Month: August 2016

  • ஆடுபுலி ஆட்டம்

    பவள சங்கரி

    தலையங்கம்

    துணை ஆளுநராக இருக்கும் உர்ஜித் பட்டேல் அவர்கள் தற்போதைய ஆளுநர் ரகுராம் ராஜன் அவர்களைத் தொடர்ந்து ஆளுநராகப் பதவியேற்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன் 10 உதவி ஆளுநர்கள் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 52 வயதான பட்டேல் அவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள். ஒருவருக்கு பதவிப் பொறுப்புகள் கொடுக்கும்போது அதிகப்படியான ஆண்டுகள் பொறுப்புகள் கொடுத்தால் அவர்களுடைய பணியை மேலும் சிறப்பாகச் செயல்பட வாய்ப்பளிக்கும். குறுகிய காலங்களில் புதிய பொறுப்புகளில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு பொருளாதாரத்தை நிலைப்படுத்த போதிய காலஅவகாசம் இருக்காது. எனினும் இந்நிலையிலும் இவர்தம் ஆளுமையில் இந்தியப் பொருளாதாரமும் சிறப்புப் பெறும் என்று நம்புவோம்.

    மக்களவையிலும் மாநிலங்கள் அவையிலும் ஜி.எஸ்.டி மாற்றத்திற்கான அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இனி இந்த சட்டத்தை 11 மாநிலங்களில் உள்ள சட்ட மன்றங்கள் அங்கீகரித்தால் போதுமானது. இதற்கான பணிகள் துவக்கப்பட்டுவிட்டன. இனி இது சட்டமாகிவிடும். மத்திய மாநில அரசுகள் இதன் மூலம் கிடைக்கக்கூடிய வருவாயை பிரித்துக்கொள்ளவேண்டியது. இந்தப் புரிந்துணர்வுகளை தமிழ்நாடு மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை. பாராளுமன்றத்திலும், மாநிலங்கள் அவையிலும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளன. மத்திய மாநில அரசுகள் இந்த ஜி.எஸ்.டி மூலம் கிடைக்கக்கூடிய வருவாயைப் பிரித்துக்கொள்வதில்தான் புரிந்துணர்வு ஏற்படுத்திக்கொண்டுள்ளதாக அறியமுடிகிறது. ஆனால் இந்த சட்டத்தால் மக்களுக்கு என்ன பயன் என்று இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. மற்ற நாடுகளில் இந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்பு 6 சதவிகிதம் மட்டுமே உள்ளது. ஆனால் நம் நாட்டில் 18 முதல் 25 சதவிகிதம் வரை வரிவிதிப்பு இருக்கும் என்று அறியமுடிகிறது.

    பெட்ரோலியப் பொருட்களுக்கு இந்த ஒருமுனை வரிவிதிப்பு பொருந்துமா? பொருந்தும் என்றால் அது எத்தனை சதவிகிதம் இருக்கும்? தங்கத்திற்கு 1 சதவிகிதம் வரிவிதிப்பிற்கு மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தினர். தங்கம் மற்றும் தங்க ஆபரணங்கள், வெள்ளி மற்றும் அதன் ஆபரணங்கள், வைர ஆபரணங்கள் போன்றவற்றிற்கு தனித்தனியான வரிவிதிப்புகள் இருக்குமா? மருத்துவத்திற்குப் பயன்படுத்தக்கூடிய வெள்ளிக்கு வரிவிதிப்பு அளிக்கப்படுமா? மிக அதிகபட்ச வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய பருத்தி, நூல் மற்றும் ஆடை தயாரிப்பிற்கு எத்தனை சதவிகித வரிவிதிப்பு இருக்கும்? சிட்டா நூலுக்கு வரிவிலக்கு தொடருமா? போக்குவரத்துத் துறை இந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்பிற்கு உட்படுத்தப்படுமா? நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ வரிவிதிப்பினால் இவ்விரு துறைகளும் அழியும் அபாயத்தில் உள்ளன. ஆடுபுலி ஆட்டத்தில் உள்ளதுபோல் அரசு புலியாகவும், பொது மக்கள் ஆடுகளாகவும் உள்ளனர். தெளிவற்ற சிந்தனைகளே இருப்பதாகத் தெளிவாகத் தெரிகிறது. ஒரு சட்டம் கொண்டு வருவதற்கு முன்பே இச்சட்டத்தைப் பற்றிய தெளிவானக் கருத்துகள் மக்கள் மன்றத்தில் ஏன் வைக்கப்படவில்லை? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதைப்பற்றிய விளக்கங்களைப் பெறமுடியுமா? இதுபோன்ற எண்ணற்ற வினாக்கள் மக்கள் மனதில் உள்ளன.

    Share
  • ’’குமார சம்பவம்’’

    கிரேசி மோகன்
    ————————————–

    சஞ்சாரி நாரதர், சக்களத்தி அற்றவளாய்
    பஞ்சாப கேசனுடல் பாகியாய் -பெஞ்சாதி
    பார்வதியென்(று) ஆக்கும் பனிமலை மன்னனே
    பார்விதி என்றார் பலத்து….(49)….

    தும்புருவின் வாக்கில் திளைத்ததில் தந்தையும்
    தம்பருவப் பெண்மணம் தாமதித்தான் -தென்புறும்
    வேறுவாய்த் தீயினுள் வேள்வியவிர் பாகத்தை
    தாரைவார்ப் பாரோ தெரிந்து….(50)….

    வரம்கொட்டும் சாமி வரன்கேட்டுச் சென்றால்
    தரம்பார்த்(து) இகழ்ந்திடுமோ தன்னை -வரையுற்றோன்
    கேட்டு மறுத்துவிட்டால் கேலிப் பொருளாகும்
    பாட்டை நினைத்துவிட்டான் பற்று….(51)….

    அப்பனிடம் கோபித்து அப்பார்வதி தன்னுடலை
    எப்போது தீயில் எரித்தாளோ -அப்போதே
    அத்தனை ஜீவனையும் ஆளும் சிவபிரான்
    பத்தினி பற்றொழித்தார் பார்….(52)….

    கின்னரர், கஸ்த்தூரி, கங்கைக் கரையுயர்ந்து
    விண்ணுறும் தேவமர வெற்பில்முக் -கண்ணரன்
    அஞ்சு புலனாண்டு ஆனைத்தோல் பூண்டுதவம்
    விஞ்சுமெழில் குன்றில் வளர்ப்பு….(53)….

    சரக்கொன்றை சூடி, மரப்பட்டை போர்த்தி
    சிரங்கால் மனோசிலை சாற்றி -விரைப்பூ
    சிலாஜது மேவும் சிறுபாறை குந்தி
    கலாஜடை யோந்தொண்டர் கூட்டு….(54)….

    ஆளை உறையவைக்கும் பாளப் பனியிலரன்
    காளை குளம்புகளால் கீறித்தன் -தோளுயர்த்தி
    கர்வமாய் காட்டெருது கண்கலங்க கத்துதலால்
    சர்வாங்கம் சிங்கம் சிலிர்ப்பு….(55)….

    தானே தவப்பலன் ஆனோன் தனதெட்டில்
    வானோர் விரும்பிடும் வேள்வித்தீ -ஏனோ
    ஸமித்தால் எரியூட்டி செய்த தவத்தின்
    நிமித்தம் சிவன்போக்கு நெஞ்சு….(56)….

    தானாய்ச் சிறந்தவன், வானே வணங்கிடும்
    மூணாம் விழிகொள் முதலையிம -வானே
    பணிந்து தொழுது பணிவிடையைப் பெண்ணை
    அணிந்திடச் சொன்னான் அழைத்து….(57)….

    சஞ்சலம் செய்தாலும் கொஞ்சமும் மாறாத
    நெஞ்சுரம் கொண்டோனே ஞானவான் -பஞ்செனப்
    பார்வதி வந்து பணிவிடை செய்திட
    ஓர்விழித் தீக்கண்ணன் ஒப்பு….(58)….

    கொய்தனள் பூக்களை, செய்தனள் சுத்தமாய்
    மெய்தவன் வீற்றிருக்கும் மேடையை -பெய்தனள்
    தீர்த்தமும் தர்பையும்: நீர்தலையோன் தண்மதி
    தீர்த்ததவள் கொண்ட தவிப்பு….(59)….கிரேசி மோகன்….!

    சர்கம் ஒன்று சுபம்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”தும்பிக்கை தேடுது , தம்பிக்கை கூடுது
    எம்பிக்கை கூப்ப எதுவுமில்லை! -நம்பிக்கை
    அஞ்சறிவு(யானை) கொண்டாற்போல், ஆறறிவு(நாம்) கண்மூட,
    அஞ்சலென்(று) ஆறு(யமுனா) அணைப்பு’’….!கிரேசி மோகன்….!

    Share
  • பிரபஞ்சத்தில் புதிய ஐந்தாம் விசை இருப்பதற்குச் சான்று உள்ளதை விஞ்ஞானிகள் உறுதியாக அறிவிப்பு

    Funamental particles

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++

    +++++++++

    கடந்த பத்து ஆண்டுகளாய்

    அடிப்படையாய் நாமறிந்தது நான்கு 

    அகில விசைகள். 

    ஈர்ப்பு விசை, மின்காந்த விசை,

    வலுத்த, தளர்ந்த அணுக்கரு விசைகள்.

    புதிய கண்டுபிடிப்பு 

    புரட்சிகரமான

    ஐந்தாம் விசை ! கருமை விசை !  அது

    கருமை ஒளித்திரளா  அன்றி

    கருந்துகளா ? 

    பிண்டத் துகளா அன்றி

    விசை தூக்கும் துகளா ?

    ஹிக்ஸ் போஸானுக்குப் பின் கண்ட

    ஒட்டு விசைத் துகள் அது

    எக்ஸ் போஸான் எனப்படும்

    இனமறியா போஸான் !

    ++++++++++++

    Four Forces

    நாமறிந்த நான்கு பிரபஞ்ச விசைகள்

    இந்தக் கண்டுபிடிப்பு மெய்யானால்,  இது புரட்சிகரமான நிகழ்ச்சி யாய்க் கருதப்படும்.  கடந்த பல பத்து ஆண்டுகளாக நமக்குத் தெரிந்தவை நான்கு அடிப்படை விசைகளே: ஈர்ப்பியல் விசை, மின்காந்த விசை,  வலுத்த & தளர்ந்த அணுக்கரு விசைகள் [Gravitation, Electromagnetism, Strong & Weak Nuclear Forces].  இந்த ஐந்தாம் விசைக் கண்டுபிடிப்பு சோதனைகள் மூலம் மேலும் உறுதி செய்யப்பட்டால், கரும்பிண்டமும், விசைகளும் ஐக்கியமாகிப் பிரபஞ்சத்தைப் பற்றிய புரிதல் அறிவே முற்றிலும் மாறுபடும்.

    பேராசிரியர் ஜொநாதன் ஃபெங்க் [ Jonathan Feng, Physics & Astronomy, University of California] [August 16, 2016]

    சோதனை புரிந்தவர் அது ஓர் புதிய விசை என்று  ஏற்றுக் கொள்ள வில்லை.  அவர் கண்டது இதுதான்:  மிகையாக விளைந்த நிகழ்ச்சியில் புதியதோர் துகள் காணப்பட்டது.  ஆனால் அது பிண்டத் துகளா, அல்லது விசை ஏற்றுச் செல்லும் துகளா [Matter Particle or Force-carrying Particle]என்று அவருக்குத் தெளிவாகத் தெரியவில்லை.

    பேராசிரியர் ஜொநாதன் ஃபெங்க்.

    புதிய ஆராய்ச்சி ஐந்தாம் விசை இருப்பை உறுதிப்படுத்துகிறது.

    முன்பு நடத்திய விஞ்ஞான [2015] ஆய்வு மூலம் அறிவித்ததை உறுதிப் படுத்தி, இப்போது புதிய ஆராய்ச்சி, பிரபஞ்சத்தில் ஐந்தாம் விசை இருப்பை 2016 ஆகஸ்டு 15 இல் வலுப்படுத்தி உள்ளது.  2015 இல் ஹங்கேரியன் குழுவினர் தமது ஆய்வுகள் விளைவாய், புது மாதிரியான பராமாணு [Subatomic Particle] ஒன்று இருக்கலாம் என்று அறிவித்தார்.  ஹங்கேரியன் விஞ்ஞானிகள் தமது துகள் விரைவாக்கி [Particle Accelerator] மூலம் செய்த கரும்பிண்டம் பற்றிய ஆய்வு விளைவில் பெரிலியம்-8 கதிரியக்கத் தேய்வில் [Radioactive Decay] ஒரு முரண்பாட்டைக் [Anomaly] கண்டனர். அந்த முரண்பாட்டு நிகழ்ச்சியில் அபூர்வமாக எலெக்டிரானைப் போல் 30 மடங்கு கனமுள்ள ஒரு சிறிய துகள் தென்பட்டதாக அறிவித்தார். அப்போது அவருக்கு எந்த விதமான துகள் அது என்று தெரியவில்லை.   அது ஒரு புது விசை [New Force] என்று அவர்களால் எடுத்துக் கூற முடியவில்லை.

    ஹங்கேரியன் விஞ்ஞானிகள் தம் துகள் விரைவாக்கியில் [Particle Accelerator] புரோட்டான்களை ஏவி லிதியம்-7 மூலகத்தை மோதி பெரிலியம்-8 விளைந்து அதன் கதிரியக்கத் தேய்வில் விளைந்த அந்தப் புதுத் துகள், பிண்டத் துகளா [Matter Particle] அல்லது விசை தூக்கும் துகளா [Force-carrying Particle] வென்று அவருக்குப் புலப்படவில்லை.

    aj

    காலிஃபோர்னியா பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜொநாதன் ஃபெங்கும் [Jonathan Feng] அவரது குழுவினரும் 2015 ஆம் ஆண்டு ஹங்கேரியன் குழுவினர் புரிந்த ஆராய்ச்சிகளை மீளாய்வு செய்ததில், ஐந்தாம் விசை இருப்பதை உறுதிப் படுத்தினார்.   அது புரட்சிகரமான கண்டுபிடிப்பு.  பல பத்தாண்டுகளாக நாம் அறிந்தவை எல்லாம் நான்கே நான்கு விசைகள் தான் [Four Fundamental Forces in Nature]. ஈர்ப்பியல் விசை, மின்காந்த விசை, வலுத்த & தளர்ந்த அணுக்கரு விசைகள். [Strong & Weak Nuclear Forces]. மேலும் இந்த ஐந்தாம் விசை இருப்பு ஆய்வுகள் மூலம் வலுவடைந்தால், பிரபஞ்சத்தைப் பற்றிய நமது அறிவியல் முற்றிலும் மாறுபடும்.  அது கரும்பிண்டம், விசைகள் ஐக்கியப்பாட்டில் புதிய விளைவுகளை உருவாக்கும்.  முதல் முன்னோடி விஞ்ஞானிகள் அது பிண்டத் துகளா [Matter Particle] அல்லது விசை தூக்கும் துகளா [Force-carrying Particle] வென்று உறுதி செய்ய முடியவில்லை !  ஆனால் புதிய ஆராய்ச்சி அது ஒரு புதிய பரமாணு, பிண்டத் துகளும் இல்லை, கரும் ஒளித்திரளும் [Dark Photon] இல்லை என்று அறிவிக்கிறது. பெரிலியம்-8 கதிரியக்கத் தேய்வில் விளைந்த சிறிய துகள், விசை தூக்கும் துகள் என்பதே முடிவான விளக்கம்.  அந்தப் புதிரான பரமாணு ஒரு போலி முன்னோடி எக்ஸ் போஸானாக [Protophobic X Boson] இருக்க வேண்டும். சுருங்கச் சொல்லின் அது எக்ஸ் போஸான் [X Boson] அதாவது தெரியாத போஸான் என்று அழைக்கப் படுகிறது.  கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஐந்தாம் விசை நமது பிரபஞ்ச அறிவில் என்ன மாறுதல் செய்யப் போகிறது என்பது இனிமேல் தான் தெரியும்.

