Tag: ச. கண்மணி கணேசன்

  • அக இலக்கியச் சிறு பாத்திரங்கள் – 14 (தலைவியின் தந்தை)

    அக இலக்கியச் சிறு பாத்திரங்கள் – 14 (தலைவியின் தந்தை)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர் & தமிழ்த் துறைத்தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    சிறுபாத்திர வரிசையில் அடுத்து நிற்கும் தந்தை என்ற உறவுமுறை அகஇலக்கியத்தில் தலைவியின் தந்தை, தலைவனின் தந்தை, தலைவனே தந்தை என்னும் மூன்று நபர்களுக்கு உரியதாக இருப்பதே அப்பாத்திரத்தின் தனிச்சிறப்பாக  உள்ளது. அகஒழுக்கம் பேசும்  தொகை நூல்களில் எங்கும்; தந்தை பாடல் காட்சியில் நேரடியாகப் பேசவே இல்லை. அவர் பேசுவதைத் தோழியும் தலைவியும் எடுத்துச் சொல்வதாக மூன்று பாடல்கள் உள்ளன.

    தந்தையின் பேச்சு

    தன் செல்லமகள் தரையில் நடந்தால் கூடத் தாங்கமாட்டாமல் ‘தரையில் நடக்கிறாயே! உன் கால்கள் சிவந்து விடும்’ என்று அங்கலாய்க்கும் தந்தையின் இயல்பான அன்பின்  ஈர்ப்பைத் தோழி தலைவனிடம்;

    “எந்தையும் நிலனுறப் பொறாஅன் சீறடி சிவப்ப
    எவனில குறுமகள் இயங்குதி என்னும்” (அகம்.- 12)

    என எடுத்துரைத்து ‘உடன்போக்கு வேண்டாம்; பெண்கேட்டு வந்து மணந்து கொள்’ எனத் தூண்டுகிறாள்.

    “இன்தீம் பலவின் ஏர்கெழு செல்வத்து
    எந்தையும் எதிர்ந்தனன் கொடையே” (அகம்.- 282)

    என்று மகள் விரும்பிய தலைவனுக்கே அவளை மணம்செய்து கொடுக்கச் சம்மதித்த தந்தை பற்றியும் தோழியே உரைக்கிறாள். மணம் செய்து கொடுக்க உடன்பட்டமை குறித்துப் பேசும் பிற பாடல்களும் உள (கலி.- 41, 107). மகட்கொடைக்குத் தந்தை ஒருப்பட்டமை பற்றித் தலைவியும் எடுத்துச்சொல்கிறாள் (குறுந்.- 51).

    தந்தை பற்றிப் பேசும் தலைவன் 

    காதல் வயப்பட்ட தலைவன் தன் காதலியின்  இளமைநலமும், செல்வச்  செழிப்பும் பற்றித்  தனக்குள் பேசிக் கொள்ளும் போது;

    “பெருங்கண் ஆயம் உவப்ப தந்தை
    நெடுந்தேர் வழங்கும் நிலவுமணல் முற்றத்து”ப் (நற்.-140)

    பந்தாடும் பருவத்தையும், செல்வத்தின் அடையாளமாக அவளது தந்தையின் வளமனை முற்றத்தில் இருந்த தேரையும் காட்சிப்படுத்துகிறான்.

    தோழியிடம் உடன்போக்கிற்கு  மறுக்கும்போது;

    “பெரும்பெயர் தந்தை நீடுபுகழ் நெடுநகர்” (நற்.- 162)

    என்று அவளது மாளிகை வாழ்வையும், தந்தையின் நற்பெயரையும் எடுத்துச் சொல்லியே தலைவன் தயங்குகிறான். நகர் என்பது மாளிகையையே குறிக்கும்.

    பாங்கனிடம் தான் விரும்பும் தலைவியின் பெருமை பேசும்போது உண்ண மறுத்து ஓடி ஒளிந்து தாயை அலைக்கழிக்கும் அவள்;

    “செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்” (நற்.- 324)

    வளமான வாழ்க்கை உடையவள் என்று தந்தையின் செல்வம் மிகுந்த மாளிகைக்குச் சிறப்பளிக்கிறான்.

    தலைவியிடம் பேசும் போது; காதலித்த பெண்ணைக் கைப்பிடிக்கத் தமரோடு வந்து பெண்கேட்கும் முறை இருப்பினும்; திட்டவட்டமாகப் பெண் கொடுக்கச் சம்மதிப்பாரெனின்;

    “நுந்தை நும் ஊர் வருதும்
    ஒண்டொடி மடந்தை நின்னை யாம் பெறினே” (ஐங்.- 92)

    என்று தலைவியின் தந்தை மனநிலை அறிய ஆவலுறுகிறான். இதுபோல் அவளது செல்வமிகுந்த வாழ்க்கை முறையைச் சுட்டும் போதும் (கலி.- 57), மாலைப்பொழுதில் அவளைச் சந்திக்கத் திட்டமிடும் போதும் (நற்.- 204), உடன்போக்கின் போது அவளை மகிழ்விக்கும் போதும்  (நற்.- 202, 362; அகம்.- 99) அவளது தந்தையைக் குறித்துப் பேசுகிறான்.

    தந்தை பற்றிப் பேசும் தலைவி

    களவுக்காலத்தில் பிரிந்து இருக்கும் தலைவனை எண்ணி ஆற்றி இருக்கும் தலைவி  ஆற்றோடு பேசும்போது; ‘என் விருப்பத்திற்கு உரிய காதலனின் மலையிலிருந்து உன்னைப் பூவால் மறைத்துக் கொண்டு வருகிறாய். ஆரியரின்;

    “பொன்படு நெடுவரை புரையும் எந்தை
    பல்பூங் கானத்து அல்கி இன்று இவண்” (அகம்.- 398)

    வேங்கை மரநிழலில் தங்கி; மழை பொழியப் பெருகிப் பின்னர் செல்வாயாக’ என்கிறாள். தன் தந்தையின் காடு இமயமலைக் காட்டை ஒத்தது என்னும் பெருமிதம் அவள் பேச்சில் விஞ்சி நிற்கிறது.

    களவுக்காலக் கேண்மையில் தலைவனை நன்கு புரிந்து கொண்டு;

    “கொள்ளாது போகாக் குணன் உடையன் எந்தை தன்” (கலி.- 61)

    ‘மனம் குறைவுறாதபடி வேண்டுவன கொடுத்து; என்னைக் கைப்பற்றாமல் போக மாட்டான்’ என; அவனது நினைத்ததைச் சாதிக்கும் பண்பைப் பற்றித் தோழியிடம் பேசுங்கால் தந்தை மனம் குளிரும் என்ற எதிர்பார்ப்புடன் தலைவி பேசுகிறாள். இதுபோல் தோழியிடம் பகற்குறி குறித்தும் (குறுந். – 269), இரவுக்குறி குறித்தும் (அகம்.- 370), அறத்தொடு நிற்க வற்புறுத்தியும் (கலி.- 111) பேசும்போது தந்தையைக் குறிப்பிடுகிறாள்.

    பரத்தையை நோக்கிப் பேசும் தலைவி;

    “எந்தை எனக்கு ஈத்த இருவளை ஆரபூண்” (பரி.- 20)

    ஆகிய ‘இவை உனக்கு வந்த வழி களவுவழி இல்லையெனில்; உனக்கு இவற்றைத் தந்தவனை எனக்குக் காட்டு’ என்று வினவுகிறாள்.

    தந்தை பற்றிப் பேசும் தோழி

    அறுவடை தொடங்கி விட்டதால் தலைவி தினைப்புனம் காக்க வரமாட்டாள்; அவளைப் பகலில் சந்திக்க இயலாது என்று தலைவனுக்கு உணர்த்தும் தோழி;

    “தந்தை வித்திய மென்தினை” (நற்.- 306)

    என புன்செய் வேளாண்மை தலைவியின் தந்தைக்குரிய தொழில் என்பதை முதன்மைப்படுத்துகிறாள். இதுபோல் பிரிவுக் காலத்தில் தலைவியின் விருப்பம் பற்றியும் (ஐங்.- 6), பகற்குறி பற்றியும் (அகம்.- 80, 308), இரவுக்குறி பற்றியும் (நற்.- 98; அகம்.- 298), தாய்க்குத் தெரிந்தால் ஏற்படும் ஏதம் பற்றியும் (நற்.- 317) பேசும் போதெல்லாம் தலைவியின் தந்தை இடம் பெறுகிறார்.

    தலைவியுடன் தந்தை பற்றிப் பேசும் தோழி தலைவன் சிறைப்புறமாக நிற்கக் குறியிடத்தைத் தேர்வு செய்கிறாள்.

    “பெருநீர் அழுவத்து எந்தை தந்த கொழுமீ”னை (அகம்- 20)

    ‘வற்றலாக உணக்க நாங்கள் கடற்கரை மணல்மேட்டில் உள்ள புன்னைமர நிழலில் இருப்போம்’ என்று கூறும்போது; தலைவியின் தந்தை கடலில் மீன் பிடிக்கும் தொழில்  முதலிடம் பெறுகிறது. இதுபோல் அறத்தொடு நின்றமை குறித்தும் (குறுந்.- 374), தினைப்புனம் காக்கச் சொன்னமை குறித்தும் (நற்.- 134),  பேசும் போது தந்தை மதிப்புடன் சுட்டப்படுகிறார்.

    செவிலியிடம் அறத்தோடு நிற்கும் தோழி;

    “நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி”த்  (குறிஞ்சிப்- அடி- 20)

    தலைவி தலைவனுடன் கொண்ட களவொழுக்கம் பால்வயத்தான் தந்தையின் காவலை மீறி நிகழ்ந்தது என்று கூறிடினும்; தந்தையின் செல்வவளத்தையும், மகளைக் காக்கும் பொறுப்புணர்வையும் சுட்டுவது நோக்கத்தக்கது. செவிலியிடம் தலைவியின் களவொழுக்கத்தை மறைக்கும் போதும் (அகம்.- 158) தந்தைக்கு இடமுண்டு.

    தந்தை பற்றிப் பேசும் தாய்

    மகட்போக்கிய தாயின் வாய்மொழியில்; தன்மகள் நற்பெயர் பெற்ற தந்தையின் அரிய காவலைக் கடந்து; என்னையும் நினைக்காமல்; தோழியரையும் பிரிந்து எவனோ ஒருவனுடன் சென்று விட்டாளே எனும் புலம்பல் வெளிப்படுகிறது.

    “நெடுமொழித் தந்தை அருங்கடி நீவி” (அகம்.- 17)

    என்ற பாடலடி தந்தையின் புகழையும், மகளை அவன் காத்த பொறுப்பையும் ஒருங்கு சொல்கிறது. இதுபோல் அவளை உண்ண வைக்கத் தான் பாடு  பட்டமையை  (அகம்.- 219) உரைக்கும் போதும் ‘தந்தை பங்கிற்கு இதை உண்’ என்று வற்புறுத்தியமை பற்றிக் கூறுகிறாள்.

    உடன்போன மகளைப் பிரிந்த சோகம் தீராத தாய்; தான் தேடிச் சென்ற இடைச்சுரத்தில் இன்னொரு இணையான தலைமக்களைப் பார்த்தவுடன்; தன் மகளை ஒத்த அப்பெண்ணை அவளது காதலனுடன் ஊருக்கு அழைத்து வந்து விருந்து உபசரிக்கிறாள். தன்னைப் பிரிந்தவளின்

    “தந்தை தன் ஊர் இதுவே” (நற்.- 198)

    என்று சொல்லிக் கண்டோரிடம் தந்தையே மகளுக்கு உரிய முகவரி என்பதை அடையாளப்படுத்துகிறாள்.

    பின்புலத்தில் தந்தை

    ஆயத்துடன் விளையாடும் பரதவப் பெண்கள் மீன் வேட்டை முடிந்து வரும் திமில்களைக் காட்டி;

    “எந்தை திமில் இது நுந்தை திமில் என” (நற்.- 331)

    விளையாட்டின் இடையில் தம் தந்தை திமிலையும் பிறர் திமிலையும் அடையாளம் கண்டு சுட்டுவதைக் காண்கிறோம்.

    திருமணத்திற்குப் பின் தன் வீட்டு முற்றத்தில் நிற்கும் பலா மரத்துக் கனிகளைக் குரங்குகள் உண்ணாதபடி அங்கே உரலில் குற்றும் கொடிச்சியின் உலக்கைப்பாட்டு அவளது தந்தையின் மலை பற்றியது.

    “தந்தை மைபடு நெடுவரை பாடினள்” (நற்.- 373)

    என்றே பாடற்பின்புலம் அமைகிறது.

    உவமையில் தந்தை

    வெண்கல் உப்பை விற்கச் செல்லும் போது; சேற்றிலே சிக்கிய வண்டியை அரிதின் முயன்று இழுக்கும் பகடு போல்; மீள இயலாதபடி  அவளது கண்கள் என் உயிரை நோகச் செய்கின்றன எனத் தலைவன்  சித்தரிக்கும் போது;

    “எவ்வம் தீர வாங்கும் தந்தை
    கைபூண் பகட்டின் வருந்தி” (அகம்.- 140)

    அவளைத் தவிர்க்க முடியாத தன் வருத்தத்தைத் தெரிவிக்க; தந்தையின் தொழிலையே  அடிப்படையாகக் கொண்டு  உவமிக்கிறான் தலைவன்.

    தந்தையின் வாழ்விடமும் தொழிலும் இனமும்

    தந்தை பற்றிய குறிப்புகள் அனைத்தும் அவன் வாழும்  நிலம், செய்யும் தொழில், சார்ந்த இனம் ஆகியவற்றைத் தாங்கியுள்ளன.

    “தேன்நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை” (அகம்.- 58)

    என்னும் பின்புலத்தில் குறிஞ்சித்திணை சார்ந்த தந்தை இடம்பெறுகிறான். அவன் குளிர் காலத்தில் வீட்டின் உள்ளே புலித்தோல் படுக்கையில் தூங்குபவனாகக் காணப்படுகிறான் காட்டில் ஆடு மேய்க்கும் தந்தைக்குக் கறவைக்கலம் கொண்டு கொடுக்க வேண்டிய தன் கடமையை  உணர்ந்து தலைவனிடம்;

    “இனத்துளான் எந்தைக்குக் கலத்தொடு செல்வதோ” (கலி.- 108) என; ‘உன் நெஞ்சை என் இருப்பிடமாகக் கொள்வது எப்படிச் சாத்தியம் ஆகும்? அப்படிக் கொண்டால் என் தந்தைக்குக் கறவைக்கலம் கொடுப்பது எப்படி?’ என்று வினவும் தலைவியின் தந்தை முல்லைத் திணைமாந்தன் என்பது சொல்லாமலே விளங்குகிறது.

    தன் தந்தைக்கு ஆற்றில் பிடித்த வரால் மீனை வஞ்சி விறகில் சுட்டு ஊட்டும் காட்சியைப் பின்புலமாகக் காட்டும் பாடல்;

    “நாரரி நறவுண்டு இருந்த தந்தைக்கு”ப் (அகம்- 216)

    பாசத்துடன் உணவளித்த பாணர் குலத்துப் பெற்றவன் மகள் உறவைப்  புனைந்துரைக்கிறது.

    இரவுக்குறி நேரும் தோழி;

    “நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்” (நற்.- 323)

    பற்றித் தொடரும் போது அத்தந்தை பரதவன் என்று தெளிவாகிறது.

    உப்பிற்கு மாறாகப் பெற்ற நெல்லைச் சோறாக்கி அயிலைமீன் குழம்பு ஊற்றி உண்ணக் கொடுக்கும் உமட்டியை;

         “………………… ………… ………… தந்தைக்கு
    உப்புநொடை நெல்லின் மூரல் வெண்சோறு
    அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து
    கொழுமீன் தடியோடு குறுமகள் கொடுக்கும்” (அகம்.- 60)

    என்று புனையும் பாட்டில் தந்தை மீன்பிடிக்கும் செய்தி முதலில் இடம் பெறினும்; உப்பு விற்ற உமட்டியின் தந்தையை உமணன் என்று சொல்வது ஏற்புடைத்தே.

    மகள் உடன்போன பின்னர் அவளைத்  தேடியலையும் தாய்;

    “கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின்” (அகம்.- 145)

    ‘செல்வ வாழ்க்கையும்; நடந்தால் கூட அடி வருந்தும் மென்மையும் கொண்ட மகளைக் கோலால் முதுகில் நையப் புடைத்தேனே’ என்று தன்னையே நொந்து கொள்கிறாள். இங்கே ‘கூழுடைய தந்தை’ என்பதால் அத்தந்தை புன்செய் வேளாண்மை செய்யும் கிழான் என்று குறிப்பாக அறிய முடிகிறது.

    தலைவியின் தந்தைக்குப் பெருமை சேர்க்கும் பண்புகள்

    தலைவியின் தந்தைக்கு  செல்வம் முதல்  பெருமையாகப் பலவிடங்களில் பேசப்படுகிறது. பிறந்த வீட்டில் தலைவி எவ்வளவு ஆடம்பரத்துடன் வாழ்ந்தாள் என்று சொல்லிப் பின்னர்த் தொடரும் போது தந்தையின் பெருமைக்கு செல்வமே காரணம் என உணர இயல்கிறது.

    “தந்தை அல்குபதம் மிகுந்த கடியுடை வியனகர்” (அகம்.- 49)

    என்ற தாயின் மொழி வயிற்றுப்பசிக்கு வாய்ப்பில்லாத செல்வமுடைய தந்தையைத் தான் நமக்கு அறிமுகம் செய்கிறது.

    தன் செல்வத்தைத் தந்தை பலருக்கும் ஈந்தான் என்பதால்;

    “இவள் தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும்
    விழுப்பொருள்”

    என அவன் புகழப்படுகிறான் (கலி.- 61).

    தனது பங்காளிகளை எல்லாம் தாங்கும் பெருமை பொருந்திய;

    “முளையணி மூங்கிலிற் கிளையொடும் பொலிந்த
    பெரும்பெயர் எந்தை” (அகம்- 268)

    என்று போற்றப்படுவது இன்னொரு சிறப்பு. மூங்கில் முளைகளைப் போல் பல கிளைகளைக் கொண்ட குடும்பம் நம் கற்பனைக்கு வளம் சேர்க்கிறது.

    பரதவர் குலப் பெண்ணுடைய  தந்தையின் பெருமை; அவன் சுறாமீனைக் கொன்ற வினைத்திறன் என வெளிப்படுகிறது.

    “கடும் சுறா எறிந்த கொடும்தாள் தந்தை” (நற்.- 392)

    என்று அவன் போற்றப்படுகிறான்.

    “அஞ்சாயோ இவள் தந்தை கைவேலே” (ஐங்.- 60)

    என்று மருதநிலத் தலைவனிடம் தோழி கேட்பது பொதுவாகவே எல்லாத் தந்தையரும் ஆயுதத்தோடு இருந்ததைக் காட்டுகிறது.

    தந்தைக்கு இழிவு

    தலைவனோடு தான் கொண்ட  நட்பு தன் வாழ்வின் திசையை மாற்றப் போகிறது என்று புரிந்த பொழுது; உடன்போகுமுன் தன்னால் தந்தையின் நற்பெயருக்கு இழுக்கு நேரப் போகிறது என்று வருந்துகிறாள்.

    “பெரும்பெயர் எந்தை அருங்கடி நீவி”த் (அகம்.-268)

    தானெய்திய கேண்மையால் பழி ஏற்பட்ட கவலையில் சோர்கிறாள்.

    தந்தையின் கடமை

    மகள் பாதுகாப்பைப் பொறுத்த மட்டில் இருவேறு நிலைகளைக் காண இயல்கிறது. வேளாளர் இனத்தந்தை  தன் மகளைக் காத்து நிற்பதொன்றே கடப்பாடுடையவன் எனக் கருதப்பட்டான்.

    “………….. …………… …………  தந்தை
    அருங்கடி காவலர் சோர்பதன் ஒற்றி
    கங்குல் வருதலும் உரியை” (அகம்.- 2)

    என்று தோழி தலைவனை; இரவுப்பொழுதில் எவ்வாறு தந்தையின் காவலர் சோர்ந்து இருக்கும் நேரத்தில் வரவேண்டும் என்று அறிவுறுத்துகிறாள்.

    திணைமாந்தருள் தந்தை தேவைப்படும் பொழுதெல்லாம் மகளை வேளாண்மையில் காவல் தொழிலுக்கு அனுப்புகிறான். புனக்காவலுக்கு நேரமும் வாய்ப்பும் ஒதுக்கி அவளை ஏவல் செய்பவன் தந்தையே.

    “எந்தை வந்து உரைத்தனனாக அன்னையும்” (நற்- 206)

    சேர்ந்து தம்மைப் புனக்காவலுக்கு அனுப்பியதாகத் தான் தோழி தலைவனிடம் உரைக்கிறாள். அறுவடைக்காலத்தில் தலைவி வீட்டில் பாதுகாப்புடன் இருக்க வேண்டி வரும் என்பது தொடரும் செய்தியாகும்.

    வரலாற்றுக் குறிப்புகளில் தந்தை

    அகப்பாடல்களில் பண்டைத்தமிழகத்து வரலாற்றுச்செய்திகள் பல விரவிக் கிடக்கின்றன. அவற்றுள் பெண்டிரின் தந்தையைச் சுட்டி அமையும் குறிப்புகளுள், சேந்தனின் தந்தை அழிசியின் ஆர்க்காடு போன்ற தலைவியின் நலம் என்னும் உவமையால்   பெருமைப்படுத்தப்படும் வேளாளனின் நெல்வளம் பின்புலமாக அமையத் தன் காதலியின் இதழ்ச் சிரிப்பைப் பற்றி நெஞ்சோடு;

    “திதலை எஃகின் சேந்தன் தந்தை
    தேன்கமழ் வியன்தார் இயல்தேர் அழிசி” (நற்.- 190)

    எனப் பேசுகிறான் தலைவன். இதே பின்புலம் இன்னொரு பாடலிலும் (குறுந்.- 258) அமைந்து; அக்காலத்தில் யானை உடைய இக்குறுநில மன்னன் எவ்வளவு சிறப்புப் பெற்றிருந்தான் எனப் புலப்படுத்துகிறது.

    அன்னி மிஞிலியின் வரலாறு அவள் தந்தை மேல் கொண்டிருந்த பாசத்தையும், மனஉறுதியையும், வீரத்தையும் காட்டுகிறது. கோசர் இரக்கமின்றி அவளது தந்தையின் கண்களைப் பிடுங்கி விட்டதால் (அகம்- 262) அவள் வஞ்சம் கொண்டு அவர்களைக் கொன்றாள் என்பதை;

    “……………….. ………….. ……………………… தந்தை
    கண்கவின் அழித்த தன் தப்பல் தெறுவர” (அகம்.- 196)

    என அவள் பழி தீர்த்துக் கொண்டதைப் பார்க்கிறோம்.

    அகுதை என்னும் திணைமாந்தர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மகளின் தந்தை; சோழமன்னன் பருவூர்ப் போரில் சேரபாண்டியரை  வென்றபோது தோற்ற வேந்தரின் யானைகளைக் கவர்ந்தான் (அகம்.- 96)

    “இன்கடும் கள்ளின் அகுதை தந்தை” (குறுந்.- 298)

    என்று கள்ளோடு சேர்த்துப்  புனையும் முறை திணைமாந்தர் சமுதாயத்தின்  அடையாளமாகத் தொகைநூல்களில் காணப்படுகிறது.

    ஐயை எனும் மகளின் தந்தை தித்தன் எனும் வரலாற்றுச் செய்தி;

    “இழையணி பணைத்தோள் ஐயை தந்தை
    மழைவளம் தரூஉம் மாவண் தித்தன்” (அகம்.- 6)

    எனும் பாடலடிகளில் உள்ளது. இது உறந்தையை ஆண்ட குறுநில மன்னன் பற்றியது. இவனை வீழ்த்தித் தான் சோழர் தம் தலைநகரை நிறுவினர்.

    ‘தந்தை’ சிறுபாத்திரம் உணர்த்தும் சமூகக்கொள்கைகள்

    மகள் பாதுகாக்கப்பட வேண்டியவள் என்னும் சமூகக் கொள்கை தந்தை பற்றிய பாடற்குறிப்புக்களால் விளக்கம் பெறுகிறது. அத்தகு காவலை மீறித் தன் காதலியை இரவுக்குறியில் சந்தித்தமை தலைவனுக்குக் குறிப்பிடத்தக்க பெருமிதத்தையும் கொடுக்கிறது.

    “அருங்கடிக் காவலர் இகழ்பதம் நோக்கிப்
    பனிமயங்கு அசைவளி அலைப்ப தந்தை
    நெடுநகர் ஒருசிறை நின்றனென் ஆக” (அகம்- 162)

    என்று தனது தீரச்செயலாகவே; தலைவியைச் சந்தித்த நிகழ்வைத் தலைவன் வருணிக்கிறான். நள்ளிரவில் பனிக்காற்றால் நடுங்கிக் கொண்டு காவலர் சோர்ந்து போகும் நேரத்திற்காகக் காத்து நின்று; தலைவியது தந்தையின் மாளிகைப் புறத்தில் நின்றமையை மனக்குறை ஏதுமின்றிச் சாதனையாகத் தான் தலைவன் கூறுகிறான். பாணர் குலத் தந்தையும் மகள் பாதுகாப்பைத் தலையாய கடனாகக் கொண்டமை;

    “அருங்கடி அயர்ந்தனன் காப்பே எந்தை ” (நற்.- 295)

    என்ற ஔவையாரின் பாடலடியில் புலனாகிறது.

    ஆணாதிக்கச் சமுதாயம் ஆதலால்; ‘தந்தையின் மனை’ என்றே சொல்லப்படுவதைக் காண இயல்கிறது. தலைவி தலைவனோடு செல்லும்போது;

    “……… …………. ………  நுந்தை
    மனைவரை இறந்து வந்தனை” (நற்- 362)

    என்கிறான் தலைவன். ‘தாய்வீடு’ என்ற தொடரைக் காண இயலவில்லை.  குடும்பத்தலைவனாகிய தந்தையே எங்கும் முதன்மை பெறுகிறான். வேளாளர் வளமனை மட்டுமின்றிக் குறிஞ்சித் திணைமாந்தரின் வேங்கைப்பூ உதிர்ந்த முற்றமும்;

    “…………………………. எந்தை வேங்கை
    வீஉக விரிந்த முன்றில்” (நற்.- 232)

    எனத் தந்தையையே முதலுரிமைக்குரியவன் எனச் சொல்வதைக் காண்கிறோம். அன்றைய சமுதாயத்திலிருந்த  ஆணாதிக்கம் தலைவியது ஊரைச் சுட்டும் முறையிலும் புலப்படுகிறது.

    “கவின்பெறு சுடர்நுதல் தந்தை ஊரே” (ஐங்.- 94)

    என்று தலைவன் சொல்வது தலைவிக்குரிய அதிகாரபூர்வமான அடையாளம்; அவளது தந்தை என்ற போக்கில் தான் அமைந்துள்ளது.

    வேளாளன் ‘அந்தணர்க்கு நீரோடு சொரிந்து ஈந்த பின்னர் எஞ்சிய பொருளுடன் சோற்றையும் எல்லோர்க்கும் தரும் பெருமையன்’ என்று தன் காதலியின் தந்தை பற்றிப் பாங்கனிடம் பெருமை பேசும் தலைவன்;

    “நிரைகோல் குறுந்தொடி தந்தை ஊரே” (குறுந்.- 233)

    என்று தலைவியின் ஊரை அவளது தந்தையின் ஊர் என்று சிறப்பிக்கிறான். அந்தணர்க்கு நீர் சொரிந்து ஈவதே முதன்மை பெறும் என்ற  அன்றைய சமுதாயக்  கொள்கை நோக்கத்தக்கது.

    இல்லறத்தில் ஈடுபடும் தலைவியின் குடும்பம் வறுமையில் வாடும்  போது அதைத் தந்தையின் செல்வவளத்துடன்  முரண்படுத்திக் காட்டி;

    “கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
    கொடுத்த தந்தை கொழுஞ்சோறு கொள்ளாள்” (நற்.- 110)

    என்று பாடும் பகுதி கூடத்  ‘தந்தையின்  செல்வத்தைப் புகுந்த வீட்டில் இருந்துகொண்டு வாங்குவது இழுக்கு; கணவனுக்குப் பெருமை சேர்க்காது’ என்ற தலைவியின் கொள்கையைச் சிறப்பிப்பதாக அமைகிறது.

    தன் தந்தை தனக்குச் செய்து கொடுத்த வளையலும் ஆரமும் இன்னொரு பெண்ணை அலங்கரித்து இருப்பதைக் கண்டவுடன் (பரி.- 20) ‘இவை உனக்கு வந்த வழி களவுவழி இல்லையெனில்; உனக்கு இவற்றைத் தந்தவனை எனக்குக் காட்டு’ என்று வினவுகிறாள் தலைவி. திருமணத்தின் போது தந்தை தன் மகளுக்குப் பொன்நகை போட்டு அனுப்பும் வழக்கம் ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தது என்பதைத் தலைவி கேட்கும் கேள்வியில்  இருந்து அறிகிறோம்.

    தலைவியின் காதலொழுக்கம் அறிந்து தந்தையும் தமையன்மாரும் தீர விசாரித்துச் சம்மததித்ததைத்  தலைவியிடம் தெரிவிக்கிறாள்  தோழி.

    “பொய்யில் பொதுவர்க்கு அடைசூழ்ந்தார் தந்தையொடு
    ஐயன்மார் எல்லாம் ஒருங்கு” (கலி.- 107)

    என மணம் உறுதி செய்யப்பட்டதைக் கூறும் அவளது சொற்களில்; திருமண நிச்சயதார்த்தம் அடைக்காய் என்று அழைக்கப்படும் பாக்கு வெற்றிலையோடு ஈராயிரம் ஆண்டுக் காலமாக நடைபெறுவதையும், அதைத் தந்தை முன்னின்று நடத்தினார் என்பதையும் புலப்படுத்துகின்றன.

    தலைவியின் தந்தை- அன்றும் இன்றும் 

    தலைவியைக் கண்டு காதல் வயப்படும் தலைவன்;

    “யார் மகள்கொல் இவள் தந்தை வாழியர்” (நற்.- 8)

    என்று வாழ்த்துவது இங்கு தலைவியைப் பெற்றவனையே  குறிக்கிறது. இன்றைய திரைப்படப் பாடற்போக்கும் செவ்விலக்கியத்தை அடியொட்டி அமைந்திருப்பதை இங்கு ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் இடம்பெறும்

    ‘ஊதாக் கலரு ரிப்பன்- உனக்கு யாரு அப்பன்?
    நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்’

    என்ற பாடல் செவ்விலக்கியக் கருத்தை இக்காலத் தமிழில் தருகிறது.

    தொகுப்புரை

    தொகை நூல்களில் எங்கும் தந்தை பாடல் காட்சியில் நேரடியாகப் பேசவே இல்லை. அவர் பேசுவதைத் தோழியும் தலைவியும் எடுத்துச் சொல்கின்றனர். அவரைப் பற்றித் தாயர்,  தலைவி, தலைவன், தோழி ஆகியோர்; தமக்குள்ளும், தத்தம் நெஞ்சோடும், பரத்தையிடமும், கண்டாரிடமும்,  காமம் மிக்க கழிபடர் கிளவியாக ஆற்றோடும் பேசுகின்றனர். பரதவர், குறவர், கிழார், ஆயர், உமணர், பாணர், வேளாளர் என அவரவர் இனத்தோடு குறிப்பாகவோ; அன்றி வெளிப்படையாகவோ சேர்த்தே தந்தையர் சுட்டப்படுகின்றனர். பின்புல வருணனை,  உவமை,  வரலாற்றுக் குறிப்புகள்  ஆகியவற்றிலும் தந்தைக்கு  இடமுளது.

    தலைவிக்குரிய அதிகாரபூர்வமான அடையாளம்; அவளது தந்தை ஆவார். ஆணாதிக்கச் சமுதாயம் ஆதலால்; ‘தந்தையின் மனை’ என்றும்; ‘தந்தை ஊர்’ என்றும் சுட்டினர். மகள் பாதுகாக்கப்பட வேண்டியவள்  என்பது அன்றைய  சமூகக் கொள்கை. திணைமாந்தருள் தந்தை தேவைப்படும் பொழுதெல்லாம் மகளை வேளாண்மையில் காவல் தொழிலுக்கு அனுப்பினான். எல்லாத் தந்தையரும் ஆயுதத்தோடு இருந்தனர்.

    செல்வமும் அதை ஈதலும் கிளை தாங்கலும் தந்தையின் பெருமை ஆகும். பரதவத்  தந்தையின் பெருமை சுறாமீனைக் கொல்லும் வினைத்திறன் ஆகும். தலைவியின் உடன்போக்கு தந்தைக்குப் பழி ஏற்படுத்தியது.

    திருமணத்தின் போது தந்தை தன் மகளுக்குப் பொன்நகை போட்டு அனுப்பும் வழக்கம் ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தது. திருமண நிச்சயதார்த்தம் அடைக்காய் என்று அழைக்கப்படும் பாக்கு வெற்றிலையோடு ஈராயிரம் ஆண்டுக் காலமாக நடைபெற்றது. அதைத் தந்தை முன்னின்று நடத்தினார். தந்தையின்  செல்வத்தைப் புகுந்த வீட்டில் இருந்து கொண்டு வாங்குவது இழுக்கு; கணவனுக்குப் பெருமை சேர்க்காது என்ற கொள்கை நிலவியது. அந்தணர்க்கு நீர் சொரிந்து ஈவதே முதன்மை பெறும் என்பது  அன்றைய சமுதாயக்  கொள்கை. இவற்றைத்  தந்தை பாத்திரம் மூலம் அறிகிறோம்.

    தலைவியைக் கண்டு காதல் வயப்படும் தலைவனின்; செவ்விலக்கியப் பாடல் போக்கை இக்காலத் திரைப்படப் பாடலிலும் காண முடிகிறது.

    Share
  • அக இலக்கியச் சிறு பாத்திரங்கள் – 13 (அகவன் மகள்)

    அக இலக்கியச் சிறு பாத்திரங்கள் – 13 (அகவன் மகள்)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர் & தமிழ்த் துறைத்தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    அகஇலக்கியச் சிறுபாத்திரங்களின் அகரவரிசைப் பட்டியலில் முதலில் இடம் பெற வேண்டிய பாத்திரம் அகவன்மகள் ஆவாள். தொல்காப்பியம் அகவன்மகள் பற்றிப் பேசவில்லை. தொகைஇலக்கியம் அகவன் மகளை ஒரு பாடலில் நேரடியாகக் காட்சிப்படுத்துகிறது. கட்டுவிச்சி என்னும் அகவன்  மகளிடம்   தோழி  பேசுகிறாள்.

    அகவன்மகளின் தோற்றம்

    தோழி அகவன்மகளிடம் நேரடியாகப் பேசும் பாடல் மட்டுமின்றி; தலைவியிடம் தலைவனின் மனநிலையை விளக்கக்  கையாளும் உவமையில் அகவன்மகளிர் எனும்  தொகைப் பாத்திரம் இடம்பெறும் பாடலும் ஒன்று உளது. இதன் மூலம்  அகவன்மகளின் தோற்றம்  தெளிவாகிறது.

    அகுதை தந்தையிடம் அகவன்மகளிர் பரிசிலாகப் பெண்யானை பெற்றனர்.

    “வெண்கடைச் சிறுகோல் அகவன்மகளிர்” (குறுந்தொகை- 298)

    என அவர்களது தோற்றம் வருணிக்கப்  பெற்றுள்ளது. வெள்ளிய முனையினை உடைய சிறிய கோலைக் கையிலேந்தியவராய் அவர்கள் காட்சி அளிக்கின்றனர். அவளைக் கட்டுவிச்சி என்று விதந்தோதும் பொ. வே. சோமசுந்தரனாரின் உரையும் இதனால் பொருத்தமாகிறது. இன்றைய சமுதாயத்திலும் குறி சொல்பவர் கையில் கோலுடன் இருப்பதைக் காண்கிறோம்.

    தோழி நேரிடையாகப் பேசும் அகவன்மகள் முதியவளாகக் காட்டப் படுகிறாள். அவளது நரைத்த கூந்தல் சங்குமணியைக் கோத்தது போல் வெண்மையாக நீண்டு இருந்தமை;

    “மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
    அகவன்மகளே” (குறுந்.- 23)

    என்ற பாடலடிகளால் தெரிகிறது. இவ்வொப்புமைக்குச் சங்கின் வெண்மை காரணமாக அமைகிறது. அத்துடன் அவளது கூந்தல் சுருண்டு இருந்த தன்மையும் நம் மனக்கண்களுக்குப் புலனாகிறது.

    தோழியின் சொல்வன்மையைக் காட்டுவதற்குரிய கருவி

    தன் மகளின் உடல்மெலிவிற்கும் சோர்விற்கும் காரணம் தேடும் அன்னை கட்டுவிச்சியை அழைத்துக் குறிகேட்கிறாள். கட்டுவிச்சியோ தன் மரபு மாறாமல்; பிறந்த மலை, வழிபடும் தெய்வத்தின் மலை என ஒவ்வொரு மலையையும் வாழ்த்தித் தொடர்கிறாள். தலைவியின் காதல் ஒழுக்கம் பற்றிச் செவிலியிடம் அறத்தொடு நிற்க எண்ணிய தோழி சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்கிறாள்.

    “அகவன்மகளே அகவன்மகளே…
    மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
    அகவன்மகளே  பாடுக பாட்டே
    இன்னும் பாடுக பாட்டே அவர்
    நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே” (மேற்.)

    என்று அகவன்மகளிடம் பேசுவதன் மூலம் தலைவியின் காதலைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறாள். கட்டுவிச்சி பாடிய பாட்டு தலைவனின் மலை பற்றிய பாட்டு. அதை மீண்டும் மீண்டும் பாடச் சொல்லி வற்புறுத்துவது செவிலியின் மனதைத் தெளிவிப்பதற்காகவே ஆகும். தலைவி காதல்நோயால் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறாள் என்ற உண்மையைச் சொல்லாமலே புரியவைக்கும் முயற்சிக்கு அகவன்மகள் பாத்திரம் ஒரு கருவியாக எடுத்தாளப்பட்டுள்ளது. அகவன்மகள் பதிலளிப்பதாகப் பாடல் இல்லை எனினும்; அவள் பாடியமையே  தோழியின் கூற்றுக்கு ஆதாரம் ஆகிறது. சொல்வன்மையையும் காட்டுகிறது.

    அகவன்மகளை மீண்டும் மீண்டும் அழைப்பது நாட்டார் வழக்காற்றின் தலையாய தன்மை ஆகும். மறித்து வரும் தொடர்களைத் தமிழக நாட்டார் பாடல்கள் பலவற்றிலும் காணலாம்

    கட்டுவிச்சியிடம் குறி கேட்கும் நம்பிக்கை ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தது என்பதை இப்பாடல் மூலம் அறிகிறோம்.

    முடிவுரை

    வெள்ளிய முனையினை உடைய சிறிய கோலைக் கையிலேந்திய அகவன்மகளிடம் குறி கேட்கும் நம்பிக்கை ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தது. தோழியின் சொல்வன்மையைக் காட்டுவதற்குரிய கருவியாக அகவன்மகள் பாத்திரம் எடுத்தாளப்பட்டுள்ளது.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 12 (சேரிமக்கள்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 12 (சேரிமக்கள்)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    சிறுபாத்திர வரிசையில் அடுத்து இடம்பெறுவது சேரிமக்கள்  என்னும்   தொகைப்பாத்திரம் ஆகும். ‘சேரிமக்கள்’ என்னும் தொடர் ஒரு பாடலிலும் இல்லை. பாடல் காட்சியில் சேரி மக்கள் நேரில் இடம் பெறவுமில்லை. ‘சேரி’ என்னும் இடவாகு பெயர் சேரிமக்கள் அனைவரையும் குறிப்பாகச் சுட்டுகிறது. தொல்காப்பியரின் ‘பாடல் சான்ற புலனெறி வழக்கி’ல்  சேரிமக்கள் கூற்றிற்கு உரியவராக   இடம் பெறவில்லை. அகப்பாடல்களில் தோழி,   தலைமக்கள் ஆகியோர்  கூற்றில் அவர்கள் பேசியவராக இடம் பெறுகின்றனர்.

    இடவாகுபெயர்ச் சிறுபாத்திரம்
    செவிலித் தாயிடம் அறத்தோடு நிற்கும் தோழி;
    “……………………………. அலர்வாய்
    அம்மென் சேரி கேட்பினும் கேட்க” (அகம்.- 110)

    என்கிறாள். ‘வேண்டுமாயின் அலர் தூற்றும் சேரிமக்களிடம் சென்று கேட்டுக்கொள்; நாங்கள் கடலில் ஆடி; சிற்றில் இழைத்து; சிறுசோறு சமைத்து ஆயத்தோடு விளையாடிய போது; அவன் தான் விருந்துண்ண வரட்டுமா? என்று கேட்டான். இது இழிந்த மீனுணவு; உன்னால் உண்ணலாகாது என்று தான் பதிலிறுத்தோம்…’ எனத் தம்மைத் தாமே காத்துக் கொள்ளும் விதமாகப் பேசும் தோழி சேரியை நமக்கு அலர் தூற்றும் மக்கட்கூட்டமாகத் தான் அறிமுகப் படுத்துகிறாள்.

    “கவ்வை தூற்றும் வெவ்வாய்ச் சேரி
    அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய”த் (அகம்.- 347)

    தலைவன் பிரிந்து செல்கிறான் என்று தோழியிடம் வருந்துகிறாள் தலைவி. ‘சேரிமக்கள் பழி கூற; அது கமுக்கமான அம்பலாகத் தொடர்ந்து; ஊர்மக்களால் ஆரவாரமிக்க அலராவதை நாம் மட்டுமே எதிர்கொள்ளும்படி; நம்மைத் தவிக்கவிட்டு நீங்குகிறான்’ என்கிறாள். இங்கும் சேரி இடவாகு பெயராயிற்று.

    தலைவியின் பண்பைத் துலக்கும் சேரி

    தலைவியின் பாத்திரப் படைப்பைத் துலங்க வைக்க சேரி என்னும் இடவாகு பெயர்ச் சிறுபாத்திரம் பயன்பட்டுள்ளது.

    “சேரியும் மறைத்தாள் என்தோழி” (கலி.- 44)

    எனத் ‘தன் துன்பத்தைச் சேரிமக்கள்  அறியாவண்ணம் பொறுத்துக் கொண்டு மறைத்து வாழ்ந்த தலைவி; தலைவனுக்கு அவப்பெயர் வராமல் காத்தவள் என்னும் பெருமைக்கு உரியவள்’ என்பது தோழி கூற்றாக இடம்பெறும் தலைவி பற்றிய புகழ்மொழி ஆகும். இங்கும் சேரி இடவாகு பெயராக அங்கு வாழ்ந்த மக்களைக் குறிக்கிறது.

    இடப்பெயராகும் சேரி

    பல பாடல்களில் சேரி  இடப்பெயராக அமைந்துள்ளது.

    “ஊரும் சேரியும் ஓராங்கு அலர்எழ”த்  (அகம்.- 383)

    தன் மகள் சென்று விட்டாளே எனச் செவிலித்தாய் புலம்புமிடத்து; சேரி இடப்பெயராகவே பயின்று வருகிறது.

    “வருகதில் அம்ம எம் சேரி” (அகம்.- 276)

    என்று பரத்தை கூறுமிடத்தும்; ‘குதிரையின் மேல் ஏறி எம் சேரிக்கு வந்து தன் தாரும் கண்ணியும் காட்டினான்’ என்று பரத்தை தலைவர்க்குப் பாங்காயினோரிடம் கூறும் போதும் சேரி இடப்பெயரே.

    “கலிமா கடைஇ வந்து எம் சேரி
    தாரும் கண்ணியும் காட்டி” யதால் (நற்.- 150)

    நான் அவனிடம் மயங்கினேன் என்கிறாள் பரத்தை.

    சேரியின் தன்மைகள் 

    சேரி ஊர்ப்புறத்தில் இருந்தது. ஊரை ஒட்டி அமையாத சேரிகள். ஒன்றுக்கு மேற்பட்டனவாய்ச் சேர்ந்து சீறூர் எனப்பட்டன. சேரி புல் வேய்ந்த  குடிசைகளுடன் வளம் மிகுந்ததாகத் தலைவருடன் இருந்தது.

    “ஊர் அலரெழச் சேரி கல்லென” (குறுந். – 262)

    எனும் போதும்; இரவுக்குறி வந்து நீங்கும் தலைவனை எதிர்ப்படும் தோழி;

    “ஊரும் சேரியும் உடனியைந்து அலர் எழ” (அகம்.- 220)

    எனச் சூழலை உணர்த்தும் போதும்; ஊரும் சேரியும் அடுத்தடுத்து இருந்தமை உறுதிப்படுகிறது.

              “…… நல்லூர்……
    ……தமர்தம் அறியாச் சேரியும் உடைத்தே” (நற்.- 331)

    எனத் தலைவனை இரவுக்குறிக்கு ஊக்கும் தோழி ‘இவ்வூரைச் சார்ந்த சேரியில் இரவில்  இவர் நம் உறவினர் என்று கூட  அடையாளம் காண இயலாது; ஆகையால் அயலானாகிய நீ தயங்காமல் வா’ என்கிறாள். இங்கும் ஊரும் சேரியும் அடுத்தடுத்து இருந்தமை தெளிவாகிறது.

    “உறைக்கிணற்றுப் புறச்சேரி” (பட்டி.- அடி- 76)

    என்ற தொடர் இங்கு ஒப்புநோக்கத் தக்கது.

    “ஊரலம் சேரி சீறூர்” (நற்.- 77)

    எனத் தலைவன் தன் நெஞ்சோடு கூறும் போது; ஊரளவு பெரிதாக இல்லாமல் ஒன்றோடொன்று சேர்ந்த சேரிகள் சீறூர் என்று சொல்லத்தக்க அளவு நிலவின என அறிகிறோம். அதனால் தான்;

    “நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
    கொள்ளீரோ எனச் சேரிதொறும்” (அகம்.- 390)

    பண்டமாற்றுக்குக் குரல் கொடுக்கும் உமட்டி சிற்றூரின் ஒவ்வொரு சேரியிலும் ஓங்கிக் கூவியதாகத் தலைவன் பாங்கனிடம் விவரிக்கிறான்.

    “புலாலம் சேரி புல்வேய் குரம்பை” (அகம். 200)

    என்று சுட்டுவதில் சேரி புல்வேய்ந்த குடிசைகளுடன் இருந்தமை தெரிகிறது.

    “மல்லல் எம் சேரி கல்லெனத் தோன்றி
    அம்பல் மூதூர் அலரெழ” (நற்.- 249)

    என்ற தலைவியின் கூற்றில் சேரியின் வளம் முதன்மை பெற்றுக் கௌவை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    சேரியின் தலைவரும் இருந்தனர். அகப்பாடல் தலைவி தன்னை;

         “சேரி கிழவன் மகளேன் யான்” (கலி.- 91)

    என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறாள்.

    இரவுக்குறியை மறுக்கும் தோழி;

    “அம்பல் சேரி அலர் ஆங்கட்டே” (ஐங்.- 279)

    எனச் சேரிமக்களின் தன்மையை நறுக்குத் தெறித்தாற் போல உணர்த்துகிறாள். ‘தம்முள் முகிழ்த்த பழிச்சொல்லை யாவரும் அறியச் சென்று தூற்றும் மக்கள் வாழுமிடம்’ என்ற இவ்விமர்சனம் ஊர்மக்களுக்கும் பொருந்துவதே.

    சேரியின் வகைகள் காட்டும் சமூகநிலை

    வாழும் மக்கள் அடிப்படையில் பரதவர் சேரி, பரத்தையர் சேரி, கூத்தர் சேரி, பாணர் சேரி, மறவர் சேரி எனச் சேரிகளைத் தொகைநூல்கள் வகைப்படுத்துகின்றன.

    “வாலிழை மகளிர் சேரி” (நற்.- 380)

    என்ற பயன்பாடு பரத்தையர் சேரி இருந்தமையை உணர்த்துகின்றது.

