Month: April 2018

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    I had simply to go to the meeting and make NAMASKAR to the audience as NARAYAN and wait and speech would come to me from some other source than the mind, as though it were dictated….And ever since all speech, writing ,thought, and outward activity have to come to me from the same source above the brain -SRI AUROBIDO….!

    ’’வாக்கும், எழுத்தும்.வரும்பார்,உனக்கது
    காகும்நா ராயணர்தம் கைங்கர்யம், -பாக்கொடு,
    சுண்ணாம்பும்,பச்சையும்(வெற்றிலை) சேர சிவப்பாகும்,
    கண்ணாம்பாள்(கண்ணன் & அம்பாள்-காளி) மேனி கலர்’’….கிரேசி மோகன்….!

    Share
  • பெண்களின் எதிர்காலம்

    திருமதி ராதா விஸ்வநாதன்

     

     

    போற்றுவதற்குரிய

    பெண்மை இன்று

    சூரையாடப்படுகிறது

     

    பச்சிளம் சிறுமிகள்

    சிதைக்கப்பட்டு

    புதைக்கப்படுகிறார்கள்

    சில காமுகரால்

     

    துள்ளித் திரியும் வயதில்

    கிள்ளி கசக்கி

    எறிவது ஏற்றதா

     

     

    தாயைக் காப்பான்

    தாய் மண்ணைக் காப்பான்

    பெண்ணைக் காப்பான்

    என தன் ஆண் மகவுக்கு

    மார் சொரிந்த

    தாயின் மார்பகத்தில்

    கொட்டுகிறது குருதி

     

    காக்கும் கரங்கள் இன்று

    காமத்திற்கெனவே

    எழுவதைக்காண

    ஈன்ற பொழுதை எண்ணி

    வெட்கி தலை குனிகிறது

    தாய்குலம்

     

    இதனால் தானோ

    பசுமை பூமிக்கு

    சுமையாகி விட்டது

     

    மண்மகள் தன்னையே

    புதைத்துக் கொண்டாள்

    தன் முகத்தை

     

    அடர்ந்த அழகு வனம்

    ஆச்சுது இங்கு

    பாலை வனம்

     

    தாய் குலத்தின்

    மானம் சூரை போவதால்

    வானம் கூட மறந்து விட்டது

    மழையை

     

    கருணை பாசம் நேசம்

    மறந்த நெஞ்சம் போல்

    மறந்து விட்டது

    நதிகளும் தன் கதியை

     

    எதிர்பார்க்கலாமா

    ஏமாறாமல்….

    Share
  • ஒழுகும் துளையை அடைக்கிறேன்

     மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    ++++++++++++

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    மழைத்துளி ஒழுகும் வீட்டுத்

    துளை  அடைக்க முனைகிறேன் !

    மழைநீர் எங்கு போய்ச்

    சேரு தென்று

    கவலை யுறும் என்மனம் !

    கதவு நெடுவே காணும்

    பிளவு அடைக்க முனைகிறேன் !

    அது எங்கு போய் 

    முடியு மென்று

    கவலை யுறும் என்மனம் !

    எனக்கு கவலை இல்லை ,

    என் எண்ணம் தவறாயினும் !

    நினைத்தது சரியே

    என்னும்

    இனத்தினைச் சேர்ந்தவன்  !

    என் எண்ணம் சரிதான் !

     

    அங்கு நிற்கும் மாந்தரைப் பார் !

    அவர் ஒத்துக் கொள்ளார் !

    வெற்றியும் அடையார் !

    எனது வீட்டு வாசல் வழி

    ஏன் நுழையார்

    என்று வியப்புறும் என்மனம் !

    இல்லத்து அறைகளைப்

    பல்வேறு

    வண்ணத்தில்  மாற்றுகிறேன் !

    எங்கு என்மனம் நேராய்ப் போகுதோ

    அங்கு நோக்கிச் செல்கிறேன் !

     

    இங்கும் அங்கும் திரியும் அற்ப

    மக்கள் பற்றித்

    துக்கப் படுகிறேன் !

    வரவேற் பில்லை அவருக்

    கென் வீட்டு

    வாசல் வழியே நுழைந்திட !

    நேரம் எடுத்துக் கொள்கிறேன்,

    வேண்டாத பல்வேறு

    காரியங் களுக்கு .

    ஆயினும்  அவற்றைத்

    தேர்வு செய்யப் போகிறேன்.

     

    மழைத்துளி ஒழுகும் வீட்டுத்

    துளை  அடைக்க முனைகிறேன் !

    மழைநீர் எங்கு போய்ச்

    சேரு தென்று

    கவலை யுறும் என்மனம் !

    Share
  • படக்கவிதைப் போட்டி 156-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. பார்கவ் கேஷவ் எடுத்த இந்த ஒளிப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படமாகத் தெரிவுசெய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    இருளும் ஒளியும் இணைந்த இந்த வண்ணக் கலவை, பல்வேறு எண்ண அலைகளை நம் மனக்கடலில் எறிகின்றன. காரிருளும் பேரொளியும் இணைந்து ஒரு நாளை அமைப்பதுபோல், மகிழ்வெனும் ஒளியும் இடுக்கண் எனும் இருளும் இணைந்தே நம் வாழ்வைச் சமைக்கின்றன. ஆதலால் ஒளியைப் போலவே இருளையும் இரசிக்கக் கற்றுக்கொள்வது மனித வாழ்வை மாண்புறச் செய்யும்.

    இனி, இந்த அழகோவியத்துக்குத் தம் கவிதையால் அணிசெய்யக் கவிஞர் குழாத்தை அழைக்கிறேன்.

    *****

    ”வெட்டவெளிக்கருமையை விரட்டத் திட்டமிட்டு வந்திருக்கும் வெண்ணிலவின் வெளிச்சம் மண்ணுலகின் மகுடம்! சந்திரனில் மாந்தன் கால்பதித்தபின்புங்கூட அண்டத்தின் ஆதி அந்தத்தை அவனால் அறியக் கூடவில்லை” என வியக்கிறார் திரு. ஏ.ஆர்.முருகன் மயிலம்பாடி.

    சந்திரபிம்பம்!!

    வெய்யில் மங்கி இரவுவர
    வெட்டவெளிக்கருமையை
    விரட்ட வந்து ஒளிபாய்ச்சும்
    வெண்ணிலவின்வெளிச்சம்
    மண்ணுலகின் மகுடம்!!!
    கண்ணுறங்கும் நேரத்திலே
    விண்ணிருந்து காட்சிதரும்
    வதனத்துச் சந்திரனின்
    வரவினுக்கேங்கி நின்ற
    நிலமகளுக்குள்ளாறே
    நிழல்படிமம் நிஜம் போல!!
    அதனியக்கம்கடவுள்ரூபம்!
    ஆகாயச் சேதி சொல்ல
    ஆனந்தமாய் ஓடி வந்து
    அறிவிக்கும் நிலவுக்குள்ளும்
    அடியெடுத்து வைத்தாச்சு!!
    ஆனாலும்அண்டசராசரத்தின்
    ஆதியென்ன? அந்தமென்ன??
    அறுதியிட இயலவில்லை…
    நூலிலை மாறாது இயங்குகிற
    நுட்பத்தினால் வையகத்தை
    வழிநடத்தும் இயற்கையன்னை
    எழில் வாழி!! எப்போதும்தப்பாது
    இயக்கும்இறை நீடு வாழி!!!

    *****

    வானத்து இளவரசன் விட்டெறிந்து விளையாடும் வண்ணத் தட்டு  இந்தச் சூரியன்! உயிர்கட்கு ஆதாரமான நீயே எங்கள் சாமி; உன் சேயே இந்த பூமி என ஞாயிற்றைப் போற்றுகின்றார் திருமிகு. சக்திப்ரபா.

    சூரியகாந்தி

    வானத்து இளவரசன்
    இங்குமங்கும் வீசி விளையாடும்
    வட்டத்தட்டு

    மஞ்சளாய்ச் சிதறிப் பூவலம் முடித்து
    செம்மஞ்சளாகிச் சாயம் போகும்
    சாகசக்காரன்!

    நீர் நிலைகளில் பிம்பமாகி மிதக்கும்
    குளிர்-நிலா

    வெண்மேகத் திரைச்சீலையின்
    பின்னால் கண்ணாம்பூச்சியாடும்
    மாயத்திரள்!

    மேகங்களுக்கு அப்பால் ஒளிரும் நம்பிக்கை

    வானெங்கும் தங்கமெனப் பரவியிருக்கும்
    பிரபஞ்ச ஜோதி!

    கருமேகங்கள் கடத்திப் போயிருக்கும்
    மெய்ப்பொருள்

    உதிப்பதும் பின் மறைவதுமாய்
    கேளிக்கும் காதலன்

    பரிமாணங்கள் பல அணிந்தாலும்
    உயிர்கட்கு ஆதாரமாகிச்
    சோறூட்டிச் சீராட்டும்
    நீயே எங்கள் சாமி – உன்
    சேயே இந்த பூமி!

    *****

    சூரியன் எனும்  வானக்கூரையின் வண்ணவிளக்கு, நம் கண்களுக்குப் படைக்குதே ஒப்பற்ற விருந்து. இருளும் ஒளியும் ஒருங்கே தெரிவது இறைவன் உறையும் மனத்தின் காட்சியோ? என்று இயற்கையை இறையோடு பொருத்திப் பார்க்கிறார் திரு. ஆ. செந்தில்குமார்.

    அவ்விடத்தில் தெரிந்த அந்தி வானம்….!

    வானக் கூரையின் வண்ண விளக்கு…
    காணக் கண்களுக்கு படைத்தவோர் விருந்து…!
    கொண்டல்கள் நுரையாய்ச் செங்கடல் வானில்..
    தென்படும் காட்சி தெவிட்டாத அமுது…!

    அலைபேசிக் கோபுரமொன்று ஒய்யாரமாய் நின்று…
    தொலைவானும் தொட்டுவிடும் தூரமேயென்குது போலும்…!
    நிலையாய் நிற்கின்ற காற்றாலை விசிறிகள்…
    அலையலையாய் வீசும் காற்றுக்கேங்குது போலும்…!

    கடல்போல் தெரிந்த ஏரிகள் குளங்கள்…
    சடம்போல் மனதினைக் கொண்ட மனிதரால்…
    பரப்பில் சுருங்கிக் குட்டையாய்க் குறுகி இருக்கின்றபோதும்…
    நிறைவாய்த் தெரிந்தது ஆதவனின் பிம்பம்…!

    செம்மையும் கருமையும் ஒருங்கே தெரிவது…
    இம்மையும் மறுமையும் இங்குதான் என்குது…!
    இருளும் ஒளியும் ஒருங்கே தெரிவது…
    இறைவன் உறையும் மனமே என்குது…!

    *****

    ”தண்ணொளி வீசும் வெண்ணிலவே! கார்முகில் உனை மறைத்தாலும் அதிலும் காட்டுகிறாய் ஓர் எழில்! காதலர்களுக்கு நீயே ஓவியம்; உனைக்கண்டு அவர்கள் படைப்பர் காதல் காவியம்” என்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

    வெண்ணிலவே!

