Month: October 2018

  • தாயுமானவன்!

    கவிஞர் அறிவுமதி

     

    என்னைத் தாயாக்கியவன் 

    கணவன்!

    எனக்குத் தாயாகியவன்

    நண்பன்!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    மீனாட்ஷி திருக்கல்யாணம்….!
    ——————————–

    160731 Meenakshi Sudareshwara Kalyanam – lr wedding card -Vijaya Satyanarayana Watercolour A3

    ஈசனார் மீனாள் இணைந்த திருமணத்தை
    பூசலா நாயனார் போலவே -யோசனையில்
    கண்டு களித்ததை கூறிடக் கற்பகத்தின்
    குண்டு குமாரனே காப்பு….(1)
    ———————————————————-
    கல்யாணக் கதை கதையாம் காரணமாம்
    —————————————————-

    சென்றமுறை பார்வதி சம்பு திருமணத்(து)
    அன்றமர்ந்தான் தெற்கில் அகத்தியன் -குன்றென
    இந்தமுறை காண மதுரையில் மீனாட்சி
    சுந்தரேசன் கல்யாணம் ஓம்….(2)

    பெண்வீட்டார் – பிள்ளை வீட்டார் அறிமுகம்
    ———————————————————–

    மண்சுமந்தோன் பிட்டுக்கு மாப்பிள்ளை, மைத்துனனோ
    மண்சுமந்த வாயன், மணமகளோ -மண்புகுந்த
    மேனாள் இமவான் மகளான மாதங்கி
    மீனாளாய் வந்த மலைப்பூ….(3)

    நிச்சயதார்த்தம்
    ———————

    சித்திரைத் திங்களில் சித்திறை சொக்கனுக்கு
    இத்தரை வந்த, இமவானின் -புத்திரியை,
    தத்தாய் மலயத் துவசன் வளர்த்தவளை,
    முத்தண்ணா செய்தார் மணம்….(4)….!

    கல்யாணப் பத்திரிகை
    ——————————–

    சித்திரைத் திங்கள் சனிக்கிழமை அன்றுபகல்
    இத்தரையில் மீன இலக்கினத்தில் -பத்தரைக்கு
    பின்னாலே மீனாளை அண்ணா மஹாவிஷ்ணு
    கன்னிகா தானம்சொக் கர்க்கு….(5)

    கல்யாணச் சத்திரம்
    ————————-

    அத்தனைபேர் வந்ததால், ஆலவாயில் தங்கிட
    சத்திரம் இல்லாமல் சம்புமையாள் -கைத்தலம்
    பற்றுவதை மச்சான் பெருமாள் தமுக்கத்தின்
    வெற்றிடத்தில் வைத்தான்பார் விஷ்ணு….(6)

    சீர் வரிசை
    ————–

    பிள்ளைக்கு சீராகப் பொன்னில் திருவோடும்
    வெள்ளி முலாமிட்ட வெண்ணீறும் -கொள்ளியிடும்
    குச்சிக்குப் பூணிட்டு காளைக்கு லாடமிட்டார்
    மச்சினர் மல்லாந்த மால்….(7)

    வரதட்சிணை
    —————

    குவளைக்குள் பிச்சைக்கூழ் கொள்வோன் கறாராய்
    அவலுக்(கு) அளித்தேழை ஆன -குவளைக்கண்
    மாலோனை முன்ஜாமீன் மன்றாடி கேட்பதற்குள்
    பாலாழிக் கண்ணஅம் பேல்….(8)

    ஜான்வாசம்
    ————–

    சித்திரை வீதியில் ஜான்வாசம், கொட்டாவி
    நித்திரை மைத்துனர் நீட்டிவிட -பித்தனமர்
    அக்காளை அஞ்சி அலங்காநல் லூர்சென்று
    உட்கார ஊர்வலத்திற்க்(கு) ஓய்வு….(9)

    கண்ணூஞ்சல்

    —————–

    கண்ணூஞ்சல் ஆடினர் பெண்ணும்மாப் பிள்ளையும்
    விண்ணூறும் தேவர்கள் வீசிட -மண்ணூறும்
    மக்களண் ணாந்துமண மக்களைக் காட்டியிட்டார்
    கக்கமுறை சேய்களுக்குக் கூழ்….(10)
    மாப்பிளைக் கண்ணுக்கு மையிடுதல்
    ———————————————-

    மாப்பிள்ளை கண்ணுக்கு மையிட்டோர் கைகளில்
    தீப்புண் தகிக்க தவித்தனர் -கூப்பிட்ட
    மைத்துனர் மாலன் மருத்துவனால் பச்சிலையை
    வைத்தணைத்தார் நெற்றிக்கண் வீச்சு….(11)

    காசியாத்திரை-மாப்பிள்ளைத் தோழன்
    ———————————————-

    யாப்பில்லை என்றாலும் ஏழை தருமிக்கு
    மாப்பிள்ளைத் தோழன் மரியாதை -கூப்பிட்டு
    காசியாத்தி ரைக்கு குடைவிசிறி தந்தனன்
    ஈசன் விளையாடல் இது….(12)

    சிவகாசி யாத்திரை செல்லல் தடுக்க
    விவகா ரமானமச்சான் விஷ்ணு -சிவகேசம்
    மேலமர்ந்த கங்கையை மொண்டு தரையிலிட
    ஆலவாய் காசிநகர் ஆச்சு….(13)

    சம்பந்தி சண்டை
    ———————

    சொக்கன்கல் யாணத்தில் சம்மந்தி சண்டையிட
    விக்கினமாய் யாரும் வராததால் -சக்களத்தி
    கங்கை குதித்திறங்க செங்கண்மால் தம்பதிக்கு
    தன்கையில் ஏந்தித் தெளிப்பு….(14)

    மாப்பிள்ளை-முறுக்கு
    ————————-

    குனித்த தலையாய், குதிகால் நடையாய்
    பனித்த விழியாய் பயந்து -தனித்திருந்து
    புக்ககக் கூடலில் பூனையாய் வால்சுருட்டி
    முக்கண்ணன் சொக்கன் முழிப்பு….(15)

    மீனாளைப் பார்த்து மதுரை மயங்கியதில்
    மானாளை முற்றும் மறந்தது -தூணாளும்
    ஆய்ப்பிள்ளை மச்சான் அநுதா பமாயளிக்க
    மாப்பிள்ளை வாயில் முறுக்கு….(16)

    கன்னிகாதானம்
    ——————-

    தாரையை வார்க்கையில் தன்சார்பில் தந்தையாய்
    யாரை நிறுத்துவது என்றீசர் -பாரமுறப்
    பாக்கையில் வந்தார் பெரிய புராணத்து
    சேக்கிழார் சாமி சபைக்கு….(17)….!

    பாம்பலையில் தூங்கும் பெருமாள் சுபாவமாம்
    சோம்பலை விட்டு சுறுசுறுப்பாய் -மாம்பலம்
    நல்லிகுப்பு சாமியிடம் செல்ல சகோதரிக்காய்
    அள்ளிவந்தார் சேலை அலைந்து….(18)

    கண்ணைப் பறிக்கின்ற கூறைப் புடவையில்
    மின்னலென மேடையில் மீனாள்தன் -அண்ணன்
    மடியமர நான்முகன் மாங்கல்யம் ஏந்த
    முடிந்தான் அரன்முடிச்சு மூன்று….(19)

    அம்மி மிதித்தேறி அருந்ததி பார்த்தல்
    ————————————————

    சொக்கனுடம் மீனாட்சி அக்கினியைச் சுற்றிவரல்
    வக்கணையாய்க் காண வசிட்டனுடன் -அக்கணம்
    அம்மிமிதித்(து) ஏறி அருந்ததி பார்த்தனள்
    விம்மிஆ னந்தநீர் விட்டு….(20)

    கல்யாணத்திற்கு வந்த VIP பிள்ளைகள்
    ————————————————

    கல்யானைக்(கு) அன்றுயிர் கொள்ளவைத்த சொக்கனைக்
    கல்யாணம் கொள்கிறாள் கன்னிமீனாள் -தொல்யானைப்
    பிள்ளையும் வேலனும் பார்த்ததால் பெற்றோர்க்கு
    இல்லையொண் ணாத இனிப்பு….(21)

    கல்யாணச் சாப்பாடு
    —————————-

    உண்ட பெருவிருந்தால் குண்டோ தரன்கொண்ட
    தொண்டை அடைத்திடும் தாகத்தைக் -கண்டசிவன்
    கைவை எனச்சொல்லக் கைமாற்றி வைத்தவன்முன்
    வைகை விரைந்தாள் வளைந்து….(22)

    மொய் எழுதுதல்
    ——————–
    மாப்பிள்ளை சொக்கன் மணமகள் மீனாளைக்
    காப்பிட்டுக் கொள்கிறார் கல்யாணம் -சாப்பிட்டு
    மொய்யெழுது வோர்க்குமச்சான் மாலோலன் தாம்பூலப்
    பையேந்தி நிற்பார் பணிந்து….(23)

    நலங்கு
    ———

    விடக்கண்டன் சொக்கன் விடாக்கண்டன் ஆகி
    விடமறுத்தான் தேங்காய் நலங்கில் -படபடத்த
    கெண்டை விழிமீனாள் கோபிக்க அஞ்சியரன்
    அண்டத்துக் கோளை அளிப்பு….(24)

    மாலை வரவேற்பு
    ——————–

    மச்சினன் வேண்டியதால் மாலை வரவேற்பில்
    அச்சிவன் தாண்டவம் ஆடிட -உச்சத்தில்
    ஓடிவந்து மீனாள் ஒயிலாக சேர்ந்துகொள்ள
    கூடலுக்குக் கூடுதல் கூத்து….(25)

    சாந்தி முகூர்த்தம்
    ———————–

    முதலிரவில் மீனாள் கதவடைத்துச் சொன்னாள்
    மதுரைவாழ் மக்களின் மாண்பு –
    பதவிசாய் நாகரீகப் பண்பு -பொதுவிடத்தில்
    மாட்டோடும் ஓட்டோடும் மானத்தை வாங்காதீர்
    வீட்டோட மாப்பிள்ளை வாள்….(26)

    இச்சென்று முத்தமிட ஈசன் நெருங்கிட
    நச்சென்று நாகம் நெளிந்தது -அச்சச்சோ
    என்றலறி மீனாள் எகிறி குதித்தோட
    அன்றுசிவ ராத்திரி ஆச்சு….(27)

    பாலிகை கரைப்பு
    ———————–

    மாளிகை மீனாள் மயானனை ஏற்றிட
    பாலிகையை பெண்கள் பகிஷ்கரிப்பு -நாலுகை
    மைத்துனன் வைகையில் மோகினியாய் தானியத்தைக்
    கைத்தலம் ஏந்திக் கரைப்பு….(28)

    கட்டுச் சாதக் கூடை
    —————————

    கழுத்தரவம் தன்னை கடாசி எறிந்தான்
    அழுத்தியுமை யாளை அணைக்க -பழித்தனர்
    கட்டு விரியன்கள் கட்டிக் குலாவிடும்
    கட்டுச்சா தக்கூடை கண்டு….(29)

    மலயத்துவசன் பிரிவோபசாரம்
    —————————————

    கலையத் துவங்கினர் கல்யாணம் கண்டோர்
    அலையில் படுத்தான் அரிமால் -மலயத்
    துவசன் வளர்ப்பை தழுவிப் பகர்ந்தான்
    கவசமே கூடலைக் கா….(30)

    சிவசிவ என்று சிரத்தில் மலையத்
    துவசனார் குட்டித் தொழுது -அவசரமாய்
    கெஞ்சினார் ”நஞ்சுண்டா மிஞ்சினாலும் மீனாளை
    நெஞ்சில் அமிழ்தாய் நிறுத்து”….(31)

    கோயிலுக்குல் புகுதல்
    —————————-

    சித்தரின் சன்னிதியில் சொக்கனும் மீனாளும்
    சுத்திவந்து தம்பதியாய் சேவித்து -தத்தம்
    கருவறைக்குள் செல்வதைக் கண்ட மதுரை
    அரஹர சம்போவென்(று) ஆர்ப்பு….(32)
    \

    பல ஸ்ருதி
    ————-

    மாதரசி மீனாள் மஹாதே வனைமணந்த
    போதரிசி வாழ்த்தைப் பொழிந்தோர்க்கும் -காதுருசி
    கொண்டதைக் கேட்டோர்க்கும் கேட்டதை சொன்னோர்க்கும்
    விண்டதெலாம் வாணியவள் வாக்கு….(33)….!
    ——————————————————————————————————————————————————————————————————————————-

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181012 Bhavani -wcol 24×32 icam lr

    ’’அம்பாளும் பார்த்திட, நம்பாள் நடராசர்
    தெம்பாக ஆடுகிறார் தாண்டவம் ,-வம்பாள்
    தபஸ்விகள் ஏவினர், தாருகா கானில்
    அபஸ்மாரப் புல்(தர்ப்பை)மீ(து) அரன்போல்,-சபாஷ்நீ!
    சிவானி! எருமை சிகைபிடித்துக் கொன்ற,
    பவானி பவநோய் பிடி’’…. .கிரேசி மோகன்…!

    Share
  • மாணவர்கள் விழிவழியே கலைநயத்தைக் காட்டும் லலித் கலா அகாடமி.

    விவேக்பாரதி

    துவாரகா தாஸ் கோவர்த்தன தாஸ் வைணவக் கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறை மாணவர்களில் இளங்கலைஞர்களின் கற்பனை மற்றும் கலைத்திறனை வெளிக்கொணர நிகழ்த்தப்படும் புகைப்படம் மற்றும் ஓவியக் கண்காட்சியே Perceptiones 2K18. சென்னை கிரீம்ஸ் சாலையில், லலித் கலா அகாடமி வளாகத்தில் சுமார் 150 கலைப்படைப்புகள் காட்சிப் படுத்தபட்டிருக்கின்றன.

     வெவ்வேறு உணர்வுத் தளங்களைப் பிரதிபலிக்கும் 50 ஒவியங்களும் 100 புகைப்படங்களும் பொது மக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பார்த்ததும் ஈர்த்து நம் சிந்தனைகளைக் கவர்ந்திழுக்கும் மாணவக் கலைஞர்களின் கலைநயங்களைக் காண மக்கள் திரளாய்க் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். 10.10.2018 டில் பிரபல புகைப்படக் கலைஞர் திரு. வெங்கட் ராம் அவர்களால் து.கோ. வைணவக் கல்லூரியின் முதல்வர், டாக்டர் கணேசன், கல்லூரி பொருளாளர் திரு அஷோக் கேடியா மற்றும் காட்சித் தொடர்பியல் துறைத்தலைவர் திருமதி வசந்த் அவர்களது முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.

    தொடங்கிவைத்து படைப்புகளை ரசித்துப் பார்வையிட்ட புகைப்பட வல்லுநர் வெங்கட் ராம் அவர்கள் “இந்த உலகம் நாளுக்கு நாள் தன்னை விரிவுப் படுத்தி மேம்பட்டுக் கொண்டே இருக்கிறது. நாமும் நமது விருப்பம் மற்றும் ஆர்வத்தைக் குறைக்காமல் அந்த மேம்பாட்டுக்குத் தக்கவாறு நம்மையும் தயார்ப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.” என்று மாணவர்களுக்கு அன்பான அறிவுரையும் வழங்கினார். அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை காட்சிக்கு இருக்கும் அரிய விழி விருந்தினைக் கண்டு ரசிக்க கலையுணர்வு கொண்ட மனங்கள் காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை வரவேற்கப்படுகின்றனர். மாணவர்களின் கலைப் பார்வையைக் காட்டும் காட்சிக் களமாக இன்னும் சில நாட்கள் நல்ல பொலிவோடு விளங்கவிருக்கின்ற லலித் கலா அகாடமி நோக்கி கலா ரசிகர்களை அழைக்கிறோம்.

    Share
  • வல்லமை அன்பர்கள் சந்திப்பு 2018

    பவள சங்கரி

     

    வல்லமை அன்பர்கள் சந்திப்பு, 14.10.2018 ஞாயிறு அன்று பிற்பகல் 3 மணி முதல் 5 மணிவரை சென்னை அண்ணாநகரில், கீழ்க்கண்ட முகவரியில் நடைபெற உள்ளது.

    White Room for Scientific Tamil Development
    Manavai Mustafa Scientific Tamil Foundation Trust
    AE 103, 6th Street, 10th Main Road
    Anna nagar West, Chennai – 600040
    https://goo.gl/maps/8qNo5AEvEgN2

    பொது அறிமுகத்திற்குப் பிறகு, செய்த, செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி ஆலோசிப்போம். வல்லமையில் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட விரும்புவோர், அது குறித்து இந்தச் சந்திப்பில் நேரில் கேட்டறியலாம்.

    இந்த நிகழ்வில் பங்கேற்போர், தங்கள் வருகையை vallamaieditor@gmail.com என்ற முகவரியில் உறுதி செய்யுங்கள். வாருங்கள்! சந்திப்போம்! உரையாடுவோம்! ஆக்கபூர்வமாகச் செயல்படுவோம்!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181011 Lalitha lr

    புலிதாங்கி பாலர், எலிதாங்கி வேழர்,
    கலிதாங்கி கந்தர் குலாவும்- லலிதாங்கி
    ராணியே,ரக்‌ஷி: ரஹஸ்ய சினேகிதி
    வாநீயுன் வாசலில் வீடு….!

    ”த்யான த்யாத்ரு த்யேய ரூபி”
    —————————————–
    எண்ணும் தொழிலவள், எண்ணிலா எண்ணமவள்
    எண்ணுவோர்க்(கு) ஏற்ற எழுச்சியவள் -எண்ணிடத்
    தின்னும் பசியவள், தீராத தாகமவள்,
    உண்ணா முலையவளை உண்…கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்

     

    181010 Pulaka Bhushanam Ashrayanti-wcol 24×32 icam lr

    வேதம் படித்தென்ன , வேதாந்தம் கற்றென்ன
    சீதரன் பாதம் சொடுக்கெடுப்போள் -பாதம்
    பணிந்திடு மானுடா, பாரதன்பின் உன்னுள்
    கனிந்திடும்காண் முத்திக் கனி”….!

    “ஆடி வெள்ளியில் தேடிவரும் தங்கமுனை
    மூடி உறங்காதே முன்கதவை -ஏடி !
    எழுந்தேலோ ரெம்பாவாய் ,எம்பிரான் பள்ளி
    விழுந்தாளை வாழ்த்தி வணங்கு”….!

    ’’முனிபிருகு வாரிசே மூவா முகுந்தன்
    பணிகாத்தல் பக்க பலமே -அணிபொற்
    சரமே அவன்மார் சரோஜமே தாமோ
    தரனுகக்கும் தாயே துதிப்பு “.!

    “பொன்னாத்தா, தாமரைப் பூவாத்தா, தாங்கிடும்
    மண்ணாத்தா, பின்வந்த சின்னாத்தா, -பண்ணாத்தான்,
    நன்னாத்தான் பாடிய, நாச்சியார் காதலுக்கு
    கண்ணாத்தா வாயிருந்து காப்பு”….!

    உத்தம பத்தினியின் உச்சந் தலைவகிட்டில்
    பத்தும் செய்யா பணமுடிப்பில் -சுத்தமாய்
    சாணத் தெளிப்பில்ஸ்ரீ சூர்ண நுதற்பிறையில்
    காணலாம் பொன்மகளின் கால்….!

    “வண்ணான் சொல்ல வரித்த மனையிவளை
    சொன்னான் வனத்திற்கு செல்லென்று -பின்னாளில்
    தந்தை கதைசொல்ல தந்தாள் இருபிள்ளை
    விந்தை இவள்செய் விதி”….

    ’’கைடபனைக் கொன்றவன், கார்முகிலாய் சேடன்மேல்
    மெய்படரச் சாய்ந்தவன்மேல் மின்னலாய் -மையடர்ந்த
    பங்கயக் கண்களால் பார்த்தது போதுமென்மேல்
    திங்கள் விழியைத் திருப்பு’’…கிரேசி மோகன்….!

    Share
  • வேழ கணபதி காப்பு

    -விவேக்பாரதி

    சந்தச் சிந்தியல் வெண்பாக்கள்

    மோன கணபதி ஞான கணபதி
    வான மருளிடு மாதி கணபதி
    கான கணபதி காப்பு!

    தீது விடுபட வாத மறுபட
    மோத வருமிட ரோடி விலகிட
    நாத கணபதி காப்பு!

    நாளு மடியவ ராழ வினைகெட
    ஆளு மரசுநி தான கணபதி
    தாளெ மதுகதி காப்பு!

