Tag: மாதவன் இளங்கோ

  • கதைசொல்லியும் கதாநாயகனும்..

    மாதவன் இளங்கோ

    என் மகனுக்குக் கதை சொல்வது என்பது அத்தனை எளிதல்ல.

    கதைக்குள் நிச்சயம் ஒரு சிங்கம் இருந்தாக வேண்டும். மரங்கள், அருவிகள், மலைகள் இருந்தாக வேண்டும். காட்டுக்குள் மழை பெய்தாக வேண்டும். யானையோ, புலியோ, முயலோ, மானோ, கரடியோ – இதில் ஏதொன்றுக்காவது பிறந்தநாள் கொண்டாடவேண்டும். கதையில் சண்டை இருக்கக்கூடாது. சிங்கமும் மானும் நண்பர்களாக இருக்கவேண்டும். அவனது நண்பர்கள் சிலரின் பெயரைச் சொல்லவேண்டும். அரவம் கூடாது. பறவைகள் பற்றி பேசலாம்.

    கண்டங்களும், நாடுகளும், கடல்களும் பற்றிய விவரிப்பு இருந்தாக வேண்டும். அவ்வப்போது இந்தியாவையும், சென்னையையும், ஏலகிரி மலையையும் தொட வேண்டும். வானவில்லும் அதை நோக்கிச் செல்லும் விமானமும் வந்தாக வேண்டும். கதை சொல்லிக்கொண்டிருக்கும் போதே, ஆங்காங்கே இடைமறித்து அதை அவன் திருத்துவதற்கு முழுவதுமாக அனுமதிக்க வேண்டும். மிக முக்கியமாக, அவனுடைய கதாப்பாத்திரம் அதில் நிச்சயம் இருந்தாகவேண்டும். வெறும் கதாப்பாத்திரமாக அல்ல, கதாநாயகனாக! அந்த கதாநாயகனின் வீரத்தைப் பற்றிய விவரிப்பும் நிச்சயம் இருந்தாக வேண்டும். 

    விண்வெளி பற்றி பேசவேண்டும். அவன் விஞ்ஞானி என்று கூறவேண்டும். இறுதியில் அவனுக்குப் பிடித்தமான அத்தனை மிருகங்களையும், பறவைகளையும், நண்பர்களையும், உறவுகளையும், எங்களையும் விண்கலத்தில் கூட்டிக்கொண்டு அவன் விண்வெளிப் பயணம் போவது பற்றி ரசனையுடன் விவரிக்க வேண்டும். பூமியில் தொடங்கி, வியாழனைக் கடந்து, (கோள்களின் வரிசை மாறக்கூடாது!) புளூட்டோவைத் தொட்டு, பால்வெளியை விட்டு வெளியேறி, வேறு ஏதேதோ மண்டலங்களுக்கெல்லாம் சென்று விட்டு மீண்டும் பூமிக்கு வந்து சென்னையில் இறங்கி, அனைவரும் தாத்தா பாட்டி வீட்டுக்குச் சென்றுவிட வேண்டும்.

    பெரியது குழந்தைகளின் உலகமும், மனமும்.

     

    Kadhaisolli Kadhanayagan

     

    Share
  • அ..ஆ..இ..

    மாதவன் இளங்கோ

    மனிதனின் இடுப்புச் சுற்றளவு – 0.001 கிலோ மீட்டர் (என்று வைத்துக்கொள்வோம்)

    பூமியின் சுற்றளவு – 40075 கிலோமீட்டர்
    வியாழனின் சுற்றளவு – 448969 கிலோமீட்டர்
    சூரியனின் சுற்றளவு – 4368175 கிலோமீட்டர்
    ரைஜலின் சுற்றளவு – 340717650 கிலோமீட்டர்
    மு-செபேயின் சுற்றளவு – 2839313750 கிலோமீட்டர்
    கேனிஸ் மேஜோரிசின் சுற்றளவு – 6202808500 கிலோமீட்டர்

    இப்படி விரிந்துகொண்டே போகிறது பிரபஞ்சம்…

    மேலே நான் குறிப்பிட்டுள்ள அந்த நட்சத்திரத்தை விட 6202808500000 மடங்கு சிறிய இந்த மனிதனாகிய எனக்கு ஏன் இவ்வளவு அ..ஆ..இ.. இன்னொரு மனிதனோடு என்னை ஒப்பிட்டுப் பார்த்து?

    அகம்பாவம்… ஆணவம்… இறுமாப்பு…!

    அந்த மனிதன் ஒருவேளை அந்த நட்சத்திரத்தை விட ஒரு 6202808500000.01 மடங்கு சிறியவனாக இருப்பானா?

    தூசு நான்!

    ஒருநாளும் என்னை கேலி செய்ததில்லை பிரபஞ்ச அன்னை என் சிறுமை கண்டு!

    எனக்கு ஏன் இவ்வளவு அகம்பாவம்.. ஆணவம்.. இறுமாப்பு..?

     universe

     

    Share
  • நிறங்கள் – ஒரு பார்வை

    மாதவன் இளங்கோ

    nirangal

    அது நான் தினந்தோறும் சென்றமர்ந்து ஓய்வெடுக்கும் பூங்கா.

    காற்றோடு மரத்தின் இலைகள் உராயும் சத்தம், மழலைகள் உரக்கக் கூச்சலிட்டு விளையாடும் மகிழ்ச்சியின் சத்தம், காதலர்களின் உதடுகள் எழுப்பும் காதல் சத்தம், பறவைகள் சில என் வெகு அருகாமையில் எதையோ கொத்தித் தின்று பசிமுறிக்கும் சத்தம், அருகேயொரு விமான நிலையம் இருப்பதால் சில நிமிடங்களுக்கொருமுறை விமானங்கள் காற்றை ஊடுருவும் சத்தம் என அத்தனையும் கலந்து எனக்கு அன்றாடம் இலவச இசைக்கச்சேரி தான்!

    அன்றைக்கு சுரீரென அடித்த வெயிலோடு சேர்ந்துகொண்டது சிறுதூறல்! அதன் விழைவாய், இசைக் கச்சேரியில் இன்னொரு புதிய வாத்தியம் இணைந்திற்று! அழகான இசை, மிதமான வெயில், மிதமான மழை. ஆகா! இதுபோதும் எனக்கு இன்றைய மாலைக்கு! வெயிலும் மழையும் விட, இந்த ‘மிதம்’, அதுதான் சிறப்பு. கடும் வெயிலும், கடும் மழையும்  யாருக்குப் பிடிக்கும்? மிதம் தான் இதம்.

    வெயிலுக்கும் மழைக்கும் இடையே சிலமணித்துளிகள் நான் சிக்குண்டு   லயித்துக் கிடந்த போது, என் செவிகள் ‘சிறுவர்கூட்ட வாத்திய அமைப்பில்’ ஏற்பட்டதொரு பெருமாற்றத்தைக் கண்டுகொண்டு மேலும் கூர்மையானது.

    ‘வானவில்’ ‘வானவில்’ ‘வானவில்’ என்று அந்த மழலைகளின் ஆரவாரத்தில் தான் எத்தனை மகிழ்ச்சி?

    வானவில்! நான் அறிவேன். ஏழு நிறங்கள் அதற்கு. ஊதாவும், கருநீலமும், நீலமும், பச்சையும் மஞ்சளும், ஆரஞ்சும் சிவப்பும் என ஏழு நிறங்கள்!

    ஏழு வெள்ளைப் பிரம்புகளுக்கு வெவ்வேறு வண்ணந்தீட்டி ஒன்றன் மீதொன்றாய், அழகாய் அடுக்கி, வளைத்து வில்லாக்கினாற்போல் இருக்கும் இந்த வானவில்!

    எனக்கு நிறங்கள் தெரியாது. விளக்கினாலும் புரியாது. எனக்கு ஒளி தெரியாது. விளக்கினாலும் புரியாது. ஆனால் எனக்கு உணர்வுகள் தெரியும்! எனக்கு ஒலி புரியும்!

    நிறங்களும் உணர்வுகளுமா? என்ன தொடர்பு? தொடர்பில்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு இந்தத் தொடர்பு தேவைப்படுகிறது. ஏனென்றால் எனக்கு வேறு வழியில்லை. எனக்குப் புரிய வைக்க முயற்சித்து பல மேதைகளே தோற்றுப்போனதால், எனக்கு புரியவைக்க நானாகவே செய்துகொண்ட ஒரு ஏற்பாடுதான் இந்த நிறங்களும் உணர்வுகளும்.

    கோபம், சோகம், மகிழ்ச்சி, பயம், வெறுப்பு, வியப்பு, எரிச்சல் என்று ஒவ்வொரு உணர்வும் ஒவ்வொரு நிறம் எனக்கு.

    கோபம் வருகையில் எனக்குள் ஏற்படும் உணர்வின் நிறம் சிவப்பு. யாரேனும் சிவப்பு என்றால், என் மனம் உடனே  அதை கோபம் என்று குணப்படுத்திக் காட்டும் அதனால் எனக்கு சிவப்பு என்றாலே எப்போதும் சிறிது நடுக்கம் தான்!

    பச்சை தான் எனக்கு நிரம்பப் பிடித்த நிறம். உங்களுக்குப் பச்சை. எனக்கு மகிழ்ச்சி. மகிழ்ச்சியை யாருக்குத் தான் பிடிக்காது. யாரேனும் பச்சை புல்வெளிகள் என்றாலே, எனக்குள் மகிழ்ச்சி பிறக்கும். நகரங்களில் இப்போதெல்லாம் புல்வெளிகளை உணரமுடிவதில்லை. இதற்காகவே கிராமங்களுக்கு பலமுறை செல்வதுண்டு, உங்கள் பச்சையை உணர்வதற்கும், என்னுடைய மகிழ்ச்சியை காண்பதற்கும்.

    பல நேரங்களில் கோபத்திற்கும் மகிழ்ச்சிக்கும் இடையே இருந்து கொண்டு மஞ்சள் நிறத்தைக் காண்பதுண்டு. சூரியன் மஞ்சள் நிறம் என்று கூறுகிறார்கள். சில நேரங்களில் அது உக்கிரமாய் வாட்டுகையில் சிவப்பை உணர்வேன்.

    ஊதாவுக்கு  வெறுப்பு, கருநீலத்து சோகம் என்று இப்படி பல ஒப்பீடுகள். சில  சமயம் இருவேறு அல்லது பல்வேறு உணர்வுகளைக் கலந்து வேறு சில நிறங்களையும் காண்பதுண்டு. கோபமும் சோகமும் கலக்கும் போது எனக்கு வாழ்க்கையின் மீது வெறுப்பு தோன்றும்.

    இன்னும் எத்தனையோ உணர்வுகள். எத்தனையோ நிறங்கள்…

    அத்தனை நிறங்களையும் சரிவிகிதத்தில் கலந்தால் வெள்ளை பிறக்கிறது என்கிறார்கள். பச்சைக்கு அடுத்து எனக்கு வெள்ளை மிகவும் பிடிக்கும். வெள்ளை எனக்கு தூய்மை. யாரேனும் எனக்கு உதவும்போதெலாம் வெள்ளையை உணர்வேன்.

    வெள்ளை நிறமற்ற நிலை இல்லை என்றால் சிலரால் புரிந்துகொள்ள முடிவதில்லை என்கிறார்கள். வெள்ளை எல்லா நிறங்களும் உள்ளடக்கிய நிலை. ஆனால், எனக்கு இது நன்றாகப்  புரிகிறது. எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கிய நிலை வெள்ளை உணர்வு நிலை. அது ஒளியின் நிறம் என்று கூறுகிறார்கள். ஞானிகளைப் பற்றி எண்ணும்போதெல்லாம் நான் வெள்ளை நிறத்தை உணர்வேன். சில சமயங்களில் நானும் ஞானியாவதுண்டு!

    அது அனைத்தையும் உள்ளடக்கிய நிலை.

    இதெல்லாம் உங்களுக்குப் புரிகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இது நிறங்களைப் பற்றிய என்னுடைய பார்வை. அதில் தவறு இருந்தால் மன்னிக்கவும். எத்தனையோ விஷயங்களைப் பற்றிய உங்களின் பார்வை எனக்கு விளங்கியதே இல்லை. ஆயினும் அதற்காக உங்கள் மீது நான் கோபம் கொண்டதே இல்லை.

    கருப்பு எனக்கு – தீவினை அல்லது தீங்கு! கருப்பு நிறமல்ல என்று கூறுகிறார்கள். அது நிறமற்ற நிலை. கருப்பை வெள்ளைக்கு எதிர் என்கிறார்கள்! எனவே அது மனத்தூய்மையற்றவர்களின் நிறமாகத்தான் இருக்கவேண்டும். அது துரோகிகளின் நிறம்; கொலைகாரர்களின் நிறம்! படுகொலைகளைப் பற்றி கேள்விப்படும்போதெல்லாம், நான் கருப்பை உணர்கிறேன்.

    உணர்வது மட்டுமல்ல, காணவும் செய்வேன்!

    ஆமாம், என்னைப் போன்ற பார்வையற்றவர்கள் காணமுடிந்தது அந்தக்  கருப்பு மட்டுமே! அது தீங்கின் நிறம்! இந்த இயற்கை எங்களுக்கு இழைத்த தீங்கின் நிறம்.

     

     

    Share
  • உனக்குள் ஒருவன்.. அவனே நீ!

    மாதவன் இளங்கோ  

    கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தையநாள் இரவு விருந்திற்கு பெல்கிய நண்பன் ஒருவனை வீட்டிற்கு அழைத்திருந்தேன்.

    அன்று வழக்கத்துக்கு மாறாக குளிர் சற்று குறைவாகவே (குறைவு என்றால் ‘6 டிகிரி செல்சியஸ்’!!!) இருந்தது. அதனால் உணவருந்திவிட்டு மேலுறைகளையும் கையுறைகளையும் அணிந்துகொண்டு, வாயிலும் மூக்கிலும் புகைவிட்டபடி பேசிக்கொண்டே கால்நடையாக லூவன் நகர வீதிகளில் நடந்து சென்றோம்.

    அவன் ஒரு கடைந்தெடுத்த ‘Introvert’. (ஆனால், அவ்வாறு இருப்பதில் தவறொன்றும் இல்லை.) அவனோடு தனியாக பேசும்போதெல்லாம் என்னுடனேயே நான் பேசிக்கொண்டிருப்பது போலவே உணர்வேன். என் மற்ற நண்பர்களும் இதையேதான் சொன்னார்கள். அந்த அளவிற்கு ஒரு அமைதியான மனிதன்; நல்ல நண்பனும்கூட. வெளிநாட்டவர்களில் (உண்மையில் நான்தானே இங்கு வெளிநாட்டவன்?) இதுபோன்ற மனிதர்களை காண்பது அரிது. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்கள் அவர்கள். இல்லையென்றால், ஆறு மாதங்களுக்கு முன்பாகவே விருந்தை திட்டமிட்டு அவர்களை அழைக்க வேண்டும். இப்படி இருக்க, நான் அழைத்தேன் என்ற காரணத்திற்காக கிறிஸ்துமஸிற்கு முந்தைய நாள் இன்னொருவர் வீட்டிற்கு வேறு யாராவது வருவார்களா? (அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால்தான் அழைப்புவிடுத்தேன் – அதுவும் முகநூலில்) 

    அப்படிப்பட்ட ஒரு மனிதனிடம்தான் அன்று பேசிக்கொண்டே நடந்து சென்றுகொண்டிருந்தேன். அந்தத்தெருவே காதை செவிடாக்கும் அமைதியில் மூழ்கியிருந்தது. என்னுடைய குரல் மற்றும் எங்கள் இருவரின் காலணிகள் எழுப்பிய ஓசைகளைத் தவிர வேறு எதுவுமே கேட்காத அளவிற்கு ஒரு நிசப்தம். இதில் இருட்டு வேறு சேர்ந்துகொண்டால் எப்படி இருக்கும்? நாங்கள் நடந்து சென்றுகொண்டிருந்த தெருவில் விளக்குகளும் அப்படியொன்றும் பிரகாசமாக இல்லை. மேலும், குளிர்காலத்தில் இங்கெல்லாம் மாலை நான்கு மணிக்கே இருட்டத் தொடங்கிவிடும் என்றால், இரவு ஒன்பது மணிக்கு எப்படியிருக்கும் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அப்படியொரு சூழலில் என்னுடைய குரலே எனக்கு சிறிது அச்சமூட்டியது. இதற்காகவாவது இவன் கொஞ்சம் பேசலாம் என்று நினைத்த அடுத்த வினாடி, “உங்களுக்கு எதற்கும் பயமே கிடையாதா? நீங்கள் அலுவலகத்திலும், வாழ்க்கையிலும் எப்படி எல்லாவற்றையும்  ஒரு அசட்டுத் துணிச்சலோடு எதிர்கொள்கிறீர்கள்?” என்று நான் பேசிக்கொண்டிருப்பதற்குத் தொடர்பே இல்லாத இந்தக் கேள்வியை வேகவேகமாகக் கேட்டான்.

    அவன் தரத்திற்கு அது வேகம் மட்டுமல்ல; சற்று நீண்ட கேள்வியும்கூட. அப்போதுதான் அவன் மனநிலை எனக்குப் புரிய ஆரம்பித்தது. அவனுக்குக் கண்டிப்பாக உதவவேண்டும் என்றும் தோன்றியது. அவன் கேட்ட கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் எனக்குள்ளே நான் சில கேள்விகளைக் கேட்டு கொண்டிருந்தேன். ஓரிரு மணித்துளிகள் நான் அவனாகவே மாறிவிட்டுப் பின்னர் அவனிடம் மெதுவாக, “ ஏனென்றால், முன்பெல்லாம் நான் ஒரு மகா கோழையாக இருந்தேன்!” என்று கூறினேன். 

    “வாட்???” என்று கண்களை விரித்துக் கேட்டான்.

     ஆமாம். ஆனால், அந்தக் கோழைத்தனத்தில் இருந்து பிறந்ததுதான் இப்போது இருக்கும் இந்த தைரியம்.” என்றேன்.

    “எனக்குப் புரியவில்லை!” என்றான்.

    அப்போது அந்தத் தெருமுனையில் ஒரு வீடு விளக்கு வெள்ளத்தில் நிரம்பிக்கிடப்பதைக் கண்டேன். எனக்கு ஒரே அதிசயம், ஏனென்றால் அந்த வீடு கிட்டத்தட்ட நம்ம ஊர் கல்யாண வீடு போலக் காட்சியளித்தது.  இரண்டே வித்தியாசங்கள் – ‘வாழைமரங்கள் இல்லை’, ‘மணமக்களுக்குப்  பதிலாக சாண்டா கிளாசுக்கு ஒரு சிறிய கட்-அவுட் வைத்திருந்தார்கள்’ அவ்வளவுதான்.  

    குறிப்பு: அப்போது நான் எடுத்த புகைப்படத்தைக்கூட இங்கே பதிவேற்றியுள்ளேன். நீங்களே பாருங்களேன்.

     Christmas leuven city

    இஸரன்மோலென் தெரு, லூவன் நகரம், பெல்கியம்

    ஜொலித்துக்கொண்டிருந்த அந்த வீட்டைக் கண்டபோது, என் மனதில் பளீரென உதித்த ஒரு கேள்வியை என் நண்பனிடம் கேட்டேன் – “இங்கே இந்த மின்விளக்குகள் சிந்திக்கொண்டிருக்கும் ஒளியை இவ்வளவு அழகாய்க் காட்டுவது எது?”  

    “அந்த அலங்கார விளக்குகள் தாம்!” என்றான்.

    “இல்லை, ‘இருட்டு’!” என்றேன்.

    “எப்படி?” என்றான்.

    “வேண்டுமானால் அலங்கார விளக்குகளை பகலில் போட்டுப்பாரேன். இன்னும் சொல்லப்போனால், அதோ அந்த நிலவு அழகாய்த் தெரிவது கூட அந்த அகண்ட ‘இருண்ட’ வானத்தினால்தான்.” என்று கூறிவிட்டு இன்னொரு கேள்வியொன்றை கேட்டேன்.

    “”நம் ஷூக்களின் சத்தத்தை உனக்குக் கேட்க வைத்துக்கொண்டிருப்பது எது?”

    “காது” என்றான்.

    “இல்லை. இந்த நிசப்தம்!” என்றேன். 

    அவன் புருவங்கள் சற்றுச் சுருங்கி குழப்பரேகைகள் படர்வதைக் கண்டுவிட்டு தொடர்ந்தேன்.

    “சரி, இதைக்கூறு. இந்தக் குளிரை எதனால் உணர்கிறாய்?” என்றேன்.

    என் மனைவி மட்டும் அக்கணம் அங்கே இருந்திருந்தால், “ஆரம்பிச்சிட்டீங்களா? அடிக்கற குளிருல அவசியம் இந்த cross examination தேவையா?” என்று கேட்டிருப்பாள்.

    ஆனால், பாவம் அவன் சிறிதுநேரம் தீவிரமாகச் சிந்தித்துவிட்டு,”நீங்களே சொல்லுங்கள்!” என்றான்.

    அப்போது நான் அவனுக்கு அளித்த ஒரு short but soporific lecture session ஐத்தான் இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன். 

    ஒளியின் அழகை இருட்டால்தான் காண்பிக்க முடியும். வெப்பத்தின் அருமையை குளிரால்தான் உணர்த்த முடியும். இசையின் இனிமையையும், நுட்பத்தையும் அமைதியால் மட்டுமே அடையாளம் காட்ட முடியும்.

    விளக்குகள் வீசும் ஒளியின் அழகை பகல் காட்டாதது போல, வெப்பத்தின் அருமையை  வெயில் உணர்த்தாதது போல, இசையின் இனிமையை இரைச்சல் நிறைந்த சூழல் உணர்த்தாதது போல –  

    நான் துணிவானவன் என்பதுபோல் காட்டிக்கொண்டிருந்த நாட்களில் அந்தத் துணிவு, எனது துணிவை உணர்த்தவேயில்லை. நான் எப்போது எனக்குள் இருந்த கோழைத்தனத்தை முழுவதுமாக உணர்ந்தேனோ, அந்தக்கணம்தான் எனக்குள் இருந்த தீரனைப் பிரசவித்தேன்.          

    ஒன்றடுத்தொன்றாய் பல முட்கள் என் கால்களைப் பதம் பார்த்து வலியில் துடித்த காலங்கள் உண்டு. எத்தனையோ முட்கள் குத்திக் கிழித்து வலியை உண்டு பண்ணியிருந்தாலும், என் பாதத்தின் வலிமையை உணர்த்திய அந்தக் கடைசி வலிக்குத்தான் நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.

    அந்தக் கடைசி வலியை உணர்ந்த நாளன்று –

    இருட்டின் நடுவே ஒளியைக் கண்டதுபோல், என் வலிகளினூடே வலிமையைக் கண்டேன்!

    அமைதியிலிருந்து எழும்பிய இசையை உணர்ந்தது போல, என் கோழைத்தனத்தில் புதைந்து கிடந்த துணிவைக் கண்டெடுத்தேன்!     

    அதைக் கண்ட நாள் முதலாய், அச்சமில்லை! அசட்டு துணிச்சல்! அசாத்திய தைரியம்! எல்லாவற்றிகும் மேலாக நாம் பிறந்த மண்! ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ என்ற திருநாவுக்கரசரும், ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்று முழங்கிய மீசைக்காரரும் பிறந்த மண்ணல்லவா?

    எவற்றையெல்லாம் நம்முடைய பலவீனமாக நாம் நினைக்கிறோமோ, அவையெல்லாம்தான் நம் பலத்தை நமக்கு அடையாளம் காட்டும் சாதனங்கள். இருட்டு ஒளியை காட்டுவது போல. நிசப்தம் சப்தத்தைக் காட்டுவது போல.

    எனவே, உன் பலவீனங்களாக நீ நினைப்பதை வரிசைப்படுத்து. அவற்றை உணரு. அவற்றை முழுமையாக உணர்ந்ததால் உன்னில் ஏற்படும் மாற்றங்களும், அந்த பலவீனங்களுமே உன் பலத்தை உனக்கு அடையாளம் காட்டும்! அதற்குப் பிறகு நீ வேண்டினாலும் அது உன்னைவிட்டுப் போகாது! கைவிடுவது கடினம்.

    அந்த அளவிற்கு, உனக்கு நேரெதிரான ஆளாக உன்னையே அது மாற்றிக்காட்டும். அது தான் ‘உண்மையான நீயும்கூட’!     

    இப்படி ஒரு விரிவுரையை வழங்கியவுடனே சிறிதும் யோசிக்காமல் சட்டெனச் சொன்னான் நண்பன், “எனக்கு பலவீனமே பயம்தான்!”

    அவன் கண்களைப் பார்த்தேன். தெளிவு தெரிந்தது. துணிவும் பிறந்திருப்பதாக உணர்ந்தேன். குறைந்தபட்சம் அவன் சிந்தையில் தெளிவாவது நிச்சயம் பிறந்திருக்கும்.

    எனக்கு எதிரே நின்ற அவன் மாறியிருந்தான், அவனுக்கு நேரெதிரான மனிதனாய் – அவனாய்!

    அவனுக்கு இனி அச்சமில்லை!

    இந்த வரிகள் உங்களுக்குள் இன்று ஒரு சிறு கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தால், நீங்கள் இன்று முதல் உங்களுக்குள் இருக்கும் வேறோர் மனிதனையும் அவன்  உலகத்தையும் காணப்போகிறீர்கள் என்று அர்த்தம்.

    வல்லமை மின்னிதழ் வெற்றிகரமாக ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.  வல்லமை அணியினருக்கும், வாசகர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் இந்த மாற்றத்தோடு ஐந்தாம் ஆண்டு  இனிதே தொடங்கட்டும்.

    வல்லமைக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

     

    Share
  • வன்முறை

     

    மாதவன் இளங்கோ

     

    என்னுடைய வன்முறையை எதிர்த்துக்images

    குரல் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன –

    தாவரங்கள்!

    எனக்குத்தான் அது கேட்பதில்லை!

    கேட்டாலும் அதுபற்றி

    எனக்குக் கவலையில்லை! (more…)

    Share
  • (என்னைக்) கொல்ல நினைக்கும் எவனோ ஒருவனுக்கு..

    மாதவன் இளங்கோ

    எவனோ ஒருவன் என்னை கொலை செய்ய ஏங்குகிறான்!

    ஏழை செல்வந்தனாக ஏங்குவது போல

    செல்வந்தன் மேலும் செல்வந்தனாக ஏங்குவது போல

    எழுத்தாளன் அங்கீகாரத்திற்கு ஏங்குவது போல

    குழந்தைகள் பொம்மைகளுக்கு ஏங்குவது போல

    சிங்கம் மானுக்கு ஏங்குவது போல

    அவன் என்னைக் கொன்றுவிட ஏங்குகிறான்!

    ஏக்கம் மட்டுமல்ல; துடிக்கிறான்!

    சிந்திக்கிறான்; திட்டமிடுகிறான்;

    அத்தனையும் ஒளிந்துகொண்டே செய்கிறான்!

    evano oruvan

     

    அவனுக்கு என்னை தெரியாது

    எனக்கும் அவனைத் தெரியாது

    இருப்பினும் அவன் என்னைக் கொன்றுவிட ஏங்குகிறான்!

    இன்னும் சொல்லப்போனால்,

    அவன் கொன்றுவிடத் துடிக்கும் மனிதர்களின் பட்டியலில்

    நான் இருப்பது கூட

    அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

     

    அவன் என்னை தாராளாமாகக் கொல்லலாம்!

    அதற்கான உரிமையை நான் அவனுக்குத் தருகிறேன்

    எனினும் அவனுக்கு நான் சொல்வதற்கென்று

    சில விஷயங்கள் இருக்கின்றன:

     

    “என்னைக் கொன்றுவிடத் துடிக்கும் எவனோ ஒருவனே,

    நீ என்னை தாராளமாகக் கொல்லலாம்!

    அதற்கான உரிமையை நானுனக்குத் தருகிறேன்!

    எனக்குத் தெரியும் –

    நீ என் இசைவிற்கோ

    நீ என் அனுமதிக்கோ

    காத்திருக்காதவன்!

    அதுபற்றி உனக்குக் கவலையுமில்லை!

    ஆயினும் நான் உன்னை அனுமதிப்பதன் மூலம்

    உன் வேலை சுலபமாகும் என்பதை

    நீ நிச்சயம் மறுக்கமாட்டாய்!

     

    இன்னொன்று –

    நீ என்னை எப்படி வேண்டுமானாலும் கொல்லலாம்!

    பல வழிகளில்..

    பல இடங்களில்..

    எந்த வழி, எந்த இடம்

    என்பது உன் விருப்பம்.

     

    என் ரயில் பிரயாணத்தில்

    நான் தேநீர் அருந்திக்கொண்டிருக்கும் போது

    குண்டு வைத்துக் கொல்லலாம்!

     

    நான் பயணிக்கும் விமானத்தை

    எங்கோ கடத்திக் கொண்டுபோய்

    இடித்துக் கொல்லலாம்!

     

    நான் ஒரு பேரங்காடியில்

    என் மகளுக்கு பொம்மை வாங்கிக்கொண்டிருக்கும் போது

    சுட்டுக் கொல்லலாம்!

     

    இன்னும் எத்தனையோ வழிகளிலும் கொல்லலாம்!

    அதுபற்றி உனக்கு நான் சொல்லியா தெரியவேண்டும்?

     

    உனக்கு மற்றொன்றையும் கூற ஆசைப்படுகிறேன் –

    நீ கொல்வதற்கு முன்

    தயவுசெய்து, என்னை அறிந்துகொள்!

    உன் பட்டியலில்

    நான் இருப்பதை தெரிந்துகொள்!

    என்னைக் கொல்வதற்கான

    காரணங்களை வைத்துக்கொள்!

    அறிந்து கொல்!

    தெரிந்து கொல்!

    காரணங்களை வைத்துக் கொல்!

    துருவ கரடிக்குக் கூட

    அதன் குட்டிகளைக் கொன்று

    தின்றுவிட வேண்டியதன்

    காரணமிருக்கிறது;

    அவசியமிருக்கிறது!

    உனக்கு என்மீது தனிப்பட்ட முறையில்

    எந்தவித பிரச்சினையுமில்லை!

    அதை நானறிவேன். நீயுமறிவாய்.

    நீயும் நானும் தான் சந்தித்ததே கிடையாதே!

    அதனால் என்னைக் கொல்ல

    எந்தக் காரணமும் உன்னிடம் இருக்காது!

    ஆனால் நான் கேட்பதெல்லாம்

    அந்தக் காரணம் ஒன்று மட்டும் தான்!

    அரசாங்கம், முதலாளித்துவம்

    மதம், சாதி என்பது போன்ற

    பொதுவான காரணங்கள் எனக்கு வேண்டாம்!

    நீ என்னை கொல்ல விழைவதற்கான

    தனிப்பட்ட காரணம் என்ன?

    சொல்; பின் கொல்!

     

    உன்னிடம் அதற்கான காரணங்களே இல்லையென்றாலும்

    நீ என்னை கொல்ல இன்னொரு வழி இருக்கிறது. 

    உண்மையில் இதைவிட எளிதானதொரு வழியை

    உன் குருநாதர்கள் கூட உனக்கு

    கற்றுக் கொடுத்திருக்கமாட்டார்கள்!

    உண்மையில் இந்த வழியில்

    ‘நீ கொலையே செய்யப்போவதில்லை!’

    ஆனால் நீ நினைப்பது நிறைவேறும்!

    ஆச்சர்யமாக இருக்கிறதா?

    தொடர்ந்து வாசி.  

     

    முதலில் நான் உன் பட்டியலில் இருக்கிறேன்

    என்பதை உறுதிபடுத்திக் கொள்!

    என்பற்றிய தகவல்களைச் சேகரி –

    நான் ஏற்கனவே கூறியது போல்

    என்னைத் தெரிந்து கொள்!

    எனக்கு ஒரு நாற்பது வருடங்கள் கொடு!

    கோபப்படாதே! சொல்வதைக் கேள்!

     

    அந்த நாற்பது வருடங்கள்,

    நீ என்னை நேரடியாகவோ மறைமுகமாகவோ

    பின்தொடர்வது உன் விருப்பம்!

    பின்தொடர்வது சிரமமாக இருந்தால்

    என்னுடன் நீ (என் காரில் கூட) பயணிக்கலாம்

    என் இல்லத்திற்கு வந்து என் குடும்பத்துடன் உணவருந்தலாம்

    நீ எங்களில் ஒருவனாகக் கூட ஆகலாம்!

    அத்தனையும் சாத்தியம்!

    ஆனால் உன் குறிக்கோளில் இருந்து

    நீ பின்வாங்க வேண்டியதில்லை!

     

    உனக்கு என்னை பின்தொடர விருப்பமில்லையெனில்

    நான் கூறிய நாற்பது வருடங்கள் கழித்து

    என்னை வந்து சந்தி!  

    பெரும்பாலும் நான் இறந்திருப்பேன்!

    பெரும்பாலும் நீ கூட இறந்திருப்பாய்!

    நீ அதிர்ஷ்டக்காரனாயிருந்தால்,

    இருபது ஆண்டுகளிலேயே கூட

    என்னைப் பற்றிய அந்த நற்செய்தி

    உன்னை வந்தடைய வாய்ப்பிருக்கிறது!

    அவ்வளவு ஏன்,

    நீ இதை வாசித்துக்கொண்டே இருக்கும்போது கூட

    வந்தடைய வாய்ப்பிருக்கிறது!

    நீ உன் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டே

    நான் இறப்பதை காணும் வாய்ப்பு

    உனக்கு கிட்டும்!

    அதனால் தான் கூறினேன் –

    இந்த வழியில்,

    நீ கொலையே செய்யப்போவதில்லை என்று!

    ஆயினும் உன் எண்ணம் நிறைவேறும்!

    நிறைவேறாமல் போவதற்கான வாய்ப்பே இல்லை!

     

    உனக்கு இன்னொன்று தெரியுமா?

    உன் பட்டியலில் இருக்கும்

    பெரும்பாலோனோருக்கு

    நீ கொல்லும் போது

    உண்டாகும் வலியைவிட –

    ‘வலிமிகுந்தது அவர்களின் வாழ்க்கை!’

     

    எனவே தான் சொல்கிறேன் –

    உன் கொலைத்தொழிலை

    காலத்தின் கையில் கொடுத்துவிடு!

     

    இப்படிக்கு, 

    நீ கொல்லத் துடிக்கும் ஒரு சாமானியன்.

    Share
  • சுருட்டிக்கொள்ளாத வால்

    மாதவன் இளங்கோ

    அந்த உயர்ரக நாயை சமீபத்தில் ஒரு நாய் கண்காட்சியில் வாங்கினேன். நாக்கைத் தொங்கவைத்துக்கொண்டும், வாலை ஆட்டிக்கொண்டும், பாசத்துடன் என் அருகில் வந்து நின்ற அதன் கருப்புநிற கண் அழகிலும் அதன் சுறுசுறுப்பிலும் மயங்கி அதை வாங்கிவிட்டேன். இருப்பினும் அந்த வாலை ஒழுங்காக கவனிக்கத் தவறிவிட்டேன்.

    நல்ல நாய்தான். ஆனால், அந்த வால்?

    அந்த நாய்க்கு ‘ரேகோ’ என்ற பெயர் வைத்தேன். ரேகோ அதிபுத்திசாலித்தனமான நாய் என்றும், அதற்கு பிஸ்கட் மற்றும் மாமிசம் என்றால் மிகவும் பிடிக்கும் என்று நாயை விற்றவன் கூறினான். பிஸ்கட் தருகிறேன் என்றால் போதும் எதையும் செய்துவிடும். பந்தைத் தூக்கிப் போடுவேன், ஓடிச்சென்று கவ்விக்கொண்டு வரும். பிஸ்கட் தருவேன். அமைதியாய் உட்கார் என்பேன், உட்காரும். பிஸ்கட் தருவேன். நான் தேடிக்கொண்டிருந்த செருப்பை கூட ஒருமுறை கண்டுபிடித்துக் கொண்டு வந்தது. பிஸ்கட் தந்தேன். அதன் அறிவைப் பற்றி நண்பர்களிடம் பெருமையோடு பேசினேன்.

    ஆனால், அந்த வால்?

    அது ஏன் எப்போது பார்த்தாலும் சுருண்டுகொள்கிறது? ‘வாலை சுருட்டிக்கொள்ளாதே’ என்றேன். கேட்கவில்லை. ‘பிஸ்கட் stressதருகிறேன்’ என்றேன். கேட்கவில்லை. என் மீதான மரியாதையும், அன்பும் பிஸ்கட் தரும் வரையில் மட்டும் இல்லை, நான் இடும் கட்டளைகள் அதற்குப் பிடித்ததாகவும் இருக்கும் வரையில் தான் என்று புரிந்து கொண்டேன்.