    “ஒள்ளிழை மகளிர் சேரி” (அகம்.- 146);

    அதே பரத்தையர் சேரியை மாற்றுச் சொற்களால் உரைக்கிறது.

    “புன்னை ஓங்கிய புலாலம் சேரி” (குறுந்.- 351);

    “புன்னையம் சேரி” (குறுந்.- 320)

    என்றெல்லாம் பரதவர் சேரி பாடப்பெற்றுள்ளது. அங்கு சங்கு வளையல் செய்வோரின் குடியிருப்பு;

    “இலங்குவளை இருஞ்சேரி” (மது.- அடி- 136)

    எனப் பெயர் பெறுகிறது.  வையை வெள்ளம்

    “ஆடுவோர் சேரி அடைந்தென”ப் (பரி.-7)

    பாடப்படுவதால் கூத்தர் சேரி இருந்தமை அறிகிறோம். பாணர் சேரியை;

    “மீன் சீவும் பாண்சேரி” (புறம்.- 348& மது.- அடி- 269)

    என்கிறது செவ்விலக்கியம். பொருநர் என்று ஆங்காங்கு சுட்டப்படும் வீரர் வாழ்ந்த சேரி;

    “மறம்கொள் சேரி” (மது.- அடி- 594)

    ஆயிற்று.   வயலில் பணிசெய்யும் உழவராகிய  திணைமாந்தரும் பிறரும் ஊரில் வாழச்; சேரியில் பிற தொழில் செய்பவர் வாழ்ந்தமை அறிகிறோம். வேளாண்மை செய்வோர் ஊர்மன்றங்களில் எல்லாம் விழாக் காலங்களில் குரவை அயர்ந்ததாகப் பாடும் தொகைநூல்கள்; சேரியில் துணங்கைக்  கூத்து நிகழ்ந்ததாகப் பாடுவது; ஊர்மக்களுக்கும் சேரிமக்களுக்கும் இடையில் இருந்த கலாச்சார வேறுபாட்டைச் சுட்டுவதாக அமைகிறது.

    “துணங்கை அம்தழூஉவின் மணம்கமழ் சேரி” (மது.- 329);

    “மன்றுதொறும் நின்ற குரவை
    சேரிதொறும் உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ” (அகம்.-390) போன்ற தரவுகள் ஒப்பீட்டு ஆய்விற்குரியன.

    முடிவுரை 

    சேரிகள் ஊர்ப்புறத்தில் இருந்தன. ஊரை ஒட்டி அமையாத சேரிகள் ஒன்றுக்கு மேற்பட்டனவாய்ச் சேர்ந்து சீறூர் எனப்பட்டன. சேரி புல் வேய்ந்த  குடிசைகளுடன் வளம் மிகுந்ததாகத் தலைவருடன் இருந்தது. பல பாடல்களில் சேரி  இடப்பெயராக அமைந்துள்ளது. வயலில் பணிசெய்யும் உழவராகிய  திணைமாந்தரும் பிறரும் ஊரில் வாழச்; சேரியில் பிற தொழில் செய்யும் பரதவரும், பாணரும், பொருநரும், ஆடல் கலைஞரும், பரத்தையரும் வாழ்ந்தனர். வாழும் மக்கள் அடிப்படையில் சேரிகளைத் தொகை இலக்கியம் வகைப்படுத்துகிறது.  ஊர்மன்றங்களில் எல்லாம் விழாக் காலங்களில் குரவை அயர; சேரியில்  துணங்கைக் கூத்து நிகழ்ந்தமை; ஊர்மக்களுக்கும் சேரிமக்களுக்கும் இடையில் இருந்த கலாச்சார வேறுபாட்டைச் சுட்டுவதாக அமைகிறது. சேரிமக்கள்  என்னும்  தொகைப்பாத்திரம் தலைவியின் பண்பைத் துலங்க வைக்கும் இடவாகு பெயர்ச் சிறுபாத்திரமாகவும்; அலர் தூற்றும் மக்கட்கூட்டமாகவும் இடம்பெறுகிறது.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 11 (குறமகள்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 11 (குறமகள்)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    குறமகள்  என்னும் பாத்திரம் தேவைக்கேற்ப சிறுபாத்திரமாகவும், தலைமைப் பாத்திரமாகவும், முருகனின் காதல் மனைவி வள்ளியைக் குறிப்பதாகவும் அமைவதே அதன்  தனித்தன்மை ஆகும். குறிஞ்சித் திணை சார்ந்த தலைவியும்; புனம் காக்கும் பெண்டிரும் குறமகள்கள் எனினும்; வெளிப்படையாகத் தலைவியைக் ‘குறமகள்’ என்று சொல்லும் பாடல் ஒன்றே ஒன்று தான் (அகம்.- 188). அகப்பாடலில் வள்ளியும் ‘குறமகள்’ என அழைக்கப்படுகிறாள் (பரி.- 8).   அவற்றைத் தவிர்த்து குறமகள் என்னும் சிறுபாத்திரம் இடம் பெறும் பாடல்கள் மூன்று. அப்பாடல்களில் ‘குறமகள்’ தோழியின் கூற்றிலும் தலைவியின் கூற்றிலும் இடம் பெறுகிறாளே அன்றிக் காட்சியில் நேரடியாக இடம் பெறவில்லை.

    உவமை உருவாக்கத்தில் குறமகள்

    ஒரு மலைப்புறம்; அது நறவுமலி பாக்கம். அதாவது கள் மிகுந்த மலைப்பக்கத்துச் சீறூர்; அங்கே குறமகள் ஈன்ற புதல்வர். எந்த அளவு பிள்ளைமைப் பருவமெனின்; முன்கை மிகவும் சிறிது. அதைக் ‘குறியிறைப் புதல்வர்’ என்னும் தொடரால் புலவர் நமக்குப் புரிய வைக்கிறார். பெயர் தெரியாத அப்புலவருக்கு இந்தத் தொடரே பெயராகவும் அமைந்தது. ஆம்; குறுந்தொகையைத் தொகுத்தோர் அவருக்குச் சூட்டிய பெயர் குறியிறையார்.

    இந்தப் புதல்வருடன் அவர் முரண்படுத்திக் காட்டுவது ஒரு யானைக்கன்று. அக்கன்று இரும்பிடி ஈன்ற கன்று; அதாவது கருமையான பெண்யானையின் கன்று. அந்தக் கன்றும் இளம்பருவத்தினை உடையதே. மெல்லிய தலையை உடைய கன்றாக  இருப்பினும்  யானையின் முழந்தாள் குறிப்பிட்டுச் சுட்டிக்  காட்டக்கூடிய அளவு தோற்றமளித்தது.

    “நறவுமலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற
    குறியிறைப் புதல்வ”ரோடு (குறுந்.- 394) அக்கன்று சுற்றிச்சுற்றி ஓடி விளையாடி இனிமை பயக்கிறது. காலம் செல்லச் செல்ல நிலைமை  மாறுகிறது. யானைக்கன்று வளர்ந்த பிறகு தினைப்புனத்தை மேய்ந்து துன்பத்தைத் தருவதாகி விட்டது.

    ஆக இருவேறு சூழல்கள்; ஒன்று குழந்தைப் பருவத்துச் சூழல்; மற்றொன்று வளர்ந்த பிறகு தோன்றும் சூழல்.  முதல் காட்சியில் யானைக்கன்றுடன் சேர்ந்து விளையாடும் சிறார்; இரண்டாம் காட்சியில்  புனத்தில் மேய வந்த யானையை விரட்டும் இளைஞர். அதுபோல…; என்று தலைவனை இயற்பழித்துத் தோழி பேசுகிறாள். ஆற்றவியலாத தலைவியை ஆற்றுவிக்கிறாள்.

    மேற்சுட்டிய உவமையோடு ஒப்பிடப்படுவது தலைவன் தலைவியின் கேண்மை. முதலில் தலைவனின் நகைவிளையாட்டு இனிதாக இருந்தது; பின்னர் தலைவியின் நற்பெயருக்குப் பகை ஆகிவிட்டது. இந்த உவமையை வடிவமைக்கக் கருவியாக குறமகள் என்னும் சிறுபாத்திரம் பயன்பட்டுள்ளது.

    உள்ளுறை உருவாக்கத்தில் குறமகள்

    கிள்ளைப் பத்தில் சிறப்பிடம் பெறுவது கிளி தான் எனினும்; அக்கிளியைக் கடியும் குறமகள் உள்ளுறையில் சிறப்பிடம் பெறுகிறாள்.

    “பின்னிருங் கூந்தல் நன்னுதற் குறமகள்” (ஐங்.- 285)

    ‘மென்தினை நுவணை உண்டு பசி தீர்கிறாள்; பின்னர் தட்டையைப் புடைத்து மலைநெற் கதிர்களைக் கொய்யவரும் சிறுகிளிகளை ஓட்டுகிறாள். இதற்கிடனான நாட்டை உடைய தலைவனே’ என்று தோழி விளிப்பதில் உள்ளுறை அழகு சேர்க்கிறது. குறமகள் தினைமாவினை உண்டு பசியாறுவது தலைவி தலைவனோடு சேர்ந்து  நுகரும் இன்பத்திற்கு ஒப்பானது. சிறுகிளி ஓட்டிக் காவலில் ஈடுபடுவது;  தலைவனது மனைச் செல்வத்தைப் பிறரொழியத் தானே நுகரும் வேட்கையைப் புலப்படுத்துவது. இத்தன்மையுடைய தலைவியைப் பற்றி அறிந்திருந்தும் அவள் மெலியும்படி நீ பிரிந்து சென்றது தகுமோ என்று தோழி தலைவனிடம் வினவுகிறாள்.

    உள்ளுறையில் இடம்பெறும் குறமகள் தான் நாடனின் தலைவியோ என்னும் ஐயம் எழாமல் இல்லை. ஆயினும் நாடனை விளிக்கும் பகுதி உள்ளுறை இடம்பெறும் பகுதியாக இருப்பதே அகப்பாடலின் பொதுவான அமைப்பு. அந்த மரபு மீறிய பாடல் எதுவும் தொகைநூல்களில் இல்லை. எனவே இங்கு ‘குறமகள்’ சிறுபாத்திரமே.

    படிமப்பொருளாகும் குறமகள்

    செவிலித் தாயிடம் தோழி அறத்தொடு நிற்பாள் எனவுணர்ந்த தலைவி ‘உயிரே போனாலும் சரி; கண்களின் பசலைக்குக்  காரணம் காமநோய் என்று சொல்லிவிடாதே’ எனப் பதறுகிறாள். அவளது பேச்சில் இடம்பெறுபவள்;

    “கிளர்ந்த வேங்கைச் சேணெடும் பொங்கர்ப்
    பொன்னேர் புதுமலர் வேண்டிய குறமகள்” (அகம்.- 52)

    ஆவாள்.   தலைவியின் கூற்று தொடர்கிறது.  மலைப்புறத்தில் வள்ளிக்கொடி சுற்றிய வேங்கை மரத்தில் மிகவுயர்ந்த கிளையில் பொன்னை ஒத்துப் பூத்திருக்கும் பூக்களைப் பெற விரும்பிய குறமகள் ‘இன்னா இசைய பூசல் பயிற்று’கிறாள். அதாவது ‘துன்பத்தை வரவழைக்கக் கூடிய ஆரவாரம் செய்கிறாள்’  என்பது பாடலடியிலிருந்து தெரிகிறது. அதற்கு மேல் அந்த ஆரவாரம் என்ன என்பது பற்றிய விளக்கம் மற்றொரு அகப்பாடல் மூலமே நமக்குப் புரிகிறது.

    “ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழிப்
    புலிபுலி என்னும் பூசல் தோன்ற” (அகம்.- 48)

    என்றும் செவிலியிடம் அறத்தோடு நிற்கும் தோழியே பேசுகிறாள். இப்போது துன்பத்தை வரவழைத்த பூசல் ‘புலிபுலி’ என்று ஆரவாரிப்பதென்பது ஐயமின்றிப் புலனாகிறது. அப்படிப் பூசலிட்டால் எட்டாத உயரத்தில் இருக்கும் வேங்கைப்பூ உதிரும்  என்று ஒரு நம்பிக்கை. நாம் புத்தகத்திற்குள் மயிலிறகை வைத்து மூடி ‘அது குட்டி போடும்’ என்று காத்திருந்தோமே அது போன்ற நம்பிக்கை தான்.

    இந்த ஆரவாரத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு;  அப்பூசலுக்குக் காரணம் பக்கமலையிலுள்ள குகையில் இருந்து பசுவினைக் கவரும் வலிய புலி என்று கருதித் தம் சீறூர் தனித்தொழியக் குன்றத்து மக்களெல்லாம் ஆரவாரித்து வில்லோடு சென்றனர். இது தலைவன் நாட்டில் காணக் கூடிய நிகழ்வு.

    இங்கு வள்ளிக்கொடி சுற்றிய வேங்கைமரம் தலைவன் தலைவியின் கேண்மையை உள்ளுறையாக உரைக்கும் படிமமாக உள்ளது. ஒன்று இன்னொன்றாக மனதில் படிவதே படிமம் ஆகும். புராணத்து வள்ளி ஒரு குறமகள் என்பது எல்லோருக்கும் தெரிந்த தொன்மக்கருத்து. அதனால் வள்ளிக்கொடியும் வேங்கை மரமும் கட்புல உருக்காட்சியாகத் தோன்றியவுடன் முறையே வள்ளிக்குறத்தி, முருகன் என்று நம் மனதில் படிகிறது.

    வேங்கை பூத்தமை கண்ட குறமகளின் ‘புலி புலி’ எனும் ஆரவாரம் ஊர் முழுவதும்  பேரிரைச்சல் எழக் காரணமாயினமை; அவர்களது கேண்மையால் பிறந்த கௌவை ஊர் முற்றும் பரவி அலராயிற்று என்னும் பொருளையும் தருகிறது.

    உள்ளுறையோடு தெரிய வரும் அக்கால மக்களின் நம்பிக்கையைப் புரிய வைப்பதற்கும், படிமப்பொருளாக்குவதற்கும் குறமகள் எனும் சிறுபாத்திரம் பயன்பட்டுள்ளது.

    முடிவுரை

    குறமகள் தோழியின் கூற்றிலும் தலைவியின் கூற்றிலும் இடம் பெறுகிறாளே அன்றிக் காட்சியில் நேரடியாக இடம் பெறவில்லை. உவமை உருவாக்கத்திற்கும், உள்ளுறை உருவாக்கத்திற்கும் துணை செய்பவளாகக் காணப்படுவதுடன்; படிமப்பொருளுக்குத் துணையாகி அக்கால மக்களின் நம்பிக்கையையும் புலப்படுத்துகிறாள்.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 10 (குறவன்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 10 (குறவன்)

    ச.கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளிஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    சிறுபாத்திர வரிசையில் அடுத்து இடம்பெறும் குறவன் மலைநிலத்து மக்களினத்தவன் ஆவான். ‘குறவர்’ என்னும் தொகைப்பாத்திரம் பின்புல விளக்கமாக மட்டுமே பயன்பட்டுள்ளது. தலைவன் கூற்றிலும், தோழி கூற்றிலும் இடம்பெறும் குறவன் பாடல் சான்ற புலனெறி வழக்கில் பேசும் தகுதி அற்றவன். அவன் பேசியதாகத் தோழி எடுத்துச் சொல்வதும்; தலைவன்  அவனை மையப்படுத்திப் பேசுவதும் காண்கிறோம். எனினும் குறவன் முழுமையான பாத்திரப் படைப்பாக அகப்பாடல்களில் காணப்படுகிறான்.

    குறவனின் தோற்றமும் தொழிலும் செயலும்

    குறவன் பொன் போன்ற வேங்கைப்பூங் கொத்தைச் சூடியிருப்பான். வளைந்த வில்லையும் விரைந்து செலுத்தக்கூடிய அம்புகளையும் தாங்கியிருப்பான். இனிய பலாச்சுளைகளிலிருந்து செய்த தேறலைத் தன் சுற்றத்தோடு சேர்ந்து அருந்துவான். உடன் சேர்ந்து ஓடி வரும்  வேகம் மிகுந்த நாய் தொடர வேட்டைக்குச் செல்வான் (அகம்.- 182). மலைப்புறத்தின் உச்சியில் கிடைக்கும் தேனைத் தம் கிளையோடு சேர்ந்து  சேகரிப்பான் (அகம்.- 322). குறவர் பாம்பின் விஷம் போல விரைந்து போதையூட்டும் தோப்பியை மலையுச்சியில் இருக்கும் கடவுளுக்குப் படைத்து வழிபடுவர். தழையுடை அணிந்த குறமகளிர் ஊற்றிக் கொடுக்கத் தாமும் மாந்திப் புனக்காவலை மறந்து விடுவர். யானை வந்து தம் புனத்தில் மேய்ந்து செல்லச் சினம் கொள்வர். பின்னர் அந்த யானையை அழிக்கத் தம் கிளையோடு இளையவர் முதியவர் அனைவரும் சேர்ந்து வில்லோடு திரிவர் (அகம்.- 348). தினையை விளைவிக்க மழை வேண்டி வழிபட்டு ஆரவாரிப்பர் (ஐங்.- 251). கதிர் முற்றிய பருவத்தில் அறுவடை செய்வர் (ஐங்.- 284).

    நாட்டார் வழக்காற்றில் குறவன்

    “குறவன் காதல் மடமகள்”  (ஐங்.- 251, 255, 258, 259, 260)

    என்ற தொடர் செவ்விலக்கியக் கால நாட்டார் வழக்காற்றில் மறித்து வரும் தொடராகும்; அதாவது மீண்டும் மீண்டும் இடம் பெறுவதாகும். மக்கள் வாய்மொழியில் பயின்று வந்த பெருவழக்காகும். ஏனெனில் இத்தொடர் ஐங்குறுநூற்றின் குன்றக் குறவன் பத்தில் பயின்று வருவது போன்றே நற்றிணையிலும் பயின்று வருவதைக் காண்கிறோம்.

    “குறவன் காதல் மடமகள்” (நற்.- 201& ஐங்.- 260)

    பெறுவதற்கு அரியவள் என்று தலைவன் கணக்குப் போடுகிறான்.

    “குறவர் காதல் மடமகள்” (நற்.- 353)

    பற்றிய தோழியின் கூற்றில்; தலைவி இல்லறத்தில் இருந்து விருந்தயர்வதில் வல்லவள் என்னும் உள்ளுறை பொதிந்துள்ளது.

    உவமப்பொருளில் குறவன்

    தலைவியின் எழில் தொலையத் தாய் வருத்தமுறக் கண்ட  தோழி;

    “……………………………… குறவர்
    மனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும்
    ஆர்கலி விழவுக்களம் கடுப்ப நாளும்” (அகம்.- 232)

    அன்னை வேலனை அழைத்து வெறியாட்டு அயர்வாள் என்கிறாள். குறவர் தம் மனையுறை முதுபெண்டிருடன் சேர்ந்து குரவை அயரும் போது எழும் ஆரவாரமும், சிதறிய மலர்களும் பலிப்பொருட்களும்; இனிமேல் எடுக்கப் போகும் வேலனின் வெறிக்களத்திற்கு உவமையாக அமைந்துள்ளன.

    உள்ளுறை உவமத்தில் குறவன்

    காட்டில் முள்ளம்பன்றியை வேட்டையாடினான் குறவன். சிக்கிய பன்றியால் அருகில்  இருந்த காட்டு  மல்லிகைப் புதர் குருதி சிந்துவது போல் காட்சியளித்தது.

    “…………………………………குறவன் காட்ட
    குளவித் தண்புதல் குருதியொடு துயல்வர
    முளவுமாத் தொலைச்சும் குன்றநாட” (அகம்.- 182)

    என்ற தோழியின் கூற்றில் குறவனின் செயலும் விளைவும் உள்ளுறையுடன் அமைந்துள்ளன. காட்டு மல்லிகை மணம் மிகுந்தது; குருதி புலவு நாறுவது. குறவன் முள்ளம்பன்றியைத் தான்  வேட்டையாடுகிறான். ஆனாலும் அது பதுங்கியிருந்த புதரில் குருதி  பட்டதால்; மல்லிகை மணத்தையும் மீறிப் புலவு நாறுகிறது. அதுபோலத் தலைவி பண்பிற் சிறந்தவள்; ஆனால் தலைவனது கேண்மையின் விளைவால்; இப்போது மேனி வேறுபட்டுத் தாய்க்கு அவளது களவொழுக்கம் புலப்பட்டு விட்டது என்கிறாள் தோழி. அகப்பாடலின் உரிப்பொருளை நாசூக்காக உள்ளுறையால் விளக்க குறவனின் வேட்டை பற்றிய விளக்கம் பயன்பட்டுள்ளது.

    உரிப்பொருள் ஒப்பீட்டுக் களத்தின் கருவியாகக்  குறவன்

    குன்றக்குறவனும் அவனது மனைவியும் ‘பால்’ மடுத்துள்ளனர்; அதாவது சாராயம் குடித்துள்ளனர். அன்றைய சமுதாயத்தில் இது ஏற்றுக்  கொள்ளப்பட்டது.

    வங்கா வரிப்பறைச் சிறுபாடு முணையின்
    செம்பொறி அரக்கின் வட்டுநா வடிக்கும்
    விளையாடு இன்நகை அழுங்காப் பால்மடுத்து
    உலையா உலவை ஒச்சிச் சில கிளையாக்
    குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும்
    துணைநன் குடையள் மடந்தை; யாமே
    வெம்பகை அருமுனைத் தண்பெயல் பொழிந்தென
    நீர்ஈர்ங் கரைநாள் மயங்கிக் கூதிரொடு
    வேறுபுல வாடை அலைப்பத்
    துணையிலேம் தமியேம் பாசறை யேமே. (நற்.- 341)

    இப்பாடலில் முதற்பொருளாவன  மலைப்புறத்துக் காட்டுப் பாசறையாகிய இடப்பின்புலமும்; நாள் மயங்கிக் கூதிரொடு வேற்றுப்புல வாடை அலைக்கும் காலப்பின்புலமும் ஆகும்.   குன்றக்குறவன் இங்கே சிறுபாத்திரம்  ஆகிறான்.  ஏனெனில் தலைவன் தன் நெஞ்சோடு பேசும்போது; குறவனின் மனைவி நிலையையும் தன் மனைவி நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கிறான். வினைவயிற் பிரிந்தவன் ஆற்றித் தன் தலைவியை நினைத்து ஏங்குகிறான்.

    சிறு மயக்கத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் சுற்றத்தோடும் சேர்ந்து; அதாவது பங்காளிகளோடு சேர்ந்து விளையாட்டும் சிரிப்புமாகக் குழறித் தன் தலைவனோடு சேர்ந்து; அவனுக்கு இன்பமூட்டும் கேலிப் பேச்சில் ஈடுபடுகிறாள் மடந்தை. இங்கே கூட்டுக்குடும்பக் காட்சி புனையப்பட்டுள்ளது. சுற்றத்தார் அருகு இருந்தாலும்; குறவனும் மனைவியும் தமக்கு மட்டுமே புரிந்துகொள்ளக் கூடிய அந்தரங்கப் பேச்சில் ஈடுபட்டுள்ளனர்; அதாவது குறுநொடி பயிற்றுகின்றனர். இந்த இல்லற இனிமை முல்லைத்திணைக்கு உரியது. குறமக்களின் இந்த இன்பநிலையுடன்; தன் நிலையையும் தன் தலைவியின் நிலையையும் ஒருங்கு எண்ணி முரண்படுத்திப் பார்க்கிறான். ‘ஆறாத சினம் காரணமான போருக்காக; மழை பொழியும் கூதிர் காலத்தில்; காட்டாறு பெருகும் கரையில்; பகலா? மாலையா? என்று சொல்லமுடியாத பருவத்தில்; வேற்றுப்புலத்தினின்று (வடநாட்டிலிருந்து) வீசும் வாடைக்காற்று  துன்பத்தை மிகுதிப்படுத்த; தலைவியைப் பிரிந்து  தனிமையில் வாடுகிறேனே’  என்பது தலைவனின் தவிப்பு.

    பாடலில் இரண்டு துணை இடம்பெறுவதே ஒப்பீட்டிற்காகத் தான். முதல் துணை மடந்தையின் கணவனாகிய குன்றக்குறவன். இரண்டாவது துணை பாசறையில் பிரிந்து இருக்கும் தலைவனின் மனைவி.

    எவ்வளவு அழகு! வாழ்க்கைத்  துணையாகக் கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனும் அமைவர் என்ற கருத்து இடம்பெறும் பாடல் இது.

    வேந்தனுக்கும் வேளுக்கும் இடையில் போர் நிகழ்ந்தது என்பதற்குச் சான்றாவது ‘வரிப்பறை’ பற்றிய உவமை. வரி என்பது நெல்லைக் குறிக்கும். எனவே வரிப்பறை நெல் வேளாண்மையில் பயன்படுத்தப்படும் பறை ஆகும்

    பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்  குன்றக்குறவனின் மனைவி போதையில் கிளையை ஒடித்துப் பேசுவதாகச் சொல்லும் உரை பொருளை மேம்படுத்தவும் இல்லை; சூழ்நிலைக்குப் பொருத்தமாகவும் இல்லை.

    பாடலில் குன்றக்குறவன் இடம் பெறுகிறான் என்பதற்காக குறிஞ்சித் திணை  சார்ந்த பாடல் என்று சொல்கிறார் உரையாசிரியர்; ஏற்றுக் கொள்ள இயலவில்லை. தலைவன் பாசறையில் தலைவியைப் பிரிந்து ஆற்றி இருக்கிறான். எனவே முல்லைத் திணை; உரிப்பொருளை அடிப்படையாக  வைத்தே திணையை அறுதியிட வேண்டும்.

    தந்தைமையின் பிரதிநிதியாகும் குறவன்

    குறிஞ்சித் திணைத் தலைவியின் பெருமை பற்றித் தலைவன் பேசும் போதெல்லாம் அவளது தந்தையாகிய குறவனின் பாசத்தை மையப்படுத்தியே பாடல்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பு.

    குறவன் கடவுளை வேண்டிப் பெற்ற மகள் இவள் என்கிறாள் தோழி (ஐங்.- 257). வண்டுபடு கூந்தல், தண்டழை உடை, வளைக்கை, முளைவாய் எயிறு, தேவலோகப் பெண் போன்ற சாயல், தலைமைத்தன்மை, பருவமெய்திய இளமை, சிவந்த வாய், மயில் போன்ற ஒயில், மென்தோள் அனைத்தும் ‘குன்றக் குறவன் காதல் மடமகளி’டம் இருப்பதாகத் தலைவன் பேசுகிறான் (ஐங்.- 251, 256, 258).  இவ்வாறு தலைவியின் அழகு, பண்பு, பெருமை அனைத்தும் அவளது தந்தையோடு சேர்த்தே பேசப்படுகின்றன.

    நீரைப் போலக் குளிர்ந்த சாயலும் தீயைப் போல மனவலிமையை அழிக்கும் தன்மையும்;

    “சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகளி”டம் (குறுந்.- 95)

    இருப்பதாகத் தலைவன் உரைக்கிறான்.

    மகள் தரையில் நடந்தால் கூட பாசத்தில் உருகி ‘உனக்கு இது ஆகாது மகளே; பாதங்கள் சிவந்து விடும்’ என்று உரைக்கும் தந்தையைக் குறவன் என்று குறிப்பிடாவிட்டாலும்; குறிஞ்சித் திணைத் தலைவியின் தந்தை குறவன் தானே. ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையில் இயற்கையாக அமையும் அன்பின் ஈர்ப்பினை;

    “எந்தையும் நிலனுறப் பொறாஅன் சீறடி சிவப்ப
    எவனில குறுமகள் இயங்குதி என்னும்” (அகம்.- 12)

    என்ற தோழி தலைவனிடம் தொடர்ந்து குறவர் செயலைப் பேசுகிறாள்.

    பின்புலத்தைத் தெளிவிக்கும் குறவன் 

    தினை அறுவடைக்குப் பின்னர் புனத்தில் விதைத்த அவரைக்கொடி படர்ந்து பூக்கும் காலம் முன்பனிக்காலம். தலைவன் வினைமுடிந்து மீளத் தாமதமாகும் காலத்தைக் குறிக்கக் குறவனின் செயலைப் புலவோர் பயன் கொள்கின்றனர்.

    “பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகால்
    கொழுங்கொடி அவரை பூக்கும்
    அரும்பனி அச்சிரம் வாராதோரே” (குறுந்.- 82)

    என்று தலைவி புலம்புவது காண்க.

    குறவர் எனும் தொகைப் பாத்திரமும் இடப்பின்புல விளக்கத்திற்கும் காலப்பின்புல விளக்கத்திற்கும் துணை செய்கிறது.

    “நிலநீர் ஆரக் குன்றம் குழைப்ப
    அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர்கால் யாப்பக்
    குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர்
    நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்பப்
    பெரும்புயல் பொழிந்த தொழில எழிலி” (நற்.- 5)

    என்னுங்கால் மிகுந்த மழைக்காலத்தின் நிலைமை குறவர் செயலால் விளக்கமடைகிறது. குறவர் வெட்டி அழித்தலால் குறைப்பட்ட நறைக்கொடி மீண்டும் தளிர்த்துச் சந்தன மரத்தின் மேல் படர்ந்து ஏறியது. இப்பகுதி குறவர் செயலால் தெளிவான பின்புல விளக்கமாக அமைந்துள்ளது.

    முடிவுரை

    குறவன் பேசியதாகத் தோழி எடுத்துச் சொல்வதும்; தலைவன்  அவனை மையப்படுத்திப் பேசுவதும் காண்கிறோம். உவமப் பொருளாகவும், உள்ளுறைப் பொருளுக்குத் துணை செய்பவனாகவும், பின்புலச் சித்தரிப்பை முழுமையுறச் செய்பவனாகவும், உணர்வுச் சித்தரிப்புக்கு ஏற்ற ஒப்பீட்டுக் களம் அமைக்கும்  கருவியாகவும்,  தலைமகளின்   தந்தையாகவும், முழுமையான பாத்திரப் படைப்பாகவும்  குறவன் அகப்பாடல்களில் காணப்படுகிறான்.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 9 (குயவன்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 9 (குயவன்)

    ச. கண்மணி கணேசன்
    முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர் (ப.நி.),
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி

    முன்னுரை 

    குயவன் ஒரே ஒரு அகப்பாடலின் பின்புலத்தில் வருணிக்கப்படுகிறான். சிறுபாத்திரம் என்னும் தகுதியையும் வேறு ஒரு அகப்பாடலில் மட்டுமே பெறுகிறான். பண்டைத்தமிழர் சமுதாயத்தில் நிலவிய பன்மைத் தன்மையைப் புரிந்து கொள்ளத் துணைசெய்வதே இப்பாத்திரத்தின் சிறப்பம்சம் ஆகும்

    புற இலக்கியத்தில் குயவன் 

    புறப்பாடல்களில் ஈமத்தாழி செய்யும் குயவன் ‘கலம்செய் கோ’ என்று அழைக்கப்படுகிறான் (புறம்.- 228& 256).

    “வேட்கோச் சிறாஅர் தேர்கால் வைத்த
    பசுமட் குரூஉத்திரள் போல” (புறம்.- 32)

    என்னும் உவமையில் இடப்பெறும் வேட்கோ என்பதும் குயவனையே குறிக்கிறது. பச்சை மண்ணைச் சக்கரத்தில் வைத்துத் தம் கைவினையால் செய்யும் சிவந்த பாண்டங்கள் அவர்கள் திறத்திற்கேற்ப வடிவம் பெறுவது போல என்பதால்; மண்ணைக் குறிக்கும் ‘வேள்’ என்னும் அடிச்சொல் குயவனுக்கும் பொருந்தி வருவது ஒருதலை.

    குயவனின் தோற்றமும் பொறுப்பும்

    அகப்பாடலின் இடப்பின்புலம் விளங்கத் தோன்றும் குயவன்; ‘பளிச்’சென்று கொத்தாகப் பூத்திருக்கும் நொச்சி மலர்களைத் தெரியலாக்கி அணிந்திருக்கிறான்; அவனது கடமையும் பொறுப்பும் மதிப்பிற்குரியன.

    “மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடி
    பலிகள் ஆர்கை பார்முது குயவன்
    இடுபலி நுவலும் அகன்றலை மன்றத்து
    விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர்” (நற்.- 293)

    என்பதால் அகன்ற ஊர் மன்றத்தில் விழா எடுக்குங்கால் தெய்வத்திற்குரிய  பலியைப் படைக்கும் தகுதி பெற்றவன் குயவன் என்பது பெற்றோம். அப்பலிப்பொருட்களை உண்ணுதற்குக் காக்கைகளை அழைப்பவனும் அவனாகிறான். பதிற்றுப்பத்து போருக்கு முந்தைய முரசு வழிபாட்டில் காட்சிப்படுத்தும் கிணைப்பொருநராகிய திணைமாந்தர் இங்கு ஒப்பீட்டிற்கு உரியவர் ஆகின்றனர். குயவனும் பலிகொடுத்துக் காக்கையை அழைப்பது தமிழ்ச் சமூகம் பற்றிய தனி ஆய்விற்கு உரியது.

    குயவனின் தொழிலும் அகப்பாடலில் இடப்பின்புலத்தை விளக்கும் காட்சிக்கு உவமை ஆகிறது.

    “இலங்கு மலை புதைய வெண்மழை கவைஇக்
    கலம்சுடு புகையின் தோன்றும் நாட” (அகம்.- 308)

    என்ற பாடலடிகள்; தலைவனது மலையின் உச்சியை மறைத்துக் கொண்டு  வெண்மேகங்கள் சூழ்ந்திருக்கும் காட்சி குயவனின் சூளையிலிருந்து வெளிப்படும் புகை போல அடர்ந்திருந்தமையை உணர்த்துகின்றது.

    குயவனின் செயல்

    குயவன் எந்த அகப்பாடலிலும் பேசவில்லை; அவனுக்குப் பேசும் உரிமை ‘பாடல் சான்ற புலனெறி வழக்கி’ல் இல்லை. அவனை அழைத்துத் தலைவி பேசுவதால் அவனுக்குச் சிறுபாத்திரத் தகுதி கிடைக்கிறது.

    “கண்ணி கட்டிய கதிர அன்ன
    ஒண்குரல் நொச்சித் தெரியல் சூடி
    யாறு கிடந்தன்ன அகநெடுந் தெருவில்
    சாறு என நுவலும் முதுவாய்க் குயவ” (நற்.- 200)

    என்ற பாடலடிகள் முன்னர் சுட்டிய நற்றிணைப் பாடலில் உள்ள குயவனின் தோற்றத்தை மீண்டும் அரண் செய்கின்றன. இங்கும் குயவன் நொச்சித் தெரியல் சூடியுள்ளான்.

    ‘யாறு கிடந்தன்ன அகநெடுந் தெருவில்’ என்னும் தொடர் பத்துப்பாட்டிலும் காப்பியங்களிலும் பயின்று வரும் வாய்மொழிப்பாடற் கூறு என்பதால் 2000 ஆண்டுகட்கு முற்பட்ட நாட்டார் வழக்காற்றின் துளி ஒன்று இன்று நமக்குக் கிடைத்திருப்பது  நினைந்து இன்புறத்தக்கது.

    அவன் அணிந்திருந்த நொச்சித் தெரியலுக்குத் தலைவி சொல்லும் உவமை பண்டைச் சமூகச் செய்தியைத் தாங்கியுள்ளது. நெற்கதிரைக் கண்ணியாகக் கட்டியது போல அந்த நொச்சிப்பூக்கட்டு காட்சி அளித்ததாம். இந்த உவமை உணர்த்தும் குறிப்பு என்னவெனில் பாடலின் தலைவி ஒரு வேளாளர் குலப்பெண் என்பதாகும். நான்காம் வருணத்தாராகிய வேளாளர் நெல்வேளாண்மை செய்தவராதலால் அவர்கள் தொடர்பான செய்திகளில் நெல் பற்றிய குறிப்புகள் ஏதேனும் ஒரு வடிவில் இடம் பெறுவதுண்டு. பாடலில் ஆம்பல் பூக்களால் கட்புலனுக்கு இனிதாகத் தோன்றும் பழனப் பொய்கை உள்ள ஊர்க்காட்சி தொடர்வதும் அவள் வேளாளர் குலப்பெண் என்பதை உறுதி செய்கிறது. நீர்மேலாண்மையும் நெல்வேளாண்மையும் சேர்ந்தே நிகழ வேண்டியவை அல்லவா.

    குயவன் விழா அறைகிறான்; தெருவெங்கும் அவன் சாற்றுவதைத் தலைவி அவனை விளிக்கும் முறையில் புலப்படுத்துகிறாள். விழா அறையும் நிகழ்ச்சி தமிழின் முதற்காப்பியங்கள் இரண்டிலும் உள்ளது. அங்கு வேந்தர் ஆளுகையின் கீழ் பொதுமக்களுக்கு ‘முதுகுடிப் பிறந்தோன்’ விழா அறைவான். முதுகுடியினராக அறியப்படுவோர் மாங்குடி கிழார் வரிசைப்படுத்தும் துடியர், பாணர், பறையர், கடம்பர் என்போராவர். அவ்வரிசையில் குயவருக்கு இடமில்லை. ஆயினும் ‘முதுவாய்க் குயவ’ என்று அழைப்பது அவன் தொன்றுதொட்டு விழா அறையும் தகுதி பெற்றவன் என்பதைக் காட்டுகிறது. இதனால் குயவர் தமிழ் மண்ணின் மைந்தர் அல்லர்; தமிழகத்துப் பூர்வ குடியினர் அல்லர்; வேளிர் வந்தேறியதைப் போன்றே குயவரும் வந்தேறினர்; வேளிர் ஆளுகைக்கு உட்பட்ட ஊர்களில் விழா அறைவதும், பலிப்பொருள் செலுத்துவதும், காக்கைகளை அழைப்பதும் குயவரின் பொறுப்பாக இருந்தது என்பது பெறுகிறோம். ஆய்வாளர் திரு.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. அவர்கள் தம் (The pot route) ஆய்வுக்கட்டுரையில் சொல்லும் செய்தி உறுதிப்படுகிறது.

    “இதுவும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ
    ஆம்பல் அகன்ற தீம்பெரும் பழனத்துப்
    பொய்கை ஊர்க்குப் போவோய் ஆகிக்
    கைகவர் நரம்பிற் பனுவற் பாணன்
    செய்த அல்லல் பல்குவ வையெயிற்று
    ஐதகல் அல்குல் மகளிர் இவன்
    பொய்பொதி கொடுஞ்சொல் ஓம்புமின் எனவே” (மேற்.)

    என்ற பாடலின் பிற்பகுதியில் தலைவி தமிழ்நாட்டுச் சமூகநிலைமை பற்றி  மேலும் தெளிய  வைக்கிறாள். ‘முதுவாய்க் குயவ’ என குயவனைப் புகழ்ந்த தன் வாயால் பாணனைப் ‘பொய்பொதி கொடுஞ்சொல்’ பேசுபவன் என்று இழித்து உரைக்கிறாள். இது தலைவனின் புறத்தொழுக்கத்திற்கு பாணன் துணை இருப்பதை விரும்பாத தலைவியின் விமர்சனம் ஆகும். ‘பாணனால் ஏற்படும் துன்பங்கள் பெருகுகின்றன; பெண்கள் இவனை நம்பவேண்டாம்’ என்றும் சேர்த்து அறிவிப்பாயாக என்று குயவனை வேண்டுகிறாள்.

    குயவனையும் பாணனையும் ஒப்பிட்டு; குயவனின் பேச்சைப் பெண்டிர் ஏற்றுக்கொள்வர் என்னும் நம்பிக்கையோடு; பாணனின் பேச்சை நம்பக்கூடாதென்று; ஒருவரோடொருவர் முரண்படும் ஏற்றத்தாழ்வை வெளிப்படையாகச் சுட்டி; முகத்துக்கு நேரே துணிவுடன்; யாழின் நரம்பை மீட்டிக்கொண்டே  பாடும் தொழில்வல்ல பாணனின் குறையைக் கூறச் சொல்லும் தலைவியின் முயற்சியில் இனச்சாடலின் சாயல் தென்படுகிறது என்று சொல்வது மிகையாகத் தோன்றவில்லை.

    முடிவுரை

    ஒரே ஒரு பாடலில் சிறுபாத்திரம் ஆகும் குயவன் சமூகச் செய்திகளைத் தாங்கி இருப்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமாக உள்ளான்.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 (கிளை)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 (கிளை)

    ச. கண்மணி கணேசன்
    முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர் (ப.நி.),
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி

    முன்னுரை

    அஃறிணைப் பொருட்களுள்; அணிகலனில் கோத்த மணிகள், மேகலையின் வடங்கள், மழை தரும் மேகங்கள், வரகுக்காட்டின் களை, பல்கிப்பெருகிய நாணல் கிழங்கு, கரும்பு, மூங்கில், பூத்துக்காய்த்துப் பசுந்துளிர் போர்த்துக் கவர்த்த மரங்கள்; ஆகியவற்றின் ஒவ்வொரு தொகுதியும் கிளை என்று தொகை இலக்கியத்தில் பேசப்படுகிறது.

    யானை, பன்றி, கரடி, மான், குரங்கு  முதலிய விலங்குகள்; கிளி, குருவி, குருகு, பருந்து, காகம், மனைக்கோழி, கம்புட்கோழி, காட்டுக் கோழி முதலிய பிற பறவைக் கூட்டங்கள்; கரையான், பாம்பு, பல்லி முதலிய ஊர்வன; தும்பி, தேனீ, வண்டு, குளவி முதலிய பூச்சிகள்; சங்கு, இறால், நண்டு, வாளைமீன், பிற மீன்கள், தவளை முதலிய நீந்துவன அனைத்தும் கிளை என்னும் சுற்றத்தோடு கூடி வாழ்வதையும்; வளர்வதையும்; தேடுவதையும்; பகிர்வதையும்  தொகை நூல்கள் கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்ட பாடல்களில் குறிப்பிடுகின்றன.

    மக்கள் கூடி வாழ்வதைப் புனையும் அகஇலக்கியத்தில் ‘கிளை’ எனும் சொல்லுக்குச் ‘சுற்றம்’ என்னும் பொருள் எல்லா இடங்களிலும் துல்லியமாகப் பொருந்துகிறதா  என்பது கேள்விக்குரியது. ஏனெனில் சொத்துப் பங்கீடும், பெண்களுக்கே உரிய புகுந்தவீடும் உயர்திணையாகிய மக்களுக்கு மட்டுமே உள்ளன.

    புற இலக்கியத்தில் கிளை

    ‘கிளை’ எனும் சொல் பொதுவாக  சுற்றம் என்று பொருள்படினும்; அது  பங்காளிகளை மட்டும் குறிக்குமிடங்களும் உள.

    புறப்பாடல்களில் இடம்பெறும் ‘கிளை’ பெரிதும் கூத்தர், பாணர், பொருநர் ஆகிய இரவலரின் பெருஞ்சுற்றத்தைச் சுட்டுகின்றன (மதுரைக்.- அடி- 751; பதிற்.- 32, 42, 49; புறம்.- 136, 144, 163, 173, 253, 254, 378, 388). பேகனின் மனைவியிடம் பரணர்;

    “கிளையை மன் எம் கேள் வெய்யோற்கு” (புறம்.- 144)

    என்று கேட்கும் போதும்,

    “யாமவன் கிளைஞரேம் அல்லேம்” (மேற்.)

     என்று அவள் பதிலிறுக்கும் போதும் ‘கிளை’ சுற்றம் என்றே பொருள்படுகிறது.

    போர்க்களத்தில் தம் கணவர்  இறந்துபட அவனுடலைத் தூக்கி மடியில் வைத்து அரற்றும் மனைவியரின் ஒப்பாரியில்; (புறம்.- 253& 254) ‘கிளை’ பங்காளிகளைக் குறிக்கிறது.

    மலையமான் திருமுடிக்காரியை;

    “கிளையொடும் பொலிக” (புறம்.- 126)

    என்று புலவர் வாழ்த்தும்போது ‘கிளை’ அவனது  பங்காளிகளையே குறிக்கிறது.

    நெருக்கமான குடும்ப உறவு பற்றிய குறிப்பில் ‘கிளை’க்கு உரிய பொருள் நுட்பம் புலனாகிறது.

    “இருங்கிளை இனனொக்கல்” (பட்டி.- 61)

    எனும் பாடலடி கிளை பற்றிய வரையறையை உரைக்கிறது. அதாவது கிளை ஒரே இனத்தவரை மட்டும் உள்ளடக்கியதாகும். இதைப் பண்டைத்  தமிழகத்தில் ஜாதி இருந்தமைக்கு ஆதாரமாகும் அரிய குறிப்பாகக் கொள்ளலாம்.

    ஆண்முதன்மைச் சமுதாயத்தில் ஒரு குடியின் கிளை அக்குடும்பத்து ஆண்மக்கள் வாயிலாகவே பல்கிப் பெருகும் என்ற கொள்கை நிலவியது; நிலவுகிறது. இன்றளவும் பெண்கள் தாய் வீட்டிலிருந்து புகுந்த வீடு சென்று வாழ்வதே நடைமுறையாக உள்ளது. கோயில் வழிபாடுகள் தொடர்பான உரிமை, தகுதி ஆகிய நடைமுறையிலும், வாழ்வியல் சடங்கு சம்பிரதாயங்களிலும்,  ஈமச்சடங்கிலும் இக்கொள்கை பேரிடம் வகிப்பதைக் காண்கிறோம்.

    மோர் விற்ற பொருளை வைத்து ஆய்மகள் தன் கிளையோடு உணவு அருந்தினாள் என்பது பெரும்பாணாற்றுப்படைச் செய்தி (அடி.- 163). இங்கு பங்காளிகளே கிளையாவர் என்னும் நுட்பம் பொதிந்துள்ளது. ஆதலால் தான் அவளுடன் சேர்ந்து உண்கின்றனர்.

    மகாபாரதக் கதையை விரிவாகப் பேசும்;

    “வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற
    முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்
    ஐவர் என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தரா
    கைபுனை அரக்கு இல்லைக் கதழெரி சூழ்ந்தாங்கு
    களிதிகழ் கடாஅத்த  கடுங்களிறு அகத்தவா
    முளிகழை உயர்மலை முற்றிய முழங்கழல்
    ஒளிஉரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத்தன்
    உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல” (கலித்.- 25)

    என்ற பாடலில் திருதராஷ்டிரனின் மூத்த மகனாகிய துரியோதனன் சூழ்ச்சியில்  இருந்து பீமன் தன் உடன்பிறப்புக்களாகிய பாண்டவர்களைக் காப்பாற்றிய புராணச் செய்தி உள்ளது. தன் மனதிற்கினிய சகோதரர்களைக்; காட்டுத்தீயில் இருந்து காப்பாற்றும் யானை போல அவன் அரக்கு் மாளிகையிலிருந்து காப்பாற்றிய செய்கை விளக்கம் பெறுகிறது. பங்காளிகளாகிய பாண்டவர் கிளை என்று குறிப்பிடப்படுவது நம் கொள்கையை வலியுறுத்தும் இன்னொரு சான்றாக அமைகிறது.

    இன்றும் சில சமூகங்களில் ‘கிளை’ என்னும் சொல்லால் பங்காளிகளைக் குறிக்கின்றனர். (எ.டு.) கொண்டையங்கோட்டை மறவர்.

    இக்கூட்டத்தில் இளையவரோடு முதியவரும் அடங்குவர் (பெரும்.- 258).

    தமிழர் வாழ்வியலில் கிளை பெறுமிடம் கிளையோடு வாழ்வதே போற்றுதற்கு உரியதென்ற கொள்கை நிலவியது.

    “அன்பெனப்படுவது தன் கிளை செறாமை” (கலித்.- 133)

    என அன்பிற்குச் சொல்லப்படும் வரையறை கிளை போற்றுவதன் மேன்மையை வலியுறுத்தும். இக்கொள்கைக்கு மாறுபட வாழ்வதை;

    “கிளை அழிய வாழ்பவன் ஆக்கம் போல் புல்லென்று” (கலித்.- 34)

    என இழிவாகப் பேசுகிறது செவ்விலக்கியம். உறவினர் கேட்டை நீக்கித் தாங்குவதும், பங்காளிகளை ஊட்டுவதும் இல்வாழ்வான் கடமை என்பதை;

    “கேள் கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும்” (அகம்.- 93)

    வாழும் வாழ்க்கையே பெருமையுடையது எனப் போற்றுகிறது பண்டை இலக்கியம்.

    பின்புலத்தில் கிளையின் பயன்பாடு 

    அகப்பாடல்களில் கிளை பேசுவதும் இல்லை; பேசியதாகக் கூறப்படுவதும் இல்லை. பாடலின் பின்புல விளக்கத்தில் ஆங்காங்கு கிளை இடம்பெறுகிறது.

    தொழிலில் ஈடுபடும் போதும், உண்டு களிக்கும் போதும், வழிபாட்டின் போதும் கிளையுடன் சேர்ந்து வினையாற்றுவது ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த தமிழர் நாகரிகமாகக் காணப்படுகிறது. பரதவர், குறவர், வேட்டுவர், உழவர் எனப் பல பிரிவினரும் கிளையுடன் சேர்ந்து தொழிலில் ஈடுபடக் காண்கிறோம்.

    பரதவர் மீன்வேட்டைக்குக் கிளையுடன் அவரவர் திமிலில் செல்வர் (நற்.- 331; அகம்.- 30) அது மட்டுமின்றி கோட்சுறாவால் கிழிந்த வலையைச் சீராக்கவும் கிளையுடன் கூடி முயன்றனர் (நற்.- 207).

    குறச்சிறார் கிளையுடன் தினைக்கொல்லையில் விளையாடிப் பறவை ஓட்டுகின்றனர் (நற்.- 44)

    ஆறலைக்கள்வர் கிளையுடன் கொள்ளையில் ஈடுபடுகின்றனர் (அகம்.- 193)

    உழவர் கருவுற்ற வாளைமீன் கூட்டம் போல விலாப்புடைக்கத் தம் கிளையோடு சேர்ந்து உண்டனர் (பரி.- 7)

    கிளையுடன் சேர்ந்து மது அருந்துவது பரக்கக் காணப்படுகிறது. குன்றக் குறவன் கிளையுடன் சேர்ந்து மது அருந்துவது பல பாடல்களில் பதிவாகி உள்ளது (நற்.- 341; திருமுரு.- அடி- 196; அகம்.- 172, 348 ) பரதவனும் கிளையோடு தேறல் மாந்துகிறான் (நற். – 388) வேட்டுவன் தான் எய்த அம்பிலிருந்து ஆமான் உயிர்தப்பி விட்டதால் அணங்குற்றது எனக் கிளையோடு சேர்ந்து மலை மேலுள்ள கடவுளுக்கு மழை வேண்டி வழிபாடு நிகழ்த்தினான் (நற்.- 165)

    அகஒழுக்கச் சித்தரிப்பில் கிளை

    கிளை  நான்கு பாடல்களில் மட்டுமே சிறுபாத்திரத் தகுதியைப் பெறுகிறது.

    மூங்கில் புதர் போலப் பல பங்காளிகளை உடையவன் தந்தை. அனைவரும் போற்றும் படியாக அவனது வாழ்க்கை முறையும் அமைந்து இருந்தது. ஆனால் தலைவி தற்போது தலைவனுடன் போய்த் தீரவேண்டிய கட்டாயமான சூழல்.  தன் களவொழுக்கம் பற்றித் தோழியிடம் வருந்தும் தலைவி;

    “முளை அணி மூங்கிலின் கிளையொடு பொலிந்த”  (அகம்.- 268)

    தந்தைக்கு அவப்பெயர் வரும்படியாகத் தலைவனோடு தான் கொண்ட நட்பின் விளைவு துன்புறுத்தி விட்டதே எனப் புலம்புகிறாள். இங்கு இயல்பாக ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையில் ஏற்படும் பாசப்பிணைப்பு வெளிப்படுகிறது. பங்காளிகளின் முன்னர் தன் தந்தை தலைகுனிய நேரிடுவதை எண்ணி அவள் மனம் வெதும்புவது நம் மனதையும் நோகச் செய்கிறது.

    பங்காளிகளுள் ஒருவர்க்கு ஏற்படும் அவமானம் அனைவர்க்கும் பொது என்ற நிலை அன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் இருந்தது. களவு முற்றிய நிலையில் தலைவனை வரைவிற்குத் தூண்டும் தோழி; தலைவியின் தந்தை மட்டுமின்றிக் கிளைக்கும் அவலநிலை ஏற்படாதபடித் தலைவன் ஒத்துக் கொண்டமை பற்றி எடுத்துரைத்து மனம் ஆறுகிறாள்.

    “கிளை உடை மாந்தர்க்குப் புணையுமாம் இவ்வென” (குறுந்.- 247)

    பெண்கேட்டு வரத் தலைவன் சம்மதித்ததால் விளையும் நன்மையை எடுத்து உரைக்கிறாள். தலைவன் ஒத்துக் கொள்ளாது விலகிவிட்டால் அது தலைவியின் தந்தைக்கு மட்டுமின்றி; அத்தனை பங்காளிகளுக்கும் அவப்பெயராகி விடும். எனவே அந்த இளிவரலினின்று மீள உறுதுணையாகும் தெப்பம் போலத் தலைவன் சம்மதம் கிடைத்து விட்டது எனத் தோழியும் தலைவியும் அமைதியுறுகின்றனர்.

    திருமணத்திற்கு முன்னர் தந்தையின் கிளையே பெண்ணுக்கும் சுற்றமாகும். மோர் விற்று வரும் ஆயர் குலப் பெண்ணின் இளமையும் அழகும்; அவள் மேல் ஆர்வம் மீதூரும் தலைவனையும் மருட்டுகிறது; அவளிடம் மோர் வாங்கும் பிற  பெண்களையும் மருட்டுகிறது. அவரவர் கணவர் கண்ணில் இவள் பட்டுவிட்டால் ஏற்படும் ஏதத்தை எண்ணி;

    “எழுநின் கிளையொடும் போகென்று” (கலித்.- 109)

    விரைந்து அனுப்பிவிட்டனர். வாசலை அடைத்துத் தம் கணவர் அவள் பின்னே போகாமல் பாதுகாத்தனர். ஆய்ச்சி தன் கிளையோடு சேர்ந்து சென்றால் தமது கணவர் அவளைப் பின்தொடர மாட்டார் என்பது குறிப்புப்பொருள் ஆகும்.

    கணவனின் கிளையே  மனைவிக்கும் கிளையாக அமைவது  ஆண்முதன்மைச் சமுதாய நெறி ஆகும்.

    “கிளையொடும் காக்க தன் கொழுநன் மார்பே” (குறுந்.- 80)

    என்ற ஔவையாரின் பாடலடியில் மனைவி பங்காளிகள் துணையுடன் தன் கணவனைப் பாதுகாத்துக் கொள்ளட்டும் என்கின்ற பொருளே கிடைக்கிறது.

    தொகுத்தோர் இப்பாடலுக்கு எழுதிய அடிக்குறிப்பில் இது பரத்தை கூற்று என்கின்றனர். ஆயினும் தன்னுணர்ச்சிப் பாடல்களைப் பாடிய ஔவையை இது இழிவுபடுத்துவதாக அமைகிறது என்பது என் கருத்தாகும். அதியனால் புரக்கப்பட்ட ஔவைக்கு அந்த  அரண்மனையில் நிலவிய அசூயையான சூழலை இப்பாட்டு காட்டுகிறது. புனல்விளையாட்டிற்குத் தன் கலைக்குழுவினரோடு கிளம்பும் ஔவை; ‘தலைவி (அதியனின் மனைவி) தன் கணவனைப் (அதியனை) பங்காளிகளோடு சேர்ந்து காத்துக் கொள்ளட்டும்; நாம் புனலாடச் செல்வோம்’ என்று சொல்வதாகப் பொருள் கொள்வதில் இடர்பாடு எதுவும் ஏற்படவில்லை.

    முடிவுரை

    உயிரற்ற பொருட்களின் கிளை தொகுதி எனும் பொருள்பட்டது. அஃறிணை உயிர்களின் கிளை கூட்டம் எனும் பொருள்பட்டது. மக்களின் கிளை சுற்றம் என்னும் பொதுப்பொருளையும், இடம் நோக்கிப் பங்காளிகள் என்னும் சிறப்புப் பொருளையும் பெற்றது. மக்களின் கிளையில் இளையவரும் முதியவரும் அடங்குவர். கிளையோடு வாழ்வதே போற்றுதற்கு உரியதென்ற கொள்கை நிலவியது. அகப்பாடல்களில் கிளை பேசுவதும் இல்லை; பேசியதாகக் கூறப்படுவதும் இல்லை. தொழிலில் ஈடுபடும் போதும், உண்டு களிக்கும் போதும், வழிபாட்டின் போதும் கிளையுடன் சேர்ந்து வினையாற்றுவது ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த தமிழர் நாகரிகமாகும். பங்காளிகளுள் ஒருவர்க்கு ஏற்படும் அவமானம் அனைவர்க்கும் பொது என்ற நிலை அன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் இருந்தது. திருமணத்திற்கு முன்னர் தந்தையின் கிளையே பெண்ணுக்கும் சுற்றமாகும். கணவனின் கிளையே  மனைவிக்கும் கிளையாக அமைவது  ஆண்முதன்மைச் சமுதாய நெறி ஆகும். கிளை என்னும் சிறுபாத்திரம் அன்றைய சமுதாயக் கொள்கையைத் தெளிவுறுத்துகிறது.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 7 (ஏதிலர்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 7 (ஏதிலர்)

    ச.கண்மணி கணேசன்,
    முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர் (ப.நி.),
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    சிறுபாத்திரங்களுள் ‘ஏதிலர்’ என்னும் பாத்திரம் தனித்தன்மை வாய்ந்தது. பிற தலைமைப்பாத்திரம், துணைப்பாத்திரம், சிறுபாத்திரம் முதலியோரை அவ்வப்போது உள்வாங்கிக் கொள்ளும்போது ஏதிலன், ஏதிலான், ஏதிலாட்டி, ஏதிலாள், ஏதிலாளன் என்று ஒருமை விகுதி பெறக்  காண்கிறோம். புறஇலக்கியத்திலும் ஏதிலர் பற்றிக் குறிப்புகள் உள. அகப் பாடல்கள் ஏதிலரைப் பற்றிப் பேசுகின்றனவே அன்றி; ஏதிலர் பேசுவது இல்லை. ஏதில் தன்மை பற்றிய விளக்கம் மூலம் ஏதிலர் யாரெனப் புரிந்துகொள்ளலாம்.

    ஏதில் தன்மை

    தொடர்பேதும் இல்லாது துன்பம் அல்லது சிக்கலுக்குக் காரணமாகும் அயல் தன்மையே ஏதில் தன்மை ஆகும்.

    பிரிவை விரும்பாத தலைவியின் கோணத்தில் தலைவன் பிரியக் காரணமாகும் பொருள்பற்று தன்னைத் துன்புறுத்துவதால்;

    “ஏதில் பொருள் பிணி” (அகம்.- 43)

    ஆகிறது. இதேபோல் நம்மைக் காத்தற்கு உரியவன் இவனென்று நிழல் தேடி வந்தடைந்த குடிகளைத் தன் தலைப்பாரமாக ஏற்றுப்; புகழை விரும்பி; அயல்நாட்டில் தொடர்ந்து தங்கும் தலைவன் தன்மையும் (குறுந்.- 89) ஏதில்தன்மை என்றே பெயர் பெறுகிறது. தலைவன் திரும்பி வந்து சேரவில்லை ஆதலால்; கார்ப்பருவம் இன்னும் தொடங்கவில்லை என நம்பவிரும்பும் தலைவிக்கு இடியும் அதைக் கேட்டு ஆடும் மயிலும் ஒன்றற்கொன்று தொடர்பே இல்லாத அயலாராகத் தோன்றுவதால்;

     “ஏதில் கலந்த இரண்டற்கு” (குறுந்.- 194)

    என்கிறாள். செல்வக்குடியைச் சேர்ந்த தாயின் கோணத்தில் உடன்போன தலைவிக்குச் சிலம்புகழி நோன்பியற்றும் தலைவனின் வறியமனை;

    “ஏதில் வறுமனை” (அகம்.- 369) யாகத்

    தெரிவதன் காரணம்; தலைவியின் பிறப்பு வளர்ப்பிற்கும் தலைவன்
    வாழ்க்கை முறைக்கும் சற்றும் தொடர்பில்லை எனும் மனக்குறையாகும்.
    திணைமாந்தர் கோணத்தில் தம் ஊரைக் கைப்பற்றிய குறுநில மன்னர்;

    “ஏதில் மன்னர்” (அகம்.- 346)

    என்று சொல்லப்படுவதால்; அவர் அயலகத்திலிருந்து தம்மூர் வந்தவர் என்னும் கருத்து தெளிவாகிறது.

    ஏதிலரும் நொதுமலரும்

    முன்பின் அறியாத ஏதிலரை நொதுமலர் என்றும் அழைப்பதுண்டு. ‘நொதுமலர்’ என்ற சொல்லுக்கு ஏதிலர் என்றும்; ‘ஏதிலாளனை’  என்ற சொல்லுக்கு நொதுமல் தன்மை உடையவன் என்றும் பொருள் கூறுவர்.

    பகற்குறியில் சந்தித்து மீளும் தலைவனிடம் தோழி;

    “நொதுமலர் போலப் பிரியின்
    கதுமெனப் பிறிதொன்று ஆகலும் அஞ்சுவல்” (அகம்.- 300)

    என்கையில் தலைவி உயிரை மாய்த்துக் கொண்டு விடுவாளோ என்று அஞ்சுவதை விளக்கும் உரையாசிரியர் ஏதிலர் என்றே பொருள் கூறுவர்.

    “ஏதிலாளனை நீ பிரிந்ததற்கே” (ஐங்.- 232)

    எனும் பாடலடி சுட்டும் தலைவனை நொதுமல் தன்மை உடையவன் என்று உரைவிளக்கம் தருகிறார் பொ.வே.சோமசுந்தரனார்.

    குழுப்பாத்திரமாக ஏதிலர்

    சொந்தம், பந்தம், நட்பு, உற்றார், பெற்றார், ஊரார்  எனும் தொடர்பு ஏதும் இல்லாது; யாரென்று தெரியாதவரே அயலார் எனும் ஏதிலர் ஆவர்.

    மடலேறித் தன் காதலில் வெற்றி பெற்ற தலைவன்; திருமணத்திற்கு முன்னர் கொண்ட காதல்நோய் பற்றிப் பேசுங்கால்;

    “இளையாரும் ஏதிலவரும் உளைய” (கலித்.- 138)ப்

    பேசிப் பேசித் துன்பம் தீர்ந்ததாகக் கூறுவதில் ஏவலரும், ஏதிலரும் அடங்குகின்றனர்.

    களவுக்காலத்தில் புனக்காவலுக்கு வந்து பறவைகளை ஓட்ட வேண்டிய  தலைவி; தன் பணியைச் செய்யாமல் தலைவனின் பிரிவை எண்ணி அழத்தொடங்கும் போது; உடனிருந்த தோழி அவள் அழுகையை அடக்குகிறாள்.

    “எழாஅ ஆகலின் எழில்நலம் தொலைய
    அழாதீமோ நொதுமலர் தலையே” (நற்.- 13)

    என்ற பாடலடிகளில் பல்லைக் கடித்துக் கொண்டு பேசும்  தோழியின் குரல்; அவளது வாயை விட்டு வெளியேறாமல் தலைவிக்கு மட்டுமே கேட்குமளவு கமுக்கமாக அமைவதன் காரணம் அயலாருக்குத் தெரிந்து விடக்கூடாது என்பது தான். பாடல் அவரை நொதுமலர் என்கிறது.

    தோழி அறத்தோடு நிற்கவும்; பின்னர் வேற்று வரைவிற்குரிய ஏற்பாடுகள் தொடங்கிய போது;

    “மீன்வலை மாப்பட்டாங்கு
    இது மற்று எவனோ நொதுமலர் தலையே” (குறுந்.- 171)

    என்று மிரள்கிறாள் தலைவி. மீனுக்காக வலை வீசிய போது மான் வந்து சிக்கியது போல; வரைபொருள் நிமித்தம் பிரிந்து சென்ற தலைவன் வருமுன்னர் பெண் கேட்டு வந்த அயலவர் இப்பாடலில் நொதுமலர் என்று சுட்டப்படுகின்றனர்.

    தனிப்பாத்திரமாக நொதுமலாட்டி

    பெண்பால் விகுதி பெற்று நொதுமலாட்டி எனப் பூவிலைப் பெண்ணைக் குறிக்கப் பயின்று வருவதுண்டு. பருவம் கண்டு ஆற்றாமல்; கணவன் தன்னை மறந்துவிட்டானே  எனத் தவிக்கும் மனைவிக்குப் பூ விற்கும் பெண்ணைப் பார்க்கும் தோறும் அடக்கமாட்டாத அழுகை வருகிறது.

    “…………..பாதிரி………..
    புதுமலர் தெருவுதொறு நுவலும்
    நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே” (நற்.- 118)

    எனுங்கால் ‘நொதுமலாட்டி’ என்ற சொல் பெண்பால் விகுதியுடன்  அயலாளைக் குறிக்கிறது.

    ஏதிலர் உள்ளேற்கும் பிற பாத்திரங்கள்  

    சினம், அச்சம், மருட்கை, ஆற்றாமை போன்ற உணர்வுகள் காரணமாகத் தலைவன், பரத்தையர், ஊரார், வேலன், பாணன் ஆகியோர்  ஏதிலர் என்னும் குழுப்பாத்திரத்துள் ஒருவராக உள்வாங்கப்படுகின்றனர். நொதுமலாளன், நொதுமலாளர் என்று முறையே ஆண்பால், பலர்பால் விகுதி பெற்றுத் தலைவனும், ஆயத்தோடு தலைவியும், இக்குழுவிற்குள் இணைக்கப்படுவதும் உண்டு.

    வெறியாடி முருகனைக் காரணம் காட்டும்;

    “ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே” (அகம்.- 22)

    பூரித்துத் தலைவன் சிறைப்புறத்து இருந்து கேட்கும்படித் தோழியிடம் சிரிக்கிறாள் தலைவி. அவளது கோணத்தில் வேலன் யாரோ ஒருவன். வெறியாட்டை அஞ்சிய தலைவியும் அவனை; ‘ஏதில் வேலன்’ (அகம்.- 292) என்கிறாள்.

    தலைவனின் புறத்தொழுக்கத்திற்குத் துணை செய்யும் பாணன், இயல்பாகவே தலைவிக்கு ஏதிலன் ஆகின்றான். தலைவனின் பரத்தமை காரணமாகச் சினம்கொண்டவள்;

    “ஏதில் பெரும்பாணன் தூதாட” (கலித்.- 96)

    நிகழ்ந்த மாறுபாட்டைத் தொடர்ந்து விவரிக்கிறாள். பரத்தையிடம் இருந்து திரும்பிவந்த கணவனிடம் பரத்தையின் மணத்தை நுகர்ந்த தலைவி;

    “ஏதிலர் நாறுதி” (பரி.- 8)

    என்று விலகுகிறாள். இதேபோல் பரத்தையை ஏதிலார் என்று சுட்டும் பிற பாடல்களும் உள (கலித்.- 78, 80, 81, 84; பரி.- 24).

    பிரிவால் மெலிந்த தன்னைக் கண்டு அடையாளம் தெரியாமல் ஏதிலாட்டி என்று எண்ணிப் பருவம் திரும்பிப் போய்விட்டதோ எனக்  கவல்கிறாள் (நற்.- 56) தலைவி. தன் ஆயத்தோடு சேர்த்துத் தம்மை நொதுமலாளர் என்று வேறுபிரித்து உரைக்கிறாள். நெய்தல்திணை சார்ந்த தலைவிக்கு வேற்றுத்  திணை சார்ந்த தலைவன் பரிசுப் பொருளாகத் தான் வாழும் இடத்துத் தழை கொண்டு தைத்த ஆடையைக் கொடுக்க; அவள் காரணம் கூறி மறுக்கிறாள். ‘எம் நிலத்தைச் சேர்ந்த பெண்டிர் வண்டல் பாவைக்குக் கூட இங்கு கிடைக்கும் நெய்தல்தழை கொண்டு தைத்த ஆடையே புனைவர்’.

    “நொதுமலாளர் கொள்ளார் இவையே
    எம்மொடு வந்து கடலாடு மகளிரும்
    நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்” (ஐங்.- 187)

    எனத் தாம் அந்தத் தழையாடைக்கு அயலார் என்பதைப் புரிய வைக்கிறாள். அதைப் பெற்றுக் கொண்டு அணிந்தால்; தானே தன் களவை வெளிப்படுத்த  நேரிடும் என்பதே அவள் கருத்து.

    பூவைக்  காரணம் காட்டித் தலைவன் ஏதிலன் எனப்படுவதுண்டு (கலித்.- 107& 111). தலைவியை அழைத்துக்கொண்டு உடன்போகிய தலைவன் தாய்க்கு ஏதிலன் ஆகிறான். வேளாண் தொழிலால் செல்வம் மிகுந்த மனையை விட்டுக் காதலனுடன் சென்ற தன் மகள் ஏமாந்து விட்டதாக எண்ணிக் குமைகிறாள் தாய்.

    “ஏதிலன் பொய்மொழி நம்பி” (அகம்.- 117)யவள்;

    என்பது மகட்போக்கிய தாயின் எண்ணத்தைக் காட்டுகிறது. தன் அறியாப் பருவத்து மகள் யாரோ ஒருவனை நம்பிவிட்டாளே என்ற தவிப்பு மிகும்  போதும் (அகம்.- 17), தலைவி ஊடல்கொள்ளும் போதும் (நற்.- 50& 395) தலைவன் நொதுமலாளன் ஆகிறான். களவுக்  காலத்தில் ஊரார் அலருக்கு  இடையே பிரிந்துறையும் தலைவன் உறவும் பகையும் அல்லாதவன்;

    “நயனறத் தொடுத்தல் வல்லியோரே
    நொதுமலாளர் அது கண்ணோடாது” (அகம்.- 298)

    என்று தலைவனைப் பற்றித் தலைவி ஆற்றுவெள்ளத்திடம் ஆற்றாமல் புலம்புகிறாள். ‘உன்னைப் போலவே தலைவன் கண்டும் காணாமல் கண்ணோட்டமின்றி நொதுமலாளனாய் நடந்து கொள்கிறான்’ எனும் போது தலைவன் ஏதிலர் கூட்டத்தில் சேர்க்கப்படுகிறான். புறத்தே ஒழுகிநின்ற தலைவன் பற்றித் தோழியிடம் பேசித் தன் மனக்குறையை ஆற்றும் தலைவி ‘அவன் திரும்பி வந்தால் என்னைத் தொடாதே’ என்று மறுத்து உரைப்பேன் எனச் சாடப் பயன்படுத்தும் வசை ‘ஏதிலாளன்’ என்பதே. இதே வசையைப் புனையும் பாடல்கள் பல (ஐங்.- 34; நற்.- 74, 216). தன் மனதில் உள்ள ஏக்கத்தைத் தோழியிடம் தெருவில் விவரித்த  தலைவனின் காதலை ஏற்றுக்கொள்ளத் தயங்குபவளாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் தலைவி; ‘வாரணவாசிக்குச் செல்பவர் எல்லாம் துறக்கம் எய்துவர்’ எனும் நையாண்டியுடன்; ‘தெருவில் செல்பவர் புலம்பலை எல்லாம் என்னிடம்  வந்து சொல்லித் தொந்தரவு செய்யாதே’ எனத் தோழியை அறிவுறுத்தும் போது; ஏதிலன் என்றே விமர்சிக்கிறாள் (கலித்.- 60).

