நிர்மலா ராகவன்

மனதை மயக்கும் மருந்துகள்

%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-1-2

கடந்த இரண்டு மாதங்களில் நான் சந்தித்துப் பேசிய மூன்று பெண்மணிகள் குறுகிய காலத்தில் மிகப் பருமனாக ஆகியிருந்தார்கள்.
`எனக்கு ஐம்பது வயதாகிவிட்டதே! மெனோபாஸ்! ஓயாமல் தலைவலி. இழுப்புவேறு! அதனால் ஏதோ மருந்து சாப்பிடுகிறேன்’.

முப்பது வயதே ஆகிய இசை ஆசிரியையான சீதாவின் பிரலாபம்: `அடிக்கடி சளியும் இருமலும் வருகின்றன. இப்படியே இருந்தால், நான் எப்படி பாட்டு வகுப்புகள் நடத்துவது?’

மலேசிய நாடு தழுவிய நாட்டியப் போட்டி ஒன்றில் முதல் பரிசு வாங்கி, அத்துறையில் பட்டம் பெற்றவள் லதா. ஐந்தாண்டுகள் கழித்து அவளைப் பார்த்தபோது, `காலில் தாங்க முடியாத வலி. ஒரு வருடம் ஆடக் கூடாது என்கிறார் டாக்டர். மருந்து சாப்பிட்டால்தான் ஆடவே முடிகிறது!’ என்றாள்.

இவர்களிடையே இருந்த ஒற்றுமை: மூவருக்குமே வெவ்வேறு மருத்துவர்கள் ஸ்டீராய்டு (Steroid) மருந்துகளைப் பரிந்துரைத்திருந்ததுதான்.

அது என்னது அது, ஸ்டீராய்டு?

நம் உடலில் இயல்பாகச் சுரக்கும் ஹார்மோன் அது. உடலில் உள்ள உறுப்புகள், திசு, உயிரணுக்கள் ஆகியவை தம் வேலையைச் சரிவரச் செய்ய வேண்டாமா? அதற்குத்தான் இவை உபயோகப்படுகின்றன. இந்த ஹார்மோன் சரியாகச் சுரக்காதபோது, பல உபாதைகள் ஏற்படும்.

அவைகளைப் போக்கவென மனிதனால் தயாரிக்கப்பட்ட மருந்தாக (வேதியப் பொருள் கலக்கப்பட்ட) அதையே உட்கொள்ளும்போது, மந்திரம் போட்டதுபோல உடல் தொல்லை காணாமல் போய்விடும். அடுத்த முறை அதே உடல் உபாதைக்கு ஆளாகும்போது, ஒருவரை வலியப்போய் அதையே நாடும்படி செய்துவிடுகிறது. சுருங்கச் சொன்னால், ஸ்டீராய்டு ஒரு போதைப்பொருள்.

கஞ்சா, ஹெரோயின் மற்றும் மது வகைகள் உடனுக்குடனே ஒருவரின் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்த, போதை உண்டாகும் என்பது தெரிந்த சமாசாரம். ஒருவர் குடித்தவுடன் தன் வருத்தம், கவலை, ஏமாற்றம் எல்லாவற்றையும் மறந்துவிட்டதுபோல் சில கணங்கள் இருப்பார். ஆனால், அவைகளின் அளவை அதிகரித்துக்கொண்டே போனால்தான் அவர் தான் நாடும் மனக்கிறக்கத்தை அடைய முடியும்.

ஸ்டீராய்டு அப்படியல்ல. மனப்போக்கில் ஒரு மாற்றமும் இருக்காது. கிறக்கமும் கிடையாது — சில காலம்வரை. சில ஆண்டுகளுக்குப்பின் மெதுவாகத் தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்கும்.

கதை 1: விக்னேஸ்வரி பதின்ம வயதிலிருந்தே ஆஸ்துமாவால் அவதிப்பட்டவள். சுமார் முப்பது வயதானபோது மருத்துவர் ஸ்டீராய்டு கொடுத்ததில், இதுவரை பாடாய்படுத்திய வியாதி குணமானது போலிருந்தது.

`சரியாகப் போகும்வரை இம்மருந்தை உட்கொண்டுவிட்டு, பிறகு விட்டுவிடலாமே!’ என்றுதான் நினைத்திருந்தாள். அது முடியவில்லை. இப்பழக்கம்தான் ஒருவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுமே! அடுத்த முறை தானே அதைத் தேடிப் போகையில் சற்று அதிகமான அளவு தேவைப்பட்டது.

ஆரம்ப காலத்தில், விக்னேஸ்வரிக்கு அசுர பலம் வந்ததுபோல் இருந்தது. `SUPER HUMAN!” என்று பெருமிதமாக இருந்தது. எல்லாரும் தன்னைப்போல் இல்லாமல் இருக்கிறார்களே என்ற ஏளனம் எழுந்தது. பிறரை மரியாதைக்குறைவாக நடத்த ஆரம்பித்தாள். சிடுசிடுப்பு, அநாவசிய சந்தேகம் என்று பல பக்கவிளைவுகள் ஏற்பட்டதில் குடும்ப அமைதி கெட்டது. கை கால்களில் வீக்கம். மொத்தத்தில் உடல் பூராவும் பருத்தது.
`இப்பழக்கத்தை விடு!’ என்று யார் சொன்னாலும் கேட்கும் நிலையில் அவள் இருக்கவில்லை.

இருபது ஆண்டுகள் கழிந்ததும், இரண்டு கை முட்டிகளும் மூடியபடி இருந்தன. திறக்க முடியவில்லை. `இனி இப்பழக்கத்தை விட்டால், உங்கள் உயிர் போய்விடும். அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள்!’ என்றார்கள் மருத்துவர்கள். சுமார் ஓராண்டுகாலம் படுத்த படுக்கையாக இருக்க நேரிட்டது.

அந்தச் சமயம் பார்த்து, `நம்மை இவள் எப்படியெல்லாம் அவமானப்படுத்தினாள்!’ என்று பிறர் இவளிடம் சொல்லிக்காட்ட, `கதறிக் கதறி’ அழுததாகப் பிறர் தெரிவித்தார்கள்.

இப்போது விக்னேஸ்வரியால் அதிகம் நிற்கவோ, நடக்கவோ முடிவதில்லை. பேனா பிடித்து எழுதக்கூட முடியாது. காலம் கடந்து வருந்துகிறாள்.

நான் முதலில் குறிப்பிட்ட மூன்று பெண்களிடமும் இக்கதையைச் சொல்லி, `வேண்டாம் இந்தப் பழக்கம்!’ என்று மன்றாடினேன்.

முதலில் சற்று பயந்தாலும், எல்லாரும் ஒரே பதிலைத்தான் கூறினார்கள்: `உடல்நிலை உடனே சீராகி விடுகிறதே!’

கதை 2: எனக்கு ஐம்பது வயதானபோது, H.R.T (Hormone replacement therapy) என்று நான் கேளாமலேயே ஒரு மருத்துவர் என்னை அதைச் சாப்பிடும்படி பல முறை வற்புறுத்தினார். `இருதய நோய் வராது!’ என்றார். நான் கொஞ்ச காலம் சாப்பிட்டேன். முகத்தில் முடி வளர ஆரம்பித்தது.

சில மாதங்களுக்குப்பின் அமெரிக்கா செல்ல நேரிட்டது. அங்குள்ள மருந்துக்கடையில் மருந்துச் சீட்டைக் காட்டியபோது, `இது தடை செய்யப்பட்ட மருந்து!’ என்றார்கள். எனக்கு ஒரே அதிர்ச்சியும், கோபமும். ஏனெனில், அங்கு தயார் செய்த மருந்தைத்தான் பிற நாடுகளுக்கு அனுப்புகிறார்கள்!

அது நல்லதல்ல என்று தயாரிப்பாளர்களுக்குத் தெரியாமலில்லை. நம் நாட்டில்தான் சட்டம் நமக்கு அனுகூலமாக இல்லை, பிற நாட்டு மக்கள் எப்படிப் போனால் நமக்கென்ன என்ற மெத்தனம்! பெருமளவில் தயாரித்த மருந்துகள் வீணாகிவிட்டால், நஷ்டமாகிவிடுமே என்ற கவலை அவர்களுக்கு.

நாடு திரும்பியதும், என்னை எச்சரிக்கை செய்யவே வெளியிட்டதுபோல, `ஸ்டீராய்டு நீண்ட காலம் கழித்து தசைகளை பலகீனமாக்கிவிடும்,’ என்று தினசரி ஒன்றில் படித்தேன். முதல் வேலையாக மிச்சமிருந்த மாத்திரைகளைத் தூக்கிக் குப்பையில் எறிந்தேன்.

நோய்வாய்ப்பட்டவர்களோ, வயது முதிர்ந்தவர்களோதான் இப்பழக்கத்திற்கு ஆளாகிறார்கள் என்பதில்லை. குழந்தை நடிகர்கள் வளர்ந்துவிட்டால் வாய்ப்பு போய்விடுமே என்று அவர்களுக்கு ஸ்டீராய்டு கொடுக்க பெற்றோரே வழிசெய்வதாகப் படித்திருக்கிறேன். எத்தனை காலம்தான் குழந்தை நட்சத்திரங்களாக ஜொலிக்க முடியும்! முகத்தில் முதுமை தெரிவதை மறைக்க முடியுமா?

பதின்ம வயதினர் இப்பழக்கத்துக்கு ஆளானால் என்றுமே உயரமாக வளர முடியாது. உடல் வளர்ச்சி குன்றிவிடும்.

மிகக் குறுகிய காலத்தில் புஜங்கள் திரண்டு, ஆணழகனாக ஆக வேண்டும் என்று `ஜிம்’மிற்குப் போகும் ஆண்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஸ்டீராய்டு மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொள்கிறார்கள்.

`என் தசைகளைப் பார்!’ என்று அவர்கள் முதலில் பெருமிதம் கொள்ளலாம். ஆனால், நாளடைவில் கல்லீரல், இருதயம் போன்ற அவயவங்களில் நோய் வருகிறது. போதாக்குறைக்கு, விந்து குறைதல், ஆணுறுப்பு சிறுத்துப்போவது, தலையில் வழுக்கை, கை நடுக்கம், பெண்களைப்போன்ற மார்பகம் வளர்வது என்று பல பக்க விளைவுகள்.
எதையுமே தவிர்க்க முடியாதபோது, `என்னை யார் மிஞ்ச முடியும்!’ என்ற களிப்பு மறையும்.

மிஞ்சுவது, `நான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன்!’ என்ற சுயவெறுப்பும், கசப்பும்தான்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.