    மயக்கும் மஞ்சள் வெய்யில் பரவி நின்றதே
    தன் ஒளியை நீரிலும் மேகத்திலும் பாய்ச்சுதே
    கருமேகங்கள் இடையே மறைந்து காணுதே
    தண்ணொளி வீசி வெண்ணிலவாய்க் காட்சியளிக்குதே!
    இனிய மாலைப்பொழுதில் தென்றலாய் வீசுகின்றாய்
    காதலர்களுக்கு இன்ப உணர்ச்சியை ஊட்டுகின்றாய்
    எங்களுக்காகக் காற்றாலை இயக்கி மின்சாரம் அளிக்கின்றாய்
    நாட்டிற்கும், வீட்டிற்கும் ஒளிதந்து உதவுகின்றாய்!
    கைம்மாறு கருதாது இனிய இரவைக் குளிர்விக்கின்றாய்
    கருமுகில்கள் உன்னை மறைத்தாலும் ஒளி தருகின்றாய்
    மேகங்கள் இடையே எழில் ஓவியமாய்க் காட்சியளிக்கின்றாய்
    நீரில் உன்முகம் ஒளி பிம்பமாய்த் தெரிகின்றாய்!
    அந்தி வானமே இரவின் எழிலோவியம்
    உன்னைக் கண்டு காதலர்கள் பாடுவதோ காதலோவியம்
    தாரகையோடு இருந்து தனித்தே அழகாய்க் காண்கிறாய்
    காதலியை வர்ணிக்க நீயே எடுத்துக்காட்டாய் இருக்கின்றாய்!

    *****

    ”மனத்தில் ஏற்றுவோம் மனிதமெனும் தீபம்; அதில் பொசுங்கிப் போகட்டும் சுயநலமெனும் பேதம்” என்று நல்லுரை நவில்கின்றார் திரு(மிகு?). ஜீவா நாராயணன்.

    மனிதமென்னும்  தீபம்
    எங்கும்  உதிக்கின்ற  சூரியன் 

    ஒன்றே தானாகும்
    எங்கும்  விரிகின்ற  பூமி 
    ஒன்றே  தானாகும்

    உறக்கங்கள்  வேறு 
    கனவுகள் ஒன்றே  தானாகும்
    இலக்குகள்  வேறு 
    இலக்கங்கள் ஒன்றே  தானாகும்
    மொழிகள்  வேறு 
    மனங்கள் ஒன்றே  தானாகும்

    இங்கு  எல்லா 
    உயிர்களும்  ஒன்றே
    இந்த  ஒற்றுமை
    காணவதே  நன்று

    மனசிலே   ஏற்றுவோம்
    மனிதமென்னும்  தீபம்
    இதில் பொசுங்கிப்போகும் 
    சுயநலமென்னும் பேதம்

    உதிக்கட்டும்  நாளை
    புதிதான விடியல்!
    பிறக்கட்டும்  நாளை
    முறையான  மாற்றம்! 

    *****
    மின்சாரம் இல்லா நிலவுலகம் பெரும் விசாரம் தருகின்றது மாந்தர்கட்கு! அவ்வேளையில் ஏற்படும் அல்லல்களை நகைச்சுவையாகப் பட்டியலிட்டு நம்மை இரசிக்கவைக்கிறார் திரு. சி. ஜெயபாரதன்.

    கனல் சக்தி, எரிசக்தி, மின்சக்தி 

    வீட்டில் மின்விளக்கு யாவும்
    கண்மூடி விட்டன!
    தேர்வுக்குப் படிக்க முடியாது!
    மின் விசிறியும்
    விழித்துக் கொண்டு நிற்கிறது!
    எழுந்து கொண்ட பேபி
    அலறல்
    செவிப்பறை கிழிக்குது!
    மிக்ஸிக்கு
    மூச்சுப் போய் விட்டது!
    மாவரைக்க
    முடியாமல் போச்சு!
    மின்சக்தி இன்றேல், வீட்டில்
    நாட்டில் எல்லாம்
    வேலை நிறுத்தம் தான்!
    சூரியன்
    ஊழியம் செய்து
    விடை பெற்றுப் போகுது!
    காற்றாடி களுக்கும்
    கை ஓய்ந்து
    கரன்ட்டில்லையே
    பராபரமே!
    ஓலை விசிறி எடப்பா !
    அரிக்கேன்
    விளக்கைத் துடைப்பா!

    *****

    ”பணிமுடித்துத் தன் ஒளிமுகத்தை நீர்நிலைக் கண்ணாடியில் பார்த்துப் பரவசமடையும் கதிரவனே! வேலையில்லாச் சோம்பேறி மனிதர்கள் வாழ்ந்திட வழிசொல்லுவாய்” என்று வினவுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    நீயே சொல்…

    காலையில் கிழக்கே பணிதொடங்கி
    காசினி முழுதும் ஒளிகொடுத்து,
    மாலை வானை அழகாக்கி
    மண்ணில் நீர்நிலை முகம்பார்த்தே
    மேலைக் கடலில் பணிமுடிக்கும்
    மேன்மை மிக்கக் கதிரவனே,
    வேலை செய்யா மனிதரவர்
    வாழ்ந்திட வழியைச் சொல்வாயே…!

    *****

    அந்தி அத்தமிக்கும் நேரம், சந்திரனும் சூரியனும் காதல் புரியும் நேரம்! அக்காதலர்களை வரவேற்க விண்மீனும் நீரிலிடும் கோலம் என்று வானிடை நிகழும் வண்ணக் காட்சிக்கு அழகாய் எண்ணத் தூரிகை தீட்டுகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    அந்திப்போது..!

    அந்திசாயும் நேரத்தில் மட்டுமே வருவாள்
    ……….ஆதவனைத் தேடும் பணிமேற் கொள்வாள்..!
    மந்திரம் செய்வித்தது போலவன் மறைவான்
    ……….மாற்றமிலாமல் நிகழும் நித்தமிது இயற்கை..!
    சந்தி ரோதய மென்றவளை அழைப்போம்
    ……….சூரிய அஸ்தமன மென்றவனைக் கூறுவோம்..!
    சந்திரனும் சூரியனும் காதல்செய்யும் நேரம்
    ……….செவ்விதழ் போலக் கடலேழும் காட்சிதரும்..!

    காலையில் ஆதவனும் இரவினில் சந்திரனும்
    ……….காலமாற்றம் செய்கின்ற காதலர்கள் ஆவரோ..!
    மாலைத் தென்றலும் மலர்ச்சோலை புகுந்து
    ……….மணம் வீசும்! அக்காதலர்களை வாழ்த்துதற்கு..!
    கோலமிட்டு அவர்களை வரவேற்பது போல்
    ……….கடலில் விண்மீனும் தண்ணீரில் புள்ளியிடும்..!
    பாலமாக அமையும் அங்கே அந்திப்போது
    ……….பாங்காக அவர் களிருவரும் சந்திப்பதற்கு..!

    *****

    ”காற்றாலைகள் கவரி வீச, கார்முகில்கள் தாரெடுத்து வாழ்த்திவர, மக்களும் மாக்களும் தொழுதெழ, நித்தமும் நடக்கும் காய்கதிர்செல்வனின் நித்திரை ஒத்திகை இது!” என்று புளகிக்கிறார் திருமிகு. அவ்வைமகள்.

    ஒருகாலமன்றிது நித்திய நாளீட்டு நித்திரைக்கலை ஒத்திகை!!
    கருத்திரையுமொளித்திரையும் ஒருமியே விழித்து உறைந்திடுமப்போதிலே
    பருத்திரையுள் புகுந்த கதிர் நீரிலுறை விளம்பிட நித்திலத்துகிலாகுதோ?
    மேருவெனவசையாமல் நிற்கிற விசிறிகாள் சாமரமங்கு வருதோ?
    மருமலரெடுத்துவோ நெடியமுகிலேழும் தாரேந்தி வாழ்த்தும் வலமோ?
    பெருமண்ணே விணாதியாய் மெய்மொழிக்கூறுதோ திருவிக்ரமக்கோபுரம்?
    பருதிமதி பருதியும் பாரும் கடல்விசாலமும் பூராயன் இல்விலாசமோ?
    திருமருகத் தாவரப்பட்சியும் மாக்களும் மக்களும் தொழுதெழுந்து விரைக!
    ஒருகாலமன்றிது நித்திய நாளீட்டு நித்திரைக்கலை ஒத்திகை!!

    *****

    இருளும் ஒளியும் கலந்த இக்காட்சிக்குக் கவிஞர்கள் தம் கற்பனையால் ஒளியூட்டி அற்புதமாய்க் கவி படைத்துவிட்டார்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையென நான் தேர்ந்தெடுத்தது…

    இரவா…? பகலா….?
    என வியக்கும்
    மயங்கொலிப்
    பிழை….
    கார்மேகத்தின்
    மடியில்
    கதிரவனின்
    கிரணங்கள்
    கண்ணுறங்கும்
    தாய்மைக் கோலம்…!
    இரவுக்கும் பகலுக்கும்
    இடையிலான
    எழிலோவியம்…!
    வான்மேகம்
    புகையுண்ட
    ஓவியமாய்
    எழில்கொண்ட காட்சி…!
    விண்மீனை
    வரவேற்கும்
    அந்தி வானத்தின்
    சிவப்புக் கம்பள
    வரவேற்பு!

    இருளும் ஒளியும் இணைந்து இரவா? பகலா? என மருளவைக்கும் இக்காட்சியில், வான்மேகம் கைபுனைந்து இயற்றாக் கவின்பெரு வனப்பாய்க் காட்சிதர, விண்ணிலே தோன்றவிருக்கும் உடுக்களுக்கு அந்தி வானம்  செந்நிறக் கம்பளம் விரித்து வரவேற்புக் கொடுக்கின்றது என்று சுவையாகப் பாடல் புனைந்திருக்கும் திருமிகு. டி. திலகவதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180416 Tulasi priyam -watercolour-lr-A4

    சீதக் களபமும், ஸ்ரீவத்ஸ மச்சமும்.
    போதமர்(போது -மலர்) மங்கையும், பூந்துழாயும்(துளஸிப் பிரியர்), -வாதிடும்
    வண்ணம் இடமின்றி ,வாய்த்தமணி மார்பனை
    கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!

    ”மாடத் திலேதுளஸி மாடத் திலேகண்ணன்
    மாடத்தன் கால்மேய, மன்னனவன் -சூடி
    திரியாய் மணந்தாள், திருவில்லிப் புத்தூராள்
    பிரியத்தில் உட்கார்ந்தார் பார்’’….கிரேசி மோகன்….!

    ஆண்டாள் ‘’திருத்துழாய்(துளஸி) வனத்தில்’’ பெரியாழ்வாரால்
    கண்டெடுக்கப் பட்டவள்…..!
    சுகந்த துளசி சிலிர்க்க வலிமை
    மிகுந்த இருதோளில் பூணும் -முகுந்தன்
    நிதர்ஸனம் என்று நடப்போர் வழியை
    சுதர்ஸனம் காக்கும் சுழன்று….!