    தலைவி பாடிய உலக்கைப்பாட்டை ஆதாரமாகக் காட்டி; ஊரார் அலர் தூற்றுங்கால் தோழியின் கோணத்தில் அவர் ஏதிலராகின்றனர் (குறுந்.- 89). தோழி தலைவியிடம்;

    “உள்ளி நொதுமலர் ஏர்புரை தெள்ளிதின்” (நற்.- 11)

    ‘நீ அவன் வரமாட்டான் என்று எண்ணத் தொடங்கினால் ஏற்படவிருக்கும் ஏதத்தை எண்ணிப்பார்’ என்கிறாள். ஊரார் பழிசுமத்தி விடும் சிக்கலை முன்மொழிய; ஏதிலரின் கூட்டத்தில் ஊரார் உள்வாங்கப் படுகின்றனர். ஊரார் பேச்சைக் கேட்டுப் பொருள்வயின் பிரிய நினைக்கும் தலைவனை;

    “ஏதிலார் கூறுவது எவனோ நின் பொருள் வேட்கை” (கலித்.-22) என்று பிரிவுக்கு மறுக்கும் தலைவியும் ஊராரை ஏதிலார் ஆக்குகிறாள். இதே கருத்து இன்னொரு பாடலிலும் உள்ளது (கலித்.- 14). காமம் மிக்க கழிபடர் கிளவியாக நிலவைப் பார்த்துப் பேசும் தலைவி; தன் நோய்க்கு ஊராரால் தீர்வு சொல்லவோ செய்யவோ இயலாது என்பதை;

    “காதலன் செய்த கலக்குறு நோய்க்கு ஏதிலார்
    எல்லாரும் தேற்றார் மருந்து” (கலித்.- 145)

    எனப் பாடும் பெருந்திணைச் செய்தியும் ஊராரை ஏதிலர் கூட்டத்துள் சேர்க்கிறது. இவ்வண்ணமே கைக்கிளைச் செய்தியிலும்; ஊரார் ஏதிலர் எனப்படுகின்றனர் (கலித்.- 113)

    உவமைகளில் ஏதிலர்  

    ஆயத்தோடு ஆடிக் கொண்டிருக்கும் தலைவியைத் தழுவ விரும்பிய தலைவனுக்கு அவனது அசட்டுத்தைரியம் கைகொடுத்தது. எல்லார் நடுவிலும் புகுந்து;

    “நொதுமலர் போலக் கதுமெனத் தழுவி” (குறுந்.- 294)

    முயங்கியமை பற்றிய தலைவியின் கூற்று அவனை ஏதிலர் என உவமிக்கிறது. ஆதலால் அன்னை இற்செறித்து விட்டாள் என்கிறாள்.

    தான் வாழும் சேரிக்கு வந்தாலும் தன்னைக் கண்டுகொள்ளாமல் செல்லும் தலைவனால் சேரி;

    “ஏதிலாளர் சுடலை போல” (குறுந்.- 231)ப் பார்க்கப்பட்டது என்ற சேரிப்பரத்தையின் வாக்கு செவ்விலக்கியக் காலத்துச் சமூகநிலையையும்; தனித்தனிச் சுடலை இருந்தமையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. (உரையாசிரியர் இப்பாடலைத் தலைவி கூற்று என்று சொல்வது ஏற்புடையதன்று).

    இரவுக்குறியில் தன்னிடம் வம்பு வளர்க்கும் வயோதிகப் பார்ப்பானை ‘புலியைப் பிடிப்பதற்காகச் செய்த முயற்சியில் அகப்பட்ட குறுநரி’ என்று வசை பாடும்போது;

    “ஏதில் குறுநரி பட்டற்றால்” (கலித்.- 65)

    என ஏதிலனாக உவமிக்கிறாள் தலைவி.

    செயல் திறமையும் மதிநுட்பமும் இல்லாத அரசன் நாட்டில் அயலாரின் படை நுழைந்து ஆதிக்கம் செலுத்துவதைப் போல இளவேனில் பருவம் தொடங்கித் துன்புறுத்தியது என்ற உவமையிலும் (கலித்.- 27) ஏதிலாளனின் பயன்பாடு உள்ளது.

    புறப்பாடல்களில் ஏதிலர்

    சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கு வீற்றிருந்தமை கண்ட காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்;

    “ஏதில்மாக்கள் பொதுமொழி கொள்ளாது” (புறம்.- 58)

    இருவரும் ஒற்றுமையுடன் தம் நட்பைத் தொடர வேண்டுகிறார். இங்கு ஏதில்மாக்கள் என்று சொல்லப்படுவோர் ‘கோள் சொல்பவர்’. இக்காலத் தமிழில் ‘வத்தி வைப்பவர்’ உரையாசிரியர் ‘குறளை சொல்பவர்’ என்கிறார். இதே கருத்து இன்னொரு பாடலிலும் உள்ளது (புறம்.- 35)

    முடிவுரை    

    சொந்தம், பந்தம், நட்பு, உற்றார், பெற்றார், ஊரார்  எனும் தொடர்பு ஏதும் இல்லாது; யாரென்று தெரியாதவரே அயலார் எனும் ஏதிலர் ஆவர். அகப்பாடல்கள் ஏதிலரைப் பற்றிப் பேசுகின்றனவே அன்றி; ஏதிலர் பேசுவது இல்லை. முன்பின் அறியாத ஏதிலரை நொதுமலர் என்றும்; பெண்பால் விகுதியோடு நொதுமலாட்டி என்றும் சுட்டுவதுண்டு. பிற தலைமைப்பாத்திரம், துணைப்பாத்திரம், சிறுபாத்திரம் முதலியோரை அவ்வப்போது உள்வாங்கி ஏதிலன், ஏதிலான், ஏதிலாட்டி, ஏதிலாள், ஏதிலாளன் என்று ஒருமை விகுதி பெறுவதையும் காண்கிறோம். சினம், அச்சம், மருட்கை, ஆற்றாமை போன்ற உணர்வுகள் காரணமாகத் தலைவன், பரத்தையர், ஊரார், வேலன், பாணன் ஆகியோர் ஏதிலர் என்னும் குழுப்பாத்திரத்துள் இணைக்கப்படுகின்றனர். நொதுமலாளன், நொதுமலாளர் என முறையே ஆண்பால், பலர்பால் விகுதியுடன் தலைவனும், ஆயத்தோடு தலைவியும், இக்குழுவிற்குள் இணைக்கப்படுவதுண்டு. ஏதிலர் உவமைகளாக  எடுத்து  ஆளப்படுவதுண்டு. புறஇலக்கியத்திலும் ஏதிலர் பற்றிக் குறிப்புகள் உள.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 6 (ஏவலிளையர்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 6 (ஏவலிளையர்)

    ச.கண்மணி கணேசன்,
    முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர் (ப.நி.),
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    ஏவல் இளையர் என்னும் குழுப்பாத்திரம் அகஇலக்கியச் சிறுபாத்திரங்களுள் ஒருமை விகுதி பெறும் தனிப்பாத்திரமாக இடம்பெறுவதில்லை. அகஇலக்கியம் மட்டுமின்றிப் புறஇலக்கியத்திலும் இப்பாத்திரம் பற்றிய குறிப்புகளைக் காண இயல்கிறது.

    இருவேறுபொருள் தரும் ‘இளைய-’ எனும் சொல்தொகுதி

    தொகைநூல்களில் இளையர் என்னும் சொல் இரண்டு பொருட் பரிமாணங்களுக்கு உரியதாகக் காணப்படுகிறது. வயதில் மூத்தவரோடு உறழ்ந்து சுட்டப்படும் ‘இளையர்’, ‘இளமையை’, ‘இளையோர்’ ஆகிய பெயர்ச்சொற்கள் உள்ளன (பெரும்.- 268; பொருநர்.- 187; சிறு.- 232; புறம்.- 213, 254; பரி.- 6- அடி- 27; 10; நற்.- 111, 207; அகம்.- 30, 348; குறுந்.- 61, 246; ஐங்.- 198; கலித்.- 83). உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியை;

    “இளையோன் சிறுவன்” (பொருநர்.-அடி- 130)

    என்று குறிப்பிடுகிறார் புலவர். அகப்பாடல் தலைவனும் தன் இளமை காரணமாக இளையோன் என்று அழைக்கப்படுவது உண்டு (அகம்.- 203). வயதால் இளைய பெண்பாலினரைச் சுட்டும் ‘இளையள்’, ‘இளையோள்’ ஆகிய சொற்கள் அக இலக்கியத் தலைவியைக் குறிப்பதாகப் பயின்று வருகின்றன (நற்.- 143, 201; ஐங்.- 256; குறுந்.- 119; அகம்.- 193, 314, 319; ). பரத்தையைச் சுட்டும் ‘இளையோள்’ என்ற சொல்லும் உளது (நற்.- 320). புறநானூற்றுத் தலைவரின் மனைவியரும் ‘இளையோய்’ என்றும் ‘இளையோள்’ என்றும் அழைக்கப்படுகின்றனர் (பா.- 144, 340, 350). ‘இளையோர்’ என்னும் சொல் தலைவியையும் அவளது தோழியர் கூட்டத்தையும் ஒருங்கே குறிப்பதாக அமைந்துள்ளது (நற்.- 68; அகம்.- 90, 254, 370). குறிஞ்சிப்பாட்டின் தலைவன்; தலைவியையும், தோழியையும் ஒருங்கு ‘இளையீர்’ என்று அழைக்கிறான் (அடி- 141).

    இத்தரவுகளினின்று மாறுபட்டு ஏவலர்களைக் குறிக்கும் ‘இளையர்’ மட்டுமே இங்கு கட்டுரைப்பொருள்  ஆகின்றனர் .

    புறப்பாடல்களில் ஏவல் இளையர்

    பாணர் குழுவில் இளையர் என்றே அழைக்கப்படும் ஏவலர் இருந்தனர் (சிறு.- 33; பதிற்.- 40, 41, 48, 51). வையைப் புதுப்புனலில் ஆட எழுந்த கூட்டத்திற்குள் முண்டியடித்துச் செல்ல இயலாத ஏவலரே அப்பாட்டில்

    “சேரி இளையர் செலவரு நிலையர்” (பரி.- 6- அடி- 38)

    என்று விதந்து சொல்லப்படுகின்றனர்.

    வீரரைக் குறிக்கும் ‘இளையர்’, ‘இளையோர்’ என்ற பயன்பாடும் உள்ளன. (புறம்.- 57, 150,  242, 253, 254, 263, 286, 353; பதிற்.- 54, 71). அவ்வாறு அழைக்கப்பட்ட காரணம் அவர்கள் தலைவருக்கு அடங்க வேண்டியவராய் இருந்தமை எனலாம். அதனால்தான்

    “ஏவல் வியங்கொண்டு இளையரொடு எழுதரும்” (பதிற்.- 54)

    என்று பாடப்பட்டுள்ளது.

    “யான் கண்டனையர் என்இளையரும் வேந்தனும்” (புறம்.- 191)

    என்ற பிசிராந்தையார் கூற்றில் இளையர் ஏவலரையே குறிக்கிறது.

    அகப்பாடல்களில் இளையர்

    “ஏவல் இளையர்” (அகம்.- 342; நற்.- 389)

    என்ற தொடரில் இளையர் ஏவலுக்கு உரியவர் என்ற செய்தி வெளிப்படை.

    பலதிறத்தினராகிய இளையர்

    இளையர் வேந்தரிடமும், வேளிரிடமும், திணைமாந்தரிடமும் பணியாற்றினர். ஆறலைக்கள்வரும் இளையராக மறவர் தலைவருடன் சேர்ந்து பணியாற்றினர். ஊராட்சியில் பணியமர்த்தப்பட்ட காவலரும் இளையரே.

    “ஏவல் இளையர் தலைவன்” (அகம்.- 342)

    எனப் பாண்டியனும் அவனிடம் பணியாற்றிய ஏவலரும் சுட்டப்  படுகின்றனர்.

    சோழவேந்தன் அழிசி ஏவலர் கூட்டத்தை உடையவன் ஆதலால்;

    “நிரைய ஒள்வாள் இளையர் பெருமகன்” (குறுந்.- 258)

    என்று சுட்டிப் பாடுகிறார் புலவர்.

    “வல்வில் இளையர் பெருமகன் நள்ளி” (அகம்.- 152)

    என வேளிர்குலத் தோன்றலாகிய நள்ளியும் அவனது ஏவலரும் பாடலில் இடம்பெறுகின்றனர்.

    வேட்டையைத் தவிர வேறேதும் தெரியாததால் புல்லியின் ஏவலர் கல்லா இளையர் என்று அழைக்கப்பட்டனர்.

    “கல்லா இளையர் பெருமகன் புல்லி” (அகம்.- 83)

    எனக் குறிப்பிடப்படுவது காண்க.  மழை பொய்த்த மூங்கில் காட்டுவழியாகச் செல்லும் வணிகச்சாத்துகளைக் கொன்று; கொள்ளையில் ஈடுபடும் கொடுமையான வாழ்க்கை உடைய பாலைநிலத்து மறவரை இளையர் என்றும்; அவரது தலைவரை;

    “வல்வில் இளையர் தலைவர்” (அகம்.- 245)

    என்றும் பாடியுள்ளமை காண்க. அணிகலன்கள் இல்லையெனினும் வழிச்செல்வோரைக் கொன்று பறவைகளுக்கு இரையாக்கும்;

    “கல்லா இளையர் கலித்த கவலை” (அகம்.- 375)

    என்ற பாடலடியிலும் ஆறலைக் கள்வர் இளையர் என்றே அழைக்கப்  படுகின்றனர்.

    இரவுக்குறியின் ஏதத்தை எடுத்துரைக்கும் தலைவி;

    “துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்
    இலங்குவேல் இளையர் துஞ்சின்” (அகம்.- 122)

    நாய் குரைக்கும் என்கிறாள். தூங்காத ஊர்காவலரை வேலேந்திய இளையராகக் காட்டுகிறது இப்பாடல்.

    இளையரும் ஆயுதமும் 

    இளையர் ஆயுதமேந்தியவராகவே அகப்பாடல்களில் சித்தரிக்கப்படுகின்றனர்.

    “வெல்வேல் இளையர்” (அகம்.- 64, 104),

    “ஒள்வாள் இளையர்” (குறுந்.- 258),

    “வல்வில் இளையர்” (குறுந்.- 275; அகம். – 152, 245),

    “இலங்குவேல் இளையர்” (அகம்.- 122),

    “திருந்துவேல் இளையர்” (அகம்.- 345)

    என; ஆயுதத் தொடர்போடு அவர்களது பணி இருந்தது என்பதை நிறுவுதற்கேற்ற தொடர்கள் பலவாக உள்ளன.

    இளையரின் பணி

    தலைவர்களிடம் மெய்க் காப்பாளராய்ப் பணியாற்றி; அவருடன் வெட்சிப் போரிலும், கரந்தைப் போரிலும் ஈடுபட்டனர் இளையர்.  காட்டகச் சிறுகுடியினர் ஏவல் இளையராய்த் தலைவருடன் வேட்டைக்குச் சென்றனர்.

    “……………………..பொறாஅர்
    விண்பெறக் கலித்த திண்பிடி ஒள்வாட்
    புனிற்றான் தரவின் இளையர் பெருமகன்
    தொகுபோர்ச் சோழன் ” (அகம்.- 338)

    எனும் பாடலடிகளில் சோழனுக்காக அவனது இளையர் பொறுக்க மாட்டாதவராய்ப் பகைப்புலத்தினின்று ஆநிரைகளைக் கவர்ந்து வந்தமை விளக்கம் பெறுகிறது. எனவே அவர்கள் வெட்சி வீரர்கள்.

    தலைவன் சென்றிருக்கும் காட்டுவழி பற்றிக் கவலும் தலைவி; பெண்யானை துயில்வது போல் தோற்றமளிக்கும் சிறுகுன்றுகளின் மருங்கில்; நடப்பட்டவை போலக் காட்சியளிக்கும் இயற்கையான நெடுங்கற்களின் பரந்த இடத்தில்; நிரை கவர்ந்த வெட்சி வீரருடன் நடந்த போரில்  வீரமரணமடைந்தவர்களின் பெயர்களை எழுதி; மணமிகுந்த அரைத்த மஞ்சளைப் பூசி வழிபட்டு; சிவந்த கரந்தைப் பூக்களைத் தம் அம்புகளால் அறுத்தெடுத்த ஆத்தி நார்களில் கட்டிக் கண்ணியாக அணிந்து; வண்டுகள் ரீங்காரத்துடன் மொய்க்கக்; கழலணிந்து; நிரைமீட்கும்

    “இளையர் பதிபெயரும் அரும்சுரம்” (அகம்.- 269)

    என்கிறாள். எனவே இங்கு சுட்டப்படும் இளையர் கரந்தைவீரர் ஆகின்றனர்.

    இரவுக்குறியின் ஏதத்தைச்  சிறைப்புறமாக நின்ற தலைமகனுக்குச் சொல்லுவாளாய்த் தலைவி; பெண்பன்றி தன் குட்டிகளை வேட்டுவரிடம்  இருந்து காத்துச் சென்றமையை;

    “இளையர் எய்துதல் மயக்கி கிளையொடு” (அகம்.- 248)

    போனது என்கிறாள். இதனால் இங்கு இளையர் வேட்டுவர் என்பது தெளிவு. வேட்டுவர் எழுப்பிய ஆரவாரத்தில் மிரண்டு காட்டிலிருந்து ஒதுங்கிய ஆமான்கன்று; சிறுகுடியுள் நுழைந்து; அங்கிருந்த இளையரால் பேணப்பட;  அவரோடு கலந்துவிட்டது என்று சொல்லும் பாடலில்;

    “இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து” (குறுந்.- 322)

    உறைந்தது என்பதால் இளையர் வேட்டுவச் சிறுகுடியினர் எனப்பெற்றோம். இனிய பலாச் சுளைகளில் விளைந்த தேனைப் பருகிச்; சீழ்க்கை ஒலியுடன் செல்லும் அம்பினைச் செலுத்தும் ஏவலருடன் சேர்ந்து முள்ளம்பன்றியை வீழ்த்தும் வேட்டுவனை;

    “வீளை அம்பின் இளையரொடு மாந்தி” (அகம்.- 182)

    எனக் காட்சிப்படுத்துகிறது பாடல். இவ்இளையர் வேட்டுவனின் ஏவலர் ஆவர். இவ்வாறு வேட்டுவனுக்கு அமைந்த ஏவலர் பற்றி நற். 389ம் பாடலும் கூறுகிறது.

    அகப்பாடல் துறைகளும் இளையரும்

    முதன்முதலில் தலைவியைச் சந்திக்கும் போதும், குறியிடத்தில் அவளைச் சந்திக்கச் செல்லும் போதும், வரைதல் வேண்டித் தலைவியின் தமரைப் பார்க்கச் செல்லும் போதும், கற்புக் காலத்தில் வேந்தர்க்காக வினைவயிற் பிரிந்து செல்லும் போதும், பொருள் வயிற்பிரியும் போதும் தலைவனுடன் இளையர் செல்வதுண்டு. தலைவியின் அன்பு கிடைக்கப்  பெறாத தலைவன் மடலேறித் தன் வேட்கையை ஊரார்க்குப் புலப்படுத்தும் முன்னர் தன் இளையரிடம் புலம்பித் தெரிவிப்பதுண்டு.

    தலைவி ஆயத்துடன் வண்டல்மனை இளைத்து ஆடிக் கொண்டு இருந்த போது தேரில் வந்த தலைவன்; ஏவலருடன் தேரைத் தூர நிறுத்தி விட்டுத் தலைவியின் அருகே வந்து அம்மனையைப் பாராட்டி; அவள் பதில் சொல்லாதிருக்க மீண்டு சென்றான்.

    “கொடுஞ்சி நெடுந்தேர் இளையரொடு நீக்கி” (அகம்.- 250)

    அவன் தலைவியுடன் சொல்லாடியமை நோக்கத்தக்கது.

    குறியிடத்துத் தலைவியைக் காணவரும் போது;

    “கவர்பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும்
    பெயர்பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்” (நற்.- 307)

    எனத் தலைவனின் தேர்மணி ஓசையுடன்; ஏவலரின் கலகலப்பான பேச்சொலியும் கேட்பது பற்றித் தலைவியிடம் உரைக்கிறாள் தோழி.

    தலைவியைப் பெண்கேட்டு வரும் தலைவன் ஆரவாரம் செய்யும் ஏவலரோடு தேரேறிப் பகலில் வந்துள்ளான்; அதனால் இனி ஊராரின் வாயிலிருந்து அலர் எழாது என்பதை;

    “ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல்வாய்” (அகம்.- 160)

    என்று தொடர்கிறாள் தோழி.

    வினைவயிற் பிரிந்த தலைவனுக்காகக் காத்திருக்கும் தலைவியிடம்;

    “நின் பல்லிருங் கதுப்பின்
    குவளையொடு தொடுத்த நறுவீ முல்லை
    தளையவிழ் அலரித் தண்ணறுங் கோதை
    இளையரும் சூடி வந்தனர் நமரும்
    விரியுளை நன்மா கடைஇப்
    பரியாது வருவர் இப்பனிபடு நாளே” (நற்.- 367)

    என்று தோழி இளையர் முதலில் வந்து சேர்ந்து விட்டதை உரைக்கிறாள். குவளையும், முல்லையும், அலரியும் விரவி நீ சூடியிருப்பது போலவே ஏவலரும் சூடிக்கொண்டு வந்துவிட்டனர் ஆதலால்; இனித் தலைவன் வந்துசேர்வது ஒருதலை என்பது பொருள். இது போன்ற சூழலில் ஏவலிளையர் இடம் பெறும் பாடல்கள் பல உள (அகம்.- 104; குறுந்.- 275)

    பொருளுக்காகப் பிரிந்து செல்லும் தலைவனுடன் ஏவலரும் செல்வதைத்;

    “……………………………………..தம்மொடு
    திருந்துவேல் இளையர் சுரும்புண மலைமார்” (அகம்.- 345)

    என்று எடுத்துக்கூறுகிறாள் தலைவி. ஏவலர் தம் தலையில் தரித்துக் கொள்ள ஏதுவாக நுணாமரக் கொம்புகள் தளிர்க்கும்படி மழை பெய்து குளிர்ச்சி நிலவட்டும் என்பது அவளது எண்ண வெளிப்பாடு.

    மடலேறி வெற்றிகரமாகத் தலைவியை மணந்த தலைவன் தானுற்ற காதல்நோய் பற்றிப் பின்னர் உரைக்கும் போது;

    “இளையாரும் ஏதிலவரும் உளைய யான்
    உற்றது உசாவும் துணை” (கலித். – 138)

    என்றிருந்த தன் நிலையை எடுத்துரைக்கிறான். தன் மனவுளைச்சலை இளையரிடம் எடுத்துச் சொல்லி ஆற்ற முற்பட்டமை இப்பாடலடியில் புலனாகிறது.

    தலைவன் இளையரை ஏவும் முறை

    வினைமுடித்து மீளும் தலைவன் உடன்வரும் இளையரை மூன்று நிலைகளில் ஏவுகின்றான். தனக்கு முன்னரே சென்று தலைவியிடம் தன் வருகையை உணர்த்த விரைந்து செல்லச் சொல்வதுண்டு.

    “ஏகுமின் என்ற இளையர் வல்லே ” (நற்.- 42)

    விரைந்து சென்று தலைவிக்குத் தலைவன் வருகையை  அறிவித்ததால்; அவள் தன் கூந்தலைப் புனைந்து; ஒப்பனை செய்து கொண்டு காத்து  இருந்தாள் என்று முன்னர் நடந்ததை நினைவு கூரும் தலைவன் மீண்டும் அதுபோலவே ஏவலரை முன்னனுப்ப முடிவு செய்கிறான்.

     தானும் தன் இளையரும் ஒருங்கு இணைந்து ஊர் திரும்புவதும் உண்டு. “இளையர் ஏகுவனர் பரிப்ப வளைஎனக்” (நற்.- 161) காட்டுவழியில் தம் வீரர் ஆங்காங்குத் தங்கிச் செல்லத் தலைவனும் அவருடன் சேர்ந்தே வந்தான் .

    ‘இளையர் தேருக்கு முன்னர் ஓடிச் செல்ல வேண்டியிருப்பதால்; அவர்கள் இடையிடையே காலாற அமர்ந்து இளைப்பாறி வரட்டும். நீ தேரை விரைந்து செலுத்து; நாம் முன்னர் சென்று சேர்வோம்’ எனத் தலைவன் தான் முதலில் தலைவியிடம் சேர முனைவதும் உண்டு.

