க. பாலசுப்பிரமணியன்

நினைவலைகளில் முழுகி எழுந்திருக்கும்பொழுது -1957 – மதுரையிலே எட்டாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்த நேரம்.. தீபாவளிக்கு சுமார் பதினைந்து நாட்களுக்கு முன்பே கொண்டாட்டங்களின் துவக்கம்.. வீடு தோறும் பாட்டாசுகள். ஒரு பத்து ரூபாய் பணம் எடுத்துக்கொண்டு சென்றால் ஒரு பெரிய சாக்குப் பை நிறைய பட்டாசுகள்… வகை வகையாய் … ஓலை வெடியை வைத்துக்கொண்டு நித்தம்… காலையும் மாலையும் – கைகளிலெல்லாம் வெள்ளை வெளேரென்று பட்டாசு மருந்துகள்…

“போய் கையை நல்லா சோப்பு போட்டு அலம்பிக்கொண்டு அப்புறம் சாப்பிட வா…” அன்னையின் ஆணை.

நான்கு நாள் முன்னதாகவே பட்சணங்கள் தயாரிக்கும் பெரியவர்கள்… கைமுறுக்கு சுற்ற நாலு பேர்…

“அம்மா.. அம்மா.. நானும் சுத்திப் பார்க்கட்டுமா”

“வேண்டாம்.. தள்ளிப்போடா .. எண்ணை கொதித்துக்கொண்டிருக்கின்றது.. தண்ணி பட்டு வெடித்து விடப்போகின்றது…”  அப்போதுதான் டபால் என்று ஒரு சத்தம்.. சில நீர்த் துளிகள் எண்ணையில் தெளித்து ..

“அய்யயோ ,, கையில் கொதிக்கிற எண்ணை தெளித்து விட்டது….. போய் அந்த இட்லிமாவை எடுத்து அங்கே போடு.. “

‘டேய்.. இந்தாடா. ” ஒரு பாதி வெந்த கைமுறுக்கை கையில் கொடுத்த அத்தை ” இது நல்ல மெதுவாக இருக்கும்.. ” அந்தச் சுவை இன்னும் நாவினில்..

காலங்கள் ஓடுகின்றன… சில ஆண்டுகள் நகர.. பத்தாவது வகுப்பு..

“அம்மா.. காலையில் சீக்கிரம் எழுந்து நாலு மணிக்கே பட்டாசு விடணும்…”

மூன்று மணிக்கே தூக்கம் களைந்து விட , குளிக்கும் அறையில் ஒரு பெரிய பித்தளைப் பானையில் வெந்நீர் கொதித்துக் கொண்டிருக்கின்றது..

“கொஞ்சம் அந்த விறகடுப்பை ஊதிவிடேன்.. ” இது பாட்டி.  தன்னுடைய அரைகுரைப் பார்வையை வைத்துக்கொண்டு ..

அந்தப் பித்தளை ஊதுகுழலை வைத்து ஈரமான விறகில் மெதுவாக எரிந்துகொண்டிருக்கும் அக்கினி பகவானோடு .  பேசிக்கொண்டு. சில நேரங்களில் கண்ணனைப் போல் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு…

“வரிசையாய் உட்காருங்கோ எல்லாரும்..:” நான், என் தம்பி, அத்தை குழந்தைகள் இருவர்.. “எனக்கு முதலில்.. எனக்கு முதலில்”.  இன்றும் நினைவில் சண்டைகள்… அழுகை..  “டேய், தீபாவளியும் அதுவுமா காலையிலே அழாதீங்கடா…”

உறவுகள் வலுவாக இருந்த காலம்.. தேவைகள் குறைவாக இருந்த காலம்.. மகிழ்ச்சி நிரம்பியிருந்த காலம்…

” என்னுடைய கம்பி மத்தாப்பு சரியா எரியலை.. உன்னோடுதைக் கொடேன் ” என்று ஒருவன் கெஞ்ச ” அதெல்லாம் தர முடியாது ” என்று சொன்னவன் எங்கேயோ பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது அவன் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த முறத்திலிருந்து ஒன்றைத் திருட…

வாழ்க்கை இனித்தது .. இனிப்புக்களை விட அதிகமாய்..

இன்னிக்கு என்ன படம் ரிலீஸ்?  முதல் நாள் முதல் காட்சி போவதற்கான முயற்சிகள்…

சிவாஜியும் பண்டரிபாயும் சேர்ந்து நடித்த அவள் யார் என்ற படம். நண்பகல் காட்சிக்காக காலை எட்டு மணிக்கே வரிசையில் நின்று..

“டேய்.. அங்கே பாருடா… ஏறிக்குதிக்கிறான்.. ” என்று வரிசைக்காகச் சண்டைபோட்டு, தீபாவளிக்கான புதிய சட்டையைக் கிழித்துக்கொண்டு…

நினைத்துப்பார்த்தால் வாழ்க்கை முழுமையாய்.. எத்தனை பாடங்களைச் சொல்லிக் கொடுத்தது.!!

அடுத்த வருடம்…

” பாட்டி என்ன களிமண்ணா அங்கே…”

“வெந்நீர் போடற மண்ணடுப்பு உடைந்திருக்கு .. ஒரு புது அடுப்பு பண்ணலாமென்று”

“நான் பண்ணட்டுமா…” அந்தக் களிமண்ணோடு போராடி ஒரு அடுப்பை வடிவமைத்து.. ஒரு தொழில்நுட்ப பொறியியல் பட்டமே பெற்றிருக்கலாம்.

காலங்கள் ஓடின..

கல்லூரிக் காலம்… பட்டாசு மோகம் குறைந்து.. என்ன டிரஸ்?.. பெல் பாட்டம் பாண்ட் .. முழுக்கைச் சட்டை…

“டிரஸ் சூப்பராக இருக்கே…” இது ஒரு சொந்தக்காரரின் நக்கலான வார்த்தைகள்…

ஒரு முறை திருவல்லிக்கேணியில் குடியிருப்பு. நான்கு குடித்தனங்கள்… “ஹலோ , நண்பரே .. இந்த வருஷம் உங்க வீட்டிலே என்ன ஸ்வீட்?”

“எனக்குத் தெரியாது.”

“ஒரு ஐடியா பண்ணினால்  என்ன… மொத்தமா நாலுபேர் வீட்டுக்கும் சேர்த்து கோதுமை அல்வா பண்ணினால் .. “

யோசனை வலுத்தது.  நாலு ஆண்கள் சேர்ந்து… ஒருவர் கோதுமையை ஊற வைத்து  ஆட்டுக்கல்லில் அரைத்து பாலெடுக்க, இருவர் அடுப்படியில்,,,

“ரொம்ப நன்றாக வந்திண்டிருக்கே  ..” பக்கத்துக்கு வீட்டு மாமியின் கண் பட…

கடைசி நேரத்தில் அல்வா கொஞ்சம் இறுகி விட…. அது “சாக்லேட் அவதாரத்தில் வெளியே வர…

தீபாவளி இனித்தது.. அந்த சாக்லேட்டைப் போல…

இன்று…

“என்னங்க…” இது என் மனைவி… ” நாளைக்கு தீபாவளி… சீக்கிரம் கடைக்குப்போய் ஏதாவது ஸ்வீட்டும் மிக்ச்சரும் வாங்கிண்டு வாருங்க..

காலங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன.. பல நேரங்களில் மலரும் நினைவுகளில் நாம் மகிழ்வோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். !

தீபாவளி வாழ்த்துக்கள் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *