க. பாலசுப்பிரமணியன்

 செவிச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை

education

கற்றலுக்கான வழிமுறைகளை பற்றிய  ஆராய்ச்சிகளின் மூலம் கீழ்க்கண்ட நான்கு வழிகள் அதற்க்கு உறுதுணையாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. :

அவையாவன:

  1. கேட்டல் (Listening)
  2. பேசுதல் (speaking)
  3. படித்தல் (Reading)
  4. எழுதுதல் (writing)

தொல் காலம் முதற்கொண்டே கல்வி அறிவு நல்லாசிரியர்களிடமிருந்தும் குருக்களிடமிருந்தும் மாணவர்களுக்கும் சீடர்களுக்கும் கேள்வி ஞானம் மூலமாகவே கிடைத்து வந்தது. பண்டைய காலத்தில் இந்த முறையை வடமொழியில் “சுருதி’ என்றும் “ஸ்ம்ருதி ‘ என்ற சொற்கள் மூலமாக வெளிப்படுத்தி வந்தனர். இந்திய துணைக்கண்டம் மட்டுமின்றி உலகளாவிய பல நாடுகளில் பிளாட்டோ, அரிஸ்டோட்டில் போன்ற பல பேரறிஞர்கள் தங்களுடைய சீடர்களுடன் உரையாடல் மூலமாகவும், கேள்வி பதில்கள் மூலமாகவும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு அறிவுக்கனலை வளர்த்து வந்தனர்.

தமிழ்நாட்டில் இதன் பெருமையை திருக்குறள் தெள்ளத்தெளிவாக நம்முன் வைக்கின்றது.

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை.

என்று கேட்டு அறிந்து நம் அறிவை வளர்த்துக் கொள்ளும் திறனின் அவசியத்தை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது

அது மட்டுமல்ல, செவி இன்பத்தை சிறப்பித்துக் கூறும் வள்ளுவரின் கீழ்க்கண்ட குறள் நம் சிந்தனைக்கு ஒரு நல்ல விருந்து.

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்.

ஆனால் “கேட்டல்” என்பது வெறும் காதுகளில் ஒலித்துகள்களை வாங்கிக் கொள்வது மட்டுமல்ல.  நம்முடைய காதுகளில் விழுகின்ற ஒலி அலைகள் நம்முடைய மூளை வரை சென்று அதன் கருத்தை உள்வாங்கி அதற்குப் பொருள் கொடுத்து அதை உணர்வோடு ஒன்றிடவைத்து நமக்கு ஒரு செய்தியாக, ஒரு கருத்தாகத் தரும் பொழுதுதான் அந்தக் “கேட்டல்” என்ற செயலுக்கு ஒரு பொருளும் நிறைவும் கிடைக்கின்றது.

“கேட்டல் ” என்ற செயலை நிறைவேற்றுவதில் மூளைக்கு ஒரு மிகப்பெரிய பங்கு இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. காதில் விழுவதெல்லாம் வெறும் ஒலித்துகள்களே. அதை மூளைக்கு எடுத்துச் சென்று அதை உருவகித்து, சம்பந்தப்பட்ட மொழியுடனும், அதைச் சார்ந்த முன்னறிவுடனும், தக்க பொருளுடனும் இணைத்து மூளை நமக்கு ஒரு வினாடியில் மிகச்சிறிய விழுக்காட்டில் அறிவாகத் தருகின்றது. என்ன விந்தையான செயல்!. இப்படி இருக்கும் பொழுது இந்தக்காதுகளை நாம் எவ்வாறு உபயோகமுள்ளதாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்?

கற்றலில் இந்த “செவிச்செல்வத்திற்க்கு” ஒரு அறிய இடம் உள்ளது. பல புத்தகங்களைப் படித்து நமக்கு கிடைக்கின்ற அறிவு சிறிது நேரத்தில் ‘செவிச்செல்வத்தின்’ மூலமாகக் கிடைக்கின்றது. இதனைப்  பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மன-நரம்பியல் அறிஞர் முனைவர். வீ,.எஸ்  ராமச்சந்திரா அவர்கள் தன்னுடைய “கதை சொல்லும் மூளை”  (The Tell- Tale Brain ) என்ற புத்தகத்தில் கீழ்கண்டவாறு கூறுகின்றார்,

“Human language seems so complex, multi-dimensional, and richly evocative that one is tempted to think that almost the entire brain, or large chunks of it at least must be involved.  After all, even the utterance of a single word like “rose” evokes a whole host of associations and emotions: the first rose you ever got, the fragrance, rose gardens you were promised, rosy lips and cheeks, thorns, rose-colored glasses, and so on. Doesn’t it imply that many far-flung regions of the brain must cooperate to generate the concept of rose? Surely, the word is just the handle, or focus, around which swirls a halo of association, meanings and memories.”

“ரோஜா” என்ற ஒரு வார்த்தை சொல்லப்படும்பொழுது அதைக் கேட்பவரின் உள்ளத்தின் எத்தனை விதமான கற்பனைகள் எண்ணங்கள் உண்டாகலாம்.. ஒருவர்க்கு கிடைத்த முதல் ரோஜா, அதன் மனம், அதன் நிறம், அத்தோடு சேர்ந்த முள், ரோஜாத் தோட்டம், அந்த வண்ணத்தில் பூசப்படும் நிறங்கள், அந்த வண்ணத்தில் அணியப்படும் கண்ணாடிகள் ..இன்னும் எத்தனை எத்தனை .. இவ்வை அனைத்தும் வெளிவுப்படுத்த மூளையின் கிட்டத்தட்ட எல்லாப் பகுதிகளும் உபயோகத்திற்கு வருகின்றன.

ஆகவே கற்றலில் “கேள்வி அறிவு” ஒரு முக்கியமான ஒரு தனிமனிதனின் அறிவு வளர்ச்சியைத் தூண்டக்கூடிய வகையில் அமைந்துள்ளது. நாம் எப்படிக் கேட்க வேண்டும்? இதற்க்கு ஏதாவது தனித்திறன்களோ அல்லது ஆர்வமோ தேவையா? பள்ளிகளில் ஆசிரியர்கள் எவ்வாறு கேள்வி அறிவை ஊக்கப்படுத்த வேண்டும் ? மேடைப்பேச்சில் கேட்பவர்களுக்கு மேலும் கேட்பதற்கான ஆர்வத்தை தூண்டுவிக்கும் வகையில் எவ்வாறு பேச வேண்டும்? – என்பதெல்லாம் நாம் அனைவரும் கற்று அறிந்துகொள்ளவேண்டிய இன்றயத் தேவை.

இந்த கேள்வி அறிவின் சிறப்பை விளக்கும் வகையில் செகப்பிரியர் (Shakespere) தனது “ஹாம்லெட் ” (Hamlet) என்ற நாடகத்தில் ஒரு கட்டத்தில் பொலோனியஸ் என்ற ஒரு தந்தையின் வாயிலாக தன மகனுக்குத் தரும் அறிவுரையை கூறுகின்றார் :

“Give everyman thy ear, but few thy voice.”

கற்றலில் இந்தக் “கேட்டல்” திறனின் தாக்கங்களைப் பற்றித் தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.