Tag: சு. ரவி

  • இன்னும் மாயை இருக்கிறது

     

    THE LAST STANZA OF THIS POEM TRANSLATED BY MY SON AJITH SUBRAMANIAN CAN BE SEEN AT THE END..

    Su.Ravi

    PS : my poet friend K.Ravi’s reply poem & the chain poems thereafter will be sent subsequently.

     

    BF3B946F-ED68-4A62-B1DB-942F77340846

    இன்னும் மாயை இருக்கிறது- அது
    என்னில் என்னை மறைக்கிறது!
    மின்னல் கீற்றாய் மெய்யுணர்(வு) அந்தோ!
    எப்பொழுதாகிலும் ஸ்புரிக்கிறது. ( இன்னும்)

    புலன் உணர்வெல்லாம் பொய்மைஎன்றே ஒரு
    பொறிபறந்தாற்போல் புரிகிறது;
    நிலத்தில் இவ்வாழ்வும் நிலைகிடையாதெனும்
    நிச்சய உண்மை தெரிகிறது- மனம்
    சிலபோதேனோ இனிப்பை அவாவும்
    சிறுமதலை போல் அலைகிறது-உடல்
    பலமிழந்தோய்ந்தால் பயந்து நடுங்கிப்
    பரிதவித்தேங்கிக் குலைகிறது! ( இன்னும்)

    ‘மனநிறை(வு) என்பதோர் மாரீசம் – அது
    மயக்கி இழுத்துனைச் செயும் மோசம்
    இனம் குலம் என்பவை வெளிவேஷம் “- என
    இன்னும் பலப்பல கதை பேசும்= உடன்
    தனயன், தாய், மனை இவர் முகம் பார்த்திடில்
    தயங்கும், தடுக்கும், தவறி விழும்!
    கனவும் நனவும் கடந்த பின்னாலும்
    கணப்பொழுதாசையில் கவிழ்ந்து விடும்! ( இன்னும்)

    விண்ணியல் கண்டு தெளிந்தாலும்- மறை
    ஓதிய பண்டிதன் ஆனாலும்
    எண்ணிய மட்டினில் ‘யான்’ ,‘என(து)’ எனும் இவை
    எங்கோ பாதலம் ஆழ்த்திவிடும்
    திண்ணிய நெஞ்சுரம் வைராக்யம் இவை
    திரும்பவும் இடிந்து பொடியாகும்
    நுண்ணிய நூலிழைதான் பாசம்- அது
    நோற்ற தவங்களை விலைபேசும் ( இன்னும்)

    ஓட்டம் இதற்கோர் இலக்கில்லை
    ஓடாதிருக்க விலக்கில்லை
    ஓட்டுவ தாரோ, ஓடுவ தேனோ
    ஓடும் எவர்க்கும் தெரிவதில்லை
    ஓட்டம் முடிந்தபின் ஓடு கழன்றால்
    ஓய்வுண்டோ எனில் அதுவுமிலை
    ஓட்டத்தின் ஊடே ஓராயிரம் தடை!
    ஓட்டத்தில் நாட்டம் குறையவில்லை ( இன்னும்)

    சு.ரவி
    ********************************************

    Ajith (s/o Su.Ravi):

    The rules of the game, aint so clear,
    I can quit this game, but my lifez so dear!
    Who runs the show? Why play this game?
    Not a single player can answer the same!
    Oh the game is over, and now Ive got no name!!
    I wanna rest, but, here we go again!
    A thousand obstacles each time I play,
    Do I lose interest? Nay nay nay!!
    **********************************

     

    Share
  • ராதா மாதவன் வரும் நேரம் …

     

    வணக்கம் வாழிய நலம்

    யமுனை நதியின் பரப்பில் பால்வெண்ணிலவு பாதரசத்தில் பாதைவிரிக்கும்!
    ஆங்கே வேய்ங்குழல் ஊதி ராதையின் மனத்தைக் கொள்ளை கொள்ளும்
    ராதாமாதவனைத் தன் தேமதுரக் குரலில் திரு. எஸ்.பி. பாலசுப்ரமணியம்
    திரு ரமேஷ் வினாயகம் இசையமைப்பில் பாடுவதைக் கேட்க கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.

    பாடலும், பாடற் காட்சியும்
    பார்க்க, ரசிக்க….

    சு.ரவி

    https://ia601204.us.archive.org/21/items/SuraviKrishnarAlbumSongs/09Track9.mp3

    ராதா மாதவன் வரும் நேரம் …

    D69987FC-F4ED-4580-9CAD-7395C7C5978A

    ராதா மாதவன் வரும் நேரம்
    ராகங்களோடு கவிசேரும்
    யமுனா தரங்கம் அலைமோதும்
    யது நாதன் என்று துதிபாடும்!
    ஜெய் க்ருஷ்ண க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ணா!
    ஜெய் க்ருஷ்ண க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ணா!
    ஓரிரவினிலே கோகுலம் நாடி
    மழலை பேசி வளர் மாயன்!
    இடையர்சூழவே கானகம் ஏகி
    மாடுமேய்த்திடும் ஆயன்!
    கார்கால மேகம் அவன் தேகம்!-கோ
    தூளி செய்யும் அபிஷேகம்!
    வனமாலை சூடி விளயாடும்- ஸ்ரீ
    வாசுதேவனே போதம் !
    ஜெய் க்ருஷ்ண க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ணா!
    ஜெய் க்ருஷ்ண க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ணா! (ராதா மாதவன்)

    பூரண நிலவில் வேய்ங்குழல் வழியே
    அமுத கீத நதி பாயும்!
    தமைமறந்திடும் கோபியர் நெஞ்சம்
    வேணுகானமதில் தோயும்!
    கோவிந்த ரூபமே த்யானம்!
    கோவிந்த கானமே ஞானம்!
    நவ நீதமாகும் மனம் யாவும்- ஸ்ரீ
    க்ருஷ்ண மந்திரம் ஆகும்!
    ஜெய் க்ருஷ்ண க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ணா!
    ஜெய் க்ருஷ்ண க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ணா! (ராதா மாதவன்)

    சு.ரவி

    Share
  • கோவிந்தா – ஹரே – கோபாலா

    சு. ரவி

    வணக்கம் வாழிய நலம்

    https://ia801604.us.archive.org/6/items/ThitumalaiVaasaa/03Track3IkamEnra.mp3

    எனதருமை நண்பர் திரு.K.S. ராஜகோபால் அவர்களின் குரலில் கோவிந்தன் ஏழுமலையான் மீது இயற்றப்பட்ட பாடலைக் கீழ்க்கண்ட இணைப்பில் சொடுக்கிக் கேட்கலாம். இணைப்பில் ஏழுமலையான் ஓவியம்.

    992CCFE5-0DF4-4C60-B9CF-51292C7A4275

    கோவிந்தா – ஹரே – கோபாலா

    இகமென்ற கரையங்கு மறைகின்றது
    பரமென்ற தொடுவானம் விரிகின்றது. (கோவிந்தா)

    அறியாமை முகிலாக இருள்சூழுது
    பொருளாசை ஒருமாயச் சுழலானது
    திசைகாண முடியாத படகாயினேன்
    கதிராக வரவேணும் மதுசூதனா! (கோவிந்தா)

    மனமெங்கும் மயலென்ற புயல்வீசுது
    மறைவாக விதியென்ற மலைநின்றது
    அனலாற்றில் மெழுகில் ஒரு படகாயினேன்
    மழையாக வரவேணும் மதுசூதனா! (கோவிந்தா)

    பவமென்ற நுரைபொங்கும் நதியோடுது
    அஹங்காரம் மமகாரம் சுமையானது
    பழுதான படகாக அலைமோதினேன்
    பரிவாக வரவேணும் மதுசூதனா! (கோவிந்தா)

    இகமென்ற கரையங்கு மறைகின்றது
    பரமென்ற தொடுவானம் விரிகின்றது. (கோவிந்தா)

    சு.ரவி

    படிக்க, கேட்க, பார்க்க, ரசிக்க…

    Share
  • மீண்டும் சாக்லேட் கிருஷ்ணா

    சு. ரவி

    திரு கேசவ் கிரேசி மோகனுக்கு சாக்லேட் கிருஷ்ணா ஓவியத்தை வரைந்தளித்த மேடையில் அவ்வோவியத்திற்காக ஆதிசங்கரரின் கோவிந்தாஷ்டகம் சந்தத்தில் என்னால் இயற்றப்பட்ட பாடல் இது. ( வடமொழி ஸ்லோகத்தில் உள்ளதுபோலவே, ஒற்றெழுத்து நீங்கலாக அடிஒன்றுக்கு 18 எழுத்துகள் கொண்டமைந்த விருத்தம்),

    பால் போன்ற ஆகாசமும், இடையிலே சாக்லேட் பேப்பரை முடியிலும் இடையிலும் தரித்த சாக்லெட் கோவிந்தனும், அவன் பாதம் வருடும் பசுவும் கொடுத்த உந்துதலே இப்பாடல்..

    531F0C5D-D48D-4657-A027-81176E23ADD8

    பால்பொங்கும்வெளி போல்பொங்கும் மன
    ஆகாசம்- பர மாகாசம்,
    பால்பொங்கும் திரை மேல் துஞ்சும் இறை
    தான் வாழும் இடம் கோலோகம்
    பால்பொங்கும் பசு கால்நாடும் சுகம்
    ஆச்சர்யம் -அதன் வாத்ஸல்யம் !
    கோல்கொண் டாவினம் மேய்க்கும் தெய்வதம்
    கோவிந்தம் பர மானந்தம்!

    08FC3C1F-5150-4D5C-BD8A-37291B884161

    சு.ரவி

    Share
  • நெய்தல் நிலம்

    இதோ ஒரு நெய்தல் நிலக் காட்சி…
    மீன்பிடிப் படகுகளோடும், அன்று கிடைத்த செல்வங்களோடும்…

    பார்க்க, ரசிக்க…..

    சு.ரவி

    14C94A70-4A43-4CDA-AC67-B9E6629A5C47

     

     

     

    Share
  • எனக்குள்….

     

    சு.ரவி

    C34A4ABF-599A-4D23-ADB6-D2FF3BCC2728

    உள்ளக் காட்டில் உலவும் விலங்கின்
    உறுமல் கேட்கிறது-கோபப்
    பொருமல் கேட்கிறது!

    அன்பால் வசியம் செய்தேன் அதனால்
    அடங்கி ஒடுங்கியது- பிறரை
    வணங்கி ஒதுங்கியது. – அந்த
    அன்பின் வலிமை அறியா மாந்தர்
    அதட்டி மிரட்டியதால் – விழியை
    உருட்டி வெருட்டியதால் – என் (உள்ளக்)

    அறிவுத் தீயை மூட்டி வளர்த்தேன்
    அஞ்சி நடுங்கியது – உள்ளே
    சென்று பதுங்கியது – எரியும்
    அறிவுத் தீயை அணைக்கும் மாந்தர்
    அறியாச் செய்கையினால் -அவர்தம்
    புரியாக் கொள்கையினால் – என் (உள்ளக்)

    தூங்கும் விலங்கைத் துணிப் பந்தாம் என
    எட்டி உதைப்பவரே – காலால்
    தட்டி மிதிப்பவரே – மிருகம்
    ஓங்கும் பழிவெறி விழிகளில் மின்னிட
    எழுமென்றறியீரோ – உமதுடல்
    விழுமென் றுணரீரோ! – இதோ என் ( உள்ளக்)

    Share
  • இயற்கை அன்னை!

