Tag: நிர்மலா ராகவன்

  • நலம் . . நலமறிய ஆவல் … (22)

    நிர்மலா ராகவன்

    காதலாவது, கத்தரிக்காயாவது!

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-1-2-1

    தந்தையை இழந்திருந்த கமலியின் தாய் `அன்பு’ என்பதையே அறியாது, யார் வீட்டிலோ வளர்ந்திருந்தாள். அவள் வளர்ந்த விதத்திலேயே மகளையும் வளர்த்தாள். நான்கு மாதக் குழந்தையையே அடித்து நொறுக்குவாள்.

    பள்ளிக்கூடத்துக்குச் சென்று வந்தாலும், பத்து வயதில்கூட கமலிக்கு எழுதப் படிக்க வரவில்லை. யார் எது பேசினாலும், முதுகில் அடி வைத்தால்தான் அவளுக்குப் புரியும் என்ற நிலை வந்தவுடன்தான் விழித்துக்கொண்டார் அவளுடைய தந்தை. விடுமுறை நாட்களில் எங்கள் வீட்டில் கொண்டு விட்டுவிட்டுப் போய்விடுவார். தன் பொருளாதார முன்னேற்றத்தையே பெரிதாக நினைத்துக் கொண்டிருந்தவருக்கு குழந்தைகள் எப்படி வளர்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்தத் தோன்றவில்லை.

    நான் சாதாரணமாகப் பேசினாலே நடுங்கினாள் அச்சிறுமி. சற்றே பெரியவளாக இருந்த என் மகள் பொறுப்பில் அவளை விட்டுவிட்டு தான் ஒதுங்கிக்கொண்டேன். மணிக்கணக்காக ஒரே இடத்தில் உட்கார்ந்து சமையலுக்கு உதவியாக இருப்பாளா, ஒரு சிறு பெண்! (நாங்களெல்லாம் அந்த வயதில் எப்படியெல்லாம் தப்பித்து ஓடப்பார்த்தோம்!) அவளைப் பார்த்துப் பரிதாபப்படத்தான் முடிந்தது என்னால்.

    அந்தக் கமலி காதல் கல்யாணம் புரிந்துகொண்டாள் — பதினெட்டு வயதிலேயே. உயரமாக, மூக்கும் முழியுமாக, சிவந்த நிறம் கொண்டவள் அவள். காதலனுடன் அதிகம் பழகியதில்லை. ஆனால், தாயின் சுடுசொற்களும், அடியும் மட்டுமே சிறுவயதிலிருந்து அறிந்திருந்தவளுக்கு இளைஞன் ஒருவன் தன்னை விரும்புகிறான் என்பதே பேரின்பத்திற்கு ஆளாக்கியது.

    கமலியின் தந்தை அந்தஸ்தில் அவனைவிட சற்று உயர்ந்தவர். `என் குழந்தைகளுக்கு எல்லாவிதத்திலும் சுதந்திரம் கொடுத்திருக்கிறேன்!’ என்று பெருமைப்பட்டுக் கொண்டவருக்கு, மகள் தானே ஒரு துணையைத் தேடிக்கொண்டதில் நிம்மதிதான்.
    `இவளை மணந்தால், என் நிலையும் உயர்ந்துவிடும்!’ என்று திட்டம் போட்டிருந்தான் தினகரன். அது நடக்கவில்லை. மகளையே கவனிக்காதவர் மருமகனையா முன்னுக்குக் கொண்டுவரப்போகிறார்!

    `ஏமாந்து விட்டோமே!’ என்ற வன்முறையில் இறங்கினான்.

    `ஏனோ என்னைப் பார்த்தால், எல்லாருக்கும் அடிக்கத்தான் தோன்றுகிறது!’ என்று வாய்திறவாமல் எல்லா அடி, உதையையும் பொறுத்துப்போனாள் கமலி.

    இரண்டு குழந்தைகளைப் பெற்றபின், அதற்கு மேலும் பொறுக்க முடியாது, அப்பாவை நாடிப்போனாள் கமலி. அவர் அதிர்ந்தார். `விவாகரத்து!’ என்றார். கமலி ஒப்பவில்லை. திரும்பவும் அம்மாவிடம் வந்து இடிபட வேண்டுமா!

    மனைவியை வதைக்கும் பொதுவான கணவர்களைப்போல், தினகரன் அவளைத் தேடி வந்தான். தன் தவற்றுக்கு வருந்தி அழுதான். மனமிளகி, அவனுடன் திரும்பப் போனாள் கமலி.

    அவனுடைய மனமாற்றமும், அன்பும் சொற்ப தினங்களே நீடித்தன. மீண்டும் அடிதான் — இம்முறை சற்று மோசமாகவே. `என்னைவிட்டுப் போகும் அளவுக்கு உனக்குத் துணிச்சலா?’ என்று கத்தினான். சில தினங்கள் பொறுத்துப் பார்த்துவிட்டு, மீண்டும் தாய் வீட்டுக்குப் போனாள் கமலி.

    அம்முறை என்னிடம் அவளை அழைத்து வந்தார் அவளுடைய தந்தை.

    “Can’t you live without a man? (உன்னால ஒரு ஆண் துணை இல்லாம வாழ முடியாது?)” என்று அவளைக் கேட்டேன், எரிச்சலுடன். அவளுடைய குழந்தைகளும் உணர்வுபூர்வமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதையும் பார்த்திருந்தேன்.

    “முடியும்?” என்றாள், சவால் விடுவதுபோல். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே கணவனை நாடிப்போனாள். தந்தையோ இடிந்துபோனார்.

    சராசரி ஐந்து முறை இம்மாதிரி நடக்கும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். திடீரென கிடைக்கும் சுதந்திரமான வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று பெண்களுக்கு உண்டாகும் கலக்கமே காரணம். உடலிச்சையை எப்படி சமாளிப்பது என்ற குழப்பமும் ஒரு மனைவி தன்னை வதைக்கும் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து, அனுதினமும் செத்துப் பிழைக்க காரணமாக அமைகிறது. (பல காலம் பொறுத்திருந்து விவாகரத்து பெற்ற ஒரு பெண்மணி என்னைத் தேடிப்பிடித்து அழைத்துத் தெரிவித்தது).

    ஒருவாறாக, விவாகரத்துக்குச் சம்மதித்தாள் கமலி. `அவன் குழந்தைகள் எனக்கு வேண்டாம்!’ என்றுவிட்டாள்.

    இப்போது, தனியாக ஓரிடத்தில் தங்கிக்கொண்டு, வாடகைக்கார் ஓட்டும் தொழில் செய்கிறாள். ஒருவழியாகக் கிடைத்த சுதந்திரத்தை அனுபவிக்கிறாள். அவள்கீழ் சில ஆண்கள் வேலை செய்கிறார்கள். பேச்சுத்திறனில் கெட்டிக்காரியாகிவிட்டாள். `காதலாவது, கத்தரிக்காயாவது! அதெல்லாம் சினிமாவுக்குத்தான் சரிப்படும்!’ என்ற மனப்போக்கு ஏற்பட்டுவிட்டது.

    உண்மைதான். தன்னைவிட உயர்ந்த நிலையில் இருக்கிற ஒரு பெண்ணை `காதல்’ என்ற பெயரில் மயக்கி மணந்துகொண்டு, அதன்பிறகு இருவரும் ஒருவரையொருவர் வெறுக்கும் நிலைக்குப் போய்விட்டால், அது எப்படி காதலாகும்?

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (21)

    நிர்மலா ராகவன்

    மனதை மயக்கும் மருந்துகள்

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-1-2

    கடந்த இரண்டு மாதங்களில் நான் சந்தித்துப் பேசிய மூன்று பெண்மணிகள் குறுகிய காலத்தில் மிகப் பருமனாக ஆகியிருந்தார்கள்.
    `எனக்கு ஐம்பது வயதாகிவிட்டதே! மெனோபாஸ்! ஓயாமல் தலைவலி. இழுப்புவேறு! அதனால் ஏதோ மருந்து சாப்பிடுகிறேன்’.

    முப்பது வயதே ஆகிய இசை ஆசிரியையான சீதாவின் பிரலாபம்: `அடிக்கடி சளியும் இருமலும் வருகின்றன. இப்படியே இருந்தால், நான் எப்படி பாட்டு வகுப்புகள் நடத்துவது?’

    மலேசிய நாடு தழுவிய நாட்டியப் போட்டி ஒன்றில் முதல் பரிசு வாங்கி, அத்துறையில் பட்டம் பெற்றவள் லதா. ஐந்தாண்டுகள் கழித்து அவளைப் பார்த்தபோது, `காலில் தாங்க முடியாத வலி. ஒரு வருடம் ஆடக் கூடாது என்கிறார் டாக்டர். மருந்து சாப்பிட்டால்தான் ஆடவே முடிகிறது!’ என்றாள்.

    இவர்களிடையே இருந்த ஒற்றுமை: மூவருக்குமே வெவ்வேறு மருத்துவர்கள் ஸ்டீராய்டு (Steroid) மருந்துகளைப் பரிந்துரைத்திருந்ததுதான்.

    அது என்னது அது, ஸ்டீராய்டு?

    நம் உடலில் இயல்பாகச் சுரக்கும் ஹார்மோன் அது. உடலில் உள்ள உறுப்புகள், திசு, உயிரணுக்கள் ஆகியவை தம் வேலையைச் சரிவரச் செய்ய வேண்டாமா? அதற்குத்தான் இவை உபயோகப்படுகின்றன. இந்த ஹார்மோன் சரியாகச் சுரக்காதபோது, பல உபாதைகள் ஏற்படும்.

    அவைகளைப் போக்கவென மனிதனால் தயாரிக்கப்பட்ட மருந்தாக (வேதியப் பொருள் கலக்கப்பட்ட) அதையே உட்கொள்ளும்போது, மந்திரம் போட்டதுபோல உடல் தொல்லை காணாமல் போய்விடும். அடுத்த முறை அதே உடல் உபாதைக்கு ஆளாகும்போது, ஒருவரை வலியப்போய் அதையே நாடும்படி செய்துவிடுகிறது. சுருங்கச் சொன்னால், ஸ்டீராய்டு ஒரு போதைப்பொருள்.

    கஞ்சா, ஹெரோயின் மற்றும் மது வகைகள் உடனுக்குடனே ஒருவரின் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்த, போதை உண்டாகும் என்பது தெரிந்த சமாசாரம். ஒருவர் குடித்தவுடன் தன் வருத்தம், கவலை, ஏமாற்றம் எல்லாவற்றையும் மறந்துவிட்டதுபோல் சில கணங்கள் இருப்பார். ஆனால், அவைகளின் அளவை அதிகரித்துக்கொண்டே போனால்தான் அவர் தான் நாடும் மனக்கிறக்கத்தை அடைய முடியும்.

    ஸ்டீராய்டு அப்படியல்ல. மனப்போக்கில் ஒரு மாற்றமும் இருக்காது. கிறக்கமும் கிடையாது — சில காலம்வரை. சில ஆண்டுகளுக்குப்பின் மெதுவாகத் தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்கும்.

    கதை 1: விக்னேஸ்வரி பதின்ம வயதிலிருந்தே ஆஸ்துமாவால் அவதிப்பட்டவள். சுமார் முப்பது வயதானபோது மருத்துவர் ஸ்டீராய்டு கொடுத்ததில், இதுவரை பாடாய்படுத்திய வியாதி குணமானது போலிருந்தது.

    `சரியாகப் போகும்வரை இம்மருந்தை உட்கொண்டுவிட்டு, பிறகு விட்டுவிடலாமே!’ என்றுதான் நினைத்திருந்தாள். அது முடியவில்லை. இப்பழக்கம்தான் ஒருவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுமே! அடுத்த முறை தானே அதைத் தேடிப் போகையில் சற்று அதிகமான அளவு தேவைப்பட்டது.

    ஆரம்ப காலத்தில், விக்னேஸ்வரிக்கு அசுர பலம் வந்ததுபோல் இருந்தது. `SUPER HUMAN!” என்று பெருமிதமாக இருந்தது. எல்லாரும் தன்னைப்போல் இல்லாமல் இருக்கிறார்களே என்ற ஏளனம் எழுந்தது. பிறரை மரியாதைக்குறைவாக நடத்த ஆரம்பித்தாள். சிடுசிடுப்பு, அநாவசிய சந்தேகம் என்று பல பக்கவிளைவுகள் ஏற்பட்டதில் குடும்ப அமைதி கெட்டது. கை கால்களில் வீக்கம். மொத்தத்தில் உடல் பூராவும் பருத்தது.
    `இப்பழக்கத்தை விடு!’ என்று யார் சொன்னாலும் கேட்கும் நிலையில் அவள் இருக்கவில்லை.

    இருபது ஆண்டுகள் கழிந்ததும், இரண்டு கை முட்டிகளும் மூடியபடி இருந்தன. திறக்க முடியவில்லை. `இனி இப்பழக்கத்தை விட்டால், உங்கள் உயிர் போய்விடும். அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள்!’ என்றார்கள் மருத்துவர்கள். சுமார் ஓராண்டுகாலம் படுத்த படுக்கையாக இருக்க நேரிட்டது.

    அந்தச் சமயம் பார்த்து, `நம்மை இவள் எப்படியெல்லாம் அவமானப்படுத்தினாள்!’ என்று பிறர் இவளிடம் சொல்லிக்காட்ட, `கதறிக் கதறி’ அழுததாகப் பிறர் தெரிவித்தார்கள்.

    இப்போது விக்னேஸ்வரியால் அதிகம் நிற்கவோ, நடக்கவோ முடிவதில்லை. பேனா பிடித்து எழுதக்கூட முடியாது. காலம் கடந்து வருந்துகிறாள்.

    நான் முதலில் குறிப்பிட்ட மூன்று பெண்களிடமும் இக்கதையைச் சொல்லி, `வேண்டாம் இந்தப் பழக்கம்!’ என்று மன்றாடினேன்.

    முதலில் சற்று பயந்தாலும், எல்லாரும் ஒரே பதிலைத்தான் கூறினார்கள்: `உடல்நிலை உடனே சீராகி விடுகிறதே!’

    கதை 2: எனக்கு ஐம்பது வயதானபோது, H.R.T (Hormone replacement therapy) என்று நான் கேளாமலேயே ஒரு மருத்துவர் என்னை அதைச் சாப்பிடும்படி பல முறை வற்புறுத்தினார். `இருதய நோய் வராது!’ என்றார். நான் கொஞ்ச காலம் சாப்பிட்டேன். முகத்தில் முடி வளர ஆரம்பித்தது.

    சில மாதங்களுக்குப்பின் அமெரிக்கா செல்ல நேரிட்டது. அங்குள்ள மருந்துக்கடையில் மருந்துச் சீட்டைக் காட்டியபோது, `இது தடை செய்யப்பட்ட மருந்து!’ என்றார்கள். எனக்கு ஒரே அதிர்ச்சியும், கோபமும். ஏனெனில், அங்கு தயார் செய்த மருந்தைத்தான் பிற நாடுகளுக்கு அனுப்புகிறார்கள்!

    அது நல்லதல்ல என்று தயாரிப்பாளர்களுக்குத் தெரியாமலில்லை. நம் நாட்டில்தான் சட்டம் நமக்கு அனுகூலமாக இல்லை, பிற நாட்டு மக்கள் எப்படிப் போனால் நமக்கென்ன என்ற மெத்தனம்! பெருமளவில் தயாரித்த மருந்துகள் வீணாகிவிட்டால், நஷ்டமாகிவிடுமே என்ற கவலை அவர்களுக்கு.

    நாடு திரும்பியதும், என்னை எச்சரிக்கை செய்யவே வெளியிட்டதுபோல, `ஸ்டீராய்டு நீண்ட காலம் கழித்து தசைகளை பலகீனமாக்கிவிடும்,’ என்று தினசரி ஒன்றில் படித்தேன். முதல் வேலையாக மிச்சமிருந்த மாத்திரைகளைத் தூக்கிக் குப்பையில் எறிந்தேன்.

    நோய்வாய்ப்பட்டவர்களோ, வயது முதிர்ந்தவர்களோதான் இப்பழக்கத்திற்கு ஆளாகிறார்கள் என்பதில்லை. குழந்தை நடிகர்கள் வளர்ந்துவிட்டால் வாய்ப்பு போய்விடுமே என்று அவர்களுக்கு ஸ்டீராய்டு கொடுக்க பெற்றோரே வழிசெய்வதாகப் படித்திருக்கிறேன். எத்தனை காலம்தான் குழந்தை நட்சத்திரங்களாக ஜொலிக்க முடியும்! முகத்தில் முதுமை தெரிவதை மறைக்க முடியுமா?

    பதின்ம வயதினர் இப்பழக்கத்துக்கு ஆளானால் என்றுமே உயரமாக வளர முடியாது. உடல் வளர்ச்சி குன்றிவிடும்.

    மிகக் குறுகிய காலத்தில் புஜங்கள் திரண்டு, ஆணழகனாக ஆக வேண்டும் என்று `ஜிம்’மிற்குப் போகும் ஆண்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஸ்டீராய்டு மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொள்கிறார்கள்.

    `என் தசைகளைப் பார்!’ என்று அவர்கள் முதலில் பெருமிதம் கொள்ளலாம். ஆனால், நாளடைவில் கல்லீரல், இருதயம் போன்ற அவயவங்களில் நோய் வருகிறது. போதாக்குறைக்கு, விந்து குறைதல், ஆணுறுப்பு சிறுத்துப்போவது, தலையில் வழுக்கை, கை நடுக்கம், பெண்களைப்போன்ற மார்பகம் வளர்வது என்று பல பக்க விளைவுகள்.
    எதையுமே தவிர்க்க முடியாதபோது, `என்னை யார் மிஞ்ச முடியும்!’ என்ற களிப்பு மறையும்.

    மிஞ்சுவது, `நான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன்!’ என்ற சுயவெறுப்பும், கசப்பும்தான்.

    தொடருவோம்

    Share
  • மன்னிப்பு

    -நிர்மலா ராகவன்

    காலை ஏழு மணிக்குள் தலைக்குக் குளித்துவிட்டு, ஈரத்தலையில் ஒரு துண்டைச் சுற்றிக்கொண்டு, வாசலில் கிடந்த மலேசிய நண்பனை எடுக்க வந்தாள் பாரு.

    தொலைபேசி அழைத்தது.

    `யார் இவ்வளவு சீக்கிரம்?’ என்ற யோசனையுடன் உள்ளே போய், `ஹலோ, வணக்கம்!’ என்றாள் அசுவாரசியமாக.

    முகமன் சொல்லாது, “துர்கா போயிட்டாளாம்!” என்ற குரல் — தோழி கமலினியுடையது.

    “எங்கே?” என்று வாய்வரை வந்த கேள்வியை அடக்கிக்கொண்டு, எதுவும் பேசத் தோன்றாது வெறித்தாள் பாரு.

    `தொலைந்தாள்!’ என்று ஒரு அலாதி நிம்மதி எழுந்தது.

    அடுத்து ஏதேதோ பேசிக்கொண்டே போன கமலினியின் குரலில் மனம் பதியவில்லை.

    ஆருயிர்த்தோழி என்றெண்ணிய துர்கா! அப்படி ஒரு துரோகம் நினைப்பாளா தனக்கு?

    வாரம் ஒருமுறை கணவருடன் சிவன் கோயிலுக்குப் போகும்போதெல்லாம், அருகிலிருந்த அவள் வீட்டுக்குப் போவாளே! அப்போதெல்லாம் சிரித்துச் சிரித்துப் பேசியதெல்லாம் நாடகமா?

    “இனிமே அதோட வீட்டுக்கு என்னைக் கூப்பிடாதே!” என்று கண்டிப்பான குரலில், அதுவும் அஃறிணையில் கணவர் கூறியபோது ஆச்சரியமாக இருந்தது பாருவுக்கு. தொடர்ந்து, “க..டை!” என்ற கெட்ட வார்த்தையை அவர் பிரயோகித்தபோது, அப்படியெல்லாம் யாரையும் துச்சமாகப் பேசுபவர் இல்லையே என்று அவள் யோசனை போயிற்று.

    “ஏன்?”

    “கூப்பிடாதே. அவ்வளவுதான்!” என்று முரட்டுத்தனமாகக் கூறிவிட்டு, “பாட்டு பாடறாளாம், பாட்டு! அது ஒண்ணுதான் குறைச்சல்!” என்று முணுமுணுத்தபடி அப்பால் விரைந்தார்.

    பாரு, துர்கா இருவரும் ஆண்டு தவறாது, தியாகராஜ ஆராதனையை ஒட்டி நடக்கும் விழாவில் பஞ்சரத்ன கிருதிகளைப் பாடுவார்கள்.

    ஒருமுறை, துர்காவின் பாட்டில் ஏதோ தப்பு கண்டுபிடித்து, விளையாட்டாய் சிரித்துவிட்டாள் பாரு.

    துர்காவுக்கு வந்ததே ஆங்காரம்! “பேசாம பாடறதுன்னா பாடு. இல்லாட்டா, வாயை மூடிண்டு வீட்டிலேயே இரு!” என்று கட்டைக்குரலில் அலறிவிட்டு அவள் வெளியேறியபோது, கூடப் பாடுபவர்கள், நிகழ்ச்சியை நடத்துபவர்கள் எல்லாருமே விதிர்விதிர்த்துப் போனார்கள்.

    முதலில் அவமானமாக உணர்ந்தாள் பாரு.    பிறகு கணவர் அவளைக் கவனிப்பதேயில்லை, அவருடைய உத்தியோகம்தான் அவருக்கு மனைவி என்றெல்லாம் துர்கா தன்னிடம் குறைப்பட்டுக் கொண்டது நினைவிலெழுந்தது. `பாவம்! என்னிடம் அந்த ஆத்திரத்தைக் காட்டியிருக்கிறாள்!’ என்று, கொந்தளித்த மனதை சமாதானப்படுத்திக் கொண்டாள்.

    அதற்கடுத்த மாதம் ஒரு கச்சேரியில் துர்காவைப் பார்த்ததும், புன்னகையுடன் அவள் அமர்ந்திருந்த இடத்துக்கு விரைந்தபோது, தரையில் ஏதோ தேடுவதுபோல குனிந்து, அவளை தவிர்த்தது ஏன்?

    அடுத்தடுத்துப் பலமுறை அதேபோல் நடக்க,  “துர்காவுக்கு ஏனோ என்னைப் பிடிக்காம போயிடுத்து!” என்று குழந்தைபோல் கணவரிடம் முறையிட்டபோது, அவர் நிதானமாக, “அது நீ செஞ்ச எதனாலேயுமில்லே!” என்றார்.

    அடுத்து அவர் கூறியது!

    இவளா? இவளா!

    எவ்வளவு உயர்வாக எண்ணியிருந்தோம் தோழியைப்பற்றி!

    “நாம்ப கடைசியா அவ வீட்டுக்குப் போனோமே, அப்போ..,” முகத்தில் வேதனையும், அவமானமும் ஒருங்கே கொப்பளிக்க, அன்று நடந்ததை நினைவுகூர்ந்தார் அவர்.

    அடுத்த பல நாட்கள் அவருடைய வார்த்தைகளையே அசைபோட்டாள் பாரு.

    அந்தப் பாவி சிரித்து சிரித்துப் பேசியதெல்லாம் தன்னைப் பார்த்த பூரிப்பில் இல்லையா? தன் கணவரை வசப்படுத்தத்தானா?

    `மடியாகப் பூஜை செய்கிறேன் பேர்வழி’ என்று ரவிக்கை போடாது அரைகுறையாக உடுத்து, பரிமாறும்போது ஒரு கையால் லேசாகப் புடவையை விலக்கி, கண்ணால் வேறு சமிக்ஞை செய்வாளா ஒருத்தி?

    பாருவால் நம்ப முடியவில்லை. நம்பப் பிடிக்கவில்லை.

    “ஒரு வேளை புடவை நெகிழ்ந்துபோனதை நீங்கதான் தப்பா,” என்று, தானே நம்ப முடியாத ஒரு காரணத்தைக் கற்பித்துக்கொண்டபோது, “ஒங்கிட்டபோய் சொல்றேனே!” என்று கத்தினார் கணவர். “எனக்கென்ன அவ்வளவுகூடத் தெரியாதா? நமக்குக் கல்யாணமாகி எத்தனை வருஷம் ஆச்சு! கிளிபோல நீ பக்கத்திலேயே இருக்க..! அந்தக் கழுதை என்னை என்னன்னு நினைச்சிண்டது?”

    `இதை நீங்க எப்பவோ சொல்லியிருந்தா, நான் அவ்வளவு வேதனைப் பட்டிருக்க மாட்டேனே!’ என்று சொல்ல நினைத்து, தன்னை அடக்கிக்கொண்டாள் பாரு.

    முன்பே சொல்லியிருந்தால், `அவ அப்படி நடந்துக்கற அளவுக்கு நீங்க என்ன பண்ணினேள்?’ என்று தான் கேட்டுவிடுவோமோ என்று பயந்திருக்கலாம். இப்போது, மனைவி படும் வேதனையைப் பொறுக்காது உண்மையைச் சொல்லியிருக்கிறார், பாவம்!

    ஒரு ஆண் பெண்ணிடம் தப்பாக நடக்க முயற்சித்தாலும், பெண் ஆணிடம் அப்படி நடந்தாலும், அதை ரசித்து ஏற்க முடியாதவருக்கு ஆத்திரமும், அவமானமும், பயமும் ஏற்படுவது இயற்கைதானே!

    அதற்குப் பிறகு பாருவும் எந்த இசை நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. தற்செயலாக அவளைப் பார்க்க நேர்ந்தாலும், அவமானத்தால் இறுகிய உதட்டுடன் துர்கா விலகிவிடுவாள்.

    அப்படி ஒரு சந்திப்பின்பிறகு, “அந்தக் கழுதை அப்படியேதான் இருக்கு. வயசானதில கொஞ்சம் புத்தி வந்திருக்கலாம்!” என்று பாருவிடம் எகத்தாளமாகச் சொன்னவர், “என்னைப் பாத்துட்டு ஓடி வந்தா ஒன் சிநேகிதி. `ஐயோ! ஒங்களைப் பாத்து எவ்வளவு நாளாச்சு!ன்னு என் கையைப் பிடிக்க வந்தா!” அந்த நிகழ்ச்சியை நினைக்கும்போதே ஏற்பட்ட அருவருப்பில் உடலைச் சிலிர்த்துக்கொண்டார். “அப்போ நீ எங்கிட்ட வர்றதைப் பாத்தாளா? பயந்து ஓடிட்டா,” என்று சிரித்தார். “நல்லவேளை, நான் தப்பிச்சேன்!”

    “அவ ஹஸ்பண்ட் வேலை முடிஞ்சா கிளப், குடின்னு இருக்கிறவர். நீங்களோ, ஜாகிங், ஜிம் அப்படின்னு போய், இந்த வயசிலேயும் ஒடம்பை சின்னப்பையனாட்டம் வெச்சிண்டு இருக்கேள்!” என்று புகழ்வதுபோல், தன் அதிர்ஷ்டத்தை மெச்சிக்கொண்டாள் பாரு. “எதுவுமே தனக்குக் கிடைக்காட்டாதான் அது ஒஸ்தியாத் தோணும்!”

    “ஒனக்கு நான் சுலபமா கிடைச்சுட்டேனே! அதான் ஒனக்கு என்னோட அருமை புரியலியாக்கும்!” புன்சிரிப்புடன் அவளைச் சீண்டினார்.

    இந்தமாதிரி எவ்வளவு சின்னஞ்சிறு நிகழ்வுகள், நினைத்து நினைத்து ரசிப்புடன் லயிக்கும் வண்ணம்! இதையெல்லாம் தன்னிடமிருந்து பறிக்கப்பார்த்தாளே, துர்கா!

    பல வருடங்களாகியும், பாருவின் ரணம் பூரணமாக ஆறவில்லை.

    அந்தத் தோழிதான் இறந்துவிட்டாளாம்.

    இன்னும் ஒரே ஒரு சந்தேகம் பாக்கி இருந்தது.

    “எப்படி?” தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவளிடம் விசாரித்தாள்.

    “ப்ரெஸ்ட் கான்சர்!”

    வலி உயிர் போயிருக்குமே!

    உடலில் எத்தனையோ அங்கங்கள் இருக்க, சொல்லிவைத்தாற்போல் மார்பில் புற்றுநோய் வருவானேன்!

    `எங்களைத் தவறாகப் பயன்படுத்தத் துணிந்த உன்னிடம் நாங்கள் இருக்கமாட்டோம்!’ என்றுதான் அவை பழுதாகிவிட்டனவோ?

    துரோகத்திலேயே மிகக் கொடிது மித்திரத் துரோகம் எனபார்களே! ஒரு வேளை, அதன் விளைவோ?

    பாருவின் எண்ணப்போக்கில் ஒரு முட்டுக்கட்டை.

    முதலில் நெறிகெட்ட ஆசை, அது நிறைவேறாத ஆத்திரம், நெருங்கிப் பழகிய அப்பாவி சிநேகிதியின் வாழ்வைக் கலைக்கப்பார்த்தோமே என்ற குற்ற உணர்வு, இறுதியாக, இவர்களுக்குத் தன் உண்மை சொரூபம் தெரிந்துவிட்டதே என்ற அவமானம்.

    அதனால்தானே அவள் அப்படி விலகி, விலகிப் போனாள்!

    மனக்குமுறலைப் பிறரிடம் சொல்லி ஆற்றிக்கொள்ளவும் வழியில்லாதுபோக, உள்ளுக்குள்ளேயே குமைந்திருப்பாள். வடிகால் இல்லாத உணர்ச்சிகள் அவள் உடலையே அரித்தெடுத்திருக்க வேண்டும்.

    `பாவம், துர்கா!’ வாய்விட்டு வந்தன அவ்வார்த்தைகள்.

    பாருவுக்கு ஏதோ தோன்ற, மீண்டும் குளியலறைக்குப் போனாள். ஏற்கெனவே ஈரமாக இருந்த தலையில் தண்ணீரை மொண்டு விட்டுக்கொண்டாள்.

    “எத்தனை தடவை குளிப்பே?” வெளியிலிருந்த கணவர் குரல்கொடுத்தார்.

    “வேணுங்கிறவா செத்துப்போயிட்டா!” என்று தெளிவான குரலில் மறுமொழி கேட்டது மறுபுறத்திலிருந்து.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் … (20)

    நிர்மலா ராகவன்

    உணவின்மூலம் அன்பா?

    நலம்-1-2
    `இன்னும் நிறையச் சாப்பிடுங்கள்!’ கல்யாண வீட்டில் பந்தி உபசாரம். நம் வயிறு கொள்ளும்வரை சாப்பிட்டிருப்போம். இருந்தாலும், உபசாரம் செய்வார்கள்.

    எனக்குத் தெரிந்த ஓர் இசைக்கலைஞர் நான் ஒவ்வொரு ஆண்டு பார்க்கும்போதும் பல கிலோ எடை கூடியிருப்பார். முப்பத்தைந்து வயதுதான். அவர் மனைவி என்னிடம் முறையிட்டார்.

    “என்ன, இப்படி குண்டாகிக்கொண்டே போகிறீர்களே! இனிப்பு வியாதி வந்துவைக்கப்போகிறது!” என்று கவலைப்பட்டேன்.

    “என்ன செய்யறது, மாமி! அடிக்கடி கல்யாணக் கச்சேரி. அப்போதெல்லாம், ஒரேயடியாக உபசாரம் செய்து சாப்பிட வைக்கிறார்கள்!” என்றார், பரிதாபமாக.

    இப்படிப் பிறர் நம்மை உபசாரம் செய்வது உபகாரமில்லை. உபத்திரவம்தான். மறுநாள் நம் வயிறு கெட்டால், அவர்களிடம் போய் சண்டை போட முடியுமா? ஏதாவது வியாதி வந்தாலும், `நான்தான் சொன்னேன் என்றால், உனக்கெங்கே போயிற்று புத்தி?’ என்று திருப்பிக் கேட்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சசயம்?

    `ஏழைகள் என்றால் சோனியாக இருப்பார்கள். ஏனெனில் அவர்கள் சாப்பாட்டுக்குத் திண்டாடுபவர்கள். நமக்குத்தான் பணப்பிரச்னை இல்லையே!’ என்பதுபோன்ற எண்ணப்போக்குடன் தேவைக்கு அதிகமாகப் பலரும் சாப்பிடுகிறார்களோ? சற்று வசதியாக இருப்பவர்களைப் பார்த்தால் அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.
    நான் மருத்துவரிடம் போகும்போதெல்லாம், `உங்களுக்கு என்ன வயது?’ என்று கேட்டுவிட்டு, `எடையைக் குறைக்கலாம்!’ என்று ஆலோசனை வழங்குவார்கள்.

    என் அனுபவத்தில், நாற்பது வயதில் சாப்பிட்ட அளவு உணவையே நாற்பத்து ஐந்து வயதிலும் சாப்பிட்டாலும், கடினமான வேலை செய்யாவிட்டால் எடை அதிகரித்து விடுகிறது. (சமையல், வீட்டில் சிறிது வேலை செய்வது இதெல்லாம் கணக்கில்லை). இப்படியே ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளிலும் எடை கூடுவதால், சாப்பாட்டின் அளவைக் குறைத்தால்தான் எடை ஒரே சீராக இருக்கிறது.

    `நான் உயிர் வாழ்வதே சாப்பிடுவதற்குத்தான். அப்படியாவது என்ன அழகு வேண்டிக் கிடக்கிறது?’ என்பவர்களுக்கு: எடை அதிகரித்தால் முழங்கால் வலி, மூச்சிரைப்பு, அசதி என்று என்னென்னவோ உபாதைகள்! கூடவே, சோம்பல் அல்லது சிடுசிடுப்பு மற்றும் விரக்தி வேறு. ஆனால், விருந்தையே மருந்தாக எண்ணி அளவோடு உண்டால், சுறுசுறுப்பாக உணரமுடியும். `இளமையாக இருக்கிறீர்கள்!’ என்று யாராவது பாராட்டினால், அது போனஸ்தான்.

    கதை: சாருமதி கணவனிடம், `வேலை முடிந்து வரும்போது, இளநீர் வாங்கி வாருங்கள்!’ என்றாள்.

    புது மனைவி ஆயிற்றே! கணவனோ, இரண்டு இளநீர் வாங்கி வந்தான். முலாம்பழம், மாதுளை என்று சாருமதி எது கேட்டாலும், இரண்டாக வாங்கி வந்தான். அவளும் உடனுக்குடனே சாப்பிட்டுத் தீர்த்தாள்.

    விளைவு: அந்தக் கர்ப்பிணியின் உடல் வெகுவாகப் பருத்தது.

    “இப்படி இவள் சாப்பிட்டால், பேறு காலம் விரைவாக வந்துவிடும். அப்புறம் வயிற்றைக் கீறித்தான் குழந்தையை எடுக்கவேண்டி வரும்,” என்று அந்த இளைஞனின் தாயிடம் எச்சரிக்கை செய்தேன்.

    “அவளிடம் சொல்லி விடாதீர்கள்! பாவம், சின்னப்பெண்! என் மகனும் ஆசையாக வாங்கி வருகிறான்!” என்று பரிந்தாள்.

    சில மாதங்கள் கழித்து முகம் சிறுக்க, “நீங்கள் சொன்னபடியேதான் ஆயிற்று!” என்று ஒத்துக்கொண்டாள்.

    ஏழு மாதத்திலேயே சிஸேரியன் அறுவைச் சிகிச்சையால் குழந்தை பிறக்க, சாருமதியால் உடற்பயிற்சி எதுவும் செய்ய முடியவில்லை. வயிறு பருத்த நிலையிலேயே இருந்தது. அதற்காக அவள் கவலைப்படவுமில்லை.
    கணவன் தன்மீது காட்டிய அன்பைத் திருப்பியளிக்க ஆரம்பித்தாள் சாருமதி. அவனுக்குப் பிடித்ததாக சமைத்து, `இன்னும் கொஞ்சம், ப்ளீஸ்!’ என்று உபசாரம் செய்ததில், இப்போது அவனுக்கு இனிப்பு நோய்.

    The shortest way to a man’s heart is through his stomach (ஒரு மனிதனின் இதயத்தில் இடம் பிடிக்க மிகக் குறுகிய வழி வயிற்றின்மூலம்தான்) என்பது உண்மையோ, என்னவோ! சாப்பாட்டின் அளவுதான் அன்பின் அளவுகோல் என்பதுபோல் நடப்பது வேண்டாத விளைவுகளில் கொண்டுவிடும்.

    ஒருவர்மீது நமக்கு அன்பு என்றால், அவருக்கு நிறைய உணவு அளிப்பதுதான் என்று தம்பதிகள் மட்டுமல்ல, தாய்மார்களும் எண்ணுகிறார்கள். அதுவும் ஒரே குழந்தையாக இருந்தால் போயிற்று!

    ஒரே மகனது உடல் பருமனுக்குத் தான்தான் காரணம் என்று எந்தத் தாயும் ஒத்துக்கொள்ள விரும்புவதில்லை. `என் மகன் எப்பவும் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். ஏனோ ஓடியாடி விளையாட முடியவில்லை,’ என்று காலங்கடந்து மருத்துவர்களிடம் அழைத்துப்போய் குறை கூறி என்ன பயன்?

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் .. (19)

    நிர்மலா ராகவன்

    சிரிப்புத்தான் வருகுதையா!

    நலம்-1-2-2

    `சிரிப்பு ஆன்மாவை சுத்தப்படுத்தும்’ என்கிறது யூதர்களின் பழமொழி.

    `பெண் சிரிச்சாப் போச்சு..!’ தமிழர்களுக்குப் பழக்கமான பழமொழி.

    `பெண்குழந்தைகள் அதிகமாகச் சிரிக்கக்கூடாது. அப்புறம், வாழ்க்கையே சிரிப்பாச் சிரிச்சுப்போயிடும்!’ முதிய பெண்டிரின் அறிவுரை.

    `எப்பவும் கஷ்டம்தான். சிரிக்க என்ன இருக்கிறது?’ பொதுமக்கள்.

    இதனால் எல்லாம் சிரிப்பு என்று ஒரு மருந்து இருப்பதே மறந்து போய்விட்டது நம்மில் பலருக்கும். சிரிப்பதற்காகவென ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளில் சேர்ந்து, உடல் நலத்திற்காக பூங்கா போன்ற பொது இடங்களில், காரணமின்றி `ஹாஹ்ஹா` என்று சிரிக்கிறார்கள் இவர்கள்.
    `எதற்காகச் சிரிக்க வேண்டும்? அதனால் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா?’ என்பவர்களுக்குப் பதில்: பிரச்னைகள் தீராவிட்டாலும், அவைகளை ஏற்கும் பக்குவம் வரும். இதோ ஒரு உதாரணம்.

    என் தோழி மிஸஸ். ஃபாங் தானே கார் ஓட்டுவாள். எப்படி என்றெல்லாம் கேட்கக்கூடாது. `இவளுக்கு யார் லைசன்ஸ் கொடுத்தார்கள்!’ என்று பிற வாகன ஓட்டிகளை அயரவைக்கும் அவளுடைய திறமை.

