நிர்மலா ராகவன்

தாயைப்போல் பிள்ளையா!

நலம்-

‘யாருக்கெல்லாம் இன்னும் அதிகமாகப் படித்திருக்கலாம் என்ற குறை இருக்கிறது?’ என்று, தமிழ்ப்பெண்களுக்கான ஒரு கருத்தரங்கில் நான் உரையாற்றி முடித்ததும் கேட்டேன்.

முக்கால்வாசிக்கும் மேற்பட்டவர்கள் கைதூக்கினார்கள்.

அவர்களுக்குப் படிப்பில் நாட்டமில்லாமல் போகவில்லை. ஆனால் அவர்கள் பெற்றோர் ஆண்பிள்ளைகளை மட்டும் நிறைய படிக்க வைத்தார்கள். பெண்கள், `அண்ணன் மட்டும் என்ன உயர்த்தி?’ என்று வாதாட, `அவன்தான் கடைசி காலத்திலே எங்களை வெச்சுக் காப்பாத்துவான்!’ என்று பதில் வந்ததாம்.

என் மாணவியரில் ஒருத்தி, `எனக்கு ஒரு பெண் பிறந்தால், அவளை நிறையப் படிக்க வைப்பேன்,’ என்று அழுகைக்குரலில் கூறியிருந்தது நினைவில் எழுந்தது. அவள் சீனப்பெண். ஆனால், பிரச்னை என்னவோ ஒன்றுதான்.

`அண்ணன்தான் உங்களை வெச்சுக் காப்பாத்துவான்னு என்ன நிச்சயம்?’ என்று சண்டைகூட போட்டுப் பார்த்தாளாம். `பலனில்லை,’என்று என்னிடம் தெரிவித்தாள். சூடிகையான பெண். ஆனால் முன்னுக்கு வர வாய்ப்பில்லை.

இம்மாதிரி, `வாய்ப்பை இழந்துவிட்டோமே,’ என்று வருந்தும் பெண்கள் தாம் கண்ட கனவுகளை தமக்குப் பிறக்கும் குழந்தைகள்மூலம் நிதரிசனமாக்கிக்கொள்ளப் பார்க்கிறார்கள். ஆகவே, தனக்குப் பிடித்ததெல்லாம் மகளுக்கும் பிடிக்க வேண்டும், அதில் திறமையும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்!

இது நடக்கிற காரியமா?

மகள் தன் தந்தையை ஒத்திருக்கலாம், அல்லவா?

கதை: அருணா துணி தைப்பது, சித்திரம் வரைதல் என்று நுண்கலை சம்பந்தப்பட்டவைகளில் திறமை வாய்ந்திருந்தாள். தான் பெறாத கல்வியுடன், இவைகளிலும் மகள் ஆனந்தி தேர்ச்சி பெறவேண்டும் என்று எதிர்பார்த்தாள். மகளுக்கோ, ஒரே இடத்தில் உட்கார்ந்தால் அது படிப்பதற்குத்தான் என்பதுபோல் ஒரு மனப்பான்மை. சித்திரம் வரைய அடியோடு வரவில்லை. அதற்கான பொறுமையும் கிடையாது. அது புரியாது, தன்னைப்போல் இருக்க மகள் மறுக்கிறாள், தன்னை ஏற்கவில்லை என்று அருணா தப்பர்த்தம் கற்பித்துக்கொண்டாள். விளைவு: மகள் செய்ததில் எல்லாம் அருணா குற்றம் கண்டுபிடிக்கத் தொடங்க, சிறியவள் மனத்தளவில் அவளிடமிருந்து விலகிப்போனாள். அவளுக்குப் பிடித்ததைச் செய்ய ஊக்கமளித்த தந்தையுடன் நெருக்கம் அதிகரித்தது.

என்னதான் மகளானாலும், அவளும் தன்னைப்போல் ஒரு பெண்தானே! போட்டி மனப்பான்மை அதிகரிக்க, அருணா தன்னையும், அத்துடன் ஆனந்தியையும் சேர்த்து வருத்தினாள்.

எல்லாக் குழந்தைகளும் இம்மாதிரி தாயின் பேச்சை மீறத் துணியமாட்டார்கள். `எதற்கு வீண் வம்பு!’ என்று விட்டுக்கொடுத்து விடுவார்கள்.

வேறு சிலர், தாயின்மேல் கொண்ட பாசத்தால், அவள் மனம் நோகாது நடக்கவேண்டும் என்று முடிவெடுப்பார்கள். அப்படிச் செய்யாது, வேறு துறையில் நாட்டம் செலுத்தி, அதில் ஒரு வேளை வெற்றி பெறாவிட்டால், காலம் பூராவும் அம்மாவின் கண்டனப் பேச்சைத் தாங்கிக்கொள்ள நேருமோ என்ற பயமும் ஒரு முக்கிய காரணம்.

`நான் இஞ்சினீயர் ஆனால்தான் அம்மாவுக்கு மகிழ்ச்சியா? அப்படியானால் சரி,’ என்று வேண்டாவெறுப்பாக தான் படிக்கவேண்டிய துறையைத் தேர்ந்தெடுத்திருந்த ஒருவர், `நான் என்ன படிப்பு படிக்க வேண்டும் என்று என்னிடம் யாரும் கேட்கவில்லை!’ என்று காலங்கடந்து என்னிடம் குறைப்பட்டுக்கொண்டார். அவருக்குப் பிடித்ததோ நுண்கலைகள். அவைகளில் நிறையப் பணம் பண்ண முடியுமா என்று அவரது தாய் நினைத்திருக்கக்கூடும்.

எவ்வளவுதான் சம்பாதித்தாலும், இவர்கள் வாழ்க்கை பூராவும் ஏதோ பாரத்தைத் தாங்க நேர்வதுபோல் நடப்பார்கள். அம்மாவின்மேல் இருக்கும் மனத்தாங்கல் விரக்தியாகவோ, அல்லது வேறு ஏதாவது வழியிலோ வெளிப்படும்.

எல்லாக் குழந்தைகளுக்கும் எதிலாவது ஒன்றில் திறமை இருக்குமே! அதிலேயே அவர்களை ஈடுபடுத்தினால், அவர்களது திறமையும் முழுமையாக வெளிப்படும்; அதனால் அவர்கள் அடையும் மகிழ்ச்சியும், மனநிறைவும் வயதான பெற்றோருக்கும் தாம் தம் கடமையைச் சரிவரச் செய்துவிட்டோம் என்ற திருப்தியைக் கொடுக்கும்.

இதை விட்டு, பிள்ளைகள் பெரியவர்களானதும்கூட, எல்லாவற்றிலும் தாம் கூறியபடியே நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு சிறுபிள்ளைத்தனம் என்றுதான் தோன்றுகிறது.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.