    அன்பாக எடுத்துச் சொன்னேன். கேட்கவில்லை. கெஞ்சினேன். சாட்டை செய்யவில்லை. வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன். அதன் நான்கு கால்களிலும் விழுந்து கதறினேன். ம்ஹும்! பயனில்லை. கோபம் கொண்டு அடித்தும் நிமிரவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

    வகைவகையான பிஸ்கட்டுகள் வாங்கித் தந்தேன். அத்தனையும் தின்றுவிட்டு வாலை சுருட்டிக்கொண்டு, வாயைத் திறந்து, நாக்கைத் தொங்கப்பொட்டுக்கொண்டு எப்போதும் போல் கர்வத்துடன் என்னை நிமிர்ந்து பார்த்தது.

    நான் ஒரு சைவி. இருப்பினும் சமரசம் செய்துகொண்டு அதற்கு மாமிசத்துண்டுகளை நானே சென்று வாங்கி வந்து கொடுத்தேன். மசியவில்லை. அந்த பாழாய்ப்போன வாலை நிமிர்த்த நேர்மையுடன் நான் எடுத்த அத்தனை பகீரத பிரயத்தனங்களும், என் தியாகங்களும் வீணாய்ப் போயின.

    ஒருநாள் வாலோடு ஒரு குச்சியை சேர்த்துக் கட்டி வைத்துவிட்டேன். வால் சுருண்டுகொள்ளவில்லை. அழகாக நீண்டிருந்தது. அது எனக்குப் பிடித்திருந்தது. ரசித்தேன். ‘பார், எவ்வளவு அழகாக இருக்கிறது!’ என்று அதற்கும் கண்ணாடியில் காண்பித்தேன். அது ஆமோதிப்பது போலும் இல்லாமல் மறுப்பது போலும் இல்லாமல் வித்தியாசமான பார்வை வீசியது. ஆனால், அந்தப் பார்வையில் கர்வம் மட்டும் மாறவில்லை.

    நிறைய மாமிசம் வாங்கித்தந்தேன். உயர்தர ‘சோப்பு’ போட்டு என்னுடைய பிரத்யேக குளியல் தொட்டியில் எல்லாம் வைத்து க் குளிப்பாட்டினேன். கடைக்கு அழைத்துச் சென்று வேண்டியதையெல்லாம் வாங்கித் தந்தேன். உண்மையில் ஒரு நாயை அப்படி இதுவரை யாருமே கவனித்திருக்க மாட்டார்கள். அந்த ஒரு வாரம் அவ்வளவு மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டேன். செய்ய வேண்டியதை எல்லாம் நேர்மையோடும் அன்போடும் செய்தேன்.
    இதற்கு மேல் ரேகோ வாலை சுருட்டிக்கொள்ளாது, வால் இனி நீண்டுதான் இருக்கும் என்று நம்பினேன். அது நன்றியுள்ள பிராணி ஆயிற்றே என்று எண்ணி, அன்போடு தடவிக்கொண்டே, அந்தக் குச்சியை மெதுவாகப் பிரித்து எடுத்தேன். அடுத்த நொடி சுருண்டுவிட்டது அந்த ‘திமிர்பிடித்த நாயின் திமிர்பிடித்த வால்’!

    வெறுத்துப்போய் அந்தக் குச்சியை அதன் மேலே வீசியெறிந்தேன்.dogtail2

    நண்பனிடம் என் கவலையைப் பகிர்ந்துகொண்டேன். “எல்லா நாய்களும் அப்படித்தான். ‘ நாய் வாலை நிமிர்த்த முடியாது’. அது சுருட்டிக்கொள்ளத்தான் செய்யும். அதை மாற்ற முயன்று நேரத்தை விரயம் செய்யாதே.” என்று அறிவுரை வழங்கினான். இது முன்னரே தெரியாமல் போய்விட்டதே என்று எண்ணி வருந்தினேன்.

    உயர் ரக நாய் என்று கூறி என்னிடம் விற்றவன் மேல் எனக்கு அத்தனை கோபம் வந்தது. மற்றவர்களை மதிக்காமல், தனக்குத் தான் மட்டும்தான் என்றும், தன்னை மாற்றிக்கொள்ளவே மாட்டேன் என்று கர்வம் பிடித்து சுருண்டு கிடக்கும் இந்த வாலைக் கொண்ட நாய் என்ன பெரிய உயர் ரகம்?

    இறுதியில் அந்த நாயைத் துரத்தி அடித்துவிடுவது என்று முடிவு கட்டினேன்.

    இதற்கு மேல் இந்த நன்றிகெட்ட நாய்களை வாங்கக்கூடாது, வாங்கினால் ஒரு பூனையைத் தான் வாங்க வேண்டும். ஆனால், பூனை வால் சுருட்டிக்கொள்ளும் இயல்புடையதா? நண்பனிடம் கேட்க வேண்டும்.

    இல்லை. இதோ, இது தான் என் இறுதியான முடிவு – வாலை சுருட்டிக்கொள்ளாத எந்த பிராணியானாலும் பரவாயில்லை, நான் வாங்கத் தயாராயிருக்கிறேன். அது, புலியாக இருந்தாலும் பரவாயில்லை. அதன் மீது எனக்குத் துளி பயமில்லை.

    எந்தப் பிராணி என்பது முக்கியமில்லை. ‘சுருட்டிக்கொள்ளாத வால்’ எனக்கு மிக முக்கியம்!

    Share
  • வர்ணம்

    அன்று காலை. பெல்கிய நாட்டின் லூவன் நகரில் ஒரு மின்னணு சாதன அங்காடியில் அந்த மனிதருக்காக (attender) காத்துக் கிடந்தேன். வந்தவர் என்னைத் தவிர்த்து விட்டு எனக்கருகே நின்ற, எனக்கடுத்து வந்த சீமாட்டியிடம் என்னவென வினவிவிட்டு கவனித்தார். சில மணித்துளிகள் காத்திருப்பில் கழிந்தது. திரும்பி வந்தவரிடம் மீண்டும் கேட்க முற்பட்டேன்.

    “ஒரு நிமிடம்!” என அவர் மொழியில் தெரிவித்துவிட்டு, இன்னொரு கனவானை கவனிக்கச் சென்றார். அவரும் எனக்கடுத்து வந்தவரே! இன்னும் சில மணித்துளிகள் விழுந்து முடிந்திருந்தது. திரும்பி வந்தவர் மீண்டும் இன்னொரு கனவானை நோக்கிச் சென்றார்.

    பொறுமை இழந்தவனாய் உரக்க உரைத்தேன், “மன்னிக்கவும்.” நான் குறுக்கே நுழைந்து தொல்லை தருகிறேன் என்பது போன்று என்மீது கோபப்பார்வை வீசியவரிடம் தொடர்ந்து கூறினேன், “மன்னிக்கவும். நான் வந்து வெகுநேரம் ஆயிற்று.”

    “மன்னிக்கவும். கவனிக்கவில்லை!” என்றார்.

    “பரவாயில்லை. தங்கள் கவனத்தை கவரும் அளவிற்கு என் முகம் ‘பளிச்சென’ இல்லாததற்கு தாங்கள் என்ன செய்வீர்கள் பாவம்!” என்று உடனே கூறினேன் சிறுபுன்னகையுடன் – அவர் மொழியில்.

    யாரோ அறைந்ததுபோல் சில நொடிகள் உறைந்து போனார். பின் என்ன தோன்றியதோ தெரியவில்லை. என் கைகளைப் பற்றி, “மன்னிக்கவும்!” என்றார் – பலமுறை!

    எனக்கு இன்னமும் புரியவில்லை. இந்த மன்னிப்பு ‘என்னைக் காத்திருக்க வைத்ததற்கா?’ அல்லது ‘அவர் மொழியில் பேசியதற்காகவா’ அல்லது ‘நான் பளிச்சென இல்லை என்பதற்கா?’, அல்லது ‘அவரது இருண்ட ஆழ்மனம் எனக்கு தெரிந்துவிட்டது என நினைத்துக் கொண்டதாலா?’ எனக்கு இன்னமும் புரியவில்லை.

    வளர்ந்த நாடாயிருந்தாலென்ன? வளரும் நாடாயிருந்தாலென்ன? வளரா நாடாயிருந்தாலென்ன?

    ‘மனித மனங்கள் வளராத வரை!’.

    Share
  • பேரமைதி

     

    மாதவன் இளங்கோ

     

    கூடு நோக்கிப்
    பறந்து சென்ற
    பறவையொன்றின்
    சிறகு ஒன்று
    முறிந்து விட,
    தடம்மாறி
    ஒற்றைச் சிறகோடு (more…)

    Share
  • ‘ப்ரமான் சூபியங்க’

    அன்று அதிகாலை ஒரு முழுநாள் தேர்வுக்காக லூவன் நகரிலிருந்து ப்ரசல்சு நகரம் செல்ல வேண்டியிருந்தது.

     லூவன் எகானோம் டாக்சி நிறுவனம், சொன்னதற்குப் பத்து நிமிடங்கள் முன்னதாகவே வண்டி அனுப்பி இருந்தார்கள். பென்சு காரில் ஏறி அமர்ந்தவுடன் கோனிங்கு போடெவெய்ன்லான் நெடுஞ்சாலையில் காரை விரட்டினார் என் சாரதி.

     ‘ஹுய மார்ஹன்’ என்பதற்குப் பதிலாக ‘குட் மார்னிங்’ என்று கூறிய பாங்கும், அவரது உருவ அமைப்பும் அவர் நிச்சயம் ஃபிளம்மியர் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டியது.

     “ஆர் யூ ஃப்ரம் போலன்ட்?” என்று கேட்டேன்.

     “இல்லை, ரஷ்யா!” என்று கூறியவர், “தாங்கள் பாகிஸ்தானியா?” என்றார்.

     “எப்படி இருவருமே ‘சரியாக’ தவறாகக் கேட்கிறோம்?” என்று நினைத்துக்கொண்டே, “இல்லை, இந்தியன்!” என்றேன்.

     சிறிது நேர  மௌனத்திற்குப் பிறகு, “தாங்கள் ரஷ்யா சென்றதுண்டா?” என்று கேட்டார்.

     “இல்லை, நண்பரே. ஆனால், நானும் என் பள்ளி நண்பனும் ரஷ்யாவில் மருத்துவப் படிப்பு படிக்க ஆசைப்பட்டதுண்டு.” என்றேன்.

     அவர் புன்னகைத்தார். நான் தொடர்ந்து, “நீங்கள் ‘தாய்’ (தி மதர்) நாவலைப் படித்ததுண்டா?” என்று கேட்டேன்.

     அவர் மிகுந்த ஆச்சர்யத்துடன், “உங்களுக்கு மதர் நாவலைப் பற்றி எப்படித் தெரியும்?” கேட்டார்.

     “மாக்சிம் கோர்கி என் அபிமான எழுத்தாளர்!” என்றேன்.

     பரவசத்தோடு, “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!” என்று கூறிவிட்டு, “உங்களுக்கு எந்த கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும்?” என்று கேட்டார்.

     “அந்தத் தாய் – பெலகேயா நீலவ்னா!” என்றேன்.

     “எனக்கு பாவெல்!” என்றார்.

     தாய் பற்றிய சிலமணித்துளி உரையாடலில் இலக்கை சென்றடைந்தோம்.

     “என் பெயர் ‘ப்ரமான் சூபியங்க’ (Roman Zubenko)” என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, என் பெயரையும் கேட்டுத் தெரிந்துகொண்டு, என் தொலைபேசி எண்ணையும் வாங்கிக்கொண்டு, “மாலையும் நானே வர விரும்புகிறேன்!” என்று கூறிவிட்டு சென்றார். மாலையும் வந்தார். மீண்டும் பேசினோம். பேச்சு தாய், மாக்சிம் கோர்கி, ஆன்டன் செக்கோவ், ரஷ்யா, இந்தியா என்று சுற்றிவந்தது. இதோ, இன்று, இதை எழுதிக்கொண்டிருக்கும் இதே வேளையில் கூட ஜி-டாக்கில் ஆன்லைனில் இருக்கிறார்.

     மறக்க முடியாத நாள்! மறக்க முடியாத மனிதர்!

     “மொழி இனத்தை இணைக்கிறது. இலக்கியம் உலகையே இணைக்கிறது.”

    Share
  • முடிதிருத்தகமும் மனிதமும்..

    மாதவன் இளங்கோ

    பெல்கிய நாட்டின் லூவன் நகர பிரசல்ஸ் தெருவில் உள்ள ஒரு முடிதிருத்தகம். இப்போதுதான் அங்கிருந்து வருகிறேன்.

     சிறுவயதிலிருந்து இன்று வரை மாறாத பல பழக்கங்களில் ஒன்று – ‘முடிதிருத்தும் போது தூங்கிவிடுவது’. ஒரு குட்டித் தூக்கம் போட்டு முடிப்பதற்குள் வெட்டி முடித்து விட்டார் அந்தக் கலைஞர். அதோடு விடாமல், இன்னும் மூன்று வருடங்களில் உனக்கு அநேகமாக முடியனைத்தும் கொட்டிவிடும் போலிருக்கிறது என்று சிரித்துக்கொண்டே ஆரூடம் வேறு சொல்லி வழியனுப்பி வைத்தார். இந்த இரண்டு காரணங்களுக்காகவே நிறைய முடி வளர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

     ‘உங்கள் ஆரூடம் ஒருவேளை பலித்துவிட்டால், நீங்கள் ஒரு வாடிக்கையாளரை இழக்க நேரிடும்! அதனால், எனக்கு நன்றாக முடி வளர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.’ என்று நானும் சிரித்துக் கொண்டே கூறிவிட்டுத் திரும்பினேன்.

     ஆங்கிலத்தில் முடிதிருத்துபவர்களை ‘Tonsorial Artist’ என்பார்கள். உண்மையாகவே அது ஒரு கலை என்பதில் எனக்குத் துளி ஐயமில்லை. ஏனென்றால், நீலாம்பரி ராகத்தில் தாலாட்டு பாடிக்கூட இத்தனை அழகாய் என்னைத் தூங்க வைக்க முடியாது. 😉

     இன்று நான் சென்று வந்தது, நான் வழக்கமாகச் செல்லும் பாகிஸ்தானியர் ஒருவரின் முடிதிருத்தகம். உள்ளூர்காரர்களிடம் சென்றால் சொத்தையே எழுதிக்கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால் அவர்களிடம் எப்போதுமே செல்வதில்லை. இந்த நகரத்துக்கு வந்த புதிதில், ஒரே ஒருமுறை தலைமுடி வெட்டிக்கொள்ளச் சென்று, மொட்டை அடித்துக்கொண்டு திரும்பியதோடு சரி. பிறகு அவர்கள் பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை.

     சரி, அதை விடுங்கள். நான் கூற வந்தது இதுதான் –

     பதினைந்து மணித்துளிகள் ஒரு பாகிஸ்தானியரிடம் தலையைக் கொடுத்து, நிம்மதியாய் தூங்கிவிட்டு வந்திருக்கிறேன். தலையில் முடியிருக்கும் வரை, இந்த ஊரில் நான் இருக்கும் வரை, இன்னும் பலமுறை அவரிடம் செல்வேன் – அந்த பதினைந்து மணித்துளி உறக்கத்துக்காய்.. நிம்மதிக்காய்.. நிம்மதியான உறக்கத்துக்காய்..

     அரசியல்வாதிகளும், மதவாதிகளும் என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள் – மனிதர்களைப் பிரிக்க. நிஜத்தில் மனிதமே நிலைத்து நிற்கிறது. நிற்கும். வெல்லும்!

    Share
  • ரசிகை மணிமொழிக்கு ஒரு மடல்..

    கலாரசிகை மணிமொழிக்கு,

    வணக்கம். தங்கள் கடிதம் கிடைக்கப்பெற்றேன். உண்மையிலேயே பேருவகை அளித்த மடல்.

    உங்கள் கடித்தத்தைப் படித்து முடித்தவுடன், சுஜாதா அவர்கள் ஒரு சிறுகதையில் லாட்டரியில் பரிசு கிடைப்பதற்கான சாத்தியம் பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது –

    “ஒரு குரங்கு டைப் அடிக்கற இயந்திரத்துக்கு முன்னால் உட்கார்ந்துவிட்டு, தக்கா புக்கான்னு அடிச்சு, அடிச்ச விஷயம் அகஸ்மாத்தா கம்பராமாயணத்தில் ஒரு பாட்டா அமையதறதுக்கு எவ்வளவு சான்ஸ் இருக்கோ, அவ்வளவு சான்ஸ் தான் இந்த லாட்டரியில..” என்று எழுதியிருப்பார்.

    என்னைப் பொறுத்தவரையில், என் போன்ற ஓவியர்களுக்கு இதுபோன்ற கடிதங்கள் வருவதென்பதும், லாட்டரியில் பரிசு விழுவதென்பதும் ஒன்று தான்! என்னை ‘தக்கா புக்காவென தட்டச்சும் குரங்கு’ என்று கூறவில்லை. உங்களைப் போன்ற கலாரசி(கர்)கைகள் எல்லாம் பேரதிசயம் என்றே கூற வருகிறேன்!

    எவ்வளவு அழகாக என் ஓவியங்களை உள்வாங்கியிருக்கிறீர்கள்?

    உங்கள் கடிதத்தைத் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டே இருக்கிறேன். உண்மையில் இந்தக் கடிதமே ஒரு அழகிய ஓவியம்! என் படைப்புகளைப் பற்றி நீங்கள் பாராட்டி எழுதியதற்காகச் சொல்லவில்லை. உண்மையில், நீங்கள் தான் அந்த ஓவியங்களை வரைந்து முடித்துள்ளீர்கள்.

    உங்கள் கேள்விக்கு வருவோம். “அது என்ன ‘து..தூ.. (TuToo)’ என்று ஒரு புனைபெயர்? குறில் நெடிலென கவித்துவமாயும் இருக்கிறது; ஒன்றும் புரியாததாயும் இருக்கிறது?

    கவிதைக்கான அனைத்து லட்சணங்களும் என் புனைபெயரிலேயே வந்து விட்டது என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். 🙂

    கவிஞனுக்கும், ஓவியனுக்கும் அடிப்படையில் வேறுபாடு எதுவும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. கவிஞன் ஒரு ஓவியத்தை  மனக்கண்ணால் தரிசித்துவிட்டு கவிபடைக்கிறான். ஓவியன், கவிதையைக் மனதிலேயே எழுதிமுடித்துவிட்டுப் பின் ஓவியம் வரைகிறான். ஒரு கவிஞனுக்குள் நிச்சயம் ஒரு ஓவியனும், ஒரு ஓவியனுக்குள் நிச்சயம் ஒரு கவிஞனும் இருந்தே ஆகவேண்டும் என்பது என் அபிப்பிராயம்.

    சரி, என் புனைபெயருக்கு வருவோம். இதற்கான பதிலை நிச்சயம் ஒரு வரியில் என்னால் கூற முடியாது. அது ஒரு பெரிய கதை! சிறிது நேரம் இந்த ஓவியனுக்குள் இருக்கும் கதாசிரியனையும் பொறுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன், மணிமொழி.

    அன்றைய தினத்து நினைவுகளின் வண்ணங்கள் இன்னும் என் மனதில் திட்டுத் திட்டாக ஒட்டிக் கொண்டு இருக்கின்றன.

    அன்றைக்கு அலுவலகத்தில் “அட போங்க! என்ன வாழ்க்கையோ?” என்று ஒரு நான்கு நண்பர்களிடமாவது சொல்லிப் புலம்பி இருப்பேன். காலை வீட்டிலிருந்து கிளம்பும் போது, வீட்டாருடன் பெரிய வாக்குவாதம். என் அண்ணன், அண்ணி, தாய்மாமா, பற்றாக்குறைக்கு என் மாமனார் வேறு. என்னைக் கிட்டத்தட்ட ஒரு விசாரணைக் கைதியைப்போல் நிறுத்திக் கேள்விகளைக் கேட்டுவிட்டு, பின்னர் அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தனர்.

    அதற்கு முந்தைய வாரம் மும்பையில் நடந்த சர்வதேச ஓவியக் கண்காட்சியில் பங்கேற்க வந்திருந்த என் ஆதர்ச ஓவியர் ராம் எங்கள் வீட்டில்தான் தங்கினார். நான் அலுவலகத்துக்கு ஒரு வாரம் விடுப்பு எடுத்து விட்டு கண்காட்சியில் அவரோடு இருந்தேன்.

    அதுவே என் வீட்டாருக்கு அப்போது இமாலயப் பிரச்சினை.

    “இயந்திரவியல் முடித்துவிட்டு பஜாஜ் நிறுவனத்தில் வாகன வடிவமைப்பாளராகப் பணியாற்றும் எனக்கெதற்கு இந்த ஓவியக் குப்பைகள் எல்லாம்?” என்பது அவர்கள் வாதம்.

    மும்பை காண்டிவிலியில் நாங்கள் வசித்துவந்த வீடு என் தந்தை கட்டியது. மிகப் பெரிய இரண்டடுக்கு வீடு. கீழ் வீட்டில் என் அண்ணனும், மேலே நானும் குடியிருந்தோம். அவருடைய குழந்தைகள் எப்போதும் என் வீட்டில்தான் விளையாடிக்கொண்டிருப்பார்கள்.

    நான் சிறுசிறு வீட்டுப் பராமரிப்பு வேலைகளைக்கூட செய்வதில்லை என்பது என் அண்ணனின் குற்றச்சாட்டு. மளிகைக் கடைக்குச் செல்வது, காய்கறிகள் வாங்கி வருவது போன்ற வேலைகளைச் செய்வதில்லை என்பது என் மனைவியின் குற்றச்சாட்டு. தங்கள் வீட்டில் நடக்கும் முக்கியமான குடும்ப நிகழ்வுகளில்கூட நான் பங்கேற்பதில்லை என்பது சென்னையிலிருந்து வந்திருக்கும் என் மாமனாரின் குற்றச்சாட்டு. என் அண்ணனின் குழந்தைகளை படிப்பில் கவனம் செலுத்தவிடாமல், ஓவியம் வரையச் சொல்லி கட்டாயப்படுத்துகிறேன் என்று என் அண்ணன் மூலமாக பழி சுமத்திய என் அண்ணி.

    இவையனைத்திற்கும் மூலகாரணமே ஓவியக்கலையில் எனக்கு இருந்த நாட்டம் தான். என் ஓவியப்படைப்புக்களைப் பார்த்தாலே அவர்களுக்கு ஏனோ கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

    நிலைமை இப்படி இருக்க, ஒரு ஓவியர் வந்து வீட்டில் ஒரு வாரம் தங்கினால் சும்மா இருப்பார்களா? யோசித்துப் பாருங்கள்.

    அதிலும் அவருக்காக நான் விடுப்பு வேறு எடுத்துக்கொண்ட விஷயம் என் மாமனாரை  ரொம்பவுமே பாதித்துவிட்டதுபோல் தெரிந்தது.

    “வீட்டக் கொஞ்சம் பாருங்க மாப்ள. ஏதோ பெயின்டிங் முடிக்கணும்னு சொல்லி, என் மொத பொண்ணு சீமந்தத்துக்குக் கூட வரமாட்டேன்னு சொல்லிட்டீங்க. இன்னைக்கி எவனோ ஒருத்தனுக்காக அலைஞ்சிட்டு இருக்கீங்க! இது என்ன நியாயம்?” என்றார் என் மாமனார்.

    “பெரியவங்க கஷ்டம் இவங்களுக்கு புரியாது ராமநாதன். சிவா, எவ்வளோப்பா செலவு பண்ண அந்த பெயிண்ட் அடிக்கற தாடிகாரப் பயலுக்கு?” – இது என் தாய்மாமா கிருஷ்ணமூர்த்தி.

    “பெயிண்ட் அடிக்கிறவரா? கலைத்தாய் இவர் மேல கொஞ்சம் கருணை காட்டியிருக்கலாம்” என்று நினைத்துக்கொண்டு அமைதியாக நின்றேன்.

    என்னைச்சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் எனக்கு எதிராகப் பேசிக்கொண்டிருக்கும் தருணங்களில் அமைதியைக் கடைப்பிடிப்பது என் வழக்கம். ஏனென்றால் அந்த சமயங்களில் நாம் பேசுவதால் எந்த உபயோகமும் இல்லை. அது பிரச்சினையை இன்னும் அதிகப்படுத்தவே செய்யும். மேலும், நாம் செய்து கொண்டிருப்பது என்னவென்றே தெரியாமல் நம்மை விமர்சனம் செய்துகொண்டிருப்பவர்களிடம் பிரதிவாதம் செய்வது என்பது, குருடனுக்கு பச்சை நிறம் எப்படி இருக்கும் என்று விளக்குவது போன்றது.

