Month: October 2018

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180916_Yashoda -wcol-lr 10×14

    பள்ளிதனைக் கொள்வதால், பிள்ளை பெறுவதால்,
    வெள்ளலைப் பாற்கடல் உள்ளமால், -புள்ளேறும்
    கார்மேக வண்ணனும் கண்ணிநுண் அன்னையும்
    நேர்நிகர் ஆவார் நமக்கு….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180918-New Forever-wcol 10×14-lr

    அளித்திடுவார் உச்சியை, ‘ஆ’போல் உனக்கும்
    களித்திரு கண்ணன் கலப்பில் -பளிச்சென
    நாக(ம்)(குண்டலினி) ஏறா மல்நாம்உச்சி, நாம சஹஸ்ரத்தால்(சஹஸ்ரஹார சக்ரம்-விஷ்ணு சஹஸ்ர நாமம்-சக்ரம் சுதர்ஸனம்)
    வேகமாய் நித்ரை விழிப்பு….!

    அந்தரங்க சுத்தியுடன் அந்த(அ)ணங்கு(கோமாதா பெண்தானே) ‘ஆ’போல,
    அந்தரங்க ராஜனை அர்ச்சிக்க -வந்திறங்கி
    வைகுண்டம் வாவென்று கைகொடுத்து உச்சிமுகர்
    பைகொண்ட நாகமுற்ற பொற்பு(அழகு)….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180921 Gopala vimshati wcol 10×14 Desika 750 wm

    ‘நானகங் காரத்தூண் நைந்திடச் சுக்குநூறாய்
    கானக சிங்கமுச்சி, கட்டுடல் ,-மானுடமாய்,
    பான கநரசிம்மம் பாயும் பிரகலாதன்,
    பூணக பக்திக்குப் பால்’’….!

    கொச்சு பிரகலாதன் கொஞ்சு மழலையில்
    உச்சரிக்க நாமம் உரத்தப்போ -உச்சி
    குளிர்ந்தவரின் உச்சியைக் கோதிய சிங்கம்
    வலிந்தூட்டல் சங்குப்பால் வாய்….!

    ஏந்தி இலக்குமியை யோக நரசிம்மமாய்
    சாந்தி தவழ்கின்ற சிங்கத்தை -மாந்தி
    திளைப்போர் வினைத்தூண் இளைத்து துரும்பாய்
    களைத்தல் கதையின் கருத்து….கிரேசி மோகன்….!

    பாதாதி கேசத்தைப் பார்த்திடல் வேண்டுமே!
    வேதாந்த தேசிகர் விண்ணப்பம் -போதந்த
    வேடன்(காலன்) வருகையில், சூடிக் கொடுத்தோள்,ஆ(பசு):
    தேடல்கோ பாலவிம்ச தி….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180922 Gopala Vimshati 20 -Anjalim yachamAnah-Arches 300gsm Wcol -10×14” lr

     

    நீல யமுனையில் நீந்திய கோபியர்
    சேலைப் புதையலை சேகரித்தோய் -நாளை
    சபையில் துரோபதை சோகம் களைந்து
    அபயம் அளிக்கத்தா னே….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    அதர்மமே யானாலும் அஞ்சாது செய்யும்
    சுதர்மம் சுதந்திர சொர்கம் -பதமுறும்
    பாதுகையே போய்ச்சொல் தூதுவனாய்க் கண்ணனிரு
    காதுகளில் காத்திருப்பே னென்று….!

    கீழ்கொவள வீடில் குடியேறப் போகின்ற
    ஆழ்கல்விக்(கு) ஈசா அயக்ரீவா -கூழ்கவலை
    போக்கதனைப் போக்க பிராட்டியுடன் ஏளினோய்
    காப்பெனக்கு உந்தன் குளம்பு….!

    ஊர்செட்டிப் புண்ணியத்தில் உய்யும் அசுவமே
    மார்தட்டிச் சொல்லும் மடையன்நான் -சீர்கொட்டும்
    வெண்பாக்கள் யாத்துன்மேல் வாழும் வரமருள
    பெண்பால் பாரதியே பார்….!

    சண்டித் தனமாய் சகத்தில் உழல்கின்ற
    நொண்டிக் குதிரைநான் நாரணா -அண்டி
    வருவாய் அருகே குருவாகிக் காட்டு
    பரிமேல் அழகா பரிவு….!

    அரிமுகம் கண்டேன் அறிமுகம் கொண்டேன்
    பரிமுகப் பெம்மான் பெயரால் -திருமகள்
    செய்யாள் மடியிருக்க அய்யா அயக்ரீவா
    கையால் அனுக்கிரஹம் காட்டு…..!

    புல்லும், படிகநீரும், புண்ணாக்கும் கொள்ளும்நான்
    அல்லும் பகலும் அளித்திடுவேன் -மெல்லும்
    தலம்செட்டிப் புண்ணியத்தில் தங்கும் பரியே
    பலனெட்டெட் ஆயகலை போடு….

    ஊர்செட்டிப் புண்ணியத்தில் உய்யும் அசுவமே
    மார்தட்டிச் சொல்லும் மடையன்நான் -சீர்கொட்டும்
    வெண்பாக்கள் யாத்துன்மேல் வாழும் வரமருள
    பெண்பால் பாரதியே பார்….கிரேசி மோகன்….!

    சிரமதில் கொள்ளை முறமதில் ஏந்தி
    பரிமுகன் உண்ண புரவிதன் குளம்பை
    இருபுஜம் வைக்க இருக்கையாய்த் தந்து
    உறவினில் தோழன் ஆனஞான தேசிகா….(கோபுலு சார் ஓவியம்….ஒரு தீபாவளி மலரில் பார்த்த ஞாபகம் பரியே….!)

    Share
  • க்ரேஸியைக் கேளுங்கள்….முன்னுரை…..!

    இந்தத் தொடரில் நான் பதில் சொல்ல மிகவும் கஷ்டப்பட்டக் கேள்வி….முதல் கேள்வி….கேட்டது கல்கி ஆசிரியர் சீதா ரவி….”வாராவாரம் கல்கியில் வாசகர்கள் கேள்விக்கு
    பதில் சொல்ல முடியுமா….?”….அன்றிரவு கனவில் நான் மகாபாரத ”நச்சுப்-பொய்கை” கரையில் நின்று கொண்டிருக்கிறேன்….கீழே தரையில் தருமன் உட்பட பாண்டவர்
    ஐவரும் மயங்கி மாண்டுக் கிடக்கின்றனர்….அப்போது ஒரு அசரீரி குரல் ”கிரேஸி….”யக்ஷ ப்ரச்னம்” என்றால் என்ன….?”….” அது ஒரு தீபாவளி பட்சணம்” என்று நான் உளற
    அப்போது பாண்டவர்கள் சார்பாக என்றும் எதற்கும் மயங்காத பொதிகை வேளுக்குடி கிருஷ்ணன் தோன்றி ”அட! சமத்தே ”என்பது போல என்னைப் பார்த்து சிரித்து விட்டு
    ”யக்ஷன் என்றால் யக்ஷன்….ப்ரச்னம் என்றால் கேள்வி” என்று சொல்லிவிட்டு வேய்ங்குழல் கிருஷ்ணனாக மாறி மறைந்து விட்டார்….அதேசமயம் விக்கிரமாதித்தியன் தோன்றி
    ” கிரேசி….கம்ப-ராமாயணத்தை எழுதியது யார்….?”என்று கேட்க….நான் அதற்கு ” யக்ஷன்” என்று சொல்ல, விக்கிரமாதித்தன்” பட்டி மவனே….கேள்வியிலேயே பதில் இருப்பது
    தெரியவில்லையா….கம்ப-ராமாயணத்தை எழுதியது கம்பர்” என்று பகர்ந்து விட்டு ”அந்த கேள்வியை சாய்ஸ்ல விட்டதா நினச்சுக்கறேன்….மணிமேகலையை எழுதியது யார்”
    என்று கேட்டு வேதாளம் போல என் தோளில் குந்தினார்….பளு தாங்காமல் நான் ”மணி” என்று பதில் சொல்ல என் தலை ரெண்டாயிரம் சுக்கல்களாக வெடித்தது….

    கனவும் கலைந்தது….என் மனைவி என்னை எழுப்பி அந்த வாரக் கல்கியைக் காட்டினாள்….அதில் அடுத்த வாரத்திலிருந்து ”கிரேசியைக்-கேளுங்கள்” தொடர் ஆரம்பிப்பதாக
    விளம்பரம்….அன்று ”எல்லாம் நல்லபடியாக நடக்க” நான் கபாலி கோவிலுக்குச் சென்றேன்….அங்கு தனது அமெரிக்க பேரனுடன் வந்த எனது எதிர் வீட்டு அங்கிள்
    பேரனின் கேள்வியால் பட்டபாட்டைப் பார்த்தேன்….ஸ்வாமிக்கு அபிஷேகம்….பேரன் தாத்தாவைப் பார்த்து ”தாத்தா….வாட் ஈஸ் கோயிங் ஆன்”
    என்று கேட்க, எ.வீ.தாத்தா ”காட் ஈஸ் டேகிங் பாத்” என்று அபிஷேகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்….அடுத்ததாக ஸ்வாமிக்கு அலங்காரம் செய்ய திரை போட்டார்கள்
    ….சஸ்பென்ஸ் தாங்காத சிறுவன் ”தாத்தா….இப்ப வாட் ஈஸ் கோயிங் ஆன்…?” என்று கேட்க, எ.வீ.தாத்தா”உம்மாச்சிக்கு டிரஸ் பன்ணறாங்க…” என்று அலங்காரத்தை அரைகுரை
    ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்….”என்ன தாத்தா….உம்மாச்சி குளிக்கறதை(அபிஷேகம்) பாக்க அலவ் பண்ணவங்க டிரஸ்(அலங்காரம்) பண்ணிக்கறதை மட்டும் ஏன்
    பாக்க அலவ் பண்ணல….” என்று கேட்க, மொழி பெயர்த்த எ.வீ.தாத்தா பதில் சொல்ல முடியாமல் என்னைப் பார்த்து முழி பெயர்த்தார்….விளையாட்டுப் பையன் கேள்விக்கே
    பதில் சொல்ல முடியாதபோது வாசகர் கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்லப் போறேங்கறதை நினைத்த எனக்கு அன்று கர்பக்கிருகத்தில் கர்பம் கலங்கியது….ஆழம்
    தெரியாமல் காலை விட்ட நான் முடவன்….இருந்தாலும் கல்கி என்ற கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டேன்….

    கல்கி ஒரு போஜ ராஜ சிம்மாசனம்….அதில் உட்கார்ந்தவர்கள் கட்டுத் தறியாக இருந்தாலும் கம்பன், காளிதாசன் போல கவி பாட ஆரம்பித்து விடுவார்கள்….வழக்கமாக
    பேட்டிகளிலும், நேருக்கு நேர் நிகழ்ச்சிகளிலும் ”கிரேசி….உங்கள் மறுபக்கம் என்னவோ ”….என்று கேட்பார்கள்….நான் பரிதாபமாக ”புற முதுகைக்” காட்டுவேன்….நான்
    கற்றது கையளவு (அதுவும் என்னை ஊக்குவிக்கும் நண்பர்கள் கையளவு)….கல்லாத உலகளவைக் இந்த கேள்வி-பதிலுக்காகக் கற்று, முதுகைக் காட்டாமல் முதன்முறையாக
    என் ஓரளவு மூளையைக்(ஈசான்ய-மூளையில் ஈஷிக்கொண்டிருந்ததை) காட்டினேன்…. கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் இந்த கேள்வி-பதில், வேள்வி-பதிலாக வெற்றிகரமாக
    நடந்தது என்றால் அதற்கு பிரசுரரித்த கல்கியும் கேள்விகளைப் பிரசவித்த வாசகர்களும்தான் காரணம்….மற்ற காரணங்கள்….

    சரித்திரத்தில் நான் தருமி அளவு தரித்திரம்….ஹாய்-மதன் ஆக முடியாது….ஜலதோஷ சயனஸ் தெரிந்த அளவு சயன்ஸ் தெரியாது…ஆக சுஜாதா லெவலுக்கு ”ஏன்? எதற்கு? எப்படி?”
    பாடறியேன் படிப்பறியேன்….காமெடி கலக்கியம் தெரிந்த அளவுக்கு கருத்தாழமான இலக்கியம் இம்மியும் தெரியாது….சிரிப்பூர் சாக்லேட் கிருஷ்ணனான என்னால் அமுதசுரபி
    திருப்பூர் கிருஷ்ணனாக ஆவது துர்லபம்….அந்துமணி எதார்த்தம், துக்ளக் சோவின் துல்லியம் இப்படி எந்தப் பக்கம் போனாலும் இடி….எதேச்சையாக என் நண்பன் சு.ரவி சொல்ல ”கண்டேன் கி.வா.ஜவை” ….அவரது கலைமகளில் வெளியான ”விடையவன்-பதில்களை” காலையும் மாலையும் நாக்கில் வேல் குத்திக் கொண்டு பாராயணம் செய்தேன்….அவரது
    வார்த்தை ஜாலத்தைக் கையாண்டு, நானும் கி.வா.ஜ (கிரேசி வார்த்தை ஜாலம்) ஆக நப்பாசைப் பட்டேன்….கி.வா.ஜவின் மகன் முருகன் என் பால்ய நண்பன் என்பதால், வேறு
    வழி இல்லாமல் கி.வா.ஜவின் ஆன்மா ”தொலையறது போ” ரீதியில் எனக்கு வழி காட்டியது….

    தமிழ், ஆங்கிலம்,இந்தி,லத்தீன்,இத்தாலி ஏன் மெளனம் இப்படி எல்லா மொழிகளுமே ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்….உற்றுப் பார்த்தால் ஜாடை தெரியும்….உரசிப் பார்த்தால்
    சிலேடை புரியும்….உதாரணம்….சமர்ப்பணம்….SOMEONEக்கு அர்ப்பணமே சமர்ப்பணம்….இந்தக் கேள்வி பதில் வெற்றிக்குக் காரணமான SOMEONEகள் அன்றிலிருந்து இன்று
    வரை SAMEONEஆக இருக்கும் , எனது புனே நண்பன் சு.ரவியும், திந(தி.நகர்) நண்பன் ”என்னைப் போல் ஒருவனாகிய” இரா.முருகன்….சுடச்சுட நான் ஸெல்லில் அனுப்பும்
    கேள்விக்கான பதில்களை ஆற அமர படித்து அபிபிராயமும் தருவார்கள்….அழகு படுத்தியும் இருக்கிறார்கள்….இந்தக் கேள்வி பதில்களில் நிறைய வெண்பாக்களைப் பார்க்கலாம்….
    புனேவிலிருந்து CELL வழியாக எனக்கு வெண்பா இலக்கணத்தை ஸெல்லிக் கொடுத்தவன் சு.ரவி….”நட்புக்கும் உண்டோ அடைக்கும் நாதாங்கி”….நன்றி நண்பர்களே….

    எனக்கு வந்த கேள்விகளிலேயே அதிகமாக வந்த கேள்வி ”கிரேசி….உங்களுக்குப் பின் நகைச்சுவையில் உங்கள் வாரிசு யார்….?”இந்தக் கேள்விக்கு விடை காண, எனது
    இரண்டாவது மகன்பத்பனாபனிடம், சில கேள்விகளைக் கொடுத்து வேடிக்கைப் பார்ப்பேன்….”காட்டுக்கு போன ராமரை கொசு கடிக்காதா….?” என்ற வாசகரின் விபரீதக்
    கேள்விக்கு ”கடித்துமலேரியா பரப்பும் கொசு பெண்-கொசு….பெண்-கொசு ராமரைக் கடிக்காது….ஏனென்றால் அவ்ர் ஏக-பத்தினி விரதன் ”என்ற பதிலைக் கூறி ஜாலிம்-லோஷன் தடவிக்கொள்ளும் அளவுக்கு என் மகன் புல்லரிக்க வைத்தான்….”பெத்தபொழுதில் பெரிதுவக்கும் தந்தைதன் பிள்ளையை-இத்தரைக்கு வாரிசெனும் போது”….குறள் கூறி மகிழும் அளவுக்கு எனக்குக்கிடைத்த போனஸ் இது….”உன் நன்றி வேண்டாம்….சொத்தில் பாதியை சன்மானமாகக் கொடு” என்கிறான்….வாயுள்ள பிள்ளை….

