Tag: நிர்மலா ராகவன்

  • நலம் .. நலமறிய ஆவல் (82)

    நிர்மலா ராகவன்

    வயதாகிவிட்டதா? அதனால் என்ன!

    நலம்

    `ஆண்களிடம் சம்பளமும் பெண்களின் வயதையும் கேட்கக்கூடாது!’

    சிறு குழந்தைகள் தம் வயதைவிட ஒன்றிரண்டைக் கூட்டிச் சொல்வார்கள், பெருமையுடன். பிறர் தம்மை ஒரு பொருட்டாகக் கருதமாட்டார்களோ என்ற பயம்தான் காரணம்.

    ஒரே கவலை

    பொதுவாகவே, வயதாக ஆக, நாம் மரணத்தின் அருகில் இருக்கிறோமே என்ற கவலை பலருக்கும் வந்துவிடுகிறது. அதனால், இன்று உயிருடன்தானே இருக்கிறோம் என்று திருப்தி அடைய முடியாது போகிறது.

    சிலருக்குத் தம் கஷ்டங்களுக்கெல்லாம் காரணம் மனைவிதான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை. தமக்கு வயதாகிவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள இவர்களுக்கு மனமில்லை.

    `நான் முன்பெல்லாம் இப்படியா பலகீனமா இருந்தேன்! எல்லாம் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டதால்தான்!’ என்று மனைவியிடம் பாய்வார்கள் — நாற்பது வருட `இல்லறத்துக்கு’ப்பின்!

    “எனக்கு முடி நரைக்க ஆரம்பித்துவிட்டது. அவமானமாக இருக்கிறது!” என்றாள் என் சக ஆசிரியை பரம்ஜித் கௌர்.

    “இதில் அவமானமென்ன! உதிர முடி இருக்கிறதே என்று திருப்தி அடைய வேண்டியதுதான்!” என்றேன் அவளுக்கு ஆறுதலாக.

    நடையில் தளர்ச்சியா? நடக்கவாவது முடிகிறதே என்று சந்தோஷப்படுக்கொள்ளலாமே!

    ஐம்பது வருடங்களுக்குமுன் ஒருவர் பதவியிலிருந்து விலகி ஓய்வு பெறும்போது, நண்பர்கள் எல்லாரும் கைத்தடிதான் பரிசாக அளிப்பார்களாம்.

    இன்றோ!

    தள்ளாடி நடந்து, எப்போது விழுந்துவிடுவாளோ என்ற பயத்தைப் பார்ப்பவருக்கு அளிக்கும் என் உறவினரிடம், “ஒரு தடி வைத்துக்கொள்ள மாட்டாயோ!” என்றேன், கரிசனத்துடன்.

    “வயசானவள்னு நினைச்சுடுவாடி!” என்றாள். அவளுடைய பேரனுக்குக்கூட கல்யாணம் நடந்திருந்தது!

    வயதானதில் பெருமை

    சிலர் `எனக்கென்ன! வயசானவன்!’ என்று அடிக்கடி கூறுவார்கள். பெருமையாக. தம்மை எல்லாரும் மதித்து நடத்த வேண்டும், தாம் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களுடைய குரலில் இருக்கும். அந்த எண்ணம் ஏமாற்றத்தில்தான் முடியும்.

    வயதானால் அனுபவங்கள் நிறைய இருக்கலாம். ஆனால், மாறிக்கொண்டே இருக்கும் காலத்தில் அவர்களுடைய அதிகாரத்தை எத்தனை இளையவர்கள் ஏற்பார்கள்?

    கதை

    தொண்ணூறு வயதான மீனாட்சி பாட்டி படுக்கையிலேயேதான் நாட்களைக் கழிக்க வேண்டியிருந்தது.

    ஒரு முறை, சிறுவனான பேரன் கையைச் சொறிந்தபடி பெரிதாக அழ, “பூச்சி கடிச்சிருக்கும். புளியை ஜலத்திலே கெட்டியா கரைச்சுத் தடவினால் சரியாப் போயிடும்!” என்றார்.

    உடனே குணம் தெரிந்தது. எக்காலத்திற்கும் ஏற்றதாக இருப்பவைகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.

    `எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்..’ என்பதைக் கடைப்பிடிப்பவர்கள் தகுந்த அறிவுரைகளைப் பின்பற்றி பலன் அடைகிறவர்கள்.

    தவிர்க்க முடியாதது

    மனிதனாகப் பிறந்த எவருமே தாமும் ஒரு நாள் முதுமை அடையப்போகிறோம் என்பதை உணரத் தவறிவிடுகிறார்கள். இளமையில் முதியவர்களைப் பார்த்துக் கேலி, இளக்காரம். அவர்களுடைய அறிவுரையோ, `தொணதொணப்பு’.

    அவர்களே முதுமை அடையும்போது, `எத்தனையோ சொன்னார்கள். நான் கேட்கவில்லை!’ என்ற வருத்தம்தான் மிஞ்சும்.

    அதிகாரம் செலுத்தாது, கட்டுப்படுத்த நினைக்காது குழந்தைகளுடனும் இளையவர்களுடனும் பழகினால், இளமைக்கே உரிய உற்சாகம் பிறரையும் தொற்றிக்கொள்ளும்.

    அலட்சியமும் இலட்சியமும்

    இருபது வயதை எட்டும் இளைஞர்கள் இலட்சியவாதிகளாக இருக்கிறார்கள். வயது ஏற, ஏற, உலகின் போக்கு பிடிபட்டுப்போகிறது. அதனால் கசப்பு ஏற்படலாம். அவர்களைப் பாதித்தவைகளைக் கண்டு அலட்சியம் மிக, சுயநலவாதிகளாக மாறுகிறார்கள்.

    காலங்கடந்த வருத்தம்

    பழையதொரு புத்தகத்தைப் புரட்டிப் பார்ப்பதைப்போல, தாம் வாழ்ந்த காலங்களை அசைபோடும்போது, எத்தனையோ கைகூடாத லட்சியங்களும், கனவுகளும் பெரிதாகப் புலன்படும். அவைகளை நினைத்து வருந்தினால் முதுமையின் பாதிப்புதான் அதிகரிக்கும். எவ்வளவு ஆசைப்பட்டாலும், எத்தனை முயற்சிகள் எடுத்தாலும், இளமை என்னவோ திரும்பிவிடப் போவதில்லை.

    கதை

    எனது நெருங்கிய தோழி ஒரு மருத்துவ நிபுணர். `இதில் கால்சியம், இதில் புரோதச்சத்து,’ என்று பார்த்துப் பார்த்துச் சாப்பிடுவாள். குதிரையேற்றத்திலிருந்து ஏதேதோ உடற்பயிற்சிகள் வேறு.

    எழுபது வயதை எட்டியதும், “என்னதான் கவனமாக இருந்தாலும், முதுமையைத் தோற்கடிக்க முடியாது!” என்றாள் விரக்தியுடன். “இன்னும் எதற்கு தலைமுடிக்குக் கறுப்புச் சாயம்!”

    தோற்றத்தில் முதுமையை ஏற்றவுடன் மனமும் தெளிவடைய, ஆன்மிகத்திலும் சமூக சேவையிலும் நிறைவு காண்கிறாள். எதையாவது புதியதாகக் கற்றுக்கொண்டே இருப்பது மனதை, அதன்மூலம் உடலையும், இளமையாகவே வைத்திருக்கும்.

    உலகில் இருக்கும் எல்லா அவலங்களையும் ஒருவரால் ஒழிக்க முடியாவிட்டாலும், ஒத்த மனதுடையவருடன் இணைந்து ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்யலாமே! வாழ்விலும் ஒரு பிடிப்பு ஏற்பட இது நல்ல வழி.

    `வண்டி’ ஓடும்வரை

    வயதானதால் உடல் சற்றுத் தளரலாம். ஆனால், மனதையும் தளரவிடுவது உயிர் இருக்கும்போதே இறப்பதுபோல்தான்.

    “உயிரை நடத்திச்செல்லும் வாகனம் உடல்,” என்கிறார்கள். நம்முடைய வாகனம் ஒன்று சற்று பழையதாகிவிட்டால், அதில் அடிக்கடி கோளாறு உண்டாகிறதல்லவா? தூக்கியா ஏறிந்துவிடுகிறோம்? நம் உடலும் அப்படித்தான். நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்க முடியாது. அதைப்பற்றியே சிந்தனையை ஓடவிடாது, பிறரிடமும் நம் `போதாத காலத்தை’ப்பற்றிப் பேசாது இருந்தாலே வியாதிகளும் நம்மைப் பார்த்து அஞ்சி விலகும்.

    ஞாபகசக்தி குறைவா? பழைய கஷ்டங்களும் மறந்திருக்குமே!

    `என்னாலே ஒண்ணுமே முடியலே!’

    இப்படிச் சொல்வது சோம்பலின் அறிகுறியா, இல்லை, `உன் வயதுக்கேற்றபடி நட!’ என்று யாராவது கூறிவிடுவார்களோ என்ற பயமா?

    ‘உன்னால் எதையும் சரியாகச் செய்ய முடிவதில்லை. மறந்து, மறந்து போய்விடுகிறாய்! ஒதுங்கி இருந்து, நடப்பதை வேடிக்கை பார்!’ என்பது கொடுமை.

    நம்மால் இயன்றதை சிரத்தையுடன், சற்று சிரமப்பட்டாவது செய்யலாமே!

    இந்த வயதிலுமா `பிறர் பழிப்பார்களே!’ என்று அஞ்சி நடக்கவேண்டும்?

    கதை

    எனக்குச் சற்று பரிச்சயமாகி இருந்த லிண்டாவிடம் அவள் வயதைக் கேட்டேன்.

    சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, “ஐம்பத்து ஏழு!” என்றாள் ரகசியக்குரலில். அதற்கு முன்பு, `நான் எப்போது ஷாப்பிங் போனாலும், லிப்ஸ்டிக் வாங்குவேன்!’ என்று தெரிவித்திருந்தாள் மகிழ்ச்சியுடன்.

    லிண்டாவற்குப் பேரக்குழந்தைகள் இருந்தார்கள். அதனால் என்ன! வயதானதால் மட்டும் ஒருவர் தம் விருப்பு வெறுப்புகளுக்குத் தடை விதித்துவிட வேண்டுமா?

    தனக்கு இளமையில் கைகூடாமல் போன ஆசைகளை உயிர் இருக்கும்போதே நிறைவேற்றாமல், `அடுத்த ஜன்மத்தில் பார்த்துக்கொள்ளலாம்!’ என்று ஒத்திப்போடுவார்களா யாரேனும்?

    உலகின் போக்கு

    நான் சந்தித்த மலாய் ஆசிரியைகளின் வயதைக் கேட்டால், `நாற்பதுக்கு மேலே!’ என்று பூசி மெழுகுவார்கள்.

    41? 50? 100?

    எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மீதியை நம் கற்பனைக்கு விட்டுவிட வேண்டியதுதான்.

    அவர்களைத் துளைத்து, தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவானேன் என்ற பெரிய மனதுடன் யாரும் மேற்கொண்டு கேட்கமாட்டார்கள்.

    பி.கு: என் வயதுதானே?

    அது ஆச்சு, மூணு கழுதை வயசு! (ஒரு கழுதையின் ஆயுட்காலம் எத்தனை என்று ஆராய்வது உங்கள் பாடு!).

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (81)

    நிர்மலா ராகவன்

    கேள்விகள் ஏனோ?

    நலம்

    ஒருவர் கேட்கும் கேள்வியை வைத்தே அவரைப்பற்றிப் புரிந்துகொண்டு விடலாம்.

    தாம் மற்றவரைவிட உயர்த்தி என்று காட்டிக்கொள்ளும் பொருட்டு எதையாவது கேட்டுவைப்பது சில அறிவிலிகளின் வழக்கம்.

    கதை

    நான் அசைவ உணவு சாப்பிடுவதில்லை என்று சொல்லக் கேட்டு, ஒருத்தி கேலியாகக் கேட்டாள், “அப்படியெல்லாம் உயிர் வாழ முடியுமா?”

    அவளுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று என்னால் விட்டுவிட முடியவில்லை. “என்னைப் பார்த்தால் இப்போதே செத்துவிடுகிறவள்போலவா இருக்கிறது?” என்று பதில் கேள்வி கேட்டேன்.

    யாரோ சிரிக்க, அவளுக்கு அவமானமாகிவிட்டது. என்னை அவமானப்படுத்த நினைத்தவள் தானே பலியானாள்.

    கதை

    “உன் தந்தை இன்னும் குதிரைப் பந்தயத்துக்குப் போகிறாரா?” என்று ஓர் இளைஞன் இன்னொருவனைக் கேட்டான். பர் முன்னிலையில்.

    குறிப்பிடப்பட்ட நபருக்கு அந்த பழக்கமே கிடையாது. அறிவாளியாக இருப்பினும், எதிர்பாராது வந்த கேள்வியால், மகனுடைய வாய் அடைத்துப்போயிற்று.

    கேள்வி கேட்டவனுக்குப் பதில் வராது என்று தெரிந்துதான் இருந்தது. அவனுடைய நோக்கம் தன்னைவிட மேலான நிலையில் இருந்தவனைத் தாக்குவதுதானே! அவன் எண்ணம் கைகூட, இம்முறையைப் பிறர்மீதும் கையாள்வான்.

    நம்மையே நாம் கேட்டுக்கொள்ளும் கேள்வி

    நோயோ, உற்றவருக்கு மரணமோ சம்பவித்தால், நமக்குள் `ஏன்?’ என்ற கேள்வி எழுகிறது. உடனே பதில் கிடைக்காது. பொறுமையாக இருந்தால், பல ஆண்டுகளுக்குப் பின்னர் பதில் கிடைக்கக்கூடும்.

    கதை

    ஒரு பெண்ணுக்குத் திருமணம் தட்டிக்கொண்டே போயிற்று. ஒரு முறை, திருமணத்திற்கு முதல் நாள் நின்று போயிற்று – யாரோ அத்தை, `இந்தப் பெண் ரொம்ப ஒல்லியா இருக்கா. டி.பியா இருக்கும்!’ என்று சொன்னதால். கன்னியாகவே அப்பெண்மணி தொண்ணூறு வயதுக்குமேல் நோய்நொடி இல்லாமல் வாழ்ந்தாள்.

    அவளுக்குக் கல்யாணமாகி, குழந்தைகள் பெற்றிருந்தால், தன் குடும்பம், குழந்தை என்று சுயநலமியாக ஆகியிருப்பாள். இப்போதோ, எவர் பெற்ற குழந்தையாக இருந்தாலும் பரிவும் பாசமுமாக நடத்த முடிந்தது.

    இன்னொரு கதை

    எனது சீன நண்பர் ஒருவர் இருமுறை திருமணம் புரிந்துகொண்டும், தனக்குக் குழந்தைகளே இல்லை என்று என்னிடம் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.

    “உங்கள் சகோதர சகோதரிகளின் குழந்தைகள் உங்களிடம் அன்புடன் இருப்பார்களே!” என்றேன்.

    உற்சாகமடைந்து, “ஆமாம். அவர்களைப் பெற்றவர்களைவிட என்னிடம்தான் அவர்களுக்கு ஒட்டுதல்!” என்றார். `எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ என்று தன்னையே கேட்டுக்கொண்டு வருந்தியவருக்கு ஒரு நல்ல காரணம் கிடைத்ததில் மகிழ்ச்சி.

    தகுந்த வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க கீழ்க்கண்ட கேள்விகளைப் பரிந்துரைக்கிறார்கள் நிபுணர்கள்:

    1 அவன் எப்போதும் உன்னை மரியாதையாக நடத்துகிறானா?

    2 உன் முன்னேற்றத்தில் பொறாமை கொள்ளாது, அக்கறை செலுத்துவானா?

    3 பத்து வருடங்களுக்குப் பின்னரும் நீ அவனுடன் இருக்க விரும்புகிறாயா?

    மனிதன் எப்போதும் மாற்றம் அடையாது இருப்பதில்லையே!

    இங்குதான் கேள்வி அவசியமாகிறது: மேற்கண்ட கேள்விகள் எந்த அளவுக்குப் பலன் தரும்?

    பொழுதைப் போக்க அநாவசியமான கேள்விகள் கேட்பர் சிலர்.

    கடைத்தெருவில் பார்ப்பவரை, `கடைக்கு வந்திருக்கிறீர்களா?’ என்று கேட்பது உரையாடலை ஆரம்பிக்க ஒரு வழி.

    இதையே நான் சற்று மாற்றிக் கேட்டேன், ஒரு முறை.

    பேரங்காடியில் சந்தித்த என் மாணவியிடம், “ஊர் சுற்ற வந்திருக்கிறாயா?” என்று கேட்டேன். பள்ளி மாணவ மாணவிகள் வீட்டுக்குப் போகாது, கடைத்தெருக்களில் சுற்றி நேரத்தை வீணாக்குகிறார்கள் என்று தினசரியில் வரும்.

    அவள் போலியாகக் கோபித்து, “ஆங்! சாமான் வாங்க வந்தேன்,” என்றாள்.

    `இன்று உங்கள் வீட்டில் என்ன சமையல்?’ என்று வெளிநாட்டிலிருப்பவரைக் கேட்பதும் இந்த ரகம்தான். கேட்பவருக்குச் சமைப்பதிலும் உண்பதிலும் ஆர்வம் இருக்கலாம். ஆனால், எல்லாரும் அப்படியே இருப்பார்களா!

    கேள்வி கேட்பது நன்மையா? அப்படியானால் ஏன்?

    வாழ்வைப் புரிந்துகொள்ள கேள்விகள் அவசியம். நம்மைச்சுற்றி நடப்பவை எல்லாவற்றையும் பார்த்தவுடனே புரிந்துகொள்ள முடியாது. கேள்விகள் அவசியமாகின்றன.

    ஒரு விஞ்ஞானிக்குள், `ஏன் இப்படி?’ என்ற கேள்வி எழுந்தால்தான் புதிதாக எதையாவது கண்டுபிடிக்க முடிகிறது. பதிலையும் அவரே தயாரித்துக்கொள்ளவேண்டிய நிலை. அது தவறு என்று புரிந்ததும், `ஒரு வேளை, இப்படி இருக்குமோ?’ என்று வேறு கோணத்தில் பிரச்னையை அணுகுகிறார். அவருக்குத் தோன்றிய பதிலால் பிறருக்கு நன்மை விளைகிறது.

    படைப்பாளிகள், `இப்படியும் இருக்கலாமோ?’ என்று யோசிப்பதால் வித விதமான புனைக்கதைகள் கிடைக்கின்றன.

    மூடநம்பிக்கைகளை ஒழிக்க

    சிறு வயதில் பயமுறுத்தி வைத்திருந்ததை நம்பி, எப்போதுமே ஒரு செயலுக்குப் பயப்படுவது சரிதானா?

    `பொய் சொன்னால் சாமி கண்ணைக் குத்தும்’.

    பொய் சொல்ல வேண்டும் என்பதில்லை. ஆனால், வீணாக தெய்வத்தை இழுப்பானேன்?

    உடனுக்குடனே தண்டனை அளித்தால், கடவுள் எப்படி கருணை மிக்கவர் ஆவார்?

    அவருக்கும் மானிடனுக்கும் என்ன வித்தியாசம்?

    கடவுள், மதம் என்ற பெயரால் மனிதனின் சிந்திக்கும் திறனை, அத்திறனால் கேள்வி கேட்கும் பழக்கத்தை ஒடுக்கி விடுகிறார்கள் சிலர்.

    எனக்கு ஒரு பெண் விரிவுரையாளர் எழுதியது: `நீ நிறைய கேள்விகள் கேட்கிறாய். எல்லாவற்றையும் கடவுள் கொடுத்தது என்று ஏற்றுக்கொள்!’

    கடவுள் பெயரைத் தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொண்டு, மனிதன் விதித்த நடைமுறைகளை கேள்வி கேட்காது ஏற்க வேண்டுமா?

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (80)

    நிர்மலா ராகவன்

    சிறார்களும் கேள்விகளும்

    நலம்-1-1

    எதையும் அறியவேண்டும் என்ற ஆர்வம் குழந்தைகளிடம் இயற்கையாகவே அமைந்திருக்கிறது.

    தர்மசங்கடமான கேள்விகள்

    `நான் எப்படிம்மா ஒன் வயத்துக்குள்ளே போனேன்? என்னை ஏன் முழுங்கினே?’
    `முழுங்கலே..,’ என்று விழிப்பாள் தாய். `அசட்டுப்பிசட்டுன்னுன்னு ஏதாவது கேக்காதே. போய் விளையாடு!’ என்று அதட்ட, சிறுமியின் கண்ணில் நீர் எட்டிப்பார்க்கும்.
    `நீ என்னை அசடாக்கப் பாக்கறே!,’ என்று குற்றம் சாட்டிவிட்டு, `நீ சொல்லாட்டா, நான் எப்படி அம்மாவா ஆக முடியும்?’ என்று மீண்டும் ஒரு கேள்வி கேட்பாள்!

    தடை உத்தரவு

    பல பெற்றோர் இந்தப் போக்கிற்கு ஆரம்பத்திலேயே தடை போட்டுவிடுவார்கள்: `எனக்கு நிறைய வேலை இருக்கு. நீ கேக்கறதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டிருந்தால், பொழுது விடிஞ்சுடும்!’
    இப்படிச் செய்வதால், தம்மையும் அறியாமல் குழந்தைகளின் ஆர்வத்திற்கு, அவர்கள் அறிவுத்திறன் வளர்வதற்கு, தடைபோட்டு விடுகிறார்கள்.
    ஒரு குழந்தை கேள்வி கேட்டால், அறிவுபூர்வமாக பதிலை ஏற்க அவன் தயார் என்பதுதான் உண்மை. வயதுக்கேற்றபடி, எளிமையாகக் கூறலாம்.
    `செய்யாதே! என்று தடைவிதிக்கப்பட்டவைகளை, `செய்’ என்று எடுத்துக்கொள்வார்கள் சிறு குழந்தைகள்.
    சகுனத்தடை என்பதால், `அப்பா வெளியே போறபோது, `எங்கே போறே?’ன்னு கேக்காதே!` என்று அம்மா குழந்தையிடம் நினைவுபடுத்துகிறாள். அடுத்தமுறை அப்பா எங்காவது புறப்பட்டால், ஞாபகமாக, `அப்பா! எங்கே போறே?` என்று கேட்கும்! (நான் கேட்டிருக்கிறேன்).
    மாறாக, `இவள் சமர்த்து. யாராவது வெளியே புறப்படறபோது, எதுவும் கேக்கமாட்டா! நானும் வரேன்னு அடம் பிடிக்கமாட்டா,` என்று பாராட்டினால், குழந்தை அடங்கிவிடும்.

    பள்ளியில் கேள்விகள்

    1 ஒரு முறை, விஞ்ஞானப் பாடத்தை நடத்திவிட்டு, “ஏதாவது கேள்வி இருக்கிறதா?” என்று நான் கேட்க, “ஆண்கள் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியுமா?” என்று ஒரு பதின்ம வயது மாணவி கேட்டாள்.
    “பாட சம்பந்தமாகக் கேட்கத்தான் சொன்னேன்!” என, வகுப்பில் ஒரே சிரிப்பு.
    மாணவர்கள் கேள்வி கேட்கும்போது சில ஆசிரியர்கள் `இவர்கள் நம்மை ஆழம்பார்க்கிறார்கள்!’ என்று ஆத்திரப்படுவார்கள். உண்மை அதில்லை. எதை எந்த நேரத்தில் கேட்க வேண்டும் என்று அவர்களுக்குப் புரியாது.

    2 ஸிதி(Siti) என்ற மாணவி எப்போதோ நடத்தப்போகும் நடத்தப்போகும் பாடத்திலிருந்து பல கேள்விகள் கேட்பாள். அவளுக்கு இன்றைய பாடமே புரிந்திருக்காது. சராசரிக்கும் குறைந்த மாணவி. தன்னை, தான் மிக அழகாக இருப்பதை, ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும் என்று கையாண்ட தந்திரம் அது. வகுப்பில் நுழைந்த ஒவ்வொரு ஆசிரியரையும் இப்படியே தொணதொணப்பாள்.
    என் சக ஆசிரியை, `ஓயாது கேள்வி கேட்டால், புத்திசாலி என்று நினைப்பார்கள் என்று யாரோ ஸிதிக்குச் சொல்லி இருக்கவேண்டும்!’ என்றாள் கேலியாக.
    சரியான கேள்விதான் அறிவை வளர்க்கும். நான் அலுத்துப்போய், “முதலில் இப்போது நடக்கும் பாடங்களைக் கவனி! இதையே புரிந்துகொள்ளாமல், எதை எதையோ ஏன் இப்போதே கேட்கிறாய்?” என்று ஸிதியைக் கண்டித்தேன். அவள் முகம் வாடினாலும், அதன்பிறகு கேள்விகள் நின்றன.
    கிடைக்கும் பதிலும் கேள்வியைப் பொறுத்தது.

    3 சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியாது. பிரசவ காலம் முடிந்து வகுப்பிற்குள் நுழைந்தேன்.
    “ஆணா, பெண்ணா?” என்ற கேள்வி பின்னாலிருந்து உரக்கக் கேட்டது.
    நான் அதை மரியாதைக்குறைவாக எடுத்துக்கொள்ளவில்லை. பெரிய உருவத்துடன் இருந்த ஒருத்தியை பழைய நிலைக்கு மாற்றிவிட்ட குழந்தையைப்பற்றி அறியும் ஆர்வம் எவருக்கும் ஏற்படுவதுதானே!
    புன்சிரிப்புடன், “ஆண் சாயலில் ஒரு பெண்!” என்று சொல்லிவைத்தேன்.

    4 நான் புதிய பாடம் ஒன்றை நடத்த ஆரம்பிக்கும்போது, அதன் தலைப்பை கரும்பலகையில் எழுதுவேன். உடனே, “அப்படியென்றால் என்ன, டீச்சர்?” என்ற கேள்வி உரக்க எழும்.
    “தலைப்புடனேயே நிறுத்திவிடப்போகிறேனா? பாடம் நடத்தியபின் தானே புரியப்போகிறது!” என்பேன்.
    பதினேழு வயதான டின் (DIN) வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாது, பன்னிரண்டு வயதானவன்போல் இருப்பான். தனது சிறிய உருவம் அவனுக்குப் பெருங்குறையாக இருந்திருக்க வேண்டும். தன்னை எங்காவது கவனிக்காமல் போய்விடுவார்களோ என்று நினைத்தவனாக, “அப்படியென்றால் என்ன, டீச்சர்?” என்று கேட்பதை அவன் நிறுத்தவேயில்லை — `சும்மா இருடா!’ என்று பிற மாணவர்கள் அவனைக் கண்டித்தபோதும்!

    5 அமீர் என்ற மாணவன் வகுப்பில் எழுந்து நின்று, என்னை ஒரு கேள்வி கேட்டான். நடந்த பாடத்தில்தான்.
    உடனே, சகமாணவன் ஒருவன், “ஐயே! உனக்கு இதுகூடத்தெரியாதா?” என்று கேலிக்குரல் எழுப்பினான்.
    “தெரியாது. அதான் கேட்கிறேன்!” என்றான் அமீர், சற்றும் அயராது.
    இவனைப் போன்றவர்கள் புத்திசாலிகள். கேள்வி கேட்பதற்குப் பயந்துகொண்டிருந்தால், முட்டாளாகவேதான் இருக்கவேண்டும் என்பதைப் புரிந்து வைத்தவர்கள்.
    அதிகப்பிரசங்கித்தனமா?
    பள்ளிக்கூடங்களில் பெரும்பாலும் ஆசிரியரின் குரல்தான் ஒலிக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆசிரியரின் விளக்கம் மாணவனுக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் மௌனமாகத்தான் இருந்தாக வேண்டும். ஏன், எப்படி, எதற்காக போன்ற கேள்விகளைக் கேட்டால், `அதிகப்பிரசங்கி’ என்ற பெயர்தான் கிடைக்கும்.
    இவ்வாறு ஒடுக்கப்பட்டபின், படிப்பு முடிந்தபின் மட்டும் கேள்வித்திறனோ, அதற்கான தைரியமோ வந்துவிடுமா?
    வாழ்வைப் புரிந்துகொள்ள கேள்விகள் அவசியம். ஆனால், நாம் கேட்கும் கேள்விகள் `தொணதொணப்பு’ என்று பிறர் நினைக்கும் அளவுக்கு இருக்கக்கூடாது. சரிதானா?

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (79)

    நாளைக்குப் பண்ணலாமே!

    நலம்-1
    “நாளை என்பது இன்று செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யும் தினம்!”
    இப்படி வேடிக்கையாகக் கூறுகிறார் ஒருவர்.

    ஒத்திப்போடும் தன்மை பலருக்கும் இருப்பதால், அதுதான் சரி என்பதுபோல் ஆகிவிட்டது.
    இக்குணம் ஏன் ஏற்படுகிறது?

    சோம்பலும், எது அவசியம் என்று புரிந்துகொள்ளாததும் ஒரு முக்கிய காரணம்.

    செய்யத் துணிவில்லாததை, `பிறகு பார்த்துக்கொள்ளலாம்!’ என்று அலட்சியப்படுத்துகிறோம். நாம் விரும்பாதவர்களைச் சந்திப்பதை ஒத்திப்போடுவதும் இதனால்தான்.
    சில நாட்களில் ஒரே சமயத்தில் பல வேலைகள் காத்திருக்கும். எங்கு ஆரம்பிப்பது என்று புரியாது, எதையும் ஆரம்பிக்கத் துணிவின்றி விழித்ததுண்டா நீங்கள்?

    `நாளை பார்த்துக்கொள்ளலாம்,’ என்று ஒத்திப்போடத் தோன்றிவிடும்.

    இன்று இருப்பதைவிட நாளை புத்தி கூர்மையாகிவிடுமா? அல்லது, இன்று கடினமாக இருப்பது நாளை எளிதாகிவிடுமா? . எப்படியானாலும், பதட்டம் ஏற்பட்டிருக்குமே!
    எங்காவது ஆரம்பித்தால்தான் ஒரு காரியத்தைச் செய்து முடிக்க முடியும் என்பது பிறர் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. செய்ய வேண்டியதைத் திருப்திகரமாகச் செய்ய முதலில் ஒரு பட்டியல் தயாரித்துக்கொள்ளலாம். மிக முக்கியமானதை முதலில் செய்துவிட்டு, பிறகு மற்றவைகளைக் கவனிக்கலாம். (எளிதானவற்றை முதலில் செய்து முடிப்பது நம் மீது நாமே கொண்டிருக்கும் அவநம்பிக்கையைக் காட்டுகிறது).

    பாடங்களை ஒத்திப்போடுவது

    பள்ளி அல்லது கல்லூரிப் பாடங்களைவிட திரைப்படங்களும், தொலைகாட்சியும் சுவாரசியமாக இருக்கும். அதில் சந்தேகமில்லை. இரவு எத்தனை நேரமானாலும் தூக்கம் கண்ணைச் சுழற்றாது. ஏனென்றால், அப்போது மூளை கடுமையாக உழைத்து வேலை செய்ய வேண்டியதில்லை. அதனால் பாடம் படிப்பது இரண்டாம்பட்சமாகிவிடும். அலட்சியப்படுத்தி விடுகிறோம்.

    நாம் புதிதாகக் கற்பது எதுவும் இருபத்து நான்கு மணி நேரம்தான் நம் நினைவில் நிற்கும். இதைவிட்டு, ஆசிரியை கற்பித்து சில மாதங்கள் கழித்து பரீட்சை வரும்போது புத்தகத்தை எடுத்தால், எதுவும் புரியாது. `இப்பாடம் நடத்தப்பட்டதோ?’ என்ற சந்தேகம்கூட எழும்.

    சிறப்பான தேர்ச்சி பெற்ற எந்த மாணவியையாவது கேட்டுப்பாருங்கள். “சொல்லிக்கொடுக்கப்பட்ட அன்றே பாடங்களை மேலெழுந்தவாறு ஒரு பார்வை பார்ப்பேன். (அதாவது, இருபத்து நான்கு மணிக்குள்). வாராந்திர விடுமுறையின்போது கவனமாகப் படிப்பேன். அவ்வளவுதான்!” என்பாள். இம்முறையைக் கைப்பிடித்தால் அதன்பின் மறக்காது. பரீட்சைக்கு முதல் நாள் புத்தகத்தை ஒரு புரட்டு புரட்டினாலே போதும்.

    பெரும்பாலான மாணவர்கள் பரீட்சைக்கு முதல் நாள்தான் பாடம் படிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்வார்கள்! இரவு முழுவதும் கண்விழித்துப் படிப்பார்கள். எல்லாம் புரிந்ததுபோல்தான் இருக்கும். ஆனால், உடலும் மனமும் ஒருங்கே களைத்துப்போக, படித்ததில் பலவும் பரீட்சை எழுதும்போது மறந்துபோயிருக்கும். (`எல்லாரும் செய்கிறார்களே, நாமும் அப்படிச் செய்தால் என்ன?’ என்று நான் ஒரு முறை பரிசோதித்துப் பார்த்ததன் விளைவு அது).

    கதை

    ஒரு பத்திரிகை ஆசிரியர் என்னிடம் ஒரு வாரத்திற்குள் ஒரு கதை எழுதித் தரும்படி கேட்டுக்கொண்டிருந்தார். மூன்று நாட்களில் எழுதி அனுப்பினேன்.
    அடுத்த முறை என்னைச் சந்தித்தபோது, “என்னங்க, இப்படிப் பண்ணிட்டீங்களே!” என்றார், குற்றம் சாட்டுவதுபோல்.
    “உடனே எழுதி அனுப்பினேனே! கிடைக்கலே?” என்றேன்.
    “கிடைச்சிச்சு. அதான் சொல்றேன்!”

    எனக்குப் புரியவில்லை. நன்றி சொல்வதற்குப் பதிலாக ஏன் தாக்குகிறார்?
    அவரே தொடர்ந்தார்: “எல்லாரும் அனுப்பறேம்பாங்க. ஆனா அனுப்பமாட்டாங்க. நீங்க என்னடான்னா..!”

    நான் சிரித்தேன். “இந்தக் காலத்திலே நல்லவளா இருக்கிறதுகூட தப்பு!”
    அவரும் என் சிரிப்பில் கலந்துகொண்டார்.

    பலருக்கும் ஒத்திப்போடும் குணம் இருக்கிறது. கேட்டால், `சோம்பல்,’ `மறதி,’ `வேறு வேலை வந்துவிட்டது’ என்று சமாளிப்பார்கள்.

    அதை அவர்கள் மாற்றிக்கொள்ள விரும்பாததற்குக் காரணம் பிறரிடமிருந்து மாறுபட்டிருக்க வேண்டாம் என்பதுதானோ?

    `ஊருடன் ஒத்து வாழ்!’ என்று சொல்லிப்போனவர் கட்டாயம் இதை எதிர்பார்த்துச் சொல்லி இருக்கமாட்டார்.

    கதை

    பல வருடங்களுக்குமுன் நான் ஆசிரியப் பயிற்சி மேற்கொண்டபோது, ஒரு பாடத் திட்டத்தைத் தயாரிக்கச் சொல்லி இருந்தார்கள். ஒரு மாதத்திற்குமேல் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

    அடுத்த நாளே வாசகசாலைக்குச் சென்று, வேண்டிய புத்தகங்களைத் தேடி எடுத்துக்கொண்டேன்.
    முடிவு நாளுக்கு முன்னரே விரிவுரையாளரிடம் என் உழைப்பின் பலனைக் கொடுக்கச் சென்றேன்.
    அங்கு உடன் படித்த பல மாணவ மாணவிகள் நின்றிருந்தார்கள், சண்டை பிடிப்பவர்கள்போல்.
    அவர்களுடைய விவாதம்: கொடுக்கப்பட்ட நேரம் போதவில்லை. ஒரே சமயத்தில் எல்லாருக்கும் தேவைப்படுவதால், வாசகசாலையில் அப்புத்தகங்கள் கிடைப்பதில்லை.

    அவர்கள் கோரிக்கையை ஏற்று, முடிவு நாள் இன்னும் ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
    நான் ஒருத்திதான் உரிய காலத்தில் வேலையை முடித்திருந்தேன்.

    அதற்காக பாராட்டினார்களா?

    பாராட்டாவது!
    விரிவுரையாளர் என்னைக் கேலியாகப் பார்த்து, “This one is an early bird!” என்றார்!

    ஒரு சிலர் பொறாமையாக என்னை வெறித்தார்கள். சிலர் கேலியாகப் பார்த்தார்கள், நான் ஏதோ தவறு செய்துவிட்டவள்போல. `பிறருடன் ஒத்துப்போக வேண்டாமா! இவளுக்கு மட்டும் என்ன அவசரம்!’ என்று உள்ளுக்குள் ஆத்திரப்பட்டிருப்பார்கள்.

    நாளை என்பது நமனது கையில்
    `நினைச்சதை உடனே சாதிச்சுடணும் ஒனக்கு!’
    இந்த வசவை நான் பலமுறை பெற்றிருக்கிறேன்.

    இப்படிக் கண்டனம் செய்பவர்களிடம், “நாளைக்கு நான் உயிரோடு இருப்பேனோ, என்னவோ!” என்று சொல்லிவிடுவேன், சிறு சிரிப்புடன்.

    உண்மைதானே! இன்று செய்ய வேண்டியதை உடனுக்குடன் செய்தால் நம் அமைதியும், நிம்மதியும் கெடாது, அல்லவா?

    ஒரு வேளை, உயிர் போகாது பிழைத்துக் கிடந்தால், நாளைக்கும் ஏதாவது வேலை வரும். செய்துவிட்டுப்போகிறது!

    தொடருவோம்

    Share
  • தாம்பத்தியம் = சண்டை + பொய்

    நிர்மலா ராகவன்

     

    அதிவேகமாக உள்ளே நுழைந்த மகளைப் பார்த்தாள் வேதா. வழக்கம்போல், ஆத்திரமும், தன்னிரக்கமுமாகத்தான் இருந்தாள் பத்மினி. யாருடன்தான் ஒத்துப்போக முடிந்தது இவளால்!

    `ஒரே குழந்தையுடன் நிறுத்திக்கொண்டால் அதிக செலவாகாமல் தப்பிக்கலாம். வேலையும் மிச்சம்!’ என்றுஎப்போதோ எண்ணியது தவறோ என்ற சிந்தனை உதித்தது. “வேலை முடிஞ்சு நேரா வர்றியா?” அனுசரணையாகக்கேட்பதுபோல் கேட்டாள். “என்ன சாப்பிடறே?”

    “ஒரு சொட்டு விஷம்!”

    “அதெல்லாம் இந்த வீட்டிலே கிடையாது. தோசை வேணுமா? மாவு இருக்கு. ஆனா, புளிக்கும்”.

    “விஷமே சாப்பிடறேன்னு சொல்றேன். என்னமோ, புளிப்பு, அது, இதுன்னு! ஒண்ணும் வேண்டாம், போ!”முணுமுணுத்தபடியே தன் அறைக்குள் நுழைந்தாள் பத்மினி. அவள் கணவன் வீட்டுக்குப் போய் ஒரு வருடம்ஆகியிருந்தாலும், அவள் குணம் புரிந்து,  அந்த அறையை அப்படியே விட்டு வைத்திருந்தார்கள்.

    உள்ளே நுழைந்தவள் அதே வேகத்தில் திரும்ப வந்தாள்.

    “பாத்துப் பாத்து எனக்குப் பண்ணி வெச்சீங்களே, ஒரு கல்யாணம்!” என்று தாயைச் சாடினாள்.

    “மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்? படிப்பு இருக்கு. கைநிறைய சம்பளம் வாங்கறார்!”

    தனக்குப் பிடிக்காதவருக்கு அம்மாவே வக்காலத்து வாங்குவதா! பச்சைத் துரோகம்!  பத்மினி பொருமினாள்.

    “தான்தான் ஒசத்தின்னு கர்வமும் இருக்கு. அதை விட்டுட்டியே!”

    வேதாவுக்கு அலுப்பாக இருந்தது. வாரம் தவறாமல் இவள் கணவனுடன் சண்டை போட்டுக்கொண்டு தாய்வீட்டுக்குவந்துவிடுவது எப்போதுதான் நிற்குமோ!

    “அவர் செய்யறதுதான் ரைட்டு. நான் என்ன செஞ்சாலும், தப்பு கண்டுபிடிச்சுக்கிட்டே இருக்கணும்மா அவருக்கு!”  பத்மினியின் குரல் தழுதழுத்தது.

     

    அதே சமயத்தில், “பத்மினி இருக்காளே, அவ செய்யறது தப்புன்னு ஒத்துக்கவே மாட்டாம்மா. அதுதான்பிரச்னையே!” என்று தன் தாயிடம் முறையிட்டுக்கொண்டிருந்தான் கார்த்தி.

    “அவ குணம்தான் புரிஞ்சு போச்சில்ல? என்ன செஞ்சாலும் கண்டுக்காதே,”  என்று அறிவுரை வழங்கினாள் மங்களம்.

    “அது எப்படி? இன்னிக்கு உப்புமா பண்ணியிருந்தா. பேரிலே உப்பு இருக்குதான். அதுக்காக கரண்டி கரண்டியாஉப்பை வாரிப் போடணுமா?”

    “அப்படியே தூக்கிக் கொட்டிட்டு, ஹோட்டல்லே போய் சாப்பிட்டிருக்கணும் நீ!”

    “தோணிச்சு. ஆனா அவ கத்துவாளேன்னு பயந்து, ரொம்ப கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடிச்சேன்”.

    மங்களத்திற்கு அவனுக்குப் பரிந்து பேசத் தோன்றவில்லை. ஒரே மகன் என்று பார்த்துப் பார்த்து, அவனுக்குப்பிடித்ததாக சமைத்துப்போட்டது  ஒரு காலம். இன்று அவன் அவளுக்கு மகன் மட்டுமில்லை. இன்னொரு பெண்ணின்துணைவன். அவனைப்போலவே தானும் சிறுபிள்ளைத்தனமாக, விட்டுக்கொடுக்காமல் இருந்தால் எப்படி!

    “நிறைய படிச்ச பொண்ணு வேணும்னு சொன்னே. அவ படிச்சுக்கிட்டே இருந்ததிலே  சமைக்க  கத்துக்க நேரமில்லாம போயிருக்கும்னு அப்பவே தெரியாம போச்சு! இனிமே என்ன செய்யறது! விட்டுப் பிடி!”

    மகன் காதில் அந்த அறிவுரை விழுந்ததாகத் தெரியவில்லை. உப்புமா விஷயத்திலேயே இருந்தான். “நானும்மொதல்லே ஒண்ணும் சொல்ல வேண்டாம்னுதான் பாத்தேன். ஆனா, அவ வாய்க்குப் பயந்து,” என்றுசொல்லிக்கொண்டே போன மகனை இடைமறித்தாள் மங்களம். “என்னடா பயம்?” புரியாமல் கேட்டாள்.

    “முந்தி ஒரு தடவை பீன்ஸ் பொரியலைக் கறுக்க விட்டுட்டா. அடுப்பிலே எதையாவது வெச்சுட்டு, டி.வியைப் பாத்துயோகா பண்ணப்போனா வேற எப்படி இருக்கும்?  `இதை எவன் சாப்பிடுவான்?’னு கத்தினேனா! `எனக்குஇவ்வளவுதான் தெரியும். ஒங்கம்மாமாதிரி சமைச்சுப்போட பொண்டாட்டி வேணும்னா, படிக்காத பொண்ணாபாத்து கட்டியிருக்கணும்,’ அப்படின்னு காளி மாதிரி ஆடினா, பாரு! பயந்துட்டேன்”.

    தாய்க்கும் கோபம் வந்தது. இவர்கள் சண்டையில் தன்னை எதற்கு இழுக்கிறாள்?

    “ஆபிசிலிருந்து நேரா வர்றியா?” பேச்சை மாற்றப்பார்த்தாள்.

    “ஆமா. அவ ஏன் எங்க வீட்டிலே இருக்கப்போறா! அம்மா வீட்டிலே அவளுக்கு ஆசார உபசாரம் நடக்குமில்ல!” சற்றுப் பொறாமையுடன் கூறியவன், “இதுக்குத்தான் அழகில்லாத, அனாதைப் பொண்ணாப் பாத்துக்கட்டியிருக்கணும்கிறது!” என்றான் நொந்த குரலில்.

    கட்டியவளுக்கு ஒரு நியாயம், இவனுக்கு ஒரு நியாயமா? கோபம் வந்தால் போக இவனுக்கு அம்மா வேண்டுமாம்,அதையே மனைவி செய்தால் ஆத்திரம்! நல்ல பிள்ளை!

    சிரிப்பை அடக்கிக்கொண்டு மங்களம் யோசித்தாள். தான் உபசாரம் பண்ணி உணவளிப்பதால்தான், ஒவ்வொருமுறை மனைவி கோபித்துக்கொண்டு பிறந்தகம் போய்விடும்போதும் சாப்பிட இங்கு வந்துவிடுகிறான்!

    “எனக்குக் கொஞ்ச நாளா உடம்பே சரியா இல்லே, கார்த்தி. இன்னிக்குப் பெரிசா ஒண்ணும் ஆக்கலே. நீ போறவழியிலே ஏதாவது ஹோட்டல்லே சாப்பிட்டுக்க,”  என்று அந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டினாள்.

    தனது ஏமாற்றத்தை மறைத்தபடி, “ஏண்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு இருக்கு! பேசாம, டைவர்ஸ் வாங்கிடறேன்,” என்றபடி எழுந்தான் கார்த்தி.

    தியானம் பண்ணுவதாகப் பெயர் பண்ணிக்கொண்டு தன் அறையிலிருந்த அப்பா எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு  வெளியே வந்தார். “பசியோட வந்திருக்கான், பாவம்! ஒடம்பு முடியலேன்னு ஏன் கதை விடறே?” என்று மனைவிமேல் பாய்ந்தார்.

    “நாம்ப போடாத சண்டையா! அப்புறம் எப்படியோ சமாதானமாகி, நான் இந்த முப்பது வருஷமா ஒங்ககூட குப்பை கொட்டலியா?   இந்த காலத்துப் பசங்க ஆஊன்னா, டைவர்ஸ் அது இதுன்னு போயிடறாங்க! உள்ளூரிலே பொண்ணு எடுத்ததே தப்பு!”  என்றாள் மங்களம்.

     

    ஹோட்டலைக் கடந்தபோது கார்த்திக்கு  விரக்தி எழுந்தது.  சமைக்கத் தெரிந்தவன்களெல்லாம் கைநிறையச்சம்பாதிக்கலாம் என்று பேராசையாக வெளிநாட்டுக்குப் போய் சமைக்கிறான்கள். இங்கிருப்பவனோ, முன்னேபின்னே சமையலறைக்குப் போயிருக்க மாட்டான்.

    மனைவி மோசமாகச் சமைத்தால் திட்ட முடியும். இங்கு அது நடக்குமா?

    பசியுடன் வீடு திரும்பியதும் அவனுக்கு  ஆச்சரியம் காத்திருந்தது. பத்மினி வீட்டில்தான் இருந்தாள்! அதுவும்அழகாக அலங்கரித்துக்கொண்டு!

    அப்படியானால், தான் நினைத்ததுபோல் அவள் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குப் போகவில்லையா?

    “இன்னிக்கு ரொம்ப வெயில், இல்லே? களைப்பா இருக்கு. நாம்ப ரெண்டுபேரும் வெளியே போய் சாப்பிடலாமா?”என்று பத்மினி   அன்பு சொட்டச்  சொட்ட கேட்டபோது, `நல்லவேளை,  சமைக்கிறேன்னு நீ கிளம்பலே!’ என்றஎண்ணம் எழுந்தது  கார்த்திக்கு.

    கூடவே, `எவ்வளவு அழகா இருக்கா! இவளோட சேர்ந்து நடந்துபோனா, அவனவன் பொறாமையில சாவான்!’ என்றும்தோன்ற,   “நானும் அதைத்தான் சொல்லணும்னு நினைச்சுக்கிட்டே வந்தேன்! உனக்கு வெளியிலேயும் வேலை,வீட்டிலேயும் வேலை, பாவம்! அது நியாயமில்லே,” என்று உருகிவிட்டு, “நல்லா சாப்பிட்டு, ரெஸ்ட் எடு. அப்பத்தானேராத்திரி..!” என்று கண்களைச் சுழற்றினான்.

    `பொய் சொன்னா, சாமி கண்ணைக் குத்திடும்!’ என்று சொல்லி வைத்திருப்பவர் பிரம்மச்சாரியாகவே காலத்தைக்கடத்தியிருப்பார் என்று தோன்ற, சிரிப்பு வந்தது அவனுக்கு.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (78)

    நிர்மலா ராகவன்

    இல்லறத்தில் இன்பம் சூழ

    நலம்

    பணம் மட்டும் மகிழ்ச்சியைத் தருமா?

    என் சக ஆசிரியை மிஸஸ் சின்னின் கதையைக் கேளுங்கள். பதில் கிடைக்கும்.

    முப்பத்தைந்து வயதான மிஸஸ் சின் மலேசியாவிலுள்ள ஒரு சிற்றூரைச் சேர்ந்தவள்.

    “நான் மிகவும் மகிழ்ச்சியானவள், இல்லை?” அடிக்கடி இப்படிக் கேட்பாள். இன்னாரிடம் என்றில்லை.

    “திருமணத்துக்கு முன்பு, நாங்கள் காதலர்களாக இருந்தபோது, எப்போது அவரை மீண்டும் பார்ப்போம் என்றிருக்கும் எனக்கு. இப்போதோ!” என்று தலையில் அடித்துக்கொள்வாள்.

    அவனது வேலையிலேயே முழுகிப்போயிருந்த ஒரு பணக்காரன் அவளுடைய அழகிற்காக அவளைக் கல்யாணம் செய்துகொண்டிருக்க வேண்டும். நண்பர்களிடையே பெருமையாகக் காட்டிக்கொள்ள அப்படி ஒரு மனைவி தேவைப்பட்டிருப்பாள். அதன்பின், அவளை அதிகம் கவனிக்கத் தோன்றவில்லை.

    அப்படி ஒரு ஏமாற்றத்தை, பராமுகத்தை, எந்தப் பெண்தான் தாங்குவாள்! `அவள் வீட்டுக்கு எந்த வேளையில் போனாலும், சாப்பிட ஒன்றும் இருக்காது!’ என்று ஒரு சில ஆசிரியைகள் தெரிவித்ததுண்டு.

    ஒரு முறை, எங்கள் பள்ளிக்கூட ஆசிரியைகளுக்கு மட்டும் என்று நடந்த ஒரு விருந்தில் அவளுடைய கணவன் விரைந்து வந்து சாப்பிட ஆரம்பித்தான். எவ்வளவு பணம் இருந்தென்ன!

    மிஸஸ் சின் சொல்வதைக் கேட்டு, `அவளுக்கு மகிழ்ச்சிக்கு என்ன குறை! கணவன் கைநிறைய சம்பாதிக்கிறார்! பெரிய கார் வைத்திருக்கிறாள்!’ என்பார்கள் பிறர்.

    நான் மட்டும், “உண்மையில் அவளுக்குச் சந்தோஷமே கிடையாது. மகிழ்ச்சியாக இருக்கிறோமோ என்ற சந்தேகம் அவளுக்கே வந்துவிட்டது. அதனால்தான் அடிக்கடி பிறரிடம் அப்படிக் கேட்கிறாள்!” என்பேன்.

    “எதனால் அவளுக்கு மகிழ்ச்சி இல்லை?” என்று ஒருத்தி கேட்டபோது, “அவள் எதிர்பார்த்த இல்லற வாழ்க்கை கிடைத்திருக்காது. கணவன் தன் வேலையிலேயே ஆழ்ந்துபோகிறான். இவளுக்காகத் தனியாக நேரம் ஒதுக்குவது கிடையாது. இதெல்லாம் அவள் சொல்வதுதானே! அவள் எப்படி கணவரைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாள் என்று கவனியுங்கள். புரியும்,” என்று பதிலளித்தேன்.

    `என்னையும் கொஞ்சம் கவனிக்கக்கூடாதா!’ என்று கணவரிடம் கேட்டால், அவர் என்ன சொல்லிவிடுவாரோ என்ற அச்சம் அவளைப் போன்றவர்களுக்கு.

    `பெரிய வீடு வாங்கியிருக்கிறார், நான் என்ன செலவு செய்தாலும் கண்டுகொள்வதில்லை. இதைவிட வேறு என்ன வேண்டும் ஒரு பெண்ணுக்கு?’ என்று சமாதானம் செய்துகொள்ள முயற்சித்து, தோல்வி கண்டவள் அவள்.

    அவர் கொடுக்கும் பணத்தால் அவள் விரும்பும் ஆடையணிகளையும், கைப்பைகளையும் வாங்க முடியும். அதனால் மட்டும் நிறைவு கிடைத்துவிடுமா?

    `இன்னுமா உனக்குப் பேராசை?’ என்று கேட்டுவிட்டால்?

    `நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்!’ என்று சொல்லிக்கொண்டவள், பிறரும் அப்படியே நினைக்கவேண்டும் என்பதுபோல் இருந்தது அவள் பேச்சும் நடத்தையும்.

    தனக்குத்தானே தடை விதித்துக்கொண்டாள். அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் பொறுக்க முடியாமல் போய்விட்டது. சமைக்கத் தோன்றவில்லை. தான் பெற்ற சிறு பிள்ளைகளை வேலை வாங்குவதுபற்றி பெருமையாகப் பேசிக்கொள்வாள்.

    இப்படி ஒரு சூழ்நிலையைத் தவிர்க்க ஒரே வழி தம்பதிகள் மனம்விட்டுப் பேசுவதுதான். சாதாரணமாக ஆரம்பித்த உரையாடல் சண்டையில் முடியலாம். ஆனாலும் வேறு வழியில்லை. இருவரில் ஒருவருக்கு மனத்தாங்கல் என்றாலும், அதை மற்றவரிடம் தெரிவித்தால்தானே மற்றவருக்குப் புரிய வைக்க முடியும்? நிலைமையில் மாற்றம் ஏற்படுகிறதோ, இல்லையோ, தனது குறையைச் சொல்லிக்கொள்பவருக்கு `முயற்சி செய்து பார்த்துவிட்டோம்,’ என்ற ஆறுதலாவது கிடைக்கும்.

    பல தம்பதியர் ஒருவர்போலவே மற்றவரும் இருப்பதுதான் காதலின் அடையாளம் என்று எண்ணுகிறார்கள். மாறுகிறார்கள், அல்லது மாற்றுகிறார்கள். உண்மையில், அன்பைத் தகர்க்கும் வழி இது.

    நொந்துவிட்டதுபோல் நயமாகப் பேசி (`நான் சொல்வதைக் கேட்காவிட்டால், உனக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றுதான் அர்த்தம்’), அது பலிக்காவிட்டால் வசவுகளால், அல்லது வன்முறையால் தாம் நினைத்தபடி வாழ்க்கைத்துணையை நடக்க வைப்பார்கள் சிலர்.

    கதை

    கீதா இயல்பிலேயே கலகலப்பானவள். தந்தையின் பரிபூரணமான அன்பிற்குப் பாத்திரமாகி இருந்ததால், எல்லா ஆண்களுடனும் தயக்கமின்றி பழக முடிந்தது.

    அவளுக்கு நேர் எதிரிடையானவன் முரளி. பாசமற்ற பெரிய குடும்பத்தில் வேண்டாத மகனாகப் பிறந்தவன். பிறருடன் பேசவே வெட்கம் தடுக்க, தயக்கப்பட்டவன்.

    கீதாவின் கலகலப்பு அவனை அயரவைத்தது.

    அவளுக்கு அவனது வாழ்க்கைப் பின்னணி தெரிந்திருந்தபோதும், தன்னால் அவனை மகிழ்விக்க முடியும், சமூகத்தில் பிறர் மதிக்கும் நிலைக்குக் கொண்டுவர முடியும் என்று நம்பினாள்.

    கல்யாணமாகி ஓரிரு மாதங்களிலேயே புரிந்தது, முரளியால் மாற முடியாது என்று. ஏனெனில், அவளை அவன் மாற்ற முயன்றான். கீதாவின் குணம் புரிந்திருந்தும், பிற ஆண்களைப்பற்றிப் பேசினாலே சந்தேகம் வந்துவிடும். வார்த்தைகளாலேயே அவளை வதைத்தான்.

    அவளோ, பிடிவாதமாக, `என்னால் அவரை மாற்றிக்காட்ட முடியும். என்னைப் பழையபடி சுதந்திரமாக இருக்க விடுவார்!’ என்று நம்பினாள். எல்லாவற்றையும் பொறுத்துப்போனாள். இதனால் அவளுக்கு மன அழுத்தம் அதிகரிக்க, உடல் உபாதைகள் ஏற்பட்டதுதான் கண்ட பலன்.

    இம்மாதிரியான சில பெண்கள் ஏதாவது ஒரு வகையில் பிறர் பக்கபலம் அளிக்க, பழைய தன்மையைப் பெறுவார்கள் – அப்படி மாறுவது குடும்ப மகிழ்ச்சியை ஓரளவு குறைக்கும் என்பதை ஏற்று.

    விட்டுக்கொடுப்பதால் யாருக்கு மகிழ்ச்சி?

    தன் சுக துக்கங்களைவிட தனக்குத் தாலி கட்டிய கணவரின் மகிழ்ச்சியே முக்கியமானது என்று போதிக்கப்பட்டிருக்கும் பெண்கள், `விட்டுக்கொடுப்பதுதான் நல்ல மனைவிக்கு அடையாளம்!’ என்று நம்புகிறார்கள். அப்படியானால், ஒரு பெண்ணின் மன நிலை, இன்ப துன்பம் இதெல்லாம் மறைக்கப்பட வேண்டியனவா, இல்லை, முக்கியம் கிடையாதா?

    கணவர் என் குழந்தை

    `என் கணவருக்கு ஒவ்வொன்றையும் நான்தான் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டும். அவர் ஒரு சிறு குழந்தைபோல!’ என்று பெருமை பேசிக்கொள்ளும் பெண்களைப் பார்த்திருக்கிறேன்.

    கணவர் எந்த விதத்திலாவது தன்னை நாட வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் தம் கணவருக்குச் சுயேச்சையாக எதையும் செய்துகொள்ளத் தெரியாதபடி ஆக்கிவிடுகிறார்கள். நாளடைவில் அம்மாதிரியான நடப்பே இரு தரப்பினருக்கும் எரிச்சலை மூட்டிவிடும்.

    `நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்!’ என்று தம்பதியரில் ஒருவர் கேட்பது மற்றவருக்குப் பெருமையில்லை.

    ஒருவர் சொன்னார், “நான் கல்யாணம் செய்துகொண்டால், மனைவி என் சட்டையில் பிய்ந்துபோன பித்தான்களை தைத்துத் தருவாள் என்று நம்பினேன்!” என்று.

    அப்போது அவர் அக்காரியத்தைத் தானேதான் செய்துகொண்டிருந்தார்.

    புரிந்தும், “என்ன ஆச்சு?” என்று நான் சிரித்தேன்.

    “`நீங்களே தைத்துக்கொள்ளுங்கள்,’ என்றுவிட்டாள்!” ஏமாற்றத்துடன், பெருமூச்சு விட்டார்.

    அவருக்கு அப்போது புரியவில்லை, தன்னைச் சுதந்திரமாக வாழப் பழக்குகிறாள் மனைவி என்று.

    ஒருவரைச் சார்ந்து ஒருவர் வாழ்வது என்றால் அது ஒருவரின் விருப்பத்திற்கு எல்லாம் மற்றவரும் செவிசாய்க்க வேண்டும் என்பதில்லை.

    அதிகாரம் செலுத்துபவர் ஆரம்பத்தில் பெருமையாக உணரலாம். ஆனால், `என் மனைவி நான் கிழித்த கோட்டைத் தாண்டமாட்டாள்!’ என்று பெருமை பேசுகிறவர் சில வருடங்களுக்குப்பின் அவளுக்கு அடங்கிப்போவதுதான் நடக்கிறது.

    தொடருவோம்

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (77)

    நிர்மலா ராகவன்

    பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான்!

    நலம்

    தீபாவளிக்குச் சில நாட்களே இருந்தன. பல வருடங்களுக்குமுன், என்னுடன் வேலை பார்த்த ஒரு பெண்மணி கேட்டாள், “பண்டிகைக்கான ஆயத்தங்களை ஆரம்பித்துவிட்டாயா?”

    “என் மாமியார் வீட்டில் அழைத்திருக்கிறார்கள். அதனால் நான் ஒன்றும் செய்யப்போவதில்லை!” என்றேன்.

    “அப்படியானால், குழந்தைகளுக்கு பண்டிகை வரும் மகிழ்ச்சியே இருக்காதே!”

    பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான். பெரியவர்களுக்கு வேலை அதிகம் என்றாலும், பழைய கதைகளைப் பேசிக்கொண்டு, ஒன்றாக இணைந்து வேலை செய்வதில் ஒரு தனி மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. குழந்தைகளுக்கும் (ரவை உருண்டை பிடிக்கச் செய்வதுபோல்) சிறு சிறு வேலைகளைப் பகிர்ந்து கொடுப்பதன்மூலம் அவர்களது பொறுப்புணர்ச்சியை அதிகரிக்கச் செய்ய இதுதான் தக்க சமயம்.

    மலேசியாவில் தீபாவளிக்குப் பொது விடுமுறை. (தைப்பூசத்திற்கு சில மாநிலங்களில் விடுமுறை உண்டு). அதனால் எல்லா மக்களுக்குமே குதூகலம்.

    பேரங்காடிகளில் இச்சமயத்தில்தான் வருடத்திலேயே மிக மலிவாக துணிமணிகள கிடைக்கும். அதனால், இந்துக்கள் மட்டுமின்றி, பலரும் கடைகளில் மொய்த்துக்கொண்டிருப்பதைக் காணலாம்.

    `தீபாவளி சிறப்பு விற்பனை!’ என்று நடைபாதையை அடைத்துக் கடைகள் போட்டிருப்பார்கள். எங்கும் தமிழ் ஒலிக்கும். சூடிதார், வளையல், வீட்டுக்கு அலங்காரமாக பிளாஸ்டிக் தோரணங்கள் என்று தடபுடல் படும்.

    “`தோரணம் ஏன் கட்டுகிறீர்கள்?’ என்று பலரைக் கேட்டுவிட்டேன். சம்பிரதாயம் என்கிறார்கள்,” என்று எங்கள் இல்லத்திற்கு ஒரு சீன விருந்தினர் குறைப்பட்டுக்கொண்டார். “விஞ்ஞான ரீதியாக ஏதாவது காரணம் இருக்குமே!”

    நல்ல வேளையாக, நான் அவ்வருடம்தான் ஏதோ ஆன்மிக பத்திரிகையில் அதைப்பற்றிப் படித்திருந்தேன். விருந்தினர் பலர் நம் வீட்டுக்கு வருகை புரியும்போது அவர்கள் விடும் மூச்சுக்காற்றிலுள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக்கொண்டு விடுகிறது மாவிலை என்று விளக்கி, என் `அறிவுத் திறமையை’ அவரிடம் காட்டிக்கொண்டேன்.

    கோலாலம்பூரிலுள்ள ஒரு பாலர் பள்ளியில் குத்துவிளக்கு, தோரணம், பாவாடை, புடவை என்று எல்லாவற்றையும் வைத்துச் சொல்லிக் கொடுக்கிறார்கள். தீபாவளியை ஒட்டி அவர்கள் நடத்தும் விழாவில் — எல்லாக் குழந்தைகளும் (பலர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்), அவர்களுடைய பெற்றோர்களும் — வித்தியாசமின்றி, இந்திய ஆடைகள் அணிகிறார்கள். அங்கு வழங்கப்படும் தோசை, சப்பாத்தி வகைகளை சட்னி, சாம்பாருடன் சாப்பிடுகிறார்கள். பிரபலமான தமிழ், இந்தி படப் பாடல்கள் ஒலிக்கும். ஓர் ஆசிரியை, தெரியாத்தனமாக `கொலவெறி’ பாட்டைப் போட்டுவிட்டு, அவசரமாக நிறுத்தினாள்!

    சீன ஆசிரியை குழந்தைகளுக்கு பாலிவுட் படங்களில் வருவதுபோல் நடனம் ஆடச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு கற்பனை வற்றிவிட்டபோது, நான் என் பங்குக்கு டப்பாங்குத்து ஆடச் சொல்லிக்கொடுத்தேன்!

    அரசியல் பிரமுகர்கள் அவரவர் மதப் பண்டிகைகளை ஒட்டி OPEN HOUSE என்று கொண்டாடுவார்கள். அரண்மனையிலோ, ஸ்டேடியத்திலோ அல்லது ஒருவரது வீட்டிலோ நடைபெறும் இந்த `திறந்த வீட்டிற்குள்’ நுழைய மைல் கணக்கில் வரிசை பிடித்து நிற்பார்கள் பொதுமக்கள்.

    மலேசிய கின்னஸ் ரெகார்டில் “திறந்த வெளியில் நடைபெறும் மிகப் பெரிய சந்தை” என்று பெயர் வாங்கிய சந்தைக்குப் போயிருந்தேன். கோலாலம்பூர் புக்கிட் ஜலில் (BUKIT JALIL) என்ற இடத்திலிருக்கும் ஸ்டேடியத்தின் வெளிப்புறத்தில் கார் நிறுத்துமிடத்தில் தீபாவளிக்கு பத்து நாட்கள் முன்னதாக நடைபெறும். தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக நடைபெறுகிறது. இது ஒன்பதாம் ஆண்டு. இந்தியாவிலிருந்து இதற்காகவே வரும் வியாபாரிகள் கூட்டத்தை மனதில் கொண்டு, பொருட்களை பாதி விலையில் விற்பார்கள், `வாங்கே! வாங்கே!’ என்று கூவி அழைத்தபடி. அந்த வட இந்தியர்களுக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்தவர் ஆரவாரமான அந்த வரவேற்பைச் சரியாகச் சொல்லிக் கொடுத்திருக்கலாம். ஆனால் அதுவும் வேடிக்கையாகத்தான் இருந்தது.

    பெரும்பாலும், பெண்களுக்கான பொருட்கள்தாம். தெரியாத்தனமாக, மனைவிகளுடனோ, காதலியோடோ வரும் ஆண்களின் முழி பிதுங்குவது ரசிக்கும்படியாக இருந்தது.

    `எல்லாக் கடைளையும் சுற்றிப் பார்க்கப்போகிறாயா!” என்று ஆயாசத்துடன் கேட்கும் காதலன், `உனக்குப் பார்ப்பதை எல்லாம் வாங்கிவிட வேண்டும்!’ என்று பலர் கேட்க கடிந்துகொள்ளும் கணவனாக சில வருடங்களில் மாறிவிடுகிறான். அனேகமாக, எல்லா பெரிய கடைகளிலும் யாராவது தமிழர் இப்படிக் கத்திக்கொண்டிருப்பார். எவரும் அதிர்ந்து, திரும்பிப் பார்ப்பதெல்லாம் கிடையாது. பழகிவிட்டது.

    `மகிழ்ச்சியாகச் சுற்றிப் பார்க்கும்போது எதற்கு இப்படி ஒரு அவதி!’ என்று தெளிந்து, பல இளம்பெண்கள் ஒன்றுசேர்ந்து வருகிறார்கள். சற்று வயதானவர்களை அவர்களுடைய மகள் அழைத்து வருகிறாள். சாமான்களைத் தூக்கிச் செல்ல வசதியாக பதின்ம வயது மகனை அழைத்து வந்திருந்தார்கள் சில தாய்மார்கள். அந்தப் பையன்கள், `தெரியாமல் மாட்டிக்கொண்டோமே!’ என்று எந்த நிமிடமும் அழுதுவிடுவார்கள்போல் இருந்தார்கள்.

    சலிப்படைந்த ஆண்களின் மனப்போக்கு புரிந்து ஒரு பஞ்சாபி நான்கு இடங்களில் பால்கோவா போன்ற இனிப்புவகைகள் விற்கும் கடை போட்டிருந்தார். `மசாலா டீ!’ என்று அவர் கூவிக் கூவி விற்க, தம் ஆயாசத்தைச் சற்றே குறைத்துக்கொள்ள ஆண்கள் அக்கடைகளை மொய்த்திருந்தனர்.

    எல்லா தரப்பினரும் வாங்குவதற்கு ஏற்ப கண்ணாடிக் கற்கள், அல்லது ஜெய்ப்பூர் மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட கம்மல், நெக்லஸ் முதலியவை கண்களைப் பறித்தன. பெண்கள் திரளும் இடத்திற்கு பாத்திரங்கள், கைப்பை விற்கும் கடைகளும் இல்லாமலா!

    `என் மகள் மறுக்கு வாங்கி வரச்சொன்னாள்!’ என்ற மலாய்க்குரல் கேட்டது. (தேன்குழல் போன்ற பொரித்தவைகளின் பெயர் முறுக்கு). எவ்வளவு திருத்தினாலும், `முறுக்கு’ என்ற வார்த்தை அப்படித்தான் மருவிவிட்டது.

    பழங்காலத்துச் சித்திரங்கள், மரச்சாமான்கள் என்று ஓரிரு கடைகள். பல்லாயிரக்கணக்கான ரிங்கிட் விலையில், அவைகளை வேடிக்கைதான் பார்க்க முடியும் என்ற நிலை அனேகருக்கும்.

    ஒரு மூதாட்டியை சக்கர வண்டியில் ஒரு பெண்மணி அழைத்து வந்திருந்தாள். வாங்குகிறோமோ, இல்லையோ, ஜொலிக்கும் பொருட்களையும், அவைகளை பெருமகிழ்ச்சியுடன் வாங்கிப்போகிறவர்களையும் பார்த்தாலே அவர்களது மகிழ்ச்சி நம்மையும் தொத்திக்கொண்டு விடுகிறது.

    இதைப் படிப்பவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் என் மனங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (76)

    கலையால் இணைவோம்

    நலம்-2-1-1

    பாரம்பரிய இசை, நாட்டியம் எல்லாம் பக்தி மார்க்கமாக இருந்தவை. பிறர் பாராட்ட வேண்டும், பெரும்பொருள் ஈட்ட வேண்டும் என்று ஏதேதோ காரணங்களுக்காக இவைகளைக் கற்க நினைத்தால் ஓரளவுதான் வெற்றி பெற முடியும்.

    சுயநலம் கொண்ட பெற்றோர்

    எழுபது வயதுக்கு மேலான ஒரு பரதநாட்டிய ஆசிரியை என்னிடம் கூறினார்: “அந்தப் பெண் நன்றாக ஆடுவாள். ஆனால் அவளுடைய தாய் அவளையே நான் கவனித்துக்கொண்டிருக்க வேண்டும், பொது இடங்களில் ஆட அவளுக்குத்தான் நிறைய வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று வற்புறுத்தினார். `இனி வராதே!’ என்று நான் அவளை நிறுத்திவிட்டேன்”. சொல்லும்போதே அவர் முகத்தில் அப்படி ஒரு கோபம்.

    இதனால் பாதிப்படைந்தவர்கள் பலர். முன்னுக்கு வரவேண்டிய மாணவியை இழந்த ஆசிரியை, கலையார்வம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதால் ஏமாற்றமடைந்த மாணவி. போதாத குறைக்கு, தாயின் கனவுகளும் பேராசையால் நொறுங்கிவிட்டன.

    எத்தனை பாட்டுகள் தெரியும் என்று விரல்விட்டுக் கணக்குப் போடுவதைவிட, கற்ற சிலவற்றை ஒருவர் எவ்வளவு முழுமையாகக் கற்றிருக்கிறார் என்பதுதான் முக்கியம்.

    திறமையைக் காட்ட அவசரம்

    ஒரு முறை நான் மேடையில் பாடி முடிந்ததும், “சங்கீதம் படிச்சுக் குடுப்பீங்களா? எத்தனை மாசத்திலே மேடை ஏத்துவீங்க?” என்று தாய்மார்கள் கேட்டபோது திகைத்துப்போனேன்.

    இவர்களைப்போன்ற பெற்றோர் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கிறோம், அதனால் அவர்கள் நாம் சொல்வதையெல்லாம் கேட்டாக வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

    இவர்களுக்கு இணங்கி சொல்லிக்கொடுத்தால், பாட்டுகூட ஏதோ பாடத்தை ஒப்பிப்பதுபோல் இருக்கும். அனுபவித்துப் பாடுவதுபோல் இருக்குமா? பாவம் எப்படி வரும்?

    இப்படிச் செய்வது தவறான முறை என்று ஆசிரியர்களுக்குப் புரியாமல் இல்லை. ஆனாலும், வேறு வாத்தியார்களை நாடிப் போய்விட்டால், நம் வருமானத்திற்கு என்ன வழி?’ என்று, வாரத்துக்கு ஓர் உருப்படி என்று பெயருக்குச் சொல்லிக் கொடுப்பார்கள். அதனால் சொல்லிக் கொடுப்பவருக்கோ, கற்பவருக்கோ கிஞ்சித்தும் மனநிறைவு கிடைக்காது.

    குழுவாகப் பங்கேற்பது

    ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் நுண்கலை சம்பந்தப்பட்ட ஒரு காரியத்தில் ஈடுபடுகையில், போட்டி மனப்பான்மை எழக்கூடும். `பார்ப்பவர்கள் என்னையே பாராட்ட வேண்டும்!’ என்ற எண்ணத்துடன் செய்வார்கள். அவர்கள் எதிர்பார்த்த பாராட்டு பிறருக்குக் கிடைத்துவிட்டாலோ, ஆத்திரமும் பொறாமையும் கொள்வார்கள்.

    இதைத் தவிர்க்க, ஆசிரியர் ஒரு மாணவன்மீது கூடுதலான அன்பையோ, கவனத்தையோ காட்டாமல் இருப்பது அவசியம். ஓர் அமைப்பின்கீழ் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கையில், பங்கு பெறுபவர்களின் பெயர்கள் தனித்தனியாகக் குறிப்பிடாமல் இருக்கும்போது, `நாம் எல்லாரும் இணைந்து இயங்கினால்தான் நிகழ்ச்சி வெற்றி பெற முடியும்!’ என்ற மனப்பக்குவம் அவர்களுக்கு வருகிறது. போட்டியோ, கர்வமோ எழ வாய்ப்பில்லை.

    சமீபத்தில் இப்படி ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். பத்து மாணவிகள் ஒருவருக்கொருவர் ஒப்பனை செய்து, பிறர் ஏவாமலேயே மண்டபத்தை அலங்கரிப்பதிலிருந்து நாற்காலிகளைக் கொண்டுவந்து போடுவதுவரை எல்லா வேலைகளையும் தாமே முன்னின்று செய்தார்கள். `கடினமான வேலை’ என்று அஞ்சி நழுவாது, பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் செய்கிறார்களே என்று ஆச்சரியமாக இருந்தது. இவர்கள்தாம் தலைமைப் பதவிக்கு ஏற்றவர்கள் என்று தோன்றிப்போயிற்று.

    `பிற வகுப்புகளைச் சார்ந்த மாணவிகள் ஆடும்போது, கேலியாகச் சிரிக்கவோ, பேசவோ கூடாது,’ என்ற நியதியைப் பின்பற்றுகிறார்கள் இவர்கள். அப்படிச் செய்தால்தான், `நான்தான் உயர்த்தி!’ என்ற தலைக்கனம் கூடுகிறது. ஒருவரது திறமையும் ஆட்டங்கண்டு போகிறது.

    இம்மாணவிகளின் குடும்பத்தினர் ஆசிரியையிடம் தம் பெண்களை ஒப்படைத்துவிட்டதைப்போன்று நடந்துகொண்டனர். குறுக்கே வரவில்லை. தாங்களும் சேர்ந்து உழைத்தார்கள். இவர்களுக்குள் மொழி வேறுபாடு இருந்தாலும், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    பிறரது பார்வையில்

    ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சியின்போது, தமிழரல்லாத ஒருவர் என்னைக் கேட்டார், “உங்கள் நாட்டியத்தில் ஒவ்வொரு விரலசைவுக்கும் அர்த்தம் இருக்கிறது போலிருக்கிறதே?” என்று.

    “ஒவ்வாமைக்கும், அசுரனுக்கும் ஒரே முத்திரைதான்,” என்று நான் ஆரம்பித்து, சிலவற்றை விளக்கச் சிரித்தார்.

    அவர் மேலும் துளைத்தார்: “யோகாசனம் செய்வது போல் சில சமயம் வருகிறதே!”

    யோகா பயின்றால் நாட்டியம் ஆடுவது எளிது. குனியும்போது மூச்சை வெளிவிட வேண்டும், நிமிர்கையில் மூச்சை உள்ளுக்கிழுக்க வேண்டும். ஒரே காலில் நீண்ட காலம் நிற்க இவர்களால் முடியும். இந்த மாணவிகள் ஒவ்வொரு வகுப்பும் தொடங்குமுன் சில யோகாசனப் பயிற்சிகள் செய்கிறார்களாம்.

    பாட்டில் உணர்ச்சி வேண்டாமா?

    வாய்ப்புகள் அதிகமாக வேண்டும் என்ற எண்ணத்துடன், ஊடகத்தைச் சேர்ந்த புகைப்படக்காரர் இருந்தால், ஒரு கலைஞர் வலியப்போய் அவருடன் நட்பு கொண்டவர்போல் நடிப்பது பயனளிக்கலாம். ஆனால், அவர்தான் திறமை மிக்கவர் என்று எல்லாரும் ஒப்புக்கொள்வார்களா என்பது சந்தேகம்தான்.

    நானே சகலம்(?)

    தியாகராஜ ஆராதனையின்போது, நூற்றுக்கணக்கான இசை வல்லுனர்கள் தம் பக்தியைச் செலுத்த வருவதாகப் பெயர். ஆனால், ஒரு பாடகி முதல் வரிசையில் அமர்ந்துகொண்டு, தன்முன் மூன்று ஒலிபெருக்குகளை வைத்துக்கொண்டு பாடியதையும், முன்பொருமுறை ஒரு புகைப்படக்காரரைப் பார்த்து புன்னகை பூத்து, அச்சமயம் பாடாமல் இருந்ததையும் தொலைகாட்சியில் கண்டபோது மனம் நொந்தேன். தன்னையே நினைத்துக் கொண்டிருந்தால் பக்தி எப்படி வரும்? பாட்டிலும் உயிர் இருக்காது.

    நல்ல வேளை, `இசையே இறைவனைத் துதிக்கும் வழி!’ என நம்பி வாழ்ந்த வாக்கேயக்கார்கள் இப்போது உயிருடன் இல்லை!

    மேடைக் கச்சேரிகளின்போது, பாடகரும், வாத்தியக்காரர்களும் ஒருவரது திறமையை மற்றவர் `பேஷ்!, `பலே!’ என்று வாயாரப் பாராட்டினால் கச்சேரியும் சிறக்கும், இரு தரப்பினர் இடையே ஆழ்ந்த நட்பும் உண்டாகும்.

    பல ஆண்டுகளுக்குமுன் பார்த்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. பார்வையற்ற ஒரு வாத்தியக்காரரை சபையோர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தியபோது பாடகர் முகத்தில் ஆத்திரம் கொப்புளித்தது.

    ரசிகர்கள் தலையாட்டினால் அது அவருக்குத் தெரியும் என்று நினைத்து அவர்கள் வாத்திய இசையை மெச்சும்வண்ணமாக அப்படி ஆரவாரம் செய்தார்கள் என்பது அவருக்குப் புரியவில்லை!

    அவர் முன்னணியில் இருந்த பாடகர். ஆனால், எல்லோருடைய கவனமும், `அவர் முகத்தில் எத்தனை கோபம், பாரேன்!’ என்று அவர் முகத்தில்தான் இருந்தது. இசையில் நிலைக்கவில்லை.

    மனிதன் தீவா?

    தீவுதான் தனியாக இருக்கும். எப்போதாவது, எதற்காகவாவது நாம் பிறரை நாடாமல் இருக்கிறோமா?

    `இவரால் நம் காரியம் ஆகவேண்டும்,’ என்ற முன்யோசனையில்லாது பிறருடன் பழகுவதுகூட நன்மையைத்தான் விளைவிக்கும்.

    அண்மையில் ஒரு கலைநிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். ஆங்கில இசையுடன் கூடிய `கோரஸ்’, குழுவாக வயலின், பியானோ, பரதநாட்டியம் என்று சகலமும் இருந்தன. அக்கலைஞர்களை ஒருங்கிணைத்தது இசை, வறுமை.

    வசதி குறைந்த இளைஞர்கள் பல ஆசிய நாடுகளிலிருந்து வந்திருந்தனர். அவர்களுக்குப் போதிப்பவர்கள் பணம் சம்பாதிப்பதைப் பெரிதாகக் கருதாது, தாம் கற்றுத் தேர்ந்த கலைகளைப் பரப்புவதன்மூலம் சமூக சேவை செய்பவர்கள்.

    நிகழ்ச்சி ஏற்பாட்டார்களுடைய குழந்தைகள் வசதி நிறைந்தவர்கள் ஆனாலும், தம்மைப்போல் இல்லாதவர்களுடன் கலந்து பழகி, அதனால் நன்மை பெற்றவர்கள். இவர்களுக்கு இயல்பான தாராள மனப்பான்மை வசதியற்றவர்களுக்கும் பழகிப்போக, அவர்களும் பிறருக்கு உதவி செய்வதிலும், தமக்குத் தெரிந்தவற்றைப் பகிர்ந்துகொள்வதிலும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கோடீஸ்வரரின் புதல்வியான ஒரு சீனப்பெண் புடவையும் பொட்டும் அணிந்து, அறிவிப்புகள் செய்தாள். அவளுக்குப் புடவை அணிவித்தது வசதியற்ற தமிழ்ப்பெண். ஆனால், கலைகளில் சிறந்தவள். பரோபகாரத்தால் இருவருக்குமிடையே நல்லுறவு ஏற்பட்டது.

    செல்வச்செழிப்பு ஒருத்தியை கர்வியாகவும் ஆக்கவில்லை, `அப்படி நாமும் இல்லையே!’ என்ற ஏக்கமோ, பொறாமையோ இன்னொருத்திக்கு எழவுமில்லை. கலையிலிருந்த ஆர்வத்தால் இருவரும் ஒன்றாகிப்போனார்கள்.

    கலை பேதங்களை விலக்கும் என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்!

    சுயநலத்தையே பெரிதாகக் கருதி ஈடுபட்டால், நாமும் வளரமாட்டோம், நம் கலையும் வளராது.

    தொடரும்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (75)

    நிர்மலா ராகவன்

    ஞாபகம் வருதே!

    நலம்-2-1

    ` ஆனாலும் எனக்கு ரொம்ப மறதி!’ என்று அலுத்துக்கொள்கிறார் ஒருவர்.

    இன்னொருவரோ, `நினைக்கத் தெரிந்த மனமே! உனக்கு மறக்கத் தெரியாதா!’ என்று கெஞ்சுகிறார். (அனேகமாக, காதலராகத்தான் இருக்கும்).

