அம்மாவின் நாட் குறிப்பிலிருந்து

ராஜகவி ராகில்

 

 

மகனே

காகம் கரைந்தால் வீதியில் வந்து நிற்கின்றன

என் கண்களடா

 

உன் முகந்தான் தெரிகிறது

நான் கண்ணாடி பார்க்கின்ற நேரமெல்லாம்

 

என் பழைய சேலைகளிலும்

உன் வாசந்தான் வாழ்கிறது மகனே

 

அம்மா கண்களைப் பூக்களாக்க மாட்டாயா

ஒரு தரம் வந்து

 

மகனே

சமைத்துத் தந்த சட்டி பானைகளுக்குள்ளும்

உன் ஞாபகங்கள்தானடா

 

பாசம் உயிரோடு கொல்லும்

இதை உண்மையாக்கியவன் நீ

 

பசி வரும் போது

உனக்கும் சேர்த்து நிறையச்  சாப்பிட்டாலும்

அடங்கியபாடில்லை மனப்பசிதான்

 

நீ உப்பில்லாமல்தான் உண்கிறாய் போலும்

உன் நாக்கிலும் செத்துப்போனதா

அம்மா ஞாபகம்

 

மகனே

வீட்டில் விளக்கு எரிந்தாலும்

இருளில் கிடக்கிறது என் மனசு

 

காற்றோடு அதிகம் பேசுகிறேன்

பழகுகிறேன்

என்னை வாழவைத்துக் கொண்டிருப்பது அதுதானே

 

மகனே

வேர் கிளை ஒன்றாக இருந்தால்தான்

விழுது விட முடியும்

 

அங்கிருந்து ஆயுள் வரை

நீ அம்மா குரல் கேட்க

நான் சுசீலா அல்ல மகனே

 

உன் அம்மா பாசம் தாகமாய்த் தவிக்கிறது

கண்ணீர் கூட இல்லையடா

நான் அருந்த

 

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *