க. பாலசுப்பிரமணியன்

ஆரம்ப நிலையில் பள்ளிகளில் குழந்தைகளின் பராமரிப்பு

 education

புதிய சூழ்நிலைகளையும் புதிய உறவுகளையும் சந்திக்கின்ற குழந்தையின் உணர்வுகளைப் பார்த்தோம். இந்தப் புதிய சூழ்நிலைக்குத் தன்னைக் கொண்டுவிடும் தாயோ அல்லது மற்ற உறவினர்களைக் காணும் குழந்தையின் மனதில் இவர்கள் நம்மை விட்டு நீங்கி விடுவார்களோ அல்லது இந்த உறவு தற்காலிகமாக மறைந்துவிடுமோ என்ற பயம் ஏற்படுகின்றது.

பள்ளியின் உள்ளே நுழைந்ததும் இதுவரை தனக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றிக் கேட்கும் பொழுது அது ஒரு புதிராகவோ அல்லது தன்னம்பிக்கையைத் தாக்குவதாகவோ தோன்றுகிறது. அந்த விஷயங்களை தன்னோடு இருப்பவர்கள் வேகமாக கற்றுக்க கொள்ளும் பொழுது தன்னுடைய குறைபாட்டை வெளிப்படுத்துவதாகவோ அல்லது தனது இயலாமைக்கு ஒரு வெளிச்சமாகவோ தெரிகின்றது. எனவே இங்கே நாம் மீண்டும் வரலாமா வேண்டாமா என்ற ஓர் கேள்விக்குறி மனதில் தோன்றுகின்றது.

இந்த பய உணர்ச்சிகளுக்கு வடிகாலாக அழுகை அமைகின்றது. “அழக்கூடாது” என்று கட்டுப் படுத்தும் ஆசிரியர்கள், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும்பொழுது அந்தக் கட்டுப்பாடு மனதிற்கு உகந்ததாக இருப்பதில்லை.

பள்ளிக்கு வரும்பொழுது ஒரு சீருடை அணிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்ற குழந்தை அதை அநேகமாக விரும்புவதில்லை. கழுத்தில் ஒரு tie, இடுப்பில் பெல்ட், காலில் பாதணிகள், முதுகில் தொங்கும் பை ஆகிவை ஒரு குழந்தையின் சுதந்திரத்திற்கு சவாலாக அமைகின்றன. விருப்பங்களுக்கு மாறாக இருக்கின்ற இந்த செயல்களால் தன்மீதும் பள்ளியின் மீதும் ஒரு விருப்பமற்ற சூழ்நிலை  உருவாகின்றது.

இத்தகைய சூழ்நிலைகளில் வருகின்ற குழந்தையை பள்ளியில் எவ்வாறு கவனத்தோடு உறவாடவேண்டும் என்பது எல்லா ஆசிரியர்களும் புரிந்துகொண்டு செயல் படுத்தவேண்டிய ஒரு விஷயம். மறைமுக முறையிலே அறிவுக் கருத்துக்களை வைத்தல் அவசியம். ஆடல், பாடல், விளையாட்டு மூலமாக  தன்னம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும். இதுவே கற்றலுக்கான அடிப்படையாக அமைகிறது.

மேலைநாடுகளில் பள்ளிக்கு முதல் நாள் வருகின்ற குழந்தைக்கு ஒரு மிகப் பெரிய விழாவே காத்திருக்கும். ஏதோ ஒரு மகிழ்ச்சியான இடத்திற்கு வருகை தருவது போல் இருக்கும். எவ்வாறு ஒரு குழந்தை ஒரு உயிரியல் பூங்காவில் வேடிக்கை பார்க்கச் செல்கின்றதோ அவ்வாறே ஒரு மனநிலை இருக்கும். பள்ளிகள் இந்த கருத்தை மனத்தில் வைத்து செயல் படுத்துதல் அவசியம்.

பள்ளிகளில் ஆரம்ப நிலை ஆசிரியர்கள் இந்த நிலையை உருவாக்க என்ன செய்தல் வேண்டும்?