    வாழ்வில் மிக இனிமையானவை கடந்துபோன தருணங்கள். அக்காலத்தில் பொறுக்க முடியாத சில சந்தர்ப்பங்களும் இருந்திருக்கும். அவைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ஆடையின்கீழ் இருக்கும் பால்போல், மறக்கமுடியாதவை, மறக்கக்கூடாதவை, தெளிவாகத் தெரியும். அதற்காகத்தான் திருமணம், பிறந்தநாள் போன்ற மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளை புகைப்படங்களில் பத்திரப்படுத்திக் கொள்கிறோம்.

    ஒரு பள்ளிக்கூடத்திலோ, அல்லது கல்லூரியிலோ ஒன்றாகப் படித்தவர்கள் இருபத்தைந்து வருடங்களுக்குப்பின் ஏன் கூடுகிறார்கள்? அக்காலத்தில் தாம் அனுபவித்தவை, தண்டித்த ஆசிரியை, செய்த விஷமங்கள் என்று எல்லாவற்றையும் அசைபோடும்போதே ஒரு மகிழ்ச்சி.

    நாம் எங்கு சென்றாலும் நம்முடன் தொடர்ந்து வருவது கல்வி மட்டுமல்ல, நினைவுகளும்தான்.

    கதை

    அப்போது நான் இடைநிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். அடுத்த பாடத்தை எடுக்க வரும் ஆசிரியை வகுப்பிற்குள் நுழைவதற்குள் எங்களில் சிலர் பலரது வேண்டுகோளுக்கு இணங்க திரைப்படப் பாடல்களைப் பாட ஆரம்பித்தோம்.

    எப்போதும் இடைவேளையின்போதுதான் பின்னணி இசையை எல்லாம் வாயாலேயே அளித்து நான் பாடுவேன். அன்று என்னவோ, புத்தி கெட்டுப்போயிற்று. (ஒரு வேளை, மறக்கமுடியாத தருணம் ஒன்று அமைய வேண்டியிருந்தோ?)

    குழுவாகப் பாடப் பாட உற்சாகம் பீறிட்டது. இருபது நிமிடங்கள் கடந்திருக்கும். `இன்னிக்கு மிஸ் வரலே!’ என்று மகிழ்ச்சியுடன், எங்கள் கச்சேரியைத் தொடர்ந்தோம். வகுப்பில் ஒரே ஆரவாரம். கைதட்டி எங்களை ஊக்குவிக்க தோழிகள் இருந்தபோது, ஆசிரியை உள்ளே நுழைந்தது கண்ணில் படுமா?

    மணி அடிக்கும் சமயம் ஆசிரியை மீண்டும் வந்தார். அவர் முகத்தில் தெரிந்த கோபம் எங்களை அச்சுறுத்தியது.

    முதலிலேயே வகுப்புக்கு வந்தாரா!

    அது எப்படி கவனிக்காமல் போனோம்?

    “கிளாஸ் மானிட்டரே இப்படி இருந்தால் என்ன சொல்வது?” என்று என்னை ஒரு பார்வை பார்த்தார். குறித்த நேரத்தில் ஆசிரியை ஒருவர் வராவிட்டால், போய் விசாரிக்க வேண்டியது என் கடமையாக இருந்தது. பொங்கிய சிரிப்பை அடக்கிக்கொண்டு தலையைக் குனிந்தேன்.

    என்னுடன் சேர்ந்து பாடிய (அமர்க்களம் செய்த என்று புரிந்துகொள்ளவும்) பெண்ணின் பெயர் டி.ஸ்.வசந்தகுமாரி.

    அவளைப் பார்த்து, “உன் பெயர் M.L. வசந்தகுமாரி இல்லை. நினைவு வைத்துக்கொள்!” என்று சீறினார்.

    எங்களுக்கெல்லாம் சிரிப்பு வந்தது. நிலைமையை இன்னும் மோசமாக்க வேண்டாம் என்று அடக்கிக்கொண்டோம்.

    “உன் பெயர் M.L. வசந்தகுமாரி இல்லை. நினைவு வைத்துக்கொள்!” என்று சொல்லிச் சொல்லி, அந்த ஆண்டு பூராவும் அவளைக் கேலி செய்தோம்.

    இதைப்போன்று எவ்வளவோ! அதெல்லாம் பசுமையாக மனதில் படிந்துவிட்டதால், `இந்த வயதில் இதெல்லாம் சகஜம்!’ என்று `பெரிய மனதுடன்’ பிற்காலத்தில் மாணவர்கள் செய்யும் சிறு குறும்புகளை என்னால் ரசிக்க முடிந்தது.

    ஒலி தூண்டும் நினைவுகள்

    ஏதாவது பழைய பாட்டைக் கேட்டால், அதை நாம் ரசித்த காலம், அப்போது நம்முடன் இருந்தவர்கள் என்ற ஏதேதோ நினைவில் இனிமையாக எழும்.

    கதை

    என் பேத்திக்கு ஒரு வயதாக இருந்தபோது, நான் மருத்துவ மனையில் இருந்தேன். “பொண் குழந்தைக்கு பொட்டு இடவேண்டாம்?” என்று மகளைக் கடிந்துகொண்டு, கன்னத்தைத் தொட்டபோது குழந்தை பயந்தாள். ஒரே நாள்தான். இருந்தாலும், என்னை அடையாளம் தெரியவில்லை.

    உடனே நான் என்னுடன் கொண்டு வந்திருந்த சாந்தை எடுத்து, நாக்கு நுனியால் கீழுதட்டின் உள்பாகத்தில் ஓசை எழுப்பினேன். சிறு குழந்தைகள் அசங்காமலிருக்க, பொட்டோ, கண் மையோ இடும்போது இந்த யுக்தியைக் கையாள்வது வழக்கம்.

    `பாட்டிதானே இப்படிப் பண்ணி பொட்டு இடுவாள்!’ என்ற நினைவு எழ, சிரித்தபடி என்னிடம் தாவினாள்.

    இதை அவளிடம் இப்போது கூற, சிரிக்கிறாள். குழந்தைகளிடம் அவர்கள் பால்யப்பருவத்தைப்பற்றிக் கூறி வளர்த்தால், அவர்களுடைய ஞாபகசக்தி பெருகுமாம்.

    வாசனையும் நினைவுகளும்

    சமையல் செய்யும்போதோ அல்லது ஏதாவது உணவுவகையை நெடுநாளைக்குமுன் உண்ண நேரிட்டாலோ, நம் நினைவு எங்கோ பறக்கும்.

    கதை

    நான் முதன்முதலில் தோசை வார்க்கும்போது non-stick (ஒட்டாமல் இருப்பது) தோசைக்கல் கிடையாது.

    என்னை நம்பி என் குடும்பத்தினரை விட்டுவிட்டு என் தாய் வெளியூர் போய்விடுவாள், தன் தாயைப் பார்க்க.

    நான் தோசை வார்த்தால், சரியான பதம் புரியாமல் அதை நூறு கிழிசல்களாக எடுத்துவிடுவேன்.

    சிலாகிப்பதுபோல் “கிழிச்சு திங்கற வேலை வைக்காம, எவ்வளவு ஜோரா பண்ணறா!” என்று கேலி செய்வார்கள்.

    “இப்படியெல்லாம் கேலி பண்ணினா, இனிமே நான் சமைக்கவே மாட்டேன்!” என்று சண்டை பிடிப்பேன்.

    இப்போது பத்து வயதுக் குழந்தைகள்கூட கிழியாமல் தோசையைத் திருப்பும்போது, அவர்களிடம் அந்த தருணங்களை நினைவுகூர்வேன். பெரியவர்களைப் பார்த்துச் சிரிப்பது மரியாதையாக இருக்குமா என்று யோசித்துச் சிரிப்பார்கள்!

    நல்லதை நினைவில் வை

    `அம்மா என்னை எப்பவும் திட்டுவாள்!’ என்று ஒரு பெண்மணி சிறு வயதில் தன்னைக் கண்டித்த தாய்மீது வன்மம் கொள்கிறாள். (தந்தையும் திட்டியிருப்பார். அது மனதில் நிலைப்பதில்லை சிலருக்கு).

    `அம்மா என்னை கண்டிப்பாக வளர்த்ததால்தான் நான் இன்று நல்ல நிலைக்கு வந்திருக்கிறேன்!’ என்று கூறுவார் இன்னொருவர்.

    ஒரேவித வளர்ப்புதான். ஆனால் ஞாபகசக்தி நல்லவைகளை மறந்துவிட்டது. எப்போதோ நடந்த சோகக்கதைகளைச் சொல்லி, தன்மேல் பிறரைப் பரிதாபம் கொள்ளச்செய்வதுதான் பாசம் என்று தவறாக எண்ணுகிறார்கள் சிலர்.

    பழைய நினைவுகளிலேயே காலத்தைக் கழிக்க நினைப்பது நிகழ்காலத்திற்கு நல்லதல்ல. நாம் களைத்துப்போய், அல்லது வருத்தமாக இருக்கும்போது தம் மனதிற்கு மகிழ்ச்சியூட்டிய தருணங்களை நினைவுகூர்ந்தால் உற்சாகமாக உணரமுடியும்.

    உணர்வுகளும் நினைவுகளும்

    நாம் என்றோ செய்த தவறுகளை நினைக்கவே அஞ்சுகிறோம். அவைகளை அசைபோட்டால், மீண்டும் அதே தவற்றைச் செய்யாதிருக்கலாம். ஏன், பிறர் செய்த தவறுகளிலிருந்தும் பாடம் கற்கலாமே!

    விவாகரத்து செய்துகொண்ட பல பெண்களைச் சந்தித்திருக்கிறேன். முதலில், அவர்களுடைய கசப்பு கணவர்மேல் எழும். காலப்போக்கில், தன்மீதே பரிதாபமும், வெறுப்பும் எழும்.

    ஒரே ஒரு பெண் மட்டும் தான் எந்த சூழ்நிலையில் கணவனை விவாகரத்து செய்ய நேர்ந்தது என்று கூறிவிட்டு, `நாங்கள் ஒன்றாக இருந்தபோது, சில இனிமையான தருணங்களும் இருந்தன,’ என்று ஒத்துக்கொண்டாள்.

    வேண்டாத நினைவுகளையே விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்காததால் அவளால் எதிர்காலத்தைத் தைரியமாக நோக்க முடிந்தது. கடந்த காலத்திலேயே வாழ்க்கை தேங்கிவிடவில்லை.

    ஞாபகசக்தி வளர

    ஒரு கையின் விரல்களின் நுனியை இன்னொரு கையிலுள்ள அதே விரல்களுடன் (கட்டை விரல்- கட்டை விரல், ஆள்காட்டி- ஆள்காட்டி, இப்படி) சேர்த்து, கோபுரம்போல் பிடித்துக்கொண்டால், மறந்தது சிறிது நேரத்தில் நினைவு வந்துவிடுகிறது.

    வகுப்பறையில் ஆசிரியர்கள் போதிக்கையில் மாணவர்கள் இப்படிச் செய்தால், பாடம் மனதில் நன்கு படியும். `நீங்கள் சொன்னபடி செய்து பார்த்தேன். வீட்டுப்பாடங்களை சிறிது நேரத்திலேயே செய்து முடித்துவிட்டேன்!’ என்று பெருமகிழ்வுடன் தெரிவித்தாள் என் மாணவி ஒருத்தி.

    நான் சமீபத்தில், `ஒரு நடிகையின் தாய் சிறு, சிறு வேடங்களில் நடிப்பாளே, அவள் பெயர் என்ன?` என்று நினைவுகூர இம்முறையைக் கையாண்டேன். அது தெரிந்து எனக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. எனினும், எனக்குப் பதில் கிடைத்தது!

    `வேண்டாத விஷயம்!’ என்று மூளை சிலவற்றை மறந்துவிடுவது இயற்கை. அவை மறந்ததுபோலவே இருக்கட்டுமே! எதற்கு அநாவசியமான பரீட்சை?

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (74)

    நிர்மலா ராகவன்

    பாராட்டு – பொறுமை

    நலம்-2

    வீட்டைச் சுத்தப்படுத்தினாலோ, தோட்டவேலை செய்தாலோ, திறம்பட சமைத்தாலோ, ஏன், எந்த காரியத்தையும் புகழ்ச்சியை எதிர்பார்த்தே செய்வார்கள் சிலர்.

    `பிறர் என்னைப் பாராட்டவேண்டும்!’ என்று மட்டுமே ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பித்தால், அதில் முழு ஈடுபாடு இருக்குமோ, என்னவோ! ஆனால் எதிர்பார்த்த அங்கீகாரமோ, வெற்றியோ கிடைக்காதபோது, ஏமாற்றம்தான் மிஞ்சும்.

    கதை

    மாலதியின் தாய் சிறு வயதிலிருந்தே அவளைக் காரணமின்றி திட்டுவாள். தந்தையின் அளவுகடந்த அன்புக்குப் பாத்திரமாக இருந்ததுதான் அவளுடைய குற்றமாகப் போயிற்று.

    `ஏன் அம்மாவுக்கு நம்மைப் பிடிக்காமல் போய்விட்டது?’ என்று வருந்திய குழந்தை மனம், `நான் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்றால், அம்மாவின் முகத்தில் சிரிப்பு வரும்,’ என்று புரிந்துகொண்டது.

    இத்தகைய நடவடிக்கை அநாவசியமான மன இறுக்கத்தில் கொண்டுவிடும். நமக்குப் பிடித்ததைச் செய்யும்போதுதான் மனநிறைவு கிட்டுகிறது. அதையும் நம்மால் இயன்றவரை முயற்சி செய்து பார்க்கவேண்டும். நாம் செய்ய விரும்புவது நம் தகுதிக்கு ஏற்புடையதாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டுவதும் முக்கியம். இல்லாவிட்டால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.

    கதை

    “அம்மா என்னை வீணை கத்துக்கச் சொல்றாங்க, டீச்சர். எனக்குப் பிடிக்கலே,” என்று என்னிடம் அழமாட்டாக்குறையாகத் தெரிவித்தாள் ஓர் இளம்பெண். தந்தையை இழந்தவள். அவளைச் சிறுவயதிலிருந்தே நான் அறிவேன்.

    “எங்கே, பாடு!” என்று ஒரு ஸ்வரத்தை இழுத்தேன்.

    அவள் உடனே பாடிக் காட்டினாள். இரண்டு முறையும் அபஸ்வரம்தான். அப்போது புரிந்தது அவளுக்கு ஏன் இசை கற்பதில் ஆர்வம் இல்லையென்று. அவள் பாடியதற்கும் நான் பாடியதற்கும் சம்பந்தமே இருக்கவில்லை.

    இந்தப் பெண்ணுக்கோ வேறு துறைகளில் அபாரத் திறமை. எதற்காக வராததை எண்ணி முட்டிக்கொள்ளவேண்டும்?

    “ஒங்கம்மாவிடம் கண்டிப்பா சொல்லிடு. நான் என்னால முடிஞ்சதைத்தான் செய்வேன்னு!” என்று சொல்லிக்கொடுத்தேன்.

    அவள் முகம் மலர்ந்தது. தாயின் பேச்சை மீறலாம், மீறினால், அப்படியொன்றும் தான் தகாத காரியம் செய்பவளாக ஆகிவிடமாட்டோம் என்று புரிந்த மலர்ச்சி அது.

    `இப்படிச் செய்யேன்!’ என்று பிறர் வற்புறுத்திச் சொல்லும்போது, `முயற்சி செய்கிறேன்!’ என்றால், அனேகமாக அது நல்லவிதமாக நடைபெறாது.

    விடாமுயற்சி

    பட்டதாரியான என் தோழி அய்னுன் முதல் வகுப்புக்கான பரீட்சைக் கேள்விகளைப் பார்த்துவிட்டு, “எவ்வளவு எளிதாக இருக்கிறது!” என்று அதிசயப்பட, நான் சிரித்தபடி, “அந்த வயதில் உனக்கும் இதெல்லாம் கடினமாகத்தான் இருந்திருக்கும்!” என்றேன்.

    `எதுக்கு ஸ்கூலுக்குப் போகணும்?’ என்று அடம்பிடித்த குழந்தைகளில் நானும் ஒருத்தி. பழகிய சூழ்நிலைதான் பாதுகாப்பு என்று நினைத்த வயது அது. அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு, `படிச்சாதான் புத்திசாலியா ஆகலாம். ஒன்னை எல்லாருக்கும் பிடிக்கும்,’ என்று, அவர்களுக்குப் புரிவதுபோல் எதையாவது சொல்லி சமாதானப்படுத்த வேண்டியதுதான்.

    எங்கள் வீட்டுக் குழந்தைக்கு நான் ஒரு கதை சொல்வேன். ஒருவன் மேசை, நாற்காலிகள் போட்டிருந்த ஒரு கடைக்குப் போய் `காப்பி!’ என்று கேட்க, `ஏய்! வெளியில் போர்டைப் பாக்கலியா? இது ஹோட்டல் இல்லே,’ என்று திட்டி, அடித்தார்கள். அதுவோ, மரச்சாமான்கள் விற்கும் கடை. “பாவம்! அவனுக்குப் படிக்கத் தெரியாதால் அடி வாங்கினான்,” என்று முடிப்பேன்.

    எத்தனையோ கெஞ்சியும், கொஞ்சியும், மிரட்டியும் படியாத பிள்ளை அக்கதையால் மனம் மாறினான். படிக்கத் தெரியாவிட்டால் அடியும் திட்டும் வாங்க வேண்டுமோ என்று அஞ்சி, அதற்குப்பின் ஒழுங்காக பாலர் பள்ளிக்குப் போனான்.

    `முட்டாள்தனமான கதை!’ என்று பெரியவர்கள் சிரித்தாலும், அவனுக்குப் புரிந்தது.

    பலர் படிப்பையோ, வேறு எந்த காரியத்தையோ அரைகுறையாக விட்டுவிடுகிறார்கள்.

    நாம் கடக்க வேண்டிய பாதையைக் கண்டு முதலில் மலைப்பாக இருந்தாலும், அஞ்சக்கூடாது. முயற்சி திருவினையாக்கும்.

    வெற்றி பெறுபவர்கள் விடாமுயற்சி உள்ளவர்கள். அதுதான் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம்.

    ஒரு காரியத்தை முனைந்து செய்வது `பிடிவாதம்’ என்று பிறர் பழிக்கலாம். ஆனால், சிறுகச் சிறுக நீண்ட காலம் ஒரே காரியத்தைச் செய்தால்தான் வெற்றி கிட்டும் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. நீண்ட தூரத்தைக் கடக்க ஒவ்வொரு அடியாக வைத்தால்தானே முடியும்!

    இலக்கை நோக்கி நட

    எந்தக் காரியமும் ஆரம்பிக்கும்போது மலைப்பாக இருக்கும். `இதை நம்மால் செய்ய முடியுமா?’ `பிறர் என்ன சொல்வார்கள்?’ என்றெல்லாம் யோசனை போனால், தயக்கம்தான் மிஞ்சும்.

    புதிய விளையாட்டுகளில் ஈடுபடுகிறவர்களது உடலின் பல பாகங்களிலும் வலி உண்டாகாமல் இருக்காது. அதைப் பொருட்படுத்தாது, உரிய மருந்துகளின் உதவியோடு தொடர்ந்து விளையாடினால், தானே ஆர்வம் பெருகும்.

    நாற்பது வயதுக்குமேல் நாங்கள் – பத்து பெண்கள் – நீச்சல் கற்க ஆரம்பித்தோம். என்னைத் தவிர பிறர் எல்லாரும் சீனர்கள். அவர்கள் எல்லாரும் அரைகுறையாக விட்டுப்போய்விட்டார்கள்.

    காரணங்கள்: உடல் கறுக்கிறது. பசி மிகுந்து, நிறையச் சாப்பிடுவதால் குண்டாகிவிட்டேன். முடி உதிர்கிறது.

    நானோ, எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். `பசித்தால் என்ன!’ என்று அலட்சியப்படுத்தினேன். முடி அதிகம் கொட்டாமல் இருக்க இரு கை நகங்களையும் ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து, மேலும் கீழுமாகத் தேய்க்க வேண்டும். (Reflexology – buffing the nails). நல்ல பலனளித்தது.

    உடலெல்லாம் வலிக்கிறதே!’ என்று நான் கூற, `வெந்நீரையும் பச்சைத்தண்ணீரையும் மாற்றி மாற்றி விட்டுக் குளியுங்கள்!’ என்று ஆலோசனை வழங்கப்பட்டது.

    ஒவ்வொரு நாளும் மாறுதல் தெரிந்தது. ஊளைச்சதையும், கையின் வெளியில் தெரிந்த நரம்புகளும் மறைவதைக் கண்டு மகிழ்ச்சியாக இருந்தது.

    தற்காப்புக்கலையை பதினைந்து வருடங்களுக்குமேல் பயின்ற ஒரு இளைஞனைக் கேட்டேன்: “இன்று பயிற்சிக்குப் போனாயே! வலிக்கிறதா?”

    பதில் யோசியாது வந்தது: “வலிக்காவிட்டால், அது முறையான பயிற்சியே இல்லை!”

