Tag: க.பாலசுப்பிரமணியன்

  • கற்றல்  ஒரு ஆற்றல் – 81

    க. பாலசுப்பிரமணியன்

    படிக்கும் முறைகளால் ஏற்படும் தாக்கங்கள்

    education-1-1-1

    “அம்மா, ரொம்ப சத்தம் போட்டு பேசாதீங்கம்மா .. இப்படி  எல்லோரும் சத்தம் போட்டு பேசினா நான்  எப்படிப் படிக்கிறது” என்று உங்கள் மகன் எப்பொழுதாவது சொல்லியதுண்டா?

    “டேய் .. இவ்வளவு கத்திப் படிக்காதேடா.. கொஞ்சம் மெதுவாகப் படி… மத்தவங்க எல்லாம் வீட்டிலே  இருப்பது  தெரியவில்லையா உனக்கு?” என்று வீட்டிலே தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சொன்னதைக் கேட்டதுண்டா?

    “என்னடா இப்படி சோபாவிலே படுத்துக்கொண்டு.. தலை ஒரு பக்கம் கால் ஒரு பக்கம், புத்தகம் ஒருபக்கம்.. நீ  படிக்கிறாயா இல்லை ஏதாவது ஆசனம் செய்கிறாயா?” என்று வீட்டிலே குழந்தைகளைப் பார்த்து பெரியவர்கள் சொன்னதைக் கேட்டதுண்டா?

    இதெல்லாம் குழந்தைகள் படிப்பதில் சில வகைகள்.. பொதுவாகப் பார்வைகள் சார்புடைய கற்றலின் ஆதிக்கம் அதிகமாக  உள்ளவர்கள் (visual learners) படிக்கும்போது

    1. புத்தகங்களின் மேல் வைத்த விழி வாங்காமல் பார்ததுக்கொண்டிருப்பார்கள்.
    2. அதிகமாக சத்தம் போட்டுப் படிக்க மாட்டார்கள்,
    3. ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்துடன் திரும்பப் படிக்கும் பழக்கமுடையவர்கள்.
    4. முக்கியமான கருத்துக்களை வெளிப்படுத்தும் வார்த்தைகளுக்கு அடிக்கோடு வைக்கும்  பழக்கமுடையவர்கள்.
    5. படிக்கும் நேரங்களில் இவர்களுக்கு கவனச் சிதைவு அதிகமாக ஏற்படுவதில்லை
    6. ஒரு புத்தகத்தைப் படிக்கும்பொழுது அதனுடன் சார்ந்த படங்கள் வரைவுகள் மற்றும் இணைந்த கருத்துக்கள் ஆகியவற்றைக் கூர்ந்து கவனிக்கும் பழக்கம் உடையவர்கள்.
    7. ஏதாவது ஒன்றைப் படித்ததும் அதை உடன் எழுதி பார்க்கும் பழக்கம் உடையவர்கள்
    8. வகுப்பறைகளில் மற்றும் படிக்கும் இடங்களில் யாரவது வந்து போனாலோ அல்லது ஏதாவது நிகழ்வுகள் மாற்றங்கள் நேர்ந்தாலோ அவைகளை உடன் கவனிக்கக் கூடியவர்கள்.
    9. பொதுவாக இவர்களுடைய புத்தகங்கள் மற்றும் இதர பொருள்கள் சுத்தமாகவும் ஒழுங்காகவும், பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய வகையிலும் வைத்திருப்பார்கள்.
    10. தாங்கள் படிக்கும் இடத்தையும் ஓரளவு சுத்தமாக வைத்திருக்கக்கூடிய பண்பு உடையவர்கள். படிக்கும் இடங்களில் உள்ள சித்திரங்கள் போட்டோக்கள் மற்றும் அலாகாரங்கள் இவர்களை மிகவும் கவருவதுண்டு.
    11. அதிகமான வண்ணப் பொருட்களை எழுதுவதற்கும் வரைவுகளுக்கும் உபயோகப்படுத்தும் ஆர்வம் உடையவர்கள்
    12. தங்களுடைய குறிப்புக்களை சிறிய படங்கள் அல்லது குறுக்கெழுத்துக்கள் மூலமாக எழுதி தக்க வைத்துக்கொள்ளும் பழக்கம் உடையவர்கள்
    13. இவர்கள் படிக்கும் வேகம் நிதானமாக  இருக்கும்.
    14. மொழி மற்றும் கலை சம்பந்தப்பட்ட பாடங்களில் விருப்பம் அதிகமாக இருக்க வாய்ப்புக்கள் உண்டு.
    15. பள்ளிகளில் chart மற்றும் படங்கள் வரைந்து தங்கள் வகுப்பறைகளை அலங்கரிப்பதில் ஆர்வம் உடையவர்கள் .
    16. வகுப்பறைகளில் ஆசிரியர்கள் சொல்வதை விட கரும்பலகைகளில் எழுதப்பட்டிருப்பதில் அதிக கவனத்தைச் செலுத்தக்கூடியவர்கள் .
    17. பாடங்களை கவனிக்கும் பொழுதும் படிக்கும் பொழுதும் மற்றவர்களின் இடைச்செருகல்களையோ அல்லது கேள்விகளையோ அதிகம் விரும்பாதவர்கள்
    18. பொதுவாக எழுதத்துப்பிழைகளின் (spelling) மீது கவனம் வைத்து அவற்றைத் தவிர்க்கும் ஆர்வம் உடையவர்கள்

    இதே போன்று செவியால் கிடைக்கும் உந்துதல்களால் கற்றுக்கொள்ளுபவர்கள் (Auditory Learners) படிக்கும்   முறைகளிலும்  சில தனித்தன்மைகள் இருக்கின்றதாக  அறியப்பட்டுள்ளது.

    1. பொதுவாக இவர்கள் அதிக சத்தம் இருக்கும் இடங்களிலோ அல்லது மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்கும் இடங்களின் நடுவிலோ அமர்ந்து படிக்கும் பழக்கம் உடையவர்கள்.
    2. இவர்கள் படிக்கும் பொழுது வெளியிலிருந்து வரும் சத்தங்களில் ஒலிகளில் தங்களை அடிக்கடி இழக்க வாய்ப்புக்கள் உண்டு.
    3. இவர்கள் வாய்விட்டு சத்தமாக படிக்கும் பழக்கம் உடையவர்கள்.
    4. இவர்கள் படிக்கும் பொழுது கவனச்சிதைவிற்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. அதனால் நினைவாற்றலிகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டு மறக்கக்கூடிய சந்தர்பங்கள் அதிகம் ஏற்படும்.
    5. பொதுவாக ஓரிடத்தில் அமர்ந்து படிக்க மாட்டார்கள்
    6. தாங்கள் படிப்பதை மற்றவர்கள் கேட்கவேண்டும் என்ற ஆர்வமும் அதிகம் இருக்கும்
    7. இவர்கள் தங்களுடைய புத்தகங்கள் மற்றும் இதர பொருட்களை அழகாகவும் ஒழுங்காகவும் வைத்துக்கொள்ளுதல் அரிது.
    8. சில நேரங்களில் காதில் பாட்டு கேட்டுக்கொண்டே படிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விடுவர்.
    9. பார்த்துபே படிப்பதை விட மற்றவர்களிடம் பேசி கலந்தாய்ந்து படிக்கும் பழக்கம் இருக்கும்.
    10. அலைபேசிகளில் மற்றவர்களுடன் அடிக்கடி பேசி தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்     பழக்கம் இருக்கும்
    11. படிக்கும் பொழுது இவர்கள் படங்கள், வரைவுகள் மற்றும் அதனைச் சார்ந்த குறிப்பேடுகளை அதிகமாக கவனிக்க மாட்டார்கள் .
    12. விடைத்தாள்களில் கேள்விகளுக்கான சரியான எண்களை தவற விடக்கூடியவர்கள்
    13. விடைகளை எழுதபொழுது அதை கோர்வையாக எழுத்தும் பழக்கம் குறைவாக இருக்கும்.
    14. வண்ணங்களைக் குறைவாக பயன்படுத்துவார்கள்.
    15. 15 கவனச்சிதைவின் காரணமாக முக்கிய குறிக்கோளிலிருந்து அதிகமாக விலகிப் போகும் வாய்ப்புடையவர்கள்.
    16. சில நேரங்களில் தங்களுக்கே புரியாத வண்ணம் வேகமாகப் படிக்கும் உள்ளுணர்வுக்கு அடிமையாகி விடுவார்கள்.
    17. இதில் பெரும்பாலானவர்கள் கணக்கு சம்பந்தப்பட்ட பாடங்களில் அதிக ஆர்வம் இல்லாதவர்கள்.
    18. பாட்டு, கதைகள், நாடகங்கள் ஆகியவற்றை அதிகமாகபே படிக்கவும் அவை சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்றுக்கொள்வதிலும் ஆர்வம் உடையவர்கள்.

    தொடர்ந்து மற்ற முறைகலில்  படிப்பவர்களின் ஆற்றல்களைப் பற்றி கவனிப்போம்

    (தொடரும்)

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (11)

    க. பாலசுப்பிரமணியன்

    ஆசையில் அலைபாயும் மனம்

    திருமூலர்-1

    மண்ணாசை எவ்வளவு ஒரு மனிதனைக் கெடுத்து அவனுடைய உண்மையான சுதந்திரத்தை பறித்துக் கொள்ளுகிறதோ, அதுபோல் பெண்ணாசையும் அவனை அழிவின் எல்லைக்குக் கொண்டு சென்று விடுகின்றது. ஒரு மனிதனுடைய உணர்வுகளுக்கு அவனை அடிமையாக்கி கண்ட இடத்தில் எல்லாம் காமத்தைத்  உண்டாக்கி  ஒரு மிருகமாக அவனை ஆக்கி விடுகின்றது. ஒரு பெண்ணைத் தாய்மையின் வடிவாகவும் வாழ்க்கைத துணையாகவும் பார்க்க மறுக்கும் மனம் அதை ஒரு போதைப் பொருளாக நினைத்து தன் வாழ்வின் குறிக்கோளைத் தொலைத்து விடுகின்றது.

    தன் மனைவி ரத்னாவளியிடம் அளவற்ற அன்புகொண்ட துளசிதாஸ் அவளைப் பிரியமுடியாமல் தவித்தார். ஒரு முறை மனைவியால் ஒதுக்கப்பட்ட அவர் , “இந்த அன்பை நீங்கள் ராமனிடம் காட்டக்கூடாதா” என சொல்லிக்கேட்க ராமபிரானின் அடிமையாக அவனைத் துதித்தே தன் வாழ்வினைக் கழித்தார்.

    பட்டினத்தாரைப் பற்றியோ சொல்லவேண்டிய அவசியமே இல்லை. வாழ்க்கையில் போகத்தில் தன்னையே இழந்த அவருக்கு ஞானம் கிடைத்தவுடன் வாழ்க்கைப் பாதையில் மாற்றம் கண்டார்.

    சிற்றம்பலமும் சிவனும் அருகிருக்க

    வெற்றம்பலம் தேடி விட்டோமே – நித்தம்

    பிறந்த இடம் தேடுதே பேதைமட நெஞ்சம்

    கறந்த இடம் காணுதே.

    என வருந்தினார்

    இதே போன்று பத்ரகிரி சுவாமிகளும் புலம்புகின்றார்

    கால்காட்டி  கைகாட்டி கண்கள் முகம் காட்டி

    மால்காட்டும் மங்கையரை மறந்திருப்ப தெக்காலம்? .

    ஒவ்வொரு பூவிலும் தேனைத் தேடும் வண்டு போல் மானிட மனம் சுகம் தேடி அலைகின்றது. தன் மனைவியை விட்டொழிந்து மற்ற பெண்களிடம் சுகம் நாடும் மானுடரை திருமூலர் இவ்வாறு சாடுகின்றார்:

    ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே

    காத்த மனையாளைக் காமுறுங் காளையர்

    காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்

    ஈச்சம்பழத்துக் கிடருற்றவாறே.

    இப்படிப்பட்ட மனிதருடைய மனம் ஒரு போதைக்கு அடிமையானவன் எவ்வாறு அதிலிருந்து வெளிவரக் கஷ்டப்படுவானோ அதுபோல் துயறுருவான் எனக் கூறுகின்றார்

    “மருள் கொண்ட மாதர் மயலுறு வார்கள்

    மருள் கொண்ட சிந்தையை மாற்ற தில்லாறே..”

    காட்டாறு போன்று நம்மை அடித்துச் செல்லும் இந்த ஆசைப் போராட்டத்திலிருந்து நம்மை நாம் எப்படி காத்துக்கொள்வது? அது முடியக்கூடிய செயலா?

    மனிதர்களின் இந்த துயர நிலையைக் கண்ட தாயுமானவ சுவாமிகள் பாடுகின்றார்:

    ஆசை என்னும் பெரும்காற்றூடு இலவம் பஞ்சு

    எனவும் மனது அலையும் காலம்

    மோசம் வரும்; இதனாலே கற்றதும்கேட்

    டதும்தூர்ந்து. முக்திக்கு ஆன

    நேசமும்நல் வாசமும் போய்ப் புலனாய் இல்

    கொடுமை பற்றி நிற்பர்; அந்தோ

    தேகபழுத்த அருள்பழுத்த பராபரமே !

    நிராசை இன்றெனில் தெய்வம் உண்டோ?

    ஆனால் ஆசையை நம்மால் அடக்க முடியுமோ? அமரர்களுக்குக் கூட அது மிகவும் கடினமான செயல் என்பதை சுட்டிக்காட்டும் திருமூலர் கூறுவதென்ன?

    அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார்

    அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை

    திருமூலரின் ஒவ்வொரு பாடலும் மனித வாழ்க்கையின் நெறிமுறைகளுக்கு ஒரு ஒளிவிளக்காகத் திகழ்கின்றது.

    தொடரும்

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 80

    க. பாலசுப்பிரமணியன்

    படிக்கும் முறைகள் – சில கருத்துக்கள்

    education-1-1-1

    படிப்பது என்பது ஒரு திறமையான ஆற்றல். அது ஒரு தனி மனிதனுக்கும் ஒரு சில கருத்துக்களுக்கும் அல்லது ஒரு தனி மனிதனுக்கும் ஒரு படைப்பாளிக்கும் இடையே நடக்கின்ற ஒரு உரையாடல், ஒரு சந்திப்பு, மறைமுகமான நேர்முகம்..

    ஆகவே படித்தலை நாம் ஒரு விளையாட்டான செயலாகக் கருதாமல்  வாழ்விற்குத் தேவையான முற்போக்கான செயலாகக் கருத வேண்டும். படிப்பதற்கென்று சில விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் குறிப்பாக மாணவர்கள் படிக்கும் பொழுது பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகளைக் கல்வி ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.

    அவற்றில் சில:

    1. படிக்கும் பொழுது ஒரு நல்ல மனநிலையுடன் படிக்கத்தொடங்க வேண்டும் வேண்டா வெறுப்பாக ஒரு புத்தகத்தை படிப்பதை விட படிக்காமல் இருப்பதே சிறந்தது.
    2. படிக்கும் பொழுது நேராக அமர்தல் அவசியம். பல நேரங்களில் மருத்துவர்கள் குழந்தைகளின் முதுகு தோள்பட்டை போன்ற இடங்களில் வளைவும் வலியும் ஏற்படுவதற்கு அவர்கள் படிக்கும் பொழுது அமர்கின்ற அல்லது பின்பற்றுகின்ற உடல் பாங்குகளைக் காரணமாக் கருதுகின்றனர்.
    3. படிக்க அமர்கின்ற இடம் சுத்தமாகவும் அமைதி நிறைந்ததாகவும் இருத்தல் அவசியம். சுத்தமில்லாத இடத்தில படிக்கும் பொழுது அதன் தாக்கம் படிப்பின் நேரம், தரம் ஆகியவற்றில் ஏற்படுகின்றது.
    4. படிக்க ஆரம்பிக்கும் முன் சிந்தனைகளை அலையவிடும் கருத்துக்களையோ அல்லது காட்சிகளைத் தவிர்த்தல் மிக்க அவசியம். சண்டைகள், தகராறுகள் குழப்பங்கள் மற்றும் துயரங்கள் நிறைந்த இடங்களில் அமர்ந்து படிப்பதைத் தவிர்க்க வேண்டும்
    5. படிக்கத் தேர்ந்தெடுக்கும் இடம் அமைதியானதாக இருத்தல் அவசியம். தொலைகாட்சி கணினி, அலைபேசிகள் ஆகியவற்றை படிக்கும் நேரங்களில் தவிர்த்தல் மிக்க அவசியம்.
    6. படிக்கின்ற இடத்தில் போதிய அளவு வெளிச்சம் இருத்தல் நன்று. குறைந்த ஒளி இருக்கும் இடங்களில் படித்தல் கண்சோர்வு, மனச்சோர்வு ஆர்வக்குறைவு ஆகியவை ஏற்படுவதன் காரணத்தால் பயனற்ற படிப்பாக மாறிவிட வாய்ப்புக்கள் உண்டு
    7. படிக்கும் பொழுது புத்தகத்தின் மேல் நல்ல முறையில் ஒளி விழுமாறு வைத்துக்கொள்ளுதல் அவசியம். தவறான முறைகளால் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு.
    8. புத்தகத்திற்கும் கண்களுக்கும் இடையிலான தூரம் சரியாக இருத்தல் அவசியம். இது விழித்திரையின் நலத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.
    9. சோர்வுடைய கண்களுடனும் சோர்வடைந்த மனதுடனும் வலுக்கட்டாயமாகப் படிப்பதை தவிர்க்க வேண்டும்.
    10. படிக்கும் நேரத்தில் அவசியமானவற்றை குறிப்பாக எழுதிக்கொள்ளுதல் ஒரு நல்ல பழக்கமாக வளரும். பிற்காலத்தில் இது நமது நிரந்தர நினைவுகளை பாதுகாப்பதற்கு ஏதுவாக அமையும்.

    படிக்கும் நேரத்தில் கவனச் சிதறல் என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படும் ஒரு நிகழ்வு. இதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளுதல் அவசியம். மூளை நரம்பியல் நிபுணர்கள் படிக்கும் பொழுது மூளையில் ஏற்படும் மாற்றங்களையும் நிகழ்வுகளையும் பல பரிசோதனைகள் மூலமாகவும் ஆரய்ச்சிகள் மூலமாகவும் கண்டறிந்துள்ளனர். படிக்கும் பொழுது வலது இடது மூளைகளில்  ஏற்படும் தாக்கங்கள் மாறுபட்டதாக இருந்தாலும் அவைகள் ஒருங்கிணைந்து செயல் பட விழைகின்றன. உதாரணமாக கணிதத்தை ஒரு மணி நேரமோ அல்லது ஒன்றரை மணி நேரமோ படித்தபின் மூளை சோர்வடைகின்றது.  ஆனால் இதன் தாக்கம் இடது மூளை மேல் அதிகம் இருப்பதால் தொடர்ந்து கணிதம் போன்ற இடது மூளை சார்பற்ற கருத்துக்களை படிக்கும்பொழுது (உதாரணமாக மொழிகள், சமூகவியல், கலை சார்ந்த புத்தகங்கள்) வலது மூளை தொடர்ந்து சுறுசுறுப்பாக வேலை பார்ப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே மாணவர்கள் படிக்கும் பொழுது ஒரு கால கட்டத்திற்குப் பின் தாங்கள் படிக்கும் புத்தகங்களையும் விஷயங்களையும் மாற்றிமாற்றி அமைத்தல் நல்ல பயன் தரும்.

    படிக்கும்பொழுது அதிக வேகமாகவோ அல்லது மிகக் குறைந்த வேகத்திலோ படிக்கக் கூடாது. இதனால் சரியான பலன்கள் கிடைப்பதில்லை. படிக்கும் வேகம் ஒரு மாணவனின் அல்லது படிப்பவரின் மன நிலைகளுக்குத் தகுந்தவாறு அமைகின்றது. பொதுவாக ஒரு கதையையோ அல்லது நாடகத்தையோ படிக்கும் வேகத்தில் நாம் பொதுவான இலக்கிய உரைகளையோ அல்லது கவிதையையோ படிப்பதில்லை.  அப்படி படித்தால் அதன் உள்நோக்கம் சரியாக இருக்காது.  படிக்கும் பொழுது அந்த விசயத்தின் கருத்துக்கள் மனதில் பதிவதற்கான நேரங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபட்டிருக்கும். உதாரணமாக, கவிதையில் ஆர்வம் உள்ளவர்கள் அதை படிக்கும் பொழுது அதற்குத் தகுந்த உணர்வுகளை உள்நிறுத்தி படித்திடுவர். ஆனால் அதில் ஆர்வம் இல்லாதவர்கள் அதை ஏதோ ஒரு உரைநடையை படிப்பது போல் படித்திடுவர் ஆகவே படித்தல் என்ற செயல் ஒரு தனி நபரின் தனிப்பட்ட செயலாக அமைகின்றது. இதற்கான நல்ல பண்புகளையும் பழக்க வழக்கங்களையும் சிறிய வயதிலிருந்தே  வளர்த்தல் அவசியம்.

    ஒரு தந்தை தன் மகனிடம் “எனக்கு நல்ல தூக்கம் வர வேண்டுமென்றால் ஒரு புத்தகத்தை எடுத்தால் போதும்” என்று சொல்லுப்பொழுது அந்தச் சொற்கள் தன்னுடைய மகனின் உள்ளத்தில் எப்படிப்பட்ட கருத்தை உருவாக்கும் என்பதை பெரியோர்கள் சிந்தித்தல் அவசியம்.

    (தொடரும்)

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (10)

    க.பாலசுப்பிரமணியன்

    ஆசைகளின் வடிவங்கள்

    திருமூலர்-1

    மனிதனுடைய மனத்தில் எத்தனையோ வகையான ஆசைகள் பிறக்கின்றன. ஆனால் பெரியோர்கள் அவைகளிலே நம்மைப் பின்னித் துயரத்தில் தள்ளும் ஆசைகளை மூன்று வகையாகப் பிரித்திருக்கின்றனர். – மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று. இந்த மூன்றும் ஒரு மாயவலையில் சிக்க வைத்து அவன் மனத்தின் அமைதியை அறவே அழிக்கின்றன.

    ஓர் நண்பர் சென்னையிலே வீடுகள் பல வாங்கியிருந்தார். அவருடைய கடைசிக் காலத்தில் அவருக்குப்  பெரும் குழப்பம் – அவைகளை என்ன செய்வதென்று. அவர் செல்லும் “வீட்டிற்கு” இந்த வீடுகளை உடன் எடுத்துச் செல்ல முடியாத நிலை. இந்த மண்ணாசையால்  அவர் பெற்றது துன்பம் தான் – கடை நாட்களில் வீட்டுக்கும் கோர்ட்டுக்கும் அலைந்தே அவர் நிம்மதி அழிந்தது.

    மண்ணாசையில் மேலும் மேலும் நிலங்களையும் வீடுகளையும் வாங்கிவிட்டு முழிக்கின்றவர் எத்தனை பேர்!

    திருமூலர் சொல்கின்றார்

    ” மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது

    மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்

    மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்

    சென்றத்தா வென்னத் திரிந்திலன் தானே.

    மாட மாளிகைகளைக் கட்டிவிட்டு, பல்லக்கில் படுக்கைவிரித்து உறங்கி, பல பேர்களுக்கும் கோடிகோடியாகத் தானம் வழங்கினாலும், அவனுக்கு இறைவன் பெயரை நினைப்பதற்கு நேரம் இருப்பதில்லை.

    இந்தத் துயர மாயவலையிலிருந்து விடுபட வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்லும் பட்டினத்தார் கேட்கின்றார் :

    “ஆசையாய் பாசத் தகப்பட்டு மாயாமல்

    ஓசைமணித் தீபத்தி லொன்றி நிற்ப தெக்காலம்?”

    ஒரு முறை ஒரு பேராசைக்காரன் இறைவனிடம் வேண்டுகிறான் – கண்ணுக்கெட்டியவரை உள்ள பூமிக்கு அவன் சொந்தக்காரனாக வேண்டும் என்று.

    அவனுக்கு தரிசனம் கொடுத்த இறைவன் கூறுகிறார். “நீ இன்று காலை முதல் ஓடத் தொடங்கு. எவ்வளவு தூரம் உன்னால் சென்று மாலை கதிரவன் மறைவதுற்குள் இங்கு வருகின்றாயோ அவ்வளவு நிலமும் உனக்குச் சொந்தம்”.

    அவன் காலையில் ஓடத்தொடங்குகின்றான். மனம் இன்னும் கொஞ்ச தூரம் இன்னும் கொஞ்ச தூரம் என்று அவனை ஊக்குவிக்கிறது. மாலை மூன்று மணி அளவில் அவன் நினைக்கிறான் தன்னால் புறப்பட்ட இடத்திற்கு திரும்பிவிட முடியுமா என்று.!

    வேக வேகமாகத் திரும்பிகின்றான். ஓடுகிறான், ஓடுகிறான். .மூச்சு விட முடியாமல் கிழே விழுகின்றான். இறைவன் அவனுக்கு கொடுத்த வரத்தை அவனால் சரியாக உபயோகிக்க முடியவில்லை. இதுதான் நம்  வாழ்க்கையின் நிலையும்.

    தெளிவின்றி வாழ்க்கையை ஒரு ஒட்டப்பந்தயமாக நினைத்து ஓடுகின்ற பல மனிதர்கள் பின்பு மனம் வருந்தி “இதற்காகவா நாம் இப்படி ஓடினோம்? இவ்வாறெல்லாம் பாடுபட்டோம்?” என்று நினைத்து வாழ்க்கையில் விரக்தி அடைகின்றனர். இந்த நிலையை    அழகாக வர்ணிக்கின்றார் திருமூலர்:

    கரும்புந் தேனுங் கலந்ததோர் காயத்தில்

    அரும்புங் கந்தமு மாகிய ஆனந்தம்

    விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்

    கரும்புங் கைத்தது தேனும் புளித்ததே.

    ஐம்பொறியின் ஆசைகளுக்கு உணவிட்டு அடங்கிய நெஞ்சம் தன்னைத்தானே குறைகூறிக்கொள்கின்ற நேரம் வரும்பொழுது காலம் கடந்து விடுகின்றது. இந்த அறிவு நமக்கு முன்னமேயே வந்திருக்கக் கூடாதா என்றும் தோன்றுகின்றனது. அப்படிப்பட்ட ஒரு நெஞ்சின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார் பட்டினத்தார்:

    சந்தனமுங் குங்குமமுஞ் சாந்தும் பரிமளமும்

    விந்தைகளாய்ப் பூசிமிகு வேடிக்கை பொய்யாரக்

    கந்தமலர் சூடுகின்ற கன்னியருந் தாமிருக்க

    எந்தவகை போனாயென்  றெண்ணிலையே நெஞ்சமே 

    வாழ்வின் உண்மை நிலை பற்றி அவர் எவ்வாறு விளக்குகின்றார்?

    அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்

    மடக்கொடியாரோடு மத்தணங் கொண்டார்

    இடப்பக்கமே இறை நொந்தது என்றார்

    கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே!

    அநித்தியமான இந்த வாழ்வை நித்தியமாக நம்பி நாம் போற்றும் பொழுது இதன் நிலையற்ற தன்மையை நாம் மனத்தில் கொள்ளுதல் மிகவும் அவசியம்

    (தொடரும்)

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல்-79

    க. பாலசுப்பிரமணியன்

    “படித்தல்” – ஒரு விந்தையான செயல்

    education-1-1

    “படித்தல்” என்பது கற்றலுக்கு உரமிடும் ஒரு செயல். பல வகைகளில் கற்றல் நடந்தாலும் “படித்தல்” கற்றலை வளப்படுத்தவும் உறுதிப்படுத்தவும், கற்றலின் அடிப்படையில் புதிய சிந்தனைகளை சேகரிப்பதற்கும் தேவையான ஒரு ஆரோக்கியமான உள்ளீட்டு.

    “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
    கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

    என்பது வள்ளுவம்

    ” A Reader lives a thousand lives before he dies ” என்று ஒரு ஆங்கில மேதை கூறினார். ஒவ்வொரு முறையும் ஒருவர் புத்தகத்தைப் படிக்கும் பொழுது அவர்களுடைய உள்ளக்கதவுகள் திறக்கப்பட்டு அங்கே கருத்துக்களின் உணர்வுகளின் ஒரு திருவிழாவே நடக்கின்றது. படிக்கும் நேரங்களில் புத்தகங்களின் கதாபாத்திரங்களோடு ஒன்றி அவர்களுடைய அதே உணர்வு நிலையை அந்தப் பாத்திரங்கள் பகிர்ந்துகொள்ளும் பொழுது மனநிலைகள் பக்குவப்பட்டு சீரான மனநிலைக்கும் அத்தோடு சேர்ந்த அமைதிக்கும் வித்திடுகின்றது.

    ஆகவே “படித்தல்” என்பது கற்றலின் ஒரு முக்கிய பகுதி. “படித்தல்” என்ற செயலால் என்ன நன்மைகள் ஏற்படுகின்றன.?

    1. இது அறிதல் -புரிதல் என்ற இரு செயல்களுக்கு முன்னோடி.
    2. ‘படித்தலில்” புத்தகம் என்ற ஒரு ஊடகம் உப்யோகப்படுத்தப்படுவதால் ‘கற்றலுக்கு’ ஒரு ஆதாரமும் ஒரு வழிமுறையும் கிடைக்கின்றது.
    3. “படித்தலின்” பொழுது “பார்த்துப் படித்தல் “நினைவாற்றலை” வளப்படுத்த உதவுகின்றது
    4. மூளைக்குத் தேவையான “பொருளாக்கம்” “கருத்தாக்கம்” என்ற இரு முக்கிய செயல்களுக்கு “படித்தல்” மிகவும் ஏதுவாக இருக்கின்றது.
    5. “படித்தல்” படிக்கப்படும் நிகழ்வுகள், பாத்திரங்கள், செயல்கள், உணர்வுகள் இவற்றோடு சரியாகவும், பொறுமையுடனும் உறவாட உதவுகின்றது.

    படித்தல்- அறிதல் -புரிதல் ஆகிய நிகழ்வுகளைப் பற்றிய மிக நுண்ணியமான துல்லியமான ஆராய்ச்சிகள் மேலை நாடுகளில் பல இடங்களிலில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆராய்ச்சிகளின் மூலமாக நமக்கு கிடைக்கின்ற பல தகவல்கள் நமது முந்திய சிந்தனைகளையும் ‘படித்தலுக்கும் – அறிதலுக்கும் -புரிதலுக்கும்” இடையே உள்ள போராட்டங்களையும் முயற்சிகளையும் நல்ல கருத்துக்களையும் நமக்கு வெளிப்படுத்துகின்றன.

    இந்த ஆராய்ச்சிகளின்படி கண்டறியப்பட்ட உண்மை ” Seeing is not knowing” .. அதாவது “பார்ப்பதெல்லாம் அறிதல் அல்ல.” கண்கள் ஒரு காட்சியைக் காணும்பொழுது அல்லது ஒரு புத்தகத்தைப் படிக்கும் பொழுது அவைகளுக்கு அதன் மொழியோ, கருத்தோ அல்லது பொருளோ தெரிவதில்லை.. ஒரு புத்தகத்திலுள்ள வார்த்தைகள் தமிழா, ஆங்கிலமா, தெலுங்கா அல்லது பிரென்ச் மொழியா என்று தெரியாது. கண்திரைகளில் விழுவதெல்லாம் வெறும் வடிவங்களே. இந்த வடிவங்கள், வண்ணங்கள், உருவங்கள் அலசப்பட்டு, நேர்கோடுகளாக, விளைவுகளாக, மற்றும் சில உருவகங்களாகப் பிரிக்கப்பட்டு கண்களிலிருந்து நரம்புகளால் மின்னதிர்வுகளாக அதனுடன் சம்பத்தப்பட்ட மூளையின் பல பாகங்களுக்கு எடுத்தச் செல்லப்பட்டு (சுமார் 32 இடங்கள்) அலசப்பட்டு பின் மூளையின் ஒரு பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்டு, தன்னுடைய பழைய நினைவுகள், அறிவுச் சேமிப்புக்களுடன் ஒப்பிடப்பட்டு பொருள் சேர்க்கப்பட்டு மூளை நமக்கு ஒரு கணத்தின் பல்லாயிரம் விழுக்காட்டு பகுதி நேரத்தில் தெரியப்படுத்துகின்றது. அது மட்டுமல்ல அந்தக் கருத்துக்களோடு, அதன் பொருள்களுக்கேற்றாற்போல் சம்பந்தப்பட்ட உணர்வுகள் தூண்டப்பட்டு அவையும் பொருளோடு நமக்கு கிடைக்கின்றது. இத்தனையும் நடக்கும் நேரம் கணினிகளால் கூட எட்ட முடியாத நேரம் ! என்னே விந்தை! என்னே இயற்கையின் விளையாட்டு ! என்னே இறையின் அருள்மாட்சி!

    ஆகவே ஒரு மாணவன் ஒரு புத்தகத்தைப் படிக்கும் செயல் அவனுடைய தனிப்பட்ட செயல். இதை மற்றொரு மாணவருடன் ஒப்பிடுதல் தவறாக விளையும். ஒவ்வொரு மாணவனின் அறிதல் புரிதல் செயல்களுக்கான நேரம் அவரவருடைய உடல், மனம், சூழ்நிலை, கருத்தாழம் காணும் திறன், பொருள் அறியும் திறன் மற்றும் முந்திய அனுபவங்கள், ஆர்வம் போன்ற பல காரணங்களால் நிச்சயிக்கப்படுவதாலும் உருவாக்கப்படுவதாலும் இரு மாணவர்களுடைய அல்லது தனிப்பட்ட மனிதர்களுடைய “படித்தல்” என்ற செயல் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இது வேறு எந்தக் காரணங்களால் பாதிக்கப்படுகின்றது கற்றலில் இதன் தாக்கம் என்ன என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.

    இனிமேலாவது மற்றவர்களைப் பார்த்து “என்னத்த படிச்ச போ” என்று சொல்லாமல் இருக்கலாமே !

    (தொடரும்)

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (9)

    க. பாலசுப்பிரமணியன்

    போதுமென்ற மனமே…

    திருமூலர்-1

    “போதும் என்ற மனமே புன்செய்யும் மருந்து” என்பது பழமொழி. ஒரு மனிதனுக்கு எந்தத்  தேவையையும் தனக்கு வேண்டிய அளவு மட்டும் பெற்றுக் கொண்டு, பின் “இது போதும், இதற்கு மேல் எனக்குத் தேவையில்லை” என்ற மனம் வருமானால் அவனுக்கு வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் வருவதில்லை. ஆனால் தேவைகளுக்கு மேலும் வேண்டி நிற்பானேயாயில் அவன் தேவைகள் என்றும் பூர்த்தி அடைவதில்லை. இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்றும், இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும் என்றும் மனம் சஞ்சலத்தில் உழன்று வேதனைக்கு வித்திடுகின்றது.

    வாழ்க்கையில்  ஒரு நல்ல செல்வ  நிலையில் இருப்பவனும். இல்லாத பாட்டுப் பாடி துயருறுகின்றான். ஒரு மன நோயாளியைப் போல் வாழ்கையை வாழுகின்றான்.

    இந்த ஆசையினால் ஏற்படும் துன்பத்திலிருந்து நம்மைக் கத்தட்டுக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வள்ளுவரோ கூறுகின்றார்:

    ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

    பேரா இயற்கை தரும்

    ஒரு முறை அரசனைப் பார்க்க நினைத்த  ஒரு சாது அரசனைச் சந்தித்தால்  தனக்கு வேண்டிய பொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் . அரண்மனையை நோக்கிச் செல்லுகின்றார். அங்கே அந்த அரசர் பிரார்த்தனையில் அமர்ந்திருக்கின்றார். அந்தப் பிரார்த்தனையின்போது அவர் இறைவனிடம் தனக்கு மேலும் செல்வங்களை வாரி வழங்குமாறு வேண்டுகின்றார்.

    இதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த சாது மௌனமாகத் திரும்பி விடுகின்றார். பிரார்த்தனையை முடித்த அரசர் அந்த சாதுவைப்  பார்த்து “என்ன வேண்டும்? ஏன் திரும்பிச் செல்லுகிறீர்கள்?” என்று கேட்கின்றார்.

    அந்த சாது  அரசனைப் பார்த்துச் சொல்கின்றார். “நான் ஏழை. உங்களிடம் உதவி கேட்டுச் செல்லலாம் என்று வந்தேன். ஆனால் இங்கு என்னை விட ஒரு பெரிய  ஏழையைக் கண்டேன். ஆகவே  நீங்கள் யாரிடம் உதவி கேட்கிறீர்களோ நானும் அதே இறைவனிடமே உதவி கேட்டுக்கொள்கிறேன்”  என்று பதிலளிக்கிறார்.

    ஆகவே நம்மில் பலரும் நம்மிடம் தேவைக்கு அதிகமான பொருள்கள் இருந்தாலும் ஒரு பிச்சைக்கராரைப் போல் வாழ்கின்றோம். இந்த நிலையை திருமூலர் மிக அழகாக விளக்குகின்றார்

    புடவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை

    அடையப்பட்டார்களும் அன்பிலரானர்.

    கொடையில்லை கோளில்லை கொண்டாட்டமில்லை

    நடையில்லை நாட்டில் இயங்குகின்றார்களே.

    எல்லாம் இருந்தும் தனக்கும் எதுவுமில்லையென நினைத்து வாழ்பவர்கள் ஒரு நடைப்பிணத்திற்கு சமமானவர்கள் என்று அறிவுறுத்துகின்றார்  ஆகவே, போதுமென்ற மனமே ஒருவனுக்குச் செல்வச்சிறப்பைக் கொடுக்கின்றது. இதைவிட ஒரு அழகான அறிவுரையை நாம் வேறே எங்கு கேட்க முடியும்?

    இதே கருத்தை தன் உள்ளத்தில் நிறுத்தி நிலையற்ற வாழ்விற்க்காக ஏங்கும் மக்களைப் பார்த்த பட்டினத்தாரோ வருந்துகின்றார்

    நீர்க்குழி வாழ்வைநம்பி நிச்சயமென் றேஎண்ணிப்

    பாக்களவா மன்னம் பசித்தோர்க் களியாமல்

    போர்க்களெம தூதன் பிடித்திழுக்கு மப்போது

    ஆர்ப்படுவா ரென்றே யறிந்திலையே நெஞ்சமே.

    எவ்வாறு வேண்டாமையை நாம் வளர்த்துக்கொள்ள முடியும்? அதனால் பயன்தான் என்ன?  அதனால் நமக்கு அமைதியும் இன்பமும் கிடைக்குமா? இத்தனை கேள்விகளுக்கும் விடையாக அமைகிறது வள்ளுவரின் இந்தக் குறள் :

    வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை

    யாண்டும் அஃதொப்பது இல்.

