இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (218)
அன்பினியவர்களே!
அடுத்தொரு வாரத்தில் என் அன்பு கலந்த வணக்கங்கள். இன்ன பல எண்ணங்களைச் சுமந்து கொண்டு மடல் மூலம் மனந்திறக்க விழைகிறேன். மனித சமுதாயத்தின் வளர்ச்சியும், வரலாறும் பல சரித்திரத் திருப்புமுனைகளை உள்ளடக்கியவை. காலத்துக்குக் காலம் மனிதன் தன்மீது வீசப்பட்ட சவால்களைத் தன் திறமையின் மூலம் எதிர்கொண்டே வளர்ச்சியடைந்திருக்கிறான். ஆனால், அவ்வளர்ச்சிக்கான வரலாற்றுச் சரித்திரத்தினை உள்வாங்கிக் கொண்டு அதனுடைய உண்மையான விளைவினையும் அவ்விளைவினால் மனிதன் அடைந்த மேம்பாட்டு வளர்ச்சியையும் சரியாகப் புரிந்து கொள்வது ஒன்றுதான் மனித நாகரிகத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகிறது.
ஆதிமனிதன் காட்டுக்குள் வேட்டையாடி வாழ்ந்ததிலிருந்து இன்று செவ்வாய் கிரகத்தை ஆராயும் அளவிற்கு மனித அறிவின் வளர்ச்சிக்கான விலைகள் கொடுக்கப்படாமலில்லை. தாம் அடைந்த வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், தமது வாழ்வினையும், அதற்கான வசதியையும் உறுதிப்படுத்துவதற்காகவும் அந்நியநாடுகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது மேலைத்தேச நாடுகளின் அன்றைய வரலாற்றுத் தேவையாயிருந்தது. விளைவாக நாடுகளின் பேராசை பெருத்து காட்டைவிட்டு நாட்டுக்குள் வந்த நாகரிகமடைந்த மனிதன் அடுத்த நாடுகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அதீதப் பேராசையினால் முதலாம் உலக மகாயுத்தம், இரண்டாம் உலக மகாயுத்தம் எனும் மனிதப் பேரழிவுக்கு அடிவகுத்தான்.
பேராதிக்க ஆசை கொண்ட நாட்டின் அதிபர்களின்
அபிலாஷைகளுக்காகத் தமது இன்னுயிரைக் காவு கொடுத்தோர் எண்ணிக்கையிலடங்காதோர். தாம் பிறந்த மண்ணின் பாதுகாப்புக்காக நாட்டின் தலைவர்களினதும், அரசினதும் ஆணையை ஏற்றுப் போர்க்களத்தினுள் குதித்த பல்லோப லட்ச வீரர்கள் பல போர்களில் தமது இன்னுயிரைத் தமது நாட்டிற்காகத் தியாகம் செய்துள்ளார்கள். அதேவேளை சில சர்வாதிகாரிகளால் அடுத்த நாடுகளின் மீது திணிக்கப்படும் போர்களில் வலுக்கட்டாயமாக ஈடுபட வேண்டிய நிர்பந்தத்திற்குப் பலர் உள்ளாக்கப்படுகிறார்கள். அத்தகையதோர் போர் ஜனநாயகம் எனும் போர்வையில் ஆட்சியைக் கைப்பற்றி சர்வாதிகாரத்தினால் இன்ன பல கொடுமைகளைப் புரிந்த ஹிட்லரின் அராஜகத்தைத் தவிர்ப்பதற்காக ஏற்பட்டது சரித்திரத்தில் மாறாத கறையாகப் படிந்துள்ளது.
சரித்திர நிகழ்வுகளையும், சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்வுகளையும் போற்றி அவற்றினை மறக்காது நினைவுபடுத்தி வாழும் நாடுகளில் இங்கிலாந்து முன்னணியில் இருக்கிறது என்று கூறினால் மிகையாகாது. ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 11ஆம் திகதியை முப்படைகளையும், மற்றும் நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்ட அதிகாரிகளையும் கெளரவிக்கும் தினமாக ஐக்கிய இராச்சியம் கடைப்பிடித்து வருகிறது. நவம்பர் 11ஆம் திகதியை அடுத்து வரும் ஞாயிறு தினத்தை ஒரு நினைவு ஞாயிறு ( Remembarance Sunday ) என்று ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறார்கள். அன்றைய தினம் லண்டன் மாநகரில் அமையப்பெற்ற படைவீரர்கள் நினைவுத்தூபியின் முன்னால் இங்கிலாந்து மகாராணியர் உட்பட அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நிழல் அமைச்சர்கள், மற்றும் பல முன்னணி நபர்கள் அணிவகுத்துப் படையினரின் அணிவகுப்பைப் பார்வையிடுவார்கள். பின்னர் அனைவரும் அந்த நினைவுத்தூபியின் அடியில் மலர்வளையம் சாத்தித் தமது நினைவாஞ்சலிகளையும், நன்றியறிதல்களையும் மறைந்த படைவீரர்களுக்குத் செலுத்துவார்கள். படையினரின் அணிவகுப்பின்போது போர்ப்படைகளில் சேவையாற்றி ஓய்வுபெற்ற வீரர்களும் கலந்து கொள்கிறார்கள்.
