Month: November 2016

  • புதுவரவு !

    பா.ராஜசேகர்

     

    வீட்டுக்கு புதுவரவு வாசமல்லி
    என் பத்துவயது
    மகனுக்கு அதிகமகிழ்ச்சி .
    மண்வெட்டியைஎடுத்து
    முன்வாசலோரம்
    குழிதோண்டி பதியம்வைத்து
    கொடுத்தப்பணத்தை வாங்கிக்கொண்ட
    பூச்செடி விற்பவர்
    புள்ளைமாதிரி பாத்துக்குங்க.
    சொல்லிக்கொண்டிருக்கும்போது
    மனைவிஉரமிட முல்லைக்கு மகன்
    தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தான்.

    வாசலின் இருமருங்கிலும்
    செழித்துவளர்ந்தாள்
    ஊஞ்சலாடிக்கொண்டே
    புன்னகையால் வாசம்பரப்பி
    என்வரவேற்பறையை
    அலங்கரித்து மகிழ்வாக்கினாள்
    வாசமல்லியின் செழுமையில்
    எங்கள் மூவரின் பங்கும் இருந்தது.
    இப்போது மகனுக்கு திருமணமாகிவிட்டது
    வீட்டுக்கு புதுவாசம்தர
    வந்திருப்பது மருமகள்.

    மருமகளின் தந்தை என்கைகளை
    பிடித்துக்கொண்டு
    உங்கபுள்ளைமாதிரி பாத்துக்குங்க
    எனக்கு புதிதாக எதுவும்தோன்றவில்லை
    வாசமல்லியின்வாசம் வீட்டில்மட்டுமல்ல
    எங்கள் மனதிலும் நிறைந்திருந்தது

    Share
  • கையாலாகாதவனாகிப் போனேன்! – 1

    ஒரு அரிசோனன்

    வாயில்லா ஜீவன்

    நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் நாம் பலதடவை கையாலாகாதவர்களாகி நின்றிருக்கிறோம்அந்தசில நிகழ்வுகள்நம் அடிமனத்தில் ஆழமாகப் புதைந்துபோனாலும், அவ்வப்போதுதிரும்பத்திரும்ப மேலெழுந்துவந்து நம்முள் ஒரு ஏக்கத்தை, நமது கையாலாகாத்தனத்தை நமக்குஉணர்த்தி, குற்ற உணர்வை அதிகமாக்கி நிற்கத்தான் செய்கின்றனஅப்படி அவை நமது கையாலாகாத்தனத்தை உணர்த்தும்போது, நமக்குள் ஒருவிதமான தாழ்வுமனப்பான்மை ஏற்படுவதையும், மீண்டும் நமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா, கையாலாகாதவர்களாகிப்போகாமல் ஏதாவது செய்திருக்கமாட்டோமா என்றும் தோன்றும்சிறிது சிந்தித்தவுடன், நம்மால் அந்தச் சந்தர்ப்பத்தில் அப்படித்தான் நடந்துகொண்டிருக்க இயலும், ஏனெனில் வேறுவிதமாக நடந்துகொள்ளும் வலிமையோ, திறமையோ நம்மிடம் இருக்கவில்லை என்றும் நம்மைநாமே சமாதானம் செய்துகொள்வோம்.  இருப்பினும், அந்நிகழ்ச்சிகள் கொதிக்கும் நீரிலிருந்து கிளம்பும் குமிழிகளாக வருவதை நம்மால் தடுக்க இயலாது.

    என் வாழ்வில் நடந்த அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை — என்னைக் கையாலாகாதவனாக ஆக்கிபச்சாதாபமடையவைத்திருக்கும் உண்மை நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்கிறேன். உங்களுக்கும் அப்படி ஏதாவது நிகழ்வுகள் நிகழ்ந்திருந்தால் என்னைப்போல உங்களையும் பச்சாதாபப்படவைத்த, குற்ற உணர்வில் புழுங்கவைத்த அந்நிகழ்வுகள் மனிதவாழ்வின்இயற்கை என்றெண்ணி அமைதிகொள்ளுங்கள்

    … அம்மாதிரியான முதல் நிகழ்வு என் ஆறாம்வயதில் நிகழ்ந்தது.

    சைக்கிள் ரிம்மை ஒரு குச்சியால் தட்டிக்கொண்டு, உதடுகளிலிருந்து காற்றை வெளியேற்றி, கார் ஓடுவதுபோன்ற ஒரு சத்தத்தை உண்டாக்கியதாகக் கற்பனைசெய்துகொண்டு, சிலமுறை பார்த்து மயங்கிப்போன ‘ப்ளிமத் சேவாய்’ காரை ஓட்டும் பெருமையுடன், வீதியை வலம்வந்துகொண்டிருந்தேன் – கழுதைகூட பொதிசுமக்க மறுக்கும் புடைபுடைக்கும் வெய்யிலில்.

    என் கவனத்தைக் கவர்ந்தது நடுவீதியில் படுத்துக்கிடந்த அந்த மாடு.

    அது தனியாகப் படுத்திருந்தால், ஒருகணம்கூட அதற்குமேல் அந்த மாட்டைப் பார்த்திருக்கமாட்டேன். எனது ப்ளிமத் சேவாயை [அதுதான் என் சைக்கிள் ரிம்மை] ஓட்டிக்கொண்டு அந்த வாயில்லா ஜீவனைக் கடந்துசென்றிருப்பேன்.

    அந்த ‘வாயில்லா ஜீவன்’ கழுத்தில் கட்டப்பட்ட நுகத்தடியுடன், நுகத்தடி இணைக்கப்பட்ட வண்டியுடன் படுத்திருந்தது. அதன் அருகில் அதன் தோழனான இன்னொரு ‘வாயில்லா ஜீவன்’ கடனேயென்று நின்றுகொண்டிருந்தது.

    “சனியனே, எந்திரு.  நீ இப்பிடி சண்டித்தனம்செஞ்சா, சந்தைக்கு நான் எப்படிப் போகுறதிங்குறேன்?” என்று அந்த மாட்டை மாட்டடி அடித்துக்கொண்டிருந்தார் வண்டியோட்டி. அவரது கவலை அவருக்கு.

    வண்டியில் ஏற்றப்பட்டிருக்கும் சுமை வைக்கோல் ஏற்றிவரும் இக்கால லாரிகளில் நிரம்பிவழிவதுபோல – ஆனால், சுமை வைக்கோல்போர் அல்ல – நிரம்பிவழிந்திருந்தது.

    நான்கு மாடுகளால்கூட அந்த வண்டியை இழுக்கமுடியாமா என்பதே கேள்விக்குறியாக இருக்கும்போது, இவ்வளவுதூரம் அந்த வண்டியை அந்த மாடுகள் இரண்டும் எப்படி இழுத்துவந்தன என்பதைப் பார்த்தால் வியப்பாகவே இருந்தது.

    வண்டியோட்டி அடித்தது போதாதென்று, மாட்டைப் பலமாக உதைத்து, அதன் வாலைத்தூக்கி, அதற்குக்கீழே இருக்கும் மென்மையான பாகத்தில் தார்க்குச்சியின் ஆணியால் இரண்டு – மூன்று முறை முழுபலத்துடன், நாக்கைத் துருத்திக்கொண்டு, ஆவேசத்துடன் குத்தினார்.

    அந்த இடங்களிலிருந்து செந்நிறக் குருதி கசிந்தது.

    என் தங்கை அழுதாலே பொறுக்காமல், “பாப்பாவைத் தூக்கு, அம்மா!” என்று முறையிடும் என்னால் அதைக் காணச்சகிக்கவில்லை.  முறுக்குமீசையுடன், சிறிது சிவந்த கண்களுடன், தெற்றுப்பற்களுடன் ஐயனார்போல அமர்ந்திருந்த வண்டியோட்டியைப் பார்த்தால் எனக்குப்  பயமாகத்தான் இருந்தது.

    என்னையுமறியாமல் என் சைக்கிள் ரிம் கையைவிட்டு நழுவித் தரையில் விழுந்தது. செயலற்று நின்றேன்.

    “மாட்டை அடிக்காதீங்க ஐயா,” என்று கதறவேண்டும்போல இருந்தது.  பயத்தில் உதடுகள் ஒட்டிக்கொண்டதால் குரல் எழவில்லை.

    துயருறும் அந்த வாயில்லா ஜீவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆறுதல்சொல்ல என் உள்ளம் துடித்தது.

    ஆயினும், நான் செயலற்று நின்றேன்.

    அதன் கண்ணிலிருந்து கரியதாக நீர்பெருகித் தரையில் சொட்டியது. அப்படியும் இலேசாக அசைந்துகொடுத்ததே தவிர, அந்த மாடு எழுந்திருக்கவில்லை.  என்ன அலுப்போ, களைப்போ, அயர்ச்சியோ அதற்கு!

    உள்ளங்காலில் முள்குத்தினால் நம்மால் பொறுக்கவியலாது.  மென்மையான பின்பாகத்தில் இரத்தம்கசியக் குத்தப்பட்டும், துடிக்காமல் வெறுமனே அசைகிறதே அந்த வாயில்லா ஜீவன்?

    அது பொறுமையா, அல்லது, இப்படி அடியையும், உதையையும், குத்தலையும் தாங்கியதால் ஏற்பட்ட மரப்பா?

    அந்த மாட்டின், தாய், தந்தை, அக்கா இவற்றுடன் அந்த மாட்டைச் சம்பந்தப்படுத்திக் கண்டகண்ட கெட்டவார்த்தைகளால் திட்டியவாறே கீழே குதித்தார், வண்டியோட்டி.

    என்னைப் பார்த்தவுடன், “தம்பி, இங்கே உனக்கென்ன வேலை?  போ, போ!” என்று கடும்சொற்களால் அதட்டிவிட்டு, தொண்டையைச் செருமிக்கொண்டு, குனிந்து அந்த வாயில்லா ஜீவனின் இருகண்களிலும் வாயில் குதப்பிக்கொண்டிருந்த செக்கச்செவேலென்ற புகையிலைச் சாற்றை உமிழ்ந்தார்.

    என் கண்கள் இரண்டும் எரிந்தன.

    இதயத்தை யாரோ கசக்கிப்பிழிவதுபோல இருந்தது.  மூச்சுத் திணறியது.  அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டேன்.

    மாடு எழுந்தது.  தார்க்குச்சியால் அதைக் குத்தியவாறு விரட்டினார் வண்டியோட்டி.

    மாடு தள்ளாடியவாறே அடியெடுத்து வைத்தது.  வண்டி மெல்ல நகர்ந்தது.

    பிழியப்பிழிய அழுதேன் நான் – என் கையாலாகாத்தனத்தை எண்ணி.

    கிங்காங்கைப் புரட்டிப்போடும் தாராசிங்காக நான் இல்லையே என்றெண்ணி.

    இன்றும், எந்தவொரு மாட்டுவண்டியைப் பார்த்தாலும் இந்நிகழ்வே என் கண்முன் வந்துநிற்கிறது.  என் கையாலாகாத்தனத்தையும், அந்த வாயில்லா ஜீவனையும், இரத்தம்சொட்டும் மென்மையான அதன் பின்பாகத்தையும், அதன் கண்ணிலிருந்து வழிந்து தரையில் சிந்திய கரிய நீரையும், அதன் கண்களில் உமிழப்பட்ட புகையிலைச் சாறையும், அது வழியும்போது அந்த வாயில்லா ஜீவன் தன்னை நொந்துகொண்டு இரத்தக்கண்ணீர் வடிப்பதுபோன்ற தோற்றமும், மெல்ல எழுந்திருந்து தள்ளாடித் தள்ளாடி வண்டியை இழுத்துச்சென்றதையும் நினைவுக்குக் கொண்டுவந்து என்னுள் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

    ஒருசில சமயம் நான் என்னை அந்த வாயில்லா ஜீவனைப்போல உணர்ந்து, அதுபட்ட வேதனையை அனுபவிக்கிறைன்.

    இது என் கையாலாகாத்தனத்திற்கு இறைவன் தொடர்ந்து அளித்துவரும் தண்டனையா?

     [கையாலாகாத்தனம் தொடரும்]

    மறுபகிர்வு நன்றி:  தாரகை இணைய இதழ்

    Share
  • அருள்மிகு அந்தியூர் பத்ரகாளி அம்மன்

    பவள சங்கரி

    anthi

    தீமைகளை அழிக்கவும், தீயவர்களை ஒடுக்கவும் கோபாவேசம் கொண்டு பொங்கி எழுபவள் அன்னை பத்ரகாளி. திருவக்கரை, தில்லை, திருவாலங்காடு, மதுரை ஆகிய தலங்களில் உக்கிரமாகக் காட்சியளிக்கும் காளி அன்னை சினந்தணிந்த அன்பு அன்னையாக புதுச்சேரியிலும், மதுரகாளியாகவும், சிறுவாச்சூரில் லலித காளியாகவும் அருள்பாலிக்கிறாள். அந்தியூர் எனும் அரிய தலத்திலும் சாந்த நாயகியாக அமர்ந்து அருள்புரிகிறாள்.

    anth1

    பொதுவாக நாட்டுப்புறப் பாடல்கள், வில்லுப்பாட்டுகள், கும்மிப் பாடல்கள் போன்றவைகள் பத்ரகாளியம்மனை சிவபெருமானின் துணைவியாக, பராசக்தியின் அம்சமாகவும், திருமாலின் இளைய சகோதரியாகவும் குறிக்கப்படுவதால் சைவம், வைணவம் என இரண்டையும் பாலமாக இணைக்கும் தெய்வம் அன்னை பத்ரகாளி எனக் கருதலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். தாய்த்தெய்வம் என்று மக்களால் அன்பாக போற்றப்படும் பத்ரகாளியன்னை, மாகாளி, ஓம் காளி, கொற்றவை, எல்லைப் பிடாரி, பத்ரகாளி என பல்வேறு திருநாமங்கள்கொண்டு போற்றப்படுகிறாள். காளி என்றால் கறுத்தவள் என்றும் பொருள்படும். பீடையை அறுப்பவள் பிடாரியானாள். தீமைகளை, தீயவர்களை, தீய  எண்ணங்களை அழித்து நல்லவைகளை நிலைநாட்டுபவர்கள் பேராண்மை பெற்று விளங்க எண்ணுவோர் காளியை வழிபடுகின்றனர். அதாவது அன்னை அருள்வடிவாய் காட்சியளிக்கும்போது பவானியாகவும், ஆண் சக்தியாக அருள்பாலிக்கும்போது துர்க்கையாகவும் விளங்குகிறாள் என்கின்றனர் ஆன்றோர். அந்த வகையில் பழம்பெரும் நகரமான அந்தியூர் எனும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பத்ரகாளியம்மன் சகல செல்வங்களும் அருளும் வடிவுடை அன்னையாகத் திகழ்கிறாள். இவள் வீற்றிருக்கும் ஆலயமோ ஆயிரம் ஆண்டுகள் பழமையானது!

    anth4

    ஈரோட்டிலிருந்து வடக்கு புறம் 35 கி.மீ. தொலைவில் உள்ளது அந்தியூர். செல்லீசுவரர் திருக்கோவில் மற்றும் அழகராசப் பெருமாள் திருக்கோவிலும் அருகிருக்க இக்கோவில் அந்தியூர் கோட்டையின் உட்புறத்தில் மேற்குப் புறமாக அமைந்துள்ளது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களுடன், கொங்கர்களும் தனியாட்சி செய்துவந்த நாடு கொங்கு நாடு என்பது. 24 உட்பிரிவுகள் கொண்ட கொங்கு நாட்டில், பவானி ஆற்றின் வடபுறம் உள்ள வடகொங்கு வடகரை நாடு என்பதும் ஒன்றாகும். இந்த வடகரை நாட்டின் தலைநகராக இருந்தது அந்தியூர்.

    கொங்கு நாட்டின் வடக்கு எல்லையாக இருப்பது பர்கூர் மலைத்தொடர். சங்க காலச் சிறப்புமிக்க நகரங்களில் முக்கியமானது அந்தியூர். அக நானூறு எனும் சங்க இலக்கியத்தின் 71 ஆம் பாடலைப் பாடிய ‘அந்தி இளங்கீரனார்’ என்ற புலவர் அந்தியூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து இவ்வூரின் பழமையை அறிய முடிகிறது. பண்டைக் காலத்தில் மூன்று சுற்றுகளுடன் அகழிப்பாதுகாப்பும் கொண்ட வராக நதிக்கரை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த மண்கோட்டை இன்று அழிந்துவிட்டாலும் கோவில்கள் இவ்வூரின் பழம்பெருமையை எடுத்துரைக்கின்றன.

    அந்தியூரின் தென்கிழக்கு மூலையில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது இவ்வாலயம். கோவிலின் முன்புறம் அறுபது அடி நீளமுள்ள குண்டம் காணலாம். குண்டத்தின் மேற்குப்புறம் கம்பீரமான வடிவுடைய பெரியதொரு கணபதியைக் காணலாம். திருக்கோவில் வாயிலில் அழகும், அச்சமும் ஒருங்கே அமையப்பெற்ற கம்பீரத் தோற்றத்துடன் இரண்டு பூதகணங்கள் காவல்புரியும் காட்சி மெய்சிலிர்க்கச்செய்பவை. மகாமண்டபத்தில் முருகன் மற்றும் பிள்ளையார் திருவுருவங்கள் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளனர்.

    anth9

    அன்னை பத்ரகாளியின் திருக்கோவில் அர்த்த மண்டபத்தில் அன்னையின் உற்சவ மூர்த்தம் பொங்கும் புன்னகை தவழ வீற்றிருக்கிறாள். கருவறையில் மகிசாசுரமர்த்தினியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பெண்களுக்கு மாங்கல்ய வரம் அருள்பவள் அன்னை என்பது மக்களின் ஆழ்ந்த நம்பிக்கை. அன்னை எட்டு கைகளில், உடுக்கை, கட்கம், கபாலம், சூலம் ஏந்தி, சுடர்விட்டு பரவும் தீச்சுவாலைகள்கொண்ட தலை, மண்டை ஓடு, கிரீடம், மகிசனின் தலைமேல் கால்களை ஊன்றியபடி, நாகம், மணி, கிண்ணத்துடன் அருள்பாலிக்கிறாள்.

    களப்பலி வீரர் சிற்பம்! – நவகண்டம்

    anth6anth7

    மூதுபுகழ் கொண்ட கொங்கு நாட்டில் வீரப்பெண்மணிகளின் வரலாறு எண்ணற்றவை. தங்கள் நாட்டு மன்னன் போரில் பகைவர்களை அழித்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தங்கள் தலையை வெட்டி வெற்றித் தெய்வமாகிய காளி அன்னைக்கு காணிக்கையாக்கும் வழமை இருந்துள்ளது. கி.பி. 1265 – 1285 காலத்திய ராஜகேசரி வர்மன் என்கிற வீரபாண்டித் தேவரின் கல்வெட்டுகள் இதற்கு ஆதாரமாக உள்ளன. அவ்வழக்கத்தின்படி பெண் வீரர்களும் தங்களையே களப்பலி கொடுத்துள்ளனர் என்பதற்கு ஆதாரமாக அந்தியூர் சிறீபத்திரகாளியம்மன் திருக்கோவிலில் தமது தலையைத் தாமே வெட்டிக்கொண்டு பலி கொடுக்கும் வீரப்பெண்மணிகளின் சிலைகள் கேட்பாரற்று குப்பைமேட்டில் மண்ணில் புதைந்து கிடக்கும் அவலத்தைப் பார்க்க வருத்தமாகத்தான் இருந்தது.. பழம்பெரும் ஆலயங்கள் புதுப்பிக்கப்படும்போது இதுபோன்று வரலாற்று ஆவணங்களின் அருமை தெரியாமல் அழிக்கப்பட்டுவிடுகின்றன.

    anth3

    வேண்டியவருக்கு வேண்டியபடி வரமருளும் அன்னை அந்தியூர் பத்ரகாளியம்மன் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு குல தெய்வமாக விளங்குபவள். ஆயிரம் கண்ணுடையவள் அன்னை என்று பார் போற்றக்காரணம் தீவினை எங்கு எவ்வடிவில் நடந்தாலும் அதைத் தடுத்து பக்தர்களை ஆட்கொண்டு நல்லறம் காத்து நிற்கிறாள் என்பதாலேயே.

    பக்தர்களைக் காப்பதில் அம்மனின் கருணைக்கு முன்பு எந்த சக்தியும் ஈடாகாது. ஒரு முறை, அந்தியூரின் வடக்கே உள்ள எண்ணமங்கலம் என்னும் இடத்தில் இளம் பெண் ஒருத்தி கணவனால் மிகவும் சிரமத்திற்குள்ளாகியிருந்தாள். கணவனின் கொடுமையை தாங்க முடியாத ஒரு நிலையில் தன் கைக்குழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து விட்டாள். அன்னை இவ்வாலயத்தின் பூசாரியின் கனவில் தோன்றி அதனை உணரச்செய்ய அந்த பூசாரியும் உடனே எழுந்து ஓடிவந்து கிணற்றில் குதித்த அந்த பெண்ணையும், குழந்தையையும் தக்க தருணத்தில் ஓடி வந்து காப்பாற்றிவிட்டார். இந்தச் சம்பவத்தை பல ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் மக்கள் நினைவுகூர்கின்றனர். இன்றும் இதுபோன்று அம்மன் பக்தர்களின் கனவில்  வந்து பலன் சொல்வதாக மிகுந்த நம்பிக்கை உலவுகிறது. அம்மன் தலையின்மீது பூ வைத்து வாக்கு கேட்பதும் நடைபெறுகிறது. நாள்தோறும் அம்மனுக்கு நான்கு கால வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.

    anth2

    சிங்கத்தை வாகனமாகக் கொண்ட இக்காளிதேவி தாய்த் தெய்வம் என்று கருதப்படுபவள். இவள் கொற்றவை என்றும், சாமுண்டா, பத்ரகாளி என்றும் அழைக்கப்படுகிறாள். பத்ரகாளி அன்னையின்  கோவில்கள் அனைத்தும் வடக்கு முகமாக அமைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. காளியன்னை ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு திருநாமம் கொண்டு அழைக்கப்பெறுகிறாள். மாகாளி, ஓம் காளி, எண்ணெய்முத்துக்காளி, சீலக்காளி, கல்கத்தா காளி, கடுக்காளி, பாதாள காளி, கரிய காளியம்மன், வீரகாளி, வீரசூரகாளி, வீரமாகாளி, பொங்காளியம்மன், உச்சினி மாகாளி போன்றவை. அபிதான சிந்தாமணி, தமிழ் அகராதிகள் போன்றவைகளும் காளிதேவியின் பல்வேறு திருநாமங்கள் குறித்து  தெரிவிக்கின்றன.

    சப்தகன்னிமார்
    சப்தகன்னிமார்

    மதலோலை எனும் தேவலோகப் பெண், துருவாச முனிவரின் சாபத்தின்படி அம்பரன், அம்பன் என்ற இரு அசுரர்களை மக்களாகப் பெற்றிருக்கிறாள். அவர்கள் இருவரும் அசுர குணத்தின்படி ஊரில் பல பெண்களுடன் திருமணம் செய்துகொள்ளாமலே உறவு வைத்திருந்தனர். இந்தச் செயல்கண்டு வெகுண்ட தேவர்கள் சிவபெருமானிடன் முறையிட்டனர். சிவபெருமான் அவ்விரு அசுரர்களையும் அழிக்கும்பொருட்டு உமாதேவியாரை, மைத்துனர் திருமாலுடன் அனுப்பிவைத்தார். அந்த அசுரர்களை அழிக்க அருள் வடிவான அன்னை உமாதேவியார் கோபாவேசமான பத்ரகாளி உருவெடுத்து அவ்வசுரர்களை அழித்தார் என்கிறது புராணம்.

    திருவிழாக்கள்:

    ஆண்டுதோறும் பங்குனித் திங்களில், அருள்மிகு பத்ரகாளியம்மன் குண்டம் பெருந்திருவிழா  மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. பல மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் திரளாக வந்திருந்து இத்திருவிழாவில் கலந்துகொள்கின்றனர்.

    நவராத்திரி விழா 9 நாட்களும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    திருவாதிரை விழா, சித்ரா பௌர்ணமி, தீர்த்தக் குடவிழா, துர்காச்டமி – 108 சங்கு வைத்து பூசை செய்வது போன்ற விழாக்களும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.

    காளி வழிபாட்டிற்குரிய நாள் செவ்வாய் கிழமையென்றும்,  எந்த நோயையும் தீர்க்க வல்லவள் என்றும் சிவபுராணம் கூறுகிறது.

    anth8

    பத்ரகாளி அம்மன் கருவறைச் சுவர்களில் ‘மீன் சின்னங்கள்’ பொறிக்கப்பட்டுள்ளவை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், கல்வெட்டு ஆய்வின்படி இக்கோவில் கட்டப்பட்டது கி.பி.1265 – 1285 என்பதால் அக்காலகட்டத்தில் ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்கள் யாரேனும் இக்கோவிலை அமைத்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது.

    Share
  • வானத்தில் இருளிலிருந்து இருளை நோக்கி….

    க. பாலசுப்பிரமணியன்

     

    இது என்ன பயணம்..

    இருளிலிருந்து இருளை நோக்கி… ?

     

    விடியலிலிருந்து மாலை வரை..

    உழைத்து..

    அனுபவித்து

    அறிந்து..

    புதிய ஞானத்துடன் ..

    மாலையில் பயணத்தைத் தொடங்கினால்

    அது மீண்டும் மீண்டும் ..

    இருளுக்குள்…

     

    காலம் பின்னோக்கிச் செல்ல..

    மீண்டும் நேற்றைய விடியல்                                                                                                      v

    இன்று…

     

    ஆமாம்..

    எங்கள் நாட்டு விடியல்கள்

    நேற்றே நடந்துவிட்டாலும்

    அனுபவங்களையும்..

    மேதாவிலாசங்களையும் ..

    நாங்கள் மண்ணில் புதைத்துவிட்டு.

     

    மீண்டும் .,

    அந்த அறிவை..

    அனுபவங்களை ஜெனிக்க..

    அதே விடியலையத் தேடி ..

    கடல்களுக்கு அப்பால் ..

     

    இது என்ன பயணம்?

    இருளிலிருந்து இருளை நோக்கி..

    நேற்றைய விடியலை..

    மீண்டும் நாளைக்

    காலையில் பிரசவிக்க …?

     

     

     

     

     

    Share
  • காதல் புதிர்!

    -தமிழ்த்தேனீ

    ”எத்தனை தடவை சொல்றது கதவைத் திறந்தா  முழுசு திற… இப்பிடி அரைகுறையாத் திறக்காதே!  போகும்போது வரும்போது  கால் விரலைப் பதம் பாக்குதுன்னு”  என்று  எரிந்து விழுந்தார் முருகன். ”எதுக்கு அத்தனை தடவை சொல்றீங்க?  ஒருதடவை சொல்லிட்டு நிறுத்த வேண்டியதுதானே?”  என்றாள் ரோஷமாக வள்ளி. ”இத்தனை தடவை  சொல்லியே மாத்திக்க மாட்டேங்கற  இதுலே உனக்கு ரோஷம்வேற வருது; ஒரு தடவை சொல்லும்போதே  மாத்திகிட்டா நான் ஏன் மறுபடியும் சொல்லப் போறேன்?” என்றார் முருகன். ”சரிங்க எதுக்கெடுத்தாலும் கோவப்பட்டு கத்திகிட்டு இருக்கறதே  உங்களுக்கு வழக்கமாபோச்சு!” என்றாள் வள்ளி. ”ஆமாம் நான் என்ன  பயித்தியக்காரனா  சும்மாக் கத்த…?  நானும் பொறுமையாச் சொல்லிப்பாத்துட்டு அதை நீ காதிலேயும் வாங்கறதில்லே… மனசிலேயும் வாங்கறது இல்லேன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்தானே  கத்தறேன். என்னைக் கத்தவிடாமே இருக்கியா நீ?  நானும் அமைதியா இருக்கணும்னுதான் பாக்கறேன். முடியலையே…!”  என்று அலுத்துக் கொண்டார் முருகன்..

    ”சரி, சரி இனிமே பாத்துச் செய்யறேன் கத்தாமே இருங்க!”  என்றாள் வள்ளி; ”என்னை அடக்காதே  நீ! ஒரு தடவை சொன்னவுடனே அதை மாத்திக்க!” என்றார் முருகன்.  வள்ளி அவரையே  உற்றுப்பார்த்துவிட்டு  படுக்கைஅறைக்குப் போய்ப் படுத்துக் கொண்டு புத்தகம் படிக்க ஆரம்பித்தாள். முருகன் வந்து  கம்ப்யூட்டரில் உட்கார்ந்து   எதையாவது  முகநூலில் எழுதலாம் என்று ஆரம்பித்தார்; ஆனாலும் அவர் மனம்  இவ கொஞ்சமாவது மதிக்கறாளா, புரிஞ்சிக்கறாளா  என்றே யோசித்துக் கொண்டே இருந்தது. சற்றுநேரம் கழித்துச் ”சரி… சாப்பிட வாங்க!”  என்றாள் வள்ளி. தட்டுக்களை எடுத்துக் கழுவி மேசையில் வைத்துவிட்டுச் சமையலறைக்குப்போய் சாதம், கறி எல்லாவற்றையும் எடுத்து வர அவரும்  உதவி,  எல்லாவற்றையும்  கொண்டுவந்து வைத்துவிட்டுச் சாப்பிட உட்கார்ந்தனர் இருவரும். அவரை மறந்து ரசித்து  சாப்பிட்டுக்கொண்டே இருந்தார்.

    வள்ளியின் குரல்… ”நல்லா இருக்கா?” என்றாள். ”உண்மையிலேயே  நல்லா இருக்கு அதான் ரெண்டாவது தடவை குழம்பே போட்டுகிட்டேன்!”  என்றார் சற்றே தணிந்த  குரலில். ”அது சரி… நல்லா  சமைக்கறே, ருசியா  சமைக்கறே… ஆனா, சொன்னதைக் கேக்கவே  மாட்டேங்கறையே  ஏன் கொஞ்சம் அனுசரிச்சுப் போனாத்தான் என்னவாம்?” என்றார். சாப்பாட்டு மேசையிலேகூட  எதுக்காவது என்னைத் திட்டிகிட்டே இருப்பீங்களா  சாப்பிடுங்க என்றாள் வள்ளி. நான் இப்போ உன்னை என்னா திட்டினேன். நான் பேசினாவே அதைத்  திட்றதுன்னு ஏன் எடுத்துக்கறே  என்றார் முருகன். வள்ளிக்குப்  புரைக்கேறியது.   பதறிப்போய் யாரோ நினைக்கறாங்க உன்னை…  இந்தா… தண்ணி குடி என்றார் முருகன்.

    சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் உணவு வகைகளை உள்ளே கொண்டு வைப்பதற்கு உதவிவிட்டுக்  காலையிலேருந்து  வேலை செஞ்சுகிட்டே இருக்கே.  போயி கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடும்மா. நான் இந்த மேஜையைத் துடைக்கறேன், கதவெல்லாம் சாத்தித் தாப்பாள் போட்டுட்டு அப்புறம் கம்ப்யூட்டர்லே உக்கார்ரேன், கவலைப்படாமே  கொஞ்சநேரம் தூங்கி எழுந்திரு என்றார் கனிவாக.  வள்ளியும் சரி என்று சொல்லிவிட்டு உள்ளே போய்ப்படுத்தாள். சற்று நேரத்திலே சத்தமே காணுமே என்று எட்டிப் பார்த்தார் முருகன். வள்ளி ஆழ்ந்து தூங்கிக் கொன்டிருந்தாள். இவளுக்கு மட்டும் எப்பிடி படுத்தவுடனே தூக்கம் வருதுன்னு தெரியலே என்று நினைத்துகொண்டு மனதுக்குள் சிரித்தபடி வந்து கணிணியில் உட்கார்ந்தார்.

    ஐந்து நிமிடத்திலே தொலைபேசி அழைத்தது.  ஐயோ பாவம்  இவ தூங்கிட்டு இருக்காளே நாம் யாருன்னு பாப்போம்  என்று தொலைபேசியை எடுத்தார் . மறுபுறத்தில் வள்ளியின் தங்கை லதா.  வள்ளி எப்பிடி இருக்கே என்றாள். நல்லா இருக்கேன் லதா  நீ எப்பிடி இருக்கே  என்றாள்  வள்ளி உற்சாகமான  குரலில். சரி  நாம ஏதோ ஒட்டுக்கேக்கறோம்னு நெனைச்சுப் போறாங்க என்று நினைத்து ரிசிவரை வைத்தார் முருகன். ஐய்யயோ  என்று பதட்டமாக  வள்லியின் குரல் கேக்கவே  ஓடிப்போய்  என்னாச்சு வள்ளி என்றார் முருகன். ஒண்ணுமில்லேங்க  லதாகிட்டே பேசிகிட்டு இருக்கேன் என்றாள் வள்ளி. அதுக்கு ஏன் ஐயய்யோ… அப்பப்பான்னு ஒரு அலறல் மெதுவாப் பேசேன் என்றார் முருகன்.  அந்தப் பக்கம்  லதா  என்ன  உங்க வீட்டுக்காரர் கோவமா பேசறாரு என்றாள். அது ஒண்னுமில்லே  நீ சொன்னியே  அந்த  ஆளைக் கட்சியைவிட்டு நீக்கிட்டாங்கன்னு;  அதுக்கு ஐயய்யோன்னு சொன்னேனே அதுக்குதான்  வேறொண்ணுமில்லே  என்றபடி  சரி  அதுக்குப்புறம்  என்ன ஆச்சு என்றாள் சாவதானமாக.  மீண்டும் வந்து  கணிணியில் உட்கார்ந்தவருக்கு ஏதேதோ யோசனைகள்.   திருமணம் ஆனதும்  சத்திரத்திலிருந்து  அவர்கள் தங்கிஇருந்த  குடித்தன வீட்டிற்கு வந்ததும் பக்கத்திலே நிற்க வைத்து ஆரத்தி எடுத்தார்கள்.  இந்தப் பக்கம் யாரோ ஏதோ கேட்டதற்கு பதில் சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தால்  வள்ளியைக் காணவில்லை.  எல்லோர்  எதிரிலும் தேடினால் கிண்டல் செய்வார்களே என்று  உள்ளே போனார்  முருகன், அங்கே சமையற்கட்டில் அம்மா நான் பாத்துக்கறேன், நீங்க  கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க  என்று தன் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் வள்ளி. அன்று தானாகவே வந்து பொறுப்பெடுத்துக் கொண்ட வள்ளி இன்றும் பொறுப்பிலிருந்து  விலகாமல் நிர்வாகம் செய்துவருகிறாள்.

    சரி  சும்மா உக்காந்து  யோசனை செய்து கொண்டே  இருக்கறதைவிட ஏதேனும் உருப்படியாக செய்யலாம் என்று  கணிணியிலிருந்து எழுந்து கார் ஷெட்டுக்கு போயி  காரைத் துடைக்கலாம் என்று போய்ப்பார்த்தால்  கார் சுத்தமாக இருந்தது. எல்லா வேலையையும் இவளே செஞ்சிருவா, எதுக்காவது உதவிக்குக் கூப்புடுவா  அதைப் போயி செய்யலாம்னா அதையும் இவளே செஞ்சிருவா. அவசரக் குடுக்கை என்று மனதுக்குள் சிரித்தபடி இப்பிடி அறுபத்தி ஐஞ்சு வயசாகியும்  உதவிக்கு ஒரு வேலைக்காரி கூட வெச்சிக்காமே இவளே உழைக்கறா, தோட்டத்தைச் சீரா வெச்சிக்கறா, எல்லாச் செடிக்கும் தண்ணி கொட்டி  இவளைப் பார்த்தாவே  எல்லாச் செடியும்  மரமும்  பூக்கொடியும்  இவ கைபட்டவுடனே மகிழ்ந்து போயி  பூவாக் கொட்றது, பழமாக் கொட்றது.

    நல்ல ராசியான  கை;  அது மட்டுமில்லே!  நல்ல  விகல்பமில்லாத  மனசு, பக்தி எல்லாம் இருக்கு, ஆனா  கொஞ்சம் பொறுமையை வளத்துண்டா  நல்லா இருக்கும் என்று நினைத்துக்கொண்டு  மீண்டும் கணிணியில் வந்து உட்கார்ந்தார்  முருகன். இந்தாங்க காப்பி  குடிங்க என்றாள் வள்ளி. காப்பியை நீட்டியபடி, இவ இப்பத்தானே  தூங்கிட்டு இருந்தா  அதுக்குள்ளே  ஏன் எழுந்து  காப்பி போட்டா என்று நினைத்தபடி  ஏம்மா  கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுன்னு சொன்னேனே என்றா முருகன். இல்லே  மணியாச்சு  சாயங்காலம் கடைக்குப் போயி கொஞ்சம் மளிகை சாமான் வாங்கணும்; நாளைக்கு நம்ம எதிர்வீட்டு  பால்கிருஷ்ணனும்  லக்‌ஷ்மியும் யூஎச்லேருந்து வராங்க.  அவங்களுக்கு  காலையிலே ஏதாவது செஞ்சு எடுத்துட்டுப் போயி குடுக்கணும் என்றாள். மாலை கடைக்குப் ரெண்டு பேரும் போயி எல்லாம் வாங்கிட்டு வந்தாச்சு. சரி, சீக்கிரமா படுத்துத் தூங்கு. காலையிலே அஞ்சரை மணிக்கெல்லாம் எழுந்துக்கறே  என்றார் முருகன். சரி என்று சொல்லிவிட்டு  இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு   வள்ளி நான் போயி தூங்கறேன் என்றபடி உள்ளே போனாள்.

    எல்லாக் கதவும் போட்டிருக்கா என்றெல்லாம் பார்த்து எல்லாவற்றையும்  பூட்டிவிட்டுச் சமையற்கட்டில் கியாஸ் மூடிஇருக்கான்னு பாக்கலாம்ன்னு போனா  கியாசை சரியாவே மூடலே, அவருக்கு கோவம் கோவமாக வந்தது. எவ்ளோ ஆபத்து எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாடேங்கறா சரியா மூடினா என்ன என்கிற கோவத்தோடு அதைச் சரியாக மூடிவிட்டு, படுக்கை அறைக்குள் நுழைந்து  ஏம்மா வள்ளி  அந்த  கியாசை சரியா மூடுன்னு எத்தனை தடவை சொல்றது  என்றார்.    சரியா மூடலையா  நீங்கதான் மூடிட்டு வாங்களேன்; அதுக்கு ஏன் இப்பிடித் திட்றீங்க  என்றாள் வள்ளி, அவருக்கு  வந்த கோவத்திலே நான் இப்போ என்ன திட்டினேன்  ஏதாவது  தகாத வார்த்தை சொன்னேனா நல்லதைச் சொன்னா திட்றேன் திட்றேங்கறியே  இது நியாயமா?  என்றார். சரி சரி எனக்கு தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு  திரும்பிப் படுத்தாள் வள்ளி.

    முருகன் கோவத்தை  அடக்கிக் கொன்டு  மீண்டும் கணினியின் முன்னால் வந்து உட்கார்ந்து  தன்னையே  சமாதானப்படுத்திக் கொண்டு தொலைக்காட்சிப் பெட்டியை உயிர்ப்பித்தார். செய்திகள்  வாசிப்பது  என்று முக்கியமான செய்தியை தப்பும் தவறுமான தமிழில் சொல்லிக் கொண்டிருக்கிறாள் ஒரு பெண்மணி. உள்ளே இருந்து  ஏங்க அந்த  டீவீ சத்தத்தைக் குறைங்க…  தூக்கமே வரலே  என்றாள் வள்ளி. இவ   நம்மை ஒண்ணுமே நிம்மதியாச் செய்ய விடமாட்டா  என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு  சரி சரி  நான் எது செஞ்சாலும் ஏதாவது  சொல்லு   மனுஷனை நிம்மதியா  விடாதே என்றார்  எரிச்சலுடன். தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்துவிட்டு .

    தூங்கும்போதுகூட ஏதானும் திட்டிகிட்டே இருக்காதீங்க வந்துபடுங்க. நேத்து கூட   சரியாத் தூங்கலை நீங்க! இன்னிக்கு  மதியமும்  கொஞ்சநேரம் படுக்கலே  முதுகெல்லாம் வலிக்கும் என்றாள். அடடா இவ என்னிக்கு நம்மைப் புரிஞ்சிப்பா  நமக்கு எது  நிம்மதியா இருக்கும்னு புரிஞ்சிக்கவே மாட்டளா இவ என்று மனதுக்குள் வருந்தியபடி எல்லாம் வரேன் நீ தூங்கு என்றார்  எரிச்சலுடன். அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது கல்யாணம் ஆகி நாற்பது வருஷம் ஆச்சு.  இன்னமும் இவ என்னைப் புரிஞ்சு நடக்கமாட்டேங்கறாளே.  மனுஷன் என்ன ரோபோ மாதிரியா நடந்துக்க முடியும் உணர்ச்சியே இல்லாம  ஏன் இவளுக்கு ஒண்ணும் புரியலே.

    அவருக்கு திருமணமான புதுசில் சம்பளம் 500 ரூபாய், அந்தக் காலத்திலேருந்து  இவருடைய  எல்லாக் கஷ்டநஷடங்களுக்கும் ஈடுகொடுத்து,  சிக்கனமா இருந்து பிள்ளைகளுக்கெல்லாம் திருமணம் செஞ்சு பேரன் பேத்தியெல்லாம் பாத்தாச்சு. அதெல்லாம் சரி… இவ நம்மோட குடும்பத்துக்காகவே  உழைச்சிகிட்டு இருக்கா,   அதெல்லாம் இல்லேன்னு சொல்லையே. ஆனா இவ இன்னமும்  கல்யாணம் ஆனப்போ இருந்தா மாதிரியே  இருக்காளே;  நான் எந்த நல்லதைச் சொன்னாலும் திட்றேன்னே  எடுத்துக்கறாளே எப்போத்தான் புரிஞ்சு நடந்துக்குவாளோ என்று கோவம் வந்தது.

    பேருந்தில் எங்காவது  சென்றால் கூட பக்கத்திலே  இடம் கிடைக்கலேன்னு முன்னாடி  பெண்கள் இருக்கையிலே இவ போயி  உக்காந்துகிட்டு இருந்தாலும்  அப்பப்போ  இவளையே பாத்துகிட்டு  ஜன்னல் ஓரமா உக்காந்திருக்காளே கையை வெளியே நீட்டாமே இருக்கணுமேன்னு கவலைப்பட்டு உக்காந்து இருக்கற  இடத்திலேருந்து எழுந்துபோயி  அவ பக்கத்திலே நின்னு  கையை வெளியே நீட்டாதேன்னு சொன்னா இவரோட  அக்கறையை கொஞ்சமும் புரிஞ்சிக்காமே  எனக்கு தெரியும் என்று முறைச்சிண்டே பதில் சொல்லுவா இவ. நாம இவளைத் தாங்கு தாங்குன்னு தாங்கறோம்னு கொஞ்சமாவது புரிஞ்சிக்கறாளா இவ. நமக்கு இவமேலே எவ்ளோ அன்பு இருக்குன்னு கொஞ்சமாவது யோசிக்கறாளா  எதுவும் கிடையாது! என்று யோசித்துக் கொண்டே இருந்தவரை  என்ன ஆச்சு மணி பதினொண்ணு சீக்கிரம் வந்து படுங்க; முதுகு வலிக்கப் போவுது. எப்பொப் பார்த்தாலும் அந்தக் கம்ப்யூட்டர் முன்னாலே உக்காந்து,கண்ணைக் கெடுத்துக்கறீங்க. சரி  கிச்சன்லே பாலு காச்சி வெச்சிருக்கேன் ஒரு டம்ளர் பாலாவது குடிச்சிட்டு வந்து படுங்க என்று வள்ளியின் குரல் கேட்டது. அவருக்கு திடீர்ன்னு ஒரு சந்தேகம் ஆமா! இவ என்னைப் புரிஞ்சிக்கலேன்னு கோவப்படறோமே  நாம இவளைப் புரிஞ்சிகிட்டு இருக்கோமான்னு?  அது மட்டுமில்லே நாம இவளை நேசிக்கிறோமான்னு சந்தேகம் வந்தது. அவரையே அவர் அலசிக்கொண்டிருந்தார்.

    இது வரைக்கும் இவளைத் தவிர வேற யாரையாவது எந்தப் பெண்ணையாவது  தப்பான கண்ணோட்டத்தோட பாத்திருக்கோமா  இல்லே, எப்பவும்  இவளுக்கு நல்லதைத்தானே சொல்றோம்;  ஒவ்வொரு புருஷன் மாதிரி  சுயநலமா இல்லையே நாம  இவளுக்கு ஒண்ணுன்னா  பதறிப் போறோம், இவளைக் கலந்து ஆலோசிக்காம இது வரைக்கும்  எதுவுமே செஞ்சதில்லையே நாம,  அம்மாவை எவ்ளோ நேசிச்சேனோ  அதே மாதிரிதானே  இவளையும் நேசிக்கறோம், இந்த உலகத்திலேயே நான் அதிகமா நேசிச்ச  எங்க அம்மாவுக்கு டாக்டர்   கான்ஸர்ன்னு  சொன்ன போதிலேருந்து   என்னைவிட  அதிகமா அவங்களைப் பத்தி தெரிஞ்சிகிட்டு அவங்களுக்கு  சிரிச்சமுகம் மாறாம  பாத்துப்பாத்து பணிவிடை  செஞ்சவதானே இவ.

    எனக்குக் கூட  அம்மாவைப் பத்தி அவ்ளோ தெரியாது;  ஆனா இவளுக்கு  அம்மாவைப் பத்தி தெரியாததே கிடையாதே. அப்பிடிப்பட்ட  இவ!  இப்போ ஏன் எப்போப் பாத்தாலும்  சிடுசிடுப்பா  மாறிப்போனா?  எத்தனையோ உறவுக்காரங்க செஞ்ச துரோகம் அதையெல்லாம் தாங்கித் தாங்கித்தானோ இவளுக்கு  சிரிக்கவே மறந்து  ஒரு யந்திரமா ஆயிட்டாளோ.  இந்த  எல்லாத்தையும் நானும்தானே தாங்கினேன் அதை மறந்துட்டாளோ இவ?  நானும்தானே  அவ்ளோ துரோகத்துக்கு நடுவிலேயும் இவளையும் நல்லா பாத்துகிட்டேன். எனக்கு மட்டும் இவ மேலே உண்மையான  ஆசை இல்லாமலா  எல்லாம் செஞ்சேன். இவளுக்குத் தெரியாமே ஒரு துரும்பைக் கூட நான் நகத்தினது இல்லையே. இவளுக்கு எந்த விதத்திலேயும் ஒரு சின்னத் துரோகம் செய்யாமே  அப்பிடியே  பாதுகாத்து பாதுகாத்துதானே  பறவை அடை காக்கறா மாதிரி கூடவே வாழ்ந்திருக்கேன். அதுனாலே இவளோட மனசுக்கும் தெரியும்  நாம இவளை எவ்ளோ நேசிக்கறோம்னு.  ஆனா சிலபேருக்கு  அன்பை வெளியிலே காட்டத் தெரியாது. அதைப் புரிஞ்சிகிட்டதுனாலேதானே இவ என்ன சொன்னாலும் கேட்டுகிட்டு அமைதியா போறேன்.   அதுக்காக  இவங்களுக்கே  ஆபத்து ஏற்படக் கூடிய  சில விஷயங்களிலே விட்டுக் குடுக்க முடியலையே! எப்பிடி வேணா போகட்டும்னு சுயநலமா இருக்க  முடியலையே!  அதான் கத்தறேன். எந்த ஒரு வினாடியும் நடிக்காமே உண்மையா  வாழணும்னு  நாம  வாழறோம்; உண்மையா வாழறோம்!  அது இவளுக்கு எங்கே புரியப் போகுது. ஒரு நாள் புரியும்! இவளுக்கும் புரியும்  ,இவளுக்கு மட்டுமில்லே. நான் எப்போ பார்த்தாலும் சண்டை  போட்டுகிட்டே இருக்கேன்,  நான் கோவக்காரன்னு, சண்டைக்காரன்னு  நெனைச்சிகிட்டு இருக்கற  பிள்ளைங்களுக்கும் புரியும்.

    வாழ்க்கையிலே  அதுக்கும் ஒருநாள் வரும். இவங்களுக்கு புரியுதோ இல்லையோ  நான்  உண்மையாத்தான் வாழறேன். அதுனாலே நாமும் இவளைக் மனசாரக் காதலிக்கறோம், சந்தேகமே இல்லே!  நிச்சயமா  நாம இவளை நேசிக்கறோம் இவளை மட்டும் இல்லே  நம்ம பிள்ளங்களையும் நேசிக்கறோம். அதிலே எந்தச் சந்தேகமும் இல்லேன்னு தீர்மானமாக  ஒரு எண்ணம் வந்தது  அவருக்குள்.  எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டுக்  கதவெல்லாம் பூட்டிஇருக்கான்னு பாத்துட்டு  அப்பிடியே  மனசுக்குள்ளே  எல்லாத் தெய்வங்களையும் வேண்டிகிட்டுத் தெய்வமே இவளுக்கும் என்னோட  எல்லாக் குழந்தைகளுக்கும், எல்லாருக்குமே தீர்க்க ஆயுசும் தீர்க்க சுமங்கலித்தனமும், தீர்க்க ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் குடு ஆண்டவான்னு வேண்டிகிட்டு  படுத்தார். பக்கத்திலே நீல விளக்கின் லேசான ஒளியிலே வள்ளி தூங்குவது தெரிந்தது.  வள்ளி மாத்திரை சாப்டியா என்றார். எல்லாம் சாப்டாச்சு தூங்கவிடுங்களேன் என்று எரிந்து விழுந்தாள் வள்ளி, சிரித்துக் கொண்டே ஐ லவ் யூ  என்றார். அவளிடமிருந்து ஒரு பதிலும் இல்லே. நான் சொன்னது உனக்கு கேட்டுதா?   நான் உன்னைக் காதலிக்கிறேன் என்றார் அழுத்தம் திருத்தமாக. சரி சரி  தூங்கும்போது எழுப்பி இதைச் சொல்லணுமா?  உங்களுக்கு சொன்னாக் கோவம் வருது!  நிம்மதியாத் தூங்கவிடுங்க காலையிலே  சீக்கிரம் எழுந்துக்கணும்  என்றாள் வள்ளி..

    மனதுக்குள்  இதான்,  இந்த திமிருதான் எனக்கு இவகிட்ட  பிடிச்ச விஷயமே, அதெப்பிடி கல்யாணம் ஆன புதுசிலே எப்பிடி மனசை வெச்சிருந்தாளோ  அப்பிடியே புதுக்கருக்கு அழியாமே இன்னும்  குழந்தை மாதிரியே  மனசை வெச்சிருக்கா  இவ என்று  மனதுக்குள் ஆச்சரியப்பட்டபடி  மனதுக்குள் சிரித்துக்கொண்டு  அவளுக்கு   நன்றாகப் போர்த்திவிட்டுவிட்டு  மீண்டும்  ஐ லவ்  யூ  என்றார். பாதித் தூக்கக் கலக்கத்தில்  நீங்களும் மாத்திரை சாப்பிட்டுட்டு படுங்க என்றாள் வள்ளி.

    சுபம்

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (218)

    அன்பினியவர்களே!

    அடுத்தொரு வாரத்தில் என் அன்பு கலந்த வணக்கங்கள்.  இன்ன பல எண்ணங்களைச் சுமந்து கொண்டு மடல் மூலம் மனந்திறக்க விழைகிறேன்.  மனித சமுதாயத்தின் வளர்ச்சியும், வரலாறும் பல சரித்திரத் திருப்புமுனைகளை உள்ளடக்கியவை. காலத்துக்குக் காலம் மனிதன் தன்மீது வீசப்பட்ட சவால்களைத் தன் திறமையின் மூலம் எதிர்கொண்டே வளர்ச்சியடைந்திருக்கிறான். ஆனால், அவ்வளர்ச்சிக்கான வரலாற்றுச் சரித்திரத்தினை உள்வாங்கிக் கொண்டு அதனுடைய உண்மையான விளைவினையும் அவ்விளைவினால் மனிதன் அடைந்த மேம்பாட்டு வளர்ச்சியையும் சரியாகப் புரிந்து கொள்வது ஒன்றுதான் மனித நாகரிகத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகிறது.

    remembarance-12ஆதிமனிதன் காட்டுக்குள் வேட்டையாடி வாழ்ந்ததிலிருந்து இன்று செவ்வாய் கிரகத்தை ஆராயும் அளவிற்கு மனித அறிவின் வளர்ச்சிக்கான விலைகள் கொடுக்கப்படாமலில்லை. தாம் அடைந்த வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், தமது வாழ்வினையும், அதற்கான வசதியையும் உறுதிப்படுத்துவதற்காகவும் அந்நியநாடுகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது மேலைத்தேச நாடுகளின் அன்றைய வரலாற்றுத் தேவையாயிருந்தது. விளைவாக நாடுகளின் பேராசை பெருத்து காட்டைவிட்டு நாட்டுக்குள் வந்த நாகரிகமடைந்த மனிதன் அடுத்த நாடுகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அதீதப் பேராசையினால் முதலாம் உலக மகாயுத்தம், இரண்டாம் உலக மகாயுத்தம் எனும் மனிதப் பேரழிவுக்கு அடிவகுத்தான்.

    பேராதிக்க ஆசை கொண்ட நாட்டின் அதிபர்களின்
    அபிலாஷைகளுக்காகத் தமது இன்னுயிரைக் காவு கொடுத்தோர் எண்ணிக்கையிலடங்காதோர். தாம் பிறந்த மண்ணின் பாதுகாப்புக்காக நாட்டின்remembarance-13 தலைவர்களினதும், அரசினதும் ஆணையை ஏற்றுப் போர்க்களத்தினுள் குதித்த பல்லோப லட்ச வீரர்கள் பல போர்களில் தமது இன்னுயிரைத் தமது நாட்டிற்காகத் தியாகம் செய்துள்ளார்கள். அதேவேளை சில சர்வாதிகாரிகளால் அடுத்த நாடுகளின் மீது திணிக்கப்படும் போர்களில் வலுக்கட்டாயமாக ஈடுபட வேண்டிய நிர்பந்தத்திற்குப் பலர் உள்ளாக்கப்படுகிறார்கள். அத்தகையதோர் போர் ஜனநாயகம் எனும் போர்வையில் ஆட்சியைக் கைப்பற்றி சர்வாதிகாரத்தினால் இன்ன பல கொடுமைகளைப் புரிந்த ஹிட்லரின் அராஜகத்தைத் தவிர்ப்பதற்காக ஏற்பட்டது சரித்திரத்தில் மாறாத கறையாகப் படிந்துள்ளது.

    சரித்திர நிகழ்வுகளையும், சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்வுகளையும் போற்றி அவற்றினை மறக்காது remembarance-14நினைவுபடுத்தி வாழும் நாடுகளில் இங்கிலாந்து முன்னணியில் இருக்கிறது என்று கூறினால் மிகையாகாது. ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 11ஆம் திகதியை முப்படைகளையும், மற்றும் நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்ட அதிகாரிகளையும் கெளரவிக்கும் தினமாக ஐக்கிய இராச்சியம் கடைப்பிடித்து வருகிறது. நவம்பர் 11ஆம் திகதியை அடுத்து வரும் ஞாயிறு தினத்தை ஒரு நினைவு ஞாயிறு ( Remembarance Sunday ) என்று ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறார்கள். அன்றைய தினம் லண்டன் மாநகரில் அமையப்பெற்ற படைவீரர்கள் நினைவுத்தூபியின் முன்னால் இங்கிலாந்து மகாராணியர் உட்பட அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நிழல் அமைச்சர்கள், மற்றும் பல முன்னணி நபர்கள் அணிவகுத்துப் படையினரின் அணிவகுப்பைப் பார்வையிடுவார்கள். பின்னர் அனைவரும் அந்த நினைவுத்தூபியின் அடியில் மலர்வளையம் சாத்தித் தமது நினைவாஞ்சலிகளையும், நன்றியறிதல்களையும் மறைந்த படைவீரர்களுக்குத் செலுத்துவார்கள். படையினரின் அணிவகுப்பின்போது போர்ப்படைகளில் சேவையாற்றி ஓய்வுபெற்ற வீரர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    சரியாக அந்த ஞாயிறு காலை 11 மணிக்கு அனைவரும் தாம் என்ன செய்து கொண்டிருந்தாலும் அதை நிறுத்திவிட்டு இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலிகளைச் செலுத்திக் கொள்வார்கள்.

    இதேபோன்ற நினைவுத்தூபிகள் ஒவ்வொரு நகரிலும் நிறுவப்பட்டுள்ளது. அத்தகையதோர் நினைவுத்தூபி நாம் வாழும் “கென்லி” (Kenley) எனும் நகரிலும் நிறுவப்பட்டுள்ளது.போர்க்காலத்தில் போர்விமானங்கள் தரிக்கும் ஓர் படைத்தள விமான ஓடுபாதை ” கென்லி வான்படைத்தளம்” (Kenley Aerodrome) என்றழைக்கப்படும் மைதானத்தில் நிறுவப்பட்டுள்ளது. இத்தூபியின் முன்னால் அஞ்சலி மதியம் ஒருமணிக்குச் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நானும், மனைவியும் அவ்விடத்திற்கு மதியம் 12 மணிக்கே வந்து விட்டோம். “அடடா ஒருமணி நேரத்திற்கு முன்னதாகவே வந்து விட்டோமே! “ என்று அங்கலாய்த்தபோது, எமது தினசரி நடைப்பயிற்சியை இங்கேயே செய்து விடுவோமே என்றார் என் மனைவி. சுமார் இரண்டரை மைல் சுற்றளவு கொண்ட அம் மைதானத்தைச் சுற்றி வர சுமார் 45 நிமிடங்கள் பிடித்தது. 12.50க்கு அவ்விடத்தை வந்தடைந்தோம்.

    சுளீரென ஆதவன் தனது கதிர்களை அள்ளிவீசிக் கொண்டிருந்தான். அக்கதிர்கள் எம்மீது விழுந்ததினால் நவம்பர் மாதக் குளிர் கொஞ்சம் விலகிப்போனது. மெதுவாகக் கூட்டம் சேரத் தொடங்கியது. மாநகரக் கவுன்சில் தலைவர், மாநகரசபை உறுப்பினர்கள், ஆகாயப்படை அதிகாரிகள் எனப் பலரும் குழுமியிருந்தனர். நேரம் ஒன்றைத் தாண்டி விட்டிருந்தது. ஏன் தாமதமாகிறது என்று நாம் சிந்தித்த வேளை குறைடன் நகர மேயரின் வரவுக்காகக் காத்திருப்பதாக அருகிலிருந்தவர் கூறினார். சுமார் 1.15 அளவில் குறைடன் நகர மேயரும், உதவி மேயரும் வந்து சேர்ந்தார்கள்.

    அனைவரும் அணிவகுத்து நிற்க, பிரித்தானிய விமானப்படை சிறியோர் பயிற்சிப் பிரிவினர் தமது அணிவகுப்பினை நடத்தினர். அதைத் தொடர்ந்து ஒவ்வொருவராக அணிவகுத்து நின்ற அங்கத்தினர்கள் தாம் கைவசம் கொண்டு வந்திருந்த மலர் வளையத்தினை அந்நினைவுத்தூபியின் அடியிலே வைத்துத் தலைவணங்கினர். அதைத்தொடர்ந்து அங்கு வந்திருந்த சுமார் முந்நூறு பொதுமக்கள் (நாம் உட்பட ) அந்த நினைவுத்தூபின் முன்னால் ஒவ்வொருவராகச் சென்று தமது அஞ்சலிகளைச் செலுத்தினர். இறுதியாக விமானப்படை அதிகாரியொருவர் சிறிய கவிதை ஒன்றைப் படித்தார். ஆங்கிலக்கவிதையின் இறுதி வரிகள்,

    ”இந்நினைவை உங்களோடு
    எடுத்துச்
    செல்லுங்கள்
    உங்களின்
    இன்றைகளுக்காக எமது
    நாளைகளை
    நாம் தியாகம் செய்தோம்”
    என்று முடிவடைகிறது.