    தனக்கென ஓர் இலக்கு வகுத்துக்கொண்டு, அதை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்தான் – எந்தவிதத் தடங்கலையும் லட்சியம் செய்யாது.

    வெற்றி தொடர

    சிலர் `ஆரம்பசூரத்தினால்’ வெற்றி பெற்றிருப்பார்கள். உடனே, தலையைச் சற்றே நிமிர்த்தி, நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு நடப்பதுதான் தம் `மேலான’ தன்மையை பிறருக்குப் புரியவைக்கும் என்று எண்ணுவதுபோல் நடப்பார்கள்.

    `யாரிவர்?’ என்று பார்ப்பவர்கள் புருவத்தை உயர்த்தினாலும், இதனால் மரியாதை கிடைத்துவிடும் எனபதில்லை. `ரொம்பத்தான் காட்டிக்கறான் (ள்!)’ என்று அவன்(ள்) காதுபடவே சிலர் முணுமுணுக்கும்போது அதிர்ச்சி அடைந்தாலும், அவர்கள் தம்மை மாற்றிக்கொள்வதில்லை.

    இப்படிப்பட்டவர்கள் சிறு வெற்றி அடைந்தாலே திருப்தி அடைந்துவிடுவர். அதனால், அதிக முன்னேற்றத்துக்கு வழியில்லை. பெருங்காயம் வைத்த பாண்டமாக, என்றோ செய்து முடித்தவைகளையேதான் பறைசாற்றிக்கொண்டு இருக்கவேண்டும்.

    அதிலும், இளம் வயதிலேயே அதிகமான முன்னேற்றத்தை அடைபவர்களுக்கு தம் நற்பெயரைத் தக்கவைத்துக்கொள்ளும் முதிர்ச்சி இருப்பதில்லை.

    கதை

    அவர் இருபத்தைந்து பிராயத்துக்குள் கலைத்துறையில் பெரிய வெற்றிகளைப் பெற்றிருந்தவர். எந்தப் பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவரை அழைத்தாலும், தன்னை உரிய விதத்தில் கவனிக்கவில்லை, தன் மதிப்பை உணராது கால தாமதம் செய்து தன் பொன்னான நேரத்தை வீணாக்குகிறார்கள் என்று ஏற்பாட்டாளர்களுடன் வாதிடுவார்.

    முதலில் அவர்கள் அஞ்சினாலும், போகப் போக, தம்மீது தவறில்லை, இவர் பலரிடமும் இப்படித்தான் நடந்துகொள்கிறார் என்று புரிந்துகொண்டார்கள். அதன்பின், அவரை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கத் தயங்கினார்கள்.

    பொறுமை இல்லாததால், திறமை இருந்தும் அவர் சோபிக்கவில்லை. வாய்ப்புகள் குன்ற பொருளாதாரம் ஆட்டம் கண்டது. பொறுமை மேலும் குன்றியது.

    வறுமையிலோ, நோயிலோ வாடும்போதுதான் பொறுமை எல்லை மீறும் என்பதில்லை. எந்த நிலைமை வந்தாலும் பொறுமை இழக்காது, காலம் மாறும், நம் அதிர்ஷ்டத்தை மாற்றிக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தாலே போதும்.

    கதை

    `எனக்குப் பொறுமையே கிடையாது!’

    இப்படி அடிக்கடி சொல்வாள் அவள். தான் பெற்ற குழந்தைகளை சிறு தவற்றுக்குக்கூட அடித்து நொறுக்குவாள். `அப்படிச் செய்யாதே!’ என்று மூத்தவர்கள் அறிவுரை வழங்கும்போது, “எனக்குப் பொறுமையே கிடையாது! அதுக்கு என்ன பண்றது!” என்பாள்.

    அவளைப் பொறுத்தவரை, செல்வச் செழிப்புக்குக் குறைவு கிடையாது. இருந்தாலும், கிடைக்காத எதையோ எண்ணி தானும் நொந்து, பிறரையும் நோகடிப்பாள்.

    தங்களிடம் இருப்பவைகளை மனதில்கொண்டு திருப்தி அடையாது, பிறருடன் தம்மை ஒப்பிட்டுக்கொண்டே நிம்மதி இழப்பவர்களை என்ன சொல்வது! இவர்களால் பிறருக்கு எந்த இழப்புமில்லை. நஷ்டம் இவர்களுக்குத்தான்.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (73)

    நிர்மலா ராகவன்

    பிறர் போற்ற

    நலம்
    தனது முதல் குழந்தையை முதன்முதலாகப் பார்க்கும் தாய், `இவனுக்காக உயிரையே கொடுப்பேன்!’ என்று எண்ணக்கூடும். பார்ப்பவர்கள் அனைவரும் தன் குழந்தையை மெச்சவேண்டும் என்ற ஆவல் பிறக்கும்.

    ஆனால், பிறருக்கு அதுவே தொல்லையாகிவிடும்.

    `எப்போதும் அந்தக் குழந்தையையே பாக்கணும் என்பார்கள்!’ என்று ஒருவரும், `எத்தனையோ குழந்தைகளைப் பாத்தாச்சு, போ!’ என்று அலுத்துக்கொண்ட பெண்மணிகளையும் கண்டிருக்கிறேன்.

    அந்தமாதிரி ஒர் உறவினர் வீட்டில் தங்கியபோது, `இவளைப் பாருங்களேன்!’ என்று தன் இரண்டு வந்து மகளின் பராக்கிரமத்தை ஓயாது பறைசாற்றினாள் அவளுடைய தாய்.

    குழந்தை என்னவோ, வயதுக்கு மீறிய புத்திசாலிதான். ஆனால், அவளை மெச்சுவதைத் தவிர நமக்கு வேறு வேலை இல்லையா, என்ன!

    ஒரு முறை, `நான் படிச்சுண்டு இருக்கேன். தொந்தரவு பண்ணாதே!’ என்றேன் முகத்தை சற்றே திருப்பி. அவளுடைய வாய் அதிர்ச்சியில் பிளந்தது.

    சில வருடங்கள் கழித்து, அவளுடன் பேசும்போது, “உன் குழந்தையைப் பார்ப்பவர்களிடமெல்லாம் காட்டிப் பெருமைப்பட்டுக்கொள்ளாதே!” என்றேன், அறிவுரை கூறும் வகையில்.

    “நான் இப்போதெல்லாம் அப்படிச் செய்வதில்லை. அவளுடைய அப்பாவை அப்படித்தான் நடத்தினார்களாம். அதனால் வேண்டாம் என்கிறார்!” என்றாள். ஏன் கூடாது என்று அவளுக்குப் புரியத்தானில்லை.

    பிறரிடம் தம்மைப் புகழ்கிறார்களே என்று குழந்தைகளுக்கு முதலில் பெருமையாக இருக்கும். நாளடைவில், `நான் செய்வதெல்லாம் பெற்றோருக்குப் பெருமை தரக்கூடியதாக இருக்கிறதோ?’ என்று யோசித்து, யோசித்து ஒவ்வொரு காரியத்தையும் செய்ய முனைவர். அதற்கு ஈடாக, பெற்றோரும் குழந்தைகள் செய்ய வேண்டிய காரியத்தையும் தாம் செய்வர். இரு தரப்பினருக்குமே நிம்மதி கிடைப்பதில்லை. குழந்தைகளுக்குச் சுதந்திர உணர்ச்சி எப்படி வரும்?

    எதிலாவது வெற்றி பெறாவிட்டால், `பெற்றோர் கலங்குவார்களே!’ என்ற ஏமாற்றம் எழும். புதிதாக எதையும் செய்யும் ஆர்வமோ, துணிவோ இல்லாது போய்விடுவதும் இதனால்தான்

    `நான் ரொம்ப அழகாம்!’

    பதின்ம வயதினருக்கான பள்ளிக்கூடம் ஒன்றில், கல்வியில் நாட்டமோ, திறமையோ இல்லாத மாணவிகள் நிரம்பிய வகுப்பில் ஒரு பொதுவான தன்மை இருந்ததைக் கண்டு ஆச்சரியம் எழுந்தது எனக்குள். எல்லாருமே அழகாக இருந்தார்கள்.

    சிறு வயதில், `அழகு!’ என்று பலரும் கொஞ்சியிருப்பார்கள். அதனால் அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வளர்ந்திருக்கிறார்கள். வகுப்பில் ஒரு சிறு கண்ணாடியைக் கையில் வைத்துக்கொண்டு தம் முகவசீகரத்தை ரசித்துக்கொண்டிருப்பார்கள்!

    அழகு, அறிவு – இப்படி ஏதாவது ஒன்று இருந்தால் போதுமா? குணம்?

    உணர்ச்சிமயமான தாய்

    அச்சிறுமிக்கு இரண்டு வயதுதான். ஆனாலும், முதல் குழந்தை ஆயிற்றே, பிறர் பாராட்டுவதுபோல் நடக்க வேண்டாமா என்று தாய் ஓயாது அவளைத் திருத்துவாள். வெளியில் அழைத்துப் போகுமுன்னர் `அதைச் செய்யாதே, இப்படிப் பேசாதே’ என்று போதனை நடக்கும். மகள் மிரண்டுபோய் வாய்பேசாது இருப்பாள். அப்படியும் தப்பு கண்டுபிடித்து, வீட்டிற்கு வந்ததும் திட்டுவாள் தாய்.

    ஐந்து வயதிற்குள் தாயின் குணம் குழந்தைக்குப் படிந்தது. தாய் பேசுவதைப்போலவே அவளிடமும் பிறரிடமும் மரியாதையின்றி பேச ஆரம்பித்தாள்.
    `எவ்வளவு கண்டிப்பாக வளர்த்தேன்! இப்படி நடந்துகொள்கிறாளே!” என்று பெரியவள் கலங்குகிறாள். அவளுடைய வசவு அதிகரிக்கிறது.

    பெரியவர்களைப்போல் குழந்தைகள் எப்போதுமே நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சரியல்ல. அவர்கள் செய்யும் சிலவற்றை `குழந்தைத்தனம்’ என்று விட்டுவிட வேண்டியதுதான். அளவுக்குமீறி உணர்ச்சிவசப்பட்டால் எதிர்விளைவுக்குத் தயாராக இருக்க வேண்டும்.

    எல்லாரையும் மட்டம் தட்டும் தாய்

    தன் மகன் புத்திசாலி என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் தாய் அவள். ஆனால் எங்கள் பள்ளிக்கூடத்தில் அவன் வாங்கிய மதிப்பெண்களோ அவள் நினைப்பைப் பொய்ப்பிக்க வைப்பதாக இருந்தது.

    `உங்கள் ஆசிரியைகள் எல்லாரும் முட்டாள்கள்! உன் அறிவை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை!’ என்று மகனிடமே பழித்தாள். மகன்மூலம் பள்ளிக்கு ஒரு கடிதம் அனுப்பினாள், `என் மகனுக்கு நீங்கள் அளிக்கும் மதிப்பெண்களைவிட அதிகம் வாங்கத் திறமை இருக்கிறதென்று எண்ணுகிறேன்!’ என்று!

    சிலர், “நம் பக்கத்து வீட்டுக்காரர்கள் காட்டுமிராண்டிகள். இப்படியா, உரக்க டி.வியும் ரேடியோவும் போடுவார்கள்!” என்பார்கள்.

    இதையெல்லாம் கேட்டு வளரும் மகன் மட்டும் எப்படிப் பிறரை மதித்து நடப்பான்?
    முதலில் வீட்டுக்கு வெளியே இருப்பவர்களைக் குறை கூறுவதில் ஆரம்பித்து, பிறகு பெற்றோரிடமும் மரியாதை இல்லாதுதான் நடப்பான். ஏனெனில், அதுதான் சிறுவயதிலேயே அவனிடம் படிந்த குணம்.

    முன்பு, கிழக்கு மலேசியாவில் (போர்னியோ) பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் சிரித்தபடி கூறினார்: “பெற்றோர் பிரம்பைக் கொண்டு கொடுத்து, `எங்கள் மகன் தவறு செய்தால் இதைக்கொண்டு அடியுங்கள்!’ என்பார்கள்!”

    அதைக் கேட்டுக்கொண்டு இருந்த நாங்கள், “இப்போது, மகனை அடித்தால், அப்பாவே நம்மை அடிக்க வருவார்!” என்று சிரித்தோம்.

    `பெரியவர்களிடம் மரியாதையாக இரு!’ என்று குழந்தைகளுக்குப் போதித்தால் மட்டும் போதாது. நாமும் அவர்களது உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து, பிறரிடமும் அப்படி நடந்துகொண்டால், இளையவர்களுக்கு இயல்பாகவே அக்குணம் வரும்.

    அன்பில்லாமையால் எதிர்ப்பு

    தாயற்ற பெண் என்று வீட்டிலுள்ள பெண்டிர் எல்லாரும் தன்னைத் திட்டுவதாக எப்போதும் என்னிடம் குறையாகக் கூறுவாள் என்னுடன் படித்துக்கொண்டிருந்த வித்யா. அவள் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவாள்.

    ஒரு முறை, என் தாய் சமையலறையிலிருந்து, “கடைக்குப் போய் கொஞ்சம் சாமான் வாங்கி வருகிறாயா?” என்று உரக்க என்னிடம் கேட்டபோது, “இப்போதே வேண்டுமா, இல்லை, கொஞ்ச நேரம் கழித்துப் போகட்டுமா?” என்று கேட்டேன்.

    “அவசரமில்லை,” என்று பதில் வந்தது.

    எங்கள் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த வித்யா, “என்ன, நீ! உடனே சரியென்று சொல்கிறாய்! நானாக இருந்தால், `மாட்டேன்!’ என்று சண்டை பிடித்திருப்பேன்,” என்றாள்.

    அவள் ஏன் அதிசயப்பட்டாள் என்று நான் யோசித்தபோது புரிந்தது: பிறர் சொல்வதை உடனுக்குடன் நிறைவேற்றியாக வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இருக்கவில்லை.
    அம்மா, `வாங்கி வா!’ என்று கட்டளை இடவில்லை. கோரிக்கை விடுத்தாள். அதனால், செய்யலாமா, வேண்டாமா என்ற முடிவு எனக்கே விடப்பட்டிருந்தது.

    வித்யாவை வளர்த்தவர்களோ, தாயற்ற பெண்ணைத் தவறாக வளர்த்துவிட்டோம் என்று பிறர் குறை கூறிவிடுவார்களோ என்று பயந்து, அன்பை மறைத்து, கடுமையாக நடந்துகொண்டார்கள்.

    அவர்கள் போக்கால் ஆத்திரமும் வருத்தமும் ஒருசேர, தன்னிடம் ஓயாது குற்றம் கண்டுபிடிப்பவர்கள் அனைவரையும் அயர்ச்சி அடையச்செய்வதுதான் தன் வெற்றி என்பதுபோல் நடந்துகொண்டாள்.

    வகுப்பில் ஆசிரியை கேள்வி கேட்கும்போது, அலட்சியமாக எங்கோ பார்த்துக்கொண்டிருப்பாள். `வெளியே போய் நில்!’ என்று ஆசிரியை வழக்கமாக இரையும்போது, எதையோ சாதித்துவிட்டதுபோல், அளவுகடந்த ஓசையுடன் வெளிநடப்பாள். எங்களுக்கு அது வேடிக்கையாக இருக்கும். சிரிப்பை அடக்கப் பாடுபடுவோம்.

    தோல்வியிலும் வெற்றி

    குழந்தைகளிடம் உண்மையான அக்கறை கொண்ட பெற்றோர், அவர்கள் தோல்வி அடையும்போதும் கலங்காது, பக்கபலம் அளிப்பவர்களாக இருப்பார்கள். உதாரணமாக, ஒரு சிறுவன் ஏதாவது போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறாவிட்டால், தாயும் சேர்ந்து அழுகிறார்கள் (தொலைகாட்சியில் பார்த்தது). அதைவிட்டு, `நீ சிறப்பாகத்தான் செய்தாய். ஆனால், மற்றவர்கள் உன்னைவிட வயதிலும் அனுபவத்திலும் பெரியவர்கள். அந்த வயது வந்தால், நீயும் நன்றாகச் செய்வாய்!’ என்றால், அவனுடைய உற்சாகம் குன்றாது. `போட்டி’ என்றால் வெற்றியும் இருக்கும், தோல்வியும் இருக்கும் என்று புரிந்துகொள்வான்.

    ஒரே நிலையான நடப்பு

    சிறுவர்கள் செய்த தவற்றை சில சமயம் கண்டுகொள்ளாமல் இருப்பதும், வேறு சமயங்களில் (பிறர் தப்பாக நினைத்துவிடப்போகிறார்களே என்று) அளவுக்குமீறி தண்டிப்பதும் அவர்களைக் குழப்பத்தில்தான் ஆழ்த்தும். பிறர் பார்க்க, முக்கியமாக, அவர்கள் நண்பர்கள் எதிரே கண்டிப்பதும் தண்டிப்பதும் வெறுப்பைத்தான் வளர்க்கும்.

    “நீங்கள் சொன்னால் வாய்மூடி கேட்டுக்கொள்கிறான்! இதையே நாங்கள் சொன்னால் எதிர்த்துப் பேசுவான்!” என்று பல பெற்றோரும் வளர்ப்பவர்களும் என்னிடம் வருத்தத்துடன் கூறியிருக்கிறார்கள்.

    மரியாதை கொடுத்தால்தான் திரும்ப வாங்கலாம். இந்த நியதி எல்லா வயதினருக்கும் பொருந்துமே! அவர்களுடைய நன்மைக்காகச் சொல்கிறாம், நம் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக இல்லை என்பதைப் புரிய வைத்தால், அதன்படி நடப்பார்கள். பிறர் பாராட்டும்போது தம்மை அப்படி வளர்த்தவர்களிடம் கொண்ட மரியாதை கூடும்.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (72)

    நிர்மலா ராகவன்

    எதிர்த்துப் பேசும் சிறுவர்கள்

    நலம்

    “இந்தப் பசங்களே மோசம்,” என்று எல்லா பதின்ம வயதுப் பையன்களையும் ஒட்டுமொத்தமாக வைதாள் அம்மாது. “என்னமோ, `சுதந்திரம், சுதந்திரம்’ என்று அடித்துக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் செலவுக்கு நாம்தானே பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது!”

    சிறுவர்கள் எல்லா வயதிலும் இப்படி – பெரியவர்களிடம் மரியாதை கொடுக்காது – பேசுவது இயல்பு. அதிலும் பதின்மூன்று வயதுக்குமேல், `நான் இன்னும் குழந்தை இல்லையே!’ என்று சற்று அதிகமாகவே திமிறுவர்.

    அவர்களது எதிர்ப்பு பலவிதமாக வெளிப்படும். சிலர், `ஆரம்பித்துவிட்டீர்களா!’ என்பதுபோல் கண்களைச் சுழற்றுவர், இல்லையேல், பெருமூச்சு வெளிப்படும். வேறு சிலர், `உங்கள் காலமே வேறு! உங்களுக்கு எங்களைப் புரிந்துகொள்ள முடியாது!’ என்று பழியைத் திருப்புவர்.

    கதை: ஆசிரியைகளுடன் மோதல்

    ஒருமுறை, `படிப்பதற்கு இன்னும் கூடுதலான நேரம் செலவழிக்கக் கூடாதா!’ என்று நான் என் மாணவிகளிடம் கெஞ்சலாகக் கூறியபோது, “உங்கள் காலத்தில் டி.வி கிடையாது. இப்போது அப்படியா? பொழுதைக் கழிக்க எங்களுக்கு நிறைய வழிகள் இருக்கிறதே” என்றாள்.

    நான் வாயடைத்துப்போனேன்.

    எது முக்கியம், வாழ்க்கையை நல்வழியில் கொண்டு செல்லும் என்று இவர்களுக்குப் புரிவதில்லை. அடிக்கடி வற்புறுத்தினால், வேண்டுமென்றே எதிர்வழியில் நடப்பார்கள்.

    `என் மகள் நான் என்ன சொன்னாலும் கேட்பதில்லை. எப்படியோ தொலையட்டும் என்று விட்டுவிட்டேன்!’

    இம்மாதிரி கூறும் தாய் மகளைப் புகழவே செய்யாது, ஓயாமல் குற்றம் கண்டுபிடிக்கிறாள். தான் என்ன சொன்னாலும் கீழ்ப்படிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். முதலில் சுதந்திரமாக உணரும் மகளோ, போகப்போக, அஞ்ச ஆரம்பித்துவிடுவாள்.

    நான் படித்த காலத்தில், விடுமுறை நாட்களில் பரீட்சைக்கு எந்தந்த பாடங்களை முதலில் படிக்க வேண்டும் என்று ஆசிரியைகள் சொல்லிக்கொடுத்தார்கள். காலையில் மனம் தெளிவாக இருக்கும்போது கணக்கில் ஆரம்பித்து விஞ்ஞானம் (இந்த இரண்டு பாடங்களையும் எழுதிப் பார்க்க வேண்டும்), பிறகு பூகோளம், சரித்திரம் என்று தொடர்ந்து, இறுதியில் மொழிகளில் முடிக்க வேண்டும். அவ்வப்போது இடைவெளி, சிறிது உணவுக்காக. படித்துக்கொண்டிருக்கும்போதே இசையைச் செவிமடுத்தால் நன்றாக மனதில் பதியும். நீண்ட காலம் மறக்காது. ஒரு நாளைக்கு இத்தனை பக்கங்கள் படிக்க வேண்டும் என்று ஓரிரு வாரங்களுக்கான அட்டவணையை முதலில் தயாரித்துக்கொள்வது மன இறுக்கத்தைத் தவிர்க்கும் வழி.

