தவிர மற்றும் பல வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ள போதிலும் இவர்கள் இருவரில் ஒருவரே மேயராவது சாத்தியம் எனக் கருதப்படுகிறது.

    இதிலொரு விசித்திரமான விடயத்தைக் குறிப்பிடுவதற்காகவே நான் குறிப்பாக இம்மடலை வரைகிறேன். நான் சமீபத்தில் இந்தியா சென்று வந்தது பற்றிக் கடந்த மடலில் குறிப்பிட்டிருந்தேன்.
    டிசம்பர் மாதம் 26ம் திகதி சென்னை சென்ற நான் ஜனவரி 17ம் திகதி லண்டன் திரும்பினேன். இதிலே ஆச்சரியம் என்னவென்றால் நான் செல்லும்போது கண்ட இங்கிலாந்து பிரதமருக்கும் திரும்பி வந்த பின்பு காணும் இங்கிலாந்துப் பிரதமருக்கும் ஒரு பாரிய வித்தியாசமிருப்பது போல எனக்குத் தென்படுவதே !

    அது என்ன என்கிறீர்களா ?

    இமிக்ரெண்ட்ஸ் எனப்படும் வெளிநாட்டிலிருந்து இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்து குடியேறியவர்கள் பற்றிய இவரது கண்ணோட்டமே ! இரண்டு நாட்களின் முன்னால் பிரதமர் ஒரு பாரிய பிரகடனம் செய்திருந்தார். அவரின் கூற்றுப்படி இங்கிலாந்து அரசாங்கமும் மக்களும் சிறுபான்மை மக்களைப் பாரிய அளவில் கைவிட்டு விட்டோம் என்பதுவே அவரது பேச்சின் சாரம்.

    அதாவது கறுப்பு, ஆசிய, வேற்றின மக்கள் தாங்கள் இந்நாட்டில் வாழும் விகிதாசாரத்தின்படி அரச பதவிகளிலோ அல்லது தனியார் கூட்டுஸ்தாபனங்களின் தலைமைப் பதவிகளிலோ காணப்படவில்லை. இது இங்கிலாந்து நாட்டு அரசினதும், மக்களினதும் தவறான கொள்கை நடைமுறைத்தப்படுத்தலினால் நிகழ்ந்துள்ளது என்பதையே அவர் குறிப்பிட்டார்,

    ஒரு மாதத்திற்கு முன்னால் பிரதமர் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டிருப்பார் என்று நான் கனவில் கூடக் கருதியிருக்க மாட்டேன். அப்படியாயின் ஏன் பிரதமரின் போக்கில் இந்தத் திடீர் மாற்றம் ? இங்கேதான் என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் நான் ஏற்படுத்தும் தொடர்பு. லண்டன் மேயர் தேர்தலில் வெற்றி வாய்ப்பு லேபர் கட்சியின் வேட்பாளராகிய சாடிக் கான் எனும் இஸ்லாமியருக்கு உள்ளது எனும் கருத்து நிலவுகிறது. இந்த வெற்றி வாய்ப்பை நல்கப் போகிறவர்கள் யார் ?

    லண்டன் மாநகரில் பெரும்பான்மையாக வாழும் வேற்றினத்தவர்கள் அல்லவா ? அப்படியாயின் கன்சர்வேடிவ் கட்சி தொடர்ந்தும் மேயர் பதவியைத் தம்முடன் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் இவ்வெற்றின் வாக்காளர்களின் ஆதரவைப் பெற வேண்டியது அவசியமல்லவா ?

    இங்கேதான் பிறக்கிறது பிரதமரின் புதுக் கொள்கைத் திருப்பம். ஆமாம் வேற்றினத்தவர் என்று கருதப்படும் பெரும்பான்மை வாக்காளர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தால்தான் தம்முடைய சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெறும் சந்தர்ப்பம் பெருகும் எனும் காரணமே பிரதமரின் இத்தகைய திடீர் கருத்துப்பதிவுக்கு வழி சமைத்ததோ எனும் எண்ணம் எழுவது இயற்கைதானே !

    அடுத்தொரு மிகப்பாரிய பிரச்சனையைப் பிரதமர் எதிர்கொள்ள வேண்டிய சூழல், அது என்ன அப்படியான சூழல் ? என்றுதானே கேட்கிறீர்கள்.

    அதுதான் மிகப்பூதாகரமான ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருப்பதா? இல்லையா? என்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பு. பிரதமரின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான தான் பிரதமராகும் பட்சத்தில் இத்தகைய ஒரு சர்வஜன வாக்கெடுப்பை 2017ம் ஆண்டு நிறைவடைவதற்கு நடத்துவது எனும் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குரிய காலக்கெடு நெருங்கியவண்ணம் இருக்கிறது.

    பிரதமரின் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியினுள்ளேயே பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனும் கோஷத்தை முன்வைக்கும் நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க வேண்டும் எனும் பிரதமரின் வாதத்திற்கு ஆதரவாக கன்சர்வேடிவ் கட்சியைத் தவிர்ந்தோர்களிடமும் ஆதரவைக் கோர வேண்டிய காலக்கட்டாயம்.

    தனக்கு ஆதரவாக இங்கிலாந்தின் சிறுபான்மைச் சமூகத்தினரது வாக்கினை பெற்றுக் கொள்வதற்கான ஒரு புத்திசாதுர்யமிக்க கொள்கை மாற்றமே பிரதமரின் சமீபத்திய நடவடிக்கை என்று கூட எண்ணத் தோன்றுகிறது. மனதின் மற்றொரு பக்கத்தில் 2020இல் நடக்கும் தேர்தலில் தான் பிரதமராக வேண்டி நிற்க மாட்டேன் என்று பிரகடனம் செய்த நிலையில் ஒருவேளை தன்னுடைய ஆட்சிக்காலத்தை நினைவுகூரும் வகையில் தான் ஏதாவது ஒரு அதிரடி அரசியல் செய்ய வேண்டும் எனும் எண்ணத்தில் தார்மீகமாக அத்தகைய ஒரு நிலைப்பாட்டை அவர் எடுத்திருக்கலாம் என்று எண்ணத் தலைப்படுகிறது.