    இந்நிகழ்வினில் கலந்துவிட்டு வீடு செல்லும்போது நெஞ்சு கனத்தது. உலகம் சுதந்திரமாக இருக்க வேண்டும், உலகில் சமாதானம் நிலவ வேண்டும் என்பதற்காகத் தமது உயிரைப் பணயம் வைத்துப் போராடிய லட்சக்கணக்கானோர் தமது உயிரை மிகவும் இளமையிலேயே இழந்து போயிருக்கிறார்கள். அவர்களின் தியாகங்களில் நாம் இன்று வசதியான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்களை நினைந்து கொள்வதற்காக வருடத்தில் ஒருநாளை ஒதுக்கி அவர்களுக்கான கெளரவத்தை வழங்கி அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை முக்கியமாக்கும் ஐக்கிய இராச்சியத்தின் பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கும் முயற்சி உள்ளத்தைத் தொடுகிறது. இன்றைய எமது நல்வாழ்வுக்காகத் தமது அன்றைகளைத் தியாகம்செய்த அவர்களின் அளப்பரிய தியாகம் வானளாவி நிற்கிறது.

    அது மட்டுமல்ல, முதலாம் , இரன்டாம் உலகமகாயுத்தங்களில் ஈடுபட்ட பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்களையும் அவர்கள் நினைவுகூர்வது உள்ளத்தை நெகிழ வைக்கிறது.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    Share
  • எதற்காக எழுதுகிறேன்?

    உமாஸ்ரீ

    எழுத்தாளர் ரேவதி பாலுவிடம் நேர்காணல்

    எல்லோரும் சிறுகதை எழுதலாம். ஆனால் ஒரு நல்ல  சிறுகதை எழுதுவது சுலபமல்ல.  எப்படி ஒரு ஜாங்கிரியைச் சிலரால்தான் நன்றாக உருவாக்க முடியுமோ அதுபோல் சிலரால்தான் நல்ல சிறுகதையை எழுத முடியும்.

    revathy-balu-photo-3எழுத்தாளர் ரேவதி பாலு ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளர். சிறந்த சிறுகதைகளை எழுதிக் கொண்டிருப்பவர். அவர் கதைகள் பல பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கின்றன. இனிமேலும் வந்து கொண்டிருக்கும்.

    திருமதி ரேவதி பாலு பிரபல எழுத்தாளர் ரசவாதியின் மகள்.    ரசவாதியின்  “ ”ஆதார ஸ்ருதி”  மிகவும் சுவாரஸ்யமான  நாவல். தந்தையைப் போலவே மகளும்  நல்ல எழுத்தாளர். கம்பன் வீட்டு அம்மி குழவியும் கவிபாடும் என்பதை நிரூபித்து விட்டார். சுருங்கச் சொல்லவேண்டுமானால்

    புல்லாங்குழல் இன்னிசைக்கு மயங்காதவர் யார்?
    மழலை மிழற்றலுக்கு மகிழ்ச்சியடையாதவர் யார்?
    பூசும் சந்தனம் நறுமத்திற்கு ஆனந்தமடையாதவர் யார்?
    ரேவதி பாலு படைப்புகளைப் படித்து களிப்படையாதவர் யார்?
    நான்குக்கும் வசப்படுவதைத் தடுப்பார் யார்? 

    revathy-baluநவம்பர் 2016 கலைமகள் இதழில் அவர் எழுதிய “சொல்லாமலே“ என்னும் சிறுகதை பிரசுரம் ஆகியிருக்கிறது. மனைவியை இழந்த மாமாவைப் பார்க்கப் போன வாணி, பக்கத்து போர்ஷனில் இருக்கும் பரிமளாவுக்கு அவரிடம்  இருக்கும் தோழைமையைக் கண்டு வியக்கிறாள். விடைபெறும்போது, ”நா ஒங்களை ’மாமீ’  என்று கூப்பிடவா?”என்று கேட்டு அவள் கரங்களைப் பற்றி அழுத்திவிட்டுப் பேருந்து நிலையத்தை நோக்கி மனநிறைவோடு நடக்க ஆரம்பித்தாள். திருமதி ரேவதி பாலு சொல்ல வந்ததைச் ’ சொல்லாமலே’ சொல்லுகிறார்.

    அவருடையை  நேர்காணலைப் பார்ப்போம்.

    1. தங்களைப் பற்றி சுருக்கமாகச் சொல்லவும்.

    நான் சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவள். வசிப்பது சென்னையில். ஒரு மகன், ஒரு மகள். கணவரும் சொந்தத் தொழில் புரிந்து ஓய்வுபெற்றவர்.

    1. தாங்கள் எப்பொழுதிலிருந்து எழுதுகிறீர்கள்? தாங்கள் எழுதுவதற்குப் பிரபல எழுத்தாளரான தங்கள் தந்தை கொடுத்த ஊக்கம்தான் ஒரு காரணமா?

    revathy41974இல் ”ஜூலி” என்கிற இந்திப் படத்துக்கு நான் எழுதிய விமர்சனம் திரு. சாவி அவர்கள் ஆசிரியராக இருந்த திணமணிக்கதிர் பத்திரிகையில் பிரசுரமாயிற்று. அப்போது எனக்கு  21 வயது. அதைப் பிரசுரித்ததோடில்லாமல் என்னைப் பாராட்டி “உங்களுக்கு மிகநன்றாக எழுத வருகிறது தொடர்ந்து எழுதுங்கள்!” என்று திரு. சாவி  அவர்கள் எனக்கு எழுதிய கடிதமே (இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன்), என்னை எழுத்தாளராக மாற்றியது என்று சொல்லலாம். ஆனால் உடனே தொடர்ந்து எழுத ஆரம்பிக்கவில்லை.

    1.  தாங்கள் முதலில் எழுதிய கதை எது?

    1983இல் என்று நினைக்கிறேன். “கொழுக்கவோ இளைக்கவோ!“ என்கிற என் முதல் சிறுகதை “மங்கையர் மலர்“ மாத இதழில் பிரசுரமாயிற்று.

    1. தாங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?

    என்னைப் பாதிக்கும் விஷயங்களை, என் உணர்வுகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள எழுதுகிறேன்.

    1. படைப்புகளாக மாறிய சில அனுபவங்களைப் பற்றி…

    எல்லாப் படைப்புகளிலும் நம் அனுபவங்கள் இருக்கும். முதலாவது நமது நேரடி அனுபவங்கள், இரண்டாவது நாம் கேள்விப்படுவது. இவைகளோடு சரியான விகிதத்தில் கற்பனையும் கலந்து ஒரு ஆரம்பம், ஒரு முடிவு என்று தீர்மானித்து எழுதும்போது அது ஒரு சிறுகதையாக மாறுகிறது.

    1. தங்களுடைய ஆதர்ச எழுத்தாளர் யார்? (தங்களுடைய தந்தையைத் தவிர)

    யாரைச் சொல்வது? யாரைச் சொல்லாமல் விடுவது? தந்தை எழுத்தாளராக இருந்ததால் சிறுவயதிலிருந்தே புத்தகங்களோடேயே வளர்ந்த அனுபவத்தில் நிறைய மூத்த எழுத்தாளர்கள், தி. ஜானகிராமன், லா.ச.ரா., ஜெயகாந்தன், படைப்புகளிலிருந்து, சம காலத்தவர்களான சுஜாதா, பாலகுமாரன், இந்துமதி, மாலன் என்று எல்லோருடைய படைப்புகளையும் ரசித்துப்படித்து உருவானவள்தான் நான்.

    1. தங்களுக்கு மிகவும் பிடித்த கதைப் புத்தகங்கள் நான்கை கூறவும்.
      1. சில நேரங்களில் சில மனிதர்கள் 2. தரையில் இறங்கும் விமானங்கள், 3. அலையோசை 4. பாற்கடல்.தாங்கள் எழுதிய நூல்கள்/கதைகள் வெளிவந்த பத்திரிகைகள் பற்றிக் கூறவும்.

    அநேகமாக எல்லா தமிழ் வார/ மாதப் பத்திரிகைகளிலும் வெளி வந்துள்ளன. சமீபத்தில் அமுதசுரபி தீபாவளி மலர், லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர், ஸ்ரீ சாயி மார்க்கம் தீபாவளி மலர், கலைமகள் தீபாவளி சிறப்பிதழ் போன்றவற்றில் வெளியாகியுள்ளன.

       8. தங்கள் படைப்புகளில் தங்களுக்கு மிகவும் பிடித்தது?     

       நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், சில குறுநாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள் (பொதிகை – சென்னைத் தொலைகாட்சியில் – என்னுடைய நாடகங்கள் ஒளிபரப்பாகியுள்ளன.) தொகுப்பு நூல்களாக வெளிவந்துள்ளன. எழுத்துலகத்திலும் எல்லாத் துறைகளிலும் தடம்பதித்துப் பல பரிசுகளைப் பெற்றபோதிலும் நான் மிகவும் விரும்பி எழுதுவது ‘சிறுகதைகள்’ தான். அந்த விதத்தில் எனக்கு  மிகவும் பிடித்த சிறுகதை ‘மெளனமாக ஒரு ராகம்.’

         9. எழுத விரும்புவோருக்குத் தாங்கள் கூற விரும்பும் அறிவுரை/யோசனை ஏதாவது…

    திரு. சுஜாதா அவர்கள் சொல்லுவார்கள்…

    நாம் பார்க்கும் எல்லாவற்றிற்குள்ளும் ஒரு கதை இருக்கிறது” என்று.

    திரு. லா.ச.ரா அவர்கள் சொல்லுவார்கள்…

    எழுதுபவர்களிடம் எப்போதும் ஒரு ‘தேடல்அடங்காத தாகமாக இருக்க வேண்டும் என்று.

    என் தந்தை கூறுவார்…

    “நிறைய வேறுபட்ட எழுத்துக்களை படிக்கவேண்டும் என்று.

    இவர்களையெல்லாம் படித்து வளர்ந்த நானும் இதையே கூற விரும்புகிறேன். இவற்றோடு தொடர்ந்த முயற்சியும் இருந்தால் நிச்சயமாக எல்லோராலும் எழுதமுடியும்.

    நேர்காணலில் அவர் கூறிய அறிவுரைகளைப் பின்பற்றினால் எழுத்தை ஆளுமை செய்து சீரிய கதைகளை ஒருவரால் எழுதமுடியும்.

    திருமதி ரேவதி பாலு சீரடி சாய்பாபாவிடம் அகண்ட பக்தி கொண்டவர். எல்லாம் வல்ல சீரடி சாய்பாபா அவருக்கு நீண்ட ஆயுளையும்,  நல்ல ஆரோக்கியத்தையும், வீட்டில் இல்லை என்ற குறை இல்லாமலேயும் இருக்க அருள்வாராக. திருமதி ரேவதி பாலு சாய்ராம் அருளால் ஓய்வுபெறாமல் மேலும் பல படைப்புகளைப் படைத்துப் புகழ்பெற வாழ்த்துக்கள்!!

     

    Share
  • “ எறும்பு பௌடர் “

    தமிழ்த்தேனீ

    இதோ  பாருங்க  எறும்பு  நிறைய வர ஆரம்பிச்சிடிச்சு,  முதல்லே போயி  எறும்புப் பவுடர் வாங்கிண்டு வந்து  போடணும் ,இல்லேன்னா  எல்லா சாப்பாட்டுப் பொருள்ளேயும்  எறும்பு வந்துடும் ,  அப்புறம் நாம சாப்படற  காப்பியிலேயும் மிதக்கும், ஏன்னா சர்க்கரையிலே எறும்பு இருக்கும், பால்லே எறும்பு வரும், அதைக் கவனிக்காம நாம காப்பி கலந்து  குடிப்போம் , அப்போ காப்பியிலே எறும்பு வரும் , சாப்படவும் முடியாது கீழே கொட்டவும் மனசு வராது  என்றாள் காமாட்சி.

    ஆமாம் காமாக்‌ஷி   மழைக்காலம் வருது , நாம வேணா  மழைக்காலத்துக்கு என்ன சேமிச்சு வெச்சுக்கணும்னு தெரியாம இருப்போம், ஆனா  நம்மவிட அறிவு குறைவுன்னு நாம சொல்றோமே  அந்த ஜீவராசி எல்லாம் புத்திசாலியா இருக்கு . எங்கேயாவது  உணவுப் பொருளைப் பார்த்தால்  உடனே  தன்னோட இருக்கற   எல்லாத்துக்கும் அதைச் சொல்லி  எல்லாரையும் கூட்டிகிட்டு வந்துடுது.

    எப்பிடி எல்லாத்துக்கும் புரியவைக்குதுன்னே  தெரியலே.  வெய்யில் காலம் முடியறதுக்குள்ளே  தங்களோட சக்திக்கும் மீறி  தங்களோட உடல் பலத்துக்கும் அதிகமான உணவுப் பொருட்களை  தங்களோட வாயாலே கவ்வி  முதுகிலே சுமந்துண்டு போயி  சேமிச்சு வெச்சிக்கும் என்றார் ஏகாம்பரம்.  அதெல்லாம் சரி,  நாட்டு மருந்துக் கடைக்கு போயி எறும்பு பௌவுடர்ன்னு ஒண்ணு விக்கறான், அதை வாங்கிண்டு வந்து வீட்டைச் சுத்தி  போட்டா  எறும்பு வராது  . முதல்லே போயி அதை வாங்கிட்டு வந்து வீட்டைச் சுத்திப் போடுங்க  என்றாள் காமாட்சி  .

    நாட்டு மருந்துக்  கடைக்குப் போயி  எறும்புப் பௌடர் இருக்கானு கேட்டார் ஏகாம்பரம். சார்  ஸ்டாக் தீந்து போச்சு, நீங்க ரெண்டு நாளைக்கு அப்புறம் வாங்க என்றார். என்னா வெலை சார் என்றார் கடைக்காரரிடம் .    சார்  எல்லாக் கடையிலேயும்  ஒரு பாக்கட்  10 ரூபாதான் சார் . ஆனா இப்பவே சொல்லிட்டேன்  நம்ம கடையிலே  ஸ்பெஷல்  அதுனாலே  15 ரூபா ஆவும் என்றார் கடைக்காரர்.

    அப்பிடி என்னா ஸ்பெஷல்  உங்க கடையிலே  என்ற ஏகாம்பரத்திடம், சார் இப்போ சொன்னா உங்களுக்கு புரியாது , ரெண்டு நாளைக்கு அப்புறம் வாங்க  எடுத்து வைக்கிறேன் என்றார்  கடைக்காரர்.

     இரண்டு நாட்கள் கழித்து  கடைக்கு சென்று அந்த  ஸ்பெஷல்  எறும்பு பவுடரை  ஒரு பாக்கெட்  வாங்கிக் கொண்டு வந்து வீட்டைச் சுற்றிப் போட்டார் ஏகாம்பரம். அப்போதும் எறும்பு வருவது குறையவில்லை.

    கடைக்காரரிடம் சென்று என்னா ஸ்பெஷல்  எறும்பு மருந்து  அப்பிடீன்னீங்க, இன்னமும் எறும்பு  வந்துகிட்டே இருக்குதே  என்ற ஏகாம்பரத்தைப் பார்த்து  சார் உங்களுக்காக  ரெண்டு நாள்  கஷ்டப்பட்டு  நிறைய எறும்பெல்லாம் பிடிச்சு  அதைக் காய வெச்சு  பொடி செஞ்சு குடுத்திருக்கேன்  அதுனாலேதான்  ஐந்து ரூபாய் அதிகம் வாங்கினேன் என்றார் கடைக்காரர்.

    அதெல்லாம் சரி.   நான் அந்த எறும்பு பவுடரை  எடுத்துகிட்டுப் போயி  வீட்டைச் சுத்திப் போட்டேனே  என்றார் அவர்.     எப்பிடிப் போட்டீங்க  என்றார் கடைக்காரர் .

    என்னாங்க இது கூட எனக்குத் தெரியாதா.  அந்தப் பொட்டலத்தை கையிலே வெச்சுகிட்டு  வீட்டு முன்னாலே  நின்னுகிட்டு  மூணு தரம் வலப்புறமாவும் மூணு தரம் இடப்புறமாவும் சுத்திட்டு  ,அதுவும் போதாததுக்கு  ஒரு தடவை வீட்டை கிழக்குலேருந்து ஆரம்பிச்சு   வலமா வந்து   நல்லா  சுத்திட்டு  அதுலே து துன்னு   ரெண்டு வாட்டி  துப்பிட்டு   அதுக்கு அப்புறம்  முச்சந்தியிலே   கொண்டு போயி போட்டுட்டு  திரும்பிப் பாக்காம வந்துட்டேனே என்றார்   ஏகாம்பரம்.

    சார்   எலி மருந்து வேணும்னாக் கூட  சொல்லுங்க  ஸ்பெஷல் எலி மருந்து தரேன் என்றார் கடைக்காரர்.

    இப்படி இருக்கிறது நாடு. மொத்தத்தில்   பெருச்சாளிகளுக்கும் , எலிகளுக்கும் , எறும்புகளுக்கும்  மட்டுமே  கொண்டாட்டமாய் இருக்கிறது.

    Share
  • பதியமிடும் கால்கள்

    பா.ராஜசேகர்  

     

    அன்று நான்

    நள்ளிரவுவரை

    வீடுதிரும்பாத நாளில்

    வாசலுக்கும் வீட்டுக்கும்

    அலைந்த கண்ணுக்குத்தெரியாத

    தந்தையின் கால்தடங்களை

    மகனின் வருகைக்கு

    காத்திருக்கும்

    இன்றைய பொழுதுகளில்

    தேடித்தேடி பதியமிடுகிறது

    என் கால்கள்!

     

    Share
  • காவிரி புரக்கும் நாடு – 6

    -மேகலா இராமமூர்த்தி

    காவிரிப்புனல் தமிழகத்தைப் பொன்கொழிக்கச் செய்தது கன்னடரின் மனத்தில் அனலை மூட்டியது போலும்! நம் மன்னர்களின் கை ஓங்கியிருந்த போதெல்லாம் ஒடுங்கியிருந்த அவர்களின் நரித்தனம், நம் பிடி சற்றுத் தளர்ந்தபோதெல்லாம் நர்த்தனம் ஆடியிருக்கின்றது!

    மைசூரை ஆண்ட போசள மன்னனான முதலாம் நரசிம்மன், கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் மைசூருக்கருகே காவிரியில் அணைகட்டி அதன் சோழமண்டலப் பாசனத்தைத் தடுக்க முயன்றிருக்கின்றான். பிற்காலச் சோழர்களின் ஆட்சி நம் தமிழகத்தில் மாட்சியோடு நடைபெற்றுக்கொண்டிருந்த காலமது. அப்போது ஆண்டுகொண்டிருந்த இரண்டாம் குலோத்துங்கன், தன் மகனான இரண்டாம் இராசராசனிடம் ஓலை தந்து, அவனைப் போசள மன்னனிடம் அனுப்பி, அணை கட்டும் முயற்சியைக் கைவிடும்படிக் கேட்டிருக்கின்றான். போசள மன்னன் அதற்கு இணங்க மறுக்கவே, மறவர்படையோடு சென்று போசளன் கட்டிய அணையை உடைத்தெறிந்து காவிரியை விடுவித்திருக்கின்றான் இரண்டாம் இராசராசன்!

    பிரச்சனை அத்தோடு முடிந்ததா…? இல்லை! மீண்டும் தலையெடுத்தது கி.பி. 17-ஆம் நூற்றாண்டில். (இதற்கு இடைப்பட்ட காலத்தில் இப்பிரச்சனை எந்த நிலையில் இருந்தது என அறியக்கூடவில்லை.) மைசூரை ஆண்ட சிக்கதேவராயன் என்ற மன்னன், காவிரியின் குறுக்கே செயற்கை மலை(!) ஒன்றை உருவாக்கிக் காவிரிநீர் தமிழகத்துக்கு வரமுடியாமல் தடுக்கப் பார்த்திருக்கிறான். அப்போது தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் சாகசி, மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் படையின் துணையோடு காவிரியில் உருவாக்கப்பட்ட அந்தச் செயற்கை மலையை அகற்றப் புறப்பட்டான். இப்படை, அங்குச் செல்லும் முன்பாகவே மைசூர் மாநிலத்தில் பெய்த பெருமழை, சிக்க(ல்)தேவராயன் உருவாக்கிய அந்தச் செயற்கை மலையை அடித்துச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. தமிழர்க்குத் துணைசெய்த அம் மாமழையைப் போற்றுவோம்!

    கன்னடத்துக்கும் தமிழகத்துக்குமிடையே பேராறாக ஓடிப் பெருவளம் தந்த காவிரி, கொஞ்சங்கொஞ்சமாய்ப் பெரும் பிரச்சனையாக உருவெடுக்க ஆரம்பித்ததை மேற்கண்ட வரலாறுகள் தெற்றெனப் புலப்படுத்துகின்றன.

    cauvery-river-water-disputeஇருபதாம் நூற்றாண்டில் இப்பிரச்சனை மேலும் தீவிரமடையத் தொடங்கிற்று. கருணையற்ற கன்னடஅரசு காவிரியின் குறுக்கே பல அணைகளைக் கட்டித் தமிழகத்துக்கு வரவேண்டிய தண்ணீரைத் தடைசெய்து, நம் காவிரிடெல்டா விவசாயிகளைக் கண்ணீரில் நீந்தச்செய்து வருவது நாமறிந்ததே.

    இமயத்தில் புலிச்சின்னம் பொறித்த இணையற்ற மாவீரன் கரிகாலனின் வளநாட்டில் பிறந்து,

    ”மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”
    எனும் நன்மொழிக்கிணங்க, ஊருக்கே உண்டிகொடுத்து உயிர்கொடுத்தச் சோழநாட்டு விவசாயிகள் இன்று தமக்கே உணவின்றித் தவிப்பதும், வேளாண்மை செய்யவியலா விரக்தியில் அவர்கள் தற்கொலைசெய்து மரிப்பதும்…அந்தோ! காணச் சகியாத கலியின் கொடுமைகள்!

    இது ஒருபுறமிருக்க, காய்தல் உவத்தலின்றி அனைத்து மாநிலங்களிடமும் நடுநிலையோடு நடந்துகொள்ளவேண்டிய நடுவணரசோ, அரசியல் சுயலாபத்திற்காகக் கன்னடத்தைப் பகைத்துக்கொள்ள பயந்து பதுங்குகின்றது. உச்சநீதிமன்றம் இவ்விவகாரத்தில் தலையிட்டுத் தரும் தீர்ப்புகளையோ கன்னடம் துச்சமெனத் தூக்கியெறிகின்றது. ’தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்’ என்றான் பாரதி. ’தமிழகத்துக் காவிரிநீரைக் கருநாடகம் வவ்வும்’ என்று அதனை மாற்றிப் பாடவேண்டிய அவலநிலை நமக்கு இப்போது நேர்ந்திருக்கின்றது.

    சங்கடமான இத்தருணத்தில் தமிழகஅரசு செய்யவேண்டியது என்ன?

    தமிழகத்தில் விவசாயம் தழைக்கவும், விவசாயிகள் பிழைக்கவும், தமிழக அரசு தன்னுடைய செயலற்ற ’கோமா’ நிலையிலிருந்து வேகமாய் விடுபட்டு, தமிழகத்துக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய காவிரிநீருக்காக உரிமைக்குரல் எழுப்புவதும், நீதி கிடைக்கும்வரைத் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவதும் அவசியம்!

    எதிர்பாராத காரணங்களினால் ஆட்சியின் ’தலைமை’ப் பொறுப்பிலிருப்போர் செயலிழக்கும் சூழலில், மக்களைக் காக்கவேண்டிய கடப்பாடு தலைமையின்கீழ் இயங்கும் ’கரைவேட்டிகளுக்கு’ (அமைச்சர்களுக்கு) இருக்கிறது. அக்கரைவேட்டிகள் வையத்தை வாழ்விக்கும் விவசாயிகள் நலனில் அக்கறைகாட்டாது, ’தலைமை’யின் நிலைமை குறித்தே அல்லும் பகலும் கவலைகொள்வதும், தமக்கான அரசியற் கடன்களை இடமறிந்து, காலமறிந்து நேர்த்தியாய்ச் செய்வதைவிடுத்து, (ஆலயங்களில்) ’நேர்த்திக் கடன்’ செலுத்துவதிலேயே தம் பொன்னான நேரத்தைக் கொன்னே கழிப்பதும் கடுங் கண்டனத்துக்குரியது!

    இது நிற்க. நம் உரிமைகளுக்காக நாம் போராடும் அதே வேளையில், நம் கடமைகளையும் சரிவரச் செய்தல் அவசியமன்றோ?

    என்ன கடமைகள் அவை?

    பாழ்பட்டுவரும் காவிரியையும், அதையொத்த பிற தமிழக ஆறுகளையும் ஒழுங்காகத் தூர்வாரிப் பராமரிப்பதும், வெள்ளக் காலங்களில் கிடைக்கின்ற அதிகப்படியான நீரை, நீர்நிலைகளில் பாதுகாப்பாய்த் தேக்கிவைப்பதும், ஆற்றுநீரில் ஆலைக்கழிவுகள் கலந்து அதனை நஞ்சாக மாற்றுவதைத் தடுப்பதும், ஆறுகள் வறண்டிருக்கும் காலங்களில் அங்கே மணலை அள்ளுவது, குடியிருப்புக்களை உருவாக்குவது போன்ற முறைகேடுகளைத் தவிர்ப்பதும் காலந்தாழ்த்தாது நாம் ஆற்றவேண்டிய அருங்கடமைகளாகும். ஆறுகளும் ஏரிகளும் சரியாகப் பராமரிக்கப்படாததாலன்றோ சென்ற ஆண்டு நம் செந்தமிழ்நாட்டுக்கு ’வாராதுபோல் வந்த மாமழை’ வடதமிழகத்தையே தண்ணீரிலும் கண்ணீரிலும் மூழ்கடித்தது!  

    பண்டைச் சோழர்கள் காவிரிப் பேராற்றைத் தக்கமுறையில் பேணி, கரையெடுத்துக் காத்ததாலேயே அது சோழநாட்டை சோற்றுப் பஞ்சமற்ற வளநாடாக்கியது என்பதை நாம் நெஞ்சில் நிறுத்தவேண்டும்!

    காவிரி புரக்கும் நாடாய்ச் சோழவளநாடு பீடுநடை போட்டதைப் பண்டை இலக்கியங்கள் ஐயத்திற்கிடமின்றி நமக்கு அறியத்தருகின்றன. ஆயிரங்கலம் நெல்விளைத்த வியன்கழனிகளும், திடர்தோறும் உயர்ந்துநின்ற நெற்கூடுகளும், சோறுவடித்த கொழுங்கஞ்சி ஆறாய்ப் பெருகியோடிய அகன்ற தெருக்களும், வான்பொய்ப்பினும் தான்பொய்யாது ஓடிய காவிரியின் கடும்புனல் வெள்ளமும், அப்புதுப்புனலில் நீந்திக்களித்த மக்களின் ஆரவாரமும் நம் நெஞ்சைவிட்டகலா அற்புதக் காட்சிகள்!

    அப்பொற்காலம் நம் தமிழர்க்கு மீண்டு(ம்) வாராதோ?  

    (முற்றும்)

     

    *****

    படத்துக்கு நன்றி: http://www.mapsofindia.com/my-india/cities/cauvery-river-water-dispute

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    161110 - Parthasarathy-wcol lores

    “கொள்ளைபுண் ணாக்கை கொடுக்கின்றான், கீதையில்
    முள்ளும் மலரான மாலவன் ;-எள்ளினுள்
    எண்ணையாய் ஏளிடும், ஏகாந்த வாத்சல்ய,
    கண்ணனை நெஞ்சே கருது “….கிரேசி மோகன்….!

    Share
  • இன்னம்பூரான் பக்கம் 5: 29: கனம் கோர்ட்டார் அவர்களே! 29:1

    இழுபறிவைத்தியம்

    இன்னம்பூரான்
    14 11 2016

     

    innamburan

    கலோனிய அரசு கெடுபிடிகள் பல காட்டினாலும், திலகரின், காந்திஜியின், பாரதியாரின் எழுத்துரிமையையும், பேச்சுரிமையையும் முச்சூடும் பறிக்கவில்லை. தடா போட்டுப் பார்த்ததுடன் சரி. காந்திஜியுடன் வைஸ்ராய் இர்வின் பிரபு பேச்சு வார்த்தை நடத்தினார். நீதித்துறை தன் பெருமையைக் காத்துக்கொள்வதில் கவனம் செலுத்தும் என்பார்கள். ஆனால், மதராஸ் ஹைகோர்ட்டில் ஒரு ஜட்ஜை வழக்கறிஞர் ஒருவர் நாய் என்று பொருள்பட நகைத்தார்.  சிரித்துக்கொண்டு விட்டு விட்டார்கள். ஏனெனில், அது பூடகமான நகைச்சுவையாக இருந்தது. சினம்பொங்க, ஒரு ஜட்ஜ் ‘நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்று தெரியுமா?’ என்று வினவ, பழம் தின்னிக் கொட்டை போட்ட வக்கீல் ஐயா, ‘ஆஹா! தெரியுமே! ஒரு ஒல்லிப்பிச்சான் [puisne] ஜட்ஜிடம் பேசுகிறேன்.’ என்றார். எல்லாரும் கமுக்கமாகச் சிரித்துக்கொண்டார்கள்,  ஜட்ஜ் உள்பட.

    அத்தகைய அலாதி உறவு எல்லாம், சுதந்திர இந்தியாவில் பறிபோகத் தொடங்கின, கொஞ்சம், கொஞ்சமாக.

    எனக்கு ஒரு கெட்ட வழக்கம். இங்கிலாந்தில் படித்து வந்த காலகட்டத்தில் உயர் நீதிமன்ற (ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்) தீர்ப்புகளைத் தினம்தோறும் படிப்பேன். கறாரில் மையக்கரு நகைச்சுவையிலும், அலட்டிக்கொண்ட தீர்ப்பில் தர்மமும் இருக்கும். எல்லாம் பாடமே. இந்திய அரசியல் சாஸனத்தில் நீதித்துறைக்கு மவுசு அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்பீல் என்ற சட்ட நடவடிக்கை இருப்பதே, நீதிபதிகள் தெய்வாம்சம் கொண்டவர்கள் அல்ல, ஒருவர் அளித்த தீர்ப்பை மேலா ரத்து செய்யலாம் என்பதால், தீர்ப்புகளை விமர்சனத்துக்கு உட்பட்டவை என்பதை குறிக்கிறது. அதே விமர்சனத்தை மக்களில் ஒருவர் செய்வது வரவேற்கபடுவதில்லை. அப்படிச் செய்தாலும், கவனமாக நீதிபதியைக் கொஞ்சம் வெளிப்படையாக விமர்சித்தால் கோர்ட்டை அவமதித்தாக எடுத்துக்கொண்டு, ஆறு மாதம் ஜெயிலில் போடலாம்.

    அந்த நிலைப்பாட்டுக்கு அஸ்திவாரமே சற்றே தடுமாற்றம்தான். வில்மாட், வில்மாட் என்று ஒரு ஜட்ஜ் 1765இல் ‘கோர்ட்டை அவமதிப்பது குற்றமே’ என்று ஒரு நிருபர் மேல் எழுந்த வழக்கில் ஒரு தீர்ப்பில் எழுதி இருந்தாலும்,  டெக்னில் காரணங்களால். அது குறைப்பிரசவம் ஆனது; வில்மாட்டின் மைந்தர் காலம் சென்ற தந்தையின் படைப்புகளைப் பதிவு செய்தபோது, சட்டத்தை அணுகாத அந்தக் கருத்து ஒரு மரபு ஆகிவிட்டது. அப்புறம் என்ன? நீதி அரசர்கள், நீதி மன்னர்களானார்கள், சில இடங்களில் நீதி தேவர்களும் ஆனார்கள் – இந்தியாவில். இங்கிலாந்தில் மரபைப் பதிவுசெய்து விட்டு, காமன் சென்ஸ் படி நடந்து கொண்டார்கள். பொதுவாகச் சொன்னால், அங்கே நீதிபதிகள் அமரிக்கையாக இருந்தார்கள்.

    மேல்நாட்டு ஊடகங்கள் எந்த உத்தமபுத்திரனையும் உச்சாணிக்கிளையில் அமர்த்தி மெய்கீர்த்தி பாடமாட்டார்கள். தடாலடியை எல்லாம் இறக்கி வைத்து வேப்பிலை அடிப்பார்கள். பல வருடங்களுக்கு முன்னால் [1985?] நீதிபதிகளின் தலைமை போன்ற டெம்பிள்டன் பிரபு, பிரபல வழக்கறிஞர்களும், நீதிபதிகளின்புடை சூழ, இந்தியா வந்திருந்தார். அப்போது, ‘ ஊடகங்களின் எழுத்துரிமை ‘கனம் கோர்ட்டாரை அவமதித்தால்..!?.’ என்ற பட்டிமன்றம் நடந்தது. அப்போது அவர் 1987இல் உலகெங்கும் பேசப்பட்ட ஸ்பைகேட்சர் புத்தகம் பற்றிய தீர்ப்பில், அந்நூலின் ஆசிரியர் பீட்டர் ரைட் வாக்கு மீறி அரசு ஒற்றர்களின் ரகசியங்களை (ஒரளவு லீக் ஆனவைதான்) பிரசுரம் செய்யக்கூடாது என்று தானும், இரு சக ஜட்ஜ்கள் மெஜாரிட்டி தீர்ப்புக் கொடுத்ததை ஊடகங்கள் பரிகசித்தன. மூவரின் படங்களை தலைகீழாக மாட்டி, ‘மூன்று முட்டாள்கள்’ என்ற தலைப்பை டைலி டெலிக்ராஃப் பிரசுரம் செய்தது. ஐயா அவர்கள் உடனே நடவடிக்கை எடுத்தார். என்ன? அதைத் தன் வரவேற்பு அறையில் அலங்காரமாக மாட்டிவிட்டு, தினம் அதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டார்.

    [தொடரும்]

    ***

    http://kids.nationalgeographic.com/content/dam/kids/photos/articles/Other%20Explore%20Photos/R-Z/Wacky%20Weekend/Upside-Down%20Animals/ww-upside-down-animals-possums-tile.jpg

     

     

    Share
  • இனிப்பாய்வாழ எண்ணிடுவோம்!

    -எம். ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா

    சர்க்கரைநோய் நோயல்ல எனச்சாற்றும் உரைகேட்பார்
    சந்தோஷக் கடல்மூழ்கிச் சர்க்கரையை நினைந்திடுவார்
    சர்க்கரைநோய் விளைவுபற்றிச் சரியாக விளங்காமல்
    தாம்விரும்பும் சர்க்கரையைத் தனியாகச் சுவைத்துநிற்பார்!

    உரைகள் பலகேட்டாலும் உளமதனில் இருத்தாவிடின்
    விளைவு பலவந்தெம்மை வீழ்த்திவிடும் எனுமெண்ணம்
    பலர்மனதில் பதியாமல் பாதிவழி  நிற்பதுவே
    நலனிழந்து போவதற்கு நற்சான்றாய் இருக்குதன்றோ !

    நோய்க்கெல்லாம் தாயாகச் சர்க்கரைநோய் விளங்குதென
    நாட்டிலுள்ள வைத்தியர்கள் நாளாந்தம் சொல்லுகிறார்
    பேய்க்குணத்தால் இவையெதையும் எம்மனது ஏற்காமல்
    வாய்க்கின்ற உணவையெல்லாம் வயிற்றுக்குள் அடைத்துவிடும்!

    சமாதானம் பலசொல்லிச் சர்க்கரையை எடுத்திடுவார்
    சலரோகம் அவரிடத்தில் சன்னதமே ஆடிநிற்கும்
    சிலவேளை மருந்தெடுப்பார் பலவேளை அதைமறப்பார்
    அதனாலே அவரின்பம் அத்தனையும் பறிகொடுப்பார்!

    உடல்பருக்கும் உடல்மெலியும் உற்சாகம் குறைந்துவிடும்
    நடைகூடத் தளர்ந்துவிடும் நடுக்கமும் வந்துநிற்கும்
    இவையெல்லாம் இனிப்பென்னும் இம்சைதரும் விளைவாகும்
    இன்சுலினை எடுத்தெடுத்து எல்லோரும் ஏங்கிநிற்பார்!

    இனிப்புக் கண்டவிடமெல்லாம் இளித்துநிற்கக் கூடாது
    தனித்துநின்று இனிப்பதனைச் சுவைத்துநிற்றல்  கூடாது
    மனம்விரும்பும் உணவுகளை வாயில்போடக் கூடாது
    மருந்தோடு உடற்பயிற்சி மறந்துவிடல் கூடாது !

    நேரங்கெட்ட நேரத்தில் நிறையவுண்ணக் கூடாது
    நாருள்ள  உணவுகளை நாம்மறக்கக் கூடாது  ஊர்விட்டுச் சென்றாலும் உணவுண்ணும்  முறையனைத்தும்
    மாறாமல் இருப்பதற்கு மறந்துவிடக் கூடாது!

    பச்சையாய்க் காய்கறிகள் பழவகைகள் எடுக்கவேணும்
    இச்சையுடன் நாமவற்றை எப்பொழுதும் ஏற்கவேணும்
    அச்சம்தரும் உணவுகளில் ஆசைகொள்ளல் தவிர்த்துவிட்டால்
    அநேகம்பேர் நிம்மதியை அடைவதினைக் கண்டிடலாம்!

    நாவிரும்பும் உணவுகளை நாமொதுக்க எண்ணிடுவோம்
    நலன்விளைக்கும் உணவுகளை நாவேற்கச் செய்திடுவோம்
    நோய்பற்றித் தெளிவுற்று நுடங்காது இருந்திடுவோம்
    வாழ்நாளை மனமிருத்தி வாழ்ந்திடுவோம் நல்வழியில்!

    மைசூர்பாகை மறந்துவிடு
    மணக்குமல்வாவைத் தூக்கியெறி
    கேசரிகிட்டவே போகாதே
    கிறுகிறுப்புனக்கு வந்துவிடும்
    எந்தலட்டையும் எடுக்காதே
    வந்திடுமுனக்குச் சங்கடமே
    இனிப்புமுறுக்கை எடுத்துவிடின்
    தவித்துநிற்பாய் நோயாலே
    சர்க்கரைப்பொங்கலை தவிர்த்துவிடு
    சந்தோஷமுன்னைத் தேடிவரும்
    இனிப்பைக்கண்டால் நாவூறும்
    இவைகளனைத்தும் இடையூறே
    இனிப்பைப்பற்றி நினையாமல்
    இனிப்பாய்வாழ எண்ணிடுவோம்!

    வருமுன்னர்க் காப்பதற்கு வழிகள்பல இருக்கிறது
    வந்தபின்னர் எமைக்காக்கும் வழிகளுமே விரிகிறது
    தினமும்நாம் நலன்பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டால்
    தினமுமே எம்வாழ்வு தித்திப்பாய் இருக்குமன்றோ!

     

    Share
  • Thenkasi, Kasi Viswanathar temple – தென்காசி, காசி விசுவநாதர் ஆலயம்

    பவள சங்கரி

    Thenkasi, Kasi Viswanathar temple- Tirunelveli disrict – Tamil Nadu

    imag0323

    imag0327

    imag0338
    imag0339
    Tenkasi is a small town which is at a distance of 50 kms. from Tirunelveli and also has a railway station. The main deity Kasi Viswanathar , a huge Sivalingam which is wonderful and has exceptional grace. This is a swayambhu Lingam. At the background of the temple we could see the Podighai hills full of herbs and medicinal plants and picturesque view. Tenkasi is located at 8.97°N 77.3°E. It has an average elevation of 143 metres (469 ft) and it is surrounded by the western ghats in three sides. This temple has a magnificent tower that stands 180 feet tall . This temple is in Tiruvenlveli district of Tamilnadu and is 5 kms from Coutrallam This is the second highest gopuram in Tamil nadu. The Gopuram of the temple welcomes pilgrims with a pleasant cool breeze straight from the nearby Thirikooda Malai. Pandya kings were patrons of the temple. Each pillar of this temple is adorned with excellent sculptures of Gods and Godesses. Lord Siva’s consort is known as Ulgammal.

    imag0335

    imag0336

    imag0330imag0331

    திருநெல்வேலி மாவட்டத்தில், 50 கி.மீ தொலைவில், கேரள நாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்குள் வரும் நுழைவு வாயிலில் அமைந்துள்ளது தென்காசி, காசி விசுவநாதர் ஆலயம்.
    சுமார் 4 ஏக்கர் பரப்பளவில், 700 ஆண்டுகளுக்கு முன்பு பராக்கிரம பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான ஆலயம் இது. 180 அடி உயரத்தில் அழகான கலை வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ள இதன் கோபுரம் தமிழ்நாட்டில் இரண்டாவது உயரமான கோபுரம். வடக்கே காசியிலுள்ள விசுவநாதரை தரிசித்த பலனை இங்குள்ள ஈசுவரனை தரிசிப்பதன் மூலம் பெறலாம் என்ற நம்பிக்கை பரவலாக உண்டு. இங்குள்ள அம்மனின் பெயர் உலகம்மன் . இத்திருத்தலத்தில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். இங்குள்ள சிற்பங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை . குறிப்பாக, இரட்டை சிற்பங்களாகிய வீரபத்திரன்-வீரபாகு, இரண்டு தாண்டவ மூர்த்திகள், இரண்டு தமிழ் அன்னைகள், ரதி- மன்மதன் , மஹாவிஷ்ணு, கம்பீரமான காளி தேவி போன்ற அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம்.

    imag0328

    Share
  • ராஜ வாழ்க்கை

    P.L.செல்வமாணிக்கம்

    தங்கராசுக்கு மனசுக்கு சந்தோசமாக இருந்தது. இருக்காதா பின்னே.

    ரொம்ப நாளக்கிப் பிறகு, கூத்துக் கட்ட சந்தர்ப்பம் வந்திருக்கு. கண்டரமாணிக்கத்துல, மாணிக்க நாச்சியார் கோயில்ல சித்திரை திருவிழா நடக்குது. நாட்டார் மண்டகப்படிக்கு வள்ளி திருமணம் கூத்து வைக்கிறதா முடிவு செஞ்சு தங்கராசுக்கு அச்சாரம் கொடுத்திருக்காங்க. தங்கராசு மனசு இருபத்தி ஐந்து வருஷம் பின்னாடி போனது. அப்பவெல்லாம் சித்திரை, வைகாசி வந்திருச்சின்னா , ராஜபார்ட் தங்கராசு, கூத்து இல்லாத நாளே இருக்காது. முருகன் வேசங்கட்டி மேடையில வந்து பாட ஆரம்பிச்சா, ஊர்சனம் அசையாம பாக்கும். ராத்திரி பத்து மணிக்கு ஆரம்பிக்கிற கூத்து, அதிகாலை ஐஞ்சு மணிக்கு முடியும்.கூத்து முடியிற நேரம், வள்ளிய கல்யாணம் செய்ரப்ப, ஊரே எந்திருச்சு கையெடுத்து கும்புடும். தங்கராசும் கூத்து நடக்கிறப்ப சுத்த பத்தமாத்தான் இருப்பான். கவுச்சி பக்கமே போக மாட்டான்.

    வரும்படியும் நல்லாத்தான் கிடைச்சுது. வீடும், நிலம், நீச்சுன்னு ஓரளவுக்கு சொத்தும் வாங்கிப்போட்டிருந்தான்.வாழ்க்கையும் நல்லாத்தான் போயிட்டு இருந்சுச்சு. கூத்த நம்பின அளவு, தங்கராசு ஜாதகத்தையும் நம்பினான்.முதல்ல ஒரு பொண்ணை ஜாதகம் பாத்து தான் கட்டுனானன், இந்தப் பொண்ணக் கட்டிக்கிட்டா, .ராஜ வாழ்க்கை கிடைக்குமுன்னு , ஜோசியக்காரன் சொன்னத நம்பி.

    வரிசையா மூணு பொண்ணு பொறந்துச்சு.

    கூத்துல ராஜபார்ட் வேசம் போட்டப்ப மட்டும் தான் ராஜ வாழ்க்கை கிடைச்சுது.

    தங்கராசுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ஒன்னத் தவிர. அடிக்கடி ஜாதகம் பார்ப்பான். ஜோசியம் கேப்பான். அவனோட பெரிய கவலை ஒன்னே ஒன்னுதான். அவனுக்கப்பறம் கூத்துக்கட்ட வாரிசு இல்லைங்கிறதுதான். மறுபடியும் இரண்டாவது கல்யாணம் கட்டுனா ஆம்புளப்புள்ள பொறக்குமுன்னு, ஜோசியக்காரன் சொன்னத நம்பி ரெண்டாவது கல்யாணம் செஞ்சுகிட்டான். புதுசா கட்டுன பொண்டாட்டி பெத்ததும் ஒரு பொன்னு தான். மயான வைராக்கியம் பிரசவ வைராக்கியம், நமக்கு தெரிஞ்சது தானே. மறுபடியும் ரெண்டாவது பொண்டாட்டி மாசமா இருந்தா. கடவுளுக்கே நம்ம கதாநாயகனை பாக்க பரிதாபமா இருந்துச்சு போல. இந்த தடவை தங்கராசுக்கு மகன கொடுத்துட்டாரு. மதனராசுன்னு மகனுக்கு பேர் வைச்சான். சும்மா சொல்லக்கூடாது. மகனும் மன்மதன் மாதிரி தான் இருந்தான். மகனும் கூத்தில கொடிகட்டி பறப்பான்னு நம்பிக்கை வந்திருச்சு.
    தங்கராசுக்கு கால் தரையிலே படல. ஊரையே கூப்புட்டு விருந்து வச்சான்.