சரியாக அந்த ஞாயிறு காலை 11 மணிக்கு அனைவரும் தாம் என்ன செய்து கொண்டிருந்தாலும் அதை நிறுத்திவிட்டு இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலிகளைச் செலுத்திக் கொள்வார்கள்.
இதேபோன்ற நினைவுத்தூபிகள் ஒவ்வொரு நகரிலும் நிறுவப்பட்டுள்ளது. அத்தகையதோர் நினைவுத்தூபி நாம் வாழும் “கென்லி” (Kenley) எனும் நகரிலும் நிறுவப்பட்டுள்ளது.போர்க்காலத்தில் போர்விமானங்கள் தரிக்கும் ஓர் படைத்தள விமான ஓடுபாதை ” கென்லி வான்படைத்தளம்” (Kenley Aerodrome) என்றழைக்கப்படும் மைதானத்தில் நிறுவப்பட்டுள்ளது. இத்தூபியின் முன்னால் அஞ்சலி மதியம் ஒருமணிக்குச் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நானும், மனைவியும் அவ்விடத்திற்கு மதியம் 12 மணிக்கே வந்து விட்டோம். “அடடா ஒருமணி நேரத்திற்கு முன்னதாகவே வந்து விட்டோமே! “ என்று அங்கலாய்த்தபோது, எமது தினசரி நடைப்பயிற்சியை இங்கேயே செய்து விடுவோமே என்றார் என் மனைவி. சுமார் இரண்டரை மைல் சுற்றளவு கொண்ட அம் மைதானத்தைச் சுற்றி வர சுமார் 45 நிமிடங்கள் பிடித்தது. 12.50க்கு அவ்விடத்தை வந்தடைந்தோம்.
சுளீரென ஆதவன் தனது கதிர்களை அள்ளிவீசிக் கொண்டிருந்தான். அக்கதிர்கள் எம்மீது விழுந்ததினால் நவம்பர் மாதக் குளிர் கொஞ்சம் விலகிப்போனது. மெதுவாகக் கூட்டம் சேரத் தொடங்கியது. மாநகரக் கவுன்சில் தலைவர், மாநகரசபை உறுப்பினர்கள், ஆகாயப்படை அதிகாரிகள் எனப் பலரும் குழுமியிருந்தனர். நேரம் ஒன்றைத் தாண்டி விட்டிருந்தது. ஏன் தாமதமாகிறது என்று நாம் சிந்தித்த வேளை குறைடன் நகர மேயரின் வரவுக்காகக் காத்திருப்பதாக அருகிலிருந்தவர் கூறினார். சுமார் 1.15 அளவில் குறைடன் நகர மேயரும், உதவி மேயரும் வந்து சேர்ந்தார்கள்.
அனைவரும் அணிவகுத்து நிற்க, பிரித்தானிய விமானப்படை சிறியோர் பயிற்சிப் பிரிவினர் தமது அணிவகுப்பினை நடத்தினர். அதைத் தொடர்ந்து ஒவ்வொருவராக அணிவகுத்து நின்ற அங்கத்தினர்கள் தாம் கைவசம் கொண்டு வந்திருந்த மலர் வளையத்தினை அந்நினைவுத்தூபியின் அடியிலே வைத்துத் தலைவணங்கினர். அதைத்தொடர்ந்து அங்கு வந்திருந்த சுமார் முந்நூறு பொதுமக்கள் (நாம் உட்பட ) அந்த நினைவுத்தூபின் முன்னால் ஒவ்வொருவராகச் சென்று தமது அஞ்சலிகளைச் செலுத்தினர். இறுதியாக விமானப்படை அதிகாரியொருவர் சிறிய கவிதை ஒன்றைப் படித்தார். ஆங்கிலக்கவிதையின் இறுதி வரிகள்,
”இந்நினைவை உங்களோடு
எடுத்துச் செல்லுங்கள்
உங்களின் இன்றைகளுக்காக எமது
நாளைகளை நாம் தியாகம் செய்தோம்”
என்று முடிவடைகிறது.
இந்நிகழ்வினில் கலந்துவிட்டு வீடு செல்லும்போது நெஞ்சு கனத்தது. உலகம் சுதந்திரமாக இருக்க வேண்டும், உலகில் சமாதானம் நிலவ வேண்டும் என்பதற்காகத் தமது உயிரைப் பணயம் வைத்துப் போராடிய லட்சக்கணக்கானோர் தமது உயிரை மிகவும் இளமையிலேயே இழந்து போயிருக்கிறார்கள். அவர்களின் தியாகங்களில் நாம் இன்று வசதியான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்களை நினைந்து கொள்வதற்காக வருடத்தில் ஒருநாளை ஒதுக்கி அவர்களுக்கான கெளரவத்தை வழங்கி அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை முக்கியமாக்கும் ஐக்கிய இராச்சியத்தின் பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கும் முயற்சி உள்ளத்தைத் தொடுகிறது. இன்றைய எமது நல்வாழ்வுக்காகத் தமது அன்றைகளைத் தியாகம்செய்த அவர்களின் அளப்பரிய தியாகம் வானளாவி நிற்கிறது.
அது மட்டுமல்ல, முதலாம் , இரன்டாம் உலகமகாயுத்தங்களில் ஈடுபட்ட பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்களையும் அவர்கள் நினைவுகூர்வது உள்ளத்தை நெகிழ வைக்கிறது.
மீண்டும் அடுத்த மடலில்…
அன்புடன்
சக்தி சக்திதாசன்