    எதி எப்படி இருப்பினும் பிரதமரின் இடத்துக்கு வர முயற்சிக்கும் ஏனைய கன்சர்வேடிவ் கட்சி முன்னணி அரசியல்வாதிகள் பிரதமர் அவர்கள் முன்னால் தூக்கிப் போட்ட சவாலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்ப்போமே !

    அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா !

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இப்படிக்கு இது கடவுள் மொழி…

    கவிஜி
    சட்டென தலை இழுத்துக்
    கொண்ட பெரு
    மழைக்குள் உன் துளிகள் அமிலம்..

    யாருமற்ற வெளிக்குள்
    வேகம் குறைத்திட்ட நீ
    நிற்க மட்டுமில்லை…

    யாவரும் நலமாகிட துடிக்கும்
    சிறகுக்குள் சதிராடும்
    தென்றலை
    கொல்வது உன் சுபாவம்…

    மூச்சுக்குள் உன் சிரிப்பு
    முண்டியடிப்பதில்
    முரண்பட்டவனாவதைத் தவிர
    வேறு என்ன செய்ய முடியும்…

    அத்தனை சரிகளையும் ஒரு
    தவறாய் கலைத்து விட்ட
    நீ வரைய வரைய
    அழிந்து கொள்ளும் ஓவியம்…

    காதுக்குள் அசரீரியாய் அணத்தும்
    அற்புதக் குவியல்களுள் உன்
    குரலும் கலப்பதில் நான்
    சாத்தானாவதை நெருங்குகிறேன்…

    இப்படிக்கு இது கடவுள் மொழி…

    கவிஜி

    Share
  • பஜ கோவிந்தம்…. (படிக்க … கேட்க)

    ”பஜ கோவிந்தம்’’ படிக்க….கேட்க ரங்கனாதன்(கிரிடிரேடிங்) குரலில் இணைப்பு….

     

    11

    பஜ கோவிந்தம்….
    —————————–

    சாவிந்த மேனியை சந்திக்கும் வேளையில்
    காபந்து செய்யுமோ கற்றகல்வி -கோவிந்த
    நாமத்தில் மூட நினைவே நிலைத்திரு
    ஷேமத்தில் சேர்க்கும்மச் சொல்….(1)

    வெல்வாய்ஓ மூடா செல்வம்சேர் வேட்கையை
    கொள்வாய் அதன்மாற்றாம் கொள்கையாய் -வல்லான்
    விதித்த தொழில்செய்து வந்த பொருளை
    மதித்து மனதுள் மகிழ்….(2)

    வேறு
    ——-

    சொல்கோவிந்தம் சொல்கோவிந்தம்
    சொல்கோவிந்தம் புல்மனமே
    வல்லான் காலன் வருகின்ற நேரம்
    தொல்காப்பியமா துணையாகும்….?….(3)

    வெல்வாய் மூடா செல்வம்சேர்க்கும்
    வேட்கை அதற்கு மாறாக
    ஈசன் விதித்த இயல்பாம் தொழில்சேர்
    காசுபணம் கொள் சீராக….(4)

    காமினி கொண்ட கவர்ச்சிகள் மாயை
    மாமிசம் ரத்தம் இளக்காரம்
    நாமினி வாழ்வோம் நல்லோர் சேர்க்கையில்
    தூமணி மாட விளக்காக….(5)

    தாமரை இலைமேல் தத்தளிக்கும் நீராய்
    நாமுறை வாழ்க்கை நித்யமல்ல பாராய்
    பாமரப் பற்றும் பிறவிப் பிணியும்
    சாமரம் வீசும் சண்ட மாருதம்….(6)

    கூட்டினுள் மூச்சு குடியுள்ள வரையில்
    வீட்டினர் கேட்டு விசாரிப்பர்
    மாட்டிய மேனி மண்விழத் தாலி
    பூட்டிய மனையாள் பயமுறுவள்….(7)

    பிள்ளையில் ஆட்டம் பருவத்தில் நாட்டம்
    கொள்ளை அழகு கன்னியர் கூட்டம்
    வெள்ளையில் சொள்ளையில் வாட்டமாய் மூட்டம்
    உள்ளிறை தொட்டதில்
    எவர்கிங்கு தேட்டம்….(8)

    சோதரா சிந்திப்பாய் சீதனமாய் வந்த
    மாதரசி மகன் யாரென்று
    பூதலம் விசித்ரம் யாதுந்தன் சரித்ரம்
    ஆதலால் ஆய்ந்து அதைத்தீர் நீயின்று….(9)

    கற்றோர் சேர்க்கை பற்றினைப் போக்கும்
    பற்றது போக பரம வைராக்யம்
    உற்றிடும் அறிவால் மற்றவை பூஜ்யம்
    பெற்றிடுவாய் நீ மோட்ச சாம்ராஜ்யம்….(10)

    தேய்ந்தபின் தேகம் காமுறலாமோ
    காய்ந்திடும் குட்டைக்கு காகம் வருமோ
    பாய்ந்திடும் சுற்றம் பணமுள்ள வரையில்
    ஆய்ந்திடத் தத்துவம் சேர்க்கும்அக் கரையில்….(11)

    ஆள்படை செல்வம் இளமையின் கர்வம்
    தூள்படும் இமைக்கும் காலத்தில் சர்வம்
    நாள்பட அனைத்தும் மாயைஎன்(று) உணர்ந்து
    தாள்கிட தெய்வத தத்துவம் நினைந்து….(12)

    திடமாய் பொருள்சேர் உடலுள்ள வரையில்
    கடல்போல் கூட்டம் அலைமோதும்
    முடமாய் மூப்பில் ஜடமானவர்க்கோ
    அடடா கூறிட ஆளேது….(13)….கிரேசி மோகன்….

    Share
  • ஐரோப்பிய ஆசியக் கடல் மார்க்கத்தைச் சுருக்கும் சூயஸ் கால்வாய்

    சூயஸ் கால்வாய்

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

     

    பிரமிடுகள் எழுப்பிய காலத்துக்குக் கால்வாய்

    பெரோஸ், பெர்ஸியர் தோண்டிய கால்வாய்

    கிரேக்கர், ரோமர் முன்பு கைவிட்ட கால்வாய்

    இந்தியா செல்ல நெப்போலியன் திட்ட மிட்டது

    பூர்த்தி செய்தார் பிரென்ச் பொறியியல் நிபுணர்.

