Tag: எம்.ஜெயராமசர்மா

  • சிவாகமங்களும் திருமுறைகளும் புலப்படுத்தும் வாழ்வியல் – பகுதி 1

     எம்.ஜெயராமசர்மா B.A (Hons) Dip. in Edu , Dip. in Soc , M.Phil Edu ,SLEAS                   (   முன்னாள் கல்வி இயக்குனர் … மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா )

        

         தமிழரது வாழ்வியலானது கோவிலை மையப்படுத்தி வந்திருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.கோவில் இல்லை யென்றால் வாழ்வே  இல்லை என்னும் அளவுக்குக் கோவில்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்து இருந்திருக்கின்றன.இன்பம், அமைதி, ஆனந்தம், அத்தனையும் கோவிலே தரும் என்னும் அசையாத நம்பிக்கை அடிநாதமாக இருந்தமையால் கோவிலை விட்ட வாழ்க்கையைத் தமிழர் விரும்பவேயில்லை.துன்பத்தை துடைக்கக் கோவிலே துணை ! துயரப்படுதலை தவிர்க்கக் கோவிலே துணை ! என்னும் எண்ணம் யாவரிடத்தும் மேலோங்கி இருந்தமையால் கோவில் என்பது வாழ்வியலாக அமைந்துவிட்டது.

            ” கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் “

                 ” ஆலயம் தொழுவது சாலவும் நன்று “

               ” கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ” என்றெல்லாம் சொல்லப் பட்டமைகூட வாழ்வியலோடு கோவிலும் இணைந்து கொண்டுவிட்டதையே காட்டுகிறது அல்லவா?

     ஆகமங்கள் வாழ்வியலுடன்

       இப்படி வாழ்வியலாக மாறிவிட்ட கோவில்பற்றி சிவாகமங்களும் திருமுறைகளும் தம்மளவில் எவற்றைப் புலப்படுத்தி நிற்கின்றன என்பதை ஆராய்வது யாவருக்கும் பயனுடையதாக இருக்குமல்லவா?

             சிவபெருமானால் சொல்லப்பட்டு உமையால் கேட்கப்பட்டு சிவ பக்தர்களால் கடைப்பிடிக்கப் பட்டுவருவது சிவாகமங்கள் ஆகும்.வேதம் பொது நூல்.ஆகமம் சிறப்பு நூல்.சைவநெறியில் ஆகமங்களே முதன்மை பெறுகின் றன.இறைவனே ‘ஆகம’ வடிவமானவன் என்பது சைவர்களது நம்பிக்கையாகும்.

                                                                 * ஆகமம் விளக்கம்

        ” ஆகமம்” என்பதற்கு – தோற்றம், வருகை, ஈட்டம், பொருட்பேறு, சாஸ்திரம்,   ஆப்தவாக்கியம், என்றும் பொருள் கொள்ளப்படுகின்றது.” தொன்றுதொட்டு வரும் அறிவு ” என்ற நிலையிலும் பொருள் சொல்லப்படுகிறது. “ஆ க ம ” என்று கொண்டு – பதி, பசு, பாசம் , என்ற தன்மையிலும் பொருள் கொண்டு நிற்பதையும் காணலாம்.” ஆகமம்” எனும் சொல்லானது -” இறைவனிடம் இருந்து வருவது ” எனும் நிலையிலும் கொள்ளப்படுகின்றது.

    * ஆகமங்களும் கோவில்களும்       

         ஆகமங்கள் ஆலயவழிபாட்டுக்கு முதன்மை அளிக்கின்றன.காமிகம் தொடக்கம் வாதுளம் வரை இருபத்தெட்டு ஆகமங்கள் முக்கியமானவை. ஆகமங்கள் வழிகாட்டுதலின் படியேதான் கோவிலும் அங்கு நடைபெறும் கிரியைகளும் அமைந்திருக்கின்றன என்பது முக்கிய அம்சமாகும்.

          பெரும்பாலான கோவில்களில் பூசைகள் காமிகம் அல்லது காரண ஆகம முறைப்படியே செய்யப்படுகின்றன.சில கோவில்களில் மகுடாகம முறைகள் வழக்கத்தில் உள்ளன.தில்லைச் சிதம்பரம் கோவிலில் நிகழ்த்தப்படும் பூஜை முறையானது பதஞ்சலி பூஜாவிதானம் – மகுடாகமத்தையே ஒத்திருக்கிறது. மற்றும் சில கோவில்களில் வாதுளாகமமும், பாரமேச்வரமும் பின்பற்றப் படுகின்றன.

           வாழ்வியலோடு கோவில்கள் இணைந்து நிற்கின்றன என்பதற்குச் சிவ ஆகமங்களும் சான்றாகி நிற்கின்றன.கட்டிடக்கலை, கற்சிற்பக்கலை, உலோக   சிற்பக்கலை, ஓவியம், இசை, நாட்டியம், மனித ஒழுக்கம், நடைமுறை வாழ்க்கை, போன்ற வாழ்வியலோடு சார்ந்த அனைத்துத் துறைகளும் வேறு எந்த நூல்களிலும் காணமுடியாத வகையில் ஒருங்கே கூறுவதுதான் சிவாக

    மத்தின் தனிச் சிறப்பு எனலாம்.

         இசை, நடனம், சிற்பம், ஓவியம், அழகுணர்வு அத்தனையும் வாழ்வியலோடு இணைந்தே இருக்கின்றன. இவை யாவும் கோவிலுடனும் இணைக்கப்பட்டே இருக்கின்றன. இதனால் கோவில் என்னும் அமைப்பானது வாழ்விய லின் முக்கிய அம்சமாகிவிட்டது. அப்படிப்பட்ட கோவில் பற்றிய அத்தனை விஷயங்களையும் சிவாகமங்களும் விளக்கி இருக்கின்றன என்றால் சிவாக மங்களும் வாழ்விலுடன் இணைந்துதானே இருக்கிறது.

     கோவில்களின் முக்கியத்துவம்

         தமிழரான சைவரது வாழ்விலே கோவில்கள் என்ற நிலை மிகவும் இன்றி அமையாத நிலையிலேயே இருந்து வந்திருக்கிறது.கோவிலை மையமாகக் கொண்டே சமூகத்தின் அத்தனை செயற்பாடுகளும் நடை பெற்று வந்திருக்கி ன்றன என்பதை வரலாற்று அடிப்படையில் கண்டுகொள்ள முடிகிறதல்லவா?

          காலந்தோறும் மிகப் பலம் பொருந்திய அரசுகளும் அரசர்களும் இருந்த நிலையை வரலாறு காட்டுகிறது.அவர்களின் மாடமாளிகைகளை விட அவர்க ளால் கட்டப்பட்ட மாபெரும் கோவில்கள் மட்டுமே இன்றளவும் கண்முன்னே நிமிர்ந்து நிற்கின்றது என்றால் —- கோவில்களின் முக்கியத்துவமும், கோவில் களின் வாழ்வியல் தத்துவமும் உயர்ந்து நிற்கிறது என உணர்த்துகிறதல்லவா?   இப்படியான கோவில்களை எப்படி அமைப்பது? எப்படி அங்கு பூஜைகளைச் செய்வது ? எப்படி கோவில்களில் வழிபாடு ஆற்றுவது ? எப்படியான நிலை யில் பூஜைகளுக்கான பொருட்களைத் தேர்ந்தெடுப்பது ? கோவில்களின் விக்கிரகங்களை எப்படி அமைப்பது ? கோவிலில் விழாக்களை எப்படி நடத்துவது ? அதற்கான விளக்கங்கள் தான் எவ்வகையானது ? இவற்றை எல்லாம் ஒழுங்காக எடுத்துச் சொன்ன பெருமையும் முக்கியத்துவமும்  சிவ ஆகமங்களுக்கே உரியதாகும்.

           இத்தகைய ஆகமங்களின் வழி வந்த கோவில்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையிலே பிரிக்க முடியாததாகி விட்டது. நீதிக்கூடமாயும், நிதிக்கூட மாயும், பல்கலை நிலையமாகவும்,கலைக் கூடமாகவும், கற்றவர் சபையாகவும் மருத்துவ நிலையமாகவும், பசிப்பிணி போக்கும் இடமாகவும், அனைவருக்குமே ஆறுதல் அளிக்கும் சாந்தி நிலையமாகவும் — கோவில்கள் விளங்கி இருக்கின்றன.

          சோழப் பேரரசு காலத்தில் கோவில்களின் அமைப்பும் கோவில்களின் பெருக்கும் கோவில்களின் சமூகமயமாக்கலும் உயர்ந்தோங்கி இருந்ததை வரலாற்றின் மூலம் கண்டுகொள்கின்றோம்.இது பெரும் உச்சம் என்றே எண்ணமுடிகிறது.

         கோவில்களை அண்டியே பல கலைகள் உயிர்ப்புப் பெற்றன. கோவிலால்தான் கட்டிடம் வளர்ந்தது.கோவிலால்தான் சிற்பம் ,ஓவியம் , செப்புக்கலை வளர்ந்தது. மரங்களின் மூலம் பல்வேறுவிதமான கலைப் பொருட்கள் உருவாவதற்கும், பலவகையான ஆபரணங்கள் வடிவமைக்கப்படுவதற்கும் கூட கோவில்கள் நிலைக்களனாக இருந்திருக்கின்றன.

          இசைக்கருவிகளை வாசிப்பதற்கும், தாளவாத்தியங்களை இசைப்பதற்கும்  நடனங்களை ஆடுவதற்கும், நாட்டிய நாடகங்களை நடத்துவதற்கும், சங்கீதம் வளர்வதற்கும் என பல கலைகள் வளர்வதற்குக் கோவில்கள்தாம் நிலைக் களனாக விளங்கியிருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

        இவையாவும் மக்கள் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தே இருக்கின்றன. இதனால்த்தான் இவற்றை வளர்த்த கோவில்களும் வாழ்வியலோடு இணைந் -தே- விட்டது.இவை யாவற்றுக்கும் அடிப்படை சைவ ஆகமங்கள் என்பதும் இங்கு மனங்கொள்ளத் தக்கதாகும்.

         யோகஜ ஆகமம் பற்றி நோக்கினால் – இது மற்ற ஆகமங்களில் காணப்ப டாததும் , மிகப் பழமையானதாக இருக்குமோ என எண்ணத்தக்க சில கிரியை கள் பற்றி விளக்குவதாகக் காணப்படுகிறது.சிவலிங்கப் பிரதிஷ்டை, ஏனைய மூர்த்திகள் பிரதிஷ்டை, என்பனவற்றை விரிவாக விளக்கி நிற்பதோடு – நித்திய கர்மானுஷ்டானங்கள் செய்யும் முறைபற்றியும், சிவபெருமானுக்கு ஆடல் பாடல்களால் வழிபாடாற்றுதல், தேவதாசிகள் மற்றும் இசை வாணர் கள் பற்றியும் , அவர்களுக்கான தீட்சை பற்றியும் , தினமும் புஷ்பாஞ்சலியின் பொழுது இசைக்க வேண்டிய பலவித இராகங்கள், ஆடவேண்டிய நாட்டிய வகைகள் பற்றியும் விளக்கி நிற்கிறது.

          கோவில்களிலே இடம்பெறும் திருவிழாக்கள் வாழ்வியலோடு மிகவும் நெருக்கமானவை.திருவிழா நடைபெறும் பொழுது அங்கு சமூகத்தின் பல வகைப் பட்டாரும் ஏதோ ஒருவிதத்தில் அங்கு தமது பங்கை ஆற்றும் நிலை இருப்பதைக் கண்கூடாகக் கண்டுகொள்ளலாம். அலங்காரம் செய்வோர், இசை வாணர்கள், நாட்டிய நடனத்துறையினர், பல கலைநுட்பத்துறை சார்ந்தவர்கள்

    பல வேலைகள் செய்யும் மாந்தர்கள், என சமூகம் சார்ந்த அத்தனை மக்களும் திருவிழாவின் மூலம் கோவிலுடன் இணைக்கப் படுகின்றார்கள்.இதனால் திரு விழா என்று சொன்னால் அது மக்களின் வாழ்வியலின் ஒரு முக்கிய அம்சமாக விளங்குகின்றது என்பது புலனாகிறதல்லவா ?

         இத்தகைய திருவிழாக்கள் பற்றிய விளக்கங்களை ஆகமங்கள் பல விரி வாக எடுத்துச் சொல்லுகின்றன.

         காமிக ஆகமப் படியே அநேகமான கோவில்களில் பூஜைகளும் விழாக்களும் நடைபெறுகின்றன. ” காமிகம் ” என்றால் ” இஷ்டசித்தி ‘ என்பது பொருளாகும்.அதாவது விரும்பியதைப் பெறுதல்.தம்மை வழிபடுவோர் விரும் பியதைப் பெறும் பொருட்டு சிவபெருமான் முதலில் காமிக ஆகமத்தை அருளி னார் என்றும் சொல்லுவர்.

         காமிகாகமத்தில்- பூர்வ காமிகாகமம், உத்தர காமிகாகமம் என்று இரு பிரிவுகள் இருக்கின்றன.உத்தர காமிகாகமத்திலேதான் நாள் மற்றும் விழா வழிபாட்டு முறைகள், ,மகாகணபதி, நடராஜர், சோமாஸ்கந்தர், தட்சணா மூர்த்தி, லிங்கோத்பவர், சந்திரசேகர், முதலாக பரிவார தெய்வங்களை எழுந்து அருளச் செய்யும் முறைகள் சொல்லப் பட்டிருக்கின்றன.

           விழாக்கள் தினமும் நடத்தப்படும் நித்தியோத்ஸவம், பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் பட்ஸோத்தவம், மாதமொருமுறை நடத்தப்படும் மாதோற்ஸவம், ஆண்டுக்கொருமுறை நடத்தப்படும் மஹோ ற்ஸவம் எனப் பலவகையில் உற்சவங்கள் அமைகின்றன என்ற செய்திகளை ஆகம வாயிலாக அறிகின்றோம்.