    “”உங்கப்பா கஷ்டப்பட்டு சேத்ததெல்லாம் அழிச்சிடாதப்பா. அவ்ளோதான் சொல்லமுடியும். நல்ல வேலைல வேற இருக்க. அதுல ஒழுங்கா ஷைனாகற வழிய பாரு சிவா.”

    ஏதோ வேலைக்குப் போகாமல் குடித்துவிட்டு தெருவில் விழுந்து கிடப்பவனிடம் பேசுவது போன்று தொடர்ந்து விடாமல் அறிவுரைகளை பொழிந்துகொண்டிருந்தார் என் மாமா.

    ராமை அந்தேரிக்கு அழைத்துச் சென்றதிலும், அவருடன் உணவு அருந்தியதிலும் என் சொத்தே அழிந்துவிட்டது போன்ற பிரமையை உருவாக்கிய அவர் பேச்சு எனக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. இருந்தாலும் என் வாதங்களை முன்வைக்க நான் விரும்பவில்லை – மேலே கூறிய அதே காரணங்களுக்காக.

    இவர்களாவது பரவாயில்லை. என்னைக் காதலித்து மணந்துகொண்ட என் மனைவிக்கு என்ன ஆயிற்று? அவளால் கூட என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

    திருமணத்திற்கு முன்பே, என் கனவுகளைப் பற்றி எவ்வளவு விஷயங்களை அவளிடம் பகிர்ந்து கொண்டேன். அத்தனைக்கும் துணையாய் இருப்பேன் என்று கூறிய அவள் இன்று,

    “அவர் வேணும்னா அவர் உண்டு அவர் பெயிண்டிங் உண்டுன்னு ஜாலியா இருக்கட்டும். நான் சென்னைக்கு போயி வேலை பார்க்கப்போறேன்” என்று நாகூசாமல் சொன்னாள்.

    அதற்குக் காரணம் அவளுடைய பொசசிவ்னெஸ் என்றே நினைக்கிறேன். என்னுடைய ஓவியக்கலையைக் கிட்டத்தட்ட அவள் சக்களத்தியாகவே பார்க்கிறாள். அதிலும் ஏதாவது ஒரு பெண்ணின் படம் வரைந்தால் போதும் – முடிந்தது கதை! எல்லாவற்றுக்கும் மேலாக, அவளுடைய அக்காவின் சீமந்தத்திற்கு நான் போகாதது, நான் இழைத்த தவறுகளிலேயே ‘ உலக மகா தவறு!’.

    அன்றுதான் முதன்முதலாக என் பெற்றோர்கள் இல்லாத வெற்றிடத்தை முழுவதுமாக உணர்ந்தேன். சிறுவயதில் இருந்தே எனக்கு ஓவியம் என்றால் அவ்வளவு நாட்டம். நான் ஆறுவயதில் மூன்று கோடுகளைப் போட்டதற்கே கைதட்டி ரசித்து, என்னை ஊக்கப்படுத்துவதற்காகவே, வண்ண வண்ண பென்சில்களையும், ஸ்கெட்சுகளையும், தூரிகைகளையும், வெள்ளைத் தாள்களையும் வாங்கி வந்து குவித்தவர்கள் அவர்கள்.

    அத்தனை அவிவேகிகளும் சேர்ந்து என்னைக் கேள்வி கேட்பதைப் பார்த்துக்கொண்டு அவர்கள் சும்மா இருந்திருப்பார்களா? இல்லை, அவர்களுக்கெல்லாம் என் தந்தை முன்பு பேசத்தான் துணிவு இருந்திருக்குமா?

    ஓவியர் ராம் போன்றவர்கள் வீட்டிற்கு வருவது எவ்வளவு பெரிய பாக்கியம். இதுபோன்ற வாய்ப்புக்கள் என்னைப்போன்ற வளரும் கலைஞர்கள் அனைவருக்கும் கிடைக்குமா? என் ஓவியங்களை எல்லாம் பார்த்து எவ்வளவு ரசித்தார், பாராட்டினார். அந்த மகா கலைஞன் இந்த அற்பனின் ஓவியம் ஒன்றை ‘மாஸ்டர் பீஸ்’ என்று கூறியதோடு மட்டுமில்லாமல், அந்த சர்வதேசக் கண்காட்சியில் என் ஓவியங்கள் சிலவற்றையும் வைத்து அழகு பார்த்தாரே! அந்தப் பெருந்தன்மையைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரிந்திருக்கும்? எத்தனை  பெரிய கலைஞர்களை அங்கே எனக்கு அறிமுகப்படுத்தினார்!

    அதற்கு முன்புவரை எத்தனை  பத்திரிக்கைகளுக்கு எனது ஓவியங்களை அனுப்பி இருப்பேன்? அவற்றிற்கெல்லாம் பதில் கடிதம் கூடக் கிடைத்ததில்லை. ஆனால், ராம் என்னுடைய ஓவியங்களை அவரே அவருக்குத் தெரிந்த பத்திரிக்கை நண்பர்களுக்கு அனுப்பினாரே! அவரோடு நானிருந்தது எனக்கல்லவா பயன்பட்டது. அவர் நினைத்திருந்தால் ஒரு விடுதியில் தங்கியிருக்கலாம். ஆனால், ஒரு ரசிகன் மீதிருந்த அதீத அன்பினாலல்லவா அவர் என்னோடு வந்து தங்கினார்.

    ஒரு கலைஞனுக்குத் தான் எத்தனை பிரச்சினைகள் பாருங்கள் மணிமொழி – வீட்டிலும், சமுதாயத்திலும்? சமுதாயத்தில் தொடர்ந்து அவன் படைப்பின் மேலெழும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்க வேண்டி இருக்கிறது. அதுவாவது பரவாயில்லை என்பேன். வீட்டில், முதலில் ஒரு படைப்பை உருவாக்குவதற்கே போராட வேண்டியிருக்கிறது.

    இப்படி ஏதேதோ எண்ணவோட்டங்களில் அன்றைக்கு தொலைந்து போயிருந்த என்னை உலுக்கியது என் உடன் பணிபுரிந்த நண்பர் சேகரின் கணீரென்ற குரல்.

    “என்னங்க ஷிவா, ப்ரூட் ஜூஸ் குடிக்கபோறேனு சொல்லிட்டு வந்து கேன்டீன்ல இவ்ளோ நேரம் உக்காந்து என்ன கனவு கண்டுட்டு இருக்கீங்க?” என்று கேட்டுக்கொண்டே என் முன்னால் வந்து அமர்ந்தார்.

    “அதான் காலைலயே சொன்னேனேங்க.”

    “அட விடுங்க ஷிவா. இதெல்லாம் ஒரு பிரச்சினையா? உங்களுக்கு ஒரு நல்ல ஐடியா கொடுக்கட்டுமா? நீங்க மொதல்ல எங்கூட MBA பார்ட் டைம் கோர்ஸ் ஜாய்ன் பண்ணுங்க.”

    “என்ன ஷேகர் சொல்றீங்க? இதுக்கு எங்க வீட்ல இருக்கறவங்களே பரவாயில்லை போல இருக்கே?”

    “நோ.. நோ. நான் இன்னும் முடிக்கல. MBA கிளாஸ் போறேன்னு சொல்லிட்டு ஈவினிங்லயும், வீகென்டுலயும் ஒரு சின்ன ரூம் ரென்டுக்கு எடுத்து அங்க பெயிண்ட் பண்ணுங்க.”

    “இது ரியலிஸ்டிகாவே படலையே ஷேகர். வேற ஏதாவது ஐடியா கொடுங்க.”

    “ஷிவா, அவனவன் எதுக்கெல்லாமோ சின்ன வீடு வெச்சிருக்கான். நீங்க உங்க ட்ரீம்ஸ்காக ஒரு ஸ்மால் ரூம் ரென்ட் எடுக்கறது தப்பா? இன்னைக்கி எத்தனையோ ஆர்டிஸ்ட் புனைபெயர்ல வரையறாங்க, எழுதறாங்க. நீங்க பாட்டுக்கு சைலன்டா உங்க வேலைய பாருங்க ஷிவா”

    சிந்தனையில் ஆழ்ந்த என்னிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார் ஷேகர், “நம்ம மக்கள் எப்பவுமே ஜெயிச்சவன் கொடுக்கற பேட்டிய ஆ..னு வாயத் தொறந்து டிவி-ல பாத்து கைதட்டுவாங்க. நம்ம வீட்லயே ஜெயிக்கறதுக்குப் பாடுபடறவன கண்டுக்க மாட்டாங்க. ஆனா கிண்டல் மட்டும் நல்லா பண்ணுவாங்க.”

    “அப்போ ஏன் ராம் மாதிரி ஆளுங்கள கண்டுக்க மாட்டேங்கறாங்க.”

    “தட்ஸ் பிகாஸ் தே டோன்ட் நோ அபோவ்ட் திஸ் ஆர்ட். இதுல வேற நீங்க மாடர்ன் ஆர்ட் ஆசாமி. அவங்களுக்கு என்ன புரியும்? எதையோ கிறுக்கி டைம் வேஸ்ட் பண்றான்னு நெனெக்கிறாங்க. இதுவே நீங்க ஒரு கீபோர்டிஸ்டா இருந்து A.R.ரஹ்மான் உங்க வீட்டுக்கு வந்தா இப்படி பிகேவ் பண்ணுவாங்களா யோசிச்சு பாருங்க? அவ்வளோ ஏன்? இந்த ராம் மட்டும் ஒரு டிவி சீரியல்ல நடிசிருந்தார்னா இப்போ நெலமையே வேற மாதிரி இருந்திருக்கும்.” என்று சேகர் பேசிய விஷயங்கள் எனக்கு நியாயமாகப்பட்டது.

    அதிலும் புனைபெயரில் வரைவது என்பது சிறந்த யோசனையாகப்பட்டது. மாலை வீட்டிற்குச் செல்லும் வழியில் பல புனைபெயர்கள் தோன்றின. எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை.

    இப்படிச் சிந்தனையில் ஊறியபடியே வீட்டிற்குள் நுழைந்த போது, எங்கள் வீட்டு ரோஜா செடிகளுக்கு மத்தியில் நான் கண்ட காட்சி என்னை உலுக்கியது.

    ராம் என்னிடம் மாஸ்டர் பீஸ் என்று பாராட்டிய என்னுடைய ஓவியம் கீழே கேட்பாரற்று விழுந்து கிடந்தது. சற்றுநேரத்திற்கு முன்பு என் மனைவியோ அல்லது அண்ணியோ, உலரவைப்பதற்காகக் கம்பியில் தொங்கவிடப்பட்ட துணியிலிருந்து விழுந்த தண்ணீர்த் துளிகள், சொட்டுச் சொட்டாய் என் ஓவியத்தை அழித்துக்கொண்டிருந்தன.

    ஓடிச்சென்று அதை எடுக்க குனிந்தபோதுதான் கவனித்தேன். என் ஓவியம் அப்படியொன்றும் உருக்குலைந்து போய்விடவில்லை. இன்னும் சொல்லப்போனால், அந்தத் துளிகள் ஒவ்வொன்றும் தூரிகைகளாய் மாறி என் ஓவியத்தை மேலும் அழகுபடுத்திக்கொண்டிருந்தன. அதைப் பார்த்து ரசித்துக்கொண்டே இருந்தபோது, “துளிகளே தூரிகைகளாய்…” என்கிற கவித்துவமான தலைப்போடு சேர்த்து, அந்தத்துளிகள் வரைந்த ஓவியத்தைப் பற்றிக் கவிதை வரிகளும் கொட்டின.

    அப்போது பிறந்தது து..தூ.. (TuToo) என்கிற என் புனைபெயர் மட்டும் அல்ல; எனக்குள் இருந்த கவிஞனும்தான்.

    நாம் நிச்சயம் சந்திக்கவேண்டும், மணிமொழி. ஓவியங்களால் சூழப்பட்ட இந்தச் சிறு வீடு உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறது.

    என்றென்றும் அன்புடன்,

    து..தூ.. (என்கிற) சிவா.

     

    Share
  • சிராய்ப்பு

    (குறுங்கதை)

    அது ஒரு குறுகிய தெரு. அந்தத் தெருவில் வசிக்கும் மழலைகள் சில அந்த இளம்பச்சை நிற வண்ணம் தீட்டப்பட்ட வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தன.

    அந்த வீட்டிற்குள் எப்போதும் போல் இணையவெளியில் உலவிக் கொண்டிருந்தான் கார்த்திகேயன் – வாசலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளில் ஒன்றின் தகப்பன். அந்தக் குழந்தைக்குக் கூட ஏதோ ‘ஷா’வில் முடியும் பெயர். சரியாக நினைவுக்கு வரவில்லை.

    வாசலில் வாகனசத்தம் கேட்கும்போதெல்லாம் வெளியே வந்து அவனது காரை அந்த வாகனங்கள் எப்படிக் கடந்து போகின்றன என்பதை பார்த்துவிட்டு, மீண்டும் உள்ளே சென்று வலைமேயத் தொடங்கிவிடுவான்.

    சமையலறையிலிருந்து திடீரென்று அவன் மனைவி சித்ரா பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடுவதை சலனமில்லாமல் திரும்பிப் பார்த்துவிட்டு, மீண்டும் கணிப்பொறியில் மூழ்கினான்.

    வெளியே சென்ற மனைவி, குழந்தையைக் கொண்டுவந்து நாற்காலியில் கிடத்திவிட்டு, உள்ளே ஓடினாள்.

    அப்போதுதான் குழந்தை அழுதுகொண்டிருப்பதை கவனித்தான் கார்த்திக்.

    “என்ன ஆச்சுடி குட்டி” என்று கேட்டுக்கொண்டே குழந்தையிடம் சென்றான்.

    “இடி விழுந்தாகூட உங்க அப்பாவுக்கு அது கேக்காதுடீ குட்டி!” என்று உரக்கக் கத்திக்கொண்டே வந்து அடிபட்ட இடத்தில் மருந்திட்டாள் சித்ரா.

    “சின்ன ஸ்க்ராட்ச் தானே? அதுக்கு ஏன் இவ்வளவு பதைபதைப்பு? குழந்தைய நீதான் கெடுக்கற. நானெல்லாம் சின்ன வயசில்ல அடிபட்டா, மண்ணை எடுத்து அடிபட்ட எடத்துல போட்டுப்பேன். தானா சரியாயிடும். கூல்!” என்றவனை முறைத்துவிட்டு உள்ளே குழந்தையை அழைத்துச் சென்றுவிட்டாள். அவனும் வெளியே சென்று காரை ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு மீண்டும் வலைமேயச் சென்றுவிட்டான்.

    அன்று மாலை ஏழு மணி இருக்கும்.

    “குழந்தைக்கு லேசா உடம்பு சுடுது. டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறேன்” என்று கூறிவிட்டு டிரைவரை அழைத்துக் கொண்டு காரில் சென்று அமர்ந்தாள் சித்ரா.

    அதைக் கேட்ட அடுத்தகணம், பதைபதைத்துக்கொண்டு வெளியே வந்த கார்த்திக், “டாக்டர் வீடு இருக்கற தெருவுல ரெண்டு பக்கம் முள்ளுச்செடிங்க நிறைய இருக்கு. தெருமுனையிலேயே காரை விட்டுட்டு நடந்து போய்டுங்க, மகேந்திரன்” என்று டிரைவருக்கு அறிவுரை கூறி அனுப்பிவிட்டு, வாட்டத்துடன் அவர்களையே பார்த்துக்கொண்டு இருந்தான் கார்த்திக்.

    கார் மருத்துவமனைக்குச் செல்வதற்குள் மகேந்திரனின் கைபேசிக்கு கார்த்திக்கிடமிருந்து மூன்றுமுறை அழைப்புகள் வந்தது.

    மருத்துவமனை இருந்த தெருமுனையில் காரை நிறுத்தினான் மகேந்திரன்.

    சித்ரா காரிலிருந்து இறங்கிவிட்டு, “இன்னொருமுறை அவர்கிட்டர்ந்து கால் வந்தா, கார் மேல ஸ்க்ராட்ச் ஆயிடும்னு கவலைபடாம இன்டர்நெட்ல எதையாச்சும் பண்ண சொல்லுங்க. ஸ்க்ராட்ச் தானே! மண்ணை அள்ளிப் பூசி  சரி பண்ணிக்கலாம்! ” என்று கூறிவிட்டு, குழந்தையைத் தூக்கிக்கொண்டு அந்த இருட்டில் தனியாக மருத்துவமனைக்கு நடந்து சென்றாள்.

    Share
  • சுழற்சி

    மாதவன் இளங்கோ

    சென்னை வடபழனியில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் இருந்த அந்த வீடு, கிட்டத்தட்ட ஒரு வருடம் நான்கு நாட்களுக்கு முன்பு அது இருந்த அதே நிலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது.

    இது நிச்சயம் என்னுடைய கதை அல்ல. நான் மேலே குறிப்பிட்ட அந்த வீட்டில், ஒரு வருட காலமாக வசித்து வந்த கார்த்திக் – திவ்யா தம்பதியினரின் கதை.

    அன்று அந்த வீட்டின் ஒரு மூலையில் புத்தகக் குவியல், மறு மூலையில் பாத்திரக் குவியல், இன்னொரு மூலையில் இருந்த திவானின் மீது கண்ணாடிப் பொருட்கள் என்று வகைப்படுத்தி வைத்துக்கொண்டிருந்தனர் கார்த்திக்கும், திவ்யாவும்.

    இது தவிர, பலதரப்பட்ட கடைகளின் பிளாஸ்டிக் உறைகள் –

    உடைந்துபோன பென்சில், தலை வேறு முண்டம் வேறாகக் கிடக்கும் மைதீர்ந்த பேனாக்கள், ஸ்கெட்ச் போன்ற எழுதுபொருட்கள் –

    கம்பிவடங்கள், தேய்ந்து போன குறுந்தகடுகள், தொலைந்து போய் விட்டதாய் அவர்கள் நினைத்துக்கொண்டிருந்த உடைந்து போன தொலையியக்கி ஒன்று, என்றைக்கோ உயிரை விட்டிருந்த மின்கலங்கள் போன்ற மின் கழிவுகள் –

    வெவ்வேறு அளவிலான அட்டைப்பெட்டிகள், நைந்து போன கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள், அறிமுக அட்டைகள், தொலைபேசி கட்டண ரசீதுகள், கடன் அட்டை கணக்கு அறிக்கை போன்ற காகிதக் குப்பைகள் –

    இப்படி அனைத்து வகையான எண்ணிலடங்கா குப்பைகள் அந்த வீடெங்கும் இறைந்து கிடந்தன.

    என்றோ படித்து முடித்துவிட்டுப் பரண் மேல் போட்டு வைத்திருந்த  புத்தகங்களை எடுத்து தூசுதட்டி, புத்தகக் குவியலின் மீது எறிந்து கொண்டு இருந்தான் கார்த்திக். அவன் ஒவ்வொரு முறை எறிந்த போதும் புத்தகக் குவியலைச் சுற்றி இருந்த தூசிப்படலம் சீற்றத்துடன் மேலெழுந்து, சில நொடிகளில் வலுக்குன்றி மெதுவாய் அடங்கியது. ஒரு சில கனத்த புத்தகங்களை எறிந்தபோது உருவான தூசிச்சுனாமி அவன் நாசிவரை சென்று சீண்டிப் பார்த்தது.

    “ஏன் இப்படி புக்ஸ எல்லாம் தூக்கிப் போட்டுட்டே இருக்க?” என்று மூக்கை விரல்களால் பொத்தியபடி கேட்டுக்கொண்டே சமயலறையில் இருந்த இரண்டு ஒட்டா தவாக்களை கொண்டு வந்து பாத்திரப் பகுதியில் வைத்தாள் திவ்யா.

    அன்றைக்கு மட்டும் முப்பத்து மூன்றாவது முறையாக தும்மிவிட்டு, “அதுக்கென்ன பா. பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வந்து எல்லாம் ப்ராபரா எடுத்து பேக் பண்ணிடுவாங்க. நாம கேடகரைஸ் மட்டும் பண்ணா போதும்” என்றான் கார்த்திக்.

    “அதுக்காக புக்ஸ போயி யாராவது தூக்கிப் போடுவாங்களா?”

    “ஏன் சாமி கண்ண குத்துமா?” என்று கடவுளை வம்புக்கு இழுத்தான் கார்த்திக்.

    “இல்ல. சரஸ்வதி சபிச்சுடுவா. அடுத்த பிறவியில உனக்குப் படிப்பே வராது.” என்று புன்னகைத்துக் கொண்டே குழந்தைத்தனமாக அச்சுறுத்தினாள் திவ்யா.

    “அது சரி. அடுத்த பிறவிக்கு பயந்துகிட்டு மேல கீழனு ஏறி எறங்கிட்டு இருந்தா, இந்தப் பிறவியில என் முதுகு என்ன ஆகறது?”

    “ஆளவிடு சாமி. உன் லெக்சர் செஷன ஆரம்பிச்சிடாத.” என்று நொந்துகொண்டவளிடம் அங்கே தூசிபடிந்து கிடந்த ‘உடைந்த நிலாக்கள்’ என்ற புத்தகத்தை எடுத்துக் காட்டினான் கார்த்திக்.

    “ஹே, திவி, இந்த புக் உனக்கு நியாபகம் இருக்கா?”

    “ஒ, யா. நாம இங்க வந்த பர்ஸ்ட் டே வாங்கினதுன்னு நெனெக்கிறேன்.”

    “எஸ். அன்னைக்கு நைட் நாம ரெண்டு பேரும் சேர்ந்து இத படிச்சோம்.”

    “யா. அப்ப நீ பொயெடிகா சொன்னது கூட எனக்கு நியாபகம் இருக்கு. ‘உடைந்த நிலாக்களைப் பற்றி வாசிக்கும் உடையாத நிலாக்கள்’”.

    காதலை எதிர்த்த தம் குடும்பங்களைத் துறந்து, திருமணம் செய்து கொண்ட அந்த நிலாக்களின் நினைவுகள் ஒரு வருடம் பின்னோக்கிப் பயணித்தது.

    “நாம பர்ஸ்ட் என்ன வாங்கினோம்னு நியாபகம் இருக்கா திவி உனக்கு?”

    “ஐ திங்க் ஃபேன். அந்த டைம்ல பயங்கர வெயில். சோ, பர்ஸ்ட் ஃபேன் வாங்கிட்டு, அந்த எலக்ட்ரிகல்ஸ் கடைலயே லைட்செல்லாம் வாங்கிட்டு வந்து நாம ரெண்டு பேரும் சேர்ந்து பிக்ஸ் பண்ணோம்.”

    அவள் குறிப்பிட்ட அன்றைய தினம் அந்த வீட்டில் இருந்தவற்றை மிக எளிதாகப் பட்டியலிட்டு விடலாம்.

    இரண்டு பெட்டிகள். ஒரு பை.

    இரண்டு தலையணைகள். ஒரு மெத்தை. அதுவும் கூட தரையில்தான் கிடந்தது.

    மெத்தைக்கு அருகே இரண்டு தண்ணீர் பாட்டில்கள்.

    உடைந்த நிலாக்கள் புத்தகம், அதைப் படித்துக்கொண்டிருந்த அந்த இருவர். கொஞ்சம் சிரிப்பு. நிறைய சோகம்.

    அன்று மட்டும் திவ்யா அவளின் பெற்றோரையும், தம்பியையும் நினைத்து ஒரு பத்து முறையாவது அழுதிருப்பாள். அன்று மட்டுமல்ல, அவள் அழுவதும், அவன் அவளை அணைத்துத் தேற்றுவதும் நாள்தோறும் நடந்துகொண்டுதானிருந்தது.

    காதலில் வெற்றி கிட்டினாலும் கிட்டத்தட்ட வெற்றிடத்தில் ஆரம்பித்த அவர்களின் வாழ்க்கையில், சிறிது சிறிதாகப் பொருட்களும், மனிதர்களின் அன்பும் வந்து குவிந்து கொண்டிருந்தன.

    முதலில் சமையலறை நிரம்பியது. அடுத்ததாகப் படுக்கையறை, பின்னர் வரவேற்பறை என்று படிப்படியாக ஒவ்வொரு அறையிலும் பொருட்கள் பல்கிப் பெருகியது.