    (தொடரும்)

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 78

    க. பாலசுப்பிரமணியன்

    ஒலிஅதிர்வுகளும் கற்றலும்

    education-1

    கேள்வி அறிவைப் பற்றிய ஆராய்ச்சிகள் உலகின் பல நாடுகளில் செய்யப்பட்டு வருகின்றன. இதிலிருந்து வரும் பல குறிப்புகள் கற்றலைப் பற்றிய நமது முந்திய கருத்துக்களை மாற்றியும் அவைகளில் பலவற்றுக்கு உயிரூட்டியும் வருகின்றன. உதாரணமாக, பல்லாயிரம் ஆண்டுகளாக ஆசிரியர்களிடமிருந்தும் குருக்களிடமிருந்தும் கேள்வி அறிவின் மூலமாகவே  (oral communications) கற்றல் நடைபெற்று வந்ததது. இதில் கேட்கும் கருத்துக்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு அவை மூளையில் நினைவாற்றலாக மாறி வாழ்க்கை முழுவதும் தங்கள் பரிமாணங்களை உயிர்ப்பித்துக்கொண்டிருந்தன. கேள்வி  அறிவால் பெறப்படும் அறிவுத்துகள்கள் சில நேரங்களில் சொற்ப காலத்தில் வலுவிழந்து போய்க்கொண்டிருந்தன (volatile memory). சில புதுப்பிக்கப்பட்டு குறுகிய காலகட்டத்திற்கு  தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டிருந்தன (short-term memory). மற்றும் சில நினைவில் ஆழமாகப் பதிந்து நிரந்தர நினைவாக (Long-term memory)அமைந்து விடுகின்றன. இதைப் பற்றிய ஆரய்ச்சிகள் கேட்டலுக்கும் -நினைவாற்றலுக்கும் உள்ள தொடர்பினைப் பற்றிய சில உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தன.

    இதன்படி உணர்ச்சித் தாக்கங்கள் உள்ள உந்துதல்கள் (Emotionally Competent Stimuli) மூளையின் நினைவாற்றல்களில் ஆழமாக வேரூன்றி இருப்பதாகவும் கற்பவர்களின் நினைவுகள் (memory), அறிவுப் பரிமாணங்கள்(cognitive parameters), செயல்கள் (Skills and actions) மற்றும் பதில்கள் (responses) ஆகியவை இந்த உணர்ச்சித் தாக்கமுள்ள ஒலி உந்துதல்களால் சிறப்புறுவதாகவும் சொல்லப்படுகின்றன. ஆகவே ஒரு ஆசிரியர் ஒரு பாடத்தையோ அல்லது ஒரு கருத்தையோ அல்லது ஒரு விளக்கத்தையோ உணர்ச்சி பூர்வமாக சொல்லிக்கொடுக்கும்பொழுது அவை கற்பவர்கள் நினைவில் ஆழமாகப் பதிவது மட்டுமின்றி அவர்கள் கருத்துக்களிலும் கருத்துக்களின் மேலாண்மையிலும் பெரிய தாக்கத்தை (Behavioural modifications) ஏற்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான செயலாக அமைகின்றது. இதை ஆசிரியர்கள் கருத்தில் கொண்டு தங்கள் வகுப்பறைச் செயல்முறைகளை மாற்றியமைத்தால் அதன் விளைவுகள் பயனுள்ளதாகவும் வெற்றிகரமாகவும் அமையும் என்பதில் சற்றும் ஐயமில்லை,

    பல நேரங்களில் ஆசிரியர்கள் கவிதைகள், பாடல்கள், நாடகங்கள் ஆகியவற்றை நடத்தும் பொழுது அதிலுள்ள பாத்திரமாகவே மாறுவதை நாம் பார்த்திருக்கின்றோம். ஆங்கிலக் கவிஞர் wordsworth அவர்களின் Daffodils என்ற மலரைப் பற்றிய கவிதையை எங்கள் ஆசிரியர்  நடத்திய பொழுது அந்த மலரைப் போலவே ஆடியதையும், தமிழ் பேராசிரியர் கம்ப ராமாயணத்தில் குகனைப் பற்றிய படலத்தில் குகனாகவே மாறியதையும் நினைவில் கொள்ள முடிகின்றது.

    இதனால்தான் வகுப்பறை என்பது ஒரு நாடக மேடை என்ற கருத்தும் நிலவுகின்றது. இங்கே ஆசிரியர்களும் மாணவர்களும் கருத்துப் பரிமாற்றத்தில் நடிகர்களாகவும், பாடலாசிரியர்களாகவும், பாடகர்களாகவும் உருவாகின்றனர் என்ற கருத்து பல மேலைநாடுகளில் இன்னும் கருதப்படுகின்றது.

    அது மட்டுமல்ல, கேள்வி அறிவு ,ஆசிரியர்கள் மட்டுமின்றி மாணவர்களிடையே ஏற்படுகின்ற கருத்துக் பரிமாற்றங்களாலும் (Interactive peer learning ) வலுப்படுகின்றது. ஆகவே வகுப்பறைகளிலும் அதன் வெளியிலும் நடத்தப்படும் பாடங்கள் கருத்துக்களின் பரிமாற்றங்களை வலுப்படுத்தும் வண்ணம் சூழ்நிலைகள் உருவாக்கப்படவும் மேம்படுத்தப்படவும் வேண்டும். கற்றலில் இந்த சமநிலை கருத்துப் பரிமாற்றமாகளால் ஏற்படும் நன்மைகளை பற்றி வெகுவாக கூறப்பட்டுள்ளது.

    இந்த ஒலிவடிவங்கள் எவ்வாறு நமக்குத் தேவையான கருத்தையோ பொருளையோ தருகின்றன என்பது பற்றிய மூளை நரம்பியல் ஆராய்ச்சிகள் கருத்துத் தெரிவிக்கின்றன. பொதுவாக ஒலி அலைகள் காதுகளின் செவிப்பறைகளைத் தாக்கும் பொழுது அவை நுண்ணதிர்வுகளாக மட்டும் இருக்கின்றன. காதுகளுக்கு அதன் மொழி, பொருள்  மற்றும் மற்ற கருத்து வண்ணங்கள் தெரிவதில்லை.

    ஒலி அதிர்வுகள் தரும் சுருதி, குரல், வளம், ஏற்ற தாழ்வுகள் போன்றவை காதிலிருந்து நரம்புகள் வழியாக மூளையின் பல பாகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அவை பரிசீலிக்கப் பட்டு, மூளை நினைவுகளில் உள்ள பழைய அறிவுத்துகள்களோடு ஒப்பிடப்பட்டு நமக்கு புலப்படுகின்றது. அப்பொழுது அந்த ஒலி எந்த மொழியைச் சார்ந்தது, எப்படி ஒலிக்கின்றது, அதன் உட்பொருள் என்ன, எந்த நோக்கத்தில் சொல்லப்படுகின்றது, எப்படிப்பட்ட உணர்வுகளோடு அது இணைந்து வருகின்றது என்ற பல கருத்துக்களை மூளை நமக்குத் தருகின்றது. இந்த கருத்துக்கள், உணர்வுகள் ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்டவை. ஆகவே எந்த இரு நபர்கள் கேட்கும் வார்த்தைகளுக்கான ஒரே பொருளை ஒரே மாதிரி ஒரே தன்மையில் பெறுவது என்பது  ஒரு விந்தையான செயல். இந்த நிகழ்வுகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டதாக இருப்பதால் ஒரே நிகழ்வை இரு மாணவர்கள் வெவ்வேறு விதமாக பொருள் கொள்ள வாய்ப்புக்கள் உண்டு. இது கற்றலில் சமநிலையை ஏற்படுத்துவதற்குத் தடங்கலாக இருக்கவும் வாய்ப்புக்கள் உண்டு. ஆகவேதான் ஆசிரியர்கள் ஒரே கருத்தை பல விதமாக எடுத்துச் சொல்லும் பொழுது அதன் விரிவாக்கங்கள் புரிதலுக்கும் அறிதலுக்கும் இடையே உள்ள தூரங்களை குறைக்க உதவும்.

    மூளை நரம்பியல் மற்றும் கற்பியல் பற்றிய வல்லுநர்கள் பொதுவாக “அர்த்தங்கள் கொள்வதை ” (Meaning Making) மூளையின் ஒரு மிகப்பெரிய சாதனையாகக் கருதுகின்றனர். இந்தச் செயலுக்கு மூளையின் பல பகுதிகள் பல விதங்களில் ஒருங்கிணைந்து ஒத்துழைத்துச் செயல்படுகின்றன. இந்தச் செயலில் மூலையில் உள்ள “கண்ணாடி நியூரோன்களின் ” (mirror neurons) பங்குகள் பற்றியும் ஆரய்ச்சிகள் நடந்து வருகின்றன.

    இதைத்தவிர, சொல்லப்படும் வார்த்தைகள் எவ்வாறு மூளையில் தாக்கம் ஏற்படுத்தி செயல்களை பாதிக்கின்றன, செயல்களை ஊக்கப்படுத்துகின்றன, செயல்களில் மாற்றங்கள் கொண்டுவருவதற்கு உதவியாக இருக்கின்ற்ன என்பது பற்றிய ஆராய்ச்சி “நரம்பியல் மொழி நிரலாக்கங்கள் ” *(Neuro -Linguistic Programing) என்ற தலைப்பின் கீழ் உலகத்தின் பல நாடுகளில் செய்யப்பட்டு பயிற்சியளிக்கப் பட்டு வருகின்றது.

    ஆகவே கற்றலில் கேட்டல் என்பது ஒரு தலையாய செயல். இதுபோன்று படித்தல் என்ற செயல் எவ்வாறு கற்றலுக்கு உதவுகின்றது என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

    (தொடரும்)

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்  (8)

    க. பாலசுப்பிரமணியன்

    பொருளின் நிலையாமை

    திருமூலர்-1

    ஆசை இல்லாத மனிதனே இல்லை. சில நேரங்களில் ஆசை மனிதனுக்கு வாழும் சக்தியை கொடுக்கிறது. வாழ்வில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஒரு ஊன்றுகோலாக இருக்கிறது.. சில நேரங்களில் மனிதனுடைய வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை வடிப்பதற்குத் துணையாக இருக்கிறது. ஆனால் அதே ஆசை பேராசையாக மாறும் பொழுதில் அவனுடைய அழிவுக்கு முன்னுரையாகவும் விளங்குகிறது.

    தனக்கு எவ்வளவு வேண்டும் என்று இறைவனிடம் வேண்டும் கபீர்தாசர் இறைவா நானும் பசியோடு இருக்கக்கூடாது. இந்த சமூகத்தில் உன்னுடைய அடியார்களும் பசியோடு இருக்கக்கூடாது. அந்த அளவுக்கு நீ தந்தால்  போதும். என்கிறார்.

    நாம் எவ்வளவு சேர்த்தாலும், அத்தனை சொத்துக்களையும் இங்கேயே விட்டுவிட்டுச் செல்ல வேண்டும். பட்டினத்தார் சொல்லியது போல் “காதறுந்த ஊசியும் கடை வழி வாராதே ‘ என்பதை உணர வேண்டும். நிரந்தரம் நிரந்தரமாக இருக்கும்போது, வழிப்போக்கர்களாக வந்து போகும் நாம் ஏனோ இதை உணர்வதில்லை. இறக்கும் தருவாயிலும் இன்னும் எவ்வளவு நமக்கு கிடைக்கும் என்றே யோசித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த மாயையிலிருந்து விடுபட திருமூலர் சொல்வது என்ன?

    அருளும் அரசனும்  ஆனையும் தேறும்

    பொருளும் பிறர் கொள்ளப்போவதன் முன்

    தெருளும் உயிரோடுஞ் செல்வனைச்  சேரின்

    மருளும் பினையவன்  மாதவ மன்றே

    மற்றவர்கள் நம் பதவியையும் பொருள்களையும், யானையும் தேரையும் பரித்துக்கொள்ளும் முன்னரே நாம் இறைவனிடம் சரணடைந்து விட்டால் எதற்கும் கவலை கொள்ளத்தேவையில்லை. ஆகவே ஒரு பற்றற்ற வாழ்வை வாழ கற்றுக்கொள்ளவேண்டும் என அழகாக எடுத்துரைக்கின்றார்.

    இந்த உடலிலிருந்து உயிர் பிரிந்த பின்னும் இந்தப் பொருளால் என்ன நிலை ஏற்படுகின்றது?

    வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந்

    தாரு மளவே  தெமக்கென்பர்

    என்று எடுத்துரைக்கும் திருமூலர் நம் மனைவி மக்களும் மற்றவரும் உற்றவரும் இவர் நமக்கு இவ்வளவுதான் விட்டுச் சென்றிருக்கிறாரா?” என்பர்  -எனக்கூறி வாழ்வின் உண்மை நிலையை  நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றார்.

    நாம்  சேர்த்த செல்வம் மற்றவருக்கு திருப்தி அளிக்காவிட்டால் நம்முடன் கூடவாவது வருகின்றதோ? இதே கேள்வியை பட்டினத்தார் எப்படி எழுப்புகின்றார்?

    மாணிக்க முத்து வயிரப் பணிபூண்டு

    ஆணிப்பொன் சிங்கா தனத்தி லிருந்தாலும்

    காணித்  துடலை நமன் காட்டியே கைபிடித்தால்

    காணிப்பொன் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே .

    இந்தத்  துன்பங்களிலிருந்தெல்லாம் நம்மைக் காப்பாற்றக்கூடிய ஒரே வழி தாயுள்ளம் கொண்ட இறைவனின் திருப்பாதமே என்றுணர்ந்த மாணிக்கவாசகர் வண்டின் மூலமாக என்ன செய்தி தருகின்றார் தெரியுமா?

    நோயுற்று மூத்துநான் நுந்துகன்றா யிங்கிருந்து

    நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாந்

    தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்ட தன்கருணைத்

    தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ . 

    ஆசைகளையெல்லாம் விட்டுவிடுகின்ற மனநிலை நமக்கு கிடைக்குமா ? இந்தப் பிறவியில் அது நடக்கக்கூடியதா? அப்படியானால் நமக்கு உண்மையான ஆனந்தம் எங்கே கிடைக்கிறது?  இதற்கு சரியான பதிலை திருமூலரே கொடுக்கின்றார் :

    முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்

    அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம். 