          அம்சுதா ஆகமம், யோகஜா ஆகமம், சிந்த்யா ஆகமம், ஸ்வாயம்பு ஆகமம்

    விஜய ஆகமம், விஜயோத்தரா ஆகமம், ஸ்ஹஸ்ரா ஆகமம் ஆகிய ஆகமங்கள்

    திருவிழாக்கள் பற்றிய பல செய்திகளைத் தந்து நிற்கின்றன.

         ஸ்வாயம்பு ஆகமத்தில் நெய் ,தயிர், நறுமணம் ஊட்டிய நீர், அன்னாத்தால் அபிஷேகம், பற்றிச் சொல்லப்படுகிறது.ஒவ்வொரு மாதத்துக்குமான நடனம், தாளம், ராகம், பற்றியும் சொல்லப்படுகின்றது.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனம் ஊர்வலம் பற்றியும் ” ப்ரஸன்னயஜனம் ” என்னும் சிறப்புப் பூஜை பற்றியும் இந்த ஆகமம் குறிப்பிடுகின்றது.பெரியம்மை முதலிய கொடுமையான நோய்களிலிருந்து மக்களைக் காப்பாற்றவும், அரசன் முதலானோர்க்கு நன்மை பயக்கவும் , பொதுவாக கிராம மக்களின் நலனுக்காகவும் இந்தச் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டதாக இந்த ஆகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

        விஜயோத்தரா ஆகமம் உத்ஸவம் என்பதற்கு ” அஞ்ஞான மென்னும் மலத்தில் மூழ்கி உழன்று கொண்டிருக்கும் உயிர்களுக்கு ஞானத்தை உண்டாக்குவதே உத்ஸவம் எனப்படும் ” என்ற முக்கிய செய்தியைத் தந்து நிற்கிறது.

         ஆகமங்கள் கோவில் சம்பந்தமான செய்திகளுடன் நின்றுவிடாமல் வாழ்வியலின் ஒழுக்கம் சார்ந்த விடயங்களையும் வலியுறுத்தி நிற்கிறது. கோவிலுடன் ஒழுக்கம், ஆசாரம் இணைந்தே இருப்பதால் ஆகமங்கள்  கொல்லாமை, விபசாரம புரியாமை, பொய்யாமை, என்பவற்றைக் கடைப் பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறித்தி நிற்கின்றன.

         ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் பற்றியும் எடுத்து விளக்கி நிற்கின்றன. இந்த நான்கு படிமுறைகளும் கூட வாழ்வியலோடு சமபந்தமாகி கோவிலுடன் இணைவதையும் கண்டுகொள்ளமுடிகிறது.

          சிவாகமங்கள் வாழ்வியலின் அம்சமாகத் திகழும் கோவில் பற்றிய விஷயங்களை கூறிய விதத்தைப் பார்த்த நாம் திருமுறைகள் இது பற்றி எதைச் சொல்ல முனைகின்றன எனப் பார்ப்பதும் உகந்ததல்லவா ?

    தொடரும்

    Share
  • மனதில் நிற்கும் விழா !

    எம். ஜெயராமசர்மா.

    diwali

    கரம்டவுண்ஸ் சிவா விஷ்ணு ஆலயம் 14 / 11 / 2015 சனிக்கிழமை அன்று பூலோக கைலாசமாகக் காட்சிகொடுத்தது. தீப ஒளித்திருநாளைக் கொண்டாடும் முகமாகக் கோவிலெங்கும் அலங்காரமும், பல வண்ண விளக்குகளுடன் கூடிய கடைகளும், கோவிலின் உள்ளே வேதமந்திர ஒலிகளும், பக்தியை வெளிப்படுத்தும் பாங்கான இசையும், வண்ண வண்ண உடைகளை அணிந்த பெரியவர்களும், சிறியவர்களும், என சொர்க்கமாகவே இருந்தது.

    இந்த அழகான சூழலிலே அன்னை மொழியாம் அருந்தமிழை ஆங்கில மண்ணில் அரவணைத்து நிற்கும் “அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம்” தன்னுடைய பதினைந்தாவது எழுத்தாளர் மாநாட்டை “பீக்கொக்” மண்டபத்தில் இடம்பெறச் செய்திருந்தது. மண்டப ஒழுங்கமைப்பு தமிழர் பண்பாட்டினை வெளிப்படுத்தி நின்றது. நிறைகுடம் விளக்கு வாசலில் வரவேற்பு வாசல் வண்ணமுடன். உள்ளே மேடையின் முன் நீண்டு நெடிதுயர்ந்த பளிச்சிடும் தங்கநிறத்திலான இரண்டு விளக்குகள் இருமருங்கும் மேடையை மெருகூட்ட நவீனமும், பாரம்பரியமும் கலந்த நாதஸ்வர வாத்தியக் கலைஞர்களின் அழகுமிகு சித்திரம்.

    சரியாகப் பிற்பகல் நான்கு மணிக்கு அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் தலைவர் திரு எம் . ஜெயராமசர்மா மண்டபத்தின் உள்ளே வர அவரைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள், எழுத்தாளப் பெருமக்கள், விழாவைச் சிறப்பிக்க வருகை தந்த அத்தனைபேரும் உள்ளே வந்தார்கள். உள்ளே நுழைபவர்களைத் தமிழர் மரபுப்படி மலர்தூவி வரவேற்று நின்றார்கள் கொஞ்சுமொழி பேசும் பிஞ்சுச் சிறுமியர்கள். வண்ண உடையில் அவர்கள் வரிசையில் நின்று வரவேற்ற காட்சி மலர்கள் எல்லாம் விரிந்து நிற்கும் மலர்க்காட்சி போன்றுதான் காணப்பட்டது ! வரிசையாக வைக்கப்பட்ட ஆசனங்களில் அனைவரும் அமர்ந்ததும் கம்பீரக் குரலால் அறிவிப்பாளர் திரு ந . அல்லமதேவன் அவர்கள் தனது பணியினை ஆற்றத்தொடங்கிவிட்டார். மங்களவிளக்கை ஶ்ரீமதி சாந்தி ஜெயராமசர்மா ஏற்றிவைத்தார். மெளனப் பிரார்த்தனையைத் தொடர்ந்து தமிழ் வாழ்த்தினை ஆகர்ஷணா சாயிஜீவா நந்தக் குருக்கள், பிரவர்த்திக்கா சாயி ஜீவானந்தக் குருக்கள் சகோதரிகள் தங்களின் இணைந்த இனிமைக்குரலில் வழங்கினார்கள்.

    ஆவூரான் சந்திரன் அவர்களால் ஆக்கப்பட்ட தமிழ் வாழ்த்தினை பத்தொன்பது இளந்தளிர்கள் பாடி சபையோரை மெய்மறக்கச் செய்தனர். தமிழ் வாழ்த்தினைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தலைவர் திரு எம். ஜெயராம சர்மா அவர்களின் வரவேற்புரையும் தலைமையுரையும் இடம்பெற்றன. பதினைந்து வருடங்கள் என்பது சாதாரண மானதொன்றல்ல. பலவிதமான சோதனைகளை எதிர்வு கொண்டுதான் இந்தப் பதினைந்து வருடம் என்பதைப் பார்க்க வேண்டும் என்று தலைவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். ஆங்கிலம் பேசும் மக்கள் செறிந்து வாழும் அவுஸ்திரேலிய நாட்டில் தமிழர் பண்பாடு கலாச்சாரம் இவற்றை வளர்ப்பதற்குத் தமிழ் மொழியை வளர்க்கும் முகமாக ஏற்படுத்தப்பட்டதுதான் இச்சங்கம். இந்தச் சங்கத்தை வளர்த்தெடுக்கும் பணியில் பலபேரின் அயராத முயற்சி அடங்கியிருக்கின்றது என்பதை யாவரும் நினைத்துப்பார்ப்பது மிகவும் முக்கியம் என்று கூறியதோடு அவர்கள் பாராட்டப் படவேண்டியவர்கள் என்றும் தலைவர் ஜெயராமசர்மா குறிப்பிட்டார்.

    எழுத்தாளர்களை இனங்கண்டு அவர்களது ஆக்கங்களைப் பலபேரும் அறியச் செய்விப்பதோடு அவர்களுக்கு ஒரு அந்தஸ்தினையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தருவதில் இச்சங்கம் பெரிதும் விருப்புடையதாகச் செயற்பட்டுவருகிறது. புதியவர்களையும் அரங்கேற்றும் உயரிய சிந்தனையையும் இச்சங்கம் தன்னகத்தே கொண்டு மிளிர்கிறது என்றும் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார். தமிழர்கள் தமிழில் பேசுதல் அவசியம். அப்பொழுதுதான் வருங்காலச் சந்ததிகளும் தாய்மொழியான தமிழினை அரவணைப்பார்கள்.பெற்றோர்கள் வீட்டில் கட்டாயம் தமிழிலேயே பேசுங்கள், இல்லாவிட்டால் ஆங்கிலச் சூழலில் வளரும் எங்களது பிள்ளைகள் எதிர்காலத்தில் பெயரளவில் மட்டுமே தமிழர் என்று இருக்கும் நிலை வந்துவிடலாம் என்று தலைவர் தனது உரையில் வலியுறுத்திக் கூறினார். இங்கிலாந்து, இலங்கை, அண்டை மாநிலமான சிட்னி, ஆகிய இடங்களில் இருந்து வருகை தந்திருந்த சிறப்புவிருந்தினர்களையும் விழாவில் கலந்து சிறப்பிக்க வந்திருந்த உள்ளூர் தமிழிலக்கியக் கலைஞர்களையும் இரசிகப் பெருமக்களையும் இன்முகத்தோடு வருக வருக என வரவேற்கின்றேன் என்று தலைவர் கூறி தனது வரவேற்புரையினையும் தலைமை உரையினையும் நிறைவு செய்துகொண்டார்.

    தலைவரின் உரையினைத் தொடர்ந்து “இலக்கியக் கருத்தரங்கு” இடம் பெற்றது. பிற்பகல் 4. 30 மணிக்கு – முன்னாள் ரூபவாஹினி தொலைக்காட்சி தமிழ் நிகழ்ச்சிப் பணிப்பாளரும், வீரகேசரி பத்திரிகையில் முன்னாள் செய்தி ஆசிரியராகப் பணிபுரிந்தவருமான இலங்கையைச் சேர்ந்த திரு சி . வன்னியகுலம் அவர்களது தலைமையில் “இலக்கியக் கருத்தரங்கு” ஆரம்பமானது. இதில் ஐவர் கலந்து அன்னைத் தமிழில் அரிய விஷயங்களை அவைக்கு அள்ளி வழங்கினார்கள். தமிழரது சங்ககால இலக்கியத்தைத் தமிழறிஞர்கள் எப்படி எல்லாம் நோக்கினார்கள் என்பதைப் பல உதாரணங்கள் வாயிலாக எடுத்து வைத்தார் கருத்தரங்கின் தலைவர் திரு சி . வன்னியகுலம் அவர்கள். இயற்கை நெறிக் காலம் எனப் பேராசிரியர் வேலுப்பிள்ளையும், வீரயுகக் காலம் எனப் பேராசிரியர் கைலாசபதியும், தமிழரது பண்பாடு உச்சத்திலிருந்த காலமென பேராசிரியர் செல்வநாயகமும், குறிப்பிட்டிருக்கின்றனர் என்பதைத் தெரிவித்தார்.

    இலக்கியம் என்பது காலத்தைப் பிரதிபலித்து நிற்பதால் அவ்வக் கால நிகழ்வுகளைப் பதிவு செய்தே நிற்கும். அந்தவகையில்தான் புலம் பெயர் வாழ்வில் தமிழர்கள் இருந்தாலும் அவர்களது இலக்கியச் சிந்தனைகள் தாய்மண்ணையும், அங்கு நடைபெற்ற போராட்டங்களை மையப்படுத்துவதில் தவறவில்லை என்று கூறி தனது தலைமை உரையை நிறைவு செய்து கருத்தரங்கின் முதல் பேச்சாளராக நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரை அரங்கேற்றினார். சிட்னிமாநகரில் இயங்கும் கார்த்திகா ஆடற்கலையகத்தின் இயக்குநராக விளங்கும் திருமதி கார்த்திகா அவர்கள் “மனிதவாழ்வில் ஆடற்கலைகளின் பரிணாமம்” என்னும் தலைப்பில் தனது கருத்துக்களை முன் வைத்தார். ஹரப்பா மொகஞ்சதாரோவில் ஆரம்பித்து சிலப்பதிகாரம், அடையாறு கலாசேத்திரா ருக்மணி அருண்டேல் வரையிலான வழியில் பயணித்து இன்றுவரை நடனம் அதாவது ஆடற்கலையானது மனித வாழ்வில் பெற்று நிற்கும் முக்கியத்துவத்தைத் தனது அனுபவ வாயிலாகவும். கற்றறிந்த நுண்ணறிவின் வாயிலாகவும் மிகவும் சிறப்பாக விளக்கி நின்றார்.

    அவரைத் தொடர்ந்து இங்கிலாந்திலிருந்து வருகை தந்திருந்த ” நாழிகை” பத்திரிகையின் ஆசிரியர் திரு மாலி மகாலிங்கம் அவர்கள் அமரர் காவலூர் இராசதுரை பற்றிய “நினைவுப்பேருரையை” நிகழ்த்தினார். இராசதுரை அவர்கள் இலங்கையின் மிகச்சிறந்த இதழியல் – வானொலி – தொலைக்காட்சி கலைஞர் என்பதை யாவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று எடுத்துரைத்தார். அவரின் பன்முக ஆற்றலைப் பலவிதப் பதிவுகள் வாயிலாகச் சபையில் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்க விதத்தில் அமைந்தது. ஊடகம் பற்றிப் பல விஷயங்களைத் திரு மாலி மகாலிங்கம் பகிர்ந்து கொண்டமை மிகவும் பயனுடையதாகவே இருந்தது.