    முதலில் கல்லூரி நண்பர்கள் வந்தார்கள், பின்பு உடன் பணிபுரிபவர்கள் வந்து வாழ்த்தினார்கள். அவனது சகோதரி வந்தாள்; அவளது சகோதரன் வந்தான். இருவரது சித்தி சித்தப்பாவும், அத்தை மாமாவும் வந்தார்கள். அவ்வளவு ஏன், அவளது பாட்டி கூட வந்துவிட்டாள்.

    ஆனாலும் அவளின் அழுகை நின்றபாடில்லை. அவனுக்கும் தேற்றுவது சலிக்கவில்லை. அவளுடைய அழுகைக்கான காரணத்தைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

    ஒரு புரோகிதன் இன்னொரு புரோகிதனின் மகளை மணக்கலாம். ஒரு நாவிதன் இன்னொரு நாவிதனின் மகளை மணக்கலாம். ஒரு வைசியன் இன்னொரு வைசியனின் மகளை மணக்கலாம். ஆனால் ஒரு மென்பொருள் வல்லுநரான அவன், இன்னொரு மென்பொருள் வல்லுநரின் மகளான அவளை விரும்பியது தவறாம். ஏனென்றால் அவன் சத்ரியன் மகனாம். இன்னும் சொல்லப்போனால், அவளே கூட ஒரு மென்பொருள் வல்லுநர் தான். இந்தப் பாழாய்ப்போன சமூகத்தின்  தர்க்கம் எங்கோ இடிக்கத்தான் செய்கிறது.

    திருப்பதி, மதுரை, வேளாங்கண்ணி போன்ற வெளியூர்களுக்கும், உள்ளூரிலேயே இருக்கும் மயிலாப்பூர், திருவல்லிகேணி போன்ற இடங்களுக்கும் அவர்கள் சென்று வந்ததனால், கடவுளர் படங்களால் பூஜையறை (பூஜை அலமாரி என்று தான் சொல்லவேண்டும்) நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பொம்மை, சிலையென்று வேறு வாங்கியதில், கிட்டத்தட்ட நவராத்திரி கொலு வைக்குமளவிற்கு அவை பெருகிவிட்டதால் இட நெருக்கடியின் காரணமாகப் பரணுக்கு புலம்பெயர்ந்துவிட்டன.

    அந்த இளம் தம்பதியினர் உதகை, கொடைக்கானல், ஏற்காடு போன்ற ஊர்களுக்குச் சென்றதாகத் தெரியவில்லை.

    இரவு நேரங்களில் பலமுறை தாம்பரத்திலிருக்கும் அவளது வீட்டிற்கு மிக அருகே சென்று காருக்குள் இருந்தபடியே, உயர்த்தப்பட்ட ஜன்னலினூடே அவளது தாயைப் பார்த்துவிட்டு வந்து, அதைப்பற்றி இரவு முழுவதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். அந்தப் பேச்சுகளுக்கிடையே அவளுடைய அழுகைச் சத்தம் அடிக்கடி எட்டிப் பார்க்கும்.

    ஒருநாள் கார்த்திக்கின் தாயும் தந்தையும் வந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் இவர்களுக்கு அப்படியொரு திகைப்பு; அப்படியொரு களிப்பு. அவள் விதம்விதமாய்ச் சமைத்தாள். இருவரும் அவர்களோடு சிரித்தார்கள்; மகிழ்ச்சியில் திளைத்தார்கள்; கொண்டாடினார்கள்.

    ஆனாலும், அவளின் அழுகை ஓய்ந்தபாடில்லை. அழும் நேரம் மட்டும் மாறியிருந்தது. அவன் அலுவலகத்திற்குச் சென்றவுடன் தனியாய் இருக்கும்போது மட்டும் குமுறினாள். அவனாவது நிம்மதியாய் இருக்கட்டுமே என்று நினைத்திருக்கலாம். பூஜை அலமாரியின் முன்பு நின்று மேலே (முதலில்) குறிப்பிட்ட ஊர்களின் பெயர்களைச் சொல்லி அங்கு வருவதாய் வேண்டி வேண்டி அழுதாள்.

    யாரேனும் வந்தால் அதீத மகிழ்ச்சியும், யாருமில்லாத நேரத்தில் அதீத துக்கமும் என்று அவளுடைய மனநிலை மாறி மாறிச் சுழன்று கொண்டே இருந்தது.

    கடைசியில் வந்தே விட்டார்கள் – அவளின் பெற்றோர்கள். அவள் அழுதாள். அவர்கள் தேற்றினார்கள். அவன் ஆனந்தத்திலும் அமைதியாய் கைகட்டி நின்றான். அவள் மீண்டும் அழுதாள். அவளது இத்தனை நாள் சிரிப்பின் ஆழத்தில் புதைந்து கிடந்தது என்னவோ துக்கத்தின் ஈரம் மட்டுமே. ஆனால், அன்றைய நாள் அழுகையின் ஆழத்தில் ஆனந்தமே புன்னகைத்தது. அவளது ஒவ்வொரு அழுகையின்போதும் துளித் துளியாய் வெளியேறிய துக்கத்தின் ஈரம், அன்று முழுவதுமாய் வெளியேறி விட்டது போலும்.

    கடந்த ஒரு வருடத்தில் பொருட்களின் எண்ணிக்கையும் மனிதர்களின் வரவும் அதிகரித்து விட்டிருந்தபடியால், மனதிற்கு நிறைய பிடித்திருந்தாலும் அந்த வீடு அவர்களுக்குப்  போதுமானதாய் இல்லை. அதனால் வேளச்சேரியில் அதை விட சற்றுப் பெரிய அளவிலான அடுக்கு வீடொன்றை வாடகைக்கு எடுத்து, அங்கு செல்வதற்காகத்தான் அன்றைக்கு அவ்வளவு பரபரப்பாகத் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

    நள்ளிரவு வரை பொருட்களை வகைப்படுத்தி வைத்துவிட்டு அவளின் பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டார்கள்.

    அடுத்தநாள் இருவரும் வந்தார்கள், கூடவே அவளுடைய தந்தை, தம்பி மற்றும் அவனுடைய நண்பனும் வந்திருந்தார்கள். அவர்கள் வந்த சில நிமிடங்களிலேயே ‘பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்’ வந்து எல்லா பொருட்களையும் அட்டைப்பெட்டிகளுக்குள் அடுக்கி வைத்து, அதன் மேல் வகை விவரத்துணுக்குகளை ஒட்டி, ஒவ்வொன்றாய் வெளியே எடுத்துக்கொண்டு போனார்கள். நம்பவே மாட்டீர்கள், ஐம்பது நிமிடங்களில் அனைத்தையும் நேர்த்தியாக முடித்து வீட்டைக் காலி செய்துவிட்டார்கள்.

    “என்ன இவ்ளோ சீக்கிரம் பேக் பண்ணி கொண்டுபோயிட்டாங்க?” என்று வியந்தாள் திவ்யா.

    “அதுக்குத்தான் ப்ரோபெஷனல்ஸ் வேணுங்கறது. சரி, மத்தவங்கல்லாம் போகட்டும். நாம கடைசியா ஒருமுறை செக் பண்ணிட்டு பைக்ல  போய்டலாம்” என்று கூறி மற்ற அனைவரையும் அனுப்பிவைத்துவிட்டு, இருவரும் சோகம் ததும்பிய முகத்தோடு வீட்டைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

    நான் மேலே குறிப்பிட்டிருந்த குப்பைப் பட்டியலில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை இன்னும் இங்கேயும் அங்கேயும் இறைந்து கிடந்தன. வீட்டைக் காலி செய்த பின்பு எக்காரணத்தைக் கொண்டும் வீட்டைப் பெருக்கவோ, கழுவித் துடைக்கவோ கூடாது என்று கண்டிப்பான உத்தரவைப் போட்டிருந்தார் வீட்டு உரிமையாளர்.

    “ரொம்ப ராசியான வீடு கார்த்திக். போறதுக்கே மனசே இல்ல. எவ்ளோ நல்ல விஷயமெல்லாம் நடந்திருக்கு இந்த வீட்ல…” என்றாள் திவ்யா.

    “என்ன பண்றது. யாராவது வந்தா தங்கக் கூட இடமில்லையே.”

    “இந்த ஒரு வருஷத்துல நாம நெனெச்செ பாக்காதது எல்லாம் நடந்துடுச்சி கார்த்திக். நம்ம மேரேஜ். நீ செத்தாலும் உன்ன பாக்க வரமாட்டேன்னு சொன்ன என் அப்பா இன்னைக்கு நாம வீடு காலி பண்றதுக்கு வந்து ஹெல்ப் பண்ணிட்டு இருக்கார். நாம இந்த வீட்டுக்கு வந்தப்ப எவ்ளோ காலியா இருந்திச்சி. இன்னைக்கு ஒரு டெம்போவே பத்தாத அளவுக்கு நிரம்பிடிச்சி. இவ்ளோவும் யாரோட ஹெல்பும் இல்லாம பண்ணியிருக்கோம். உன்னோட ஹார்டு வொர்க் கார்த்திக். எவ்ளோ பெயின். எவ்ளோ சந்தோசம்.”

    “லைபே அப்படித்தான் திவி. சந்தோஷம், துக்கம், அப்ஸ் அண்ட் டவுன்ஸ், நல்லது, கெட்டதுனு சுத்திட்டே தான் இருக்கும். இப்படி மாறி மாறி வந்து நான் இருக்கேன்னு உணரவெக்கும். இதோ இந்த ஃபேன்-லர்ந்து வர்ற காத்து வெதருக்கு ஏத்த மாதிரி சூடாவும், சில்லுனும் மாறி மாறி வீசி ஃபேன் இருக்கறத உணர்த்தறது மாதிரி.”

    “ப்பா… தத்துவம் பா. ரொம்ப புக்ஸ் படிக்காதன்னு சொன்னா கேக்கறியா? இன்னைக்கு டெம்போல பாதி எடத்த உன் புக்ஸ்தான் அடைச்சிருக்கு. ” என்று கூறிவிட்டு ஹாலுக்குள் நுழைந்தவள் சடாரெனத் திரும்பி, “கார்த்திக், ஃபேனை மறந்துட்டோமே?” என்று கேட்டாள்.

    “ப்ரீயா விடு திவி. ஒரு வருஷம் இருந்திருக்கோம். ஃபேன், லைட்டெல்லாம் இங்கயே விட்டுடலாம். ஓனர் வேற தங்கமான மனுஷன்.” என்றான்.

    “போப்பா. நாம மொத மொதல்ல வாங்கினதே இந்த ஃபேன் தான். அத பிக்ஸ் பண்ண ஸ்டூல் கூட கிடையாது அன்னைக்கி. இப்போ பாரு. எல்லாம் இந்த பேன் வந்த ராசி. அதுக்கு பதிலா ஓனருக்கு எதாச்சும் காஸ்ட்லியா கிப்ட் வாங்கிக் கொடுத்திடலாம். ப்ளீஸ்…” என்று கெஞ்சினாள்.

    “ஒகே ஒகே. சென்டி போடாத. கழட்டி எடுத்திட்டுப் போய்டலாம்” என்று கூறிவிட்டு சுவிட்சை தட்டினான்.

    கார்த்திக் மின்னோட்டத்தை நிறுத்திய அடுத்த நொடி –

    அவளின் சுக துக்கங்களில் அவளுக்கே தெரியாமல் பங்கெடுத்து, ஒவ்வொருமுறை அவள் அழுதபோதும் அவளது கண்ணீரின் ஈரம் தாங்கிய அந்த அறையின் காற்றை, சுழற்றி சுழற்றி வேகமூட்டி புறந்தள்ளி, அவளது தாயிடம் கொண்டுபோய் சேர்க்கச் சிறு உதவிபுரிந்த என்னை இங்கேயே விட்டுவிட்டு போய்விடுவாளோ?‘ என்று அதுவரை எண்ணி ஏங்கிச் சுழன்றுகொண்டு இருந்த நான், குதூகலத்துடன் என்னுடைய சுழற்சியை படிப்படியாகக்  குறைத்துக் கொண்டு, அவர்களோடு புறப்படத் தயாரானேன்.

    Share
  • அமைதிகளின் சத்தங்கள்..

    மாதவன் இளங்கோ

     

    இரைச்சல் விழுங்கிய

    இசையின் அமைதி..

    பெரும்கூட்டத்தில் சிக்குண்ட

    தனிமைவிரும்பியின் அமைதி..

    மூடத்தனங்களுக்கு இடையே

    மேதைமையின் அமைதி.. (more…)

    Share