    நீர் மார்க்க, கடல்மட்ட சூயஸ் கால்வாய்.

    +++++++++++

    Bridge on Suez canal

    [The Suez Canal (1854-1869)]

    முன்னுரை: கி.மு.2650 ஆண்டு முதலே எகிப்தின் வல்லமை படைத்த கல் தச்சர்கள் பிரமிடுகள் [Pyramids] மற்றும் பலவித பிரம்மாண்டமான சிற்பப் பொறியியல் அற்புதங்களைப் படைத்ததற்குச் சான்றுகள் இப்போதும் அங்கே உள்ளன! நைல் நதியின் மேற்குக் கரையில் கட்டப்பட்ட பிரமிக்கத் தக்க பிரமிடுகள், இறந்தவரைப் புதைக்க அமைத்த கற்கோபுரங்கள்! நாற்புறச் சம சாய்வுக் கோண வடிவான பிரமிடுகள் கல் தச்சர்களின் வடிவியற் கணித ஞானத்தையும் [Geometrical Mathematics], கூரிய நிபுணத்துவத்தையும் காட்டுகின்றன. சிற்பக் கலையும், ஓவியக் கலையும் உன்னத நிலையில் இருந்ததற்கு எகிப்தின் பிரமிட் கோபுரங்கள், கால வெள்ளம் அடித்துச் செல்லாதபடி நிலைத்த சரிதைகளாய் நிமிர்ந்து நிற்கின்றன! ஆனால் பெரோ மன்னர்கள் முதலில் தோண்டிய கடல் இணைப்புக் கால்வாய் பலமுறைச் சிதைந்து, பல்வேறு வல்லுநர்களால் பலவித வடிவங்களில் பலமுறை மாற்றமாகி இப்போது புது உருவம் பெற்றுள்ளது!

    Pyramid, Suez & Egypt

    பிரமிட், சூயல் & பூர்வீக எகிப்து

    முதல் கால்வாய் மூன்றாம் துத்மோஸிஸ் [Tuthmosis III] மன்னரால் தோண்டப் பட்டாலும், கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஆண்ட மன்னன் பெரோ நெக்கோ [Pharaoh Necho] கட்டியதாகத்தான் சரித்திரச் சான்றுகள் கிடைத்துள்ளன. பின்னால் எகிப்தைக் கைப்பற்றிய பெர்ஸிய மன்னன் முதலாம் தாரியஸ் [Darius I] வெட்டப்பட்ட கால்வாயை முடிக்குமாறு உத்தரவிட்டதாக அறியப்படுகிறது. அந்தக் காலத்தில் கட்டிய கால்வாய், இரட்டை அமைப்பாடுகளைக் கொண்டது. முதலாவது, பெரிய பிட்டர் ஏரியை [Bitter Lake] சூயஸ் வளைகுடாவுடன் இணைத்தது; இரண்டாவது கட்டத்தில் பிட்டர் ஏரியை நீள நைல் நதிச் சங்கமப் பிரிவுகள் ஒன்றுடன் சேர்ப்பது. கால்வாயைக் கட்டும் பணியில் சுமார் 120,000 எகிப்திய பாமரர் மாண்டதாக அறியப்படுகிறது! புகழ்பெற்ற டாலமி காலத்தில் [Ptolemaic Era (323-30 B.C.)] கால்வாய் நீளமாக்கப்பட்டுச் சீரிய முறையில் இருந்ததாக வரலாறுகளில் உள்ளது. அதன் பின்னால் கால்வாய் சிதைவுற்றதை ரோமாபுரிப் பேரரசர் டிராஜன் [Roman Emperor Trajan (A.D.98-117)] சீர்ப்படுத்தினார்! பிறகு அரேபிய மன்னர் அமர் இபன்-அல்-ஆஸ் [Amr Ibn-Al-Aas] கால்வாயைச் செம்மைப் படுத்தினார்.

    எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு கால்வாய் மறுபடியும் செப்பமிட முடியாத நிலையில் சிதைந்து கிடந்தது! 1671 இல் புகழ்பெற்ற ஜெர்மன் கணித மேதை லெப்னிட்ஸ் [Leibnitz (1646-1716)] தனது எகிப்து விஜயத் திட்டத்தின் போது, பிரென்ச் மன்னர் பதினான்காம் லூயியிடம் [Louis XIV] கடல்களை இணைக்கும் அத்தகைய கால்வாயைப் பற்றி உரையாடியதாகத் தெரிகிறது. தற்போதைய கால்வாய் முயற்சியில் சுல்தான் மூன்றாம் முஸ்தபா [Sultan Mustafa III (1757-1773)], அடுத்து நெப்போலியன் ஆரம்பிக்க தள ஆய்வு வேலைகள் ஆரம்பமாயின. அவ்வாறு எகிப்து நாகரீகத்தில் பிறந்து, பல மன்னர்களின் வசப்பட்ட ஒரு பண்டைக் கால்வாய், பல்லாயிரம் ஆண்டுகள் தாண்டி கி.பி.1869 ஆம் ஆண்டில் பிரென்ச் நிபுணர்களால் புத்துயிர் பெற்றுப் பூர்த்தியானது ஒரு சுவையானப் பொறியியல் வரலாறு!

    Location in Egypt

    நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தித் தோன்றிய கால்வாய்!