    LHC Experiments

    ++++++++++++

    அது விட்டு விலகுவ தில்லை இன்னும் !

    அதை உணர்கிறேன், ஆனால் புரிவதில்லை !

    கையிக்குள்ளே வைக்க முடிய வில்லை !

    மறந்து போகவும் இயல வில்லை !

    அது முழுவதும் அகப் பட்டால்

    அளக்க முடிய வில்லை என்னால் !

    ரிச்சர்டி வாக்னர், ஜெர்மன் இசைக்கலைகஞர் [Richard Wagner (1813-1883)]

    Particles Zoo

    மாபெரும் சக்தி வாய்ந்த மிக நுண்ணிய துகள்கள்தான் பிரபஞ்சத்தின் பெரும்பான்மைச் சக்தி நிகழ்ச்சிகள் பற்றிய வினாக்களுக்கு விடை அளிக்கின்றன.

    ஸ்காட் வேக்லி, (Scott Wakely) துணைப் பேராசியர், சிகாகோ பல்கலைக் கழகம். (2006)

    இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே புரோட்டான்களும், நியூட்ரான்களும்தான் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட அடிப்படைப் பரமாணுக்கள் (Subatomic Particles). அவை கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் அவைதான் அணுவின் பிளக்க முடியாத மூலப் பரமாணுக்களாய்க் கருதப்பட்டன. 1960 ஆண்டுகளில் அவற்றுக்கும் நுட்பமான துகள்களால் அவை உருவாகியுள்ளன என்று அறியப் பட்டது. புதிய முறைச் சோதனைகள் மூலம் புரோட்டான், நியூட்ரான் ஆகிய பரமாணுக்களின் உறுதியற்ற உள்ளமைப்பை இப்போது அழுத்தமாய்ச் சொல்ல முடிகிறது.

    கிளாஸ் ரித் & ஆன்டிரியா சே·பர் (Klaus Rith & Andreas Schafer)

    ஒளித்துகள் ஒட்டுத்துகள் ஆவது

    நுண்துகள் பௌதிகத்தின் நிலைபெறும் மாதிரி விதி (The Standard Model of Particle Physics) விஞ்ஞான வரலாற்றில் வெற்றியின் உச்சத்திலும், அதைக் கடந்த முன்னேற்ற துவக்க முனையிலும் கால அச்சின் மீது ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது !

    கார்டன் கேன், (Goron Kane) பௌதிகப் பேராசிரியர், மிச்சிகன் பல்கலைக் கழகம்.

    உன்னத இழை நியதி பிரபஞ்சத்தின் இயக்க நெறியைக் கூறுகிறது

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் “பொது ஒப்பியல் நியதி” (General Theory of Relativity) விளக்கும் அண்டங்களின் ஈர்ப்புவிசை தோற்ற அமைப்பு பிரபஞ்சத்தின் கால வெளி உண்டாக்கும் வளைவே (Space-Time Curvature) ஈர்ர்ப்பு விசையுடன் தொடர்பு கொள்வதாய்க் கூறுகிறது.

    நுண்ணிய அணு வடிவைக் கட்டுப்படுத்தும் பிரபஞ்சத் “துகள் யந்திர விதியில்” (Quantum Mechanics) ஆட்சி செய்பவை அலைகளா அல்லது துகள்களா என்னும் உறுதியின்மை வெளிப்படையானது.

    விஞ்ஞானி போஹ்ரின் அணுத் தோற்றம்

     

    “குளுவான்” அல்லது ஒட்டுவான் (Gluon) என்பது அணுவுக்குள்ளே பரமாணுக்களை (Subatomic Particles) ஒன்றாகக் கட்டிப் பிணைத்திருக்கும் ஒருவித வலுவான அணுக்கரு விசை (Nuclear Force) என்று அறியப்படுகிறது.

    மிக்க மூலாதாரமான இயற்கை நுண்துள்களின் (Electrons & Quarks) இயக்கப்பாடுகளுக்கு 1960 -1970 ஆண்டுகளில் ஒரு “நிலைபெறும் இயக்க மாதிரி நியதியை” (Theory of Interactions – Standard Model) விஞ்ஞானிகள் விரிவாக்கினார்கள். ஆனால் அந்த மாதிரி நியதி ஈர்ப்பாற்றலைப் பற்றி இன்னும் விளக்க முடியாத நிலையில் உள்ளது.

    பிரபஞ்சம் மற்றும் நுண்ணணு இயக்கங்களை ஒருங்கே விளக்கும் ஓர் “ஐக்கிய நியதி” (A Unified Theory of the Universe) துகள் வடிவில்லாத ஒற்றைப் பரிமாண நூல் கொண்ட “இழை நியதி” (One Dimensional Filament – The String Theory). இந்த நூதன இழை நியதி முரண்பாடான பொது ஒப்பியல் நியதியையும், நுண்துகள் யந்திர விதியையும் இணைக்கிறது.

    ஒளிமந்தை நோக்கித் துகளின் பயணம்

    பிரபஞ்ச ஐக்கிய நியதிக்கு வழியிடும் உன்னத இழை நியதி

    உன்னத இழை நியதி (Superstring Theory) பெருவெடிப்புக்கு முந்தய சில அடிப்படை விளைவுகளையும் விளக்க உதவுகின்றது ! ஒற்றை நியதியில் இழை நியதி பராமாணுக்கள், அடிப்படை இயற்கை உந்துவிசைகள் (Particles & Fundamental Forces of Nature) யாவும் உன்னத சீரான நுண்ணிழைகளின் அதிர்வுகள் (Vibrations of Tiny Supersymmetric Strings) என்று தெளிவாகக் கூறுகிறது. பரமாணுக்களின் அணுக்கூண்டில் இயங்கும் “நுண்துகள் ஈர்ப்பாற்றல்” (Quantum Gravity) தன்மைகளை விளக்கும் மகிமை கொண்டது இந்த உன்னத இழை நியதி ! இது ஏறக்குறைய உயிரியல் பிறவி மூலமான “டியென்னே” (DNA) போன்றது பிரமஞ்சத்தின் ஒற்றை உன்னத இழை நியதி என்று வைத்துக் கொள்ளலாம் !

     

    மூலாதாரத் துகள்கள்

    புரட்சிகரமான இந்த இணைப் பிரபஞ்சக் கோட்பாடு எப்போது உதயமானது என்னும் கேள்வி எழுகிறது இப்போது ! உன்னத இழை நியதி, பெருவெளி, கருமைப் பிண்டம் (Superstring Theory, Hyperspace & Dark Matter) ஆகிய புதிய கோட்பாடுகள் எழுதப்பட்டதும் பௌதிக விஞ்ஞானிகள் பிரமஞ்சத்தின் விஞ்ஞானத்தை விளக்க நாமறிந்த நான்கு காலவெளிப் பரிமாணங்கள் மட்டும் போதா வென்றும், அவை யாவும் மெய்யாகப் பதினொன்று எண்ணிக்கைகள் என்றும் உணர்ந்தார்கள் ! அவ்வித முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்ததும், அடுத்தோர் முடிவும் உதயமானது ! அதாவது நாமறிந்த பிரபஞ்சமானது எண்ணிற்ற “சவ்வியல் குமிழிகளில்” (Membraneous Bubbles) ஒன்றானது ! சவ்வுக் குமிழிகள் பதினொன்றாம் பரிமாணத்தில் கொந்தளிக்கும் போது அலைகள் எழுகின்றன !

    குவார்க்குகள் & டியூட்ரான்கள்

     

    பிரபஞ்சத்தின் புதிய அடிப்படைத் துகள்களும் அவற்றின் பிணைப்புகளும்

    விண்வெளியில் மினுமினுக்கும் எண்ணிலா விண்மீன்கள் முதலாக நமது மூலாதார டியென்னே (DNA) அணுக்கள் வரை அனைத்துப் பிண்டங்களும் (Matter) அடிப்படைத் துகள்களைக் (Fundamental Particles) கொண்டவை. மூலாதாரமான அந்த நுண்துகள்களை மேலும் பிளக்க முடியாது. 1960 ஆம் ஆண்டுக்கு முன்பு விஞ்ஞான மேதைகள் ரூதர்·போர்டு (1871-1937), நீல்ஸ் போஹ்ர் (1885-1962) ஆகியோர் முன்னோடிகளாய் விளக்கிய அணு அமைப்பில் உட்கருவில் புரோட்டான்களும், நியூட்ரான்களும் உள்ளன வென்றும், அவற்றை எலெக்டிரான்கள் சுற்றி வருகின்றன வென்றும் கூறினார்கள். அதாவது எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவை அணுவின் பிளக்க முடியாத அடிப்படைத் துகள்கள் என்று கருதினார்கள்.

    அணுவிலிருந்து குவார்க் அறிவு

    1960 ஆண்டுக்குப் பிறகு அடிப்படைத் துகள்கள் பற்றிய அந்த அணுவியல் அமைப்புச் சித்தாந்தம், பின்னால் வந்த விஞ்ஞானிகளால் திருத்தப் பட்டது. பிரபஞ்சத்தின் புதிய அடிப்படைத் துகள்களில் ஒன்றான குவார்க்கு (Quarks) என்பது அறியப்பட்டது. ஆறு வகையான குவார்க்குகள் இருப்பது தெரிய வந்தது. அதாவது குவார்க்குகள் << மேல், கீழ், நளினம், புதினம், உச்சம், நீச்சம் >> (Up, Down, Charm, Strange, Top, Bottom) என்று நினைவில் நிற்கும் எளிய பெயர்களில் குறிப்பிடப் பட்டன. மென்மையான குவார்க்குகள் மேல், கீழ் எனப்படுபவை. அவைதான் பொதுவாக அணுவின் உட்கருவில் இருப்பவை.

    ஒட்டுவான் & புரோட்டான்

    பிரபஞ்சத்தில் குவார்க்குகள் வலுமிக்க விசையால் (Strongest Force) ஒன்றை ஒன்று இறுக்கமாகப் பிணைத்துக் கொண்டுள்ளவை. அதாவது குவார்க்குகள் தனியாக இருக்க மாட்டா ! ஒரு குவார்க் மற்ற குவார்க்கு களுடன் வலுவுள்ள விசையுடன் எப்போதும் இணைந்தே இருப்பது. அந்த வலுவான விசை குளுவான் அல்லது ஒட்டுவான் (Gluon) என்று அழைக்கப்படுகிறது. அப்படிப் பட்ட அடைப்படைத் துகள்களால் கட்டப் பட்டவையே இந்த பிரபஞ்சமும் அதன் கோடான கோடிப் பிண்டப் பொருட்களும். அத்தகைய மூலாதாரக் குவார்க்கையும் அவற்றைப் பிணைத்துள்ள அசுர வலுவான விசையையும் அறிவதே விஞ்ஞானிகளின் பிரதமக் குறிக்கோள்.

    அகிலக் கதிர் ஒளிப்பற்றை

    குவார்க்குகள் விஞ்ஞானக் கருவிகளால் அளக்க முடியாதபடி மிக மிக நுண்ணியவை. குவார்க்குகளைப் பிரிக்க முடியாது. ஒரு புரோட்டானைப் பிளக்க முயன்றால், குவார்க்குகள் பத்து டன் விசை வலுவுடன் ஒட்டிக் கொள்கின்றன. அவை மிக நுட்பமாக இருப்பதால் புரோட்டானுள் பில்லியனில் ஓர் இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. பளுவிலும் மிகச் சிறிய விகிதமாக உள்ளது. புரோட்டானில் குவார்க்குகள் அடைத்துக் கொண்ட சிற்றிடம் போகக் காலியாகக் கிடக்கும் இடத்தில் இருப்பதென்ன ? அந்தக் காலி மனையில்தான் குளுவான் எனப்படும் பிசின் குவார்க்குகளைப் பிணைக்கும் ஒட்டு விசையாக நிரப்பிக் கொண்டுள்ளது ! அத்தகைய குவார்க், குளுவான் பிசினே பிரபஞ்சத்தின் 98% பளுவாகப் பரவியுள்ளது ! இயற்கையானது கோடான கோடி முறைகளில் பளுவில்லா குவார்க்குகளையும், வலுவான குளுவான்களையும் பிணைத்து பிரபஞ்சத்தைப் படைத்துள்ளது !

    குவார்க்குகள் & லெப்டான்கள்

    1.  https://youtu.be/NvY4WcrTkVE
    2.  https://youtu.be/0Vg93o2rtOc
    3.  https://youtu.be/1DheZxKlNag
    4.  https://youtu.be/c80B7cB-yzU

    (தொடரும்)

    *****************************

    Image Credits : Scientific American (May 2003)

    தகவல்:

    1. Astronomy’s Explore the Universe 8th Edition (2002) December 31, 2001

    2. National Geographic Magazine (1982) Frontiers of Science The Family of the Sun By: Bradford Smith Ph. D. Professor of Planetary Sciences, The University of Arizona.