    ஐஞ்சு புள்ள பெத்தா அரசனே ஆண்டி அப்பிடின்னு சொல்லுவாங்க. தங்கராசு நிலமையை என்னன்னு சொல்றது. முன்னாடி மாதிரி கூத்துக்கு இருந்த வரவேற்பும் போச்சு. இளவட்டத்துக்கு கூத்தெல்லாம் புடிக்காம போயிருச்சு.

    எட்டு மணி நேரமெல்லாம் யாரும் உக்காந்து கூத்து பாக்க தயாரா இல்ல. எல்லாருக்கும் இப்ப சினிமா பாட்டுக்கச்சேரியும், ஆட்டமும் தான் புடிக்குது.

    இப்பவெல்லாம் வருசத்துக்கு நாலு ஐஞ்சு கூத்து நடக்கிறதே பெரிய விசயமா போச்சு. அரசாங்கம் கலை நிகழ்ச்சி நடத்திறப்ப கூத்தும் நடத்துவாங்க. வெளி நாட்டுக்காரங்கள கூப்பிட்டு அவுகளுக்கு, கரகம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம்,மயிலாட்டம், கூத்து எல்லாம் பெருமையா காமிப்பாங்க. கலைஞர்களுக்கு பொன்னாடை போத்தி, கொஞ்சம் காசும் கொடுப்பாங்க. தங்க ராசுவும்,அவுக ஆளுகளோட போய் கூத்து நடத்திட்டு வருவாப்புல. ஊர்ல நடத்திற மாதிரி எட்டு மணி நேரம் இல்லாம, மூணு மணி நேரம் கூத்து நடக்கும்.

    தலைமை தாங்குற அமைச்சர் ஒரு மணி நேரம் இந்தக் கலைகளோட பாரம்பரியத்தப்பத்தி பேசுவாங்க. இந்தக் கலைகள் அழிஞ்சு போகாம காப்பத்திறதுக்கு ஒரு குழுவை அமைக்கிறதா சொல்லுவாங்க. ஒரு சில மாசத்துல  குழுவையும் அமைச்சிருவாங்க. குழுவில இருக்கிற உறுப்பினர்கள பாத்தா கோவம்தான் வரும். தமிழே தெரியாதவனும்.கூத்தையே இது வரைக்கும் பாக்காதவனும்தான் இதுல இருப்பானுக.

    தங்கராசுக்கு கூத்தும் கொறஞ்சுகிட்டே வந்துச்சு. பிள்ளைகள் வளர வளர, தங்கராசுவின் சொத்தும் கரைஞ்சுகிட்டே  வந்தது. இருந்தும் தங்கராசுக்கு கூத்தின் மேலிருந்த பிரியம் ஒரு துளி கூட குறையவில்லை. சாப்பிடுவது, தூங்குவது போல, ஏதாவது கதையை ஆடிப் பாடி பயிற்சி செய்து கொண்டிருப்பான். இரும்பும், வித்தையும் இருக்கக் கெடும் அப்படீன்னு அவனுக்கு நல்லாவே தெரியும். பெண் பிள்ளைகள் அப்பாவைப்போல லெச்சணமாக இருந்ததால், ரொம்ப செலவில்லாமல் கட்டிக்கொடுத்து விட்டான். மகனுக்கு கூத்து சொல்லிக்கொடுக்க முற்பட்ட போதெல்லாம், அவனுடைய மனைவிமார்களே அதற்கு விடவில்லை. வழி,வழியாக பாட்டன், பூட்டன் காலத்திலிருந்து நடத்தி வந்த கூத்து தன்னோட காலத்தோடு முடிந்து விடப்போகிறது என்று தான் மிகவும் கவலைப்பட்டான்.தங்கராசு அப்பா அடிக்கடி சொல்லுவாராம், “நம்மள மாதிரி கலைஞர்கள் நடத்துற கலை நிகழ்ச்சிகள்,உழைச்சு களச்சுப் போயிருக்கிற மக்களுக்கு உயிர் கொடுக்கிற அமுது. எந்த காலத்திலையும் இதை நம்ம விடக்கூடாது”.

    அப்பாவின் சொல்லை தங்கராசு இதுவரை மறக்கவில்லை. மகனை சின்ன வயசில இருந்தே பக்கத்தில கூப்புட்டு வச்சுகிட்டு புராண கதையெல்லாம் சொல்லுவான். பாட்டும் பாடிக் கான்பிப்பான். இதெல்லாம் இந்த மகனப் பெத்த,ரெண்டாவது பொண்டாட்டி இல்லாதப்பதான். தப்பித் தவறி அவ பாத்துப்புட்டா ருத்ரதாண்டவந்தான்.

    “நீ கெட்டு, இந்த குடும்பத்தக்கெடுத்ததுமில்லாம,என் புள்ளையையும் கெடுக்கப்போறியா” அப்பிடின்னு கத்த ஆரம்பிச்சான்னா, அவ வாய மூடுறது, ரொம்ப சிரமம்.

    மதனராசுக்கு அம்மா சொல்றது சரியா, அப்பா சொல்றது சரியான்னு புரியாத வயசு. ஒன்னு மட்டும் புரிஞ்சுது. இப்போதைக்கு சோறு போடுறது, அப்பாவோட கூத்து இல்லை, அம்மா, அங்க இங்க வேல பாத்து அதுல கிடைக்கிற காசுலதான் குடும்பம் நடக்குது என்பது. வயிறுக்கு அப்புறம்தானே அனைத்தும்.

    மகனும், மற்றவர்களோடு சேர்ந்து கொண்டு, கூத்தையும் அப்பாவையும் வெறுக்க ஆரம்பித்தான். ஆனால் நன்றாகத்தான் படித்தான். ஒரு வழியாக பொறியியல் பட்டமும் பெற்றுவிட்டான். வழக்கம் போல. வேலையில்லா கூட்டத்தில் அவனும் சேர்ந்து விட்டான்.

    தங்கராசுவுக்கு இப்போதெல்லாம் தனிமை தான் கூட்டாளி ஆகி விட்டது. ராஜ வாழ்க்கை கிடைக்கும் என்று சொன்ன ஜோசியரின் வார்த்தையை இன்னும் தங்கராசு நம்பிக்கொண்டுதான் இருக்கிறான்.

    “என்ன ராஜபார்ட் எந்த கோட்டைய புடிக்கப்போறிங்க” என்ற அவன் சிறு வயது தோழன் ராமசாமியின் குரல் அவனை நிகழ் காலத்துக்கு கொண்டு வந்தது.

    ”ஒன்னுமில்ல பங்காளி , நாளக்கி கண்டரமாணிக்கத்துல போடப்போற கூத்தை நினெச்சுக்கிட்டிருந்தேன”.

    “ரொம்ப வருசத்துக்கு பிறகு உன் கூத்து நடக்கப்போகுது. கட்டாயம் நான் என் பேரன், பேத்திகளோட கூத்து பாக்க வந்திடிறேன். நேத்து உன் மகன் மதனராசனை பாத்தேன். அழகு கொட்றான். உன்னைய சின்ன வயசில பாத்த மாதிரியே இருக்கு. அவனும ராஜபார்ட்டா கூத்தில வந்தா எப்புடி இருக்கும்“.

    பேசிக்கொண்டே போன கூட்டாளியை வேதனையோடு பார்த்து சிரித்தான் தங்கராசு.

    “அவன்கிட்ட இதைப்பத்தி எதையும் பேசிப்புடாத. உன்னைய எதாவது பேசிப்புடுவான். அவனே படிச்சு முடிச்சு, இன்னும் வேல கிடைக்கல அப்புடின்னு வருத்தத்துல கெடக்கான்”

    “நல்லா வேலைக்கு போகட்டும். நேரம் கிடக்கிற போது கூத்து போடட்டும்.” என்ற தங்கராசை இடைமறித்த ராமசாமி, “சொல்ல மறந்திட்டேன். கண்டரமாணிக்கம் சேவுகன் செட்டியார் வீட்டு சாந்திக்கு, அமெரிக்கா காரங்க நாலஞ்சு பேர் வந்திருக்காக. நாளக்கி உன் கூத்து பாக்க வருவாகளாம்” என்றான்.

    “நல்லா வரட்டும், நம்ம கூத்தை பாக்குறது, நம்ம கலைக்கு கிடைக்கிற மரியாதை, எல்லாம் அந்த மாணிக்கநாச்சி செயல், கூத்துக்கான வேலை நிறைய இருக்கு, வரட்டுமா” என்றவாறே தங்கராசு அங்கிருந்து நகர்ந்தான்.

    வீட்டில் நுழைந்தவன் தன் மகனை கூப்பிட்டான்.

    “ராசு,இங்க வா அய்யா“ என்றவனை எரிச்சலோடு பார்த்தான் மதனராசு என்கிற மதன்.

    வளரும் வரை அப்பாவை தங்கள் கதாநாயகனாக பார்க்கும் பிள்ளைகள் வளர்ந்த பின் எதிரிகளாகத்தானே பார்க்கிறார்கள்.

    முறைத்துக்கொண்டே அருகில் வந்த மகனைப்பாத்து, “மெலிஞ்சு போயிட்டியேப்பா, நல்லா சாப்புடு ராசா. நல்ல வேலை நிச்சயம் உனக்கு கிடைக்கும். இந்தா இதில ஐந்நூறு ரூபாய் இருக்கு. செலவுக்கு வச்சுக்க,அப்புறம் இன்னிக்கு வள்ளி திருமணம் கூத்து இருக்கு, முடிஞ்சா வா” என்றவனை, “இந்த கூத்தை கட்டிக்கிட்டு நீங்க அழுகிறது பத்தாதா, என்னக்கி இந்த கூத்த விடுறீகளோ, அன்னைக்கு தான் நம்ம குடும்பத்துக்கு விடிவு காலம் “ என்று சீறினான்.

    ”அதெல்லாம் மண்டை மண்ணுக்குள்ள போகுறப்பதான் உங்க அப்பாரு இந்த கூத்த விடுவாரு“ என்று மகனப்பெத்த மகராசியின் குரல் தங்கராசின் மனதில் இடியாக விழுந்தது.

    அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முழுகி கூத்துக்காக பூசையும் போட்டான் தங்கராசு. மற்ற கலைஞர்களும் அவன் வீட்டிற்கு காலையிலே வந்து விட்டார்கள். மதனராசன் வேலைக்கான நேர்முகத் தேர்விற்காக மதுரைக்கு புறப்பட்டு கொண்டிருந்தான். அம்மா,பெரியம்மா எல்லோரிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்ட அவனுக்கு,அப்பாவிடம் சொல்லிவிட்டுப் போக வேண்டும் என்று தோன்றவில்லை.

    மதுரையில் நேர்முகத் தேர்வுக்கு குறைந்தது நூறு பேராவது வந்திருப்பார்கள். அத்தனைப் பேரை பார்த்தவுடன் மதனராசுக்கு உலகமே சுற்றுவது போல இருந்தது. தேவை என்னவோ அந்த அலுவலகத்துக்கு இரண்டு பேர்தான். காலையில் ஒரு எழுத்துத் தேர்வு, மதியம் ஒரு எழுத்துத் தேர்வு. தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு நேர்காணல். மதனராசு இரண்டு தேர்விலும் தகுதி பெற்று, நேர்காணலுக்காக காத்துக் கொண்டிருந்தான். அவனோடு சேர்த்து நேர்காணலுக்கு இருபது பேர் தேர்வாகி இருந்தார்கள்.

    இரவு மணி ஏழு ஆகி விட்டது. பொது மேலாளர் பார்த்து ஐந்து பேரை இறுதி நிலைக்கு தேர்வு செய்திருந்தார்.அதில் மதனராசுவும் ஒருவன். ஐந்து பேரையும் நிர்வாக இயக்குநர் பார்த்து இரண்டு பேரை தேர்வு செய்யவேண்டும். மதனராசுவின் எண்ணங்கள் வேறு விதமாக ஓடிக்கொண்டிருந்தது. இந்த வேலை கிடைத்தால் அம்மாவையும், பெரியம்மாவையும் தன்னோடு அழைத்து வந்துவிட வேண்டும். அப்பா கூத்தை விடுவதாக இருந்தால், பெத்தக் கடனுக்கு கூட்டிக்கொண்டு வந்து வைத்துக்கொள்ள வேண்டும். இல்ல கூத்துதான் வேனும்னா ஊரிலே இருக்கட்டும்.

    “மதனராசன்” என்று அழைக்கும் குரல் கேட்டு நனவுலகுக்கு வந்தான்.

    “உள்ள போய் இயக்குநரைப் பாருங்க “ என்று சொன்னார்.

    கதவைத் தட்டி விட்டு உள்ளே சென்றான். எதிரே நின்றவனைப் பார்த்து “உக்காருங்க மதனராசன் “என்றவர், வழக்கமான கேள்விகளுக்கு பிறகு ஒரு கேள்வி கேட்டார்.

    ”ஒரு வேளை உங்களுக்கு இந்த வேலை உங்களுக்கு கிடைக்குது அப்படீன்னா அதுக்கு என்ன காரணமா இருக்கும்?”.

    மதனராசு மெதுவாக பேச ஆரம்பித்தான். ”இந்த வேலை கிடைச்சுதுன்னா, அது என் படிப்புக்கும், இன்னக்கி எழுத்துத் தேர்வில தேர்வானதும், நேர்முகத் தேர்வில் தேர்வானதும்தான்” அப்படின்னு நினைக்கிறேன்.

    இயக்குநர் இளங்கோ சிரித்துக்கொண்டே சொன்னார். ”நீங்க சொல்றபடி பாத்தா உங்க தரவரிசை நாலாவது தான். அப்புறம் ஏன் இந்த வேலையை உங்களுக்கு தரப்போறேன் தெரியுமா. உங்க அப்பா தான் முழுக்காரணம். நானும் உங்க ஊர்தான். நானும் உங்க அப்பாவும் பள்ளிக்கூடத்தில ஒன்னா படிச்சோம். பதினொன்னாம் வகுப்போட உங்க அப்பா நின்னுட்டாரு. முழு நேரமா கூத்தில நடிக்கப்போயிட்டாரு. சொல்லப் போனா எங்களை விட நல்லாப் படிப்பாரு. படிச்சிருந்தா எங்களையெல்லாம் விட வசதியோட இருந்திருக்கலாம். உங்க அப்பா என்ன சொன்னாரு தெரியுமா?”

    “படிச்சு வேலைக்கி போக எத்தனையோ பேர் இருக்கீங்க. ஆனா கூத்தாட எங்களை மாதிரி ஒரு சில பேர் தான் இருக்கோம் அப்பிடின்னு சொல்லிட்டாரு. மூனு மாசம் முன்னாடி ஊருக்கு வந்திருந்தேன். உங்க அப்பாவை பாத்தேன். மனசுக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு. நீங்க யாரும் அவரை மதிக்கிறது இல்லைன்னு கேள்விப்பட்டேன். பண உதவி பன்றேன்னு சொன்னேன். வேண்டாமுன்னு சொல்லிட்டாரு. ஒன்னே ஒன்னு தான் கேட்டாரு. முடிஞ்சா என் மகனை ஒரு வேலையில சேத்துவிடு அப்பிடின்னு கேட்டாரு.”

    இதைக்கேட்டவுடன் மதனராசு கண்களில் இருந்து கண்ணீர் அருவியாகக் கொட்ட ஆரம்பித்தது.

    Share