    கி.மு.1920 ஆண்டில் எகிப்து பெரோஸ் மன்னர்கள் [Pharaos] காலத்திலே மத்தியதரைக் கடலையும், செங்கடலையும் கால்வாய் மூலம் இணைக்கும் முன்னோடிப் பணிகள் முதலில் ஆரம்பிக்கப் பட்டன என்று எகிப்து சூயஸ் கால்வாய்ப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் மம்தோவ் ஹம்ஸா [Dr.Mamdouh Hamza] அறிவிக்கிறார். டாக்டர் ஹம்ஸா நிலவியல் யந்திரப் பொறியியல் நிபுணர் [Civil Engineer, Soil Mechanics]. நீள நைல் நதியின் கடல் சங்கமப் பகுதியில் ஒரு கால்வாயை வெட்டி, இரண்டு கடல்களையும் சேர்த்ததாக வரலாறுகளில் அறியப் படுகிறது. முற்காலத்தில் ஈரோப்பிலிருந்து இந்தியாவுக்கு வர நைல் நதியின் வழியாகக் கப்பல்கள் முதலில் பயணம் செய்து, கால்வாய் மூலமாகக் கடலை அடைந்ததாகத் தெரிகிறது. அதன் பின்பு கால்வாய் கவனிப்பாரற்று அடுத்து கிரேக்க, ரோமாபுரி வேந்தர்களால் பல தடவைத் தோண்டப் பட்டு மீண்டும் புறக்கணிக்கப் பட்டது! எகிப்து நாடு அரேபியர் கைவசம் ஆன பிறகு, மறுபடியும் கால்வாய் தோண்டப்பட்டு, நிரப்பப் படாமல் பல்லாண்டுகள் கிடந்தது! பின்னால் கால்வாயில் நீர் நிரப்ப பட்டது.

    Countries along the Suez

     

    இந்தியாவுக்கும் ஈரோப்பிற்கும் எகிப்து கால்வாய் வழியாக சுருக்குப் பாதை அமைக்க முதன்முதல் ஆலோசனை கூறியவர் பிரென்ச் அதிபதி நெப்போலியன்! நூறு மைல் நீளம், 200 அடி அகலமுள்ள சூயஸ் கால்வாய், ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில், மனிதரால் படைக்கப்பட்ட மகத்தான ஒரு பொறியியல் பூதக் கால்வாயாகக் கருதப்படுகிறது! அந்த நூறு மைல்களைக் கடக்க ஒரு கப்பலுக்குச் சுமார் 15 மணி நேரம் எடுக்கிறது. பத்தாண்டுகளாக 2.4 மில்லியன் பணியாளிகள் அல்லும் பகலும் பணி செய்து, கட்டிய கடற்பாதை அது! கால்வாய் பூரணமாக 125,000 நபர்கள் உயிரைப் பலி கொடுத்துள்ளதாக அறியப் படுகிறது! டோக்கியோ, ராட்டர்டாம் [ஹாலந்து] கடற் பயண தூரத்தை 23% சதவீதம் சூயஸ் கால்வாய் குறைக்கிறது! செளதி அரேபியா துறைமுகம் ஜெட்டாவிலிருந்து [Jeddah], கருங்கடல் துறைமுகம் கான்ஸ்டென்ஸாவுக்குச் [Constanza] செல்லும் கப்பல், சூயல் மூலமாகச் சென்றால் 86% தூரத்தைத் தவிர்க்கிறது! அதுபோல் ஆஃபிரிக்கா முனை வழியாகக் கப்பல் லண்டனிலிருந்து பம்பாயிக்குச் சென்றால் 12,400 மைல்! ஆனால் சூயஸ் கால்வாய் வழியாகச் சென்றால் லண்டன், பம்பாய் கடல் தூரம்: 7270 மைலாகச் சுருங்குகிறது.

    ஐரோப்பியர் கால்வாய் கட்டச் செய்த பெருமுயற்சிகள்

    1798 இல் நெப்போலியன் இரண்டு கடல்களையும் நேரடியாகக் கடல்மட்டத்தில் இணைக்கத் திட்டங்கள் தயாரிக்க உத்தர விட்டார். அவரது சிவில் எஞ்சினியர் லெப்பியர் [LePere] 1799 இல் தளமட்ட அளவுகள் எடுத்துச் செங்கடல், மத்தியதரைக் கடலை விட 33 அடி அதிக உயரத்தில் இருப்பதாகத் தவறாகக் கணக்கிட்டுக் கால்வாயை வெட்டினால் செங்கடல் வெள்ளம் பல நகர்களை மூழ்க்கிவிடும் என்று எச்சரிக்கை செய்தார்! பிரென்ச் கால்வாய் சிறப்புநராகப் பெயர் பெற்ற, ஃபெர்டினென்ட் தி லெஸ்ஸெப்ஸ் [Ferdinand de Lesseps] 1831-1838 ஆண்டுகளில் இளவயதில் எகிப்து வந்த போது அந்த தளமட்ட மதிப்பீடு பிழையானது என்று நிரூபிக்கப் பட்டது. 1854 இல் கால்வாய்த் திட்டம் தயாரித்த லெஸ்ஸெப்ஸே, அதைக் கட்டி முடிக்கும் பணிக்கு பிரதம அதிபதியாக நியமனம் ஆனார்.

    Suez canal -3

    அதே சமயத்தில் முகமது சையத் இஸ்மெயில் பாஷா எகிப்தை ஆள வந்த போதுதான் [1854-1863], அவரது அனுமதியில் பிரென்ச் கம்பெனியின் ஆரம்ப முயற்சி வெற்றி யடைந்தது. 1858 இல் பிரென்ச் சூயஸ் கால்வாய் மாரிடைம் கம்பெனி [Universal Maritime Company of Suez Canal] துவக்க மானது. அந்தக் கம்பெனி எகிப்திடம் செய்த ஒப்பந்தப்படி கால்வாயைக் கட்டும் பொறுப்பு, பராமரித்து இயக்கி வரும் உரிமை 99 ஆண்டுகளுக்குப் பிரான்சைச் சார்ந்தது. அந்தக் கால வரையறைக்குப் பின்பு கால்வாயின் உரிமையை 1957 ஆம் ஆண்டில் எகிப்து அரசிடம் பிரான்ஸ் ஒப்படைக்க வேண்டும்.

    1859 ஏப்ரல் 25 ஆம் தேதி தோண்டல் பணிகள் ஆரம்பமாகி, முதலில் 20,000 எகிப்தியர்கள் வேலை செய்தனர். மொத்தம் பணி செய்த 2,400,000 பேர்களில் 125,000 நபர்கள் கால்வாய் வேலைகளில் உயிரிழந்ததாக அறியப்படுகிறது! நூறு மைல் நீளமுள்ள கால்வாய் [மேல்மட்ட அகலம்: 195 அடி, கீழ்மட்ட அகலம்: 75 அடி, ஆழம்: 30 அடி] உருவாகி, 1869 நவம்பர் 17 ஆம் தேதி துவக்கவிழா கொண்டாடப் பட்டது. பிரிட்டன் 1875 ஆம் ஆண்டில் எகிப்தின் 50% ஸ்டாக்குகளை வாங்கி, சூயஸ் கால்வாய் உரிமையில் பங்கேற்றது. 1936 இல் பிரிட்டன் ஓர் உடன்படிக்கையை எழுதித் தனது இராணுவப் படை ஒன்றைக் கால்வாய் அரங்கில் நிரந்தரமாக வைக்க அனுமதி பெற்றது.

    The Routes around Africa

    கால்வாய்த் திட்டம் ஆய்வில் இருந்த 1854 ஆண்டுகளில், பிரிட்டன் கட்டும் திட்டத்திற்கு முதலில் எதிர்ப்பைத் தெரிவித்தது. ஆனால் 1875 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கம் 4 மில்லியன் பவுன் அளித்து பெரும்பான்மையான 176,600 பங்குகளை [50%] வாங்கி, சூயஸ் கால்வாய் உரிமையில் மிக்க அதிகாரம் பெற்றது! 1936 இல் செய்த உடன்படிக்கையில் எகிப்து தனித்து விடப்பட்டு, பிரிட்டன் சூயஸ் கால்வாய்க் காப்பு உரிமையை முழுமையாகப் பெற்றுக் கொண்டது! ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டன் சூயஸ் கால்வாய் அரங்கை விட்டு வெளியேற வேண்டும் என்று எகிப்து அதிகாரம் செய்தது! 1951 இல் எகிப்து அரசு 1936 இல் செய்த உடன்படிக்கையை எதிர்த்ததால், உள்நாட்டில் பிரிட்டிஷ் எதிர்ப்புக் கலவரங்கள் அதிகமாயின!

    Suez canal -4

    சூயஸ் கால்வாயை தேசீய மயமாக்கிய அதிபர் நாசர்

    1952 ஆம் ஆண்டில் எகிப்தின் மன்னர் பெரோக்கைக் [King Farouk] கீழே தள்ளி, ஜெனரல் நாகீப்பை [General Naguib] வெளியேற்றிக் கர்னல் கமால் அப்துல் நாசர் [Gamal Abdel Nasser (1918-1970)] இராணுவக் கைப்பற்றுச் சதியில் [Military Coup] வெற்றி பெற்று எகிப்தின் பிரதம மந்திரி யானார்! 1956 இல் தன்னை எகிப்தின் அதிபர் [President] எனப் பிரகடனம் செய்து கொண்டார்! நீள நைல் நதியில் அஸ்வான் அணைகட்ட, மேலை நாடுகள் பண உதவி அளிக்க மறுத்த போது, எகிப்தின் அதிபர் நாசர், சூயஸ் கால்வாயைத் தேசீய மயமாக்கிப் நிதி திரட்ட விழைந்தார்! 1956 ஜூலை 26 ஆம் தேதி எகிப்து வரலாற்றில் ஒரு முக்கியப் போராட்ட நாள்! அன்றுதான் ‘சூயஸ் புரட்சி ‘ [Suez Crisis] எனப்படும் தேசீயப் போராட்டம் எழுந்தது! ஐரோப்பியர் ஆணைக்குக் கீழ்க் கட்டுப்பட்ட சூயஸ் கால்வாய், அன்றுதான் தேசீய மயமாக்கப்பட்டு எகிப்து நாட்டின் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரப் பட்டது! அப்பெரும் திடார் மாறுதலைச் செய்த எகிப்தின் தீவிர அதிபர், அப்துல் நாசரை ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் வெறுத்தன.

     

     

    1869 இல் கட்டி முடிக்கப்பட்ட சூயஸ் கால்வாய் ‘பிரென்ச் பிரிட்டிஷ் சூயஸ் கால்வாய்க் கம்பெனியின் ‘ [Franco British Suez Canal Co] சொந்தமாக இருந்தது. சூயஸ் கால்வாய் தேசீய மயமாக்கப் பட்டால் இரு நாடுகளும், மற்ற உலக நாடுகளுடன் புரியும் வணிகத் துறைகளில் பெரும் பாதிப்பு நேரும் என்று ஆத்திர மடைந்து பிரான்ஸ், பிரிட்டன் சூயஸ் கால்வாய் இழப்பைத் தடுக்க முயற்சி செய்தன. மூன்று நாடுகள் பிரான்ஸ், பிரிட்டன், இஸ்ரேல் இரகசியமாய்க் கூடிச் சதி செய்து, எகிப்தைத் தாக்கி சூயஸ் கால்வாயைக் கைப்பற்ற வழி வகுத்தன!

    அச்சதியின்படி முதலில் இஸ்ரேல் எகிப்தின் மீது போர் தொடுக்க வேண்டும்! உடனே பிரான்சும், பிரிட்டனும் கால்வாயைக் காத்திட வருவதுபோல், போரின் இடையே எகிப்தில் இராணுவப் படைகளோடு புகுந்து சூயஸ் கால்வாய்ப் பரப்பைக் கைப்பற்ற வேண்டும்! சதியின் விதிப்படி 1956 அக்டோபர் 29 இல் இஸ்ரேல் எகிப்தின் மீது படையெடுத்துத் தாக்கியது! இஸ்ரேலின் பாராட்ரூப்பர்கள் [Paratroopers] விமானத்திலிருந்து கால்வாயிக்கு 25 மைல் தூரத்தில் குதித்துக் கால்வாயை நெருங்கினர்! அடுத்த நாளே பிரென்ச் பிரிட்டிஷ் கூட்டுப் பணிக்குழு ஓர் இறுதி நிபந்தனையை [Ultimatum] இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் வெளியிட்டது! அந்தக் கட்டளை அறிவிப்பின்படி இரு நாடுகளும் போரை உடனே நிறுத்திக் கால்வாயிக்கு 10 மைல் தூரத்தில் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்!