    3. National Geographic Magazine (1975) Amazing Universe, The Family of Stars By: Herbert Friedman.

    4. Internet Article “Stellar Evolution”

    5. Majestic Universe By: Serge Brunier (1999)

    6. Neutron Stars & Pulsars -From the Internet Sources (December 2006)

    7. Parallel Universe – BBC Information (February 14, 2002)

    8. Scientific American “Parallel Universes” By Max Tegmark, Professor of Physics & Astronomy, University of Pennsylvania (May 2003)

    9. Parallel Worlds (The Science of Alternate Universes & Our Future in the Cosmos) By : Michio Kaku (2005)

    10. 50 Greatest Mysteries of the Universe – Astronomy Magazine (August 21, 2007)

    11 Astronomy Magazine – What Particle Physics Says about the Universe By: Scott Wakely (September 2006)

    12 Scientic American – ” The Mystery o Nucleon (Protons & Neutrons) Spin ” By : Klaus Rith & Andreas Schafer (July 1999)

    13 Scientific American ” The Dawn of Physics Beyond the Standard Model ” By : Gordon Kane Professor of Physics, University of Michigan (February 20, 2006)

    14. http://www.iflscience.com/physics/what-are-fundamental-particles/

    15.  http://www.bbc.com/news/science-environment-28218775  [July 10, 2014]

    16.  https://en.wikipedia.org/wiki/Elementary_particle  [May 23, 2016]

    17. http://www.nature.com/news/has-a-hungarian-physics-lab-found-a-fifth-force-of-nature-1.19957  [May 25, 2016]

    18. https://www.washingtonpost.com/news/speaking-of-science/wp/2016/08/18/scientists-think-theyve-found-a-fifth-force-of-nature-what-the-heck-are-the-other-four/ [August 18, 2016]

    *******************************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) August 20, 2016 [R-2]

    Attachments area
    Preview YouTube video 5th force of nature possibly discovered, US physicists say

    5th force of nature possibly discovered, US physicists say

    Preview YouTube video Scientists believe they may have found ‘fifth force’ of nature

    Scientists believe they may have found ‘fifth force’ of nature

    Preview YouTube video New hints fifth fundamental force Revolutionary X boson rewrite laws physics really exists

    New hints fifth fundamental force Revolutionary X boson rewrite laws physics really exists

    Preview YouTube video Could There Be A 5th Fundamental Force Of Nature?

    Could There Be A 5th Fundamental Force Of Nature?
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav
    ”பும்பும்பும் மாட்டுக்காரர் பிம்மாலை வந்தார்டி
    டொம்டொம்னு பாரத தேதிசொன்னார், -கம்கம்னு(கம்னு கெட)
    சும்மா இருந்திடு சேவடிக்(FEET) கன்றேபோல்
    கும்மாள கோகுலன் கூற்று’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav
    ’’கிளியலங் காரன் கிளிகொஞ்சும் கண்ணன்
    களிகொள்ளும் ஓவியத்தைக் காண , -தளிகையில்
    கைதவறி பாலில் கனிவிழுந் தாற்போல்:
    மெய்தவறா கிள்ளை முனி’’….கிரேசி மோகன்….

    கிள்ளை -கிளி….
    பாகவத எட்டைக் கொஞ்சிட பாகவதம்
    எழுதிய கிளி முக சுக முனி சப்த ரிஷிகள்
    சமேதராய் கிளி ரூபத்தில் எட்டாகிக்
    கண்ணனைக் கொஞ்சுகிறார்….!

    கிளிகொஞ்சும் கண்ணன் -அழகு….!கேசவ்….!

    Share
  • ‘’குமார சம்பவம்’’….

    கிரேசி மோகன்

     

    தூரிகையால் சித்திரம் தேர்ச்சி யுறுதலாய்
    சூரியனால் தாமரையின் சோபையாய் -காரிகையாய்
    யவ்வனத்தைப் பார்வதி எட்டினள் மெல்லமெல்ல
    அவ்வனப்பே ஆரா அழகு…(31)

    பட்டழுந்த பூமியில் பார்வதி செல்கையில்
    கட்டை விரல்நகம் கொப்பளித்த -இட்ட
    பதச்செந் நிறத்தால் பதுமத்தை மண்ணில்
    விதித்தெடுத்துச் சென்றாள் விரைந்து….(32)

    அழைக்கும் சிலம்பொலியை அன்னப் பறவைகள்
    கழைத்தோள் பார்வதிபால் கற்க -குழைந்தவள்முன்
    தக்ஷிணையாய் தம்மன்னத் தத்திநடை தந்துவிட்டு
    சிக்ஷைக்காய் ஏந்தும் சிறகு….(33)

    ஒயிலாய் உருண்டு ஒழுங்காய்த் திரண்ட
    கயிலாயப் பெண்முழங் காலை -அயனவன்
    செய்ய முயன்றதில் சேகரித்த லாவண்யக்
    கையிருப்பு போச்சாம் குறைந்து….(or)
    அய்ய! முயன்றதில் மெய்யின்மற் றங்கங்கள்
    செய்ய அழகின்றி சோர்வு….(34)

    வேழத் துதிக்கை வெகுகடினத் தோலாகும்
    வாழையதன் தண்டோ வெகுகுளிர்ச்சி -ஏழுலகில்
    பார்வதி உற்றயிரு சேர்ந்த துடைகளுக்கு
    நேர்கதியாய் ஒப்புமைகா ணேன்….(35)

    விடையேறும் ஈசன் மடியேறும் பாக்யம்
    அடைய அருகதையிங்(கு) ஆர்க்கு -தடையேதும்
    இல்லா(து) அமர்ந்த இவளின் இடையழகை
    சொல்லாமல் எண்ணல் சிறப்பு….(36)….கிரேசி மோகன்….!

    இடைவஸ்த் திரத்தின் இறுகு முடிச்சின்
    தடைதகர்த்(து) உந்தித் திசையில் -படையெடுக்கும்
    மெல்லிய ரோமா வளியினொளி, மேகலையின்
    துல்லிய ரத்தினத் தேசு….(37)

    மத்தியில் யாகத்து மேடைக் குறுகலை
    ஒத்தயிடை கீழே உதரத்தில் -பித்தனெரி
    மாறன் படியேற மூன்று மடிப்புகளால்
    சாரம் அமைத்திளமை சேர்வு….(38)

    நூலுக்(கு) இடம்கொடாது சாலப் பரிந்திணைந்த
    நீலக் கமல நயனத்தாள் -கோலயிரு
    வெண்ணிற பாரங்கள் வாய்த்தயெழில் பார்வதி
    எண்ணுதற்(கு) ஏற்ற எழுத்து….(39)

    செத்தொழிந்த மன்மதனால் செய்தயிரு கைகளும்
    பித்தனவன் கண்டப் பிணைக்கயிறாய் -நித்தமும்
    வாகாய் வளைக்குமவை யூகிக்க மாகவிக்கு
    ”வாகையினும் மென்மையாம்” வாக்கு….(40).

    நெட்டுயர்ந்த கொங்கைகள் நேர்த்தியால் நிற்கின்ற
    வட்டக் கழுத்துமதை வளையவந்து -கட்டிடும்
    முத்துமணி மாலையும், ஒத்தொன்றுக்(கு) ஒன்றழகில்
    சித்தம் ஒருமிக்கும் சேர்ந்து….(41)

    சந்திரனில் இல்லையே செந்தா மரைவாசம்
    செந்தா மரைக்கில்லை சாந்தகுணம் -செந்திரு
    ஒர்கதியாய் மென்மையும் ஓதமும் மேவிடும்
    பார்வதி சீர்வதனம் புக்கு….(42)….கிரேசி மோகன்….!

    Share
  • தெய்வமே தாயாவாள்!

     

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

     

    jayaramasarama

     

    பூமியில் பிறந்தமுதல் பூமிக்குள் போகும்வரை
     தான்பெற்ற பிள்ளைக்காய்த் தனையிழப்பாள் தாயாவாள்
     சேயதனின் வாழ்வினுக்காய்ச் செலுத்திடுவாள் தன்னலத்தைப்
    பூதலத்தில் தெய்வமாய்ப் பொலிந்திடுவாள் தாயாவாள்
    ஆரென்ன சொன்னாலும் அதைமனத்தில் ஏற்றாமல்
    பேரெடுத்துப் பிள்ளைவாழ பெரும்பொறுப்பைத் தான்சுமந்து
    ஊருணரச் செய்துநிற்பாள் உண்மையிலே தாயாவாள்!

     நிலத்திலே வந்தபிள்ளை மலத்திலே கிடந்தாலும்
     மனத்திலே மகிழ்ச்சியுடன் அதைச்சுத்த மாக்கிநின்று
     கலத்திலே சோறிருந்தும் கவனமதில் கொள்ளாமல்
     அணைத்துமே மகிழ்ந்திடுவாள் அருமைமிகு தாயாவாள்!
     மார்பணைத்துப் பால்கொடுக்கும் தாயவளின் மார்புதன்னை
    நோவெடுக்கக் கடித்தாலும் நோவாகாக எடுக்கமாட்டாள்
    நீரருந்தி மோரருந்தி நீண்டநேரம் தான் இருப்பாள்
    தன்பிள்ளைப் பசிபொறுக்காள் தயவான தாயாவாள்!

    காய்ச்சலிலே தானிருப்பாள் களைப்புவந்து தான்படுப்பாள்
    ஆசையுடன் பிள்ளைதனை அரவணைத்தல் தவிர்த்துவிடாள்
    மூச்செல்லாம் முழுவதுமாய்ப் பிள்ளையிடம் தானிருக்கும்
    பேச்செல்லாம் பிள்ளையன்றிப் பிறிதறியாள் தாயாவாள்!
    கண்கலங்கிப் பிள்ளைகாணின் கதிகலங்கிப் போய்விடுவாள்
    உண்ணாமல் உறங்காமல் உயிர்கொடுத்தும்
    காத்திடுவாள்
    கருவுற்ற நாள்முதலாய்க் கையில்பிள்ளை வரும்வரைக்கும்
    கடவுளினை வேண்டிநிற்பாள் கருணைநிறை தாயாவாள்!

    பிரசவத்தில் அழுதிடுவாள் பெருந்துன்பம் கண்டிடுவாள்
    பிள்ளையது முகங்காணின் பெருமகிழ்வு எய்திடுவாள்
    காலமெல்லாம் தானழுவாள் கவலையெலாம் தான்சுமப்பாள்
    ஞாலமதில் பிள்ளையினைத் தாங்கிநிற்பாள் தாயாவாள்!
    அழுதழுதுப் பிள்ளைபெற்றும் ஆனந்தம் தானடைவாள்
    ஆனாலும் பிள்ளைதனை அழுவதற்கு விடமாட்டாள்
    ஒருபொழுதும் தன்னலத்தை உயர்த்திவிட எண்ணமாட்டாள்
    முழுமனதும் பிள்ளையிடம் கொடுத்துநிற்பாள் தாயாவாள்!

    பிள்ளைவளர்ந் தாளாகிப் பெரியநிலை அடைந்தாலும்
    உள்மனமோ பிள்ளையிடம் ஓடியே நின்றுவிடும்
    பிள்ளைதாயைப் பாராமல் பேசாமல் இருந்திடினும்
    கள்ளமில்லா அன்புதனைக் காட்டிநிற்பாள் தாயாவாள்!
    பால்கொடுப்பாள் தாயாவாள் பசிதீர்ப்பாள் தாயாவாள்
    நோய்தடுப்பாள் தாயாவாள் நுடங்கிவிடாள் தாயாவாள்
    வேர்விட்டு வளர்வதற்கு வித்தாவாள் தாயாவாள்
    மேதினியில் நாம்காணும் தெய்வமே தாயாவாள்! 

     

     

     

    Share
  • எழுவகைப் பெண்கள்- 11

    அவ்வை மகள்

    பெண்ணார்ந்த சூட்சமங்கள் யாவற்றையும் விநாயகர் அகவலில் பொதித்து

    மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் அவ்வையின்  கருத்து என்ன என்று சொல்வதாகச்  சொன்னீர்களே என்று அந்த இராணுவ அதிகாரி தொடர்ந்து வினவினார்  –  என் உரையாடல் தொடர்ந்தது.

    பெண்ணின் மூலாதாரத்தில் வெப்பம் உருவாகிறது என்றும் அந்தக் கனலின் உஷ்ணத்தை, பெண்ணின் பலவேறு உறுப்புக்களில் காணமுடிகிறது என்றும் பார்த்தோம் அல்லவா?.  பெண்ணின் பல்வேறு  உறுப்புக்களில் உஷ்ணம் எதிரொளித்ததாலும், மூலாதாரத்தில் உஷ்ணம்  தேங்கி – அங்கேயே தங்கி – செறிவடைகிறதான உடலியல் பெண்ணினுடையது. ஏனெனில் பெண்ணானவள், சிருஷ்டி கர்த்தாவானதால், எந்நேரமும் படைப்புப் பணிக்குத்தேவையான வெப்ப ஆற்றலோடு அவள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பதே அவளுக்கு இடப்பட்டிருக்கிற இயற்கைப் பணி.

    ஆனால், இந்தக் கனலை மூலாதாரத்திலேயே தங்கவிட்டால் – தொங்கவிட்டால்- தூங்கவிட்டால் – பலப்பல விளைவுகள் எழும்:

    1. பெண்ணுக்கு, புற உடலுறுப்புக்களில் இருக்கவேண்டிய உஷ்ணம் குறைந்துவிடும் – இதனால் அவளது உடலியக்கத்தில் அவளுக்கு களைப்பும் அசதியும் ஏற்படும்.
    2. பெண்ணுக்கு அடிவயிற்றில் உஷ்ணம் அதிகரித்து அதனால் அதிக கோபம், ஆத்திரம், கடுமையான பேச்சு ஆகியன எழும் – அல்லது கடும் தலை வலி – தலைச்  சுற்றல் ஏற்படும்.
    3. பெண்ணுக்கு மலச்சிக்கல்,  நீர்க்கடுப்பு, ஆகியன ஏற்படும்.
    4. அவளுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் ஏற்படும்.
    5. அவளது உணர்வலைகள் தாறுமாறாக இருக்கும்.
    6. வெள்ளை படும்.
    7. பெண்ணின் மறையுறுப்பில் அரிப்பு ஏற்படும் – கொப்புளங்கள் உண்டாகும்.
    8. அவளுக்கு ஜீரணக்  கோளாறுகள் ஏற்படும்.
    9. அவளது வயிறு உப்பும் – அல்லது கடும் வலி காணும்.
    10. தலைமுடி கொட்டும், பொடுகு வளரும்.
    11. தோல் வறட்சி ஏற்படும்.
    12. பாத வெடிப்புக்கள் உண்டாகும்.
    13. உடலின் முப்பெரும் உறுப்புக்களான – கல்லீரல் (பித்தகம்), நுரையீரல் (கபமகம்), மற்றும் பெருங்குடல் (வாய்வகம்) ஆகியன பாதிக்கப்படும். இதனால் பெண்ணுக்கு ஏப்பமும் குதவழி வாயு வெளியேற்றமும் அதிகம் ஏற்படும். மூக்கடைப்பு – தொண்டைப் பிரச்சினைகள் ஏற்படும் – அதிகப் பசி உணர்ச்சி ஏற்படும். எவ்வளவு நீர்ப் பருகினாலும் கூட – உடலில் நீர்ச் சத்து காணாமல் போகும் – தோல்  வறண்டே இருக்கும் – குறிப்பாகக் கால் பாதங்கள் வெகுவில் களைப்படையும் – பாத மேல்  தோல்  சாம்பல் பூச்சோடு – வறண்டு உலரும்.
    14. உடல் நிமிர்ந்து நிற்கமுடியாமல் முதுகெலும்பு  வளையும்.
    15. வாய்- உதடுகள் – நாசித்துவாரங்கள் – முகத்தோல் ஆகியன வறண்டு போகும்.
    16. கழுத்தும் தோளும் பொலிவிழந்து நோகும்.
    17. சிறிய பிரச்சினைகளையும் கண்டு மிரளுவாள் – பயப்படுவாள், பிறருடன் பழக முனைய மாட்டாள், பிடிவாதம் மிகும்.