    Share
  • படக்கவிதைப் போட்டி (157)

     

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (21.04.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • துடிப்போடதாண்டா பாயும்

    ஜீவா நாராயணன்

     

    அழுத்துப்  புரண்ட  நாடு

    இப்ப எழுந்து நிக்கப்போது

    எதிர்த்து நின்ற தலைவர்களெல்லாம் 

    இனி  தெருவில் நிற்கத்தாண்டாபோது

     

    உறங்கி  கிடந்த   விழிகள்

    இன்று  விடியல்  காணப்போது 

    இனி  எதிரி  கூட்டமெல்லாம்

    உறக்கம்  இழக்க  போது

     

    இழக்க இழக்க தானே

    எல்லாம் இழந்து நின்னாச்சி

    அட கோமணத்தையும் தாண்டா

    தலைநகரில் இழக்க வேண்டியதாச்சி

     

    உழுது புரண்ட தேகம்

    இன்று அழுது புலம்பலாச்சி

    கண்ணீர்  புரண்டு ஓடி 

    மண்ணும்  கண்ணும்   வறட்சியாகிப்போச்சி

     

    மலையை தாண்ட உடைச்சி

    என் முப்பாட்டன்  மண்ணாக்கினாண்டா

    அந்த  மண்ணை  உழுதுதானாடா

    என்  பட்டன் வளமாக்கினாண்டா

     

    அந்த வளமான காட்டை

    எங்க  அப்பன் காப்பதினாண்ட

    அதை களவாட நியும்வந்த

    உன் கைகால்கள் இடம்மாறிப்போகும்

     

    இது எங்கள் பிடிவாதமாகும்

    நாங்க  உலகையாண்ட  ராஜராஜன்  இரத்தம்

    கொஞ்சம் துடிப்போடதாண்டா பாயும்

    Share
  • கண்ணீரும் கலக்கட்டும்விடு

    ஜீவா நாராயணன்

     

    விடு  விடு

    நீரை  திறந்துவிடு  – அது 

    உங்கள்  காவேரியே  ஆனாலும்

    அணைகளில்  இருந்து  திறந்துவிடு

     

    மகிழ்ச்சியில்  கரை 

    புரண்டோடவிடு

    எங்கள்  மண்ணை 

    தழுவவிடு

    ஆனந்த  கண்ணீரை 

    சிந்தவிடு

     

    எங்கள்  பயிரும் 

    செழிக்கட்டும்விடு

    எங்கள்  உள்ளமும் 

    குளிரட்டும்விடு

     

    எங்கள்  வயலுக்கு 

    தாய்ப்பால்  கொடு

    எங்கள்  விவசாயிக்கு 

    உயிரை  கொடு

     

    சுயநல  எல்லைகள் 

    உடைத்துவிடு

    மனிதநேய  எல்லைகள் 

    பரவவிடு

     

    விடு  விடு

    நீரை  திறந்துவிட்டு

    எங்கள்  கண்ணீரும்   – அதில்

    கலக்கட்டும்  விடு

    Share
  • ‘முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு ‘ சிறுகதைத் தொகுப்பு – ஒரு வாசகர் பார்வை

    -ஆரூர் பாஸ்கர்

    டிஸ்கவரி புக்பேலசின் வெளியீடான அகரமுதல்வனின் “முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு”  வழியாக ஈழத்து இலக்கியத்துக்குள் நுழைந்திருக்கிறேன்.

    தொகுப்பில் மொத்தமாகப் பத்து சிறுகதைகள்.  இலங்கைப் போருக்குப்பின்னால் எழுதப்பட்டு வெளிவந்திருக்கும் இந்தத் தொகுப்பு முழுவதுமாக ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிடக்கூடும் ரகமில்லை. நின்று நிதானித்துவாசிக்க வேண்டியது.

    ஈழப் போர் கதைகளின் மைய நாதம்.  ஒரு தலைமுறை தாண்டிநடந்த போர். அதைஒட்டி ஒவ்வோரு கதையும் மனிதத்தை, மனித வாழ்வின் இருப்பை, அரசியலை வெவ்வேறு அம்சங்களில் பேசும் கனமானதொரு படைப்பு. தொகுப்பு அகத்தையும் புறத்தையும் சேர்ந்து பேசினாலும், அகம் நெகிழச்செய்கிறது.

    ஒவ்வொரு கதையிலும் போரின் கொடுமையை, வலியை ஆர்ப்பாட்டமில்லாமல்  எழுத்தின் வழியே வாசகனுக்குக் கடத்திக்கொண்டே இருக்கிறார்.

    “…

    நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்தாபாவின் சிறிய கண்கள் மூடித்திறக்கின்றன. நினைவுக்கு துன்பம் பற்றிய கவலையில்லை. அது இறந்த காலங்களையும் , நிகழ்காலங்களையும் கண்ணீரால் தொடர்புபடுத்துகிறது. … (பக்கம்-65)”

    எனும் வரிகளை வாசிக்கையில் மனதுக்குள் பல உணர்வலைகள் மேலெழும்பி மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது.  வாசிப்புதேர்ந்த கவிஞனுடன் கதைசொல்லியும் ஒரே ஒத்திசைவில் கைகோத்து எழுதிய உணர்வைத் தருகிறது.

    “திருவாளர் ஞானசம்பந்தன்” கதையில் ஒரு மறக்கமுடியாத ஒரு உரையாடல்…

    ஜீவிதா, நாம் தமிழ்மொழி பேசக்கூடிய அகதி இனமா?

    இல்லை நந்திதா, நாம் தமிழ்மொழி பேசுவதால் அகதி இனம்‘ என்பதில் இருக்கும் உண்மை சுடத்தான் செய்கிறது.

    அதுபோலப் போர்வலியை, வாதையை, காதலை எனச் சகலமானதையும் கவித்துவமாகச் சொல்லவேண்டும் எனும் உணர்வு எதுவுமின்றி  ஏதோ ஓர் உணர்வு ஆட்கொண்டு எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது.

    “…

    நிலத்தின் வெளி முழுவதும் மின்மினிப்பூச்சுகளாய்க் குண்டுகள் வெளிச்சத்தோடு பறந்துதிரிந்தன. நம்மைக் காப்பாற்றிய மரங்கள் முறிந்து விழுந்தபடியிருந்தன. துவக்குகளைப் போல நள்ளிரவுகளும் யுத்ததிற்கானதே. ( பக்-57)

    எனும் வரிகள் வழியாக யுத்தத்தை நம் கண்முன் நிகழ்த்திக்காட்டுகிறார். அமுதைப் பொழியும் நிலவே என இரவை  காதலியுடன் சேர்ந்திருக்க வேண்டிய இளைஞன் போர்முனையில் அவளைப் பிரிந்து துவக்குகளைப் போல நள்ளிரவுகளும் யுத்தத்திற்கானதே என்பது சங்ககாலத்தை நினைவு படுத்துகிறது.

    “…

    எனது கையினைப் பற்றியிருந்த அவள் விரல்களில் கசிந்த அன்பின் சங்கதிகள் விரியன்பாம்பைப் போல என்னைக் கொத்துகின்றன.

    நான் சாவுக்கு ஆயத்தம் பண்ணப்பட்ட உயிரைச் சுமக்கும் உடலைக் கொண்டவன். அவள் உயிரும் என்னிடமே இருக்கிறது. நிலமதிபக்கம்-57″

    இதையெல்லாம் வாசிக்கும் போது ஒரு மனிதனுக்குள் இத்தனை உணர்வுகளா? என மலைக்க வைக்கிறார். தொகுப்பில் அனுபவங்கள் எழுதப்படுவதால் அதில்  வழமையான சுவாரசியங்களை எதிர்பார்ப்பது நியாயமில்லை என என்னை நானே தேற்றிக்கொள்கிறேன். அதுபோலப் பல சொற்கள் தமிழாக இருந்தாலும்  ஈழத்து வழக்குச் சொற்களை புரிந்து கொள்வதில் தமிழ்நாட்டு வாசகர்களுக்குச் சிரமங்கள் இருப்பதால்,  அதற்கு  இணையான சொற்களை அந்தந்தப் பக்கங்களில் அல்லது பின்னுரையில் தந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஐரோப்பாவில் வசிக்கும் ஈழத்து நண்பர்களின் உதவியால் நான் அறிந்துகொண்ட சில ஈழத்துச் சொற்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

    சப்பாத்துக்கால்களால் அடித்தான்  – சூ (கால் பாதணி) அணிந்த கால்களால் அடித்தான்.
    துவக்கு என்பது துப்பாக்கி
    சன்னங்கள் எனில் ஷெல், துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டுகள்
    பெடியன் எனில்  ஆண் பிள்ளைப்பசங்க.
    குசினி எனில்  சமையலறை (கிச்சன்)
    அதுமட்டுமில்லாமல் அகரமுதல்வனின் எழுத்து  மேலோட்டமாக இல்லாமல்வாசிக்கையில் வாசகனின் கவனத்தை முழுமையாகக் கோரும் எழுத்து.

    எனக்கு ஈழத்து எழுத்தின் முதல் பரிச்சயம் என்பதால் கூட அப்படித் தோன்றி இருக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் தவறவிடாமல் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய தொகுப்பு.

    முதல் பதிப்பு என்பதாலோ என்னவோ எனக்குப்  பல எழுத்துப்பிழைகள் கண்களில் பட்டன. அட்டையில்  “முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு” எனச் சரியாக இருக்கும் ஒற்று நூலின் உள்ளே ஓவ்வோரு பக்கத்திலும் விடுபட்டு போனதே ஒரு பதமாக இருக்கும்.

    *****

    தலைப்பு: முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு
    நூலாசிரியர்: அகரமுதல்வன்
    பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்
    விலை: 100
    பக்கங்கள்:111
    ISBN:978-93-8430-210-8

     

     

    Share
  • இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 11 – உயிரிகள் உயிரற்றவற்றை விட பலம் மிக்கவர்கள் எனலாமா?

     

     

    அவ்வைமகள்

     

    வள்ளலார், ஸ்டீவ் ஜாப்ஸ் இருவருமே மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர்கள்; பிறவியிலேயே உண்மையான ஆய்வுணர்வு கொண்டவர்கள் எவரும், கடந்ததையும், கடப்பதையும், கடக்கப்போவதையும் அக்கு வேறு ஆணிவேறாய் நோண்டித் துருவி, பகுத்து, வகுத்து, துண்டங்களாய்க் கூறுபோட்டு, பிறர் காணுமாறு அவற்றை காட்சிக்கு வைத்து விடுவார்கள். இந்த ஆய்வுத்திறனால், அவர்கள் போற்றப்பெறுவது உண்டு. அனால் வெகு பெரும்பாலும் இவர்களது ஆய்வுகள் அவர்கள் வாழும் காலத்தில் உணரப்படாது – போற்றப்ப்படாது என்பது மட்டுமல்ல இகழ்வுக்கும் தூற்றுதலுக்கும் அவர்கள் இலக்காகவதும் ஆகும். வெகு பின்னாளில் அவர்கள் மறைவுக்குப்பின் மட்டுமே அவர்களது சிந்தனா சக்தியும், அதனால் அவர்கள் எத்தனை தீர்க்கதரிசகளாக இருந்தனர் என்பதும் அவர்களை பட்ட கட்டமும் நட்டமும், முழுமையும் வெளிவரலாகும். இவ்வகையில் வள்ளலார், ஸ்டீவ் ஜாப்ஸ் இருவருமே அவர்கள் வாழ்ந்தக் காலம் கடந்தபின் உணரப்படுவது காண்க.

    ஸ்டீவ் ஜாப்ஸ் மேற்கொண்ட ஆய்வு பற்றி சிலபல நாம் அறிவோம் எனினும், அதுபற்றி விவரமாக விரைவில் பேச இருக்கிறோம். முதலில் வள்ளலாரின் ஆய்வுச் சிந்தையைச சற்றே கவனிப்போம்.

    சென்ற பகுதியில் நாம் கண்ட சமயம் என்பது யாது என்கிற ஆய்வைத்தொடர்ந்து, சமயமெனும் அறிவியல் எத்துனை உயர்வானது – எத்தனைத் திடமானது – எத்தனை வேரோட்டம் கொண்டது – எத்துணை நீரோட்டம் கொண்டது, எத்தனை உயிரோட்டம் கொண்டது என்பதை இப்போது கவனிப்போம்.

