அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 68

0

பிலடெல்ஃபியா கலை அருங்காட்சியகம், ஃபிலடெல்ஃபியா, வட அமெரிக்கா

முனைவர்.சுபாஷிணி

பிலடெல்ஃபியா கலை அருங்காட்சியகத்தின் வடிவமைப்பு மிகப் பிரமாண்டமானது. அடித்தளத்தில் நான் சென்ற போது ஆசிய, அதிலும் தெற்காசிய சிற்பங்களின் கண்காட்சி வைத்திருந்தனர். இதில் அறிய புத்தர் சிற்பங்களும் திபேத்திய அருங்கலைப் படைப்புக்களும் நிறைந்திருந்தன. உள்ளே கட்டணம் கட்டி டிக்கட் பெற்றுக் கொண்ட உடன் முதல் தளத்திலேயே அங்குள்ள ரோமானிய, கிரேக்க சேகரிப்புக்களைப் பார்வையிடத் தொடங்கலாம். ஆனால், நான் அங்கே தொடங்காமல் அடித்தளத்தில் இருந்த சிறப்புக் கண்காட்சியை பார்வையிட ஆரம்பித்தேன்.

as

கி.பி.11ஆம் நூற்றாண்டு சமண தீர்த்தங்கரர் கருங்கல் சிற்பம் ஒன்று இந்தியாவின் நியூ டெல்லி அருங்காட்சியகத்திலிருந்து வாங்கப்பட்ட சிற்பம் இங்கு காட்சிக்கு உள்ளது. இந்த சிற்பத்தை விலை கொடுத்து பிலடெல்ஃபியா அருங்காட்சியகத்திற்கு பொருளுதவி செய்தவர்கள் திரு. திருமதி ரோலண்ட் என்ற செய்தியையும் இங்கு காணலாம். இது 1968ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வாங்கப்பட்டது. கல்லால் ஆன மிக நேர்த்தியான வகையில் அமைந்த சிற்பம் இது. பாதப்பகுதியில் மட்டும் சேதம் ஏற்பட்ட வகையில் உள்ளது.

இதே போல விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம வடிவத்தின் சிற்பம் ஒன்றும் இங்குள்ளது. இது கி.பி. 4ஆம் நூற்றாண்டு சிற்பம் என்றும் மதுரா, அதாவது இன்றைய உத்திர பிரதேசம் பகுதியிலிருந்து கிடைக்கப்பெற்றது, இதுவும் இந்தியாவிலிருந்து வாங்கப்பட்ட சிலைதான். அதற்கு பொருளுதவி செய்தோர் பற்றிய குறிப்புகளும் அருங்காட்சியகத்தில் உள்ளது.

as1

இங்குள்ள மற்றுமொரு அற்புத சேகரிப்பு இந்தியாவின் மத்திய பிரதேசத்திலிருந்து வாங்கப்பட்ட 11 ஆம் நூற்றாண்டு அர்த்தநாரீஸ்வரர் சிற்பம். இதுவும் கருங்கல்லில் செய்யப்பட்ட சிற்பமே. இந்திய சிற்பக்கலைக்கு உதாரணமாகத் திகழும் வகையில் இந்த சிற்பத்தின் அமைப்பு அமைந்திருக்கின்றது.

இந்த அருங்காட்சியகத்தில் சேகரிப்பில் சிறப்பானவற்றுள் ஒன்றாகக் கருதப்படும் சுவர்க்கத்தின் நாயகனான இந்திரனின் சிலை ஒன்றும் இங்குள்ளது. இது நேப்பாளின் காட்மண்டு நகரிலிருந்து வாங்கப்பட்ட தனியார் சேகரிப்பிலிருந்து அருங்காட்சியகத்திற்குக் கிடைத்த 12ஆம் நூற்றாண்டுச் சிற்பம்.