    ஆசிரியைகள் வற்புறுத்திக் கூற, `செய்துதான் பார்க்கலாமே!’ என்று நான் இம்முறையைக் கடைப்பிடித்தேன். பரீட்சைக்கு முதல்நாள் பக்கங்களை புரட்டிப் பார்த்ததுடன் சரி. இரவெல்லாம் கண்விழித்துப் படித்தது கிடையாது.

    பதினேழு வயது மாணவர்களிடம் இதை விளக்கிச்சொல்லி, விடுமுறைக்காலம் முடிந்து அவர்கள் திரும்பியதும், “நான் கூறியபடி படித்தீர்களா?” என்று ஆவலுடன் வினவினேன்.

    “டீச்சர் ரொம்ப கண்டிப்பு!” என்று பதில் வந்தது! இது மறைமுகமான எதிர்ப்பு.

    சிறுவர்கள் எதிர்க்கும்போது, நாம் மேலும் எகிறாமல், அமைதியாக இருத்தல் அவசியம்.

    ஒரு பையன், `நான் எப்படிப் போனால் உங்களுக்கென்ன, டீச்சர்? உங்களுக்குத்தான் சம்பளம் கிடைத்துவிடுமே!’ என்றுகூட என்னிடம் கூறியிருக்கிறான்.

    அவனைப்போல், விதண்டாவாதம் செய்வதுதான் வளர்ந்த பிள்ளைகளுக்கு அழகு என்று நினைத்திருப்பவர்களிடம் பேசுவது வீண். `உங்கள் நன்மைக்காகத்தான் சொல்கிறேன். கேட்டால் கேளுங்கள்! எனக்கொன்றும் நஷ்டமில்லை!’ என்று விடவேண்டியதுதான்.

    எதில் காதல்?

    பதின்ம வயதுப் பையன்களுக்கு தங்கள் தலைமுடியின்மேல் அபார பிரேமை, பெருமை. பதினேழு நிமிடம், இருபது நிமிடம் என்று ஏதோ கணக்கு வைத்துக்கொண்டு, ஒவ்வொரு முறையும் தலைசீவிக் கொள்வார்கள். எவ்வளவு அலங்கோலமாக ஆனாலும், அதை வெட்டிக்கொள்ள மனம் வராது. அவ்வளவு அருமை!

    “வாய் ஓயாமல் இருமறியே! சலூனுக்குப் போகக்கூடாது?” என்று தினமும் வீட்டில் நச்சரிப்பார்கள். பையனின் காது தாற்காலிகமாக செவிடாகிவிடும்..

    அதைவிட்டு, “என்னிக்கு தலைமயிரை வெட்டிக்கிறதா உத்தேசம்?” என்பதுபோல் முடிவை அவர்களிடமே விட்டால், ஏதாவது ஒரு தினத்தைக் குறிப்பிடுவார்கள். ஆனால், அன்று மறந்ததுபோலிருப்பார்கள்!

    “இன்னிக்கு என்னமோ பண்ணப்போறதா சொன்னியே!” என்று மறைமுகமாக நினைவுபடுத்தினால் போதும். தம் வாக்கைக் காப்பாற்றுவார்கள்.

    இந்த மனோதத்துவம் புரியாது, எங்கள் பள்ளியிலிருந்த கட்டொழுங்கு ஆசிரியர், கையில் கத்தரிக்கோலுடன், ஏதாவது வகுப்பிற்குள் நுழைவார். மாணவர்ளை தரதரவென்று வகுப்பிற்கு வெளியே இழுத்துச் சென்று, வேண்டுமென்றே தாறுமாறாக வெட்டுவார், `பள்ளி விதிமுறை தெரியாது? சட்டைக்காலரை இடிக்கிறது உன் முடி!’ என்ற வசவுடன்.

    அன்று பூராவும் அந்த மாணவன் ஆத்திரமாக அமர்ந்திருப்பான். எந்தப் பாடத்திலும் கவனம் போகாது.

    கதை: வீட்டில் குழப்பம்

    புத்திசாலியாக, நல்லொழுக்கத்துடன் இருந்தவன் ரசாலி. பதினான்கு வயதில் பெற்றோர்கள் `தரையில் கட்டிப் புரண்டு’ சண்டை போட (அவனே சொன்னது), அவன் நிம்மதி கெட்டது. படிப்பிலும், உடையிலும் அக்கறை போயிற்று. மரியாதையின்றி ஆசிரியர்களையும் எதிர்க்க ஆரம்பித்திருந்தான்.

    ஒரு நாள், நான் அவனை அழைத்து, “உன் தலைமயிரை வெட்டிக்கொள்ள வேண்டும்போல இருக்கிறதே! ரொம்ப நீளமாக இருக்கிறது. ஆசிரியர் பார்த்தால், கன்னாபின்னா என்று வெட்டிவிடுவாரே!” என்றேன் ரகசியக்குரலில்.

    “எப்போ வெட்டிக்கணும்?”

    “இன்னிக்கு?” சும்மா சொல்லிப்பார்த்தேன்.

    “நாளை சனிக்கிழமை. பள்ளி விடுமுறை. அப்போது வெட்டிக்கொள்ளட்டுமா?” என்று கேட்டுவிட்டு, நான் ஒப்பியதும், அதன்படி செய்தான். (`வெட்டிக்கொள்!’ என்று நான் மிரட்டியிருந்தால், கேட்டிருக்க மாட்டான்).

    எந்த விஷயத்திலும் அவர்களே முடிவு செய்வதுபோல் இருக்கச் செய்வது நாம் சொல்வதற்கேற்ப சிறுவர்களை நடக்க வைக்கும் உபாயம்.

    சொல்லி வைத்தாற்போல், திங்கள் காலை அந்த ஆசிரியர் மேலும் இரண்டு உதவியாளர்களுடன் வந்தார். சில மாணவர்களை இழுத்துப்போனார். ரசாலி பெருமையுடன் தலையை நிமிர்த்தியபடி உட்கார்ந்திருந்தான்.

    நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து நமட்டுச்சிரிப்புச் சிரித்தோம். “தப்பித்தாய்!” என்று ரகசியக்குரலில் கூறினேன், மலாய் மொழியில்.

    அவனும் புன்சிரிப்புடன், `தப்பித்தேன்!’ என்றான். பக்கத்திலிருந்த நண்பனிடம், “டீச்சர்தான் என்னைக் காப்பாற்றினார்கள்!” என்றது எனக்குக் கேட்டது.

    சில வருடங்களுக்குப்பின், நான் அப்பகுதியில் காரை ஓட்டிப்போகையில், ரசாலியைப் பார்த்தேன். ஹார்னை விடாமல் அடித்தேன்.

    சற்றுப் பொறுத்து, “அந்தப் பையனுக்கு ஒன்னைப் பாத்து என்னம்மா அவ்வளவு சந்தோஷம்? ரோடிலே எதுக்கு அப்படிக் குதிச்சான்?” என்று கேட்டாள் என் மகள்.

    வீட்டில் நிம்மதி இல்லாதவன்மேல் சிறிது அக்கறை காட்டினேன். அவ்வளவுதான். ஆனால், அவனைப் பொறுத்தவரை, அது பெரிய விஷயம். நான் அவன் மானத்தைக் காப்பாற்றி இருக்கிறேன்.

    வயதில் இளையவர்களுடன் பழகும்போது, அவர்கள் நிலையில் நம்மை வைத்துப் பார்த்தால், அவர்களைப் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் நம்மை எதிர்க்கும் சந்தர்ப்பங்களும் குறையும்.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (71)

    நிர்மலா ராகவன்

    தந்தையும் மகளும்

    நலம்

    `உங்கள் தந்தையைப்பற்றி சில வாக்கியங்களை அமையுங்கள்!’ என்று பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் கேட்டிருந்தார்கள், மலேசிய ஆங்கில தினசரி ஒன்றில்.

    எல்லாச் சிறுமிகளும் ஒரேமாதிரிதான் எழுதியிருந்தார்கள்: `என் அப்பா வெளியில் அழைத்துப்போவார். எனக்காக நிறையச் செலவழிப்பார்! நான் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுப்பார்!’

    அப்பா என்றால் பணம் கொடுக்கும் இயந்திரம் என்றுதான் குழந்தைகளின் மனதில் படிந்திருக்கிறது. இதைவிட வெளிப்படையாகத் தனது அன்பைக் காட்டிக்கொள்ள தந்தையால் முடியாதா?

    சில இல்லங்களில், “அப்பா ஆபீஸிலிருந்து வரட்டும்! ஒனக்கு இருக்கு!” என்று அம்மா குழந்தைகளை மிரட்டிவைப்பாள்.

    அப்பா என்றால் மரியாதை அளிக்கப் பழக்க வேண்டும். பயமுறுத்த அவர் என்ன பூதமா?

    `அன்புக்குத் தாய், அறிவுக்குத் தந்தை’ என்று சொல்வதுண்டு.

    அப்படியானால், தாய்க்கு அறிவு புகட்டத் தெரியாதா, இல்லை, தந்தைக்குத்தான் அன்பே கிடையாதா?

    பிள்ளைகளிடம் தங்கள் அன்பை விதவிதமாகக் காட்டுவார்கள் ஆண்கள். அன்பு என்று அவர்கள் நினைப்பதே சில சமயங்களில் அதீதமாகிவிடுகிறது.

    கதை

    மரீனா நான்கு அண்ணன்மார்களுக்குப்பின் பிறந்ததால் பெற்றோர் இருவருக்குமே அலாதி செல்லம். `நான் மிக உயர்த்தி, அதனால்தான் கொண்டாடுகிறார்கள்,’ என்ற எண்ணத்தில் திமிர் எழுந்தது. பதினைந்து வயதுப் பெண்ணை அப்பா கையைப் பிடித்து அழைத்துப் போவார், கும்பலே இல்லாத இடத்தில்கூட! பள்ளிக்கூடத்திலும் எல்லா பொறுப்புகளையும் தட்டிக்கழிப்பாள் என் மாணவியான அவள். அவளை ஒரு வேலையும் செய்ய விடாததால், சோம்பல் மிகுந்திருந்தது. அண்ணன்களை மரியாதை இல்லாது நடத்துவாள். ஆனால் யாருக்கும் அவளைக் கண்டிக்கத் தோன்றவில்லை. அப்பா செல்லமாயிற்றே! அதனால் பொறுத்துப்போனார்கள்.

    இந்தமாதிரி வளர்க்கப்படும் பெண்கள் கல்யாணமானாலோ, அல்லது உத்தியோகத்தில் அமர்ந்தாலோ, `நீதான் ராணி!’ என்பதுபோல் தம் வீட்டில் அனுபவித்ததை எதிர்பார்க்கிறார்கள். கிடைக்காதபோது, சண்டை போடுகிறார்கள். இல்லையேல், ஒரேயடியாக ஒடுங்கிவிடுகிறார்கள்.

    எல்லாப் பெண்களும் அழுமூஞ்சிகள்!

    இன்னொருவருக்கு ஒரே ஆண்குழந்தைதான். ஒன்றரை வயதான என் மகள் அழுதபோது, “இந்தப் பெண்களே இப்படித்தான்! எல்லாவற்றிற்கும் அழுவார்கள்!” என்று முகத்தைச் சுளுக்கினார். அவரது மகன் அந்த வயதில் அழுதிருக்க மாட்டானா, என்ன!

    வயதான தந்தை

    எங்கள் குடும்ப நண்பரான சிங் ஐம்பது வயதில் கல்யாணம் செய்துகொண்டார்.

    “மனைவியுடன் சண்டை போட ஆரம்பித்துவிட்டீர்களா?” என்று குசலம் விசாரித்தேன்.

    “உங்களுக்குத் தெரியாதா, ஆன்ட்டி!” என்றார், அலுப்புடன்.

    சுவாரசியத்துடன், “எதற்குச் சண்டை போடுவீர்கள்?” என்று மேலும் துளைத்தேன்.

    “குழந்தை ஓயாமல் நை நையென்று அழுகிறாள். என்னால் சகிக்க முடிவதில்லை. நான் இரைந்தால், அவளுடைய அழுகை இன்னும் அதிகமாகி விடுகிறது. அப்போதெல்லாம் மனைவியைப் பார்த்துக் கத்துவேன். அவள் குழந்தையை உள்ளே தூக்கிப் போய்விடுவாள்!” என்றார்.

    எனக்கு ஒரே சிரிப்பு. சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அழுகைதான் மொழி. அது அவருக்குப் புரியவில்லை. `குழந்தையை ஏன் அழ விடுகிறாய்?’ என்று மனைவியுடன் சண்டை போட முடியுமா!

    சுயநலமான அப்பா

    குடும்பப்பொறுப்பே இல்லாமல் ஒருவர் பிற பெண்களுடன் உறவு வைத்திருந்தார். அவர் பெற்ற பெண்களுக்கு அவரது வழிகாட்டலோ, அன்போ கிடையாது.

    இப்படிப்பட்ட பெண்கள் தம்மையும் அறியாது, அப்பாவைப்போன்றவரையே காதலித்து மணந்துகொள்கிறார்கள். நிச்சயிக்கப்பட்ட திருமணமானாலும், கணவர் நடத்தை எப்படி இருந்தாலும், `நம் அப்பா இல்லையா! எல்லா ஆண்களும் இப்படித்தான்!’ என்று ஏற்றுக்கொண்டுவிடுகிறார்கள்.

    `நீங்கள் என்னை மிஞ்ச முடியாது!’ என்று தந்தை தாம் பெற்ற குழந்தைகளுடனேயே போட்டி போடும்போது, அவர்கள் மனம் தளரலாம். இல்லையேல், தம் திறமைகளை ஒளித்து வாழலாம்.

    இயற்கை நியதி

    தாய்க்குத் தான் பெற்ற ஆண்குழந்தைகளைப் பிடிக்கும். தந்தைக்கு மகள்பால்தான் பேரன்பு.

    இதனால் பெற்றோரிடையே போட்டி வந்துவிட்டால், குழந்தைகளின்பாடுதான் திண்டாட்டம்.

    `அம்மா செல்லம் கொடுத்து உன்னைச் சீரழிக்கிறாள்!’ என்னும் தந்தை அதற்கு மாற்று மருந்துபோல் ஓயாத சிடுசிடுப்பைக் காட்டுகிறார். மகன் செய்வதெல்லாம் தவறு என்று பழிப்பு. சிறு தவற்றுக்கும் கடுமையான தண்டனை. மகளிடமோ, மிக அருமை. இந்த பாரபட்சத்தினால் சகோதர சகோதரிக்குள் கசப்பு எழும் என்பது ஒருபுறமிருக்க, தந்தையை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளும் மகனது தன்னம்பிக்கை வெகுவாகக் குறைந்துவிடுகிறது.

    ஆணோ, பெண்ணோ, `நீ தைரியசாலி! மகா புத்திசாலி!’ என்று சிறுவயதிலிருந்தே இரு ழந்தைகளிடமும் சொல்லிச் சொல்லி வளர்த்தால், பெரியவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை எழ, அவர்களுக்கு அக்குணங்கள் படியும்.

    ஒரு தந்தையின் அன்பும் ஊக்கமும் கிடைக்கப்பெற்ற பெண் ஆண்களைப் புரிந்துகொள்கிறாள். அவர்களைப்போன்றே ஒரு முடிவை எடுப்பதற்கு அறிவைப் பயன்படுத்துகிறாள். உணர்ச்சிகளை நம்புவதில்லை.

    ஆனால், தந்தையின் அந்த அன்புடன் கண்டிப்பும் இருக்கவேண்டுவது அவசியம்.

    அறியாப்பருவத்தினர் தவறு செய்வதைத் தண்டிப்பதால், நம் அன்பு குறைந்துவிட்டதென்ற அர்த்தமில்லை. அப்படிச் செய்யாவிட்டால்தான், நம்மையுமறியாது, அவர்களுக்குத் தீங்கிழைக்கிறோம்.

    `ஒரே மகள்! திருமணமாகி நீண்ட காலம் கழித்துப் பிறந்ததால் எனக்கு ரொம்ப அருமை. என்ன செய்தாலும் திட்டக்கூட மனம் வரவில்லையே!’ என்பவர்களுக்கு: தற்காப்புக்கலை போன்ற உடற்பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளில் மகளை ஈடுபடுத்துங்கள். அவைகளைக் கற்பிக்கும் ஆசிரியர் கண்டிப்பாக இருப்பார். அதனால், தானே கட்டொழுங்கு வரும்.

    அருமை மகள் திருத்தப்படும்போது மனம் பதைபதைத்துப்போகிறதா? எதிர்காலத்தில் அவள் பிரகாசிக்க வேறு வழியில்லை.

    முக்கியமாக, போட்டியின்றி, குழுவோடு ஒரு காரியத்தைச் செய்யும்போது சிறுபிள்ளைத்தனத்துடன் சுயநலமும் மறையும்.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (70)

    நிர்மலா ராகவன்

    குறையும் நிறைவும்

    நலம்-4-1-1

    ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது அவளும் அவளது துணைவனும் பல இன்பக்கனவுகளைக் காண்பது சகஜம். பிறக்கப்போகும் குழந்தை யாரைப்போல இருக்கும்? தாயைப்போல துணியில் பூவேலை செய்வதிலும், தோட்ட வேலையிலும் நாட்டமிருக்குமா, இல்லை, தந்தையைப்போல விளையாட்டு வீரனாக வளருமா என்று ஏதேதோ எண்ணி மகிழ்வார்கள்.

    பிறக்கும் குழந்தைக்கு உடலிலோ, மூளையிலோ ஏதோ குறைபாடு இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அப்போது, அக்கனவுகள் நனவாகவே முடியாது என்ற கசப்பான உண்மையுடன் வேறு பல உணர்ச்சிகளும் எழும்.

    நமக்கு எந்த நோய் வந்தாலும், `இதெல்லாம் எனக்கு வராது!’ என்று எதிர்மறையாகத்தானே சிந்தனை எழும்? அதேபோல்தான், முதலில் `டாக்டர் ஏதோ உளறிவிட்டார். என் குழந்தையாவது, குறையோடு பிறப்பதாவது!’ என்று ஆத்திரம் வரும். `அவரது சிகிச்சையில்தான் ஏதோ கோளாறு!’ என்று தமது குற்ற உணர்ச்சியை மறைக்க பழியை யார்மேலாவது போடத் தோன்றும் பெற்றோருக்கு.
    ஓராண்டுக்குப்பின், குழந்தை உண்மையிலேயே குறைபாட்டுடன்தான் பிறந்திருக்கிறது, இனி அதை மாற்ற ஒன்றுமே செய்ய முடியாது என்ற நிலையில் தள்ளப்பட்டவுடன், ஆழ்ந்த வருத்தம் எழும். `எவ்வளவு பெரிய பொறுப்பு, ஆயுள் முழுவதும்!’ என்ற அயர்ச்சியுடன், குடும்பச் செலவுவேறு அதிகரிக்கும்.

    இப்படிப்பட்ட பெற்றோர்கள் எல்லாருமே ஒரேமாதிரி நடப்பதில்லை.

    கதை

    என் சக ஆசிரியை ரஃபிடா எப்போதும் தன் ஒரே மகளைப்பற்றி எல்லாரிடமும் பெருமையாகப் பேசுவாள். `என் மகள் வயதுக்கு மீறிய அறிவுக்கூர்மை படைத்தவள்!’ என்று நிலைநாட்டுவது போலிருக்கும் அவளது பேச்சு.

    ஒரு முறை, பேரங்காடி ஒன்றில் ரஃபிடாவைப் பார்த்தேன். அவளும் என்னைப் பார்த்தாள். என்னை அறியாதவள்போல், வேகமாக வேறு திசையில் விரைந்தாள். அப்போதுதான் அவளுடைய மகளைக் கவனித்தேன்.

    எட்டு வயதிருக்கும் அப்பெண்ணுக்கு. MONGOLOID என்ற குறைபாடு அப்பட்டமாகத் தெரிந்தது அவளது பரந்த முகத்தில். தலை பெரிதாக, அந்த குறைபாட்டுக்கே உரிய, மங்கோலியர்களைப்போன்ற மேல்நோக்கிய கண்களுடன் காணப்பட்டாள். தலைமுடியில் அடர்த்தி கம்மி.

    `இந்தப் பெண்ணைப்பற்றியா அவ்வளவு கதைகள் சொன்னாள்!’ என்ற ஆச்சரியம் எழுந்தது எனக்குள்.