    முகம் தெரியாத ஆனால் முகவரி தெரிந்த, கேள்வி கேட்டு என்னைக் குடைந்த கல்கி வாசகர்கள் ,போஜ ராஜ சிம்மசனத்தில் ஏறும் போது இருபுறமும் இருந்து வினாக்கள்
    தொடுத்து விழி பிதுங்க வைக்கும் பதுமைகள்…..”கேள்வி கேட்பது கஷ்டமா ?….பதில் சொல்வது கஷ்டமா ?” என்ற கேள்விக்கு ”யாமறிந்த பதில்களிலே கேள்வி கேட்பது போல
    கஷ்டமானது எங்கும் காணோம்” என்பதுதான் என் பதிலாக இருக்கும்….”சார் என் வயது இருபத்தியெட்டு” என்ற என் நாடகக் கதாநாயகன் மாதுவின் பதிலுக்கு ஏற்ற
    கேள்வியை நான் ஒரு இரவு முழுக்க முழித்தேன்….” மாது உனக்கேன்ன ஒரு இருவத்தியேழு வயசு இருக்குமா….?” என்று மாதுவின் வீட்டுக்காரர் கேட்க, அதற்கு மாது” கூட
    ஒண்ணு சேத்துக்குங்க சார்” என்று சொல்ல ,பதிலுக்கு வீட்டுக்காரர் ”இருணூத்தியெழுவத்தி ஒண்ணா ” என்று கேட்க, அரங்கம் ஜோக்கால் அதிரும்….தோல்Vயில்
    ”V FOR VICTORY” இருப்பது போல கேள்’வி’யில் ”வி” FOR விடை இருக்கிறது….கல்கி வாசகர்கள் கேள்வி வீசகர்கள்….”கிரேசி நீ பெண்ணாக மாறினால்….கிரேசி நீ
    காணாமல் போனால்….கிரேசி நீ கடவுளானால் ” என்று கேள்விகள் கேட்டு, அதற்கு சமயோசிதமான பதிலை யோசிக்க இல்லாத கந்தை மூளையை கசக்க வைத்து
    கட்டிக் கொள்ள வைத்து கெட்டிக்காரனாக்கிய கல்கி வாசகர்களுக்கு வடிவேலுவாக ஒரு கேள்வி ”என்ன வச்சு காமெடி கீமடி பண்ணலியே….!”….

    வாசகர் தபாலில் வாராவாரம் வழக்கமாக ஒருவராவது இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பார்கள்….”உங்கள் நகைச்சுவைக்கு யார் காரணம்…?”….”யார்” என்பதை பொருத்தமாக
    இந்த முன்னுரையில் முழங்க விரும்புகிறேன்….நான் கும்பிடும் சாமி, நகைச்சுவைக்காக பிரத்தியேகமாக அவதரித்து, அப்புசாமியைப் பெத்த சாமி திரு.பாக்கியம் ராம’சாமி’….
    கடவுள் உண்டு என்று சொல்லும் ஆஸ்திகனையும், இல்லை என்று சொல்லும் நாஸ்திகனையும் நகைச்சுவையால் ”உண்டு-இல்லையென்று” ஆக்கும் ஹாஸ்திகன் இவர்….
    ஆள் பாதியான எனக்கு அணிந்துரையைக் கட்டிவிட்டு ஆடை பாதி தந்த அந்த ஆயிரங்காலத்து பயிருக்கு இந்த நேற்று முளைத்த நகைச்சுவைப் புல்லின் நன்றி…
    பாதி ஆடை தந்தது பாக்கியம் என்றால் அணிந்துரையாக மீதி ஆடை தந்து இந்த புத்தகத்தை மேம்படுத்தியவர் அமுதசுரபி ஆசிரியர் ” திருப்பூர் கிருஷ்ணன் ” சார்….
    அமுதசுரபியில் வெண்பாக்களில் ”ரமணாயணத்தை” எழுதவைத்து, என்னுள் இருக்கும் கவிஞனை எனக்கே கண்டு பிடித்து காட்டிக் கொடுத்த ” இலக்கிய கொலம்பஸ்”
    திருப்பூரார் எனக்கு வழிகாட்டி ஆற்றுப்படுத்தும் பொறுப்பூரார்….அவருக்கும் அடியேனின் நன்றி….

    கடைசி கடைசியாக என்னை கணினியில் எழுத கற்றுக் கொடுத்த ச.ந.கண்ணனுக்கு நன்றி….போன வாரத்திற்கு அடுத்த வாரம் பதில் அனுப்பும் இந்த லேஸி-மோகனை
    தலையெழுத்தே என்று தாங்கிக் கொண்ட கல்கி ஆசிரியர் குழுவைச் சேர்ந்த கதிர் ”பாரதி, சூர்யாக்களுக்கு”, அடுத்த ஜென்மத்தில் ஆழ்வாராகப் பிறந்து ”பல்லாண்டு பாடி”
    வாழ்த்துகிறேன்….ஒவ்வொரு வாரமும் கல்கியைச் சேர்ந்த ”கண்ணப்பனும்-தாமுவும்” அடுத்தவார விடைகளுக்கான வினாக்களைக் கொண்டு வருவார்கள்….விடைகளுக்காக நான்
    இல்லாத முடியை பிய்த்துக் கொள்வதை வக்கிரமாக ரசிக்கும் என் வீட்டார் அப்போது ”வினா வேங்கடேசம் வராரே! வராரே!….விடை வேங்கடேசம் தராயோ! தராயோ!” என்று என்னை எழுப்பி சுப்ரபாதம் பாடுவார்கள்….சிரமத்தைப் பார்க்காமல் சீன யாத்திரிகர்கள் ”யுவாங்-சுவாங்” போல வாசகர் கேள்விகளை ஏந்தி வந்த ”கண்ணப்பன்-தாமு”வுக்கு நன்றி….

    முடிவாக….கல்கி வாசகர்களுக்கு பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் ”நான் யார்” கேள்வியை வைக்கிறேன்….திருப்திகரமான விடை சொல்லும் வாசகருக்கு குருவாயூர் துலாபாரத்
    தராசில் குந்த வைத்து எடைக்கு எடை என்னையே தருகிறேன் போறுமா….!

    ——————————————————————————————————————————————————————————————————————————-

    Share
  • நெம்பர்40, ரெட்டைத் தெரு….! by இரா.முருகன்….!

    முன்னுரை by கிரேசி மோகன்….!
    ———————————————————————

    கல்கி ”க்ரேஸியைக் கேளுங்களில்” கேட்டு நான் இன்னமும் பதிலளிக்காத கேள்வி….” உங்களுக்குப் பிடித்த வசனம் எது?(நீங்கள் எழுதிய சினிமா வசனமாகவும் இருக்கலாம்)….நான் பார்த்த சினிமா, நாடகங்களில் தேடியதில் சந்துஷ்டியாக ஏதும் அகப்படவில்லை….சினிமா வெண்ணெய்யை விட்டு சிறுகதை-நாவல் நெய்யில் அலைய ஆரம்பித்தேன்….”கண்டேன் வசன சீதையை”…. ”சாமி….இந்த தராசு எளுதின காயிதத்துக்கும் எளுதாத காயிதத்துக்கும் உள்ள எடை வித்யாசம் காட்டும்”-தி.ஜானகிராமனின் சிறு கதையில் வரும் இந்த வசனம் ”எதுக்கு நீயெல்லாம் வசனம் எழுதறே?” என்ற ரீதியில் என்னை விசனமாகப் பார்த்தது….” இனிமே வசனம் எழுதினே….உடைஞ்ச கைக்கும் உடையாத கைக்கும் உள்ள வித்யாசத்தை தராசு காட்டும்” என்ற தோரணையில் அச்சுறுத்தியது நான் அடுத்ததாகப் படித்த வசனம்….அது, அசந்தர்ப்பமாக நிகழ்ந்து விட்ட கர்பத்தைக் கலைக்க வந்த பெண்ணிடம் மருத்துவச்சி கூறுகிறாள் ” நாளைக்கு காலீல ஒண்ணும் சாப்பிடாம வெறும் வயத்தோட வாம்மா…வெறும் வயத்தோட அனுப்பிடறேன்”-இரா.முருகனின் ”நாள்” சிறுகதையில் வரும் இந்த வசனத்தை நான் சொல்லாத ”நாள்” கிடையாது , சொல்லாத ”ஆள்” கிடையாது, கமலஹாசன் உட்பட….சிறு-கதை தொகுப்புக்கள், அரசூர்-வம்சம் நாவல் என்று பாராயணம் செய்ததில், இந்த சீதக்காதிக்கு நான் சீத்தலைச் சாத்தனாராகி விட்டேன்….

    ஹாஸ்யம் அளவுக்கு எனக்கு ஓரளவு ஜோஸ்யமும் தெரியும்….கையைப் பார்த்தல்ல….கை-எழுத்தைப் பார்த்து….வாத்தியார் சுஜாதா அமரராகவில்லை….சீடன் இரா.முருகனுக்குள் கூடு விட்டு கூடு பாய்ந்திருக்கிறார்….ஸ்ரீரங்கத்தனமாகட்டும், சிலிகான்தனமாகட்டும், சுஜாதாவுக்கும்-முருகனுக்கும் குறைந்த பட்ச ஒற்றுமை குமுதம் பாஷையில் ஆறு உண்டு….எதையும் கதையாக்கும் திறன், எழுத்தில் ஹாஸ்யம் கலந்த அமானுஷ்யம், உரை நடையில் ஒலிம்பிக்ஸ் வேகம், கமாவில் முற்றும் போடும் தைரியம், விஞ்ஞான பரிபாஷைகள், சாதுர்யமான சம்பாஷனைகள், மரபு PLUS அமரபு கவித்துவம்….இப்படி சுஜாதா போல இந்த முருகனுக்கு ஆறு முகம் உண்டு….பூ கட்டிப் பார்த்தேன், ரெண்டு விரலை நீட்டி என் பேரனைத் தொடச் சொன்னேன், கிளிக்கு தானியம் கொடுத்து CARDஐ எடுக்கச் சொன்னேன்….எல்லா ஜோஸ்யத்திலும் ”வருங்கால சுஜாதா- இரா.முருகன்” என்றுதான் வந்தது….பலிக்கவைக்க வேண்டியது முருகனின் கணினிக் கையில்தான் இருக்கிறது….

    இவரோ இலக்கியவாதி….நானோ காமெடி கலக்கியவாதி….பிரபந்தத்திற்கு ”பெரிய-வாச்சான் பிள்ளையைப்” போல நான் வாஞ்சையான நட்பால் முருகனுக்கு ”வந்து-வாச்சான் பிள்ளை”….முன்னுரை எழுத இந்த தகுதி போதுமா என்று யோசித்துப் பார்த்தபோது ”ஸாரி கொஞ்சம் ஓவராகப் பட்டது….சரித்திரக் கதைகளில் மன்னர் வருவதற்க்கு முன்பு, கட்டியங்காரன் வருவதில்லையா?….அவனிடம் என்ன பாண்டித்தியமா எதிர் பார்க்கிறோம்….”பராக் பராக்” சொல்லத் தெரிந்தால் போதாதா, என்று என்னை நானே சுதாரித்துக் கொண்டேன்….

    மறுபடியும் சுஜாதா….அசப்புல பாத்தா, ஸ்ரீரங்கத்து தேவதையும், ரெட்டைத் தெருவும் ஜாடைல ஒண்ணுதான்….தாயைப் போல பிள்ளை….என்னைக் கேட்டா முருகன் , இதுக்கு ”ரெட்டைத் தெரு ராட்சசர்கள்” என்று கூட நாமகரணம் சூட்டியிருக்கலாம்….இது முருகனின் பால்ய-BIOGRAPHY….”YOUTH IS WASTED ON YOUNG PEOPLE” என்பார் OSCAR-WILDE….இதையே ”கிளரொளி இளமை கெடுவதன் முன்னர்” என்பார் நம்மாழ்வார்….முருகன் முதிர்ச்சியோடு இளமையில் இருந்திருக்கிறார்….எழுத்தாளனுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்யாசம்….எழுத்தாளன் பார்க்கிறான்….மற்றவர்கள் பராக்கு பார்க்கிறார்கள்….பால்யத்தில் பராக்குப் பார்த்ததை, எழுத்தாள எதிர்பார்ப்பில் த்ருண மாத்திரம் விடாது பதிவு செய்தது இவரது தீவீரத்தைக் காட்டுகிறது….EMOTIONS RECOLLECTED IN TRANQUILITY என்று WORDS-WORTH சொன்னது போல தான் ”கற்றதை, பெற்றதை, விற்றதை அப்புறம் மற்றதையெல்லாம்” ஆற அமர அசைபோட்டு ரெட்டை(தெரு) இலையில் பறிமாறியிருக்கிறார் இந்த டிஜிடெல் கேண்டீன்காரர்….தான் OBSERVE செய்ததை அறுசுவையோடு SERVE செய்திருக்கிறார்….என் மைலாப்பூரிலும் ரெட்டைத் தெரு ரகளைகள், ரகசியங்கள் உண்டு….அம்பது வருடங்கள் மைலாப்பூரில் நானும் மாணிக்கங்களைப் பார்க்காமல் வெறும குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன்….எழுதலாமென்றால் ”என் பெயரைத்” தவிர வேறு எதுவும் எழவு ஞாபகத்திற்கு வர மாட்டேன் என்கிறது….நான் அதிசயமாக எழுத வந்தவன்….ஆனால் முருகன் அவசியமாக எழுத வந்தவர்….

    சிலருக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு….நாம் ஒரு நல்ல புத்தகத்தை படிக்கலாம் என்று ஆரம்பிக்கும் போது, எசகேடாக எதிரில் வந்து, ” இது பிரமாதமான புக்….நான் ஏற்கனவே படிச்சாச்சு” என்று, அதில் ஒரு வரி விடாமல் ஒப்பித்து விட்டு, நம்மை செவிடனாக பாவித்து ”நான் சொன்னதை காதுல போட்டுக்காதீங்க….நீங்களும் படிச்சு பாருங்க”என்பார்கள்….நாம் அதற்கு பிறகு அந்த புத்தகத்தைப் படிக்கும் போது , நமக்கு என்னவோ ”ரெண்டாம் தாரம்” கல்யாணம் செய்து கொண்டது போல இருக்கும்….அதனாலேயே இந்த தொகுப்பில் வரும் சம்பவங்களை, அது தொடர்பான ஹாஸ்யங்களை, முந்திரி கொட்டை போல சொல்லாமல், உள்ளங்கை நெல்லிக் கனி போல, நீங்களே அனுபவிக்க விட்டு விடுகிறேன்…. ஹாஸ்யப் புத்தகத்தைப் படிப்பது முதலிரவைப் போல….”சொல்லித் தெரிவதில்லை சிரிப்புக் கலை”….