    “அமரர் எஸ் பொன்னுத்துரை நினைவுப் பேருரை” என்பதில் ஒரு படைப்பாளியின் சுயசரிதை குறித்த பார்வை பற்றி டாக்டர் நடேசன் அவர்களது உரை இடம் பெற்றது. சிறந்த தமிழ்ப் படைப்பாளியான எஸ். பொ. வின் நூலானது மிகவும் விரிந்தது, பரந்தது. அதனைப் பற்றிக் குறுகிய நேரத்தில் விளக்குதல் என்பது சற்றுக் கடினமான விஷயமாக இருந்தாலும் என்னால் இயன்றவரை எடுத்துச் சொல்லுவேன் என்று ஆரம்பித்து மிகவும் கச்சிதமாக – தான் எடுத்துக் கொண்ட தலைப்பை அழகுபடுத்தி நின்றார். டாக்டர் நடேசனை அடுத்து மீண்டும் ஒரு டாக்டர் வந்தார். அவர்தான் இலங்கையில் இருந்து வருகை தந்த டாக்டர் ந. முருகானந்தன் ஆவர். “ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் புதிய தலைமுறையின் பங்களிப்பு” என்பதைத் தனது பேசும் தலைப்பாக்கினார் அவர். தொழில் முறையில் ஒரு மருத்துவராக இருந்தாலும் தமிழைத் தன்வசம் ஆக்கிச் சிறந்த எழுத்தாளராக விளங்குகின்றார் என்பதை அவரது பேசும் தன்மை எடுத்துக் காட்டியது. பல புதியவர்கள் எப்படியெல்லாம் ஆக்கங்களை அளிக்கின்றார்கள் என்பதை மிகவும் பக்குவமாக முன்வைத்தமை மிகவும் பயனுடையதாய் அமைந்திருந்தது.

    கருத்தரங்கின் நிறைவுப் பேச்சாளராக ஓவியர் திரு சு. ஶ்ரீநந்தகுமார் “தமிழ் அரங்குகளில் ஓவியத்தின் பரிமாணம்” என்னும் பொருள்பற்றித் தன்னால் வரையப்பட்ட ஓவியங்களைக் காட்சிப்படுத்தி மிகவும் பயனுடைய தகவல்களையெல்லாம் எடுத்துரைத்தார். ஓவியங்கள் மூலம் இவ்வளவு தகவல்களைத் திரட்டித் தந்த அவரின் பேச்சு மிகவும் காத்திரமான ஒன்றாகவே இருந்தது எனலாம். இலக்கியக் கருத்தரங்கு எல்லோருக்கும் பலவிஷயங்களைப் பலவிதத்தில் தந்த பயனுடையக் கருத்தரங்காக அமைந்தது. அதனைத் தொடர்ந்து நூல்களின் விமர்சன அரங்கு இடம்பெறும் என்னும் அறிவிப்பைத் தனது வெண்கலக் குரலால் திரு ந. அல்லமதேவன் அவர்கள் தெரியப்படுத்தியதும் சபையினர் ஆவலுடன் மேடையை நோக்கினர்! அனைவரும் – அறிவித்தலைக் கேட்டதும் அரங்கத்தையே பார்த்தபடி இருந்தனர்.

    ஆறு தமிழறிஞர்கள் புடைசூழ வள்ளுவர் அறக்கட்டளையின் இயக்குநர் திரு நாகை சுகுமாரன் அவர்கள் அரங்கை அடைந்தார்கள். அவரது தலைமையின் கீழ் ஆறு அறிஞர் பங்குகொண்ட “நூல்களின் விமர்சன அரங்கு” ஆரம்பமாகியது. தலைவர் நாகை. சுகுமாரன் அவர்கள் இலக்கியம் பற்றியும், இலக்கியக் கர்த்தாக்கள் பற்றியும், நடைமுறை உதாரணங்களை முன்வைத்து நீண்டதொரு விளக்கம் அளித்தார். அதன்பின்னர் பேராசிரியர் ஆசி. கந்தராஜாவின் நூல்கள் பற்றி திரு ச. ஜெயக்குமாரன் அவர்கள் தனது கருத்துக்களை முதலில் முன்வைத்தார். ஆசி கந்தராஜாவின் சிந்தனைகள் அவரது விஞ்ஞான வழியில் செல்லுவதையே அவரின் எழுத்துக்கள் காட்டி நிற்கின்றன என்று சொல்லி அதற்கான ஆதாரங்களை அவரால் புனையப்பட்ட புனைவுகளிலிருந்து எடுத்து விளக்கினார்.

    மரபணு விஞ்ஞானியாக ஆசி. கந்தராஜா அவர்கள் விளங்குவதால் பலபுனைவுகள் அதனை ஒட்டியே வந்தமைகின்றது என்றும் சுட்டிக் காட்டினார். ஆசி . கந்தராஜாவின் எழுத்துக்கள் அவரின் அனுபவங்களாக விஞ்ஞான மயப்பட்டதாக இருக்கின்றது. இப்படி எழுதும் வல்லமைக்கு அவரை நிச்சயம் பாராட்டுதல் வேண்டும் என்று தனது பேச்சினை நிறைவு செய்தார். திரு ச. ஜெயக்குமரனது கருத்துக்களை உள்வாங்கியதாகவும் வருங்காலத்தில் அக்கருத்துக்களின் அடிப்படையில் எழுத முயலவதாகவும் ஆசி. கந்தராஜா அவர்கள் தனது ஏற்புரையில் கூறினார்கள். சிட்னியில் இருந்து வெளியாகும் தமிழ்முரசு மின்னிதழின் ஆசிரியர் திரு செ. பாஸ்கரன் அவர்களால் எழுதப்பட்ட கவிதை நூலான “முடிவுறாத முகாரி” என்னும் கவிதை நூலினை ஆய்வுசெய்யும் பணியில் அடுத்து வந்த திருமதி சாந்தினி புவனேந்திரராஜா அவர்கள் வந்துநின்றார்.

    புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் புலனெல்லாம் புகலிடத்தில்தான் இருக்கின்றது என்பதை “முடிவுறாத முகாரி” யில் காணமுடிகிறது என்று – தான் எண்ணுவதாகத் திருமதி சாந்தினி அவர்கள் குறிப்பிட்டார்கள். திரு செ. பாஸ்கரனின் தார்மீகக் கோபங்களை இந்தக் கவிதைகளில் காணமுடிகிறது. இதனை வாங்கிப் படித்தால் நன்கு புரியும் என்று தனக்கே உரித்தான வகையில் சபையினரிடம் வேண்டுகோள் விடுத்தார். அவரின் வேண்டுகோளினை அடுத்து நூலாசிரியர் திரு செ. பாஸ்கரன் தனது கருத்துக்களை முன்வைத்தார். தனது மனதிற்பதிந்த பல வடுக்களே தனது கவிதைகளாகி வந்திருக்கின்றன. இக்கவிதைகள் எழுதப்பட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டன என்றாலும் என் நினைப்புகள் இக்கவிதைகளாகி வந்திருக்கின்றன என்றார்.

    இவரின் ஏற்புரையின் பின்னர் திரு நவரத்தினம் இளங்கோ அவர்களால் டாக்டர் திரு நடேசன் அவர்களது “மலேசியன் ஏர்லைன்” சிறுகதை பற்றிய விமர்சனம் இடம் பெற்றது. டாக்டர் நடேசன் அவர்களின் எழுத்து சற்று வித்தியாசமானது. அவர் சொல்ல வந்ததை எவருக்கும் பயப்படாமல் சொல்லியே விடுவார். சொல்லுவதுகூட சுவையாக இருக்கும். சிலவேளைக் கிண்டலும் கேலியும் கூடச் சங்கமித்தும் விடும். இது டாக்டர் நடேசனது எழுத்துரிமை. அதனையே இந்தச் சிறுகதையிலும் காணமுடிகிறது என்று திரு நவரத்தினம் இளங்கோ அவர்கள் தனது கருத்தை முன் வைத்தார்.

    நடைமுறையில் அன்றாடம் பயன்படுத்துகின்ற தமிழ்ச் சொற்களுக்கு ஏற்ற ஆங்கிலச் சொற்களைக் கண்டறிந்து “மொழிமாற்று அகராதி” தந்த தொண்ணூற்று ஐந்து வயதினை உடைய கலைவளன் சிசு. நாகேந்திரன் பற்றியும் அவரது ஆக்க முயற்சி பற்றியும் கேசி தமிழ் மன்றத்தைச் சேர்ந்த திரு. சிவசுதன் அவர்களின் விமர்சனம் அடுத்து இடம் பெற்றது. இந்தப் பெரியவரின் இடைவிடா முயற்சி எமக்கெல்லாம் நல்லதொரு படிப்பினை ஆகும் என்று எடுத்துரைத்து நாங்களும் எங்களால் இயன்றவரைத் தமிழ் வளர்ச்சிப் பாதையில் எம்மை ஈடுபடுத்திக் கொள்ளுதல் அவையாகும் என்று எடுத்துரைத்தார்.

    அவரைத்தொடர்ந்து நாட்டியக்கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல்கள் பற்றிய தனது எண்ணங்களைத் திரு. எஸ். சிவசம்பு அவர்கள் எடுத்துக் காட்டினார். இப்பேச்சு நாட்டியம் பற்றிய நுண்மாண் சிந்தனைகள் பலவற்றை ஆராய்ந்து வைக்கப்பட்டதாக அமைந்தது. மனிதனது தோற்றதோடு நாட்டியக் கலை எப்படிப் பின்னிப்பிணைந்து வந்திருக்கின்றது.அதனுடைய சமூகப் பெறுமதி எப்படியெல்லாம் வியாபித்து வந்திருக்கின்றது என்ற ரீதியில் ஆழமுடைய பேச்சாக அமைந்திருந்தது. இதற்கு ஏற்புரை வழங்கும் பொழுதுதான் எதை எண்ணியிருந்தேனோ அந்த எண்ணத்தைக் கண்டு பிடித்து விமர்சனம் செய்தமை தனக்குப் பெரிதும் மனநிறைவாக இருந்தது என்று நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் குறிப்பிட்டு – விமர்சனத்துக்குப் பாராட்டும் வழங்கினார்.

    விமர்சன அரங்கின் நிறைவாகத் திரு கே. எஸ். சுதாகரின் சிறுகதைத் தொகுதி பற்றிய விமர்சனத்தைத் திரு க . குமாரதாசன் அவர்கள் வழங்கினார்கள். புலம்பெயர்ந்த நாட்டில் ஏற்பட்ட அனுபவங்கள் கதைகளாக இத்தொகுதியில் வந்திருக்கின்றன.பன்னிரண்டு சிறுகதைகளுமே பரிசுகள் பெற்ற கதைகள் என்பது குறிப்பிடத் தக்கதாகும். நல்ல கதைகள். வாங்கிப் படியுங்கள் யாவும் தெரியும் என்று கூறி விமர்சன அரங்கை நிறைவு செய்தார்.

    தேநீர் இடைவேளை வந்தும்கூட எவருமே எழுந்து வெளியே செல்லாமல் தொடர்ந்து வந்த நிகழ்ச்சிகளை ரசிப்பதில் தம்மை மறந்து மண்டபத்தினுள் அமர்ந்திருந்தமையைக் காணமுடிந்தது. விழா அமைப்பாளர்கள் வந்திருந்த அனைவருக்கும் செவிக்கு விருந்தளித்த தோடு நின்றுவிடாமல் அவர்களது பசிக்கும் நல்ல சுவையான சிற்றுண்டிகளையும், தேநீரையும் கொடுத்து உதவியமை பாராட்டுக்குரியதாகவே எல்லோராலும் கருதப்பட்டது. அடுத்த அரங்காகக் கவியரங்கம் என்று அறிவிப்பு வந்ததும் அனைவரும் உற்சாகத்தோடு மேடைமீது கவனத்தைச் செலுத்தியபடி இருந்தார்கள்! கவியரங்கம் என்றதும் கைதட்டல் அதிர்ந்தது. இளமையானவர்கள் இன் தமிழ்கொண்டு இயம்பிட வந்தனர் இருக்கையில் அமர்ந்தனர். திரு லெ . கேதாரசர்மா அவர்களின் தலைமையில் “கவிஞனாய் நானிருந்தால்” என்னும் தலைப்பில் கண்ணதாசனாக எனத் திரு சி. அஜந்தனும், காசியாக தமிழ்ப்பொடியனும், புதுவையாக ஆவூரானும் வாலியாக ஒருவனும் கவிகொண்டு வந்தார்கள்.

    கவியரங்கம் தொடங்கவே சிவா விஷ்ணு ஆலய தீபாவளி வாணவேடிக்கையும் தொடங்கிவிட்டது. வானதிர வாணவேடிக்கை இடம்பெற, அதை விஞ்சும் அளவுக்குக் கவிதை அரங்கம் களைகட்டி நின்றது. துடிப்போடு கவிபாடும் துணிவான தமிழ்கண்டு துடித்தெழுந்து நின்றார்கள் துணிவுடனே சபையோரும்.வெடித்து வந்த தமிழ் கேட்டார். விருப்புடனே முகம் பார்த்தார். படிப்பினையைத் தந்து நிற்கும் பாங்கான கவியென்றார். கவியரங்கம் நிறைவுற்றதை எவருமே விரும்பவில்லை. அத்தனை சுவையினை அள்ளித் தந்த கவிஞர்களை யாவரும் மனமார வாழ்த்தினர். கவிகண்டு மகிழ்ந்த சபையில் கன்னித்தமிழ் கொண்டு கனதியாய் கருத்துச் சொல்ல வந்தார்கள் காரிகைகள். திருமதி சாந்தினி புவனேந்திரராஜா அவர்களது தலைமையில் “புலம்பெயர்வில் தமிழர் பண்பாடு” என்னும் மகுடத்தில் மகளிர் அரங்கு இடம் பெற்றது. புலம்பெயர் வாழ்வில் மகளிர் எதிர் நோக்குகின்ற பல்வேறு விஷயங்களை தனக்கே உரியப் பாணியில் திருமதி சாந்தினி அவர்கள் முன் வைத்தார்கள்.

    அவரைத் தொடர்ந்து திருமதி சிராணி குமரன் அவர்கள் “புலம்பெயர்வில் தமிழர் பண்பாடுகள் பேணப்படுகின்றனவா? ” என்பது பற்றிய தனது கருத்துக்களை முன் வைத்தார். இவரின் கருத்துக்கள் தர்க்க ரீதியாகவும், பயன் மிக்கதாகவும் அமைந்திருந்தது. இவர் அண்மையில் புலம்பெயர்ந்து வந்த காரணத்தால் பல்வேறு விஷயங்களுக்கு முகங்கொடுத்து அதில் கண்ட தனது அனுபவங்களை முன்கொண்டுவந்ததை அவரின் ஆழமான துணிவான பேச்சு வெளிக்காட்டியது. அவரைத்தொடர்ந்து “புலம்பெயர்வில் தமிழ்ப் பெண்கள் சுதந்திரமாக வாழ்கின்றார்களா?” என்னும் விஷயம் தொடர்பாக அண்மையில் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து வந்திருந்த திருமதி கீதா மாணிக்கவாசகம் தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி நின்றார்.

    எழுத்தாளர் விழாவினை நிறைவு செய்யும் நிகழ்ச்சியாக அமைந்ததுதான் பட்டிமன்றம். ” வாழ்க்கையில் முன்னேறப் பெரிதும் தேவையானது … “துணிவான அணுகு முறையா?” என்னும் அணியில் திரு. ருத்திரபதியும், திரு. ஜனந்தனும் “பணிவான அணுகு முறையா?” என்னும் அணியில் திரு. பொன்னரசும், திரு. சுகந்தனும் இணைந்து திரு ஜெயந்தன் அவர்களது தலைமையில் கருத்துக்களை வாரிவழங்கிக் கைதட்டல்களைக் குவித்து விட்டார்கள். இந்தியத் தமிழும் இலங்கைத் தமிழும் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிச் சிரிப்பாயும், சிந்தனையாயும், சபையோரைக் கல கலப்பாக்கியது என்பது முற்றிலும் உண்மையெனலாம். நேரமோ இரவு பத்தரையைத் தாண்டிய போதும் எவருமே தமது இருக்கையை விட்டு எழுந்திராமல் பண்ணியது பட்டிமன்றம் என்றால் அதை எவருமே மறுத்துரைக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மிகவும் சுவாரசியமான நிகழ்ச்சியாக அது அமைந்திருந்தது.

    செயலாளர் ஶ்ரீநந்தகுமாரின் நன்றியுரையுடன் எழுத்தாளர் விழா இனிது நிறைவுற்றது. அவுஸ்த்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச்சங்கத்தின் பதினைந்தாவது எழுத்தாளர் விழா பலராலும் பாராட்டப்பட்டது. இதற்கு முன்னர் நடைபெற்ற விழாக்களைவிட இந்த விழா பல நிலைகளில் சிறந்து விளங்கியது என்னும் கருத்துப் – பார்த்த பலராலும் முன் வைக்கப்பட்டது. விழாவில் பெண்கள் பலர் – விழா நிறைவு பெறும் வரை இருந்து நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தார்கள். அதேவேளை ஆண்களும் நிறைந்து இருந்தார்கள். சபையை நிறைத்து இளம் குருத்துகளும் இருந்தார்கள்.

    விழாவின் ஆரம்பமே மிகவும் அற்புதமாக ஒழுங்கமைக்கப் பட்டிருந்தது. மண்டப அலங்காரம் மிக மிக அருமையாய் அமைந்தது. நிகழ்ச்சிகள் அத்தனையும் பெறுமதியாய் இருந்தன. மகளிர் அரங்கு ஒரு தனித்துவத்துவமாக அமைந்தது. பீக்கொக் மண்டபமே ஒரு வரப்பிரசாதம்தான். இறைவனது கோவில் வளாகத்தில், தீபஒளித் திருநாள் கொண்டாடும் தினத்தில் நல்லதொரு தலைமையின் கீழ் இந்த விழா இடம் பெற்றமையை யாவருமே பாராட்டி நிற்கும் இவ்வேளை இந்தப் பதினைந்தாவது எழுத்தாளர் விழாவானது “மனதில் நிற்கும் விழா ” என்பதில் எள்ளளவும் ஐயமில்லை எனலாம் !

    –எம். ஜெயராமசர்மா, மெல்பேண் அவுஸ்திரேலியா

    Share
  • விடியலும் வந்தே சேரும்!

       -எம் . ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா

        கண்ணபிரான் அவதரித்த பூமியிலே
           காந்திமகான் தடம்பதித்த பூமியிலே
       சொல்லவொணாத் துயரமெலாம் பெருக்கெடுத்துச்
            சுயமிழக்கச் செய்வதினைக் காணுகையில்
        மண்ணிலுள்ளோர் மனமெல்லாம் மரமாச்சா
              மனதிலுறைச் கருணையெலாம் மடிந்தாச்சா
        என்(னு)கின்ற எண்ணமதே எழுகிறதே
             எவர்வருவார் இந்தநிலை போக்குதற்கு?

      காடுமேடு என்றலைந்த மனிதவினம்
           கட்டம்பலக் கடந்துவந்து நாளாச்சு
      நாடுநகர் என்றெல்லாம் ஆக்கிவைத்து
          நாகரிகம் என்றுசொல்லித் திரிகின்றார்
     தேடிநாடி ஓடுகிறார் திசையெல்லாம்
          திரட்டுகின்றார் மூட்டையிலே செல்வமதைக்
     கூடுவிட்டுக் கூடுபாயும் மனத்தைமட்டும்
        குணம்மாறா வைத்துவிட்டார் குவலயத்தில்!

     ஆடுமாடு கோழியெல்லாம் வளர்க்கின்றார்
          அவைபற்றி இலக்கியமும் ஆக்குகின்றார்
     மேடையேறி அவைபற்றி முழக்குகின்றார்
        விருந்துவைத்தும் அவற்றையவர் சுவைக்கின்றார்
     சாதிசாதி என்றுசொல்லி மோதுகின்றார்
         சமயம் எனப்பலசொல்லிக் காட்டுகின்றார்
     நீதிநெறி பற்றியெல்லாம் பேசுகின்றார்
          நெஞ்சமதை மாற்றமட்டும் நினைக்கமாட்டார்!

     கடவுள் எனும் பரம்பொருளைக்
        கண்டு கொள்ள வேண்டுமெனில்
    காட்டுத்தனம் எம்மை விட்டே
        களைந்தெறியப் படல் வேண்டும்
    மதம் கொண்ட மனத்துடனே
         மற்றவரை வதைத்து நின்றால்
     சினம் பெருகி யாவரையும்
          சீரழித்து விடும் அன்றோ?

     ஆதலால் காதல் செய்வோம்
           அனைவரும் ஒன்று என்றே
    மோதலைத் தவிர்த்துக் கொண்டு
         முறுவலை ஈந்தே  நிற்போம்
    பேதைமை உள்ளந் தன்னைப்
         பிரியமாய் மாற்றிக் கொண்டால்
    வேதனை விரைந்தே போகும்
          விடியலும் வந்தே சேரும்!

     

     

    Share
  • சாமியே சரணம்!

                              ஐயப்ப வழிபாட்டின் முக்கியத்துவம்

                      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    lord-ayyappa-hindu-god-of-sabarimala-temple

          [  எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா ]

          ஐயப்பனது வழிபாடு இன்று யாவராலும் மேற்கொள்ளப்படும் வழிபாடாக விளங்குகிறது.இந்த வழிபாடு இடைவிட்டு வந்த ஒன்றா அல்லது தொன்று தொட்டு வந்த ஒன்றா என்னும் வாதப்பிரதி வாதங்களும் சர்ச்சைகளும் நடந்து கொண்டு இருக்கின்றன.ஆனாலும் ஐயப்ப வழிபாடு மட்டும் தனது நிலையில் உயர்வு பெற்று எல்லோராராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வழிபாடாக வளர்ந்து வருவதையே காணமுடிகிறது.அதுமட்டுமல்ல யாவரும் இந்த வழிபாட்டில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதில் பெரிதும் விருப்புடையவர்களாக இருப்ப தையும் கண்டுகொள்ள முடிகின்றது.

         கந்தபுராணம், விஷ்ணு புராணம், பத்மபுராணம் , யாவும் ஐயப்ப வழிபாடு பற்றி எடுத்துச் சொல்லுகின்றன.இப்புராணங்கள் தெய்வத் தன்மை மிக்கன. இவற்றில் ஐயப்பன் பற்றிய குறிப்பும் அவரது தோற்றம் பற்றிய விளக்கங்க ளும் இருக்கின்ற காரணத்தால் ஐயப்ப வழிபாட்டை இடைநடுவில் வந்தது என்று வாதிடுவதோ விமர்சிப்பதோ பொருத்தமற்றதாகி விடுகிறது. இதனால் ஐயப்ப வழிபாடானது தொன்று தொட்டே வந்திருக்கிறது என்றே கருதவேண்டி இருக்கிறதல்லவா?

          ஐயப்பனை தர்மசாஸ்த்தா என்றும் பெயரிட்டும் வழிபடுவர். சாத்தன் என்பது காவலுக்குரிய தெய்வமாகாக விளங்கியிருக்கிறது. சாஸ்த்தா என்பது சமஸ்கிருதத்தில் வழங்கப்பட அதுவே தமிழில் சாத்தா எனமருவி பின்னர் சாத்தனார் ஆகியது எனவும் வராலாற்றால் அறியமுடிகிறது.

        காவல் தெய்வமாக விளங்கினார் என்பதற்கு அவரின் மற்றொரு பெயரான பூதநாதன் என்பதும் பொருந்துவதாக இருப்பதாக வரலாறு சுட்டி நிற்கிறது. விநாயகப் பெருமானை கணங்களுக்கு அதிபதி என்ற நிலையில் ” கணபதி ” என்கிறோம். தேவசேனைகளின் அதிபதியாக விளங்குவதால் முருகப்     பெருமானை” தேவசேனாபதி” என்கின்றோம். ஐயப்பன் பூதகணங்களுக்குத் தலமை தாங்குவதால் அவரை ” பூதநாதன் ” எனப் போற்றுகின்றோம்.

         இதில் இன்னுமொரு அர்த்தத்தையும் நாம் கண்டுகொள்ளலாம்.இந்த மனித சரீரமானது பஞ்சபூதங்களால் ஆனது. எனவே பஞ்சபூதங்களும்  எந்த நேரமும் மனிதர்களை ஆட்டிப்படைக்கும் வல்லமை பெற்றிருக்கும் அல்லவா?அப்படிப் பட்ட மனிதர்களை அந்தப்பூதங்களிடமிருந்து காத்து ரட்சிக்கும் ஆற்றல் பூத நாதனாகிய ஐயப்பனால் மட்டுமே முடியும் அல்லவா? இதனாலும் பூதங்களை ஆளும் வல்லமை பெற்றவன் என்ற வகையிலும் பூதநாதன் என்பது பொருத்த மாகி நிற்கிறதுதானே !

          ஐயப்ப வழிபாட்டில் பல முக்கிய அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.அதன் காரணமாகவும் அந்த வழிபாட்டை அனைவரும் கைக்கொள்ளுகின்றனரோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது.

         ஒரு மண்டலம் என்பது சாதாரணவிஷயமல்ல.அந்த ஒரு மண்டலமும் எந்தவிதமான கெட்ட பழக்க வழக்கங்களையும் மனத்தாற்கூட நினையாமல் கைவிட்டே ஐயப்ப வழிபாடு நடத்தப்படுகின்றது.இங்கு மனம் தூய்மை அடைவதோடு வாழ்வும் வெளிச்சம் பெறமுடிகிறது எனலாம்.

     ” உற்ற நோய் நோற்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை ” என்னும் வள்ளுவர்

    வாக்கு இங்கு போற்றப் படும் நிலையே காணப்படுகின்றது. கடைப்பிடிப் பார்கள் செவ்வனே கடைப்பிடித்தால் சிறப்புத்தான் வந்து நிற்கும். இது ஐயப்ப வழிபாட்டின் முக்கியத்துவம் எனலாம்.

       கடவுளர்களில் பிரம்மச்சாரியாக ஐயப்பன் இருக்கின்றார்.அதுமட்டு மல்ல அவரது கைகளிலே எந்தவித ஆயுதங்களும் இல்லை. இது அற்புதமான அமைப்பு அல்லவா? அவரது குழந்தை வடிவமும் புன்சிரிப்புத் தவழும் முகலாவண்யமும் பார்ப்பவர் மனத்தைப் பக்குவவப் படுத்திவிடும் அல்லவா ?

    உலகிலே எங்கு பார்த்தாலும் சண்டையும் அழிவுகளுமே ! ஆயுதக்கலாசாரம் பெருகி அமைதியைக் குலைத்துவிட்டது. இந்த நிலையில் ஆயுதமே கையில் ஏந்தாது அமைதியாயும் சிரிப்போடும் ஐயப்பன் காணப்படுவது அகில உலக அமைதிக்கும் உலகம் தழுவிய சமாதானத்துக்கும் நல்ல ஒரு எடுதுக்காட்டு அல்லவா ? இதனாலும் இந்த வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

         காமம் என்பதுதான் யாவற்றுக்கும் மூலகாரணமாகும்.ஐயப்பன் பிமச்சாரி யாக விளங்கும் நிலையும், அவரது வழிபாட்டை மேற்கொள்ளும் நிலையில் பிமச்சரியம் கடைப்பிடிக்கும் நிலையும் எம்மிடையே உள்ள சிற்றின்பங்கள் அனைத்தையும் போக்கிவிடும் தன்மையை ஏற்படுத்திவிடும் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.காம எண்ணங்கள் எம்மைவிட்டுப் போய்விட்டால் உலகிலே காணும் யாவுமே ஆனந்த மயமாகவே தோற்றமளிக்கும். அந்த ஆனந்தமும் அற்பம் ஆனதல்ல.அது இறைத்தன்மை மிக்கதாகவே இருக்கும். இவையெல்லாம் ஐயப்ப வழிபாட்டின் முக்கியத்துவங்கள் எனலாம்.

