இலக்கியம் எழுதாத நட்பு (ஆறாம் பகுதி)
க. பாலசுப்பிரமணியன்
நண்பனே
யாமிருக்க பயமேனென
சொல்லும் நீ ..
பயத்தை ஏன் படைத்தாய் ?
பயத்தையும் தந்து
அதிலிருந்து ..
என்னைக் காப்பாற்றுவதில்
உனக்கு என்ன மகிழ்ச்சி ?
கண்ணைக் குத்திவிடுவாய் நீ……..
காரிருளில் பேயாய் வருவாய் நீ……………..
முருங்கை மரத்தில் மறைவாய் நீ……….. ..
என்றெல்லாம் சொல்லி…
கிள்ளையான என் மனத்தில் ..
களங்கத்தை ஏற்படுத்தியது யார்?
அகிலமெல்லாம் உன்நிழலே என்றால்
நானும் உன்நிழல் தானே?
என் நிழலை கண்டு….
உன் நிழலைக் கண்டு..
ஏன் பயப்படவேண்டும்?
இந்த பயம்
வியாபாரமா?
விவேகமா?
வேலையற்றவர்களின் ..
விளையாட்டா?
அறியாமையில் வளரும் வளர்ப்பு
பயத்திற்குப் பட்டயம் கட்ட
யார் காரணம்?
நரகத்தில் கொதிக்கும்
நல்லெண்ணெய் பானைகள்…
விடத்தைக் காக்கும்
விதவிதமான உயிரினங்கள்..
அரக்கர்களால் அடிக்கப்படும்
முள்வேலிச் ..சாட்டைகள்.
யாருடைய கற்பனையில்
இவை இலக்கிய வரம் பெற்றன?
பாவங்கள் நரகத்திற்குச் சொந்தமென்றால் ..
புண்ணியங்கள் சொர்க்கத்திற்குச் சொந்தமோ?
உன் அன்பான அரவணைப்பும்..
உன் இடைபிரியாத நட்பும்
இருப்போர்க்கு ..
இன்னொரு சொர்க்கம் எதற்கு?
பயங்கள்..
உணர்வுகளின் வறுமைக்கு
இயலாமை கொடுக்கும் சீதனங்கள் !
விவேகத்தின் கண்களை குருடாக்கி ..
புதிய வேதாந்தங்களுக்கு விலைபேசும்
வர்த்தகர்கள்……
தாழ்வுடமைக்குத் தாளம் கொட்டி
தன்னம்பிக்கையை மண்ணில் புதைக்கும்
மடமைகள்..…
பயங்கள்;…
மனிதனின் மனத்தை வெல்ல..
சாத்தான் வரைந்த நிழலோவியங்கள் !
ஒதுங்கிவிட இடம் கிடைத்ததும் ..
நினைவில்..
எண்ணத்தில்…
கருத்தில்.
சொல்லில்..
செயலில்..
உறவில்…
தன் குட்டிச்சசாத்தான்களை ..
கோலாட்டம் ஆட விடும் !
இழந்துவிடும் பயம்,,
மறைந்துவிடும் பயம்..
தோற்றுவிடும் பயம் …..
பிரிந்துவிடும் பயம்
இயலாமையின் பயம்..
இவைகளின் நிழலில்
பிறந்த சில உறவுகள்..
வெறுப்பு..
கோபம்..
பொறாமை..
மடமை..
வெறிகள் …
மனதினில் விளையாடும்..
விடுகதைகள் போடும் !.
சந்தேகம் தலைநீட்டி
பயத்துக்குச் சாமரம் வீசும் !
யாரைக் கண்டு பயப்படுவது?
உன்னைக்கண்டா?
உண்மை நட்பில்..
பயமேது?
மற்றவர்களைக்கண்டா?
அனைத்து உயிரிலும் ..
ஆட்சி உனதென்றால்..
பயமெதற்கு ?
பயம்…
எனக்கு நானே ..
சொல்லிக்கொடுத்த ..
ஒரு பொய்யான சிறுகதை…
வேரில்லாத கற்பனை !
கண்களில் ஒளியிழந்து..
கரங்கள் நடுங்கிவிட..
கண்ணீரைக் கடலாக்கி ..
இயலாமையின் சிகரத்தில்..
என்னை நானே நிறுத்தி
வெறுத்து ..
நான் என்னுள் மற்றொருவனாய்
இரண்டாய் ..
பலராய் ..
என்னையே இழந்து
என்னுள் என்னைத் தேடி ..
நண்பனே ..
உன்னுடைய அழகான உலகத்தில்
இந்த அசிங்கத்தை ஏன் படைத்தாய் ?
பயமுள்ள நெஞ்சில் ..
மரணத்தின் மணியோசை
ஏன் நித்தம் ஒலிக்கின்றது ?
பயத்தின் வேர்களை
எங்கிருந்து பிடுங்கியெறிய வேண்டும் ?
உள்ளத்திலிருந்தா ?
உலகிலிருந்தா ?
நண்பா..
உன் கைகளை ..
அன்போடு பற்றிக்கொள்ள ..
பயங்கள்..
பயந்து ஓடுவதேன் ?
அன்பின் உருவமே !
சத்தியத்தின் சாரதியே !
உன் அன்பின் ஒளிக்கதிர்கள் .
என் வாழ்க்கையில் விழும்போது..
பயமின்றி..
உன்னுடன் கைகோர்த்து ..
பயங்களை மறந்து..
என்னையும் மறந்து..
உன்னையும் மறந்து ..
அமைதிப் பயணத்தில் ..
நீயம் நானும்..
நமது நட்பும்… !!