    சமீப காலத்தில் முருகனால் நான் பெற்ற பேறுகளைச் சொல்லப் போனால், இந்த முன்னுரை எனது சுய-சரிதையின் 56வது அத்தியாயமாகி விடும்….கண்ணன் பிறந்த கோகுலாஷ்டமி இரவில் எழுதியபடி சொல்கிறேன்….இவரது கற்பனை ஞானமும், சொற்களின் சாகித்யமும், பீடம் ஏறப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை….சொல்லிக் கொண்டே போகலாம் கிழக்கு வெளுக்கும் வரை….கண்ணதாசன் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது….” சொல்லச் சொல்ல இனிக்குதடா இரா.முருகா….”
    ——————————————————————————————————————————————————————————————————————————–

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180926 -Trivikrama -Dehalisha stuthi 9×12 strathmore tinted paper -lr

    ஆன்மாவாய் வந்தது அங்குஷ்ட வாமனம்
    வான்மேவும் விக்கிரமன், வாசனைகள் -நான்மேவ
    மூவாசை மண்களை மேலும்கீழ் போய்த்தாண்டி
    ஆவேச நானை அழிப்பு….!

    உக்கிரமாய் வாமனன் ஓர்புல்லால் குத்திட
    சுக்கிரன் கண்ணிழக்க, சொட்டியது -அர்க்கியநீர்.
    விக்கிரமன் ஆகி விசுவரூபம் காட்டிநின்றான்
    அக்கணம் வாமனன் அங்கு….கிரேசி மோகன்….!

    Share
  • பேராசிரியர் ச. அகத்தியலிங்கனாரின் “சாகாவரம் பெற்ற சங்கப் பாடல்கள்”

    முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர்  – தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

    பேராசிரியர் ச. அகத்தியலிங்கனார் தமிழ்மொழிக்குச் செய்துள்ள பணிகள் ஏராளமானதாகும். மொழியியல் ஆய்வுகளில் தன்னிகரற்று விளங்கினாலும். மொழியியல் நோக்கில் சங்க இலக்கியத்தையும் அணுகி, உலக இலக்கியங்களில் மிக உன்னதமான நிலையினைத் தமிழ்மொழி இலக்கிய, இலக்கணங்கள் பெற்றுள்ளதனை ஆய்வுவழி வெளிப்படுத்தியுள்ளார்.

    பேராசிரியர் அகத்தியலிங்கனார் சங்க இலக்கியங்களின் செவ்வியல் தன்மைகள் குறித்துப் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றுள், “சாகா வரம் பெற்ற சங்கப் பாடல்கள்” என்னும் ஆய்வுநூலில் பின்பற்றியுள்ள ஆய்வு நெறிகள் குறித்து இவண் விளக்கப்படுகின்றது.

    தமிழ் மொழியில் இடம்பெற்றுள்ள இலக்கியங்களுள் சங்க இலக்கியங்கள் தனித்திறம் பெற்றவையாகும். மூவாயிரம் ஆண்டுப் பழமையுடைய சங்க இலக்கியங்கள் இன்றும் படிப்பவர் உள்ளங்களில் எழுச்சியையும், உணர்ச்சியையும் ஊட்டவல்லனவாய்த் திகழ்வதற்கு அதில் இடம்பெறும் கருத்துக்களும் ஒரு காரணமாக அமைந்துள்ளன. இதன் பொருட்சிறப்பில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்த அகத்தியலிங்கனார், தான் பயின்றபோது பெற்ற அனுபவத்தைப் பிறர்க்கு எடுத்துரைக்கும் நோக்கில் இந்நூலினைப் படைத்துள்ளார் என்பது இதன் முன்னுரையால் புலனாகின்றது.

    சங்க இலக்கியத்தின் தனிச்சிறப்பினைக் குறித்து, “சங்க இலக்கியம் ஒரு செவ்வியல் இலக்கியம். செவ்வியல் இலக்கியம் என்றாலே நிலைபேறும் நீங்காது நெஞ்சில் நிற்கும் தன்மையும் கொணடு விளங்கவேண்டும் என்ற நிலையில் சங்க இலக்கியமும் நீண்ட நிலைபேறும் நெஞ்சிலிருந்து நீங்காத நிலையும் கொண்டு தமிழ் இலக்கிய உலகில் தனிப்பெரும் இலக்கியமாக விளங்குவது. செவ்வியல் இலக்கியங்கள் என்று கருதப்படும் கிரேக்க, ரோம, ஹீப்ரு, சமஸ்கிருத இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இதன் பெருமையும் தனித்தன்மையும் தெரியவரும்” என்று இந்நூலின் முன்னுரையில் எடுத்துரைக்கின்றார்.

    “இந்நூலில் குறுந்தொகையில் இடம்பெறும் தலைசிறந்த நான்கு பாடல்களைக் கொண்டு ஆராய்ந்து கூறப்பட்டுள்ளது. அப்பாடல்களின் கருவையும், செம்மாந்த போக்கையும், செறிவுநிறைந்த கவிதை உத்திகளையும் செவ்வியல் பண்புகளையும் இன்னோரன்ன பிறவற்றையும் எடுத்துரைப்பதே இந்நூலின் நோக்கம்” என்று தம்   ஆய்வுப்பரப்பினையும், ஆய்வின் நோக்கத்தினையும் எடுத்துரைத்துச் சொல்கின்றார். இவை ஒரு செறிவார்ந்த ஆய்வாளர்க்குரிய நிலையினையும், அவரது திடமான கொள்கை நெறியினையும் எடுத்துரைப்பதாய் அமைந்திருக்கின்றது.

    சொல்லும் கருத்தின் சொல்நேர்த்தி, சொல் தேர்வு, ஆய்வின் தேவைக்கேற்ற உத்திகள், எளிமையான சொற்கள்; வலிமையான கருத்துக்கள் என இந்நூலில் அகத்தியலிங்கனார் எல்லா இடங்களிலும் நிறைந்து விளங்குவதனை இந்நூலால் தெளிவாக அறிந்துகொள்ள முடிகின்றது.

    இந்நூலில் குறுந்தொகையில் இடம்பெறும் “யாயும் ஞாயும் யாராகியரோ?”, “நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று”, “சிறுகோட்டுப் பெரும்பழம்”, “காலே பரிதப்பினவே” என்னும் நான்கு பாடல்கள் குறித்து ஆய்வுகள் நிகழ்த்தியுள்ளார்.

    இப்பாடல் குறித்த ஆய்வுகளில் பேராசிரியர் அகத்தியலிங்கனார் பின்பற்றியுள்ள ஆய்வுநெறிகளாக,

    1. உருவம் குறித்து விளக்குதல்
    2. கூற்று முறையினை எடுத்துரைத்தல்
    3. உள்ளடக்கம் குறித்து விளக்குதல்
    4. பொருள்விளக்கம் தருதல்
    5. செவ்வியல் தன்மையைப் புலப்படுத்துதல்
    6. ஒப்புநோக்கி எடுத்துரைத்தல்
    7. உலகியலோடு உணர்த்துதல்

    என்பனவற்றைக் காணமுடிகின்றது. இவை குறித்துத் தனித்தனியே விளக்கப்படுகின்றன.

    1. உருவம் குறித்து விளக்குதல்

    கவிதைக்குரிய சிறப்புக்கூறுகளுள் அதன் உருவம் குறிப்பிடத்தக்கதாகும். சிறிய அடிகள், குறைவான வாக்கியங்கள் கொண்டு உயர்ந்த நோக்கில் படைக்கப்படும் கவிதைகள் காலத்தை வென்றுவாழும் தன்மை கொண்டு விளங்கும் என்பதனைக் குறுந்தொகைப் பாடல்கள் கொண்டு விளக்குகின்றார்.

    “சிறந்த கவிதை என்பது செம்மையான பாடுபொருளால் மட்டுமே சிறப்பதில்லை. அப்பாடுபொருளையும் எவ்வாறு கவிதை நோக்கில் கவிதை வளத்துடன் கூறுகின்றது என்பதையும் பொறுத்துத்தான் அதன் வெற்றி உள்ளது என்பதையும் உணரலாம்” 1 என்று கவிதைக்குரிய உள்ளடக்கம் குறித்து விளக்கின்றார்.

    சங்க இலக்கியப் பாடல்கள் இன்றும் சுவை மிகுந்து காணப்படுவதற்குக் காரணம் அதில் இடம் பெறும் சொல்லாட்சிகளே. அவற்றுள் ஒரே சொல் பலபொருள்களில் இடம்பெறுவதும், வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வரத்தொடுப்பதும் தனிச்சிறப்பு எனலாம்.

    “கவிதை உருவாக்கத்தில் ஒரே மாதிரியான செய்திகளை ஒன்றன்பின் ஒன்றாக, அடுக்கு அடுக்காகக்கூறி, வாசிப்போர் உள்ளத்தில் ஒருவகையான ஒருமை உணர்ச்சியை ஏற்படுத்துதல் கவிஞர்களிடையே காணப்படுகின்ற ஒரு சிறந்த கவிதை உத்தியாகும். சங்கப் பாடல்களில் இத்தகைய உத்தியை ஏராளமான பாடல்களில் காணலாம்” என எடுத்துக்கூறி,

    “காலே பரிதப் பினவே கண்ணே

    நோக்கி நோக்கி வாள்இழந் தனவே

    அகல்இரு விசும்பின் மீனினும்

    பலரே மன்ற இவ்வுலகத்துப் பிறரே.”       (குறு. 44)

    என்னும் குறுந்தொகைப் பாடலை எடுத்துரைக்கின்றார். இந்தப் பாடல்கள் எடுத்த எடுப்பிலேயே வாசிப்பவர் உள்ளத்தில் சென்று சேருவதற்குக் காரணம் உடன் போக்குச் சென்ற மகளைத் தேடிய நிலையில் உண்டான களைப்பை, களைப்பு உணர்வை மீண்டும் மீண்டும் கூறுகிற நிலைதான் என்பதை யாரும் உணர முடியும் என்று எடுத்துரைக்கின்றார்.

    தமிழ் இலக்கியப் பரப்பில், ஒரே மாதிரியான அல்லது ஒரே இலக்கணக்கூறுகளைப் பயன்படுத்தி ஒப்பற்ற பல பாடல்கள், கவிதைகள் உருவாகியிருப்பதை அன்றுமுதல் இன்று வரை காணமுடியும் என்று எடுத்துரைக்கின்றார். சங்க இலக்கியப் பாடல்கள் சிறந்து விளங்குவதற்கு அதில் இடம்பெற்றுள்ள சொல்லாட்சிகளும், உருவ முறைகளும் ஒரு காரணியாக அமைந்திருக்கின்றது என்பது அகத்தியலிங்கனாரின் முடிபான கருத்தாகும்.

    “யாயும் ஞாயும் யாரா கியரோ

    எந்தையும் நுந்தையும் எம்முறை கேளீர்”

    என்னும் பாடலடிகளில் இடம்பெற்றுள்ள கவிதைக்கூறுகள் குறித்து எடுத்துரைக்கும் ஆசிரியரின் திறம் போற்றத்தக்கதாகும். இப்பாடலடிகளில் இடம்பெற்றுள்ள முரண் தொடைகள் குறித்தும் விளக்குகின்றார்.

    ஓசை இன்பத்திற்கு அடிப்படைய யாப்பு. பொருள் இன்பத்திற்கு அடிப்படையாக இருப்பது மொழியமைப்பு. இந்த இரண்டையும் இணைத்து ஒரு சிறந்த இரண்டறக்கலந்த கலவையாக மாற்றி ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்தரியாதவாறு செய்வதே கவிதைக்கலை. யாப்பில் கவிதைமொழி அமைப்பும், கவிதையின் மொழி அமைப்பில் யாப்பும் இருக்கும். இவற்றை இணைப்பதில் தான் கவிஞனின் திறம் உள்ளது. அத்தகு திறம் சங்கப் புலவர்களிடம் நிறைந்திருந்ததாக எடுத்துரைக்கின்றார் பேராசிரியர். 2

    1. கூற்று முறையினை எடுத்துரைத்தல்

    சங்க இலக்கியங்கள் கூற்று முறையில் அமைந்திருக்கின்றன. படைப்பாளன், படைப்புக்கான ஒரு சூழலை ஏற்படுத்தி, அதைப் பிறர் வாயிலாகப் படிப்பவன் உள்ளத்தில் பதிய வைக்கின்றான். இதில் படைப்பாசிரியர் நேரடியாகத் தன் செயலைச் செய்யாமல், பிறர் கூற்றின் வாயிலாக வெளிப்படுகின்றான். இவ்வாறு பிறர் வாயிலாக  வெளிப்படும் திறனும் சங்க இலக்கியத்தின் செவ்வியல் தன்மைக்கு ஒரு காரணியாக அமைந்திருப்பதாகக் கூறுகின்றார் ச. அகத்தியலிங்கனார்.

    “சங்க இலக்கிய அகப்பாடல்கள் எல்லாம் அகமாந்தர்கள் தங்கள் தங்கள் வாயினால் கூறுவதாக ஆக்கப்பட்ட பாடல்களே”3 என்பர்.

    “தாம் கூற வந்த கவிதைப்பொருளை வாசிப்போன் உள்ளத்தில் நீங்காது நிலைபெறச் செய்வதற்காகத் தான் தலைவன் வாயில் வைத்துக் கூறுவது போன்று கூறுகின்றார். ….ஒற்றுமையுடைய, அல்லது ஒரே மாதிரியான செய்திகளை அடுக்கு அடுக்காகக் கூறி அதன் பின்னர் கூற வேண்டிய பொருளையும் கூறவேண்டிய நிலையில் கூறும்போது தான் ஒருவகைக் கவிதை உணர்வும், கவிதை அழகும் உண்டாகும் என்பதையும், அந்நிலையில்தான் வாசிப்போன் உள்ளத்தில் கவிதை உணர்வுடன் கவிதைப் பொருளை உணரவைக்கமுடியும் என்பதையும் நன்கு அறிந்த செம்புலப் பெயனீரார் இத்தகைய செம்மையான உத்தியைக் கையாண்டுள்ளார்” 4 என்று எடுத்துரைக்கின்றார்.

    சங்க இலக்கியங்களில் கூற்று என்பது அமைந்துள்ள முறைமை குறித்து, “கூற்று நிலையில் அந்தந்த கதை மாந்தர்களே தத்தம் எண்ணத்தையும், உணர்வையும் கூறும்போது உண்மையான ஒரு தோற்றத்தையும் உணர்ச்சியையும் தந்து நிற்கக் காணலாம். எனவே, உணர்வை வாசகர்கள் உள்ளங்களிலே எழுப்புவதற்கு இதனை ஒரு நல்ல உத்தியாகக் கவிஞர்கள் கையாண்டிருக்கலாம்” என்றும், “சங்க காலக் கவிஞர்கள் சான்றோராகவும், ஆன்றோராகவும் வாழ்ந்த நிலையில் காதல் எண்ணங்களையும் நிகழ்ச்சிகளையும் தாங்கள் தங்கள் உணர்வினைக் கூறுவது போல் அமைந்துவிடக்கூடாதே என்று எண்ணியும் கூட இந்தக் கூற்று வடிவத்தைக் கையாண்டிருக்கலாம். எனினும் சங்க இலக்கியக் கர்த்தாக்கள் தங்கள் கவிதைகளைத் தற்சார்பு நிலையில் ஆக்க விரும்பவில்லை என்றும் அந்த நிலையைத் தவிர்த்துப் பொதுச்சார்பு நிலையில் தங்கள் கவிதைகளை ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கூற்று என்ற அருமையான ஒரு அமைப்பு உத்தியை அவர்கள் கையாண்டனர் என்று கருதுவதே சிறப்பாகும்” 5 என்றும் எடுத்துரைக்கின்றார்.

    சிறந்த கவிஞர்கள் தாங்கள் கூறப்போகும் கவிதைப் பொருளை மிக அருமையாக முதலியே குறிப்பாகக் காட்டிவிடுவார்கள். இது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கலாம். மிகச்சிறந்த கவிஞர்கள் மறைமுகமாக மிக அருமையாகக் குறிப்பிட்டுக் கோடிட்டுக்காட்டி விடுவர். இந்நிலையில் செம்புலப் பெயனீரார் தலைவன் தலைவியர் உள்ளங்களின் சங்கமத்தை மிகமிக நுணுக்கமாகக் காட்டிவிடுவது நினைந்து மகிழ்வதற்குரியது என்று போற்றவும் செய்கின்றார்.

