‘’குமார சம்பவம்….!”

–கிரேசி மோகன்      


கோனிங்(கு) இமவான் குளிர்சா மரமிங்கு
வானின் வளர்மதி வெண்கவரிமானின்வால்
ஆகமலை ஆளும் அரசனே இங்குமலை
ஆக இருத்தல் அழகு….(13)

கூச்சமுறும் கின்னரப்பெண் கூறை களைகையில்
ஆச்சரியம் கொள்வாள்அதைப்பார்த்துமூச்சிறைக்க
மேகம் குகைவாசல் போகும் திரையாக
மோகத் துணைபோகும் மஞ்சு….(14)

தேவகங்கை நீர்த்திவலை, தேவதாரு தூமணம்
மேவுமயிற் தோகை மிருதுவும்தாவிவரும்
காற்றில் கலந்திருக்கக் காட்டில் களைத்தவேடர்
ஏற்றடைவர் ஏகாந்த மே….(15)

ஏழுரிஷி கொய்தபின்பு எஞ்சும் உயிர்மொட்டை
வாழும் கமலங்கள், வெற்படியில்சூழும்
கதிரோனின் மேல்நோக்கும் கைக்கிரணம் பட்டு
உதிரும்முன் பூக்கும் உவந்து….(16)

வேள்விப் பொருட்கள் விளைவதால், பூபாரக்
கேள்விக் குறிக்குவிடை கண்டதால்நூல்வைத்த
நான்முகன் யாகத்தில் கோன்பெறும் பாக(ம்)இம
வான்முகம் வைத்தான் விழைந்து….(17)

பித்ருக்கள் மானசீகப் புத்ரி, முனிகணங்கள்
தத்தெடுத்த நெஞ்சின் தவப்புதல்விஉத்தமி
மேனை மணம்புரிந்தாள் மேருவின் தோழ(ன்)இம
வானையவன் வம்சம் வளர்த்து….(18)

 

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *