Month: August 2016

  • என்னைக் கைவிடு! 

    -நிர்மலா ராகவன்

    “நல்லா யோசிச்சுப் பாத்தியா, சியாமளா?” தந்தையின் குரலில் கவலை மிகுந்திருந்தது. மூன்று வருடங்களோ, இல்லை ஐந்து வருடங்களோ
    சேர்ந்து வாழ்வதற்கா கல்யாணம்?

    ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்களே!பெற்ற ஒரே பெண்ணுக்குத் தன் முயற்சியால்
    ஒரு கணவனைத் தேடித்தர டியவில்லையே என்ற அவருடைய நீண்டகால வேதனை இன்னும் மிகுந்தது.

    “சதீஷ் காண்ட்ராக்டிலே வந்தவன்! அது முடிஞ்சதும் வந்தஊருக்கே திரும்பிப்போயிடணுமேம்மா!”கட்டிடவேலை செய்துகொண்டிருந்தபோது, ஒரு விபத்தால் முதுகில் பலத்த அடிபட,சில ஆயிரம் நஷ்ட ஈடு பெற்று வீட்டிலேயே நிரந்தரமாக இருக்க வேண்டியநிலை தனக்கு ஏன் வந்தது என்று மீண்டும் மீண்டும் குமைவதைத் தவிர, உருப்படியாக என்னசெய்ய முடிந்தது தன்னால்?

    எட்டு வகுப்புடன் படிப்பை நிறுத்திக்கொண்ட சியாமளா தொழிற்சாலையில் வேலை செய்வதால்தான் குடும்பமே ஓடுகிறது. இந்த நிலையில் பேச தனக்கு என்ன அருகதை?

    “சதீஷ்தானேதான், நாம்ப ரெண்டுபேரும்
    கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?’ன்னு கேட்டாருப்பா,”

    அவருடைய அனுமதியை வேண்டி நின்ற மகளைப் பார்த்து மெல்லச்சிரித்தார் சுப்பையா. “ஒனக்குச் சரின்னு பட்டா, சரிதான்!” சதீஷ் அவர்கள் வீட்டுக்கு வந்தபோதே இப்படி ஓர் எண்ணம் அவனுக்குள் இருக்கும் என்று அவர் பயந்திருந்தது நிஜமாகப் போயிற்றே!

    பங்களா தேஷிகளுக்கே உரிய கவர்ச்சியான கண்களும், நீண்ட மூக்கும் எவரையும் கவர்ந்துவிடும்.

    அத்துடன், அவனுடைய கடுமையான உழைப்பும், சேமிக்கும்திறனும்!  இதைவிட அருமையான துணை சியாமளாவுக்குக் கிடைக்க முடியாது என்பதென்னவோ உண்மை என்று ஒரு சிறுகசப்புடன் ஒத்துக்கொண்டார் சுப்பையா.

    ஆனால், இருவருக்குமிடைய ஒரு பெரிய வித்தியாசம் இருந்ததே! இருபத்தெட்டுவயது இளைஞன் சதீஷ். சியாமளாவோ இருபத்தெட்டு வயதாகியும், பல வரன்கள்பெண்பார்க்க வந்துவிட்டு, `பெண் கறுப்பு!’ என்று தட்டிக்கழிக்கப் பார்த்து, பின் சற்றுஇறங்கிவந்து, எவ்வளவு பவுன் நகை போடுவீங்க?’ என்று பெரிய மனது பண்ணிப் பேரம்பேசிவிட்டு, வியாபாரம்’ படியாததால் ஒதுங்கிப் போனதன் பலனாக,உள்ளுக்குள்ளேயே மறுகிக்கொண்டிருப்பவள். பிறர் அவளை நிராகரித்துவிட்டுப் போகும் ஒவ்வொரு
    முறையும், தன் ஏமாற்றத்தைமறைத்துக்கொண்டு, `வயசான காலத்திலே ஒங்களுக்குத் துணையாதான் இருந்துட்டுப் போறேனேப்பா!’ என்று சமாதானப்படுத்துவாள் சியாமளா.

     `இவ்வளவுபேசிட்டு, கட்டிக்கிட்டதும், குடிப்பான். அடிப்பான். நான் சம்பாதிக்கிறதையும்பிடுங்கிப்பான். அதான் அன்னாடம் பாக்கறேனே அந்தக் கண்ராவியை! மூஞ்சியெல்லாம் ரத்தக்காயமா வர்றாளுங்க ஒவ்வொருத்தியும்! நான் சுதந்தரமாஇருந்துட்டுப்போறேனே!’

    வெளியில் வீறாப்பாகப் பேசினாலும், பழைய தோழிகளைஅவர்கள்பிள்ளைகுட்டிகளுடன் பார்க்கும்போது, அவள் மனம் பொருமத்தான் செய்தது. இப்போது அவளையும் ஒருவன் மணக்க விரும்பி, வேண்டுகிறான்! பெருமையாக உணர்ந்தாள்.

    “அப்பா! கல்யாணத்துக்கு அப்புறம் அவரும் நம்பகூட இங்கதான் வந்துதங்கப்போறாரு. ஒங்களைவிட்டு எங்கேயும் வரமாட்டேன்னு கண்டிசனாசொல்லிட்டேன்ல!”

    தன் நன்றியை ஒரு புன்முறுவல் மூலம் வெளிப்படுத்தினார் சுப்பையா.

    “சாயந்திரம் ஸ்டூடியோவுக்குப் போய், நான் ஒரு போட்டோ எடுத்துக்கணும். அவரோட அம்மாவுக்கு அனுப்ப!”

    சுப்பையாவின் முகத்தில்படர்ந்த கலவரத்தைப் பார்த்துச் சியாமளாசிரித்தாள். நம்ம தமிழாளுங்க மாதிரி நினைச்சுட்டீங்களா இவரையும்? அழகு, கலர், அந்தஸ்து- இப்படிஎதிலேயாவது குறை கண்டுபிடிச்சு, மத்தவங்களைக் கேவலமா பேசறதாலேயேஅவங்க என்னமோ ஒரு படி ஒசந்து இருக்கிறதா நினைக்கிற  சின்னப் புத் சதீஷூக்குக்கிடையாது!”

    சுப்பையாவின் சந்தேகம் முழுவதாக மாறவில்லை என்பதை அவருடைய கவலைதோய்ந்த முகமே காட்டிக்கொடுக்க, சியாமளா மேலும் சொன்னாள்: “நான் ஏன்இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கேன்னு எல்லாத்தையும் அவர்கிட்டேசொல்லிட்டேன். அவர் சொல்றாரு, ஒன்னோட நிஜ அழகு புரியாம ஒதுக்கிட்டுப்போனவங்க அடிமுட்டாளுங்க!’ அப்படின்னு சொல்றாருப்பா சதீஷ்!”

    வார்த்தைக்குவார்த்தை அவன் பெயரை உச்சரிப்பதிலேயே ஆனந்தம் காணும் மகளின் உற்சாகத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்க விரும்ப
    வில்லை சுப்பையா. `அவன் நிரந்தரமாக இந்த மலேசிய மண்ணில் கால் பதித்து இருக்கமுடியுமோ?’என்றுஆரம்பத்தில் எழுந்த உறுத்தல்கூட, `இந்த ஒலகத்திலே எதுதான் நிரந்தரம்!’ என்ற வேதாந்தத்தில் மறைந்தது.

    மாலையும் கழுத்துமாக சதீஷின் பக்கத்தில் அமர்ந்திருந்த சியாமளா மகிழ்ச்சியின் எல்லையிலிருந்தாள். ’இவனுங்களை எல்லாம் நம்பவே கூடாது. கையிலே பிள்ளையைக் குடுத்துட்டுஓடிடுவான்!’ என்று தோழிகள் எச்சரிக்கை செய்ததைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதது எத்தனை நல்லதாகப் போயிற்று!

    அவன் மனத்துள் இருக்கும் அன்பு பிறர் கண்ணுக்குத் தெரியவில்லை. ஏழை, அயல்நாட்டுக்காரன், அதிலும் அழகன் என்பதில்
    விளைந்த அலட்சியம், பொறாமை!

    தன்னைப்பற்றி தரக்குறைவாகப் பேசியவர்களைப் பொய்யர்களாக்கிவிட்டு, இப்போது தாலிகட்டி, மனைவியாக ஏற்றுக்கொண்டிருக்கிறான்!

    மாதங்கள் நிமிடங்களாகிப் பறக்க, தன்னைவிட பாக்கியசாலி எவருமில்லை

    என்றுஎண்ணி எண்ணி சியாமளா இறுமாந்துபோனாள். மேலே போனால், கீழே விழவும்கூடும் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

    `வேலைக்கு வந்த மலேசிய நாட்டில், இந்நாட்டுப் பெண்களைத்  திருமணம்புரிந்துகொள்ளக் கூடாது என்ற விதியை மீறிய அந்நிய நாட்டுத் தொழிலாளிகள் நாடுகடத்தப்படுவார்கள்!’ புதிய சட்டமொன்று அமுலுக்கு வர, சதீஷின்

    குறும்புப்பேச்சும், பெரிய கண்களின் மின்னல் வெட்டும் போன இடம் தெரியவில்லை. சியாமளாவுக்கோ, `இனி என்ன?’ என்ற கேள்வி மட்டும் விஸ்வரூபம் எடுத்து பயங்கரமாகத் தெரிந்தது. இப்படி அகாலமாக முடிவதற்காஅவ்வளவு இன்பம் நிறைந்த மணவாழ்வு கிட்டியது?

    அடுத்த பத்து நாட்கள் நகர முடியாது நகர்ந்தன. வீட்டில்
    அசாதாரண மௌனம் நிலவியது. அடுத்த அறிக்கை, `உள்நாட்டுப் பெண்களை மணந்தவர்கள் அவ்வப்போது குறுகியவருகை மேற்கொண்டு, தம் மனைவி மக்களை பார்த்துப் போகலாம்!’ என்று சிறிதுகருணையுடன் வெளிவந்தது.

    “சதீஷ்! நீங்க திரும்பிப்போக விடமாட்டேன்!“ கணவனைக் கட்டிக்கொண்டு கதறினாள்சியாமளா. தன்னை மணந்த செயல் ஒரு குற்றமா? அதற்குத் தண்டனைபோல் மீண்டும் பிறந்த நாட்டில் ஏழ்மையிலேயே உழல, திருப்பி அனுப்பி வைக்கப்படுவார் என்ற நினைவே அவளை வாட்டியது.

    தன் உடலைச் சுற்றியிருந்த அவளுடைய கரங்களை மெல்ல விலக்கினான் சதீஷ். “நான் திரும்பிப் போனா, அங்கே என்ன இருக்கு?

    எவ்வளவு படிச்சிருந்தாதான் என்ன! பசி, பட்டினிதான்! அங்கே நல்ல வேலை கிடைச்சிருந்தா, இங்கே எதுக்கு வந்துதொலைச்சிருக்கப் போறேன்!”

    சியாமளா அவன் முகத்தையே பார்த்தாள். என்ன சொல்ல வருகிறான்?

    “நல்லவேளை, நம்ப கல்யாணம் கோயில்ல நடந்திச்சு.
    இன்னும் பதிவு செய்யலே!”

    அவள் திடுக்கிட்டாள். கல்யாணமே நடக்கவில்லை என்றுசாதிக்கப்போகிறானா?அதற்காகத்தான் அவள் எவ்வளவோ வற்புறுத்தியும்,
    அவளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லையோ?

    சியாமளாவின் முகம்போன போக்கைக் கவனிக்கும் மனநிலையில் இருக்கவில்லை அவன். அது தன்னுடைய வாழ்க்கைப்பிரச்னை மட்டுமே
    என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தான்.

    “நாங்க ஏழைதான்! அதுக்காக, `வந்த இடத்திலே சன்னியாசிமாதிரி இருங்க!’அப்படின்னா முடியுமா? ஒன்னைப் பிடிச்சுத்தான் கல்யாணம் செய்துக்கிட்டேன்,சியாமளா. ஆனா, என் சுயநலத்துக்காக மத்தவங்க கஷ்டப்படணுமா?” “என்னசொல்றீங்க?” ஈனஸ்வரத்தில் கேட்டாள் சியாமளா

    “நான் சம்பாதிச்சு அனுப்பற பணத்தாலேதான் எங்கப்பா,
    அம்மா, தங்கச்சிங்க எல்லாரும் நல்லாச் சாப்பிடறாங்க. தம்பிங்களும் பள்ளிக்கூடத்துக்குப் போக முடியுது.

    நான் திரும்பிப்போறதா இல்லே!”சியாமளாவுக்குச் சற்றுத்தெம்பு பிறந்தது. வந்த வேகத்திலேயே அதுதொலைந்தது, அடுத்து அவன் கூறியதைக் கேட்டு.“நாம்ப ஒண்ணா
    இருந்தா, ஏதாவது தகறாறு வரும். அதனால வேற
    வேலைதேடிக்கிட்டேன். வேற ஊரிலே!”அவன் தன்னை விட்டுப் போகப்போகிறான்!

    அந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியாது, அவளுடைய வாய் பிளந்தது. மூச்சுக் கன வேகமாக, இரைப்பதுபோல் வெளிவந்தது.

    முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான். “நான் என்ன செய்யறது! எனக்கு வேறவழி தெரியலே!”
    மன்னிப்பு வேண்டும் தொனி.

    சதீஷ் சற்றும் எதிர்பாராத ஒரு காரியத்தைச் செய்தாள்
    சியாமளா. அவனைக் கையெடுத்துக் கும்பிட்டாள்.“என்னையும் ஒரு பொண்ணா மதிச்சு ஏத்துக்கிட்டீங்களே, அதுவே போதும்  நன்றின்னு வாய்வார்த்தையா சொன்னா நல்லாயிருக்காது.

    அப்பா மொதல்லேயே சந்தேகப்பட்டாரு, இந்த ஒறவு நிலைக்க முடியுமான்னு.

    ஆனா, கல்யாணம், கணவன்,குடும்பம் எல்லாம் வேணும்கிற வெறிதான் அப்போ இருந்திச்சு எனக்கு. இப்போ..!”மேலே பேசத் தெரியாது விக்கினாள்.

    குற்ற உணர்வும், வேதனையும் உலுக்க, “சியாமா!” என்று அவளை நெருங்கினான் சதீஷ்.

    சரேலென விலகிக்கொண்டாள். “சொல்ல இன்னும் என்ன இருக்கு! என் வேதனையை அதிகப்படுத்தாதீங்க. ப்ளீஸ்! இப்பவே இந்த வீட்டைவிட்டு போயிடுங்க! இனிமே வராதீங்க!” பெரிதாக அழ ஆரம்பித்தாள் சியாமளா.

    அவள் கெஞ்சுவாள், இல்லை ஆத்திரப்படுவாள் என்றெல்லாம் எதிர்பார்த்து எல்லாவற்றிற்கும் விடை தேடி வைத்திருந்தவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. தலைகுனிந்த
    நிலையில், தனது சொற்ப உடைமைகளைத் திரட்ட ஆரம்பித்தான்.

     

     

    Share
  • ‘’குமார சம்பவம்….!”

    –கிரேசி மோகன்      


    கோனிங்(கு) இமவான் குளிர்சா மரமிங்கு
    வானின் வளர்மதி வெண்கவரிமானின்வால்
    ஆகமலை ஆளும் அரசனே இங்குமலை
    ஆக இருத்தல் அழகு….(13)

    கூச்சமுறும் கின்னரப்பெண் கூறை களைகையில்
    ஆச்சரியம் கொள்வாள்அதைப்பார்த்துமூச்சிறைக்க
    மேகம் குகைவாசல் போகும் திரையாக
    மோகத் துணைபோகும் மஞ்சு….(14)

    தேவகங்கை நீர்த்திவலை, தேவதாரு தூமணம்
    மேவுமயிற் தோகை மிருதுவும்தாவிவரும்
    காற்றில் கலந்திருக்கக் காட்டில் களைத்தவேடர்
    ஏற்றடைவர் ஏகாந்த மே….(15)

    ஏழுரிஷி கொய்தபின்பு எஞ்சும் உயிர்மொட்டை
    வாழும் கமலங்கள், வெற்படியில்சூழும்
    கதிரோனின் மேல்நோக்கும் கைக்கிரணம் பட்டு
    உதிரும்முன் பூக்கும் உவந்து….(16)

    வேள்விப் பொருட்கள் விளைவதால், பூபாரக்
    கேள்விக் குறிக்குவிடை கண்டதால்நூல்வைத்த
    நான்முகன் யாகத்தில் கோன்பெறும் பாக(ம்)இம
    வான்முகம் வைத்தான் விழைந்து….(17)

    பித்ருக்கள் மானசீகப் புத்ரி, முனிகணங்கள்
    தத்தெடுத்த நெஞ்சின் தவப்புதல்விஉத்தமி
    மேனை மணம்புரிந்தாள் மேருவின் தோழ(ன்)இம
    வானையவன் வம்சம் வளர்த்து….(18)

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 76-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இந்தவாரப் படக்கவிதைப் போட்டிக்கான புகைப்படத்தை எடுத்துத் தந்திருப்பவர் திரு. பிரேம்நாத் திருமலைசாமி. இதனைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்திருப்பவர் வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் வல்லமை இதழின் நன்றி!

    goat and rooster

    மாலை மரியாதையோடு(!), கயிற்றிலே கட்டுண்டிருக்கும் (பலி)ஆடும், தன் உயிருக்கு நேரவிருக்கும் துன்பத்தை அறியாது தரையிலே கிடக்கும் சேவலும் கொல்லாமையை விரும்பும் நல்லோர் மனத்தை நடுங்க வைக்கின்றன.

    புத்தரும், எண்ணிறந்த சித்தரும் நம் மண்ணில்தோன்றி ”உயிர்க்கொலையைக் கைவிடுக!” என்று கடிந்துரைத்துப் பயனென்ன? அக்கொடுமைகள் இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன!

    சரி…இந்தப் புகைப்படம் நம் கவிஞர்களிடையே எத்தகைய எண்ணஅலையை எழுப்பியிருக்கின்றது எனக் கண்டுவருவோம்!

    ***

    ”வளர்த்தவர்களே தம்மைக் கொல்லும் கொடுமையைச் சொல்ல வாயில்லையே” என்று ஏங்கும் வாயில்லா சீவன்களின் புலம்பலை உணர்வுபூர்வமாய்ப் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. ராதா விஸ்வநாதன்.

    அட……
    நீயும் இங்கு இருக்கிறாயா
    மரணத்தின் பயணத்தில்
    துணையாக வந்த உனக்கு
    என் கடைசி வாழ்த்துக்கள்

    நாமிருவரின் ஐம் புலனில்
    ஒரு புலனான வாய் உண்பதற்கே உள்ளது
    மனிதனைப்போல் பேச இயலாது
    பேசும் சக்தியினை கொடுக்காத‌
    இறைவனை என்ன சொல்ல…

    மனிதர்களே வளர்த்து நம்மை
    கொல்வதை யாரிடம் சொல்ல‌
    பேசும் சக்தியிருந்தால்
    கூட்டம் கூடி குரல் எழுப்பலாம்…
    அறுவாளால் அறுபடும் பொழுது…

    இவர்கள் வாழ
    நம்மவர் பலி
    […]
    மாலை போட்டு பொட்டு வைத்து
    பாவத்தை மறைக்க‌
    இவர்கள் ஓதும் மந்திரச்சொல்
    குலதெய்வத்திற்கு பலி

    எந்த சாமி பலி கேட்டு
    உண்டு களிக்கிறது…
    உண்டு களித்து
    ஊனைப் பெருக்கி வாழுமிவர்களும்
    மாள்வது நிச்சியமே

    புத்தனும் வள்ளுவனும் போதித்தது
    புவியில் காணாமல் போய்விட்டது…

    ***

    ’கருணையே வடிவான இறைவனா உயிர்ப்பலி கேட்பான்? இல்லவே இல்லை! ஆதலால் இம்மடமையை ஒழித்துப் பிற உயிர்களிடத்தும் இரக்கம் காட்டுதல் உம் கடமை’ என்று மாந்தர்க்கு நன்மொழி நவிலும் திரு. செண்பக ஜெகதீசனின் கவிதையிது!

    ஆடும் கோழியும் பலிகேட்டே
    ஆண்டவன் என்றும் வருவதில்லை,
    தேடும் இறைவன் வெளியிலில்லை
    தேடிப் பாராய் உன்னிடமே,
    கூடும் கூட்டமும் துணையில்லை
    கூறும் வார்த்தையும் உண்மையில்லை,
    வாடும் மாந்தர்க் குதவிடுவாய்
    வந்து சேரும் பரம்பொருளே…!

    ***

    ”வலியாரை வதைக்கத் திறனற்ற மானுடன் மெலியாரை வதைத்து மகிழ்வு காண்கின்றான். கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பதுதான் இவன் கோட்பாடோ?” என்று மிருகங்கள் வாயிலாய் மனிதனின் அருளற்ற இருள் மனத்தை வெளிச்சமிட்டுள்ளார் முனைவர் மா. பத்மபிரியா.

    பலசாலிகளை பலியிடுவதில்லை
    • நம்பிக்கை வைத்தே
    நம்பி தான் வந்தோம்
    நம்பிக்கை நமக்கு
    மூடநம்பிக்கையோ அவா்களுக்கு
    • தழையிட்டவரென நம்பிடாதே
    தலைமுடி காணிக்கை அவா்களுக்கு
    தலையெடுத்தலோ நமக்கு
    • விரதம் இருப்பதும்
    விரதம் முடிப்பதும்
    வலியவன் சாத்திரம்
    […]
    • காத்திருக்கும் பலிபீடம்
    காலங்காலமாய்
    கதைமுடிப்பது
    கட்டுண்டவா்களை மட்டுமே
    • கொன்றால் பாபம்
    தின்றால் தீரும்
    நன்றாய் வகுத்தான்
    நரனுக்கான நீதியென்று
    • வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
    புல்லை காட்டி
    எல்லை தீட்டினான்…

    ***

    மிருகவதைக்கு எதிரான அறச்சீற்றம் கவிஞர்களின் கவிதைகளில் பொங்கிப் பாய்வதைக் காண்கின்றேன். இனி இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார் எனப் பார்ப்போம்!

    ***

    கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா உயிரும் தொழும் என்றார் தெய்வப் புலவர். ஆனால் மனிதர்கள் பிற உயிர்கள் தொழத்தக்க வகையில் வாழவில்லை; மாறாக அவை அழத்தக்க வகையிலேயே வாழ்கின்றனர். என் செய்வது? தாம் வேண்டும் வரம்பெற வாயில்லாச் சீவன்களைக் கடவுளர்க்குப் பலியிடும் அவர்தம் மடமையை என்னென்பது?

    ஆனால் அந்தச் சீவன்களோ தம்மைக் கொல்வார்மீதும் கோபம் கொள்வதில்லையாம். தம்மை வெட்டுவதால் மனிதர்களின் கவலைகள் பறக்கின்றன எனில் அவர்கள் கையால் வெட்டுப்படவே தாம் மீண்டும் பிறக்கலாம் என அவை சிந்திப்பதாய் எழுதப்பட்டுள்ள ஒரு கவிதை உள்ளம் உருக்குகின்றது.

    முதல் பலி
    நீயா? நானா?
    தெரியாது.
    ஆனால்
    அவர்கள் வரம் பெற
    நமக்குச் சாபம்!
    வெட்டத்தான் வளர்க்கின்றார்கள்
    என நினைத்து
    இவர்களிடம் பாசம்
    காட்ட நாம் மறந்ததில்லை!
    நம்மை வெட்டுவதால்
    இவர்கள் கவலைகள்
    மறைகிறதென்றால்
    நாம்
    மீண்டும் பிறப்போம்!

    மிருகங்களிடத்தும் தெய்வகுணத்தைப் புகுத்தியிருக்கும் இக் கவிதையின் ஆசிரியர் திரு. ஆனந்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவிக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!

     

     

    Share
  • இலக்கியம் எழுதாத நட்பு (ஏழாம் பகுதி )

    க. பாலசுப்பிரமணியன்

     

    நண்பா..!
    கொடுத்துச் சிவந்த கைகள்
    உனக்கு…!
    வாங்கிச் சிவந்த கைகள்
    எனக்கு….!!

    கருவிலே அசைவையும் ..
    உருவிலே வடிவையும் …..
    கண்ணிலே ஒளியையும் .
    கருத்திலே அறிவையும்
    கருணையாய்த் தந்தாய் !

    உதட்டிலே சிரிப்பையும்
    உள்ளத்தில் உவகையும்
    உதிரத்தில் துடிப்பையும்
    உறவினில் அன்பையும் ..
    அளவின்றிக் கொடுத்தாய் !

    வாங்கியே வளர்ந்தவன்
    வாழ்வினில் கொடுத்தேனோ ?

    எனதென்று எனதென்று ..
    நானுரைக்க..
    நாற்புறமும் கதவொன்று
    திறந்திருக்க..
    வந்ததும் நிற்கவில்லை..
    வருவதும் நிற்பதில்லை..!!

    வருவதும் கொடுக்கத்தான்..
    வாழ்வதும் கொடுக்கத்தான்
    வாழ்க்கையே செலவுதான் ..
    வாழ்பவன் கணக்குத்தான் !

    வருவதும் பாதையில்
    போவதும் பாதையில்
    வழங்கியே சென்றால்
    வாழ்த்துக்கள் குறைவில்லை !

    வருவதைக் கொடுத்தால்
    வள்ளலாய் மாறலாம் !
    வறுமையை அழித்திட்ட
    வேந்தனாய் வாழலாம் !

    ஆண்டவன் வடிவினில்
    அவனியில் வந்தவன் ..
    அளவின்றிக் கொடுப்பவன்
    அகமெல்லாம் அழகுதான் !

    கொடுப்பவன் கர்ணன்தான்
    குபேரனும் பின்னர்தான் !
    குசேலனுக்குக் கொடுத்ததால்
    கண்ணனும் உயர்ந்திட்டான் !

    கதிரவன் கொடுத்திட ..
    கார்மேகம் கொடுத்திட …
    காற்று கொடுத்திட…..…
    கருமண்ணும் கொடுத்திட …..

    நண்பா !
    மனிதன் மட்டும்
    ஏன் …….
    மயங்குகின்றான் ?
    தோள்தட்டி ..
    மார்தட்டி ..
    மரணம் வரை ..
    பதுக்குகின்றான்?

    கொடுத்தல் …
    மனிதனை..
    மரணத்திற்கு அப்பால்
    வாழவைக்கும்
    சக்தியன்றோ ?

    மனிதனையும்
    மகேசனாக்கும்
    மந்திரமன்றோ ?

    கொடுக்கும் பொழுது ..
    கண்ணீர் கார்மேகமாகி ..
    இதயத்தில் பொழிகின்ற
    இதம் ..
    யாருக்குப் புரியும் ?

    வந்தவன்உள்ளத்தில்
    தந்தவன் உருவம்
    இறைவனாய் மாறும்
    விந்தை எப்படி?

    செத்தும் கொடுத்ததால்
    உயர்ந்தவன் சீதக்காதி !
    சாவின் மடியிலும்
    சேர்ப்பவன்..
    எந்த சாதி?

    கொடுப்பது ….
    இறைவன் கருணையை ..
    இனிதே வளர்ப்பது !

    கொடுப்பது ..
    குறையில்லா மனத்தைக்
    கோவிலாய் படைப்பது!

    கொடுக்கும் நேரத்தில் ..
    கூடிடும் கூட்டத்தில்…
    கும்பிட்டு வருவான் ..
    குவலயம் படைத்தவன் !

    படைத்த மனிதனின்
    பண்பினில் மயங்கி
    பாருக்குச் சொல்வான்
    படைப்பின் பெருமையை !

    நண்பா !
    மரணத்தின் வாயிலில்
    மார்தட்டும் மனிதனின்
    சொத்துக்குச் ..
    சுதந்திரம் எப்போது?

    மண்ணோடு வந்தது
    மண்ணோடு போகும்
    மாயத்தை அறியாத ..
    மனிதனை ஏன் படைத்தாய்?

    தங்கமும் வைரமும்
    தங்கிடும் காலம் ..
    தந்தவன் பெற்றவன்
    தங்குவானோ தரணியில் ?

    பூவுடன் வாசத்தை ..
    பரிசாய் பெற்றாலும்
    பொழுதினில் விலகிடும்
    பொலிவெல்லாம் மறைந்திடும் !

    நண்பனே !
    நட்புக்குத் தன்னையே
    தந்தவனே!

    உனக்கு நான்
    என்ன கொடுப்பது?

    என் உள்ளமும் ..
    உதிரமும் ..
    உழைப்பும் தவிர ?

    ஓடி வா !
    அருகில் வா !

    உன்னிலே என்னை வைத்து ..
    உலகெல்லாம் பார்த்திட..

    பாயும் நதியிலும் ..
    பனித்துளி நுனியிலும் ..
    பாமரன் நெஞ்சிலும் ..
    படைப்பவன் வியர்வையிலும்
    பகலவன் ஒளியிலும்
    பசுமையின் நடையிலும்
    மழலையின் சிரிப்பிலும்..
    முதுமையின் சிறப்பிலும்..
    முடிவில்லா நட்பிலும் !

    நமது அமைதியான பயணம்..
    தொடரட்டும் !
    ஆண்டுகள்..
    யுகங்கள் ..
    கடந்திட..
    கேள்விகளின்றி ..
    பதில்களின்றி ..
    கைகோர்த்து..
    நட்புக்கு இலக்கணமாய் ..
    இலக்கியம் எழுதாத நட்பாய் !

    xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

    Share
  • ஆனந்த யாழை மீட்டிய தோழனே…!

    -எஸ் வி வேணுகோபாலன்

     

    muthukumar1

     

    கஸ்ட் 1995ல் கணையாழி இலக்கிய இதழ்,  தமன் அறக்கட்டளையின் அரவணைப்பில் தனது பயணத்தைத் தொடரத் தொடங்கிய நிகழ்விற்குக் கல்லூரி மாணவர் ஒருவரும் அழைப்பிதழோடு வந்து கூட்டத்தின் பகுதியாக அமர்ந்திருந்தார். எழுத்தாளர் சுஜாதா பேசுகையில், மாதா மாதம் கவிதைகளைத் தேர்வுசெய்து தரும் பொறுப்பைத் தாம் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், அன்று வெளியாகும் இதழில் தாம் தேர்வுசெய்து பிரசுரமாகி இருக்கும் தமக்கு மிகவும் பிடித்த கவிதையை வாசிக்கப் போவதாகவும் குறிப்பிடும்போதுகூட அந்த மாணவர் அறிந்திருக்கவில்லை, அடுத்து என்ன நடக்குமென்று…!

    சுஜாதா வாசிக்க வாசிக்க அரங்கு முழுவதும் கைதட்டி ஆரவாரித்த “தூர்” எனும் கவிதை அந்த மாணவர் எழுதியது. முன் வரிசையில் இருந்த பிரமுகர் ஒருவர் மேடைக்கு வந்து அந்தக் கவிதைக்குத் தாம் ஆயிரம் ரூபாய் பரிசு அளிப்பதாக அறிவிக்கிறார். கவிதையை எழுதியவர் நிகழ்வுக்கு வந்திருக்கிறாரா, மேடைக்கு வரவும் என்று அறிவிக்கப்படும்போது, ஜிவ்வென்று ஒரு வெப்பம் பரவுகிறது அந்த இளைஞர் உடல் முழுக்க…ஒரு மனம் சொல்கிறது, உன்னைக் காட்டிக்கொள்ளாதே உட்கார் என்று…இன்னொரு குரல் சொல்கிறது, மறுக்காதே, போ மேடைக்குப் போ என்று!

    காஞ்சி பச்சையப்பன் கல்லூரி மாணவர் நா முத்துக்குமார் அறிமுக நிலையிலேயே அமர்க்களமாகக் கொண்டாடப்பட்ட நாள் அது!  தமக்கு வழங்கப்பட்ட பரிசுப்பணத்தை, கணையாழி வளர்ச்சிக்கு அளிப்பதாக அறிவித்துவிட்டு இறங்கி வந்துவிட்டார் முத்துக்குமார்.

    கவிதையில் மட்டுமல்ல, காட்சிக்கும், மெட்டுக்கும் உட்பட்ட சொற்களால் புனையவேண்டிய திரைப்படப் பாடல்களை இயற்றுவதில் அபார ஆற்றல் கொண்டவர் நா முத்துக்குமார் என்பதைத் தமிழ்த்திரை ரசிகர்கள் யாவரும் ஒப்புக்கொள்வர்.  மிகக் குறுகிய காலத்தில் அசாத்தியத் திறனை அவர் வெளிப்படுத்தியது, இத்தனை விரைவில் விடைபெற்றுச் சென்றுவிடவா என்ற அதிர்ச்சியில் இருக்கிறது தமிழ்த் திரைப்படப் பாடல் ரசனையின் பெரும்பரப்பு! எத்தனை எத்தனை விருதுகள், எத்தனை எத்தனை பெருமிதம் பொங்கும் பாடல்கள், எத்தனை எத்தனை தனித்துவமிக்க சாதனைகள்…மன்னிக்க முடியாத மரணம் உங்களது, எங்கள் முத்துக்குமார்!

    சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அவர் பிறந்தவுடன், ஏராளமான மனிதர்கள் தடதட என்று அந்தக் கட்டிடம் நோக்கி விரைந்து வந்தார்களாம். தான் பிறந்ததை அறிந்து கொண்டாட அல்ல, அப்போது அண்ணா சாலையில் இருந்த 14 மாடி எல் ஐ சி கட்டிடம் திடீரென்று தீப்பற்றி எரிவதாகக் கேள்விப்பட்ட அந்தப்பகுதி மக்கள் அருகே இருக்கும் மாடிக்கட்டிடத்தில் ஏறிப்பார்க்கவே அப்படி வந்தனர் என்று தனது கட்டுரைத் தொடரில் நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார். உலகின் இரண்டாவது அறிவாளி பிறந்துவிட்டதாகப் பள்ளி ஆசிரியரான அவர் அப்பா தனது நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்தாராம். பிறகு தனது வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் தனது விருப்பங்களை நிறைவேற்றித் தரவும், ஆர்வத்தின் குறுக்கே அணைபோடாதிருக்கவுமாக இருந்ததை முத்துக்குமார் தான் ஒவ்வொரு முறையும் புதிதாய்ப் பிறந்த பரவசமாக எழுதிய தொடர் அது. இல்லாவிடில், எம் ஏ தமிழ் படிக்கவோ, படித்தபின் அதிக ஊதியத்தில் கிடைத்த அமெரிக்க வேலையை விட்டுவிட்டுத் திரை உலகிற்குள் நுழையவோ முடிந்திராது அவரால்!  ஆனால் இப்படி வெளியேற எப்படி மனம் வந்ததோ முத்துக்குமார்?

    இயக்குநராக விரும்பியே கனவுத் தொழிற்சாலைக்குள் காலடி எடுத்து வைத்த அவரது தமிழ், பின்னர் தற்செயலான முதல் வாய்ப்பால் “வீர நடை” (சீமான் இயக்கியது) போட்டும், காதல் கிறுகிறுத்தும், இயற்கை ஈர்ப்பில் சொக்கியும், உறவுகள் குறித்த நெகிழ்விலும், உணர்வுகளின் படப்பிடிப்பில் படபடத்தும் பரந்து விரிந்து கொண்டிருந்தது. கொஞ்சியும், கெஞ்சியும், விளையாடியும், களமாடியும், பரபரப்பாகவும், கலகலப்பாகவும்…இன்னும் என்னென்னவோ செய்யும் பாடல் தமிழ் அவரது எழுதுகோலில் எல்லையற்றுக் குடியிருந்தது. இப்போது முற்றிலும் பற்றி எரிந்துபோன பசுங்காடாகக் கிடக்கிறது பாடல்களின் இதயம்!

    சாதிய அடுக்குகளின் கீழ்த்தளத்திலிருந்து தன்னுயிரை இழைத்து, மேல்சாதிக் காதலியோடு இப்படி உரையாடல் நடத்துகிறான் “காதல்” படத்தின் காதலன், உனக்கென இருப்பேன்…என்ற புகழ்பெற்ற அந்தப் பாடலின் வரிகளில், “….கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் என்று வண்ணத்துப் பூச்சிதான் பார்த்திடுமா… மின்சாரக் கம்பிகள் மீதும் மைனாக்கள் கூடுகட்டும், நம் காதல் தடைகளைத் தாண்டும்…” என்று போகும் உணர்வுகளின் வேகத்தில், “…கனவுக்குள் காவல் இருப்பேன்” என்று உறுதி அளிக்கிறான். கனவாகவே கருகிப் போகிறது அந்தக் காதல். வெயில் படத்தின், வெயிலோடு விளையாடி என்ற பாடல் உழைப்பாளி மக்களது வாழ்க்கைத் தடத்தைப் பதிவு செய்ததெனில், உருகுதே மருகுதே பாடல், “கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்னைத் சுமக்கவா…” என்ற இடத்தில் எத்தனை காதல் நெருக்கத்தைப் பேசியது.

    எங்கேயும் எப்போதும் திரைப்படம் சாலை விதிகள் மீறலின் விபரீத விளைவுகள் குறித்த அதன் அதிர்ச்சி செய்தியைச் சுமந்து வந்ததில், உன் பெயரே தெரியாது, மாசமா ஆறு மாசமா நான் காதலிச்சேன் போன்ற பாடல்களால் என்றும் பேசப்படுவதாயிற்று. கடந்த சில பத்தாண்டுகளில் வெளிவந்த முக்கிய படங்கள் பலவற்றிலும் நா முத்துக்குமாரின் பாடல்களின் பங்களிப்பு இருந்து வந்திருப்பது குறிப்பிட வேண்டியது. ‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை…’ (அங்காடித் தெரு), ‘நிலா நிலா போகுதே’ (அரவான்), ஏயா என் கோட்டிக்காரா (பாபநாசம்), உயிரே உயிரே பிரியாதே (சந்தோஷ் சுப்பிரமணியம்) என அவரது பாடல்களின் பட்டியலை எழுதத் தொடங்கினால் இடம் காணாது. இன்னும் என்னென்னவோ எழுத இடம் எவ்வளவோ காத்திருக்க, எங்கே இத்தனை அவசரமாகப் பிரிந்து செல்கிறாய், எங்கள் முத்துக்குமார்?

    பட்டாம்பூச்சி விற்பவன், அணிலாடும் முன்றில் உள்படக்  கவிதைகளும், கட்டுரைகளுமாக அவரது எழுத்துலகம் வசீகர வாசிப்புக்குரியது. வாடகை வீட்டில் வீட்டுக்காரப் பெண்மணியிடம் பட்ட கஷ்டத்தைக் கூட (சத்தம் போடாத மிக்சி எங்கே சார் கிடைக்கும்?) நகைச்சுவையாகச் சொல்லும் அவரது ரசனை, பின்னர் அபார்ட்மெண்ட் வீட்டுக்கு வாடகைக்குச் செல்கையில், லிப்டில் தனது ஓட்டுநர் மூலம் தன்னை அறிந்து கொண்ட பெருமையில் பேசத்தொடங்கிய கனவான் ஒருவர், ”ஓ நீங்கள் வாடகைக்கு இருப்பவரா’ என்று வேறுபக்கம் திரும்பிக் கொள்வதுமான அபத்த உலகத்தை ஒரு கரப்பான் பூச்சியை வைத்து தனது மகனுக்கே சொல்லவைப்பதாக விரியும்…..ஒன்பது வயதில் இப்போது அந்த மகன், எட்டு மாதங்களே நிறைவு பெற்றிருக்கும் ஒரு பெண் குழந்தை, இவர்களுக்கு இனி அந்தக் கதைகளைச் சொல்லாமலே விடைபெற்றதேன் முத்துக்குமார்?

    சைவம் படத்தில் உங்களது அழகே அழகு என்ற இனிமையான பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது இரண்டாவது முறை. முதன்முறை அது தங்க மீன்கள் படத்தின் “ஆனந்த யாழிசை மீட்டுகிறாயடி” என்ற அற்புதக் கவிதை மொழிக்கு வழங்கப்பட்டது. அப்போது அதை உளமாரக் கொண்டாடி உங்களுக்கு எழுதியிருந்த என் மின்னஞ்சலுக்கு, உங்களிடமிருந்து இப்படி சுருக்கமான மறுமொழி வந்தது இப்போதும் என் மின்னஞ்சலில் இருக்கிறது: “இந்தக் கடிதம் எனக்கு இன்னொரு தேசிய விருது!”. இன்னும் எத்தனையோ விருதுகளும், வாழ்த்துக்களும் காத்திருக்க எப்படி வழியனுப்புவது உங்களை,  எங்கள் நா முத்துக்குமார்?

    சுஜாதா பெரிதும் பாராட்டித் தேர்வுசெய்த கவிதை, கிணற்றைத் தூர் செய்ய வரும் ஆட்கள் அடுத்தடுத்து எடுத்துத் தரும் பொருள்களைப் பேசிக் கொண்டே செல்லும். பாதாளக் கொலுசுக்குத் தப்பிய பொருள்களில், வேலைக்காரி திருடியதாகச் சந்தேகப்பட்ட வெள்ளி தம்ளர் என்ற வரி நெஞ்சில் முள்ளாய்க் குத்தும். ஆனால் கவிதையின் இதயம் அடுத்து அது முற்றுப்பெறும் இடத்தில் இப்படி வந்துக் காட்சி அளிக்கும்:

    இன்றுவரை அம்மா
    கதவுகளின் பின்னிருந்துதான்
    அப்பாவோடு பேசுகிறாள்
    கடைசிவரை அப்பாவும்
    மறந்தே போனார்
    மனசுக்குள் தூரெடுக்க!

    என்றென்றும் தமிழ்க் கவிதை, திரையிசை மற்றும் வாசக ரசனை உலகத்தில் மேலாகவே மிதந்தும், எடுக்கச் செல்கையில் ஆழத்தில் அமிழ்ந்து, தேடத்தேடத் தொடர்ந்து தட்டுப்பட்டும் கொட்டிக் கிடக்கும் வித்தியாசமான படைப்பாளியாகவே நினைக்கப்படுவீர்கள் முத்துக்குமார்!

     

    Share
  • ஆனந்த யாழுக்கு  அஞ்சலி!

    -எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்த்திரேலியா

     

    na-muthukumar

    காஞ்சியில் பிறந்து கவிதையில் நுழைந்து ஆண்டுகள் குறுகி அமரராய் விட்டாய். பாரதிவழியில், பட்டுக்கோட்டையார் வழியில் பாவலனாய் மிளிர்ந்து பாதிவழியில் போய்விட்டாய். குறுகிய காலத்தில் அறிவுடன் எழுதி அடையாளமாகி நின்றாய். ஆனந்தயாழும், அழகு அழகும் உன்னைத் தேசியக் கவிஞனாக்கிப் பரிசினைப் பெற்றுத்தந்தது. ஆயிரம் பாடலுக்கு மேலெழுதி அனைவரின் அகத்திலே அமர்ந்துவிட்டாய்.

    மரணம் பற்றிய வதந்தி பாடிய நீயோ இன்று அதற்குள் அகப்பட்டுக்கொண்டாய். முத்துக்குமார் என்னும் உடம்புதான் அழிகிறதே அன்றி முத்துக்குமாரின் உணர்வுகள் சாகாவரம் பெற்று நிற்கின்றன. கவிஞனுக்கு மரணமே இல்லை. என்றாலும் உனது கவிமுகத்தைக் காணமுடியாதே…என்னும் கவலையால் யாவரும் கண்கலங்கி உனது பிரிவுக்கு இரங்கல் கூறி ஏக்கமாய் நிற்கின்றோம்!

    ***

    மரணம் பற்றிய வதந்தி!               

    திருஷ்டி கழிந்தது என்றார்கள்
    தீர்க்காயுசு என்றார்கள்
    படபடத்தோம் என்றார்கள்
    எப்போதோ எழுதிய
    என் கவிதையைச் சொன்னேன்
    இறந்து போனதை
    அறிந்த பிறகுதான்
    இறக்க வேண்டும் நான்.

    [நா. முத்துக்குமாரின் கவிதை]

     

    Share
  • இலக்கியம் எழுதாத நட்பு (ஆறாம் பகுதி)

    க. பாலசுப்பிரமணியன்

     

    நண்பனே
    யாமிருக்க பயமேனென
    சொல்லும் நீ ..
    பயத்தை ஏன் படைத்தாய் ?

    பயத்தையும் தந்து
    அதிலிருந்து ..
    என்னைக் காப்பாற்றுவதில்
    உனக்கு என்ன மகிழ்ச்சி ?

    கண்ணைக் குத்திவிடுவாய் நீ……..
    காரிருளில் பேயாய் வருவாய் நீ……………..
    முருங்கை மரத்தில் மறைவாய் நீ……….. ..
    என்றெல்லாம் சொல்லி…
    கிள்ளையான என் மனத்தில் ..
    களங்கத்தை ஏற்படுத்தியது யார்?

    அகிலமெல்லாம் உன்நிழலே என்றால்
    நானும் உன்நிழல் தானே?
    என் நிழலை கண்டு….
    உன் நிழலைக் கண்டு..
    ஏன் பயப்படவேண்டும்?

    இந்த பயம்
    வியாபாரமா?
    விவேகமா?
    வேலையற்றவர்களின் ..
    விளையாட்டா?

    அறியாமையில் வளரும் வளர்ப்பு
    பயத்திற்குப் பட்டயம் கட்ட
    யார் காரணம்?

    நரகத்தில் கொதிக்கும்
    நல்லெண்ணெய் பானைகள்…
    விடத்தைக் காக்கும்
    விதவிதமான உயிரினங்கள்..
    அரக்கர்களால் அடிக்கப்படும்
    முள்வேலிச் ..சாட்டைகள்.
    யாருடைய கற்பனையில்
    இவை இலக்கிய வரம் பெற்றன?

    பாவங்கள் நரகத்திற்குச் சொந்தமென்றால் ..
    புண்ணியங்கள் சொர்க்கத்திற்குச் சொந்தமோ?
    உன் அன்பான அரவணைப்பும்..
    உன் இடைபிரியாத நட்பும்
    இருப்போர்க்கு ..
    இன்னொரு சொர்க்கம் எதற்கு?

    பயங்கள்..
    உணர்வுகளின் வறுமைக்கு
    இயலாமை கொடுக்கும் சீதனங்கள் !

    விவேகத்தின் கண்களை குருடாக்கி ..
    புதிய வேதாந்தங்களுக்கு விலைபேசும்
    வர்த்தகர்கள்……

    தாழ்வுடமைக்குத் தாளம் கொட்டி
    தன்னம்பிக்கையை மண்ணில் புதைக்கும்
    மடமைகள்..…

    பயங்கள்;…
    மனிதனின் மனத்தை வெல்ல..
    சாத்தான் வரைந்த நிழலோவியங்கள் !

    ஒதுங்கிவிட இடம் கிடைத்ததும் ..
    நினைவில்..
    எண்ணத்தில்…
    கருத்தில்.
    சொல்லில்..
    செயலில்..
    உறவில்…
    தன் குட்டிச்சசாத்தான்களை ..
    கோலாட்டம் ஆட விடும் !

    இழந்துவிடும் பயம்,,
    மறைந்துவிடும் பயம்..
    தோற்றுவிடும் பயம் …..
    பிரிந்துவிடும் பயம்
    இயலாமையின் பயம்..

    இவைகளின் நிழலில்
    பிறந்த சில உறவுகள்..
    வெறுப்பு..
    கோபம்..
    பொறாமை..
    மடமை..
    வெறிகள் …
    மனதினில் விளையாடும்..
    விடுகதைகள் போடும் !.

    சந்தேகம் தலைநீட்டி
    பயத்துக்குச் சாமரம் வீசும் !

    யாரைக் கண்டு பயப்படுவது?
    உன்னைக்கண்டா?
    உண்மை நட்பில்..
    பயமேது?

    மற்றவர்களைக்கண்டா?
    அனைத்து உயிரிலும் ..
    ஆட்சி உனதென்றால்..
    பயமெதற்கு ?

    பயம்…
    எனக்கு நானே ..
    சொல்லிக்கொடுத்த ..
    ஒரு பொய்யான சிறுகதை…
    வேரில்லாத கற்பனை !

    கண்களில் ஒளியிழந்து..
    கரங்கள் நடுங்கிவிட..
    கண்ணீரைக் கடலாக்கி ..
    இயலாமையின் சிகரத்தில்..
    என்னை நானே நிறுத்தி
    வெறுத்து ..

    நான் என்னுள் மற்றொருவனாய்
    இரண்டாய் ..
    பலராய் ..
    என்னையே இழந்து
    என்னுள் என்னைத் தேடி ..

    நண்பனே ..
    உன்னுடைய அழகான உலகத்தில்
    இந்த அசிங்கத்தை ஏன் படைத்தாய் ?

    பயமுள்ள நெஞ்சில் ..
    மரணத்தின் மணியோசை
    ஏன் நித்தம் ஒலிக்கின்றது ?

    பயத்தின் வேர்களை
    எங்கிருந்து பிடுங்கியெறிய வேண்டும் ?
    உள்ளத்திலிருந்தா ?
    உலகிலிருந்தா ?

    நண்பா..
    உன் கைகளை ..
    அன்போடு பற்றிக்கொள்ள ..
    பயங்கள்..
    பயந்து ஓடுவதேன் ?

    அன்பின் உருவமே !
    சத்தியத்தின் சாரதியே !
    உன் அன்பின் ஒளிக்கதிர்கள் .
    என் வாழ்க்கையில் விழும்போது..

    பயமின்றி..
    உன்னுடன் கைகோர்த்து ..
    பயங்களை மறந்து..
    என்னையும் மறந்து..
    உன்னையும் மறந்து ..
    அமைதிப் பயணத்தில் ..
    நீயம் நானும்..
    நமது நட்பும்… !!

    Share
  • பூகோளச் சூடேற்றும் தீவிர வாயு கார்பன் டையாக்சைடு மாற்றப்படும் இயக்கத்தில் மின்சக்தியும் உற்பத்தி

    Al-CO2 electro-chemical cell

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
     
     
    +++++++++++++

    சூட்டு யுகப் பிரளயம்  வருகுது

    சூடு காலம் வருகுது !
    நமக்குக்
    கேடு காலம் வருகுது !
    நாடு, நகரம், வீடு, மக்கள்
    நாச மாக்கப் போகுது !
    புயல் எழுப்ப வருகுது !
    பூத மழை பொழியப் போகுது !
    நீரை, நிலத்தை, குளத்தை,
    பயிரை, உயிரை, வயிறை
    முடக்கிப் போட வருகுது !
    கடல் வெப்பம் மீறி,
    கடல்நீர் மட்டம் ஏறி
    கரை ஊர்கள் மூழ்க்கப் போகுது !
    மெல்ல மெல்ல ஏறி
    வெப்பம்,
    மேலே மீறிப் போகுது !
    சூட்டு யுகப் பிரளயம்,
    வீட்டை, நாட்டைத் தாக்குது !
    உன்னை, என்னை,
    உலகின் கண்ணை ஒன்றாய்ப்
    பிதுக்கப் போகுது !

    +++++++++++++

    மின்சார  நிலையங்களில் கார்பன்  டையாக்சைடு வாயுவை விழுங்கும் தொழிற்துறை நுணுக்கத்தில், பயன்படும் திரவத்தை மீட்பதற்கு 25% மின்சார ஆற்றல் தேவைப்படுதால், அம்முறைகள் தடைப்பாடாகி நிதி மலிவின்றிப் பரவாமல் வரையறைக்குள் உட்பட்டு இயங்குகின்றன.

    பேராசிரியர் லிண்டன் ஆர்ச்செர் [கார்னெல் விஞ்ஞானி]

    நாங்கள் அமைத்த கார்பன் விழுங்கப்படும் தொழிதுறை நுணுக்கத்தில் மின்சக்தியும் ஆக்கப்படுவதால் முக்கியத்துவம் பெறுகிறது.   இந்த மாதிரி தற்போதைய பெரும்பான்மை இயக்கங்களில், திரவத்தாலோ அல்லது திடவத்தாலோ [Fluids or Solids] கார்பன் விழுங்கப்பட்டு, பிறகு அவை சூடாக்கப்பட்டோ அல்லது அழுத்தம் தணிக்கப்பட்டோ கார்பன் டையாக்சைடு வெளியேற்றப் படுகிறது.  திரட்டப்படும் CO2 வாயு அழுத்தம் சுருக்கப்பட்டு மீள்பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகிறது.

    பேராசிரியர் லிண்டன் ஆர்ச்செர் [கார்னெல் விஞ்ஞானி]

    Al-CO2 electro-chemical cell with gases
    சூடேற்றும் கிரீன்ஹௌஸ் வாயு CO2 மாற்றப்படும் தொழில் நுணுக்கம்
    இயற்கைப் புதைவள எருப்பண்டங்கள் [Fossil Fuels] மின்சக்தி உற்பத்திக்குத் தடையாய் இருப்பதற்குக் காரணம் பேரளவு கார்பன் டையாக்சைடு வாயு வெளியேறுவது.  பூகோளச் சூடேற்றத்துக்கு கார்பன் டையாக்சைடு வாயுவே முக்கிய விளைவாகிறது.  நிதிச்சிக்கன முறையில் கார்பனை விழுங்கும் தொழில் நுணுக்க முறைகள், கார்பன் டையாக்சைடு வாயுவைத்  தொடர்ந்து மாற்றும் வழி முறைகள் இதுவரை வாணிப ரீதியாக வளர்ச்சி அடைய வில்லை.
    கார்னல் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் 2016 ஜூலை 20 இல் கார்பன் டையாக்சைடு வாயுவை மாற்றும் ஓர் அரிய, புதிய தொழில் நுணுக்க முறையைக் கண்டுபிடித்து முற்போக்கு விஞ்ஞான இதழில் வெளியிட்டுள்ளார்கள்.   அம்முறையின் சிறப்பு அம்சம் CO2 வாயு மாற்றம் அடைவதோடு, இயக்கத்தில் மின்சக்தி உற்பத்தியும் இடையே நேர்கிறது.  அந்த நுணுக்க முறைகளை 2016 ஆகஸ்டு 4 இல் வெளியிட்ட கார்னல் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் : பேராசிரியர் லிண்டன் ஆர்ச்சர், டாக்டர் பட்டப் படிப்பு மாணவர் : வாஜ்தி அல் ஸாடெட் [Wajdi Al Sadat].
    Changing CO2 into batteries
    அவர்கள் இருவரும் விருத்தி செய்து அமைத்த மின்னியல் இரசாயனச் சாதனத்தில் [Electrochemical Cell] நேர்முனையில் அலுமினிய உலோகமும், [Anode] எதிர் முனையில் தேன்கூடு போன்ற பஞ்சுத் தட்டும் [Sponge cathode] உள்ளன.  பஞ்சுத் தட்டு வழியே CO2 & O2 வாயுக்கள் செலுத்தப்படுகின்றன. மின்னியல் இரசாயனச் சாதனத்தில் நேர்முனைக்கும் எதிர்முனைக்கும் இடையே நிகழும் இயக்கத்தில் CO2 வாயு தனித்து நீக்கப்பட்டு கார்பன் திரட்சியான, பயன்பாட்டு ஆக்ஸலேட் அயான் [C2O4] கலவைகள் உண்டாகுகின்றன. அத்துடன் உபரித் திறனாய் மின்சக்தியும் கிடைக்கிறது.
    ஆய்வாளர்கள் அறிவித்தது : இந்தப் புதிய மின்னியல் இரசாயனச் சாதனத்தில் [Electrochemical Cell] பயனுள்ள ஆக்ஸலேட் கலவையுடன்  13 ampere hours per gram of porous Carbon as Cathode at discharge potential of 1.4 volts மின்னழுத்தமும் கனிசமாகக் கிடைத்தது.   இந்த மின்னியல் இரசாயன நுணுக்கச் சாதனத்தில் உள்ள தடைப்பாடு அல்லது இடர்ப்பாடு என்ன வென்றால், நேர்முனை, எதிர்முனைக்கு இடையே பயன்படும் சிறப்பு மின்திரவம் [Electrolyte] மிக்க நீர்ப் புணர்ச்சி [நீர்த் தாகம்]  [Sensitive to Water or Affinity to Water] உடையது.  இனித் தொடரும் ஆராய்ச்சியில் நீர்ப் புணர்ச்சி குன்றிய மின்திரவங்கள் தேடப்படும். இப்புதிய தொழில் நுணுக்க முறை CO2 நீக்கப்பட்டு வடிகட்ட வழி வகுக்கும்.
    +++++++++++++

    Picture -9

    பூகோளம் நோயில் கிடக்குது !

    நோய் பீடித்துள்ளது
    பூகோளத்தை !
    குணமாக்க
    மருத்துவம் தேவை !
    காலநிலை மாறுதலுக்குக்
    காரணங்கள் பல்வேறு !
    கரங் கோத்துக் காப்பாற்ற
    வர வேண்டும்
    பல்லறிஞர் !
    சிந்தனை யாளர் பங்கெடுப்பு,
    எரிசக்தி நிபுணர் ஒத்துழைப்பு,
    செல்வந்தர் நிதி அளிப்பு,
    புவிமாந்தர்
    கூட்டு ழைப்பு
    தேவை ! தேவை ! தேவை !

    ஜெஃப்ரி குளூகர், 
    டைம் வார இதழ் மூத்த எழுத்தாளர்
    [Jeffrey Kluger, Senior Writer Time Magazine]

    +++++++++++++

    Picture -11

    2013 ஆண்டில் அமெரிக்கா வெளியாக்கிய கிரீன்ஹவுஸ் வாயுக்களில் CO2  வாயுவின் கொள்ளளவு

    சமீபத்திய அறிவிப்பின்படி தொழில்துறைகள் மிகுந்த அமெரிக்க நாடு 2013 ஆண்டு வெளியேற்றிய கிரீன்ஹவுஸ் வாயுக்களில் CO2 வாயுவின் நிறை மட்டும் 6,673 மில்லியன் டன் என்று தெரிகிறது.  பெரும்பான்மை வாயுக்கள் உயிரினத் தொடர் வசிப்புக்குப் பூமியில் சூரிய வெப்பத்தை உள்ளடக்கி உதவினாலும்,  அளவு அதிகமானால், வெப்ப அடைப்பு மிகையாகி, உயிரின அழிவுக்கும் வழி வகுக்குகிறது.   அப்படி அடைபடும் வாயுக்களில் பாதகம் மிகையாகச் செய்பவை மூன்றுவித வாயுக்கள் : கார்பன்டையாக்சைடு [CO2], மீதேன் [CH4], நைட்டிரஸ் ஆக்சைடு. [N2O]. இன்றைய சூழ்வெளி வாயுக் கோளத்தில் தொழிற்துறை யுகத்துக்கு [1840] முன்பு இருந்ததை விட, தற்போது 32% மிகையாக CO2 வாயு பரவி யுள்ளது.  அரை மில்லியன் ஆண்டுகட்கு முன்பு இருந்ததை விட உச்ச நிலையில் உள்ளன CO2, CH4 வாயுக்கள் என்று அறியப்படுகிறது. கியோடோ ஒப்பந்த வரையறைக் [Kyoto Protocol] குறிக்கோளின்படி, ஒவ்வொரு நாடும் 2012 ஆண்டுக்குள், ஆறுவித கிரீன்ஹவுஸ் வாயுக்களின் [ CO2, CH4, N2O, Hydrofluorocarbons, Perfluorocarbons, Sulphur Hexafluoride], ஓரளவு வெளி விடுவிப்பைக் குறைக்க வேண்டும்.  அதைச் சில நாடுகள் ஏற்றன, சில நாடுகள் புறக்கணித்தன. மறுபடியும் 2015 இல் புதிய உலக வரையறைகள் மீண்டும் 2020 ஆண்டு எல்லைக்குள் விதிக்கப்படும். இவற்றில் N2O வாயு மட்டும்  CO2 விட 300 மடங்கு சூழ்வெளியைச் சூடாக்கும் வல்லமை வாய்ப்புள்ளது.

    Picture -6

    “உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!  அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

    அமெரிக்கன் முன்னாள் செனட்டர் அல் கோர் [Al Gore, American Former Senator/Vice President (June 5, 2005)]

    “ஒரு திடுக்கிடும் முடிவாண்டு விஞ்ஞானப் புள்ளி விவர அறிக்கையில் உலகக் காலநிலை நிறுவகம் (WMO) சமீபத்திய உச்ச அதம உஷ்ண மாறுதல்கள் [ஸ்விட்ஜர்லாந்தில் மிகச் சூடான ஜூன் மாத வேனில், அமெரிக்காவில் எண்ணிக்கை மிக்க சூறாவளி அடிப்புகள்] யாவும் காலநிலையைச் சார்ந்தவை என்று கூறுகிறது.  உலக நாடுகளின் உச்சக் காலநிலை ஏற்றம், இறக்கம், மழைப் பொழிவுகள், புயல் வீச்சுகள் ஆகியவை யாவும் பூகோள சூடேற்ற முன்னறிப்புக் கூற்றுகளை ஒத்திருக்கின்றன.  உன்னத கம்பியூட்டர் மாதிரிக் கணிப்புகள் [Super Computer Models], சூழ்வெளி சூடாகும் போது, வெப்பம் மிகையாகிக் காலநிலைப் போக்கில் சீர்குலைவும், நிலையில்லா ஆட்டமும் ஏற்படும் என்று காட்டுகின்றன.  சமீபத்தைய ஆராய்ச்சிகள் காலநிலை மாறாட்டத்தால் பூகோள உஷ்ணம் தொடர்ந்து சூடேற்றும் போது இயற்கையின் சீற்றங்கள் தீவிரமாகி, அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாவதாய்க் காட்டுகின்றன.”