    சு. ரவி

     

     

    வானமென்னும் ஆற்றினிலே ஓடிவரும் ஓடம்
    தேனமுதைத் தேவரெல்லாம் பூட்டிவைக்கும் மாடம்
    அலைகள் எறியுமொரு
    கடலை அணையவரும்
    நிலவு இதனொளியில்
    உலவி உலவி மனச்
    சாந்திபெறச் சற்றினிது நான் நினைத்தபோது
    ஏந்திவந்தாள் எழிலதனை இயற்கைஎனும் மாது!

    AD8DF21D-65E8-47E1-8A06-25685358C1C1

    தென்றலிங்கு வந்து என்னைத் தொட்டுத் தொட்டுச் செல்லும்
    மென்மைசுகம் சேர்ந்தகதை மெல்ல வந்து சொல்லும்
    சலல சலலவென
    சலன உலகமிதில்
    அலையும் இதனொலியில்
    எனது மன மகிழ
    நானுலவி நல்லதமிழ் பாடிவரும் போது
    தான்வருவாள் தளிர் நடையில் இயற்கைஎனும் மாது!

    36DA191F-B8BF-423A-84FF-52AE27F61220

    நீலப்பட்டில் ஆடைகட்டி நீண்டிருக்கும் வானம்
    கோலப் போட்டு வைத்தாங்கே செய்திருக்கும் மோனம்
    கரிய பெரிய முகில்
    உரச உரச இடி
    சரிய வருமழையில்
    நனைய நனைய ஒரு
    மின்னல்வெட்டில் உள்ளம் தந்து நான் மறந்தேன் என்னை- அங்கே
    புன்னகைத்துப் புதுச் சிரிப்பு பூத்தாள் எங்கள் அன்னை!

    DDB517DC-692B-46BC-8FB4-F14E7A67399D (1)

    காட்டாற்று வெள்ளமெங்கும் கரை புரண்டு ஓடும்
    பாட்டாக என்மனத்தில் பரவசங்கள் சூழும்
    உடலில் உறையுமுயிர்
    அதனில் இயையும் இறை
    அடியை மனதிலெணி
    அருவி உருளுமொரு
    தன்னந்தனி வழியாக நான் நடந்தேன் என்னை
    இன்னருளால் காத்திடுவாள் இயற்கைஎனும் அன்னை!

    Share
  • தழல் தந்த தரிசனம்

     

     சு.ரவி 

    60437A8F-1597-4A79-8651-8B9F7BA31DE0
    தழலுக்குள்ளே தண்ணீருண்டு, நீருக்குள்ளும் தழலுண்டு
    சுழலுக்குள்ளே சும்மாநிற்கும் அமைதிப் புள்ளி ஒன்றுண்டு
    நிழலுக்குள்ளும் சூரியனுண்டு, இரவுக்குள்ளும் பகலுண்டு
    விழலுக்கென்றும் வெள்ளம் உண்டு; கழலுக்குள்ளே புகலுண்டு!

    எரியாய்க் கவிதை செய்தேன் அதனுள் அமுதாய்த் தானே அவள் வந்தாள்
    திரியாய்த் தானே நான் நின்றேன் அதில் தீபச் சுடராய் அவள் நின்றாள்
    கரியாய்ப் போகும் மேனிக்குள்ளும் கவிதைத் தேனைப் பாய்ச்சியதார்?
    தரிசானாலும் தரிசனம் தந்தெனைத் தண்வயலாக மாற்றியதார்?

    வனப் புள்ளாய் என் ஆன்மா வானில் வட்டமடித்துப் பறக்கிறது
    என்க்குள் எரியும் தீபம் எந்தன் வாக்கில் கவியாய்ப் பிறக்கிறது
    மனக்குள அலைகள் ஓயும் நேரம் மரத்தின் வேர்கள் தெரிகிறது
    தனக்குள் தானே உறையும் தருணம் தழலின் தவமும் புரிகிற்து

     

    C664FD38-7BD1-4F01-9DCA-64E4E68EA0B3 
    எல்லாக் கவியும் என்கவி என்றே நெஞ்சம்மகிழ்ந்து ரசிக்கிறது
    எல்லாத் துயரும் என்தோள் ஏற்று ரகசியமாக விசிக்கிறது
    எல்லா உயிரும் நானே என்று வாழ்ந்திட நெஞ்சு பதைக்கிறது
    நில்லாதோடும் காலம் மட்டும் நினைத்து நினைத்து நகைக்கிறது!

    Share
  • அழகுவேலன் விருத்தம்

    சு.ரவி
    Dear all,

    https://archive.org/details/SuraviMurugarSongs

    Click on the above link to listen to 2 songs on Lord Murugan written by me & sung by Sri SPB Musi Direction: Sri. Ramesh Vinayagam

    Scroll below for a line drawings n an acrylic on paper by me.
    கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை அவர்களின் அழகம்மை ஆசிரியவிருத்தம் ஏற்படுத்திய தாக்கத்தில் என்னைப் பள்ளிநாட்களில் பெரிதும் ஆட்கொண்ட திருமயிலைத் தலத்துக் கபாலீஸ்வரர் கோயிலில் குடிகொண்ட சிங்காரவேலவன் மீது இயற்றிய அஷ்டகம்.