         எமக்குள்ளே இறைவன் இருக்கின்றான்.அந்த இறைவனை நாங்கள் முயன்றால் கண்டுவிடலாம் என்று ஆன்றோர்கள் கூறுவார்கள்.அதற்கு நல்ல தேடல் வேண்டும்.

       ” தேடிக் கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும்

           தேடிக் காணொனா தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன் “

    என்று அருளாளர் ஒருவர்கூறுகின்றார். இது முற்றிலும் உண்மையானதாகும். இந்த அரிய தத்துவத்தை ஐயப்பன் வழிபாடு மிகவும் இலகுபடுத்தி இருக்கிறது.

        ஐயப்ப விரதம் இருக்கும் ஐயப்ப பக்தர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வேளை ஒருவராவது மற்றயவரை பெயர்சொல்லி அழைப்பது வழக்கம் அல்ல.

    ஒருவரை ஒருவர் ” சாமி ” என்றுதான் அழைப்பார்கள். இதுதான் ஐயப்ப வழி பாட்டின் அதியுச்ச நிலை எனலாம்.சாதாரண நிலையில் இருக்கும் ஒருவர் சாமி என்னும் நிலைக்கு வருவதை வேறு எந்த வழிபாட்டிலும் காணவே முடியாது.அதனை ஐயப்ப வழிபாடு ஒன்றே தந்து நிற்கிறது என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

         மனிதர்கள் பல பிறவிகளிலும் செய்த பாவங்களும் , புண்ணியங்களும் அவர்களுக்குப் பெரும் பாரமாகவே பிறவி தோறும் வந்து கொண்டிருக்கும்.

    இவை இரண்டையும் விடும் பொழுதுதான் பிறவியென்னும் பிணி அகலும்.

    இதனையே சைவ சித்தாந்தம் இருவினை ஒப்பு, மலபரிபாகம், சத்தினிபாதம் என்றெல்லாம் சொல்லும். இவை எமக்கும் விளங்குவது சற்றுக் கடினம்தான்.ஆனால் ஐயப்ப வழிபாட்டில் இதனை இலகுவாக்கி ” இருமுடி ”  கட்டுதல் என்று வைத்துவிட்டார்கள். இருமுடியில் ஒன்றில் இறைவனுக்கான நிவேதனப் பொருட்களும் மற்றயதில் அடியவர்களுக்கான பொருட்களுமே  அடங்கியிருக்கும். இங்கே இறைவனுக்கானவற்றை புண்ணிய மூட்டை என்றும் மற்றயதை பாவ மூட்டை என்றும் கொள்ளலாம் அல்லவா ? இந்த ஆன்மா ஆனது பாவத்தையும் புண்ணியத்தையும் சுமந்த படியேதான் இருக்கும். இறைவனிடம் போகும்பொழுது அதுவும் பக்தியுடன் பக்குவமாகப் போகும் பொழுது பாவத்தின் நிலை குறைந்து புண்ணியம் மேலோங்க ஆன்மாவின் பாரம் குறைவடையும். இந்த அரிய கருத்தே இருமுடித் தத்துவம் என்று ஐயப்ப வழிபாட்டில் காணப்படுகின்றது என்பது மனத்தில் கொள்ள வேண்டிய கருத்தாகும்.

          பகவத்கீதையில் பதினெட்டு அத்தியாயங்கள் இருக்கின்றன. ஐயப்ப தரிசனத்திலும் பதினெட்டுப் படிகள் இருக்கின்றன. பாரதப் போரில் அர்ஜ்ஜுனன் கலங்கிய கலக்கத்தைத் தெளிவாக்கி இறைதத்துவத்தையும் வாழ்க்கைத் தத்து வத்தையும் பகவான் கண்ணன் காட்டியதுவே கீதையென்னும் வேதமாக வந்தது.

        அதே போன்றதுதான் ஐயப்ப வழிபாட்டிலும் பதினெட்டுப் படிகளின் தத்துவம்.முதல் ஐந்து படிகளும் கர்மேந்திரியங்களாகவும் அடுத்த ஐந்து படிகளும் ஞானேந்தியங்களாகவும் அடுத்த நான்குபடிகளும் அந்தக்கரணங்க ளாகவும் மிகுதி மூன்று படிகளும் முக்குணங்களாகவும் உருவகப்படுத்தப் படுகின்றன. இவற்றைக் கடந்தால் பதினெட்டாம் படியானது இறைதரிசனத்தை காட்ட வல்லது என்னும் அதியுன்னத தத்துவத்தை படிகளைக் கொண்டே ஐயப்ப வழிபாடு உணர்த்தி நிற்கிறது என்பது மிகவும் முக்கியமானதாகும்.

        தேங்காயினுள் நெய்விட்டு அதனை ஐயப்ப தரிசனத்தின் பொழுது கொண்டு செல்லும் வழக்கம் இருக்கிறது.தேங்காயில் மூன்று கண்கள் இருக்கின்றன. இவற்றில் ஒருகண்ணை மட்டுமே திறந்து நெய்யினை விடுவார்கள். இங்கே கூட மிகச்சிறந்த தத்துவத்தை ஐயப்ப வழிபாடு காட்டிநிற்கிறது.மனிதர்களுக்கு புறத்தே தெரிவது இரண்டுகண்களே.அதே வேளை மூன்றாவது கண்ணும் இருக்கின்றது.அதனையே அகக்கண் என்கிறார்கள்.நெய் என்பது ஆன்ம ஞானம் அதனை உடம்பாகிய தேங்காயினுள் செலுத்த வேண்டுமானால் அதற்கு அகமாகிய கண்ணின் வழியேதான் செலுத்தமுடியும் எனவேதான் தேங்காயின் ஒருகண்ணைத் திறத்தல் என்பது இங்கே ஏற்படுத்தப் பட்டது.இதனை அனைவரும் விளங்கி வழிபட்டால் நல்லதே.

           ஐயப்ப வழிபாட்டில் அரனும் அரியும் இணையும் தன்மை காணப்படு கிறது.அரியும் அரனும் சேர்ந்த வடிவமானதால்த்தான் அரகரசுதன் ஐயன் ஐயப்பன் என்று போற்றப் படும் நிலை இந்தவழிபாட்டில் ஏற்பட்டது எனலாம்.

    இதனால் சைவ வைஷ்ணவ ஒற்றுமையின் வடிவமாகவும் ஐயப்பனும் அவரது வழிபாடும் அமைந்திருப்பதும் இந்த வழிபாட்டின் மிக மிக முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது என்றும் கொள்ளலாம்

          ஆடுதல், பாடுதல், ஒன்று சேருதல், உணவிட்டு உபசரித்தல், சாதி, மத, ஏற்றத் தாழ்வுகள் பாராமை, சமரசம் என்னும் தரரகமந்திரமே மேலோங்கி இருத்தல், தீவிர வைராக்கியம், இன்முகம் காட்டுதல், இன்சொல்பேசுதல், பெரியவரைக் கனம் செய்யுதல், இப்படிப் பல நிலைகளில் ஐயப்ப வழிபாடு விளங்குகின்ற காரணத்தாலும் இன்றைய உலக நிலையில் மிகவும் முக்கி யத்துவம் மிக்க வழிபாடாக ஐயப்ப வழிபாடு திகழ்கின்றது.

            சாமியே சரணம் ஐயப்பா ! சாமியே சரணம் ஐயப்பா ! என்னும் ஒலியானது உலகையே ஒன்று கூட்டும் சக்திமிக்கதாக விளங்கி ஐயப்ப வழிபாட்டை உலக வழிபாடாக மாற்றிவிடும் சக்திபெற்றதாக இன்று பிரவாகித்து நிற்கிறது என்பது நிதர்சனமாகும்.

            சரணம் சரணம் ஐயப்பா சாமிசரணம் ஐயப்பா !

    Share
  • எம்மனது அழுகிறது !

    எம். ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா

    apj-abdul-kalam-650-ap_650x400_71438008626
    வல்லரசு நல்லரசு எனமனதில் கொண்டுநிதம்
    வல்லவராய் நல்லாவராய் வாழ்ந்துநின்ற மாமனிதர்
    எல்லோரின் மனங்களிலும் இருந்தமர்ந்த கலாமவர்கள்
    இல்லை என்றுசொல்லிவிட எம்மனது அழுகிறது !

    ஈடில்லா விஞ்ஞானி எமைவிட்டுப் போனசெய்தி
    நாடெல்லாம் நினைந்தழவே நமன்கூட நடுங்குகிறான்
    விஞ்ஞானி தனையழைத்து விண்ணவரோ மகிழுகின்றார்
    மண்மீது இருப்போரோ மனம்நொந்து தவிக்கின்றார் !

    அப்துல்கலாம் ஐயா அனைவருமே அழுகின்றார்
    அணுத்துறையும் உமைத்தேடி அலமந்து நிற்கிறது
    அமைதியாய் இருந்துகொண்டு அனைத்தையும் செய்துநின்றாய்
    அழுகின்றோம் கலாமையா அழகுமுகம் காணாது !

    கனவுகாணச் சொல்லிவிட்டு காணாமல் போனதெங்கே
    கனவுநனைவு எல்லாமே கலாமாக இருக்கிறது
    காலனிடம் சென்றநீங்கள் கனவுகாணச் சொல்லிவிட்டு
    கடுகதியாய் இங்குவந்து காட்டிடுங்கள் முகத்தையையா !

    இங்கிருக்கும் பிள்ளைகளோ ஏக்கமுடன் இருக்கின்றார்
    எங்கள்கலாம் ஐயாவை எப்படிநாம் பார்ப்பதென
    தங்கத் தமிழ்மகனே தரமிக்க தமிழ்க் கவியே
    உங்களது இழப்பாலே உலகமே அழுகிறது !

    Share
  • ஏன் இப்படி?

    எம். ஜெயராமசர்மா

    “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி” என்று பெருமை பேசுபவர்கள் தமிழர்களாகிய நாங்கள் தான். தமிழர் வாழ்வு பெருமையுடையது. தமிழர் நாகரிகம் உயர்ந்தது. கலை கலாச்சாரம் ஓங்கி உலகு அளந்தது. “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று சொல்லி தமிழன் என்றாலே துணிவும் அஞ்சாமையும் கொண்டவன் என்று பெருமை பேசுபவர்களும் நாங்களேதான். உண்மைதான்! எங்கு சென்றாலும் தன்னை அடையாளப்படுத்தத் தமிழன் தவறுவதில்லை என்பதும் வெட்ட வெளிச்சமானதாகும்.

    உலகம் முழுவதும் தமிழன் பரந்துபட்டு வாழ்கின்றான். பலவித முயற்சிகளிலும் ஈடுபடுகின்றான். தமிழன் கைபடாத துறைகளே இல்லை என்று சொல்லலாம். படிப்பாகட்டும், நடிப்பாகட்டும், வியாபாரமாகட்டும், யாவற்றிலும் தனது பேராற்றலை வெளிப்படுத்தியே தமிழன் நிற்கின்றான். இதனைப் பார்க்கையில் தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவனும் பெருமையில் பூரித்தே நிற்பான்.

    தமிழன் சென்ற இடமெல்லாம் கோவில்களைக் கட்டுவான். சங்கங்கள் அமைக்கத் தவறவே மாட்டான். பத்திரிகைகள் என்றால் தமிழனுக்கு உயிர் மூச்சு. கலைகளை வளர்ப்பதில் போட்டா போட்டி போடுவான். மேடைகளில் ஏறிவிட்டால் கருத்துக்களுக்குப் பஞ்சமே இருப்பதில்லை. பேனாவை எடுத்து விட்டால் கம்பனும் காளிதாசனும் கூடப் பிச்சை வாங்கவேண்டும். அந்த அளவுக்கு எழுதியே குவித்து விடுவான். பண்டிதமணி கணபதிப்பிள்ளை கம்பனை “அபரபிரமன்” என்று வியந்து கூறியிருப்பார். அவரது அந்தச் சொற்பிரயோகம் தமிழனுக்கே உரியதென்றால் அது மிகையாகாது.

    இப்படியெல்லாம் பலவித ஆற்றல் கொண்ட தமிழனிடம் மிகக் கேவலமான ஒரு குணமும் குடிகொண்டு விட்டது. அதுதான் அடிமை மனப்பான்மை. தன் இனத்திடம் மிகப் பெருமை கொண்ட பொக்கிஷங்கள் இருக்கின்றனவே என்று எண்ணுவதை விட்டு விட்டு தன்னையும் தனது இனத்தையும் தாழ்த்திக்கொள்ள நினைப்பதையிட்டுத்தான் பெரும் வேதனையாக இருக்கின்றது.

    உலகின் நனிசிறந்த மொழிகளிலே தமிழ் மொழியும் ஒன்று என்று அறிஞர்கள் குறிப்பிடுவர். தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் உலகமொழிகளை வகைப்படுத்திய பொழுது “தமிழைப் பக்திக்குரிய மொழி” என்று சுட்டிக்காட்டினார். பக்தி இலக்கியம் தமிழ் மொழியில் உள்ள அளவு வேறு எந்த மொழிகளிலும் இல்லை என்பது தனிநாயகம் அடிகளாரின் கருத்துமட்டுமல்ல ஏனைய மொழியியல் அறிஞர்களின் கருத்து என்பதும் சுட்டிக்காட்டத் தக்கதாகும்.

