-மேகலா இராமமூர்த்தி

இந்தவாரப் படக்கவிதைப் போட்டிக்கான புகைப்படத்தை எடுத்துத் தந்திருப்பவர் திரு. பிரேம்நாத் திருமலைசாமி. இதனைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்திருப்பவர் வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் வல்லமை இதழின் நன்றி!

goat and rooster

மாலை மரியாதையோடு(!), கயிற்றிலே கட்டுண்டிருக்கும் (பலி)ஆடும், தன் உயிருக்கு நேரவிருக்கும் துன்பத்தை அறியாது தரையிலே கிடக்கும் சேவலும் கொல்லாமையை விரும்பும் நல்லோர் மனத்தை நடுங்க வைக்கின்றன.

புத்தரும், எண்ணிறந்த சித்தரும் நம் மண்ணில்தோன்றி ”உயிர்க்கொலையைக் கைவிடுக!” என்று கடிந்துரைத்துப் பயனென்ன? அக்கொடுமைகள் இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன!

சரி…இந்தப் புகைப்படம் நம் கவிஞர்களிடையே எத்தகைய எண்ணஅலையை எழுப்பியிருக்கின்றது எனக் கண்டுவருவோம்!

***

”வளர்த்தவர்களே தம்மைக் கொல்லும் கொடுமையைச் சொல்ல வாயில்லையே” என்று ஏங்கும் வாயில்லா சீவன்களின் புலம்பலை உணர்வுபூர்வமாய்ப் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. ராதா விஸ்வநாதன்.

அட……
நீயும் இங்கு இருக்கிறாயா
மரணத்தின் பயணத்தில்
துணையாக வந்த உனக்கு
என் கடைசி வாழ்த்துக்கள்

நாமிருவரின் ஐம் புலனில்
ஒரு புலனான வாய் உண்பதற்கே உள்ளது
மனிதனைப்போல் பேச இயலாது
பேசும் சக்தியினை கொடுக்காத‌
இறைவனை என்ன சொல்ல…

மனிதர்களே வளர்த்து நம்மை
கொல்வதை யாரிடம் சொல்ல‌
பேசும் சக்தியிருந்தால்
கூட்டம் கூடி குரல் எழுப்பலாம்…
அறுவாளால் அறுபடும் பொழுது…

இவர்கள் வாழ
நம்மவர் பலி
[…]
மாலை போட்டு பொட்டு வைத்து
பாவத்தை மறைக்க‌
இவர்கள் ஓதும் மந்திரச்சொல்
குலதெய்வத்திற்கு பலி

எந்த சாமி பலி கேட்டு
உண்டு களிக்கிறது…
உண்டு களித்து
ஊனைப் பெருக்கி வாழுமிவர்களும்
மாள்வது நிச்சியமே

புத்தனும் வள்ளுவனும் போதித்தது
புவியில் காணாமல் போய்விட்டது…

***

’கருணையே வடிவான இறைவனா உயிர்ப்பலி கேட்பான்? இல்லவே இல்லை! ஆதலால் இம்மடமையை ஒழித்துப் பிற உயிர்களிடத்தும் இரக்கம் காட்டுதல் உம் கடமை’ என்று மாந்தர்க்கு நன்மொழி நவிலும் திரு. செண்பக ஜெகதீசனின் கவிதையிது!

ஆடும் கோழியும் பலிகேட்டே
ஆண்டவன் என்றும் வருவதில்லை,
தேடும் இறைவன் வெளியிலில்லை
தேடிப் பாராய் உன்னிடமே,
கூடும் கூட்டமும் துணையில்லை
கூறும் வார்த்தையும் உண்மையில்லை,
வாடும் மாந்தர்க் குதவிடுவாய்
வந்து சேரும் பரம்பொருளே…!

***

”வலியாரை வதைக்கத் திறனற்ற மானுடன் மெலியாரை வதைத்து மகிழ்வு காண்கின்றான். கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பதுதான் இவன் கோட்பாடோ?” என்று மிருகங்கள் வாயிலாய் மனிதனின் அருளற்ற இருள் மனத்தை வெளிச்சமிட்டுள்ளார் முனைவர் மா. பத்மபிரியா.

பலசாலிகளை பலியிடுவதில்லை
• நம்பிக்கை வைத்தே
நம்பி தான் வந்தோம்
நம்பிக்கை நமக்கு
மூடநம்பிக்கையோ அவா்களுக்கு
• தழையிட்டவரென நம்பிடாதே
தலைமுடி காணிக்கை அவா்களுக்கு
தலையெடுத்தலோ நமக்கு
• விரதம் இருப்பதும்
விரதம் முடிப்பதும்
வலியவன் சாத்திரம்
[…]
• காத்திருக்கும் பலிபீடம்
காலங்காலமாய்
கதைமுடிப்பது
கட்டுண்டவா்களை மட்டுமே
• கொன்றால் பாபம்
தின்றால் தீரும்
நன்றாய் வகுத்தான்
நரனுக்கான நீதியென்று
• வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
புல்லை காட்டி
எல்லை தீட்டினான்…

***

மிருகவதைக்கு எதிரான அறச்சீற்றம் கவிஞர்களின் கவிதைகளில் பொங்கிப் பாய்வதைக் காண்கின்றேன். இனி இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார் எனப் பார்ப்போம்!

***

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் என்றார் தெய்வப் புலவர். ஆனால் மனிதர்கள் பிற உயிர்கள் தொழத்தக்க வகையில் வாழவில்லை; மாறாக அவை அழத்தக்க வகையிலேயே வாழ்கின்றனர். என் செய்வது? தாம் வேண்டும் வரம்பெற வாயில்லாச் சீவன்களைக் கடவுளர்க்குப் பலியிடும் அவர்தம் மடமையை என்னென்பது?

ஆனால் அந்தச் சீவன்களோ தம்மைக் கொல்வார்மீதும் கோபம் கொள்வதில்லையாம். தம்மை வெட்டுவதால் மனிதர்களின் கவலைகள் பறக்கின்றன எனில் அவர்கள் கையால் வெட்டுப்படவே தாம் மீண்டும் பிறக்கலாம் என அவை சிந்திப்பதாய் எழுதப்பட்டுள்ள ஒரு கவிதை உள்ளம் உருக்குகின்றது.

முதல் பலி
நீயா? நானா?
தெரியாது.
ஆனால்
அவர்கள் வரம் பெற
நமக்குச் சாபம்!
வெட்டத்தான் வளர்க்கின்றார்கள்
என நினைத்து
இவர்களிடம் பாசம்
காட்ட நாம் மறந்ததில்லை!
நம்மை வெட்டுவதால்
இவர்கள் கவலைகள்
மறைகிறதென்றால்
நாம்
மீண்டும் பிறப்போம்!

மிருகங்களிடத்தும் தெய்வகுணத்தைப் புகுத்தியிருக்கும் இக் கவிதையின் ஆசிரியர் திரு. ஆனந்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவிக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 76-இன் முடிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.