Tag: க.பாலசுப்பிரமணியன்

  • வாழ்ந்து பார்க்கலாமே 45

    க. பாலசுப்பிரமணியன்

    கொஞ்ச நேரம்.. உங்கள் மனதோடு..

    அந்த மாலை நேரத்தில் கோவிலைச் சுற்றி வந்துகொண்டிருந்தேன். அங்கே அந்த மண்டபத்தின் அருகில் எனக்குப் பழக்கமான ஒரு நண்பர் தூணில் சாய்ந்தபடி அமர்ந்திருப்பதைக் கண்டு வியந்தேன். பொதுவாக அவரை அந்தக் கோவில் பக்கம் நான் பார்த்ததில்லை. மிகவும் அவசரமான முற்போக்கான வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவர் அவர். அவர் எதற்கு அன்று அங்கே வந்துள்ளார் என்பதை அறிய ஆர்வம் தூண்டியது. மெதுவாக அவர் அருகில் சென்று “அய்யா வணக்கம்” என்றேன். “வாங்க தம்பி.. நல்லா இருக்கீங்களா..” என்று ஒரு சோர்ந்த புன்னகையை அள்ளி வீசியவாறு என்னைப் பார்த்தார்.

    “நான் நலம்தான் அய்யா.. நீங்க எங்கே இந்தப் பக்கம்?” என மெதுவான குரலில் கேட்டேன்.

    சிரித்துக்கொண்டே அவர் சொன்னார் “ஒண்ணுமில்ல தம்பி. கொஞ்சம் மனசு சரியில்லாமல் இருந்தது. அதனால் மக்கள் நடமாட்டமில்லாத பகுதியாக கோவிலிலே இந்த மண்டபத்திலே ஒரு ஓரமாக அமர்ந்து என்னோடவே நான் பேசிக்கொண்டிருந்தேன்.”

    அவர் சொன்னது எனக்குப் புதுமையாக இல்லை. “என்னோடவே நான் பேசிக்கொண்டிருந்தேன்” அவருடைய தனிமையை பாதிக்க விரும்பாமல் நான் “அப்படியா… அப்போ நான் உங்களைத் தொந்தரவு செய்யக்கூடாது.. உங்கள் தனிமையை நீங்கள் பாராட்ட வேண்டும்..” என்று விடைகூறி மேலே நகர்ந்தேன்.

    அவருடைய அந்த வார்த்தைகள் என்னை சற்றே உலுக்கிவிட்டன. “மனசு சரியாக இல்லை…” நம்மில் எத்தனை பேர் இந்த மாதிரியான சூழ்நிலைகளை அடிக்கடி சந்திக்கின்றோம். ஏதாவது ஒரு காரணத்திருக்காக இந்த மனசு சரியில்லாமல் போய்விடுகின்றது. என் மனதிடமே நான் கேட்டேன்: “ஏன் அடிக்கடி நீ பேய் பிடித்தாற்போல் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு துன்புறுத்துகின்றாய்?”

    அதைக் கேட்ட என் மனம் சிரித்தது..

    அது சொன்னது:

    1, நான் கேட்டது கிடைக்கவில்லையென்றால் நான் தளர்வடைகின்றேன்.
    2. நான் நினைத்தது நடக்கவில்லையென்றால் நான் துடித்துப் போகின்றேன்
    3.என்னை மற்றவர்கள் பாராட்டவில்லையென்றால் தன்மானம் பாதிக்கப்பட்டுச் சோர்வடைகின்றேன்.
    4. நான் சொன்னதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் என் இயலாமையைக் கண்டு வருந்தி களைத்து விடுகின்றேன்றேன்.
    5. என் மனதின் வேகத்திற்கு உடலோ சூழ்நிலைகளோ அல்லது சார்ந்தவர்களோ ஈடு கொடுக்கவில்லையென்றால் வெறுத்துப் பொய் மூலையில் அமர்ந்து விடுகின்றேன்.
    6. நான் செய்த பல நற்செயல்களை சுற்றமும் சூழலும் மறந்து அவைகளை ஏணிப்படிகளாக்கிக் கொண்டு என்னை ஒதுக்கிவிடும்போது புண்பட்டு நோயாளியாகி விடுகின்றேன்.

    என்ன செய்வது.? அடிக்கடி இப்படி பல பிரச்சனைகள் வந்தவண்ணம் இருக்கின்றேதே! உனக்குத் தெரியாதா என்ன? உன் மனதிலும் நான் இவ்வாறுதானே வேலை செய்கின்றேன்.”

    உண்மைதான்! நம் அனைவருடைய மனமும் பலவித காரணங்களுக்காக புண்பட்டு நோய்வாய்ப்பட்டு அதற்கான சரியான மருந்தைத் தேடிக்கொண்டிருக்கின்றது. அதற்கு என்ன மருந்து போடலாம்? எந்த வைத்தியரிடம் நம் மனத்தைக் காட்டி மருந்து கேட்கலாம் ?

    அந்தக் காலத்தில் வீடுகளில் “பாட்டி வைத்தியம்” என்று இருந்தது. இருமலுக்கும், உடம்பு வலிக்கும், மற்றும் சிறிய உபாதைகளுக்கு பாட்டி ஒரு கசாயத்தையோ அல்லது ஒரு லேகியத்தையோ நமக்கு கொடுப்பார்கள். முதலுதவி போல பல நேரங்களில் இவையே நம்முடைய உடல் நோயைக் கட்டுப்படுத்திவிடும். அதுபோல நம்முடைய மன உளைச்சல்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் முதல் வைத்தியம் நமது மனதேதான். அதனிடம் நாம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் “உனது நோயை நீ எவ்வாறு தீர்த்துக் கொள்ளப்போகின்றாய்? உன் புண்களுக்கு நான் என்ன மருந்து போடுவது?” இதற்கு நாம் நமது மனதோடு பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.

    உலகத்தில் உள்ள பல மனிதர்களோடு நாம் நித்தம் எத்தேனையோ மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருக்கின்றோம், எப்போதாவது நாம் நம்முடைய மனதோடு பேசியது உண்டா? எப்பொழுதாவது அதை ஒரு பொருட்டாக மதித்ததுண்டா? சற்றே யோசித்துப் பாருங்கள்.

    நம் மனதோடு நாம் பேசுவது என்பது நமது வாழ்க்கையின் ஒரு முக்கியமான நிகழ்வு. அது நமக்கு நம்மையே அடையாளம் காட்ட உதவுகின்றது. நம்முடைய உள்ள நலத்தையும் நம்முடைய சிந்தனைகளின் வளத்தையும் நம்முடைய திறன்களையும் வல்லமைகளையும் மற்றும் இயலாமைகளையும் நமக்கு படம் போட்டுக் காண்பிக்கின்றது. நம்முடைய உறவு முறைகளில் உள்ள சிறப்புக்களையும் அதில் நாம் கையாளும் முறைகளில் உள்ள தவறுகளையும் நமக்கு உணர்த்துகின்றது. “யாரிடமாவது நம்முடைய குறைகளைச் சொல்லி அழமாட்டோமா’ என்று நாம் நினைக்கும்பொழுது நமது மனம் அருகில் அமர்ந்து “நான் இருக்கின்றேன் உன் துன்பங்களைக் கேட்பதற்கு” என்று சொல்லி தோழமையுடன் கேட்க அமர்கின்றது. நமக்கு எது சரியென்று தெரியவில்லையென்றால் அது ஒரு நீதிமானாக அமர்ந்து சரியான வழியைக் காட்டுகின்றது. ஒரு நிகழ்வு இப்படி நடந்துவிட்டதே என்று நாம் வருந்தும் பொழுது “அட போப்பா, இதெல்லாம் வாழ்க்கையில் நடக்கறதுதானப்பா. எழுந்து அடுத்த வேலையைப் பாரு” என்று ஊக்கம் அளிக்கின்றது.!

    “நான் எழுதிய இந்த அருமையான கவிதையைக் கேட்பதற்கு யாருமில்லையே.. என்ன உலகமடா இது” என்று நான் நொந்துபோகும்பொழுது “நண்பா. நானிருக்கின்றேன். உன் கவிதையை நீ எத்தனை முறை வேண்டுமானாலும் படி. திரும்பாத திரும்பப் படித்து ஆனந்தப்படு. நான் உன்னருகில் அமர்ந்து கேட்கின்றேன்” என்று சொல்லி உள்ளே என்னுடைய கவியரங்கத்திற்கான மேடையைத் தயார் செய்து கொடுக்கின்றது !
    இப்படி பல உதவிகளை செய்து ஒரு நண்பனாக, ஒரு ஊழியனாக, ஒரு உறவாக, ஒரு மருத்துவனாக நமக்கு உழைக்கும் மனதுக்கு மரியாதை கொடுத்து தினம் ஒரு சில மணித்துளிகள் அதோடு பேசிக்கொண்டிருந்தால் குறைந்தா போகும்? நாம் ஏன் செய்வதில்லை?

    “தினசரி உங்கள் மனதோடு கொஞ்ச நேரம் பேசுங்கள். அதை போன்ற ஒரு மருத்துவம் உலகில் இல்லை” என்று ஒரு மனநல மருத்துவர் மிக அழகாக எடுத்துரைத்தார்.

    “அய்யா. அதெல்லாம் சரிதான், என் மனதோடு தனியாக உட்கார்ந்து பேசுவதற்கு எங்கு நேரம் இருக்கின்றது?” என்று ஒருவர் குமுறினார். மற்ற அனைத்திற்கும் நேரத்தைத் தேடித்தடி வீணடிக்கின்ற நாம் இதற்கும் சில மணித்துளிகளைத் தேடி அதை ஒரு தினசரி பழக்கமாகக் கொண்டாலென்ன?சற்றே யோசியுங்கள். உங்கள் மனம் உங்களோடு பேசக் காத்துக்கொண்டிருக்கின்றது. என்ன பேசவேண்டும்? எப்படிப் பேசவேண்டும்? அதனால் நமக்கு உடனடிப் பலன்கள் என்ன கிடைக்கும்? – தொடர்ந்து பார்க்கலாமே!

    உங்கள் வாழ்க்கை – உங்கள் கைகளில் .. வாழ்ந்து பார்க்கலாமே !
    (தொடரும்)

    Share
  • சாப்பாடு இலவசம் !!

    க. பாலசுப்ரமணியன்

    அந்தக் கட்டிடத்தைச் சுற்றி சுமார் நூறுபேர் நின்று கொண்டிருந்தார்கள். அந்தக் கட்டிடத்தின் வாயிலில் இருந்த ஒரு பலகையில் “சாப்பாடு இலவசம்” என்று எழுதப்பட்டிருந்தது. அதன் கீழே சாப்பாட்டு நேரம் மதியம் 1 மணி முதல் 2.30 வரை’ என்றும் எழுதப்பட்டிருந்தது. பக்கத்தில் போவோர் வருவோர் தங்கள் கடிகாரங்களை ஒரு முறை பார்த்துக்கொண்டிருந்தார்கள். “இன்னும் சற்று நேரம் கழித்து வரலாமே’ என்று சொல்லிக்கொண்டே ஒருவர் அங்கிருந்து நகர்ந்தார்.பகல் ஒரு மணிக்கு அந்தக் கட்டிடத்தின் வெளிவாயில் மூடப்பட்டு அருகே உள்ளே ஒரு சிறிய வாயில் அருகே இரண்டு பேர்கள் நாற்காலி மேஜை போட்டுக்கொண்டு அமர்ந்தனர். ஒருவர் உள்ளே நுழைய முயன்ற போது அவரை நிறுத்தி “எங்கே போறீங்க” என்றனர். “சாப்பாட்டுக்காக உள்ளே ” என்றார் அவர்.

    “நுழைவுக் கட்டணம் இருபது ரூபாய் செலுத்திவிட்டு உள்ளே போங்கள்” என்கிறார். “சாப்பாடு இலவசம் தாங்க” ஆனால் அந்த இலவசச் சாப்பாட்டு மண்டபத்திற்குள் செல்ல அனுமதிக் கட்டணம் இருபது ரூபாய்.”

    சற்றே வியந்த அந்த மனிதர் நினைத்தார் “என்ன அநியாயமாக இருக்கு” என்று முனகிக்கொண்டே நினைத்தார் “சரி போனால் போகுது. வெளியிலே ஹோட்டல்லே சாப்பிட்டால் எண்பது ரூபாய் ஆகுது. இங்கே இருபதோடு முடியுதே.”. தன் மனதைத் தேற்றிக்கொண்டு அனுமதிச் சீட்டை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றார்.

    அந்த மண்டபத்தில் இரண்டு வரிசைகள் அமர்வதற்காக நாற்காலிகளும் மேசைகளும் போடப்பட்டிருந்தன. அருகில் இரண்டு வரிசைகள் கீழே அமர்ந்து உண்பதற்காக பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன அதைத் தொடர்ந்து இரண்டு வரிசைகள் பாய்கள் போடப்படாமல் அமர்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்தவர் ஒரு நாற்காலியில் அமர முயன்றபோது அங்கிருந்த ஒரு சிப்பந்தி “அய்யா. டிக்கெட் வாங்கிட்டீங்களா” என்று கேட்டார். ” வாங்கிட்டேனே ” என்று சொன்னவாறு தனது அனுமதிச் சீட்டைக் காண்பித்தார். ” இது இல்லீங்க..” நாற்காலியில் உட்கார்ந்து சாப்பிட டிக்கெட் வாங்கிட்டிங்களா” எனக் கேட்டார். ” நாற்காலிக்கு டிக்கெட்டா ” என்று என்று திகைத்தவாறே வினவினார். உடனே அந்த சிப்பந்தி ‘ஆமாங்க…நாற்காலிக்கு பத்து ரூபாய் டிக்கெட். பாய்க்கு ஐந்து ரூபாய் டிக்கெட். தரையில் உட்கார்ந்து சாப்பிட இரண்டு ரூபாய் டிக்கெட்..”

    “என்னங்க இது. வெளியிலே சாப்பாடு இலவசம்னு போட்டிருக்கு.. நீங்கள் உள்ளே நுழைய டிக்கெட் வாங்குறீங்க . உட்காருகின்ற இடத்துக்கு டிக்கெட் வாங்குகிறீங்க” எனச் சிறிது கோபத்துடன் கேட்டார்.. “ஆமாங்க சாப்பாடு உண்மையிலேயே இலவசம் தாங்க. மத்தது எல்லாத்துக்கும் கட்டணம் உண்டு. முணுமுணுத்துக்கொண்டே தன்னுடைய பையிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அந்த மேசை மீது வைத்துவிட்டு அமர்ந்தார்.

    சிறிது நேரத்தில் இன்னொரு சிப்பந்தி இவரை அணுகி “அய்யா இலை வேணுங்களா? ” எனக் கேட்டார். “பின்னே எப்படி.. இலையில்லாமல் எப்படி சாப்பிடறது?” என்றவுடன் ” அய்யா.. இலை ஐந்து ரூபாய்.”

    உள்ளே நுழைந்த அன்பரால் என்ன செய்வதென்றே புரியவில்லை. வேண்டா வெறுப்பாக ஒரு ஐந்து ரூபாய் கொடுத்து இலையைக் கையில் வாங்கிக் கொண்டார். அதைத் தொடர்ந்து வந்து சிப்பந்தி “அய்யா. தண்ணி வேணுங்களா.” எனக்கேட்க அவரிடம் வேறு ஏதும் கேட்காமல் “இது எவ்வளவு” என்று முகத்தைச் சுழித்துக்கொண்டே கேட்டார். “பாட்டில் தண்ணி இருபது ரூபாய். டம்ளரிலே தண்ணி வேணுமென்றால் டம்ளர் ரெண்டு ரூபாய் .. தண்ணி மூணு ரூபாய். ” அவர் பையில் இருந்த பணம் கரைந்து கொண்டிருந்தது. தான் தவறு செய்து விட்டோமோ என்ற எண்ணம் மனதை உறுத்தியது.

    உடனே இலவசச் சாப்பாடு இலையில் விழுந்தது. அதுவும் அளவுச் சாப்பாடுதான். “சார், ரெண்டாவது தடவை பொரியல் கூட்டு என்று கேட்கக்கூடாது. ஒரு முறைதான் போடுவோம்” என்று சொல்லிக்கொண்டே அந்த சிப்பந்தி பந்தியில் முன்னேறினார்.

    பந்தியில் இருந்த இன்னொரு நபர் “என்னங்க… சாம்பாரில் உப்பே இல்லீங்களே” என்கிறார். அதைப் பரிமாறிக் கொண்டிருந்தவர் “எங்களுக்கு எப்படீங்க உங்களுக்கு உப்பு வேணுமா வேண்டாமா என்று தெரியும். வேணுமென்றால் ரெண்டு ரூபாய் கொடுத்து உப்பு வாங்கிப் போட்டுக்கொள்ளுங்கள்.:”என்றார்

    உடனே அந்தப் பந்தியில் இருந்தவர்கள் அனைவருக்கும் அடக்க முடியாத கோபம் வந்தது. அவர்கள் எழுந்து நின்று கூச்சல் போட ஆரம்பித்து விட்டனர். “என்ன ஏமாற்று வேலை இது.. வெளியிலே இலவசச் சாப்பிடு எனப் பலகை வைத்துவிட்டு ஒவ்வொன்றிற்கும் காசு வாங்குகின்றனர். மொத்தத்தில் கூட்டிப் பாரத்தால் வெளியே ஒரு நல்ல உணவகத்தில் சாப்பிடும் கட்டணத்தை விட இது அதிகமாக இருக்கிறதே.” கொந்தளிப்பு அதிகமானது.. உடனே வண்ண உடைகளுடன்  டையும் அணிந்திருந்த மேலதிகாரி அங்கே வந்தார்.

    “அமைதி… அமைதி.. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாங்கள் எதுவும் தவறாகச் செய்யவில்லையே.. சாப்பாடு இலவசம் என்று எழுத்து மூலமாக அறிவித்தோம். அதை நாங்கள் நிறைவேற்றுகின்றோம். சட்டப்படி நாங்கள் செய்தது உண்மையானது. நேர்மையானது…”

    “அய்யா.. நான் சாப்பிட அமரவே இல்லை. எனக்கு சாப்பாடு வேண்டாம். நான் கட்டிய பணத்தை மட்டும் திருப்பிக் கொடுங்கள்”

    “தாராளமாக. ஆனால் ஒரு முறை டிக்கெட் வாங்கிவிட்டால் அதில் தொண்ணுறு விழுக்காடு சேவைக் கட்டணமாக கழித்துக்கொண்டு மீதியைத் தான் தருவோம்.”

    அந்த அன்பர் மயங்கி விழுந்தார்..

    கூட்டம் சற்றே கலைந்து வரும் தருவாயில் ஒருவர் வாசலில் இருந்த சிப்பந்தியிடம் சொன்னார். “நல்ல வியாபாராமய்யா .. இலவசமென்று சொல்லிவிட்டு மக்களை ஏமாற்றும் வேலை.. எங்கேதான் கத்துக்கிட்டாங்களோ.”

    வெளியே அமர்ந்து வசூலித்துக்கொண்டிருந்தவர் சொன்னார். “அய்யா.. இந்த அமைப்பை நடத்தக்கூடிய ஆறு பேர் போன மாதம் வரைக்கும் ஒரு விமானக் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அங்கே ஆட்குறைப்பு ஏற்பட்டு வெளியே வந்தவுடன் அதே வழிமுறைகளை வைத்து இந்த வியாபாரத்தை ஆரம்பித்து விட்டார்கள்…”

    காதில் விழுந்ததைச் சரியாகக் கேட்க முடியாதவர்க்கு மேலே சென்று கொண்டிருந்த ஒரு நீல வண்ண விமானத்தின் சத்தம் காதை அடைத்தது. தலையை உயர்த்தி விமானத்தை நோக்கியவாறு “அய்யோ.. வேணாமப்பா.. அதை பார்ப்பதற்கு வேறே காசு வசூலிக்கப் போறாங்க…” என்று சொல்லிக்கொண்டே மேலே நடந்தார்.

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 44

    க. பாலசுப்பிரமணியன்

    தோல்விகள் தொடர்கதையானால் ..

    “சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்; நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்” – தொலைக்காட்சியில் இந்தப்பாடல் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. கவியரசு கண்ணதாசனின் இந்தப்பாடலின் ஆழமான கருத்து மனோதத்துவ அடிப்படையில் அலசிப்பார்க்கும் பொழுது ஒரு மனதின் பல பரிமாணங்களையும் உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் துயரங்களையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது. வெற்றி – தோல்வி, மகிழ்ச்சி – துயரம், உயர்வு -தாழ்வு, வளமை -வறுமை  ஆகிய அனைத்தும் பிணைந்ததுதான் வாழ்க்கை என்பதை எல்லோரும் அறிகின்றோம். ஆனாலும் தோல்விகளையும் துயரங்களையும் தாங்குகின்ற பக்குவம் நமது மனதிற்கு ஏற்படுவதில்லை.

    “நீங்கள் சொல்வது சரிதான் அய்யா. தோல்விகளைத் தாங்குகின்ற பக்குவத்தை அடைய முயற்சிக்கின்றேன். ஆனால் துயரங்களும் தோல்விகளும் திரும்பத்திரும்ப வரும்பொழுது எப்படி சம்மாளிப்பது?. தோல்விகளின் தொடர்ச்சியில் மனம் துவண்டு விடுகின்றதே – என்ற கூற்று காதில் விழத்தான் செய்கின்றது. “பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும் “என்ற பழமொழி நினைவுக்கு வருகின்றதே !

    ஆங்கிலத்தின் மிகப்பெரிய கவிஞர் செகப்பிரியர் (Shakespeare)  ஓர் நாடகத்தில் கூறுகின்றார் : “துயரங்கள் வரும்பொழுது தனித்து வருவதில்லை. அணி அணியாக வருகின்றன” (When Sorrows come, they come not in a single spies, but in battalions) பலரும் அனுபவிக்கும் உண்மை இது! இதற்கு வழி என்ன? மன உறுதிதான் !

    அமெரிக்காவின் மிகச் சிறந்த தலைவராக விளங்கிய ஆப்ரகாம் லிங்கன் ஒரு சாதாரண தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்து எத்தனையெத்தனை சோதனைகளைச் சந்தித்தார். எத்தனை தோல்விகள் அவரைப் பின்தொடர்ந்தன ! தளர்ந்தாரா அவர்? ஒவ்வொரு தோல்வியையும் ஒரு பாடமாக ஏற்றுக்கொண்டு அவற்றை தன் முன்னேற்றத்திற்கான அடிக்கல்லாக மாற்றிக்கொண்டாரே! மற்றவர்களைக் கவரும் வசீகரமும் உடல்வாகும் இல்லாதவராக இருந்தாலும் தன் திறன்களால், தன் தொண்டால், தன் முயற்சிகளால் எல்லோரையும் ஈர்க்கும் காந்த சக்தி படைத்த மனிதராக மாறினாரே !  தோல்விகள் அனைவருக்கும் வரும். ஆனால் தொடர்ந்த தோல்விகள் அனைவருக்கும் வருவதில்லை. அப்படி வரும்பொழுது துவண்டுவிடாமல் எழுந்து ஒரு சிங்கத்தைப் போல சீறு நடை போடுகின்ற தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ளலாமே!

    ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் கதைகள் அவருடைய ஆரம்பக்காலத்தில் எத்தனை முறை திருப்பியனுப்பப்பட்டது. அவர் முயற்சியைக் கைவிடவில்லையே ! உலகம் தன்னை ஒரு மிகச் சிறந்த எழுத்தாளராகப் போற்றும் வரையில் அவர் தளரவில்லை! உலகின் பல முன்னோடிகள் பெர்னார்ட் ஷாவோடு பேசவும் கருத்து பரிமாறவும் துடித்தார்களே!

    சர் ஐசாக் நியூட்டன் என்ன சொன்னார் “ஆயிரமாவது தடவை நான் ஒரு  பல்பை கண்டுபிடித்த போது  எவ்வாறு அதை 999 வழிகளில் செய்யக்கூடாது எனக் கற்றுக்கொண்டேன்”

    சரித்திரம் என்ன சொல்கின்றது?  – கீழே விழுந்தவர்கள் எழுந்து நின்றார்கள்; தடுக்கி விழுந்தவர்கள்- மீண்டும் எழுந்து நடக்க முயன்றார்கள்; தோல்வி அடைந்தவர்கள் – மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெற்றி அடைந்தார்கள். சாதனை படைத்தார்கள் ! இப்படி சரித்திரம் படைத்தவர்கள் ஒன்றல்ல-இரண்டல்ல-ஆயிரமாயிரம்பேர்கள் ! இவர்கள் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டாமா?

    பல நேரங்களில் நமது தவறான முடிவுகளால் நாம் தோல்வியைச் சந்திக்கிறோம். அந்த நேரங்களில் நமது முடிவுகள் தவறு எனது தெரிந்துவிட்டால் அதை ஏற்று மாற்றிக்கொள்ள துணியவேண்டும். தொடர்ந்து நமது தவறான முடிவுகளோட வாழ நினைத்தாலோ அல்லது நம்முடைய அகந்தை ,தற்பெருமை காரணமாகவோ நமது முடிவுகளைத் தொடர்ந்து போற்றிவந்தாலோ எப்படி வெற்றிப்படிகள் மீது ஏற முடியும்?

    அறிவியல் ஆராய்ச்சிகளில் “பிழை பகுப்பாய்வு” (Error Analysis) என்ற ஒரு முறை பல இடங்களில் நடத்தப்படுகின்றது. அதன் பொருள் என்ன? நமது கண்டுபிடிப்புக்கள் ஆராய்ச்சிகள் ஆகியவற்றில் பிழைகள் ஏற்படுவதும், பிழைகள் கண்டுபிடிக்கப்படுவதும் ஒரு சாதாரண நடப்பு. ஆனால் அந்தப் பிழைகள் ஏன் ஏற்பட்டன? அதற்கான மூல காரணங்கள் என்ன? அந்தப் பிழைகளை எப்படி சரி செய்யலாம்? என்ற ஆய்வு நடத்தப்படுகின்றது. இது தவறுகளை மறுமுறை வராமல் இருப்பதற்கான கற்றலையும் திறன்களையும் நமக்கு அளிக்கும். இந்தப் பழக்கத்தை நாம் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திக் கொள்ளவேண்டும். தோல்விகளை அலசி ஆராய்ந்து தவறுகளை ஏற்று அதற்கான மாற்று வழிகளை கண்டுபிடித்து மாற்றத்தைக் கொணருதல் வெற்றிக்கான அறிகுறிகளை நமக்கு காட்டும்.

    மூளை-நரம்பியல் வல்லுநர்கள் தவறுகள் ஏற்படுவதற்கான காரணங்களிப் பற்றி செய்த ஆராய்ச்சியில் கவனக்குறைவுகளைத் தவிர மூளையில் ஒரு முறை ஏற்பட்ட கற்றலின் தாக்கங்கள் தொடர்வதாகவும் அவைகளுக்கான நியூரான்களின் வலைப்பின்னல்கள் வலுப்பட்டதால் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தாமதிப்பதாகவும் அதனால் தொடர் தவறுகள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். இந்த நிலையை மாற்றுவதற்கான சூழ்நிலைகளை புதிய கற்றல்களே உருவாக்கும். எனவே, தவறைத் தவறு என்று அறிந்து கொள்ளாத வரையில் தொடர் தவறுகள் ஏற்பட்டுக்கொண்டிருக்க வாய்ப்புக்கள் உண்டு.

    இந்த மாதிரியான தொடர் தவறுகளால் ஏற்பட்ட தோல்விகளால் மூடப்பட்ட நிறுவனங்களும் உண்டு. பல்லாண்டு காலங்கள் மிகச் சிறந்ததாக இருந்த நிறுவனங்கள் தங்களுடைய மூளைகளைச் சலவை செய்து புதிய கற்றலுக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்த வில்லை  ஒரு தனி மனிதனுக்கோ அல்லது ஒரு நிறுவனத்துக்கோ பல காலங்கள் சிறப்பான உயர்நிலை சமூக அந்தஸ்து கிடைத்ததாலும் எவ்வளவு நாட்கள் அவை தொடரும் என்பதற்கான எந்த உத்திரவாதமும் இல்லை. ஒரு காலத்தில் மிகச் சிறப்பான காமெராக்களை கண்டுபிடித்த கோலோச்சிய கோடக் என்னும் நிறுவனம் வருகின்ற மாற்றங்களைக் கண்டுபிடித்து அதற்கான  தயாரிப்புகளில் ஈடுபடாததால் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

    இந்த நிலைக்கு வந்த பல நிறுவனங்களின் வழக்கு ஆய்வுகள் ஒன்றை மட்டும் தெளிவாகத் தெரியப்படுத்துகின்றன. தோல்விகள் பெரும்பாலும் ஒரு கணத்தில் வருவதில்லை. அவை வருவதற்கான பல அறிகுறிகள் நமக்கு முன்னமே கிடைத்து விடுகின்றன. நாம் விழிப்புடன் இருத்தல் மிக்க அவசியம்.

    நண்பர்களே ! தோல்வியையும் தொடர் தோல்விகளையும் கண்டு அஞ்சவேண்டியதில்லை… அவைகள் நமக்கு பின்னால் வரும் வெற்றிக்கு நிச்சயமான வழிக்காட்டல்களைக் கொடுக்கும்.

    துணிந்து முயற்சிக்கலாமே!!.. இன்றைய தோல்விகளை நாளைய வெற்றிகளாக மாற்றலாமே!!

    (தொடரும்)

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 43

    க. பாலசுப்பிரமணியன்

     

    மன அழுத்தங்களும் தோல்விகளும்

    வாழ்க்கையிலே பல பேர்கள் நல்ல அறிஞர்களாக இருந்தாலும், நன்கு படித்தவர்களாக இருந்தாலும், நல்ல திறனுடையவர்களாக இருந்தாலும் அடிக்கடி தோல்வியைத் தழுவிக்கொள்கின்றனர். “இவ்வளவு இருந்தும் நாம் வாழ்க்கையில் வெற்றி பெற முடியவில்லையே” என்ற ஆதங்கத்தில் தங்களைத் தாங்களே வருத்திக்கொள்கின்றனர். இதற்கு ஒரு முக்கிய காரணம் – அவர்களில் பலர் மன அழுத்தங்களுக்கு இரையாகித் தங்கள் வெற்றிப்பாதைகளுக்குத் தேவையான சக்தியையும் முழுக்கவனத்தையும் இழந்து தடுமாறுவதால் மட்டுமே.

     தற்கால சமுதாயத்தின் வாழ்க்கை மேடையில் பலரும் இந்த மன அழுத்தத்திற்கு இரையாகி நிம்மதியையும் மகிழ்ச்சியையும் இழந்து நிற்கின்றனர். தேவைகளை அதிகரித்துக்கொண்டு அவைகளை அடைய முடியாததால் ஒரு பொய்யான சமாளிக்க முடியாத வழிமுறைகளை மேற்கொண்டு சிறிது காலத்திலேயே மன அழுத்தங்களுக்கு இரையாகி வாழ்க்கையிலே தோல்வியடைந்துவிட்டோம் என்ற தவறான கருத்தை மனதில் நிறுத்தி வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்குத் தயாராகி விடுகின்றனர்.

    இந்த மாதிரியான மன அழுத்தங்களுக்குப் பல காரணங்கள் உண்டு.

    1. நாம் செய்கின்ற எல்லா வேலைகளையும் நூறு விழுக்காடு சரியாகச் செய்யவேண்டும் (urge for perfection) என்ற ஒரு ஆதங்கம். இது ஒரு உன்னதமான எண்ணம்தான். இது ஒரு உயரிய நோக்கம்தான். ஆனால் இது அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் எல்லாச் சூழ்நிலைகளும் நடக்கக்கூடியது அல்ல. ஆனால் அதற்கான முயற்சிகளை நாம் நிச்சயமாகக் கைவிடக் கூடாது. எந்தச் செயலிலும் குறைகள் இருக்க வாய்ப்புகள் உண்டு. அவைகளை அறிந்து அந்தக் குறைகளைத் தொடர்ந்து களைந்து கொண்டு வருதலே வாழ்க்கையின் சிறப்பு. இதுவன்றி குறைகளுக்காகவும் இயலாமைகளுக்காகவும் மனதில் வீணான பயம் மற்றும் தாழ்வு மனப்பான்மைகளை வளர்த்துக்கொள்ளுதல் தோல்விக்குத் தேவையான அடித்தளத்தை அமைந்துவிடும்.
    2. “தங்கள் வாழ்க்கையில் தாங்களே புயலை ஏற்படுத்திக்கொள்பவர்கள் சிலர் உண்டு.” என்பது ஒரு மனோதத்துவக் கணிப்பில் காணப்பட்ட உண்மை. தங்களுடைய அறியாமையினாலேயோ, அரைகுறை அறிவினாலேயோ அல்லது தங்களிடம் இல்லாத ஒரு திறனை இருப்பதாக மற்றவர்களுக்குக் காட்டத்துடிக்கின்ற பொய்யான பக்குவமின்மை காரணமாகவோ ஒரு செயலில் இறங்கி திக்கு முக்காடுபவர்கள் பலருண்டு. பல நேரங்களில் தங்களுக்குத் தெரியாத வியாபாரங்களைத் தொடங்கி அதன் நுணுக்கங்களை அறியாமல் பண இழப்புகளுக்கு ஆளாகி மன அழுத்தத்தில் முன்னேறமுடியாமல் தவித்து தோல்வியைத் தழுவிக்கொண்டவர்கள் பல பேர். ஒரு அலுவலகத்தில் மிகச் சிறப்பாகப் பணிசெய்துக்கொண்டிருந்த ஒருவருக்குப் பாராட்டுகள் குவிந்தவண்ணம் இருந்தன. அதனால் ஏற்பட்ட தன்னுடைய தகுதியைப் பற்றிய ஒரு மாயை அவரைத் தான் அது போன்ற நிறுவனத்திற்குத் தலைவராகவே ஆகிவிட வேண்டும் என்ற ஒரு வெறியை உண்டாக்கி தற்போது இருக்கும் வேலையைத் தூக்கி எறியத் தூண்டியது. அதன்பின் ஓராண்டிற்கும் மேலாக இன்னொரு வேலை கிடைக்காமல் வேறு தொழிலும் தொடங்க முடியாமல் மன அழுத்தங்களுக்கு ஆளாகி மனநல நிபுணர்களைச் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஒரு சுவரில் தலையை நாமே முட்டிக்கொண்டு வலிக்கின்றதே என்று சொன்னால் அது முட்டாள்தனமான செயலன்றோ? அதைப்போலத்தான் பல நேரங்களில் சிலர் தனக்குத் தானே வேதனைகளையும் துன்பங்களையும் ஏற்படுத்திக்கொள்கின்றனர் ஆகவே தோல்விகளை நாமே ஏற்படுத்திக் கொள்வதைத் தவிர்த்தல் மிக அவசியம்.
    3. பதட்டம், அவசரம் காரணமாக மன அழுத்தங்களை ஏற்படுத்திக்கொண்டு தவறுகளுக்கு இலக்காகி மேலும் மேலும் அதே தவறுகளை திரும்பத் திரும்பச் செய்து “உதவாக்கரை” என்று பலரால் அடைமொழி கொடுக்கப்பட்டு தோல்வியைத் தழுவியவர்கள் சிலர். பதட்டங்கள் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. மற்றவர்களைவிட தான் அதிகமாகச் சாதிக்க வேண்டும், மற்றவர்களைவிட தான் அதிகம் சேகரிக்க வேண்டும், காலங்கள் கனிவதற்கு முன்னேயே தான் சாதனைகளை நிகழ்த்த வேண்டும், தன்னுடைய சாதனைகளையும் சேகரிப்புகளையும் விட மற்றவர்கள் அதிகம் சேகரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் – என்ற சிந்தனைகள் மன அழுத்தத்தில் பதட்டங்களை ஏற்படுத்துகின்றன. அது மட்டுமின்றி, நாம் ஒரு செயலைச் செய்யும் பொழுது மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்களா அவர்கள் நம்மை எவ்வாறு மதிப்பீடு செய்திருப்பார்கள் என்ற ஒரு சிந்தனை பதட்டங்களை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக தேர்வுகளுக்குச் செல்லும் மாணவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ” நீ இதைப் படித்துவிட்டாயா?”  “இந்த கேள்விகளெல்லாம் வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லையே” என்ற கேள்விகள் அவர்களுடைய பதட்டங்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் சில முன்னுதாரணங்கள். பல நேரங்களில் தேர்வுகளில் மாணவர்கள் இந்த பதட்ட நிலை காரணமாகவே தங்கள் முழுத் திறமையைக் காட்டாமல் தவறி விடுகின்றனர்.

    இதே போன்று மிகச் சிறப்பான தகுதி உடையவர்கள் கூட நேர்காணல்களில் பதட்டத்தினாலும் உடனே பதில் சொல்லவேண்டும் என்ற அவசர புத்தியினாலும் தவறுகள் இழைத்துத் தோல்வியை தழுவிக்கொள்கின்றனர்.

    மன அழுத்தங்களைத் தவிர்ப்பதற்கான வழிகள் என்ன?

    1. நம்மை நாமே புரிந்துகொள்ளுதல்
    2. நமது திறன்களையும் நமது சூழ்நிலைகளையும் ஏற்றுக்கொள்ளுதல்
    3. நமது செயல்களுக்கான இலக்குகள், வழிமுறைகள், எண்ணப்போக்குகள், திறன்கள் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து செய்தல்

    4.நம்முடைய தனித்தன்மையை உணர்ந்து மற்றவர்களோடு போட்டிபோடாமல் இருத்தல்

    1. இன்ப-துன்பங்களைச் சமமாக நினைத்துச் செயல்படுதல்
    2. உடல்-மனம் இரண்டையும் ஒருங்கிணைத்துக் கட்டுப்பாடாக வைத்தல்
    3. நிகழ்காலத்தில் வாழ்தல் (இறந்த மற்றும் வருங்காலச் சிந்தைங்களுக்கு இரையாகாமல் இருத்தல்)

    இது போன்ற பல கருத்துக்கள் நம்மை மன- அழுத்தம் இல்லாத வாழ்வு வாழ்வதற்கு உதவும்.  முயன்று பார்க்கலாமா ?

    வாழ்க்கை ஒரு போராட்டம்தான் -ஆனால் இனியது !! – வாழ்ந்து பார்க்கலாமா ?

    (தொடரும் )

    Share
  • ஆறுபடை அழகா…. (6)

     

     

    திருத்தணிகை

     

    விண்ணசையும் மண்ணசையும் கோளசையும் கண்ணசைவில்

    வேலசையும் வேகத்தில் விதியசையும் நல்லிசையாய்

    பண்ணிசைத்துப் பாடிடவே உன்புகழைப் பேரழகா

    காற்றிசைக்கும் தென்றலாய் காலமெல்லாம் மாறாதோ ?

     

    பணியேதும் இனியில்லை உன்னருகில் அமர்ந்திடுவேன்

    தணிகைமலைப் புகழ்பாடி தனிப்பொழுதைக் கழித்திடுவேன்  

    மணியோசை ஒலித்துவிடும் திருக்கோவில் வாசலிலே

    அணிசெய்த உன்னழகை அனுதினமும் பார்த்திருப்பேன் !

     

    அகத்தியனுக்கே தமிழ்த்தந்தாய் அகிலமெல்லாம் பயனுறவே

    அகமுவந்து வாசுகிக்கே அருள்புரிந்தாய்  நோய்தீர்த்து

    அசுரனின் சக்கரத்தை அன்புடனே நெஞ்சிலேநிறுத்தி

    அகிலமெல்லாம் காத்துநின்றாய் ஆறுமுகனே அடைக்கலமே !

     

    மனத்துள்ளே கோயில்கட்டி மலையப்பா அழைத்துடுவேன்

    எனக்குள்ளே நீயிருந்தால் இல்லையென்றும் எதிர்மறைகள்

    குகைக்குள்ளே நீயிருந்த தவக்கோலம் போதுமய்யா

    குடியிருக்க நீவருவாய் எனக்குள்ளே குருபரனே !

     

    மலர்தூவி மாலையிட்டு மனதாரப்  போற்றிவிட்டேன்

    மறக்காமல் பாலோடுதேனும் பஞ்சாமிர்தம் படைத்துவிட்டேன்

    மறைக்காமல் என்குறைகள் உன்னிடமே சொல்லிவிட்டேன்

    மனமிரங்கி வாராயோ மனத்தினிலே  ஆட்சிசெய்ய ?

     

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 42

    க. பாலசுப்பிரமணியன்

     

    நம்மை முதலில் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்

    நம்மைத் தோற்கடிக்க உலகில் நம்மைத் தவிர வேறு எந்த சக்தியும் தேவையில்லை. நம்மில் பலரும் நம்மை நாமே தோற்கடித்துக்கொண்டிருக்கின்றோம். முந்தைய பகுதிகளில் நாம் கண்டது போல வெற்றியும் தோல்வியும் ஒரு பார்வைகள்தான். எந்த இரண்டு பேருடைய வெற்றியையும் தோல்வியையும் ஒப்பிட்டுப் பார்த்தல் மிகவும் தவறானது.

    ஒரு பள்ளியில் படித்த இரண்டு பெண் குழந்தைகள். ஒரு பெண் நல்ல புத்திசாலி. நல்ல உழைப்பாளி. நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் உழைத்து முன்னுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் உடையவர். அந்தப் பெண்ணின் தோழி வாழ்க்கையை சற்றே எளிதாக எடுத்துக்கொண்டு மேலே சொல்லக்கூடியவர். அவருடைய தந்தை ஒரு பெரும் செல்வந்தர். திரைப்படத் துறைகளில் சாதனை படைத்தவர். ஆகவே அந்தப் பெண் ஒரே குழந்தை என்பதனால் வாழ்க்கை வசதிகளை அதிகம் கொடுத்தவர். இந்த இரண்டு நண்பர்களும் பள்ளி முடித்து கல்லூரிக்குச் சென்ற பொழுது முதலாவது பெண் மேலாண்மைத் துறையில் முதுநிலை படிப்பு முடித்து நிர்வாக வல்லுனராக வேலையில் சேர்ந்தார். இரண்டாவது பெண்ணோ  இளநிலை படிப்பு முடித்ததுமே தன்னுடைய தந்தையின் தொழில் நிர்வாகத்தில் பங்கேற்றுக் கொண்டார். ஒரு நிலையில் முதல் பெண்ணுக்குச்  சரியான வேலை கிடைக்காமல் தேடி ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த பொழுது அந்த நிறுவனத்தின் சொந்தக்காரராக இருப்பது தன்னுடைய தோழி எனத் தெரிய வந்தது.

    அதன் காரணமாக ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திக்கொண்டு தன் விதியையும் தன்னுடைய இயலாமையையும் மேற்கோளாக்கி மன உளைச்சலை உண்டாக்கிக்கொண்டார். நாளடைவில் இது வளர்ந்து ஒரு மன நோயாகவே உருவாகிவிட்டது.

    இது போன்ற பல நிகழ்வுகளை நாம் வாழ்க்கையில் சந்திக்க நேரிடும். அந்த நேரங்களில் நாம் ஏதோ தவறு செய்து விட்டது போன்ற குற்ற உணர்ச்சி ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த மனப்பான்மை நம்முடைய முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தடைக்கல்லாக மாறி வாழ்க்கையைத் தடம் புரளச் செய்யும். எனவே இந்த மாதிரி உணர்வுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளுதல் மிக அவசியம். வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் ஒருவருடைய பதவியினாலோ அல்லது புகழினாலோ அல்லது செல்வத்தினாலோ மட்டும் வருவதில்லை. ஒருவருடைய வாழ்க்கைத் தரம் எப்படிப்பட்டது -அதில் நேர்மையும் வாய்மையும் உழைப்பும் சேவை மனப்பான்மையும் எவ்வாறு ஓங்கி நிற்கின்றன என்பதைப் பொருத்துத் தான் ஒருவரை எடை போட வேண்டும்.

    பல செல்வந்தர்கள் வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும் வெளி உலகிற்குத் தம்மை ஒரு பெரிய மனிதனாக காட்டிக்கொள்வதில் பெருமைப் படுகின்றனர். அதே நேரத்தில்தொழிலில் வீழ்ச்சி ஏற்பட்டால் தங்களுடைய கடன்களைத் திருப்பிக் கொடுக்காத நிலையில் மனமொடிந்து தற்கொலை செய்து கொள்வதற்கும் தயங்குவதில்லை. எனவே வாழ்க்கையில் செல்வம் மட்டும்  ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று நினைப்பு முட்டாள்தனமானது.

    நம்மை நாமே ஏற்றுக்கொள்ளுதல்  (Self-Acceptance ) என்பது ஒரு மிகப் பெரிய வெற்றி  மற்றும் முதிர்ச்சியின் அறிகுறி.. அதுவே வாழ்க்கையின் முழு மகிழ்ச்சிக்கு அடிப்படை. நம்முடைய உடல், அழகு, நிறம், குடும்பம், கல்வி, சந்தர்ப்ப சூழ்நிலைகள், கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு விட்டால் நம்மை விட அறிவாளிகள் யாரும் இருக்க முடியாது. நம்முடைய உடமைகள் நமக்கு இறைவனால் அளிக்கப்பட்டவை. அதில் நிச்சயமாகக் குறையிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவைகளை நாம் எப்பொழுது மற்றவர்களின் உடமைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றோமோ அப்பொழுதே நமது துயரங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு விடுகின்றது. இதை நாம் உணர வேண்டும்.

    ஒரு முறை எனக்கு ஒரு விருது கிடைத்தது. அதைக் கொடுக்க வந்தவர் ஒரு நீதியரசர். சுமார் ஒரு மணி நேரம் மிகவும் நன்றாகப் பேசிக்கொண்டிருந்தோம். சில நாட்களுக்குப் பின் அலுவலகத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கு காரணமாக  நீதிமன்றத்தில் நேரில் வரும்படி உத்தரவிடப்பட்டது. அன்று நான் சென்ற பொழுது அமர்ந்திருந்த நீதியரசர் எனக்கு விருது கொடுத்தவர். அந்த நேரத்தில் அவர் என்னைத் தெரிந்ததாகக் கூடக் காட்டிக்கொள்ளவில்லை. அது அவர் தொழில் தர்மம். நேர்மையின் விளக்கம். நான் வருத்தப்பட முடியுமா? அல்லது அவருடன் பழகியிருக்கிறேன் என்பதற்காக சலுகைகள் எதிர்பார்க்க முடியுமா? அவருடைய அந்தச் செயலுக்காக நான் அவரைப் பெரிதும் மதித்தேன்.

    இதுதான் வாழ்க்கையின் உண்மை. பல நேரங்களில் நம்முடைய உறவுகள், நண்பர்கள், தெரிந்தவர்கள், கூட வேலைபார்த்தவர்கள், நெருங்கிப் பழகியவர்கள் வாழ்க்கையில் வெவ்வேறு பாதைகளில் சென்றிருப்பார்கள். அவரவர்களுடைய சாதனைகள், பதவிகள், வாழ்க்கை நிலைகள் வேறு வேறாக இருக்கும். அதன் காரணமாக நாம் நம்மைத் தாழ்த்திக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

    சமீபத்தில் வந்த செய்தி. காவல் துறையில் இருக்கும் ஒரு போலீஸ்காரருடைய மகன் நன்கு படித்து அதே போலீஸ் துறையில் ஒரு மேலதிகாரியாக வந்த பொழுது அவருடைய தந்தை தன் மகன் முன் நின்று சல்யூட் அடித்தார். உண்மையில் தன் மகனை அந்தப் பதவியில் பார்த்த தந்தைக்கு நிச்சயம் பெருமிதமாக இருந்திருக்க வேண்டும். தன் மகன்கீழே வேலை பார்க்க வேண்டியிருக்கின்றதே என்று வருத்தப்பட முடியுமா? அல்லது தாழ்வு மனப்பான்மை கொள்ள முடியுமா?

    தந்தைக்கு உபதேசம் செய்ய முருகன் துணிந்தபொழுது தந்தையை தன் முன்னே ஒரு சீடனாக மண்டியிட்டு அமர வைக்கவில்லையா? வாழ்க்கையின் ஏற்றங்களும் தாழ்வுகளும் நம்முடைய வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயிப்பதில்லை. இரண்டும் வாழ்க்கையின் நிகழ்வுகளின் மீது நாம் கொள்ளும் பார்வைகள்தான்.

    பல ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்த நேரத்தில் என்னோடு வேலை பார்த்த ஒரு ஆசிரியர் சில மாதங்களுக்கு முன்னே சந்தித்தார். ” பார்த்தீர்களா சார். நம்மகிட்டே படித்த அந்த மாண்வர்களெல்லாம் எங்கேயோ மேல போய்விட்டார்கள். நாம தான் அப்படியே இருக்கோம்” நான் சிரித்தேன். உண்மை. நீதியரசர்கள் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், என்று பல சிறப்பான தொழிலில் அவர்களை பார்க்கும் பொழுது நமக்குப் பெருமையாக இருக்கின்றது. அதற்காக நாம் ஏன் நம்மைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்? ஏணிப்படிகள் ஏற்றிவிட்ட பின் தங்களுக்குச் சொந்தமான மூலையிலே ஒதுங்கிவிடுவதுதான் வாழ்க்கையின் நியதி?

    “செய்யும் தொழிலே தெய்வம்” என்ற மனப்பான்மையுடன் செய்யும் பொழுது எல்லாத் தொழில்களும் தெய்வீகத் தன்மை அடைந்து விடுகின்றனவே? இதற்காக நாம் ஏன் வாடி வதங்க வேண்டும்? ஒவ்வொரு நாளும் நாம் இன்று நன்றே செய்ய வேண்டும் என்று எழுந்து அதை நடத்திக் காட்டும் பொழுது அந்த ஒவ்வொரு நாளும் வெற்றியின் அறிகுறி தானே?

    தினமும் நாம் நமது வெற்றிகளைக் கொண்டாடலாமே? முயன்று பார்க்கலாமா?

    (தொடரும்)

    Share
  • ஆறுபடை அழகா…. (5)

     

     

    பழமுதிர்ச்சோலை

     

    தோகைமயில் பாதையிலே தோரணங்கள் போட்டிருக்கும்

    பாகைவழி நீக்கிவிட்டுக் கோள்களெலாம் கூடிநிற்கும்

    வாகைசூடி வருபவனை வாழ்த்திடவே காத்திருக்கும்

    தேவையென்றுத் தேடியிங்கே கந்தனவன் கண்விழியை !

     

    நாசியிலே காற்றடக்கி நானறியத் துடிப்போரும்

    ஆசையுடன் பாசம்விட்டு அகமகிழும் பெரியோரும்

    பூசையெனச் சேவையிலே புண்ணியத்தைச் சேர்ப்போரும்

    பாசத்துடன் குமரய்யா  பாதங்கள் தேடியிருப்பார் !

     

    பட்டமரம் மேலிருப்பாய் பசுமேய்க்கும் பாலகனாய்

    சுட்டப்பழம் கேட்டுவிட்டால் சுடாதபழம் தந்திடுவாய்

    வெட்டவெளி விண்ணெல்லாம் வேலவனே மறைந்திருப்பாய்

    கிட்டவந்தே கேட்டிருப்பாய் கிரங்கியிந்தன் தமிழ்ப்பாட்டை !

     

    வள்ளியுடன் தெய்வானை வளைத்திருக்க வேலவனை

    வெள்ளிமலை தம்பதியர் வாழ்த்திவிட பாலகனை

    அள்ளிவந்த ஆசியுடன் வானகத்து வித்தகரும்

    துள்ளிவந்தார் தேடியிங்கே சோலைமலை சூட்சுகனை.!

     

    கரையில்லாக் கருணைக்கடல் கலையறியா எழில்வண்ணம்

    மறையறியா முன்தோன்றல் மனம்நிறையும் ஒளிப்பிழம்பு

    சிறைப்பட்டேன் உன்நினைவில் சிதறாத சிந்தனையில்

    நிறைவாக  நிலைபெறுவாய் நித்தியனே என்னுயிரில் !

     

    Share
  • ஆறுபடை அழகா…. (4)

     

     

    சுவாமிமலை (திருவேரகம்)

     

    ஓங்காரப் பொருளை உலகிற்குச் சொன்னவனே

    ஏங்காத நாளில்லை உன்னருளைத் தேடித்தேடி

    தாங்காத துயரெல்லாம் தானாக விலகிடுமே

    தணியாத அன்போடு திருவேரகம் கண்டிடவே !

     

    தந்தைக்கும் குருவாகி தர்மத்தைக் காத்தவனே

    தவிக்கின்ற நெஞ்சத்தின் தாகங்கள் தீர்ப்பவனே 

    தானென்ற அகந்தையைத்  தகர்த்திடும் கந்தா

    தரணியிலே உனையென்றித் துணையேது முருகா!

     

    குருவாக அமர்ந்தாலும் குழந்தை வடிவன்றோ

    வருவாயே நானழைத்தால் வாடாத முகத்தோடு

    அருவாக உருவாக எதுவாக நீயிருந்தாலும்

    கருவாக இருப்பாயே காலமெல்லாம் சிந்தனையில் !

     

    ஓமென்று சொல்லிடுவேன் ஓராயிரம் முறைகள்

    உள்ளத்தில் நீயிருப்பாய் உணர்வாகி நிறைவோடு 

    உயிரோடு ஒன்றான ஓங்காரத் தத்துவமே

    உனையன்றித் துணையேது உய்ந்திடவே இப்புவியில் ?

     

    நீராட்டி சீராட்டி தாலாட்ட அழைத்திடுவேன்

    நீயென்றும் குழந்தாய் என்றே நினைத்திடுவேன்

    நீலமயில் மீதேறி வருவாயோ நித்தியனே

    நிலையாத என்மனதின் நிலைகாக்க வாராயோ ! 

     

    Share
  • ஆறுபடை அழகா…. (3)

     

     

    பழனி  (திருவாவினன்குடி)

     

    பழமெதற்குப்  பூவெதற்கு பழனிமலை ஆண்டவனே

    பழமாகக் கனிந்து தரணியெல்லாம் மணப்பவனே

    நிழலாக நின்றாலும் நினைவெல்லாம் நிறைபவனே

    நிசமாக வருவாயோ நின்னருளைத் தந்திடவே ?

     

    பாலெதற்குத் தேனெதற்கு பழனிமலைப் பாலகனே

    வேலெடுத்த உனைக்கண்டால் வேதனைகள் மறையாதோ?

    சொல்லெடுத்துப் பாட்டிசைத்து உனையழைக்க முருகா

    சொல்லாமல் நீவருவாய் சோதனைகள் விலக்கிடவே !

     

    தோள்சுமக்கத் துணைதேடி உனைநாடும் காவடிகள்

    கண்ணிமையில் உனைநிறுத்தித் தேடிடுமே சேவடிகள்

    பவனிவரும் பழநியிலே பொங்கிவரும் பால்குடங்கள் 

    பாசத்துடன் அணைத்திடுவாயே பக்தர்களை பழனியப்பா !

     

    தோகைமயில் சேவல்கொடி ஏதுமின்றி நின்றாய்

    போகமில்லா வாழ்வென்றும் புதிதென்று சொன்னாய்

    சோகமெல்லாம் நீங்கிடுமே சொல்லிடவே உன்பெயரை

    போதகனே சாதகனே புவிக்காக்கும் வேலவனே !

     

    அவ்வையின் தமிழ்கேட்க ஓடிவந்த வடிவேலா

    அகத்தியனுக்கு அருள்புரிந்த ஆனந்தத் தமிழ்வேளே!

    ஆண்டியாகி நின்றாலும் அளவில்லா அருட்சுனையே

    ஆவினன்குடி மலையப்பா அருள்வாயே குறைவின்றி !

     

    Share
  • ஆறுபடை அழகா…. (2)

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருச்செந்தூர் (திருச்சீரலைவாய்)

    சூரனை அழித்திடவே சுடர்நெருப்பாய் பிறந்தவனே

    சீரலைக் கடலருகில் சீறிவந்து போர்தொடுத்தாய்

    சிங்கமுகன் அண்ணனின் சிரமனைத்தும் கொய்திட்டாய்

    சேவலுடன் மயிலாக்கி தன்னருளைத் தந்திட்டாய்

     

    ஒருமுகமும் மறுமுகமும் உனக்கென்றும் ஈடில்லை 

    அறுமுகமும் ஒருமுகமாய் அசுரனையே அழித்தவனே

    திருமுகத்தின் கண்ணிரண்டில் திருவருளைப் பெருகவிட்டு

    இன்முகமாய் அடியார்கள் இதயத்தில் அமர்ந்தவனே !

     

    விண்ணோரும் வந்திட்டார் செந்தூரில் சீர்கொண்டு 

    வினைதீர்க்கும் வேலோடு விளையாடும் உனைக்காண

    வாகையுடன் கொடிசேர்த்து மயிலோடு மனங்கவர்ந்த

    வாரணத்தின் இளையோனே செந்தூரின் சிங்காரா !

     

    கடலோரம்  நீயிருக்கக் கடலலைகள் களைப்பாறும்

    காற்றோடு தாளமிட்டுக் கருமேகம் கவிபாடும்

    கடலினங்கள் கரைவந்து காலடியில் விளையாடும்

    கருணையுள்ள குருநாதா கண்திறந்து பாராயோ !

     

    நலமனைத்தும் பெருகிடுமே நாழியிலே நீராட

    பலமனைத்தும் வந்திடுமே பார்வையுந்தன் அருளாலே

    புலனனைத்தும் அடங்கிடுமே பொன்மேனி கண்டாலே

    தலமென்று சொல்லிடவே திருச்சீரலைவாய் திருத்தலமே

     

     

    Share
  • ஆறுபடை அழகா…. (1)

     

     

    திருப்பரங்குன்றம்

    பரங்குன்றப் பொருளான பரமனுடன் பார்வதியும்

    பண்ணோடு இசையாகிப் பரந்தாமன் திருமகளும்

    பங்கயத்தை விட்டெழுந்து  பாட்டிசைக்கக் கலைவாணி

    பாரெல்லாம் சேர்ந்ததுவே பரங்குன்றத் திருமணமே !

     

    தெய்வானை கைப்பிடிக்கும் திருக்காட்சி கண்டிடவே

    தேவர்கள் சேர்ந்திட்டால் தென்மதுரை தாங்கிடுமோ

    தினம்தோறும் காட்சிதரத் திருவுள்ளம் கொண்டவனே

    திரிபுரமும் போற்றிடுமே திருவருளே  திருக்குமரா !!

     

    கல்லாக இருந்தாலும் கருணையின் ஊற்றனறோ

    கந்தாவென அழைத்ததுமே கடுந்துயரும் விலகுமன்றோ

    கண்விழியின் அசைவினிலே கோள்விதிகள் மாறுமன்றோ

    குன்றுள்ளே மறைந்தாலும் கைகொடுப்பது குகனன்றோ!

     

    குறைநீங்க உனைவேண்டித் தவமிருந்தான் நக்கீரன்

    குறைநீக்கி அருள்தந்தாய் பொய்கையிலே பூத்தவனே

    ஆறுபடை போதாதென்று பாடவைத்தாய் அருந்தமிழில்

    ஆற்றுப்படை கேட்டிருக்க அண்டமெல்லாம் ஆடிடுமே !

     

    வலம்வந்து காத்திருப்பேன் வாசலிலே உனைத்தேடி

    வரமொன்று கேட்டிடவே வார்த்தைகள் ஏதுமின்றி

    வளர்கின்ற நாட்களிலே வருந்துயர்கள் நீக்கிடவே

    வாவென்று அழைக்குமுன்னே வந்தருள்வாய் வேலவனே !

     

    Share
  • தீபாவளி – மலரும் நினைவுகள்

    க. பாலசுப்பிரமணியன்

    நினைவலைகளில் முழுகி எழுந்திருக்கும்பொழுது -1957 – மதுரையிலே எட்டாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்த நேரம்.. தீபாவளிக்கு சுமார் பதினைந்து நாட்களுக்கு முன்பே கொண்டாட்டங்களின் துவக்கம்.. வீடு தோறும் பாட்டாசுகள். ஒரு பத்து ரூபாய் பணம் எடுத்துக்கொண்டு சென்றால் ஒரு பெரிய சாக்குப் பை நிறைய பட்டாசுகள்… வகை வகையாய் … ஓலை வெடியை வைத்துக்கொண்டு நித்தம்… காலையும் மாலையும் – கைகளிலெல்லாம் வெள்ளை வெளேரென்று பட்டாசு மருந்துகள்…

    “போய் கையை நல்லா சோப்பு போட்டு அலம்பிக்கொண்டு அப்புறம் சாப்பிட வா…” அன்னையின் ஆணை.

    நான்கு நாள் முன்னதாகவே பட்சணங்கள் தயாரிக்கும் பெரியவர்கள்… கைமுறுக்கு சுற்ற நாலு பேர்…

    “அம்மா.. அம்மா.. நானும் சுத்திப் பார்க்கட்டுமா”

    “வேண்டாம்.. தள்ளிப்போடா .. எண்ணை கொதித்துக்கொண்டிருக்கின்றது.. தண்ணி பட்டு வெடித்து விடப்போகின்றது…”  அப்போதுதான் டபால் என்று ஒரு சத்தம்.. சில நீர்த் துளிகள் எண்ணையில் தெளித்து ..

    “அய்யயோ ,, கையில் கொதிக்கிற எண்ணை தெளித்து விட்டது….. போய் அந்த இட்லிமாவை எடுத்து அங்கே போடு.. “

    ‘டேய்.. இந்தாடா. ” ஒரு பாதி வெந்த கைமுறுக்கை கையில் கொடுத்த அத்தை ” இது நல்ல மெதுவாக இருக்கும்.. ” அந்தச் சுவை இன்னும் நாவினில்..

    காலங்கள் ஓடுகின்றன… சில ஆண்டுகள் நகர.. பத்தாவது வகுப்பு..

    “அம்மா.. காலையில் சீக்கிரம் எழுந்து நாலு மணிக்கே பட்டாசு விடணும்…”

    மூன்று மணிக்கே தூக்கம் களைந்து விட , குளிக்கும் அறையில் ஒரு பெரிய பித்தளைப் பானையில் வெந்நீர் கொதித்துக் கொண்டிருக்கின்றது..

    “கொஞ்சம் அந்த விறகடுப்பை ஊதிவிடேன்.. ” இது பாட்டி.  தன்னுடைய அரைகுரைப் பார்வையை வைத்துக்கொண்டு ..

    அந்தப் பித்தளை ஊதுகுழலை வைத்து ஈரமான விறகில் மெதுவாக எரிந்துகொண்டிருக்கும் அக்கினி பகவானோடு .  பேசிக்கொண்டு. சில நேரங்களில் கண்ணனைப் போல் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு…

    “வரிசையாய் உட்காருங்கோ எல்லாரும்..:” நான், என் தம்பி, அத்தை குழந்தைகள் இருவர்.. “எனக்கு முதலில்.. எனக்கு முதலில்”.  இன்றும் நினைவில் சண்டைகள்… அழுகை..  “டேய், தீபாவளியும் அதுவுமா காலையிலே அழாதீங்கடா…”

    உறவுகள் வலுவாக இருந்த காலம்.. தேவைகள் குறைவாக இருந்த காலம்.. மகிழ்ச்சி நிரம்பியிருந்த காலம்…

    ” என்னுடைய கம்பி மத்தாப்பு சரியா எரியலை.. உன்னோடுதைக் கொடேன் ” என்று ஒருவன் கெஞ்ச ” அதெல்லாம் தர முடியாது ” என்று சொன்னவன் எங்கேயோ பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது அவன் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த முறத்திலிருந்து ஒன்றைத் திருட…

    வாழ்க்கை இனித்தது .. இனிப்புக்களை விட அதிகமாய்..

    இன்னிக்கு என்ன படம் ரிலீஸ்?  முதல் நாள் முதல் காட்சி போவதற்கான முயற்சிகள்…

    சிவாஜியும் பண்டரிபாயும் சேர்ந்து நடித்த அவள் யார் என்ற படம். நண்பகல் காட்சிக்காக காலை எட்டு மணிக்கே வரிசையில் நின்று..

    “டேய்.. அங்கே பாருடா… ஏறிக்குதிக்கிறான்.. ” என்று வரிசைக்காகச் சண்டைபோட்டு, தீபாவளிக்கான புதிய சட்டையைக் கிழித்துக்கொண்டு…

    நினைத்துப்பார்த்தால் வாழ்க்கை முழுமையாய்.. எத்தனை பாடங்களைச் சொல்லிக் கொடுத்தது.!!

    அடுத்த வருடம்…

    ” பாட்டி என்ன களிமண்ணா அங்கே…”

    “வெந்நீர் போடற மண்ணடுப்பு உடைந்திருக்கு .. ஒரு புது அடுப்பு பண்ணலாமென்று”

    “நான் பண்ணட்டுமா…” அந்தக் களிமண்ணோடு போராடி ஒரு அடுப்பை வடிவமைத்து.. ஒரு தொழில்நுட்ப பொறியியல் பட்டமே பெற்றிருக்கலாம்.

    காலங்கள் ஓடின..

    கல்லூரிக் காலம்… பட்டாசு மோகம் குறைந்து.. என்ன டிரஸ்?.. பெல் பாட்டம் பாண்ட் .. முழுக்கைச் சட்டை…

    “டிரஸ் சூப்பராக இருக்கே…” இது ஒரு சொந்தக்காரரின் நக்கலான வார்த்தைகள்…

    ஒரு முறை திருவல்லிக்கேணியில் குடியிருப்பு. நான்கு குடித்தனங்கள்… “ஹலோ , நண்பரே .. இந்த வருஷம் உங்க வீட்டிலே என்ன ஸ்வீட்?”

    “எனக்குத் தெரியாது.”

    “ஒரு ஐடியா பண்ணினால்  என்ன… மொத்தமா நாலுபேர் வீட்டுக்கும் சேர்த்து கோதுமை அல்வா பண்ணினால் .. “

    யோசனை வலுத்தது.  நாலு ஆண்கள் சேர்ந்து… ஒருவர் கோதுமையை ஊற வைத்து  ஆட்டுக்கல்லில் அரைத்து பாலெடுக்க, இருவர் அடுப்படியில்,,,

    “ரொம்ப நன்றாக வந்திண்டிருக்கே  ..” பக்கத்துக்கு வீட்டு மாமியின் கண் பட…

    கடைசி நேரத்தில் அல்வா கொஞ்சம் இறுகி விட…. அது “சாக்லேட் அவதாரத்தில் வெளியே வர…

    தீபாவளி இனித்தது.. அந்த சாக்லேட்டைப் போல…

    இன்று…

    “என்னங்க…” இது என் மனைவி… ” நாளைக்கு தீபாவளி… சீக்கிரம் கடைக்குப்போய் ஏதாவது ஸ்வீட்டும் மிக்ச்சரும் வாங்கிண்டு வாருங்க..

    காலங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன.. பல நேரங்களில் மலரும் நினைவுகளில் நாம் மகிழ்வோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். !

    தீபாவளி வாழ்த்துக்கள் !

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே  41

    க. பாலசுப்பிரமணியன்

    மாற்றங்களைக் கண்டு ஏன் பின்வாங்குகின்றோம்?

    வாசுவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அவன் நன்கு படித்தவன். புத்திசாலி. ஆனால் அவனுக்கு தான் ஒரு புத்திசாலி என்ற எண்ணம் சற்றே தலைதூக்கி இருக்கும்.  எதற்கெடுத்தாலும் “எனக்குத் தெரியாததா என்ன?” “இதிலே என்ன புதுசா இருக்கு?”  என்று தேவையற்ற தர்க்கம் செய்து மற்றவர்களை நோகடிக்கும் மனப்பான்மை அவனுக்கு உண்டு. அதிலே அவனுக்கு ஒரு மகிழ்ச்சி.  சில நேரங்களில் அவன் தன்னுடைய தோழர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது “போனவாரம் நாம் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபொழுது ..” என்று ஆரம்பித்தவுடன் அவனுடைய நண்பர்கள் தங்களுடைய சிரிப்பை உள்ளடக்கிக்கொண்டு  பரிதாபமாக அவனை ஒரு மனநோயாளியைப் போல் பார்ப்பார்கள். எவ்வளவு திறமை இருந்தாலும் தொழிலில் அவனால் முன்னேற முடியவில்லை. அவன் வேலைபார்க்கும் நிர்வாகிகள் இவனுடைய மனப்போக்கை ஏற்றுக்கொள்ளவில்லை. எத்தனை முறை எடுத்துக்காட்டியும் வாசு மாற மறுக்கிறான். அவனுடைய ‘தான்’ என்ற ஆணவப் போக்கு அவனுடைய வீழ்ச்சிக்கு காரணமாகவும் முன்னேற்றத்திற்குத் தடையாகவும் இருக்கிறது. மாற்றங்களைப் பற்றி அவனுடன் பேசினால் “மன்னிக்கவும். நான் இப்படித்தான். என்னால் மாற முடியாது.” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிடுவான்.

    செந்தில் இதற்கு முற்றிலும் மாறுபட்டவன். “அய்யா. ஒத்துக்கொள்ளுகின்றேன். மாற்றங்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு மாற்றத்திற்கும் நான் விலைபோக முடியுமா.” என்று மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றான். “இல்லை செந்தில், நீ மாறவில்லையென்றால் வாழ்க்கையில் பின் தங்கிவிடுவாய்’ என்று எடுத்துச் சொன்னால் “அதெல்லாம் எனக்கு கவலையில்லை. மாற்றத்தைக் கண்டு என்னால் ஆட்டத்தை மாற்ற முடியாது” என்று தர்க்கம் செய்பவன். இந்த ஒத்துழையாமைப் போக்கினால் பல சந்தர்ப்பங்களில் அவன் பின் தள்ளப்பட்டிருப்பது அவனுக்குத் தெரியும்.

    ஆனந்த் இன்னொரு வகையில் தோல்விகளை வரவேற்பவன். “நான் எதற்கு அய்யா மாறவேண்டும்? “என்னுடைய நிறுவனத்தில் என்னை வேலைக்குச் சேர்த்தபோது கொடுக்கப்பட்ட பத்திரத்தில் அதெல்லாம் எழுதப்படவில்லை. இவர்கள் நாளைக்கு ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவார்கள். இதைச் செய் அதைச் செய் என்று சொல்லுவார்கள். இதனால் எனக்கு என்ன கிடைக்கபோகின்றது?” என்று சட்டங்கள் பேசி தன்னுடைய ஆதிக்கப் போக்கை நிலைநிறுத்த முயலுபவன். பல ஆண்டுகளாக செய்ததையே திரும்பத் திரும்பச் செய்து புதியதைக் கற்றுக்கொள்ளவும் அதன் தாக்கங்களை ஏற்றுக்கொள்ளவும் தயங்குபவன். சற்றே இவன் ஒத்துழைப்புள்ளவனாக இருந்திருந்தால் முன்னேற்றப் பாதையில் வேகமாகச் சென்றிருக்க வாய்ப்புக்கள் நிச்சயம் இருந்தது.

    தேவகிக்கு அவளுடைய நிறுவனத்தில் நல்ல பெயர். அவள் ஒரு நல்ல உழைப்பாளி. ஆனால் சில குடும்பச் சூழ்நிலைகளால் தன்னுடைய தொழில் முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை. “அய்யா, நான் மாற்றங்களைப் பற்றி நன்கு அறிவேன். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். அது சரி. ஆனால் இந்த மாற்றங்களை நான் ஏற்றுக்கொண்டு நிகழ்வுபடுத்தினால் எனக்கு என்ன லாபம்? புதிய பதவி கொடுக்கப் போகின்றார்களா? அல்லது ஊதிய உயர்வு கொடுக்கப் போகின்றார்களா? அல்லது டாக்டர் பட்டம்தான் கிடைத்துவிடப்போகின்றதா?” என்று கேள்விக்கணைகளை சொருகி நம்மைத் திக்குமுக்காடச்  செய்திடுவாள். “பிரச்சனைகளை ஏற்படுத்தாதே. அந்த அம்மாவை விட்டுடுப்பா” என்று மேலதிகாரிகள் தங்களுடைய அடுத்த அடுக்கு அதிகாரிகளுக்கு அறிவுரை கூறுவர்.

    தேவகியின் முன்னேற்றம் அவளுடைய   சிந்தனைகளின் சில சறுக்கல்களால் தடைப்படுகிறது. மாற்றங்களுக்கும் கற்றல்களுக்கும் தங்களுடைய ஊதியத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை அவள் உணரவில்லை. எந்தப் பதவியில் இருந்தாலும் என்ன ஊதியம் பெற்றாலும் மாற்றங்களும் அவைகளைச் சார்ந்த கற்றல்களும் வளர்ச்சியின் சில நிர்பந்தங்கள் என்பதை அவள் புரிந்துகொள்ளவில்லை.

    சினேகாவுக்கு சற்றே பயந்த குணம். “நாம் புதிதாக ஏதாவது முயன்று அதில் தவறுகள் ஏற்பட்டால் அதன் விளைவுகளை யார் சந்திப்பது? தெரிந்ததைத் தெரிந்தபடி சிறப்பாகச் செய்துகொண்டிருந்தால் போதாதா? நமக்கு எதற்கு வம்பு, நாளைக்கு ஆயிரம் பதில் சொல்லவேண்டியிருக்கும்” என்று ஒதுங்கி நிற்பவள். திறமைகள் இருந்தும் அவள் பய உணர்வு அவளை முயற்சிக்கவே  விடாமல் தடுக்கின்றது.

    இனியன் -அவன் பெயருக்கு ஏற்றாற்போல் மற்றவர்களுடன் பழகுவதற்கு இனியன். நண்பர்கள் அதிகம். அவனைத் தேடியே நண்பர்கள் வருவார்கள். ஆனால் கொடுத்த வேலையைச் செய்யக்கூடியவன். தானாக முன்வந்து எதையும் செய்யமாட்டான்.” என்ன தம்பி, உங்க நிறுவனத்தில் புதிய பல முறைகளைக் கொண்டுவந்திருக்கின்றார்கள் போல் இருக்கிறதே” என்று ஒரு பெரியவர் அவனிடம் கேட்க ” ஆமாம் அய்யா, உண்மைதான். கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம். யாராவது முதல்ல செய்த பின்பு அதோட விளைவு என்ன என்று பார்த்த பின்பு அதற்குப் பின் நான் முயற்சி செய்யலாமென்று நினைக்கின்றேன்.”

    மாற்றங்களைத் தவிர்ப்பதற்கும் மாற்றங்களைவிட்டு ஒதுங்கி தனித்து நிற்பதற்கும் பல காரணங்கள் உண்டு.

    1. என்னால் முடியாது ( I can’t)
    2. எனக்கு அவசியமில்லை. (I won’t)
    3. இதனால் எனக்கென்ன லாபம்? ( (What do I get?)
    4. உள்ளதும் போய்விடுமோ? (What if I lose?)
    5. பொறுத்திருந்து பார்ப்போமே! ( I will wait and see)

    ஆனால் மாற்றங்கள் இவர்களுடைய ஒப்புதலுக்காகவோ நாளைய வெற்றிக்காகவோ காத்திருப்பதில்லை.

    இதை நாம் உணர்ந்துவிட்டால் மாற்றங்களின் வழியாக நம்முடைய முன்னேற்றத்திற்கான ஏணிப்படிகளில் நாம் எளிதாக ஏற முடியும்.

    முயன்று பார்ப்போமா?

    (தொடரும் )

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 40

    க. பாலசுப்பிரமணியன்

    மாற்றங்களை ஏன் எதிர்கொள்ள வேண்டும்?

    ஒரு சிறிய நண்பர்கள் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த ஒருவர் அனைவருக்கும் தெரிந்த ஒரு நண்பரின் நிலையைக் குறிப்பிட்டும் சொல்லும் பொழுது கூறினார் “அவர் வாழ்ந்து கெட்டவர். ஒரு காலத்தில் தன்னுடைய தொழிலில் மிகச் சிறப்பாக முன்னணியில் இருந்தார். ஆனால் காலப்போக்கில் அவர் தொழில் எடுபடவில்லை. பல புதிய புதிய தொழிலில் பல புதிய தயாரிப்பு முறைகளும் விளம்பரத் தேவைகளும் வந்துவிட்டதால் அவர் தொழில் படுத்துவிட்டது. தனது தொழில் என்றும் படுக்காது என்ற அசைக்கமுடியாத தன்னம்பிக்கையில் இருந்த அவர்   தோல்வியில் துவண்டு ஒரு மனநோயாளியாகவே ஆகிவிட்டார்.”  இந்த நிலை இன்று பலருக்கும் ஏற்பட்டுள்ளது. தோல்வியை எதிர்பார்க்காத பலர் அதைச் சந்திக்கும் பொழுது அதை எதிர்கொள்ள முடியாத நிலையில் தங்களுடைய வெளிமதிப்பு காலாவதியாகிவிடுமோ என்ற பயத்தில் தங்கள் தன்னம்பிக்கையை இழந்து வாழ்வின் முடிவுக்கே சென்று விடுகின்றார்கள். இதற்கு என்ன காரணம்?

    நாமெல்லாம் இன்று மாறிவரும் சமுதாயத்தின் அங்கத்தினர்களாக இருக்கின்றோம். மாற்றங்கள் என்றும் நிரந்தரமானவை. ஆனால் இன்று மாற்றங்களின் வேகம் அதிகரித்து விட்டது. இன்றைய அறிவுசால் சமுதாயத்தின்(Knowledge society)  காலச்சக்கரம் சில வாரங்கள் என்ற ஒரு கணிப்பினை சமூகவியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதன் பொருள் என்ன? சில அறிவுத்திறன்களின் தேவைகளும் தாக்கங்களும் பயன்முறைகளும் சில வாரங்களுக்குள் முடிந்து விடுகின்றன. அவைகளுக்கு புதிய அறிவுத்திறன்களும் அவற்றைச் சார்ந்த செயல்திறன்களும் விடைகொடுத்து விடுகின்றன. எனவே இத்தகைய மாற்றங்களுக்கு நாம் நம்மைத் தயார் செய்து கொள்ளவேண்டும். இந்தவகையான மாற்றங்கள் தொடர் நிகழ்வுகளாக இருப்பதால் நம்முடைய கற்றலும் திறன் ஈட்டல்களும் தொடர்ச்சியாக இருத்தல் அவசியமாகின்றது.

    சுமார் நாற்பது-ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நம்முடைய ஊர்திகள் (Cars) ஓட்டும்பொழுது நாம் இயந்திர பிரேக்குகளை  (Mechanical Brakes) உபயோகித்து வந்தோம். அந்த நிலை மாறி தற்பொழுது மின்னணுக்களால் இயக்கப்படும் (electronic brakes) பிரேக்குகளை உபயோகிக்கின்றோம். பழைய ஊர்திகளை பழுது பார்க்கும் மெக்கானிக்குகள் கூட இன்று கிடைப்பதில்லை. நாம் உபயோகித்த வானொலிப்பெட்டிகள் காணாமல் போய்விட்டன. நாம் பார்க்கின்ற தொலைக்காட்சி பெட்டிகளில் பலவித புதுமைகள் இணைக்கப்பட்டு விட்டன. நாம் ஒருகாலத்தில் உபயோகித்த தொலைபேசிகள் அருங்காட்சியகத்திற்குத் தேவையான பொருள்களாகி விட்டன. புதிய அலைபேசிகள் ஆதிக்கத்திலும் தாக்கத்தாலும் நம்முடைய சிந்தனைத்திறன்களும் செயல்திறன்களும் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகின்றன. இதனுடைய தாக்கம் நமது மாணவர்கள் கற்கும் முறைகளிலும் செயலாற்றும் முறைகளிலும் ஏற்பட்டுக்கொண்டு வருகின்றது. அது மட்டுமின்றி, நமது வாழ்க்கைப் பாதைகளையும் மாறிவரும் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் மாற்றங்கள் மிகுந்த அளவில் பாதித்து விட்டன. இதன் காரணமாக நாம் செய்யும் தொழில்களில் தொடர்ந்து மாற்றங்களை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றோம்.

    எனவே இந்த மாற்றங்களில் நாம் பங்கீட்டாளர்களாக (Stakeholders) இல்லாவிட்டால் அவைகள் நம்மைப் பின்தள்ளிவிட்டு முன்னே சென்றுகொண்டிருக்கும். சிஸ்கோ (CISCO) என்ற ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர் ஒருமுறை தனது பேச்சினில் குறிப்பிட்டார்: “இனி வரும் சமுதாயத்தில் பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களைப் பின் தள்ளுவதற்கான வாய்ப்பு குறைவே; ஆனால் வேகமாகக் கற்றுக்கொள்ளும் நிறுவனங்கள் மெதுவாகக் கற்றுக்கொள்ளும் நிறுவனங்களைப் பின்தள்ளிவிடும்.” ( In the Knowledge society, the big will not swallow the small, but the faster will swallow the slower).

    மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாத நபர்கள், நிறுவனங்கள் மாற்றும் தொழில் அமைப்புக்கள், மாற்றங்களை முன்கூட்டியே நுகராத நபர்கள், நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புக்கள் தங்களுடைய தோல்விகளுக்கும் வருங்காலச் சீரழிவுக்கும் தாங்களே வித்திட்டுக்கொள்ளுகின்றன. மாற்றங்களை நுகர்தலும், அறிதலும், அவற்றை ஏற்றுக்கொண்டு புதிய சிந்தனைகளையும் வழிமுறைகளையும் நடைபடுத்திக்கொள்ளுதலும், தோல்விகளைத் தவிர்ப்பதற்கு மட்டுமின்றி வருங்கால வெற்றிகளுக்கு வித்தாகவும் அமையலாம்.

    பழமையைப் பாராட்டுதலும், பழமையைப் போற்றுதலும், பழமைச் சின்னங்களைப் பாதுகாத்தலும் எவ்வளவுக்கெவ்வளவு அவசியமோ அவ்வளவுக்கவ்வளவு புதுமையை  ஏற்றுக்கொண்டு முன்னேற்றப்பாதையில்  செல்லுவதற்குத் தயார் செய்து கொள்ளவேண்டும். மாற்றங்களை ஏற்க மறுப்பவர்கள் மாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்களுடைய முன்னேற்றத்திற்கு தடைக்கற்களை தாங்களே முன்வைத்துக்கொள்கின்றார்கள்.

    மாற்றங்கள் நம்முடைய ஒப்புதலுக்காகவோ அல்லது விருப்பு வெறுப்புக்களுக்காகவோ காத்திருப்பதில்லை அல்லது பணிவதில்லை. அவைகள் இயற்கையின் மற்றும் மனித சிந்தனை வளர்ச்சியின் வெளிப்பாடுகள். நம்முடைய வேகத்தைக் கணித்து அவைகளுக்காகத் தங்களுடைய வேகத்தை அவைகள் சமன் செய்துகொள்வதில்லை. நாம் நமது தேவைகள் மற்றும் நிர்பந்தங்களுக்கேற்றவாறு இந்த மாற்றங்களின் வேகத்தை கணித்து முன்செல்லவேண்டும். மறுத்தால், நம்முடைய சமூக, பொருளாதார மற்றும் தொழில் துறைகளில் தொடர்ந்து தோல்விகளைத் தழுவ வேண்டியிருக்கும்.

    மாற்றங்கள் இயற்கையின் நியதி. மாற்றங்களைத் தவிர வேறெதுவும் மாறுவதில்லை என்பது முதுமொழி. வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றிக் கூறிய வள்ளுவர் தந்த குறள் இந்த மாற்றங்களின் ஆதிக்கத்திற்கு இன்னொரு சான்று.

    இன்றிருப்பார் நாளையில்லை என்னும்

    பெருமை உடைத்து உலகு.

    மாற்றங்கள் என்பது நமது பார்வைகளின் மற்றொரு கோணம். மாற்றங்கள் நமது சிந்தனைகளின் இன்னொரு புதிய வெளிப்பாடு. எனவே மாற்றங்களைக் கண்டு நாம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.. ஆனால் இந்த மாற்றங்கள் நம்முடைய கலாச்சார அடிப்படைகளைத் தாக்காத வண்ணமும் நம்முடைய பாரம்பரியங்களை சின்னா பின்னமாக நசுக்கி விடாத வண்ணமும் நாம் அவற்றை ஏற்று புத்திசாலித்தனமாக நிலைநிறுத்த வேண்டும்.

    மாற்றங்களால் நமக்கு ஏற்படும் இழப்புக்கள் தோல்விகள் அல்ல. அவைகள் நம்முடைய செயல்திறன்களில் உள்ள சிறிய குறைபாடுகளே. பலருக்கு நம்மால் இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியுமா என்ற ஒரு பயமும் சந்தேகமும் ஏற்படுகின்றது.

    இதை விளக்கும் வண்ணம் ஒரு மேலைநாட்டு மனநல நிபுணர் கூறுகின்றார்: “நாமெல்லாம் கோவிலில் ஒரு கயிற்றால் கல்தூண்களில் கட்டப்பட்ட யானையைப் போன்றவர்கள். அந்த யானை நினைத்தால் அந்தக் கயிற்றை ஒரு நொடியில் அறுத்துக்கொண்டு வெளிவர முடியும். ஆனால் நாம் கட்டப்பட்டுள்ளோம் என்ற ஒரு எண்ணம்  அதன் மனதில் இருக்கும் வரை அது அந்த இடத்தை விட்டு நகராது. அதுபோல் நம்மில் பலர் நம்முடைய வளர்ச்சியை சில சிந்தனைகளால் கட்டுப்போட்டிருக்கின்றோம். அந்த சிந்தனைகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளுதல் அவசியம். இதைக் கற்றலின் இயலாமை (Learned Helplessness) என அழைக்கலாம்.”

    உண்மைதானே?

    நாமும் புதிய தரமான சிந்தனைகளையும் மாற்றங்களையும் பரிசீலித்து ஏற்றுக்கொள்ளப் பழகலாமே !

    (தொடரும்)

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே  38

    க.பாலசுப்பிரமணியன்

    தோல்விகள் நமக்கு என்ன சொல்லித் தருகின்றன?

     தோல்விகளும் தவறுகளும் கற்றலுக்கு அடிப்படை எனக் கருதப்படுகிறது. தோல்விகளைக்கண்டு துவளாமல் தவறுகளைக்கண்டு கலங்காமல் அவற்றிற்கான அடிப்படைக் காரணங்களை அறிந்து அந்தத் தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னேற்றப் பாதையில் அடுத்த அடியை வைப்பதே வாழ்க்கையின் வெற்றிக்கு உத்திரவாதம் தரும். மாறாக, நமது கல்வித் திட்டங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் தவறுகளை சுட்டிக்காட்டி ஒருவரை அவமானப் படுத்துவதும் தரக்குறைவாக நினைப்பதும் வழக்கமாக ஆகிவிட்டது..  தவறுகள் ஏற்படக் காரணம்  என்ன, அதற்கு அலட்சியம் காரணமா, அறிதல் புரிதலில் குறைபாடுகளா , ஒருவரின் சிந்தனையில் ஏற்பட்ட குறைபாடுகளா அல்லது ஒருவரின் அணுகுமுறையில் இருக்கின்ற குறைபாடுகளா என அலசி ஆராய்ந்து அவற்றை திருத்த முயற்சிக்க வேண்டும்

    உலகின் மிகச் சிறந்த அறிவியல் மேதை ஐசாக் நியூட்டன் பல முறைகள் தவறு செய்து வெற்றிகண்ட பின் தன்னுடைய வெற்றியை பாராட்டியவகளிடம் ” இப்பொழுது  999 முறைகளில் எவ்வாறு இதைச் செய்யக்கூடாது என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று தனது தவறுகளே வெற்றிக்கு வழிகாட்டியது என்பதைத் தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறினார் .இதே கருத்தின் பிரதிபலிப்பை நாம் ஐன்ஸ்டீன் போன்ற பல மேதைகளின் வாழ்க்கை வரலாறுகள் மூலம் அறிந்துகொள்கின்றோம். எனவே தவறுகள் ஒரு மனிதனின் வாழ்க்கையில் பல நேரங்களில் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. ஆனால் தன் தவறுகளைத் திருத்திக் கொள்ளாத மனிதன் ஒரு மூடனாக கருதப்படுகின்றான்.

    நாமெல்லாம் உலகம் போற்றும் நோபல் பரிசுகளை பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம்.  இந்தப் பரிசினைப் பெற்றவர்களை உலகம் போற்றும் அறிவாளிகளாகக் கருதுகின்றோம். இந்தப் பரிசை நிறுவிய ஆல்பிரேட் நோபல் அவர்களின் பின்னணி என்ன?

    ஆல்பிரேட் நோபல் ஒரு மிகச் சிறந்த அறிவியல் மேதை. அவர் இரண்டாம் உலகப் போரின் பொழுது ட்ரை நைட்ரோ கிலிசரின் (Tri-Nitroglycerine) என்ற ஒரு வேதியல் பொருளால் தயாரிக்கப்பட்ட (dynamite) டைனமைட் என்ற பொருளைக் கண்டுபிடித்தார் அது  ஒரு வெடிமருந்தாக உபயோகப் படுத்தப் பட்டது. இதன் காரணமாக பல வீரர்கள் போர்க்களத்தில் உயிரிழந்தனர். அதனால் இவருடைய வேதியல் பொருளின் தேவை அதிகமானது. இவரால் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு பொருள் சேர்க்க முடிந்தது. ஒரு நாள் காலை அவர் வாழ்ந்த நகரத்தில் உள்ள காலைப் பத்திரிகையில் “மரணத்தின் தூதர் ” என்ற தலைப்பில் ஒரு இரங்கல் செய்தியும் அத்துடன் இவரது படமும் வெளியிடப்பட்டிருந்தது. அதைக் கண்ட நோபல் தன்னுடைய கண்டுபிடிப்பு எவ்வளவு தவறானது, அதனால் எப்படிப்பட்ட துன்பங்கள் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ளன என்று சற்றே சிந்தித்தார். மனம் மாறி தன்னுடைய சொத்து முழுவதையும் உலக நன்மைக்குப் பயன்படும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உதவும் வகையிலும் அதைச்செய்தவர்களை பாராட்டிப் போற்றும் வகையிலும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதற்க்குக் கொடுத்துவிட்டார். சில நேரங்களில் தங்கள் தவறுகளை உணர்ந்தவர்கள் ஏற்படுத்திய மாற்றங்களையும் விந்தைகளை சொல்லவும் முடியுமோ ?

    கலிங்கத்துப் போரில் வெற்றிகொண்ட மாமன்னன் அசோகன் மனம் மாறி அமைதியையும் ஆக்க பூர்வமான அரசாட்சியையும் மேற்கொண்டது யாவரும் அறிந்ததே ! பல நேரங்களில் தவறுகள் குறுகிய சிந்தனைகளாலும்  தான் என்ற மமதையினாலும், ஆணவப் போக்கினாலும், அளவற்ற ஆசைகளாலும் ஏற்படுகின்றன. இது ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையில் நித்தம் நடக்கும் செயல்களில் வெளிப்படுகின்றன. இவைகளைக் கட்டுப்படுத்தி நாம் பொதுநலச் சிந்தனையோடு எவ்வாறு வாழ முடியும் என்று சிந்திக்க வேண்டும். அதுவே ஒரு சிறந்த வாழ்க்கைக்கு அறிகுறி.

    இந்த மாற்றங்களை வாழ்க்கையில் கொண்டு வருவது  ஒரு முடியாத செயலல்ல. ஆனால் இதற்கு மனத்தளவில் மாற்றமும் முயற்சியும் தேவை. இந்த மாற்றங்கள் மனித உணர்வுகளோடு சம்பந்தப்பட்டவை. எனவே உணர்வுகளின் தாக்கங்களை அறிந்து மாற்றங்களை செயல் படுத்துதல் மிக அவசியம். உலக அளவில் புகழ்பெற்ற ஜென் துறவி லா- ட்சு என்பவர் கூறுகின்றார்  ” மற்றவர்களை வெல்வதற்குப் படை வேண்டும். நம்மை நாமே வெல்வதற்கு வலிமை வேண்டும்.”

    தோல்விகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொண்டு வெற்றிப்பாதையில் நடைபோட வலிமை வேண்டும். இந்த வலிமையை நாம் எப்படிப் பெற முடியும்? தன்னம்பிக்கை, தன்னடக்கம், துணிவு, முயற்சி பொறுமை, நிதானம், செயல் திறன்கள் ஆகிய பல நம்முடைய வெற்றிக்கு முன்னோடியாக அமைகின்றன.

    சும்மாவா சொன்னாங்க “வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்”

    நாமும் எதிர் நீச்சல் போட்டு வாழ்ந்து பார்க்கலாமே. …

    (தொடரும்)

    Share