    ஒரு நாள் காலை, மிஸஸ். ஃபாங் கோபமாக வந்தாள் நாங்கள் வேலை பார்த்த இடத்திற்கு. தானே ஆரம்பித்தாள். “நேற்று என் கணவர் பக்கத்தில் உட்கார, நான் காரை ஓட்டிப்போனேன்,” என்று ஆரம்பித்ததுமே நாங்கள் புன்னகைக்காமல் இருக்கப் பாடுபட்டோம். மனைவி காரை ஓட்டிப் போகும்போது, எந்தக் கணவர்தான் திட்டாமல் இருக்கிறார்! அதிலும், இவளுடைய காரோட்டும் திறனோ — கேட்கவே வேண்டாம்!

    மரியாதை குறித்து, “அவர் ஏதாவது திட்டினாரா?” என்று விசாரித்து வைத்தேன்.

    “திட்டினால்தான் தேவலையே! நான் சரியாக ஓட்டும்போதே, எதுவும் பேசாமல் பெருமூச்சு விட்டுக்கொண்டே இருந்தாரா! கார் நின்றுவிட்டது!” தொடர்ந்து, “உணர்வுபூர்வமாக நம்மைத் தூண்ட ஆண்களில்லாமல் நாம் என்னதான் செய்யப்போகிறோம்!” என்றாளே பார்க்க வேண்டும்!

    அதற்கு மேலும் எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவளும் சேர்ந்து சிரித்தாள்.

    `துன்பம் வருங்கால் நகுக’ என்று இதற்குத்தானோ சொல்லிப் போனார் திருவள்ளுவர்?

    தான் செய்வதில் ஓயாது குற்றம் கண்டுபிடிக்கும் கணவரை எண்ணி எதற்காக மனைவி வருந்தவேண்டும்? இல்லை, பார்ப்பவர்களிடமெல்லாம் ஆதங்கத்துடன் சொல்லி, அவர்கள் ஆதரவை நாட வேண்டும்? அவர் செய்ததையே வேடிக்கையாக நினைத்து, உற்ற பிறருடன் பகிர்ந்தபடி சிரித்துவிட்டால், மனப்பளு குறையுமே!

    வர வர, சிறுநீர் கழிப்பதெல்லாம் வேடிக்கை என்று நம்மைச் சிரிக்க வைக்க முயல்கிறார்கள் தமிழ்ப்படங்களில். பிறரது தோற்றதைக் கேலி செய்வதும் நகைச்சுவைதான் என்றும் அவை காட்டுகின்றன.

    பிறரைக் கிண்டல் செய்வது எளிதுதான். ஆனால், கேலி செய்யப்படுவது தாமாக இருந்தால் ஒருவரால் ஏற்க முடியுமா?

    பொதுவாக, பெண்களால் பிறர் தம்மைக் கேலி செய்வதை எளிதில் ஏற்க முடியாது. தாமே தம்மைச் சிறுமைப்படுத்திக்கொள்வதுபோல் பேசுவதும் அவர்களால் முடியாத காரியம். அதனால்தான் பெண்கள் நகைச்சுவை எழுத்தாளர்களாகவோ, நடிகைகளாகவோ இருப்பதில்லை என்று முன்பு ஒரு பத்திரிகையில் படித்தேன். தமிழில் மனோரமா, அமெரிக்காவில் லூசில் பால் (Lucile Ball) , காரல் பர்னெட் இவர்கள்தாம் குறிப்பிடத்தக்கவர்கள். பிறர் மற்றவரைக் கிண்டல் செய்து, எரிச்சல் மூட்டுவதோடு சரி.

    `அவன்மேல் உனக்கு எப்படி காதல் வந்தது?’ என்று கேட்டால், `அவன் என்னைச் சிரிக்க வைக்கிறான்!’ என்று பதிலளிப்பார்கள் அனேகப் பெண்கள்.

    பிறரிடம் எளிதாக நட்பு கொள்ள சிரிப்பு ஒரு நல்ல வழி.

    சமீபத்தில் ஒரு மருத்துவமனையில் நான் கண்டு ரசித்த காட்சி:

    “அங்கிள்! நீங்கள் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தவரா?” கேட்டவர் குண்டாக இருந்த ஒரு சீனர். ஐம்பது வயதிருக்கும்.

    மலாய்க்கார முதியவர் ஆமென்றார்.

    “உங்களுக்கென்ன! மருந்து, சிகிச்சை எல்லாவற்றிற்கும் அரசாங்கமே கொடுத்துவிடுகிறது! என்னைப்போலவா! கைவிட்டு அழ வேண்டியிருக்கிறது!” என்றார் மிஸ்டர். குண்டு.

    “நீங்கள்தாம் பணக்காரர் ஆயிற்றே!” (பெரும்பாலான சீனர்கள் வியாபாரம் செய்வதால் அவர்களிடம் நிறையப் பணம் புழங்குகிறது என்பது பொதுவான கணிப்பு. ஆனால் உண்மை அதுவல்ல).

    “எங்கே! அரசியல்வாதிகளின் மனைவிகளிடம்தான் எல்லாப் பணமும்!”
    சுற்றி உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த எல்லாரும் பலக்க சிரித்தோம்.

    “எனக்கு எத்தனை வயது தெரியுமா? எண்பத்து இரண்டு! இருதய சிகிச்சை நடந்து இருபது வருஷங்களாகி விட்டன!” பெருமையுடன் தெரிவித்தார் முதியவர்.

    “உங்களுக்கென்ன! இப்போதும் மாப்பிள்ளைமாதிரிதான் இருக்கிறீர்கள்!” என்று பாராட்டிவிட்டு, “அந்த அக்கா சம்மதித்தால், நீங்கள் அவர்களைக் கல்யாணம் செய்துகொள்ளலாம்!” என்று சற்று தூரத்திலிருந்த பெண்மணியைக் காட்டினார்.

    “ஹேய்! நான் அவர் மருமகள்!” என்று அவள் சிரிப்புடன் எதிர்க்க, அங்கிருந்த நோயாளிகள் தம்மை மறந்து சிரித்தனர். நினைத்து நினைத்துச் சிரித்தபடி இருந்தார்கள். அவர்களால் நோயின் கடுமையைத் தாற்காலிகமாக மறக்க முடிந்தது.

    சிரிப்பும் புளிப்பும் சில காலம்தான். பதின்மவயதுப் பெண்கள் ஒன்று சேர்ந்தால், அவர்களுக்குக் காரணமின்றி சிரிப்பு பொங்கும். அந்த வயதாக இருந்தபோது, `நான் இன்று ரொம்ப சிரிக்கிறேன். ராத்திரி அழப்போகிறேன்!’ என்று அஞ்சுவாள் என் தோழி பத்மஜா.

    சிரிப்பும், அழுகையும் பகலும், இரவும்போல. ஒன்றையடுத்து ஒன்று வரத்தான் செய்யும். அதற்காக சிரிக்காமல் இருப்பார்களா, யாராவது!

    சிரிப்பதற்கு முகத்திலுள்ள பதினேழு தசைகள்தாம் தேவை. (சிடுசிடுப்புக்கோ நாற்பத்து மூன்று தசைகள்). மனம்விட்டுச் சிரியுங்கள். அப்படியாவது அழகு வளர்ந்துவிட்டுப் போகட்டுமே!

    தொடருவோம்

    Share
  • வீணில்லை அன்பு

    நிர்மலா ராகவன்

    “இன்னிக்கு சத்யா திரும்ப ஆபீசுக்கு வந்திருந்தாரும்மா!”

    “அவர் பிழைச்சதே பெரிசு! இப்ப ஒடம்பு நல்லா ஆயிடுச்சா?”

    `உருவத்தில் பழைய சத்யாதான். ஆனால், அந்த இனிமையான குணத்தில்தான் ஏதோ மாசு படிந்துவிட்டதுபோல் இருக்கிறது,’ என்று தாயிடம் சொல்ல கலாவின் மனம் இடங்கொடுக்கவில்லை.

    கடந்த சில மாதங்களாக, மருத்துவமனைக்குப் போய் சத்யாவைப் பார்க்கும்போது, தலையில் பட்ட பலத்த அடியில் அவனது குணாதிசயமே மாறிவிட்டிருந்தது தெரிந்தது. காரணமில்லாமல் சிரித்தான். சம்பந்தம் இல்லாது ஏதேதோ பேசினான்.

    பரிதாபமாகத் தோற்றம் அளித்த அந்நிலையில் அவனுக்கு ஆதரவாக இருக்கத் தீர்மானித்தாள். சிறு குழந்தை மாதிரி, சாப்பிடுவதற்கு அவன் முரண்டு பிடித்ததோ, மாத்திரை கொடுக்க வந்தவளை பிடித்துத் தள்ளியதோ பெரிதாகப் படவில்லை அவளுக்கு.

    `எப்படி இருந்தவர்!’ அழுகைதான் வந்தது.

    “ஹலோ, கலா! குட் மார்னிங்! எப்படி இருக்கே இன்னிக்கு?” மேலதிகாரி என்ற படாடோபம் இல்லாது, சத்யா வலிய வந்து, மரியாதை தவறாது சிறுகச் சிறுகப் பேசியதால்தானே அவள் மனதளவில் அவனுடன் நெருங்கிப் போனாள்!

    முதலில் எட்டடி தூரத்தில் நின்று உரையாடியவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி, இரண்டடி தொலைவில் நின்று, தாழ்ந்த குரலில் மனம்விட்டுப் பேசும் அளவுக்கு முன்னேற ஓராண்டு பிடித்தது.

    அலுவலகப் பிரச்னைகள், சண்டை பூசல்கள், பிறகு டி,வி, பிடித்த இசையமைப்பாளர், பத்திரிகை என்று பொதுப்படையாக ஆரம்பித்த பேச்சு, மெள்ள மெள்ள அவரவர் குடும்பப் பின்னணி என்று முன்னேறியது.

    கலாவின் வாழ்வோடு பார்த்தபோது, தான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று பிரமிப்புதான் ஏற்பட்டது சத்யாவுக்கு.

    `எங்கப்பா குடிப்பாரு!’ என்று ஒரு நாள் ஆரம்பித்தவளை அலட்சியமாக இடைமறித்தான் சத்யா. `இங்க எவன்தான் குடிக்கலே? உலகத்திலேயே பெரும்பாலான ஆண்கள் குடிக்கிறது மலேசியாவிலேதான்னு பேப்பரிலே போட்டிருந்தாங்களே!’

    அப்பாதான் எப்படி அடிப்பார் அம்மாவையும், அவளையும்! அவர் வீட்டுக்குள்ளே நுழையும்போதே இருவரும் மேசை அடியில் ஒளிந்துகொண்டதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு!

    எலிகள் செத்துக் கிடந்த ஏதோ மட்டமான சரக்கைக் குடித்ததன் விளைவாக பார்வையிழந்து, இப்போது கையாலாகாதவராக இருந்தாலும், அப்பா உண்டாக்கிய பாதிப்பு என்னவோ நீங்கவே இல்லை.

    இதையெல்லாம் சத்யாவிடம் சொல்லலாம் என்று தோன்றியது. சொன்னால், தன்னை மட்டமாக நினைக்க மாட்டார் என்ற நம்பிக்கை இருந்தது.

    தயங்கத் தயங்கி அவள் பேசியபோது, அக்கண்களையே உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு, அவளுடைய நான்கு வாக்கியங்களுக்கு ஒரே வாக்கியம் குரல் அதிராமல் அவன் பேசியபோது, அதுவே அவளுடைய நொந்த மனத்துக்கு அருமருந்தாக அமைந்தது.

    அவனுடன் பேசும் அந்த ஐந்து, பத்து நிமிடங்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் கலா.

    `தன்னை எப்படியாவது வளைத்துப் போடுவதற்காகத்தான் இப்படி, தன் நலனில் அக்கறை உள்ளவர்போல் நடிக்கிறாரோ!’ இரவின் தனிமையில் அவனைப்பற்றி எண்ணமிட்டுக் கொண்டும், தனக்குத்தானே சிரித்துக் கொண்டும் இருக்கும்போது, இப்படி ஒரு சந்தேகம் தலைகாட்டும்.

    `நாளையிலிருந்து வளவளவென்று பேசாது, ஒரு அளவோட பழகணும்!’ என்று முடிவெடுத்துக் கொள்வாள்.

    ஆனால், மறுநாள் அவனுடைய கண்களை, அதில் காணப்பட்ட கபடின்மையை, அன்பை உணர்கையில், தன்மேலேயே எரிச்சல் வரும் — இப்படி ஒரு பண்பாளரைத் தவறான நோக்குடன் எடைபோட்டதற்கு. அவளையும் அறியாமல், அவர்களது உறவு பலப்படும்.

    இரண்டு ஆண்டுகள் இவ்விதம் பழகிவிட்டு, `நம் இருவருக்கும்தான் ஒத்துப்போகிறதே! வாழ்நாளெல்லாம் இணைந்தால் என்ன?’ என்ற ஒரு கேள்வியைப் போட்டான் சத்யா. எதிர்பார்த்ததுதான் என்றாலும் அதிர்ச்சியாக இருந்தது கலாவிற்கு.

    தன் தாயின் அலங்கோலமான வாழ்க்கையைக் கண்டு மனம் வெறுத்துப்போய், தானாவது சுதந்திரமாக இருக்கவேண்டும் என்றுதானே இரவு பகலாக உழைத்துப் படித்து, வேலையிலும் அமர்ந்தாள்!

    அவளால் உடனே பதில் கூற முடியவில்லை. சத்யாவும் வற்புறுத்தவில்லை.

    இரண்டு மாதங்களுக்குப்பின் மீண்டும் அவன் அதே கேள்வியைச் சற்றுக் கெஞ்சலாகக் கேட்டபோதும் அவளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. `கல்யாணம், குடும்பம்னாலே பயமா இருக்கு, சத்யா!’ என்று உண்மையை ஒத்துக்கொண்டாள்.

    `நான் குடிக்கறதில்ல. ஆல்கொஹால் அலர்ஜி. கட்டினவளை அடிக்கவும் மாட்டேன்!’ என்று அவன் சிரித்தான்.

    ஆனால் அவள் கண்களில் நம்பிக்கை காணப்படவில்லை. “நீங்க என்ன சொன்னாலும், பயமாத்தான் இருக்கு!” என்றாள்.

    சற்று யோசித்து, `இப்படிச் செஞ்சா என்ன? ஒரு ஆறு மாசம் நாம்ப ரெண்டு பேரும் பேசிக்காம இருக்கலாம். அப்புறம் பார்ப்போம்!’ என்ற அவனுடைய திட்டத்தை கலா ஏற்றுக்கொண்டாள்.

    சில நாட்களிலேயே அவன் குரல் எங்கே கேட்டாலும் மனம் துடிக்க, அவள் பக்கமே திரும்பாது அவன் அவளைக் கடந்து போகையில், இருவருமே தமது படபடப்பை மறைத்துக்கொள்ள முயற்சி செய்தபோது, முதலில் வேடிக்கையாக இருந்தாலும், நாளடைவில் ஏக்கமாக மாறியது.

    இரண்டு மாதம்தான் தாக்குப்பிடிக்க முடிந்தது அவளால்.

    அந்தச் சமயத்தில் அவள் தந்தை இறக்க, அவள் குடும்பத்தில் ஒருவனாகவே தன்னைப் பாவித்துக்கொண்டு, எல்லா விஷயங்களிலும் அவளுக்குப் பக்கபலமாக இருந்தான் சத்யா. அதன்பின், தங்கள் போட்டியின் முடிவைப்பற்றி எந்த ஒரு சந்தேகமும் இருக்கவில்லை இருவருக்கும்.

    கல்யாணத்துக்கு இன்னும் மூன்றே மாதங்கள்தாம் இருக்கையில், ஒரு புதிய குழப்பம்!

    ஏன்தான் அப்படி ஒரு விபத்து நிகழ்ந்ததோ!

    இரவு பத்து மணிக்கு, ஒரு டோல் அருகே சத்யா பல கார்களுக்குப் பின்னால் காத்திருந்தபோது, இரண்டு பேர் அவனை வெளியில் இழுத்துப் போட்டு, அவனுடைய கைக்கடிகாரம், பர்ஸ், காரின் முன்னிருக்கையில் இருந்த மடிக்கணினி எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டதோடு நில்லாது, தலையில் பலமாகத் தாக்க, மூர்ச்சையடைந்தவன் கோமாவில் கிடந்தான் மாதக்கணக்கில்.

    ஒரு வழியாக, சத்யா மீண்டும் ஆபீசுக்கு வந்தபோது, அவனுடைய இடத்தில் சின் என்பவர் அமர்த்தப்பட்டு, அவனுக்குப் பெயரளவில் ஏதோ எளிதான வேலை கொடுக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ந்தான்.

    எல்லாரும் தன்னைக் கேலியாகப் பார்ப்பதுபோல் தோன்றியது அவனுக்கு.

    `உனக்கு மூளை கெட்டுவிட்டது!’ என்று சொல்லாமல் சொல்கிறார்களா?
    இதுவரைக்கும் குடும்பம், படிப்பு, காதல், எதிலும் ஒருவித குழப்பமும் இல்லாத வாழ்க்கை அமைந்ததெல்லாம் இப்படி ஒரு பேரிடியைத் தாங்க வேண்டும் என்பதற்காகத்தானா? மண்டைக்குள் எரிச்சல் உண்டாக, தலையே பிளந்துவிடுவதைப்போல ஒரு வலி.

    அந்தச் சமயத்தில்தானா சின்னுடைய அறையிலிருந்து கலா வெளியே வரவேண்டும்!

    தன் வேலையைப் பறித்ததும் இல்லாது, எதிர்கால வாழ்க்கையையே சூறையாடுவது என்றே எல்லாரும் தீர்மானித்துவிட்டார்களா?

    இந்த உலகத்தின் மேலேயே பொதுவாக ஆத்திரம் வந்தது.

    “ஏ கலா! `இவன் எப்படி தொலைவான்’னு காத்துக்கிட்டு இருந்திட்டு, என் தலை மறைஞ்சதும், இன்னொருத்தனை வளைச்சுப் போட்டுட்டியா?”

    அத்தாக்குதலைச் சற்றும் எதிர்பார்த்திராத கலா விக்கித்துப்போய் நின்றாள். அவள் கையிலிருந்த ஆவணங்கள் சிதறின. அவைகளைத் திரட்டக்கூட தோன்றாமல், அசையாமல் நின்றாள்.

    “மொதல்லேயே ஒனக்கு சிவப்பா, உயரமா இருக்கிற ஒருத்தனைக் கட்டிக்கணும்னு மனசுக்குள்ளே இருந்திருக்கு. அதனாலதானே என்னை அவ்வளவு தூரம் கெஞ்ச வெச்சே?”

    அவனுடைய கத்தல் அருகேயிருந்த மலாய், சீனர்களுக்குப் புரியாவிடினும், `காதலர்களுக்குள் ஏதோ தகறாறு!’ என்று அனைவரும் ஓடிவர, அவமானத்தால் சிறுத்த முகத்துடன், “இவருக்கு இன்னும் உடம்பு தேறவில்லை,” என்று ஆங்கிலத்தில், குரலே எழும்பாது மன்னிப்புக் கேட்டவள், அங்கிருந்து விரைந்தாள்.

    பகல் சாப்பாட்டு நேரத்துக்குச் சற்று முன்பாகவே எழுந்து, கலாவின் மேசைக்கருகில் தயங்கி நின்றான் சத்யா.

    அவனை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தவள், மீண்டும் தலையைக் குனிந்து கொண்டாள். வேலை ஓடவில்லை.

    “சாப்பிடப் போகலாமா?” அவனது தாழ்ந்த, ஆழமான குரல் அவள் மனதைத் தொட்டது. அந்தக் கண்களில் தெரிந்த வேதனை அவளை என்னவோ செய்தது. தன்னையுமறியாமல் எழுந்தாள்.

    வழக்கம்போல் எதிரெதிரே அமர்ந்து சாப்பிடுகையில், இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவனுடைய பார்வை அவ்வப்போது தன்மேல் நிலைத்ததை கலா உணர்ந்தாலும், அவளால் நிமிர முடியவில்லை. எந்த நிமிடமும் அழுதுவிடுவோமோ என்று பயமாக இருந்தது.

    “கலா! என்னை விட்டுட்டுப் போயிட மாட்டியே?” கெஞ்சலாக ஒலித்த அவன் குரல் அவள் கண்களில் நீரை வரவழைத்தது.

    எவ்வளவு நெருக்கமாக இருந்தவர்கள்! உடல் நெருங்கினால்தானா உறவு? `பிணைப்பு’ என்பது மனதைப் பொறுத்துத்தானே இருக்கிறது!

    எதுவும் சொல்லாமல் எழுந்துகொண்டாள். அவள் மனதில் ஓயாது எழும்பிய கேள்விகளுக்கு முதலில் விடை காண வேண்டும்.

    `கல்யாணமே வேண்டாம்!’ என்றிருந்தவள் அப்படியே இருந்து தொலைத்திருக்கக் கூடாதா?

    இப்போது, தாயின் வாழ்க்கையைப்போல தன்னுடையதும் ஆகிவிடுமோ?
    மூளை கலக்கம் அடைய எத்தனை வழிகள் இல்லை!

    குடித்தால்தான் கத்துவார்களா, அடிப்பார்களா, என்ன!

    இப்படியெல்லாம் அடுக்கடுக்காக யோசனைகள் வந்தபோதே, தன் சுயநலம் கலாவை வெட்க வைத்தது.

    முன்பெல்லாம் சத்யா எத்தனை வகைகளில் தனக்கு ஆதரவாக இருந்தார்! எதை எதிர்பார்த்து அப்படி நடந்துகொண்டார்?

    தான் அப்படி ஒன்றும் பிரமாதமான அழகி என்று அவள் நம்பத் தயாரில்லை. தானும்தான் அவரிடம் எதைப் பார்த்து மயங்கி, உறுதி குலைந்து, மணக்கச் சம்மதித்தோம்?

    அவனுடைய அதிக உயரமில்லாத உருவமும், கறுப்பில் சேர்த்தியான நிறமும் அவளை எங்கே பாதித்தது! உள்ளத்தையே ஊடுருவது போன்ற அந்தக் கண்களின் கூர்மையும், அவள் சிறிது மன அயர்ச்சி கொண்டிருந்தாலும் அதைக் குறிப்பாலேயே உணர்ந்து, உடனே அவள் பக்கம் விரையும் அவனது ஆண்மைத்தனமும்தானே, இயற்கையாகவே இன்னொருவரைச் சார்ந்து நிற்கவைக்கும் அவளுடைய பெண்மையை விழிக்கச் செய்தது?

    இது என்ன உணர்வு?

    எந்தப் பெயராக இருந்தால் என்ன!

    ஆனால், தங்கள் இருவரின் நிலையும் இப்போது தலைகீழாக மாறி இருப்பது என்னவோ விளங்கியது.

    சத்யாவுக்கு இப்போது பக்கபலம் அவசியம். தலையில் அடிபட்டால், இரண்டு வருடங்களுக்கும் மேலாக, சில சமயம், பத்தாண்டுகள்கூட பொறுக்க முடியாமல் வலிக்குமாமே! பாவம்! அதை எப்படித் தாங்கப் போகிறார்?

    ஜூர வேகத்தால் அழுது அமர்க்களம் செய்யும் குழந்தையை அதன் தாய் மடியில் கிடத்திக்கொண்டு, இரவெல்லாம் — தன் உறக்கம் கெடுவதை நினைத்தும் பாராது — அதற்கு ஆறுதலாக ஏதாவது பேசிக்கொண்டே இருப்பதில்லையா?

    குழந்தையாக இருந்தால் என்ன, கணவராக இருந்தால் என்ன! அன்பு செலுத்துவது என்று வந்துவிட்டால் அதில் யார், எவர் என்ற பேதம் ஏது!

    சத்யாவால் பழையபடி வேலைப் பளுவுக்கோ, அன்றாட வாழ்க்கையின் அவசரத்துக்கோ ஈடு கொடுக்க முடியாதுபோக, அதனால் பிறந்த ஆத்திரமே சிறுமை உணர்ச்சியாக மாறியிருக்கிறது என்று கலா புரிந்துகொண்டாள்.

    மூளையில் ஒரு பகுதியிலுள்ள அணுக்கள் அழிந்துவிட்டால், அவை திரும்ப தோன்ற முடியாது; ஆனால், வேறொரு பாகம் பழைய வேலைகளைச் செய்யப் பழகிவிடும் என்று அவள் படித்திருந்தாள்.

    இந்த வேளையில் சத்யாவுக்கு முக்கியமாக வேண்டியது அவருடைய உள்ளக் குமுறலைப் புரிந்துகொண்டு, உணர்ச்சிக் கொந்தளிப்பைப் பொருட்படுத்தாது, தனது பலத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு துணை.

    பிறருடைய நலனுக்காக நாம் செலவிடும் அன்போ, பணமோ, எதுவுமே வீணில்லை என்றுதான் கலாவுக்குத் தோன்றியது.

    “ஏம்மா? என்னோட வெளிர் மஞ்சள் புடவையை கஞ்சி போட அனுப்பியிருந்தேனே! வந்திடுச்சா?” என்று உரக்கக் கேட்டவள், `சத்யாவுக்கு அதில என்னைப் பாத்தா, எப்பவுமே சந்தோஷமா இருக்கும்!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் .. ! (18)

    நிர்மலா ராகவன்

    பரீட்சைப் பயம்

    நலம்-1-2

    `இது சாதாரண பள்ளிக்கூடப் பரீட்சைன்னு அலட்சியமா இருக்காதீங்க! இப்போ வாங்கற மார்க்கைத்தான் பப்ளிக் எக்ஸாமிலும் வாங்குவீங்க!’ பல மாணவர்களும் கேட்டு நடுங்கிய எச்சரிக்கை.

    இப்படியெல்லாம் பயமுறுத்தினால்தான் மாணவர்கள் ஒழுங்காகப் படித்து, நல்ல மதிப்பெண்கள் வாங்குவார்கள், நமக்கும் மரியாதையோ, பதவி உயர்வோ கிடைக்கும் என்றெண்ணி பல ஆசிரியைகள் இம்முறையைக் கையாளுவார்கள். `படிப்பு’ என்றாலே பயம் உண்டாகும் என்பதுதான் உண்மை.

    ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் நான் புத்தகங்கள் படிப்பது கண்டு, `எப்படித்தான் உனக்குப் படிக்கப் பிடிக்கிறதோ!’ என்பார்கள் என்னுடன் வேலை பார்த்த சில ஆசிரியைகள். வேண்டுமென்றே வரவழைத்துக்கொண்ட அலட்சியமும், சிறிது பொறாமையும் அவர்கள் குரலில் ஒலிக்கும். `நாங்கள் பரீட்சைகளில் பாஸ் பண்ண மட்டும்தான் புத்தகங்களைத் தொடுவோம்!’ என்று பெருமை பேசுவார்கள்.

    `ஆசிரியர்’ என்றாலே கண்டிப்பு மிக்கவர், அவரை நினைத்தாலே அச்சம் ஏற்பட வேண்டும் என்று எழுதப்படாத விதி ஒன்றைப் பலரும் கடைப்பிடிக்கின்றனர். பள்ளிப் படிப்புதான் என்றில்லை, இசையோ, நடனமோ கற்பிக்கும் ஆசிரியர்களும் இப்படி நடந்தால்தான் மாணவர்கள் விரைவில் கற்றுத் தேர்வார்கள் என்றே எண்ணுகிறார்கள்.

    மலேசியாவில் எனக்கு அலெக்சாண்ட்ரா என்ற ஒரு சிநேகிதி இருந்தாள். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவள். அவளுடைய ஆறு வயதுப் பெண்ணுக்கு இந்திய முறைப்படி நாட்டியம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யலாம் என்று ஓர் ஆசிரியையிடம் அழைத்துப் போனாளாம். அங்கு அந்த ஆசிரியை தன் மாணவியின் கன்னத்தில் அடித்துச் சொல்லிக் கொடுத்ததைப் பார்த்து, பெண், `I don’t know how to handle this!’ என்று கற்க மறுத்துவிட்டதாகச் சொன்னாள்.

    “அடி வாங்கிய சிறுமியின் தாய் அருகிலேயே இருந்தாள். ஆனால், ஒன்றுமே நடக்காததுபோல் வாளாவிருந்து விட்டாளே!” என்று அதிசயப்பட்டாள் அலெக்சாண்ட்ரா. அவர்கள் நாட்டில் குழந்தைகளைப் பெற்றோர் அடிப்பதுகூட சட்டவிரோதம். `ஆசிரியை அடித்தால் எனக்குச் சமாளிக்கத் தெரியாதே!’ என்று பெண் பயந்ததில் என்ன அதிசயம்?

    நம் நடன ஆசிரியைகள் தாம் இப்படிப் பயில்விக்கப்பட்டதால்தான் இன்று உயர்ந்திருக்கிறோம் என்று அதே முறையைக் கையாள்கிறார்கள்.
    தாம் மிரட்டியோ, பயமுறுத்தியோ செய்தால்தான் மாணவர்கள் எதையும் செவ்வனே செய்வார்கள் என்று ஆசிரியர்கள் நினைக்கலாம். ஆனால், பாட்டு ஆசிரியை பயமுறுத்தினால் மேடையிலோ, பிறர் எதிரிலோ பாட ஆரம்பிக்கும்போது, தொண்டையை அடைத்துக்கொள்வதுபோல் இருக்கும். நாட்டியம் ஆடும் பெண்களோ, சற்றே விறைத்தாற்போல் இருப்பார்கள். கண்கள் அலையும் — தப்பாக ஏதாவது ஆடிவிட்டால், பிறகு ஆசிரியை எப்படித் திட்டுவாரோ என்ற பயத்தில். இதற்கெல்லாம் `STAGE FEAR!’ என்று சப்பைக்கட்டு கட்டிவிடுகிறோம். அதற்குக் காரணமான ஆசிரியைக்கு யார் எடுத்துச் சொல்வது!

    எந்தப் போட்டியில் பார்த்தாலும், ஆரம்பத்தில் நன்றாகப் பாடுகிறவர்களோ, ஆடுகிறவர்களோ இறுதிச் சுற்றில் வெற்றி பெறுவதில்லை. அமைதியாக இருப்பவர்களோ, சிறுகச் சிறுக முன்னேறிக்கொண்டே வந்து, வெற்றிக்கோப்பையைப் பிடித்துவிடுவார்கள்.

    இவர்களால் இவ்வளவு பெரிய சமாசாரத்தை எப்படிச் சாதாரணமாக ஏற்றுக்கொண்டு, படபடப்பில்லாமல் இயங்க முடிகிறது என்று பார்த்தால், அவர்களுடைய ஆசிரியைகள் சிரிப்பும், விளையாட்டுமாகச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். தவறிழைத்தால், கேலியோ, திட்டோ கிடையாது. பிற ஆசிரியர்களைப்பற்றி அவதூறாகப் பேசவும் மாட்டார்கள். இம்மாதிரி வகுப்புகளுக்கு குழந்தைகள் ஆர்வமாக வருவார்கள். கற்பது முதலில் மெதுவாகத்தான் இருக்கும். ஆனால், பந்தயத்தில் ஓடும் குதிரைபோல், விரைவிலேயே பல மடங்காக உயர்ந்து, பிறரைப் பின்தள்ளி விடுவார்கள். போட்டி, பொறாமையின்றி பிறருக்கு உதவவும் செய்வார்கள்.

    குழந்தைகளுக்கு இயல்பாகவே எந்தக் காரியத்திலும் நீண்ட காலம் கவனம் செலுத்திக்கொண்டு இருக்க முடியாது. இது புரியாது, அவர்களைத் திட்டி, அடித்தால் அது கொடுமைதான்.

    `ஆறு வயதுக் குழந்தைகளை மேடையில் ஆடப் பழக்கும்போது, தலையை அப்படியும் இப்படியும் திருப்புகிறார்களே!’ என்று அயரும் நடன ஆசிரியைகளுக்கு ஓர் ஆலோசனை: வீட்டில் சிறுமி ஆடும்போது, அவளுக்குப் பிடித்த பொம்மை ஒன்றைத் தாயின் கையில் கொடுத்து, `பொம்மையைப் பார்த்துக்கொண்டு ஆடு!’ என்று பழக்க வேண்டும். தாய் பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தாலும், பொம்மையிலேயே கருத்தாக இருக்கும் சிறுமி தலையைத் திருப்ப மாட்டாள். எவ்வளவு பெரிய மண்டபமாக இருந்தாலும், பார்வை என்னவோ முன்னோக்கியே இருக்கும்.

    நான் ஆரம்பப் பள்ளியில் படித்தபோது, குடுமி வைத்த ஆசிரியர்கள் மட்டும்தான். எல்லாரும் வகுப்பிலிருந்த பையன்களை அடிப்பார்கள் — கேள்விக்கு உடனடியாகப் பதில் சொல்லத் தெரியாத குற்றத்துக்காக. இல்லையேல், தோப்புக்கரணம் போடச் சொல்வார்கள்.

    வாடிக்கையாக, என்னைப்போல் ஆசிரியர் சொல்லிக்கொடுப்பதில் கவனமின்றி எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பெண்களை நாற்காலியின்மேல் நிற்கச் சொல்வார் ஓர் ஆசிரியர். அவ்வளவுதான். அடி கிடையாது. (எங்கள் வகுப்பில் நான் ஒருத்திதான் அப்படி நின்றதாக நினைவு).

    எனக்கு இம்முறை நன்றாகப் பழகிப்போய், என் பெயரை ஆசிரியர் அழைக்க வேண்டியதுதான், நானே நாற்காலியின்மேல் ஏறி நின்றுவிடுவேன் — அவர் வேறு எதற்காகக் கூப்பிட்டிருந்தாலும். எல்லாரையும்விட உயரமாக இருக்கிறோமே என்று பெருமையாக இருக்கும். அதோடு, இனி ஆசிரியர் நடத்தும் பாடத்தைக் கவனிக்க வேண்டாமே!

    சும்மா நிற்க முடியுமா? என் கண்கள் அங்கும் இங்குமாக அலையும். என்னைப்போல் `உருப்படாத,’ குழந்தைகளுக்காக மேலே பார்க்கும் இடங்களில் எல்லாம் கூட்டல், பெருக்கல் கணக்கு, பழமொழி எல்லாம் எழுதி வைத்திருப்பார்கள். அதனால்தானோ, என்னவோ, தமிழ், கணக்கு இரண்டும் எனக்கு மிகவும் கைவந்த பாடங்களாக ஆயின!

    சிறு வயதாக இருந்தால் அப்படித்தான் எல்லாரும் திட்டுவார்கள் போலிருக்கிறது என்றெண்ணியதால், இம்மாதிரியான தண்டனை எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. வயது சற்று கூடியதும், முன்னேற வேண்டும் என்ற துடிப்பில் கட்டொழுங்கு தானே வந்தது. அப்போது நான் என் இடைநிலைப்பள்ளி ஆசிரியைகளைப் போய் பார்த்தபோது, ஓயாமல் என்னை `ஒழுங்கீனம் பிடிச்ச பிள்ளை’ என்று நிந்தித்த ஆசிரியைகள் இருவர், `நீ நல்லா முன்னுக்கு வருவேன்னு அப்பவே தெரியும்,’ என்றார்கள்!

    பாடங்களை மறந்த குற்றத்துக்காக தோப்புக்கரணம் போட்ட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நன்மைதான் செய்திருக்கிறார்கள். அந்த `தண்டனை’ மூளையிலுள்ள நரம்புகளை வலுப்படுத்துவதால், இப்போது மேல் நாடுகளில் ஒரு வித யோகா என்று சொல்லிக்கொடுக்கப்படுகிறதே!
    அடி வாங்கிய மாணவர்கள்தாம், பாவம், பரீட்சை சமயத்தில் படித்ததையெல்லாம் மறந்து விடுவார்கள். அதற்காக இன்னும் அடி. (கடந்ததை மறக்க முடியாது, கல்லூரி நாட்களில்கூட, `பரீட்சை’ என்றாலே வயிற்றுப்போக்கு ஏற்பட்டுத் துடித்த சிலரை நான் அறிவேன்).

    பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் அளிக்கும் தண்டனையைவிடக் கொடுமையானது, `படி, படி’ என்று உயிரை வாங்கும் பெற்றோரைப் பெற்றிருப்பது.

    ஒரு தாய் `பெரிய பரீட்சை’ என்று நடுங்கி, இளைத்துப்போன மகளைப் பார்த்துப் பரிதாபப்பட்டுக் கேட்டாள்: `படிக்காமலிருந்தால் என்ன ஆகும்?’
    `பரீட்சையில் தேர்ச்சி பெற முடியாது’.

    `படித்தால்?’

    `பாஸ் பண்ணலாம்!’

    `அது போதுமே!’

    இப்படி வளர்க்கப்பட்ட குழந்தை இயல்பாகவே கடினமாக உழைக்கும் — படபடப்பு இல்லாது. எத்தனை வயதானாலும் படிப்பதிலுள்ள ஆர்வமும் குன்றாது.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் … (17)

    நிர்மலா ராகவன்

    அக்கரைப்பச்சை

    நலம்-1-2

    யாத்தி (YATI) என்ற இந்தோனீசிய பணிப்பெண் வாரத்திற்கு ஒருமுறை எங்கள் வீட்டைச் சுத்தப்படுத்த வருவாள். கண்ணாடி ஜன்னல்களை ஈரத்துணியால் துடைத்து, அதன்பின் தினசரித் தாளைக் கசக்கி மீண்டும் அழுந்தத் துடைத்துப் பளபளப்பாக்கி.. இப்படி உயிரை விட்டுக்கொண்டு வேலை செய்வாள். அப்போது அவளுக்கு முப்பது வயதிருக்கும்.

    “உனக்கு நாங்கள் கொடுக்கும் பணத்தை என்ன செய்கிறாய்?” என்று கேட்டேன்.

    “அப்படியே என் கணவரிடம் கொடுத்துவிடுவேன்!”

    யாத்தியை பதின்மூன்று வயதிலேயே கல்யாணம் செய்து கொடுத்திருந்தார்கள். அதனால் கணவனைத் தவிர வேறு உலகம் கிடையாது என்ற நினைப்பு. கல்வியறிவு அறவே இல்லாததால், சுயமாகச் சிந்திக்கும் திறனும் கிடையாது.

    அவளே தொடர்ந்து, பெருமையுடன் கூறினாள்: “அவர் வாராவாரம் முப்பது வெள்ளிக்கு (அன்றைக்கு சுமார் 500 இந்திய ரூபாய்) லாட்டரிச் சீட்டு வாங்குகிறார்!”

    ஒரு வெள்ளி (மலேசிய ரிங்கிட்) சீட்டு வாங்கினாலே அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்குமே என்ற எண்ணத்துடன், “எதற்கு இப்படிக் காசை வீணாக்குகிறீர்கள்?” என்றேன்.

    நிறையக் காசு கொடுத்து வாங்கினால், ஒன்றாவது வெற்றி பெறும் என்று கணவன் சொல்லி வைத்திருக்கிறான்!

    கணவர் செய்வதை இன்னொருவர் குறை சொல்வதாவது!

    “உங்களுக்குப் புரியாது. நீங்கள் பணக்காரர்கள்!” என்றாள், உதட்டைச் சுழித்தபடி.

    ஆனால், அவளிடம் சொன்னபடி, கணவன் எந்தச் சீட்டும் வாங்கவில்லை, மனைவி உடலயரச் சம்பாதித்துக் கொடுக்கும் பணத்தைக்கொண்டு இன்னொரு பெண்ணை பரிசுப்பொருட்களுடன் மயக்கி, அவளையே மணமும் புரிந்துகொண்டுவிட்டான் என்று அறிந்ததும் யாத்தியின் மனநிலை மாறிப்போயிற்று. ஆத்திரமும் அழுகையுமாக ஆனாள்.