    இவ்வாறு சங்க இலக்கியங்கள் கூற்று வடிவில் நிற்பதால் தான் அவை இன்றும் நிலைத்து நிற்கின்றன என்று எடுத்துரைக்கின்றார்.

    1. உள்ளடக்கம் குறித்து விளக்குதல்

    கவிதையின் உள்ளடக்கமாகக் கரு என்பது அமைகின்றது. கரு என்பது கவிதையின் உள்ளீடாக அமைவது ஆகும். ஒரு பாடல் சிறந்த நிலையினைப் பெறுவது அதன் உருவத்தாலும், உள்ளடக்கத்தாலும் ஆகும். “உலகப் பொதுமையைத் தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு தலைசிறந்த கருவினைக் கொண்டவை சங்கப் பாடல்கள்” 6 என்பது பேராசிரியர் கருத்தாக அமைந்துள்ளதனைக் காணமுடிகின்றது.

    ஒரு சொற்கலையாக்கத்தின் சிறப்புக்கு அதன் கரு அல்லது பாடுபொருள் மட்டும் சிறந்திருந்தால் போதாது. எந்த ஒரு உணர்வையும் பல்வேறு நிலைகளில் வெளிப்படுத்தலாம். ஆனால், கவிஞன் தேர்ந்தெடுப்பது ஒரே வகைதான். அந்த வகை கற்பனை வளமும் கவிதைப் பண்பும் வாசகனின் வாழ்வைத் தொடும் நிலையும் நிறைந்ததாக இருக்கும்போது கவிதை வெற்றி பெற்றுவிடுகின்றது.

    ஒரு கவிஞன் அல்லது நாடக ஆசிரியன் அல்லது எழுத்தாளன் தன்னுடைய கலையாக்கத்திற்குரிய கருப்பொருளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். தான் படைக்க விரும்புவது நிச்சயமாக வெற்றிபெறும் என்ற நம்பிக்கையுடன் அவன் தன் படைப்பினை வெளிப்படுத்துகின்றான். இந்த நம்பிக்கையுடன் படைக்கப்பட்டனவே சங்க இலக்கியத்தில் படைக்கப்பட்டுள்ள தலைசிறந்த கவிதைகள் என்று எடுத்துரைக்கின்றார்.

    காதலின் பரிணாமத்தைக் கூறுவது தான் குறுந்தொகையின் மூன்றாவது பாடலான “நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று…” என்று தொடங்கும் பாடல். பரந்த நிலத்தையும், உயர்ந்த வானையும் ஆழக்கடலையும் எடுத்துக்காட்டி காதலின் பரிணாமத்தை மூன்று உவமைகளின் மூலம் மிக அழகாகக் கூறிநின்றார். அதிலும் ஒரு முகப்போக்கில் ஒரே மாதிரியான வாக்கியங்களில், ஒரே மாதிரியான வினைச்சொல்லில் ஒரே மாதிரியான ஒப்புமைத் தொடரில் கூறி நிற்பது அறியத்தக்கதாகும்.

    சங்க இலக்கியத்தின் முக்கியமான கருவே, தலைவன் தலைவியரிடையே காணப்படும் காதலின் பரிமாணம் தான். சங்க அக இலக்கியம் ஒரு ஆண், ஒரு பெண் இவர்களிடையே காணக்கிடக்கும் காதலை அடிப்படையாகக் கொண்டது. இக்காதலின் பரிமாணம், அதன் பவித்திரம், அதன் வேகம், விறுவிறுப்பு, அதன் தெய்வீகம், அது உண்டு பண்ணும் மாற்றம், அதனால் ஏற்படும் பல்வேறு விளைவுகள் போன்றவற்றை மையமாகக் கொண்டவை தான் சங்க அகப்பாடல்கள். சிறந்த அகப்பாடல்கள் எனக் கருதப்படும் பாடல்கள் எல்லாம் இதனை அடிப்படைக் கருவாகக் கொண்டவை தாம்” 7 என்று எடுத்துரைக்கின்றார்.

    1. பொருள் விளக்கம் தருதல்

    சங்கப் பாடல்களுக்கு ஆய்வுநோக்கில் விளக்கம் தர முனைந்த பேராசிரியர், அப்பாடல்களின் பொருள்விளக்கத்தினை நயத்துடன் எடுத்துரைத்துள்ள திறம் போற்றத்தக்கதாய் அமைந்துள்ளது. திறனாய்வாளன், தான் ஆய்வுசெய்ய விரும்பும் பொருளில் ஆழ்ந்த உடுபாடும் பற்றுதலும் கொண்டிருத்தல் வேண்டும். அப்போது தான் ஆய்வுகள் பயனுள்ளதாய் அமைந்திருக்கும் என்னும் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், தான் ஒரு மிகச்சிறந்த சுவைஞராய் முதலில் நின்று, பின்னரே பாடல்களுக்குப் பொருள்விளக்கம் தரமுனைந்துள்ள திறம் பேராசிரியரின் தனிச்சிறப்பினை எடுத்துரைப்பதாய் அமைந்துள்ளது.

    “காலே பரிதப்பினவே” என்னும் பாடலில், “தலைவி உடன்போக்குப் போய்விடுகின்றாள். தோழி செவிலிக்கு உரைக்கின்றாள். செவிலியோ ஒரு சிறந்த தாய். செம்மையான உணர்வும், சிறந்த பண்பும் உடையவள் தான். ஆனால் அதே நேரத்தில் தான் பேணி வளர்த்த தலைவியின் போக்கு சரியாகத் தோன்றவில்லை. எங்கே போய்விடுவாள்? எப்படிப் போய்விடுவாள்? எனக்குத் தெரியாத இடம் எங்கே என்று எண்ணுகின்றாள்.

    சுரத்திடைச் சென்ற தலைவியைத் தேடுகின்றாள்; தேடுகின்றாள்; தேடிக்கொண்டே செல்லுகின்றாள். நடக்கின்றாள். கடுமையான வெயில். காட்டுப்பாதை. கால்பட்ட இடம்எல்லாம் கடும் சுரத்தின் வெம்மை. வெந்து போகின்றாள். விரக்தி மெல்ல மெல்ல தலை தூக்குகின்றது. எனினும் உள்ளம் தளரவில்லை. ஆனால், கால்தளர்ந்து விடுகின்றது. தள்ளாடி விடுகின்றது. எதிரே எத்தனை எத்தனையோ இளம் தலைவன் தலைவியர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். தன் மகளும் அவள்தன் தலைவனுமா? என்று எட்டி எட்டிப்பாய்ந்து ஓடிப் பார்க்கின்றாள். ஆனால், அவர்களோ பிறர். பலர் வருகின்றனர். ஆனால் தன் மகள் இல்லை. அவள் தலைவனும் இல்லை. உள்ளமும் தளருகின்றது. இந்தப் பின்னணியில் தான் வெள்ளிவீதியார் தன் சாகாவரம் பெற்ற பாடலின் முதல் அடியை இல்லை முதல் வாக்கியத்தை ‘காலே பரிதப்பினவே’ என உணர்வுடனும் கவிதைப் பண்புடனும் கூறுகின்றாள்” 8 என்று பாடலின் சுவையோடு ஒன்றிப்போய் விளக்கும் திறன் பேராசிரியருக்கு மட்டுமே சாலும்.

    1. செவ்வியல் தன்மையை எடுத்துரைத்தல்

    சங்க இலக்கியங்கள் சுயச்சார்பு இல்லாமல் பொதுச்சார்பு நிலையில் இயங்குவதனால் அவை செவ்வியல் தன்மையைப் பெற்று விளங்குகின்றன என்று எடுத்துரைக்கின்றார். எந்த வித உணர்வையும் பொதுமைப்படுத்திக் கவிஞனின் எந்த விதமான நேரடியான தாக்கமும் இல்லாமல் இருப்பதற்காகத்தான் சங்க காலக் கவிஞர்கள் கூற்று என்ற சக்தி வாய்ந்த ஒரு உத்தியை உருவாக்கி நின்றனர். எந்த ஒரு அகப்பாடலிலும் கவிஞனை நேரடியாகக் காணுவதில்லை; கேட்பதில்லை; அவனுடைய வாழ்வையோ, வாழ்வுத் துன்பங்களையோ நாம் உணருவதில்லை. அவர்களின் மன நிலையையே உணருகிறோம்.

    சங்க இலக்கியம் ஒரு செவ்வியல் இலக்கியம். சொல்ல வேண்டிய செய்திகளை அதிகமான உணர்ச்சிப் பிழம்புகளுக்கோ, எல்லை மீறிய உணர்வுகளுக்கோ இடம் இல்லாமல் சில இலக்கிய மரபுகளின் அடிப்படையில் செம்மையாகவும், சிறப்பாகவும் கூறும் இலக்கியம்” என்று சங்க இலக்கியத்தின் சிறப்புக்கூறினை எடுத்துரைக்கின்றார்.

    “உடன்போக்கு என்பது சங்க இலக்கியங்களில் மிகச் சிறந்து விளங்கும் ஒரு துறையாகும். சிறந்த தலைமகனும், சிறந்த தலைமகளும் தங்களுடைய வரைவைப் பிறர் மறுக்க வேறுவழி எதுவும் இல்லாமல் தலைவியின் கற்பையும், தலைவனின் காதல் ஆற்றாமையையும் காத்தல் பொருட்டுத் தோழியும், தலைவன் தலைவியரும் இணைந்து எடுக்கும் ஒரு சிறந்த முடிவின் செம்மையான வெளிப்பாடு அல்லது செயல்பாடு ஆகும்” என்று எடுத்துரைத்து, அதற்குச் சான்றாக வெள்ளிவீதியாரின் “காலே பரிதப்பினவே” என்று தொடங்கும் குறுந்தொகைப் பாடலைக் காட்டுகின்றார்.

    வெள்ளிவீதியார் நினைத்திருந்தால் நிச்சயமாக உடன்போக்கு என்பது ஒரு சிறந்த நிகழ்ச்சி என்றோ, செம்மையான ஒரு வழக்கு என்றோ வெளிப்படையாகக் கூறியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல்,

    “அகலிரு விசும்பின் மீனினும்

    பலரே மன்றஇவ் வுலகத்துப் பிறரே.”

    என்று கூறுகின்றார். இது ஒரு செவ்வியல் நிலை. இந்தச் செவ்வியல் நிலையைக் காட்டும் ஒரு உத்தியாகத் தான் சங்ககாலக் கவிஞர்கள் உள்ளுறை, இறைச்சி போன்ற உவமைக்கூறுகளைக் கையாண்டு சங்க இலக்கியத்துக்கு ஒரு தனித்தன்மையையும், தனித்துவத்தையும் சாகாவரத்தையும் அளித்தனர் என்று கூறுகின்றார்.

    சங்க இலக்கியங்களின் செவ்வியல் கூறுக்கு அதில் இடம்பெறும் சொல்லாட்சிகளும், தொடரமைப்புகளும் ஒரு முக்கியக் காரணமாக அமைவதைக் காணலாம். இத் தொடர் அமைப்புகளைப் பற்றியும், சொல்லாட்சிகளைப் பற்றியும் விளக்கமாக எடுத்துரைக்கும் பேராசிரியர் அவ்வாறு அமைந்திருப்பதனாலேயே அவை செவ்வியல் தன்மைகொண்ட பாடல்களாக விளங்குவதனையும் தக்க சான்றுகளுடன் எடுத்துரைக்கின்றார்.

    ஒரு கவிதையின் சிறப்பு என்பது அதில் சொல்லப்படும் பொருளில் மட்டுமல்ல. அதனை எவ்வாறு கவிஞன் சொல்லுகிறான் என்பதிலும் தான் அடங்கியுள்ளது என்ற கருத்தினை முன்வைத்து, சங்க இலக்கியங்களில் ஒரே தொடரமைப்புகளைக் கொண்ட அல்லது ஒரே அமைப்புள்ள இரண்டு அல்லது மூன்று வாக்கியங்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்தவும், வேண்டிய உணர்வை ஏற்படுத்தவும் சலிப்பைத் தவிர்க்கவும் எல்லாவற்றிற்கும் மேலாகப் பாடலின் வேகத்தையும் விறுவிறுப்பையும் கூட்டவும் தமிழ்க்கவிஞர்கள் இத்தகைய உத்தியைப் பயன்படுத்துவர் என்று கூறுகின்றார்.

    “வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல்

    மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்”            (குறு. 135)

    என்னும் பாடலடிகளும்,

    “உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே”                     (குறு. 7)

    “யானே உண்டை யேனே, என்னலனே

    ஆனா நோயொடு கானல் அஅதே”                 (குறு. 97)

    “முகைமுற் றினவே முல்லையொடு

    தகைமுற் றினவே தண்கார் வியன்புனம்”          (குறு. 188)

    என்னும் பாடல்களும் இவ்வுத்தியின் அடிப்படையில் எழுந்தவையாகும் என்று கூறுகின்றார்.

    இதேபோன்று கவிதையாக்கத்தில் மீண்டும் மீண்டும் கூறுதல் என்னும் உத்தியைப் பயன்படுத்திக் கவிதையியலாளர்கள், கவிதையின் சுவையை மேலும் மேலும் மெருகூட்டுகின்ற தன்மையினையும் எடுத்துரைக்கின்றார்.

    “காலே பரிதப்பினவே கண்ணே

    நோக்கிநோக்கி வாள்இழந் தனவே”

    “நாட்டின் நாட்டின் எரின் எரின்

    குடிமுறை குடிமுறை தேரிற்

    கெடுநரும் உளரோநம் காதலோரே”         (குறு. 130)

    என்னும் பாடலடிகளில் ஒரேவிதமான வாக்கியங்கள், ஒரே விதமான தொடக்கங்கள், ஒரே விதமான முடிவுகள் என்பதோடு வந்த சொற்களே மீண்டும் மீண்டும் வரத் தொடுக்கப்பெற்று, பல்வேறு நிலைகளில் பலவிதமான உத்திகளைக் கையாண்டு தொடக்கமே ஒரு வகையான உணர்ச்சியையும் உணர்வையும் தந்து கவிதைப் பண்பு நிறைந்த கவிதைகளைப் படைத்திருப்பதனைக் காட்டுகின்றார்.

    1. ஒப்புநோக்கி எடுத்துரைத்தல்

    சங்கஇலக்கியக் கவிதையியலை, உலகச் செம்மொழிகளின் கவிதையியலோடு ஒப்புமைப்படுத்தியும், உலகக் கவிதையியற்கோட்பாடுகள் சங்க இலக்கியத்தில் பொருந்தி வரும் திறத்தினை எடுத்துரைப்பதனை ஒரு உத்தியாகக் கையாண்டு சங்க இலக்கியத்தின் தனிச்சிறப்புக்களை மேன்மையுறச் செய்கின்றார் பேராசிரியர்.

    தொல்காப்பியர், “நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்” என்னும் தொடரால், உலக வாழ்வில் அதாவது மனித வாழ்வில் நடக்கின்ற சில சிறந்த செயல்கள் அல்லது வாழ்க்கைக் கூறுகளைக் கற்பனைகளுடனும், கவிதைப்பண்புடனும் கூறுவது தான் கவிதை என்றும், மனித வாழ்க்கையில் நடக்கும் சில செய்திகளே அல்லது வாழ்க்கைக் கூறுகளே சிறந்த கவிதைப் பொருள்கள் என்று எடுத்துரைத்துள்ளார்.

    இதே கருத்தினை “சிறந்த கவிதைப்பொருள் மனிதவாழ்வின் போலவாக்கம்” என்று கூறுவார் என்றும், ஸ்டிரேபோ இது மனிதச் செயல்கள் என்று கூறுவார் என்றும், ஆர்னால்ட் கவிதையின் பொருள்கள் பாடுபொருள்கள் என்ற வினாவை எழுப்பிக்கொண்டு அவை செயல்கள், சிறந்த செயல்கள், மனிதஇனத்தின் மாபெரும் செயல்கள் என்று எடுத்துக்கூறுவார்” 9 என்றும் எடுத்துரைக்கின்றார்.

    சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் ஒருமைப்பாடு தான் அவை சிறந்த இலக்கியங்களாக விளங்குவதற்கு ஒரு காரணம் என்று கூறுகின்ற பேராசிரியர், “நல்ல கவிதைகளைப் பற்றிப் பேசும் சில அறிஞர்கள் அவற்றின் ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு வரியுமே கவிதைகள் தான் எனக் கூறுவது” என்ற எமர்சன் கூற்றினைச் சங்கப் பாடல்களுக்குப் பொருந்தும் என்று கூறுகின்றார். இதற்குச் சான்றாகக் கபிலரின் “வேரல் வேலி” என்று தொடங்கும் குறுந்தொகைப் பாடலைக் காட்டுகின்றார்.

    பலதரப்பட்ட வாக்கியங்களாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு பண்பில் நன்கு உள்ள நிலையில் பாடலும் ஒட்டுமொத்தமாகவும் சுவையுடன் இருப்பது காணத்தக்கது. இதைத்தான் அரிஸ்டாடில், பிளோட்டினஸ் போன்ற அறிஞர்கள் பலபடக்கூறியுள்ளனர் என்று எடுத்துரைக்கின்றார். எந்தவொரு கலையாக்கமும் ஒன்றி ஒருமைப்பாட்டுடன் விளங்க வேண்டும் என்பார். இது கவிதைக்கும் பொருந்தும். ஒரு கலையாக்கத்தின் பெருமை அதன் கூட்டுத்தொகையன்று, அவை ஒன்றி உறவாடி ஒன்றுபட ஒரே கலவையாக நிற்பதில்தான் உள்ளது என்பார் அவர். பிளாட்டினஸ் “எந்தவொரு பகுதியின் அழகும் கவிதையின் முழுமையின் அழகில்தான் அடங்கிக்கிடக்கின்றது” என்பார். இதே கருத்தினைத் தொல்காப்பியர்,

    “நூலெனப் படுவது நுவலுங்காலை

    முதலும் முடிவும் மாறு கோளின்றித்

    தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி

    உண்ணின் றகன்ற உரையொடு புணர்ந்து

    நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே”

    என்று சுட்டியுள்ள திறத்தினை எடுத்துரைக்கின்றார். இத்தகு சீர்மைகொண்ட இலக்கியமாகச் சங்க இலக்கியப் பாடல்கள் இயங்குவதனைச் சான்றுகளுடன் காட்டுகின்றார். இந்த ஒரு ஒருமைப்பாடு எந்தவொரு கலையாக்கத்துக்கும் மிக அவசியம். இதனைக் கபிலர் போன்ற சங்கச் சான்றோர் நன்கு அறிந்திருந்தனர். இந்நிலையில்தான் அவர்கள் ஆக்கிச்சென்ற சங்கச் செய்யுட்களும் செம்மையான வடிவ ஒருமைப்பாட்டுடனும் ஒன்றி உறவாடும் கருத்து ஒப்புமையுடனும் ஒன்றி உறவாடும் கருத்து ஒப்புமையுடனும் காணப்படுகின்றன. கவிதை உருவாக்கத்தில் இப்பண்பு மிகமிகத் தேவையான ஒன்று. இதனைச் சங்கச் சான்றோர்கள் நன்கு பயன்படுத்தித் தங்கள் கவிப்படைப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர் என்று விளக்குகின்றார்.

    1. உலகியலோடு உரைத்தல்

    சங்க இலக்கியங்களின் செம்மாந்த தன்மைக்கும், தனித்தன்மைக்கும் சான்றாக விளங்குவது, அப்பாடல்கள் எக்காலத்திற்கும் பொருந்திவரும் தன்மையில் அமைந்திருப்பதாகும் என்று எடுத்துரைக்கும் நோக்கில் சங்க இலக்கியத்தின் தனிச்சிறப்புக்களை வியந்து போற்றுகின்றார். சங்க இலக்கியங்களை மண்வாசனை கொண்ட இலக்கியங்கள் என்று எடுத்துரைப்பது குறிப்பிடத்தக்கதாகும். பிற முதல் உலக இலக்கியங்கள் எல்லாம் இறைவனையும் இறைவன் செயல்களையும் மக்களுடன் இணைத்துக் கூறியிருக்க, சங்க இலக்கியங்கள் அந்த நிலையில் இல்லாது, மக்களின் வாழ்க்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவையாக உள்ளன. இது சங்க இலக்கியத்திற்குரிய தனிச்சிறப்பு என்று கருதலாம்.

    “இன்றைய உலகிலும் சிறந்த அன்பும் செம்மையான பண்பும் கொண்டு வாழும் கணவன் மனைவியரிடையே கூட அடிக்கடி இத்தகைய பேச்சு நடைபெறுதல் கண்கூடு. காதல் மணம் புரிந்து இனிது வாழும் தம்பதியரிடையே மட்டுமல்லாமல் பெற்றோர் பார்த்து மணமுடித்த தம்பதியரிடையேயும் இத்தகைய நிலை ஏற்படுவதைக் காணாலம். கணவனும் மனைவியும் மகிழ்ச்சியோடு இருக்கும் பல நாட்களில், மணம் நடந்த நாளில், நமக்குக் கல்யாணம் ஆகி எத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டன. நீ எங்கோ பிறந்தாய்; நான் எங்கோ பிறந்தேன். உங்கள் குடும்பத்துக்கும் எங்கள் குடும்பத்துக்கும் அன்று எந்தச் சொந்தபந்தமும் இல்லையே? எப்படியோ தெரியாமல் இணைந்தோம். எத்தனை குழந்தைகள். என்ன அருமையான வாழ்வு நம் வாழ்வு. அந்த ஆண்டவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று கூடிப்பேசும் தம்பதியர்கள் இன்றும் வாழ்கிறார்கள்; என்றும் வாழ்வார்கள். பாட்டில் காணப்படும் உவமைதான் இல்லை. வேறு எல்லாம் உள்ளன இவர்கள் பேச்சில். சிறந்த தம்பதிகளாக வாழும் ஒவ்வொரு இல்லத்திலும் இது நடைபெறுவது தான். இத்தகைய ஒரு அருமையான உணர்வைத் தான் செம்புலப்பெயல்நீரார் தம் கவிதைக் கருவாக்கிக் காலம் கடந்து நிற்கும் இக்கவிதையைப் படைத்திருக்கிறார். இதனால் தான் இக்கவிதை சாகாவரம் பெற்ற ஒரு சங்கப் பாடலாக இன்றும் திகழ்கின்றது. என்றும் திகழ்வது” என்று உலகியலோடு பொருந்தக் கூறும் திறம் பேராசிரியரின் நுண்ணோக்குத்திறனுக்குச் சான்றாக அமைகின்றது.

    இதே நிலையில் பிற சங்கப்பாடல்களுக்கும் உலகியலோடு பொருந்தப்பார்க்கும் நிலையினைக் காணமுடிகின்றது.

    தொகுப்புரை

    • சங்க இலக்கியத்தின் மேன்மையினை அறிவியல் நோக்கோடும், மேலைத்திறனாய்வுக் கொள்கைகளோடும் ஒப்பிட்டு ஆய்ந்துள்ள பேராசிரியரின் திறம் போற்றத்தக்கதாகும்.
    • சங்க இலக்கியத்தின் தனிச்சிறப்புகளைப் பிறநாட்டு அறிஞர்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் எடுத்துரைத்துள்ள திறம் அவரது தனிச்சிறப்பாக அமைந்துள்ளதனைக் காணமுடிகின்றது.
    • இத்தகு ஆய்வுகளுக்கு அவரது மொழியியல் புலமையும், உலக மொழி இலக்கிய, இலக்கண அறிவும் பயன்படுள்ளன என்பது தெளிவாகின்றது.
    • சங்க இலக்கியத்தில் புதிய ஆய்வுகள் செய்யவிரும்புவோர், அவரது ஆய்வுநெறிகளைப் பின்பற்றிப் புதிய விளக்கங்களைத் தரமுடியும் என்பதும் புலனாகின்றது.

    சான்றெண் விளக்கம்

    1. அகத்தியலிங்கனார், ச., சாகா வரம்பெற்ற சங்கப்பாடல்கள்,

    மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2006, ப. 22

    1. மேலது, ப. 102
    2. மேலது, ப. 57
    3. மேலது, ப. 27
    4. மேலது, ப. 58
    5. மேலது, ப. 18
    6. மேலது, ப. 166
    7. மேலது, ப. 174
    8. மேலது, ப. 14

     

    Share
  • இந்த வார வல்லமையாளர் (281)

    இந்தவார வல்லமையாளர் விருது!

    இந்த வார வல்லமையாளராக சுனாமி விஞ்ஞானி குசலா ராஜேந்திரன் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்வடைகிறது. நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்கள் இவற்றைப்பற்றி அமெரிக்காவின் தென் கரோலினா பல்கலையில் முனைவர் பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர் பேரா. குசலா. இப்பொழுது ’இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸயன்ஸ்’ (Indian Institute of Science) என்னும் புகழ்மிகு ஆய்வுப்பல்கலையில் பூகம்பம், சுனாமி ஆய்வுத் துறையில் புவிஅறிவியல் பேராசிரியை. அவர் கணவரும் இத்துறையினரே. விஞ்ஞானத் துறைகளில் இந்தியப் பெண்கள் நிறைய வரவேண்டும். வாய்ப்புகள் நிறைய உள்ளன என்கிறார் இந்தியாவின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக மதிக்கப்பெறும் குசலா. பெண்விஞ்ஞானிகளுக்கு இந்திய அரசாங்கம் அளிக்கும் முதல் விருதைப் பெற்றவர் குசலா ராஜேந்திரன்.இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் கிழக்குக் கரையருகே இந்தவாரம் ஒரு சுனாமி, பூகம்பத்தின் பின்னர் தோன்றியுள்ளது. அறிவியல் முன்னேற்றத்தால் உயிர் இழப்புகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் தெலுங்கானா மாகாணத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் சுனாமி ஆராய்ச்சி நிறுவனம் நல்ல பணிகளை மேற்கொண்டுள்ளது.

    காவிரிப்பூம்பட்டினத்தில் சுனாமி வந்திருக்கவேண்டும் என்று கணித்து, குசலா ராஜேந்திரன் கடற்கரையில் இருந்து உள்ளே ஒரு கிமீ தூரத்துக்கு ஆழிப்பேரலை சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தாக்கியதை விஞ்ஞானபூர்வமாக நிறுவினார். மணிமேகலைக் காப்பியத்தில் குறிப்பிடுவது சுனாமி அலைகள் என்கிறார்.

    மணிமேகலையில் சுனாமி குறிப்பு: பேரிடர் ஆராய்ச்சியில் அசத்தும் பெண் விஞ்ஞானி
    https://www.bbc.com/tamil/science-45046033

    மணிமேகலையில் சுனாமி பற்றிய குறிப்புகள்

    பேரிடர்களுக்கான காரணங்களை கண்டறிய வெறும் புவி அறிவியல் அறிவு மட்டும் போதாது என்று கூறும் குஷாலா தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமி குறித்த ஆய்வுக்கு சங்க இலக்கியமான மணிமேகலை உதவியது என்கிறார்.

    ”பேரிடர்களை ஆய்வு செய்ய வரலாறு, கணிதம், இலக்கியம்,தொல்லியல் என எல்லா துறையையும் படிக்கவேண்டும். சுனாமி ஆராய்ச்சியின்போது, கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை அறிய வரலாறு மற்றும் இலக்கியத்தில் குறிப்புகள் உள்ளனவா என்று பார்த்தோம். காவேரிப்பட்டினத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்த மணல் மாதிரிகளை நானும், புவியியல் வல்லுநரான என் கணவர் ராஜேந்திரனும் சோதனை செய்தோம். பாதிப்புக்கு ஆளாகாத காவேரிப்பட்டினத்தின் உட்பகுதிகளில் மணல் மாதிரிகளை எடுத்தோம். இரண்டு மாதிரிகளுக்கும் உள்ள கால அளவை கணக்கிட்டோம். மணிமேகலையில் பிரளயம் ஏற்பட்டதாக குறிப்புக்கள் இருப்பதை கவனத்தில் எடுத்துக்கொண்டோம். 2004க்கு முன்னர் சுனாமி ஏற்பட்டதற்கான சான்றாக பழைய மணல் மாதிரி உள்ளது என்பதை அறிவியல்பூர்வமாக சோதனை செய்து, மணிமேகலையில் குறிப்பிட்டுள்ள பிரளயம், சுனாமி என்றும் அந்தபகுதியில் முன்னர் சுனாமி ஏற்பட்டுள்ளது என்பதை உறுதிசெய்தோம்,” என்கிறார் குஷாலா.

    வாய்ப்புகளை இழக்கும் பெண்கள்

    நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது தனது ஆய்வு மாணவியுடன் வேலைசெய்ததாக கூறும் குஷாலா, பெண்கள் புவிஅறிவியல் படிப்புகளில் சேருவதற்கு குடும்பங்களில் ஊக்கம் அளிக்கப்படுவதில்லை என்கிறார்.

    15 ஆண்டுகளாக ஒட்டுமொத்த கிராமத்தை நிர்வகிக்கும் பெண்கள்
    மதுப் பழக்கம் ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிப்பது ஏன்?
    ”என்னுடைய ஆய்வு மாணவி தற்போது ஐஸ்லாந்தில் வேலைசெய்கிறார். நான் ஒரு ஆசிரியை என்பதால், என்னுடன் அவர் நேபாளத்துக்கு வருவதற்கு அவரது பெற்றோர் ஒப்புக்கொண்டனர். இதுபோல எத்தனை பேருக்கு வாய்ப்பு இருக்கும் என்று தெரியவில்லை. நாம் முன்னேறுவதற்கு நாமே தடையாக இருக்கிறோம் என்பதை எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்,”என்று கேள்வி எழுப்புகிறார்.

    ”வெளிநாடுகளில் புவிஅறிவியல் படிப்புகளில் ஈடுபடுவார்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. நம் நாட்டில் இன்னும் கூட குழந்தைகள் என்ன படிக்கவேண்டும் என பெற்றோர்கள் தீர்மானித்துக்கொண்டு இருக்கிறார்கள். அயல்நாடுகளில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட பாடங்களை படிப்பதால் சாதிக்கின்றார்கள். நம் நாட்டில் பெற்றோர்கள் தாங்கள் விரும்புகிற பள்ளியில் சேர்த்து, டியூஷன் அனுப்புகிறார்கள், மருத்துவம்,பொறியியல்,தகவல்தொழில்நுட்ப படிப்புகளில் சேர்த்து, நல்ல வருமானம் கொடுக்கும் பணியில் குழந்தைகள் வேலைசெய்யவேண்டும் என்று எண்ணுகிறார்கள். சம்பளம் வாங்குவது மட்டும்தான் சமூகத்தில் அந்தஸ்து தரும் என்ற சிந்தனையில் இருக்கிறார்கள். சம்பளம் முக்கியம் ஆனால் பயனுள்ள வாழ்க்கை அதைவிட அவசியம்,” என புவிஅறிவியல் போன்ற படிப்புகள் அரிதான படிப்பாகவே இருக்கிறது என்று விளக்கினார்.

    மேலும் அவர், ”நான் 1976ல் ரூர்கி பல்கலைக்கழகத்தில் எம்.டெக் படித்தபோது எங்கள் வகுப்பில் ஆறு நபர்கள் இருந்தோம். நான் மட்டும்தான் ஒரே மாணவி. தற்போதும்கூட ஆராய்ச்சி படிப்புகளை பெண்கள் தேர்வு செய்தாலும், பயோடெக்னாலாஜி போன்ற படிப்பை எடுத்துக்கொண்டு ஒரு அறிவியல் ஆய்வகத்தில் வேலைசெய்தால் போதும் என்ற நிலைதான் உள்ளது. எங்களைப் போல புவிஅறிவியல்,இயற்கை பேரிடர்களை பற்றி படிக்க அதிமாக பயணம் செய்யவேண்டும். ஒருவேளை ஆண் ஆசிரியர்கள் மட்டும் இருந்தால், மாணவியை ஆய்வுகளுக்கு அனுப்பிவைக்க பெற்றோர்கள் யோசிக்கிறார்கள். இந்தநிலை மாறவேண்டும்,” என்று பெற்றோர்களிடம் ஏற்படவேண்டிய மனமாற்றம் பற்றி பேசுகிறார் குஷாலா. “

    சுனாமி: அன்றைய அழிவும் இன்றைய மாற்றமும்
    https://www.bbc.com/tamil/global/2014/12/141226_tsunaminowthen

    சுனாமி பேரலைகளை மீறி மெல்ல மலரும் வாழ்க்கை
    https://www.bbc.com/tamil/global/2014/12/141224_mawardhastroy2004 பெருஞ்சுனாமியில் காலே நகருக்குச் சென்ற ரயில் கவிழ்ந்து 802 பேர் இறந்தனர்,
    அதுபற்றி அந்த ரயிலின் கார்ட் கருணதிலகெ அதே ரயிலில் பயணிக்கையில் பேசுகிறார்:
    https://www.bbc.com/tamil/global/2014/12/141225_lankatrain

    மேலும் அறிய,
    Developments in Communicating Tsunamis:

    Prof. Kusala Rajendran:
    https://lifebeyondnumbers.com/kusala-rajendran-chasing-earthquakes-won-indias-1st-national-award-for-woman-scientist/
    https://thewire.in/science/finding-faults-kusala-rajendran
    https://english.manoramaonline.com/women/on-a-roll/2018/08/12/meet-leading-seismologist-of-india-kushala-rajendran.html

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • படக்கவிதைப் போட்டி – 181

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

     

    யெஸ்மெக் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (06.10.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 36

    க. பாலசுப்பிரமணியன்

    தோல்வி என்பது என்ன ?

    வெற்றிகளை மட்டும் சுவைத்து வாழ்ந்தவர்கள் வாழ்க்கையில் பல நேரங்களில் தோல்விகளைச் சந்திக்க முடியாமல் திணறுகிறார்கள். சிறிய தோல்விகளைக் கூட அவர்களால் சந்திக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடிவதில்லை. அவர்கள் தோல்விகளைத் தங்கள் சுயமரியாதைக்கும் தன்மானத்திற்கும் பங்கமாகக் கருதுகின்றனர். ஆகவே, தோல்விகள் வரும்பொழுது வாழ்க்கையிலிருந்து விலகி, ஒதுங்கி, மறைந்து தங்களைத் தாங்களே சின்னாபின்னமாக்கிக் கொள்கின்றனர். இதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை அவர்களை மேலும் மேலும் பின்னடையச் செய்து உண்மையான  வாழ்க்கையிலிருந்து விரட்டுகின்றது. மன உளைச்சல், மன அமைதியின்மை மற்றும் இருளடைந்த பின்னோக்கான எண்ணங்களுக்கு ஆளாகி ஒரு நோயாளியாக உருவெடுக்கின்றனர். இன்றைய உலகில் இந்தப்போக்கு அதிக அளவில் வளர்ந்து கொண்டிருக்கின்றது.

    இதற்கு ஒரு முக்கிய காரணம் இன்றைய வாழ்க்கை முறைகள்தான். கூட்டுக்குடும்பமாக இருந்து பகிர்ந்து வாழ்ந்த வாழ்க்கையை விரட்டிவிட்டு இப்பொழுது நாம் தனியாக சிறிய குடும்பங்களாக வாழத் தொடங்கிவிட்டோம். இருப்பதை பகிர்தல், விட்டுக்கொடுத்தல், தியாகம், உணர்வுகளைப் போற்றுதல் மற்றும் மதித்தல் போன்ற பல பரந்த பாங்குகள் கூட்டுவாழ்க்கையில் கிடைத்தன, ஆனால், தற்காலத்தில் போட்டி மனப்பான்மைகள் வளர்ந்து, நீயா நானா என்ற வன்மம் வளர்ந்து, தனக்குக் கிடைக்காவிட்டாலும் மற்றவர்களுக்குக் கிடைக்கக்கூடாது என்ற காழ்ப்புணர்ச்சிகள் தலைதூக்கி நம்முடைய சமுதாயத்தை வதைத்துக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலைகளில் எதிலும் எங்கும் எப்படியாவது வென்று விடவேண்டும் என்ற மனைப்பான்மை வளர்ந்து உண்மை நிலைகளை அறிந்தாலும் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்குத் தவறான ஈனமான முறைகளில் ஈடுபட்டாவது நம்மை வெற்றிபெற்றவர்களாக உலகுக்கு காட்ட வேண்டும் என்ற மனப்பான்மை வளர்ந்துள்ளது.

    வயது வந்தவர்களிடம்  இருக்கின்ற இந்த உணர்ச்சிகள் கூட்டாகச் சமுதாயத்தை ஆள்வதால் அதுவே ஒரு இலக்கணமாக மாறி வளரும் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாகக் காட்டப்படுகின்றது. ஆகவே சிறு குழந்தைகளும் இளைஞர்களும் கூட தோல்விகளைச் சாதாரணமாக ஏற்றுக்கொள்வதில்லை. இதன் தாக்கம் அவர்களுடைய மனநிலைகளையும் வளர்ச்சிப்போக்கையும் பாதிப்பதால் சமுதாயத்தில் ஒட்டுமொத்தமாக இந்த பிற்போக்கான எண்ணங்களின் ஆதிக்கம் நிலவி வருகின்றது. பல நேரங்களில் இவற்றைச் சரியான முறையில் அணுக முடியாதவர்கள் இதையே தங்கள் வாழ்வின் முற்றுப்புள்ளியாகக் கருதி தங்கள் இனிய வாழ்வை முடித்துக்கொள்ளத் துணிகின்றார்கள்.

    சற்றே உன்னிப்பாக அலசிப்பார்த்தால் ஒரு உண்மை வெளிப்படும். இவர்கள் தோல்விகளாகக் கருதுவது உண்மையில் தோல்விகளே அல்ல. இவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தங்களுக்குத் தாங்களே கொடுத்துக்கொள்ளும் ஒரு மதிப்பீடுதான் இது. சில நேரங்களில் இந்த மதிப்பீடுகள் பெற்றோர்களாலும் உறவினர்களாலும் கொடுக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட ஒப்பீடுகள் உண்மைக்குப் புறம்பானவை. அறிவியல் நோக்கோடு பார்க்கும்பொழுது ஒவ்வொரு மனிதனின் மூளையும் ஒவ்விதச் சிறப்போடு ஆர்வங்கள், ஈடுபாடுகள், சூழ்நிலைகள் ஆகியவற்றின் உள்ளீடுகளால் தாக்கப்பட்டு வளர்கின்றன. எனவே இரண்டு மனிதர்களை ஒரே நிலையில் வைத்து ஒப்பிடுவது இயற்கைக்குப் புறம்பானது. இதை உணர்ந்து கொண்டால் தோல்வி என்ற வார்தைக்குப் பொருளே இருக்காது. நிலைப்பாடுகள் மாறும் பொழுது அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதே வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

    “Every Child is born as a genius” என்று சொல்லுவார்கள். கல்வித் தகுதிகள் மாறுபடலாம், திறன்கள் மாறுபடலாம், பார்வைகள் மாறுபடலாம், ஆர்வங்கள் மாறுபடலாம், முயற்சி செய்யும் வழிகளும் இலக்குகளும் மாறுபடலாம். அவைகள் ஒருவரின் தோல்விக்கு அறிகுறி அல்ல. “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்பது வள்ளுவம். வாழ்க்கையை நாம் எவ்வாறு மகிழ்வோடும் நிறைவோடும் சிறப்போடும் அறத்தோடும் வாழ்கிறோம் என்பதே வாழ்க்கையின் வெற்றிக்கான குறியீடு.

    சற்றே அறத்தோடு வாழ்ந்து பார்க்கலாமே !

    தொடரும்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 127

    நிர்மலா ராகவன் 

    உள்ளுணர்வைக் கேளுங்கள்!

    மிக மலிவானது எது தெரியுமா? அறிவுரை வழங்குவதுதான்.

    சிலர் யாரும் கேளாமலேயே அறிவுரைகளை வாரி வழங்குவர். பிறருக்கு நன்மை செய்வதாகத்தான் எண்ணிக்கொண்டிருப்பார்கள். உண்மையில், தம் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கென வழிகாட்டுகிறோம் என்று அவர்களுக்கே புரிவதில்லை.

    `நான் செய்த தவற்றை நீயும் செய்யக்கூடாது!’ என்று ஓயாது வழிகாட்டும் பெற்றோர் தம் குழந்தைகளின் சுதந்திர உணர்வைப் பறிக்கிறார்கள்.

    ஒருவருக்குச் சரியெனப்படுவது எல்லாருக்கும் அப்படித்தான் இருக்குமா?

    பிறரது விருப்பத்துக்கு எதிராக வழிகாட்டுவது எந்தப் பலனையும் தராது.

    பிறர் சொற்படி நடப்பதைவிட, அவர்கள் புரியும் பிழைகளிலிருந்து கற்பதே மேல்.

    அவசரப்படும் அம்மா

    தம் குழந்தைகளுக்குச் சிறந்த வாழ்க்கை அமையவேண்டும் என்ற பதைப்பில் பல தாய்மார்கள் சிலவற்றை மறந்துவிடுகிறார்கள்.

    ஒருவருக்கு எதையாவது கற்றுக்கொடுக்க நினைப்பவர்கள் முதலாவதாக, அவர்களுடைய திறமையையும், புரிந்துகொள்ளும் ஆற்றலையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

    “அந்த நாட்டிய வகுப்பில் மிகவும் கண்டிப்பாக இருக்கிறார்கள். என் நான்கு வயதுக் குழந்தையை சேர்த்துக்கொள்ள மாட்டார்களாம்!” என்று ஓர் இளம் தாய் என்னிடம் புகார் செய்தாள்.

    நம் கை, கால், உடல் எல்லாம் நாம் சொன்னபடி கேட்க ஆறு வயதாவது ஆகவேண்டும். கையை நீட்டவும் முடியாது, கால்களால் தரையை ஓங்கித் தட்டவும் முடியாது, வலம், இடம் என்ற வித்தியாசமும் புரியாது என்ற நிலையில் பரதநாட்டியம் ஆடுவதாவது!

    பிழை புரியுங்கள். அதுவே பாடமாகும்!

    தவறிழைத்துவிடுவோமோ என்று பயந்து, புதிய அனுபவங்களை நாடத் தயங்குபவர்கள் அனேகர்.

    வாழ்வில் எத்தனையோ இடர்கள். அவைகளை எப்படித் தவிர்ப்பது?

    புதிய முயற்சிகளில் இறங்கும்போது, பிழைகளும் ஏற்படத்தான் செய்யும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். துணிந்து ஒரு காரியத்தில் இறங்கிவிட்டு, அப்போது எழும் பிழைகளைப் பாடமாக எடுத்துக்கொண்டால், அடுத்த முறையும் அதேபோன்று நடக்காதிருக்க கவனமாகச் செயல்படலாம்.

    அப்படி நாம் இழைக்கக்கூடிய பிழைகளிலிருந்து கற்க ஒரு வாழ்நாள் போதுமா? பிறரது அனுபவங்களையும் நமக்குப் பாடமாக ஆக்கிக்கொள்ளலாமே!

    மாறாக, செய்த பிழைகளையே ஓயாது எண்ணிக் கலங்கி, `அக்காரியமே தவறு!’ என்பதுபோல் நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் அவை அச்சுறுத்த விடுவானேன்!

    சிறந்த வழிகாட்டி

    ஒருவருக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுப்பது என்பது சாத்தியமில்லை. உள்மனம்தான் சிறந்த வழிகாட்டி. அது நம்முடன் பேசும்.

    எப்போது தெரியுமா?

    இரவில் கண்ணயரும் முன்னர், அதிகாலையில் அரைத்தூக்கத்தில் இருக்கும்போது. உள்மனம் கூறுவதை ஏற்றால், பிறகு எந்த நேரமும் அதை நாடலாம்.

    கதை

    சில ஆண்டுகளுக்கு முன்னர், நான் ஒரு புடவை வாங்க கடைத்தெருவிற்குப் போயிருந்தேன். பல கடைகள் ஏறி இறங்கியும், எதுவுமே எனக்குத் திருப்திகரமாக அமையவில்லை. `இது ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் இருந்த டிசைன்!’ என்று ஏதேதோ சொல்லித் தட்டிக்கழித்தேன்.

    நிறைய புடவைகளை எடுத்துக் காட்டிய ஒரு கடைச் சிப்பந்திக்குப் பொறுமை மீறியது. “உங்களுக்கு என்னதான் வேணும்?” என்றார், எரிச்சலை மறைக்காது.

    நானும் அலுப்பின் எல்லையில் இருந்தேன். மூச்சை நிதானமாக இழுத்து விட்டபடி, `என்னுடன் வரப்போகும் புடவையே, நீ எங்கே இருக்கிறாய்?’ என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டேன். அடுத்த ஓரிரு நிமிடங்களிலேயே அது என் கண்ணில் பட்டது!

    இப்போது அதே கேள்வியை வெவ்வேறு விதமாகக் கேட்டு, உடனடியாக முடிவு எடுக்க முடிகிறது. வாங்கப்போகும் புடவையின் வண்ணத்திலிருந்து, அடுத்த பரீட்சையில் என்ன வரப்போகிறது என்பதுவரை சரியாக ஊகிக்க முடிகிறது. (நான் ஆசிரியையாக இருந்தபோது, ஆறு ஆண்டு காலம் பள்ளி இறுதியாண்டுப் பரீட்சைக்குமுன் வரப்போகும் கேள்விகளை உத்தேசமாகக் கணித்தேன். எல்லாமே சரியாக இருந்தன. பின்னென்ன! நான்தான் அக்கேள்விகளைத் தயாரித்திருக்க வேண்டும் என்று வதந்தி பரவ, அவைகளைப் பெற பிற பள்ளிமாணவர்கள் போட்டியிட்டார்களாம்!)

    உள்ளுணர்வின் உந்துதலில் கிடைக்கும் விடை நாம் எண்ணியதற்கு மாறாக இருக்கலாம். ஆனால், சரியாக இருக்கும். ஏன், எப்படி என்ற கேள்விகள் உதவாது. நம்பிக்கையுடன் துணிந்து ஏற்கவேண்டும்.

    இளைஞர்களே, வாழ்க்கைத்துணையைத் தேட ஒரு வழி இதோ!

    `என் வாழ்நாளை எல்லாம் என்னுடன் மகிழ்ச்சியாகக் கழிக்கப்போகிறவர் எப்படி இருப்பார்?’

    இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ளுங்கள். முகம், கண், மூக்கு எதுவுமே நினைவில் எழாது. அவரது குணங்கள் ஒவ்வொன்றாக, பல நாட்களில் பிடிபடும். அப்படி ஒருவரைப் பார்க்கும்போது, `இவர்தான் நாம் தேடியவர்!’ என்று மனம் ஆர்ப்பரிக்கும்.