    (எங்கள் பள்ளியில் மன் யீ என்று அப்படி ஒரு மாணவி இருந்தாள். படிக்கவோ, எழுதவோ தெரியாது. தன் வயதொத்தவருடன் பழகிவிட்டுப்போகட்டுமே என்று அனுப்பியிருந்தார்கள். கரும்பலகையை அழிப்பது, அழிப்பானைச் சுத்தப்படுத்துவது – இவை மட்டும்தான் அவளால் செய்யமுடியும். எப்போதும் வகுப்புக்கு வெளியே chalk duster-ஐ தட்டிச் சுத்தப்படுத்திக் கொண்டிருப்பாள். பதினைந்து வயதாகியும் உடலைப்பற்றிய பிரக்ஞை அற்றவளாக, குட்டைப்பாவாடை மேலே ஏற, உள்ளாடை தெரிய உட்கார்ந்திருப்பாள். எனக்கு `குட்மார்னிங்’ சொல்வதற்காக, பள்ளியின் வெளிக்கதவினருகே தினமும் காத்திருப்பாள். குரல் குழறி இருக்கும்).

    மறுநாள், நான் வேறு சில தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தபோது, `ரஃபிடா என்னைத் தெரியாதவள்போல் வேகமாகப் போய்விட்டாள்!’ என்று நான் ஆச்சரியப்பட்டேன். இன்னும் சிலருக்கும் அதே அனுபவம் நிகழ்ந்தது என்று தெரியவந்தது.

    தன் மகள் குறையோடு பிறந்தவள் என்று தெரிந்தால் தன்னைப் பிறர் மதிக்கமாட்டார்கள் என்று நினைத்து அப்படி நடந்திருக்கிறாள்! அப்பெண்ணால் தனக்கு அவமானம் என்ற எண்ணம் கொண்டதால் அவளுடைய தன்னம்பிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. அதற்கெல்லாம் ஈடு செய்வதுபோல் பேசிவருகிறாள், பாவம். தான் ஒரு மகளைப் பெற்றால் எப்படியெல்லாம் இருப்பாள் என்று கற்பனை செய்ததுபோல் இருப்பதாகப் பிறரிடம் சொல்லி, தன்னையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள்! உண்மை பிறருக்குத் தெரியவரும்போது, காரணமின்றி அவர்களுடன் சண்டை போடுவது அவள் வழக்கமாக இருந்தது.

    ஆனால், மன் யீயிடம் அவள் மிகுந்த பரிவு காட்டியது இப்போது ஆச்சரியம் அளிக்கவில்லை. ஒரு நாள் ரஃபிடா பள்ளிக்கு வராவிட்டால், அந்தப் பெண் துடித்துப்போய்விடுவாள்.

    கதை

    யாராவது தங்கள் குழந்தைகளைப்பற்றிப் பேசினால், மிஸஸ் ஹோ அவர்களை வெறுப்புடன் பார்ப்பது எனக்கு அதிசயமாக இருந்தது. மற்றபடி, அவள் பரம சாது. மிக பொறுப்பானவள். (ஆனால், அதைப்பற்றி மற்ற ஆசிரியைகளைப்போல் பெருமை பேசிக்கொண்டிருக்க மாட்டாள்).

    எங்கள் இருவருக்குமே ஆங்கில நாவல்கள் படிக்கப் பிடிக்கும் என்பதால் சற்று நெருங்கிப்போனோம். ஒரு முறை, தானே கூறினாள், “என் மகனுக்கு ஆடிசம்,” என்று.
    “அப்படியென்றால் என்ன? படிக்க முடியாதா?” என்று கேட்டேன்.

    குற்றத்துக்கான தண்டனையா?

    நமக்கு ஏதாவது கெடுதல் நடந்தால், உடனே எப்போது என்ன தவறிழைத்ததற்கு இந்த தண்டனை என்று யோசிக்க ஆரம்பிக்கிறோம்.

    திருமணம் ஆகுமுன்னரே உடலுறவு கொண்ட தம்பதிகள் அவர்கள். அடுத்த ஏழாவது மாதத்திலேயே குழந்தை பிறந்தது, ஏதோ குறையுடன். `நாங்கள் பாவம் செய்துவிட்டோம்!’ என்று கதறினார்கள் இருவரும்.

    குடும்பத்தில் விரிசல்

    சில தம்பதியர், `உன் குடும்பத்தில் யாருக்கோ இந்த நிலை இருந்திருக்கிறது. ஏமாற்றிக் கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள்!’ என்று ஒருவரை ஒருவர் சாடிக்கொள்வார்கள்.

    ஊனமாக இருக்கும் குழந்தையைப் பார்த்துக்கொள்வது அனேகமாக பெற்றவளின் பொறுப்பாகிவிடுகிறது. அது தவிர்க்க முடியாதது என்று புரிந்தாலும், தந்தைக்கு மனைவி தனக்காக முன்போல் அதிக நேரத்தைச்செலவிடுவதில்லை என்ற குறை ஏற்பட்டுவிடும்.

    குறையுள்ளவர்களை எப்படி நடத்துவது?

    `உன்னால் எதுவும் செய்ய முடியாது!’ என்று தனது மனக்கலக்கத்தை தான் பெற்ற பிள்ளையிடமே திருப்புவது தகாது.
    எந்தக் குழந்தையாலும் ஏதாவது செய்ய முடியும். தகுதி பாராட்டப்பட்டால், அவனுக்குத் தன்மேல் இரக்கம் பிறப்பதைத் தவிர்க்கலாம். தன்மேல் அன்பு செலுத்துபவர்களும் இருக்கிறார்கள், தானும் ஏற்கப்படுகிறோம் என்பது புரிந்து, கூடியவரை பிறருக்குப் பாரமாக இருக்கமாட்டான்.

    சமீபத்தில் ஆடிசம் வந்த ஒரு பதின்மூன்று வயதுச் சிறுவனைப்பற்றி அறிந்தேன். வயலின் வாசிப்பதில் நிபுணன். தன்னை மறந்து, பிறரையும் மீறி வாசித்துக்கொண்டே போவான். குழுவில் வாசிக்க நேரிடும்போது, அவனுடைய இந்தக் குணம் பிறருக்குத் தொந்தரவாகிவிடும். அதனால், அவன் எப்போது தன் தனி உலகத்தில் சஞ்சரிக்கப்போகிறான் என்றுணர்ந்து, அப்போது அவனுடைய தோளுக்குக்கீழ் லேசாகத் தட்டினால், உடனே நிகழ்காலத்துக்கு வந்துவிடுவான். இப்போது பல ஆசிய நாடுகளிலுள்ள வசதிகுறைந்த மாணவ மாணவிகள் கோலாலம்பூரில் ஒன்றாக இணைந்து, பல்வகையான பாடலும் ஆடலும் படைக்கப்போகும் நிகழ்ச்சியில் அவனும் இடம்பெற்றிருக்கிறான்.

    பீட்டர் என்ற இன்னொரு ஆடிச சிறுவனை கிளப்பில் நீச்சலுக்குப் போனபோது பார்த்தேன். அடிக்கடி அவன் தாய் அவனது தலையைத் தடவுவாள். தனியாக இருந்தால், அர்த்தமில்லாமல் கத்திக்கொண்டிருப்பான். வாய் நிறைய தண்ணீரை வைத்துக்கொண்டு, யார்மேலாவது உமிழ்வான். அப்படித்தான் எங்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது.

    அவனுடைய நிலை புரிந்து, யாரும் கோபிக்கவில்லை. பிறர் பிடித்துக்கொள்ளாமல் நடக்க முடியாது இருந்தவனது உடலுக்குப் பலம் வருவதற்காக தாய் அவனை நீச்சல் குளத்திற்கும் கடலுக்கும் விடாது அழைத்துப்போவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகச் சொன்னாள். அங்கே பலரும் அவனுக்கு குளிக்கவும், நடக்கவும் உதவி செய்தார்கள்.

    பல ஆண்டுகளுக்குப்பின் பீட்டரை ஒரு பேரங்காடியில் சந்தித்தேன். தனியாக நடந்துவந்தான்.

    மகிழ்வுடன், “ஹலோ பீட்டர்!” என்று நான் முகமன் கூற, ஒரு வினாடி தாமதம்கூட இல்லாது, “ஹலோ ஆன்ட்டி நிர்மலா,” என்று இயந்திரம்போன்று உணர்ச்சியற்ற குரலில், என் முகத்தைப் பாராது, சொல்லியபடி நடந்துபோனான். அவனுடைய திறமை நீச்சலில்.

    இவனுடைய தந்தை, `இந்த மகன் வித்தியாசமானவன்!’ என்று பெருமையாகப் பிறருக்கு அறிமுகப்படுத்துவார். தன்னுடன் எல்லா இடங்களுக்கும் அழைத்துப்போவார்.

    ஊனமுள்ளவரின் சகோதர சகோதரிகளும் பாதிப்படைகிறார்கள். `பெற்றோர் தன்னைச் சரியாக கவனிப்பதில்லை,’ என்று சிலர் எண்ணுவார்கள். பெற்றோருடன் சேர்ந்து, அவர்களும் குறையுள்ள சகோதரரைப் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் வேறு. வயதுக்குமீறிய பொறுப்புகளால் மன இறுக்கம்.

    ஒரு பெண், “என் பெற்றோர், பாவம், ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் முகத்தில் சிரிப்பே இல்லை. நான் மிக மிக நன்றாகப்படித்து, அவர்களுக்கு என்னால் ஒரு தொந்தரவும் இல்லாதபடி நடக்க முயற்சிக்கிறேன். ஆனால், அது எனக்கே பாரமாக இருக்கிறது!” என்று தோழிகளிடம் அரற்றுவதைக் கேட்டிருக்கிறேன்.
    சிலருக்கு இப்படி ஒரு சகோதரர் இருப்பது தம் சிநேகிதர்களுக்குத் தெரிந்தால் அவமானம் என்ற எண்ணம் எழும். `இப்படி நினைக்கிறோமே!’ என்று குற்ற உணர்ச்சியும் கூடவே உண்டாகும்.

    “எங்கள் மூத்த மகன் இவனுக்கு ஈடு செய்வதுபோல், எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறான்,” என்று பீட்டரின் தாய் என்னிடம் தெரிவித்தாள். பெற்றோரின் மனப்பளுவைக் குறைக்கவே கஷ்டப்பட்டு அப்படி நடக்கிறான் என்று நான் எடுத்துக்கூற, அவள் அதிர்ந்தாள். “இது அவன் தப்பில்லையே!” என்றாள் சிறு குரலில்.
    குறைபாட்டுடன் இருப்பவர்களை வேண்டாத ஆர்வத்துடன் வெறித்துப் பார்ப்பதும் ஒதுக்கிவைப்பதும் கேவலம்.

    அங்கக் குறைவுடன் பிறப்பது மரபணுக்களாலோ, சுற்றுச்சூழலாலோ, அல்லது புரியாத எந்தக் காரணத்தாலும் இருக்கலாம். இதில் அவர் செய்த தவறு என்ன?
    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (69)

    நிர்மலா ராகவன்

    பொறுத்துப்போகவேண்டுமா!

    நலம்-4-1

    சீனாவில் ஒரு நாளைக்கு இருநூறு பேர், `எங்கள் தாம்பத்தியம் தொடர்ந்து நடக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்களேன்!’ என்று ஷி என்கிற கவுன்சிலரிடம் வந்தவண்ணம் இருக்கிறார்களாம். இவர்களில் எழுபது சதவிகிதம் படித்து, உத்தியோகம் பார்க்கும் பெண்கள். ஐந்து வருடங்களுக்குள் திருமணம் புரிந்தவர்கள். கணவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருக்கிறான் என்பதுடன், ஒருவரை ஒருவர் எப்படிப் பொறுத்துப்போவது என்பதில்தான் குழப்பம். புக்கக்கத்தினருடன் ஒத்துப்போக முடிவதில்லை என்பதும் ஒரு காரணமாம். (ஆதாரம்: THE STAR, 21-9-16).

    இப்போது தமிழ்ப்பெண்களுக்கு வருவோம்.

    சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குமுன் தாம் இலக்கியத்தில் படித்ததையும், வீட்டில் முதிய பெண்டிர் சொல்லி வந்ததையும் கடைப்பிடித்தவர்கள் நாம். அதுதான், `பெய்யெனப் பெய்யும் மழை,’ வீட்டில் நடப்பது நான்கு சுவர்களுக்குள் இருக்க வேண்டும், பத்தினி ஒருத்தி கல்லால் ஆன நெல்லிக்காயை வேகவைத்தது, — இப்படி எவ்வளவோ மறைமுகமான அறிவுரைகளும் கதைகளும் இருக்கின்றனவே!

    சுருங்கச் சொன்னால், கல்லான கணவன் கடவுளைப்போல் இல்லாவிட்டாலும், பொறுமையின் பூஷணமாகத் திகழ்ந்தார்கள். நிம்மதியும், மகிழ்ச்சியும் இருந்ததோ, என்னவோ, `நான் ஒரு நல்ல மனைவி!’ என்று பெருமிதம் கொண்டார்கள்.

    ஒரு முதிய மாது, `நான் பாட்டுக் கச்சேரிக்குப் போயிட்டு, லேட்டா வந்தேனா! `மு..’ என்று அவர் திட்டினாருடி!’ என்று பிற பெண்களிடம் பெருமையுடன் சொல்லிக்கொண்டதைக் கேட்டிருக்கிறேன். (`கணவரை இழந்தவள்’ என்ற பொருள்பட கணவரே திட்டிவிட்டால் சரியாகப் போயிற்றா?)

    `அது ஏன், பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில், முதலில் கணவனின் கை ஓங்கியிருக்கிறது, ஆனால் வயதானபின், சுதந்திரம் அற்றவன்போல் அவன் எல்லாவற்றிற்கும் மனைவியை நாடுகிறான்?’ நாற்பது வயதான ஒரு சீன மாது என்னிடம் கேட்ட கேள்வி இது. ‘என் பெற்றோரும் அப்படித்தான். ஆனால், இந்தத் தலைமுறையில் நாங்கள் எல்லோரும் காதல் கல்யாணம்தான்! நானும் என் கணவரும் மிகுந்த நட்புடனும், மரியாதையுடனும் ஒருவரை ஒருவரை ஒருவர் நடத்துவோம்,’ என்று தெரிவித்தாள்.

    வயதான காலத்தில் கணவர் தன்னை நாடுவார் என்று பிறரைப் பார்த்த நம்பிக்கையோடுதான் பல பெண்கள் பொறுமைசாலிகளாக இருந்தனரோ?

    ஆனால் எல்லாப் பெண்களுமா இப்படி இருக்கிறார்கள்!

    கணவன் செய்வது எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடித்து, ஏளனம் செய்து, நான்கு பேர் முன்னிலையில் கண்டபடி பேசும் பெண்களும் நம்மிடையே இல்லாமலில்லை.
    ஏன் இப்படி நடக்கிறார்கள் என்று பார்த்தால், சில காரணங்கள் தட்டுப்படுகின்றன. அவர்கள் பெருமையாகப் பேசிக்கொள்ளும்படி கணவன் எதுவும் சாதித்துவிடவில்லை; ஏதாவது கெட்ட பழக்கத்தில் ஈடுபட்டு, சேமிப்பைத் தொலைத்துவிடுகிறான்; அல்லது என்ன காரணத்தாலோ ஆண்வர்க்கத்தின்மீதே அவர்கள் கொண்ட வெறுப்பு, அவநம்பிக்கை, இன்னும் பல.

    சுகன்யாவின் தாய் இப்படித்தான்.

    கதை

    சுகன்யாவின் தந்தையோ, குடும்பத்தில் எதற்கு வீண் குழப்பமென்று மனைவி எவர் முன்னாலும், என்ன ஏசிப் பேசினாலும் வாயைத் திறக்காது இருந்துவிட்டார்.

    அவரைக் கண்டு நொந்துபோய், `எனக்குக் கல்யாணம் ஆனால், நான் அம்மாவைப்போல் இல்லாது, அருமையான மனைவியாக இருப்பேன்,’ என்று தீர்மானம் செய்து கொண்டதுபோல் பரமசாதுவாக வளர்ந்தாள் சுகன்யா. வாய்த்தவன் எவ்வளவு கொடுமை செய்தாலும், தந்தையைப்போல் பொறுத்துப்போனாள்.

    இருபது, இருபத்தைந்து வருடங்கள் இப்படி துன்பத்தை அனுபவித்துவிட்டு, பிறகு சற்றுத் தெளிந்து, `அவர் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். நான் என் வாழ்க்கையை என் விருப்பப்படி அமைத்துக்கொள்கிறேன்!’ என்பதுபோல், சுதந்திர உணர்ச்சியோடு வாழக் கற்றாள்.

    காலம் மாறிவிட்டது. படித்து, பொருளாதார சுதந்திரம் கொண்ட பெண்கள், `பெண் என்றால் விட்டுக்கொடுத்துக்கொண்டேதான் இருக்க வேண்டுமா?’என்று வாதம் செய்கிறார்கள்.

    பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மூன்று பேரை நான் இந்த விவகாரத்திற்கென பேட்டி கண்டேன். எல்லாருமே முப்பது வயதைத் தாண்டியவர்கள்.

    `தன்னையே கிறக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் பெண்ணையே ஆண்கள் விரும்புகிறார்கள்!’ என்றாள் ஒருத்தி, கசப்புடன்.

    `நான் என்னைவிட குறைந்த படிப்பும், சம்பளமும் உள்ள ஒருவனையே மணப்பேன். அப்போதுதான் என் கை ஓங்கியிருக்கும்!’ என்றார்கள், ஒருமித்து.

    `ஒருக்கால், தாழ்மை உணர்ச்சியால் பாதிக்கப்பட்டு, அவன் உங்களை முதலில் மட்டமாக நடத்த ஆரம்பித்துவிட்டால்?’ என்று எதிர் கேள்வி கேட்டேன்.

    ‘முதலில் பழகிப்பார்த்துவிட்டுத்தானே மணப்போம்!’ என்று பதில் வந்தது.

    இவர்களில் ஒருத்தி குழந்தையே வேண்டாம் என்றிருக்கிறாள். இன்னொரு பெண்ணோ, குழந்தைகளைச் சரிவர கவனிக்காது, தன் முன்னேற்றம், தன் சம்பாத்தியம் என்று சுயநலத்துடன் வாழ்கிறாள். மூன்றாமவளின் திருமணம் ஒரு குழந்தைக்குப்பின் விவாகரத்தில் முடிந்தது.

    வேறொரு பெண் கல்யாணமான நாற்பத்தைந்தாவது நிமிடத்தில்(!), `நான் இவனுடன் வாழ முடியாது!’ என்று விவாகரத்து கோரினாளாம். காரணம்: திருமணம் முடிந்து எந்தக் காரில் வீடு செல்வது என்பதில் இருவரது கருத்தும் வேறுபட்டதாம்!

    உலகில் எட்டு சதவிகிதத்தினர், `அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது? எங்கு தங்குவது?’ என்ற கலக்கம் இல்லாது வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை எளிதுதான். ஏனோ பலரும் தாமே அதைக் கடினமாக்கிக் கொள்கிறார்கள்.

    எதுதான் நல்ல தாம்பத்தியம்?

    மகிழ்ச்சியாகப் பல வருடங்கள் சேர்ந்திருக்கும் தம்பதிகளைப் பார்த்தால் ஒன்று புரிகிறது.

    குடும்பங்களில் யாரும் யாரையும் பொறுத்துப் போகவேண்டியது போன்ற நிலைமை இருக்கக்கூடாது.

    ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்தாமல், தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு, நல்ல ஆலோசனையாக இருந்தால், `உன்னை யார் கேட்டது?’ என்று அலட்சியப்படுத்தாது ஏற்று, `பெண்ணின் வேலை’, `ஆணின் வேலை’ என்ற பாகுபாடு இன்றி எல்லாவற்றிலும் பங்கு போட்டுக்கொள்ளுல் நட்பை வளர்க்கும்.

    ஒருவர் ஆத்திரப்படும்போது, மற்றவரும் சேர்ந்து கத்தாமல் விலகிப்போவது, கணினியைப்போல் என்றோ மனதில் பதிந்த வேண்டாத சம்பவங்களை நினைவுக்குக் கொண்டு வராமல் இருப்பது போன்ற பல தன்மைகளும் தம்பதியரின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும்.

    அவர்களுக்குள் சண்டையே வராது என்பதில்லை. ஆனால், அதிலிருந்து மீண்டுவரத் தெரிந்தவர்கள் இவர்கள்.

    இருவரில் ஒருவராவது, `நான் இப்படிச் செய்தால், அடுத்தவரின் உணர்ச்சிகள் பாதிப்படையுமோ?’ என்று யோசித்து நடந்தால், தானே மற்றவரும் அதேபோல் நடக்கத் தலைப்படுவார்.

    பிறரது உணர்ச்சிகளை மதிக்கத் தெரிந்தவரால்தான் சுயநலமின்றி தானும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்விக்க முடியும்.

    தொடருவோம்

    Share