    அவளுக்குப் பிறகு, கமாரியா (KAMARIA) என்ற நாற்பத்தைந்து வயதுப் பெண்மணி வேலைக்கு வந்தாள். நிறைய தங்க நகை போட்டுக்கொண்டு, வாயெல்லாம் சிரிப்பாக, பல வருடங்கள் வேலை பார்த்தாள்.

    அவளுடைய கணவர், பிற இந்தோனீசிய ஆண்களைப்போல, கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவளுடைய தளதளப்பான உடலுக்கு எதிரான சோனியான உருவம்.
    “நான் மற்றவர்களைப்போல குடி, சூதாட்டம் என்றெல்லாம் பொழுதைக் கழிப்பதில்லை. என்னுடைய ஒரே பொழுதுபோக்கு கமாரியாதான்!” என்று எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது சொல்ல, கமாரியா பெரிதாகச் சிரித்தபடி தன் கைவேலையை அப்படியே போட்டுவிட்டு வந்தாள். முகத்தில் அப்படி ஒரு பெருமை!
    அந்த மகிழ்ச்சியும் நீடிக்கவில்லை.

    “மேம்! என் வீட்டுக்காரர் வீட்டுக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன,” என்று கவலை தோய்ந்த முகத்துடன் அவள் தெரிவிக்க, “வேலை பார்த்த இடத்தில் விபத்தோ?” என்று சந்தேகம் தெரிவித்தேன். அவள் கணவர் சற்று தூரத்தில் வேலை பார்த்ததால், அங்கேயே தங்கிவிட்டிருந்தார்.

    சில நாட்கள் பொறுத்து, அந்த மனிதன் இன்னொரு பெண்ணை மணந்துகொண்டதாக அவளுக்குத் தகவல் கிடைக்க, இடிந்துபோனாள். அறையைச் சுத்தம் செய்தபடி இருக்க, வாய்விட்டு அழுவாள்.

    சில மாதங்கள் கழித்து எங்கள் வீட்டுக்கு வந்தவனை (மரியாதையைக் குறைத்துவிட்டேன்!) என் கணவர், “கமாரியா எவ்வளவு நல்லவள்! அவளை விட்டு, எதற்காக இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொண்டாய்?” என்று கேட்க, “எங்கள் மதத்தில் இது சரிதான் என்று சொல்லி இருக்கிறதே!” என்றான், என்னமோ பெரிய ஆன்மிகவாதிபோல்!

    “இனி அவனுக்குப் பணம் கொடுக்காதே!” என்று நான் அவளை எச்சரித்து வைத்தேன். கேட்டும் கொடுக்கவில்லை என்று அவன் கோபித்துக்கொண்டு போய்விட்டதாகச் சொன்னாள்.

    சில மாதங்களிலேயே, அவள் உடல்நிலை சீர்கெட்டது. தன்னை மிகவும் நேசிப்பதாகச் சொன்னவன் இளமையான மற்றொரு பெண்ணை நாடிப் போய்விட்டானே!

    `நீ இந்தோனீசியாவுக்கே போய்ச்சேர்! அங்காவது உற்றவர்கள் இருப்பார்கள்!’ என்று அனுப்பிவைத்தோம்.

    அவள் வந்த புதிதில், ஒவ்வொரு குழந்தையும் என்ன விஷமம் செய்தது, எப்படியெல்லாம் சண்டை போட்டது என்றெல்லாம் லயித்தபடி கூறிவிட்டு, எங்களைப் பிரிய மனமில்லாமல் போனாள் கமாரியா.

    அடுத்து வந்த ஆரிஸிடம் (40 வயது) நான் முதலிலேயே கண்டித்துக் கூறினேன்: “நீ சம்பாதிப்பதை உன் புருஷனுக்குக் கொடுக்காதே! உன்னை அந்தரத்தில் விட்டுவிட்டு, இன்னொருத்தியைக் கல்யாணம் பண்ணிக் கொள்வான்!”

    அவள் சலிப்புடன், “எல்லா இந்தோன்களும் அப்படித்தான்!” என்றாள். ஆனால், புத்திசாலித்தனமாக நடந்துகொண்டாள்.

    தன் கிராமத்தில் நிலம் வாங்கிப்போட்டு, நான்கு அறைகள் கொண்ட தனி வீட்டை எழுப்பியிருக்கிறாள். பெருமையுடன் அந்த புகைப்படத்தை என்னிடம் காட்டினாள். “என் வீட்டுக்காரரும், அவருடைய அண்ணன் தம்பிகளும் சேர்ந்து கட்டினார்கள்!”

    அவளுக்கும் ஒரு பிரச்னை ஏற்பட்டது. அவள் அனுப்பிய பணத்தை பள்ளிக்கூடத்திற்காகச் செலவழிக்காது, தகுந்த கண்காணிப்பின்றி ஊர்சுற்றும் ஊதாரியாகிவிட்டான் பதின்ம வயதான மூத்த மகன்.

    பரிதாபமாக இருந்தது எனக்கு. “நீ எப்படி பிறர் வீட்டு கழிப்பறையைச் சுத்தம் செய்து, ஒவ்வொரு நாளும் மூன்று வீடுகளில் இடுப்பொடிய, கால் வீங்க, வேலை செய்து சம்பாதிக்கிறாய் என்று அவனிடம் சொல்லு!”

    “அவனுக்குத் தெரியும்!”

    “இருந்தாலும், தினமும் சொல்லு. உங்கள் நாட்டில் படிப்பிற்கோ, உழைப்பிற்கோ ஏற்ற ஊதியம் கிடையாது என்கிறாயே! அவனாவது உன்னைப்போல் கஷ்டப்படாது, படித்து முன்னுக்கு வரவேண்டும் என்பதற்காக நீயும், அவனுடைய அப்பாவும் வேறு நாட்டில் கஷ்டப்படுவதை எடுத்துச்சொல். அவன் திருந்தும்வரை சொல்லிக்கொண்டே இரு!”

    ஒரு தமிழர் மலேசியாவுக்கு வந்து தான் சம்பாதித்ததை அவ்வப்போது தன் தாய்க்கு அனுப்பிக்கொண்டிருந்தார். அப்பணத்தில் வீடு வாங்கும்படி முதலிலேயே சொல்லிவிட்டு வந்திருந்தாராம்.

    நாடு திரும்பியபோது, வீடு என்னவோ வாங்கப்பட்டிருந்தது. ஆனால், தம்பியின் பெயரில்! அவன் அவருக்கு அதைக் கொடுக்க மறுத்துவிட்டதாகவும், தன் உழைப்பெல்லாம் விரயமாகிவிட்டது என்றும் என்னிடம் சொல்லி மிகவும் வருந்தினார்.
    தாய்நாட்டை விட்டு வெளியேறி, இன்னொரு நாட்டில் கடுமையாக உழைத்து, கைநிறையப் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசைக்கனவுடன் வருகிறவர்களுக்கு, அதனால் வேறு பல இடர்கள் தொடரும் என்பது புரியும்போது, காலம் கடந்து விடுகிறது.
    போதாத குறைக்கு, திரைப்படங்கள் வேறு நனவாக முடியாத கனவுகளைக் காட்டிவிடுகிறது.

    ஒரு சாப்பாட்டுக்கடையில் வேலை பார்ப்பவர், `நான் நாடு திரும்பியதும், ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்று திறக்கப்போகிறேன்!’ என்று கூறுவதைத் தொலைகாட்சியில் பார்த்தபோது, அவருடைய அறியாமையைக் கண்டு பரிதாபப்படத்தான் என்னால் முடிந்தது.

    தொடருவோம்

    Share
  • என்னைக் கைவிடு! 

    -நிர்மலா ராகவன்

    “நல்லா யோசிச்சுப் பாத்தியா, சியாமளா?” தந்தையின் குரலில் கவலை மிகுந்திருந்தது. மூன்று வருடங்களோ, இல்லை ஐந்து வருடங்களோ
    சேர்ந்து வாழ்வதற்கா கல்யாணம்?

    ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்களே!பெற்ற ஒரே பெண்ணுக்குத் தன் முயற்சியால்
    ஒரு கணவனைத் தேடித்தர டியவில்லையே என்ற அவருடைய நீண்டகால வேதனை இன்னும் மிகுந்தது.

    “சதீஷ் காண்ட்ராக்டிலே வந்தவன்! அது முடிஞ்சதும் வந்தஊருக்கே திரும்பிப்போயிடணுமேம்மா!”கட்டிடவேலை செய்துகொண்டிருந்தபோது, ஒரு விபத்தால் முதுகில் பலத்த அடிபட,சில ஆயிரம் நஷ்ட ஈடு பெற்று வீட்டிலேயே நிரந்தரமாக இருக்க வேண்டியநிலை தனக்கு ஏன் வந்தது என்று மீண்டும் மீண்டும் குமைவதைத் தவிர, உருப்படியாக என்னசெய்ய முடிந்தது தன்னால்?

    எட்டு வகுப்புடன் படிப்பை நிறுத்திக்கொண்ட சியாமளா தொழிற்சாலையில் வேலை செய்வதால்தான் குடும்பமே ஓடுகிறது. இந்த நிலையில் பேச தனக்கு என்ன அருகதை?

    “சதீஷ்தானேதான், நாம்ப ரெண்டுபேரும்
    கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?’ன்னு கேட்டாருப்பா,”

    அவருடைய அனுமதியை வேண்டி நின்ற மகளைப் பார்த்து மெல்லச்சிரித்தார் சுப்பையா. “ஒனக்குச் சரின்னு பட்டா, சரிதான்!” சதீஷ் அவர்கள் வீட்டுக்கு வந்தபோதே இப்படி ஓர் எண்ணம் அவனுக்குள் இருக்கும் என்று அவர் பயந்திருந்தது நிஜமாகப் போயிற்றே!

    பங்களா தேஷிகளுக்கே உரிய கவர்ச்சியான கண்களும், நீண்ட மூக்கும் எவரையும் கவர்ந்துவிடும்.

    அத்துடன், அவனுடைய கடுமையான உழைப்பும், சேமிக்கும்திறனும்!  இதைவிட அருமையான துணை சியாமளாவுக்குக் கிடைக்க முடியாது என்பதென்னவோ உண்மை என்று ஒரு சிறுகசப்புடன் ஒத்துக்கொண்டார் சுப்பையா.

    ஆனால், இருவருக்குமிடைய ஒரு பெரிய வித்தியாசம் இருந்ததே! இருபத்தெட்டுவயது இளைஞன் சதீஷ். சியாமளாவோ இருபத்தெட்டு வயதாகியும், பல வரன்கள்பெண்பார்க்க வந்துவிட்டு, `பெண் கறுப்பு!’ என்று தட்டிக்கழிக்கப் பார்த்து, பின் சற்றுஇறங்கிவந்து, எவ்வளவு பவுன் நகை போடுவீங்க?’ என்று பெரிய மனது பண்ணிப் பேரம்பேசிவிட்டு, வியாபாரம்’ படியாததால் ஒதுங்கிப் போனதன் பலனாக,உள்ளுக்குள்ளேயே மறுகிக்கொண்டிருப்பவள். பிறர் அவளை நிராகரித்துவிட்டுப் போகும் ஒவ்வொரு
    முறையும், தன் ஏமாற்றத்தைமறைத்துக்கொண்டு, `வயசான காலத்திலே ஒங்களுக்குத் துணையாதான் இருந்துட்டுப் போறேனேப்பா!’ என்று சமாதானப்படுத்துவாள் சியாமளா.

     `இவ்வளவுபேசிட்டு, கட்டிக்கிட்டதும், குடிப்பான். அடிப்பான். நான் சம்பாதிக்கிறதையும்பிடுங்கிப்பான். அதான் அன்னாடம் பாக்கறேனே அந்தக் கண்ராவியை! மூஞ்சியெல்லாம் ரத்தக்காயமா வர்றாளுங்க ஒவ்வொருத்தியும்! நான் சுதந்தரமாஇருந்துட்டுப்போறேனே!’

    வெளியில் வீறாப்பாகப் பேசினாலும், பழைய தோழிகளைஅவர்கள்பிள்ளைகுட்டிகளுடன் பார்க்கும்போது, அவள் மனம் பொருமத்தான் செய்தது. இப்போது அவளையும் ஒருவன் மணக்க விரும்பி, வேண்டுகிறான்! பெருமையாக உணர்ந்தாள்.

    “அப்பா! கல்யாணத்துக்கு அப்புறம் அவரும் நம்பகூட இங்கதான் வந்துதங்கப்போறாரு. ஒங்களைவிட்டு எங்கேயும் வரமாட்டேன்னு கண்டிசனாசொல்லிட்டேன்ல!”

    தன் நன்றியை ஒரு புன்முறுவல் மூலம் வெளிப்படுத்தினார் சுப்பையா.

    “சாயந்திரம் ஸ்டூடியோவுக்குப் போய், நான் ஒரு போட்டோ எடுத்துக்கணும். அவரோட அம்மாவுக்கு அனுப்ப!”

    சுப்பையாவின் முகத்தில்படர்ந்த கலவரத்தைப் பார்த்துச் சியாமளாசிரித்தாள். நம்ம தமிழாளுங்க மாதிரி நினைச்சுட்டீங்களா இவரையும்? அழகு, கலர், அந்தஸ்து- இப்படிஎதிலேயாவது குறை கண்டுபிடிச்சு, மத்தவங்களைக் கேவலமா பேசறதாலேயேஅவங்க என்னமோ ஒரு படி ஒசந்து இருக்கிறதா நினைக்கிற  சின்னப் புத் சதீஷூக்குக்கிடையாது!”

    சுப்பையாவின் சந்தேகம் முழுவதாக மாறவில்லை என்பதை அவருடைய கவலைதோய்ந்த முகமே காட்டிக்கொடுக்க, சியாமளா மேலும் சொன்னாள்: “நான் ஏன்இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கேன்னு எல்லாத்தையும் அவர்கிட்டேசொல்லிட்டேன். அவர் சொல்றாரு, ஒன்னோட நிஜ அழகு புரியாம ஒதுக்கிட்டுப்போனவங்க அடிமுட்டாளுங்க!’ அப்படின்னு சொல்றாருப்பா சதீஷ்!”

    வார்த்தைக்குவார்த்தை அவன் பெயரை உச்சரிப்பதிலேயே ஆனந்தம் காணும் மகளின் உற்சாகத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்க விரும்ப
    வில்லை சுப்பையா. `அவன் நிரந்தரமாக இந்த மலேசிய மண்ணில் கால் பதித்து இருக்கமுடியுமோ?’என்றுஆரம்பத்தில் எழுந்த உறுத்தல்கூட, `இந்த ஒலகத்திலே எதுதான் நிரந்தரம்!’ என்ற வேதாந்தத்தில் மறைந்தது.

    மாலையும் கழுத்துமாக சதீஷின் பக்கத்தில் அமர்ந்திருந்த சியாமளா மகிழ்ச்சியின் எல்லையிலிருந்தாள். ’இவனுங்களை எல்லாம் நம்பவே கூடாது. கையிலே பிள்ளையைக் குடுத்துட்டுஓடிடுவான்!’ என்று தோழிகள் எச்சரிக்கை செய்ததைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதது எத்தனை நல்லதாகப் போயிற்று!

    அவன் மனத்துள் இருக்கும் அன்பு பிறர் கண்ணுக்குத் தெரியவில்லை. ஏழை, அயல்நாட்டுக்காரன், அதிலும் அழகன் என்பதில்
    விளைந்த அலட்சியம், பொறாமை!

    தன்னைப்பற்றி தரக்குறைவாகப் பேசியவர்களைப் பொய்யர்களாக்கிவிட்டு, இப்போது தாலிகட்டி, மனைவியாக ஏற்றுக்கொண்டிருக்கிறான்!

    மாதங்கள் நிமிடங்களாகிப் பறக்க, தன்னைவிட பாக்கியசாலி எவருமில்லை

    என்றுஎண்ணி எண்ணி சியாமளா இறுமாந்துபோனாள். மேலே போனால், கீழே விழவும்கூடும் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

    `வேலைக்கு வந்த மலேசிய நாட்டில், இந்நாட்டுப் பெண்களைத்  திருமணம்புரிந்துகொள்ளக் கூடாது என்ற விதியை மீறிய அந்நிய நாட்டுத் தொழிலாளிகள் நாடுகடத்தப்படுவார்கள்!’ புதிய சட்டமொன்று அமுலுக்கு வர, சதீஷின்

    குறும்புப்பேச்சும், பெரிய கண்களின் மின்னல் வெட்டும் போன இடம் தெரியவில்லை. சியாமளாவுக்கோ, `இனி என்ன?’ என்ற கேள்வி மட்டும் விஸ்வரூபம் எடுத்து பயங்கரமாகத் தெரிந்தது. இப்படி அகாலமாக முடிவதற்காஅவ்வளவு இன்பம் நிறைந்த மணவாழ்வு கிட்டியது?

    அடுத்த பத்து நாட்கள் நகர முடியாது நகர்ந்தன. வீட்டில்
    அசாதாரண மௌனம் நிலவியது. அடுத்த அறிக்கை, `உள்நாட்டுப் பெண்களை மணந்தவர்கள் அவ்வப்போது குறுகியவருகை மேற்கொண்டு, தம் மனைவி மக்களை பார்த்துப் போகலாம்!’ என்று சிறிதுகருணையுடன் வெளிவந்தது.

    “சதீஷ்! நீங்க திரும்பிப்போக விடமாட்டேன்!“ கணவனைக் கட்டிக்கொண்டு கதறினாள்சியாமளா. தன்னை மணந்த செயல் ஒரு குற்றமா? அதற்குத் தண்டனைபோல் மீண்டும் பிறந்த நாட்டில் ஏழ்மையிலேயே உழல, திருப்பி அனுப்பி வைக்கப்படுவார் என்ற நினைவே அவளை வாட்டியது.

    தன் உடலைச் சுற்றியிருந்த அவளுடைய கரங்களை மெல்ல விலக்கினான் சதீஷ். “நான் திரும்பிப் போனா, அங்கே என்ன இருக்கு?

    எவ்வளவு படிச்சிருந்தாதான் என்ன! பசி, பட்டினிதான்! அங்கே நல்ல வேலை கிடைச்சிருந்தா, இங்கே எதுக்கு வந்துதொலைச்சிருக்கப் போறேன்!”

    சியாமளா அவன் முகத்தையே பார்த்தாள். என்ன சொல்ல வருகிறான்?

    “நல்லவேளை, நம்ப கல்யாணம் கோயில்ல நடந்திச்சு.
    இன்னும் பதிவு செய்யலே!”

    அவள் திடுக்கிட்டாள். கல்யாணமே நடக்கவில்லை என்றுசாதிக்கப்போகிறானா?அதற்காகத்தான் அவள் எவ்வளவோ வற்புறுத்தியும்,
    அவளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லையோ?

    சியாமளாவின் முகம்போன போக்கைக் கவனிக்கும் மனநிலையில் இருக்கவில்லை அவன். அது தன்னுடைய வாழ்க்கைப்பிரச்னை மட்டுமே
    என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தான்.

    “நாங்க ஏழைதான்! அதுக்காக, `வந்த இடத்திலே சன்னியாசிமாதிரி இருங்க!’அப்படின்னா முடியுமா? ஒன்னைப் பிடிச்சுத்தான் கல்யாணம் செய்துக்கிட்டேன்,சியாமளா. ஆனா, என் சுயநலத்துக்காக மத்தவங்க கஷ்டப்படணுமா?” “என்னசொல்றீங்க?” ஈனஸ்வரத்தில் கேட்டாள் சியாமளா

    “நான் சம்பாதிச்சு அனுப்பற பணத்தாலேதான் எங்கப்பா,
    அம்மா, தங்கச்சிங்க எல்லாரும் நல்லாச் சாப்பிடறாங்க. தம்பிங்களும் பள்ளிக்கூடத்துக்குப் போக முடியுது.