    “பக்தி” என்பதில் அன்பும் அமைதியும் சாந்தமும் கனிவும் மென்மையும்  இரக்கமும் பொறுமையும் நிறைந்திருக்கின்றது என்று கொள்ளலாம். இதனால் தான் பாட்டுக்கொருபுலவன் என்று பாராட்டப்பட்ட பாரதியும் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்போலும் என எண்ணக்கிடக்கின்றது.

    தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெள்ளை இனத்தவர்கள் பலர் தமிழின் இனிமை கருதி அதனைக் கற்றதோடு நில்லாது – தமிழ் உள்ளம் கொண்டவர்களாக மாறியதையும் தமிழ் வரலாற்றில் அறிகின்றோம். ஜோஸப் பெஸ்க்கி என்பவர் தமது தீராத தமிழார்வத்தால் வீரமாமுனவராகி இன்பத்தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றதோடு நில்லாமல் பல அரிய படைப்புக்களையும் தமிழில் படைத்தார்.

    இவரால் ஆக்கப்பட்ட ‘சதுரகராதி’ பிற்காலத்தில் எழுந்த பேரகராதிகளுக்கெல்லாம் முன்னோடியாக, அடிப்படையாக அமைந்ததெனலாம். கம்பனது கவிநயமும் திருத்தக்க தேவரது சுவைநயமும் நிரம்பப்பெற்றதென தமிழ் உலகம் போற்றும் “தேம்பாவணி” எனும் காவியத்தையும் இப்பெருமகனார் தமிழுக்கு அளித்துப் பெருமை சேர்த்தார்.

    “போப்பையர்” என்று போற்றப்பட்ட வணக்கத்துக்குரிய ஜீ.யூ. போப் இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பிரிவுக்குப் பொறுப்பாளராக விளங்கியவர். இவர் தமிழ் மேல் கொண்ட ஆராக காதலால் தமிழைக் கற்று திருவாசகத்தையும், திருக்குறளையும், யாவரும் அறியும் வண்ணம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதன் மூலம் தமிழின் இனிமையையும், அதன் பெருமையையும், உலகுக்குக் காட்டிய பெருமகனாகத் திகழ்கிறார் எனலாம்.

    இவர் தனது ஆசையாக எதைக்கருதினார் தெரியுமா? “தமது கல்லறையில் தாம் ஒரு தமிழ் மாணவன்” என எழுதப்படவேண்டும் என்று தானாம். எங்கோ பிறந்து, எங்கோ படித்து வளர்ந்த ஒருவர் “தாம் தமிழனாக இருப்பதையே விரும்புகிறேன்” என்று சொல்லும் அளவுக்கு தமிழுணர்வு ஊறிய அந்தப் பெருமகனை நினைப்பதற்கே எமக்கெல்லாம் தகுதி உண்டா என்றே எண்ணத்தோன்றுகிறது. “நாமமது தமிழரெனக் கொண்டிங்குவாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்” எனும் எண்ணமே எழுகின்றது.

    தாமரைத் தடாகத்தில் நிரந்தரமாக வாழும் தவளைக்குத் தன்னுடன் கூடவே இருக்கும் தாமரைப்பூவின் அருமை தெரிவதில்லை. அதே வேளை எங்கேயோ தொலைவில் உள்ள காட்டிலிருக்கும் வண்டினங்கள் ஓடிவந்து தாமரைப் பூவிலுள்ள மதுவை உண்டு இன்புற்றுச் செல்லுமாம் என்றொரு பாட்டு உண்டு. இந்தப்பாட்டும் இதன் பொருளும் தமிழர்களாகிய எங்களுக்கும் பொருத்தமாக இருக்கிறது. தமிழர்களாகிய நாம் அந்தத் தாமரைத்தடாகத் தவளை போல இருக்கிறோம். எமது மொழி, பண்பாடு,  இவற்றின் பெருமைகளை அறியாது நிற்கின்றோம். தாமரையின் தேனை உண்ணவரும் வண்டுகளைப்போல மற்றவர்கள் எமது பெருமைகளை அறிந்து வந்து பயன் பெற்றுச் செல்கின்றனர். இதனைப் பார்த்தாவது நாம் நம்மை மாற்றிக் கொள்ளவேண்டாமா? சற்றுச் சிந்திப்போமா?

    பொது இடங்களிலோ அல்லது வேலை செய்யும் இடங்களிலோ தமிழர் அல்லாத அதேவேளை ஆங்கில மொழியைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்கள் சந்திக்கும்போது அவர்கள் தங்களது தாய் மொழியிலே பேசுவதை சாதாரணமாகக் காணமுடிகிறது. ஆனால் ஒரு தமிழன் மற்றொரு தமிழனைச் சந்திக்கும் வேளை எப்படி விளிக்கின்றான்? நமது மொழியிலா? அன்னிய மொழியிலா?

    தமிழ் மொழியில் பெயரை வைத்து அதற்காக உழைக்கப் போகின்றோம் என்று  உறுதி மொழி எடுக்கும் அமைப்பின் நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுது பயன்படுத்தப்படுவது தமிழ் மொழியா? அன்னிய மொழியா? ஒரு அமைப்பின் பெயர் “தமிழ் வளர்ச்சிக் கழகம்”. அந்த அமைப்பின் பொதுக்கூட்டம் நடை பெற்றது. புதிய அங்கத்தவர்களுக்கும், புதிய உத்தியோகத்தர்களுக்கும் ஆன தெரிவு நடைபெற்றது.

    நிகழ்ச்சியை நடத்தியவர்கள் விளக்கம் அளித்து உரையாற்றியது தமிழில் அல்ல. அன்னிய மொழியான ஆங்கிலத்திலாகும். வேடிக்கை என்னவென்றால் அங்கு கூட்டத்துக்கு வந்திருந்த அனைவருமே நன்றாகத் தமிழ் பேசும் தமிழ்ப் பெருங்குடிமக்கள். நானும் அந்தக் கூட்டத்துக்குப் போயிருந்தேன். எனக்குத் தலை சுற்றுவது போலாகிவிட்டது. ஏன் இப்படி? இது தேவைதானா? இப்படிச்செய்வதற்கு என்ன பெயர்? அடிமை மனப்பாங்கா? அல்லது தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்வதில் பெருமையா? சற்றுச் சிந்திப்போமா?

    ஒரு நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. முழுக்க முழுக்க தமிழர்கள் நிறைந்த அரங்கு. அங்கு நாட்டிய நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு முழுவதும் அன்னிய மொழியில். நடனம் ஆடியது தமிழ்ப் பெண்! நட்டுவாங்கம் தொடக்கம் பக்கவாத்தியம் வரை யாவரும் சுத்தத் தமிழர்கள்! யாருக்காக இந்த அறிவிப்பு? இப்படிச் செய்வதில் என்ன பெருமை? யாராவது எம்மைப் பாராட்டுவார்கள் என்ற எண்ணமா? அன்னிய மொழியில் பாண்டித்தியமும் எங்களுக்கு இருக்கிறது என்று கூறும் நோக்கமா? இதைத்தான் ஒரு வித மாயை எனலாமா?

    உடையை மாற்றுகிறோம். உணவை மாற்றுகிறோம். உரைப்பதை மாற்றுகிறோம். ஆனால் உணர்வை மாற்றலாமா? நாம் நம்மை எப்படித்தான் மாற்றினாலும் அன்னியரும் அவர்தம் நாகரிகமும் எம்மை அவர்களோடு ஒன்றாக்கி விடமாட்டாது. அவர்கள் எக்காலத்திலும் எங்களைத் தங்களோடு  இணைக்கவே மாட்டார்கள். எங்களை அவர்கள் எப்போதுமே ஒரு வரையறைக்குள்ளேயே வைப்பார்கள். நங்கள் எப்படிச்செய்தாலும், அவர்கள் அவர்கள்தான். நாங்கள் நாங்கள்தான். இதனை ஏன் உணர மறுக்கின்றோம்? ஏன் இப்படி ஆனோம்? வேதனையாக இருக்கிறதல்லவா? வெட்கமாகவும் இருக்கிறதல்லவா?

    மங்கலகரமான இடங்களில் பெண்களுக்கு முக்கிய இடமும் பெரு மதிப்பும் கொடுப்பது எமது மரபாகும். பூ அணிந்து நெற்றியில் பொட்டிட்டு பட்டுடுத்தி வந்தால் இலட்சுமீகரமாக இருக்கும் என்பதும் பொதுவான ஒரு கருத்தாகும்.   ஆனால் இன்று இதில் ஒருவித நவீனம் புகுந்து கொண்டது. திருமண வீடாகட் டும், பிறந்த நாள் விழாவாகட்டும், பெண்களில் பலர் தலைவிரி கோலமாக நிற்பதைச் சாதாரணமாகக் காணமுடிகிறது. கோவிலில் கூட இதுதான் நிலை ஆகி விட்டது.

    பெண்கள் தங்கள் கூந்தலை வெட்டினாலோ அல்லது விரித்து விட்டாலோ அதனை மங்கலமாகக் கருதாது அமங்கலமாகவே கருதும் வழக்கம் இருக்கிறது. கோவலன் கொலசெய்யப்பட்டதைக் கேள்வியுற்றதும் கண்ணகி “தேரா மன்னா” என்று ஆவேசம் பொங்க கண்ணீரும் கம்பலையுமாக தலைவிரி கோலத்துடன் பாண்டியன் சபையுள் புயலெனப் புகுந்தாள் எனச் சிலப்பதிகாரத்தில் காண்கின்றோம். ஆவேசம் வந்தால் தலைவிரித்து நிற்பதும், ஆற்றொணாத் துன்பம் வந்தால் தலைவிரித்து நிற்பதும் வந்தே தீரும். ஆனால் நல்ல சுப நிகழ்ச்சிகளின் பொழுது தலைவிரித்து நிற்பது தான் ஏனோ என்று விளங்கவே முடியவில்லை. இது தான் நாகரிகமா? இது தான் எமது பண்பாடா? இதுதான் எமது மரபா? அல்லது இவர்களெல்லாம் பாண்டியன் சபையில் நிற்கும் கண்ணகிகளா? சற்றுச் சிந்திப்போமா? இது எமக்குத் தேவைதானா? சிந்தித்தால் நல்லன தோன்றுமல்லவா?

    மொழியைப் பண்பாட்டை எப்படி வளர்ப்பது? முதலில் நாம் அதன் அருமையைப் பெருமையை உணரவேண்டும். அப்பொழுதுதான் எமது வருங்காலச் சந்ததியினருக்கு அதனைக் கொடுக்க முடியும்.

    உலகில் நாகரிகங்கள் பல. அவற்றில் பலவித முறைகள் காணப்படுகின்றன. அவரவர்களுக்கு அவரவர் பழக்கவழக்கம் முக்கியமானதாகும். அதனை நாம் குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது. அதே வேளை எங்களுக்கான பண்பாடுகளையும் நாங்கள் மறந்தும் விடக்கூடாது. அப்படி மறந்தோமானால் தமிழனின் அடையாளம் தொலைந்து கூடப் போகலாம் அல்லவா? எனவே எங்கள் அன்னையை அணைத்தபடி இருக்க வேண்டும்.

    எங்கள் பிள்ளைகளுக்குத் தமிழே தெரியாது! அவனுக்கு வேட்டி சால்வை பற்றி ஒன்றுமே புரியாது! கூந்தல் நீளமாய் இருப்பது எனது மகளுக்குப் பிடிக்காது! பொட்டு வைப்பது புடவை கட்டுவது நாகரிகம் இல்லை என்று அவள் நினைக்கிறாள்! அம்மா, அப்பா, என்று அழைப்பதைவிட மம்மி.. டாடி என்று அழைப்பதில்தான் அவர்களுக்கு பேரானந்தம். இப்படி தங்கள் பிள்ளைகள் நினைக்கிறார்கள், சொல்லுகிறார்கள், என்பதே தற்போது பல தமிழ்ப் பெற்றாருக்கு பெரு மகிழ்ச்சியும் உள்ளுக்குள் ஒரு வித பெருமையும்.

    நீ பிறந்தது தமிழ் மண்ணில்! நீ குடித்தது தமிழ்த்தாயின் பால்! உன் உடல் பூராவும் ஓடுவது தமிழ்தான். ஆனால் உன் உணர்வில் மட்டும் ஏன் தடுமாற்றம்? தாய் மொழியில் கூடப் பேசுவது வீட்டில் தரக்குறைவு என்று எண்ணுவதனால் தான் பிள்ளைகளும் தாய் மொழியைத் தவிர்க்கின்றனர்.

    அன்னிய மோகத்தில் நீ இருந்தால் உன் கீழ்வருபவர்கள் எப்படி தாய் மொழியைப் பேணுவார்கள்? உனது தாய் மொழியைப் பேசமுடியாத உனது பிள்ளைகளால் உனக்குப் பெருமை வருமா? உன நாகரிகம் அறியாப் பிள்ளைகளால் உனக்கு என்ன பயன்? அன்னிய மொழிகள் அனைத்தையும் நன்றாகப் படியுங்கள் உங்களின் ஆற்றலை வெளிப்படுத்துங்கள். ஆனால் அன்னை மொழியை, பண்பாட்டை, கலாசாரத்தை மட்டும் தூக்கி எறிந்து விடாதீர்கள்.

    மாறுவோமா? கட்டாயம் மாற்றம் வேண்டும்! எங்களின் அடையாளங்களைத் தொலைத்து விடுவதில் என்ன பெருமை இருக்கிறது? ஏன் இப்படி ஆகினோம்? சற்றுச் சிந்திப்போமா?

    Share
  • இடைவெளி தேவையா?