    மொத்தத்தில் ஓரு  பெண், எரிச்சல் உணர்ச்சியோடு – தலைபாரத்தோடு, உடல் – உள  அவதியோடு உங்களுடன் வசிப்பாள். அவளை நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள் – தகாத வார்த்தைகள்  பேசி அவளை  வைவீர்கள் – அல்லது கொடிய, இழிய  வார்த்தைகளால் அவளை வருணிப்பீர்கள். அவளுக்கு வேண்டியன செய்யாமல்  அவளைப் புறக்கணிப்பீர்கள்-கொடுமை செய்வீர்கள். அவளை ஒதுக்கிவிட்டு வேறு பெண்துணையைக் கூடத் தேடப் போவீர்கள். ஏனென்றால் பொதுவாகவே பெண் என்றால் அவளை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் – நடத்தலாம் -என்பது இங்கே வாடிக்கை.”

    “Yes. Yes. Yes!!! – you are absolutely correct! We men really do not get to understand females at all! As you said, we take them for granted! I think this is mostly the problem of the western culture” என்றார்.

    “சரியாகச் சொன்னீர்கள் பெண்களை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதேச்சையாகக் கையாளும் போக்கு  ஆண்களுக்கு கைவந்த கலை. சொல்லப்போனால், ஆண்களின் இந்தப் போக்கு எல்லாக் கலாச்சாரங்களிலும் எல்லாக்  கால காலக்கட்டத்திலும் இருந்திருக்கிறது. ஆனால் கலாச்சாரங்கள் இப்பிரச்சினையை எவ்வாறு கையாண்டான – இப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு கண்டன என்பதிலேதான் கலாச்சாரங்களின் உயர்வும் தாழ்வும் அமைகிறது. கிழக்கத்திய கலாச்சாரங்களில் பல  ஒற்றுமைகள் இருக்கின்றன தான் என்றாலும் என்றாலும் எங்கள் தமிழ்ச்சமுதாயம் பெண்களின் முக்கியத்துவத்தை  உணர்ந்த அளவிற்கும் – அவர்களை அரவணைத்துக்  காத்த அளவிற்கும் ஈடு இணை இல்லையென்றே  சொல்லமுடியும். பெண்களை மையமாகவைத்தே அவர்கள் எங்கள் தமிழ்ச் சமுதாயத்தைக் கட்டமைத்தார்கள் என்றால் அவர்களது பெண்மைப் போற்றுதலை நீங்களே புரிந்து கொள்ளலாம். அதே நேரத்தில் நீங்கள் சொல்லியது போல, மேற்கத்திய கலாச்சாரம் ஆழ்ந்த ஷரத்துக்கள் இல்லாத துர்ப்பாக்கிய நிலை உடையது  என்பது உண்மையே. அதனிடம் ஒன்றும் இல்லை என்ற நிலை இருப்பினும் பல்வேறு  காரணங்களால் அது விரவிப்பரவுகிறது ஒரு தொற்று நோயைப்போல.  ஆரோக்கியமான கலாச்சாரங்களில் இருக்கிற பலரை அது பீடித்து – அவர்களைத் தன் வசப்படுத்தி – அவர்களின் பாரம்பரிய செல்வங்களை கபளீகரம் செய்கிறது – அவர்களின்  கண்களை மறைக்கிறது – அவர்களின் மூளையை  மழுங்கச்செய்கிறது.

    எங்களைப் பொறுத்தவரை – நாங்கள் வேண்டியும் – வேண்டாமலும் – எமக்குள் நுழைந்த மேற்கத்திய கலாச்சாரம் – இந்த இருநிலைகளிலும் எங்கள்  கலாச்சாரத்தை மூடுதிரைபோட்டு மூடிவிட்டிருக்கிறது.  மாணிக்கம் போன்ற  எங்கள் கலாச்சாரத்தின் மீது தூசி படிந்து மணியின் ஒளி குறைந்திருக்கிறது –  இத்திரையை விலக்கி – மாசு களைந்து – தூசி துடைத்து – எங்கள்  மணி ஒளியை மீண்டும் எமக்கும் உலகிற்கும்  வழங்க நாங்கள் முனைந்தாக வேண்டும். அந்த உணர்வை எனக்குள் மீண்டும் நான் உணர உங்கள் வாசகம் உதவியது. மிக்க நன்றி.” என்று தொடர்ந்தேன்.

    “சொல்லப்போனால், நாம் பேசிவரும்  அவ்வை எனும் இந்தப் பெண், பொல்லாத  ஆண் உலகில் படாத பாடுபட்டவள் தான். இன்று நாம் “professional women” என்று சொல்லக்கூடிய பணியிடப் பெண்களுக்கான பிரச்சினைகளைப்  பற்றிப்    பேசி வருகிற  இந்தத் தருணத்தில் அவ்வையின் பணியிடப் பிரச்சினைகளையும் கூடக்  கருத்தில் கொள்ள வேண்டும்.  அந்நாளில் மன்னராட்சியில் –  புலவராக, எழுத்தாளராக, Governance எனப்படும் அரசாட்சி நுணுக்கங்களில் விற்பன்னராக – அரசவையில் மன்னருக்கு ஆலோசகராக, மக்கள் தொடர்பு மிகக் கொண்ட மக்கள் பிரதிநிதியாக, சமயத் தலைவராக, இறை அன்னையாக,  மாதர்குலத் திலகமாக இருந்திருக்கிற  மிக அசாதாரணமான பெண் அவ்வை. உலகின் எந்த கலாச்சாரத்திலும் அவ்வையைப் போன்ற ஒரு professional woman – பெண் அதிகாரியை – நீங்கள் காணமுடியாது.  பன்முக ஆற்றலும் பரிமாணமும், சொல் வன்மையும், கடப்பாடும், கட்டுப்பாடும், இறை சிந்தனையும்  கொண்டு விளங்கிய பெண் அவ்வை. மனித குலத்துக்கு மாதர்களின் மேன்மையை அறிவிக்கும் விநாயகர் அகவல் என்கிற புனித நூலை இயற்றி அவள் மனித குலத்துக்கு ஒப்பற்ற சேவை சேவை செய்திருக்கிறாள். இது உலகின் அனைத்து மொழிகளிலும் வெளியாகவேண்டும்.

    சொல்லப்போனால்  இந்திய கலாச்சாரத்தில், கணபதி என்னும் கடவுள், பெண்ணின் உடலின் உயர் இலக்கணங்களை – அவளது உடலில் பொதிந்திருக்கும்  ஒப்பற்ற இறைமையின் அடையாளங்களைக் காட்டுமுகமாக உலகிற்குத் தோற்றம் அளித்தவரே.

    அத்தகைய கணபதி எனும் விநாயகக் கடவுள் காட்டும் பெண்ணார்ந்த சூட்சமங்கள் யாவற்றையும் பொதித்து, அவள் – இவ்விநாயகர் அகவலை ஓதுகிறாள் –  அந்நிலையில், அவளது மனித குல சேவையைப் பாராட்டியவாறு அருள்பாலித்து கடவுள்அவளைத் தன்னுடன் ஐக்கியமாக்கி அவளுக்கு இறைபதவி அளிக்கிறான் என்பது வரலாறு.

    அவ்வை எனும் ஒரு professional woman, பெண்களுக்கான முழுமையான வேதமாக விநாயகர் அகவலை ஆக்கிப் படைத்திருக்கிறாள்  என்பதை நாம் உற்று நோக்கவேண்டும். எவரும் பேசத் தயங்கும் அல்லது கொச்சைப்படுத்தி இழிவு செய்யும் ஒரு முக்கியமான சமாச்சாரத்தை, professional woman என்ற வகையிலும், சாதாரணப்பெண் என்ற வகையிலும் இரு நிலைகளில் நின்று, அவ்வை ஆய்ந்து எழுதியிருப்பது விநாயகர் அகவல். பெண்கள் பிரச்சினைகளை அவள் எத்தனை அகலம் சென்று – எத்தனை ஆழம் சென்று  புரிந்துகொண்டிருந்தாள் என்பதைக்  காட்ட இந்த  விநாயகர் அகவல் ஒன்றே போதும்   இது ஒரு அசாத்தியமான படைப்பு. விநாயகர் அகவலின் ஒவ்வொரு சொல்லும் ஒரு காவியம். professional woman என்கிற வகையில் விஞ்ஞானியாக என் முப்பதாண்டு காலப்  பணி  அனுபவம், பன்னாட்டுதொடர்பு,  அரசுப்பணி, எழுத்துப் பணி,  பதிப்புப் பணி  என அடிமட்ட அடியேனுக்கு ஏற்பட்ட ஒரு சிறு வாழ்வியல் அனுபவத்தில் அவ்வையின் முழுப் பரிமாணங்களையும் என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. அவ்வை என்பவள் இலக்கியவாதி மட்டுமல்ல, மருத்துவத்தில் தலை சிறந்தவளாக, வர்ம மருத்துவக்கலையில் ஒப்பற்ற  நிபுணராக,  மிகப்பெரிய பெண் யோகியாக, பெண்ணின் உடலியல் பற்றிய ஞானங்களில் தலைசிறந்த ரிஷியாக, மக்களோடு மக்களாய் வாழ்ந்து அவர்களுக்குச்  சேவை செய்த மனிதகுல முழுமருத்துவராய் என்னால் அவ்வையைப் பார்க்க முடிகிறது. அந்நாளில் எங்கள் ஊரில் பெண் மருத்துவச்சிகள் இருப்பார்களாம். வீட்டுக்கு வீடு சென்று பிரசவம் பார்ப்பதும் பிள்ளை பேணுவதும் அவர்களது சேவைப் பணியாம். அவ்வை ஒரு மருத்துவச்சியாக இருந்திருக்க வேண்டும். எண்ணற்ற பிரசவங்களை அவள் பார்த்திருக்கவேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

    நான் ஏற்கனவே சொன்னது போல, விநாயகர் அகவல் என்பது  முழுக்க முழுக்க ஒரு பெண் மருத்துவ உடலியல் விளக்கம்.  தேர்ந்தெடுத்த – மிகப்பொறுப்பான – மிகப்பொருத்தமான வாசகங்களை மிக எச்சரிக்கையுடன் – மிக நுணுக்கமாக அவ்வை, தனது  விநாயகர் அகவலில்  கையாண்டிருக்கிறாள். “கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்” என்கிறபடியாய், “சொல்லுக சொல்லை பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து” என அவள் இங்கே ஒவ்வொரு சொல்லையும் வெகு நேர்த்தியாக உபயோகிக்கிறாள். எழுத்துலகில், விநாயகர் அகவல் ஒரு இலக்கிய விருந்து என்றால், மருத்துவ உலகில், இது ஒரு மாபெரும் Source Book என்பேன். மருத்துவ பரிபாஷையில் விநாயகர் அகவலை விளக்கப் புகுந்தால் பல மருத்துவ நூற் தொகுப்புக்களை நம்மால் வெளிக்கொணர முடியும். நவீன மருத்துவக்  கல்வியில் விநாயகர் அகவலை இணைக்கும் ஒரு காலம் கனியுமெனில் அது இவ்வுலகின் ஒரு மிகப்பெரிய பொற்காலமாகும்.

    குறிப்பாக, மூலாதாரக்கனல் பற்றி அவ்வை சொல்லியிருப்பது மருத்துவ உலகில் ஆணித்தரமான ஞானக்கருவூலம். உலகில் இதுகாறும் வெளிவந்திருக்கிற எந்த நவீன மருத்துவ அறிவியல் வெளியீடும் வெளிக்கொணர்ந்திராத  அசைக்கவியலாப் பேருண்மைகளை அவ்வை  ‘மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்து’ என ஒற்றை  வாசகத்தில் சேர்த்தளிக்கிறாள்” என்றேன்.

    “மூலாதாரத்தில் உண்டாகும் உஷ்ணம்  என்பது எத்தனைப் பெரிய  விஷயம்!  இது தெரியாமல் ஐம்பது வருஷங்களாய் வீண் வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேனே!” என்று அவர் தன்னை நொந்து  கொண்டார்.

    “எங்கள் ஆடவர்களில் பலருக்கும் – ஏன் எங்களின் பல   பெண்களுக்கும் – உலகின் எண்ணறிந்த பெண்களுக்கும் கூட  இதே நிலைதான். அவர்களுக்கும் சேர்த்துதான் இந்த விளக்கம் – கவலைப் படாதீர்கள்- அறியாமை விலகிட  வேண்டுமெனில் அறிவுக்கண்களை நாம் நாம் திறக்க வேண்டுமல்லவா!” என்று நான் தொடர்ந்தேன்.

    முதலில் மூலாதாரக்கனலின் இருவேறு நிலைகளைக் காணவேண்டும் – ஒன்று: மூலாதாரத்தில் மூளும் கனல் சரியாக, முழுமையாகக் கனியாமல்  இருக்கும் நிலை; இரண்டு: மூலாதாரக்கனல் நன்கு  கனன்று அங்கேயே செறியும் நிலை ஆகியன.

    இந்த இரு நிலைகளிலும் நாம் செய்யவேண்டியது என்னவென்றால், மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை நன்கு அக்கினியாக்கி அதனை ஜ்வாலையுடன் ஒளிறும்படியாய் கனற்றி, அதனை அங்கிருந்து எழுப்பி, அவ்வெப்பத்தைப் பெண்ணின்  உடல் முழுதும் பரப்பி – உடலுக்குத் தேவையானது போக உள்ள மிச்சத்தை உடலினின்று  விட்டு வெளியேறச் செய்ய வேண்டும். இது ஒன்று தான் பெண்ணை – சரியான அளவீடுடைய அப்பு எனப்படும் நெருப்புடன் காக்கும். முதலில் மூலாதார அங்கங்களின் அமைப்பை நாம் கீழ்வரும் படங்களின் மூலம் நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.

    படம் 1 (இடது) முதுகெலும்பும் திருவெலும்பும் இணையும் பாங்கு https://www.studyblue.com/notes/note/n/antphy-181-study-guide-2012-13-torry-/deck/9726113 திரிவெலும்பின் காஸிக்ஸ்  எனப்படும் வால்  எலும்பு; ; நடு: காஸிக்ஸ் எனப்படும் திருவெலும்பின் நுனியின் பின்றத்தோற்றம் –  காஸிக்ஸ் முன்ன்புறமாக வளைகிறது (http://www.healthhype.com/broken-coccyx-causes-and-symptoms-2.html) . (வலது) காஸிக்ஸ் பின்புறம் வளைந்து பெரினியத்தின் உளதளத்தைத்  தாங்குகிறது  (http://i0.wp.com/exhaletomove.com/wp-content/uploads/2011/02/pelvicfloor1-11.jpg).   படங்களின் உதவிக்கு நன்றி; வணிகமில்லாக் கல்வித் தொண்டிற்காக இப்படங்கள் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றன. இவற்றை காப்பி செய்து  வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை. இப்படங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்ற பின்பே இதனை எவரும் வெளியிடமுடியும். THese pictures are protected by Copyright Law by the respective owners. These are used here with permission and acknowledgement purely for noncommercial educational purposes. Copying and using these pictures is prohibited by copyright laws.

     

    படம் 2. (இடது) பின்புறம்  வளையும் காஸிக்ஸின் நுனியில் வெப்ப உற்பத்தி நிகழ்தலின் மாதிரிப் படம் ; (வலது) திருவெலும்பில் உஷ்ணம் செறிதலின் மாதிரிப் படம்  . http://www.iatropedia.gr/ygeia/ponos-stin-oura-eties-ke-tropi-anakoufisis/41465/. வணிகமில்லாக் கல்வித் தொண்டிற்காக இப்படங்கள் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றன. இவற்றை காப்பி செய்து  வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை. இப்படங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்ற பின்பே இதனை எவரும் வெளியிடமுடியும். These pictures are protected by Copyright Law by the respective owners. These are used here with permission and acknowledgement purely for noncommercial educational purposes. Copying and using these pictures is prohibited by copyright laws.

    படம் 3. திருவெலும்பு யானையின் முகத்தோற்றம் போன்ற வடிவும், நான்கு ஜோடி  தோள்களும்  (shoulders) ஐந்து கரங்களும் (limbs)  உடையது. படத்திற்கு நனறி: http://www.healthhype.com/sacrum-and-coccyx-tailbone-of-the-spine-anatomy-and-pictures.html. வணிகமில்லாக் கல்வித் தொண்டிற்காக இப்படங்கள் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றன. இவற்றை காப்பி செய்து  வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை. இப்படங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்ற பின்பே இதனை எவரும் வெளியிடமுடியும். These pictures are protected by Copyright Law by the respective owners. These are used here with permission and acknowledgement purely for noncommercial educational purposes. Copying and using these pictures is prohibited by copyright laws.

    படம் 4. பெரினியத்தின் உட்புறத்தோற்றங்கள்.  http://www.sspphysio.com.au/coccyx-pain.html. வணிகமில்லாக் கல்வித் தொண்டிற்காக இப்படங்கள் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றன. இவற்றை காப்பி செய்து  வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை. இப்படங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்ற பின்பே இதனை எவரும் வெளியிடமுடியும். These pictures are protected by Copyright Law by the respective owners. These are used here with permission and acknowledgement purely for noncommercial educational purposes. Copying and using these pictures is prohibited by copyright laws.

                                           

    படம் 5. (இடது) முதுகெலும்பு வில் போன்ற தோற்றம் கொண்டது  http://www.urgentcarefl.com/bruised-tailbone-see-doctor-pain-falling/. முதுகெலும்பின் நரம்புகள்  ஜோடி ஜோடியாய்ப்  பிரிகின்ற்னhttp://www.urgentcarefl.com/bruised-tailbone-see-doctor-pain-falling/. முதுகெலும்பின்  தொடர்ச்சியாக வரும்  திருவெலும்பின் கடைக்கோடியில் முன்னோக்கி வளைந்தபடி அமையும் வால்  எலும்பு எனப்படும் காஸிக்ஸிலிருந்து ஒரு ஜோடி நரம்புகள் பிரிகின்றன. காஸிக்ஸின் அமைப்பு பாம்பின் பல்லைப்  போன்றும்  அதனிலிருந்து பிரியும் ஒரு ஜோடி நரம்பு தொங்கும் பாம்பின் பிளந்த நாக்கைப்போலவும் இருக்கும். திருவெலுப்பின் அமைப்பு யானையின் முகத்திப்போல இருப்பதைக் காண்க. வணிகமில்லாக் கல்வித் தொண்டிற்காக இப்படங்கள் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றன.                 இவற்றை காப்பி செய்து  வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை. இப்படங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்ற பின்பே இதனை எவரும் வெளியிடமுடியும். These pictures are protected by Copyright Law by the respective owners. These are used here with permission and acknowledgement purely for noncommercial educational purposes. Copying and using these pictures is prohibited by copyright laws.

    படங்களின் மூலம் அமைப்பைப் புரிந்து கொண்ட நிலையில், மருத்துவ ரீதியாக, பொறியியல் ரீதியாக, பெண்ணின் உடலினைப் பார்க்க வேண்டும்.  உடலில், சிரசுக்கும் கால்களுக்கும் மத்தியில் இடையாக வருவது இடுப்பு. இடுப்பும் மார்புக்கூடும் என்றும் நேராக இணையாது. இரண்டும் அப்படியே தனித்தனியாய்க்  கிடைக்க  – இந்த இரண்டையும் ஒரு  கம்பிச்சுருள் பாலத்தால் இணைப்பது முதுகெலும்பு. முதுகெலும்பின் துவக்கம் சிரசின் பின்பகுதியான் முகுளம் – அதன் முடிவு இடுப்பெலும்பின் பின் மையத் தொக்கலான  திருவெலும்பு.  திருவெலும்பின் அமைப்பு வெகு நுட்பமானது என்றால்  திருவெலும்பின் நுனியானது  வெகு-வெகு நுண்ணிய நுட்ப வடிவ அமைப்பு கொண்டது.  இந்த நுனியை காஸிக்ஸ் என்பர். இந்த காஸிக்ஸில் தான் முதுகெலும்பின் நரம்புத் தொகுதியின் கடைசித் தொங்கு நரம்பிரட்டை முடிகிறது. இது அசப்பில் பார்க்க பாம்பின் நாவைப்போன்று இருக்கும்.

    இந்தத் திருவெலும்பானது   இடுப்புக்குள்  இருப்பது. இங்கே இடுங்கி ஒளிந்து கொண்டு இருப்பது தான் பெரினியம் எனும்  மூலாதார வாயிலும் அதனுள் உள்ளக் குழியும். குறிப்பாக, இடுப்புடன் கால்கள்  இரண்டும் வந்து இணையும் இடைச்சந்தியில் தான் இந்த பெரினியம் மிகப்பொருத்தமாக – மிக பத்திரமாகப்  பொருத்தப்பட்டிருக்கிறது. பெரினியம் முழுக்க முழுக்க திசுஇழைகளால்  ஆக்கப்பட்டிருக்கிறது (சேயிழையார் என்று பெண்கள் அழைக்கப்படுவது பெரினிய அமைப்பில்தான் என்று ஏற்கனவே பார்த்தோம்).

    பெரினிய அமைப்பை உற்றுக்கவனித்தால் நமக்கு ஒன்று புரியும். இரண்டு கால்களின் கடை முடிவுகள் இடுப்புடன் வந்து இணையும் இரு அடிப்பகுதிகளையும் ஒன்றாக தசைநார்களைக் கொண்டு இணைத்துத்  தைத்ததால் ஏற்பட்ட ஒரு   துருத்தியே பெரினியம் என்பது விளங்கும்.

     பெரினியத் தசை நார்கள் பிற உறுப்புக்களில் உள்ள தசைநார்களிலிருந்து வித்தியாசமானவை. மிக அதிக இழுப்பு விசைகொண்ட உறுதியான ரப்பர் நார்கள் இவை. உடலிலுள்ள பிற தசைநார்கள் குறித்த அளவே நீளும் ஆனால் பெரினிய தசைநார்களோ 10 மடங்கு அதிகம் நீளும். அது மட்டுமல்ல விரிந்தபின் மீண்டும் இயல்பாய் சுருங்கி பெட்டகம் போல் மடிந்து கொள்ளும். புடவைக்கு கொசுவம் வைப்பதைப்போல நுண்ணிய மடிப்புக்களில் டக்கென மடிந்து சுருங்கிக்கொள்ளும் தன்மையான இழைநார்கள் இவை. உற்றுப்பார்த்தால் இழைக்கோர்த்து நெய்தாற்போல் – உறுதியான தோலாலான மடல்களைப்போல அத்தனை நேர்த்தியாய் இந்த அமைப்பு இருக்கும். பெரினியத் தசைநார்களின் இன்னுமொரு சிறப்புப் பண்பு என்னவென்றால் எட்டு வெவேறு விதமான தசைநார்கள் ஒன்று சேர்ந்து பெரினியத்தை உருவாக்குகின்றன. மேலும். இது தசைநார்களில் கொழுப்புச் சத்தும் மிகுந்திருக்கிறது – தோல் போன்ற தடிமன் குறைந்த மெலிதான தன்மையும் மீள்விசையும் இந்தக் கொழுப்புச் சத்தால் வருவனவே.

    Inline image 1

    படம் 6. பெரினியத்தை இணைந்து உருவாகும் வலுவான தசைநார் இழைமடல்களின் மாதிரி. இந்த இழைமடல்கள் மிகுந்த இழுப்பு விசையும் மீள் வீசையும் கொண்டவை. http://www.buyamag.com/pelvis_model.php. வணிகமில்லாக் கல்வித் தொண்டிற்காக இப்படங்கள் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றன. இவற்றை காப்பி செய்து  வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை. இப்படங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்ற பின்பே இதனை எவரும் வெளியிடமுடியும். These pictures are protected by Copyright Law by the respective owners. These are used here with permission and acknowledgement purely for noncommercial educational purposes. Copying and using these pictures is prohibited by copyright laws.

    பெரினியத்தின் ஒட்டுமொத்த வடிவம் அகலின் தீபம் போல் இருக்கும். அகல் விளக்கும் கூட பெண்ணின் பெரினியத்தின் அமைப்பையையும், அதனுள் எழும் அனலையும் குறிப்பிடவே உருவாக்கப்பட்டதாக ஐதீகம் உண்டு.

    இது நிற்க. பெரினியத்தைத் துருத்தியை ஒத்த ஒரு கருவி என்றோம். துருத்தி என்றால் அதற்கு சுருங்கி விரியும் வாய் உண்டு. பெரினியத்தின் பெண்ணுறுப்புத் துளை அளப்பரிய விரிந்து சுருங்கும் ஆற்றல் உடையது என்கிற விஷயம் நாமெல்லாம் அறிந்த ஒன்று தானே!- ஒரு குழந்தையின் தலை அந்தத்  துளையில் வழியே தானே வெளிவருகிறது! பிரசவமான  பின்பு சுருங்கி மீண்டும் சாதாரண இயல்பு நிலைக்குத் திரும்பும் அசாத்திய ஆற்றல் அதற்கு உண்டு அல்லவா?

    படம் 7. பிரசவத்தின் போது பெரினியத் தசை நார்கள் விரிய, உள்ளிருந்து வெளியே பிரவேசிக்கும் சிசு. http://sydney.edu.au/medicine/nepean/research/obstetrics/pelvic-floor-assessment/English/sydney%20pelvic%20floor%20body/After%20Birth/Anal%20Sphincter%20Muscle/Anal%20Sphincter%20Muscle%20html.html. வணிகமில்லாக் கல்வித் தொண்டிற்காக இப்படங்கள் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றன.                 இவற்றை காப்பி செய்து  வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை. இப்படங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்ற பின்பே இதனை எவரும் வெளியிடமுடியும். These pictures are protected by Copyright Law by the respective owners. These are used here with permission and acknowledgement purely for noncommercial educational purposes. Copying and using these pictures is prohibited by copyright laws.

    இப்போது பொறியியலில் கவனம் செலுத்துவோம். கருவி எனும் வகையில், துருத்தி என்பது காற்றுக்  கருவி. கொல்லர்கள் பயன்படுத்துவது. சிறு அடுப்பில், இரும்பையும் கூடப் பழுக்கக் காய்ச்சும் அளவுக்கு உஷ்ணத்தை உருவாக்க துருத்தியைக்  கொல்லர்கள் பயன்படுத்துவார்கள். விரிந்து சுருங்கும் தோல் வாயும் – அவ்வாயை விரித்துச் சுருக்க இரு கால்களும் துருத்திக்கு உண்டு. துருத்தியில்   காலிரண்டும் இணைந்து ஒற்றைக் கண்மாயாயாக மாறி ஒரு துவாரத்தில் சென்று பொருந்தும். துருத்தியின் கால்களை அசைக்க, துருத்தி காற்றை உள்ளிழுத்து, அக்காற்றை, கண்மாயின் துவாரம் வழியே அடுப்புள் இருக்கும்  தணலில்  மீது குவித்து அத்தணலைக்  கனன்று எரியவைக்கும்.

    படம் 8. துருத்தி எனும் தோல் கருவியைபப்  பயன்படுத்தி அடுப்பில் உள்ள கனலை  கொழுந்துவிட்டு  எரியவைக்கும் காட்சி. http://warehamforgeblog.blogspot.com/2008_07_01_archive.html. வணிகமில்லாக் கல்வித் தொண்டிற்காக இப்படங்கள் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றன.                 இவற்றை காப்பி செய்து  வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை. இப்படங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்ற பின்பே இதனை எவரும் வெளியிடமுடியும். These pictures are protected by Copyright Law by the respective owners. These are used here with permission and acknowledgement purely for noncommercial educational purposes. Copying and using these pictures is prohibited by copyright laws.


    இவ்வகையில் விரிந்து சுருங்கும்  துருத்தியாம் பெரினியத்தை இரு கால்களால் இயக்கி, பெரினியக்குழியாம் அடுப்பைபோன்ற இடுப்புக்குழி எனும் அக்கினிக் குண்டத்தில் மூளும் நெருப்பை அங்கே தாங்காமல் எழுப்பி அவளது உடல் பூராவும் பரப்பும் வித்தையை எங்கள் தமிழ்ச்சமுதாயம் நடத்திக் காட்டியது” என்றேன்

    “ஒரு சந்தேகம்” என்றார். தொடர்ந்தார். “பெண்களுக்கு கால்கள் பலவீனமாயிற்றே – அவர்களால் இது எப்படி முடியும்? ஒரே குழப்பமாய் இருக்கிறதே” என்றார்.