     

    Large Ship

    நிபந்தனைக்குக் கீழ்ப்படியாது எகிப்து நிராகரித்ததும் பிரான்ஸ், பிரிட்டன் இரு நாடுகளுகளும் அதன் மீது நேரடித் தாக்குதலைத் தொடங்கின! அவரது விமானங்கள் எகிப்தின் விமானத் தளங்களின் மீது குண்டுகளை வீசின! உடனே எகிப்து கால்வாயில் இருந்த 40 பிரென்ச், பிரிட்டிஷ் கப்பல்களை மூழ்க்கியது! மத்திய கிழக்காசியாவில் கொந்தளிப்புகள் துவங்கி, மூன்றாம் உலகப்போர் உருவாகப் பயமுறுத்தியது! 1957 மார்ச்சில் ஐக்கிய நாடுகளின் பேரவை கூடிப் போரை நிறுத்தி, உடைந்த கப்பல்களை நீக்க ஒப்புக் கொண்டது! மீண்டும் கால்வாய் திறக்கப் பட்டது! இறுதியில் அமெரிக்காவின் உதவியால், நாசர் சூயஸ் கால்வாய் உரிமையைப் பிரான்ஸ், பிரிட்டனிடமிருந்து பிடுங்கி, எகிப்து நாட்டுக்குச் சொந்த மாக்கினார்.

     

    1967 இல் மறுபடியும் எகிப்துக்கும், இஸ்ரேலுக்கும் போர் மூண்டு ஆறு நாட்கள் நீடித்தது! அந்த பேரழிவுப் போரில் சூயஸ் கால்வாய் மிகவும் பழுதானது! கால்வாய் அருகில் உள்ள மூன்று நகரங்கள் சிதைவுற்றன! கப்பல் போக்குவரத்துத் தடைப்பட்டுக் கால்வாய் எட்டு ஆண்டுகள் மூடப்பட்டது! அடுத்து 1975 ஆம் ஆண்டில்தான் உடைந்து கிடந்த பல கப்பல்கள் நீக்கப்பட்டுக் கால்வாய் மீண்டும் பயணத்துக்குச் செம்மை யாக்கப்பட்டது! ஆயினும் எகிப்து அரசு, கால்வாய் வழியாக இஸ்ரேல் துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்களைத் தடுக்க கட்டுப்பாடுச் சட்டங்களை விதித்தது. இஸ்ரேலின் இராணுவத் தளவாட மில்லாத பளுக்கள் கொண்ட கப்பல்கள் மட்டும், கால்வாய் வழியாகக் கடக்க அனுமதிக்கப் பட்டன. பிறகு 1979 ஆண்டில் எகிப்தும் இஸ்ரேலும் நட்பு உடன்படிக்கை செய்து, கப்பல் போக்குவரத்து நிபந்தனைகள் யாவும் நீக்கப்பட்டன.

    Suez canal -6

    நூறு மைல் நீளத்திலும், குறைந்தது 200 அடி அகலத்திலும் உண்டாக்கப்பட்ட சூயஸ் கால்வாய், மன்ஸாலா, டிம்ஸா, பிட்டர் என்னும் மூன்று ஏரிகளின் [Lakes Manzala, Timsah, Bitter] ஊடே செல்லும்படித் திறமையாக வெட்டப் பட்டிருக்கிறது. பிட்டர் ஏரிகள் மட்டும் 18 மைல் தூரம் நீண்டவை. பெரும்பான்மையான இடைவெளித் தூரங்கள் ஒற்றையடிப் பாதைபோல் ஒரு கப்பல் மட்டும் பயணம் செய்யும் கால்வாயாக அமைக்கப்பட்டு உள்ளது. அவற்றின் இடையே கப்பல்கள் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல விரிவுப் பகுதிகள் [Passing Bays] கட்டப்பட்டுக் கால்வாய் அகன்றதாகவும் இருக்கிறது. அட்லாண்டிக் கடலிலிருந்து விரைவாக இந்து மகாக் கடலை அடைய வசதியாக இருப்பதால், உலக நவீனக் கப்பல்கள் யாவும் சூயஸ் கால்வாயைத் தவறாது பயன்படுத்திக் கொள்கின்றன.

    Cross Sections

    இப்போது அனுதினமும் கால்வாய் மூலம் 50 கப்பல்களும், ஆண்டுக்குச் சராசரி 25,000 கப்பல்களும் கடந்து செல்கின்றன! 1995-1996 ஆண்டில் மட்டும் 444 மில்லியன் டன் வணிகச் சுமைகளைத் தாங்கிய 18,443 கப்பல்களும், 47 மில்லியன் டன் பளு கொண்ட 303 பூத வடிவான கப்பல்களும் கால்வாய் வழியாகப் புகுந்துள்ளன என்று அறியப் படுகின்றது! சூயஸ் கால்வாய் ஒன்றுதான் 1667 அடி நீளம், 233 அடி அகலம், 70 அடி வெளி உயரம் உள்ள [500 மீடர்X70 மீடர்X21 மீடர்] யுத்த விமானங்களை ஏவும் மாபெரும் நவீனப் போர்க் கப்பல்கள் கடந்து செல்லப் பாதை அளித்துள்ளது! கால்வாயைக் கட்டக் கணிக்கப்பட்ட பூர்வீக மதிப்பு 42 மில்லியன் டாலர் [1854 நாணய மதிப்பு]! ஆனால் பத்தாண்டுகளுக்கு பணி வேலைகள் நீடித்ததால், இறுதியில் செலவு இரட்டிப்பாகி 84 மில்லியன் டாலராக ஏறிவிட்டது!

    சூயஸ் கால்வாய் மீது ஜப்பானின் முறுக்கு நாண் பாலம்

    1995 ஆம் ஆண்டில் எகிப்து அரசாங்கம் ஜப்பானுடன் நிதிக்கொடை, கட்டமைப்பு உடன்படிக்கை செய்து ஒரு தொங்கு பாலத்தை சையத் துறைமுகத்துக்கு 30 மைல் தெற்கே சூயஸ் கால்வாய் மீது அமைக்கத் திட்டமிட்டது. ஜப்பான் 60% நிதியும் மீதி 40% நிதியை எகிப்து அரசாங்கமும் பாலம் அமைக்கச் செலவு செய்ய ஒப்புக் கொண்டன. 500 அடி உயரம் உள்ள இரண்டு உறுதியாக்கப் பட்ட காங்கிரீட் கோபுரங்களைக் கொண்டது, தொங்கு பாலம். அவை ஒவ்வொன்றையும் தாங்க 76 நீர்த்தளத் தூண்கள் [Caisson Piers] 100 ஆழத்தில் புதைக்கப் பட்டன.

