நிர்மலா ராகவன்

பாராட்டு – பொறுமை

நலம்-2

வீட்டைச் சுத்தப்படுத்தினாலோ, தோட்டவேலை செய்தாலோ, திறம்பட சமைத்தாலோ, ஏன், எந்த காரியத்தையும் புகழ்ச்சியை எதிர்பார்த்தே செய்வார்கள் சிலர்.

`பிறர் என்னைப் பாராட்டவேண்டும்!’ என்று மட்டுமே ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பித்தால், அதில் முழு ஈடுபாடு இருக்குமோ, என்னவோ! ஆனால் எதிர்பார்த்த அங்கீகாரமோ, வெற்றியோ கிடைக்காதபோது, ஏமாற்றம்தான் மிஞ்சும்.

கதை

மாலதியின் தாய் சிறு வயதிலிருந்தே அவளைக் காரணமின்றி திட்டுவாள். தந்தையின் அளவுகடந்த அன்புக்குப் பாத்திரமாக இருந்ததுதான் அவளுடைய குற்றமாகப் போயிற்று.

`ஏன் அம்மாவுக்கு நம்மைப் பிடிக்காமல் போய்விட்டது?’ என்று வருந்திய குழந்தை மனம், `நான் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்றால், அம்மாவின் முகத்தில் சிரிப்பு வரும்,’ என்று புரிந்துகொண்டது.

இத்தகைய நடவடிக்கை அநாவசியமான மன இறுக்கத்தில் கொண்டுவிடும். நமக்குப் பிடித்ததைச் செய்யும்போதுதான் மனநிறைவு கிட்டுகிறது. அதையும் நம்மால் இயன்றவரை முயற்சி செய்து பார்க்கவேண்டும். நாம் செய்ய விரும்புவது நம் தகுதிக்கு ஏற்புடையதாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டுவதும் முக்கியம். இல்லாவிட்டால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.

கதை

“அம்மா என்னை வீணை கத்துக்கச் சொல்றாங்க, டீச்சர். எனக்குப் பிடிக்கலே,” என்று என்னிடம் அழமாட்டாக்குறையாகத் தெரிவித்தாள் ஓர் இளம்பெண். தந்தையை இழந்தவள். அவளைச் சிறுவயதிலிருந்தே நான் அறிவேன்.

“எங்கே, பாடு!” என்று ஒரு ஸ்வரத்தை இழுத்தேன்.

அவள் உடனே பாடிக் காட்டினாள். இரண்டு முறையும் அபஸ்வரம்தான். அப்போது புரிந்தது அவளுக்கு ஏன் இசை கற்பதில் ஆர்வம் இல்லையென்று. அவள் பாடியதற்கும் நான் பாடியதற்கும் சம்பந்தமே இருக்கவில்லை.

இந்தப் பெண்ணுக்கோ வேறு துறைகளில் அபாரத் திறமை. எதற்காக வராததை எண்ணி முட்டிக்கொள்ளவேண்டும்?

“ஒங்கம்மாவிடம் கண்டிப்பா சொல்லிடு. நான் என்னால முடிஞ்சதைத்தான் செய்வேன்னு!” என்று சொல்லிக்கொடுத்தேன்.

அவள் முகம் மலர்ந்தது. தாயின் பேச்சை மீறலாம், மீறினால், அப்படியொன்றும் தான் தகாத காரியம் செய்பவளாக ஆகிவிடமாட்டோம் என்று புரிந்த மலர்ச்சி அது.

`இப்படிச் செய்யேன்!’ என்று பிறர் வற்புறுத்திச் சொல்லும்போது, `முயற்சி செய்கிறேன்!’ என்றால், அனேகமாக அது நல்லவிதமாக நடைபெறாது.

விடாமுயற்சி

பட்டதாரியான என் தோழி அய்னுன் முதல் வகுப்புக்கான பரீட்சைக் கேள்விகளைப் பார்த்துவிட்டு, “எவ்வளவு எளிதாக இருக்கிறது!” என்று அதிசயப்பட, நான் சிரித்தபடி, “அந்த வயதில் உனக்கும் இதெல்லாம் கடினமாகத்தான் இருந்திருக்கும்!” என்றேன்.

`எதுக்கு ஸ்கூலுக்குப் போகணும்?’ என்று அடம்பிடித்த குழந்தைகளில் நானும் ஒருத்தி. பழகிய சூழ்நிலைதான் பாதுகாப்பு என்று நினைத்த வயது அது. அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு, `படிச்சாதான் புத்திசாலியா ஆகலாம். ஒன்னை எல்லாருக்கும் பிடிக்கும்,’ என்று, அவர்களுக்குப் புரிவதுபோல் எதையாவது சொல்லி சமாதானப்படுத்த வேண்டியதுதான்.

எங்கள் வீட்டுக் குழந்தைக்கு நான் ஒரு கதை சொல்வேன். ஒருவன் மேசை, நாற்காலிகள் போட்டிருந்த ஒரு கடைக்குப் போய் `காப்பி!’ என்று கேட்க, `ஏய்! வெளியில் போர்டைப் பாக்கலியா? இது ஹோட்டல் இல்லே,’ என்று திட்டி, அடித்தார்கள். அதுவோ, மரச்சாமான்கள் விற்கும் கடை. “பாவம்! அவனுக்குப் படிக்கத் தெரியாதால் அடி வாங்கினான்,” என்று முடிப்பேன்.

எத்தனையோ கெஞ்சியும், கொஞ்சியும், மிரட்டியும் படியாத பிள்ளை அக்கதையால் மனம் மாறினான். படிக்கத் தெரியாவிட்டால் அடியும் திட்டும் வாங்க வேண்டுமோ என்று அஞ்சி, அதற்குப்பின் ஒழுங்காக பாலர் பள்ளிக்குப் போனான்.

`முட்டாள்தனமான கதை!’ என்று பெரியவர்கள் சிரித்தாலும், அவனுக்குப் புரிந்தது.

பலர் படிப்பையோ, வேறு எந்த காரியத்தையோ அரைகுறையாக விட்டுவிடுகிறார்கள்.

நாம் கடக்க வேண்டிய பாதையைக் கண்டு முதலில் மலைப்பாக இருந்தாலும், அஞ்சக்கூடாது. முயற்சி திருவினையாக்கும்.

வெற்றி பெறுபவர்கள் விடாமுயற்சி உள்ளவர்கள். அதுதான் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம்.

ஒரு காரியத்தை முனைந்து செய்வது `பிடிவாதம்’ என்று பிறர் பழிக்கலாம். ஆனால், சிறுகச் சிறுக நீண்ட காலம் ஒரே காரியத்தைச் செய்தால்தான் வெற்றி கிட்டும் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. நீண்ட தூரத்தைக் கடக்க ஒவ்வொரு அடியாக வைத்தால்தானே முடியும்!

இலக்கை நோக்கி நட

எந்தக் காரியமும் ஆரம்பிக்கும்போது மலைப்பாக இருக்கும். `இதை நம்மால் செய்ய முடியுமா?’ `பிறர் என்ன சொல்வார்கள்?’ என்றெல்லாம் யோசனை போனால், தயக்கம்தான் மிஞ்சும்.

புதிய விளையாட்டுகளில் ஈடுபடுகிறவர்களது உடலின் பல பாகங்களிலும் வலி உண்டாகாமல் இருக்காது. அதைப் பொருட்படுத்தாது, உரிய மருந்துகளின் உதவியோடு தொடர்ந்து விளையாடினால், தானே ஆர்வம் பெருகும்.

நாற்பது வயதுக்குமேல் நாங்கள் – பத்து பெண்கள் – நீச்சல் கற்க ஆரம்பித்தோம். என்னைத் தவிர பிறர் எல்லாரும் சீனர்கள். அவர்கள் எல்லாரும் அரைகுறையாக விட்டுப்போய்விட்டார்கள்.

காரணங்கள்: உடல் கறுக்கிறது. பசி மிகுந்து, நிறையச் சாப்பிடுவதால் குண்டாகிவிட்டேன். முடி உதிர்கிறது.

நானோ, எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். `பசித்தால் என்ன!’ என்று அலட்சியப்படுத்தினேன். முடி அதிகம் கொட்டாமல் இருக்க இரு கை நகங்களையும் ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து, மேலும் கீழுமாகத் தேய்க்க வேண்டும். (Reflexology – buffing the nails). நல்ல பலனளித்தது.

உடலெல்லாம் வலிக்கிறதே!’ என்று நான் கூற, `வெந்நீரையும் பச்சைத்தண்ணீரையும் மாற்றி மாற்றி விட்டுக் குளியுங்கள்!’ என்று ஆலோசனை வழங்கப்பட்டது.

ஒவ்வொரு நாளும் மாறுதல் தெரிந்தது. ஊளைச்சதையும், கையின் வெளியில் தெரிந்த நரம்புகளும் மறைவதைக் கண்டு மகிழ்ச்சியாக இருந்தது.

தற்காப்புக்கலையை பதினைந்து வருடங்களுக்குமேல் பயின்ற ஒரு இளைஞனைக் கேட்டேன்: “இன்று பயிற்சிக்குப் போனாயே! வலிக்கிறதா?”

பதில் யோசியாது வந்தது: “வலிக்காவிட்டால், அது முறையான பயிற்சியே இல்லை!”

தனக்கென ஓர் இலக்கு வகுத்துக்கொண்டு, அதை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்தான் – எந்தவிதத் தடங்கலையும் லட்சியம் செய்யாது.

வெற்றி தொடர

சிலர் `ஆரம்பசூரத்தினால்’ வெற்றி பெற்றிருப்பார்கள். உடனே, தலையைச் சற்றே நிமிர்த்தி, நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு நடப்பதுதான் தம் `மேலான’ தன்மையை பிறருக்குப் புரியவைக்கும் என்று எண்ணுவதுபோல் நடப்பார்கள்.

`யாரிவர்?’ என்று பார்ப்பவர்கள் புருவத்தை உயர்த்தினாலும், இதனால் மரியாதை கிடைத்துவிடும் எனபதில்லை. `ரொம்பத்தான் காட்டிக்கறான் (ள்!)’ என்று அவன்(ள்) காதுபடவே சிலர் முணுமுணுக்கும்போது அதிர்ச்சி அடைந்தாலும், அவர்கள் தம்மை மாற்றிக்கொள்வதில்லை.

இப்படிப்பட்டவர்கள் சிறு வெற்றி அடைந்தாலே திருப்தி அடைந்துவிடுவர். அதனால், அதிக முன்னேற்றத்துக்கு வழியில்லை. பெருங்காயம் வைத்த பாண்டமாக, என்றோ செய்து முடித்தவைகளையேதான் பறைசாற்றிக்கொண்டு இருக்கவேண்டும்.

அதிலும், இளம் வயதிலேயே அதிகமான முன்னேற்றத்தை அடைபவர்களுக்கு தம் நற்பெயரைத் தக்கவைத்துக்கொள்ளும் முதிர்ச்சி இருப்பதில்லை.

கதை

அவர் இருபத்தைந்து பிராயத்துக்குள் கலைத்துறையில் பெரிய வெற்றிகளைப் பெற்றிருந்தவர். எந்தப் பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவரை அழைத்தாலும், தன்னை உரிய விதத்தில் கவனிக்கவில்லை, தன் மதிப்பை உணராது கால தாமதம் செய்து தன் பொன்னான நேரத்தை வீணாக்குகிறார்கள் என்று ஏற்பாட்டாளர்களுடன் வாதிடுவார்.

முதலில் அவர்கள் அஞ்சினாலும், போகப் போக, தம்மீது தவறில்லை, இவர் பலரிடமும் இப்படித்தான் நடந்துகொள்கிறார் என்று புரிந்துகொண்டார்கள். அதன்பின், அவரை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கத் தயங்கினார்கள்.

பொறுமை இல்லாததால், திறமை இருந்தும் அவர் சோபிக்கவில்லை. வாய்ப்புகள் குன்ற பொருளாதாரம் ஆட்டம் கண்டது. பொறுமை மேலும் குன்றியது.

வறுமையிலோ, நோயிலோ வாடும்போதுதான் பொறுமை எல்லை மீறும் என்பதில்லை. எந்த நிலைமை வந்தாலும் பொறுமை இழக்காது, காலம் மாறும், நம் அதிர்ஷ்டத்தை மாற்றிக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தாலே போதும்.

கதை

`எனக்குப் பொறுமையே கிடையாது!’

இப்படி அடிக்கடி சொல்வாள் அவள். தான் பெற்ற குழந்தைகளை சிறு தவற்றுக்குக்கூட அடித்து நொறுக்குவாள். `அப்படிச் செய்யாதே!’ என்று மூத்தவர்கள் அறிவுரை வழங்கும்போது, “எனக்குப் பொறுமையே கிடையாது! அதுக்கு என்ன பண்றது!” என்பாள்.

அவளைப் பொறுத்தவரை, செல்வச் செழிப்புக்குக் குறைவு கிடையாது. இருந்தாலும், கிடைக்காத எதையோ எண்ணி தானும் நொந்து, பிறரையும் நோகடிப்பாள்.

தங்களிடம் இருப்பவைகளை மனதில்கொண்டு திருப்தி அடையாது, பிறருடன் தம்மை ஒப்பிட்டுக்கொண்டே நிம்மதி இழப்பவர்களை என்ன சொல்வது! இவர்களால் பிறருக்கு எந்த இழப்புமில்லை. நஷ்டம் இவர்களுக்குத்தான்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.