    இதிலே குழம்ப ஏதுமில்லை. பிற கலாச்சாரங்களால் சாதிக்கமுடியாததைச் சாதித்தது எங்களுடைய கலாச்சாரம். எங்கள் பெண்கள் மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கலை தெரிந்தவர்கள். இந்தக் கலையை அவர்களது அனுதின வாழ்வாக்கி, அக்கலையை அவர்களது நடையிலும் உடையிலும், தினசரிப் பழக்க வழக்கங்களிலும் இழைத்தும் குழைத்தும் நிறுத்தியது எங்கள் கலாச்சாரம். உலகின் வேறெந்த  சமுதாயமும் காணாத மாபெரும் வெற்றி இது என்றேன்.

    மேலும் பேசுவோம் .

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (206)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள். இதோ மற்றொரு வாரம், மற்றொரு மடலுடன் உங்கள் முன்னே. உலகம் சுற்றிக் கொண்டே இருப்பதினால் தானோ என்னவோ வாழ்க்கையும் ஒரு சுழற்சி போலத் தென்படுகிறது. சுழற்சியில் முன்பு வந்த இடத்தை மீண்டும் வந்து தொடுவது போல வாழ்விலும் சில சமயங்களில் பழைய நிலை மீண்டும் திரும்புவது போன்ற ஒரு உணர்வு எமக்கு ஏற்படுவது உண்டு.
    இங்கிலாந்தில் நடக்கும் நடைபெறும் நிகழ்வுகளின் அடிப்படையில் எனது பார்வையில் அதன் தாக்கங்களையும், விளைவுகளையும் பற்றியே இம்மடலின் மூலம் நான் பகிர்ந்து கொள்கிறேன். புலம் பெயர்ந்த ஒரு தமிழனின் ஒரு கோணப்பார்வையே இது. ஒரு சமயத்தில் நான் கொண்டிருந்த கருத்துக் கணிப்பு முற்று முழுதாக பிழைத்துப் போகலாம் அப்படியான சமயங்களில் இது ஒரு சாதரண பாமர மனிதனின் கணிப்பே என்பதே அதற்கான விளக்கமாகும்.

    “ப்ரெக்ஸிட்(Brexit)” என்ற ஒரு நிகழ்வு இங்கிலாந்தில் ஏற்படுத்திய, ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் பல. அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை, அதற்கான பொறிமுறைகள் அடுத்த ஆண்டின் முற்பகுதியிலேதான் முடுக்கி விடப்படும் எனும் அரசியல் கணிப்பே பலமாக நிலவுகிறது. அதேசமயம் இதற்கான பொறிமுறை உடனடியாக முடுக்கி விடப்பட வேண்டும் எனும் வாதம் இந்த “ப்ரெக்ஸிட்”என்ற ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பதற்கு ஆதரவான பலரிடம் இருந்து கிளம்புகிறது.

    இதற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் வேளையில் நடைபெற்ற வாதங்களில் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் நிலை வந்தால் இங்கிலாந்தின் பொருளாதாரம் மிகவும் பெரிய அளவில் பாதிக்கப்படும் எனும் வாதம் இங்கிலாந்து அரசாங்கத்தினாலும் பல முன்னனி நிதி நிறுவனங்களினாலும் முன்வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர்களினால் முன்வைக்கப்பட்ட அளவினில் பொருளாதார வீழ்ச்சி நிகழவில்லை. இருப்பினும் பொருளாதாரம் ஓரளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்றே கூற வேண்டும்.

    ஆனால் உலகநாடுகளின் பொருளாதார நிலைகளைக் கணிக்கும் சர்வதேச நிறுவனத்தின் அறிக்கையின்படி இவ்வருட இறுதியில் இங்கிலாந்து பொருளாதாரப் பின்னடைவு அடையும் நிலை காணப்படுவதாகக் கூறப்படுகிறது. பொருளாதாரத்தை பொறுத்த அளவில் இங்கே நான் சரி என்று யாரும் வாதிடுவதினால் எதுவித பலனுமில்லை. வரப்போகும் எதிர்விளைவுகளை எவ்வாறு குறைக்கலாம் என்பதில் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டிய தேவையே இன்றைய காலகட்டத்தின் தேவையாகிறது. முகத்தின் மீது கோபம் கொண்டு மூக்கை அறுத்துக் கொள்வதினால் யாருக்கு நட்டம் என்று சிந்தித்துச் செயல்படுவதே சீரான அரசியல்வாதிகளின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்..

    “பெரிய பிரித்தானியா (Great Britain)” என்பது இன்று பேச்சளவில் மட்டுமே ! அப்பெயரின் பெருமை கடந்தகால சரித்திரத்தில் இடம்பெற்றிருக்குமே அன்றி அதன் தாத்பரியம் இன்றைய காலகட்டத்திற்கு உகந்தது அல்ல. நாம் பிரித்தானிய நாட்டுப் பிரஜை, எமது நாடு பிரித்தானியா என்று பெருமை கொள்வது தவறாகாது ஆனால் கடந்தகால சாதனைகளின் மிதப்பில் நிகழ்காலத்தைத் தவறாக எடை போடுவது மிகவும் அபாயகரமானதாகும்.

    இந்த “ப்ரெக்ஸிட்” எனும் நிகழ்வினால் கிளப்பி விடப்பட்டிருக்கும் மற்றொரு பூதம் ” இனத்துவேஷமாகும் . ஆமாம் ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரஜைகள் இதர ஐரோப்பிய நாடுகளுக்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் இன்றி வந்து செல்வது மட்டுமின்றி அங்கு பணிபுரிவதற்கான அனுமதியும் , அந்நாட்டு மக்களுக்கு அரசாங்கம் அளிக்கும் விசேட சலுகைகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமையும் உடையவர்களாவார் எனும் ஐரோப்பிய யூனியனின் விதிக்கமைய பல ஐரோப்பிய யூனியனின் புதிய அங்கத்துவ நாடுகளான போலந்து, பல்கேரியா, ரொமேனியா போன்ற நாடுகளில் இருந்து பலர் தொகையினராக இங்கிலாந்துக்குள் நுழைந்தது ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது.

    2008ஆம் ஆண்டு உருவான உலகப் பொருளாதாரச் சிக்கலுக்கு ஆளான இங்கிலாந்து அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதற்காக பல கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்குள்ளாகியது. அதனால் பல நிறுவனங்கள் தமது பணியாளர்களுக்கான ஊதியத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு வந்தன. விளைவு குறைந்த ஊதியத்துக்குப் பணிபுரிய சித்தமாகவிருந்த ஐரோப்பிய நாட்டவர் பல இடங்களில் பணிக்கமர்த்தப்பட்டனர். இது இங்கிலாந்து நாட்டவரின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத்தரத்தையும் பாதிக்கிறது எனும் ஆதங்கம் பொதுவாகவே கானைத்து மக்களுக்கும் ஏற்பட்டது. இதற்கு புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டவரும் விதிவிலக்கல்ல.

    இந்தச் சந்தர்ப்பத்தையும் மக்களின் மனோநிலையையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட “ப்ரெக்ஸிட்” ஆதரவாளர்கள், இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் எனும் தமது வாதத்திற்கு முக்கியமான பிரச்சாரமாக பயன்படுத்தத் தொடங்கினார்கள்.. “இமிகிறேஷன் ” எனும் பதமே அனைவரின் பேச்சுக்களிலும் எதிரொலித்தது. ஏற்கனவே வெளிநாட்டவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட இனத்துவேஷிகளுக்கு வாய்ப்பாக அமைந்தது. அவர்களும் தாமும் “பிரெக்ஸிட்” ஆதரவாளர்கள் எனும் முகத்திரையுடன் இப்பிரச்சார அரங்கில் நுழைந்தார்கள். விளைவு இந்தப் பிரச்சாரத்தின் மூலம் “இனத்துவேஷம்” எனும் பூதம் கிளப்பி விடப்பட்டுள்ளது.

    இது ஜரோப்பிய யூனியனில் இருந்து வந்த வெளிநாட்டவர் எனும் எல்லையைக் கடந்து அனைத்து வெளிநாட்டவர் மீதும் குறிப்பாக ஆசிய நாட்டவர் மீதும் கட்டவிழ்த்து விடத்தொடங்கியுள்ளது.. இங்கிலாந்து மெட்ரோபாலிட்டன் போலிஸின் கணிப்பின் படி இனத்துவேஷம் சம்பந்தமான குற்றச்செயல்கள் கணிசமான அளவில் அதிகரித்துள்ளன. இதைப்பற்றிய பல அரசியல் அவதானிகளின் கருத்தும் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டிய நிலைக்கு அனைவரையும் தள்ளுகின்றன.

    பல இந்திய, பாகிஸ்தானிய, இலங்கை புலம் பெயர் மக்கள் தம்மை நோக்கி வீசப்படும் இனத்துவேஷம் சம்பந்தமான அவதூறுகளைப் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விவரித்துள்ளார்கள்.

    இங்கேதான் பூமி சுழன்று மீண்டும் அதேஇடத்தை வந்தடைவது போல வாழ்வின் சுழற்சியும் என்று நாம் ஏற்கனவே கூறியது வருகிறது. எப்படி என்கிறீர்களா? நான் லண்டனுக்கு வந்து 41 வருடங்களாகி விட்டன. நான் லண்டனுக்கு வந்த போது இருந்த ஒரு வெளிநாட்டவருக்கெதிரான உணர்வு இங்கிலாந்து நாட்டு மக்களிடையே மீண்டும் நிலவுவது போல உணர்கிறேன். அதாவது 41 வருடங்களின் பின்னால் வாழ்வு சுழன்று மீண்டும் அதே இடத்திற்கு வந்திருப்பது போன்ற ஒரு நிலை.

    எது எப்படி இருப்பினும் நடப்பவை நடந்தேதான் தீரும் . பல கேள்விகளின் விடையை நாம் காலத்திடம் எதிர்பார்ப்பது போல இதையும் காலத்தின் கையில் விட வேண்டியதைத் தவிர வேறுவழியில்லை.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • சூரிய சக்தியில் மனிதன் இயக்கி ஒருநாள் பறந்த முதல் வானவூர்தி

    (ஜூலை 8, 2010)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    தட்டாம்பூச்சி போல் பறக்குது !
    தரணியில் முதலாய்ப் பறக்குது !
    பரிதியின் சக்தியால் பறக்குது !
    எரிசக்தி இல்லாமல் பறக்குது !
    பகலிலும் இரவிலும் பறக்குது !
    பசுமைப் புரட்சியில் உதித்தது !
    பாதுகாப் பாய்க் கீழ் இறங்குது !
    நாற்பது குதிரைச் சக்தியில்
    நான்கு காற்றாடி உந்துது !
    பனிரெண் டாயிரம் செல்கள்
    பரிதிச் சக்தியை அளிப்பது !
    ஒற்றை விமானி ஓட்டுவது !
    ஒருநாள் பறந்த ஊர்தி
    இருபது நாளினிப் பறக்கும் !
    அட்லாண்டிக் கடலைக் கடக்கும் !
    அகில உலகைச் சுற்றும் !
    நூறாண்டுக்கு முன்னே பறந்த
    ரைட் சகோதரர் ஊர்தி போல்
    வரலாற்று முதன்மை பெறுவது !


    “மனிதன் இயக்கிய சூரிய சக்தி விமானம் இரவு முழுவதும் பறந்தது இதுவே முதல் முறை.  அந்த நிமித்தமே எங்கள் குறிக்கோள் வெற்றி அடைந்ததை நிரூபித்தது. காலைப் பொழுது புலர்ந்ததும் எதிர்பார்த்தை மீறி, மின்கலன்களில் இன்னும் 3 மணிநேர மின்னாற்றல் சேமிப்பு மிஞ்சி இருந்தது.  ஊர்தி தரையில் வந்திறங்கிய போதே உதய சூரியனிலிருந்து புதிய ஆற்றலைச் சேமிக்க ஆரம்பித்து விட்டது.  அடுத்தோர் இராப் பகல் பயணத்தைத் தொடரும் எங்கள் ஆர்வம் நின்று விடவில்லை. ‘தொடர்ப் பயண நினைப்பிலிருந்தும்’ எங்களை எதுவும் தடுக்க வில்லை.”

    பெர்டிராண்டு பிக்கார்டு (Aviator, Solar Impulse Design Lab)

    “நான் இன்னும் காற்றில் மிதப்பது போல்தான் உணர்கிறேன்.  பூரிப்படைகிறேன் !  (சூரிய ஊர்திப் பறப்பு) ஓர் முக்கியப் படிக்கட்டு !  இப்போது நாங்கள் அதற்கு மேலும் போகலாம்.  நீண்ட காலப் பயணங்களிலும் முற்படலாம்.”

    சுவிஸ் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் (Swiss Pilot Andre Borschberg)

    “எதிர்பார்த்ததை விடப் பயணத்தில் வெற்றி கிடைத்தது.  நல்ல காலநிலை அமைந்திருப்பதற்கு எங்களுக்கு அதிர்ஷ்டம் தேவைப்பட்டது.  தகுந்த காலநிலை விமானிக்கு அமைந்தது.”

    கிளாடி நிக்கலியர் (Flight Director & Former Space Shuttle Astronaut)


    வரலாற்று முதன்மை பெற்ற மனிதன் இயக்கும் சூரிய ஊர்தி

    2010 ஜூலை 8 ஆம் தேதி முதன்முதல் சுவிஸ் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் சூரிய சக்தி இயக்கி நான்கு எஞ்சின்கள் உந்தும் வானவூர்தியை 26 மணிநேரங்கள் பகல் இரவாய் ஓட்டிப் பாதுகாப்பாய் ‘பேயெர்ன்’ விமான தளத்தில் (Payerne Airport, Swiss) இறக்கினார். 1903 இல் அமெரிக்காவில் முதன்முதல் ரைட் சகோதரர் தாம் தயாரித்த ஆகாய ஊர்தியில் பறந்தது போல் இதுவும் மனிதன் இயக்கிய முதல் சூரிய ஊர்தியாக வரலாற்றுப் பெருமை பெறுவது.  எரிசக்தி எதுவும் இல்லாமல் இயற்கையான சூரிய சக்தியைப் பயன்படுத்தி மனிதன் ஓட்டிய முதல் வானவூர்தி.  பேயெர்ன் விமானம் தளம் சுவிஸ் நாட்டின் தலைநகரம் பெர்னிலிருந்து (Bern) 50 கி.மீ. (30 மைல்) தூரத்தில் உள்ளது.  ஊர்தியின் இறக்கைகள் மீது அமைத்திருந்த 12,000 பரிதிச் செல்கள் சூரிய சக்தியைச் சுழலும் நான்கு காற்றாடிகளுக்கு அளித்தன.  ஊர்திக்கு உந்து சக்தி கொடுத்து வானத்தில் ஏற்றி இறக்கியவை அந்த நான்கு காற்றாடி மோட்டார்கள்.  ஒவ்வொன்றும் 10 குதிரைச் சக்தி (10 HP – 6 Kw Each) ஆற்றல் கொண்டது.  சூரிய ஒளி மாலை வேளையில் மங்கியதும்  சூரிய மின்கலன்கள் (Solar Cell Batteries) சேமித்திருந்த மின்னாற்றலை வான ஊர்தி பயன்படுத்திக் கொண்டது.  வானில் ஊர்தி பறக்கும் போது அதன் உச்ச உயரம் 8700 மீடர் (28,500 அடி).  வெகு நீளமான இறக்கைகளின் அகலம் : (63 மீடர்) 207 அடி.

    aj

    சோதனைப் பயிற்சி முடிந்து விமானம் தளத்தில் இறங்கி அதிர்வோடு நிற்கப் போகும் போது, விமானம் பக்கவாட்டில் சாய்ந்து இறக்கைகள் முறியாமல் தாங்கிக் கொள்ள இருபுறமும் உதவி ஆட்கள் ஓடி வந்தனர்.