    Japan & Egypt Presidents

    அப்பாலம் இரண்டு காங்கிரீட் கோபுரங்கள் உச்சி முனையில் முறுக்கு நாண் இறுக்கிப் பிடிக்கும் [Cable Stayed with two Pylons] நீண்ட பாலத் தட்டாக நிறுவகம் ஆனது. முபாரக் சமாதானப் பாலம் [Mubarak Peace Bridge] எனப் பெயர் பெறும் அந்த முறுக்கு நாண் பாலம், உலகத்திலே மிக உயரமான பாலமாகக் கருதப் படுகிறது. கோபுரத் தூண்களின் இடையே கப்பல்கள் புகும் மத்திய அகற்சி 400 மீடர் [Span 1330 அடி]. பாலத் தட்டின் முழு நீளம்: 3500 மீடர் [11300 அடி]. கால்வாய் நீர் மட்டத்திலிருந்து பாலத்தின் உயரம்: 70 மீடர் [230 அடி]. பாலத்தை இருபுறமும் பிணைக்கும் பக்கவாட்டுப் பாதையின் நீளம் 1120 மீடர்.

     

     

    ஜப்பானின் நூதனப் பொறியியல் நுணுக்கத்தில் பாலம் கட்டப் பட்டது. மத்திய தரைக்கடல் பகுதியில் நிலநடுக்க ஆட்டங்கள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதால், பூகம்ப தள ஆட்ட அறிவிப்புச் சாதனங்கள் பாலத்தில் அமைக்கப் பட்டன. பாலம் டிசைன் செய்யப்பட்டுக் கட்டும் சிவில் எஞ்சினியரிங் பணி ஜப்பான் காஜிமா கம்பெனியிடம் [Kajima Consortium] கொடுக்கப் பட்டது. 1000 பேர் பணி யாற்றிய அப்பாலம் 40 மாதங்களில் வெற்றிகரமாகக் கட்டி முடிக்கப் பட்டது. எகிப்தின் அதிபர் ஹாஸ்ஸினி முபாரக் 2001 அக்டோபரில் பாலத்தைத் திறந்து வைத்த போது, ஏராளமான வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வருகை தந்து சிறப்பித்தனர்.

     

    கால்வாய் கரையில் ஜெர்மனியின் சுழல் அகற்சிப் பாலம்

    2001 செப்டம்பர் 12 ஆம் தேதி சூயஸ் கால்வாயில் புதிதாக கட்டப்பட்ட சுழல் அகற்சிப் பாலத்தில் [Swing Span Bridge] 34 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முதல் ஓர் இரயில் தொடர்வண்டி பயிற்சியின் பொருட்டு கடந்து செல்ல ஏற்பாடு செய்யப் பட்டது. அதன் பெயர் ‘எல் ஃபெர்டான் சுழற்பாலம் ‘ [El Ferdan Swing Bridge]. நவம்பர் 14 ஆம் தேதி எகிப்தின் அதிபதி ஹாஸ்ஸினி முபாரக் திறந்து வைத்தார். பாதி நீளத்தில் கட்டி யிருந்த முந்தய பாலம், 1967 இல் நிகழ்ந்த அரேபிய-இஸ்ரேல் போராட்டத்தில் தகர்ந்து போனது! இரட்டை நெம்புக் கரங்கள் கொண்ட அந்த சுழற்பாலம் [Double Swing Cantilever Bridge] ஐந்தாவது முறையாக ஆக்கப் பட்ட பாலம். கால்வாயின் முதற்பாலம் முதல் உலகப் போரின் சமயத்தில் [1914-1918] உருவானது. தாங்கும் தூண்களின் முனைக்கு இடையில் உள்ள அகற்சி [Span Between Pivot Piers] 340 மீடர் [1130 அடி]. சுழற் தட்டுகளின் மொத்த நீளம்: 640 மீடர் [2130 அடி].

     

     

    1997 மே மாதம் கட்ட ஆரம்பிக்கப் பட்ட பாலம், 2001 அக்டோபரில் முடிக்கப் பட்டது. ஜெர்மன், பெல்ஜிய எஞ்சினியர்கள் கட்டி முடித்த சுழற்பாலத்தை டிசைன் செய்தவர், எகிப்து தேசிய இரயில் துறையின் ஆலோசனைக் குழுவினர், ஹால்குரோ [Halcrow Engineering Group]. 13,200 டன் பளு உள்ள பூத வடிவான சுழற்பாலத்தின் கரங்கள் இருபுறமும் திரும்பி நீளும் இரும்புச் சட்டத் தட்டுகள் காண்பதற்கு விந்தை ஊட்டுபவை!

    சூயஸ் கால்வாயில் செய்த பிற்காலச் செம்மைப்பாடுகள்

    2001 அக்டோபரில் சூயஸ் கால்வாயின் மீது, முக்கிய நிலப்பகுதியைச் சினாயுடன் [Main Land Link to Sinai] இணைக்கும் 11300 அடி [3500 மீடர்] நீளம் கொண்ட பொறியியல் நூதனமான ‘முபாரக் பாலம் ‘ எனப்படும் ‘முறுக்கு நாண் பாலம் ‘ [Cable Stayed Bridge] ஒன்றை ஜப்பான் எகிப்துக்குக் கட்டி முடித்தது. அதே ஆண்டு நவம்பரில் ஜெர்மன் நிபுணர்கள் உலகிலே மிக நீண்ட சுழற்பாலம் [Swing Bridge (150m-340m-150m)] ஒன்றை இரயில் பாதைக்காக சூயஸ் கால்வாய் மீது இயங்க, கால்வாய்க் கரையில் கட்டினார்கள்.

    President Hossini Mubarak

    1997 ஆண்டு திட்டப்படி கால்வாயில் நூறடி ஆழச் சகதியைச் சுத்தம் செய்யும் ஆற்றலுடைய உலகிலே பெரிய இரண்டு கால்வாய்க் கழுவிப் படகுகளை [Dredgers] எகிப்து வாங்கியது. அவற்றுடன் 800 H.P. [Horse Power] கடற்தள ரயில்கள் [Maritime Locomotives] இரண்டும், வித விதமான வடிவமும், ஆற்றலும் உடைய மோட்டார் படகுகள் [Motorboats] ஒன்பதும் வாங்கப் பட்டன.