1. ஆசிரியர்களின் உடல் மொழி

ஆசிரியர்களின் உடல் மொழி அன்பும் கருணையும் கனிவும் உள்ளதாக இருத்தல் மிக அவசியம். பல நேரங்களில் ஆசிரியர்களின் உடல் மொழிகள் நல்ல உறவை ஏற்படுத்தவோ அல்லது இருக்கின்ற நல்ல உறவை தடுமாற வைக்கவோ காரணமாக இருக்கின்றன. கனிவுள்ள பார்வை, இதமான சொற்கள், முகத்தில் புன்சிரிப்பு , நெருங்கிய உறவாடல், சமநிலையுடன் உறவாடல், கோபமின்மை, அமைதி, விளையாட்டுத்தன்மை, எப்போதும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகம் .. இன்னும் எவ்வளவோ..!!

2. ஆசிரியர்களின் பேச்சுத் திறன்கள்..

குழந்தைகளுடன் பேசும் பொழுது அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில், அவர்கள் புரிந்து கொள்ளும் மொழியில், பக்கம் இருந்து, அன்பான வார்த்தைகளால் பேசவேண்டும். ஆசிரியர்களின் பேச்சுக்களும் உடல் மொழியும் குழந்தைகளால் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டவுடன் குழந்தைகள் அதற்குத் தக்கவாறு நடந்து கொள்கின்றன.

பல ஆண்டுகளக்கு முன்னால் ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சி.– U K G வகுப்பில் படிக்கின்ற ஒரு குழந்தையை இழுத்துக்கொண்டு ஓர் ஆசிரியை பள்ளி முதல்வரின் அறைக்குள் நுழைந்து குழந்தையைப் பற்றி வசைமாரி பொழிந்து கொண்டிருந்தார். ” நீங்கள் உடனே இந்தக் குழந்தையை பள்ளியிலிருந்து நீக்கி விடவேண்டும். இல்லாவிட்டால் மற்ற குழந்தைகள் கெட்டுப்போய் விடுவார்கள் ” என்று சொன்னார்.

முதல்வர் ஆசிரியையிடம் “என்னம்மா நடந்தது ” என்று வினவ.. “இவள் என் கன்னத்தில் அறைந்து விட்டாள் ” என்று கோபத்தில்  சொன்னார். அங்கே அமர்ந்திருந்த எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. முதல்வரின் சொல்கேட்டு அந்த ஆசிரியை அந்தப் பெண் குழந்தையை அந்த அறையிலேயே விட்டுச் சென்றார். சிறிது நேரம் கழித்து அந்தக் குழந்தை அருகில் சென்று நான் “உன் பெயர் என்னம்மா” என்று கேட்க அன்போடு அவள் தன் பெயரைச் சொன்னாள். ” ஏம்மா உங்க டீச்சரைக் கன்னத்தில் அடிச்சே? ” என்று கேட்க “சார், அவங்க பொய் சொல்றாங்க..முதல்ல அவங்கதான் என் கன்னத்தில் அடிச்சாங்க.. அப்புறம்தான் நான் அவங்க கன்னத்தில் அடித்தேன்.”  என்றாள்.

குழந்தையிடம் அருகே சென்று அமர்ந்து அந்த ஆசிரியை ஏதோ கேட்க, பதில் தெரியாத குழந்தையை ஆசிரியை கன்னத்தில் அடிக்க.. அந்தக் குழந்தை அதையே திருப்பிச்செய்ய.. ” இது ஒரு இனிய நாடகம்.. நியூட்டனின் மூன்றாம் விதி….. செயலுக்கு எதிர் மறைச்செயல்

குழந்தைகளின் உடலும் உள்ளமும் புண்ணாகாத வண்ணம் உறவாடுதல் ஒரு கலை… திறன்.. ஆசிரியர்களும் பெற்றோர்களும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு இனிய கற்றல்.!

தொடருவோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.