as2

இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே இருக்கும் மிகப் பிரம்மாண்டமான அமைப்புகளில் 14ஆம் நூற்றாண்டு மூரோமாச்சி காலத்து கோயில் ஒன்றையும் குறிப்பிடலாம். இது ஜப்பானின் நாரா என்ற பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டு அருங்காட்சியகத்தின் உள்ளேயே வைக்கப்பட்டுள்ளது. மூங்கிலால் மிக நேர்த்தியாகச் செய்யப்பட்ட கோயில் வளாகம். அதனுள்ளே பலகையால் ஆன கோயில் அமைக்கபப்ட்டு ஆலயத்தின் மத்தியில் புத்தர் சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இங்கே நின்று பார்க்கும் போது அருங்காட்சியகத்தில் தான் இருக்கின்றோமா அல்லது ஒரு ஜப்பானிய புத்தர் கோயிலில் இருக்கின்றோமா என குழம்பித்தான் போய்விடுவோம்.

as6

இந்த ஜப்பானிய புத்தர் கோயில் இருக்கும் அதே தளத்திலேயே மற்றுமொரு பிரமாண்டமான கோயில் இருக்கின்றது. இது ஸ்பெயினின் கட்டாலானியா பகுதி, அதாவது இன்றைய பார்செலோனா இருக்கும் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட செயிண்ட் ஓத்தோ – செயிண்ட் போனவென்சோ தேவாலயத்தின் ஒரு மண்டபத்தின் ஒரு பகுதி. கிபி 1490 வாக்கில் கட்டப்பட்டது என அறியப்படும் இந்தக் கோயில் கல்லால் கட்டப்பட்டது. இதன் சில பகுதிகள் மரத்தால் ஆனவை. தங்க முலாம் பூசப்பட்ட வகையில் அமைக்கப்பட்டவை. இதுவும் ஒரு தனியார் கொடுத்த நன்கொடையின் வழி கிடைக்கப்பெற்றது. செயிண்ட் ஒத்தோ என்பவர் கத்தோலிக்க சமய குருமாராக இருந்து அங்கு ப்ரான்சிச்கான் அமைப்பில் இருந்து சமயம் பரப்பும் சேவையைச் செய்தவர்கள். அவர்கள். சமயம் பரப்பும் பணிக்காக மரோக்கோ நாட்டிற்குச் செய்ன்று அங்குள்ள மசூதி ஒன்றில் கத்தோலிக்க சமயம் பரப்பும் நடவடிக்கையைச் செய்ததால் இவர்கள் அங்கேயே சிரச்சேதம் செய்யபப்ட்டு கொல்லபப்ட்டனர். அவர்களின் நினைவாக ஸ்பெயின் நாட்டில் எழுப்பப்பட்ட தேவாலயத்தின் ஒரு பகுதி தான் இங்கிருப்பது.

as4

இப்படி இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் சிறப்பானவற்றைப் பற்றி சொல்லிக் கொண்டேயிருக்கலாம். ஒரு நாள் முழுவதும் இருந்தால் இந்த அருங்காட்சியகத்தை நன்கு சுற்றிப்பார்த்து இங்குள்ள அரும்பொருட்கள் சேகரிப்புக்கள் பற்றி அரிந்து கொள்ளலாம்.

இந்த அருங்காட்சியகத்துக்கு அருகில் இருக்கும் மேலும் இரண்டு அருங்காட்சியகங்களுக்குச் செல்வதற்கு சிறப்பு பேருந்து வசதி. உள்ளது. இந்தப் பேருந்து இலவசம். இது வரும் வேளையில் இதில் ஏறிக் கொண்டால் அடுத்த அருங்காட்சியகத்திற்குக் கொண்டு சென்று விடும் வகையில் வசதிகள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

as5

பிலடெல்ஃபியா அருங்காட்சியகத்திற்குச் சென்று வந்தது எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவம். மதுரை ஸ்ரீமதனகோபாலசுவாமி மண்டபம் மட்டுமல்லாது ஜப்பான், ஸ்பெயின், பிரான்சு, சீனா, கொரியா, என பல நாடுகளின் வழிபாட்டு வளாகங்கள் இங்கிருப்பது இதன் பெருமையைக் கூறும் வகையில் இருக்கின்றது.

சரி. அடுத்த கட்டுரையில் மேலும் ஒரு நாட்டில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தைப் பற்றி விவரிக்கின்றேன். தொடர்ந்து வாருங்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.