    நான் திரும்பிப்போறதா இல்லே!”சியாமளாவுக்குச் சற்றுத்தெம்பு பிறந்தது. வந்த வேகத்திலேயே அதுதொலைந்தது, அடுத்து அவன் கூறியதைக் கேட்டு.“நாம்ப ஒண்ணா
    இருந்தா, ஏதாவது தகறாறு வரும். அதனால வேற
    வேலைதேடிக்கிட்டேன். வேற ஊரிலே!”அவன் தன்னை விட்டுப் போகப்போகிறான்!

    அந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியாது, அவளுடைய வாய் பிளந்தது. மூச்சுக் கன வேகமாக, இரைப்பதுபோல் வெளிவந்தது.

    முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான். “நான் என்ன செய்யறது! எனக்கு வேறவழி தெரியலே!”
    மன்னிப்பு வேண்டும் தொனி.

    சதீஷ் சற்றும் எதிர்பாராத ஒரு காரியத்தைச் செய்தாள்
    சியாமளா. அவனைக் கையெடுத்துக் கும்பிட்டாள்.“என்னையும் ஒரு பொண்ணா மதிச்சு ஏத்துக்கிட்டீங்களே, அதுவே போதும்  நன்றின்னு வாய்வார்த்தையா சொன்னா நல்லாயிருக்காது.

    அப்பா மொதல்லேயே சந்தேகப்பட்டாரு, இந்த ஒறவு நிலைக்க முடியுமான்னு.

    ஆனா, கல்யாணம், கணவன்,குடும்பம் எல்லாம் வேணும்கிற வெறிதான் அப்போ இருந்திச்சு எனக்கு. இப்போ..!”மேலே பேசத் தெரியாது விக்கினாள்.

    குற்ற உணர்வும், வேதனையும் உலுக்க, “சியாமா!” என்று அவளை நெருங்கினான் சதீஷ்.

    சரேலென விலகிக்கொண்டாள். “சொல்ல இன்னும் என்ன இருக்கு! என் வேதனையை அதிகப்படுத்தாதீங்க. ப்ளீஸ்! இப்பவே இந்த வீட்டைவிட்டு போயிடுங்க! இனிமே வராதீங்க!” பெரிதாக அழ ஆரம்பித்தாள் சியாமளா.

    அவள் கெஞ்சுவாள், இல்லை ஆத்திரப்படுவாள் என்றெல்லாம் எதிர்பார்த்து எல்லாவற்றிற்கும் விடை தேடி வைத்திருந்தவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. தலைகுனிந்த
    நிலையில், தனது சொற்ப உடைமைகளைத் திரட்ட ஆரம்பித்தான்.

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (16)

    நிர்மலா ராகவன்

    காதல் வந்துவிட்டதே!

    நலம்-1-2

    பல ஆண்கள் என்மீது ஒருதலைப் பட்சமாக காதல் கொண்டிருந்தார்கள். எனக்கு அதனால் பெருமையோ, படபடப்போ எழவில்லை. மாறாக, சிரிப்புதான் வந்தது — அவர்கள் நான் பெற்ற குழந்தைகளைவிட இளையவர்கள் என்பதால்.
    ஆம், என்னிடம் படித்த மாணவர்களைத்தான் குறிப்பிடுகிறேன்.

    `டீச்சர்! ஒங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா?’ என்ற சீன இளைஞரை ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒன்றில் சந்தித்தேன்.

    `எங்கள் பள்ளியில் நான் கவுன்சிலர். நான் மாணவிகளுக்கு அறிவுரையோ, நல்லதொரு வழிகாட்டலோ வழங்கினால், உடனே காதல் கடிதம் எழுதிவிடுகிறார்கள். என்ன செய்வது?’

    `இது தவிர்க்க முடியாதது!’ என்றேன், பதிலுக்கு.

    எந்த ஆணை வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். பதினான்கு வயதில் ஏதாவது ஒரு ஆசிரியைமீது காதல் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்தக் காதல் வித்தியாசமானது. இதில் காமக்கலப்பு கிடையாது. `இந்தமாதிரி ஒரு பெண்ணைத்தான் நான் மணக்க வேண்டும்!’ என்ற ஆசைதான் தோன்றுமாம். (நான் சில ஆண்களைக்கேட்டு அறிந்த ஞானம்!). அவர்கள் குடும்பத்திலுள்ள அம்மா, அக்கா முதலிய பெண்களிலிருந்து ஏதோ ஒரு விதத்தில் இந்த ஆசிரியை வேறுபட்டிருப்பார்.

    மார்க் என்ற பையன் விஞ்ஞானப் பரிசோதனைக் கூடத்தில் எதைச் செய்யவும் அஞ்சுவான். `ஐயே! உடம்புதான் பெரிசு! பயந்தாங்கொள்ளி!’ என்று வகுப்பில் பெருவாரியாக இருந்த மலாய் மாணவர்கள் அந்த இந்தியப் பையனைக் கேலி செய்வார்கள்.

    ஏன் அப்படி இருக்கிறான் என்று அவனைத் தனியாக அழைத்து விசாரித்தேன். அவனுடைய தந்தை ஒரு விபத்தில் இறந்துவிட்டார் என்றும், அம்மா ஒரே மகனான அவனைப் பொத்திப் பாதுகாக்கிறார்கள் என்றும் அவன் கூறியதிலிருந்து புலப்பட்டது.
    அடுத்த முறை, `நீ இந்தப் பரிசோதனையைப் பண்ணு. நான் பக்கத்திலேயே நிற்கிறேன். ஒன்றும் ஆகாது!’ என்று தைரியம் அளித்துப்பார்த்தேன்.

    `உயிருக்கு ஒன்றும் ஆகாதே?’ என்று சந்தேகப்பட்டான்.

    `அப்படி ஆனால், நான்தான் போலீஸில் மாட்டிக்கொள்வேன்!’ என்று நான் சிரிப்புடன் கூற, சற்றுத் துணிந்தான். நாளடைவில், அவனுடைய தைரியம் பெருகியது. சற்று அபாயகரமாகவே நடக்க முனைய, நான் கண்டித்தேன். ஆனால், அவன் நல்லவிதமாக மாறிவிட்டான் என்ற பெருமிதமும் எழாமலில்லை.

    தானும் பிறரைப்போல தைரியசாலிதான் என்ற நம்பிக்கையும், அதனால் மகிழ்ச்சியும் எழ, அந்தக் குணம் வெளிப்படக் காரணமாக இருந்த ஆசிரியைமேல் ஈர்ப்பு வந்தது அந்தப் பையனுக்கு.

    ஒரு நாளைக்குப் பலமுறை என்னைத் தற்செயலாகப் பார்ப்பதுபோல் சந்தித்து, `இன்று உங்களுக்கு ஐந்து முறை குட்மார்னிங் சொல்லிவிட்டேன்!’ என்று பெருமிதப்படுவான். `எங்கள் வகுப்புக்கு வாங்களேன்!’ என்று, நான் இன்னொரு வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது உள்ளே நுழைந்து கெஞ்சுவான்.

    ஒரு நாள் பள்ளி ஆரம்பிக்குமுன் என் அறைக்கு வந்து, `டீச்சர்! உங்கள் கணவர் எங்கு உத்தியோகம் பார்க்கிறார்?’ என்று விசாரிக்க, நான் சற்று கோபத்துடன், `நான் என் குடும்ப விவகாரங்களை மாணவர்களுடன் விவாதிப்பதில்லை,’ என்றேன்.

    மார்க் மனந்தளராது, `எங்கம்மாவுக்கு அவரைத் தெரியுமாம்,’ என்றான். நாங்கள் இருவரும் ஏதோ விதத்தில் நெருங்கிவிட்டதைப்போல ஒரு பூரிப்பு அவனிடம்.

    அந்த ஆண்டின் இறுதியில் மார்க்கின் போக்கில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. பிறரும் அவனை முன்போல் கேலி செய்யாமல் ஏற்றுக்கொண்டார்கள்.

    அதற்கடுத்த வருடம் நான் அவன் வகுப்பில் பாடம் நடத்தவில்லை. ஆனால், என் வருகைக்காகக் காத்திருப்பவன்போல் பள்ளிக்கூட வாசலில் இருந்த சிமெண்டு பெஞ்சில் உட்கார்ந்திருப்பான். முகம் வேறு பக்கம் திரும்பியிருக்கும். உடலில் படபடப்பு தெரியும். கைகள் இறுகியிருக்கும். ஒருவழியாக, `குட்மார்னிங், டீச்சர்!’ என்று திக்கித் திணறிச் சொல்வான். சற்று வளர்ந்திருந்ததால், தன் போக்கில் அவனுக்கு வெட்கம் உண்டாகியிருந்தது.

    நான் வேறு பள்ளிக்கூடத்திற்கு மாற்றிப் போனபின், ஒரு நாள் மார்க்கை ஒரு பேரங்காடியில் பார்த்தேன். பெரியவனாக வளர்ந்திருந்தான். `ஹலோ, மிஸஸ். ராகவன்,’ என்றபடி, முகத்தைச் சட்டென திருப்பிக்கொண்டு, உடலை விறைத்தபடி நகர்ந்தான். அவன் பின்னாலேயே வந்துகொண்டிருந்த அம்மாவும், அக்காளும் பெரிதாகச் சிரித்தபோதுதான் எனக்கு விஷயம் விளங்கியது. என்னைப்பற்றி எப்போதும் வீட்டில் பேசிக்கொண்டிருப்பான் போலும்! வேறு சிலரும் இப்படி இருந்தார்கள்.

    அந்தந்த வயதில் ஏற்படும் உணர்வுகள் ஒருவருக்கு உண்மையாகத்தான் இருக்கும். அதைக் கேலி செய்யாது ஏற்கவேண்டும். ஒரு குழந்தை இடியோசை கேட்டு அஞ்சுவதுபோல்தான் இதுவும்.

    இதையெல்லாம் சீன நண்பரிடம் கூறினேன்.

    அவர் சமாதானம் அடையாமல், `இதை எப்படித் தவிர்ப்பது?’ என்று துளைத்தார்.

    எனக்கு வேறொரு நிகழ்ச்சி நினைவில் எழுந்தது. நீச்சல் குளத்தில் வேலையாக இருந்த ஜூல்கிஃப்லி என்ற ஒரு மலாய் இளைஞன் வேறு மாநிலத்திலிருந்து வந்திருந்தான். கோலாலம்பூரில் எல்லாமே அவனைப் பயப்படுத்தியது. நான் `குட்மார்னிங்¸ ஜூல்!’ என்று கூற, உற்சாகமாக என்னிடம் பேச்சுக்கொடுப்பான்.

    பிற பெண்கள் ஜூல்கிஃப்லியை வேலைக்காரன்போல் நடத்தியதைப்போல் இல்லாது, ஒரு நண்பனிடம் பழகுவதுபோல் அவனிடம் பேசினேன்.

    அவன் வயதில் மகள், மாப்பிள்ளை எல்லாரும் வீட்டில் இருக்கிறாள், ஆனால் நான் அதிகாலையில் நீஞ்ச வந்துவிடுவேன் என்று கேட்டு அவனுக்கு ஒரே ஆச்சரியம்: `எல்லாரும் காலை உணவுக்கு என்ன செய்வார்கள்?’

    `அது அவர்கள் பாடு!’ என்றேன், அலட்சியமாக.

    அவன் அதிர்ந்து போனான்.

    திடீரென்று ஒருநாள் உடலை நெளித்துக்கொண்டு, `எனக்கு எப்போது ட்ரிங்க்ஸ் வாங்கிக் கொடுக்கப்போகிறீர்கள்?’ என்று கொஞ்சலாகக் கேட்டானே, பார்க்க வேண்டும்! இப்போது நான்தான் அதிர்ந்தேன். திசை தெரியாது தவித்த ஒருவனுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று நினைத்து நான் பேசப்போக, இப்படி ஒரு திருப்பமா!
    அவன் முதுகில் பளாரென்று அறைவிட்டு, `ரொம்பப் பேசாதே! போய் வேலையைக் கவனி!’ என்று மிரட்டினேன்.

    அதன்பின் ஜூல்கிஃப்லி என்னிடம் வாலாட்டவில்லை. `

    சே! இவளும் நம் அம்மாபோல் இருக்கிறாளே!’ என்ற கசப்பான உண்மை புரிந்திருக்கும்.

    சீன நண்பரிடம் கூறினேன், `மாணவிகளை நீங்கள் அடிக்க முடியாது. ஆனால், நீங்கள் சிடுசிடுத்தாலே போதுமே! உங்கள்மீதுள்ள மோகம் போய்விடும்!’

    அவர் பெருமூச்சு விட்டார். `பிரச்னை’ என்று தன்னை நாடி வருகிறவர்களின் மனதை மேலும் நோகடிக்க வேண்டுமா என்ற குழப்பம் அதில் தெரிந்தது.

    தொடருவோம்

    Share
  • அம்மாபிள்ளை

    நிர்மலா ராகவன்

     

    பூங்கோதையின் அருகே சிறியதொரு மரக்கட்டிலில் கண்ணை மூடிப் படுத்திருந்தது அவனது முதல் சிசு.

    `அது இனி கண்ணைத் திறந்தாலும் ஒன்றுதான், மூடினாலும் ஒன்றுதான்!’ என்று நினைக்கும் போதே ஏதோ நெஞ்சை அடைத்துக்கொண்டது.

    “ஒங்களுக்கு நான் என்ன கொறை வெச்சேன்? இப்படிப் பண்ணிட்டீங்களே!” யாராவது ஏதாவது கேட்டால், ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசும் பூங்கோதை அன்றுதான் முதன்முதலாக அவ்வளவு ஆக்ரோஷத்துடன், சுயமாகப் பேசினாள். அதுவும் கணவனிடமே!

    அவளுக்கு விடையளிக்கும் திறனின்றி, தங்கராசு தலைகுனிந்த படி, ஆஸ்பத்திரி அறையை விட்டு வெளியேறினான்.

    அறைக்கு வெளியே நின்றிருந்த கோமளம் கண்ணில் வேதனையுடன் வெளிநடந்த மகனைப் பார்த்தாள்.

    `ஒன்னை எவ்வளவு ஒசத்தியா நினைச்சிருந்தேன்! சீ!’ அவள் மனதில் நினைத்தது அவனுக்குக் கேட்டது.

    மனைவி இருக்கையிலேயே கேடுகெட்ட  பெண்களை தேடிப் போயிருக்கிறான்!

    பத்து வயதுவரை தன் மடியிலேயே வைத்துக் கொஞ்சிய மகன்!

    “ஒங்கப்பா மாதிரி நீயும் என்னை விட்டுட்டுப் போயிடாதே, தங்கம்!” சிறுவயதில் அம்மா ஓயாது அரற்றியது அவனுக்குப் புரியத்தான் இல்லை. அப்பா அவர்களுடன் தானே இருந்தார்?

    குழப்பத்தினூடே, தனக்கு ஒவ்வொன்றையும் பார்த்துச் செய்யும் அம்மாவின் மேல் பரிதாபம் உண்டாயிற்று. அவளுடைய கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டான்.

    எல்லாரும் கடவுளுக்குப் படையல் செய்தால், அம்மாவுக்கு அவன் தான் தெய்வம். அவள் எது சமைத்தாலும், அவன் சாப்பிட்டுப் பார்த்ததும், `பிடிச்சிருக்கா தங்கம்?’ என்று பல முறை கேட்டு, தன் சம்மதத்தைக் காட்ட அவன் தலையாட்டினால் தான் இன்னொரு முறை அதைச் செய்வாள்.

    ஒரு முறை, ஏதோ நூதனமான உணவுப் பண்டத்தைத் தயாரித்து, அதை இவன், `நல்லாவே யில்லையே!’ என்று சொல்லிவிட, அவள் துடித்ததைப் பார்த்து, இனி அம்மா மனம் நோக எதையும் சொல்லக்கூடாது என்று நிச்சயித்துக் கொண்டான்.

    அன்றையிலிருந்து, எது சொல்வதற்கு முன்பும், `நான் இப்படிச் சொன்னால், அம்மா எப்படி எடுத்துக்கொள்வாள்?’  என்று யோசித்துப் பேச ஆரம்பித்தான். அதனால் பேசுவதே அபூர்வமாகிப் போயிற்று.

    தட்டில் அம்மா என்ன போட்டாலும், எவ்வளவு போட்டாலும், சாப்பிட்டான். `குண்டு’ என்று சகமாணவர்கள் கேலி செய்தபோது, `எங்கம்மாவுக்கு நான் இப்படி இருந்தாத்தான் பிடிக்கும்!’ என்று மறுமொழி அளிப்பான், வீம்பாக.

    அதிசயமாக ஒருமுறை, “எங்க ஸ்கூல்ல எல்லாரையும் உல்லாசப் பயணம் கூட்டிட்டுப் போறாங்கம்மா. நாலு நாள்! நானும் போறேனே!” என்று அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொஞ்சியபோது, “என்னைத் தனியா விட்டுட்டுப் போக ஒனக்கு அவ்வளவு ஆசையா, தங்கம்?” என்று அழுகைக்குரலில் கேட்ட கோமளம், அன்று பூராவும் எதுவும் பேசாது, எதையோ பறிகொடுத்ததுபோல வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

    மறுநாள் எல்லா மணவர்களும் பெயரைப் பதிவு செய்யும்போது, “ஏன் தங்கராசு, நீ வரலே?” என்று அதிசயப்பட்டுக் கேட்டாள் ஆசிரியை.

    “அவன் அவங்கம்மாவை விட்டு எங்கேயும் வரமாட்டான், டீச்சர்!” யாரோ ஒருவன் துடுக்காகச் சொல்ல, எல்லாரும் சிரித்தார்கள்.

    இந்த மாதிரி ரௌடிகளுடன் ஊர் சுற்றுவதற்கு, வீட்டு வாசலில் தனக்கென்று அம்மா வாங்கிப் போட்டிருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து பொழுதைக் கழிக்கலாம்!

    இவன் ஒதுங்க ஒதுங்க, மற்ற பையன்களின் தொல்லை அதிகமாயிற்று. போதாத குறைக்கு, இப்போதெல்லாம் அப்பாவும் சேர்ந்துகொண்டார்.

    தானுண்டு, தன் நண்பர்கள் உண்டு என்றிருந்தவருக்கு அப்போது தான் தனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்ற பிரக்ஞையே வந்திருந்தது.

    “இந்தா! அவனை அவன் வயசுப் பசங்களோட பழக விடு. இப்படி, வீட்டிலேயே பிடிச்சு வெச்சுக்கிட்டு!” பொங்கிய ஆத்திரத்தில் பல்லைக் கடித்துக்கொள்ள, முணு முணுப்பாக வந்தது குரல்.

    அதுவே பொறுக்கவில்லை கோமளத்திற்கு. “எல்லாம் எனக்குத் தெரியும். வீட்டிலேயே தங்காம, கூட்டாளிங்களோடேயே பொழுதைக் கழிக்க.., ஒங்கொருத்தரைப்போல, என் மகன் ஒண்ணும் சூதாடியோ, குடிகாரனோ இல்லே!”

    சூதாட்டம் தந்த போதையில், `இதைவிட வேறு சுகமில்லை!’ என்று தோன்றிப் போயிருந்தது அவருக்கு. திருமணமாகிய சில வருடங்களிலேயே, மனைவியை நாடுவதில் நாட்டம் அறவே போயிற்று. அதனாலேயே அவளுடைய ஏளனத்துக்கும், வெறுப்புக்கும் தான் பாத்திரமாகியிருந்தது அவருக்குத் தெரிந்துதான் இருந்தது.