    இவ்வாறு அகத்தில் உள்ள இறைவனை அறிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல், பாராட்டாமல், போற்றாமல், நாம் ஊர் உலகெல்லாம் சுற்றி வந்து கொண்டு இருக்கின்றோம். அது மட்டுமல்ல, அந்த இறையால் நமக்கு அளிக்கப்பட ஐம்புலன்களையும் அறிவுக்கண்களோடு இணைக்காமல் புறநோக்கில் செலுத்தி அவற்றின் உயரிய பண்புகளை வீணடித்துக்கொண்டிருக்கின்றோம். இறைவன் நமக்கு இந்தப் புலன்களையெல்லாம் எதற்குக் கொடுத்திருக்கின்றான்? இவை அவன் புகழ் பாடவும், புகழ் கேட்கவும், அவன் தாள் வணங்கவும் தங்களை அர்ப்பணித்த்துக்கொள்ள வேண்டாமோ? அப்பர் பெருமான் அழகாகச் சொல்லுகின்றார் :

    வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சம்

    தாழ்த்த சென்னியும் தந்த தலைவன்

    இதை மறந்து நாம் கொண்ட அவல நிலையை நமக்கு எடுத்துக்காட்டும் பட்டினத்தாரோ வாழ்க்கையில் இறைவனை நினைக்காத மானிடரைக் கண்டு எவ்வாறு வியக்கின்றார் :

    “கண்ணுண்டு காணக் கருத்துண்டு நோக்கக் கசிந்துருகிப்

    பண்ணுண்டு பாடச் செவியுண்டு கேட்கப்பல் பச்சிலையால்

    எண்ணுண்டு சாத்த வெதிர்நிற்க வீச னிருக்கையிலே

    மண்ணுண்டு போகுதே யோகெடு வீரிந்த மானுடமே”

    சிந்தனைக்கு இது ஒரு நல் விருந்தன்றோ ?

    (தொடரும்)

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 77

    க. பாலசுப்பிரமணியன்

    கேட்கும் திறனால் கற்றலில் ஏற்படும் பயன்கள்

    education-1

    கேட்கும் திறன் ஒரு தனி மனிதனின் வாழ்க்கை வளத்திற்கு ஆதாரமாக அமைகின்றது. பல்லாண்டுகள் முயன்று நாம் பாடுபட்டு சேர்க்கக்கூடிய அறிவினை நாம் குறைந்த காலத்தில் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. மேலும், இந்த அறிவினை பெறுவதற்கு மற்றவர்கள் எடுத்துக்கொண்ட கால அவகாசங்கள் நமக்கு கிடைப்பது ஒரு ஈடில்லாத வரவு. ஆகவேதான் நாம் நல்ல கற்றவர்களோடு அமர்ந்து அவர்கள் அறிவினை நமக்கு கிடைப்பதற்கான வழிமுறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இதை வலியுறுத்தும் திருவள்ளுவர் என்ன கூறுகின்றார் ?

    கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள், கேட்டறிந்தாலும், கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.”

    கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

    தோட்கப் படாத செவி.” 

    மற்றவர்கள் பேசி நாம் கேட்கும் பொழுது நமக்கு என்ன பயன்கள் ஏற்படுகின்றன.

    1. கற்றல் என்னும் செயல் மிக இயல்பாக நடைபெறுகின்றது.
    2. மற்றவர்களின் உணர்வுகளோடு கருத்துக்களும் வார்த்தைகளும் சேர்ந்து வருவதால் கற்றல், அறிதல், புரிதல் ஆகிய நிகழ்வுகள் உணர்வுமயமாக நடைபெறுகின்றன.
    3. மற்றவர்களுடைய உணர்வுகளோடு கேட்பவர்களின் உணர்வுகள் சங்கமமாகும் நிலை உருவாகி மனித நேயத்திற்கான வித்துக்கள் விதைக்கப்படுகின்றன.
    4. மற்றவர்களுடைய கருத்துக்களோடு உள்ளடங்கி அவர்கள் அனுபவங்கள் வெளிப்படுவதால் நம்முடைய கற்றல் ‘அனுபவ பூர்வமான கற்றலாக உருவாகின்றது.

    மொழிக்கல்வியில் கேட்கும் திறன் மிகவும் தேவையானதாகக் கருதப்படுகின்றது. மூளை நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களுடைய தாய்மார்கள் தொடர்ந்து குழந்தைகளுடன் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்தை ஆணித்தரமாக உணர்த்தியுள்ளனர். இந்தச் செயல் நிகழும்போது

    1. தாய்க்கும் சேய்க்கும் நடக்கும் உறவாடலால் அன்புப் பிணைப்புக்கள் உருவாகின்றன.
    2. தாயின் முகம் மற்றும் உதட்டு அசைவுகள் குழந்தைகளின் பார்வையில் படும் பொழுது மூளையில் உள்ள கண்ணாடி நியூரோன்களால் அறியப்பட்டு பின் மொழி வழக்கங்களை உருவாக்குவதற்குத் துணையாக இருக்கின்றன.
    3. இதனால் மொழி உச்சரிப்புக்கள். மொழி வளம், மொழி வழக்குகள் ஆகியவை எளிதாக அறியப்பட்டு வழக்கத்திற்கு வருகின்றன.
    4. கேட்கும் செயலை தூண்டுவிடும் பொழுது குழந்தைகளின் எதிர்பார்ப்புகள், ஆர்வங்கள், பதில் கொடுக்கும் திறன்கள் மேம்படுகின்றன.

    பிற்காலத்தில் இந்தப் பழக்கங்கள் முழுமைப்பட்டு மொழித்திறன்களும் மொழிவளமும் வாழ்க்கையில் சிறப்பாகப் பிரதிபலிக்கின்றன.

    வளரும் நேரங்களில், நாம் குழந்தைகளை தொலைக்காட்சி செய்திகளை கேட்காத தூண்டும் பொழுது இந்த கேட்கும் வளம் மேளம் சிறப்படைகின்றது.

    கேட்கும் திறனை வளர்ப்பதில் பள்ளிகளில் “கதை சொல்லும் கலை” ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு கதையை உணர்வுபூர்வமாக, அந்தக் கதையின் இயற்கை சூழ்நிலைகளுக்குத் தகுந்தமாதிரி சொல்லும் பொழுது மூளையின் கறபனைத் திறன், சிந்தனைத் திறன், உருவகிக்கும் திறன் போன்ற பல திறன்கள் வளப்படுகின்றன. அந்தக்கதைகளின் கருத்துக்களைத் தன்னடக்கி குழந்தைகள் அந்தக் கதாபாத்திரங்களுடன் ஒன்றாகி விடும் நிலை ஏற்படுகின்றது. இதனால் பல நேரங்களில் அவர்களுடைய உணர்வு நிலைகள் பதப்பட்டு செம்மையாகி மனித உறவுகளையும் மனித நேயத்தையும் பலப்படுத்துகின்றன.

    கேட்கும் திறன் மனிதர்களுடைய உணர்வுகளோடு எளிதாக உறவாடுவதால்தான் பல சிறந்த பேச்சாளர்கள் தங்களுடைய உணர்வுபூர்வமான பேச்சுக்கள் மூலம் ஒரு சமுதாயத்தின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கின்றார்கள். சரித்திரத்தில் இதற்கான பல சான்றுகள் நமக்கு கிடைக்கின்றன.

    சுவாமி விவேகானந்தரின் சிக்காகோ பேச்சைக் கேட்ட உலக  மக்களின் நெஞ்சம் மதங்களுக்கு அப்பால் மனித நேயத்தைக் கண்டது.  மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் பேச்சு ஒரு சமுதாயத்தின் விடுதலைக்கு வழிவகுத்தது. இந்திய துணைக் கண்டத்தின் சுதந்திரப்போராட்டத்தில் பல மேதைகளின் அறிவாளிகளின் பேச்சுக்களைக் கேட்ட மக்கள் ஒரு போராட்டத்துக்கு தங்களை அற்பணித்தனர்.

    கேட்கும் திறன் சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தவாறு மாற்றங்களைக் காண்கின்றது.

    உதாரணமாக

    1. ஒருவரின் வெற்றி அல்லது துயரக்கதைகளைக் கெடுக்கும் செயல்
    2. ஒருவரின் முயற்ச்சி, ஈடுபாடு அண்ட் போராட்டங்களை பற்றி அறியும் செயல்
    3. ஒருவரிடம் யதார்த்தமாக உலக நடப்களைப் பற்றி உறைந்த=யாடுதல்
    4. ஒருவருடைய சொற்பொழிவுகளைக் கேட்டல்
    5. ஒரு சிலரின் கருத்தாமிக்க உரையாடல் மற்றும் கருத்துப் போராட்டங்களைக் கேட்டல்
    6. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் கொடுக்கும் விளக்கங்களைக் கேட்டல்

    இதுபோன்ற மற்ற பல கற்கும் திறன்களில் கேட்டலின்  ஆதிக்கத்தையும் தாக்கத்தையும் நாம் காணும் பொழுது பேசுபவர்களுடைய திறன் எப்படி இருக்கவேண்டும் என்று கேள்வியும் எழுகின்றது. தொடர்ந்து காண்போம்.

    (தொடரும் )

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (7)

    க. பாலசுப்பிரமணியன்

    பொருளும் அருளும்

    திருமூலர்-1-2

    வாழ்க்கையில் அனைவருக்கும் பொருள் சேர்ப்பதில் அளவற்ற ஈடுபாடு இருக்கின்றது. ஓலைக்குடிசையில் ஒட்டகம் ஒதுங்குவதற்குத் தலையை மட்டும் நீட்டிக்கொள்ள வேண்டி, பின்பு எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குடிசை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்கிறதோ அது போல் ஆசையும் நம் மனதிற்குள்ளே கொஞ்சம் தலை நீட்டுகின்றது.  பின் கொஞ்சம் கொஞ்சமாக நம் மனம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்கின்றது.

    இந்த மனம் அந்த ஆசைக்கு அடிமையாகப் போய் விடுகின்றது. அப்படியென்றால் வாழ்க்கை வலமாக இருக்க பொருள் வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வி நம் முன்னே எழுகின்றது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமைந்திருப்பதுதான் கீழ்கண்ட திருக்குறள்

    “அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை,பொருளில்லார்க்கு

    இவ்வுலகம் இல்லை. “

    என்று வள்ளுவர் பெருமானே சொல்லியிருக்கின்றாரே என மனத்தில் சந்தேகம் தோன்றுகின்றது. ஆனால் அதே வள்ளுவப் பெருந்தகை பொருளைப் பற்றி எப்படி வருணிக்கின்றார்?

    அருள் என்னும்  அன்பு ஈன் குழவி பொருள் என்னும்

    செல்வச் செவிலியால் உண்டு.

    அவர் பொருளை ஒரு செவிலித்தாயிக்கு ஒப்பிடுகின்றார்.. பெற்ற தாய்க்கும் செவிலித்தாய்க்கும் எவ்வளவு வித்தியாசம்? உண்மையும் நகலும் ஒன்றாகுமா?

    இந்த மாயையிலிருந்தும் குழப்பங்களிலிருந்தும் விடுபட திருமூலர் கூறும் அறிவுரை என்ன?

    “தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்

    ஆற்றுப் பெருக்கிற் கலங்கி மலக்காதே

    மாற்றிக்  களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்

    கூற்றன் வருங்கால் குதிக்கலுமாமே.  (172)

    “வாழ்கையின் எல்லாப் பக்கங்களையும் அலசி ஆராய்ந்து தெளிந்து விடுங்கள். செல்வம் என்னும் ஆற்றுச் சுழலில் மாட்டிக்கொள்ளாமல் தெளிந்து நில்லுங்கள். பொருளாலும் செல்வத்தாலும் ஈர்க்கப்படாமல் அந்த ஆசைகளை மறுத்து விடுங்கள். நாளை கூற்றுவன் அழைப்பு வரும்பொழுதில்  துள்ளிச்செல்லத்  தயாராக இருங்கள். ” என்று அறிவுரை வழங்குகின்றார்.

    “எப்படி பாடுபட்டு தேனீக்கள் பூப்பூவாகச் சென்று உள்ளேயிருக்கும் தேனைப்   பருகிவந்து சேர்த்த பின்னே யாரோ ஒருவன் அந்தத் தேன் கூட்டில் உள்ள தேனீக்களையெல்லாம் விரட்டிவிட்டுத் தேனை எடுத்துச் செல்கிறானோ அதுபோல் நாம் பாடுபட்டுச் சேர்த்த செல்வமெல்லாம் வேறுயாரோ எடுத்தச் சென்றிடுவார். இதை நன்கு உணர்ந்து உன் வாழ்க்கையை நடத்துங்கள்..” என்று விளக்கமளிக்கிறார் திருமூலர்.

    இதே கருத்தை தனக்கே உரிய பாணியில் வெளிப்படுத்தும் பட்டினத்தாரோ இறைவனின் அருளை எங்கே நாடுகின்றார்?

    மாடுண்டு கன்றுண்டு மக்களுண் டென்று மகிழ்வதெல்லாம்

    கேடுண் டெனும்படி கேட்டுவிட் டோமினிக் கேண்மனமே

    ஓடுண்டு கந்தையுண் டுள்ளே யெழுத்தைந்து மோதவுண்டு

    தோடுண்ட கண்ட னடியார் நமக்குத் துணையுமுண்டே

    பட்டினத்தாரின் இந்தப் பாடல் உலகப் பற்றிலிருந்து விடுபட்ட அவர் மனநிலையையும் இறைவன்பால் அவர் வைத்துள்ள அசையாத நம்பிக்கைக்கும் ஓர் முன்னுதாரணமாக விளங்குகின்றது.