    தேசீய மயமாகி 40 ஆவது பூர்த்தி ஆண்டில் [1996] சூயஸ் கால்வாய் பல முறைகளில் புதுப்பிக்கப் பட்டது. கால்வாயின் நீளம் 173 கி.மீடரிலிருந்து 195 கி.மீடராக [104 மைல் ->117 மைல்] அதிகமாக்கப் பட்டது. அகலம் 110 மீடரிலிருந்து 190 மீடராக [367 அடி ->630 அடி] மிகையாக்கப் பட்டது. அனுதின வருவாய் 90,000 டாலரிலிருந்து 5.3 மில்லியன் டாலராக ஊதியுள்ளது! நாற்பது ஆண்டு மொத்த வருமானம் 30 பில்லியன் டாலராகப் பெருத்துள்ளது!

    Japan Bridge under Construction

    கால்வாய் வழியாகக் கடக்கும் கப்பலின் சுமை 90,000 டன்னிலிருந்து, நாற்பது ஆண்டுகளில் 1 மில்லியன் டன்னாக மிகுந்துள்ளது! தரணியின் 14% வணிகப் பண்டங்கள், 26% கச்சாஆயில் ஏற்றுமதி, அரேபிய வளைகுடாத் துறைமுகங்களை அடையும் 41% சுமைகள் சூயஸ் வழியாகவே கடந்து செல்கின்றன.

    சூயஸ் கால்வாய் இட அமைப்பு வணிகத்தள முக்கியம் பெற்றுக் கிழக்கு, மேற்கு தேசங்களுக்கு குறுக்குப் பாதை அளிக்கிறது. உலக வணிகப் போக்குகள் புகுந்து சென்று நிதிவளம் பெருக, ஆண்டு முழுவதும் தகுந்த கடற் பாதை ஆகிவிட்டது, சூயஸ் கால்வாய்!

    Port Said in Suez Canal

    Port Said

    தகவல்:

    1. History of The Construction of the Suez Canal By: Professor Dr. Mamdouh Hamza

    2. The Inaugration of the Suez Canal Nov 17, 1869 [1996 Report]

    3. History of Suez Canal The Virginian-Pilot [Feb 23, 2003]

    4. The 1956 Suez Crisis

    5. Mubarak Peace Bridge Inaugration By: Egypt Economics [Oct 10, 2001]

    6. The Suez Canal Achievements [1996-1997 Plan]

    7. President Mubarak of Egypt Opens The World ‘s Longest Swing Span Bridge [Nov 2001]

    8. National Geographic The Builders -Marvels of Engineering (1992)

    9. http://www.britannica.com/topic/Suez-Canal

    10. https://en.wikipedia.org/wiki/Suez_Canal [January 20, 2016]

    ***************************

    Share
  • வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து ..

     

    எம். ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

    images
    வள்ளுவன் தன்னையுலகினுக்கே தந்துவான்புகழ் கொண்டநாடென
    தெள்ளுதமிழ் கொண்டு செப்பிநின்றான் பாரதியும்
    அள்ளவள்ளக் குறையாத அமுதமாம் சுரங்கமென
    வள்ளுவரின் குறளெமக்கு வாய்த்தெல்லோ விருக்கிறது !

    பாவளவில் குறுகிடினும் பாரெல்லாம் பயனுறவே
    நீழ்கருத்தைச் சொல்லியதால் நிமிர்ந்துகுறள் நிற்கிறது
    யார்மனதும் நோகாமல் நல்லதெலாம் சொல்லுவதால்
    பார்முழுக்க உள்ளாரும் பார்க்கின்றார் வள்ளுவத்தை !

    சமயமெலாம் கடந்துநிற்கும் சன்மார்க்க நூலெனவே
    இமயமென இருக்கிறது எங்களது திருக்குறளும்
    சமயமெலாம் கடந்தாலும் தங்களது நூலெனவே
    மனமாரக் கொண்டாடி மதித்திடுவார் திருக்குறளை !

    அறம்பற்றிச் சொன்னாலும் அழகாகச் சொல்கிறது
    உரங்கொண்ட கருத்தெல்லாம் உயிரோட்டம் பெறுகிறது
    வரமாகவந்து நிற்கும் வள்ளுவரின் குறளெமக்கு
    அரணாக நிற்பதனால் அகமகிழ்ந்து நிற்போமே !

    காலத்தால் அழியாத கருத்தனைத்தும் கொண்டதனால்
    ஞாலத்தில் குறளெமக்கு நற்றுணையாய் இருக்கிறது
    சீலத்தைப் புகட்டுவதாய் திருக்குறளே இருப்பதனால்’
    காலத்தைப் புலப்படுத்தும் கண்ணெனவே திகழ்கிறது !

    மொழிபெயர்புப் பலகண்ட முழுமைபெற்ற நூலாக
    தெளிவான கருக்கொண்ட திருக்குறளே திகழ்கிறது
    ஒளிவிளக்காய் என்றும்குறள் உலகினுக்கே இருப்பதனால்
    உயர்பெருமை தமிழுக்கே உரித்தாகி நிற்கிறது !

    குறள்படித்தால் குறையகலும் குறள்படிப்போம் வாருங்கள்
    குறள்படித்தால் குணம்சிறக்கும் குறள்வீட்டில் வைத்திருங்கள்
    அறங்கொண்ட வாழ்வுவர அனைவருமே குறள்கற்போம்
    திறம்கொண்ட குறளொன்றே தீர்வான மருந்தாகும் !

    வள்ளுவத்தை படித்தறியார் வாழ்வதிலே ஏதுபயன்
    தெள்ளுதமிழ் பொக்கிஷமாய் திருக்குறளே இருக்குதன்றோ
    உள்ளமெலாம் திருக்குறளை உட்செலுத்தி வைத்துவிடின்
    வையகத்தில் எல்லோரும் வாழ்வாங்கு வாழ்ந்திடலாம்
    ( உலகத் திருக்குறள் பேரவை – காஞ்சிபுரமாவட்டம் நடத்திய
    கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை 31/01/2016 )

    Share