    விஞ்ஞானமும் உள்ளுணர்வும்

    எல்லாவற்றிலும் அவநம்பிக்கை கொள்வதுதான் அறிவாற்றலுக்கு அடையாளம் என்று ஒரு சாரார் நினைக்கிறார்கள். `இதை விஞ்ஞான ரீதியில் பரிசோதிக்க முடியுமா?’ என்று கேட்பார்கள், அலட்சியமாக. ஆனால், விஞ்ஞானிகள்கூட, எண்ணற்ற பரிசோதனைகளால் குழம்பி இருக்கும் ஒரு தருணத்தில் எதிர்பாராத விதமாக விடை கிடைக்க, `நமக்குமேல் ஒரு சக்தி இருக்கிறது!’ என்று ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.

    கடவுள், உள்மனம் – பெயர் எதுவாக இருந்தால் என்ன! பலன் கிடைக்கிறதே! ஏதாவது துன்பம் நேரும்போதுதான் ஒருவரை நமக்கு வழிகாட்ட நாட வேண்டும் என்பதுமில்லை.

    “வழிகாட்டல் என்பது இருண்ட கானகத்தில் ஒரு சிறிய விளக்கிற்கு ஒப்பானது. எதிரிலிருப்பவை யாவும் புலப்படாது. ஆனாலும், அடுத்த அடியை எடுத்துவைக்க அதுவே போதும்”. (ஸ்வாமி விவேகானந்தர்)

    தொடருவோம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(227)

    செண்பக ஜெகதீசன்

     

    இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய       

    தாமே தமிய ருணல்.                                                

           -திருக்குறள் -229(ஈகை)

    புதுக் கவிதையில்…

     

    சேர்த்த பொருளைப்

    பிறர்க்கு ஈந்திடாமல்

    தானே தனியாய் உண்பது,

    இரத்தலைக் காட்டிலும்

    கொடிதான ஒன்றே…!

    குறும்பாவில்…

     

    சம்பாதித்த பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல்               

    தான்மட்டும் உண்பது, 

    பிச்சையெடுப்பதைவிடக் கொடியதே…!

    மரபுக் கவிதையில்…

     

    மண்ணில் மனித வாழ்வினிலே

         முயன்று சேர்த்த பொருளதனைக்

    கண்ணிய மாகப் பிறருக்கும்

         கொடுத்தே யுதவி செய்யாமல்

    உண்ணத் தனக்கே வைத்திருந்தே

         ஒளிந்து தானே உண்டிடுதல்,

    திண்ண மாகத் தரந்தாழ்தே

         தெருவி லிரப்பினும் கேடாமே…!

    லிமரைக்கூ..

     

    சேர்த்ததில் செய்பிறருக் குதவி,     

    பணமதில் தானே தனித்துண்டால் கிடைக்கும்                   

    இரத்தலினும் கொடியதான பதவி…!

    கிராமிய பாணியில்…

     

    கொடுத்து ஒதவு கொடுத்து ஒதவு

    அடுத்தவருக்குக் கொடுத்து ஒதவு..

    ஒழச்சிச் சேத்த பணத்தயெல்லாம்

    ஒருத்தருக்கும் கொடுகாம

    ஒதவியேதும் செய்யாம,

    ஒளிச்சிருந்து தனியாவே

    தான்மட்டும் திங்கிறது,

    தரங்கொறஞ்சி

    தெருவுல பிச்சயெடுக்கிறதவிடக்

    கொடுமதானே..

    அதால

    கொடுத்து ஒதவு கொடுத்து ஒதவு

    அடுத்தவருக்குக் கொடுத்து ஒதவு…!

    செண்பக ஜெகதீசன்…

     

    Share
  • அகநானூற்றில் ஐந்திணை நீர் மேலாண்மை

    -பீ.பெரியசாமி

    முன்னுரை

    அகநானூற்றில் ஐந்திணை மக்கள் வாழ்வியல் குறித்த செய்திகள் பல இடம்பெற்றுள்ளன. அவற்றுள் இன்றைய தேவையான நீர்மேலாண்மை குறித்த செய்திகள் என்னென்னவெல்லாம் இடம்பெற்றுள்ளன என்பதனை இக்கட்டுரையில் காண்போம்.

    குறிஞ்சி நிலப் பாடல்களில் நீர் மேலாண்மை

    கடல்நீரை முகந்து மேகங்கள் நெய்தல் நிலத்தில் அழகுடன் காணப்பட்டாலும் முதலில் மழைப்பொழிவைத் தொடங்குவது குறிஞ்சி நிலத்திலேதான். இதனை,

    கார்கதம்பட்ட கண்அகன் விசும்பின்
    விடுபொறி ஞெகிழியின் கொடிபட மின்னி
    படுமழை பொழிந்த பானாட் கங்குல்(அகம்.108)

    எனும் அகப்பாடல், அகன்ற ஆகாயத்தில் சினந்து எழும் மேகங்கள் பொறிவிடுகின்ற கொள்ளிக்கட்டை போல வரிசையாக மின்னி நள்ளிரவில் மிக்க மழையைப் பொழிந்தது என்று குறிப்பிடுகின்றது.மலைகளின் மீது இயற்கையாக அமைந்திருக்கும் நீர்நிலை சுனையாகும். இது வளமையான பாறைகளின்மேல் அமைந்திருந்ததாக,

    மல்லல் அறைய மலிர்சுனை……”(அகம்.308)

    எனும் அகப்பாடல் குறிப்பிடுகிறது. மேலும், வளமையான பாறையில் அமைந்துள்ள தெளிந்த பெருகிய நீரினை உடைய சுனை என்பதனால் சுனை பாறையின் மீதமைந்துள்ளது புலப்படுகின்றது.  சுனைகள் பறையின் கண் போன்று இருந்ததாக அகநானூற்றுப் புலவர்கள் கூறியுள்ளனர்.

    “பாறைக் கண் அன்ன நிறைச்சுனை பருகி”(அகம்.178)

    என்ற அகப்பாடல்கள் சுனையின் வடிவு பாறையின் கண்ணையொத்ததாக இருந்ததைக் குறிப்பிடுகின்றன.

    பாறை நெடுஞ்சுனை” (அகம்.2)

    என்ற அகப்பாடலடிகள் நீர் நிரம்பிய நீண்ட சுனைகள் இருந்ததாகவும், அவை பாறைகளின் இடையே இருந்ததாகவும் குறிப்பிடுகின்றது. அதேபோல் குறுகிய சுனைகள் இருந்ததாகவும் பாடல்களில் காண முடிகின்றது.

    பாடுஇன் அருவிப் பனி நீர்இன் இசை(அகம்.82)

    அருவிகள் விழும் ஓசை இனிய இசையினைப் போன்றுள்ளதென புலவர் கூறியுள்ளார்.

    சிறுகோட்டுப் பெருங்குளம் காவலன் போல
    அருங்கடி அன்னையும் துயில்மறந் தனளே”(அகம்.252)

    என்ற நக்கண்ணையார்  பாடல் தலைவியின் காதலை அறிந்த தாய்  சிறிய கரையினையுடைய பெரிய குளத்தைக் காவல் செய்பவன் அதன் கரை உடைந்து போகாதபடி இரவெல்லாம் துயிலாது அதனைக் காப்பான் அதுபோல தன்னைக் காத்து நிற்பதாகத் தலைவி கூறும் உவமை வழி குளத்தைப் பாதுகாக்க பாதுகாவலர்கள் இருந்தது தெரியவருகின்றது. குளக்கரைகளைக் கட்டுமானங்களையே கவனத்தோடு கட்டிய மக்கள் அதையும் மீறி அணைகளில் உடைப்பு ஏற்பட்டு விடாமல் இருக்க பாதுகாவலர்களை நியமித்தது அவர்களின் நீர்ப்பராமரிப்புத் திறத்தைப் புலப்படுத்துவதாக உள்ளது. 

    முல்லை நிலப் பாடல்களில் நீர் மேலாண்மை

    முல்லை நில பாறைகளின் நடுவே சுனைகள் இருந்ததனை,

    பாறைக் கண் அன்ன நிறைச்சுனை தோறும்”(அகம்.324)

    எனும் அகப்பாடல் கூறியுள்ளது. மேலும்,

    பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி
    தாழ் பெயற் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ” (அகம்.84)

    எனும் அகப்பாடல் மேகங்கள் வலமாகச் சுழன்று எழுந்தால் மழைப்பொழிவு நிகழுமெனக் குறிப்பிடுகின்றது. மேலும், மேகங்கள் எந்ததிசையில் தோன்றினாலும் கிழக்கு நோக்கி நகர்ந்தால் மழை தவறாது பொழியும் என்று கூறியுள்ளனர். 

    புன் காழ் நெல்லிப் பைங் காய் தின்றவர்
    நீர்குடி சுவையின் தீவிய மிழற்றி
    பண்ணன் சிறுகுடிப் படப்பை நுன்நுரை”(அகம்.54) சிறிய இலைகளையும், புல்லிய விதைகளையுமுடைய நெல்லிக்காயினை உண்டுவிட்டு நீர் குடித்தால் சுவையாயிருக்கும் என்பதை அக்கால மக்கள் அறிந்துள்ளனர். பாலை வழிச் செல்லும் வழிப்போக்கரின் உயிரைப் போகடிக்காது தடுத்து நிறுத்தும் சுவைமிக்க காய்களைக் கொண்டது நெல்லி மரம் என்று மேற்கண்ட அகப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன. உணவு உண்டவுடன் தோன்றும் நீர் தாகத்தைத் தணிக்க கள் உண்டுள்ளனர். 

    மருத நில பாடல்களில் நீர் மேலாண்மை

    மருதநிலத்தில் மீன்களும், மலர்களும் நிறைந்த நீர்நிலையினை,

    துணிநீர் இலஞ்சி கொண்ட பெரு மீன்(அகம்.236)

    எனும் அகப்பாடலில் முதுநீர் இலஞ்சி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 

    நெடுநீர்ப்பொய்கை ……. ……….”(அகம்.246)

    நீள்இரும் பொய்கை ……. …… .”(அகம்.276)

    எனப் பொய்கை ஆழமானதாகவும், நீண்ட பெரிய நீர்நிலையாக இருந்ததையும் மேற்கண்ட அகப்பாடல்கள் சுட்டுகின்றன.

    மருதநிலப் பெண்கள் நீர்நிலைகளிலிருந்து நீர்  எடுத்துவர அழகிய வேலைப்பாடமைந்த குடங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

    தெண்கட் தேறல் மாந்தி மகளிர்
    நுண்செயல் அம்குடம் இரிஇ”(அகம்.336)

    பாவைக் கொட்டிலார் என்ற அகநானூற்றுப் புலவர் நுண்ணிய வேலைப்பாடமைந்த குடங்களில் நீர் எடுக்க மருத நிலப் பெண்கள் நீர்த்துறைக்கு வந்ததாகக் குறிப்பிடுகின்றார். எனவே தண்ணீர் எடுத்து வரத் தாழி, குடம் போன்ற பொருள்களைப் பயன்படுத்தியிருப்பதையறிய முடிகின்றது. 

    நெய்தல் நிலப் பாடல்களில் நீர் மேலாண்மை

    நெய்தல் நிலக் குளிர்ச்சியுடைய குளத்தில் குவளை மலர்கள் பூத்து நிறைந்து காணப்பட்டதை,

    தண் கயத்து அமன்ற ஒண்பூங் குவளை”(அகம்.180) எனும் அகப்பாடலில் காணலாம்.

    பாலை நிலப் பாடல்களில் நீர் மேலாண்மை

    பாலை நிலத்தில் கோடை காலத்தில் சுனை நீர் வற்றி இருந்தது  ‘வறுஞ்சுனை’ என்றழைக்கப்பட்டுள்ளது. இதனை,

    நிலம் நீர் அற்று நீள்சுனை வறப்ப
    குன்று கோடு அகைய கடுங்கதிர் தெறுதலின்(அகம்.295) 

    ”……………………….. வறுஞ் சுனை
    மை தோய் சிமைய மலைமுதல் ஆறே(அகம்.119)

    வறட்சி காலங்களில் நீரின்றி உட்பகுதி வற்ண்டு காணப்பட்டுள்ளது. இதனை மேற்கண்ட அகப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

    மலையின் மீதிருந்து கொட்டும் நீர்வீழ்ச்சியே அருவியாகும். மழை பெய்தால்தான் அருவிகள் விழும். மழைக்காலங்களில் மட்டுமே காணவியலும் அழகிய இயற்கை காட்சியது இதனை, 

    கழைநரல் வியல்அகம் வெம்ப மழைமறந்து
    அருவி ஆன்ற வெருவரு நனந்தலை(அகம்.241) என்ற அகநானூற்றுப் பாடல் விளக்குகிறது. மழை பொழியாததால் அருவிகள் இல்லாமல் போயின என்று குறிப்பிடுகின்றது. எனவே அருவி தோன்றுவதற்கு முக்கிய ஆதாரம் மழையே ஆகும்.

    ஆயர்கள் கூவல் தோண்டும் முறைமையினை அறிந்ததோடு அதிலிருந்து நீர் எடுக்கும் தொழில்நுட்ப முறையினையும் நன்கறிந்தவர்களாக இருந்துள்ளனர். கூவலிலுள்ள நீர் உவர்ப்புத்தன்மை உடையதாக இருந்துள்ளது. இதனை, 

    பிணர்அழி பெருங்கை புரண்ட கூவல்
    தெண்கன் உவர் குறைகுட முகவை
    அறனிலாளன் தோண்ட வெய்து உயிர்த்து
    பிறைநுதல் வியர்ப்ப உண்டனள் கொல்லோ ?”(அகம்.207)

    பாலை நிலத்தின்வழி உடன்போக்குச் சென்ற தலைவன் தாகத்தால் வருந்திய தலைவியின் தாகத்தைத் தணிக்கக் கூவலை மேலும் சிறிது தோண்டுகிறான். அப்போது உவர்நீர்  ஊறுகிறது. தலைவி அந்நீரை குடிக்கிறாள். எனவே பாலையில் உவர் நிலத்தில் அமைக்கப்படுவது ‘கூவல்’ என்பது புலனாகிறது. அவ் உவர் நிலத்திலுள்ள நீரும் உவர்ப்புத் தன்மையுடையதாதலால் கூவல் “உவர் நீரையுடைய நீர்நிலை” என்பது புலனாகிறது. வன்புல நிலத்தைத் தோண்டி செய்யப்பட்ட கூவலில் ஆநிரைகள் நீர் அருந்தச் செல்லும் . இதனை, 

    வன்புலம் துமியப் போகி கொங்கர்
    படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்(அகம்.295) என அகநானூற்றுப் பாடல் கூறியுள்ளது. இதன்வழிப் பாறை நிலத்தையுடைத்துச் செய்யப்பட்டதே கூவல் என்பது புலனாகிறது.

    கோவலர்கள் தான் கூவலை முதன்முதலில் தோண்டியிருக்க வேண்டும். ஏனெனில் கோவலர்கள் ஆடுமாடுகளை மேய்ச்சலுக்காக நெடுந்தூரத்திற்கு ஓட்டிச் செல்லும் போது அவைகள் தாகத்தால் வருந்தமுறும். அதனால் அவைகளின் தாகத்தைத் தணிக்க அவர்களால் அமைக்கப்பட்டதே இந்தக் கூவலாக இருக்கும். கோவலர்கள் ‘கூவல்’ தோண்டுவதற்கு முதன் முதலில் பயன்படுத்தியது அவர்கள் கையிலிருந்த கோலையே ஆகும். இதனை,

    “…………. ………….. …………. கோடை முகத்தலின்
    நீர்க்குஇயங்கு இனநிரைப் பின்றை வார்கோல்(அகம்.225) 

    நீர் பருகுவதற்குச் செல்லும் பசுக் கூட்டத்திற்குப் பின்னே நீண்ட கோலுடைய ஆயர்கள் வந்தனர் என்று இப்பாடல் கூறுகின்றது. 