    இந்தத் தெளிவு நிலைக்கு வந்ததால் தானோ மாணிக்க வாசகர் அனைத்தையும் ஒதுக்கி “இறைவா, நின் திருப்பாதம் ஒன்றே துணை. அதைப்பெற உதவிடுவாய். ” என்று இறைவனை நோக்கி விளிக்கின்றார்

    யானே பொய் என் நெஞ்சம்

    பொய் என் அன்பும் பொய்

    ஆனால் வினையேன் அழுதால்

    உன்னைப் பெறலாமே

    தேனே அமுதே கரும்பின்

    தெளிவே தித்திக்கும்

    மானே அருளாய் அடியேன்

    உனைவந்து  உருமாறே.

    மாணிக்கவாசகரின் உள்ளத்தின் ஒப்புதலைப் பார்க்கும் பொழுது அவருடைய தெளிவான சிந்தனைக்கு ஒரு அறிமுகம் கிடைக்கிறது

    இந்தத் தூய அறிவின் மூலமாகவும் ஒளிப்பிழம்பாகவும் இருக்கின்ற இறைவனை நாம் எங்கே நாட வேண்டும்? எந்த நாட்டில் யாருடைய வீட்டில் அவன் குடி கொண்டுள்ளான்? எத்தனை காலம் இதற்காகக் காத்திருக்கவேண்டும்? இதற்கெல்லாம் மிக அழகான தெளிவான பதிலை திருமூலர் தந்து விடுகின்றார்.

    உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்

    மெள்ளக் குடைந்துநின் றாடார் வினை கெடப்

    பள்ளமும் மேடும் பரந்து திரிவரே

    கள்ள மனமுடைக் கல்வியி லோரெ.!

    இதைவிடத் தெளிவாக யார் நமக்கு இறைவனின் அருளுக்கு வழிகாட்ட முடியும்?

    தொடரும்….

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 76

    க. பாலசுப்பிரமணியன்

    கேட்டல் ஒரு ஆற்றல் (Listening Skills)

    education

    பல இடங்களில் நாம் மற்றவர் பேச கேட்டுக்கொண்டிருந்திருக்கின்றோம். சில நேரங்களில் சொற்பொழிவுகளில் மேடையில் யாராவது பேசும்பொழுது அதில் சற்றும் விருப்பமும் அல்லது ஈடுபாடுமின்றி அமர்ந்தோ அல்லது உறங்கிக்கொண்டோ இருந்திருக்கின்றோம். பல நேரங்களில் வேலைபார்க்கும் இடங்களில் மற்றவர்கள் உரையாற்றிக்கொண்டிருக்கும் பொழுது நமது கவனம் எங்கோ இருந்திருக்கின்றது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டு இருக்கும்பொழுது ஒரு கேள்விகேட்டால் நமது ஈடுபாடும் கவனமும் வேறு எங்கோ இருந்ததினால் பதில் சொல்லமுடியாமல் விழித்ததும் உண்டு. பல நேரங்களில் விவாத மேடைகளில் யாராவது பேசும்பொழுதும் பட்டிமன்ற பேச்சுக்களைக் கேட்கும் பொழுதும் அவைகளில் நாம் ஒன்றிப்போய் நம்மை மறந்து நேரத்தை மறைந்து அமர்ந்து அங்கே உட்கார்ந்துகொண்டிருந்திருக்கின்றோம்.

    பேசுவது ஒரு கலை என்றால் அதைக்கேட்பதும் ஒரு கலை. பல நேரங்களில் மேடைப்பேச்சாளர்கள் “கூட்டம் கூடாவிட்டாலும் சரி, ஆழ்ந்து கவனிக்கக்கூடியவர்கள் ஐந்து பேராவது இருந்தாலும் போதும். பேசலாம்” என்று சொன்ன சொற்கள் நமது காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றது.

    கேட்டல் என்பது நாம் நம்முடன் பேசுபவருக்கு கொடுக்கின்ற மரியாதைக்கு அறிகுறி. நம்மில் பலர் காதுகளில் வாங்கிக்கொள்கிறோமே தவிர “கேட்பதில்லை” .  காற்று பேசுகின்றது.. அலைகள் பேசுகின்றன..பறவைகள் பேசுகின்றன. விலங்குகள் பேசுகின்றன, அத்தனையும் ஒலியின் வடிவங்கள்தானே?

    கேட்டல் என்பது நாம் மனமுவந்து ஒருவருக்கோ பலருக்கோ காட்டுகின்ற ஆக்கப்பூர்வமான செயல்.

    கற்றலில் கேட்டலுக்கு ஒரு முக்கியமான பங்கு உண்டு. பள்ளிகளிலும் மற்ற இடங்களிலும் நாம் கேட்கும் பொழுது இருக்கவேண்டிய முக்கிய நிலைப்பாடுகள்:

    1.  நமது மனம் முழுவதுமாக அந்தச் செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

    2.  அந்தக் கற்றல் நமக்குத் தேவையானது, பயன்படக்கூடியது என்ற மனப்பாங்கு இருக்கவேண்டும்.

    1. பேச்சாளரைப் பற்றிய சொந்த விருப்பு வெறுப்புக்கள் நம்மை பாதிக்கக்கூடாது
    2. சொல்லப்படும் கருத்துக்கே முதல் மரியாதை கொடுக்க வேண்டும்.
    3. கேட்கும் நேரத்தில் அதை உள்வாங்க வேண்டுமே தவிர, அதன் தரத்தையும் அதன் உண்மையையும் அவசரப்பட்டு ஆராயவோ அல்லது முடிவெடுக்கவோ கூடாது,
    4. சொல்லப்படும் கருத்துக்கள் நமக்கு விருப்பமற்றனவாக இருந்தால் அதற்கு உடன் எதிர்ப்புத் தெரிவித்தாலோ அல்லது முரண்படுதலையோ தவிர்க்கவேண்டும்.
    5. சொல்லப்படும் கருத்தை விருப்பத்துடன் உள்வாங்கி பின் உரிய நேரத்தில் அதை அலசி ஆராய்தல் அவசியம்.
    6. கற்கும் நேரத்திலும் கேட்கும் நேரத்திலும் கவனச் சிதறலை தவிர்க்க வேண்டும்.
    7. நல்ல கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப் படும்பொழுது நடுவில் தனக்குத் தெரிந்ததையும் கூறவேண்டும் என்ற ஆர்வத்தில் சொல்லப்படும் கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்துக்கள் தெரிவித்தல் தவறு.
    8. கேட்கும் நேரத்தில் அமைதி காத்தல் அவசியம்.

    வீட்டிலும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும்  கேட்கும் கலையையும் திறன்களையும் வளர்த்தல் மிக அவசியமாகின்றது. அதனால் மொழிப் பயிற்சியிலும் கற்றலிலும் ‘கேட்டலுக்கு” முதல் இடம் கொடுக்கப்படுகின்றது.

    பல நேரங்களில் சரியாக காது கொடுத்துக் கேட்காமல் நாம் தவறான முடிவுகளுக்கும் வந்து விடுகின்றோம். பல நேரங்களில் நாம் மற்றவர்கள் பேசி கேட்கும் பொழுது அவர்கள் சொல்வதையும் அவர்களைப் பற்றியும் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. ஆனால் நாம் அவர்கள் பேசி முடிக்கும் முன்பே அதற்கான பிரதிபலிப்புக்களைக் கொடுத்துவிடுகின்றோம். இது ஒரு தவறான செயல். பல நாடுகளில் இதை ஒரு தனி மனிதனின் திறனாய்வில் ஒரு பலவீனமாகக் கருதுகின்றனர். அது மட்டுமல்ல, பல நேர்காணல்களில் இதை ஒரு பலவீனமாகவே கருதுகின்றனர். எனவே, பள்ளிகளிலும் வீடுகளிலும் “கேட்கும் திறனை” வளர்த்தல் மிக அவசியம். பொதுவாக, குழந்தைகள் பேசும்பொழுதே பெற்றோர்கள் முழு கவனத்துடன் கேட்கும் பொழுது அதே “திறன்” வளரும் குழந்தைகளுக்கு ஓர் ஆற்றலாக வளர்கின்றது.

    கேட்டல் திறனால் குழந்தைகளுக்கு என்னென்ன வளர்ச்சிக்குறிகள் தென்படுகின்றன என்பதை ஆராய்ச்சிகள் விளக்குகின்றன.

    1. கேட்டலின் பொழுது கற்பனை வளம் அதிகமாகின்றது
    2. கேட்கும் கருத்துக்கள் எண்ணங்களை வளப்படுத்துகின்றன.
    3. கேட்கும் கருத்துக்கள் நம்பிக்கையையும் வாழ்க்கைத் திறனையும் உறுதிப்படுத்துகின்றன.கேட்கும் திறன் மொழிவளத்தையும் கருத்தாற்றலையும் ஊக்குவிக்குகின்றன.
    4. கேட்கும் திறன் மற்றவர்களுடன் நல்லுறவையும் கருத்துப்பரிமாற்றங்களுக்கு நல்ல வழிகளையும் வாய்ப்பினையும் ஏற்படுத்துகின்றது                     ஆகவேதான் மழலைப் பருவத்தில் குழந்தைகளின் திறன்களை வளர்க்கும் நேரத்தில் கீழ்கண்ட திறன்களின் ஒருமைப்பாடு மற்றும் சமன்பாடுகளில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது.
    1. கேட்டல் – பார்த்தல்
    2. கேட்டல் – செய்தல்
    3. கேட்டல் – திருப்பிச் சொல்லுதல்
    4. கேட்டல் – அறிதல்
    5. கேட்டல் – புரிதல்

    இந்தக் கேட்டல் என்ற செயல் மூளையில் எவ்வாறு மற்ற செயல்களோடு ஒருங்கிணைத்து வடிவெடுக்கின்றது என்பது பற்றிய மூளை-நரம்பியல் ஆராய்ச்சிகள் நம்மை வியக்க வைக்கின்றன. இதைத் தொடர்ந்து பார்ப்போம்

    (தொடரும் )

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (6)

    க. பாலசுப்பிரமணியன்

    உள்ளும் வெளியும் ஒருவனே

    நந்தவனத்திலோர் ஆண்டி அவன்

    நாலாறு மாதமாய்  குயவனை வேண்டி

    கொண்டுவந்தானொரு தோண்டி

    அதைக் கூத்தாடிகூத்தாடிப் போட்டுடைத்தாண்டி “

    திருமூலர்-1

    என்ற சித்தரின் தத்துவப்பாடல் இந்த மானிட வாழ்வின் நிலையற்றதன்மையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

    இதே கருத்தை முன்னிறுத்தி “குளத்திலே இருக்கின்ற பானையின் உள்ளும் நீர் இருக்கின்றது. அதன் வெளியேயும் நீர் இருக்கின்றது. அந்தப் பானை உடைந்து விட்டால் உள்ளே இருக்கும் நீரும் வெளியே இருக்கும் நீரும் ஒன்றாகிறது. இதுதான் வாழ்க்கையின் உண்மைக் கதை”  என்கிறார் கபீர்தாஸ்.

    இந்த உடல் ஒரு மண்பாண்டம் போல..எவ்வாறு ஒரு மண் பானை உடைந்தால் உள்ளிருக்கும் பொருளும் வெளியிருக்கும் பொருளும் ஒன்றாகிறதோ அது போல இந்த உடலில் உள்ளே இருக்கும் ஆன்மா  அந்தப்  பரம்பொருளுடன் கலந்து விடுகிறது என்ற கருத்தை மேற்கூறிய பாடல் சித்தரிக்கின்றது.

    இந்தக் கருத்தை மேலும் வலுப்படுத்தி மற்றும் உடலின் நிலையற்ற தன்மையை வெளிச்ச்த்துக் கொண்டு வரும் வகையில் அமைந்துள்ள திருமூலரின் பாடல்

    வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங்

    குளத்தின் மண்கொண்டு குயவன் வளைந்தான்

    குடமுடைந்தால் அவை ஓடென்று வைப்பர்

    உடலுடைந்தால் இறைப் போதும் வையாரே

    ஒரு குயவன் எவ்வாறு மண்ணை வடித்துப் பானை செய்கின்றானோ அவ்வாறே இந்த உடலையும் இறைவன்  வடித்திருக்கிறான். அந்த மண் குடம் உடைந்தால் அதை ஓடாகவாவது உபயோகிப்பர், ஆனால் இந்த உடல் உடைந்தால் கண் இமைக்கும் நேரம் கூட வைக்க மறுப்பார். .. என்னே! இந்த வாழ்வின் நிலை..!!

    இப்படிப்பட்ட வாழ்வில், மனிதனோ “நான், எனது, எனக்கு“ என்றெல்லாம் பொருள் சேர்த்து தனக்குத்தானே சுமைதாங்கியாக வாழ்கிறானே என்று வருத்தப்படுகின்றார்.

    ஒரு ஓடாகக் கூட பயன்படாத இந்த உடலை எவ்வாறெல்லாம் நாம் பாராட்டுகின்றோம்? இதனை உள்ளிருந்து ஆட்டுவிக்கும் சக்தி எது? அந்த சக்தியின் ஆணையை ஏற்று இந்த உடலின் வெவ்வேறு இந்திரியங்கள் எப்படிப் பணி செய்கின்றன? இதன் பின் இருக்கின்ற மாயை விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது திருமூலரின் இந்தப்பாடல் :

    புலன் ஐந்து புள் ஐந்து புட்ச்சென்று மேயும

     நிலம் ஐந்து நீர் ஐந்து நீர்மையும் ஐந்து

     குளமொன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்

     உலாவந்து போம்வழி யொன்பது தானே “

    ஐம்பொறிகளோடு நம் உயிர் ஆடுகின்ற இந்த நாடகத்தை நாம் அறிந்தோமோ? அல்லவே ! உண்மையை உணராத, அறியாத நெஞ்சம் எத்தனை வேடங்கள்தான் போடுகின்றது .. இதை உணர்ந்தாரில்லையே.. இந்த உண்மையை உணர்த்தும்  பட்டினத்தார் பாடல் இதோ:

    நீற்றைப் புனைந்தென்ன நீராடப்  போயென்ன நீமனமே

    மாற்றிப்பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைநூல்

    ஏற்றிக் கிடக்கு மெழுகோடி மந்திர மென்னகண்டாய்

    ஆற்றிற் கிடந்துந் துறையறி யாம் வலைகின்றதே

    ஆற்றிற் கிடந்ததும் துறையறியாதவரைப் போல் இறைவனை உள்ளே அமர்த்திக்கொண்டும் அவனை நன்கு அறியாத மூடர்களாக இருந்துவிட்டோமே ! நாம் காலத்தையெல்லாம் வீணடித்து விடுகின்றோமே!

    இந்தத் துயரிலிருந்து பட்டினத்தாரும் விடுபட்டாரில்லை.

    என்னையறியாமல் யெனக்குள்ளே நீயிருக்க

    உன்னை யறியாம லுடலிழந்தேன் பூரணமே !

    என்று வேதனைப்படுகின்றார்.

    இவ்வாறு உடலை வெறும் கருவியாக உபயோகிக்கும் நம் உள்மனது எப்பொழுதும் இறையின் அளவில்லா அழகையும் பேராண்மையையும் தன்னையுமறியாமல் ரசித்துக்கொண்டுதான் இருக்கின்றது. வாழ்க்கை என்னும் நாடகம் முடியும் தருவாயில் “அடுத்து நான் எங்கே போவேன்? என் செய்வேன்?’ என்ற பயத்திலும் வேட்கையிலும் இறைவனின் தாள்களைத் தேடுகின்றது. நாம் வாழும் பொழுதே இந்த மாயையை அறிந்துகொண்டு விலக முயற்சித்தோமானால் வாழ்க்கையிலிருந்து விடுபடும் மாற்றம் நம்மை பாதிப்பதில்லை. இதோ கவீந்திரர் ரபீந்திரநாத் டாகுர் அதை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார் என்றுபார்க்கலாமே

    I have had my invitation to this world’s festival, and thus my life has been blessed!

    My eyes have seen and my ears have heard.

    It was my part of this feast to play upon my instrument and I have done all I could.

    Now, I ask, has the time come at last, when I may go in and see thy face and offer thee my silent salutation?

    வாழ்வின் உண்மை நிலையை அறிந்து மாயையிலிருந்து விடுபடுகின்ற நிலையன்றோ இது?

    இறைவனின் இந்த மிகப் பெரிய கருணைக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய முடியும்? இந்த அளவில்லாக கருணை கண்டு மாணிக்க வாசகர் வியக்கிறார் ..

    தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னைச்

    சங்கரா யார் கொலோ சதுரர்

    அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்

    யாது நீ பெற்றது ஒன்று என்பால்

    சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்

    திருப்பெருந்துறை உறை சிவனே

    எந்தையே ஈசா உடல் இடம் கொண்டாய்

    யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே !

    தொடரும்..

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல்  -75

    க. பாலசுப்பிரமணியன்

     செவிச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை

    education

    கற்றலுக்கான வழிமுறைகளை பற்றிய  ஆராய்ச்சிகளின் மூலம் கீழ்க்கண்ட நான்கு வழிகள் அதற்க்கு உறுதுணையாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. :

    அவையாவன:

    1. கேட்டல் (Listening)
    2. பேசுதல் (speaking)
    3. படித்தல் (Reading)
    4. எழுதுதல் (writing)

    தொல் காலம் முதற்கொண்டே கல்வி அறிவு நல்லாசிரியர்களிடமிருந்தும் குருக்களிடமிருந்தும் மாணவர்களுக்கும் சீடர்களுக்கும் கேள்வி ஞானம் மூலமாகவே கிடைத்து வந்தது. பண்டைய காலத்தில் இந்த முறையை வடமொழியில் “சுருதி’ என்றும் “ஸ்ம்ருதி ‘ என்ற சொற்கள் மூலமாக வெளிப்படுத்தி வந்தனர். இந்திய துணைக்கண்டம் மட்டுமின்றி உலகளாவிய பல நாடுகளில் பிளாட்டோ, அரிஸ்டோட்டில் போன்ற பல பேரறிஞர்கள் தங்களுடைய சீடர்களுடன் உரையாடல் மூலமாகவும், கேள்வி பதில்கள் மூலமாகவும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு அறிவுக்கனலை வளர்த்து வந்தனர்.

    தமிழ்நாட்டில் இதன் பெருமையை திருக்குறள் தெள்ளத்தெளிவாக நம்முன் வைக்கின்றது.

    செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
    செல்வத்து ளெல்லாந் தலை.

    என்று கேட்டு அறிந்து நம் அறிவை வளர்த்துக் கொள்ளும் திறனின் அவசியத்தை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது

    அது மட்டுமல்ல, செவி இன்பத்தை சிறப்பித்துக் கூறும் வள்ளுவரின் கீழ்க்கண்ட குறள் நம் சிந்தனைக்கு ஒரு நல்ல விருந்து.

    செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
    அவியினும் வாழினு மென்.

    ஆனால் “கேட்டல்” என்பது வெறும் காதுகளில் ஒலித்துகள்களை வாங்கிக் கொள்வது மட்டுமல்ல.  நம்முடைய காதுகளில் விழுகின்ற ஒலி அலைகள் நம்முடைய மூளை வரை சென்று அதன் கருத்தை உள்வாங்கி அதற்குப் பொருள் கொடுத்து அதை உணர்வோடு ஒன்றிடவைத்து நமக்கு ஒரு செய்தியாக, ஒரு கருத்தாகத் தரும் பொழுதுதான் அந்தக் “கேட்டல்” என்ற செயலுக்கு ஒரு பொருளும் நிறைவும் கிடைக்கின்றது.

    “கேட்டல் ” என்ற செயலை நிறைவேற்றுவதில் மூளைக்கு ஒரு மிகப்பெரிய பங்கு இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. காதில் விழுவதெல்லாம் வெறும் ஒலித்துகள்களே. அதை மூளைக்கு எடுத்துச் சென்று அதை உருவகித்து, சம்பந்தப்பட்ட மொழியுடனும், அதைச் சார்ந்த முன்னறிவுடனும், தக்க பொருளுடனும் இணைத்து மூளை நமக்கு ஒரு வினாடியில் மிகச்சிறிய விழுக்காட்டில் அறிவாகத் தருகின்றது. என்ன விந்தையான செயல்!. இப்படி இருக்கும் பொழுது இந்தக்காதுகளை நாம் எவ்வாறு உபயோகமுள்ளதாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்?

    கற்றலில் இந்த “செவிச்செல்வத்திற்க்கு” ஒரு அறிய இடம் உள்ளது. பல புத்தகங்களைப் படித்து நமக்கு கிடைக்கின்ற அறிவு சிறிது நேரத்தில் ‘செவிச்செல்வத்தின்’ மூலமாகக் கிடைக்கின்றது. இதனைப்  பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மன-நரம்பியல் அறிஞர் முனைவர். வீ,.எஸ்  ராமச்சந்திரா அவர்கள் தன்னுடைய “கதை சொல்லும் மூளை”  (The Tell- Tale Brain ) என்ற புத்தகத்தில் கீழ்கண்டவாறு கூறுகின்றார்,

    “Human language seems so complex, multi-dimensional, and richly evocative that one is tempted to think that almost the entire brain, or large chunks of it at least must be involved.  After all, even the utterance of a single word like “rose” evokes a whole host of associations and emotions: the first rose you ever got, the fragrance, rose gardens you were promised, rosy lips and cheeks, thorns, rose-colored glasses, and so on. Doesn’t it imply that many far-flung regions of the brain must cooperate to generate the concept of rose? Surely, the word is just the handle, or focus, around which swirls a halo of association, meanings and memories.”

    “ரோஜா” என்ற ஒரு வார்த்தை சொல்லப்படும்பொழுது அதைக் கேட்பவரின் உள்ளத்தின் எத்தனை விதமான கற்பனைகள் எண்ணங்கள் உண்டாகலாம்.. ஒருவர்க்கு கிடைத்த முதல் ரோஜா, அதன் மனம், அதன் நிறம், அத்தோடு சேர்ந்த முள், ரோஜாத் தோட்டம், அந்த வண்ணத்தில் பூசப்படும் நிறங்கள், அந்த வண்ணத்தில் அணியப்படும் கண்ணாடிகள் ..இன்னும் எத்தனை எத்தனை .. இவ்வை அனைத்தும் வெளிவுப்படுத்த மூளையின் கிட்டத்தட்ட எல்லாப் பகுதிகளும் உபயோகத்திற்கு வருகின்றன.

    ஆகவே கற்றலில் “கேள்வி அறிவு” ஒரு முக்கியமான ஒரு தனிமனிதனின் அறிவு வளர்ச்சியைத் தூண்டக்கூடிய வகையில் அமைந்துள்ளது. நாம் எப்படிக் கேட்க வேண்டும்? இதற்க்கு ஏதாவது தனித்திறன்களோ அல்லது ஆர்வமோ தேவையா? பள்ளிகளில் ஆசிரியர்கள் எவ்வாறு கேள்வி அறிவை ஊக்கப்படுத்த வேண்டும் ? மேடைப்பேச்சில் கேட்பவர்களுக்கு மேலும் கேட்பதற்கான ஆர்வத்தை தூண்டுவிக்கும் வகையில் எவ்வாறு பேச வேண்டும்? – என்பதெல்லாம் நாம் அனைவரும் கற்று அறிந்துகொள்ளவேண்டிய இன்றயத் தேவை.

    இந்த கேள்வி அறிவின் சிறப்பை விளக்கும் வகையில் செகப்பிரியர் (Shakespere) தனது “ஹாம்லெட் ” (Hamlet) என்ற நாடகத்தில் ஒரு கட்டத்தில் பொலோனியஸ் என்ற ஒரு தந்தையின் வாயிலாக தன மகனுக்குத் தரும் அறிவுரையை கூறுகின்றார் :

    “Give everyman thy ear, but few thy voice.”

    கற்றலில் இந்தக் “கேட்டல்” திறனின் தாக்கங்களைப் பற்றித் தொடர்ந்து பார்ப்போம்.

    (தொடரும்)

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்  (5)

    க. பாலசுப்பிரமணியன்

    இறைவனை நாம் எப்படி அணுக வேண்டும்?

    திருமூலர்-1

    இறைவனிடம் பக்தி செய்ய எந்த முறை சரியானது? தினசரி கோவிலுக்குச் சென்று நாம் வணங்கிவிட்டு வருவதால் இறைவன் மகிழ்ச்சியடைவானா? தினசரி இறைவனுக்கு நைவைத்யம் அல்லது படைப்புகள் செய்தல் நமக்கு நன்மை கிட்டுமா?

    “அனுமன் ராமனிடம் கட்டிய பக்திபோல் நாம் செய்யவேண்டுமா? இல்லை, மீரா கண்ணனிடம் கட்டிய அன்பு சிறந்ததா? அல்லது சூர்தாஸ் கண்ணனை ஒரு குழந்தைபோல் பாவித்து காட்டிய அன்பு பெரிதா? இல்லை, கண்ணப்ப நாயனார் சிவனிடம் காட்டிய அன்பு சிறந்ததா? பட்டினத்தார் போல் எல்லாவற்றையும் துறந்து உண்மை நிலையை அறிந்தால் மட்டும் இறைவன் அருள்வானா?” என்றெல்லாம் நம் மனத்தில் பல சந்தேகங்கள் ஏற்படுகின்றன.  இதை “தாஸ்ய பக்தி, சக்ய  பக்தி, மாதுர்ய பக்தி, வாத்சல்ய பக்தி..” என்று ஒன்பது வகையாகப் பிரித்து பண்டைய இலக்கியங்கள் போற்றுகின்றன. . அதையெல்லாம் விட தினம் காலையில் இறைவன் பெயரை நாம் நினைத்து உருப்போட்டுக்கொண்டிருந்தால் நாம் இறைவனோடு இணையும் வாய்ப்புக்கள் அதிகம் என்றும் சிலர் நம்புகின்றனர். ஆனால், வாயில் அவன் பெயரை உச்சரித்துக் கொண்டு  மனம் மட்டும் எங்கோ அலைபாய்ந்தால் அதனால் என்ன பயன்?

    இந்த நிலையை வர்ணிக்கும் கபீர் தனது ஒரு பாடலில் கூறுகின்றார்.