    இப்போது தான் அதிகம் பேசினால், தன் குறையை உரக்க விமர்சித்து விடுவாளோ என்ற பயம் எழ, வாய் அடைத்துப் போயிற்று. `அம்மாவும், பிள்ளையும் எப்படியோ தொலையட்டும்!’ என்று கைகழுவிவிட்டார்.

    மகனையொத்த இளைஞர்கள் காதல், கீதல் என்று அலைந்து, தான்தோன்றித்தனமாக எவளையோ கல்யாணம் செய்துகொண்டு பெற்றோரைப் புறக்கணித்து விட்டுப் போவதைப் பார்க்கையில், கோமளத்திற்கு அவனைப் பற்றி அபாரப் பெருமை எழும்.

    `எங்க தங்கத்தைப்போல உண்டா! படிச்சான், வேலையில சேர்ந்தான். `இந்தாங்கம்மா,’ன்னு அப்படியே சம்பளப் பணத்தை என் கையில குடுத்துடறான். ஒரு சிகரெட்டு பிடிச்சிருப்பானா, இன்னி வரைக்கும்!’ எதிரில் யாரும் இல்லாவிட்டாலும் கூட  தானே மகன் பெருமையைப் பேசிக் கொண்டிருப்பாள், சலிக்காது.

    தங்கராசு நிச்சலனமாக இருந்தான். அம்மா சொன்னால் மகன் முடி வெட்டிக்கொள்ளப் போனான். எந்தக் கடையில் எப்படிப் பேரம் பேசி சாமான் வாங்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் உபதேசம் நடக்கும்.

    அம்மா இல்லாத ஒரு உலகத்தைக் கற்பனை செய்யக்கூட தங்கராசுவுக்குப் பயமாக இருந்தது. அம்மாவே பார்த்து முடித்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினான், அசட்டுச்சிரிப்போடு.

    அவனுக்குத் தெரியாது, பலரும் கோமளத்திடம், `ஒனக்கு வயசாகலே ஒரு மருமக வந்தா ஒனக்கு நல்லதுதானே?’ என்று கேட்டதன் விளைவு அது என்று.

    மகனுடைய அன்புக்காக மருமகளுடன் போட்டி போட வேண்டியிருக்குமே என்று முதலில் பயந்த கோமளம், மிகவும் சாதாரணமான ஒருத்தியைத் தேர்ந்தெடுத்தாள்.

    பூங்கோதை அம்மா மாதிரியே தெரிந்தாள்  தங்கராசுவுக்கு.

    முரட்டுத்தனமாகப் பேசியோ, நடந்தோ அவளை நோகடிக்கக்கூடாது என்று தோன்றிப்போயிற்று. ‘வேறொரு பெண்ணை — என்னதான் அவள் மனைவியாக இருந்தாலும் — நான் நாடினால், அம்மாவுக்கு வருத்தமாக இருக்காது? என்ற குழப்பம் வேறு எழுந்தது.

    கல்யாணமாகி இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் தன்னிடம் ஏதோ குறை இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்தது. ஏதோ வேகத்தில், உடன் வேலை செய்யும் ராமுவிடம் சொல்ல, மன்மதக்கலையைத் தொழிலாகக் கொண்டிருந்த பெண்களின் அறிமுகம் கிடைத்தது. அந்த அனுபவம் அளித்த வேகத்தில் மனைவிக்குக் கணவனாக இயங்க முடிந்தது.

    தான் தகப்பனாகப் போகிறோம்! தங்கராசுவுக்குள் ஒரு நிறைவு. முதன்முறையாக, அம்மா சொல்லிக் கொடுக்காமல் ஒரு காரியத்தைச் செய்திருக்கிறோம்!ஆனால், அந்தப் பெருமையும், பூரிப்பும் நிலைக்கவில்லை.

    “குழந்தைக்குப் பிறவியிலேயே பார்வையில்லை. கருவிலேயே காம நோயால் பாதிக்கப்பட்டு..,” என்று டாக்டர் கூறிக்கொண்டே போனபோது, தங்கராசுவுக்கு ஒன்றுதான் புரிந்தது. தன்னால் எதையுமே உருப்படியாகச் செய்ய முடியாது.

    “எனக்கு ஒண்ணுமே தெரியாதும்மா. ராமுதான் சொல்லிக்குடுத்தான்!” என்று சிறுபிள்ளையாகவே ஆகி, பயத்தில் திக்கியபடி அவன் கூறியபோது, கோமளத்தின் இதழ்களில் ஒரு சிறு புன்னகை.

    மகனைப் பிறரிடம் இழந்து, தனிமைக்கு ஆளாகி விடுவோமோ என்ற பயம் இனி கிடையாது. அவன் என்றும் அவள் குழந்தை தான்!

    Share
  • கபாலியும் மலேசியர்களும்

    –நிர்மலா ராகவன்

     

    kabali pic

    ’இப்போ யாரைக் கேட்டாலும், மலேசியாவிலதான் வேலை பாக்கிறதாச் சொல்றாங்க!’ சமீபத்தில் தமிழ்நாட்டில் நான் கேட்டது இந்த விமரிசனம்.

    இங்கு வேலை பார்க்க வருகிறவர்கள் பன்னிரண்டிலிருந்து ஐம்பது பேர் ஒரே இடத்தில் படுத்துக்கொண்டு, குடும்பத்துடன் இருக்க வாய்ப்பில்லாது (இந்தோனீசியர்களைத் தவிர பிற ஆண்கள் தம் மனைவியரை அழைத்து வர அனுமதி கிடையாது), விடுமுறை நாட்களில்கூட வெளியூருக்கு எங்காவது போகாது, முடிந்தவரை காசைச் சேமித்துக்கொண்டு தாய்நாடு திரும்பும்போது, தாம் அனுபவித்த இன்னல்கள் பிறருக்குத் தெரியாதவண்ணம் பார்த்துக்கொள்வார்கள். அப்போதுதானே மிதப்பாக நடக்கலாம்!

    இதனால், மலேசியாவில் எல்லாத் தமிழர்களும் கோடீஸ்வரர்கள், பணத்தை வாரி இறைப்பவர்கள் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மைக்கும் இந்த நம்பிக்கைக்கும் வெகு தூரம் என்பதுதான் சரியான நிலவரம்.

    மலாயாவில் இருபதாம் நூற்றாண்டில் வேலை பார்த்த எஸ்.ஏ. கணபதி என்ற தொழிலாளி ஒரு விதத்தில் கபாலி என்கிற நாயகனுக்கு முன்னோடி எனலாம். இவர் இளம் வயதிலேயே மலாயா தொழிற்சங்க இயக்கத்தின் தேசியத் தலைவரானார்.

    ஒரே வேலையைச் செய்தாலும், ஒரு நாளைக்குச் சீனர்களுக்கு அறுபது காசு, இந்தியர்களுக்கு நாற்பது காசு என்று ஆங்கிலேய முதலாளிகள் நிர்ணயித்ததை எதிர்த்தார். தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்யத் தூண்டுகோலாக அமைந்தார். முதலாளித்துவத்தை எதிர்த்தால் என்ன ஆகும்? அவர் தூக்கிலிடப்பட்டார். (ஆதாரம்: மலேசிய நண்பன், ஞாயிறு பதிப்பு, ஜூலை 31)

    நான் ஐம்பது வருடங்களுக்குமுன் கோலாலம்பூருக்கு வந்தேன். அப்போது தமிழர்கள் பெரும்பாலும் தோட்டப்புறம், அதாவது ரப்பர் எஸ்டேட்டுகளில்தான் வேலை செய்துவந்தார்கள். அவர்கள் தமிழ்நாட்டில் திருச்சி, மதுரை முதலிய நகரங்களுக்கு அருகே இருந்த கிராமங்களிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள். அனேகருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. பெரிய நகரங்களிலோ தெருக்கூட்டுவது போன்ற கடைநிலை ஊழியங்களைத்தான் செய்துவந்தார்கள்.

    ’இங்குள்ள இந்தியர்களுக்குள் ஒற்றுமையே இல்லையே!’ என்று நான் என் குடும்பத்தினரிடம் பலமுறை சொல்லி அங்கலாய்த்ததுண்டு. இதனாலேயே இவர்களை கீழ்நிலையிலேயே வைத்திருப்பது பிறருக்குச் சாத்தியமாயிற்று.

    கல்விகற்றால் உயரலாம் என்று சிலருக்குப் புரிந்துபோயிற்று. ஆனால், அதுவும் கடினமாகத்தான் இருந்தது. ஏழ்மை நிலையில் புத்தகம், சீருடை என்று வாங்கக் காசில்லை.

    நான் கற்பித்த  முதல் பள்ளியில், சீன, ஆங்கில-சீன ஆசிரியைகள் ஒரு தமிழ்ப் பையனைப்பற்றி ஆசிரியைகளின் பொதுஅறையில் ஓயாது குற்றம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவன் செல்வந்தர் வீட்டுப் பையன். அதனால், இவர்கள் மட்டம் தட்டிப்பேசுவதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. முடிந்தவரை மரியாதையுடன் எதிர்த்திருப்பான்.

    ஒரு முறை, `நீ அவனைப்பற்றி எதுவுமே சொல்வதில்லையே!’ என்று அதிசயப்பட்டு என்னிடம் கேட்டபோது, நான் யோசிக்காது, “Indian boys are no problem in my class!” (இந்திய மாணவர்கள் என் வகுப்பில் பிரச்சனைகள் அளிப்பதே கிடையாது!) என்றுவிட்டேன். அவர்கள் முகம் அவமானத்தால் சுருங்கியது. அப்போதுதான் RACISM என்ற வார்த்தைக்கே அர்த்தம் புரிந்தது எனக்கு.

    (சீனப்பையன்கள் அதைவிட அதிகமாக, மரியாதைகெட்டத்தனமாக நடக்கலாம். ஆனால், `இந்தச் சீனர்களே இப்படித்தான்!’ என்று அவர்களை யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். மாட்டிக்கொள்வதெல்லாம் சாதுவான தமிழர்கள்தாம். அதுவும், அழகாகவோ, திறமைசாலியாகவோ இருந்தால் போயிற்று!).

    இன்னொரு பள்ளியில், ஒரு வகுப்பறையில் ஆசிரியை கணக்குப்பாடம் நடத்திக்கொண்டிருக்க, தமிழ் மாணவிகள் ஆறுபேர் கும்பலாக உட்கார்ந்துகொண்டு, தம்பாட்டில் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களைத் தனியே அழைத்துக் கேட்டபோது, `உங்களுக்கு இதெல்லாம் புரியாது. என்ன வேண்டுமானாலும் பண்ணுங்கள்!’ என்று ஆசிரியை சொல்லிவிட்டதாக அறிந்தேன்; அதிர்ந்தேன்.

    நான் தினமும் மிக் கவனமாக அலங்கரித்துக்கொண்டு போவேன். உதட்டுச்சாயம், எனக்காகப் பிரத்தியேகமாகச் செய்யப்பட்ட காலணி (இரண்டு, மூன்று நிறங்களில்கூட இருக்கும்), வளையல், கைக்கடிகாரப்பட்டை எல்லாமே என் புடவை நிறத்தில்தான் இருக்கும். எனக்கு அலங்காரத்தில் பிரியம் என்பதால் மட்டுமில்லை, `உங்களாலும் உயர முடியும். ஏழ்மையைக் கண்டு அஞ்சாதீர்கள்! அது நிலையானதில்லை’ என்று மாணவிகளுக்கு நான் மறைமுகமாக அளிக்க விரும்பிய போதனை அது.

    தொலைக்காட்சிக்கு என்னைப் பேச அழைக்கும்போது, `ஒரு நிபந்தனை. ஒரு நிமிடத்துக்கு ஒரு புடவை மாற்றுவேன்,’ என்றுவிடுவேன். அது வேடிக்கை என்று நினைத்து சிரிப்பார்கள் இயக்குநர்கள். ஒரு நிகழ்ச்சிக்குப்பின், நான் வேறு ஒரு ஊருக்குப் போயிருந்தபோது, `உங்களை டி.வியில பாத்தேன். Very nice saris!” என்று கிறங்கினார், வசதிகுறைந்த நிலையிலிருந்த ஒரு ஆண்!

    கபாலி படத்தில் ரஜினி விடாப்பிடியாக கோட்டு அணிந்து வருவதும் இதைப்போல்தான் என்றே தோன்றுகிறது.

    படத்தின் இறுதியில், கல்லூரியில் படிக்கும் பெண்கள் கபாலியிடம் முறையிடுவதுபோல் வருகிறதே, அதுவும் இன்றைய நடப்பைக் காட்டுகிறது.

    ஒரு சில இந்திய வம்சாவளியினர் (ஆரம்பத்தில்  வந்தவர்களில் 80% தமிழர்கள்தாம்) நன்றாகப் படித்துத் தேர்ச்சி பெற்றாலும், கல்லூரிகளில் இடம் கிடைக்காது, உபகாரச் சம்பளம் கிடைப்பதும் துர்லபம்தான் என்ற நிலை. எப்படியோ படித்துத் தேர்ச்சி பெற்றாலும், அரசாங்க வேலை கிடைப்பது கடினம். பிற இடங்களில் அனுமதிக்கப்பட்டதைவிட பாதி சம்பளத்திற்கு வேலை செய்யவென ஆப்பிரிக்கா, நேபால், பங்களாதேஷ், மியன்மார், இந்தோனீசியா, வியட்நாம், தாய்லாந்து என்று உலகின் பல பாகங்களிலிருந்தும் ஆட்கள்தாம் வந்து  குவிகிறார்களே!

    இதெல்லாம் புரியாது, `இவ்வளவு பணக்கார நாட்டில் நாம் ஏன் ஏழைகளாக இருக்கவேண்டும்?’ என்ற ஆத்திரத்துடன் சிலர் குண்டர் கும்பலில் சேருகிறார்கள். இல்லை, சேர்க்கப்படுகிறார்கள். இதனால் பணத்துடன், அந்தஸ்தும் கிடைக்கிறது. இவர்கள் பிறரைப் பார்த்துப் பயந்தது போக, பிறர் இவர்களைப் பார்த்துப் பயப்படுகிறார்களே, போதாதா?

    சட்ட விரோதமான செயல்களால் பொருளீட்டுபவர்களில் பலர் தம் நிலையை மறப்பதில்லை. வசதிகுறைந்த இந்தியர்களுக்கும், விதவைகளுக்கும் பலவாறாகப் பொருளுதவி செய்கிறார்கள். இப்படி ஒருவர் அண்மையில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், அவருடைய இறுதி ஊர்வலத்தில் பலர் ஆழ்ந்த வருத்தத்துடன் கலந்துகொண்டனர். அவருடைய படத்தைத் தாங்கிய பெரிய, பெரிய போஸ்டர்கள் எங்கும் காணப்பட்டது என்கிறது ஒரு செய்தி.

    திரைப்படம் என்றால் சும்மா பொழுதுபோக்கிற்குத்தான் என்று தியேட்டருக்குப் போகிறவர்களுக்கு வேண்டுமானால் கபாலி ஏமாற்றத்தை அளித்திருக்கலாம். ஆனால் மறைக்கப்பட்டிருந்த பல உண்மைகளை (ஊழல்களை?) கபாலி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது — படத்தில் வரும் பாத்திரங்கள் எவரையும் குறிப்பன அல்ல என்ற முன்னுரையுடன்!

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் .. (14)

    நிர்மலா ராகவன்

    மாமனார் மெச்சிய மருமகன்

    நலம்-

    `என் கணவரோட அண்ணனை இப்போ பாத்தா, சுட்டுக் கொன்னுடுவேன்!’

    நானும் என் சிநேகிதி மாதங்கியும் காரில் பயணித்துக் கொண்டிருந்தோம். மூன்று மணி நேரப் பயணம். அரை மணி நேரம் ஏதேதோ பேசிவிட்டு, அவள் தன் திருமணக் கதையை விவரிக்க ஆரம்பித்தாள். பாதியில், ஆத்திரத்துடன் தன் கொலைவெறியை வெளிப்படுத்தினாள்.

    அப்படி என்னதான் ஆகிவிட்டது?

    தந்தையின் செல்லப்பெண் குடும்பத்தில் கடைக்குட்டியான மாதங்கி. அயல் நாடுகளில் பத்து வருட கல்லூரிப் படிப்பு படித்திருந்தாலும், ஆண்களுடன் அதிகப் பழக்கம் இருக்கவில்லை அவளுக்கு.

    படிப்பு முடிந்ததும் கைநிறையச் சம்பளத்துடன் உத்தியோகம். அடுத்தது கல்யாணம்தானே!

    வேற்றூரில் இருந்த தந்தை, `நம் சாதியிலேயே ஒரு பையன் இருக்கிறார். உன்னைமாதிரியே நன்றாகப் படித்தவர். நீ போய் பார்!’ என்று தொலைபேசிவழி கூற, மகள் மறுத்தாள்.

    மாப்பிள்ளைப் பையனும், அவரது அண்ணனும் அவளைப் பார்க்க வந்தார்கள். ஏதோ பொது இடத்தில்.

    அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. தட்டிக்கழிக்கப் பார்த்தாள்.

    மாப்பிள்ளைக்கும் சந்தேகம் வந்தது: நம் சாதியில் இவ்வளவு படித்த பெண்களே கிடையாதே! இவள் நம்மை மதிப்பாளா?

    “அந்த அண்ணன்தான் இவர் மனசைக் கலைச்சிருக்கணும் — `அவ நல்லா சம்பாதிச்சுப் போடுவா. நீ மொதல்லேயே அடக்கி வைச்சுடு,’ அப்படின்னு,” மனம்நொந்து பேசினாள்.
    “என் பெற்றோர் ஏழைத் தொழிலாளிகளாக இருந்தவர்கள்,” என்று வருங்காலக் கணவர் ஒப்புக்கொள்ள, `நம் பெற்றோரும் அப்படித்தானே!’ என்று அவளுக்குத் தோன்றிப்போயிற்று. ஆண்களுடன் கலந்து பழகியது கிடையாததால் அவர் குணம் அவளுக்குப் பிடிபடவில்லை. கல்லூரியில் அவ்வளவு தூரம் அவளைப் பொத்திப் பாதுகாத்திருந்தனர் இரு அண்ணன்களும்.

    வருங்கால மாப்பிள்ளை அடிக்கடி மாமனாரைச் சந்தித்தான். இப்போது அவர் பெரிய முதலாளியாகி இருந்தார், கடுமையான உழைப்பினாலும், நேர்மையாலும். அவனுடைய போலிப்பணிவில் மயங்கினார் பெரியவர்.

    தந்தையே இவ்வளவு தூரம் வற்புறுத்தும்போது சரியாகத்தான் இருக்கும் என்று கல்யாணத்திற்கு ஒப்புக்கொண்டாள் மாதங்கி.

    கணவரோ, தாய் சொல்லியபடியெல்லாம் ஆடினார். அவள் பேச்சைக் கேட்டுக்கொண்டு மனைவியை நையப் புடைத்தார்.

    “ஏன் பொறுத்துப் போனீர்கள்?” என்று கேட்டேன்.

    மலேசியாவில் சிறிய ரப்பர் எஸ்டேட்டில் வளர்ந்திருந்த பெண். தன் அறிவுத்திறனாலேயே பலரும் மதிக்க வாழ்ந்திருந்தாள். எது கேட்டாலும், `போ. படி!’ என்று தந்தை விரட்டியதாலேயே தான் இந்த நிலைக்கு உயர்ந்ததாகச் சொல்லிச் சிரித்தாள்.

    அப்படிப்பட்ட தந்தை பார்த்து வைத்த மருமகன்! அவரைப்பற்றிக் குற்றம் சொல்வது தந்தையைப் பழிப்பதுபோல் ஆகிவிடுமோ?

    தான் சொன்னாலும் தந்தை நம்புவாரா?

    `ஆண்கள் முன்னேபின்னேதான் இருப்பார்கள்!’ என்று அவளைச் சமாதானம் செய்துவிட்டால்?