    இதற்கு முன்பு நாசா மற்றும் பிரிட்டன், சைனா போன்ற சில நாடுகள் சூரிய சக்தியில் ஓடும் மனிதரில்லா ஊர்திகளை ஏவிப் பயிற்சி சோதனைகள் புரிந்துள்ளன..  இதுவே சூரிய சக்தியில் மனிதன் இயக்கிய வானவூர்தியின் நீண்ட காலப் பயணம், உச்ச உயரப் பதிவுகளாகும்.  நான்கு காற்றாடி மின்சார மோட்டர்களை சுவிஸ் நாட்டின் முன்னாள் ஜெட்விமானப் படையைச் சேர்ந்த ஆன்ரே போர்ச்பெர்க் (Former Fighter Jet Pilot, Andre Borschberg) இயக்கிச் செலுத்திய வானவூர்தி இது.  மேலும் ‘பரிதி உந்துசக்தி படைப்பு நிறுவகம்’ (Solar Impulse Deisgn Group) இடைவிட்டுப் பயணம் செய்த பல்வேறு பயிற்சி சோதனைகளைத்தான் இதுவரை நடத்தி வந்துள்ளது !

    சூரிய உந்துசக்தி நிறுவகத்தை உருவாக்கி வான ஊர்திகளை டிசைன் செய்து சோதனை செய்து வருபவர் இருவர் : விமானி ஆன்ரே போர்ச்பெர்க் & அவரது விமானக் கூட்டாளி பெர்டிராண்டு பிக்கார்டு (Andre Borschberg & Fellow Aviator Bertrand Piccard). “மனிதன் இயக்கிய சூரிய சக்தி விமானம் இரவு முழுவதும் பறந்தது இதுவே முதல் முறை.  அந்த நிமித்தமே எங்கள் குறிக்கோள் வெற்றி அடைந்ததை நிரூபித்தது.  காலைப் பொழுது புலர்ந்ததும் எதிர்பார்த்தை மீறி, மின்கலன்களில் இன்னும் 3 மணிநேர மின்னாற்றல் சேமிப்பு மிஞ்சி இருந்தது.  ஊர்தி தரையில் வந்திறங்கிய போதே உதய சூரியனிலிருந்து புதிய ஆற்றலைச் சேமிக்க ஆரம்பித்து விட்டது.  அடுத்தோர் இராப் பகல் பயணத்தைத் தொடரும் எங்கள் ஆர்வம் நின்று விடவில்லை. ‘தொடர்ப் பயண நினைப்பிலிருந்தும்’ எங்களை எதுவும் தடுக்க வில்லை.” என்று பெர்டிராண்டு பிக்கார்டு (Aviator, Solar Impulse Design Lab) செய்தி நிருபருக்குக் கூறினார் !  அடுத்த குறிக்கோள் 2013 ஆண்டுக்குள் ஆற்றல் மிக்க ஒரு பரிதி சக்தி வானவூர்தியைப் படைத்து உலகத்தை ஒருமுறை சுற்றி வரப் போவதாகக் கூறினார்.

    சூரிய உந்துசக்தி நிறுவகம் தயாரித்த வானவூர்தியின் சாதனைகள்

    சூரிய உந்துசக்தி நிறுவகத்தின் அதிபர் ஆன்ரே போர்ச்பெர்க் (57 வயது) தானே விமானியாக இயக்கி 26 மணிநேரம் தொடர்ந்து ஓட்டிய வானவூர்தி அது !  திட்ட அதிகாரி பெர்டிராண்டு பிக்கார்டு 1999 இல் வாயு பலூன் ஊர்தியில் வெற்றிகரமாய் உலகம் சுற்றி வந்தவர்.  பிக்கார்டின் தந்தையார், பட்டனார் விமானப் பறப்பில் புதிய வரலாற்றைப் படைத்தவர்.  அந்த முன்னோடி மனித வானவூர்தியின் பெயர் : HB-SIA. பயணம் ஆரம்பித்த விமானத்தளம் :  சுவிஸ் நாட்டின் தலைநகர் பெர்னிலிருந்து (Bern) 50 கி.மீ (30 மைல்) தூரத்தில் உள்ளது பயேர்ன் விமானத்தளம் (Payerne Airport).  புறப்பட்ட தேதி : 2010 ஜூலை 7 காலை மணி : 06:51.  கீழிறங்கிய தேதி : 2010 ஜூலை 8 காலை மணி : 09:00.  ஏறிய உச்ச உயரம் : 8700 மீடர் (28540 அடி).  பயணக் காலம் : 26 மணி 9 நிமிடம்.  பயேர்ன் விமானத் தளத்திலிருந்து மேலேறுவதற்கு முன்பு வானவூர்தி 14 மணிநேரம் சூரிய ஒளியில் மின்னாற்றலை முதலில் சேமித்தது.  இது நான்கு காற்றாடி மோட்டர்களை இயக்கவும் இரவில் விமானம் பயணம் செய்யவும் தேவைப் பட்டது.  63 மீடர் (207 அடி) நீளமுள்ள விமானத்தின் இறக்கைகள் (Similar to A340 Airbus Wings Length) 12,000 சூரிய செல்களைத் தாங்கி இருந்தன.  ஒவ்வொன்றும் 10 HP ஆற்றலுள்ள நான்கு மோட்டார்கள் காற்றாடிகளைச் சுற்றி ஊர்திக்கு உந்துசக்தி அளித்தன.

    இரவு விமானத்தைக் கவ்விய போது உச்ச மட்டக் காற்றடிப்பு ஊர்தியை ஆட வைத்து சேமிக்கப்பட்ட மின்னாற்றலை வீணாக்கி விடும் என்றோர் அச்சம் குடிகொண்டது !  ஆனால் அதிட்ட வசமாக அப்படி ஒன்றும் நிகழவில்லை.  சூரிய உந்துசக்தி நிறுவகத்தாரை முழு மூச்சாக ஊக்கிவித்த குறிக்கோள் :  1. பசுமைச் சக்தி மாசற்ற தூய சக்தி.  2. விலைமிக்க ஆயில் எரிசக்தியை விலக்குவது, சேமிப்பது.  3. பரிதியின் இயற்கைச் சக்தியை விமானத் துறை போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுவது !  2013–2014 ஆண்டுக்குள் அடுத்த சவால் சாதனையான அட்லாண்டிக் கடல் கடப்புப் பயணம், உலகச் சுற்றுப் பயணம் ஆகியவற்றில் முற்படுவர் என்று அறியப் படுகிறது.  இந்த சூரிய ஊர்தித் திட்டத்துக்கு நிதி ஒதுக்கு (75 மில்லியன் ஈரோ) 95 மில்லியன் டாலராகும் !  ஊர்தியின் எடை ஒரு ஸ்கூட்டர் அல்லது சிறு காரின் எடை அளவில் (1600 கி.கிராம்) அமைக்கப் பட்டது.

    2007 இல் சுவிஸ் சூரிய உந்துசக்தி நிறுவகப் பொறிநுணுக்கரால் டிசைன் செய்யப்பட்டு பல்வேறு மின்னியல், பொறியியல், விண்வெளி விமானத்துறை நிபுணரால் உருவானது.  12,000 மெலிந்த சூரிய செல்கள் 200 சதுர மீடர் பரப்பளவைக் கொண்டவை.  அவை அனுப்பிய மின்னாற்றலைச் சேமித்த மின்கலன்கள் 400 கி.கிராம் எடையுள்ள லிதியம் – பாலிமர் (Lithium Polymer Batteries) இரசாயனம் கொண்டவை.  ஒவ்வொரு மின்சார மோட்டாரில் (Electric Motor) 10 குதிரைச் சக்தி (6 Kw) ஆற்றல் உண்டானது.  நான்கு மோட்டாரில் சுற்றும் காற்றாடியின் நீளம் : 3.5 மீடர் (12 அடி).  அவை மெதுவாகச் சுற்றின.  ஊர்தியின் நீளம் 72 அடி.  இறக்கையின் அகலம் 208 அடி. உயரம் 21 அடி. இறக்கையின் பரப்பு 2200 சதுர அடி.  மொத்த எடை 1.6 டன்.   தரையிலிருந்து ஏறும் வேகம் 22 mph.  பறக்கும் வேகம் 43 mph.  உச்ச வேகம் 75 mph.   பயண உயரம் 27900 அடி (எவரெஸ்ட் உயரம்). உச்ச உயரம் 39000 அடி.

    சுவிஸ் விமானத் தளத்திலிருந்து விமானக் கட்டுப்பாடு அரங்கத்திலிருந்து இராப் பகலாக விமானிக்கு உதவி செய்து வந்தனர்.  அவரது பணி ஊர்தி நேராக, மட்டமாகச் சீராக மணிக்கு 100 கி.மீ. (மணிக்கு 60 மைல்) வேகத்தை மிஞ்சாமல் பறக்கக் கண்காணித்து வருவது.  உறக்கமின்றி ஓட்டும் விமானியை விழிப்புடனும், கவனிப்புடனும் இருக்கக் கட்டுப்பாட்டு அரங்கிலிருந்து பேசிக் கொண்டிருப்பது.  ஊர்தி பறக்கும் போது 8000 மீடர் (27000 அடி) உயரத்தில் -28 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் சென்றாலும் பரிதிச் செல்கள் பாதிக்கப் பட வில்லை.

    சூரிய சக்தி வானவூர்தின் முற்கால /எதிர்காலப் பயிற்சிச் சோதனைகள் :

    1.  2007 மே 22 :  பெர்டிராண்டு பிக்கார்டு நான்கு ஆண்டுகள் திட்டமிட்டு “சூரிய உந்துசக்தி” நிறுவகத்தைத் துவங்கி வைக்கிறார்.  அந்தத் திட்டப்படி சூரிய ஊர்தி உலகத்தை ஒருமுறை சுற்றி வருவதற்கு முன்பு அட்லாண்டிக் கடல் அகற்சியை ஒரே பயணத்தில் கடப்பது.

    2. 2009 ஜூன் 26 :  சுவிஸ் வட புறத்தே உள்ள டூபென்டார்பு (Duebendorf) இராணுவ விமானத் தளத்தில் சூரிய சக்தி முன்னோடி ஊர்தி (Prototype Plane) கொண்டாட்ட விழா.

    3. 2010 ஏப்ரல் 7 :  சூரிய உந்துசக்தி நிறுவகம் 1.5 மணி நேரப் பயணச் சோதனை செய்தல்.

    4. 2010 ஜூலை 7 :  சூரிய ஊர்தி பயேர்ன் விமானத்தளத்தில் காலைப் பொழுதில் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் இயக்கி மேலேறி எங்கும் நிற்காது 26 மணிநேர ஒற்றை இராப் பகல் பயணத்தை ஆரம்பித்து வைத்தது.

    5. 2010 ஜூலை 8 :  சூரிய ஊர்தி 26 மணி நேரப் பயணத்தை முடித்துப் பாதுகாப்பாக பயேர்ன் விமானத் தளத்தில் வந்திறங்குகிறது.  ஏறிய உச்ச உயரம் : கடல் மட்டத்துக்கு மேல் 8564 மீடர் (28540 அடி).

    6. 2011 ஆண்டில் :  இதே மாடல் சூரிய ஊர்தி (HB-SIB) நீண்ட தூர, நீண்ட காலப் பயிற்சியில் பல இராப் பகலாய் ஈடுபடுவது.

    7. 2012 ஆண்டு வரை :  ஊர்தி மாடல் HB-SIB விடப் பெரிய பரிதி ஊர்தியைப் படைத்து
    விமானிக்கு நகரத் தேவையான இடமளித்து நீண்ட காலப் பயணத்துக்குப் புதுமை நுணுக்கங்களைப் புகுத்தி பளு குறைந்த, மெல்லிய சூரிய செல்களால் இயங்கும் திறன் மிக்க பறக்கும் சாதனமாய் அமைப்பது.

    8.  2013 -2014 :  விருத்தியான பெரிய மாடலில் (Large & Improved HB-SIB) அட்லாண்டிக் கடலைக் கடப்பது,  உலகத்தைச் சுற்றி வருவது.


    +++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits : Swiss Solar Impulse Design & Other Web Sites

    1.  BBC News : Solar-powered Plane Lands Safely After 26 Hour Flight (July 8, 2010)

    2.  Swiss Solar Plane Makes History with Round-the-clock (Manned) Flight (July 8, 2010)

    3.  Aerospace – Solar Impulse Plane Packed with Technology (July 8, 2010)

    4.  BBC News – Science & Environment – Zephyr Solar Plane Set for Record Endurance Flight By: Jonathan Amos (July 14, 2010)

    5.  Wikipedia – Electric Aircraft – electric aircraft is an aircraft that runs on electric motors rather than internal combustion engines with electricity  coming from fuel cells, solar cells, ultracapacitors, power beaming and/or batteries.

    ******************

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) [July 17, 2010]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav
    ”சுத்தி விளையாடும் ஜீவன்கள் ஆன்மனை
    எத்தி விடாதது ஏந்துது -பத்திரக்கை:
    ஆனால் பசுக்களுக்கோ ஆட்டத்தில் ஆவேசம்:
    போனால் வராது பதி’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     
    ‘’அர்ஜுன அனுபவம் -கண்ணனை கிருபாளு மஹாராஜாகக் காணல்’’….!
    ————————————————————————————————————————

    kesav

    ‘’பார்த்தன் பரவச, பாலன் கிருபாளர்
    சேர்த்தணைப்பு கோவின் சிசுபசுவை: -நார்த்தங்காய்
    கன்றதற்கு அச்சுதன் கல்லுப்பு கண்டதில்
    வென்றது வில்சோர்வை விட்டு’’….கிரேசி மோகன்….!