    இந்த அலசலை எளிது படுத்துவதற்காக, நாம் வாழும் பூமியின் சூரிய குடும்பத்தை மட்டும் இப்போது சிந்திப்போம். நமது சூரிய குடும்பம் பால்வண்ணப் பாதை எனப்படும் நாட்டிய மேடையில் அமைந்திருக்கிறது. இந்தப்பால்வண்ணப் பாதையில் மட்டும் 200 பில்லியன் அதாவது 2000 கோடி சூரியன்கள் உள்ளன என்பது ஒரு அறிவியல் மதிப்பீடு. இத்தனை சூரியன்களில், நமது சூரியன் ஒரு சூரியன் அவ்வளவே. நமது சூரிய குடும்பம் என்பது ஞாயிறு என்று நாம் அழைக்கும் சூரியனை மையமாக வைத்து, ஒன்பது கோள்கள் தன்னில்தான் சுழன்றபடி, சூரியனை வலம் வந்து கொண்டிருக்கின்ற ஒரு குடும்பமாகும். இந்தக் கோள்களை இருவகையாகப் பிரிக்கலாம்: உடுக்கோள் பட்டைக்கு (Asteroid Belt) உள்ளீடான கோள்கள் மற்றும் உடுக்கோள் பட்டைக்கு வெளியீடான கோள்கள் என்று.

    உடுக்கோள் பட்டை புதனுக்கும் வியாழனுக்கு இடையில் உள்ளது. பெரும்பாலான உடுக்கோள்கள் இந்த உடுக்கோள் பட்டையில் சுழன்று கொண்டிருப்பினும், லட்சக்கணக்கான உடுக்கோள்கள், வியாழனின் வட்டப் பாதையிலேயே பொருந்தியவையாய், வியாழனுக்கு கிழக்கே 60 டிகிரியிலும், மேற்கே 60 டிகிரியிலும் பொருந்தியிருக்கின்றன. ஆக, நம் சூரிய குடும்பத்தில் நாம் காணுவது என்னவென்றால், புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், உடுக்கோள் பட்டை, வியாழன், சனி, நெப்ட்யூன், ப்ளூட்டோ ஆகிய கோள்கள் ஒரு சரஅடுக்காய் தம்மைத் தகவமைத்துக்கொண்டு சூரியனைச் சுழன்றபடி சுற்றிவருகின்றன என்பதே. இந்த அமைப்பில், ஒவ்வொரு கோளுக்கும், சுழலுதல் (spinning on its own axis) மற்றும் சுற்றுதல் (revolution), எனும் இருபெரு இயக்கங்களும், எடை, அளவு, வேகம், ஒளி, எத்தனைத் துணைக்கோள், சூரியனிலிருந்து எத்தனைத் தொலைவு ஆகிய ஆறு அளவீடுகளுமாக எண்குணங்கள் உள்ளன.

    சிறிது காலத்திற்கு முன்பு -ப்ளூட்டோவை, கோள் அழைத்த அறிவியல் இப்போது அது கோள் இல்லையென்று தன்னைத் தானே குழப்பிக்கொள்ளும் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இந்திய அறிவியலோ அன்றே ப்ளூட்டோவை கோள் என்று மட்டுமே உறுதி செய்தது; அதனை இன்றும் என்றும் கோளாகவேயே நிலைநிறுத்தி வருகிறது.

    ராகு- கேது என இரட்டைக்கோள்களாய் நெப்ட்யூனையும் ப்ளூட்டோவையும் காட்டிய இந்தியப் பண்டை அறிவியலை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் புதுப்புது உவகை பிறக்கும். அதுபோன்றே இன்னொரு அறிவியல் குழப்பத்தையும் அன்றே, பாரதத்தின் பண்டைய விஞ்ஞானம் தெளிந்தேற்றியது; அதுதான் நிலவு. பூமியைச் சுற்றி வருவதால் நிலவை ஒரு துணைக்கோள் என்று கொள்வது பொருத்தம் எனினும், அது உற்பத்தியான விதத்தை வைத்துப் பார்த்தால் அதனை ஒரு கோள் எனக் கொள்வதே தகும் என்பது பாரத விஞ்ஞானத்தின் பார்வை. ஏனெனில், பிற கோள்களின் துணைக்கோள்கள் உருவானது போல நிலவு உருவாகவில்லை

    முதலில் தோன்றிய பூமி (சிறிதாய் இருந்தது), ஒரு வலிய உடுக்கோளால் மோதப்பட, அப்போது அவ்வுடுக்கோள் பூமியுடன் இணைந்து, பெரிதாகியது. தொடர்ந்து அது பிளவுற்று நிலவாகவும் இப்போதைய பூமியாகவும் மாறியது. எனவே ஒரே அன்னையின் இரு குழந்தைகள் என்றவாறு இருப்பதால் நிலவை, கோளாக பாவித்தது பாரத விஞ்ஞானம். பிற கோள்களின் துணைக்கோள்கள் வேவ்வேறு உருவாகின என்றால் பெருவெடிப்பின் போது, துண்டங்களும், துகள்களும், வாயுக்களும் சேர்ந்து லட்டு உருண்டை போல மாறி அவை உருவாகின.

    இது நிற்க.

    மேற்கண்ட விளக்கித்திலிருந்து, கோள்களை ஆதிமூலத்தின் பகுதியாய் எடுத்துக்கொள்வது பொருத்தமாய்த் தெரிகிறது அல்லவா?

    இவ்வகையில் தொடர்ந்து சிந்தனையை செலுத்தும்போது நமக்குப் பொறிதட்டுவது கோள்கள் வெற்றுப் பொருட்கள் அல்லவே என்பதே! கோள்களில் பலபொருட்கள் உள்ளனவே! மலைகள், பள்ளத்தாக்குகள், பாறைகள், மண், கல், தூசி என ஓராயிரம். பூமியில் கூடுதலாக கடல்கள், நதிகள், தாவரங்கள், விலங்குகள் எனப் பல்பல்லாயிரம்!

    ஒரு கோள் இயங்குகிறது என்றால் அக்கோளில் இருக்கிற பொருட்களும் தாமே இயங்குகின்றன என்பது அடிப்படை. எனவே கோள்கள் ஆதிமூலத்தால் இயங்குவன என்றால், கோள்களாம் பருப்பொருட்களுக்குள் உள்ள பொருட்கள் யாவுமே ஆதிமூலத்தின் இயக்கத்தில் தானே இயங்குகின்றன!

    இப்போது பொருட்களைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம்:

    பொருட்கள் இருவகைப்படும் என அறிவோம்: உயிருள்ளவை; மற்றும் உயிரற்றவை. உயிரியா இல்லையா என்கிறது அல்லாமல் இவ்விரண்டையும் பார்த்தால், மூலத்தின் -அதாவது கோளின் இயக்கமன்றோ இரண்டிலும் உள்ளது. உயிரியின் இயக்கம் பார்க்க ஒருவகையாக இருக்கலாம்; உயிரற்றதின் இயக்கம் பிறிதொரு வகையாய் இருக்கலாம்; எனினும் இரண்டுமே ஒரு மூலத்தின் பிள்ளைகள் தாமே! அந்த மூலம் எது? அதுதான் கோள் – அந்தக்கோள் தான் இரண்டின் வசிப்பிடமுமே! அந்தக் கோளின் தரையிலேதான் உயிரிகளும் உயிரற்றவைகளும் நின்றும், அமர்ந்தும், கிடந்தும், பறந்து, ஊர்ந்தும், நகர்ந்தும், பறந்தும் வசிக்கின்றன. ஆக, தரை அல்லது நிலம் என்கிற ஆதாரமின்றி உயிரோ உயிரற்றவையோ எக்கோளிலும் வசிக்க இயலாது என்பது தானே உண்மை!

    சலனம் என்பது உயிரிகளின் இயக்க அடையாளம் என்கிறது அறிவியல். அதில் விலங்கினங்களுக்கு ஓட்டுமொத்தமான இடப்பெயர்வு சலனம் உண்டு என்றும் (இதனை locomotion என்பர்) தாவரஙகளுக்கு ஒட்டுமொத்த இடப்பெயர்வு சலனம் இல்லை என்பதும் ஒரு அறிவியல் புரிதல். சலனத்தை வைத்துக்கொண்டு உயிருள்ளது உயிரற்றது என வகைப்பாடு நிகழ்த்திய அறிவியல் உயிரிகளுக்கு வளர்சிதை மாற்றம் என்று ஒன்று இருப்பதாகவும் உயிரற்றவற்றுக்கு வளர்சிதை மாற்றம் இல்லை என்றும் கூறுகிறது.

    அப்படியென்றால் உயிரற்றவை வளர்வதில்லையா சிதைவதில்லையா? உயிரற்றவை சலனமிடுவதில்லையா? என்கிற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கு, இன்றிய நவீன அறிவியல் உயரற்றதென வகைப்படுத்தியிருக்கும் காற்று, நெருப்பு, நீர் ஆகியவனற்றைக் கொண்டு ஆராய்வோம்.

    நீரும், நெருப்பும், காற்றும் சலனமுடையவை – அதுவும் அவை சுயமான சலனம் உடையவை – நிரந்தர சலனம் உடையவை – அவை ஒருக்காலும், உயிரிகளைப்போல உறங்கி ஓய்வெடுப்பவை அல்ல. மேலும், ஒரு உயிரியை உயிரியாய் அடையாளம் காட்டுபவை சூடும், நீரும், காற்றும் மட்டுமே! ஒருவனின் சுவாசம் நின்றுவிட்டதென்றால், அவனின் சரீரம் நீரைப்பருகி, நீரைச் சிறுநீராய் வெளியேற்றவில்லையென்றால், அவனின் உடல் சூடின்றி சில்லிட்டு விட்டதென்றால், அவனை உயிரற்ற ஜடம் என்று தானே அழைக்கிறோம்?

    ஆக, ஒரு உயிரிக்குள் நீரும், காற்றும், சூடும் சலனமிடவில்லையென்றால் அந்த உயிரி உயிரற்றதாய் கொள்ளப்படுகிறது. எனவே காற்றும், நீரும், சூடும் உயிர்மைத் தன்மை உடையன என்று கொள்வதுதானே பொருத்தம்? உயிருக்கு உயிர் அளிப்பவை என்ற வகையில் சூடும், நீரும், காற்றும் முதன்மை உயிரிகள் ஆகின்றன. நாம் உயிர்கள் என்று தம்பட்டம் அடித்துச் சொல்லும் அசடுகள் உண்மையில் உயிரிகள் அல்ல என்பது இப்போது தெற்றென விளங்குகிறது அல்லவா?

    அதேபோல், நீரும், நெருப்பும், காற்றும் என்றும் வளர்பவை தேய்பவை – இவையும் வளர்சிதை மாற்றங்கள் தாமே! காற்றையும், நெருப்பையும், நீரையும் உயிரித்தன்மை கொண்டவை என்று சொல்ல என்ன தடை? அதே போல உயிரிகளுக்கு வசிப்பிடமாய் இருப்பதால் நிலமும் உயிர்த்தன்மை உடையதே!

    சூடும், நீரும், காற்றும் ஆகாயத்தில் வியாபிப்பவை, ஆகாயத்தில் உற்பத்தியாபவை. ஆகாயம் என்பது கோளின் எல்லாத் திசைகளிலும் ஒட்டுமொத்தமாய் கபடமற்று தழுவிக் கிடப்பது. வெளி, கோளைத் தழுவும் சங்கமத்தின் சாட்சியே ஆகாயமென்பது. ஆக, ஆகாயமென்பது, கோளில் பொருத்தப்பட்டுள்ள வெளியின் வாசல். எனவே உயிர்மைப்பொருட்களின் பிறப்பிடம் எனும் வகையில் ஆகாயமும் ஒரு உயிர்மைப்பொருளேயாகிறது!

    ஆக, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய ஐந்தும் உயிர்த்தன்மை உடையவை என்பதை நம்மால் பரிபூரணமாக உணரமுடிகிறது.

    சரி, உயிரற்ற பொருட்களைக் கொஞ்சம் இப்போது கவனிக்கலாமா? மலை மேல் அருவிகளும் – மலைக்குள் சுனைகளும், மலையடிவாரத்தில் நதிகளும் சலனமிடவில்லையா?

    மலை மேல் காற்றும், மலைக்குள் காற்றும், மலையின் கீழ் காற்றும் சலனமிடவில்லையா? மலைமேல் சூடும், மலைக்குள் சூடும், மலையின் கீழ் சூடும் சலனமிடவில்லையா? மண்ணுக்குள்ளும், மண்ணின் மேலும் காற்றும், நீரும், சூடும் நித்தமும் சலனித்துக்கொண்டிருக்கின்றனவே! கோளின் உள்நடுவே இன்னும் ஆற்றொணா வெப்பம் இன்னமும் எப்பவும் தகித்துக்கொண்டிருக்கிறதே!

    மேலும், குன்றுகளும் மலைகளும் தொடர்ந்து வளருகின்றனவே. இமயமலை மட்டும் ஒவ்வொவொரு ஆண்டும் 0.2 அங்குலம் வளருகிறதே! பல குன்றுகள் காலத்தால் குறைந்தும் கரைந்தும் மறைந்து போகின்றனவே! பாலைவனத்தில் மணல்மேடுகள் வளர்வதும் சிதைவதும் நித்தம் நடக்கிறதே – இவையெல்லாம் வளர்சிதைமாற்றங்கள் இல்லையா? இவையெல்லாம் உயிர்மை நிகழ்வுகள் இல்லையா?

    சொல்லப்போனால் காற்றையும், நெருப்பையும், நீரையும் உயிருள்ளதா உயிரற்றதா என்று வகைப்படுத்த முயன்றபோது அறிவியல் அப்படியே ஆடிப்போய் விட்டது. இவற்றை வகைப்படுத்தும் வல்லமை அதற்கு இல்லை. அறிவியலின் திறன் அம்மட்டே! அறிவியலின் இந்தக் கையலாகாத்தனத்தை என்னென்பது? ஆக அறிவியல் வகைப்பாட்டில் பற்றாக்குறைகள், குளறுபடிகள் இருப்பதை உணர்க.

    இது நிற்க.

    சுருங்கச் சொல்லின், உயிர்மைத்தன்மை உடைய காற்றும், நீரும், சூடும் – மும்மாலையாய், நிலத்துடனும், ஆகாயத்துடனும் ஒருங்கிணையும்போது மட்டுமே அங்கே கோளில், உயிர்மைச் சலனம் சுழன்று சுழன்று ஜீவித்து நிற்கிறது எனக் காண்கிறோம். ஒரு கோளே உயிர்மைத்தன்மை உடையதாக இருக்கும்போது அதில் உள்ள யாவற்றுக்குமே உயிர்மைதன்மை இருப்பதாகத்தானே பொருள்?

    இந்நிலையில், உயிருள்ளவைக்கும் உயிரற்றவைக்கும் நாம் இதுகாறும் நாம் கூறி வந்திருக்கிற வேறுபாடுகள் – விளக்கங்கள் யாவும் அர்த்தமற்றவையாகி விடுகின்றன அல்லவா?

    இருசார் பொருட்களுக்கும் ஆதிமூலம் ஒன்று தான் என்பது விளங்குகின்றது அல்லவா?. உயிருள்ளதும் பரம்பொருளே! உயிரற்றதும் பரம்பொருளே என்பதும் புரிகின்றது அல்லவா!

    மேலும், நம்மை மிகவும் ஆச்சரியப்படுத்தும் விடயம் என்னவென்றால், உயிரற்றவை நிலைத்ததாகவும் உயிருள்ளவை மடிவதுமாக இருக்கின்றன என்பதுதான்! மடிகிற உயிரிகள் யாவும் ஜடமாகின்றன. நடமே ஜடம்! என்னே இந்த வேடிக்கை என வியந்து வியக்கிறோம்.

    அப்படியென்றால், உயிரிகள் ஜடமாய் முடிவதால், ஜடத்திலிருந்து தான் உயிரிகள் பிறந்தாக வேண்டும் என்பது வெளிச்சம். ஆக, ஜடத்திலிருந்து உயிரிகள் பிறந்து மீண்டும் அவை இறப்பில் ஜடமாகின்றன என்பதே தான் உண்மையல்லவா? எனவே, உயிரிகளை ஜடத்தின் உட்பிரிவு என்று கொள்வது தானே சாலப்பொருந்தும்?

    இவாறு நாம் பேசும்போது, உயிரற்ற ஜடம் என்று நாம் சொல்லும் ஒவ்வொன்றினுள்ளும் ஒரு உயிர்ப்பொறி இருந்தவாறே தான் இருக்கிறது என்பதுதானே இதன் பொருள்? அந்த உயிர்ப்பொறி, காற்று, சூடு, நீர் ஆகிய மூன்றையும் உடலுள் செலுத்தியும் வெளித்தள்ளியும் வேலை செய்தவாறு இருக்கும் வரை அந்த ஜடம் உயிரி எனும் சொல்லும்படியான அடையாளங்களுடன் சலனம் செய்கிறது அன்றேல் அச்சலனம் ஓய அது சவமாகிவிடுகிறது என்று கொள்வதுதானே பொருத்தமாக இருக்கும்?

    சரி இப்போது ஒரு வினாவை எழுப்புவோம்: கோளில் உள்ள ஒவ்வொவொரு உயிரியிலும் உள்ள அந்த நுட்பமான உயிர்ப்பொறியை இயக்கும் ஆற்றல் எங்கிருந்து வருகிறது? ஜடப்பொருளிலிருந்து வந்ததா? சாத்தியம் இல்லை. ஏன்? ஜடப்பொருளிலிருந்து வருவதாக இருந்தால் எல்லா ஜடப்பொருட்களுமே தாமே உயிரிகளாகிவிட ஆகிவிடமுடியுமே! அல்லது அவைகளை நாம் உயிரிகளாக்கிவிட முடியுமே! அது அவ்வாறு நடப்பதில்லை அல்லவா? – நடத்தப்பட முடிவதில்லை அல்லவா?

    எனவே உயிரற்ற பொருளும் உயிருள்ள பொருளும் எல்லாவகையிலும் ஒன்றே தான் என்றாலும், உயிரற்ற பொருளில் இல்லாத ஒன்று உயிரிகளிடம் இருக்கிறது – அதுதான் உயிர்ப்பொறி என்று பொருள் கொள்ளலாமல்லவா?

    அப்படியெனில், உயிர்ப்பொறியை இயக்கும் ஆற்றல் ஜடத்திற்குப் புறத்தேஇருந்து வருவது என்பதுதானே பொருள்?

    உயிர்ப்பொறியை விசைக்கவல்ல ஆற்றல் ஜடத்தில் இல்லையென்றால் அது கோளில் இல்லை என்பது பொருள் – கோளில் இல்லையென்றால் – அது ஆகாயத்தில் இல்லையென்று பொருள் – ஆகாயத்தில் இல்லையென்றால் – அது வெளியில் இல்லை என்று பொருள் – வெளியில் இல்லையென்றால், அது பரவெளியில் இல்லை எனலாமா? பரவெளியில் இல்லாத ஒன்று உயிருள்ள ஒவ்வொன்றினுள்ளும் இருக்கிறது என்றால் அது பரவெளியின் மூலமான ஆதிமூலமாம் ஆதிப்பரவெளியாம்பரம்பொருளிலிருந்து மட்டும் தான் வர முடியும் என்று தெளிவுக்கு வருகிறோம்.

    எனவே, உயிரிகளையும் உயிரற்றவற்றையும் ஓத்தே படைத்தினும் சற்று கூடுதலான ஒரு சங்கதியை ஆதிமூலமாம் பரம்பொருள் உயிரிகளிடம் சேர்த்த வித்தையை என்னென்பது.

    இந்த உயிர்ப்பொறி பொருத்தப் பட்டதால், உயிரிகள் உயிரற்றவற்றை விட பலம் மிக்கவர்களானார்கள் எனலாமா?

    உயர்ந்தவரானார்கள் எனலாமா? என்று வினவத்தோன்றுகிறது அல்லவா?

    நல்ல கேள்விகள் தாம்!

    மேலும் பேசுவோம்!

    Share
  • குறளின் கதிர்களாய்…(211)

    செண்பக ஜெகதீசன்

     

    நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலக                                                                      

    மில்லெனிலு மீதலே நன்று.

           -திருக்குறள் -222(ஈகை)

     

    புதுக் கவிதையில்…

     

    பிறர் கொடுக்க

    அதைப்

    பெற்றுக்கொள்வது என்பது,

    பல்லோர் சொன்ன

    நல்வழியெனிலும் தீதே..

     

    மேலுலகமென ஒன்றிருப்பினும்,

    அது

    கிடைக்காமல் போய்விடுமெனிலும்,

    வறியவர்க்கு

    ஈதலே நல்லதாகும்…!

     

    குறும்பாவில்…

     

    நல்வழியென சொல்லப்பட்டாலும் பிறரிடம்  

    பெறுதல் தீது, மேலுலகம் கிடைக்காமல்போனாலும்   

    வறியவர்க்கு ஈதலே நன்று…!

     

    மரபுக் கவிதையில்

     

    மெச்சத் தகுந்த மேலுலகதன்

          மிக்க நல்ல வழியெனிலும்,

    பிச்சை யெனவே பிறரிடத்தில்

         பெற்றுக் கொள்வது தீதாகும்,

    நிச்சய மில்லா மேலுலகம்

         நிச்சயம் கிடைக்கா நிலைவரினும்,

    இச்சை யோடுள வறியவர்க்கே

         ஈதலே யென்றும் நன்றாமே…!

     

    லிமரைக்கூ..

     

    நல்வழியென நம்பிடினும் இன்று, 

    பெறுதல் தீது, மேலுலகம் கிடைக்காதெனிலும்      

    வறியவர்க்கென ஈதலே நன்று…!

     

    கிராமிய பாணியில்…

     

    தருமஞ்செய்யி தருமஞ்செய்யி

    வறியவரு வாழத்தான்

    உருப்படியாத் தருமஞ்செய்யி..

     

    சொர்க்கத்துக்கு வழியிதுண்ணு

    சொன்னாலும் அடுத்தவங்கிட்ட

    வாங்கிறது நல்லதில்ல..

     

    சொர்க்கமுண்ணு இருக்கோயில்லியோ,

    அந்த

    சொர்க்கமே கெடைக்கல்லண்ணாலும்

    ஏழயளுக்குத் தருமஞ்செய்யிறது

    எப்பவுமே நல்லதுதான்..

     

    அதால,

    தருமஞ்செய்யி தருமஞ்செய்யி

    வறியவரு வாழத்தான்

    உருப்படியாத் தருமஞ்செய்யி…!

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே.. 16

    க.பாலசுப்பிரமணியன்

     

    உணவும் வாழ்க்கை நலமும்

    ஒருவரின் வாழ்வு சிறப்புற அவருடைய உடல்நலமும் மனநலமும் இணைந்து சிறப்பாக இருத்தல் மிக அவசியமானது. இரண்டில் ஏதேனும் ஒன்று தொய்ந்து இருந்தாலோ அல்லது அதில் குறைபாடுகள் இருந்தாலோ வாழ்க்கையை நல்ல பாதையில் எடுத்துச் செல்லவும் வெற்றிப்படிகளில் கால்கள் வைப்பதிலும் தடங்கல்கள் இருப்பது உறுதி. ஒரு மனிதனின் ஆரோக்யத்தைப் பற்றி விளக்கும் புத்தத் துறவி தலாய் லாமா அவர்கள் கூறுகின்றார் ” வாழ்க்கையில் நாம் நம்முடைய உடல்நலத்தை செலவழித்தும் வீணடித்தும் பணத்தைச் சேர்க்க முயல்கின்றோம். பின்பு நாம் சேமித்த பணத்தை முழுவதுமாக நம்முடைய உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் காத்துக்கொள்ளச் செலவழிக்கின்றோம்.” இது எவ்வளவு உண்மையான வாக்கு! உடல் நலத்தைப் பற்றி பேசும் பொழுது அதை வெறும் உடற் பயிற்சிகளால் மட்டும் சிறப்பாக வைத்திருக்க முடியாது. நாம் உண்ணுகின்ற உணவு, உண்ணும் முறைகள், நமது உணவைச் சார்ந்த பழக்க வழக்கங்கள், உடல் சுகாதாரம் ஆகிய பலவற்றால் நமது உடல் நலம் பாதிக்கப் படுகின்றது. பழங்களையும் காய்கறிகளையும் கீரை வகைகளையும் மற்றும் சிறப்பாக வளர்க்கப்பட்ட பயிரினங்களிலிருந்து கிடைக்கும் தானிய வகைகளையும் உணவாக ஏற்று பல்லாண்டு காலம் வாழ்ந்து வந்த நாம் இப்பொழுது வேதியல் பொருட்களால் பயிர்ப்பிக்கப் பட்ட தானிய வகைகளை மட்டுமின்றி, உடலுக்கு ஒவ்வாத பல வேதியல் பொருள்களால் தயாரிக்கப்பட்ட உணவுப்பண்டங்களை உட்கொண்டு உடல் நலத்தை கெடுத்துக் கொண்டு வருகின்றோம்.

    இதுபற்றிய பலவித ஆரய்ச்சிகள் உலக அளவில் மேற்கொள்ளப்பட்டது மட்டுமின்றி, இவற்றால் நமக்கு ஏற்படும் பலவிதத் தீங்குகளை பற்றியும் விளக்கப்பட்டு வருகின்றன. மற்றும் உண்ணும் உணவுக்கும் நம்முடைய உடல் சக்திக்கும் மூளையின் வளர்ச்சி மற்றும் ஆற்றலுக்கும் உள்ள நேரடித் தொடர்பு பற்றியும் பல்வேறு ஆரய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக எவ்வாறு நாம் சில வகையான “துரித உணவுகளால் ” நம்முடைய உடலுக்கு கேடு விளைத்துக்கொண்டு வருகின்றோம் என்பது தெள்ளத்  தெளிவாக விளங்குகின்றது

     

    தன்னுடைய மூளை சார்ந்த கற்றல் என்ற புத்தகத்தில் மூளை-நரம்பியல் மற்றும் கற்றல் பற்றிய ஆராய்ச்சியாளர் பென் ஜெசென் (Dr. Ben Jessen) என்பவர் கூறுகின்றார் “உங்களுடைய மூளையின் திறனை நீங்கள் உண்ணும் உணவு மூலம் மேலும் சிறப்பாக செயல் படுத்த முடியும். நீங்கள் உண்ணும் உணவு உங்கள் மூளையின் கீழ்கண்ட திறன்களை பாதிக்கின்றது:

    1.உங்களுடைய மூளையின் சமநிலை

    1. உங்கள் உணர்வுசார்ந்த முடிவுகள் மற்றும் சிந்தனைகள்
    2. உங்களுடைய சிந்திக்கும் திறன் மற்றும் புத்திசாலித்தனம்
    3. உங்களுடைய புத்திகூர்மை
    4. உங்களுடைய ஞாபகசக்தி

    மேலும் அது உங்களுடைய மூளையை இளமையுடன் வைத்திருக்க உதவுகின்றது.”

     

    (The food you eat directly affects the performance of your brain. It has been proven that by eating the right food, you can boost your IQ, improve your mood, be more emotionally stable, sharpen your memory and keep your mind young-  Ben Jessen)

    அது மட்டுமல்ல, மூளைக்குத் தேவையான சத்தான உணவுகளை உண்பதன் மூலம் மூளையின் செறிவு, கவனம் மற்றும் கூறிய சிந்தனைத் திறன் இவைகளை வளர்த்துக்கொள்ள முடியும் என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார். மூளைக்குத் தேவையான மூன்று முக்கியமான உள்ளீடுகள்: சத்தான உணவு, போதுமான நீர், மற்றும் நல்ல அளவில் ஆக்சிஜன் வாயு. எனவே உடல் நலத்தையும் மனநலத்தையும் பேணுவதற்கு நம்முடைய உணவுப் பழக்கங்களின் மீது கவனம் செலுத்துதல் மிக அவசியம்.

    தற்காலத்தில் இளைய தலைமுறையின் உணவுப் பழக்கங்கள் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட அளவில் உலக நாடுகள் அவர்களைத் தாக்கும் பல புதிய நோய்களை தடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. உதாரணமாக இளம் வயதில் சர்க்கரை நோய், (Juvenile Diabetes) உடலில் அதிகமான கொழுப்புச் சத்துக்கள், (Obesity)  வேதியல் பொருட்கள் கலந்த உணவுகளால் ஏற்படும் வயிறு மற்றும் உடல் கோளாறுகள், (Intestinal disorders), மூளை பாதிப்புகள் (psychological disturbances) ஆகியவை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. வருங்கால சமுதாயத்தின் ஆரோக்கியத்தைப் பற்றிய கவலை வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

     

    நமது உடலுக்கு சிறப்பான வாழ்விற்கும் நாமே பொறுப்பு என்பதை உணரவேண்டும். நமது உடல் நலத்தையும் நமது மன நலத்தையும் பாதுகாப்பது நாம் நமக்கு செய்துகொள்ளுகின்ற ஆன்மீகக் கடமை என்பது மட்டுமின்றி அது நமது சமுதாயக் கடமை என்பதையும் அறிந்து செயல்பட வேண்டும். நமது உணவுகளுக்கும் நமது உணவுப் பழக்கங்களுக்கும் நாமே பொறுப்பு ஏற்றுக்கொள்ளவேண்டும்.

    திருவள்ளுவரின் கீழ்கண்ட குறள் நமக்குப் புகுத்தும் அறிவை நாம் கருத்தில் கொள்ளுதல் நமக்கு நலம் தருமே !

    மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

    ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

    நமது வாழ்வை நாம் நல்லபடியாக வாழ்ந்து பார்க்கலாமே !

    (தொடரும்)

    Share
  • பழந்தமிழக வரலாறு – 6

     

     

             மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு

     

                                          கணியன்பாலன்

    பண்டைய சங்ககாலத் தமிழகத்தின் தத்துவார்த்த, அறிவியல், கலை சார்ந்த அனைத்துச் சிந்தனைகளையும் “மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு” எனலாம். இந்தச்சிந்தனை மரபு 1000 ஆண்டுகளுக்கும் மேலான மிக நீண்ட நெடிய காலத்தைக்கொண்டதாகும். இந்த மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு ‘பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனை’ என்கிற ஒரு உறுதியான அடித்தளத்தைக் கொண்டிருந்தது. அதில் சாங்கியம்(எண்ணியம்), உலகாயதம், பூதவாதம், வைசேடிகம்(சிறப்பியம்), ஆசிவகம், நியாயவாதம் எனப்பலவிதமான மெய்யியல் சிந்தனைகள் இருந்தன. கடவுள் மறுப்பும், வைதீக எதிர்ப்பும்  பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனையில் உறுதியாக நிலை கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 1200 ஆண்டுகளாகச் சங்கம் மருவிய காலம் முடியும்வரை(கி.மு. 1000-கி.பி. 200), இந்தப் பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள்தான் தமிழ் சமூகத்தின் அடித்தளக் கருத்தியலாக இருந்து வந்தன.

    முனைவர். கா. இராசன் அவர்கள் தான் எழுதிய தொல்லியல் நோக்கில் சங்ககாலம் என்கிற நூலில் கி.மு. 1000 வாக்கில் தமிழகத்தின் தென் பகுதியில் நுண்கற்கருவிகள் பண்பாட்டிலும், வடபகுதியில்புதிய கற்காலப் பண்பாட்டிலும் வாழ்ந்த மக்கள் இருவரும் இணைந்து ஒரு மிகப்பெரிய பண்பாட்டுப் புரட்சிக்கு வித்திட்டனர் எனவும், அன்றே அவர்கள் ஒருவகையான வரிவடிவத்தைத் தமது கருத்துப்பரிமாற்றத்திற்குப் பயன் படுத்தினர் எனவும், இவர்களே ஒரே வகையான மொழி, வரிவடிவம் என்ற கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் தமிழ்ச் சமுதாயம் என்ற  அமைப்பை ஏற்படுத்தவும், தமிழகத்தின் சங்ககால எழுச்சிக்கும் வித்திட்டவர்கள் என்கிறார்-(1).   தென்பகுதியில் நுண்கற்கருவிகள் பண்பாட்டைச் சேர்ந்த ஆதிச்சநல்லூர் அகழாய்வின் காலம் சுமார் கி.மு. 2000 என அறிவியல் ஆய்வு உறுதி செய்துள்ளது என்கிறார் முனைவர் அ. இராமசாமி-(2). ஆதிச்சநல்லூர் கி.மு. 1500 வாக்கில் ஒரு தொழில் நகரமாக இருந்தது எனவும் அங்கு உயர் தொழில்நுட்பமிக்க உயர்தரமான இரும்பு எஃகும், பிற உலோகங்களும் தயார் செய்யப்பட்டன எனவும், வெண்கலப் பொருட்கள் தயாரிப்பில் அவர்கள் மிக உயர்ந்த தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தனர் எனவும் முனைவர் அ. இராமசாமி குறிப்பிடுகிறார்-(3).  ஆகவே இப்பண்பாட்டுப்புரட்சி தென்பகுதியில் கி.மு. 1000க்கு முன்பே நடந்து, பின் வடபகுதியோடு இணைந்து மேலும் வலிமை பெற்றது எனலாம். இந்த மிகப்பெரிய தொழிநுட்பப் பண்பாட்டுப் புரட்சியின் தொடர்ச்சியாக உருவாகியதுதான் பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்ட  ‘மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு’ ஆகும்.

    பண்டையத் தமிழ்ச் சமூகம்:

    தமிழ்ச் சமூகம் பண்டையகாலத்திலிருந்து மெய்யியல்,  அறிவியல், தொழிநுட்பம், பொருள்உற்பத்தி, வேளாண்மை, வணிகம், இயல், இசை, நாட்டியம் ஆகியவற்றில் ஒரு புகழ்பெற்ற மரபைக்கொண்டிருந்தது. கி.மு. 1000க்கு முன்பிருந்து நிறையச் சிறு சிறு நகர்மைய அரசுகள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்தன. நறுமணத் திரவியங்களின் உலகத்தேவையும் அதன் வணிகமும், தமிழர்களைப் பெரும் கடலோடிகளாக மாற்றியமைத்தன.  இவையெல்லாம் கி.மு. 1000 க்கு முன்பிருந்து நடந்து வருகிறது எனினும் கி.மு. 7ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழக வணிகம் தொடர்ச்சியாகவும் உலகளாவிய அளவிலும் நடைபெற்றது. தமிழகத்தில் தனித்தனி வேந்தர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கிளைஅரசர்கள்,  சிறுகுறு மன்னர்கள், வேளிர்கள் எனப் பலதரப்பட்ட அரசுகளின் கீழ் நிறைய சுதந்திரமான  நகர்மைய அரசுகள் இருந்தன. அவை தனித்தனியான ஆட்சியாளனின் கீழ் சுதந்திரமான வணிக நகர்மைய அரசுகளாகவும் பரிணமித்தன. பொருள் உற்பத்தியும், தொழில் நுட்பமும் வணிகமும் பெருகி வளர்ந்து கொண்டிருந்தன. இந்தச் சிறு குறு நகர்மைய அரசுகளே பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைக்கும் அறிவியல், தொழிநுட்பம், பொருள்உற்பத்தி, வேளாண்மை, வணிகம், இயல், இசை, நாட்டியம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் காரணகர்த்தாக்களாக இருந்தன. ஆதலால் கி.மு. 8ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே மூலச்சிறப்புள்ள தமிழ் மெய்யியல் சிந்தனை ஒரு சிறப்பு வடிவத்தைப்(தொல்கபிலரின் எண்ணியம்)  பெற்றுக்கொண்டது.

    திரு. வி. கிரபிவின் அவர்கள் “உலகத்தைப்பற்றிய பொருள்முதல் வாதக்கண்ணோட்டம் புராதன காலத்திலேயே தோன்றி வேரூன்றி விட்டதாகும். அது எகிப்து நாட்டிலும், பாபிலோனியாவிலும் கி.மு. மூவாயிரம் ஆண்டின் முடிவிலும், கி.மு. இரண்டாயிரம் ஆண்டின் தொடக்கத்திலும் உருப்பெற்றது” என்கிறார்-(4). அக்காலகட்டத்தில் எகிப்திலும் பாபிலோனியாவிலும் நகர அரசுகள் தோன்றி வளர்ந்து உற்பத்தி பெருகி வணிக நகர அரசுகளாக அவை மாறிக்கொண்டிருந்தன. ஆதலால் நகர அரசுகள் தோன்றி உற்பத்தி பெருகி வணிக நகர அரசுகளாக அவை வளர்கிற போது  பொருள்முதல்வாதக் கண்ணோட்டமும் தோன்றி வளர்கிறது எனலாம். கிரேக்கத்தில், கிரேக்க நகர அரசுகள் தோன்றி உற்பத்தி பெருகி, அவை வணிக நகர அரசுகளாக வளர்ந்த போது பொருள்முதல்வாதக் கண்ணோட்டமும் தோன்றி வளர்ந்தது.  மறுமலர்ச்சிக்கால ஐரோப்பாவில், இத்தாலியின் வெனிசு போன்ற நகரங்களில் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சிதான் மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தது. ஆகவே சுதந்திரமான வணிகநகரங்கள் முற்போக்கான அறிவியல் கண்ணோட்டம் உடைய சிந்தனைகளின் வளர்ச்சிக்கான காரணிகளாக இருந்துள்ளன என்பதை வரலாறு பலவிதங்களிலும் உறுதிப்படுத்தியுள்ளது.

    இந்த வணிக நகர அரசுகள் பேரரசுகளாக மாறும்பொழுது பொதுமக்களையும் அடிமைகளையும் கட்டுப்படுத்தி வைக்கப் பொருள் முதல்வாத மெய்யியலை அழித்து அவ்விடத்தில் கருத்துமுதல்வாத மெய்யியலைக் கைக் கொள்கின்றன. வட இந்தியாவில் 16 ஜனபதங்கள் எனப்படும் நகர்மைய அரசுகள் உருவாகி வணிகம் பெருகி வளர்ந்துகொண்டிருந்தபொழுதுதான் கி.மு. 8ஆம் 7ஆம் நூற்றாண்டுகளில் பொருள்முதல்வாதச்சிந்தனையை  ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை உருவாகியது. அதன் விளைவாகவே பல்வேறு பொருள்முதல்வாதச் சிந்தனைபள்ளிகள் அங்கு வளர முடிந்தது. கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்து அந்நிலை மாறி அங்கு பேரரசுகள் உருவாகத்துவங்கின. பேரரசுகளின் உருவாக்கம் பொருள்முதல்வாத மெய்யியல் வளர்ச்சியைத்தடுத்துவிடும் என்பதால் வட இந்தியாவில் ஓரிரு நூற்றாண்டுகள் மட்டுமே பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைபள்ளிகள் வளர முடிந்தது. ஆனால் தமிழகத்தில் முன்பு கூறியவாறு கி.மு. 1000 க்கு முன்பிருந்து நகர்மைய அரசுகள் தோன்றி வளர்ந்து, கி.மு. முடிய, 1000 வருடங்களுக்கும் மேலாக கிரேக்க, உரோம நகர அரசுகளைப்போன்ற வளர்ச்சிபெற்ற வணிக நகர அரசுகளாகப் பண்டைய தமிழக நகர்மைய அரசுகள் இருந்து கொண்டிருந்தன. அதனால்தான் சாங்கியம், போன்ற மூலச்சிறப்புள்ள பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனை மரபு தோன்றி வளர முடிந்தது. தமிழகத்தில் எண்ணியம் மட்டுமின்றி பூதவாதம், சிறப்பியம், ஆசிவகம், கடவுள் மறுப்புச் சிந்தனையான நாத்திகம் போன்ற பலவகையான பொருள்முதல்வாத மெய்யியல்சிந்தனைகள் தோன்றி வளர்ந்தன. இந்தச் சிந்தனைகள்தான் இந்தியா முழுவதும் பரவின. எண்ணியம், சிறப்பியம் ஆகியவற்றின் மூலவர்களான தொல்கபிலர், கணாதர் ஆகிய இருவர் குறித்து, இந்திய மெய்யியல் வள₹₹ர்ச்சியடைவதற்குக் கபிலரும், கணாதரும் முன்னொடிகளாக இருந்தனர் எனவும், இருள் சூழ்ந்திருந்த இந்திய வானில் ஒளிவீசும் விண்மீன்களாக இந்த இரண்டு மாமனிதர்களும் தோன்றினார்கள் எனவும் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு(5). தமிழ்ச்சிந்தனை மரபின் மூலவர்களான தொல்கபிலர், கணாதர், பக்குடுக்கை நன்கணியார், பூரணகாயபர், நரிவெரூத்தலையார் போன்றவர்கள் தமிழர்கள்தான் என உறுதிப்படுத்தியதில் க.நெடுஞ்செழியன் அவர்களின் பங்கு மகத்தானதாகும்.

     

    தமிழகத்தில் இருந்த ஆட்சியாளனின் அரச அதிகாரம் பொதுமக்கள் சபைகளால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்தது என கி.மு. 4ஆம் நூற்றாண்டு கிரேக்கத் தூதுவரான மெகத்தனிசு அவர்கள் கூறுவதாகக் கூறுகிறார் நேரு அவர்கள்-(6). மெகத்தனிசுவின் கருத்தைக் கணக்கில் கொள்வதன் மூலம் தமிழகத்தின் பண்டைய நகர அரசுகளின் அமைப்பை ஓரளவு புரிந்துகொள்ள முடியும். நகரங்களிலும், ஊர்களிலும் குடவோலை முறையில் நகர, ஊர்ச் சபைகளின் பிரதிநிதிகளையும், பல்வேறு துறைகளுக்கான வாரியப் பொறுப்பாளர்களையும் நியமிக்கத் தேர்தல்கள் நடைபெற்றன என்பதை மருதன் இளநாகனாரின் பாடல்(அகம்-77) தெரிவிக்கிறது.  இதன் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டாகும். ஆகவே சங்ககாலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரச் சபைகளும், ஊர்ச்சபைகளும், வாரியப் பொறுப்பாளர்களும் இருந்தனர் என்பதும் அவர்கள் பலவிதங்களில் அரசனுடைய அதிகாரத்தைக் கட்டுப்படுத்தினர் என்பதும் மேற்கண்ட மெகத்தனிசின் கூற்று மூலமும், மருதன் இளநாகனார் தரும் தேர்தல் முறை மூலமும் உறுதிப்படுத்தப்படுகிறது. ஆகவே தனித்தனியான ஆட்சியாளனின் கீழ் மிக நீண்ட காலமாக இருந்து வந்த சுதந்திரமான பலவகைப்பட்ட வணிக நகர, நகர்மைய அரசுகள் தான் மூலச்சிறப்புள்ள பொருள்முதல்வாத மெய்யியல்சிந்தனைகள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்ததற்கான அடிப்படைக் காரணம் ஆகும். 3000 ஆண்டுகளுக்கும் முந்தைய, மூலச் சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபானது, பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனையைத் தனது அடித்தளமாகக் கொண்டு, வளர்ச்சி பெற்ற வணிக நகர அரசுகளைக் கொண்டிருந்த பண்டைய தமிழ்ச் சமூகத்தில், 1000 வருடங்களுக்கும் மேலாக மிகப்பெரும் செல்வாக்குடனும், புகழுடனும் இயங்கி வந்துள்ளது.

    பார்வை:

    1. முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 74, 75, 76.

    2.அ. இராமசாமி, தொன்மைத்தமிழர் நாகரிகவரலாறு, டிசம்பர்-2013, பக்:62.

    1. “ “    பக்: 52-64.

    4.’இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?’  இரசிய நூல், முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ பக்:43.

    5.இந்திய வரலாற்றில் பகவத்கீதை, பிரேம்நாத் பசாசு, தமிழில் கே.சுப்ரமனையன், விடியல் பதிப்பகம், சனவரி-2016, பக்:131.

    6.சவகர்லால் நேரு, உலகச் சரித்திரம், தமிழில் ஒ.வி. அளகேசன், முதல் பாகம், 2006, பக்: 153.

    ஆதார நூல்: பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 777-818.

     

     

     

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 103

    நிர்மலா ராகவன்

     

    பழகத் தெரியவேண்டும்

    “எனக்குப் பல பெண்களுடன் நட்புடன் கூடிய தொடர்பு இருந்தது. ஆனால், எதுவுமே கல்யாணத்தில் முடியவில்லை!” என்று ஏக்கத்துடன் கூறினார் ஒருவர். பிறருடன் சரியான முறையில் பழகத் தெரியாததுதான் காரணம்.

    `வாழ்நாள் முழுவதும் இப்படி ஒருவருடன் கழிக்க முடியுமா!’ என்று அயர்ந்தே பெண்கள் இவருடன் நீண்டகாலத் தொடர்பு வேண்டாமென ஒதுக்கியிருப்பார்கள்.

    வெற்றிகரமான உறவுகள் அமைய வேண்டுமானால், பிறருடன் எப்படிப் பழகுவது என்று சிறுவயதிலிருந்தே போதிப்பது அவசியம். மூன்று வயதுக் குழந்தையிடம், `வணக்கம் சொல்லு!’ என்று சொல்லிக்கொடுப்பதில் ஆரம்பிக்கிறது இப்பழக்கம்.

    `அப்பாவின் கையைமட்டும் குலுக்குகிறாரே!’ என்று தானே வலியப்போய் கையை நீட்டும் குழந்தை கலகலப்பானவனாக, பிறர் மெச்ச வளரும்.

    ஏழு வயதானாலும், தாயின் பின்னால் ஒரு சிறுவன் ஒளிந்துகொண்டால் எங்கோ பிழை. “வெளியில் வந்தால் வெட்கப்படுவான்!’ என்று அவனை ஆதரித்துப் பேசும் பெற்றோர் அவனுக்கு நன்மை செய்வதில்லை.