    கவிமணி அவர்கள்

    “மார்த்தாண்ட வேழம் வழுவேதும் வாராமல்
    காத்தாண்டு கொள்ளக் கடன்”
    என்று காப்பு வெண்பா எழுதியதுபோல்

    இக்கவிதைக்குக் காப்பாக மயிலை கபாலீஸ்வரத்தில் அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானைக்

    “கூத்தாடும் பிள்ளையே குற்றம் குறையின்றிக்
    காத்தாண்டு கொள்ளக் கடன்.

    என்று அழைத்தேன்.
    கேட்க, படிக்க,பார்க்க,ரசிக்க.

    3D50DF05-1CBA-4315-BEC7-63A6564987AC

    அழகுவேலன் விருத்தம்

    மங்காப் புகழுடையோன் மன்னுமயில் ஏறிடுவான்

    சிங்கார வேலவனின் சீருரைக்க- எங்கோவாம்

    கூத்தாடும் பிள்ளையே குற்றம் குறையின்றிக்

    காத்தாண்டு கொள்ளக் கடன்.

     

    பார்தன்னில் சீர்தங்கும் ஊரெங்கள் ஊர்தன்னில்

    பாலனாய்த் திகழ்ந்திருப்போய்!

    பால்சிந்தும் முகமோடு வேல்கொண்ட கரமோடு

    பக்தரைக் காத்து நிற்போய்!

    தார்சூடும் மறலியைத் தன் தொண்டனுக்காகத்

    தாளெற்று தேவனவனும்

    தாழ்சடை தான்புரள ஆழ்கங்கையும் அசைய

    தன் தலை தாழ்த்திநிற்க

    கார்வண்ணன் உந்தியிற் றானின்ற நான்முகன்

    கைகட்டிச் சிறையிருக்க

    வேதங்கள் நான்குக்கும் ஆதாரஒலியினை

    விளக்கிடும் தேவதேவா!

    நீர்வளம், நிலவளம், சோர்விலா மனவளம்

    நிறைந்திடும் தேவபுரியாம்

    பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

    பொலியு சிங்காரவேலே! (1)
    எந்தனுளம் தன்னிலே சொந்தமும் பந்தமும்

    எந்நாளும் எண்ணிவிட்டேன்

    சிற்றின்ப உலகிலே மற்றின்பம் ஒன்றையே

    சிந்தையிற் கொண்டுவிட்டேன்

    உந்தனடி பற்றிவரும் சந்தமிகு வாழ்வினை

    உணரா திருந்துவிட்டேன்

    உழலுமாம் மனதிலே அழுகையை அன்றிவே

    றொன்றையும் இன்றுகாணேன்

    கந்தனே வள்ளிக்கு கந்திடும் காந்தனே

    கதறினேன், காத்தருள்வாய்!

    கடைசியில் காட்டினை அடைகின்ற போதிலே

    கண்விழித் தேனருள்வாய்!

    செந்தமிழ் தன்னிலே விந்தைபல செய்திடும்

    பாவலர் நிறைந்தபுரியாம்

    பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

    பொலியு சிங்காரவேலே! (2)

    முக்திக்கு வழிதரும் பக்திக்கு வித்திட்டு

    வாழுமோர் வாழ்வுமறியேன்

    முன்வினைப் பயனிங்கு என்வினை மோதிடும்

    பின்வினை தன்னையறியேன்!

    சக்தியை முத்திட்டு சரவணப் பொய்கையில்

    சதிராடு கந்தவேளே

    சற்றேனும் என்மனதை வற்றாத கருணையால்

    சரவணப் பொய்கையாக்கு

    மெத்தக்க றுத்தவள்கு றத்திக்கு மாலையிடும்

    மேலானச் வேலவா என்

    சித்தத்தி னில்என்றும் சித்திரம் போல்நின்ற

    சிறுவனே, கார்த்திகேயா

    தித்திக்கும் முத்தமிழும் எத்திக்கும் தான்பரவ

    வைத்த்சீர் கொண்டபுரியாம்

    பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

    பொலியு சிங்காரவேலே! (3)

    பொறியியல் தன்னிலே அறிவினைப் பெற்றுநான்

    பட்டமும் சூடுவேனோ

    பொருந்தாத வாழ்விலே வருந்தியே வாழ்வினைப்

    பயனின்றி வாழுவேனோ

    புரியாத தாகவே தெரியாது நின்றிடும்

    புத்தியும்; கற்றகல்வி

    ‘புவனத்தி லே சற்று கவனம் இருந்திடிற்

    புரியாத தேதுமில்லை

    அறிவாய்’ எனப் புகலும்; எரிவாயில் வீழுமோர்

    அன்றிலின் நிலையில் நானும்

    இவ்வுலக வாழ்வுக்கும் அவ்வுலக அருளுக்கும்

    இடையிலே ஆடுகின்றேன்

    மறி,சூலம் கொண்டகா பாலியைக் கற்பகம்

    மயிலுருக் கொண்டன்புசெய்

    பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

    பொலியு சிங்காரவேலே! (4)

    தான்பெற்ற செல்வனைத் தாயுமொரு நாளுமே

    ஏன்பெற்றோம் என்பதில்லை

    தண்ணீரும் தன்மீது நின்றாடும் தாமரைப்

    பூவினைத் தவிர்ப்பதில்லை

    வானுற்ற மதியமும் மறுவுற்ற போதிலும்

    வாஞ்சையாய் ஏற்றுவிட்டான்

    வணங்காத சூரனும் அணங்கோடு நீயேற

    வண்ணமயில் ஆகிவிட்டான்

    கானுற்ற முனிவனாய்க் காவியும் சடையுமாய்த்

    தத்துவம் கண்டதில்லை

    நான்செய்த குற்றமும் தேனொத்த சொல்லினாய்

    நீயெண்ணலாகுமோ சொல்

    மீனொத்த கண்ணினாள் மானேந்தும் ஐயனை

    மயிலுருக் கொண்டன்புசெய்

    பொன்மவிலை யின்வாழும் என்னரிய செல்வமே

    பொலியு சிங்காரவேலே! (5)

    10ADC334-6BFD-4129-8EDA-98BA93A22C4F

    வில்லுக் கருச்சுனன் மல்லுக்கு நிற்கையில்

    வீசிடும் சாட்டைகொண்டு

    பாதையைக் காட்டவே கீதையைச் சொல்லிடும்

    பரமனின் செல்வமருகா!

    சொல்லுக் ககத்தியன் கேட்கமுத் தமிழினைத்

    தந்திடும் வெற்றிவேலா

    குன்றத்தி லேநின்று குன்றாத அருள்பொழியும்

    குமரனே கார்த்திகேயா!

    பல்லுக்கு ஆலுண்டு சொல்லுக்கு நாலுண்டு

    பக்தர்க்கு வேலுண்டுகாண்!

    அஞ்சற்க! என்றுந்தன் கஞ்சக் கரங்கொண்டு

    நெஞ்சுக்கு நீயருள்தா

    முல்லைப் பூ நாணிட முறுவலைக் காட்டிடும்

    முழுமுதற் கடவுளே,இப்

    பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

    பொலியு சிங்காரவேலே! (6)

    முருகனே உன்னிடம் நெருங்கியே ஓரடி

    உன்னன்பர் வந்துவிட்டால்

    முன்னின்று வந்துநீ இன்னருள் தந்திடும்

    தன்மையோன் என்றுரைப்பார்

    உருகிடும் உள்ளமும், பெருகியே வெள்ளமாய்

    ஓடுமென் விழியின் நீரும்

    உந்தன் உளத்திலே கந்தனே உண்மையாய்

    உறைக்கவே இல்லையோ சொல்!

    இரும்பினால் ஆனதோ, இறுகிடும் பாறையால்

    ஆனதோ உந்தனுள்ளம்?

    இங்குநான் பட்டிடும் இன்னலும் அங்குனக்(கு)

    இன்பமாய் ஆகுமோசொல்!

    வருமலை மோதிடும் கரையினில் விளையாடும்

    வலைஞர்கள் வாழுமூராம்

    பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

    பொலியு சிங்காரவேலே! (7)

    004A2242-B27F-4816-BD13-146D13E1E34D

    பன்னிருகை வேலனே, பரமனவன் பாலனே,

    பழகுதமிழ்ச் சீலனே என்

    பழவினைகள் யாவையும் அழகொழுகு தேவனே

    பார்த்துநீ தீர்த்தருள்வாய்

    என்னிருகை கூப்பியே உன்னருளை வேண்டினேன்

    எழிலரச னேயருள்வாய்!

    எப்பொருளும் எண்ணாது மெய்ப்பொருள் உன்னையே

    ஏத்துகின் றேனிறைவா!

    சின்னக் குழந்தையாய் சீரான நடையிட்டு

    சிரித்துநீ ஓடிவாராய்

    மங்கிடும் மாலையில் எங்குமிருள் சூழ்கையில்

    மயக்கியே அன்புதாராய்!

    சென்னையாம் நகரிலே அன்னையும், பின்னையும்

    சேர்ந்தருள் செய்தபுரியாம்

    பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

    பொலியு சிங்காரவேலே! (8)

     

    Share
  • வாஸுதேவ அஷ்டகம்

    சு.ரவி 

     

    Click on link below to listen to some Krishnar Songs written by me & sung by SPB, CHITHRA,KS RAJAGOPAL- music by Ramesh Vinayagam n one song by L.Krishnan.
    4 stanzas of Vaasudeva Ashtakam can be heard in SPB’s golden voice..

    Scroll below for full Ashtakam n a few Krishna paintings frm my iPad..

    For ketka, padikka, paarkka rasikka..

    Su.Ravi

     

    https://archive.org/details/SuraviKrishnarAlbumSongs

    3EFC1BDF-2029-4A1C-9FB5-7C905DBE2E77

    வாஸுதேவ அஷ்டகம்
    சினம் கொண்ட மாமன்
    சிறை தந்த பாலன்
    தினம் கோடி லீலை
    நிகழ்த்தும் ப்ரதாபன்
    மனம் கொண்ட கள்வன்
    மழை மேக வண்ணன்
    இனம் கண்டு கொண்டேன்
    இவன் வாசுதேவன் (1)

    விளம் சாய்த்த கன்றும்,
    விரல் மீது குன்றும்
    உளம் தன்னில் என்றும்
    படம் போல் இலங்கும்
    இளம் பிள்ளை என்றாலும்
    தெய்வ ஸ்வரூபம்
    இனம் கண்டு கோண்டேன்
    இவன் வாசுதேவன் (2)

    55DC1229-D01F-4DCE-9656-39E72922A910

    விடம் கோண்ட நீரில்
    ‘துடும்” என்று பாயும்
    படம் கண்டு தாவிப்
    பதம் மாற்றி ஆடும்
    நடம் செய்த பாதத்தை
    நாராயணன் என்(று)
    இனம் கண்டு கோண்டேன்
    இவன் வாசுதேவன் (3)

    ‘ஹரே த்வாரகா வாஸி
    கோவிந்தா’ என்றே
    குரல் தந்த பெண்ணின்
    குறை தீர்த்த தெய்வம்
    அறம் காக்க வென்றே
    முனம் தூது சென்றான்
    இனம் கண்டு கோண்டேன்
    இவன் வாசுதேவன் (4)

    2950F0C3-96B2-4409-928B-2594D6E13CDA

    களம் கண்ட பார்த்தன்
    கலங்கித் துடித்தே
    உளம் சோர்ந்த நேரம்
    உரம் தந்த சாரம்
    நலம் காட்டும் கீதை
    நவில்கின்ற தாதை
    இனம் கண்டு கோண்டேன்
    இவன் வாசுதேவன் (5)

    குழல் கொண்டு ராகம்
    இசைக்கின்ற மேகம்
    தழல் உண்டதே போல்
    தகிக்கின்ற தேகம்
    சுழல்கின்ற சிந்தைக்குள்
    சூல்கொண்ட மோஹம்
    இனம் கண்டு கோண்டேன்
    இவன் வாசுதேவன் (6)

    B7D35E70-35CF-47B7-ADFD-ECCC825A75EA

    இவன் கோபியர் நெஞ்சில்
    காதல் ப்ரவாஹம்
    இவன் யோகியர் நெஞ்சில்
    ஞானத் தடாகம்
    இவன் யாவும் ஆகின்ற
    ப்ரம்ஹ ஸ்வரூபம்
    இனம் கண்டு கோண்டேன்
    இவன் வாசுதேவன் (7)

    இவன் கேசவன், மாதவன்
    பத்மநாபன்
    இவன் மாயவன், வாமனன்
    பாண்டுரங்கன்
    இவன் ஸ்ரீதரன், விஷ்ணு
    கோவிந்தன் என்றே
    இனம் கண்டு கோண்டேன்
    இவன் வாசுதேவன் (8)

     

     

    Share
  • நீ அழுவதற்காகப் பிறக்கவில்லை

    சு. ரவி

     

    7D83B7BE-1A74-4E7A-980C-FDCAA5E06091

    இளைஞனே,

    நீ அழுவதற்காகப் பிறக்கவில்லை.
    பிறந்ததற்காக அழுதால் பயனேதும் இல்லை.
    கண்ணீர் மன அழுத்தத்தைக் கரைக்கிறது என்பதெல்லாம் கட்டுக்கதை.
    அது உன் திறமையையும் தன்னம்பிக்கையையும் தகர்த்து விடுகிறது.

    அழுகை ஆன்மாவைப் புனிதமாக்குகிறது என்பது வேலையற்றவரின் வெட்டி வேதாந்தம்.

    என் இனிய இதயமே,

    உன் அழகிய விழிகளில் துளிர்த்து உதிர்வன உன் ஓராயிரம் நிறைவேறாத ஆசைகளே.
    உனக்காக நெகிழ்வதை நிறுத்து.

    “வாடிய பயிர்களைக் கண்டு” வாடினால் நீ வடலூர் வள்ளல் ஆகலாம்.
    அப்போது நீ உனக்காக அழமாட்டாய்- உலகத்து உயிர்களுக்காக அழுவாய்.
    அது உயர்ந்த யோக மார்க்கம்!

    என் நம்பிக்கையே,

    கண்ணீரும், அழுகையும் கோழையின் ஆயுதங்கள். பெண்மையின் பலவீனங்கள்.
    ஒரு துளி பன்னீர் கிடைக்க ஓராயிரம் ரோஜா மலர்கள் தேவை..
    ஆம் ஒரு ஞான யோகி உருவாகுமுன் இந்த மண்ணில் ஒராயிரம் கர்மயோகியர் அவதரிக்க வேண்டும்.

    உன் வாடைக்காலப் போர்வையை வீசி எறி. வஸந்தம் உன்னை வரவேற்கக் காத்திருக்கிறது.

    கர்மயோகியே,

    கண்ணீர் உலர்ந்து கடமை உணர்ந்து
    திண்மை செறிந்து நொய்ம்மை தவிர்த்து
    எழுந்திரு!

    நீ பிறந்தபோது அழுதாய். அது அறியாமல் செய்தபிழை.
    அது உன் வாழ்க்கைப் போராட்டத்தைத் தொடங்க
    நீ ஊதிய வெற்றி சங்க முழக்கமாகட்டும்.

    உன் புன்னகை மிளிரும் முகத்தில் நாளைய உலகின் அருணோதயம்
    தெரிகிறது.
    இதோ உன் கண்ணீர் நின்றுவிட்டதால் இந்தியத் தாயின் ஜீவநதிகள்
    பிரவாகமெடுத்து ஓடுகின்றன!
    கண்ணீரின் தடங்கள் மறைந்த பாதையில் உன் வீறு நடை போடு!

    என் இனிய இந்திய இளைஞனே,

    நீ அழுவதற்காகப் பிறக்கவில்லை
    பிறந்ததற்காக அழுதால் பயனேதும் இல்லை.

    சு.ரவி

    Share
  • நானுனை மறவேன் நாராயணனே!

    சு.ரவி

    EEE844D4-9382-43A4-81EB-5B0A30E6A25D

    8A1CAC5D-6D89-4A1B-87C1-B1744B3A3E9F

    இராப் பகலாக இடருற்ற வேழம்
    அராற்றி ஆதி மூலமென் றலற
    கராப் படச் சக்கரம் கதுமென எறிந்த
    பராத் பரனே உன் பதம் மறவேனே!