    Share
  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-24

    மீனாட்சி பாலகணேஷ்

    ஆராரெனத் தாலாட்டுகின்ற அரசே!

    வாழ்வின் மிகப்பெரிய அதிசயம் குழந்தைகள்தாம். ஒரு சிறுகுழந்தை நம்முடன் இருந்துவிட்டால் போதும், நேரம்போவதே தெரிவதில்லை. அதன் குறும்புகளும், மழலையும், விளையாட்டுகளும் சொல்லொணா இன்பத்தை வாரிவாரி வழங்க, அதனையெல்லாம் நாமும் மாந்திமாந்திக் களித்திருப்போம். எப்படி ஒவ்வொரு சிறுகுழந்தையும் ஒவ்வொருவிதமான அழகில் திகழ்கின்றதோ, அதே போன்று ஒவ்வொரு பிள்ளைத்தமிழ் நூலும் புதுப்புதுக் கருத்துக்களில், நயத்தில், சொல்லாடலில் ஒளிர்கின்றது எனலாம். கீழே நாம் காணப்போகும் முருகப்பெருமான் மீதான பழனிப்பிள்ளைத்தமிழும் இவற்றுள் ஒன்றாகும்.

    *****

    amu

    நடைபழகக் கற்றுக் கொண்டுவிட்ட முருகன் எனும் சிறுகுழந்தையை, “வா ஐயா, வருக வருகவே!” எனத் தாயரும் செவிலியரும் அழைக்கும் அழகான காட்சி. பக்தியிலும் அன்பிலும் தோய்ந்து வெளிப்படும் ஆசைநிறைந்த சொற்கள்:

    “முருகையா, வளங்களும் நலங்களும் நிறைந்த இந்தப்பூவுலகில் தேவர்கள், அசுரர்கள் மற்ற எல்லோரும் தினந்தோறும் அத்தாணி மண்டபத்தில் கொலு வீற்றிருக்கும் உந்தன் கொலுவைக் காணச் செல்லாதவர்கள் யார் உளர்? செல்லாதார் ஆர்?(எவரும் இல்லை எனப் பொருள் கொள்ள வேண்டும்)

    “காணிக்கையாக உந்தனுக்கு அரிய பொருட்களைத் தராதவர்கள் எவர் உளர்? தாராதார் ஆர்? (இல்லை)

    “உனது பாதங்களை வணங்கித் தொழவேண்டி அவற்றினைத் தழுவிக் கிடக்காதவர்கள் யார் தான் இல்லை? தழுவாதார் ஆர்?

    “உன்னைக்காண எப்போது சமயம் கிட்டுமோவென மனதில் எண்ணிக்கொண்டு வராதவர்கள் தான் யார்? வாராதார் ஆர்? ( யாருமில்லை; எல்லோரும் வந்துள்ளனர் எனப்பொருள்)

    “அடியார்களை என்றும் காத்தருளும் உனது தகைமையை வாழ்த்திப் புகழ்ந்து பரவித் துதிக்குமாறு தமது மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ளாதவரும் உண்டோ? வசியாதார் ஆர்?

    “உனக்குண்டான பூசை முதலானவற்றை (வரிசைப்படி), முறைப்படி நடத்திவைக்க அனைவரும் காத்துக்கொண்டுள்ளனரே! வரிசைப்படியே நடத்தாதார் ஆர் உளர்?”

    இவ்வாறெல்லாம் ‘ஆரார்’- ஆர் ஆர்? யார் யார்? (எவர் எவர் எனப்பொருள் கொள்ள வேண்டும்) எனச் செவிலியர் கேட்டு, ‘ஆராரோ ஆரிரரோ’ எனப் பாடித் தொட்டிலில் இட்டு உன்னைத் தாலாட்டுகின்றனர். அவ்வாறு தாலாட்டப்படும் அரசே வருவாயாக! பழனிமலை எனும் சிவகிரியில் வாழும் ஐயனே வருக வருகவே!

    ‘ஆராரோ ஆரிராரோ’, என்பது அன்னையர் குழந்தைகளுக்கு வழக்கமாக இசைக்கும் தாலாட்டாகும். அதன் முக்கியச் சொல்லான ‘ஆரார்’ என்பதனையே பலவிதமான வினாக்களில் ‘யார் யார்?’ எனத்தொகுத்திசைத்திருப்பது மிக்க அருமையாக உள்ளது. பாடிக்கேட்போர் செவிக்கு இன்பமாகவும் உள்ளது.

    சீரார் நலஞ்சேர் பூவுலகிற் றேவா சுரரின் மற்றையரிற்
    றினமு முனது கொலுக்காணச் செல்லா தாரார் திறைவளங்கள்
    தாரா தாரா ருனது பதந் தனையே வணங்கித் தொழவேண்டித்
    தழுவா தாரா ரெவ்வேளை சமயங் கிடைக்கு மெனநினைந்து
    வாரா தாரா ருனதருளை வாழ்த்திப் புகழ்ந்து துதிக்கமனம்
    வசியா தாரார் பணிவிடைகள் வரிசைப் படியே நடத்தாதார்
    ஆரா ரெனத்தா லாட்டுகின்ற வரசே வருக வருகவே
    அருள்சேர் பழனிச் சிவகிரிவா ழையா வருக வருகவே.

    (பழனிப் பிள்ளைத்தமிழ்- சின்னப்ப நாயக்கர்- வருகைப்பருவம்)

    திரு ஆவினன்குடி, சிவகிரி எனப்போற்றப்படும் பழனிமலையிலுறை முருகப்பெருமான் மீது சின்னப்ப நாயக்கர் என்பவரால் இயற்றப்பட்டது இப்பிள்ளைத்தமிழ் நூல்.

    பிள்ளைத்தமிழ் நூல்களில் பாடப்படும் பருவங்கள் வரையறுக்கப்பட்டிருந்தாலும், இரண்டு அல்லது மூன்று பருவத்து நிகழ்வுகள் கலந்துவரும். எடுத்துக்காட்டாக, இப்பாடலையே எடுத்துக் கொள்ளலாம். வருகைப்பருவத்துப் பாடல்- இதில், இந்த வருகைப்பருவப் பாடலில் அன்னையர் தாலாட்டு இசைப்பது அழகுற, நயமுற, சந்தத்துடன் புனையப்பட்டுள்ளது பயிலுவோருக்கு இனிமை பயக்கின்றது.

    *****

    சின்னஞ்சிறு குழந்தை முருகன்; செவிலியரும் தாயாரும் கைநிறைய, தட்டு நிறைய அணிமணிகளை ஏந்திக்கொண்டு, குழந்தையை அலங்கரித்து அழகுபார்க்கக் காத்து நிற்கின்றனர். ‘ஐயனே வா,’ எனக் கைகளை நீட்டி அழைக்கின்றனர்.

    “பொன் போன்றவனே வா, உனக்குப் பொன்னாலான அரைஞாணினைப்பூட்டுகிறேன், வா,” என்கிறாள் செவிலித்தாய்.

    “சிறிய அழகான பொற்சதங்கையை உன் கால்களில் அணிவிக்க வேண்டாமோ?” என்கிறாள் அன்னை பார்வதி!

    “மணிகளாலானதும், ஓம் எனும் வடிவிலமைந்ததுமான பதக்கத்தினை பூட்டிவிடுகிறேன், வா ஐயா,” என்பாள் இன்னொருத்தி.

    குழந்தை, அழைப்பவர்களைக் கண்டு மகிழ்ச்சிகொண்டு தவழ்ந்தோடி அவர்களிடம் செல்கின்றதாம். அந்தப் பூவனைய மகவினை வாரியணைத்து உச்சிமுகர்ந்து, அவனை முகத்தோடு சேர்த்து அணைத்துக் கொள்கிறார்கள் அவர்கள். சீராட்டிப் பாராட்டிக் கொஞ்சி முத்தமிடுகிறார்கள். “அம்மா, அத்தா,” என மழலைச்சொல் பேச்சினைச் செவிமடுத்து உள்ளம் பூரிக்கின்றனராம்.

    எதற்குமே ஒப்பாகாத (தன்னேரில்லா) அவனுடைய அழகான நெற்றியில் திருநீற்றினைப்பூசி, அழகான திலகத்தினையும் இடுகின்றனர். இன்னொருத்தி அவன் விழிகளுக்கு மைதீட்டுகிறாள்.

    “சுவர்க்கத்தில் வாழ்பவனே! மேலாகத்தானே! (சுவர்க்கத்தை அளிப்பவனே எனவும் பொருள் கொள்ளலாம்)! தேவர்கள் தொழுதேத்தும் தேவசேனாபதியே வருவாய்! பெருமை பொருந்திய திருமாலின் மருமகனே வருவாயாக!” என்றெல்லாம் முருகனைக் கொஞ்சி அழைக்கின்றனர்.

    தெய்வத்தைக் குழந்தையாக்கிக் கொஞ்சி அழைத்து அலங்காரமும் செய்து கண்டு களிக்க என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்? நாம் பாடலிலாவது அந்த உணர்வினைப் பெற்று மகிழலாமல்லவா?

    பொன்னே வருக பொன்னரைஞாண் பூட்ட வருக சிறுசதங்கை
    புனைய வருக மணிப்பதக்கம் பூண வருக தவழ்ந்தோடி
    முன்னே வருக செவிலியர்கண் முகத்தோ டணைத்துச் சீராட்டி
    முத்த மிடற்கு வருகவெதிர் மொழிகண் மழலை சொலவருக
    தன்னே ரில்லா நுதற்றிலகந் தரிக்க வருக விழியினின்மை
    சாத்த வருக மேலாகத் தானே வருக தேவர்தொழு
    மன்னே வருக மாமாலின் மருகா வருக வருகவே
    வளஞ்சேர் பழனிச் சிவகிரிவாழ் வடிவேல் முருகா வருகவே.

    (பழனிப் பிள்ளைத்தமிழ்- சின்னப்ப நாயக்கர்- வருகைப்பருவம்)

    முந்தைய பாடலைப்போலவே இதிலும் வருகைப்பருவத்தில், முத்தமிடும் நிகழ்வும் போற்றியுரைக்கப்படுகின்றது. ‘தவழ்ந்தோடி வருக,’ எனுங்கால், செங்கீரையாடும் பருவமும் சுட்டப்படுகின்றதல்லவா? மிகவும் இனிமையான பாடல். சீர்காழி திரு. கோவிந்தராஜன் அவர்கள் பக்தி பெருகும் குரலில் மிக இனிமையாகப் பாடியுள்ளார்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    *************

    Share
  • திருப்பாதிரிப்புலியூர் பதிகம்

    –சுரேஜமீ

     ​
    இறைவன்: பாடலீஸ்வரர்
    இறைவி:   கோதைநாயகி

     

    patirippuliyur

    காப்பு
    நம்பினார்ப் பாடிடுவர் இப்பதிகம் தோன்றிநாதர்
    கும்பிட்டு மகிழ்வர் நிறை!

    தடையறு பதிகம்
    திருஞான சம்பந்தர் தேவாரம் பாடியுந்தன்
    பெருமை பறைசாற்றிப் பாதம் பணிந்திட்டார்
    திருப்பா திரிப்புலி யூருறை மன்னவனே
    ஒருபா உனைப்பாட வைத்திட்டாய் என்னை! (1)

    கல்லோடு அப்பரைக் கடலினிலே வீசிடினும்
    தில்லாய்க் கரைசேர்ந்தார் தோன்றிநாதர் அண்டியதால்
    நில்லாத் துயரமுமே நீங்கிடும் நின்னருளால்
    இல்லா இனிஇல்லை ஈசன் இருப்பிடத்தில்! (2)

    வேண்டியுனைக் கேட்கின்றேன் பாப்புலிவாழ் ஈசனே
    தாண்டத் தடைகளையும் தன்மையுடன் நேசனே
    யாண்டும் மகிழ்திருக்க யாவரும் நலமிருக்கத்
    தூண்டும் மதிதனையே கோதை மணவாளா! (3)

    கடைஞாலுர் வாழ்கின்ற காசிநகர் வாசனைக்
    கடைத்தேறப் பற்றிடுவாய்க் கச்சிதமாய் ஈசனை
    எடைதேற்றி வாழுமொரு மாக்களைத் தள்ளித்
    தடைகளைந்து வெற்றிநடை போட்டிடவே நாளும்! (4)

    அன்று உனைத்தொழுத அக்னி சாட்சியாக
    என்றும் தமிழ்போற்றும் அகத்தியர் காட்சியாக
    இன்று உறுதியுடன் உன்னடியைப் போற்றுகிறேன்
    நன்று எனக்கருள்வாய் நாயகனே வேண்டுகிறேன்! (5)

    வந்திடுவர் பாப்புலியோர் நின்கருணை வேண்டித்
    தந்திடுவர் சம்மதமாய்த் தன்னையுமே நின்று
    ஐந்தெழுத்து மந்திரத்தால் உன்புகழைப் பாடி
    சிந்திடுவர் பக்திரசம் பாரினிலே என்றும்! (6)

    எப்பிறப்பில் யான்செய்த புண்ணியமோ சொல்வாய்
    இப்பிறப்பில் உந்தன் திருத்தலத்தைச் சேர
    ஒப்பிலா நின்பாதம் போற்றிடவே என்றும்
    தப்பிலா செய்துவிடு தோன்றாத் துணைநாதா! (7)

    எந்தையாய் எப்போதும் என்னருகே நீயிருக்க
    மந்தையாய் மானுடத்தில் மரிக்காமல் நானிருக்க
    விந்தையாம் உன்நாமம் செப்பிட்டுப் பொழுதிருக்கச்
    சிந்தையால் வென்றிடுவேன் சிக்கல்கள் தானிருக்க! (8)

    நம்பிவந்த உத்தமர்தம் நெஞ்சினிலே நீயமர்ந்து
    வெம்பும் அவருள்ளம் வேண்டுவது தந்துவிடு
    தெம்பாம் சிவநாமம் சிந்தையிலே தைத்திட்டு
    எம்மான் அருள்செய்ய என்றுமுனை யாம்தொழவே! (9)

    திக்கெட்டும் நிற்பவனே தில்லை நடராசனே
    இக்கட்டு வந்திடுமோ நின்னடிச் சரணார்க்குப்
    பாக்கட்டு சேர்த்திட்டேன் பாம்பணியும் நாதா
    வாக்கெடா வண்ணம் ​எமையென்றும் ​ காப்பாய் (10)

    (இப்பதிகம் பாடுவோர் வேண்டுவன கிட்டும்படி ஈசன் அருளும், தமிழின் கொடையும் இருக்கக் கடவது)

     

     

    Share