    கடற்றுஅடை மருங்கின் கணிச்சியின் குழித்த
    உடைக்கண் நீடுஅமை ஊறல் உண்ட
    பாடுஇன் தென்மணி பயம்கெழு பெருநிரை(அகம்.399)

    நிறையப் பசுக்கூட்டங்களையுடைய கோவலர்கள் அவற்றின் தாகங்களைப் போக்குவதற்காக மலங்காட்டினைச் சார்ந்த பகுதியில் குந்தாலி என்ற கருவியால் குழி தோண்டினர். அதில் ஊறிய நீரைப்பருகிய இனிய ஓசையை உடைய மணிகளைக் கொண்ட பால் கொடுக்கும் பசுக்கள் என்பதன் வழி ஆநிரைகளுக்காக கோவலர்கள் நீர்க்குழிகள் அமைத்தனர் என்பதை அறியலாம். 

    பயநிரை சேர்ந்த பாழ்நாட்டு ஆங்கண்
    நெடுவிளிக் கோவலர் கூவல் தோண்டிய
    கொடுவாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறுகுழி
    நீர்காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது(அகம்.155)

    ஆநிரைகள் நிறைந்த பாழ்பட்ட நாட்டின் பல இடங்களிலும் கோவலர்கள் தாம் தோண்டிய கூவலிலிருந்து வளைந்த வாயினை உடைய பத்தலால் நீர்  இறைத்துச் சிறுகுழியில் ஊற்றினர். பாலை நிலத்தின் வெப்பத்தினால் சிறுகுழியில் ஊற்றிய நீரானது காய்ந்து போனதாகக் கூறப்படுகின்றது. இதிலிருந்து கூவலிலிருந்து நீரை எடுத்துச் சிறுகுழியில் ஊற்றப் ‘பத்தல்’ என்ற கலனைப் பயன்படுத்தியதாக அறியமுடிகின்றது. மேலும், பத்தல் என்பது மரத்தாலான நீர் இறைக்கும் கருவி ஆகும்.

    பாலை நிலத்தில் அழுகல்நீர்தான் இருக்கும். அந்நீர் இனிய தன்மையையும், மனநிறைவையும் தராது. அவ்வாரிருக்கும் நீரின் அழுகியவாடையும், உவர்ப்பும் தெரியாமலிருக்க பாலை வழியாகச் செல்வோர் நெல்லிக்காய் உண்டபின் அந்நீரை அருந்தியுள்ளனர்.

    நெடுஞ்சேண் வந்த நீர்நசை வம்பலர்
    செல்உயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லிப்
    பல்காய் அம்சினை அகவும் அத்தம்(அகம்.271) 

    விளர்ஊன் தின்ற வேட்கை நீங்க
    துகள்அற விளைந்த தோப்பி பருகி(அகம்.265)

    எருதின் ஊனை உண்ட ஆறலை கள்வர்கள் ஆதனால் எழும் மிகுந்த நீர் தாகத்தைப் போக்கும் பொருட்டுத் தூயமுதிர்ந்த நெல்லினால் சமைத்த தோப்பிக் கள்ளினைக் குடித்தனர் என்ற அகநானூற்றுப் பாடல் வழி உணவு உண்டபின் நீர்  தாகத்தைப் போக்க ஆறலை கள்வர்கள் கள் குடித்தது புலனாகிறது. மேலும், பாலை நிலத்தில் வாழும் ஆறலைக் கள்வர்கள் தாகத்தால் வருந்தி மரப்பட்டையை உறிஞ்சித் தாகம் தணித்தனர். ஆயர்கள் தோண்டிய கூவல் வழிச் செல்வாரின் தாகத்தை  தணிக்கவும் பயன்பட்டது.

    கல்லுடை அதர கனம் நீந்தி
    கடல்நீர் உப்பின் கணம்சால் உமணர்
    உயங்குபகடு உயிர்ப்ப அசைஇ முரம்பு இழத்து
    அகல்இடம் குழித்த அகல்வாய்க் கூவல்
    ஆறுசெல் வம்பலர் அசைவிட ஊறும் .(அகம்.295)

    நெய்தல் நிலத்தைச் சார்ந்த உப்பு விற்கும் உமணர்  கூட்டம் பாலை நிலத்தைக் கடந்து சென்றது. உப்புச் சுமையினை இழுத்து வந்த எருதுகள் இளைப்பாறும் பொருட்டு ஓரிடத்தில் தங்குகின்றனர். அவ்விடத்தில் வலிய நிலத்தை இடித்துத் தோண்டின அகன்ற வாயினையுடைய கூவல் நன்கு நீர் ஊறி உமணர்கள் மற்றும் எருதுகளின் தாகத்தைத் தணிக்கக் கூடியதாக அமைந்தது. 

    கயம்துகள் ஆகிய பயம்தபு கானம்”(அகம்.11)

    என்று குளம் வறண்டு குளத்தின் அடிப்பகுதி துகள்களாகக் காணப்பட்டதை மேற்கண்ட பாடல் எடுத்துரைக்கிறது.

    வேனில் நீடிய வான் உயர் வழிநாள்
    வறுமை கூரிய மண்நீர்ச் சிறு குளத்
    தொடு குழி மருங்கில் துவ்வாக் கலங்கல்(அகம்.121)

    வெம்மையுடைய கோடை நிலைபெற்ற காரணத்தால் குளத்திலுள்ள நீர் வறண்டது. அதனால் குளிக்கும் சிறு குளத்தில் தோண்டப்பட்ட சிறுகுழியில் குடிப்பதற்குப் பயன்படாத கலங்கல் நீர் காணப்பட்டது. மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுக்கும் போது அந்நீரை குளங்களில் தேக்குகின்றனர். குளங்களில் தேக்கும் நீர் இதர பிற தேவைகளுக்கு பயன்பட்டாலும் கூட அடிப்பகுதியின் வழியாக நீர் கசிந்து தேக்கங்களிலுள்ள நீரின் ஒரு பகுதி நிலத்தடி நீராகிறது நீரற்று வறண்ட கோடைக்காலங்களில் அக்குளங்களில் சிறுகுழியமைத்து அதை மேலும் மேலும் தோண்டும் போது நிலத்தின் அடுத்தடுத்த அடுக்குகளில் தேங்கியிருக்கும் நிலத்தடி நீர் வெளிப்படுகின்றது. இம்முறை சங்ககாலம் தொட்டு இன்றளவும் நடைமுறையிலுள்ளது. 

    கல்லறுத்து இயற்றிய வல்உவர்ப் படுவில்” (அகம்.79) என்ற அகநானூற்றுப்பாடல் கருங்கல்லைச் சமமான வடிவத்தில் அறுத்தெடுத்து குழியமைத்ததாகக் குறிப்பிடுகின்றது. இதன்வழி அருவி நீரினைத் தேக்கி வைக்கப் பாறையினை அறுத்தெடுத்து குழியாக்கி நீரினைக் குறிஞ்சி நில மக்களின் சேகரித்து வைத்துள்ளனர் என்பதனை அறிய இயலுகின்றது.

    தாகத்தால் வருந்திய யானை யாமரப்பட்டைகளை உரித்துத் தாகம் தீர்த்துக் கொண்டதாக, 

    மிசைமரம் சேர்த்திய கவைமுறி யாஅத்து
    நூர் அரை மருங்கின் நீர்வரப் பொளித்து(அகம்.257) எனும் அகப்பாடல் கூறியுள்ளது. அதாவது, தாகத்தால் வருந்திய யானைகள் நீருக்காக அலைந்து திரிந்து நீரற்ற நிலையில் யாமரத்தின் பட்டைகளைச் சுவைத்து அதிலுள்ள நீரினை உண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

    நீரற்று தாகத்தால் வருந்திய மான் கூட்டங்கள் சிறிய இலையினையும், பெருத்த அடியினையும் உடைய நெல்லிக்கனியினைத் தின்று தாகம் தணித்ததாக,

    “………………………………. புல் இலைப்
    பராரை நெல்லி அம் புளித் திரள் காய்
    கான மட மரை கண நிரை கவரும்(அகம்.69) என்ற அகநானூற்றுப்பாடல் குறிப்பிடுகின்றது.

    கேணிகள் மருதநிலத்தில் இருந்ததனை,

    ஆறு செல் வம்பலர் சேறுகிளைத்து உண்ட
    சிறுபல் கேணி ……………..” (அகம்.137)

    எனும் அகப்பாடல் சிறிய பலவேறு வகையான கேணிகள் இருந்ததாகக் குறிப்பிடுகின்றது. மேலும் மக்கள் குடிநீர் எடுக்கின்ற உண்ணுநீர்த் துறையாகவும் ‘கேணி’ விளங்கியுள்ளது.

    புனல்பொரு புதவின் உறந்தை எய்தினும்” (அகம்.237)

    என்று ‘புதவு’ பற்றிய குறிப்புக்கள் சங்க அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது. புதவு என்பது “தண்ணீர் வெளியேறும் சிறியவழி” (தமிழகப் பாசன வரலாறு, ப.29) என்று தமிழகப்பாசன வரலாறு குறிப்பிடுகின்றது.

    ஓங்குநிலைத் தாழி மல்கச் சார்த்தி
    குடைஅடை நீரின் மடையினள் எடுத்த(அகம்.275)

    வயலைச் செடிக்கு நீர் ஊற்றுவதற்கு நீர் நிலையிலிருந்து நீர் எடுத்துவர தாழியைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகின்றது. தாழி என்பது மண்ணாலாகி கலமாக இருக்கலாம். பனங்குடைகளில் தண்ணீர் எடுத்துக் கலத்தை நிரப்பி, பின்பு வீட்டிற்கு நீர் எடுத்து வந்துள்ளதை மேற்கண்ட அகநானூற்றுப்பாடல் சுட்டுகின்றது. குடிநீர் எடுத்து வரவும் மேலே கண்ட முறையினையே அவர்கள் பயன்படுத்தியிருக்கக் கூடும்.

    நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி
    குறுநீர்க் கன்னல் எண்ணுநர்(அகம்.43)

    எனும் அகநானூற்றுப்பாடலில் ‘நீர்க்கன்னல்’ என்பது நீர்க்கடிகாரத்தைக் குறிக்கிறது. எண்ணுநர் என்பது நாழிகைகளைக் கணக்கிட இருந்த நாழிகைக் கணக்கர்களைக் குறிக்கிறது. எனவே நீர்க்கடிகாரம் ஒன்றை உருவாக்கி அதன் மூலமாக பொழுதுகளைக் கண்டறிய நாழிகைக் கணக்கர்களை அமைத்திருந்தும் புலனாகிறது. 

    முடிவுரை

    முதலில் குறிஞ்சி நிலத்தில் மழைப்பொழிவு தொடங்கும்.மலைகளின்மீது சுனைகள் மழைநீரைச் சேகரித்தது. சுனைகள் பார்ப்பதற்குப் பாறைகளின் கண்களைப்போல காட்சியளித்த்து. அருவிகளின் வீழ்ச்சி இனிய ஓசையாய் அமைந்திருந்த்து. பெரிய குளங்களைக் காவலர்கள் காவற்காத்தனர். மேகங்கள் வலமாகச் சுழன்று எழுந்தால் மழைப்பொழிவு நிச்சயம். மேகங்கள் எந்தத் திசையில் தோன்றினாலும் கிழக்கு நோக்கி நகர்ந்தால் மழை தவறாது பொழியும். நெல்லிக்காயினை உண்டுவிட்டு நீர் குடித்தால் சுவையாயிருக்கும். உணவு உண்டவுடன் தோன்றும் நீர் தாகத்தைத் தணிக்கக் கள் உண்டனர்.

    மருதநிலத்தில் மீன்களும், மலர்களும் நிறைந்த நீர்நிலை முதுநீர் இலஞ்சி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மருதநிலப் பெண்கள் நீர்நிலைகளிலிருந்து நீர்  எடுத்துவர அழகிய வேலைப்பாடமைந்த குடங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

    நெய்தல் நிலக் குளிர்ச்சியுடைய குளத்தில் குவளை மலர்கள் பூத்து நிறைந்து காணப்பட்டன.

    பாலை நிலத்தில் கோடைக் காலத்தில் சுனை நீர் வற்றி இருந்தது  ‘வறுஞ்சுனை’ என்றழைக்கப்பட்டுள்ளது. ஆயர்கள் கூவல் தோண்டும் முறைமையினை அறிந்ததோடு அதிலிருந்து நீர் எடுக்கும் தொழில்நுட்ப முறையினையும் நன்கறிந்தவர்களாக இருந்துள்ளனர். கோவலர்கள் ‘கூவல்’ தோண்டுவதற்கு முதன் முதலில் பயன்படுத்தியது அவர்கள் கையிலிருந்த கோலையே ஆகும். ஆநிரைகளுக்காகக் கோவலர்கள் நீர்க்குழிகள் அமைத்தனர். கூவலிலிருந்து நீரை எடுத்துச் சிறுகுழியில் ஊற்றப் ‘பத்தல்’ என்ற கலனைப் பயன்படுத்தினர். பத்தல் என்பது மரத்தாலான நீர் இறைக்கும் கருவி ஆகும். பாலை நிலத்தில் வாழும் ஆறலைக் கள்வர்கள் தாகத்தால் வருந்தி மரப்பட்டையை உறிஞ்சித் தாகம் தணித்தனர். வலிய நிலத்தை இடித்துத் தோண்டின அகன்ற வாயினையுடைய கூவல் நன்கு நீர் ஊறி உமணர்கள் மற்றும் எருதுகளின் தாகத்தைத் தணிக்கக் கூடியதாக அமைந்தது.

    வெம்மையுடைய கோடை நிலைபெற்ற காரணத்தால் குளத்திலுள்ள நீர் வறண்டது. அதனால் குளிக்கும் சிறு குளத்தில் தோண்டப்பட்ட சிறுகுழியில் குடிப்பதற்குப் பயன்படாத கலங்கல் நீர் காணப்பட்டது. அருவி நீரினைத் தேக்கி வைக்கப் பாறையினை அறுத்தெடுத்து குழியாக்கி நீரினைக் குறிஞ்சி நில மக்கள் சேகரித்து வைத்துள்ளனர். மக்கள் குடிநீர் எடுக்கின்ற உண்ணுநீர்த் துறையாகவும் ‘கேணி’ விளங்கியுள்ளது. ‘புதவு’ பற்றியக் குறிப்புக்கள் சங்க அகநானூற்றில் இடம்பெற்றுள்ளது. புதவு என்பது “தண்ணீர் வெளியேறும் சிறியவழி”. வயலைச் செடிக்கு நீர்  ஊற்றுவதற்கு நீர் நிலையிலிருந்து நீர் எடுத்துவரத் தாழியைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகின்றது. தாழி என்பது மண்ணாலாகிய கலமாக இருக்கலாம். பனங்குடைகளில் தண்ணீர் எடுத்துக் கலத்தை நிரப்பி, பின்பு வீட்டிற்கு நீர் எடுத்து வந்துள்ளனர். நீர்க்கன்னல்’ என்பது நீர்க்கடிகாரத்தைக் குறிக்கிறது. எண்ணுநர் என்பது நாழிகைகளைக் கணக்கிட இருந்த நாழிகைக் கணக்கர்களைக் குறிக்கிறது. எனவே நீர்க்கடிகாரம் ஒன்றை உருவாக்கி அதன் மூலமாகப் பொழுதுகளைக் கண்டறிய நாழிகைக் கணக்கர்களை அமர்த்தியுள்ளனர். இவ்வாறாக அகநானூற்றில் நீர்மேலாண்மை குறித்து ஐந்திணைப் பாடல்களில் பேசப்பட்டுள்ளது.

    *****

    கட்டுரையாளர் – தமிழ்த்துறைத்தலைவர்
    D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    விளாப்பாக்கம்   – 632 521.

     

     

     

    Share