    எம்.ஜெயராமசர்மா

    பாட்டிகளும் தாத்தாக்களும் பகுத்தறிவு இல்லாதவர்கள் என்று எண்ணிவிடுதல் ஏற்றதல்ல. பகுத்து அறிந்து இருந்தபடியால் தான் அவர்கள் புத்தி சொல்ல வருகிறார்கள். இளமையில் உள்ளோர் அதனை ஏற்றுவிட மறுக்கிறார்கள். காரணம் பகுத்து அறிவதற்கு அவர்கள் விரும்புவதில்லை. அதனை அவசியமானது என்றும் எண்ணுவதும் இல்லை. இளமையின் வேகம் எதையும் ஏற்க விரும்புவதில்லை. இந்த நிலை தொடர்ந்து கொண்டே வருகிறது. இதனைப் பற்றி கட்டாயம் சிந்தித்துப் பார்க்கவே வேண்டும்.

    இளமையும் — முதுமையும் மோதக்கூடாது. இளமையென்பதும் தேவை. அதே வேளை முதுமையும் தேவையானதே. எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கே இவை இரண்டும் இணைந்து இருப்பதைக் காணமுடியும். அனுபவமும் வேகமும் தான் அவைகள்.

    எங்களது சைவசமய வரலாற்றை எடுத்துக்கொண்டால் இது நன்கு புலப்படும். சம்பந்தர் இளமையில் இருக்கிறார். அப்பர் பெருமானோ முதுமையில் இருக்கிறார். இவர்கள் இருவரும் எந்தப் பிணக்குமின்றி இணைந்த காரணத்தால்தான் சைவம் என்பது பேரெழுச்சி பெற்றது எனலாம். சம்பந்தர் இறைவனது அருளை இளம் வயதிலேயே பெற்றுக் கொண்டவர். உயர் வகுப்பைச் சேர்ந்தவர். அப்பரோ சமயம் விட்டுச் சமயம் வந்தவர். ஆனால் சம்பந்தரின் பல்லாக்கை சுமந்துவந்த வேளை சம்பந்தர் அதனை அறிந்து ” அப்பரே ” என அழைத்து உயர்ந்த கெளரவத்தை வழங்கினார் என்று வரலாற்றின் வாயிலாக அறிகின்றோம்.

    அப்பரோடு சம்பந்தர் இணையாவிட்டால் இன்று சைவசமயமே கேள்விக் குறியாகத் தானிருந்திருக்கும். ஆனால் இங்கே இளமையான சம்பந்தர் அப்பரை மதிக்கின்றார். அதேவேளை அனுபவத்தில் முதிர்ந்த அப்பரோ சம்பந்தர் சொல்லைப் பெரிதும் போற்றுகின்றார். இருவரும் இணைய அவர்களுடன் மக்களும் இணைய சைவ பக்தி இயக்கம் வீறுகொண்டு எழுந்து வருகிறது.

    இது சமய எழுச்சி. இதே மாதிரி சமூக எழுச்சியிலும் இளமையும் முதுமையும் இணைந்து நின்றதையும் நாம் மறந்து விடக்கூடாது. இந்திய சுதந்திரப் போரில் மகாத்மா முதுமையானவர். அவருடன் நேரு என்னும் இளமை கைகோர்க்கிறது. அங்கே சுதந்திரப் போராட்டம் முன்னேறுகின்றது. காந்தி என்னும் முதுமையுள் பல லட்சக்கணக்கான இளமைகள் இணைகின்றன. சில வேளைகளில் முரண்பாடுகள் தென்பட்டாலும் காந்தி என்னும் முதுமை தனது பொறுமை என்னும் குணத்தைக் கடைப்பிடித்து முரண்பட்ட இளமைகளையும் தன்னோடு இழுத்தணைத்து நின்றுவிடுகின்ற பக்குவத்தைக் காண்கிறோமல்லவா? காந்தியுடன் பல முதுமைகளும், இளமைகளும் இணைந்த காரணத்தால் அன்னிய ஆதிக்கம் அகன்றுவிடுவதைக் கண்டோமல்லவா?

    ஸ்ரீ ராமகிருஷ்ணர் முதுமை. நரேந்திரன் என்னும் இளமை அங்கே இணையும் வேளை அற்புதமான சிருஷ்டி ஏற்படுகிறதல்லவா? நரேந்திரன் என்னும் இளமை ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் புறந்தள்ளி விடவில்லை. உதாசீனப் படுத்தவில்லை. மூலையில் படுக்க வைக்க எண்ணவில்லை. விவேகத்துடன் செயலாற்றி விவேகானந்தராக வீறுகொண்டு எழுந்து நிற்பதைக் காண்கிறோம் அல்லவா?

    ஞானானந்தர் என்னும் மகானால் உருவாக்கப் பட்ட ஆன்மீக அமைப்புத்தான் ஞானானந்த சமாஜம். ஞானானந்தர் என்னும் முதுமையுடன் ஆங்கிலம் படித்த விஞ்ஞானச் சிந்தனைமிக்க ஹரிதாஸ் என்னும் இளமை இணைகின்றது. குரு முதுமையானவர் என் அந்த இளமை நினைக்கவில்லை. குருவின் பாதத்தைப் பற்றிக்கோண்டு சுவாமி ஹரிதாஸ் என்னும் பெயருடன் நாம சங்கீர்த்தத்தால் உலகம் முழுவதும் சென்று ஆன்மீகம் தழைக்கச் செய்ததை நாடே அறியும்.

    Share
  • “சென்றிடுவீர் எட்டுத்திக்கும்” – நூல்விமர்சனம்

    எம்.ஜெயராமசர்மா.

    சென்றிடுவீர் எட்டுத்திக்கும்பல்வேறு காரணங்களால் தமிழர்கள் தமது நாட்டைவிட்டு அன்னிய நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். நாட்டைவிட்டு வாழ்ந்து வந்தபோதிலும் அவர்களில் பலர் தங்களது மொழியை கலாச்சாரத்தை மறக்காமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சம் எனலாம். அவர்களின் வாழ்க்கை என்னவோ அன்னிய நாட்டிலே அமைந்துவிட்டாலும் கூட அவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இடத்தையோ, அங்கிருக்கும் உறவுகளையோ மறக்காமலும் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றிய சுகங்கள் துக்கங்கள் எல்லாம் அன்னிய நாட்டில் வாழ்கின்றவர்மனத்தில் ஏதோ ஒரு பக்கத்தில் இருக்கத்தான் செய்கிறது. அந்த எண்ணம் அவர்களைவிட்டு என்றுமே அகலமாட்டாது. இதைத்தான் தொப்புள் கொடி உறவு என்பதா? அல்லது பாசப்பிணைப்பு என்பதா? எப்படியும் எடுத்துக் கொள்ளலாம்தானே!

    இந்தளவு விளக்கம் ஏன் என்று நீங்கள் எண்ணுவது எனக்குப் புரியாமல் இல்லை. ஒரு முக்கிய விஷயத்தை தொட விரும்பியதால்தான் இந்த விளக்கம் எல்லாம். புலம்பெயர் வாழ்க்கையை நடத்தும் திரு கே.எஸ்.சுதாகர் ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’  என்னும் சிறுகதைத்தொகுதியை எங்கள் கைகளிலே தவழ விட்டிருக்கிறார். அந்தத் தொகுதியில் உள்ள கதைகளை வாசிப்பவர்களுக்காகவேதான் இந்தவிளக்கம் சொல்ல நேர்ந்தது.

    பன்னிரெண்டு சிறுகதைகள் கொண்டதே இந்தத்தொகுதி. இதில் இலங்கையைக் களமாகக் கொண்ட கதைகள், இலங்கையையும் அன்னியநாட்டையும் களமாக இணைத்து நிற்கும் கதைகள், அன்னிய நாட்டை மட்டும் களமாகக் கொண்ட கதைகள் என இக்கதைகள் எழுதப் பட்டிருக்கின்றன.

    ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ சிறுகதைத்தொகுதிக்கு ஒரு விமர்சனம் தேவைதானா? என்னுள் எழுந்து நின்ற கேள்வி! நல்ல விஷயத்தை வாசித்தால், நல்ல விஷயத்தைப் பார்த்தால், அதைப்பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவே வேண்டும். சுவையான ஒரு உணவை உண்ணுகின்றோம். அதனைப்பற்றிக் கட்டாயம் நம் கருத்தைச் சொன்னால் குறைந்தா போய்விடுவோம். ஆனால் பலபேர் எந்தவிதமான அவிப்பிராயமும் அற்றவர்களாக இருந்துவிடுவதும் உண்டு. பிடித்தால் பிடித்திருக்கிறது. ஏன் பிடித்திருக்கிறது? என்ன என்ன விதத்தில் சுவையை ஏற்படுத்தித் தந்திருக்கிறது? இதை மனம் திறந்து சொல்லிப் பாருங்கள்! சமைத்தவரும் சந்தோஷப்படுவார். சுவைத்தவர்களும் சுகத்தை அடையலாம்தானே!

    கதைத்தொகுதியைப் பற்றிச்சொல்ல வந்துவிட்டு சாப்பாடுபற்றிச் சொல்லுகிறேன் என்று மனத்துள் நினைக்காதீர்கள்! கதைகளும் எங்களுக்கு நல்ல சுவையான உணவுதானே! “செவிக்கு நல்ல உணவு கிடைத்தால்“ அது மகிழ்ச்சிதானே! அந்த மகிழ்ச்சிதான் என்னுள் எழுந்த விமர்சனம் ஆகும்.

    கே.எஸ்.சுதாகரை விமர்சனம் செய்வதா அல்லது அவரது கதைகளை விமர்சனம் செய்வதா? வள்ளுவரை விமர்சனம் செய்தால் குறளை விமர்சனம் செய்தமாதிரி. குறளை விமர்சனம் செய்தால் வள்ளுவரும் அதில் வந்துவிடுவார். ஆனால் நான் — சுதாகரைப் பற்றியும் சொல்லப்போகிறேன். அவரது கதைகளைப் பற்றியும் சொல்ல ஆசைப்படுகின்றேன். சுதாகர் கலைத்துறை சம்பத்தப்பட்டவர் அல்ல. அவர் படித்தது பொறியியல் துறை. பெரும்பாலும் கலைத்துறை சார்ந்தவர்களே எழுத்துத் துறையில் புகுந்து வெளுத்துக்கட்டுவார்கள். ஆனால் விதிவிலக்கானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சுஜாதாவை தமிழ் எழுத்துலகில் மறந்துவிடமுடியாது. அவர் விஞ்ஞானத்துறையைச் சார்ந்தவர். பேராசிரியர் நந்தி, பேராசிரியர் சிவசேகரம், டாக்டர் இந்திரகுமார், டாக்டர் ஞானசேகரன் இவர்கள் துறை வேறாக இருந்தபோதும் அவர்களும் கலை இலக்கியத்துறையில் தம்மை இணைத்துக் கொண்டவர்களாகவே விளங்குகிறார்கள். இவர்களது வரிசையிலே பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியான சுதாகரும் இணைந்து கொள்கின்றார்.

    சுதாகரை நேரே பார்ப்பார்களுக்கு—இவரா இக்கதைகளை எல்லாம் எழுதியிருப்பார்? என்னும் ஐயம் கூட ஏற்பட்டுவிடும். அந்த அளவுக்கு ஒன்றுமே தெரியாதவர் போல இவரின் தன்மை காணப்படும். அந்த அளவுக்கு அடக்கமானவர். “அடக்கமுடையார் அறிவிலர் என்றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டாம்“ என்பது இவரைப் பார்த்தால் பொருத்தமாக இருக்கும் என்றே தோன்றும்.

    அநேகமான நூல்கள் வரும்பொழுது அதில் இடம்பெறும் ஏதாவது ஒரு விஷயத்தின் பெயரே தலைப்பாகப் போடுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால் சுதாகரின்  ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்னும் பெயரில் எந்தக்கதையையும் நீங்கள் உள்ளே காணவே முடியாது. இது ஒரு வித்தியாசமான சிந்தனை. பொறியியலாளராக இருந்து பொறுமையுடன் நல்ல கதைகளைத் தந்தமைக்கு ஒரு பாராட்டு. புதியமுறையில் தலைப்பைத் தேர்ந்து வைத்தமைக்கு மேலும் ஒரு பாராட்டு.

    சுதாகரின் கதைகளைப்பற்றி விமர்சனம் செய்வதற்கு முன் …. அவரது தமிழ் பற்றியும் அதனை அவர் எவ்வாறு கையாண்டுள்ளார் என்பதைப்பற்றியும் சொல்லியே ஆகவேண்டும். அவர் படித்தது ஆங்கிலத்தில். ஆனால் அவரின் தமிழ்நடையோ நல்லதோர் தமிழ்ப்புலமை கொண்டவரது நடைபோன்று அமைந்திருக்கிறது. இது அவரின் தமிழ் வாசிப்பால்ல வந்ததோ அல்லது அவர் வாழ்ந்த குடும்பச் சூழலாலோ எனத் தெரியாது. இதுவும் அவரின் வெற்றிக்கு ஒரு காரணம் எனலாம்.

    வாசிக்கின்றவர்கள் மனத்தில் அலுப்புத்தட்டாமல் செய்கிறது அவரது தமிழின் போக்கு. சம்பவங்களை அவர் சொல்லும் பொழுது வாசகர்களையும் கூடவே கூட்டிச் சென்று விடுகிறார். அவரின் கதை மாந்தர்கள் அழுதால் நமக்கும் அழுகை வருகிறது. அவர்கள் கோபப்பட்டால் நமக்கும் கோபம் வந்து விடுகிறது. அவர்களது — சிரிப்பு, அவலம், அன்பு, பாசம், பரிவு — எல்லாம் எங்களுடனும் வந்து ஒட்டிக்கொள்கிறது. கதையல்ல … நிஜம் என்னும் ஒரு வித உள்ளுணர்வை ஏற்படுத்திவிடுகிறது. இந்த மாயத்துக்குக் காரணம் சுதாகர் கையாண்ட எழுத்து நடையாகும்.