    தான் கணவரிடம் படும் பாடு பிறருக்குத் தெரியாதிருந்தால்தான் தனக்கு மரியாதை என்று கணக்குப்போட்டாள் அப்பேதை.

    எப்போது பார்த்தாலும், `எங்க ஐயா!’ என்று கணவரைப்பற்றி பெருமையுடன் மாதங்கி பேசியதைக் கேட்டிருந்தேன் நான். அப்போதெல்லாம், `தாலி கட்டியவரிடம் எப்படி உயிரையே வைத்திருக்கிறாள்!’ என்று வியந்து போயிருக்கிறேன்.

    ஒரு பொது நிகழ்ச்சியில் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தபோது அதிர்ந்து போனேன். குணவானாகத் தெரியவில்லை. இவரைப்பற்றியா பெருமையாகப் பேசுகிறாள்!

    சில ஆண்டுகள் கழித்து, நானும் மாதங்கியும் ஓர் ஊருக்கு ஒன்றாகப் பயணம் செய்துகொண்டிருந்தபோதுதான் அதற்கு மேலும் பொறுக்க முடியாது, என்னிடம் எல்லா உண்மைகளையும் கூறினாள். அதற்காகவே என்னை வருந்தி அழைத்திருந்தாள் என்றுதான் தோன்றியது.

    ஏதோ வேகத்துடன், ஒரே மூச்சில் சொல்லி முடித்தவள், “எல்லாத்தையும் இப்பவே மறந்துடுங்க, நிர்மலா!” என்று கெஞ்சியபோது எனக்குப் பரிதாபமாக இருந்தது.

    கணவர் மோசமாக இருந்தால் இருந்துவிட்டுப் போகிறார்! அதனால் அவரை மணந்த பெண்ணுக்கு என்ன இழுக்கு? அவள்மேல் என்ன தவறு? எதற்காக மூடி மறைத்து, பொய்யான வாழ்க்கை வாழவேண்டும்?

    நாங்கள் திரும்புகையில், அவள் கணவரிடமிருந்து அழைப்பு வந்தது. “ஸாரிம்மா. என்னால ஒன்கூட வரமுடியலே!’ என்று உருகினார். தான் கிளப்பில் குடித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னாராம். மனைவி சம்பாதிப்பதையெல்லாம் பின் எப்படித்தான் செலவழிப்பது?

    இவள் அலட்சியமாக, “அதனால என்ன! என் கூட்டாளி எங்கூட வந்திருக்காங்க,” என்றாள்.

    “யாரு?”

    “நிர்மலா ராகவன்!”

    “ஒங்க பேரைக் கேட்டு அவருக்கு ஒரே ஷாக்! என்னை நம்பலே!” என்றாள் பெருமையுடன் சிரித்தபடி. “நீங்க பேசுங்க!”

    நான் அவருக்கு `ஹலோ’ சொன்னேன். அந்தப் பக்கத்திலிருந்து வார்த்தைகள் எதுவும் வரவில்லை.

    அவள் தொலைபேசியை மூடிவிட்டுப் பெரிதாகச் சிரித்தாள்.

    நானும் லேசாகச் சிரித்தேன். `தான் எப்படி வளைத்தாலும் வளைந்து கொடுக்கும் மனைவி எதற்காக இப்படி ஒரு தோழியைத் தேடிப் பிடித்தாள்? நம் போதாத காலம், இவளுக்கு எங்காவது தன்னை எதிர்க்கும் தைரியம் வந்துவிட்டால்?’ என்று அஞ்சியிருப்பார்.

    எனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா? இதேபோல் வேறு ஒரு பெண் என்னை நாடி, தான் கணவரிடம் படும் அவதிகளைக் கேலியுடன் கூற, எங்கள் வீட்டுக்கு வந்திருந்தவர் `போகலாம். வா!’ என்று அவளை இழுக்காத குறையாக திரும்ப அழைத்துப்போனார்!

    தாம் செய்வது — மனைவியைக் கேவலமாக நடத்துவது, உடல்வதை மட்டுமின்றி, பிறர்முன் மட்டம் தட்டி, உணர்ச்சிபூர்வமாகவும் வதைப்பது — தவறு என்று இவரைப் போன்ற ஆண்களுக்குத் தெரியாமல் இல்லை. தெரிந்தே செய்வதால், தம்மை மாற்றிக்கொள்ளும் எண்ணமும் இவர்களுக்கு இல்லை. ஆகையால், அது `தவறு’ என்று பிறர் சுட்டிக்காட்டுவது பொறுக்க முடியாததுதான்.

    பெண்ணுக்குப் பொறுமைதான் சிறந்த ஆபரணம் என்று நம்பவைக்கிற, நம்புகிற, பிற பெண்கள் இருக்கும்வரை இத்தகையவர்கள் எதற்காக மாறப்போகிறார்கள்!

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல்! (15)

    நிர்மலா ராகவன்

    குழந்தைகள் காட்சிப்பொருட்களல்ல

    நலம்-

    எங்கள் உறவினர் பெண் ஒருத்தி தன் குழந்தையின் புத்திசாலித்தனத்தைப் பார்த்துப் பூரித்துப்போனாள். அருகில் இருப்பவர்களிடமெல்லாம், `இவளைப் பாருங்களேன்!’ என்று கூவுவாள். தாய் ஓயாமல் பார்ப்பதையெல்லாம் விளக்க, மகளின் அறிவு வயதுக்கு மீறி வளர்ந்திருந்தது என்னவோ உண்மை.

    ஆம், முதல் குழந்தைதான். இரண்டு வயது. பிறருக்கு அவளுடைய `நிர்ப்பந்தம்’ அலுப்பாகிவிட்டது. என்னிடம் குறைப்பட்டுக்கொண்டார்கள்: `எப்பவும் அந்தக் குழந்தையையே நாம்ப பார்த்துக் கொண்டிருக்கணும்!’

    `எத்தனையோ குழந்தையைப் பாத்தாச்சு!’ ஒரு முதிய பெண்மணியின் அலுப்பு.

    அடுத்த முறை அந்த இளம் தாய் என்னுடன் தொடர்பு கொண்டபோது, `உன் குழந்தை எப்படி இருக்கிறாள்? Don’t show her off!’ என்று அறிவுரை கூறினேன். (கண்டனம் தெரிவிப்பது ஆங்கிலத்தில் எவ்வளவு எளிதாக இருக்கிறது!).

    `இப்போதெல்லாம் நான் அப்படிச் செய்வதில்லை. அவளுடைய அப்பாவை அப்படித்தான் செய்தார்களாம். அதனால், `ஓயாமல் பெண்ணைப்பற்றி பெருமையாகப் பேசாதே!’ என்றுவிட்டார்,’ என்று தெரிவித்தாள்.

    அந்த மனிதர் சிறு வயதில் கர்னாடக இசையில் கேள்வி ஞானத்திலேயே சிறந்து, பல போட்டிகளில் வென்றிருக்கிறார். வருகிறவர் போகிறவர்களிடமெல்லாம் அச்சிறுவன் பாடுவதைக் கேட்க வைப்பார்கள் அவனுடைய பெற்றோர். அவனைப் பாடச்சொல்லி, காசெட் வேறு எடுத்துக் கொடுப்பார்கள்.

    பெரியவனானதும், `எனக்கு கர்னாடக சங்கீதம் என்றாலே வெறுப்பாகிவிட்டது!’ என்கிறார் அந்த தந்தை. பெற்றோரை எதிர்க்க முடியாது, அவர்கள் விருப்பப்படியெல்லாம் ஆடியது இப்போது நினைத்தாலும் கசப்பாக இருக்கிறது, பாவம்! மிக நெருங்கியவர்களிடம் சொல்லி வருந்துவதுதான் அவரால் செய்ய முடிந்தது.

    நம் குழந்தை சிறந்திருந்தால் நமக்குத்தான் பெருமை. இதுவும் ஒருவித தற்பெருமைதானே! தவிர்க்கலாம்.

    `வயதில் மூத்தவர்களை திருப்திப்படுத்த மட்டும்தான் தான் வாழ்கிறோம்,’ என்ற நினைப்பு எந்தக் குழந்தைக்கும் கசப்பாகத்தான் இருக்கும். அதனுடைய தனித்தன்மையை வெளிக்கொணர்வதுதான் பெற்றோர் செய்யக்கூடிய உபகாரம்.

    தான் பெறாத திறமையை தான் பெற்ற குழந்தை (ஆணோ, பெண்ணோ) பெற்றுவிட்டான் என்ற பெருமிதத்தில் பார்ப்பவர்களிடம் எல்லாம் அவனைப்பற்றி பெருமையாகப் பேசும் தாய்மார்கள் சகஜம்.

    நம் குழந்தையால் நமக்குத்தான் பெருமை. மற்றவர்களுக்கு என்ன வந்தது!

    என் சுயக்கதை: இசையும், நடனமும் மிகச் சிறு வயதிலேயே எனக்குப் பிடிக்கும். நான் நாட்டியம் கற்றுக்கொண்டது பரதநாட்டியம் என்பது ஒரு குறிப்பிட்ட சாராருக்குத்தான் என்றிருந்த காலத்தில்.

    எங்கள் வீட்டுக்கு வருகை புரியும் முதிய பெண்மணிகள், `என்னமோ டான்ஸ், டான்ஸ் என்கிறாளே! அது எப்படீடி இருக்கும்?’ என்று என் அம்மாவைக் கேட்பார்கள். விசேட காலங்களில் கோயில்களில் சில பெண்கள் நாட்டியம் ஆடும்போது, அதைப் பார்ப்பதுகூட தம் கௌரவத்திற்கு இழுக்கு என்பது போலிருந்தது இவர்களது மனப்போக்கு. அதனால் நாட்டியம் என்பதே இவர்களுக்கு அந்நியமாகப் போய்விட்டது.
    அடுத்தது நான் வேண்டாவெறுப்புடன் எதிர்பார்த்ததுதான். ‘நிர்மலா ஆடுவாளே!’ என்று என் தாய் என்னை அழைப்பார்கள்.

    என் திருப்திக்காக நான் எப்போதும் ஆடிக் கொண்டிருப்பேன். ஆனால், கண்காட்சிப் பொருளாகத் தான் அமைவதை எந்தக் குழந்தைதான் விரும்பும்?

    `எதுக்கும்மா?’ என்று கொஞ்சம் முனகிவிட்டு, அம்மாவின் முறைப்பைத் தாங்கமுடியாது ஆடுவேன். எப்படித் தெரியுமா? கன்னங்கள் ஒட்டியிருக்கும்படி வாய்க்குள் இடுக்கிக்கொண்டு, இல்லையேல், வாயை இறுக மூடி, மேல் உதடு மூக்கில் படும்படி பொருத்திக்கொண்டு! (முயன்று பாருங்கள்!)

    கோரமாக இருந்தால், `இன்னொரு பாட்டுக்கு ஆடு!’ என்று கேட்க மாட்டார்களே! என் அதிருப்தியை பின் எப்படித்தான் வெளிக்காட்டுவது!

    அடுத்த முறை, `சிரிச்சுண்டு ஆடு!’ என்று அம்மா தாஜா பண்ணுவாள். சிரிப்பு என்னவோ வராது.

    ஒரு முறை, வேற்றூரிலிருந்த ஒரு சிநேகிதியின் வீட்டுக்குப் போயிருந்தேன். அவள் கணவர் பெருமையுடன், `எங்கள் மகள் அற்புதமாக ஆங்கிலத்தில் கவிதை எழுதுவாள்,’ என்று கூறியபடி, மகளைக் கூவி அழைத்தார்.

    முகத்தைத் தூக்கிக்கொண்டு வந்தாள், அந்த பதினேழு வயதுப் பெண். `I know! It is a set-up!’ என்று பெற்றோரைக் குற்றம் சாட்டினாள்.

    என் இளமைக்காலம் நினைவில் வந்தது. அவளுடைய வேண்டாவெறுப்பு புரிந்து, நான் அவளுடைய பயத்தைப் போக்கினேன். `அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உங்கள் வீட்டு அலங்காரப் பொருட்களைப் பார்ப்பதற்காகத்தான் என்னை அழைத்து வந்தார்கள். உனக்கு விருப்பமில்லாவிட்டால் காட்ட வேண்டாம்!’ என்றுவிட்டேன்.

    அவள் உள்ளே போனாள், பெற்றோரின் அதிருப்தியைச் சட்டைசெய்யாது.

    `இன்னொரு முறை வந்தால், எங்கள் வீட்டு சாமிக்கும் நீங்கள் பாட வேண்டும்,’ என்று வேண்டுகோள் விடுத்தார் அந்த நண்பர். (அதற்கு முன்னால் கோயிலில் நான் பாடியதைக் கேட்டிருந்தார்).

    `இப்போதே பாடுகிறேனே,’ என்று உடனே தரையில் உட்கார்ந்தேன். இது தற்பெருமையோ, கர்வமோ அல்ல. (`யாராவது உன்னை பாடச் சொன்னால், உடனே பாட வேண்டும். பிகு பண்ணிக்கொள்ளக் கூடாது! அது தவறு,’ என்று என் குரு போதித்திருந்தார்).

    நான் பாடி முடித்ததும், அப்பெண் தான் எழுதிய கவிதைகளை வலியக் கொண்டுவந்து காட்டினாள்!

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் ! (13)

    நிர்மலா ராகவன்

    தாயைப்போல் பிள்ளையா!

    நலம்-

    ‘யாருக்கெல்லாம் இன்னும் அதிகமாகப் படித்திருக்கலாம் என்ற குறை இருக்கிறது?’ என்று, தமிழ்ப்பெண்களுக்கான ஒரு கருத்தரங்கில் நான் உரையாற்றி முடித்ததும் கேட்டேன்.

    முக்கால்வாசிக்கும் மேற்பட்டவர்கள் கைதூக்கினார்கள்.

    அவர்களுக்குப் படிப்பில் நாட்டமில்லாமல் போகவில்லை. ஆனால் அவர்கள் பெற்றோர் ஆண்பிள்ளைகளை மட்டும் நிறைய படிக்க வைத்தார்கள். பெண்கள், `அண்ணன் மட்டும் என்ன உயர்த்தி?’ என்று வாதாட, `அவன்தான் கடைசி காலத்திலே எங்களை வெச்சுக் காப்பாத்துவான்!’ என்று பதில் வந்ததாம்.

    என் மாணவியரில் ஒருத்தி, `எனக்கு ஒரு பெண் பிறந்தால், அவளை நிறையப் படிக்க வைப்பேன்,’ என்று அழுகைக்குரலில் கூறியிருந்தது நினைவில் எழுந்தது. அவள் சீனப்பெண். ஆனால், பிரச்னை என்னவோ ஒன்றுதான்.

    `அண்ணன்தான் உங்களை வெச்சுக் காப்பாத்துவான்னு என்ன நிச்சயம்?’ என்று சண்டைகூட போட்டுப் பார்த்தாளாம். `பலனில்லை,’என்று என்னிடம் தெரிவித்தாள். சூடிகையான பெண். ஆனால் முன்னுக்கு வர வாய்ப்பில்லை.

    இம்மாதிரி, `வாய்ப்பை இழந்துவிட்டோமே,’ என்று வருந்தும் பெண்கள் தாம் கண்ட கனவுகளை தமக்குப் பிறக்கும் குழந்தைகள்மூலம் நிதரிசனமாக்கிக்கொள்ளப் பார்க்கிறார்கள். ஆகவே, தனக்குப் பிடித்ததெல்லாம் மகளுக்கும் பிடிக்க வேண்டும், அதில் திறமையும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்!

    இது நடக்கிற காரியமா?

    மகள் தன் தந்தையை ஒத்திருக்கலாம், அல்லவா?

    கதை: அருணா துணி தைப்பது, சித்திரம் வரைதல் என்று நுண்கலை சம்பந்தப்பட்டவைகளில் திறமை வாய்ந்திருந்தாள். தான் பெறாத கல்வியுடன், இவைகளிலும் மகள் ஆனந்தி தேர்ச்சி பெறவேண்டும் என்று எதிர்பார்த்தாள். மகளுக்கோ, ஒரே இடத்தில் உட்கார்ந்தால் அது படிப்பதற்குத்தான் என்பதுபோல் ஒரு மனப்பான்மை. சித்திரம் வரைய அடியோடு வரவில்லை. அதற்கான பொறுமையும் கிடையாது. அது புரியாது, தன்னைப்போல் இருக்க மகள் மறுக்கிறாள், தன்னை ஏற்கவில்லை என்று அருணா தப்பர்த்தம் கற்பித்துக்கொண்டாள். விளைவு: மகள் செய்ததில் எல்லாம் அருணா குற்றம் கண்டுபிடிக்கத் தொடங்க, சிறியவள் மனத்தளவில் அவளிடமிருந்து விலகிப்போனாள். அவளுக்குப் பிடித்ததைச் செய்ய ஊக்கமளித்த தந்தையுடன் நெருக்கம் அதிகரித்தது.

    என்னதான் மகளானாலும், அவளும் தன்னைப்போல் ஒரு பெண்தானே! போட்டி மனப்பான்மை அதிகரிக்க, அருணா தன்னையும், அத்துடன் ஆனந்தியையும் சேர்த்து வருத்தினாள்.

    எல்லாக் குழந்தைகளும் இம்மாதிரி தாயின் பேச்சை மீறத் துணியமாட்டார்கள். `எதற்கு வீண் வம்பு!’ என்று விட்டுக்கொடுத்து விடுவார்கள்.

    வேறு சிலர், தாயின்மேல் கொண்ட பாசத்தால், அவள் மனம் நோகாது நடக்கவேண்டும் என்று முடிவெடுப்பார்கள். அப்படிச் செய்யாது, வேறு துறையில் நாட்டம் செலுத்தி, அதில் ஒரு வேளை வெற்றி பெறாவிட்டால், காலம் பூராவும் அம்மாவின் கண்டனப் பேச்சைத் தாங்கிக்கொள்ள நேருமோ என்ற பயமும் ஒரு முக்கிய காரணம்.

    `நான் இஞ்சினீயர் ஆனால்தான் அம்மாவுக்கு மகிழ்ச்சியா? அப்படியானால் சரி,’ என்று வேண்டாவெறுப்பாக தான் படிக்கவேண்டிய துறையைத் தேர்ந்தெடுத்திருந்த ஒருவர், `நான் என்ன படிப்பு படிக்க வேண்டும் என்று என்னிடம் யாரும் கேட்கவில்லை!’ என்று காலங்கடந்து என்னிடம் குறைப்பட்டுக்கொண்டார். அவருக்குப் பிடித்ததோ நுண்கலைகள். அவைகளில் நிறையப் பணம் பண்ண முடியுமா என்று அவரது தாய் நினைத்திருக்கக்கூடும்.

    எவ்வளவுதான் சம்பாதித்தாலும், இவர்கள் வாழ்க்கை பூராவும் ஏதோ பாரத்தைத் தாங்க நேர்வதுபோல் நடப்பார்கள். அம்மாவின்மேல் இருக்கும் மனத்தாங்கல் விரக்தியாகவோ, அல்லது வேறு ஏதாவது வழியிலோ வெளிப்படும்.

    எல்லாக் குழந்தைகளுக்கும் எதிலாவது ஒன்றில் திறமை இருக்குமே! அதிலேயே அவர்களை ஈடுபடுத்தினால், அவர்களது திறமையும் முழுமையாக வெளிப்படும்; அதனால் அவர்கள் அடையும் மகிழ்ச்சியும், மனநிறைவும் வயதான பெற்றோருக்கும் தாம் தம் கடமையைச் சரிவரச் செய்துவிட்டோம் என்ற திருப்தியைக் கொடுக்கும்.

    இதை விட்டு, பிள்ளைகள் பெரியவர்களானதும்கூட, எல்லாவற்றிலும் தாம் கூறியபடியே நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு சிறுபிள்ளைத்தனம் என்றுதான் தோன்றுகிறது.

    தொடருவோம்

    Share