    ஒருமனத் தோடுனை உடும்பெனப் பிடித்த
    துருவனை வானில் துலங்கு மீனாக்கிய
    கருட வாஹனா , கார்முகில் வண்ணனே
    நிருதி நெருக்கினும் நினை மறவேனே!

    பால்வீதி எங்கும் பரந்த கோளெலாம்
    கால்கழற் பரல்களாய்க் கணகணத் துருள
    வால்சுருண்டெழுந்த வராஹ மூர்த்தியே
    ஆலம் பொழியினும் அடிமறவேனே!

    நொடியி லோர்தூணை நூறிப் பிளந்து
    படியில் அமர்ந்தவா(று) இரணியன் பருவுடல்
    மடியுறக் கீண்ட இடிகுரற் சிம்மமே!
    அடிமை நானுந்தன் அடிமறவேனே!8A157ED5-0001-42AF-B530-9D839526AEDF

    தானம் இரந்த குறளனாய் வந்து
    வானம் அளந்த வளர் நெடு மாலே!
    ஊனம் செய்தென் உடல் வருத்திடினும்
    நானுனை மறவேன் நாராயணனே!

    அம்புவில் லேந்தி அடர்நெடுங் கானகம்
    தம்பியும் தாரமும் துணைவர நடந்த
    செம்பத மலர்கள் சேவித்தவாறே
    நம்பி எந்நாளும் நான் கிடப்பேனே!

    குரக்கரின் துணைகொடு குன்றுசூழிலங்கை
    அரக்கரதம் அரசின் ஆணிவேர் அறுத்தோய்!
    இரக்கமற்றென்னை இழிநர கிடினும்
    உரக்க நின் நாமம் ஓதிநிற் பேனே!

    மனம்வெறுப் பேறி மதம் கொண்ட வேந்தர்
    சினம்பெருத் தென் மேல் சீறிய போதும்
    புனல்கறுத் தோடும் யமுனைத் த்றைவனே,
    அனல்வறுத் திடினும் அடிமற வேனே!64045FAD-842D-4A33-B788-CB4914B4E61E

    திரிதரும் காலிகள் பின்சென்ற தெய்வமே!
    எரிதரும் நரகில் எனையிட்ட போதும்
    கிரிதரா உந்தன் கீர்த்தியே அன்றி
    பிறிதொரு வார்த்தை பேசகில்லேனே!

    ஓரா ழியும்,வெண் சங்கமும் ஏந்தும்
    ஆரா அமுதே ஆருயிர் நிலையே!
    நீரா ழியினுள் எனைஆழ்த் திடினும்
    சீரார் பதமலர் சிந்தை கொள்வேனே!

     

     

     

     

    85510988-C45B-40D3-A899-E3F7969BED6D98351337-30E3-458E-9439-87873559FEE7

    B76B39E2-29C6-4D03-AB7B-2A7F01DC77B6

     

    Share
  • இன்று ஆஷாட ஏகாதசி

    இன்று ஆஷாட ஏகாதசி. பலலக்ஷம் வார்க்கரிகள் பாதயாத்திரையாகச் சென்று பண்டரிபுர விட்டலனைத் தரிசிக்கும் தினம். அடிமுதல் முடிவரை ஆராஅமுதமாகத் தித்திக்கும் அந்த அக்காரக் கனியைச் சுவைப்போமா?

    சு.ரவி

    ஓவியம் : சு. ரவி
    ஓவியம் : சு. ரவி

    அமுதப் பதிகம்

    இதயம் அமுதம்,இன்முகம் அமுதம்
    இணைவிழி அமுதம், இன்னருளமுதம்
    இதழ்கள் அமுதம், இளநகை அமுதம்
    ஆராஅமுதே அகிலம் அமுதம்! 1`

    மொழியும் அமுதம், மௌனம் அமுதம்
    மூச்சும் அமுதம், முகில்நிறம் அமுதம்
    மழலை அமுதம், மயிலிறகமுதம்
    ஆராஅமுதே அகிலம் அமுதம்! 2

    குழலிசை அமுதம், குரலொலி அமுதம்
    குளிர்நுதல் அமுதம், குழல்சுருள் அமுதம்
    கழலிணை அமுதம், கரமலர் அமுதம்
    ஆராஅமுதே அகிலம் அமுதம்! 3

    நடனம் அமுதம், நடைஅழ கமுதம்
    நட்பும் அமுதம், பகையும் அமுதம்
    இடவலம் அமுதம், இகபரம் அமுதம்
    ஆராஅமுதே அகிலம் அமுதம்! 4

    ராதை அமுதம், காதல் அமுதம்
    ராகம் அமுதம், மோஹம் அமுதம்
    கோதை அமுதம், கோபியர் அமுதம்
    ஆராஅமுதே அகிலம் அமுதம்! 5

    பாதை அமுதம், பயணம் அமுத்ம்
    பார்வை அமுதம், பாற்கடல் அமுதம்
    கீதை அமுதம், கிளரொளி அமுதம்
    ஆராஅமுதே அகிலம் அமுதம்! 6

    கனவும் அமுதம், நனவும் அமுதம்
    கனிவும் அமுதம், முனிவும் அமுதம்
    ஜனனம் அமுதம், மரணம் அமுதம்
    ஆராஅமுதே அகிலம் அமுதம்! 7

    அறிதுயில் அமுதம், அரவணை அமுதம்
    யமுனை அமுதம், யதுகுலம் அமுதம்
    உறிதயிர் அமுதம், உண்பதும் அமுதம்
    ஆராஅமுதே அகிலம் அமுதம்! 8