    கதை

    “எனக்கு எப்படிப் பேச வந்தது?” என்று ஆச்சரியப்பட்டாள் நான்கு வயதான லதா.

    “நாங்கள் உன்னுடன் பேசுவதைக் கேட்டு, தானே வந்துவிட்டது”.

    இந்த விளக்கத்தைக் கேட்டபின், லதா எங்கு போனாலும் தன் `லேடி பொம்மை’யை எடுத்து வருவது வழக்கமாகப் போயிற்று. போகும் வழியில் அதனுடன் ஓயாமல் பேசிக்கொண்டிருப்பாள்.

    “என்ன செய்யறே?” என்று யாராவது கேட்டால், “நான் பேசினா, அப்புறம் என்னோட பொம்மையும் என்கூட பேசும்!” என்று பதிலளித்தாள் சிறுமி. நமக்கு வேடிக்கையாக இருந்தாலும், அந்த வயதில் அவளுக்கு நம்பிக்கை இருந்தது. அடுத்த வருடம் அதை மறந்துவிட்டாள். வயதாக ஆக, குழந்தைகளின் தன்மையும் மாறுகிறதே!

    கதை

    நான்கு வயதான பாபு அவனுடைய இரண்டு வயதுத் தங்கையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுவான். ஆண்பிள்ளை. அதிலும் வயதில் பெரியவன். நிச்சயம் அவன்தான் வெற்றி பெறுவான் என்று `பந்தயத்தை’ நடத்திய தந்தைக்குப் புரிந்துவிட்டது.

    “தங்கை, பாவம், சின்னக்குழந்தை! அவள் முதலில் ஓட ஆரம்பிக்கட்டும்,” என்று தந்தை சொல்ல, ஏற்றுக்கொண்டான் பாபு. அவள் பாதி தூரம் போனதும், “இப்போ நீ ஓடு!” என்று பச்சைக்கொடி காட்டப்பட்டது.

    இருவரும் ஒரே சமயத்தில் இறுதிக்கட்டத்தில் வர, “இரண்டுபேருக்கும் வெற்றி!” என்று தந்தை மகிழ்ச்சியுடன் கூவினார்.

    சற்று விழித்துவிட்டு, பாபுவும் அதை ஏற்றுக்கொண்டான், அப்பா சொன்னால் சரியாகத்தான் இருக்குமென்று.

    தினமும் பாபுவுடன் உட்கார்ந்து விளையாடுவாள் அவன் தாய். `இரு. இப்போது நான் ஆடவேண்டும். அப்புறம் நீ!’ என்று காத்திருக்க வேண்டிய அவசியத்தை மறைமுகமாக உணர்த்தினாள்.

    பாலர் பள்ளியில் சேர்ந்தபோது, “என் மேசைக்கு வந்து கலர் பென்சில்களை எடுத்துப் போங்கள்,” என்று ஆசிரியர் அறிவித்தபோது, பாபு மட்டும் முண்டியடித்துக்கொண்டு ஓடவில்லை.

    “ஜெண்டில்மேன்!” என்று ஆசிரியர் புகழ்ச்சியாகச் சொன்னதன் அர்த்தம் அவனுக்கு விளங்கவில்லை. ஏதோ பாராட்டுகிறார் என்றவரை புரிந்தது.

    “நீ என்ன செய்தாய்?” என்று வீட்டில் கேட்டபோது, “Wait my turn!” என்றான்.

    இப்படி வளரும் குழந்தைகள் சிறுபிள்ளைத்தனமாக பிறருடன் போட்டி போடுவது கிடையாது. சிறு வயதிலேயே விட்டுக்கொடுத்துப் போவார்கள். இதனாலேயே பல நண்பர்கள் வாய்ப்பார்கள்.

    பெற்றோருக்கு ஒரே குழந்தையாக வளர்பவர்களுக்கு பிறருக்கு விட்டுக்கொடுக்கும் அவசியம் இருப்பதில்லை. இதனாலேயே நல்ல நட்பை இழக்கக்கூடும்.

    கதை

    சகோதரர்கள் இருவர் ஒற்றுமையாக விளையாடிக்கொண்டிருந்தார்கள். அடுத்த வீட்டிலிருந்த பையன் அவர்களைவிட சற்றே சிறியவன். அவனும் அவர்களுடன் சேர்ந்து விளையாட வரும்போது, “சீக்கிரம் ஆரம்பி. அப்போதான் பாதி விளையாட்டிலே சேர்த்துக்க முடியாதுன்னு சொல்லலாம்,” என்று பெரியவன் கூற, இருவர் மட்டுமே அவசரமாக விளையாட ஆரம்பித்தார்கள்.

    “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? பாவம்!” என்று நான் பரிதாபப்பட, “அவன் தப்பு தப்பா ஆடுவான். ஆனா, அவன் செய்யறதுதான் சரின்னு சண்டை பிடிப்பான், அழுவான்!’ என்று பதில் வந்தது. இவர்களுக்குச் சண்டை போட்டுப் பழக்கமில்லை. எல்லோருடனும் மரியாதையாகப் பழகவேண்டும் கற்றுக்கொடுக்கப்பட்டிருந்தது.

    மரியாதையாகப் பேசுவது

    பெற்றோரோ, வயதின் மூத்தவர்களோ மரியாதையாகப் பேசினால், குழந்தைகள் தாமே அப்படி நடப்பார்கள். நாம், `Please,” என்று ஒரு வேலை சொல்லி, அதைச் செய்து முடித்த சிறுவனிடம் `thank you,” என்று தவறாமல் நன்றி கூறினால் அவனுக்கும் அந்தப் பழக்கம் தன்னையுமறியாமல் வந்துவிடும்.

    `நான் பெரியவன்! ஒரு குழந்தைக்கு நன்றி சொல்வதா!’ என்ற மனப்பான்மை பெரியவர்களுக்கு இருந்தால், எப்படி குழந்தைகளுக்கு நற்புத்தி புகட்டுவது?

    நம்மைப்போல்தானே பிறரும்?

    தன்னைப்பற்றியே நினைத்துக்கொண்டிருப்பது சிறுபிள்ளைகளின் இயல்பு. ஆறு அல்லது ஏழு வயதில் பிறரது உணர்ச்சிகளும் புரியவேண்டும். புரிய வைக்கவேண்டியது பெற்றோரின் கடமை.

    புத்தகங்கள் படிக்கும்போதும், திரைப்படங்கள் படிக்கும்போதும் தென்படும் பாத்திரங்களைத் தாமாகவே பாவிக்கும்போது, பிறருடைய உணர்ச்சிகள் புரிந்துபோகும். மாறுபட்ட கருத்துக்களையும் ஏற்கும் பக்குவம் உண்டாகும்.

    புதிய இடங்களுக்குப் போகும்போது பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. உங்கள் குழந்தைகளுடன் அப்படி எங்காவது செல்லும்போது, அவன் வயதொத்த குழந்தைகளுடன் பழக வழி செய்யலாமே!

    “ஹலோ!” என்ற புன்சிரிப்புடன் ஆரம்பித்தாலே போதும். இன்னொருவர் மகிழ்ச்சியுடன் பேசுவார். `நீ எங்கிருந்து வந்தாய்? என்ன படிக்கிறாய்?’ என்று பேச்சை வளர்த்தினால், நட்பு வளரும்.

    ஒன்றாகப் பிரயாணம் செய்யும்போது, `இந்த இடம் எவ்வளவு அழகாக இருக்கிறது!’ `இங்கு எல்லாரும் மிகவும் உதவியாக இருக்கிறார்கள்!’ என்று பொதுப்படையாகப் பேசுவது பிறரை நம் பால் ஈர்க்கும்.

    புறம் கூறலாமா?

    எட்டு வயதானபோது, “ஐயே! இவள் என்ன மாதிரி டீச்சர்!” என்று தன் வகுப்புத்தோழிகள் ஏளனமாக ஓர் ஆசிரியைப்பற்றிக் கூறுவதாக என்னிடம் தெரிவித்தாள் என் மகள்.

    “ஒரு டீச்சரைப் பார்த்து அப்படியெல்லாம் சொல்லக்கூடாது,” என்று கண்டித்தேன்.

    “நான் சொல்லலே. மத்த பொண்கள்தான்,” என்றாள் அழுத்தமாக. புறம் கூறினால், பிறர் நம்மைக் கவனிப்பார்கள் என்று தோன்றிப்போகும் பலருக்கும். இது கீழ்த்தரமான புத்தி.

    “அதைத் திரும்பக்கூடச் சொல்லாதே. ஒங்கம்மாவும் டீச்சர். என்னைப்பத்தி மத்தவா அப்படிப் பேசினா ஒனக்கு எப்படி இருக்கும்?” என்றேன் சூடாக.

    இருப்பினும், புறம் கூறுவதுகூட சில சமயங்களில் நன்மை பயக்கலாம். எப்போதென்றால், ஒருவரின் செய்கையால் அவருக்கோ, பிறருக்கோ தீங்கு விளையக்கூடும் என்னும்போது.

    கதை

    ஆரம்பப்பள்ளியில் படித்துவந்த சங்கர் பேரங்காடிகளுக்குச் சென்று ரப்பர், பென்சில் போன்ற சிறு சாமான்களை நோட்டமிடுவதுபோல் அபகரித்துவிடுவான். அவைகளைத் தன்னுடன் படிக்கும் பிற பையன்களுக்குக் கொடுப்பான். அவனுக்கு அப்பொருட்கள் தேவையே இல்லை. ஆனால், சாமர்த்தியமாக கடைக்காரர்களை ஏமாற்றுகிறோம் என்ற பெருமைக்காக அப்படிச் செய்துவந்தான்.

    கோபி என்ற அவனுடைய சகமாணவன் தன் தாயிடம் விஷயத்தைச் சொல்ல, அவள் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தாள்.

    நடந்தது தவறு என்று தெரிந்து, அதை நிறுத்த அச்சிறுவன் எடுத்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது. நட்பு நிலைக்க வேண்டும் என்பதற்காக அநீதிகளைப் பொறுத்துப்போக வேண்டியதில்லை.

    யாரை ஒதுக்கலாம்?

    பிறருடன் பழகுவது நல்ல குணம் என்றாலும், சிலரை விலக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

    அதனால்தான், `புதிய இடத்தில் முன்பின் தெரியாதவர்களிடம் உன்னைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருக்காதே!’ என்று குழந்தைகளைப் பழக்குகிறோம்.

    ஆகாயவிமானத்தில் தனியாகப் பயணம் செய்யும் இளம்பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தால், பராமுகம்தான் பதிலாகக் கிடைக்கும். `புதியவர்களை நம்பாதே!’ என்று அவளுக்குப் படித்துப் படித்துச் சொல்லியிருப்பார்கள்!

    முதல் முறையாகச் சந்திக்கும்போதே நம்மிடம் மிகுந்த நட்புடன் இனிமையாகப் பேசுகிறவர்களிடம் கவனமாக இருத்தல் நலம்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180415 Tvameva sharanam-watercolour -A4 lr

     

    ’’காலைக் கடன்திரு மாலைக் கடனாக்கி,(வெண்பா எழுதுதல்….!)
    காளை(கண்ணன்) யுடன்கன்றைக் காட்டுவோய், -பாலிலே(பாற்கடலில்)
    நித்ரை புரிந்திடும் நீலமேகம் தொட்டிடும்
    சித்ரா பவுர்ணமிகே சவ்’’….கிரேசி மோகன்….!

    Share