    உலகக் காலநிலைப் பேரவை [World Meteorological Organization (WMO)]

    “2500 எண்ணிக்கைக்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் மீறிச் செல்லும் உஷ்ணம் தாக்கிப் பாதிக்கப்படும் உலக அரங்குகளில் விளையப் போகும் தீங்குகளைத் தெளிவாக உளவி ஆராய்ந்திருக்கிறார்கள்.  அவரது ஆய்வுகளில் ஏறிடும் உஷ்ணத்தால் மாந்தருக்கும் மற்றப் பயிரின உயிரினங்களுக்கும் ஏற்பட விருக்கும் பேரிழப்புகள், பேரின்னல்கள் விளக்கப்பட்டு, வெப்பச் சீற்றத்தின் பாதிப்புகளை எவ்விதம் தவிர்க்கலாம் அல்லது குறைக்க முற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது!  வெப்பச் சீற்றம் என்பது நம்மைப் பாதிக்கப் போகும் ஒரு மெய்நிகழ்ச்சி என்பதும் உறுதியாக்கப் பட்டது!  அந்த பேராபத்திற்கு மனிதரின் பங்களிப்பு உண்டு என்பதும் தெளிவாக்கக் கூறப் பட்டிருக்கிறது.”

    உள்நாட்டுக் காலநிலை மாறுபாட்டு அரங்கம் [Intergovernmental Panel for Climate Change (IPCC) April 2, 2001]

    Picture -7

    “வெப்பச் சீற்றத்தால் விளையப் போகும் பிரளயச் சீர்கேடுகள் தீர்க்க தரிசிகளின் முன்மொழி எச்சரிக்கை யில்லை!  மாந்தரை மெய்யாகத் தாக்கப் போகும் இயற்கையின் கோர நிகழ்ச்சிகள்.”

    ஆஸ்டிரிட் ஹைபெர்க் [அகில நாட்டுச் செஞ்சிலுவைச் சங்க அதிபதி (23 ஜூன் 1999)]

    பூகோளக் காலநிலைப் போக்கை மனிதரின் சீர்கேடான செயல்கள் மாற்றிக் கொண்டு வருகிறது!  கரியமில வாயு, மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் கொள்ளளவு பூமண்டலக் காற்றில் மிகையாகும் போது, பூமியின் காலநிலையில் சூடேறுகிறது!  கடந்த நூற்றாண்டில் கிரீன்ஹவுஸ் வாயுக்களும், மற்ற மனிதச் செயல்களும் புரிந்த காலநிலை மாறுபாடுகளும், வருங்காலத்தில் நிகழப் போகும் எதிர்பார்ப்புகளும் மனித இனத்துக்குத் தீங்கிழைக்கப் போகும் மெய்யான பிரச்சனைகள்!

    அமெரிக்கன் பூதளப் பௌதிகக் குழுவகம் [American Geophysical Union (Dec 2003]

    Picture -12

    “கணினி யுகத்தில் காலநிலை மாடல்கள் பேரளவு முன்னேற்ற விளைவுகளைக் காட்டியுள்ளன. முக்கியமாக பூகோள சூடேற்றத்தால் ஏற்படும் கால நிலை வேறுபாடுகளுக்கு ஆர்க்டிக் துருவ வட்டார மாறுதல்கள் 25%-30% அளவில் பங்கேற்றுள்ளன.

    பூகோளச் சூடேற்றப் போக்கைப் பற்றி:

    1. பூகோள உஷ்ணம் 1900 ஆண்டிலிருந்து 1 டிகிரி F (0.5 C) மிகையாகி யிருக்கிறது.

    2. 20 ஆம் நூற்றாண்டின் பத்தில் ஏழு வெப்பம் மிகையான காலங்கள் 1990 ஆண்டுகளில் பதிவாகி யுள்ளன.  அந்த ஆண்டுகளில் 1998 மிக்க உஷ்ணம் எழுந்த வருடமாகக் கருதப் படுகிறது.

    3. கடந்த 3000 ஆண்டுகளில் அறிந்ததை விடக் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 20 ஆம் நூற்றாண்டில் மூன்று மடங்கு வேகத்தில் மிகையாகி யிருக்கிறது!

    4. பூகோளச் சூடேற்றத்தால் குறைந்தது, நிலத்திலும், கடலிலும் 279 உயிர்ப் பயிரினங்கள் பாதிக்கப் பட்டுள்ளன!  வசந்த கால மாறுபாட்டு மாதங்கள் பத்தாண்டுகளுக்கு 2 நாட்கள் வீதம் முந்தி வரத் தொடங்கி விட்டன!

    5. (1986-1995) ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் தென் ஆஃபிரிக்க நாடுகளுக்கு மிக்க உச்சமான வெப்ப காலமாகக் கருதப்படுகிறது.

    டாக்டர் ஸிசிலியா பிட்ஸ், [Dr. Cecilia Bitz, Physicist, University of Washington, Polar Science Center]

    Picture -10

    சூடேறும் பூகோளம் பற்றி முன்னாள் அமெரிக்கத் துணை ஜனாதிபதி அல் கோர்

    பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது!  ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காது கொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது!  அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது.  அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

    Picture -8

    பூகோளக் காலநிலைக் கோரத்தைப் புரியும் பரிதி

    பரிதியின் வெப்பநிலைச் சீராகச் சுற்றிலும் நிலைபெறப் பிரம்மாண்டமான ஒரு வாயுக் கோளம், எப்போதும் பூமிக்குக் குடைபிடித்து வருகிறது!  வாயுக் குடையில் வாயுக்களின் கொள்ளளவுக் [Volume] கூடிக் குறையும் போது, பூமியில் படும் பரிதியின் உஷ்ணமும் ஏறி, இறங்குகிறது!  அந்த வாயு மண்டலத்தில் இயற்கை ஊட்டியுள்ள வாயுக்களைத் தவிர, புதிதாகப் பூமியிலிருந்து கரியமில வாயு [Carbon Dioxide] போல் வேறு வாயுக்களும் சேர்ந்தால் வாயுக்களின் திணிவு [Density] மிகையாகிறது!  வாயுக்களின் திணிவு அதிகமாகும் போது, பரிதியின் வெப்ப சேமிப்பும் மிகுந்து, அதன் உஷ்ணமும் கூடுகிறது. அந்தச் சீர்கேடுதான் “கிரீன் ஹௌஸ் விளைவு” அல்லது “கண்ணாடி மாளிகை விளைவு” [Greenhouse Effect] என்று குறிப்பிடப் படுகிறது.  அந்த உஷ்ணப் பெருக்கால் கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது!  அந்த வெப்ப எழுச்சி யால் துருவப் பகுதியில் உறைந்திருக்கும் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகள் உப்பு நீரில் மூழ்கி நிலவளம் பாழ்படும்.  அல்லது சி.எ·ப்.சி [Chloro Fluoro Carbons (CFC)] போன்ற பூமி வாயுக்கள் மேலே பரவிப் பாதுகாப்பாய் உள்ள ஓஸோன் பந்தலில் துளைகளைப் போட்டால், பரிதியின் தீய புறவூதாக் கதிர்கள் பூமியில் பாய்ந்து சேதம் விளைவிக்கின்றன.

    பூகோளத்தின் வாயு மண்டலம் பரிதியின் வெப்பச் சக்தியாலும், பூமியின் சுழற்சியாலும் தொடர்ந்து குலுக்கப் பட்டு மாறி வருகிறது!  பரிதியின் வெப்பம் வேனிற் பரப்பு அரங்குகளில் ஏறித் துருவப் பகுதிகளை நோக்கித் தணிந்து செல்கிறது.  அப்போது குளிர்ந்த துருவக் காற்று கீழ்ப்படிந்து பூமத்திய ரேகை நோக்கி அடிக்கிறது.  பூதளப் பரப்பின் நீர்மயம் ஆவியாகி மேலே பரவிப் பல மைல் தூரம் பயணம் செய்து, உஷ்ணம் குன்றும் போது மழையாகப் பெய்கிறது அல்லது பனிக்கட்டியாக உறைகிறது.  நாளுக்கு நாள் ஒரே விதியில் மாறிவரும் சீரான காலநிலை மாற்றத்தை நாம் புரிந்து கொண்டாலும், மெல்ல மெல்ல மிகையாகும் காலநிலை வேறுபாடுகள் விந்தையான புதிராய் உள்ளன. 1940 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்தில் உஷ்ணம் தணிந்து பனிக்குன்றுகள் 1972 ஆண்டு வரை பெருகிக் கொண்டு விரிந்தன!  பிரிட்டனில் அதே காலங்களில் சில வருடங்கள் சூடாக ஆரம்பித்தாலும் உஷ்ணக் குறைவால், பயிர் வளர்ச்சிக் கால நீடிப்பில் இரண்டு வாரங்கள் குன்றி விட்டன!  அவ்விதமாக காலநிலை யந்திரமானது விந்தையாகப் பூகோளத்தில் விளையாடிக் கொண்டிருந்தது!

    Pollution groups

    கிரீன்ஹௌஸ் விளைவுகளால் பூகோள வெப்பம் ஏறும் போது, கொந்தளிக்கும் கடல் நீர் உஷ்ணம் அதிகமாகி கடல் வெள்ளத்தின் கொள்ளளவு மிகையாகிறது [Volumetric Thermal Expansion].  அடுத்து துருவப் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டத்தின் உயரத்தை மேலும் உயரச் செய்கிறது!  பொதுவாகக் கடல் மட்ட வேறுபாடுகளை அளப்பது சற்று கடினமானது.  அலைமானித் தகவல் [Tide Gauge Data] மூலமாகத் தான் கடல் மட்ட உயர்வுகளைப் பதிவு செய்ய முடியும்.  கடந்த 100 ஆண்டுகளாக வெப்ப ஏற்றத்தால் பூகோளக் கடல் மட்டம் 10-25 செ.மீ. உயர்ந்திருப்பதாக அறியப்படுகிறது!  பூகோளச் சூடேற்றத்தால் மட்டும் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 100 ஆண்டுகளில் 2-7 செ.மீ. உயர்ந்திருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது! பனிமண்டலமும் துருவப் பனிப்பாறைகளும் உருகிக் கடல் மட்டம் 2-5 செ.மீ. மிகையானதாக அறியப் படுகிறது!  மீதமான 4-13 செ.மீ. கடல் வெள்ளக் கொள்ளளவு நீட்சியாக எடுத்துக் கொள்ளலாம். 21 ஆம் நூற்றாண்டில் மானிடரியக்கும் தொழிற் துறைகளில் உண்டாகும் கிரீஹௌஸ் வாயுக்கள் வெளியாக்கம் பூகோளக் காலநிலைப் பாதிப்புகளைப் பேரளவில் விளைவிக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கப் படுகிறது!

     Al Gore Book

    சூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு:

    கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை.  அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங்களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமிலவாயு [CO2].  மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas].  அது கழிவுப் பதப்படுப்பு சாலைகளிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது.  அனைத்து கிரீன்ஹவுஸ் வாயுக்களையும் CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692.  அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக்கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது!

    2003 ஆம் ஆண்டில் உதாரணமாக பிரிட்டனில் 300,000 வீடுகளுக்கு மின்சார ஆற்றல் பரிமாற நிலக்கரி எரிசக்தி பயன்பாட்டால் 1810 மில்லியன் கிலோகிராம் CO2 வாயு “கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் கம்பேனியால்” [Glaxo Smith Kline] வெளியானது!  பிரிட்டன் விமானப் போக்குவரத்தில் 614 மில்லியன் கிலோ மீடர் பயண தூரத்தை ஒப்பிட்ட போது, 2002 ஆம் ஆண்டில் 91.5 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியானதாக 2003 இல் கணக்கிடப் பட்டது.  அதே கம்பெனியின் விற்பனைச் சரக்குகள் 50 நாடுகளுக்கு விமான, வீதி வாகனங்கள் மூலமாக அனுப்பியதில் 12.6 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியேறி சூழ்வெளியில் கலந்துள்ளது என்றும் அறியப்படுகிறது!

