புதுவரவு !
பா.ராஜசேகர்
வீட்டுக்கு புதுவரவு வாசமல்லி
என் பத்துவயது
மகனுக்கு அதிகமகிழ்ச்சி .
மண்வெட்டியைஎடுத்து
முன்வாசலோரம்
குழிதோண்டி பதியம்வைத்து
கொடுத்தப்பணத்தை வாங்கிக்கொண்ட
பூச்செடி விற்பவர்
புள்ளைமாதிரி பாத்துக்குங்க.
சொல்லிக்கொண்டிருக்கும்போது
மனைவிஉரமிட முல்லைக்கு மகன்
தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தான்.
வாசலின் இருமருங்கிலும்
செழித்துவளர்ந்தாள்
ஊஞ்சலாடிக்கொண்டே
புன்னகையால் வாசம்பரப்பி
என்வரவேற்பறையை
அலங்கரித்து மகிழ்வாக்கினாள்
வாசமல்லியின் செழுமையில்
எங்கள் மூவரின் பங்கும் இருந்தது.
இப்போது மகனுக்கு திருமணமாகிவிட்டது
வீட்டுக்கு புதுவாசம்தர
வந்திருப்பது மருமகள்.
மருமகளின் தந்தை என்கைகளை
பிடித்துக்கொண்டு
உங்கபுள்ளைமாதிரி பாத்துக்குங்க
எனக்கு புதிதாக எதுவும்தோன்றவில்லை
வாசமல்லியின்வாசம் வீட்டில்மட்டுமல்ல
எங்கள் மனதிலும் நிறைந்திருந்தது