செண்பக ஜெகதீசன்

 

வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க

சொல்லே ருழவர் பகை.

     -திருக்குறள் -872(பகைத்திறம் தெரிதல்)

 

புதுக் கவிதையில்…

 

பகைத்திறம் தெரிந்துகொள்,

வில்லேருழவராம்

வீரர்தம்

பகையைக் கொண்டாலும்

பாதிப்பு அதிகமில்லை..

 

சொல்லேருழவராம்

கற்றறிந்தோர் பகையை மட்டும்

எக்காரணத்தாலும் ஏற்றிடாதே…!

 

குறும்பாவில்…

 

வீரராம் வில்லேருழவர் பகையைவிடப்

பெரிதும் கொடிது,

சொல்லேருழவராம் அறிவுடையோர் பகை…!

 

மரபுக் கவிதையில்…

 

வில்லேர் உழவராம் வீரர்தமை

     வீணில் பகைத்தல் மிகக்கொடிதே,

எல்லை யில்லாத் துன்பம்வரும்

     எளிதில் மீண்டிட வழியிலையே,

அல்லல் அதனிலும் கூடவரும்

     ஆற்றல் எல்லாம் அழிந்துவிடும்,

சொல்லேர் உழவர் அறிஞரவர்

     சார்ந்த பகைதான் வேண்டாமே…!

 

லிமரைக்கூ…

 

வீரரென்போர் உழுதிடுவர் வில்லால்,

இவர்தம் பகையினும் கொடிது

அறிஞர்பகை, அவருழவு சொல்லால்…!

 

கிராமிய பாணியில்…

 

ஒழவ மதிச்சிடு பகய மறந்திடு

பகச்சிக்காத பகச்சிக்காத

பாக்காமத்தான் பகச்சிக்காத..

 

வில்லால உழுறுவந்தான்

வீரமுள்ள படவீரன்,

அவனநீ பகச்சாலும்

சொல்லால உழுறவுன

பகச்சிக்காத பகச்சிக்காத,

படிச்சவனப் பகச்சிக்காத..

 

அதால

ஒழவ மதிச்சிடு பகய மறந்திடு

பகச்சிக்காத பகச்சிக்காத

பாக்காமத்தான் பகச்சிக்காத…!

 

செண்பக ஜெகதீசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.