    Picture -1

    Picture -2

    Picture -3Picture -4

    Picture -5

    (தொடரும்)

    தகவல்:

    1.  Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference]
    (April 9, 2007)

    2.  An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)

    3.  BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)

    4.  BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)

    5.  BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)

    6.  http://www.extension.iastate.edu/agdm/articles/others/TakMar08.html  [March 2008]

    6.(a) http://news.yahoo.com/nasa-data-blow-gaping-hold-global-warming-alarmism-192334971.html  [July 27, 2011]

    7. http://www.epa.gov/climatechange/ghgemissions/gases.html  [2013]

    8. http://www.epa.gov/climatechange/science/index.html  [March 18 2014]

    9.  http://www.epa.gov/climatechange/science/causes.html  [March 18, 2014]

    10. http://www.epa.gov/climatechange/science/indicators/ghg/ghg-concentrations.html [July 2, 2014]

    11. http://www.epa.gov/climatechange/wycd/  [April 13, 2015]

    12.  http://www.epa.gov/climatechange/index.html  [April 15, 2015]

    13.  http://www.davidsuzuki.org/issues/climate-change/science/climate-change-basics/greenhouse-gases/  [2014]

    14.  https://saferenvironment.wordpress.com/2008/10/31/global-warming-greenhouse-gases-and-their-harmful-effects-%E2%80%93-urgent-reduction-of-these-are-essential-to-save-our-environment/

    15. http://www.livescience.com/37821-greenhouse-gases.html  [February 10, 2015]

    16.  http://en.wikipedia.org/wiki/Kyoto_Protocol   [April 18, 2015]

    Attachments area
    Preview YouTube video Converting Carbon dioxide (CO2) into Formic acid using solar power.

    Converting Carbon dioxide (CO2) into Formic acid using solar power.

    Preview YouTube video 14 Aqueous Electrolysis

    14 Aqueous Electrolysis

    Preview YouTube video Discovery Channel – Global Warming, What You Need To Know, with Tom Brokaw

    Discovery Channel – Global Warming, What You Need To Know, with Tom Brokaw

    Preview YouTube video Why Greenhouse Gases Cause Global Warming: Carl Sagan on the Environment (1990)

    Why Greenhouse Gases Cause Global Warming: Carl Sagan on the Environment (1990)
    Share
  • பாரத விழா!

    பவள சங்கரி

    1469807728-3159

    70 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை ‘பாரத விழா’ என்று மத்திய அரசு ஒரு வாரம் கொண்டாடுகிறார்கள். நம் இந்தியக் கலாச்சாரத்தைப் போற்றும்விதமாக, 12 ஆம் தேதி ஆரம்பித்து 18 ஆம் தேதி வரை நடக்கப்போகிற இந்த நிகழ்ச்சிக்காக தில்லியில் 100 அரங்குகள், நம் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பல்வேறு விதமான கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன என்பது மகிழ்ச்சியான செய்தி. பாரம்பரியம் மிக்க இந்தியக் கலாசாரத்தின் பன்முகத்தன்மையை உணர்த்தும் வகையில் தில்லி ராஜபாதையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கங்களில் பாரம்பரிய நடனங்கள், விதவிதமான உணவு வகைகளும் அணிவகுத்துள்ளன. பாரதி பாடிய, ‘ஆடுவோமே, பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று’ என்பதற்கேற்ப ஆனந்தப்படுகிறோம்.

    ஆனால் இன்றைய நிலை என்ன? எந்தெந்தத் துறையில் நாம் தன்னிறைவு பெற்றிருக்கிறோம். எதில் வளர்ச்சியடைந்திருக்கிறோம்.. வரும் ஆண்டுகளில் நாம் எந்தெந்த நிலைப்பாடுகளை எடுக்கவேண்டும் என்று இந்த சுதந்திர தினத்தில் அரசு அறிவிப்புகள் வருமா. அரசியல் சாசனம் ஏற்படுத்தப்பட்டபொழுது இட ஒதுக்கீடுகள் 10 ஆண்டுகளுக்கு மட்டும் இருக்கும். அதற்குப் பிறகு அனைவரும் சமம் என்று அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம். இன்று 69 ஆண்டுகள் கடந்து 70 வது ஆண்டில் கால் பதிக்க இருக்கிறோம். இன்னும் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. குஜராத்தில் பட்டேல் இனத்தவரும், ராஜஸ்தானத்தின் உத்திர பிரதேசத்தில் ஜெட் இனத்தவரும் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கக்கோரி அதன் மூலம் தங்கள் இனத்தவரையும், தங்களையும் நிலைநிறுத்திக்கொள்ள முயலுவதா சுதந்திரம்? கல்வித் துறையை எடுத்துக்கொண்டால் மருத்துவம் சார்ந்த கல்விக்கு ‘நிட்’ (NEET) தேசிய பொதுத் தேர்வுகள் மூலமாக கல்வியை உறுதி செய்யும் மத்திய அரசின் சட்டத்தை உச்ச நீதி மன்றம் உறுதி செய்த பிறகும் தமிழ்நாடு அதிலிருந்து பின்வாங்குவது ஏன்? அதில் தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இணையாது என்று அறிவித்திருப்பது திறமையுடையவர்களை கேலிப்பொருளாக்குவதாக உள்ளது. மேலும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் பணத்திற்காக கல்வியை விற்கக்கூடிய போக்கை உற்சாகப்படுத்துவதாக அமைவதால், இது வேதனைக்குரியதாகவும் உள்ளது. மிகவும் பின் தங்கிய மாநிலங்களான பீகார், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இச்சட்டத்தை வரவேற்றிருப்பது பாராட்டிற்குரியது.

    69 ஆண்டுகள் நிறைவடைந்தும் வளர்ச்சியடையும் நாடுகள் பட்டியலிலேயே நமது நாட்டின் பொருளாதாரம் இருப்பதும், பல்வேறு சரிவுகளை பொருளாதாரம் கண்டபோதும் நம்முடைய இந்தியப் பொருளாதாரம் உறுதியான நிலையில் இருப்பதாகக் கூறுவதும் வரவேற்கத்தக்கதாக இல்லை. பொருளாதாரச் சரிவைச் சந்தித்த சீன தேசத்தின் நாணயம் வளர்ச்சிப்பாதையில் திரும்பியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியதால் இங்கிலாந்தின் நாணயத்தின் மதிப்பு சரிந்தாலும் மீண்டும் அது வளர்ச்சிப்பாதையை நோக்கித் திரும்பிவிட்டது. இங்கிலாந்தின் பவுண்ட் நம் உரூபாய் மதிப்பில் 1 பவுண்டிற்கு 87 உரூபாயாகவும், சீனாவின் நாணயம் 10 உரூபாய் 16 காசுகளாகவும் உள்ளன. ஆனால் நமது உரூபாயின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான உரூபாயின் மதிப்பு 68 உரூபாயாக உள்ளது. இத்தனைக்கும் அன்னியச் செலாவணியில் பெரும்பகுதியை எடுத்துக்கொள்ளும் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைந்திருக்கும்போதே நம் உரூபாயின் நிலை இப்படி உள்ளது. இதில் சில பொருளாதார மேலாண்மையில் உள்ள அதிகாரிகள் குறைக்க முயற்சிப்பதும் மத்திய வங்கியின் ஆளுநரின் கடுமையான எதிர்ப்பால் தடைபட்டு இருப்பதும் இன்று நடக்கக்கூடிய நிகழ்வுகளாக உள்ளன. நம்முடைய பொருளாதாரம் சீர்பெற வேண்டுமென்றால் ஊழலில் ஏழாவது நாடாக இருக்கும் இந்நிலை மாறவேண்டும். நேற்றைய அறிவிப்பின்படி பண வீக்கம் இரண்டு மாதங்களாக எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து இருக்கும் நிலை மாறி நம்முடைய உரூபாயின் மதிப்பு உயரும் நாளே உண்மையான சுதந்திர நாளாகும். சரியான பொருளாதாரச் சிந்தனைகளும், ஆர் & டி (RESEARCH & DEVELOPMENT DEPT) துறையின் சரியான வழிகாட்டுதலும் இந்த 70வது சுதந்திரதின உரையின் அரசு அறிவிப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்போம். இதுவே இன்றைய அத்தியாவசியமான தேவையுமாகும்.

    வாழ்க பாரதம்!

    வளர்க இந்தியத் திருநாடு!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    unnamed

    முலைகனத்தாள்(பாலூட்ட ரெடியாக) காட்டும் கலையைக்(சந்திரன்)கா ணாது
    கொலைகுண பூதனை கொங்கை -மலைசுவைக்க,
    எண்ணி மடியிறங்கும் ஏரார்ந்த கண்ணியின்
    கண்ணனை நெஞ்சே கருது’’…..கிரேசி மோகன்….

    Share
  • ’’வரலஷ்மி விரத வாழ்த்துக்கள்’’

    crazy
    ————————————————————–

    “கள்ளம் கபடின்றி, கையேந்திய சங்கரர்க்கு
    உள்ளங்கை நெல்லி உவந்தளித்த -உள்ளத்தின்
    வீரதர் மத்தால் வியந்தவர் வேண்டிட
    கூரையைப் பிய்த்தவளைக் கொஞ்சு”….(1)

    “சுதாமன் அவலுக்கு சொர்ணங்கள் தந்தாய்
    கதாமகன் கீர்த்தியை கண்ணனுக்(கு) -இதோவென்று
    பொன்னோடு பேரை புறக்கணித்த பூவையே
    நின்னோடு சேர்ந்தகண்ணன் நார்”….(2)

    “பொன்வைக் குமிடத்தில் பூவைப்போர் மீதிவள்
    கண்வைக்க கஞ்சனும் கர்ணனே -முன்வைத்தக்
    காலைப்பின் வைக்கா கடுமுயற்சி யாளர்க்கு
    வேலை திருவினையாள் வாகு”….(3)

    Share
  • ”வரலஷ்மி விரதம்’’….

    images (5)

    குப்பையில் மாணிக்கக் கல்லாய் மிளிர்ந்திடுவாள்
    அப்பழுக்கு சேறிலவள் அல்லியாவாள் -குப்பனின்
    வீட்டுச் சுவரில் வரைந்தாலும் வந்தருள்
    கூட்டும் வரலக்ஷ்மி காப்பு”….

    “வீரத் துணிச்சலை (தைரியம் ), வெற்றிக் கனிச்சுவையை ( விஜயம் )
    ஈரப் பசைநெஞ்சுக்(கு) ஈகையை (தனம் )-சேரும்
    மனைமக்கள்(சந்தானம்) வித்தை(வித்யா) முளைக்கதிர்(தான்யம்), எட்டு
    முனையானை(அஷ்ட திக் கஜங்கள்) ஆதி முடிப்பு”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazyk

    ”ஆலில் படுத்தன்று ஆழியில் உண்டுமிழ்ந்த
    மாலின்று மாட்டின் மடிபுகுந்து , -காலின்,
    பெருவிரலைச் சூப்ப, பசுமிரண்டு பார்க்கும்
    கருவிருந்த கண்ணனவன் கால்’’….கிரேசி மோகன்….!

    ஆலில் -வடபத்ர சாயி….
    ஆழியில் -கடலில் ஊழிநாளில் உலகேழை
    உண்டு உமிழ்ந்த உலகளந்தோன்….!

    Share
  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (12)

    இசைக்கவி ரமணன்

    திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (11)

    kural-4-1-1

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

    இறைவ னடிசேரா தார் (10)

     

    கடவுளின் திருவடியை அடைந்தவரால் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவரால் கடக்க முடியாது.

    யார் இறைவனடியைச் சேர்கிறார்களோ அவர்களே பிறவியாகிய பெருங்கடலைத் தாண்டுகிறார்கள். அறம், பொருள், இன்பம் என்னும் கடல்களைக் காட்டிலும் விரிந்ததும் மருட்சி தருவதுமானது பிறவி என்னும் பெருங்கடல். அதனால்தான் அதனை சம்சார சாகரம் என்கிறோம்; பவக்கடல் என்கிறோம்; ஏன், கவலைக் கடல் என்றுகூடச் சொல்கிறோம்.