    நீல நதிதவ மாழ வமரனு
    கூல கணபதி மூல அதிபதி
    கால கணபதி காப்பு!

    தேக முயர்நல மாக வழிசெயு
    மூக கணபதி மூட வினைதடு
    காக கணபதி காப்பு!

    ஆறு சடைதவ ழாதி சிவனொடு
    வீறு மிகவெதி ராடி வொருசிர
    மாறு கணபதி காப்பு!

    தேவி சிவனுல கான கதைசொல
    மேவி யொருகனி காணு மருநிதி
    தேவ கணபதி காப்பு!

    வேட ருயகுல நாத னெனவரு
    மேடு குகனுறு காத லுதவிய
    பீடு கணபதி காப்பு!

    தூய மதியிட னாய கடமைக
    ளோயு வரையினி லாக முயலுவ
    மேய கணபதி காப்பு!

    வாழ வொருவர மான பதகதி
    தோழ னெனவரு ளாதி கணபதி
    வேழ கணபதி காப்பு!! 

    -01.10.2018

    Share
  • சூழல்

    கவிஞர் பூராம்

    தூரலொடு கூடிய பெருமழை
    கூட்ட நெரிச்சலில்
    அவளுக்கருகில் அவன்
    விரும்புவதில்லை இதுபோன்ற
    நெருக்கத்தை
    அவளின் பரிசம் அவனை
    விலக மறுத்தது
    அவளின் தேவையும் நிராகரிக்க மனமில்லாத
    மனதோடு அவனும்
    உடல்கள் உரசலில் இனம்புரியாத இன்பத்துடன்
    பயணத்தின் நடுவே
    சூழல் கண்காணிப்பின்
    அருவருப்பும் அவளின் புரிதலும்
    இன்பமெல்லாம் அடி வனத்திற்கு அப்பால்
    சிறிய அவமானத்துடன்
    அவள் நினைவோடு
    கடந்து செல்லும் காற்று.

    Share
  • அரவணைப்பாய் தாயே நீயும்!

     

    மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

    நவராத்திரி நன்னாளில் நலந்தரும் நாயகியிடம் வேண்டி நிற்போம்

    நலமுடன் நாங்கள்வாழ நாயகியைச் சரணடைவோம்
    நிலமெலாம் அமைதிகாண நெஞ்சார வேண்டிநிற்போம்
    அளவில்லா ஆசைதன்னை அகற்றிடு  தாயேயென்று
    அன்னையின் நாமம்தன்னை அனைவரும் துதித்தேநிற்போம்

    மதமதை  அடக்கிநிற்கும்  மகத்தான  மாதாநீயே
    மனமதில்  உறைந்துநிற்கும் மலமதைப்  போக்குதாயே
    உளமதில்  உன்னைவைத்து  உருகியே   பாடுகின்றோம்
    ஒருகணம் எம்மைப்பார்த்து உத்தமராக்கு  தாயே

    கல்வியைத் தரும்போதம்மா  கசடினை  நீக்கித்தாநீ
    நல்லதைச் செய்யுமெண்ணம்  நன்குநீ  படியச்செய்வாய்
    சொல்லெலாம் தூய்மையாக  சொல்லிட  வைப்பாயம்மா
    நல்மனத்  தோடுநாளும் வாழ்ந்திடச் செய்வாய்தாயே

    கோலமிட்டு  கும்பம்வைத்து  குத்துவிளக்  கேற்றுகிறோம்
    குடும்பமெலாம் ஒன்றுசேர்ந்து குறைசொல்லல் தவிர்க்கின்றோம்
    வாழுதற்கு நல்லவற்றை தேடித்தேடி எடுக்கின்றோம்
    வல்லமையின்  நாயகியே  வந்திடுவாய்  மனமெல்லாம்

    ஈரமுள்ள  வீரமதை  எங்களுக்  கருள்வாய்தாயே
    கோரமுள்ள குணமதனை கொன்றொழிக்க வேண்டுமம்மா
    பாரமுள்ள வினையனைத்தும் பறந்தோடச்  செய்வாயென்று
    ஆர்வமுடன்  வேண்டுகின்றோம் அம்மாநீ அரவணைப்பாய்!

    Share
  • சேக்கிழார்  பா நயம் – 6

    திருச்சி  புலவர் இரா.இராமமூர்த்தி

    ————————————————————

     

    திருக்குறளில் காமத்துப் பாலில் , பாடல் ஒன்றுண்டு! அக்குறட்பாவில் தலைவன் தலைவியை சற்றுத் தொலைவிலிருந்து பார்க்கிறான்! அங்கிருந்த உருவத்தை,  தெய்வத் தன்மை வாய்ந்த அணங்கோ? அழகிய மயிலோ? என்று காட்சி யளவில் கருதுகிறான். இதுவரை தான் கண்டறியாத கவர்ச்சியும், உருவும் கொண்டு தன்னை மயக்கும் உருவம் அணங்கோ?  என்று தொலைவிலிருந்து கண்ட அவன் எண்ணுகிறான்; பின்னர் இன்னும் நெருங்குகிறான்.  செடி கொடிகள் இடையே நிற்கும் அவள் உருவம் ஒயிலாக வளைந்து காணப்பெறுவதால் அழகிய மயிலோ? என்று எண்ணுகின்றான்; இன்னும் அருகே நெருங்கிய போது, அவள் முகமும் அவள்  செவியில் அசையும் குழைகளும்  புலப்படுகின்றன! ஓ! அவள் மானிடப் பெண்தான்! என்று எண்ணியவன் அவள் யாரோ? என்று ஆவலுடன் நோக்குகிறான்! இவ்வாறு தொலைவிலிருந்து அருகே வர வர அவனுக்குத் தோன்றும் ஐயங்கள் நம்மையும் ஆவல் கொள்ள வைக்கின்றன. இவ்வாறே பெரியபுராணத்திலும்  ஓர் அரிய பாடல் நம்மைக் கவர்கின்றது.

    திருவாரூரின்  இயற்க்கை வளத்தை விளக்கும் போது சேக்கிழார் தம் புலமை நலத்தால் நம்மை மகிழவும் நெகிழவும் வைக்கிறார்! அங்கே நெல்வயலைச் சூழ்ந்த சோலைகள்  மிகுந்த நிழலுடன் சற்றே இருண்டு  காட்சி யளிக்கின்றன. தொலைவிலிருந்து வரும் உழத்தியரின்  கண்களில் அச்சோலைகள் கரும்பு வயல் போலக்  காட்சி தருகின்றன! ஆனால் நெருங்கிக்  காணும்போது, வளமாகப் பெருத்து வளர்ந்த நெற்பயிர்களே, கரும்பு  போலத் தோன்றின என்கிறார்! அதனால் அங்கு வந்த அப்பெண்கள் ,’’கரும்பல்ல , நெல்! ‘’  என்று கூறி விடுகிறார்களாம். அங்கே  அடுத்து,  மிகுந்த வளத்தினால் பருத்துத் தோன்றிய கரும்புகள், பாக்கு மரங்களோ  என்று ஐயுற வைத்தனவாம்.உயர்ந்து வளர்ந்திருந்த கரும்புகள் , காண்பார் கண்முன் கமுக மரங்கள் போலக் கட்சி தந்தன! ஆனால் நெருங்கிக்  காணும்போதுதான் உழத்தியர், ’’கமுகல்ல; கரும்பு!’’ என்று கூறினார்களாம்.

    இவ்வாறு மக்கள் பிறழவுணர்ந்ததற்குப் பகலிருளே காரணம். அந்த  இருளின்  இடையில் நீலப்பூக்களின் அகவிதழ்களில் புகுந்து வண்டுகள் குடைவதால் எழுந்த மகரந்தப் பூந்துகளே பார்ப்போரை ஏமாற்றுகின்றன! இவ்வாறு கூறும் உழத்தியர் பூக்களைத் தொடுத்து அணிந்துள்ளனர் . அவர்களின் கூம்பிய கரங்கள் தாமரை போல் காட்சி யளிக்கின்றன. இதற்குமேலும் சேக்கிழாரின்  கற்பனை, அந்த உழத்தியரின் குரல் அமுதம் போல் உள்ளதாம்! இனி முழுப்பாடலையும் காண்போம்

    ’கரும்பல்ல   நெல்லென்னக்  கமுகல்ல  கரும்பென்ன

     சுரும்பல்லி   குடைநீலத்  துகளல்ல  பகலெல்லாம்

     அரும்பல்ல  முலையென்ன  அமுதல்ல   மொழியென்ன

     வரும்பல்லா  யிரங்கடைசி மடந்தையர்கள்  வயலெல்லாம் ‘’

    இப்பாடலில் கடைசியர் எனப்படும் உழத்தியர்கள் பல்லாயிரவர்  கூடி வயலெங்கும் நிறைந்து, நெல்லைக் கரும்பெனவும், கரும்பைக் கமுகு எனவும் பிறழ உணர்த்து கூவுகின்றனர். காரணம் , நீலப்பூக்களின் மகரந்தப் பூந்துகளே ஆகும்! அம்மகளிரின் கரங்கள் தாமரை போல் உள்ளன; அவர்தம்  குரல் அமுதம்போல் உள்ளதாம்!  இந்தக் கற்பனையின் மூலம் ‘’அளவை இயல்’’   (பிரமாணவியல்)  உண்மை ஒன்றினைச் சேக்கிழார் புலப்படுத்துகிறார்.

    தூரத்தே ஒரு பொருளைக் கண்டறிந்த  ஒருவன், மேலும் அணுகிக் கண்டபோது அப்பொருளின் தன்மைகள் மாறுபட்டிருப்பதால்    வேறொன்றாக உணர்கிறான்!

    இதில்   பிரத்தியட்சம் , அனுமானம், உவமானம், ஆகமம் என்ற நால்வகைப் பிரமாணங்கள் அமைந்துள்ளன! கரும்பு என்றும் , கமுகு என்றும் அனுமானம் செய்த பொருள்கள் பிரத்யட்சத்தில் நெல்லாகவும் கரும்பாகவும் இருக்கின்றன. உழத்தியர் குரல் அமுதம் போல் இருப்பதும் , கரங்கள் தாமரைபோல் இருப்பதும் உவமானம்! மயக்க உணர்வு வேறு, உண்மைநிலை வேறு என்ற ஆகம அளவையை  இப்பாடல் காட்டுகிறது!

    ========================================================================

    Share
  • மேலாண்மை பொன்னுச்சாமி சிறுகதைகளில் சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகள்

    -முனைவர் அரங்க.மணிமாறன்

    முன்னுரை:    

    சிறுகதை இலக்கியங்கள் தமிழ்மக்களின் ஓய்வுநேரங்களைச் சுகப்படுத்தவும் நன்னெறி ஊட்டவும் கற்பனைகளைக் கொட்டித்தீர்க்கவும் தொன்ம-புராணங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சொல்லவும் பயன்பட்டன.

    இன்றைய காலக்கட்டத்தில் சித்தாந்த வேதாந்த கருத்துக்களின் வெளிப்பாட்டுக் கருவியாகப் பயன்பட்டு வருவதை உணரமுடிகிறது. காலத் தேவைக்கேற்ப விடுதலைச் சிந்தனைகளையும் பெண்ணியச் சிந்தனைகளையும் சமுதாயத்தில் நிலவும் சாதியப் பொருளாதாரச் சிக்கல்களையும் இசங்களின் கருத்துவெளிப்பாடுகளையும் பொருண்மைகளாகக் கொண்டு விளங்குகின்றன.

    அத்தகைய சிறுகதை வரலாற்றில் மேலாண்மை பொன்னுச்சாமி சிறுகதைகளில் வெளிப்படும் சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகளை வெளிக்காட்டுவதாய் இக்கட்டுரை அமைகிறது.

    மேலாண்மை பொன்னுச்சாமி:

    மேலாண்மை பொன்னுச்சாமி விருதுநகர் மாவட்டம் மேலாண்மறை நாட்டில் பிறந்தவர். ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால் வாழ்வின் துன்பங்கள் கற்றுத்தந்த பாடங்களை நிறையவே படித்தவர். ஊரில் மளிகைக்கடை நடத்தியவர். பள்ளிப்படிப்பை நிறுத்தினாலும் சுயவிருப்பமாக இலக்கியங்களைக் கற்றுத்தேர்ந்தவர். கதை படைப்பிலக்கத்தில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டு முப்பத்தாறு நூல்களைப் படைத்தளித்துள்ளார்.

    அன்னபாக்கியன் அன்னபாக்கியச்செல்வன் முதலிய புனைப்பெயர்களில் எழுதியவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளராக விளங்கியவர். இடதுசாரியச் சிந்தனையாளர்.

    இருபத்திரண்டு சிறுகதைநூல்கள், ஆறு நாவல்கள், ஆறு குறுநாவல்கள், ஒரு கட்டுரை நூல் என எழுத்துலகில் தடம்பதித்தவர். மனப்பூ சிறுகதைக்காகத் ‘தமிழக அரசின் விருது’ வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தின் ‘மாட்சிமை விருதும் கேடயமும்’ பெற்றவர். உயிர்காற்று சிறுகதைக்காக ‘பாரத ஸ்டேட் வங்கி விருதும்’ ‘கல்கி சிறுகதைப் போட்டி விருது’ ‘ஆனந்தவிகடன் பவளவிழா முத்திரைப்பரிசு’ பெற்றவர்.

    இவரது சிறுகதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக வைக்கப்பட்டது. பாட்டையா சிறுகதை 12ஆம் வகுப்புப் பாடமாக அமைந்தது. இவரது சிறுகதைகளை ஆய்வுசெய்து பத்து இளநிலை ஆய்வும் நான்குபேர் முனைவர் பட்ட ஆய்வும் மேற்கொண்டு சிறப்பு அடைந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக 2007ஆம் ஆண்டு ’மின்சாரப்பூ’ சிறுகதை நூல் சாகித்திய அகடெமி விருதுபெற்றது.

    ‘சமரசமற்ற போர்க்குணம் மிக்க படைப்புகள்தாம் என் லட்சியம்’1 என்ற கொள்கையோடு எழுதிய மேலாண்மை பொன்னுச்சாமி 2017 அக்டோபர் 30 இல் மறைந்தார். ஆனால் அவருடைய சிந்தனைகளும் சித்தாந்தங்களும் என்றுமே அழியாமல் நிலைக்கும் என்பதில் ஐயமில்லை.

    சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகள்:

    இலக்கியங்கள் மனித சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக விளங்குகின்றன. மனிதன் ஒரு சமூகவிலங்கு. ஒரு மனிதன் பிறமனிதரோடு தொடர்புகொள்ளும்போது ஏற்படும் சிக்கல்கள் சமுதாயச் சிக்கல்களாகின்றன. ஒவ்வொரு காலத்திலும் ஒரு குறிப்பிட்ட நாகரிக அமைப்போடு இயைந்து மாற்றமடைந்து வந்திருக்கிறது சமுதாயம். சமுதாயம் (SOCIAL) எனும்சொல் குமுகாயம் எனும் சொல்லிலிருந்து, மனிதர்களின் கூட்டுவாழ்க்கையிலிருந்து உருவானதாகும்.

    “SOCIAL என்னும் சமுதாயத்தைக் குறிக்கும் SOCIETY என்னும் ஆங்கிலச்சொல் சமூகம் என்பதை குறிக்கும்.  SOCIAL என்னும் சொல்லோடு நெருங்கிய தொடர்புடையதாகும். எனவே மனிதனை விலங்கிலிருந்து பிரிப்பதே இந்தச் சமூகம் அல்லது சமுதாயம் என்ற சொல்தான்”2  என்கிறார் அ.மு.பரமுசிவானந்தம்.

    மனிதனை மனிதனோடு இணைத்து ஒரு சமூக அமைப்பை உருவாக்குவது சமுதாயம். இது “ஓர் ஒழுங்கின் அடிப்படையில் இணைக்கப்பட்டு தனிமனிதர்களுக்கும் அவர்களை பிணைக்கும் உறவுமுறைகளுக்கும் இடைவிடாத மாற்றம் நிகழ்கின்றது; இத்தகு சிக்கல்கள் மாறிக்கொண்டே இருக்கும் அமைப்பையே சமுதாயம் என்பர்”3 என்கிறார் பி.குப்புசாமி.

    ஓர் எழுத்தாளன் தன்னைச் சுற்றிய சமுதாய நிகழ்வுகளை இலக்கியத்தில் படைத்துக் காட்டுகிறான். மனிதச்சிந்தனைகள், வழக்காறுகள், நம்பிக்கைகள், குடும்பம், பொருளாதாரம்,அரசியல், பண்பாடு போன்றவற்றைப் பிரதிபலிக்கும் இலக்கிய வகைகளில் சிறுகதையும் ஒன்று. சமுதாயத்தில் நிலவும் அன்றாடப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றைக் களையும் நல்ல நோக்கத்தோடு எழுதப்படுபவை இச்சமூகப் படைப்புகள். அவற்றுள் சில சமுதாயப் பிரச்சினைகளைப் படம்பிடித்துக் காட்டுகின்றன் சில தீர்வுகளையும் கூறுகின்றன.

    “தனிமனித எண்ணங்கள், சமுதாயத்தின் பொதுவான நினைவோட்டம் என்னும் இரண்டு வகையான சிந்தனைகளின் அடிப்படையில்தான் காலங்காலமாக சமுதாயம் இயங்கிவருகிறது’4  என்கிறார் அரு.சின்னசாமி. தனிமனிதனின் போராட்டம், மானிடக் குழுவோடு இணையும்போது உருவாகும் போராட்டம் சமுதாயம் எனும் ஓர் அமைப்பை ஏற்படுத்துகிறது.

    ஒரு குறிப்பிட்ட காலத்துச் சமூக நிலைமையின் பிரத்தியேகமான பண்புகளமைந்த பாத்திரங்களைக் கண்டறிந்து படைப்பவனே சமூக நாவல் ஆக்குகிறான்”5  என்கிறார் கைலாசபதி. சமுதாயத்தின் மீதும் அதன் வளர்ச்சிமீதும் மிக்க அக்கறை உடையவரான மேலாண்மை பொன்னுச்சாமி தமது கதைகளில் சமுதாயம் சார்ந்த பல்வேறு சிக்கல்களை முன்வைத்து சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    அமைதி தேசம் மலர வேண்டும்:

    தனிமனிதக் கோபங்களும் பேராசைகளும் உலகயுத்தத்தையே உருவாக்குகின்றன. அடுத்தவர் வளர்ச்சிமீதும் வளத்தின் மீதும் பொறாமையும் அவற்றைக் கைப்பற்றி விடவேண்டும் எனும் ஆசையும் கொண்டு உலகப்போர்களை உருவாக்கி பேரழிவுகளுக்கு வழிவகுத்தனர்.

    ஆனால் பழந்தமிழர் அறத்தோடு கூடிய போர்முறைகளையே கையாண்டனர். பழந்தமிழரின் ஈரம் செறிந்த வீரம் மறம் எனப்பட்டது. தனக்கு நிகரான போர்த்திறனும் படைக்கலப் பயிற்சியும் பெற்றவர்களோடு மட்டுமே போரிடுவர். ஆவும், பார்ப்பனரும், பெண்களும், பிணியுடையவரும் ஈமக்கடனிருக்கப் புதல்வர் பெறாதவரும் யாம் போரிட இருக்கிறோம். நீங்கள் பாதுகாப்பான பொதுமன்றங்களுக்குச் செல்லுங்கள் என்று முரசறைந்து தெரிவித்த பின்னரே ஒத்த வலிமையுடையரோடு போரிடுவர்.6 (புறநானூற்றுப் பாடல் 9-நெட்டிமையார்). போரில் படைவிட்டவர் புறமுதுகிட்டவர் தனிநின்றவர் ஆகியோரைத் தாக்குதலில்லை.

    ஆனால் இன்றைய காலங்களில் போர் முதலியவை ஏற்படும்போதும் வன்முறைகளின் போதும் சாதியக் கலவரங்களின் போதும் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவிக்கின்றனர். அவர்களது சொத்துக்களைச் சூறையாடுகின்றனர் அப்பாவிப் பெண்களின் கற்பைச் சூறையாடுகின்றனர். சாதியக் கலவரங்களும் அரசியல் தேர்தல் கலவரங்களும் அப்பாவி மக்களையே குறிவைத்து நடக்கின்றன.