    “கையிலே மாலை சுற்றிக்கொண்டிருக்கின்றது, வாயினுள்ளே நாக்கும் அவன் பெயரைச்சொல்லிச்  சுற்றிக்கொண்டிருக்கின்றது. மனதோ எல்லா திசையிலும் சுற்றிக் கொண்டிருக்கின்றது. இதுவா இறைவனை நினைக்கும் முறை?” என்று நம்மைச் சாடுகின்றார்

    ஆனால் திருமூலர் இறைவனை எவ்வாறு போற்றிக் கொண்டிருந்தார்?  இந்தப் பாடல் அதற்குச் சான்றாக இருக்கின்றது.

    மன்னகத்தான் ஒக்கும் வானகத்தான் ஒக்கும்

    விண்ணகத்தான்  ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்

    பண்ணகத் தின்னிசை பாடலுற்றானுக்கே

    கண்ணகத்தே நின்று காதலித்தேனே.     (31)

    மண்ணும் விண்ணும் அவனே, வானும் அவனே, வேதமும் அவனே, இன்னிசைப் பாடலின் உயிர்ப் பொருளும் அவனே,- அப்படிப்பட்டவனை எப்படி அன்பு செய்வது?  – அவன் நாம் கூப்பிட்ட குரலுக்கு வருவானோ? அவனிடம் நேரம் எங்கே உள்ளது?  ஆகவே, அவனை என் கண்ணுக்குள் வைத்துக் காதலித்தேன் என்று சொல்கிறார் முற்றும் துறந்த  முனிவர்.

    நம் மனதைத் தவிர, நம் கண்களைத் தவிர அவனை வைத்துப் போற்றச்    சிறந்த இடம் எங்கே யுள்ளது?

    இது  ஒரு அநுபூதி நிலை. இறைவனோடு  இரண்டறக்கலந்த  நிலை.,

    இந்த அனுபூதி நிலையை காரைக்கால் அம்மையார் எவ்வாறு உணருகின்றார்?

    கண்ணால் கண்டுஎன் கையாராகி கூப்பியும்

    எண்ணார எண்ணத்தால் எண்ணியும் – விண்ணொன்

    எரியாடி  என்றென்றும் இன்புறுவன் கொல்லோ

    பெரியானைக் காணப் பெறின்.

    நம் மனத்தின் உள்ளே இருக்கின்ற இறைவனை விட்டுவிட்டு நாம் எங்கெங்கோ அலைகின்றோம்.

    “பனையுள் இருந்த பருந்தது  போல

    நினையாதவர்கில்லை நின் இன்பந்தானே ..” (47)

    என்கிறார் திருமூலர்.

    மாணிக்க வாசகரோ தன்னுடைய அகக்கண்ணிலே அந்த தில்லையானின் நடனத்தைக் கண்டு களிப்புற்று அவனிடம் என்னவெல்லாம் வேண்டுகின்றார் ..

    பாட வேண்டும்நான் போற்றி நின்னையே

    பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக்கு

    ஆட வேண்டும்நான் போற்றி அம்பலத்

    தாடு  நின்கழற் போது நாயினேன்

    கூட வேண்டும்நான் போற்றி இப்புழுக்

    கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம்

    வீட வேண்டும்நான் போற்றி வீடுதந்

    தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே .

    இறைவனின் நினைவிலேயே அவனோடு ஒன்றாகி ஆனந்தப் பரவசத்தை அனுபவிக்கின்ற இந்த முன்னோரின் அருள்நிலைகள் நம் வாழ்க்கைப் பாதைக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளதன்றோ ?

    இந்த அனுபூதி நிலையை அடைந்ததும் ஐம்பொறிகளும் அதன் விளைவுகளும் அதனால் வரும் மயக்கங்களும் நீங்கப்பெற்று எல்லாப் பிணிகளுக்கு ஒரே மருந்தாய் இறைவனை நாடும் உள்ளம். இந்த உயரிய நிலையை அனுபவ பூர்வமாக உணர்ந்த பாட்டினத்தாரோ திருவெற்றியூரானை எவ்வாறு வேண்டுகின்றார் தெரியுமா ?

    ஓடுவிழுந்து சீப்பாயு மொன்பதுவாய்ப் புண்ணுக்

    கிடுமருந்தை யானறிந்து கொண்டேன் – கட்டுவருத்தந்

    தேவாதி தேவன் திருவொற்றி யூர்த்தெருவில்

    போவா ரடியிற் பொடி.

    இந்த நிலையில் மாந்தருக்கு மகிழ்வேது, துயரேது? இது எல்லாம் விடுபட்ட நிலையன்றோ ?

    காணும் இடங்களிலேயெல்லாம் அவன் நிறைந்திருக்க உணரும் பொருள்களெல்லாம் அவன் உணர்வே உள்ளிருக்க, அவனைத் தேடித் போவானேன்? உளமுருகி அழைத்தால் மட்டும் போதுமே ! அவன் நம்மைத் தேடி வரமாட்டானோ ?

    (தொடரும்)

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 74

    க. பாலசுப்பிரமணியன்

    கற்றலின் பாதைகளும் அதன் தாக்கங்களும்

    education-1-1-1

    மகாபாரதக் கதையிலே ஒரு நிகழ்வு. பஞ்ச பாண்டவர்கள் தங்கள் குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு முறை அர்ச்சுனன் தன்னுடைய தாத்தா பீஷ்மரிடம் சென்று கேட்கின்றான்

    “என்னுடைய கற்றல் எப்போது முடிவுபெறும்?” என்று. அந்தக்கேள்விக்கு பொறுமையாக பதிலளிக்கிறார் பீஷ்மர்

    “உனது கற்றலில் கால் பகுதி உன்னுடைய குருவிடமிருந்து கிடைக்கும்.
    இன்னொரு கால் பகுதி உன்னுடைய சுய கற்றலினால் கிடைக்கும்.
    மூன்றாவது கால் பகுதி உன்னுடைய சுற்றத்தோடு உறவாடும்பொழுது கிடைக்கும்.
    கடைசிப் பகுதி காலப் போக்கில் நிறைவுபெறும்.”

    காலத்தைக் கடந்து பொருள் தரும் அரிய கருத்தன்றோ இது!

    தற்காலத்தில் உண்மை நிலையை இது சுட்டிக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது. தற்காலத்தில் கல்வி வல்லுநர்கள் மாணவர்கள் மீது கற்றலின் தாக்கம் கீழ்கண்ட நான்கு முறைகளில் ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.

    1. முறைசார் கற்றல் (Formal learning)
    2. முறைசாராக் கற்றல் (informal learning)
    3. இடைக்கற்றல் (incidental learning)
    4. தற்செயலான கற்றல் (accidental learning)

    பொதுவாக பள்ளிக்கூடங்கள் மூலமாக கிடைக்கும் கற்றல் திறன்கள், மற்றும் ஆசிரியர்களின் தனிப்பட்ட பயிற்சிகள் மூலமாகக் கிடைக்கும் கற்றல் நுணுக்கங்கள், புத்தகங்கள் படிப்பதன் மூலமாக கல்வித்திட்டங்களுக்குட்பட்ட அறிவு அமைப்புகள் முறைசார் கற்றலின் வழியில் கிடைப்பவை.

    குடும்பத்தில் உறவுகள் மூலமாகக் கிடைக்கும் அறிவுத் துளிகள், வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் மற்றும் வெளி உலகின் தகவல் மையங்கள் மூலமாக கல்வித் திட்டங்களுக்குட்பட்ட மற்றும் அவைகளுக்கு அப்பாற்பட்ட கற்றல் வகைகள் முறைசாராக் கற்றல் வழியில் நமக்கு கிடைப்பன,

    வாழ்க்கைப் போக்கில் நாம் செய்கின்ற பல செயல்கள் மூலமாகவும், அனுபவங்கள் மூலமாகவும் உணர்வுகள் மூலமாகவும் நாம் சேகரித்துக் கொள்ளும் பல விஷயங்கள் இடைக்கற்றலாக நமது வாழ்வில் பரிணமிக்கின்றன.

    திடீரென்று நமக்கு ஏற்படும் பல அனுபவங்கள் சில மறக்கமுடியாத, மறக்ககூடாத அறிவை நமக்குத் தந்து செல்கின்றன. இந்த கற்றல் பரிமாணங்களை நாம் எதிர்பார்த்திருக்கவோ அல்லது திட்டமிட்டிருக்கவோ மாட்டோம். ஆனால் இவற்றில் பல நம்முடைய வாழ்க்கை வளம் பெறுவதற்கான வாழ்க்கைக் கல்வியாக அமைந்து விடுகின்றன. இவை அனைத்தும் தாற்காலிகக் கற்றலாக அமைகின்றன.

    இந்த நான்கு வகையான கற்றல் வழிகளும் நம்முடைய அறிவையும்,(knowledge) புத்திக்கூர்மையையும் (intelligence), திறன்களையும் (skills) மேம்படுத்தவும் வளம்பெறச்செய்யவும் உதவுகின்றன. ஆயினும், இந்த நான்கு வழிகளின் தாக்கங்களின் விழுக்காடுகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக அமைவது மட்டுமின்றி தாக்கங்களின் ஆழப்பரிமாணங்களும் மாறுபட்டு நிற்கின்றன.

    சமுதாயச் சூழ்நிலைகள், குடும்பச் சூழ்நிலைகள், பொருளாதாரச் சூழ்நிலைகள், பூகோளச் சூழ்நிலைகள் ஆகிய பல வெளியுலக தாக்கங்களின் காரணமாக இந்த நான்கு கற்றல் வழிகளும் அவற்றின் தன்மைகளும், அவற்றின் பரிமாணங்களும் மாறுபடுகின்றன. உதாரணமாக சில பத்தாண்டுகளுக்கு முன்பு கற்றலின் பெரும் பங்கு முறைசார் கல்வி மூலாமாகவும், ஓரளவு முறைசாராக் கல்வி வழியிலும் கிடைத்துக்கொண்டிருந்தது. ஆனால் தற்போதைய ஆராய்ச்சிகளின்படி கிட்டத்தட்ட 90 விழுக்காடு கற்றல் தாக்கங்கள் முறைசாராக் கல்வி வழியில் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது.

    ஆகவே தற்காலக் கல்வி முறைகளில் பள்ளிகளில் முறைசார் மற்றும் முறைசாரா கற்றல் முறைகளுக்கான இணைப்புகளும், பாலங்களும் அமைக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இதன் காரணமாக பள்ளிகளில் ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் முறைகளிலும் நுட்பங்களிலும் தேவையான மாற்றங்கள் கொண்டுவர வேண்டிய நிர்பந்தமும், முறைசார் கற்றல் மூலமாக முறைசாரக் கற்றலையும் மேம்படுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

    தொழில்நுட்பங்கள், கணினிகள், அலைபேசிகள் போன்றவற்றின் அளவற்ற உபயோகங்களும், தொழில்நுட்பக் கருவிகளின் மேம்பட்ட ஒருங்கிணைந்த பயன்கள் மூலமாகவும் மற்றும் வேகமான, தடையற்ற, அதீதமான கல்வி கற்கும் முறைகளாலும் கல்வி கற்கும் வேகமும் இடங்களும் மாறுபட்டும் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டும் வளர்ந்து வருகின்றன.

    ஒருவகையில் இந்த மாற்றங்கள் கற்றலை சிறப்பித்துக்கொண்டும் மேம்படுத்திக்கொண்டும் எளிமையாக்கிக்கொண்டும் வருகின்ற நேரத்தில் கற்பவர்களிடையே அதிக வேறுபாடுகளையும் எதிர்பார்ப்புக்களையும் மனஅழுத்தங்களையும் உண்டாக்கி வருகின்றன. இந்தத் தாக்கங்கள் கற்றலை மட்டுமின்றி வாழ்க்கை முறைகளையும் சிந்திக்கும் செயல்படும் திறன், வளம் மற்றும் பாங்குகள் ஆகியவற்றை மாற்றிய வண்ணம் இருக்கின்றன.

    ஆகவே, பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றலுக்கு உகந்த சூழ்நிலைகளை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு சிறப்புத் திறன்களின் தேவை வலுக்கின்றதுஇந்த மாறிவரும் தேவைகளுக்கான பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு எந்த அளவு கிடைக்கின்றன என்ற கேள்வி ஒரு பக்கம். இந்தப் பயிற்சிகளை எந்த அளவுக்கு அவர்கள் தங்கள் வகுப்பறைகளில் உபயோகித்துக்கொள்கிறார்கள் என்ற கேள்வி ஒரு பக்கம். இதை வெறும் தொழில் சார்ந்த மாற்றமாக மட்டும் கருதுகின்றார்களா அல்லது இந்த மாற்றங்களை வருங்காலச் சமுதாயத்திற்கு வித்திட வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயல்படுகின்றார்களா என்ற ஐயங்கள் மற்றொரு பக்கம்.

    இதற்கு நடுவில் முன்நிற்கின்ற  உண்மை என்னவென்றால் எந்தக்கல்வி முறையிலே கல்வி கற்றாலும் மாணவர்கள் மாற்றங்களை பள்ளிகளைவிட ஆசிரியர்களைவிட அதிக வேகமாகவும் அதிக எளிதாகவும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான். இதைக் கருத்தில் கொண்ட ஒரு கல்வி வல்லுனரின் கூற்று: “தற்காலத்தில் மாணவர்களோடு ஆசிரியர்களும் கற்றலின் பங்குதாரர்களாக இருக்கிறார்கள்” என்பதே.

    (தொடரும்)

    Share