    “விரைபரி வருந்திய வீங்குசெலல் இளையர்
    அரைசெறி கச்சை யாப்பு அழித்து அசைஇ” (நற்.- 21)

    என்ற பாடல் வரிகள் வேகமாக ஓடிவந்த ஏவலர் தம் அரைக்கச்சையை நெகிழ்த்துவிட்டு மூச்சிரைக்க ஓய்வெடுக்க முனைவதைக் காட்சிப்படுத்துகிறது.

    ஏவல் இளையர் பாத்திரத்தின் பயன்பாடு தலைவனின் பெருந்தன்மையையும், நாகரிக மேம்பாட்டினையும் புலப்படுத்தவும், அவனுக்குத் தலைவிமேல் இருந்த காதலின் மிகுதியைப் புரியவைக்கவும் இளையர் பாத்திரம் கருவியாகப் பயன்பட்டுள்ளது.

    தலைவியைச் சந்திக்கும் போதெல்லாம் தேரையும் ஏவலரையும் சேய்மையில் நிறுத்திவிட்டு வரும் தலைவனின் பண்பைத் தோழி பாராட்டுகிறாள்.

    “கடுந்தேர் இளையரொடு நீக்கி நின்ற” (அகம்.- 310)

    நாகரிகம் அவனது பாத்திரப்படைப்பை உயர்த்திக் காட்டுகிறது. உடன்போக ஊக்கும் தோழி; பிற்றைநாளில் உனக்கு மனைவியான  இவளோடு; ஏவலரும் குதிரையும் ஒருங்கே எம் இல் வந்து விருந்துண்டு செல்க என்கிறாள் (அகம்.- 300). அங்ஙனம் விருந்துண்ணுங்கால் ஏவலரை முதலில் உண்ணவைத்து அதன் பின்னர் அவன் விருந்துண்பான் என்று கற்பனை செய்து கூறுகிறாள்.

    “இளையர் அருந்த பின்றை நீயும்” (அகம்.- 394)

    விருந்தயரலாம் என்பது  தோழியின் கூற்றாயினும் தலைவனின் பெருந்தன்மை அறிந்து அவள் பேசுவதாகக் கொள்வதில் தவறில்லை.

    தலைவிமேல் அவனுக்கு இருந்த வேட்கையால் தான்; காட்டுவழியில் தேருக்கு முன்னால் ஓடிச்செல்லும் ஏவல் இளையரைக் கண்டு இரக்கம் மேலோங்கினும்;

    “இளையர் ஏகுவனர் பரிய விரிஉளை”க்  (அகம்.- 375)

    குதிரையின் கடிவாளத்தைத் தேர்ப்பாகன் வலிந்து பிடித்துச் செலுத்த விரைகிறான்.

    முடிவுரை

    இளையர் எப்போதும் ஆயுதமேந்தி வேந்தரிடமும், வேளிரிடமும், திணைமாந்தரிடமும் பணியாற்றினர். ஆறலைக்கள்வரும் இளையராக மறவர் தலைவருடன் சேர்ந்து பணியாற்றினர். ஊராட்சியில் பணிசெய்த காவலரும் இளையரே. தலைவர்க்கு உறுதுணையாய் வெட்சிப்போரிலும், கரந்தைப்போரிலும் ஈடுபட்டனர் இளையர். காட்டகச் சிறுகுடியினர் ஏவல் இளையராய்த் தலைவருடன் வேட்டைக்குச் சென்றனர்.

    முதன்முதலில் தலைவியைச் சந்திக்கும் போதும், குறியிடத்தில் அவளைச் சந்திக்கச் செல்லும் போதும், வரைதல் வேண்டித் தலைவியின் தமரைப் பார்க்கச் செல்லும் போதும், கற்புக் காலத்தில் வேந்தர்க்காக வினைவயிற் பிரிந்து செல்லும் போதும், பொருள் வயிற்பிரியும் போதும் தலைவனுடன் இளையர் செல்வதுண்டு. தலைவியின் அன்பு கிடைக்கப் பெறாத தலைவன் மடலேறித் தன் வேட்கையை ஊரார்க்குப் புலப்படுத்தும் முன்னர் தன் இளையரிடம் புலம்பித் தெரிவிப்பதுண்டு. வினைமுடித்து மீளும் தலைவன் இளையரைத் தனக்கு முன்னரோ; தன்னுடன் சேர்ந்தோ அல்லது தனக்குப் பின்னரோ வரச்சொல்லி ஏவுவதுண்டு. தலைவனின் பெருந்தன்மையையும், நாகரிக மேம்பாட்டினையும் புலப்படுத்தவும், அவனுக்குத் தலைவிமேல் இருந்த காதலின் மிகுதியைப் புரியவைக்கவும் இளையர் பாத்திரம் கருவியாகப் பயன்பட்டுள்ளது

    ஏவல் இளையர் என்னும் குழுப்பாத்திரம் ஒருமை விகுதிபெற்றுத் தனிப்பாத்திரமாக இடம்பெறுவதில்லை. புறஇலக்கியத்திலும் இப்பாத்திரம் பற்றிய குறிப்புகளைக் காண இயல்கிறது. தலைவனின் முழுமையான பாத்திரப்படைப்புக்கு ஏவல்இளையர் எனும் பாத்திரம் இன்றியமையாதது.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 5 (ஊரார்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 5 (ஊரார்)

    ச. கண்மணி கணேசன்,
    முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி. 

    முன்னுரை

    பெயரிலேயே பன்மை விகுதி கொண்ட ‘ஊரார்’ என்னும் குழுப்பாத்திரம் பலவிடங்களில் ‘ஊர்’ என்னும் இடவாகு பெயரால் குறிக்கப்படுகிறது. கூற்று நிகழ்த்தும் உரிமை இல்லாத இப்பாத்திரத்தைப் பற்றித் தலைமைப்பாத்திரங்களும் துணைப்பாத்திரங்களும் சொல்வது என்ன? இக் குழுப்பாத்திரத்துள் யாரெல்லாம் அடங்குவர்? இப்பாத்திரத்தின் செயல் என்ன? பயன் என்ன? இப்பாத்திரம் என்னென்ன பேசியதாகச் சொல்லப் படுகிறது? அப்பேச்சின் நோக்கம், தன்மை, விளைவு, பெறுமதி முதலியன குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

    ‘ஊரார்’ ஒரு பாற்பொதுச் சொல்

    ஊரார் என்பது ஆண், பெண் இருபாலரையும் பொதுப்படக் குறிக்கும்  பலர்பாலுக்குரிய சொல் ஆகும். பெண்களை மட்டும் வேறுபிரித்துச் சுட்டும் இடங்களில் அது விதந்து கூறப்பட்டுள்ளது.

    புறத்தொழுக்கத்தில் நின்று பின் தலைவியிடம் மீண்டுவரும் தலைவனுக்கு வாயில் மறுக்கும் தோழி;

    “ஊர் முழுதும் நுவலு நிற்காணிய சென்மே” (அகம்.- 176)

    என்கிறாள். இங்கே ‘ஊர் முழுதும்’ என்று அழுத்தம் கொடுப்பது குறிப்பிடத்தக்கது. ஆண்கள், பெண்கள் ஆகிய அனைவரும் காணும்படிச்   செல்வாயாக என்ற பொருளே ஏற்புடைத்தாகிறது.

    “அழிதக மாஅந்தளிர் கொண்ட போழ்தினான் இவ்வூரார்
    தாஅந் தளிர் சூடித் தந்நலம் பாடுப
    யாஅந் தளிர்க்கும் இடைச் சென்றார் மீள்தரின்
    யாஅம் தளிர்க்குவேம் மன்” (கலித்.- 143)

    என்ற பாடலில் ‘இவ்வூரார்’ பெண்களை மட்டுமே குறிக்கிறது. ஏனெனில் யாமரம் தளிர்த்திருக்கும் காட்டுவழிச் சென்றவராகிய தலைவர் மீண்டு வரும்போது நான் பசலை நோய் நீங்கி உடல் நலம் பெறுவேன் என்ற தலைவி; தன் நிலையைப் பிரியாத ஊரார் நிலையுடன் ஒப்பிட்டு உரைக்கிறாள். இதனால் இங்கு ஊரார் பெண்களே ஆகின்றனர். இங்ஙனம்  பெண்டிரைத் தனித்துக் கூறும் பிற பாடல்களும் உள (அகம்.- 95; நற்.- 223)

    ஊரார் பற்றிய விமர்சனம்

    ஊரார் பேதைமை உடையவர்; ஆரவாரத்துடன் புறம் பேசுபவர்; இரக்கம் இல்லாதவர்; புரியும் திறனற்றவர்; பிறழப் புரிந்து கொள்பவர் என்றெல்லாம் சாடப்படுகின்றனர். அன்பிற்குரிய ஊர் என்று அங்கதச் சுவையுடன்  போற்றப்படுவதும் உண்டு.   .

    தலைவனின் ஊரை ஏத்தித் தலைவி பாடினாளாக; ஊரார் குறை கூறுகின்றனர். அவர்கள் அறிவில்லாதவர்கள் என்னும் பொருள்பட;

    “அழிவது எவன்கொல் இப்பேதை ஊர்க்கே” (குறுந்.- 89)

    என்கிறாள் தோழி.

    “……………………………..யான் ஒழிந்து இருத்தல்
    நகுதற்கு ஒன்று இவ் அழுங்கல் ஊர்க்கே” (கலித்.- 23)

    என்ற பாடற்பகுதியில்; தலைவனைத் தான் பிரிந்து இருக்கும் போது ஊரார் அவளது ஆற்றாமையைக் கண்டு நகுவது மட்டுமின்றி; ஆரவாரத்துடன் கூடிக் கூடிப் பேசுவர் என்று கருத்துரைக்கிறாள் தலைவி. பிற பாத்திரங்கள் வாயிலாகவும் ‘அழுங்கல் ஊரே’ என்னும் தொடர் இடம் பெறும் பாடல்கள் ஏராளம் (நற்.- 63, 203, குறுந்.- 140, 214, 351, 372; ஐங்.- 181; அகம்.- 70, 180, 400)

    “…………………………..என் நெஞ்சநோய்
    கண்டும் கண்ணோடாது இவ்வூர்….
    ………………………………இக்காமம்
    உணர்ந்தும் உணராது இவ்வூர்” (கலித்.- 140)

    என்று தனக்கு இரங்காத ஊர்மக்கள் குறித்துப் பேசுகிறான் தலைவன்.

    அவனது கூற்றில் காமஉணர்வைப் புரிந்து கொள்ளாதவராகவும் ஊரார்  விமர்சிக்கப் படுகின்றனர்.

    ஊரார் பேச்சு ‘எக்கேடும் கெட்டுப் போகட்டும்’ என்று புறந்தள்ளத் தக்கது என்ற போக்கில் உடன்போகத் துணியும் தலைவி;

    “அலர் சுமந்து ஒழிக இவ்வழுங்கல் ஊரே” (நற்.- 149)

    என ஊரை விட்டே ஒதுங்குகிறாள்.

    வினைவயிற் பிரிந்த தலைவன் குறித்த காலத்தில் மீண்டு வராத வழித்; ‘தன் துன்பத்தைப் பற்றிக் கவலும் ஊரார் தன் தலைவன் சென்ற காட்டுவழி பற்றிக் கவலை கொள்ளவில்லையே’ எனத் தலைவி  புலம்பும்  போது அவர் பிறழப் புரிந்து கொள்பவராக பேசப்படுகிறார்.

    “ஈங்கு யான் தாங்கிய எவ்வம்
    யாங்கு அறிந்தன்று இவ் அழுங்கல் ஊரே” (குறுந்.- 140)

    என்பது தலைவியின் மனக்குறை.

    தலைமக்கள் களவொழுக்கம் என்ற ஒருசெய்தி பற்றிப் பேசும்போது; ஒன்றிற்கு மேற்பட்ட பல கோணங்களில் ஊராரின் அலர் கிளைத்துப் பெரிதாகப் பரவுவதால் அங்கதச் சுவையுடன் “மையல் ஊர்” என்று நையாண்டி செய்கிறாள் தோழி (குறுந்.- 374).

    ஊரார் பேசுவதைச் சுட்டும் பாத்திரங்கள்

    களவுக்காலத் தலைவன், தலைவி, தோழி, கற்புக்காலத் தலைவி,  தோழி, காமக்கிழத்தி எனப் பலரும்; தம்முள்ளும் கண்டோருடனும் ஊரார் பேசியதை எடுத்துச் சொல்கின்றனர்.

    களவுக் காலம்

    தலைவன் கூற்றில் ஊரார்

    தலைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்லும் தலைவன் காட்டு வழிநடை வருத்தம் குறித்துப் பேசும்போது; அவளது ஊரார் எழுப்பிய பேரலர் குறித்த தன் கருத்தைப் புலப்படுத்துகிறான். அவர்கள் செல்லும் வழியானது மேகம் இல்லாது வெளிறித் தோன்றும் ஆகாயத்தினின்று மழை பெய்யாது வறண்டிருப்பினும்; ஆலமர நிழல் குளுமையாய் அயர்ச்சியைப் போக்கும் பெருமை உடையது. ‘நீ இதுவரை காம்பு இற்ற புன்னை மலர்கள் மிகுதியாக உதிர்ந்து தேன்மணம் வீசும் கழிக்கரைச் சோலை மணலில் நடந்து பழகியவள் ஆனாலும்; மிகுந்த அச்சம் தரும்

     “இம்மென் பேரலர் நும்மூர்” (நற்.- 76)

    இக்காட்டில் இல்லை. எனவே கல்லில் நடந்து சிவந்த பாதங்கள் நோய் நீங்க ஓய்வெடுத்துச் செல்லலாம்’ என்கிறான். இப்பாடலில் ‘ஊர்’ இடவாகு பெயராய் ஊர்மக்களைக் குறிக்கிறது.

    காமமிகுதியால் மடலேற முடிவுசெய்த தலைவன் கண்டோரிடம்;

    “………………………………………இக்காமம்
    அறிந்தும் அறியாது இவ்வூர்” (கலித்.- 140)

    என்று ஊர்மக்கள் குறித்துப் பேசுகிறான்.

    தலைவி கூற்றில் ஊரார்

    திருமணத்திற்குரிய பொருள் தேடச்சென்ற தலைவன் என் நெஞ்சில் மட்டும் வருகிறானே அன்றி நேரில் வரவில்லை; அத்துன்பத்தினால்    இறப்பதற்கும் அச்சமாக உள்ளது. அதற்கும் மேலாக;

    “பிரியா நண்பினர் இருவரும் என்னும்
    அலர் அதற்கு அஞ்சினன் கொல்லோ பலருடன்
    துஞ்சு ஊர்” (குறுந்.- 302);

    என்று தோழியிடம் ஊர்மக்கள் எல்லாம் தூற்றிவிட்டுத் தூங்குவதால் ஏற்பட்ட அச்சமிகுதியைத் தலைவி  ஆற்றாமையோடு புலப்படுத்துகிறாள்.

    தோழி கூற்றில் ஊரார்

    சிறைப்புறமாக நின்ற தலைவன் கேட்கப் பேசும் தோழி தலைவியது உடற்கூறு மாற்றங்களைக் கூறி வரைவு கடாவுகிறாள்.

    “ஊரலர் தூற்றும் கௌவையும் நாணிட்டு
    உரையவர்க்கு உரையாம் ஆயினும்” (நற்.- 263);

    அடக்கமாட்டாமல் வழிகின்ற கண்ணீர் அவள் நிலைமையை அவனுக்குப் புரியவைத்து விடும் என்கிறாள். நாணத்தால் பேச இயலாதவற்றுள்  ஊரார் சுமத்தும் பழிச்சொல்லும் அடங்குகிறது. தோழி ஊரார் பேசுவதைச் சுட்டும் பிற பாடல்களும் உள (கலித்- 124; அகம்.- 132, 282)

    கற்புக்காலம் 

    தலைவி கூற்றில் ஊரார்

    வினைவயிற் பிரிந்த தலைவன் நீட்டித்த வழி மனமழிந்த தலைவி;

    “கன்மிசை மயிலாலக் கறங்கி ஊரலர் தூற்”றுவதைக் (கலி.- 27) குறித்த காலத்தில் அவன் திரும்பி வராமையின் விளைவு என்கிறாள்.

    தோழி கூற்றில் ஊரார்

    களவுக்காலத்தில் அலர் தூற்றியவரைப் பற்றித் தோழி; திருமணத்திற்குப் பின்னர் தலைவன் மலர் சூடி வருவதைக் கண்டு  முற்றிலும் மாறுபட்டவராய் நாம் வியக்கும்படிப்;

    “புதுவதாகின்று அம்ம…
    ………………..நம் அழுங்கல் ஊரே” (அகம்.- 400) என்கிறாள்.

    காமக்கிழத்தி கூற்றில் ஊரார்

    ஊர்மக்கள் எல்லாம் பேசும்படி உன்னோடு சேர்ந்து நீர் விளையாட என்ன செய்ய வேண்டும் என்பதைப்;

    “பேரூர் அலரெழ நீரலைக்கலங்கி
    நின்னொடு தண்புனல் ஆடுதும்” (ஐங்.- 77)

    எனத் தொடங்கி ‘உன் இல்லக்கிழத்தியிடம் செல்லாதே என்னுடன் மட்டுமே வா’ என்று தலைவனிடம் பிணை இடுகிறாள் காமக்கிழத்தி.

    ஊரார் செயல்கள் 

    ஊரார் களவொழுக்கத்தையும், புறத்தொழுக்கத்தையும் பழி கூறுபவராகவும்; அதை அம்பலாக்கித் தம்முள் கமுக்கமாகப் பேசுபவராகவும், வாய்விட்டு வெளிப்படையாக எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி அலர் தூற்றுபவராகவும் காட்சிப்படுத்தப்படுகின்றனர்.  வினைவயிற் பிரிந்த தலைவன் மீளாதவழி தலைவியை  எண்ணி வருந்துபவராகவும், அவளது காமம் மிகைப்படும் போது எள்ளி நகையாடுபவராகவும்; தலைவனின் புறத்தொழுக்கத்தைக் கண்டு சிரிப்பவராகவும், சாடுபவராகவும் புனைந்துரைக்கப்படுகின்றனர்.

    ஏறு தழுவி வெற்றி பெற்ற  தலைவனையும் தன்னையும் சேர்த்து ஊரார் முன்னரே அலர் தூற்றினர் என்பதை;

    “………………………….பொதுவனோடு எண்ணி
    அலர் செய்து விட்டது இவ்வூர்” (கலித்.- 105)

    எனவும்; இனி திருமணத்திற்குத் தடை இல்லை என்பதால் அது பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை எனவும் கூறுகிறாள். இங்ஙனமே தம் களவு வெளிப்பட்டதைத் தலைவி எடுத்துச் சொல்லும் பிற பாடல்களும் உள (ஐங்.- 113; குறுந்.- 262).

     பிரிவால் மெலிந்த தன் நிலை கண்டு ஆற்றாத தோழியிடம் தலைவி

    “………………………பன்னாள்
    இவ்வூர் அம்பல் எவனோ” (அகம்.- 249);

    எனத் தலைவனோடு தான் கொண்ட களவை ஊரார் கமுக்கமாகப் பேசியதைச் சுட்டித் தனது தற்போதைய இரங்கத்தக்க நிலையையும் கூறி வருந்துகிறாள்.

    வினைவயிற் பிரிந்த தலைவன் சென்ற நெறி எறும்பின் வளைகளைப் போன்ற குறிய பல சுனைகளை உடையது. கொல்லனது உலையில் உள்ள பட்டடைக்கல் போன்ற வெம்மையான பாறைகளை உடையது. வளைந்த வில்லை உடைய வேடர் அக்கல்லில் தம் அம்புகளைத் தீட்டிக் கூர்மை ஆக்குவர். கவர்த்த வழிகளை உடையது.

    “எறும்பி அளையில் குறும்பல் சுனைய
    உலைக்கல் அன்ன பாறை ஏறிக்
    கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்
    கவலைத்து என்ப அவர் சென்ற ஆறே
    அதுமற்று அவலம் கொள்ளாது
    நொதுமற் கவலும் இவ் அழுங்கல் ஊரே” (குறுந்.- 12)

    அப்பாலை வழியின் ஏதத்தைப் பற்றிக் கவலையுறாமல் தனது தனிமைத் துன்பத்தை எண்ணிக் கவல்கின்றனரே என்பதைத் தலைவி இப்பாடலில் விளக்குகிறாள்.  தன் காமக்கிழத்தியிடம்  தனது பரத்தமையை ஒளித்துப் பேசிய தலைவனைப் பார்த்து அவள்; ஊர்மக்கள் சிரித்துச் சாடுவதை

    “ஊரவர் உடன்நகத் திரிதரும்
    தேர் ஏமுற்றன்று” (கலித்.- 74);

    என்கிறாள். அவனைப் பரத்தையரிடம் தேரில் கொண்டு சேர்க்கும் தேர்ப்பாகன் பித்தேறி இருக்கிறானோ எனக் கேட்பதற்குப் பதிலாக தேர்பித்தேறி இருக்கிறதோ எனக் கேட்டுச் சினத்தை வெளிப்படுத்துகிறாள்.

    தன் கணவனின் புறத்தொழுக்கத்தை அறிந்து ஊரார் பழி தூற்றுவதைத் தலைவி அவனிடமே;

    “ஊரவர் கௌவை உளைந்தீயாய்” (கலித்.- 95);

    எனக் கேட்கிறாள்.

    ஊரார் பேச்சின் விளைவுகள்

    ஊரார் பேச்சினால் மகிழ்ச்சி, பழி, பெருமை, நாணம் கைவிடல் எனப் பலதரப்பட்ட விளைவுகளைப் பாடல்களில் தெரிந்தெடுக்க இயல்கிறது.

    தமரும் சுற்றத்தாரும் சேர்ந்து செய்ய வேண்டிய வதுவையை ஊராரின் அலர் செய்து விட்டது எனத் தலைவி மகிழ்ந்து கூறுவதாக;

    “………….. நெடுந்தகை திறத்து இவ்வூர்
    இனையள் என்று எடுத்து ஓதற்கு….
    ….நம் வதுவையுள் தமர் செய்வது இன்று ஈங்கே
    தான் நயந்து இருந்தது இவ்வூராயின்” (கலித்.- 76)

    என்னும் பாடற்பகுதி அமைகிறது. அவனுக்கும் அவளுக்கும் இடையில் இருந்த உறவு பற்றிய ஊராரின் பேச்சு தலைவி தலைவனைச் சேர உதவியது என்கிறாள். இது போல் அம்பலின்  விளைவு திருமணம் நடக்க ஏதுவாகும் மகிழ்ச்சி எனும் பொருள்பட அமையும் பாடல்களும் உள (குறுந். – 51).

    மடலேறத் துணியும் தலைவன் அச்செய்கை தலைவிக்குப் பழியேற்படுத்தும் என்பதை;

    “……………………………………………முன்னின்று
    அவள் பழி நுவலும் இவ்வூர்” (குறுந்.- 173)

    என ஊராரின் மேலேயே ஏற்றிக் கூறுகிறான். இங்கு ஊரார் பேச்சு தலைவி மேல் பழி சுமத்தும் என்று முன்மொழிகிறான் தலைவன்.

    ஏறு தழுவித் தன் வீரத்தையும், வலிமையையும் நிலைநாட்டிய தலைவனை எண்ணிப் பார்க்கும் தலைவிக்கு;

    “கொல்லேறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார் சொல்லும் சொல்” (கலித்.- 106)

    அளவிலாப் பெருமையைத் தோற்றுவித்தது. இங்கு ஊரார் பேச்சின் விளைவு பெருமை ஆகும்.

    ஊரலரைத் தாங்கவியலாமல் உடன்போகத் துணியும் தலைவி;

    “சேணும் எம்மொடு வந்த
    நாணும் விட்டேம் அலர்க இவ்வூரே” (நற்.- 15)

    எனக் காலம்காலமாகத் தாங்கி வந்த நாணத்தை விட்டொழிக்கிறாள்.

    ஊரார் பேச்சின் தன்மை

    ஊரலரின் தன்மை காய்ந்த தட்டையில் தீப் பரவுவது போன்றது; தூக்கணாங்குருவியின் கூடு போன்றது; ஒரோவழி அறத்திற்கு முரண்பட்டு நின்றதையும் தோழி சுட்டிக்காட்டத் தவறவில்லை.