    துயரம் அமுதம், துணையும் அமுதம்
    துகளும் அமுதம், துளசியும் அமுதம்
    பெயரும் அமுதம், பேரழகமுதம்
    ஆராஅமுதே அகிலம் அமுதம்! 9

    உருவம் அமுதம், உணர்வும் அமுதம்
    உள்ளொளி அமுதம், உயிர்நிலை அமுதம்
    அருவம் அமுதம், அன்பே அமுத்ம்
    ஆராஅமுதே அகிலம் அமுதம்! 10

     

    Share
  • கண்ணதாசன் ஒரு சகாப்தம்

    சு. ரவி

     

    திரைப்பாடல்களில் ஒருவரியிலேயே திரைக்கதையைச் சுருக்கித் தரும் திறமையும், வளமான சொல்லாட்சியும், வற்றாத கற்பனை ஊற்றும்.. கண்ணதாசன் ஒரு சகாப்தமாக வாழ்ந்தார்.

    “ரஸமான தத்துவம், ரஸமானதத்துவம்
    ராட்சஸச் சிந்தனைகள்…..”
    “சுட்டெரித்தாலிந்த மேனியும் சாம்பலாய்ச்
    சுடுகாட்டு மண்ணிலுருளும்
    சுவையான பாவலன் போயினான் எனச் சொல்லி
    சொந்தமும் வீடுசெல்லும்…”

    என்ற மரபு வரிகளிலும்,

    “நாயகனைச் சிலை வடிவில் நாட்டி வைத்த சைவர்திருக்
    கோயிலுக்குள் நான் போனேன் தோழீ-நிலை
    கொள்ளவிலை வநதுவிட்டேன் தோழீ!”
    “………………………………………………- இந்தக்
    கொக்குக்குத் தேவைதன் கூரிய மூக்கினில்
    சிக்கிடும் மீன் மட்டுமே-அதன்
    தேவைகள் வாழட்டுமே”
    “தோட்டத்திலே தென்னை இரண்டு
    முற்றித் திரண்டு
    பக்கம் உருண்டு”

    போன்ற சிந்து நடையிலும்

    “மெத்தைச் சுகத்துக்கும் மேலெழுமோர் வேட்கைக்கும்
    தத்தைச் சுகத்துக்கும் தத்தளிக்கும் ஆசைக்கும்..
    எத்தைத் தான் நம்புவதோ எதனைத் தான் நாடுவதோ
    அங்கொருகால் இங்கொருகால் ஆடும் சிறுமனமே”

    போன்ற சுயதரிசனக் கவிதைகளிலும்,

    பழுத்த ஆன்மிகவாதியாகத் தன் அர்த்தமுள்ள இந்துமதம் கட்டுரைகளிலும் பலபரிமாணங்களில் மின்னிய கவியரசரை மரியாதையுடன் நினைவு கூர்கிறேன்.

    ” படகோடு கங்கை குகனாக வேண்டும்
    பணிவான ஆசை ரகுராமா”

    என்கிற அவர்தம் வைரவரிகளுக்குக் காணிக்கை யாக இந்த ஓவியத்தை சமர்ப்பிக்கிறேன்!

    5DABB29D-9765-4862-AB7B-BD87167F448E

     

    B82CEDAF-888E-4292-AA72-B97ACD0922C0

    சு.ரவி

     

     

    Share
  • பால்கி என்று சொல்லப்படும் பல்லக்குப் பயணம்

    — சு.ரவி.

    வணக்கம், வாழியநலம்

    one-A433C84C-FEF4-43C3-B40C-C66B85662B48

    இன்று பால்கி என்று சொல்லப்படும் பல்லக்குப் பயணம்.

    ஆடிப் பட்டம் விதைத்து நடவு முடித்த விவசாயப் பெருமக்கள் பண்டரிபுரம் நோக்கி 250 கி.மீ நடைபயணம் மேற்கொள்ளும் தினம்.

    மஹான்  ஞானேஸ்வர் மற்றும் மஹான் துக்காராம் ஆகியோரின் பாதுகைகளைத் தாங்கிய பல்லக்குகளை இரட்டைக் காளைகள் பூட்டிய வண்டிகள் சுமக்க, புனே நகரின் அருகில் உள்ள ஆலந்தி மற்றும் தேஹு கிராமங்களில் இருந்து புறப்பட்டுப் பந்தர்பூர் விட்டலனை ஆஷாட ஏகாதசி அன்று தரிசிக்கப் பெருந்திரளாகச் செல்லும் தினம்.

    ஒரே நேரம் சுமார் பத்துப் பதினைந்து லக்ஷம் பக்தர்கள்! ஒவ்வொரு ஆணின் கையிலும் தம்புரா அல்லது டோல்கி அல்லது ஜாலரா.ஒவ்வொரு பெண்ணின் தலையிலும்  ராதையை ஆவாஹனம் செய்த துளசிமாடம்….

    அனைவர் நாவிலும் விட்டலன் நாமம்..அனைவர் பாதங்களிலும்  ஒரு துள்ளல்..

    வீதியெங்கும், விண்வெளியெங்கும் அபங்க முழக்கம்.

    பாண்டுரங்க ஹரி! ராமக்ருஷ்ண ஹரி! என்ற கோஷம்!

    இந்த பக்திப் பரவச வெள்ளத்தைக் காணக் கண்கோடி வேண்டும்.

    புகைப் படங்களையும் என் விட்டலன் ஓவியத்தையும்

    பார்க்க, ரசிக்க.

    two-23991446-E41A-467D-8349-FA18D957A475

    three-3B10E9EE-8C28-497B-AA3B-B18F259B5702

    5795E970-F685-44B6-8FA8-5424D5367122

    Share