    பூர்ணம் அப்பாவி இளைஞன். இளம்வயதில் ஏற்பட்ட காய்ச்சலுக்கு சரியான வைத்தியம் செய்யாததால் போலியோ நோய்க்கு ஆட்பட்டு கால்கள் சூம்பிப் போனவன். சதைப்பிண்டமாக சக்கரப்பலகையில் சுற்றிவருபவன். மற்றவர்களின் ஏளனப்பார்வைக்கும் பேச்சுக்கும் ஆளானவன். குடிகாரத் தந்தையால் தன் தாய் மிதித்துக் கொல்லப்பட்டதையும் அடுத்து நடந்த சாதிய வன்முறையில் தந்தை அநியாயமாகக் கொல்லப்பட்டதையும் கண்ணெதிரே கண்டவன். தன் உடற்குறைபாட்டை மற்ற மனிதர்கள் கேலி செய்யும் வன்முறையையும் வெறுப்பவன்.

    அவனது குறைபாடு நிறைந்த வாழ்க்கையிலும் மனதுக்கு நிறைவு தரக்கூடிய ஓவியத் திறமையை இறைவன் அவனுக்கு அளித்திருந்தான்.
    ‘பெறமுடியாத அன்பைத் தருவதில் ஒரு சுகம். ஓர் இதம். பூமி முழுவதையும் அன்புக்காற்றால் நிரப்பிவிட வேண்டும் என்ற ஆசை அவனுக்கு. போலியோவினால் தாக்க முடியாத அன்புப் பிரதேசமாக அவனது ஆகாயமனம்’.7

    அவனுக்கு பிளாட்பாரத்தில் ஒரு வெற்றிடம் வேண்டும். மனதில் தோன்றும் எண்ணங்களை ஓவியமாக தீட்டுவான். இன்று என்ன வரையலாம் எனச் சிந்தித்தவனுக்கு இராமர் வரையலாம் என்ற முடிவு எட்டியது. நீலவண்ண இராமர்தான் அன்பின் பேருரு என்று முடிவெடுத்தான். இராமரை வரைந்த பின் வில் அம்புக்குப் பதிலாக அம்பு இருக்க வேண்டியகையில் சமாதானப் புறாவை வரைந்தான்.

    ‘இன்றைய உலகின் நோயே… வன்முறை தீதான். மருந்து? அன்புநீர்தான். சமாதானத் தென்றல்தான். சமகால வன்முறை நோய்க்கெதிரான இவனது ஓவியப்போர் இது. வில்லேந்திய ராமர் வலது கையில் வெண்புறா.’ அப்போது திடீரென அந்த தெருவில் தேர்தல் கலவரம் மூள்கிறது. ‘முன்னேறித் தாக்குகிற ஆயுதக் கும்பலின் வெறித்தனம் மூர்க்கம்… ராட்சஸமும் ரத்தப்பெருக்கும் மரண ஓலமுமாக… தெருவே ரணகளம்.’8

    உயிர் தப்பிக்க ஓடிவந்த ஒருவனை தாக்கவந்த கும்பலில் பூர்ணம் சிக்கிக்கொள்கிறான். கலவரம் முடிந்ததும் வீதியில் வெறுமை. பூர்ணத்தின் பிரேதம் மட்டும் வீதியில் கிடக்கிறது.

    அரசியல் சாதிய வன்முறைகள் நீங்கிச் சமாதானம் நாடெங்கும் நிலவவேண்டும் என்று அமைதியை விரும்பியவன் வன்முறையாலே கொள்ளப்படுகிறான். அந்த வழியே வந்த நாய் அவனது வாயில் வழிந்த ரத்தத்தில் அன்பின் வாசமே வீச நாய் நக்காமல் விலகியது!9

    இந்த தேசம் மத இன அரசியல் கலவரங்களின்றி அமைதி தேசமாக மலரவேண்டும். வன்முறைக்குப் பலியான கடைசி மனிதன் பூர்ணமாகத்தான் இருக்கவேண்டும் என்ற சிந்தனை இக்கதையின் மூலம் வெளிப்படுகிறது.

    பெற்றோர்களைக் காப்போம்:

    ‘அவன் இருப்பதோ அன்னை இல்லம். அன்னை இருப்பதோ அனாதை இல்லம்’ என்ற கவிதை பெற்றோர்களைப் பாதுகாக்காத இன்றைய சமுதாய நிலையை வெளிப்படுத்துகிறது. இன்றைய அவசர உலகில் தாய் தந்தை முதலிய சொந்தங்களும் சுற்றங்களும் காலாவதியான நாகரிகமாகிவிட்டது. நகர நெருக்கடி வாழ்வில் வாடகைக் குடித்தனத்தில் வயது மூப்பு அடைந்த பெற்றோர்களைத் தன்னுடன் வைத்துக் கொண்டு வாழ முடியாத நெருக்கடிநிலை இன்று நிலவுகிறது. முதுமைப்பருவம் இரண்டாவது குழந்தைப் பருவமாகும். இயலாத முதுமைப் பருவத்தில் பெற்றோர்களைப் பராமரிக்காமல் அனாதை இல்லங்களில் விட்டுவிடும் நிலை பெருகியுள்ளது.

    நம்மை பெற்று வளர்த்து நம் வளர்ச்சியில் தங்கள் மகிழ்ச்சியை கண்ட பெற்றோர்களை காக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். சண்முகத்தின் அம்மாவுக்கு வயதாகிவிட்டது. பழுத்தபழம். சுயதேவைகளையே பூர்த்திசெய்து கொள்ள முடியாத கிழம். அவனால் அம்மாவைச் சரியாகக் கவனித்துக்கொள்ள முடியவில்லை. மனைவிக்கும் அம்மாவுக்கும் எதற்குப் பார்த்தாலும் சண்டை, வாதம். படுத்த படுக்கை என்றாலும் சுயகௌரவத்தை விட்டுக்கொடுப்பதில்லை.

    படுக்கையிலேயே இருப்பதால் ஈக்கள் மொய்க்கும் அளவுக்குச் சென்றுவிட்டது. மனைவிக்கு தன் பிள்ளைகளுக்கு ஏதேனும் தொற்று ஏற்பட்டு நோய்தாக்கிவிடுமோ என்ற அச்சம். ‘பாவம்..நம்ம அம்மா. கவனிப்பார் இல்லாம காய்ஞ்சு நாறிப்போய்க் கிடக்குறா. சாவுதான் அவளுக்கு விமோசனம்.’10 என்று வருந்துகிறான். சம்முகம் சம்முகம் என்று அழைத்துக்கொண்டிருப்பதாலும் தின்பண்டங்கள் வேண்டும் என்று நச்சரிப்பதாலும் எரிச்சலடைகிறான்; செத்துத்தொலையேன் என்கிறான்.

    நான் எதுக்குடா சாகணும்? நான் உன்மனைவி சம்பாத்தியத்திலயா சாப்பிடுறேன்? எனக் கேட்க மனைவிக்கும் அம்மாவுக்கும் பற்றிக்கொள்கிறது சண்டை. நடுவில் மாட்டிக்கொண்டு செய்வதறியாது திகைக்கிறான். இந்த நிலையை மாற்றுவதற்குத் தன் தங்கை சுப்புத்தாய் வீட்டில் அம்மாவை விடுவது என்ற முடிவுக்கு வருகிறான்.

    தானும் தன் கணவனும் கஷ்டப்பட்டு உழைத்து பிள்ளைகளைப் பெற்றுவளர்த்த வீடு. இதை விட்டுப்போகமாட்டேன் என வீம்பு பிடிக்கிறாள். வேறு வழியில்லாமல் வலுக்கட்டாயமாகத் தங்கை வீட்டிற்கு அனுப்புகிறான். ஆனாலும் அம்மாவைக் கடைசி காலத்தில் தன்னுடனே வைத்துக் கொள்ள முடியாத ஆதங்கம் வாட்டி வதைக்கிறது. இரண்டு மாதங்களுக்குப் பின் அவள் இறந்துவிட்டாள் என்ற செய்திகேட்டு செல்கிறான். எல்லாம் முடிந்து விட்டபின் தங்கையிடம் கேட்கிறான் அம்மா கடைசி ஆசையாக என்ன சொன்னாள் என்று அதற்கு தங்கை, “சாகுறப்ப ஒம் முகம் பாத்துகிட்டு சாகணும்’னு அவளுக்கொரு நெனைப்பு. ஒங்கையாலே கடைசிப் பாலைக் குடிச்சுட்டுச் சாகணும்’னு அம்மாவுக்கு ஒரு ஆசை.”

    அதைக் கேட்டவுடன் தாயைக் காக்க முடியாத தன் இயலாமையை எண்ணி ‘ஐயையோ..அம்மா…ஹ் ,ஒன்னைத் தவிக்கவிட்ட பாவியாயிட்டேனே.”11 என்று வெடித்து அழுகிறான். நாம் குழந்தைகளாக இருந்தபோது நாமும் பல துன்பங்களைத் தந்திருப்போம். அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டுதானே பரிவோடு நம்மைக் காத்தனர். அத்தகு பெற்றோர்களை முதுமையில் நாமும் நம் குழந்தைகளாகக் கருதிக் காக்க வேண்டியது நம் கடமை என்பதை இக்கதைவழிச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.

    எல்லோரும் ஒரு குலம்:

    மனிதர்களில் ஒரு சிலரின் சுயநலத்தினாலேயே சாதி சமய மதப் பூசல்கள் உருவாகின்றன. மனிதர்கள் அனைவரும் சமம். நம் நாட்டில் அனைத்து மதத்தவர்களும் நண்பர்களாக அண்ணன் தம்பிகளாக மாமன் மைத்துனர்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்துக்களின் வடைபாயசமும் கிறித்தவர்களின் கேக்கும் முஸ்ஸிம்களின் பிரியாணியும் பகிர்ந்துக் கொள்ளப்படுவதில் எந்த பேதமும் இல்லை. சமயங்களின் நீதிகளும் மத ஆசாரங்களும் மனுதர்மங்களும் அடுத்த மனிதனைக் கொன்றழிக்கக் கற்றுக்கொடுக்கவில்லை. உருவாக்கப்படவும் இல்லை.

    மனிதர் நோக மனிதர் பார்க்கும்
    வாழ்க்கை இனியுண்டோ?
    12 என்றார் பாரதி.

    வேற்றுமையில் ஒற்றுமைக் காணும் இப்பூமியில் சாதி மத பேதங்கள் நீங்கி அனைவரும் இங்கு சரி சமமென வாழ வேண்டும்.

    போர்களும் கொலைகளும் பூசல்களும் நீங்கிய சமுதாயம் மலர வேண்டும்.

    இப்புராகிம் ராவுத்தர் துணி வியாபாரி. சைக்கிள் மிதித்து வியாபாரம் செய்பவர். இந்து பெரியவர் வீட்டிற்கு வியாபாரத்தின்போது எப்போதும் வருவர். உரிமையாக திண்ணையில் ஆற அமர அமர்ந்து கொண்டு பேசிவிட்டுத்தான் போவார். கைலி வாங்கிக்கிறீங்களா? மேல்துண்டு வாங்கிக்கிறீங்களா? என எதையாவது தருவார். பெரியவரின் பேரக்குழந்தைகளைக் கொஞ்சுவார். அவர்களுக்கு ஐந்து ரூபாய்த் தருவார். ஏன் எங்களுக்கு காசு தர்றீங்க?

    எங்க வீட்டில காசு வாங்கிக்கிறதுக்கு குழந்தைங்க இல்லையே அதான் என்பார்.

    அப்போது பெரியவர் ஊரில் நடக்கும் சில கலவரங்களில் முஸ்லீம்களின் பெயர்கள் அடிபடுவதை, “உங்க ஆளுங்க பொதுவா மொரட்டு சுபாவம்னு நெனைக்கேன்’ என்று கூறிவிட ராவுத்தர் அடுத்த சில நாட்களாக வருவதில்லை. அவசரப்பட்டுத் தான் கூறிவிட்ட கருத்தால் ராவுத்தர் மனம் புண்பட்டதை  எண்ணி வருந்துகிறார்.

    இத்தனைக்கும் ராவுத்தர் இவற்றையெல்லாம் கடிந்து பேசுபவர்.

    ‘கலவரம் எந்தச் சைத்தான் பண்ணினாலும்… பொண்ணுங்களும் புள்ளைங்களும்தான் ரொம்ப நாசமாகுதுகள். பூ மொட்டுக கருகுற பரிதாபம்தான்… பெருங்கொடுமை”என்றவர். பெரியவருக்கு உடம்பு சரியில்லாமல் போனதை அறிந்து வந்து பார்க்கிறார்.

    என்னை நீரு மனுசனா நெனைக்கலே.   முஸ்லிமா மட்டும் நெனைக்கீரு. அதானே காரணம்” கடவுள நம்புறவனுக்கு ஒரே கடவுளும் அவரு படைச்ச ஒரே மனுசங்களும்தான் உண்மை. மனுசங்க படைச்சுகிட்ட சாதிக மதங்க எல்லாம் உண்மையானதுல்லே…”13 (ப.42 பூமனசுகள்)  என்கிறார்.

    அன்பு மட்டுமே நிஜம் சாதி மத பேதங்கள் மனிதர்களே படைத்துக் கொண்ட மாயைகள் என்பதை இக்கதையில் கூறி பேதங்களற்ற சமுதாயம் மலரவேண்டும் என்கிறார் ஆசிரியர்.

    கல்வியே செல்வம்:

    கல்வியறிவு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகத் திகழ்கிறது. ஒரே மனித குலத்தில் ஒருவன் ஆண்டானாவதும் ஒருவன் அடிமையாவதும் கல்வியறிவு இன்மையினாலேயாகும். ஒருவன் கற்கும் கல்வி அவனை எதனையும் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்கும் பகுத்தறிவை உண்டாக்குகிறது. உழைப்பிற்கேற்ற பலனை உரியமுறையிலும் உரிமையாகவும் பெறக் கற்றுத்தருகிறது. சிந்தனை, செயல்திறன் வளர உதவுகிறது. எந்தச்செயலையும் செம்மையாகச் செய்ய உதவுகிறது.

    ‘கல்வி எனும் அகத்தே பொருளிருக்க
    புறத்தே பொருள் தேடி உழல்கின்றீரே’
    என்கிறது விவேகசிந்தாமணி.

    கல்வி ஒருவனை வாழ்வில் உயர்த்துகிறது. வறுமையைப் போக்குகிறது. சாதி மத பேதங்களை நீக்குகிறது. தங்கச்சாமியின் மகன் காமராசு கல்லூரியில் படிக்கின்றான். வறுமையான குடும்பம் வேளாண்மையில் தண்ணீர்ப் பற்றாக்குறையினால் விளைச்சலும் இல்லை. காமராசு கல்லூரியில் சேர்வதற்குமுன் குடும்ப வறுமை காரணமாக மளிகைக் கடைக்கு பொட்டலம் போட போகட்டுமா எனும்போது, “மரம் வைச்சவன் தண்ணி ஊத்துவான்டா கால் எடுத்து வைச்சா… பாதை தானாக வரும்டா படிக்காத பரம்பரை. பனையேறி சிரமப்பட்ட பரம்பரை. தராசு புடிச்சு ஊரு ஊரா சுத்தித் திரிஞ்ச வம்சம். நீயாச்சும் மேல்படிப்பு படிச்சு உசரத்துக்குப் போகணும்.”14 என்கிறார்.

    மகனின் படிப்புக்காக தங்கச்சாமி என்ற பெயருக்கேற்ப மாட்டுத்தரகில் நாணயமான அவர், 3300க்கு மாட்டை வாங்கி 7600க்கு விற்கிறார். பொய் சொல்கிறார். மனசாட்சி உறுத்துகிறது. மகனின் படிப்புக்காகவே இவற்றையெல்லாம் செய்கிறார்.

    அருஞ்சுனை நாடார் கீரை விற்பவர். சாதி வேறுபாட்டால் பாதிக்கப்பட்டவர். தன் பேரன் அருஞ்சுனை பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தும் பணம் இல்லாததால் கடிக்க முடியாதபோது தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தை விற்றுப்படிக்க வைக்கிறார். படிப்பு முடித்த அவன் அரசாங்கப் பதவிக்கு வந்துவிட்டான். ‘பேரனை நினைச்சா பெருமையாயிருக்கு. கவர்மெண்டு உத்தியோகம். பேரன் தலைமுறை கரையேறிட்டா அதுக்குப் பின்னாடி வர்ற தலைமுறைகளை அவன் மலைமேலே ஏத்திருவான். கீரை வித்து வவுத்தை நனைச்ச அருஞ்சுனை நாடான் பேரன்… கோட்டுசூட்டும் பூட்டுமா வரப்போறான்.

    தொங்கிப்போயிருந்த நரைத்த மீசையை இடது கையால் நீவினார்”15. தொழிற்சங்கத்தலைவர் பாலசுந்தரம் பிராமணர். தன்னை வீட்டுக்கு வரச்சொல்லி உபசரித்ததை பேரன் தாத்தாவுக்கு கூறுகிறான். இதைக்கேட்டதும் தான் முப்பதடி தூரத் தீண்டாமையால் பாதிக்கப்பட்டதையும் உழக்கில் தண்ணீர் இதெல்லாம் கல்வி தந்த மாற்றமென உணர்ந்து புளங்காகிதம் அடைகிறார்.

    முடிவுரை:

    ஒரு சமுதாயம் மேம்பட்டு விளங்கச் சாதி மத பேதமற்ற சூழல் உருவாக வேண்டும். பெற்றோர்கள் முதிய வயதில் குழந்தைகள். அவர்களைப் பாதுகாக்கவேண்டும். அரசியலிலும் மக்கள்செய்யும் செயல்களிலும் தூய்மையும் அன்பும் நிலைக்க வேண்டும். வன்முறை சாதிய கலவரங்கள் நீங்கி அன்பும் வளர்ச்சியும் மேம்படவேண்டும். கல்வியே சமத்துவ சமுதாயம் மலர வழிவகுக்கும் என்ற சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகளைத் தமது சிறுகதைகளின் வழி மேலாண்மை பொன்னுச்சாமி வெளிப்படுத்தியுள்ளார்.

    முதன்மைஆதாரம்: அன்பூ வாசம்- சிறுகதை நூல் மேலாண்மை.  பொன்னுச்சாமி, கங்கை புத்தக நிலையம் 13 தீனதயாளு தெரு தியாகராய நகர் சென்னை-600 017. முதற்பதிப்பு :- திசம்பர்  2002

    *****

    அடிக்குறிப்புகள்:

    1.தமிழ் விக்கி பீடியா-மேலாண்மை பொன்னுச்சாமி நாள்:08.10.2018 4.10      பி.ப

    2.சமுதாயமும் பண்பாடும் ப.14- அ.மு. பரமுசிவானந்தம்- தமிழினி பதிப்பகம் சென்னை டிசம்பர்  2007

    3. AN INTRODUCTION OF SOCIAL PSYCHOLOGY P.469- 1982.

    4.தமிழர் சமுதாய வரலாறு ப.44 அரு.சின்னசாமி, வானதி பதிப்பகம் சென்னை  1979.

    5.தமிழ் நாவல் இலக்கியம் ப.224 –  க. கைலாசபதி குமரன் பப்ளிஷர்ஸ் சென்னை  1981.

    6.புறநானூறு நெட்டிமையார் பாடல்-9  ப.15  உமா பதிப்பகம் சென்னை- 2010

    7.அன்பூ வாசம் சிறுகதை ப.2  அன்பூ வாசம் சிறுகதை நூல், மேலாண்மை பொன்னுச்சாமி –  கங்கை புத்தக நிலையம் சென்னை 17.  முதற்பதிப்பு- டிசம்பர்  2002.

    8.மேலது ப.11

    9.மேலது ப.13

    10.மேற்குறித்த நூல் கடைசிப்பால் சிறுகதை ப.16

    11.மேலது ப.30

    12.பாரதியார் – பாரதியார் கவிதைகள்- தென்றல் நிலையம் சிதம்பரம்-  2000.

    13.பூமனசுகள் சிறுகதை ப.42-அன்பூ வாசம் சிறுகதை நூல் மேலாண்மை பொன்னுச்சாமி, கங்கை புத்தக நிலையம் சென்னை 17.  முதற்பதிப்பு- டிசம்பர்  2002.

    14.மேலது நூல்- பொய்ம்மையும் சிறுகதை ப.45

    15.மேலது நூல் சித்தாந்தம் சிறுகதை ப.61.

    *****

    கட்டுரையாளர் – முதுகலைத் தமிழாசிரியர்
    அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி
    செங்கம். 606701
    பேசி:  99430-67963.

    Share
  • விஜயதசமி வெண்பாக்கள்…..!

    வெண்பாவில் அம்பாள்
       ——————————       காப்பு
           ——-
    எருதேறி ஈசன் ,எலியேறி வேழன்
    முருகேறி காக்க மயிலில் -உருகாது
    அன்பால் அழைக்கும் அடியேனின்
    வெண்பாவில் அம்பாளே வா….(1)….28-07-2011
    ————————————————————

    கத்தி , உடுக்கை,கபாலம், திரிசூலம்
    சக்தி கரமுற்ற ஆயுதங்கள் -பக்தி
    இலாதோர் இதயச் சிலாவைப் பிளந்து
    பலாவின் சுளையைப் புதைக்கும்….(2)….03-04-2008 

     
    அழுதாலும் பிள்ளைக்(கு) அவள்தான் பொறுப்பு
    பழுதான பின்பும் பரிவை -விழுதாய்ப்
    பொழிவாள் எமது பராசக்தி, நெஞ்சே
    தொழுவாய் அவளைத் தொடர்ந்து….(3)….16-10-2008

     திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி
    ———————————————–
    வானைக்கா வையம்கா தூணை துரும்பைக்கா
    மோனை எதுகைக்கா மோஹனைக்கா -ஆனைக்கா
    ஆத்தா அகிலாண்ட அம்மைபோல் வேறேகாப்
    பாத்த எவரோ பகர்….(4)….9-2-2009

    சுனையாக வாழும் சிவனிட பாகத்தில்
    அணையாத சக்தீயே, அம்மே -வினையான
    மண்வாழ்வின் மாருதமாம் ஆனைக்கா அம்பிகை
    விண்ணாகா சத்தின் விளைவு….(5)….9-2-2009

    யானைக்(கு) ஒருகாலம் பூனைக்(கு) ஒருகாலம்
    ஆனைக்கா அன்னை அடியார்க்கோ -வானம்தீ
    மண்காற்று நீர்காலம் மற்றுள்ள பூதமிவன்
    முன்தோற்று மண்டியிடு மாம்….(6)….9-2-2009

    தேனுக்காய் வண்டேபோல் தாவி அடைக்கலமாய்
    ஆனைக்கா அன்னை அடிபணிய -பானைத்தோல்
    பிண்டத்தால் பட்டகடன் பாரம் குருவித்தலை (OR)உறுமாறி
    சுண்டைக்காய் ஆகும் சிறுத்து….(7)….10-2-2009

    பானைத்தோல் பாரத்தால் பட்டகடன் போக்கிட
    ஆனைக்கா அம்மை அடிக்கமலம் -தேனைப்போய்
    வண்டுண்ணும் வேகத்தில் வந்துநீ மொய்த்திட
    சுண்டைக்காய் ஆகும் சிறுத்து….(8)….10-2-2009

    கூன்பிறையும் மான்மழுவும் தேனொழுகும் பூவிதழும்
    பூணிறையின் ஊனுறையும் ஆணுமையை -நான்மறையும்
    வானவரும் மாலயனும் காணஅரி தானவளைக்
    காணத் திருவானைக் கா….(9)….11-2-2009

    தானே தனக்குவமை ஆன உமையாளை
    வீணே வர்ணிப்பதேன் வெண்பாவில் -ஆனை
    தனையன்று காத்த அகிலாண்ட வல்லி
    துணையென்(று) அவளைத் துரத்து….(10)….12-2-2009

    அம்புயக் கண்ணாளை அன்புய்யக் காண்பாளை
    அம்புவியைக் காப்பாளை அம்பாளை -அம்பலத்தார்
    மேனியிடப் பெண்பாலை ஞான முலைப்பாலை
    மானுடசேய்க்(கு) ஈன்றாளை மொய்….(11)….11-2-2009

    முகிலாண்ட வெற்பாளும் முக்கண்ணன் கற்பாளும்
    அகிலாண்ட ஆனைக்கா அம்மே -நகிலுண்ட
    சம்பந்தன் போலெண்ணி செந்தமிழ்ப் பாலூட்டு
    இம்மந்தன் வாக்கில் இசைந்து….(12)….11-2-2009

    முகிலாண்ட பர்வத முக்கண்ணன் கர்வமே
    அகிலாண்ட ஆனைக்கா அம்மே -நகிலாண்ட
    கண்டத்தால் மேனியே காணாது போயினும்
    உண்டெனெக்குன் பாதம் உதவு….(13)….11-2-2009

    கன்னலுன் இன்மொழி மின்னலுன் கண்ணொளி
    பின்னலோ பாம்புக்(கு) அடைமொழி -உன்னிலே
    தன்னை மறந்து தவம்செய்யும் பக்தர்க்கு
    எண்ண உருவம் எதற்கு….(14)….12-2-2009

    கல்லில் கலைநயம் சொல்லில் பொருள்மயம்
    துள்ளும் அபிநயம் தோற்றம் -உள்ளும்
    புறமும் உலவிப் பெருகும் பலவாம்
    இறைவன் அறிவே இவள்….(15)….12-2-2009

    இதம்தரும் வாழும் விதம்தரும் நாளும்
    புதன்தரும் காத்துப் பரிவை -நிதம்தரும்
    இங்கே இகபர பேரற் புதம்தரும்
    சங்கரி பதம்தரும்கொள் சார்ந்து….(16)….14-2-2009

    மலைப்புற வில்லாய் மலைப்புறம் ஏந்தி
    மலைப்புரம் மூன்றை முடித்தோன் -களைப்புறா
    வண்ணம் அவனை வலப்புரம் ஏந்திடும்
    அன்னை இடமே அரண்….(17)….16-2-2009

    இதம்தரும் வாழ்வை நிதம்தரும் பொல்லா
    மதம்தரும் ஆணவத்தை மாய்க்கும் -அதன்பின்
    சுதந்திரப் பேரற் புதம்தரும் அம்பாள்
    பதம்தரும் போற்றப் பணிந்து….(18)….16-2-2009

    மூளயோகம் வாயில்தாம் பூலம் உமிழ்ந்ததால்
    காளமேகம் ஆன கலிவரதன் -போலஆக
    வந்தென்நா வெற்றிலையில் வெண்பாக்கள் பூத்திட
    தந்தஆனைக் காகாரி(த்) துப்பு….(19)….13-2-2009

    அச்சுறுத்தும் பூதமா? அன்றிமாத்ரு பூதமா?
    எச்சரிக்கை யோடுன்னை உச்சரிப்பதா? -நச்சரவம்
    மாண்டோர் கபாலங்கள் பூண்டோன் இடபாகி
    வேண்டாமே வேஷ விருப்பு….(20)….13-2-2009

    கற்றதவள் நாமம் கசடறக் கைவரப்
    பெற்றதவள் பாதாம் புயம்பணிதல் -மற்றேதும்
    எண்ணா(து) இருப்போர்தம் வாழ்வை இனிப்பாக்கும்
    உண்ணா முலையாள் உறவு….(21)

    நானார் அறிதல் நமக்கெதற்கு அன்னையே
    நீயார் உணர்தலே நற்கதி -தாயார்
    மகனைத் தொலைப்பாளா மாதா தவிக்கின்றேன்
    அகலா(து) இருப்பாய் அணத்து….(22)

    மூகாம் பிகைஈசன் பாகாம் பிகைபக்தர்
    மோகாம் பிகையாள் மலர்த்தாளில் -பாகாய்
    உருகிக் கிடக்க உதவா மனமே
    கருகிக் கரையும் கபடு….(23)….20-2-2009

     இமயபுர ஈசன் இடபாக வாசி
     தமையன் திருமாலின் தங்கை -சமயபுர
     மாரியம்மா ஆத்தாவை காரியமாய்ப் பார்த்தோரை
     வீரியமாய்க் காப்பாள் விரைந்து….(24)….20-2-2009

    பரமஹம்சர் பார்த்துப் பரவசத்தில் ஆழ்ந்த
    அரனசைவே ஆதி உணர்வே -பரமசிவா
    னந்த லஹரி நவநீத சோதரி
    அந்தரி வந்(து)ஆ தரி….(25)….20-2-2009

    விலையைக் கொடுத்து வலிய வினையில்
    தலையைக் கொடுக்கும் மனதை -மலையத்
    துவசன் மகளே தெளிவுற வைப்பாய்
    கவசம் துணையுன் கழல்….(26)

    ஷ்யாம கிருஷ்ண சகோதரி தக்ஷிண
    ராம கிருஷ்ண உபாஸினி -நாம
    சஹஸ்ர சொரூபிணி சாஸ்வத சாக்ஷி
    ரஹஸ்ய சினேகிதி ரக்ஷி….(27)

    புள்ளி மயிலாக புன்னை வனநாதர்
    உள்ளம் உறையும் உமையோளே -வெள்ளி
    விடையேறி ஈசர் இடபாகம் ஈஷீ
    மடையோனென் நாவில் மலர்….(28)

    உன்னவரே ஞானத்தை உண்ணவரார் ஓடேந்தி
    கண்ணசைவில் ஞானம் கொடுத்திடும் -அன்னபூர்ணி
    என்நிலையைப் பாரம்மா ஏனிந்த பேதங்கள்
    இன்னலற வைராக்யம் இடு….
    தேகி பரமனிடம் தேஹி பவதிபிட்சாம்
    யோகிதிட சித்தம் எனக்கு….(29)

    கல்லூறும் தேரைக்கும் கர்பத்(து) உயிர்கட்கும்
    உள்ளூறச் சென்றுணவு ஊட்டிடும் -கொல்லூரின்
    மூகாம் பிகையே முனியாக வந்தெனது
    தேகான்ம பாவத்தைத் தீர்….(30)

    கன்னலுன் இன்மொழி மின்னலுன் கண்ணொளி
    பின்னலோ பாம்புக்(கு) அடைமொழி -உன்னிலே
    அர்கிய மாகிடும் அன்பர்க்(கு) அருளும்பொன்
    துர்கேயிப் பித்தளையைத் தேற்று….(31)….12-2-2009

    நின்றிட பூமா நகர்ந்திட ஸ்ரீதேவி
    ஒன்றிக் கலந்திட நீளாவாம் -மன்றில்
    நடமாட காளி நலம்பாட வாணி
    அடநமக்கு ஆயிரம்மா யி….(32)….6-7-2008

    குடைபோல் விரிந்த புடவைக் கொசுவம்
    இடையில் சொருகி இளையப் -பிடியாய்
    கபாலீசன் கோவிலில் கற்பகத்தைக் கண்டு
    உபாசித் தடைவீர் உயர்வு….(33)….29-11-2008

    உமையாளை, ஈசன் சுமையாளை, கண்கள்
    இமையாளாய் அன்பர் இதயம் -அமைவாளை
    கற்பக வல்லியை கற்பனைக்(கு) எட்டாத
    அற்புதம் தன்னை அணுகு….(34)….29-11-2008

    கோமள வல்லியை சாமள வண்ணியை
    ஆமளவு ஏத்தும் அடியார்க்கு -மாமலை
    வெள்ளிக்கு வாசினியால் வாக்கு விலாசத்தில்
    பள்ளித் தலமாகும் பார்….(35)….12-2-2009

    ஆவதும் போவதும் தேவதையுன் திட்டமென்றால்
    நாவெதற்கு பாவெதற்கு நீயெதற்கு -தீர்விதற்கு
    சொல்லடி மாயா சிவசக்தி, ஏனெதற்கு
    முள்ளடியில் ரோஜா மலர்….(36)….13-2-2009

    கற்றதவள் நாமம் கசடறக் கைவரப்
    பெற்றதவள் பாதாம் புயம்பணிதல் -மற்றெதும்
    எண்ணா(து) இருப்போர்க்கு என்நாளும் பொன்னாளாம்
    உண்ணா முலையாள் உறவு….(37)….19-2-2009

     ”த்யான த்யாத்ரு த்யேய ரூபி”
    —————————————–
    எண்ணும் தொழிலவள், எண்ணிலா எண்ணமவள்
    எண்ணுவோர்க்(கு) ஏற்ற எழுச்சியவள் -எண்ணிடத்
    தின்னும் பசியவள் தீராத தாகமவள்
    உண்ணா முலையவளை உண்….(38)….16-3-2009

    திருவொற்றியூர் கோயிலுக்குப் போன போது
    ——————————————————–
    கடுவிட கண்டக் கடவுளின் பொன்னார்
    உடலிடம் கொண்ட உமையே -வடிவுடை
    அம்மா உனைக்காண ஆர்வத் துடன்வருவேன்
    பெம்மான் சமேதராய்ப் பார்….(39)….25-3-2009

    கல்விக் கொடியுடையாள் செல்வத் திருவுடையாள்
    வெல்லும் வடிவுடையாள் ஒற்றியூர் -வல்லியைக்
    கண்டேனே பாதாதி கேச தரிசனம்
    உண்டேனே அன்னையருள் ஊற்று….(40)….25-9-2009

    ஓலை ஜபமணி மாலை அபயமொடு
    காலை மடித்து கொலுவிருக்கும் -பாலை
    திரிபுர சுந்தரியைத் தேடி நெமிலி
    வருபவர் வாழ்வில் வளம்….(41)….14-10-2010

    மீனாளை முத்தமிழ்த் தேனாளை அன்பர்க்காய்
    கோணாளை கூடலுக்கு கோனாளை -மானாளை
    மஞ்சத்தில் நாணாளை மாசக்தி ஆனாளை
    நெஞ்சத்தில் ஊற்றி நிரப்பு….(42)….08-05-2009

    நீரான, தீயான, நீள்விசும்பு காற்றான
    பாரான வாராஹியைப் பார்த்து -வாராய்
    சமய புரத்தாள்தாள் சேவிக்க நெஞ்ச
    சுமைகளைத் தீர்ப்பாள் சுமந்து….(43)….20-11-2009

    புரத்தாள் சமய புரத்தாள் இமய
    புரத்தான் இடது புரத்தாள் -திருத்தாள்
    கருத்தால் வணங்க வரத்தால் அபய
    கரத்தால் அணைப்பாள் குளிர்ந்து….(44)….20-11-2009

    மாரி சமயபுரக் காரி சதுர்வேத
    தாரி பிரியா அரனர்த்த -நாரி
    லலிதஅதி காரி கலிதீர சேரீர்
    பலிதஉப காரி பதம்….(45)….21-11-2009

    தேனைக்கால் ஏந்தி திரிகின்ற வண்டேபோல்
    ஊனைக்கால் தாங்க உலகுற்று -நானைப்போய்
    பானைத்தோல் மேனியாய் பாவிக்கா பேறரிவை
    ஆனைக்கா அம்மா அருள்….(46)….21-11-2009

    ஆயிரம் கண்ணுனக்கு ஆனாலும் கேட்கின்றேன்
    தாயினும் சாலத் தெரிந்துபார் -மாயிநீ
    அல்லா(து) எனக்கிங்(கு) அருளார் செய்வாய்இச்
    செல்லாத காசை செலவு….(47)….21-11-2009

    நையப் புடைத்துநம் மையல் விரட்டிட
    கையில் மணிப்பிரம்பு கொண்டவள் -உய்ய
    மனோண்மணி பாதங்கள் மகாகவி ஆக்கி
    சிரோன்மணி சேர்க்கும் சிறப்பு….(48)….21-08-2009

    மயிலை கபாலீஸ்வரர் ரிஷப வாகனத்தன்று எழுதியது….
    ———————————————————————-
    புள்ளி மயிலாக புன்னை வனநாதர்
    பள்ளியறை வாழ்பரம பத்தினியே -வெள்ளி
    விடையேறி ஈசர் இடபாகம் ஈஷீ
    மடையோனென் நாவில் மலர்….(49)….25-03-2010

    ஓலை ஜபமணி மாலை அபயமொடு
    காலை மடித்து கொலுவிருக்கும் -பாலை
    திரிபுர சுந்தரியைத் தேடி நெமிலி
    வருபவர் வாழ்வில் வளம்….(50)….14-10-2010

    மூகாம் பிகைஈசன் பாகாம் பிகைபக்தர்
    மோகாம் பிகையாள் மலர்த்தாளில் -பாகாய்
    உருகிக் கிடக்க உதவா மனமே
    கருகிக் கரையும் கபடு….(51)….20-02-2009

    மாதவன் சோதரி ஆதிரைப் பத்தினி
    பூதலம் காக்கும் பராசக்தி -ஆதரி
    மைலாப்பூர் கற்பகமே மாற்றிந்த மூடன்நான்
    கையிலாப்பை கொண்ட குரங்கு….(52)….25-07-2011

    பூரணி வைகுண்ட நாரணி கைலாச
    நீறணி நாதனின் நாயகி -கூறுநீ
    கோத்திரப் புத்திரனாய் கொள்வேன் எனையென்று
    பூத்தர செவ்வாய் புலர்ந்து….(53)….25-07-2011

    சகுனங்கள் சாரா சழுக்குகள் சாரா
    ககனநவ கோள்கள் கொடுக்கும் -சகலவித
    தோஷங்கள் சாரா திருக்குவினை சாராமெய்
    பூசுங்கண் சக்த்தியைப் போற்று….(54)….25-07-2011

    மகிடா சுரனின் மகுடம் தெறித்து
    பகடைபோல் பாயப் பறித்து -சகடனை
    செற்ற முகுந்தனின் உற்ற சகோதரி
    வெற்றி வழிக்கு வரம்….(55)….25-07-2011

    வேத வயலது வித்தைப் பயிரது
    கோதுகளை நீக்கும் கரமது -சாதகன்
    நோயுறா வண்ணம் நல்லான் மனாய்மாற்றும்
    ஆயிரங் காலத்து ஆய்(தாய்)….(56)….25-07-2011

    இவ்வுலகில் நின்னருள் இல்லா(து) உடையுமோ
    வெவ்வினைகள் பூட்டி வளைவிலங்கு -அவ்வண்ணம்
    ஆகாது தேவி அடியவன் இப்பாவி
    தேகான்ம பாவத்தைத் தீர்….(57)….26-07-2011

    வார்த்தைகள் அற்ற வெளிகண்டு விண்டாதோர்
    போர்த்தும்மெய் ஞானப் புடவையே -தீர்த்தங்கள்
    முங்கியென் சேத்திரங்கள் தங்கியென் சம்புயிட
    பங்கியுனைக் காணாத போது….(58)….26-07-2011

    வம்பாளாய் வாழ்ந்து வசைபாடி பொய்யுரைத்து
    தெம்பாளும் யவ்வனம் தேய்ந்தபின் -அம்பாளை
    மூப்பில் முனகலாய் கூப்பிட கேட்பாளே
    யாப்பிலா குப்பையெதற்க்(கு) என்று….(59)….26-07-2011

    வெண்பா தருவதென் வேட்கை தணிக்கவா !
    அம்பாளுன் அச்சார ஆதரவா !-என்பதை
    வேழனும் வேலனும் சூழநின் சம்புவொடு
    ஏழையென் கண்முன் இயம்பு….(60)….26-07-2011

    அட்டாங்க நிட்டையில் மொட்டாய் மலர்ந்திங்கு
    கிட்டாத இன்பம் கொடுப்பவளே -தட்டாது
    அப்பேறு நானடைய அன்னையே கந்தனின்
    அப்பா ருடனெனை ஆள்….(61)….26-07-2011

    சுத்தம் அசுத்தமென சோதித்(து) அயர்ந்திடும்
    புத்தியின் பேதத்தைப் போக்கிடு -பித்தரின்
    வாமத்தில் நின்றிடும் ஜாமத்து நீலமே
    காமத்தைக் காளி களை….(62)….26-07-2011

    எழுதாத நாளே பழுதான நாளாம்
    பொழுதென்றும் வெண்பா புனைந்து -தொழுதிட
    செய்வாய் சிபாரிசு செவ்வேள் முருகனிடம்
    ”பெய்வாய் தமிழ்மோஹன் பால்”….(OR)
    பெய்வாய் தமிழென்று பேசு….(63)….26-07-2011

    பெண்மூலம் நிர்மூலம் பேசிடும் பேதைகாள்
    கண்மூலம் காத்திடும் கற்பகக் -பெண்மூலம்
    ஜாதகம் சொல்லும் சனிசெவ்வாய் தோஷங்கள்
    பாதகம்போய் ஆகும் பலன்….(64)….27-07-2011

    மஞ்சள் நிறப்பட்டில் மாணிக்க யாழ்மடியில்,
    கொஞ்சும் கிளியேந்தி கற்பனையை -விஞ்சிடும்
    வண்ணம் கொலுவிருக்கும் அன்னையை எண்ணுவோர்
    முன்னம் தமிழ்வண்டு மொய்ப்பு….(65)….27-07-2011

    சிங்கா சனமேறி சூலம் கரமேந்தி
    எங்கேனும் தீங்கு எழுந்தக்கால் -அங்கே
    குதித்திடும் தேவி பதித்திடும் பாதம்
    துதிப்பவர் நெஞ்சில் தெருள்….(66)….27-07-2011

    அபாயம் எனக்கூவி அஞ்சிடும் நெஞ்சே
    உபாயம் உனக்குரைப்பேன் ஒன்று -கபாலம்
    கலைமான் கரத்தோன், கலைநீர் சிரத்தோன்
    சிலைமா துமையை சரண்….(67)….27-07-2011

    பாலை வனக்கானல் சோலை புவிவாழ்வு
    நாளைக் கடத்தாதே நன்நெஞ்சே -தோலைத்
    தளர்த்தி வயோதிகம் தீண்டிடும் முன்னம்
    உளத்தில் உமையாளை உன்னு….(68)….27-07-2011

    மூப்பு முருங்கையில் தீர்ப்பூ மரணமுண்ண
    தோற்பிளமை வேதாளம் தொத்திடும் -காப்பில்
    மனம்தளரா விக்கிர மாதித்த தேவி
    மனம்குளிர என்றுமிள மை….(69)….27-07-2011

    சகவாச தோஷம் புகமோசம் போகா
    சகவாசம் சத்தில் சிலிர்க்க -சகவாச
    ஈசருடல் கொண்ட இடபாகி இங்கெனக்கு
    நீசருடன் வேண்டாம்சேர் நட்பு….(70)….27-07-2011

    நட்பெனக்(கு) இங்குன் நினைவே போதுமே
    கட்புலன்கள் கூட்டும் கிளர்ச்சியை -நுட்பமாய்
    காற்றில் புனலில் கனல்நீரா காசத்தில்
    விற்றிருக்கும் வாசி விலக்கு….(71)….27-07-2011

    விலக்கவொணா வாழ்வின் நிலைக்கதவு ஆசை
    அலைக்கழித்து ஐம்புலனை ஆட்டும் -முலைகனக்க
    சம்பந்த சேய்க்கு சுரந்தாய் அதுபோல
    நம்பந்தம் ஆக நினை….(72)….27-07-2011

    நினைவை மடக்கி மனதை முடக்கி
    அணைவை புலனை அடக்கி -கணைவிற்
    புருவத்தாள் ஞான உருவத்தாள் பாதம்
    மருவத்தூள் தூளாகும் மாசு….(73)….27-07-2011

    மாசுணப் புற்றில் மகிழ்ந்துகை விட்டாற்போல்
    ஆசுணம் ஐம்புல ஆசைகள் -வீசுநற்
    காற்றால் கமகமக்கும் குன்றிமைய பார்வதிமுன்
    தோற்று அடங்கும் திருக்கு….(74)….27-07-2011

    திருக்கை உபயம் திருக்கால் அபயம்
    சறுக்கி விழாத சபையும் -இருக்கையும்
    போட்டுக் கொடுக்கும் பராசக்தி பக்தரைக்
    கேட்டுத் தெரிந்துகொள் கூட்டு….(75)….28-07-2011

    கூட்டும் ரசமும் குழம்பும் பொறியலும்
    போட்டுப் பிசைந்து பருகிடும் -நாட்டம்
    விடுத்தவள் நாமம் விடாதோதும் பக்தர்
    படுத்தயிடத் தில்பால் பழம்….(76)….28-07-2011

    பழம்நழுவிப் பாலில் விழவைக்கும், மூப்புக்
    கிழம்குழவி போலே குதிக்கும் -அழும்
    படிவாழ்வில் துன்பம் படர்கின்ற நேரம்
    மடிதாங்கித் தேற்றுவாள் மா….(77)….28-07-2011

    மாகாளி சங்கரி மாதங்கி பார்வதி
    ஆகாலி மேய்ப்போன் அருந்தங்கை -மாகாளை
    வாகன ஈசனார் பாகத்(து) அமைவோளின்
    மோகன சக்தியில் மூழ்கு….(78)….28-07-2011

    முழ்கிக் குளித்தெழுந்து முப்புரி நூலிழந்து
    கூழ்கலம் காவி கமண்டலம் -சூழ்ந்திட
    சந்யாசம் கொண்டாலும் சத்தியத்தை சந்திக்க
    பெண்வேஷ சக்த்தியைப் பேணு….(79)….28-07-2011

    பேனும் பொடுகும் புகுந்தபெண் கூந்தலை
    வானத்து மேகமென்று வர்ணித்து -மானம்
    தொலைத்துப் புணர்ந்து திளைத்தது போதும்
    நிலைத்த பகவதியை நாடு….(80)….28-07-2011

    நாடியதும் தேடியதும் ஆடியதும் கூடியதும்
    ஓடி ஓளிந்திடும் ஓய்ந்ததும் -ஆடிவரும்
    வெள்ளிக்கு அம்பாளின் வெண்பொங்கல் வேகவைக்கும்
    சுள்ளிக்கும் சொர்கச் சிறப்பு….(81)….28-07-2011

    சிறப்பவள் சக்தி சினமவள் யுக்தி
    சுரப்பவள் பக்தி ஜகத்தில் -பிறப்பு
    இறப்பவள் ஆட்சி இருப்பவள் மாட்சி
    திறப்பவள் மோட்சத் திரை….(82)….28-07-2011

    திரைவிழுந்து கண்ணில் நரைபடர்ந்து இல்லச்
    சிறைகிடந்து வாழ்வாய் ஜடமாய் -தரைபடர்ந்து
    பின்புசவம் ஆகாது பேரின்பம் பெற்றிட
    அன்புசிவம் பாதி அணுகு….(83)….28-07-2011

    அணுகிட அன்னை, துணிகரத் தோழி
    முனகிட தாதி, மறலி -முனைய
    மனுகொடு நீயும் சினமொடு தாயுன்
    வினைகெட பாயும் வெகுண்டு….(84)….28-07-2011

    வெகுண்டெழும் சிங்கம் விரலசைத்து பக்தர்
    புகன்றிடப் பூனையாய் போகும் -திகழ்ந்திடும்
    பட்டர்க்(கு) அருள பவுர்ணமி சந்திரன்
    முட்டுமம்மா வாசை முடித்து….(85)….28-07-2011

    முடிந்தனை நாத்தனார் மூன்றம் முடிச்சை
    தடந்தோள் தமிழைத் தழுவ -இடம்தனை
    ஆதலால் வாரண ஆயிரத்தில் பெற்றனை
    கோதையாள் உள்ளம் குளிர்ந்து….(86)….28-07-2011

    நாவில் கலைமங்கை, மாவில் மலைமங்கை
    காவில் அலைமங்கை, கள்ளூறும் -பாவிலோ
    கோதையவள், ஆவிலே காமதேனு, மாவில்லில்
    சீதையவள் மொத்தத்தில் சித்….(87)….27-07-2011

    சித்தா னவள்வேத வித்தா னவள்ஜீவன்
    முத்தியில் சேர்ந்திடும் மூலமவள் -பத்தியில்
    பித்தா னவளிமய தத்தா னவளீசர்
    சொத்தா னவள்பதம் சேர்….(88)….27-07-2011

    சேறில் மலருமோ செந்தா மரைமுழுச்
    சோறில் மறையுமோ பூசணி -கூறம்மே
    பாவியென் நெஞ்சையெப் பாடுபட் டேனும்நீ
    கோயிலாய் செய்துவை கால்….(89)….27-07-2011

    காலை நனைத்திடும் நீலத் திரைகடல்
    ஓலம் ஒலித்திட ஓங்காரம் -ஜாலமாய்
    பூக்கொத்து போல்நிற்கும் பூவைக் குமரியின்
    மூக்குத்தி ஜோதியை மொய்….(90)….28-07-2011

    மொய்யெழுத வேண்டாம் மகமாயி உண்டியில்
    மெய்யுருக வேம்பை மடிசுமந்து -கையழுந்தக்
    கூப்பி அவள் கோயில் கோபுரத்தைக் கும்பிட
    காப்பவள் தண்டைக் கழல்….(91)….28-07-2011

    கழலவளை கொண்டுவந்துன் கண்முன் நிறுத்தும்
    கழலுதைக்கு அஞ்சுவான் காலன் -கழலுதிர்க்கும்
    தூளியுன் நெற்றி துலங்கவெண் நீறாக
    காளியுன் ஆயுளுக்கும் காப்பு….(92)….29-07-2011

    காப்பாள் கருமாரி, கைகொடுப்பாள் கற்பகம்
    கோர்ப்பாள் இருவரையும் காளிகாம்பா -வார்ப்பாள்
    இகம்மீ னாட்சி அகம்விசா லாட்சி
    சுகம்காஞ்சி காமாட்சி சேர்ந்து….(93)….29-07-2011

    சேர்ந்து களித்தது சோர்ந்து தனித்தது
    நேர்ந்திடாத வாழ்வு நிலைத்திட -சார்ந்திரு
    முண்டகக் கண்ணியின் மூலக் கருவறையில்
    தொண்டர் குழாமுடன் தோய்ந்து….(94)….29-07-2011

    தோய்ந்த தயிரை திருடி சகாக்களுடன்
    மேய்ந்த மலையடியில் மல்லாந்து -சாய்ந்துண்போன்
    செல்ல சகோதரியை கொல்லூர்மூ காம்பிகையை
    உள்ளப் பசியாற உண்….(95)….29-07-2011

    உன்னை நினைக்கையில் உள்ளம் உருகணும்
    என்னை மறந்துநான் ஏகாந்தம் -தன்னையே
    கொள்ளவும் அன்னையே கூட்டாய் அரனுடன்
    முள்ளெனுமென் நெஞ்சில் மலர்….(96)….29-07-2011

    மலரோ கனியோ இலையேல் இலையோ
    புலரும் அதிகாலைப் போதில் -குளிரக்
    குளித்தவள் பாதத்தில் கும்பிட்டு சேர்க்க
    களித்தவள் காப்பாள் குலம்….(97)….29-07-2011

    குலம்தழைக்கும் வாழ்வில் வளம்கொழிக்கும் வாக்கில்
    நலம்சிழிக்கும் மேலோர்தம் நட்பு -பலம்தழைக்கும்
    காமக் களமொழிக்கும், கூற லலிதா
    நாம சஹஸ்ரம் நமக்கு….(98)….29-07-2011

    நமக்குத் தொழில் நதிகங்கை இந்து
    சுமக்கும் சிவனிடம் சேர்ந்த -கமக்கும்
    குழல்தாங்கும் சக்தி கமல பதத்தை
    தொழல்கூலி சும்மா இருப்பு….(99)….30-07-2011

    இருப்பாள் இருந்தும் இராதாள் இவளை
    குறிப்பால் அறிதல் கடினம் -நெருப்பால்
    ஜலத்தால் வளியால் நிலத்தால் வெளியால்
    புலத்தால் உணரா பரம்….(100)….30-07-2011

    பரசிவ வெள்ளம் பருகிட உள்ளம்
    பரமஹம்ஸ பேரின்பம் புல்லும் -வரசவம்
    கங்கையில் மந்திரம் கர்ணத்தை ஓதிட
    தங்குபவ தாரிணித் தாய்….(101)….30-07-2011

    தாயவள் தாலாட்டு தூங்கும் விழிப்புணர்வை
    போயெழுப்பிப் பால்ஞானம் போட்டிடும் -நோயவளை
    கொண்டோர்க்கு சாவில்லை கூற்றுவன் மூப்பதை
    அண்டா(து) அளித்திடுவான் அம்….(102)….30-07-2011

    அம்மென்(று) அளிப்பவள் உம்மென்(று) உழைப்பவள்
    இம்மென்(று) இறைப்பவள், ஈசனார் -கம்மென்று
    பார்த்திருக்க ஆன்மனாய், பற்பல ஜீவனாய்
    பூத்திருப்பாள் சக்தி பரந்து….(103)….30-07-2011

    பறப்பாள் அடியார் பெருந்துயர் தீர்க்க
    பொருப்பாள் மருவும் பொழுதும் -சுரப்பாள்
    அவர்மேல் அருட்பாலை அன்னை, சகத்தில்
    இவர்போலிங்(கு) உண்டோ இறை….(104)….30-07-2011

    இறையவள், நான்கு மறையவள், நாதர்க்(கு)
    அரையவள், தீவளிவான் அப்பு -தரையவள்
    பக்தித் துறையவள் முக்தி அறையவள்
    சக்தியுறை பாதம் சரண்….(105)….30-07-2011
    ——————————————————————————————— 

       வெண்பூ வெண்பா
       ————————

      (சரஸ்வதி வெண்பாக்கள்)
      ————————————

                                                           
               சு.ரவி ரவிவர்மா ஓவியம் பார்த்து
               —————————————
      எண்ணையின் வண்ணத்தில் எண்ணென் கலையாளை
      பண்ணிசைக்கும் கோலம் படுஜோர் -உன்நுதல்
      குங்குமம் கொட்டி கலைமகள் நாசியில்
      தங்கிய மூக்குத்தி தூள்….(1)….09-05-2008 
     
     நாணல் இடையாளாம் ,நாவன்மை உடையாளாம்
     பூணல் அயன்மணந்த புண்ணியளாம்-வீணில்
     அலையாதெ நெஞ்சே அறுபத்தி நான்கு
     கலையாளை சேரக் கவி….(2)….01-04-2008

     நாக்கில் நரம்பின்றி நாளும் வசைபாடி
     தீக்குள் குளிர்காயா தேநெஞ்சே -வாக்கில்
     கலைவாணி வந்து குடியேறும் வண்ணம்
     அலைபாய்ந் திடா(து) அடங்கு….(3)….21-11-2008

     ரவியுடன் சுற்றி ரகசியங்கள் கற்ற
     கவிஅனுமன் கானம் குளிரப் -புவிமிசை
     பாயப் பொழிவாள் படிக நிறத்தாள்
     ஆய கலையாள் அருள்….(4)….2-12-2008

     வந்தனம் செய்ய வரமளிக்கும் வாணியால்
     மந்தனும் ஆவானே மாகவி -சிந்தையும்
     வாக்கும் செயலுமவள் போக்கே துதித்திட
     தேக்கும் வடிக்குமே தேன்….(5)….25-12-2010

     பலகலைக்கு ஞானி பயில்வோர்க்கு தோணி
     தளைதப்பா தீந்தமிழின் தேனி -நிலைகுலைந்து
     நான்நீ எனப்பேசும் நாநீ நுழையாயே
     வாணி வரமருள்வாய் நீ….(6)….27-09-2009

     தேஜ சொரூபிணீ தேவி சரஸ்வதி
     ராஜ ஷியாமளா ரக்ஷிநீ -பூஜை
     புனஸ்காரம் எந்தன் நமஸ்காரம் தாயே
     மனக்கிலேச யாழினை மீட்டு….(7)….13-12-2009

     வேதங்கள் நான்குமவள் காதணியும் குண்டலம்
     நாதப் பரப்பிரமம் நாசிக்காற்று -ஓதும்
     புராணங்கள் மேகலை பாதச் சிலம்பு
     சராசரங்கள் சேரும் சபை….(8)….02-01-2010

     கட்டளை போடு கலித்துறைக்கு பாரதி
     கட்டளை கோர்ப்பெனக்கு கைவர -வெட்டவெளி
     வெண்பா களித்துறையில் வாழவைத்த வாணியே
     என்பால் கலித்துறைக்கேன் ஏய்ப்பு….(9)….12-08-2011

     சகலகலா வல்லி அகலாதென் வாக்கில்
     பகலிரவாய்க் கொள்வாய்நீ பள்ளி -புகலவரும்
     வெண்பாவாம் வாரிசத்தில் வந்தமர்ந்து நின்புகழை 
     பெண்பாவாய் பாடிப் பற….(10)….12-08-2011

     நவையூறும் நாவில் சுவையூறச் செய்து
     அவையேறும் வாழ்வை அளிப்பாய் -இவையாவும்
     பெற்றிட வெண்பாக்கள் குற்றம் குறையின்றி
     சொற்றுளியால் சீராய் செதுக்கு….(11)….12-08-2011

     மட்டொழுகும் வெண்கமலம் மீதில் தனிவெண்மைப்
     பட்டிழைய சிற்றிடையில் போயமர்ந்து -மொட்டிதழால்
     ஆய கலைகளை ஆன்றோர்(கு) அறிவிக்கும்
     தாயே எனக்குமதைத் தா….(12)….12-08-2011

     சவ்வாது சந்தனம் சத்தியம் அவள்வாக்குக்(கு)
     ஒவ்வாத வாச உபமானம் -இவ்வாத
     உண்மை உணர்ந்தகம்பன் ஓதினன் அந்தாதி
     அம்மை சரஸ்வதிமேல் அன்று….(13)….12-08-2011

     வேதம் உபநிடதம் வித்தைகள் எண்ணென்னும்
     பாதம் விளையாடும் பிள்ளைகள் -மாதம்மும்
     மாரியும் பெய்தலாய் மாண்புமிகு கல்வியதி
     காரியின்கண் பார்க்கக் கவி….(14)….12-08-2011

     காமுறுவாள் கற்போர்மேல் கைகொடுக்கக் கற்பகமாய்
     நாமருவி நூற்சேலை நெய்திடுவாள் -பூமருவும்
     வாவிவளர் கூத்தனூர் தேவி சரஸ்வதி
     தாவி அளிப்பாள் தமிழ்….(15)….12-08-2011

     துமியென்ற கம்பன் தவறில்லை என்று
     சமயத்தில் செய்தாள் சகாயம் -தமிழென்று
     ஆய்ச்சியாய் வந்தன்று பேச்சு வழக்காக்க
     கூச்சலிட்ட கூத்தன் களைப்பு….(16)….12-08-2011

     காளிதாச கம்ப குமர குருபரர்கள்
     தோளிலங்க வஸ்த்திரமாய்த் துள்ளிடுவோய் -தாளிரெண்டில்
     கைக்கட்டிக் கேட்கின்றேன் பொய்க்கெட்டா புத்தியை
     கைக்குட்டை யாய்கையில் கட்டு….(OR)
     கைக்குட்டை யாய்கை கொடு….(17)….12-08-2011

     படிகமணி மாலை படிப்புணர்த்தும் ஓலை
     மடிதவழும் வீணை, மருங்கின் -பிடிபடாமை
     கோலத்தை நெஞ்சிருத்தி கும்பிடுவோர் முன்வாழ்த்தாம்
     வேலொத்து பாய்ச்சும் வசவு….(18)….12-08-2011

     வர்மன் வரைந்தாற்போல் வாரிசத்தில் வீற்றிருந்து
     தர்மம் தவம்தானம் தேர்ந்திட -கர்மமாய்
     மோனத்தில் மூழ்கி முனையும் மஹாசக்தி
     ஞானத்தை நானுற நல்கு….(19)….12-08-2011

     அற்பனே ஆனாலும் ஆசான் அவளிரெண்டு
     பொற்பதம் போற்ற புழலறிவின் -கற்பனை
     ஊற்றில் குளித்து உவப்பால் துடைத்தணிவர்
     மாற்றுத் துணியாய் மனது….(20)….12-08-2011

     கல்வி கலவிடும் செல்வம் சிணுங்கிடும்
     வல்லமை வீரம் வணங்கிடும் -செல்வி
     கலைவாணி யாலுன் கவுரவம் கூடும்
     தலைவானில் நிற்கும் திமிர்ந்து….(21)….13-08-2011

     வேறெதையும் எண்ணாது வேண்டி வணங்கிடுவாய்
     சாரதையை நம்பி சிருங்கேரி -ஊரதனில்
     பாரதன்பின் வாழ்வு பரிசுத்தம் ஆகிடும்
     பாரதன்பின் பார்க்கப் பளிங்கு….(22)….13-08-2011

     துங்கா நதிக்கரைசத் சங்காய் சிருங்கேரி
     சிங்கா சனத்திருக்கும் சாரதே -சங்காய்
     கிடக்கின்றேன் சும்மா எடுத்தூதி அம்மா
     நடத்தெனது நாடகத்தை நன்கு….(23)….13-08-2011

     சங்கரன் முன்செல்ல சாரதை பின்செல்ல
     துங்கையின் தீரத்தில் தேவியின்ச -தங்கையின்
     சத்தம் குறைந்திட சத்குரு பார்த்திட
     வித்தை சிருங்கேரி வாய்த்து….(24)….13-08-2011

     கர்ப நுணல்மேல் குடையாய் படம்பிடிக்கும்
     சர்ப சகாய சிருங்கேரி -கர்ப
     கிரகத்து சாரதையை கும்பிடுவோர் முன்பு
     கிரகங்கள் கூப்பும் கரம்….(25)….13-08-2011

     வித்தை, வினயம், விசாரம், விவேகமிவை
     மொத்தமுமென் நெஞ்சில் முளைத்திட -ஸ்ரத்தை
     அளித்திடு சாரதா அம்பிகே, என்னுள்
     முளைத்திடு முண்டக மா….(26)….14-08-2011

     உளம்கொடுக்கும் உன்ன, உரம்கொடுக்கும் நண்ண
     களம்கொடுத்து ஞானக் கொழுந்தாய் -புலன்மடக்கி
     ஆசை அறுத்தான்ம பூசைக்கு சாரதை
     ஓசை சதங்கையொலி ஓம்….(27)….14-08-2011

     நையப் புடைப்பாள் நமதகந்தை போக்கிட
     ஐயம் அகன்றதும் ஆதரவாய் -கையைப்
     பிடித்திழுத்துச் செல்வாள் பரமசுகம் கூட்ட
     படித்ததெலாம் பெண்ணிவள்முன் பாழ்….(28)….14-08-2011

     கோனார் கணக்கினில், கம்பன் கவிதையில்
     நானார் விளக்கநூல் நாற்பதில் -மூணாறில்
     எண்ணும் எழுத்துமாய் எங்கும் இருப்பவளை
     எண்ணல் அயன்கை எழுத்து….(29)….14-08-2011

     பேசக் கொடுத்ததில்லை பாரதியின் தாய்மொழி
     கோஷமிட்டு கூற்றன் குதிக்கஆ -வேசமுற்று
     நாரணா, நான்முகா, நாதா நமச்சிவாயா
     கூறநா கிட்டிடும் காப்பு….(30)….14-08-2011

     எண்ணமவள் நேற்று எழுத்தவல் இன்றுநாம்
     பண்ணும் செயலவள் பின்நாளை -பெண்ணவள்
     ஆன்றோர்க்கு ஞானம் அறிவிலார்க்கு ஆணவம்
     தேன்தோன்றும் தாய்சொல் தமிழ்….(31)….14-08-2011

     கீரன் திருமுரு காற்றுப் படையவள்
     மாறன் திருவாய் மொழியவள் -சூரன்
     மகாகவி பாரதியின் மாங்குயில் பாட்டு
     தகாதோர் செவிக்கவள் திட்டு….(32)….14-08-2011

     வண்டுவந்து மொய்க்கா வரைந்த மலர்சோலை
     கொண்டவர்மன் ஓவியத்தில் கால்மடித்து -முண்டகத்தின்,
     மெல்லிதழில், தோகை மயிலன்ன தடாகத்தில்
     நல்கிடுவாள் யாழில் நலம்….(33)….14-08-2011

     என்பிழைகள் ஏராளம் என்றாலும் அன்னையே
     புன்மொழியான் என்னைப் பொறுத்தருள்வாய் -உன்விழியால்
     கூட்டு தமிழை கவிபாடும் ஆற்றலை
     ஏட்டுச் சுரைக்காய் எனக்கு….(34)….15-08-2011

     பாக்கு பழமிலை பூக்கள் பணிவெதிர்
     பார்ப்பாள் பராசக்தி பாரதி -வாக்கில்
     வினயமுடன் வித்தை விரும்புவோர் தம்மை
     தனயனென ஏற்பாள்அத் தாய்….(35)….17-08-2011

     வேசிவரக் காத்தவடை தோசை வரதனை 
     ஆசுகவி ஆக்கிய ஆனைக்கா -ஆசிகையே
     காளமேகம் வாய்க்கெட்டி கைக்கெட் டியவாணி
     மூளயோகம் என்வாய்க்கும் மூட்டு….(36)….18-08-2011

     பாத்தநூறு தெய்வத்தில் பாரதியை போலிங்கு
     காத்திருக்க வைக்கா கடவுளெது -கூத்தனூர்
     தேவி மனம்வைத்தால் தேளின் கொடுக்கிலும்
     காவியம் கொட்டும் களிப்பு….(37)….19-08-2011

     சாத்திரங்கள் வேதங்கள் கூத்தனூர் தேவியின்
     நேத்திரத்து தீர நுணலிமைகள் -பாத்திரம்
     கண்டவள் பார்வை கருவண்டு போடுமே
     பண்டிதப் பிச்சை பிறப்பு….(38)….19-08-2011

     பண்டித வன்புலிக்கு பாமரத் தோல்போர்த்தும்
     மண்டை கனத்தில் மிதக்குங்கால் -எண்டிசைக்கும்
     மூளியைக் காவிய மன்னனாய் மாற்றிடும்
     காளியின் தாஸன் கதை….(39)….19-08-2011

     வேதவ்யாசன் சொன்னது வேழம் தொகுத்தது
     கீதையைக் கண்ணன் கொடுத்தது -ஏதுமே
     வெற்றிக்குப் பின்னிருந்து வாணி விதைத்ததே
     முற்றும் துறக்கவும்அம் மாது….(40)….19-08-2011

     கூனியின் சூழ்ச்சியும் கைகேயி வீழ்ச்சியும்
     மானி இராமன் முதிர்ச்சியும் -தோணி
     குகனின் நெகிழ்ச்சியும் குன்றனைய வாயு
     மகனனுமன் வாக்குமவள் மாண்பு….(41)….19-08-2011

     பால்முகமும் வேல்விழியும் மால்மருவா நூல்மருங்கும்
     ஆல்சிவன்பெண் பால்வடிவாய், நால்மறையும் -தாள்தழுவ
     சீதமலர் போதமர்ந்து போதிக்கும் ஏதமில்
     லாதவள்யாழ் கீதம் லயிப்பு….(42)….19-08-2011

     கூனியின் சூழ்ச்சியில் கைகேயி வீழ்ச்சியில்
     மானி இராமன் முதிர்ச்சியில் -தோணி
     குகனின் நெகிழ்ச்சியில் குன்றனைய வாயு
     மகனின்சொல் வாக்கிலவள் மாண்பு….(43)….19-08-2011

     காடுவரை சென்றங்கு கொள்ளியில் வெந்துஎமன்
     ஏடுரைத்த வண்ணம் எரிவாயில் -போடும்முன்
     முட்டா ளையும்காக்கும் மந்திரமாம் வாணியைநா
     கட்டாலப் போறவனே கொள்….(44)….19-08-2011

     தாத்தனூர் சேர்த்த திரவியங்கள் செல்லாது
     கோர்த்தநூறு சுற்றமும் கூடவரா -கூத்தூர்
     பேடையை நம்பிநீ பாடை படுத்திருக்க
     காடென் கடைசிவரை காப்பு….(45)….19-08-2011

     கல்லறைக் காட்டினில் செல்லரித் தாலுமுடல்
     சொல்லரித்துப் போகாது சோர்வடையாய் -புல்லரித்து
     போற்றி உனைத்தூக்கி பூர்புவஸ் லோகத்திற்(கு)
     ஏற்றி விடுவான் எமன்….(46)….19-08-2011

     தெக்குவாய் கூறிடும் தோத்திரங்கள் சுத்தமாய்
     மக்குபோய் ஆளும் மகாசபை -சுக்கலான
     ஓலைச் சுவடி உவேசா அவர்களால்
     நாளைக் கடந்துநிற்கும் நூல்….(47)….19-08-2011

     கற்றதனால் ஆயபயன் நற்றமிழாள் நல்லுறவைப்
     பெற்றதே போதுமென்று போதியமர் -மற்றதெலாம்
     செந்திருவால் செல்வமும் சங்கரியால் வீரமும்
     வந்திரும்பார் வாணி வகுத்து….(48)….19-08-2011

     போகத்தில் விந்து புகுமுன் புகுந்தங்கு
     மோகச் சினைமுட்டை மூளையை -வேகவைத்து
     பாமரனா, பண்டிதனா, மாமர மண்டையா
     தாமரையாள் தந்திடுவாள் தீர்ப்பு….(49)….20-08-2011

     உச்சிக் குடிமியை ஊடாடும் பூணலை
     மெச்சிடும் ஆசார மேன்மையை -த்ச்சமாய்
     எண்ணும் கலைவாணி ஏற்பாள் வினயத்தை
     கண்ணின் மணியாய்க் குறித்து….(OR)
     மின்னும் அணியாய் மகிழ்ந்து….(50)….29-08-2011  

     வீணை படிகமணி வேதக் கரத்தளை
     பானை பிடிக்குமயன் பத்தினியை -சேனை
     கலைகள்எண் ணென்சூழ செந்தா மரையில்
     விளையும்வெண் பூவை வணங்கு….(51)….21-08-2011

     பத்தரைப் பொன்னில் பதினாறாம் யவ்வனத்தில்
     முத்திறைக்கும் சேயின் முறுவலில் -சித்திரையில்,
     புத்தரின் மோனத்தில், புண்ணிய தீர்த்தத்தில்
     இத்தரைதர் மத்தில் இவள்….(52)….21-08-2011

     காசியில் கங்கையில், ஆசியில், ஆண்மையில்
     வாசி அடக்கும் விளையாட்டில் -பூசிடும்
     மாசிவை வெண்ணீற்றில், ஹாசிய நாடகத்தில்
     ஆ!சிரி அப்பா அவள்….(53)….21-08-2011

     தண்டடியில் தூங்கி தவமகுடி கேட்டெழுந்து
     மண்டயிடித் தாங்கே மலமறுக்கும் -குண்டலினிப்
     பாம்புக்(கு) அடங்காது, பாரதியின் கண்ணிநுண்
     தாம்புக்(கு) அடங்கத் தெருள்….(54)….21-08-2011

     ஈரெட்டு ஆறெட்டை ஈன்றவள், நான்மறையை
     சீராட்ட வந்த செவிலித்தாய் -பாரேட்டுப்
     பாக்கள் பதிகங்கள் பாசுரங்கள் யாவையும்
     ஆக்கி சமைத்திடும் ஆய்….(55)….22-08-2011

     அஞ்சிலே சம்பந்தர்(கு) ஆரா அமுதளித்து
     பிஞ்சில் பழுக்கவைத்த பார்வதி -கஞ்சியை
     கல்வி ‘நகரேஷு காஞ்சி’யாய் ஆக்கினள்
     செல்விகா மாட்சியில் சேர்ந்து….(56)….22-08-2011

     பொற்றா மரைக்குளமே, போட்ட பதிகங்களை
     சற்றும் முழுகாது சேர்த்தவளே -கொற்றவள்
     மீனாட்சி பிள்ளைத்த மிழ்சொல் குருபரர்
     நாணாச்சு வில்லம்பு நீ….(57)….22-08-2011
     
     எண்ணென் கலைகளை ஏழு சுரங்களில்
     பண்ணென யாழில் பயின்றிடும் -அன்னத்து
     வாகனன் பத்தினி வெண்தா மரைவாணி
     மோகனென் வாக்கினில் முந்து….(58)….17-07-2007
     
     வேதயிதி ஹாசபு ராண உபநிடதம்
     யாதுமுன் மூச்சில் இழையும்சங் -கீதமாகும்
     கோத்த படிகமாலை யோடுகூத்த னூர்வாழும்
     ஆத்தாளே ஆசுகவி ஆக்கு….(59)….17-07-2007
     
     வித்தை சிறக்க விளைவுகள் மேன்மையுற
     சித்தம் சிதறாது சீர்பெற -புத்தியில்
     வாநீ அமர்ந்திட வாக்கு பெருகிட
     வாணியின் தாளை வணங்கு….(60)….17-07-2007

     தன்னேரில் லாதவள் தானே தனக்குவமையாள்
     பொன்னேர் முகமும் புலமையால் -மின்னேர்
     வசீகர வாணி வழங்குவாள், ஞானப்
     பசீகரம் ஏந்திப் பிழை….(61)….23-08-2011

     வெற்றிட மாய்விளங்கும் சிற்றிடையை, செந்தமிழ்ப்பால்
     முற்றியத் தாய்மை முலையிரெண்டை -நெற்றியிடைக்
     குங்குமப் பொட்டை, கமலத் தயன்பெட்டை
     செங்கமல மொட்டை சரண்….(62)….23-08-2011

     வந்தனம் பாரதி வாணி சரஸ்வதி
     மந்தனென் மூளை முடுக்கினில் -வந்துநுண்
     ஆன்ம தரிசன ஆர்வம் பெருக்கிடு
     நான்மகன் அன்றோ நினக்கு….(63)….23-08-2011

     வாணி மஹாலதன் வாசலில் வீற்றிருக்கும்
     ராணியே நாடக ஏணியே -நானினி
     எப்போதும் நிந்தன் எழிலுருவை மாந்திட
     இப்போதே நெஞ்சம் இரங்கு….(64)….23-08-2011

     கோபம் அகங்காரம் கர்வம் புறங்கூறல்
     தாபம் தணியாதோர் தீவீரம் -பாபம்
     வரிந்திடச் செய்திடும் வீணர்தம் தீங்கில்
     இருந்திட மாட்டாள் இவள்….(65)….23-08-2011

     கம்பனின் இல்லத்து கட்டு தறிபாட
     நம்புமென் வாயுண்ணும் நோன்பிற்கா -அம்பையே
     உண்ணதான் வாயென்றால் ஊமையாய் ஆக்கிடு
     பண்ணது பின்னேபெப் பே….(66)….23-08-2011

     தோப்பில் துரவில் தளும்பும் அடவியில்
     மோப்பம் பிடிக்கும் மலர்வண்டில் -மேய்ப்புல்லின்
     வண்ண மரகதத்தில் வெற்படி வாரத்து
     மண்ணில் மழையின் மணம்….(67)….23-08-2011

     வாதாடல் வம்பிழுத்தல் வஞ்சித்தல் வைத்துமனை
     சூதாடல் மாற்றான் மனைசுகித்தல் -தோதாக
     வந்தவரை ஏய்த்து வழிப்பறி செய்தலிவை
     அந்தவா ணிக்கு அவம்….(68)….23-08-2011

     சத்துவத்தில் சாந்தமாய், சாகசத்தில் ராஜசமாய்
     சுத்தமன தாமசத்தில் சும்மாவாய் -அத்தனையும்
     தாண்டி அனுபூதி தந்திடும் தாயிவளை
     வேண்டிட வையத்தில் வான்….(69)….23-08-2011

     வலுவிவள் சேர்க்கை, வளமிவள் நூற்கை
     புலியிவள் மான்தோல் போர்த்தி -எளிமையாய்
     கோலம் கொடுத்தாலும், கூறக் கலம்பகம்
     காலன் உயிருக்கே காவு….(70)….24-07-2011

     கற்பனை தந்து கவிதை களைத்தந்து
     தற்பெருமை தந்துனைத் தாழ்த்திடுவாள் -அற்பனாய்
     செய்வள் சரஸ்வதி, சிந்தைக்கப் பால்செல்ல
     பெய்வள் திருஞானப் பால்….(71)….24-08-2011

     தனியானை வரும்முன் மணியோசை யாம்போல்
     கனிவான சொல்முன் குரலில் -தணிவும்
     உடையவர்கள் நாவில் சடையப்ப வள்ளல்
     கொடையளிப்பாள் கம்பன் கவிக்கு….(72)….24-08-2011

     கோல மயிற்சாயல் கூவும் குயில்வாயள்
     நூலை நிகர்த்துநெளி நுண்ணிடையாள் -பாலை
     வனச்சோலை பாக்கள் விழையும் கவிக்கு
     மனச்சோர்வை நீக்கும் மருந்து….(73)….25-08-2011

     எழுதா கிழவி, எழுதிப் பழக
     பொழுதும் அணைத்துப் புணரும் -அழகி
     துடியிடையில் பிள்ளைத் தமிழேந்தி, வேண்ட
     பொடிநடை யாய்வருவாள் பார்….(74)….26-08-2011

     வெண்தா மரைமேனி, செந்தா மரைப்பாதம்
     விண்தா மரைபூத்தோன் வல்லியே -கண்தா
     மரைபாராய் பண்தா மறைவாணி என்தாய்
     முறையன்றோ நீயிம் மகர்க்கு….(75)….26-08-2011

     பாழெனத் தள்ளாதிப் பாவியை உந்தன்கை
     யாழெனக் கொண்டுமடி ஏந்திடு -ஊழெனை
     வாட்டாத வண்ணம் வகைசெய்வாய் வாணி
     பாட்டெழுதப் போகுமே பாடு….(76)….27-08-2011

     தேவாரம் வேண்டாம் திருவாய் மொழிவேண்டாம்
     நாவோரம் நின்றென்னை நானறியும் -தீவீரத்
     தேடலில் ஈடுபட்டு வீடான் மனிலென்றும்
     நீடூழி வாழவைவா ணி….(77)….28-08-2011

     கூத்தன் சபாபதி கூடப் பிறந்ததால்
     கூத்தனூர் கொண்டாயோ கோயிலாய் -வாத்தியார்
     அம்மா எனக்களிப்பாய் ஆடா(து) அசங்காது
     சும்மா இருக்கும் சுகம்….(78)….29-08-2011
     
     காளமேகம் வெண்பாவில், கம்பன் விருத்தத்தில்
     காளிதாசன் கற்பனை கங்கையில் -ஏளுகின்ற
     பார தியெனதுவெண் பாக்களில் சீராக
     ஊர திசியக்க உய்….(79)….29-08-2011

     சங்கத் தமிழும், சதுர்மறையும், சாத்திரமும்
     செங்கண்மால் நாம சகஸ்ரமும் -சங்கரியின்
     ஆயிரம் பேரும் அதிகாரம் பெற்றது
     தாயிவள் வாய்வந்த தால்….(80)….29-08-2011

     நாடகம், சங்கீதம், நாட்டியம், முத்தமிழ்
     பாடும் பதிகங்கள் பாசுரங்கள் -நாடிடும்
     தன்முத் திரைபதிக்க தேவி சரஸ்வதியின்
     சின்முத் திரைக்கை சிறப்பு….(81)….29-08-2011

     சொல்லக்கேள் நெஞ்சே சகத்தில் பிறந்திறக்கும்
     அல்லல்தீர் மாமருந்து ஆகுமிங்கு -வெள்ளத்தை
     ஒத்து விரைந்துனக்கு ஓதுவிக்கும் ஓங்கார
     வித்தைக்(கு) அதிபதியின் வாக்கு….(82)….29-08-2011

     மாதவம் செய்தும் மகாயக்ஞம் செய்துமுன்
     தீதவம் தீராது, தாமரைப் -போதமர்
     வாணியை, ஞான விசார உயர்வளிக்கும்
     ஏணியை எந்நாளும் ஏத்து….(83)….29-08-2011

     நால்செல்ல நாள்செல்ல நாம்செல்ல வேண்டுமே
     ஆள்கொல்லி கூற்றன் அழைப்பானே -கேள்நல்ல
     வார்த்தைக்(கு) அதிபதி வாணியைப் போற்றிடப்
     பூர்த்தியா கும்பார் பிறப்பு….(84)….30-08-2011

     நாடுவாய் நெஞ்சே நளினம் அமர்வோளை
     சூடுவாய் நெஞ்சே சரோருகத்தாள் -பாடுவாய்
     நெஞ்சே பதுமத்தில் நல்லதோர் வீணையைக்
     கொஞ்சும் கலையாள் கழல்….(85)….30-08-2011

     அறிவு அலுத்திடும், ஆன்மீக ஞானச்
     செறிவு நிலைத்திடும் சான்றோர் -உறவாய்
     நெறியை உணர்த்திடும் நான்முகன் பத்தினி
     வெறிநான் அகந்தை விலக்கு….(86)….30-08-2011

     நாக்கில் நரம்பின்றி நாணாது பேசுவோர்
     வாக்கில் வராள்கலை வாணியவள் -தூக்கில்
     இடப்படும் போதும் இனியன கூற
     தடைப்படுமே தண்டனை தீர்ப்பு….(87)….30-08-2011

     கண்ணன் குழலில் கணபதி மோதகத்தில்
     வண்ண மயிலூர்வோன் வேல்முனையில் -மின்னிம்
     திருவில், மஹேசன் தவத்தில் திகழ்வாள்
     உருவிலிவள் பாயும் ஒளி….(88)….03-09-2011

    “தும்பைவெண் பட்டுடுத்தி தாமரை வீற்றவளை,
     நம்பிஊ டாடும்நன்  நூலிழையும், -கம்பனில்லக் 
     கட்டுத் தறியில்  கவியாகி நெய்துவெண்
     பட்டளிக்கும் பாரதிக்கே பார்”….(89)

    “கதிர்முகத்தாள் செந்நெல் கதிர்நகத்தால் யாழில் 
      உதிர்சுரத்தால் எண்எண் உரைப்பாள் -சதுர்முகத்தோன் 
      பத்தினி என்வாக்கில் பூத்திட நீயென்னைப்
      பத்திநீ எண்ணு பரிந்து”….(OR )
      பத்தினி, கம்பனை பாரதியைப் போலென்னைப்
      பத்திநீ எண்ணு பரிந்து”….(90)

    “தொழுகைக்கும் , காலில் விழுகைக்கும் , கண்ணீர் 
     அழுகைக்கும் வாணி அசையாள் – கழுகைத்தன் 
     வாகனமாய்க் கொண்டோன் வயிறுதித்தோன் பத்தினி
     நாகனமற் றோர்பால் நிலைப்பு”….(91)

    “நாபிக் கமலத்தில் நன்கமர்ந்து நானிலம் 
      சோபிக்க ஓதும் சதுர்முகனை -தாபிக்க 
      வைத்தவளைப் போற்றிட , வையத்(து ) தளவுகல்வி 
      கைத்தல நெல்லிக் கனி”….(92)

    ”அண்டாது  வெவ்வினைகள்,  ஆய  கலைகளை
      விண்டோதும்  வீணை  விரலாலைக் -கண்டோடும்;
      கொண்டாடும்  அன்பர்  குடும்பத்து  வாரிசாக
      வெண்டா  மரையாள்  விருப்பு”….(93)

    “விருந்தா வனக்கண்ணன் வேய்ங்குழல் வாக்கு,
     கருந்தா மரைக்கண்கள், கூறைக்குள் -பொருந்தாத 
     இல்லா இடையை , இருத்துவோர் புத்தியில் 
     சொல்லாள் பதத்தின் சுவடு”….(94)

    “சோதித்த பின்வாழ்க்கை சொல்லித் தரும்பாடம்;
     வேதத் தயன்மணந்த வாணியோ -போதித்து 
     கூட்டுவாள் சத்சங்கம் ,காட்டுவாள் நன்னெறி 
     தீட்டுவாள் வைரமாகத் தேய்த்து”….(95)

    “தலைஎழுத்தை மாற்றும் திருப்பட்டூர் அய்யன் 
      முலையழுத்த மோகிக்கும் மாதே -கலைஎழுத்தென்
       மேடை வசனத்தின் மேன்மைக்கு ,வெண்ணிற 
        ஆடை அணிந்தோய் அரண்”….(96)

    ”ஆரா முதனாகம்  ஆள்பவளும்,  வெள்ளிமலை
      ஊரான் இடபாகம் உற்றவளும் -கூறார்
      பதிலுனக்கு ஞானம்  பொருத்து; ,சரசு
      வதியே  வினாவிடை  வீடு”….(97)

    “மகர யாழை மடியேந்தி மீட்டி 
     அகர முதல அளிப்பாள் -நுகர்வோர்
     கவியிளங்கோ ,கம்பன், குமர குருபரராய் 
     புவிவிளங்க வாக்கன் பளிப்பு”….(98)

    “சம்போ மகாதேவன் சோதரி, செவ்விதழ் 
     அம்போ ருகமமர்ந்தோய் ஆதரி -அம்பே 
     சகலகலா வல்லி, சரஸ்வதி வாணி 
     புகலெனக்குன் பாதாம் புயம்”….(99)

    ”பாத நமஸ்காரம்,  பூசை  புனஸ்காரம்
     ஏதும்  புரிந்திலேன்  என்றாலும் -ஆதுரம்
      உற்றெனது  வாக்கிலே  உட்கார்ந்து  வெண்பாக்கள்
      பெற்றிட வைத்தாய்வெண் பூ”….(100)

    “புத்தகம் , முத்துமணி பக்கயிரு கைபற்ற 
     மத்தயிரு கையால் மடியேந்தும் -சித்திர 
     யாழினை மீட்டிடும் ஏழிசைச் செல்வியே 
     வாழிய வாழிய வே”….(101)
    —————————————————————————————————————

    பொன்மகள் வந்தாள்…. மூவர்க்கும் சேர்த்து முதற்பாடல் “படைத்திடும் வாணி துடைத்திடும் துர்க்கா 
     இடைபுகுந்து காக்கும் இவளும் -சடைப்பின்னல் 
     ஆக இணைந்து அலகிலா ஆட்டத்தை 
     பாகப் பிரிவினையில் பார்ப்பு”….

    “பத்தவ தாரப் பணிக்குதவ பூதேவி,
     நித்திரை யோகமோ நீளாவால், -பத்தர்க்கு
     சேர அருள்சகாயம் ஸ்ரீதேவி , ஆகமால் 
     தாரங் களின்தயவால் தான்”….

             ” காப்பு”
                  ——–
    “அகழ்வாரைத் தாங்குகின்ற அக்காள்முன் வந்த ,
     முகிழ்வா ரிசமமர்ந்த மாமி -புகழ்பாட 
     பாழியன்தோள் மாமன்தோப் புக்கரணம் போட்டபின்பு 
     ஆழியைத்தந் தோன்தாள் அரண்”….

                   சமர்ப்பணம் 
                   —————-
    “அன்னை இருந்த அசோகவனம் சேர்ந்தன்று 
     அண்ணல் கணையாழி தந்தவள் -முன்னுச்சி 
     சூடா மணிகொணர்ந்து ,தேடும் இராகவன் 
     பாடொழித்தோன் பாதசமர்ப் பிப்பு”….

      
    “கஷ்டம் கலைந்திடும் , இஷ்டம் இணங்கிடும் 
     அஷ்ட இலக்குமிகள் ஆசியால் -இஷ்டமாய் 
     சுக்குமி ளக்குதி திப்பிலி என்பதின்றி ,
     லக்குமி தாராய் லயம் “….(1)

    “கள்ளம் கபடின்றி, கையேந்திய சங்கரர்க்கு 
      உள்ளங்கை நெல்லி உவந்தளித்த -உள்ளத்தின் 
      வீரதர் மத்தால் வியந்தவர்  வேண்டிட 
      கூரையைப் பிய்த்தவளைக் கொஞ்சு”….(2)

    “சுதாமன் அவலுக்கு சொர்ணங்கள் தந்தாய் 
     கதாமகன் கீர்த்தியை கண்ணனுக்(கு) -இதோவென்று
     பொன்னோடு பேரை புறக்கணித்த பூவையே
     நின்னோடு சேர்ந்தகண்ணன் நார்”….(3)

    “பொன்வைக் குமிடத்தில் பூவைப்போர் மீதிவள்
     கண்வைக்க கஞ்சனும் கர்ணனே -முன்வைத்தக் 
     காலைப்பின் வைக்கா கடுமுயற்சி யாளர்க்கு 
     வேலை திருவினையாள் வாகு”….(4)

    “தான மவள்லீலை தர்ம மவள்வேலை 
     மானம் புகுந்து மகாபலி -தானமிட்ட 
     கர்வத்தை மூவடியைக் கொண்டு அடக்கிய 
     தர்மத்தின் தாரம் திரு”….(5)

    “தானம் கொடுத்தமாட்டின் தாடை பிடிப்பது 
     ஈனம் எனநூல் இயம்பினாலும் -மானம் 
     பெரிதென்று எண்ணாமல் பிச்சை எடுப்போரை 
     சிறிதென்(று) ஒதுக்குவாள் சீர்”….(6)

    ’’பண்டிதர்  பின்தொடர  பிச்சைக்குப்  போயன்று
     கொண்டவூசிக்  கஞ்சியை  உண்டபின் -மண்டையில்
     கையோ(டு)  அகந்தை   கழவு  ரமணரை
     மெய்யோடு  சேர்த்தாள்பொன்  மாது’….(7)

    “அக்காள்மூ தேவி அயர்ந்துறங்கும் இல்லத்தில் 
      நிக்காள்ஸ்ரீ தேவிஎன்பர் நூலோர்கள் -முக்காலம் 
      தூங்கும் பெருமாளின் தூய திருவடிகளை 
      தாங்குவதால் தூங்காமல் தூங்கு”….(8)

    “பூணுமய பக்திக்கே பூரித் தளித்திடும் 
     ஏனைய செல்விகள் ஏற்றத்தை -நாணய 
     நாயகி ஏற்பது நாற்புற சுத்தத்தை 
     போயகி லத்தை பெருக்கு”….(9)

    அலையில்  பிறந்து  அலையில்  புகுந்த
    அலைதாண்டா  பத்தினியை, அப்பொன் -சிலையை
    விழியில்  பதித்து  விரலால்  ஜபிக்க
    கிழியும்பார்  அவ்வறுமைக்  கீத்து….(10)

    வித்தைக்கு  வேண்டும்  வினயம்,  அதிதீர
    சித்தத்தில்  வேண்டும்  சரிசமம் -சுத்தத்தை
    வேண்டுவாள்  செந்திரு,  வாசல்  தெளிப்போர்க்கு
    யாண்டும்  வறுமை  இல….(11)

    பட்ட  கடனால்  பயந்தோடி  பாலாஜி
    எட்டா  மலையுச்சி  ஏறிட -வட்டி
    அசலோடு சேர்த்தளித்தும்  அந்தோ  புகழில்
    முசலானாள் ஆமைக்கு   முன்….(12)

    வானுகந்து  வந்தீரே  வகுண்ட  வாசலில்
    நானகன்று  சூரியாய்  நிற்பதற்கு -தானமொன்று
    செய்ய  வருவாளே  ஸ்ரீமன்நா  ராயணரின்
    கையைப்  பிடித்து  கனகு….(13)

    பாங்கியின் யோகத்தால் பார்த்தனுக்கு பாரதத்தில்
    சாங்கிய  யோகத்தைச் செப்பியவன் -நீங்கிய
    போதுன்னை ராமன் புலம்பினான் பார்த்தனாய்
    யாதுமான லக்குமி யே….(14)

    “தரமும் தரத்தில் நிரந்தரமும், செய்யும் 
     கருமத்தால் ஏழைக் குதவும் -கரமும் 
     இருப்பவர் வீட்டை  இமையாது காப்பாள் ,
     திருப்பள்ளி கொள்ளாள் திரு”….(15)

    “பயில்வான் இறந்தாலும் , பண்டிதனாய் வாழ்ந்த 
     பயில்வோன் இறந்தாலும் பைசா -துயில்வோன்மேல்;
     வீடு வரையுறவு வீதி வரைமனைவி 
     காடு வரைநெற்றிக் காசு”….(16)

    “அவலை சுசீலை அளிக்கக் குசேலன் 
     கவலை  களைந்தான்  கிருஷ்ணன்; -அவளை
     மணந்ததால்  அன்றோமால் மாங்கல்ய பிச்சை 
     பணம்தந்து பெற்றான் புகழ்”….(OR ) -அவளை
     வரித்ததால் தானேமால் வாரிக் கொடுத்து
     தரித்திரம் தீர்க்கத்  துணிபு”….(17)

    “நாத்தனார் வீரத்தை , கூத்தனூர் கல்வியை 
     ஏத்திட ஏற்றம்தான் , என்றாலும் -பூத்தமலர் 
     செவ்விதழின்  மீதேளும் செல்வியருள் இல்லையேல் 
     இவ்வுலகில்  இல்லை இருப்பு “….(18)

    “மஞ்சள் அரிசியில் மங்கல வாத்யத்தில்
     வஞ்சியர் கல்யாண வைபவத்தில் -நெஞ்சணைந்த
     தாலியில் தங்கமாய்த் தங்கியவள் தாம்பத்ய 
     வேலியைக் காக்கும்செல் வி”….(19)

    “சித்திரம் கைப்பழக்கம் , செந்தமிழ் நாப்பழக்கம் 
     பத்தரை மாத்துப்பொன் பெண்பழக்கம் -உத்தம 
     பக்தி வயலில் புளகநீர் பாய்ச்சிட 
     முக்திநெல்லாய் விட்டெழும்உன் முன்”….(20)

    “தங்கநிற வண்டுகள் தாதுக்காய் மொய்த்திட 
     பொங்கும் புளகமலர் போல்மாலின்-அங்கம் 
     புளகத்தால் கூச்செறிய, பார்வையால் உண்ணும் 
     அலகொத்தக் கண்ணாள் அவள்”….(21)

    நீல மலர்நாடும் நந்தவன வண்டேபோல்
     நீள விழியிரெண்டும் நாரணன் -கோலத்தைக்
     கொண்டதோர்  நாணத்தால் ,காணும் விருப்பத்தால்
     அண்டமாய்ச் சுற்றும் அலைந்து….(22)

    ஏழை  சிரிப்பில், எடுப்பார்கைப் பிள்ளையின்
    பேழைவாய்  பொக்கையின் புன்னகையில், -வாழையடி
    வாழையாய் வந்த  விகல்பமில்லா  வேட்டதிர்வில்,
    தாழை  எனமணக்கும்  தாய்….(23)

    “உச்சிவான் தோன்றி உறுமும் இடிமின்னல் 
     பச்சை மலையில் பளிச்சிடலாய் – அச்சுதன் 
     மாலின் மரகத மார்பில் மகாலட்சுமி 
     பாலின் நிறத்தில் பொலிவு”….(24)

     மடைதிறந்த வெள்ளமாய் மங்கலப் பார்வை
     கடைதிறந்து காணமயிர் கால்கள் -புடைத்தெழ
     எல்லையில் லாயின்பம் எம்பிரா னுக்களிப்போய்
     அல்லலில்லா வாழ்வை அளி….(25)

    “கவுத்துவம் பூண்டவன் , கொன்று மதுவைக் 
     குவித்தவன் யோகத்தைக் கண்ணால் -கவுத்தவளே,
     நீலமணி பட்டதால் நீலமுற்ற பார்வையை 
     பாலனென் மீது பதி”….(26)

    ’’கைடபனைக்  கொன்றவன்,  கார்முகிலாய்  சேடன்மேல்
      மெய்படரச்  சாய்ந்தவன்மேல்  மின்னலாய் -மையடர்ந்த
      பங்கயக்  கண்களால்  பார்த்தது  போதுமென்மேல்
      திங்கள்  விழியைத் திருப்பு’’….(27)

     “நாணுமுன் கண்களை நாணாக்கி மன்மதன் 
     வேணுவின் மீதெய்து வெற்றியைப் -பூணுவான்;
     பாற்கடல் தோன்றிய பாவையே பார்வையை 
     ஓர்கணம் என்மீ (து ) உரசு”….(28)

    பயிரான பூர்வஜென்ம பாவங்கள் போக்கும்
    அயிரா வதத்தில் அமர்த்தும் -உயிராக
    எண்ணினாள் தங்குவாள், ஏத்தினால் தாங்குவாள்
    கண்ணினால் காவல் கொடுத்து….(29)

    “அத்தகைய பார்வை அடியேன் மீதுபட்டால் 
     எத்தகைய செல்வம் எனைச்சேரும் -குத்தகையாய் 
     பத்தினி யேநீ, படியில்லை பாற்கடலில்,
     இத்தரைக்குத் தாண்டிட ஏகு”….(30)

    நூறிடர்  தீர்த்திட  பாரதம்  செய்தவனின்
    மாரிடம்   கொண்ட  மகாலக்‌ஷ்மி -சோறிடும்
    சுத்தம்  எதிர்பார்ப்பாள்   செல்வம்  அளித்திட
    அத்திருக்(கு)ஆ  சாரம்  அணி….(31)

    “குப்பையில் மாணிக்கக் கல்லாய் மிளிர்ந்திடுவாள் 
     அப்பழுக்கு சேறிலவள் அல்லியாவாள் -குப்பனின் 
     வீட்டுச் சுவரில் வரைந்தாலும் வந்தருள் 
     கூட்டும் வரலக்ஷ்மி காப்பு”….(32) 

    “சொர்ண நிறவதனம், செம்மா துளையதரம் 
     வர்ணனைக்(கு) எட்டா வடிவழகு – கர்ணனை 
     மிஞ்சும் உதார மனத்திற்க்(கு) உரியவளால் 
     பஞ்சும் பசும்பொன்னாம் பார்….(OR )
     பஞ்சுமா கும்மாணிப் பொன்”….(33)

    “அத்தன் அரிமால் அவதா ரமாய்யெடுத்த
     பத்தையும் செய்த பணமிவளே -சத்த 
     நரசிம்மன் சாந்த நிலையுற்றார் ,செல்வி 
     வரசிம்மன் ஆனான் வரம்”….(34)

    “பெண்ணொருத்தி நின்றிடுவாள், பின்னிருந்து ஆடவனை 
     முன்னிறுத்தி ஈவாள் முழுவெற்றி  -கண்ணுறுத்தும்
     கானகத்து அல்லிலன்று காகுத்தன் ,பின்தொடர்ந்த 
     ஜானகியால் கண்டான் ஜெயம்”….(35)

     நீல மலர்நாடும் நந்தவன வண்டேபோல்
     நீள விழியிரெண்டும் நாரணன் -கோலத்தைக்
     கொண்டதோர்  நாணத்தால் ,காணும் விருப்பத்தால்
     அண்டமாய்ச் சுற்றும் அலைந்து….(36)

    ஏழை  சிரிப்பில், எடுப்பார்கைப் பிள்ளையின்
    பேழைவாய்  பொக்கையின் புன்னகையில், -வாழையடி
    வாழையாய் வந்த  விகல்பமில்லா  வேட்டதிர்வில்,
    தாழை  எனமணக்கும்  தாய்….(37)

    உத்தம பத்தினியின் உச்சந் தலைவகிட்டில்
    பத்தும் செய்யா பணமுடிப்பில் -சுத்தமாய்
    சாணத் தெளிப்பில்ஸ்ரீ சூர்ண நுதற்பிறையில்
    காணலாம் பொன்மகளின் கால்….(38)

    கன்றை விளிக்கும் கறவையின் கத்தலில்
    நன்றுரைக்கும் நல்லோர் நயவாக்கில் -வென்று
    முழங்கிடும் வீரத்தில், வேதாந்த மூச்சில்
    புழங்கிடும் பொமகள் பேச்சு….(39)

    யாப்பலங் காரத்தில் ,காப்புக் கவிதையில்
    மூப்புணர்ந்தோர் போக்கின் முதிர்ச்சியில் -நாப்பிளக்கப்
    பொய்பேசா நாவில், புறங்கூறா புத்தியில்
    தைபூசத் தான்மாமி தேசு….(40)

    ஏரோட்டி வேர்வையை, ஏமாந்த காதலால்
    நீரோட் டமான நினைவுகளை -போராட்ட
    ஊழியன் கூலி உயர்விழந்த துக்கத்தை
    தோழியாய் பொற்கை துடைப்பு….(41)

    பலியின் தலைவைத்துப் பாதாளம் பாய்ந்து
    கலிதீர்த்தக் காலிலிவள் காசாய் -ஒளிந்திருந்தாள்.
    பாதாளம் பாயும் பணமென்று சொன்னதன்
    ஆ!தாரம் அன்றோ அவள்….(or)
    ஆ!தாரம் அன்னை அருள்….(42)

    பரம்பொரு ளாதாரப் பொன்மகள் பார்வை
    தரம்தரும்சே தாரம் தவிர்த்து -வரம்தரும்
    செய்கூலி பக்திக்கு. செய்யவளால் உன்பணப்
    பைகாலி ஆகாது பார்….(43)

    “பணப்பை அரவம் படுத்த பொருளை 
     கணத்தும் பிரியாத கஞ்ச -மனத்தாளே,
     ஓரக்கண்ணால் என்னை ஒருமுறை பார்த்தெனக்கு
     சேரச்செய் செல்வச் செழிப்பு”….(44)

     வாளாழி வெண்சங்கு வில்லும் கதாயுதமும்
     தோளாலும் தர்மத் தலைவனை -பாலாழி
     தோன்றிய பொன்மகள் தேர்ந்தெடுத்தக் காரணத்தால்
     மூன்றிலவன் ஆனான் முதல்….(45)

    “பாக்கள் புனைந்திடுதல் பாரதியே ஆனாலும்
     வாக்கில் பொருளாக வந்தமர்ந்து -ஆக்குவள்
     ஆசுகவி தம்மை அகிலத்தில் செல்வந்த 
     காசுகவி யாய்பார் கவி”….(46)

    “கருவளர் பிள்ளையை காத்தவன் மார்பில் 
     மருவத்  ஸமாக  மிளிரும் -திருவளர்
     கண்தானம் கொண்டதோர் காளைக்கும் வாய்த்திடும் 
     சந்தான செல்வச் சிறப்பு”….(47)

    “கற்காத பேருக்கும் கோழைக் குமருளை
      துர்க்கா சரஸ்வதியர் தாரார்கள் -தர்காதி 
      தர்கத்தை விட்டுநீ தாமசமாய் நின்றாலும் 
      நற்காவல் பொன்மகள் நட்பு”….(48)

    “சீதையாய் ராமன்பின் சென்றளித் தாள்ஜெயத்தை 
     கோதையாய் கோவிந்தன் கைப்பிடித்தாள்-ராதை 
     யாகி ரசித்தாள் யதுகுலக் கண்ணனை 
     பாகிமாம் பாதாம் புஜம்”….(49)

    “பிருகு குலத்தில் பிறந்த திருவே 
      உருகும் அடியார்க் (கு ) உதவ -பெருகும் 
      அறம்பொருள் இன்பம் அளிப்போய் , எனக்கு 
      வரம்தரவா வீட்டுக்குள் வீடு”….(50)

    “சிங்கம் அரியா சனத்து மடியமர்ந்து 
      பொங்கும் அவன்வெகுளி போக்கினோய் -தங்க
      வதனத்து தாயே வரவேண்டும்  மாலற்
      புதனோடு பொன் சேர்ந்தாற் போல்….(51)

     “வைகுண்ட வாசல் விளக்கேற்றும் பொன்ஒளியே ,
     பைகொண்ட பாற்கடல் பாம்பணைதோன் -மெய்கொண்ட ,
     ஐவர்க்காய் அன்று அலைந்த களைப்பகல
     கைவைத்துத் தீர்ப்போளே காப்பு”….(52)

     வீரென்று காற்று வீசப் பொழிந்திடும்
     நீருண்ட மேகம் நிகர்த்தது; -சோறுண்டு
     நாளான சோகத்தை நீக்கிடும் நாரணனை
     தாலாட்டும் தாய்விழிகள் தான்….(53)

    “புத்தி பலம்வீரம் பொன்புகழ் பேருனை
      சுத்தி வலம்வரும் செல்விபதம் -ஒத்தி 
      விழிநீர் அபிஷேகம் வார்த்திட பக்தி 
      வழிகூறும் முக்தி வரை”….(54)

    பொன்மகள் வந்தாள் (OR ) திரு விளையாடல்….
    “வேதம் படித்தென்ன , வேதாந்தம் கற்றென்ன 
      சீதரன் பாதம் சொடுக்கெடுப்போள் -பாதம் 
      பணிந்திடு மானுடா, பாரதன்பின் உன்னுள் 
      கனிந்திடும் காண்முத்திக் காய்”….(55)

    “கற்பை நெருப்பிலிட்ட காகுத்தன் சோதனையில் 
     பொற்பூ புகுந்தெழுந்தாள் பூரணமாய் -அற்ப 
     இராவணன் தீவெரிய இட்டனள் தீயை;
     இராகவன் தூதன் எரிப்பு”….(56)

    “ஆடி வெள்ளியில் தேடிவரும் தங்கமுனை 
     மூடி  உறங்காதே முன்கதவை -ஏடி !
     எழுந்தேலோ ரெம்பாவாய் ,எம்பிரான் பள்ளி 
     விழுந்தாளை வாழ்த்தி வணங்கு”….(57)

    “நற்கா ரியப்பயன் , நான்மறை நுண்பொருள் 
     பொற்கம லம்வீற்ற பேரெழில் -நற்குணங்கள் 
     பூண்ட நிறைவு , பராசக் தியினம்சம் 
     வேண்டும் அடியார் வரம்”….(58)

    “குமுத வதனம் ,கடல்கடைந்து வந்த 
      அமுத வளர்மதி அக்காள் -துமிதம் 
      தெறித்திடும் பாற்கடலில் தூங்கும் பெருமாள் 
      வரித்திடும் செல்வியை வாழ்த்து”….(59)

    “சாரங்கன் வில்லுக்கு சக்தி அளித்திடும் 
     கூரம்புக் கண்களைக் கொண்டவளே , -ஓரங்கை
     பங்கஜம் ஏந்தமறு பொற்கரத்தால் பாலிக்கும் 
     அங்குசம்நீ ஆனைநான் ஆள்”….(60)

    “முனிபிருகு வாரிசே மூவா முகுந்தன் 
      பணிகாத்தல் பக்க பலமே -அணிபொற்
      சரமே அவன்மார் சரோஜமே தாமோ
      தரனுகக்கும் தாயே  துதிப்பு  “….(61)

    “கண்பறிக்கும் காந்தி , கமல முகம்கண்கள் ,
     விண்பரப்பில் எண்திசையாய் வீற்றிருந்து -மண்பிறப்பை 
     நோக்கி இயக்குவாள், நந்த குமாரனை 
     ஏக்கமுற வைக்கும் எழில்”….(62)

    ’’பொறிகளுக்கு எட்டாத போகமே, ஞான
     வரிகளுக்(கு) உட்பட்ட வாக்கே -தறிகளுக்கு
     ஈடான வேகத்தில் இற்றிடாத நூலாகத்
     தேடும் ரமணஎளி தே’’….(63)

    “வாள்எதிர்த்தால் நந்தகி , வில்எதிர்த்தால் சாரங்கி 
     ஆள்எதிர்த்தால் வெண்சங்கு ஆழிவட்டம் -கோள்எதிர்த்தால்
     கால்எதிர்த்த கூற்றனின் மேலுதைத்த வீரதுர்க்கா
     நூல்எதிர்த்தால் வாணிஅவள் நா”….(64)

    “பேராசை பின்சென்று போனால் பெருநஷ்டம் 
     பாரீசன் போனானே பத்தினியால்- மாரீச 
     மானென் (று) அறிந்தும் மயர்வுற்ற ராமனைத் 
     தானன்று சோதனைசெய் தாள்”….(65)

    “சாரங்கன் வில்லுக்கு சக்தி அளித்திடும் 
     கூரம்புக் கண்களைக் கொண்டவளே , -ஓரங்கை
     பங்கஜம் ஏந்தமறு பொற்கரத்தால் பாலிக்கும் 
     அங்குசம்நீ ஆனைநான் ஆள்”….(66)

    “சிலையை வளைக்கவந்த ஸ்ரீராமன் ,செம்பொன் 
     சிலையான சீதையால் சொக்கி -சிலையாகி ,
     மற்றவர் வாய்ப்பை மறந்திட , கைவில்லை
     இற்றிட வைத்தாள் இவள்”….(67)

    “தரித்திரமாய் வந்தாடும் தாண்டவக் கோனை
     உருத்தெரியா வண்ணம் ஒசித்து -சரித்திரமாய் 
     செய்தெதிர் காலத்தை சீரும் சிறப்புமாய் 
     பெய்தா தரித்தளிப்பாள் பொன்”….(68)

    “கோதையாய் ,கோகுலக் கூட்டத்து தாதியாய்,
      ராதையாய் வந்தவனை ரட்சித்தோள் -கீதையாய் 
      வாக்கில் புகுந்துவந்த பாக்கிய லஷ்மியே 
      காக்கும் கடவுளுக்கு காப்பு….(OR )
      காக்கும் திருமஞ்சக் காப்பு”….(70)

    ’’ ஏறுக்கு மாறான நூறுக்கு தோல்விதர
       பாருக்கு வந்தபளு போக்கிட, -போருக்குக்
      காரண பாஞ்சாலி கூந்தல் விரிப்பிருந்து
      நாரணர்க்கு செய்தாள் நலம்’’….(OR)
      நாரணர்க்கு தோள்கொடுத்த நட்பு’’….(71)

    “பொன்னாத்தா, தாமரைப் பூவாத்தா, தாங்கிடும் 
     மண்ணாத்தா, பின்வந்த சின்னாத்தா, -பண்ணாத்தான்,
     நன்னாத்தான் பாடிய, நாச்சியார் காதலுக்கு 
     கண்ணாத்தா வாயிருந்து காப்பு”….(72)

    “ஊடலில் பாற்கடலை உக்கிரமாய் பொங்கவைத்து 
     தேடலில்மால் வாட,  திருவிளை -ஆடலாய்,
     ஆடிவரும் தங்கமிவள் அக்காள் நிலத்தடியில் 
     ஓடிக் கரியாய் ஒளிவு”….(73)

    “பாலுக்(கு) அழும்சேய்க்கு பார்வதியால் ஞானம் 
     கோலக் கவிக்கு கலைவாணி -சேலைத்
     தலைப்பிட்டு செல்வத்தை தாமரையாள் தந்து 
     இலைமேல்நீர் பற்றை இடும்”….(74)

    “ஆர்த்த கடலில் அரிமால் அவதாரப்
     பூர்த்தி  வரையில் பொறுமையாய் -காத்துக் 
     கிடக்கும் திருமகளே காக்கும் கடவுள் 
     எடக்கு மடக்கல்ல ஈது”….(75)

    “அகலாது கல்லில் அடைந்து கிடந்த 
      அகலிகை மீண்டாள், அதனை -உகந்தது,
      ஏகபதி நோன்பிருந்து ஏத்திய தாலன்றோ
      ராகவன் பாத ரசம்”….(76)

    “வண்ணான் சொல்ல வரித்த மனையிவளை
     சொன்னான் வனத்திற்கு செல்லென்று -பின்னாளில் 
     தந்தை கதைசொல்ல தந்தாள் இருபிள்ளை 
     விந்தை இவள்செய் விதி”….(77)

    அண்ணலும்  நோக்கினான், அன்னையும்  நோக்கினாள்
    அண்ணலவன்  நோக்கம்  அவதாரம் -அன்னையவள்
    நோக்கமோ அக்காள்  நிலமடந்தை மாந்தரை
    காக்கும் கருணை குணம்….(78)

    “குத்திய காகத்தைக் குத்திய காகுத்தன் 
     பத்தினி தெய்வத்தைப் போற்றிடுவோம் -இத்தரையில் 
     இன்னல் வருங்கால் இவளைத் துதித்திட 
     அண்ணல் அபயம் அளிப்பு”….(79)

    ’’தீதண்டும்  வேளை, திருக்கரம்  ஏந்திடும்
      கோதண்ட  ராமன்  கரம்பிடித்த -மாதண்டி(மாதை  அண்டி)
      வாழப்  பழகிடு , ஆழ்நிலை  யோகத்தில்
      ஏழைக்  குசேலா எழு’’….(80)

    “ஏழுமலைக்(கு ) ஏதிந்த ஏற்றம் எனப்பார்த்தால் 
     கீழ்அமர்ந்த வல்லியிரு கைகளால் -ஊழ்அழுந்த 
     வந்தவரை கேள்வனின் வட்டிக் கடன்தீர்க்க 
     உந்துகிறாள் உண்டியலுக் குள்”….(81)

    ’’வள்ளென்று  பேசாதே, தள்ளென்று  கூறாதே
      உள்ளொன்று  வைத்து  உரைக்காதே -கொல்லென்று
     பூத்த கமலத்தாள் , பொல்லாத  வர்களுக்கு
     ஏத்த வளல்ல எதிர்’’….(82)

    “எட்டுவகை செல்வங்கள் ,எட்டு வகைசுகங்கள் 
     கிட்டும் அவள்கடைக் கண்ணொன்று -பட்டால்;
     முராரி சகியால் முகாரி இசைக்கும் 
     பராரிக்கும் வாழ்வில் பொருள்”….(83)

    “வாழ்வில் பொருளிருந்தும் வாழ்வின் பொருளறியா 
     தாழ்வில் புகமறுப்பாள் தங்கமகள் -ஊழ்வினை 
     தந்த பொருளைத் திரும்ப எடுத்தழிப்பாள்
     சிந்தையின் செல்வச் செறுக்கு”….(84)

    குறுக்குவழி சென்று குவித்த பணத்தால்
    செறுக்கு மரச்சரிவில் செல்லும், -கிறுக்குத்
    தனம்பித்தம், செல்வி திருத்தாள் துதிக்கும்
    மனம்தான்பொன் செய்யும் மருந்து….(85)

    “வெண்பட் டுடுத்திப்பூ   வெண்மல்லித் தார்சூடி 
     மென்பட்டுத் தாமரை மீதிருந்து -கண்கொட்டா 
     ஞானியர் காட்சியே , நாணமுறக் கண்ணளிப்பாய்
     ஆணில் உயர்ந்த அரிக்கு”….(86)

    “எட்டுதிக்கு யானைகள் ஏந்திவரும் கங்கையால் 
     அட்டமா   லஷ்மிக் (கு ) அபிஷேகம் -கட்டுக்(கு)
     அடங்கா கடலரசன் ஆருயிர் பெண்ணே 
     தடந்தோள் மாலனமு தே”….(87)

    “வீரத் துணிச்சலை (தைரியம் ), வெற்றிக் கனிச்சுவையை ( விஜயம் )
     ஈரப் பசைநெஞ்சுக்(கு) ஈகையை (தனம் )-சேரும்
     மனைமக்கள்(சந்தானம்) வித்தை(வித்யா) முளைக்கதிர்(தான்யம்), எட்டு 
     முனையானை(அஷ்ட திக் கஜங்கள்) ஆதி முடிப்பு”….(88)

    “வாரிசம் ஓர்கையில், வெண்குடை ஓர்கையில்
      ஆறுதல் கூட்டும் அபயத்தை-வேறிரு 
      அங்கைகள் தாங்கிடும் ஆதி இலக்குமி
      பங்கயத் தாளைப் பணி”….(89)

    “அம்புஜஅங் கைகள் அபயவரம் முத்திரையில் 
     அம்புஜம் ஏந்தும் அடுத்தயிரு-அம்புஜங்கள்,
     வெண்பட் டுடுத்துமைஸ்  வர்ய இலக்குமியை 
     பொன்கொட்ட வேண்டிப் பணி”….(90)

    “ஆறில் அபயம் அளித்திடப்பொன் , ஐந்தில்விண்
     சோறமுதம், வில்லம்பு , சங்காழி -வாரிசத்தை 
     தாங்கும்செம் பட்டு  தனலஷ்மி தேவியை 
     பாங்குற ஏத்திப் பணி”….(91)

    “கன்னல் ,இரண்டு கமலம் ,கதைகதலி 
     செந்நெல் ,அபயவரம் சாதிப்பாள்-தன்எண்கை 
     தாங்கிபச் சையணிந்த தான்ய இலக்குமியை 
     பாங்கிஎன எண்ணிப் பணி”….(92)

    “கஜங்கள் குளிர்விக்க ,கையம் புஜங்கள் 
     நிஜம்கொள் அபயவரம், நீள்அம்-புஜங்கள் 
     தரிக்கப்பச் சையணிந்த தாய்கஜ லஷ்மி 
     பரத்தினும் மேலாம் பணி”…(93)

    “இடையில் குழந்தை இரண்டிளநீர் கும்பம் 
     படைவாளும் கேடயமும் பற்றி -அடையாள 
     சேய்அபயம் காண்பிக்கும் சந்தான லஷ்மியை 
     போய்அபலை ஆகப் பணி….(OR )
     போய்சுபம் காணப் பணி”….(94)

    ’’வரிசங்கு, வீச்சாழி, வில்லம்பு, சூலம்
      வரஅபயம், புத்தகம், வீற்றெண் -கரத்தாள்,
      வறுமை சிவப்பணிந்த வீர இலக்குமியை
      பெருமையாய் சென்று பணி’’….(95)

    “பாசம்,வெண் சங்கு, படைதிகிரி, கேடயம் 
     வீசும்வாள், வாஞ்சை வரஅபயம்-பூசும்
     திலகநிறக் கூறையாள் திக்விஜய லஷ்மியை 
     புளகநீ ராட்டிப் பணி”….(96)

    “பூனைக்குப் போய்மணி பூட்டிய கர்வத்தில் 
    ஆனைக்கு லாடம் அடித்தேனே  ! -மோனை 
     எதுகை வரக்கண்(டு) எழுதப் புகுந்தேன் 
     பதுமையே கொள்ளென் பழுது”….(97)

    “திருமஞ் ஜனக்காப்பே, தீயிட்ட போதும் 
     கருமை யுறாதங்கக் காப்பே, -திருமகளே,
     பாதுகை இல்லாத போதும்மால் பாதகாப்பே,
     கோதுகைவெண் பாபாது   காப்பு”….(98)

    “மாவீரன் பாரதியின் மேதமை  இல்லாது 
      தீவிரலைத் தீண்டினால் தீய்ந்திடுமே! -பூவீற்ற,
      தொட்டால் தகதகக்கும் தங்கமுந்தன் கண்பார்வை 
      பட்டால் துலங்குமென் பா”….(99)

             (OR)
    “மாவீரன் பாரதியின் மேதமை  இல்லாது 
      தீவிரலைத் தீண்டினால் தீய்ந்திடுமே! -பூவீற்ற,
      பட்டால் தகதகக்கும் பொன்மக ளுன்பார்வை
      தொட்டால் துலங்கும்  தமிழ்”….(99)

    “ஈர துணியால் இறுக முடிந்துபசி 
     ஆற முடிக்கும் அரும்பணியில் -வீரத் 
     திருமகள் சேர்ந்தெட்டு  தோள்கொடுத்து, வானக் 
     கருமுகிலாய் தீர்ப்பாள் கலி”….(100)

    “வாடும் பயிர்கண்டு வாடிய வள்ளலார் 
     தேடும் அருட்ஜோதி தெய்வத்தை -நாடி 
     அழைத்த வருக்குமுன்பு ஆதிலஷ்மி சேர்த்து,
     செழித்திடப் பெய்வாள் செடிக்கு”….(101)

    “தாத்தாக்கை கோர்த்து தெருத்தெருவாய் சென்றன்று 
     சேர்த்தாள் தமிழின் சுவடிகளை -ஆத்தாவால்
     ஐம்பெருங் காப்பியத்தை ஐஸ்வர்ய மாய்பெற்றோம்,
     பைம்பொழில்வாழ் பங்கஜத்தைப் போற்று”….(102)

    “கொள்ளை அடிக்கவந்த கும்பினிக் காரனைக் 
      ‘வெள்ளையனே போவெளியே’ விண்டுரைத்த -பிள்ளை
       மகான் சுதந்திரத்தை மீட்டபோது, இட்ட 
       லகான்விஜய லஷ்மியின்லீ லை”….(103)

    ’’மூப்பினை  ஏற்றதிய  மானளித்த  நெல்லியை
     சாப்பிடாது  சென்றாள்  சாவெதிர்த்து -தோப்பில்
     தனிமரமாம்  அவ்வையை,  தைரிய  லஷ்மி
     பனிமலைஈ  சன்பால்வைப்  பு’’….(104)

    ’’ஏழை  இருபத்தி  ஏழை  பிரசவித்து
      பாழும்  வறுமையால்  பாடுற -தோழனுக்கு
      கண்ணன்சம்  பத்தைக்  கொடுத்திட  வைத்தது
      அன்னைசந்  தானலஷ்மி அன்பு’’….(105)

    “அச்சம் தவிர்த்திடும் , ஆண்மை பெருக்கிடும் 
     உச்சப் புகழில் உலவவிடும் -பச்சைமால் 
     இச்சைக் (கு) உரிய இகபர தேவதையே 
     பிச்சையிடு ஞானப் பிடிப்பு”….(106)

    “அம்பிகை பொன்மகளை ஆரா தனைசெய்து 
     நம்பினோர் கெட்டதில்லை நானிலத்தில் -சொம்பிலே 
     தேங்காய் மாவிலை தண்ணிள நீர்வைத்து 
     பாங்காய் இவளைப் பணி”….(107)

    ’’வேதம்  வளையல்,  விளக்கும்  உபநிடதம்
      பாதச்  சதங்கை,  புராணங்கள் -காதணி,
      கோதை  திருப்பாவை  கொண்டாள் புடவையாய்,
      பேதையென்  பாபாதப்  பூ’’….(108)

    வாயார வாழ்த்து வடவேங் கடன்நெஞ்சத்
    தாயாரை, பூவாழ் திருமகளை -ஓயாமல்
    அன்னை கடைக்கண் அனுக்கிரகம் கொண்டோர்முன்
    முன்னை வினைகள் முடம்…(109)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181008 – MaNigaNa Krishna -A4 wcol lr

    MONEYகன மால்சுதா மர்க்கன்று மாலை(மால்-செல்வத்தை)
    துணி(துணியில் முடிந்த)அவலுக்(கு) அளித்தவரே தாமு! -பிணிபிறவி
    தந்தாய் குசேலர் டவலாலென் கண்ணீரைத்
    தந்தையே வந்து துடை….கிரேசி மோகன்…..!

    Share