    பிரிந்து சென்ற கணவன் காலம் கடந்தும் மீண்டு வரவில்லை என்ற ஊராரின் அங்கலாய்ப்பு தட்டை தீப்பற்றி எரிவது போல் பரவியது.

    “விட்டுச் சென்றனர் காதலர்
    தட்டைத் தீயின் ஊரலர் எழவே” (ஐங்.- 340)

    என்கிறாள் தலைவி. இங்கு அலர் பரவும் வேகம் தீயின் வேகத்தோடு உவமிக்கப்படுகிறது.

    தூக்கணங்குருவியின் கூடு எவ்வளவு நுட்பத்துடனும் திறனுடனும் கட்டப்படுகிறதோ அதே நுட்பத்துடனும் திறனுடனும் ஊரார் அலர் அமைந்துள்ளது என்கிறாள் தோழி.

    “முடங்கல் இறைய தூக்கணங் குரீஇ….
    கூடினும் மயங்கிய மையல் ஊரே” (குறுந்.- 374)

    என்னுமிடத்து உயர்ந்த பனைமரத்தில் தொங்கும் பலதிறப்பட்ட வினைத்திறன் மிகுந்த வியப்புக்குரிய கூடு; ஒருவழிப்படாது பல உத்திகளின் விளைவாகப் பின்னப்பட்டு இருத்தலான்; பல்லாற்றானும் மயங்கி அலர் தூற்றும் ஊருக்கு உவமை ஆயிற்று எனலாம். அறத்தொடு நிற்கும் தோழி ஊரார் பேசுவதையே துணைக்கு அழைக்கிறாள். வேற்று வரைவின் போது;

    “பூக்கெழு துறைவனை என்னை என்னும் யாமே இவ்வூர்
    பிறிதொன்றாகக் கூறும்” (ஐங்.- 110)

    எனும் போது; ஊராரின் பேச்சு தலைவிக்கு உரிய தலைவன் யாரென்று சரியாகச் சொல்லவில்லை எனத் தாயிடம் கூறிச் சரியான தலைவன் யாரென்று புரியவைக்கிறாள். இங்கு ஊரார் பேச்சு அறத்தோடு முரண்பட்டிருக்கிறது.

    ஊரார் எனும் சிறுபாத்திரத்தின் பயன்கள்

    சிறப்பான காலப்பின்புலத்தைத் தோற்றுவிக்கவும், பொருத்தமான முழுமையான விளக்கங்களுக்காக உவமைகளைப் படைக்கவும், முரண் அழகைச் சேர்த்துப் புனையவும், ஊடலை வெளிப்படுத்தி வெறுப்பைக் காட்டவும்  ஊரார் என்னும் சிறுபாத்திரம் பயன் கொள்ளப்படுகிறது.

    “கழுது கால்கிளர ஊர் மடிந்தன்றே” (நற்.- 255)

    என விளக்கம் பெறும் இரவுக்குறிக்கு; ‘ஊரார் அனைவரும் தூங்க பேய் நடமாடும்பொழுது’ என்பது சிறப்பான காலப் பின்புலத்தைத் தோற்றுகிறது.

    “ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த
    உலைவாங்கு மிதிதோல் போலத்
    தலைவரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே” (குறுந்.- 172)

    என்ற உவமையில் விளக்கம் பெறுவது தலைவியின் மனநிலை. ஏழு ஊர்களில் உள்ள மக்களின் தேவைகளையும் ஓரூரில் உள்ள கொல்லன் ஊதுலை நிறைவு செய்யுங்கால்; அந்த உலைக்குரிய தோலாலான காற்றுத் துருத்தி எவ்வளவு மிகுதியாக மிதிபடுமோ; அவ்வளவு மிகுதியாக என் மனம் துன்புறுகிறது என்கிறாள் தலைவி. இங்கு பொருத்தமான விளக்கத்திற்கு ஊரார் உவமையாகப்  பயன்பட்டுள்ளனர்.

    தலைவன்  தலைவியைச் சந்திக்க இரவுக்குறியே ஏற்றது என்பதை

    “கொன்னூர் துஞ்சினும் யாம் துஞ்சலமே” (குறுந்.- 138)

    எனக்கூறும் தோழி ஊர் மக்களின் தூக்கத்தையே ஏற்ற சூழல் ஆக்குகிறாள்.

    இப்படி  ஊரார் தூங்கத் தாம் தூங்காமை பற்றிய கூற்றுகள் பாடல் புனைவுக்கு முரண் தொடையாய் அமைந்து அழகு சேர்க்கின்றன. புறத்தொழுக்கத்தில் தோய்ந்த தலைவன் மேல் ஊடல் கொண்ட காமக்கிழத்தி அவனை வசைபாடுங்கால் சுடுசொல் கூற; ‘பரத்தையரின் எயிறு அழுந்திய உன்  இதழை’

    “…………………………………………..ஊரவர்
    ஆடைகொண்டு ஒலிக்கு நின் புலைத்தி காட்டென்றாளோ”

    (கலித்.- 72); என இகழ்ந்து பேசுகிறாள். இங்கு வெறுப்பைக் காட்ட ஊரார் ஆடையைத் துவைக்கும் புலைத்தியை எடுத்தாள்கிறாள்.

    ஊரார் உறக்கமும் விழிப்புணர்வும் தன் காதல்நோய் மிகுதியால் தூங்காத தலைவி கூற்றில் தூங்கும் ஊர் சாடப்படுகிறது.

    “………………………………………………………என்
    உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே” (குறுந்.- 28);

    என்பது ஆற்றாத தலைவி கூற்று.

    “……………………………..ஊர்துஞ்சு யாமத்”தில்  (நற்.- 262);

    அவள் துன்புறுவாள் என்று எண்ணிப் பிரிவைத் தள்ளிப்போடும் தலைவன் கூற்றில் ஊரின் தூக்கம் தலைவியின் துன்பத்தைத் தெளிவாக உணரவைக்கும் பின்புலமாகிறது.

    இற்செறிப்பின் போது இரவில் கேட்கும் பறவை ஒலி கூடத் தன்  தலைவன் தேர் ஓசையோ என்று பயந்து புலம்பும் தலைவி

    “ஊர்மடி கங்குலும் துயில் மறந்ததுவே” (நற்.- 287);

    என ஊரார் தூங்கும் போதும் தான் விழித்திருந்த சோகத்தை நொந்து உரைக்கிறாள். ஆனால் இப்படித் துயில்வதாகச் சொல்லும் ஊரார் களவொழுக்கத்தை முளையிலேயே அடையாளம் கண்டுவிடுவதையும் இதே பாத்திரங்கள் உரைக்கின்றன.

    இரவுக்குறியில் தலைவியைச் சந்தித்து விடியுமுன் சென்ற தலைவனின் கால் தடம் புலருமுன் ஊரார் அலர் தொடங்கி விட்டமையை;

    “புலர் பதம் கொள்ளா அளவை
    அலர் எழுந்தன்று இவ்அழுங்கல் ஊரே” (குறுந்.- 372) எனத் தோழி உரைக்கிறாள்.

    களவு  தொடங்கியவுடன் கௌவை, அம்பல், அலர் என்று மூன்று நிலைகளில் சொல்லாற்றிய ஊராரைப் பார்க்கிறோம்.

    “யாமத்து அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றிப்
    புரையில் தீமொழி பயிற்றிய உரை எடுத்து
    ஆனாக் கௌவைத்தாகத்
    தான் என் இழந்தது இவ் அழுங்கல் ஊரே” (நற்.- 36)

    தோழி தலைவன் இரவுக்குறியில் சிறைப்புறமாக நிற்க; அவனைத் திருமணத்திற்குத் தூண்டுவாளாய்ப் பேசும்போது; ஊராரால் தலைவிக்கு ஏற்படும் இன்னல்கள் இவை என்று வரிசைப்படுத்துகிறாள். எதை இழந்ததால் ஊரார் இப்படிப் பேசுகின்றனர் என்று வினவுகிறாள்.

    ஊரார் பேச்சின் நோக்கம்

    ஊராரின் பேச்சு எதை நோக்கி அமைகிறது என்று முடிபாக அறிவதே அப்பாத்திரத்தின் பெறுமதியைக் காட்டக்கூடியதாக அமையும். அது ஒரு பெண்ணின் களவொழுக்கம் அதே ஆணுடன் திருமணத்தில் முடிய வேண்டும் என்ற கொள்கையை நிலைநாட்டும் நோக்கோடு அமைந்துள்ளது. களவொழ்க்கத்தில் ஈடுபடுபவரை ஊரார் வெறுக்கவும் இல்லை. இல்லறத்திற்கு ஊறு நேர்வதை ஊரார் விரும்பவும் இல்லை.

    களவை இனம்காணும் ஊராரைக் காட்டிப் பேசுகின்றாள் தலைவி.

    “எல்லி வந்தன்றோ தேர் எனச் சொல்லி
    அலர் எழுந்தன்று இவ்வூரே” (நற்.- 191). அதிகாலையில் தேர் வந்த ஒரு காரணம் காட்டி ஊராரின் அலர் மிகுந்தது என்பது தோழியிடம்  தலைவியின் புலம்பலாகும்.

    களவு திருமணத்தில் முடிந்தவுடன் அமைதியுறும் ஊராரைப் பற்றித் தோழியும்;

    “இனியது கேட்டு இன்புறுக இவ்வூரே….
    ….ஆய்நுதற் கிழவனும் அவனே” (குறுந்.- 34);

    என்று தலைவியிடம் கூறுகிறாள். இனி தாயர் வசையும், தந்தை மறுப்பும், தனிமைத் துயரும் இல்லை  என்பதோடு; ஊராருக்குத் தலைவி அதே களவுக்காலத் தலைவனை மணக்கப் போகிறாள் என்பது மிகுந்த இன்பம் கலந்த நிறைவைக்கொடுத்தது என்பது நோக்கத்தக்கது. வினைமுடித்து மீளாத தலைவனை எண்ணிக்  காமமிகுதியால் ஒரு பெண் பெருந்திணைக் குரல் கொடுத்தால் ஊரார் அவளைப் பார்த்துச் சிரித்துத் தூற்றுகின்றனர். அதனால் தான் பாதிக்கப்பட்ட தலைவி;

    “நகான்மின்…………………நுமக்கு எவன் போலுமோ ஊரீர்”

    (கலித்.- 145) என்று சண்டை போடுபவள் போல் பேசுகிறாள். அந்தச் சண்டையில் இரு தரப்பினருக்கும் இருந்த புரிந்துணர்வே வெளிப்படுகிறது.

    உடன்போன தலைவியின் மேல் மிகுந்த அன்பு ஊராருக்கு உள்ளது. அதனால் தான்;

    “சுரநனி இனிய ஆகுகஎன்று
    நினைத்தொறும் கலிழும் என்னினும்
    மிகப் பெரிது புலம்பின்று தோழி நம் ஊரே” (ஐங்.- 398);

    என உடன்போக்கிற்குப் பிறகு தலைவியைச் சந்திக்கும் தோழி ஊராரின் பாசம் பற்றிப் பேசுகிறாள். ‘நான் அழுததை விட ஊரார் மிகுதியாக அழுதனர்’ என்று தோழியே சான்றளிக்கிறாள்.

    வினைவயிற் பிரிந்தவன் வரத் தாமதமானாலும் தலைவி மேல் இரக்கம் கொண்டு தலைவனைப் பழிக்கின்றனர். அதனால் தான்;

    “அவர் திறத்து இரங்கும் நம்மினும்
    நம்திறத்து இரங்கும் இவ் அழுங்கல் ஊரே” (குறுந்.- 289);

    எனத் தலைவி அரற்றுகிறாள். இனிய இல்லறத்திற்கு ஊறு நிகழ்வதை எக்காரணத்தானும் ஊரார் சகிப்பதில்லை என்பதற்கு இக்கூற்று ஆதாரமாகிறது.

    ஊராரின் இந்நோக்கத்தை நன்கறிந்ததால் தான் தலைவன் தான் தலைவியைக் கூடியதை; அவளது மார்பில் தொய்யில் எழுதியதைத்  தயக்கமின்றி அரசவையில் சொல்லத் துணிகிறான்.

    “………………………………..எழுதிய
    தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்
    முறையுடை அரசன் செங்கோல் அவையத்து
    யான் தற்கடவின் யாங்காவது கொல்
    பெரிதும் பேதை மன்ற
    அளிதோ தானே இவ் அழுங்கல் ஊரே” (குறுந்.- 276)

    எனப் பெற்றோரையும் ஊராரையும் பேதையர் என்கிறான்.

    முடிவுரை

    ஊரார் என்பது ஆண், பெண் இருபாலரையும் பொதுப்படக் குறிக்கும்  பலர்பாலுக்குரிய சொல் ஆகும். பெண்களை மட்டும் வேறுபிரித்துச் சுட்டும் இடங்களில் அது விதந்து கூறப்பட்டுள்ளது. ஊரார் பேதைமை உடையவர்; ஆரவாரத்துடன் புறம்பேசுபவர்; இரக்கமில்லாதவர்; புரியும் திறனற்றவர்; பிறழப் புரிந்து கொள்பவர் என்றெல்லாம் சாடப்படுகின்றனர். அன்பிற்குரிய ஊர் என்று நையாண்டி செய்யப்படுவதும் உண்டு. களவுக்காலத் தலைவன், தலைவி, தோழி, கற்புக்காலத் தலைவி,  தோழி, காமக்கிழத்தி எனப் பலரும்; தம்முள்ளும் கண்டோருடனும் ஊரார் பேசியதை எடுத்துச் சொல்கின்றனர்.

    ஊரார் களவொழுக்கத்தையும், புறத்தொழுக்கத்தையும் பழி கூறுபவராகவும்; அதை அம்பலாக்கித் தம்முள் கமுக்கமாகப் பேசுபவராகவும், வாய்விட்டு வெளிப்படையாக எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி அலர் தூற்றுபவராகவும் காட்சிப்படுத்தப்படுகின்றனர்.  வினைவயிற் பிரிந்த தலைவன் மீளாதவழி தலைவியை  எண்ணி வருந்துபவராகவும், அவளது காமம் மிகைப்படும் போது எள்ளி நகையாடுபவராகவும்; தலைவனின் புறத்தொழுக்கத்தைக் கண்டு சிரிப்பவராகவும், சாடுபவராகவும் புனைந்துரைக்கப்படுகின்றனர். ஊரார் பேச்சினால் மகிழ்ச்சி, பழி, பெருமை, நாணம் கைவிடல் எனப் பலதரப்பட்ட விளைவுகள் ஏற்படுகின்றன. ஊரார் பேச்சின் தன்மை காய்ந்த தட்டையில் தீப்பரவுவது போன்றது; தூக்கணங்குருவிக்கூடு போன்றது. சிறப்பான காலப்பின்புலத்தைத் தோற்றுவிக்கவும், பொருத்தமான முழுமையான விளக்கங்களுக்காக உவமைகளைப் படைக்கவும், முரண் அழகைச் சேர்த்துப் புனையவும், ஊடலை வெளிப்படுத்தி வெறுப்பைக் காட்டவும்  ஊரார் என்னும் சிறுபாத்திரம் பயன் கொள்ளப்படுகிறது. துயில்வதாகச் சொல்லப்படினும் ஊரார் களவொழுக்கத்தை முளையிலேயே அடையாளம் கண்டுவிடுகின்றனர். ஊராரின் பேச்சு ஒரு பெண்ணின் களவொழுக்கம்; அதே ஆணுடன் திருமணத்தில் முடிய வேண்டும் என்ற கொள்கையை நிலைநாட்டும் நோக்கோடு அமைந்துள்ளது.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 4 (உழவன்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 4 (உழவன்)

    ச. கண்மணி கணேசன்,
    முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர் (ஓய்வு),
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    ஒரே ஒரு பாடல் காட்சியில் நேரடியாகத் தோழியின் முன்னர் நின்று அவள் பேச்சைக் கேட்பதன் மூலம்; உழவன் சிறுபாத்திரம் என்ற தகுதியைப் பெறுகிறான். இடப்பின்புலத்திற்குத் துணைசெய்யு முகத்தான் உழவனும் அவனது செயல்களும் காட்சிப்படுத்தப்படும் பாடல்களைத் தவிர்த்து சொல்லாடலில் இடம்பெறும் உழவனைச் சிறுபாத்திரம் என்று கொள்வதே ஏற்புடைத்து ஆகிறது.

    நற்றிணைப் பாடற் செய்தி

    தலைவி இற்செறிக்கப் படுகிறாள். இது தலைவனுக்குத் தெரியாது. அவள் உழுவிக்கும் வேளாளன் மகள். அவன் தலைவியைச் சந்திக்கப் பகற்குறியில் வயல் வெளியின் சிறைப்புறமாக வந்து நிற்கிறான். தோழி அவனிடம் நேரடியாக நிலவரத்தைச் சொல்ல முடியாது. எனவே நாற்று நட வந்திருக்கும் உழவனிடம் பேசித் தலைவனுக்குப் புரிய வைக்கிறாள். உழவன் கழிக்கவிருக்கும் ‘நெய்தல், கோரை முதலியவற்றைத் தூர எறியாதே; அவை தாம் தலைவிக்கு வளையாகவும், ஆடையாகவும் பயன்படக் கூடியன’ என்று சொல்வதன் மூலம்; ‘இனித் தலைவி வீட்டை விட்டு வேறெங்கும் செல்ல இயலாது; இவற்றை அவளுக்குக் கொண்டு போய்த்தான் கொடுக்க வேண்டும்’ என்று பொருள்படும்படிக் கூறுகிறாள். தோழி சொல்வதை எல்லாம் உழவன் கேட்கிறான்; ஆனால் பதிலுரைக்கும் உரிமையைப் புலனெறி வழக்கு தரவில்லை.

    விடியுமுன்னர் உழவன் மனைவியரோடு வயலுக்குக் கிளம்புகிறான்.   கிளம்பும் முன்னர் வயிறார உண்கிறான். ஏனெனில் அன்று அவன் நாற்று நடவேண்டும். வேலையைத் தொடங்கினால் வெயிலேறும் வரை ஓய்விற்கும் உணவிற்கும் வழியில்லை.

    “மலைகண் டன்ன நிலைபுணர் நிவப்பின்
    பெருநீர் பல்கூட் டெருமை உழவ
    கண்படை பெறாது தண்புலர் விடியல்
    கருங்கண் வரால் பெருந்தடி மிளிர்வையொடு
    புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு
    கவர்படு கையை கழும மாந்தி
    நீருறு செறுவில் நாறுமுடி அழுத்தநின்
    அடுநரோடு நீ சேறியாயின் வண்
    சாயும் நெய்தலும் ஓம்புமதி எம்மில்
    மாயிருங் கூந்தல் மடந்தை
    ஆய்வளைக் கூட்டும் அணியுமார் அவையே“(பா- 60)

    எனப் பாடியுள்ளார் தூங்கலோரியார்.

    பாடலின் முதலடியில் இருப்பது உவமை. ‘மலை நிமிர்ந்து நின்றாற் போலத் தோன்றும் மிகுந்த நெல்லின் நாற்றுக்கட்டுக் குவியலை  நடவிருக்கும் உழவனே’ என்று அழைக்கிறாள்.

    பணிப்பளு காரணமாக அவனால் தூங்க இயலவில்லை என்பது மூன்றாம் அடியில் தொடர்கிறது. எனவே குளிர்ந்த காலைப் பொழுதில் எழுந்து; நீரில் ஊறிய நெல்லரிசிச் சோற்றைப்; பருத்த வரால்மீன் குழம்புச் சொட்டானத்தை ஊற்றிக் கைகளில் நீர் வழிய உண்டு; மீந்த நீராகாரத்தைக் குடித்து விட்டுத் தன் பெண்டிரோடு வயலில் நாற்றுநட வந்து சேர்ந்தான்.

    அவனை ‘எருமை உழவ’ என்று அழைப்பது அங்கதச்சுவைக்காக எனலாம். இங்கே நையாண்டிக்கு உரியவன் உழவன் அல்லன். அவன் எருமையை உடையவன்; அவ்வளவே. உழவனிடம் பேசுவது போலத் தலைவனிடம் பேசுகிறாள் ஆதலால்; இவ்விளி தலைவனைக் குறிப்பாகச் சுட்டுகிறது. தலைவியை மணந்து கொள்வதில் அவன் மந்தமாக எருமை போலச் செயல்படுகிறான் என்று உணர்த்துகிறது.

    தோழியின் அடுத்த செய்தி; உழவன் எவ்வாறு உலக வாழ்வைத் துய்க்கிறான் என்பதாகும். பாடல் சுட்டும் அடுநர்; உழவனுக்காகச் சமைத்த அவனது மனைவியர். பாடுபடுவதற்காகக்; குளிர்ந்த காலைப் பொழுதில் வயலுக்குக் கிளம்பியவன்; வயிறு முட்ட முந்தைய நாளில் வைத்த மீன்குழம்பும் பழைய சோறும் உண்டு விட்டுக் கிளம்புகிறான். பாடலின் ஏழாவது அடியிலுள்ளது இறைச்சிப் பொருள். நடவுக்குத் தயாராக இருக்கும் நீர் நிறைந்த வயலில் நாற்று முடிச்சினை அழுந்த ஊன்றிச் சுறுசுறுப்புடன் உழவன் செயலாற்றுகிறான். ஆனால் தலைவன்  இன்னும் தலைவியை மணந்து கொள்ளவே இல்லை.

    இல்லறத்தின் இன்பத்தை முழுவீச்சில் அனுபவித்து நிறைவு 

    அடைபவனாக உழவன் காட்டப்படுகிறான். தென்தமிழகத்தில் இன்றும் நடைமுறையிலிருக்கும் ஒரு சமூக வழக்கம் இங்கு நினைவுகூரத் தக்கது. திருமணத்திற்கு முந்தையநாள் மாலை ‘உறுதி பேசும்’ சடங்கு முடிந்ததும்; மணமகனின் சகோதரி அல்லது குடும்பத்தின் மூத்த சுமங்கலி மணமகளை அழைத்துக்கொண்டு அடுப்படிக்குச் சென்று; அடுப்புமேட்டில் மண்ணைக் குழைத்துச் சிறிய ‘அடுப்பும் திண்ணையும்’ போட்டு வருவர். என்ன தான் பகலில் பாடுபட்டாலும் கணவனும் மனைவியும் பசியாற அடுப்பில் ஆக்கி  உண்டு; திண்ணையில் ஓய்வெடுக்கும் போது களைப்பு நீங்கி இன்பமாக இல்லறத்தை அனுபவிக்கலாம் என்பதே இதன் பொருள் என்பர். இங்கே உழவன் அதைத்தான் செய்யக் காண்கிறோம். அவன் நாவிற்கு ருசியைப் பொம்மலும் மிளிர்வையும் தருகின்றன. அவனுக்குப் பொங்கிப்போட மனைவியர் உள்ளனர். அவனது பசி நீங்கி வயிறு குளிர்கிறது. மகளிரோடு  அவன் அனுபவிக்கும் இல்லறசுகத்தை இறைச்சி கூறாமல் கூறுகிறது. தலைவனோ இன்னும் தலைவியைப் பெண் கேட்கக்கூட  இல்லை; நீ உலக வாழ்வைத் துய்க்க வேண்டுமெனின் உடன் வரைதல் வேண்டும் என்பது குறிப்பான அறிவுரை.

    இவ்வாறு உழவன் நிலையையும், தலைவன் நிலையையும் அழகுற முரண்படுத்திக் காட்டி; அங்கதத்துடன் இறைச்சிப் பொருளும் இணைய; உலகியலான வாழ்க்கைத் தத்துவத்தைத் தெளிவுறுத்தி; குறிப்பாகத் தலைவனைத் திருமணத்திற்குத் தூண்ட உழவனெனும் சிறுபாத்திரத்தைப் பயன்கொண்டிருப்பது பாடலின் சிறப்பு.

    முடிவுரை

    கூடல் நிமித்தமாகிய திருமணத்திற்குத் தலைவனைத் தூண்ட மருதநிலக் கருப்பொருளான உழவன் எனும் சிறுபாத்திரம் உதவி உள்ளது.

    Share