    இந்தக் கொடுங்கடலை எப்படிக் கடப்பது? முயற்சியின்றி மூழ்கிப் போவதா? மணலைத் தூவித் தூர்க்க முனைவதா? கரை எங்கோ அதுவரை பாலம் கட்டப் புறப்படுவதா?

    கடலைத் தாண்டப் பாலம் எதற்கு, படகே போதாதா?

     

    ஆம், அந்தப் படகுதான் இறைவனின் தாள்கள்; இறைவனின் திருநாமம்.

    கடவுளின் தாளைப் பணிவதால் மட்டுமே அதைக் கடக்கமுடியும், மீண்டும் பிறவாமல் காத்துக்கொள்ள முடியும் என்கிறார் வள்ளுவர். இல்லையெனில், மறுபடி மறுபடிப் பிறவிக் கடலில் அழுந்தும் துயரே தொடரும் என்பது முடிவு. ஆயின், வினை, அதன் விளைவாகிய பிறப்பு, முற்பிறவி இவை உண்டு என்றுதான் திருவள்ளுவர் அறிவுறுத்துகிறார்.

    `என்பால் சித்தத்தை வைத்தோரை, விரைவில் பிறவிப் பெருங்கடலிலிருந்து மீட்கிறேன்,` என்கிறான் கண்ணன். (கீதை:12:07)

    இறைவனைப் பணிதலே துவக்கமும், முடிவும், ஒவ்வொரு மனிதனின் பணியும் என்பதை மிக உறுதியாகவும் அன்போடும் கருணையோடும் எடுத்துச் சொல்கிறார்.

    இறைவனடி சேராதார் பிறவிப் பெருங்கடல் நீந்தார் என்றார். நீந்துவர் என்னும் சொல் தனியே நிற்பதுபோல் தோன்றுகிறதல்லவா? இங்கே உவமை சொல்லப்படவில்லை. ஒன்றைச் சொல்லி, இன்னொன்று சொல்லாமல் சொல்லப் படுகிறது. இதை இசையெச்சம் எனலாம். இது ஏகதேச உருவகம் அல்லது ஏகாங்க உருவகம் எனப்படும்.

    இன்னொரு சிறப்பையும் காண்போம்:

    ந்தப் பத்துக் குறள்களில், அனைத்துக்கும் ஆண்டவனே முதல் என்பதை முதலிலேயே முடிவாகச் சொல்லிவிடுகிறார். அவனுடைய புகழைப் பாடுவதே இருவினைகளில் இருந்து மீளும் வழி என்பதை ஓரிடத்தில் சொல்கிறார். ஒழுக்க நெறியில் நின்றார் நீடு வாழ்வார் என்று ஓரிடத்தில் கூறுகிறார். ஆக, எவன் அனைத்துக்கும் துவக்கமோ அவன் புகழைப் பாடுவதும், அவனை அடைய விதிக்கப்பட்ட ஒழுக்க நெறியில் நிற்பதுமே வேலை என்கிறார்.

    இஃதல்லாமல், பத்து குறள்களில் ஏழு குறள்கள் இறைவனுடைய தாள்களைப் பணியச் சொல்கின்றன:

    1. வாலறிவன் நற்றாள்
    2. மலர்மிசை ஏகினான் மாண் அடி
    3. வேண்டுதல் வேண்டாமை இலான் அடி
    4. தன்க்குவமை இல்லாதான் தாள்
    5. அறவாழி அந்தணன் தாள்
    6. எண்குணத்தான் தாள்
    7. இறைவன் அடி

    தாளைப் பணியவே தலை. தாளில் ஆளில்லை. அதில் தலைவைத்துத்தான் நமது அடையாளங்கள் யாவும் தீர்ந்து நாம் ஆளாவோம்! அவனுக்கே ஆளாவோம்! தாளில், புகலிடம் என்பதைத் தவிர வேறு அடையாளம் இல்லை. முக பாவனை இல்லை. கைகளும் ஆயுதங்களும் இல்லை. வாழ்வில் தள்ளாடி வரும் நம்மை ஒருபோதும் தள்ளாது தாள்!

    இறையருளே இணையடி!

    அவனே அனைத்தும் என்பதால், அவனைப் பணிதலே அனைத்துக்கும் வழி என்பதைப் புரிந்துகொள்கிறோம்.

     தொடருவோம்

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 68

    பிலடெல்ஃபியா கலை அருங்காட்சியகம், ஃபிலடெல்ஃபியா, வட அமெரிக்கா

    முனைவர்.சுபாஷிணி

    பிலடெல்ஃபியா கலை அருங்காட்சியகத்தின் வடிவமைப்பு மிகப் பிரமாண்டமானது. அடித்தளத்தில் நான் சென்ற போது ஆசிய, அதிலும் தெற்காசிய சிற்பங்களின் கண்காட்சி வைத்திருந்தனர். இதில் அறிய புத்தர் சிற்பங்களும் திபேத்திய அருங்கலைப் படைப்புக்களும் நிறைந்திருந்தன. உள்ளே கட்டணம் கட்டி டிக்கட் பெற்றுக் கொண்ட உடன் முதல் தளத்திலேயே அங்குள்ள ரோமானிய, கிரேக்க சேகரிப்புக்களைப் பார்வையிடத் தொடங்கலாம். ஆனால், நான் அங்கே தொடங்காமல் அடித்தளத்தில் இருந்த சிறப்புக் கண்காட்சியை பார்வையிட ஆரம்பித்தேன்.

    as

    கி.பி.11ஆம் நூற்றாண்டு சமண தீர்த்தங்கரர் கருங்கல் சிற்பம் ஒன்று இந்தியாவின் நியூ டெல்லி அருங்காட்சியகத்திலிருந்து வாங்கப்பட்ட சிற்பம் இங்கு காட்சிக்கு உள்ளது. இந்த சிற்பத்தை விலை கொடுத்து பிலடெல்ஃபியா அருங்காட்சியகத்திற்கு பொருளுதவி செய்தவர்கள் திரு. திருமதி ரோலண்ட் என்ற செய்தியையும் இங்கு காணலாம். இது 1968ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வாங்கப்பட்டது. கல்லால் ஆன மிக நேர்த்தியான வகையில் அமைந்த சிற்பம் இது. பாதப்பகுதியில் மட்டும் சேதம் ஏற்பட்ட வகையில் உள்ளது.

    இதே போல விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம வடிவத்தின் சிற்பம் ஒன்றும் இங்குள்ளது. இது கி.பி. 4ஆம் நூற்றாண்டு சிற்பம் என்றும் மதுரா, அதாவது இன்றைய உத்திர பிரதேசம் பகுதியிலிருந்து கிடைக்கப்பெற்றது, இதுவும் இந்தியாவிலிருந்து வாங்கப்பட்ட சிலைதான். அதற்கு பொருளுதவி செய்தோர் பற்றிய குறிப்புகளும் அருங்காட்சியகத்தில் உள்ளது.

    as1

    இங்குள்ள மற்றுமொரு அற்புத சேகரிப்பு இந்தியாவின் மத்திய பிரதேசத்திலிருந்து வாங்கப்பட்ட 11 ஆம் நூற்றாண்டு அர்த்தநாரீஸ்வரர் சிற்பம். இதுவும் கருங்கல்லில் செய்யப்பட்ட சிற்பமே. இந்திய சிற்பக்கலைக்கு உதாரணமாகத் திகழும் வகையில் இந்த சிற்பத்தின் அமைப்பு அமைந்திருக்கின்றது.

    இந்த அருங்காட்சியகத்தில் சேகரிப்பில் சிறப்பானவற்றுள் ஒன்றாகக் கருதப்படும் சுவர்க்கத்தின் நாயகனான இந்திரனின் சிலை ஒன்றும் இங்குள்ளது. இது நேப்பாளின் காட்மண்டு நகரிலிருந்து வாங்கப்பட்ட தனியார் சேகரிப்பிலிருந்து அருங்காட்சியகத்திற்குக் கிடைத்த 12ஆம் நூற்றாண்டுச் சிற்பம்.

    as2

    இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே இருக்கும் மிகப் பிரம்மாண்டமான அமைப்புகளில் 14ஆம் நூற்றாண்டு மூரோமாச்சி காலத்து கோயில் ஒன்றையும் குறிப்பிடலாம். இது ஜப்பானின் நாரா என்ற பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டு அருங்காட்சியகத்தின் உள்ளேயே வைக்கப்பட்டுள்ளது. மூங்கிலால் மிக நேர்த்தியாகச் செய்யப்பட்ட கோயில் வளாகம். அதனுள்ளே பலகையால் ஆன கோயில் அமைக்கபப்ட்டு ஆலயத்தின் மத்தியில் புத்தர் சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இங்கே நின்று பார்க்கும் போது அருங்காட்சியகத்தில் தான் இருக்கின்றோமா அல்லது ஒரு ஜப்பானிய புத்தர் கோயிலில் இருக்கின்றோமா என குழம்பித்தான் போய்விடுவோம்.

    as6

    இந்த ஜப்பானிய புத்தர் கோயில் இருக்கும் அதே தளத்திலேயே மற்றுமொரு பிரமாண்டமான கோயில் இருக்கின்றது. இது ஸ்பெயினின் கட்டாலானியா பகுதி, அதாவது இன்றைய பார்செலோனா இருக்கும் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட செயிண்ட் ஓத்தோ – செயிண்ட் போனவென்சோ தேவாலயத்தின் ஒரு மண்டபத்தின் ஒரு பகுதி. கிபி 1490 வாக்கில் கட்டப்பட்டது என அறியப்படும் இந்தக் கோயில் கல்லால் கட்டப்பட்டது. இதன் சில பகுதிகள் மரத்தால் ஆனவை. தங்க முலாம் பூசப்பட்ட வகையில் அமைக்கப்பட்டவை. இதுவும் ஒரு தனியார் கொடுத்த நன்கொடையின் வழி கிடைக்கப்பெற்றது. செயிண்ட் ஒத்தோ என்பவர் கத்தோலிக்க சமய குருமாராக இருந்து அங்கு ப்ரான்சிச்கான் அமைப்பில் இருந்து சமயம் பரப்பும் சேவையைச் செய்தவர்கள். அவர்கள். சமயம் பரப்பும் பணிக்காக மரோக்கோ நாட்டிற்குச் செய்ன்று அங்குள்ள மசூதி ஒன்றில் கத்தோலிக்க சமயம் பரப்பும் நடவடிக்கையைச் செய்ததால் இவர்கள் அங்கேயே சிரச்சேதம் செய்யபப்ட்டு கொல்லபப்ட்டனர். அவர்களின் நினைவாக ஸ்பெயின் நாட்டில் எழுப்பப்பட்ட தேவாலயத்தின் ஒரு பகுதி தான் இங்கிருப்பது.

    as4

    இப்படி இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் சிறப்பானவற்றைப் பற்றி சொல்லிக் கொண்டேயிருக்கலாம். ஒரு நாள் முழுவதும் இருந்தால் இந்த அருங்காட்சியகத்தை நன்கு சுற்றிப்பார்த்து இங்குள்ள அரும்பொருட்கள் சேகரிப்புக்கள் பற்றி அரிந்து கொள்ளலாம்.

    இந்த அருங்காட்சியகத்துக்கு அருகில் இருக்கும் மேலும் இரண்டு அருங்காட்சியகங்களுக்குச் செல்வதற்கு சிறப்பு பேருந்து வசதி. உள்ளது. இந்தப் பேருந்து இலவசம். இது வரும் வேளையில் இதில் ஏறிக் கொண்டால் அடுத்த அருங்காட்சியகத்திற்குக் கொண்டு சென்று விடும் வகையில் வசதிகள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

    as5

    பிலடெல்ஃபியா அருங்காட்சியகத்திற்குச் சென்று வந்தது எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவம். மதுரை ஸ்ரீமதனகோபாலசுவாமி மண்டபம் மட்டுமல்லாது ஜப்பான், ஸ்பெயின், பிரான்சு, சீனா, கொரியா, என பல நாடுகளின் வழிபாட்டு வளாகங்கள் இங்கிருப்பது இதன் பெருமையைக் கூறும் வகையில் இருக்கின்றது.

    சரி. அடுத்த கட்டுரையில் மேலும் ஒரு நாட்டில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தைப் பற்றி விவரிக்கின்றேன். தொடர்ந்து வாருங்கள்.

    Share