    கதைக்கு, கவிதைக்குக் கட்டாயம் கற்பனை வேண்டும். ஆனால் கற்பனையே முழுவதும் ஆகிவிட்டால் அந்தக்கதை உயித்துடிப்பு சற்றுக்குறைந்தது போலக்கூட ஆகிவிடலாம். சுதாகரும் கற்பனை வளம் மிக்கவரானாலும் அவரின் கதைகளில் அவரும் வருகின்றார். அவர் அனுபவித்த வாழ்க்கையும் வந்து நிற்பதையும் காணலாம். நடந்த சம்பவங்கள் நல்ல எழுத்தாளின் கற்பனையில் கலக்கும் பொழுது யாவரையும் தன்னுள் ஈர்க்கும் வல்லமையைப் பெற்றுவிடும். அப்படி ஒரு ஈர்ப்பை தனது கதைகள் வாயிலாக சுதாகர் வரச்செய்துள்ளார். இது அவரது எழுத்து ஆளுமையையே காட்டி நிற்கிறது எனலாம்.

    புலம் பெயர்ந்து வருபவர்கள் படும் சோதனையும், வேதனையும், விரக்தியும்… சுதாகரின் கதைகளில் நாம் பார்க்கலாம். புலம்பெயர்வால் … உறவுகளின் இன்பத்திலோ, துன்பத்திலோ, கூடப் பங்கு கொள்ள முடியாதநிலை ஏற்படத்தான் செய்யும். அப்படி ஏற்படும் பொழுது அதற்குள் அகப்பட்டவர் மனம்படும் பாட்டை சுதாகர் காட்டும் பாங்கு அவருக்கே உரித்தான உத்தியாகும்.

    புலம்பெயர்ந்தவர்கள் அந்த நாட்டவரைப்பார்த்து பயப்படுவது இயல்புதானே! அது மட்டுமல்ல அவர்களை முழுவதுமாக நம்பியும் விடுவார்கள். இதனால் அங்குள்ளவர்கள் நேர்மையின் பிறப்பிடம், இருப்பிடம், எனவும் எண்ணியும் விடுகிறார்கள். ஆனால் அவர்களும் நம்மைப்  போன்றவர்கள்தான். நிறத்தால் வேறுபட்டு இருந்தாலும் எல்லாரும் ஒன்றுதான். ஏமாற்றுதல், பணம்பண்ணுதல், பித்தலாட்டம் செய்தல், யாவும் எங்கும் உள்ள இயல்பான குணங்கள்தான். இதனைக் காட்டுகிறது ’விளக்கின் இருள்’ என்னும் முதலாவது கதை. ‘ரியல் எஸ்டேட்‘ வியாபாரம் ஆஸ்திரேலியாவில் கொடிகட்டிப்பறக்கிறது. மக்களை எப்படியெல்லாம் மயக்குமொழி பேசி மடக்க முடியுமோ அப்படியெல்லாம் மடக்கி தமது வலைக்குள் விழப்பண்ணிவிடுவார்கள். வீடுவாங்கியவர்கள் பின்னர் படும் அவஸ்த்தையினை கண்டுகொள்ளவே மாட்டார்கள். வீடு வாங்கிய பகுதிகளில் ஏதாவது விபரீதங்கள் ஏற்பட்டாலும் வியாபாரம் செய்தவர்களோ அல்லது அது சம்பத்தப்பட்ட அதிகாரிகளோக் கூட காணாததுபோலவே இருந்தும் விடுவார்கள். வாங்கிய வீட்டில் இருக்கவும் முடியாமல், அதனை விற்கவும் முடியாமல் வாங்கியவர்கள் படும் வேதனையை நரகவேதனை என்றுதான் எடுக்கவேண்டும். அந்த வேதனையினை வெளிப்படுத்தும் பாங்கில்த்தான் “ விளக்கின் இருள் “ கதை எழுதப்பட்டிருக்கிறது.

    வீடு வாங்கினாலே எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் வீடுவாங்கிய சிலநாளில் …. அங்கு வசிப்பதே பெரிய ஆபத்து என்று வந்தால் எப்படி இருக்கும்? கஷ்டப்பட்டு உழைத்துச் சேமித்த பணத்தை வைத்து வங்கியில் கடன் பட்டு வீடு வாங்கியவர்கள் படும், பட்ட, மனக் குமுறலை — உண்மையின் அடிப்படையில் சொல்லி நிற்கும் கதைதான் “ விளக்கின் இருள் ‘ கதையாகும். என்ன என்ன புதைத்தார்களோ தெரியாது. எப்படி முன்னர் இருந்ததோ தெரியாது. ஆனால் வீடுகளைக் கட்டிக்குவித்து விடுவது நடைமுறையாக இருக்கிறது. அதனை வியாபாரம் செய்கின்றவர்களும் கொஞ்சமேனும் — அதனைக் கருத்தில் கொள்ளாமல் செயல்படுகின்றனர். மாட்டிக்கொள்பவர்கள் வீடுகளை வாங்கியவர்கள்தான்.

    இந்தக்கதை அறிவு பூர்வமான அணுகுமுறை கொண்ட ஒரு கதையாகும். இனிமேல் வீடு வாங்க இருப்பவர்களுக்கு நல்ல ஒரு அறிவுறுத்தலைத் தரும் வகையில் இக்கதை எழுதப்பட்டிருக்கின்றது. மிகச்சிறந்த கதை என இதனை எடுத்துக் கொள்ளலாம். இந்தப் புத்தகத்தின் முதற்கதையாக அதாவது திறவு கோலாக இக்கதையை முதல் வைத்தமைக்குக் கட்டாயம் சுதாகரைப் பாராட்டியே ஆகவேண்டும்.

    பேராதனைப் பல்கலைக்கழகம் படிப்பின் உச்சமாயும் இருக்கும். மற்றும் பலவேளை இடிப்பின் உச்சமாயும் மாறிவிடும். இனத்துவேஷம் கல்விக்குள் நுழையக்கூடாது. நுழைந்துவிட்டால் அது ஒரு புற்று நோய்தான். அன்றும் இருந்தது. இன்றும் அது அங்கு இருக்கிறது.

    பல்கலைக்கழகம் என்றாலே கிண்டலும் கேலியும் மலிந்து காணப்படுவது இயல்பு. அவற்றை “இரண்டு சம்பவங்களில்“ அனுபவித்து சுதாகர் வெளிப்படுத்தி இருகிறார். பல்கலைகழக மாணவர்கள் ஒன்று சேர்ந்தால் பேசும் வார்த்தைகள் கூட வில்லங்கமானதாகவே இருக்கும். அவையெல்லாம் அனுபவமாக பரவிக்கிடக்கிறது. சண்டைக்காரன் கூட சமயத்தில் மாறி உதவிக்கரம் நீட்டுவதும் உண்டு என்பதை மிகவும் நயத்தோடு காட்டியிருப்பதை படிப்பவர்கள் கண்டுகொள்ளலாம். இக்கதையை வாசித்ததும் — முன்பு பல்கலைக்கழகத்தில் இருந்த காலமே படமாக மனத்தில் ஓடியது. தங்களின் அரசியல் ஆதாயத்துக் காக அன்று முதல்  இன்றுவரை படிக்கும் மாணவர்களைப் பகடைக் காயாக்குவது அரசியல் வாதிகளின் ஒரு ராஜதந்திரமாகவே இருந்து வருகிறது. அதனை ”இரு சம்பவங்களில்” சுதாகர் சுட்டிக்காட்டுகின்றார்.

    புலம்பெயர்ந்தவர்களுக்கு வேலை தேடும் படலம் என்பதே ஒரு திருவிளையாடற் படலம்தான். முன் அனுபவம், பின் அனுபவம், உள்ளூர் அனுபவம் என்று வேலை தேடுபவர்களை கதிகலங்கச் செய்துவிடுவார்கள் வேலை கொடுக்கும் நிலையில் உள்ளவர்கள். அதனை அனுபவித்தரால்தான் இப்படி ஒரு கதையை எழுதமுடியும். அந்தக் கதைதான் “இருவேறுபார்வைகள்“.  இந்தக்கதையை நகர்த்திச்செல்லும் பொழுது அதனை நோயாளி ஒருவர் வைத்தியரோடும் வைத்திய நிலையத்தோடும் படும் அவதிகளைத் தொடுத்து–  வேலைக்கான அனுபவத்தை விளக்கிக்காட்டும் பாங்கை ரசிக்காமால் இருக்கவே முடியாது. இது நல்ல ஒரு உத்தியாக அமைகிறது.

    இலங்கையும் புலம்பெயர் பகுதியும் கதைக்களமாக அமையும் கதைதான் “காட்சிப்பிழை”. இடம் மாறினாலும் வயது ஏறினாலும் .. இருக்கும் நிலையில் மாற்றம் வந்தாலும் இயற்கைக் குணம் என்பது மனிதனை விட்டு மாறவே மாட்டாது. அது நல்லதாக இருந்தால் அதனை வரவேற்கலாம். ஆனால் அது ஆணவநிலை ஆனால் எப்படி அனுமதிப்பது? இலங்கையில் இருந்த குணம் எங்கு போனாலும் மாறிவிடவில்லை. தான் என்னும் முனைப்பு சாகும் தறுவாயில்கூட மாறமறுப்பதையும் — அதே நிலையில்த்தான் இளமையும் மாறாது இறுமாப்புடன் நிற்பதையும் இக்கதை காட்டி நிற்கிறது.

    ஒவ்வொருவரும் காணும் காட்சி அவரவர் பிழைகளை அடையாளப்படுத்தியே விடும். அப்படி ஒரு நிலையைத்தான் “காட்சிப்பிழை“ தெரிவிக்கிறது. அதில் வரும் “தெமட்டக்கொட” அங்கிள்கள் இன்னும் நம்மிடையே இருக்கின்றார்கள். அவர்கள் இக்கதையைப் படிக்கட்டும். ஏன் … பாலகிருஷ்ணர்களும் படித்தாலும் நல்லதுதானே!
    இலங்கையின் துயரம் —- எவ்வளவு தூரத்துக்குப் போனாலும் நம்மனதை விட்டு அகலே மாட்டாது. கண்ணீரும், கம்பலையும், கலந்த சோகம்தான் பலரது வாழ்வாகி விட்டது தமிழர் வாழ்வில். அந்தச் சோகத்தைச் சொல்லவே முடியாது என்றாலும் ஒரு துளியை துணிவாக சொல்லிவிடுகிறார் சுதாகர். அதுதான் “ஒர்கடிதத்தின் விலை”. தமிழ்த்தாயின் வேதனை, சோதனை இக்கட்டான சூழ்நிலை … யாவற்றையும் இக்கதை மிகவும் திறம்பட எடுத்துச் சொல்கிறது. வாசித்துப் பாருங்கள்! அழாமல் இருக்கவே மாட்டீர்கள்.

    கண்டபாவனையில் கொண்டைமுடித்தல், கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி பொல்லாச் சிறகை விரித்தாடிய நிலை, இதைப்பற்றி நாம்ள் அறிந்திருப்போம்.இப்படி இருப்பவர்கள் நம்மில் அநேகம் பேர். விடுப்புப் பார்ப்பதும், மற்றவர் எதைச் செய்தாலும் அதற்கு எதிராகப் போட்டி போடுவதும், பின்பு தேவையில்லாமல் மூக்கு உடைபடுவதும்  காணக்கூடிய சம்பவங்களே. இதில் தெரியாதவர்கள் சிக்கல் பல்பட்டாலும் அதை வேறுவிதமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நெருக்கமான குடும்பங்களே ஏட்டிக்குப் போட்டியாக எண்ணம் கொண்டு செயல்பட நினைப்பதும் அந்த நினைப்பால் சிலவேளை அவமானமும், மனக்குமுறலும், வந்து சேருவதையும் … நகைச்சுவையோடு தரும் கதைதான் ’சேர்ப்பிறைஸ் விசிட்’.  கதை முழுவதும் சிரிப்பாய்க் குவிகிறது. இதனை ஒரு நகைச்சுவைக் குறும்படமாக எடுத்தாலும் மிகச்சிறந்த வரவேற்பைப் பெறும்.

    நிர்ப்பந்தம் காரணமாக வெளிநாடுவருபவர்கள் ஒரு வகையினர். வேலையைத் தேடிக்கொண்டு வெளிநாடு வருபவர்கள் மற்றொருவகயினர். நாட்டின் அசாதாரண  நிலையினால் தம்நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடு வந்தவர்கள் தாம் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் தங்களது குடும்பத்தாருடன் படும் சோகவரலாறு சொல்லுந்தரமன்று. அந்தச் சோகவரலாற்றை தனக்கே உரித்தான பாணியில் ஓரளவு உண்மையும் கற்பனையும் கலந்து சொல்லுவதுதான் “பறக்காத பறவைகள்“ எந்த வேலை கிடைத்தாலும் அதனை ஏற்றுச்செய்யும் மனோ நிலை வந்தேயாக வேண்டும் என்று இக்கதையைப் படிப்பவர்கள் அறிந்துகொள்வார்கள்.

    காலநிலை முற்றிலும் மாறுபட்டது. அதனைச் சமாளித்தே ஆகவேண்டும். பேப்பர்  போடுவது தொடக்கம் பாரம் தூக்குவது வரை எதையும் எப்போதும் செய்வதற்குத் தயாரானால்த்தான் தன்னையும் பார்த்துக் குடும்பத்தையும் பார்க்கமுடியும். இதில் ரோஷம், மானம், பார்க்கவே கூடாது. எனது படிப்பென்ன நானிருந்த நிலை என்ன  என்ற எண்ணம் அந்த நேரத்திலும் வந்துவிடவே கூடாது. அப்படி வந்தால் வருமானம் பாடு திண்டாட்டம்தான். அரசாங்கம் கொடுக்கும் உதவிப்பணத்தில் அடங்கி ஒடுங்கிப் போகவேண்டியதுதான். இதுதான் வெளி நாட்டு உண்மை வாழ்க்கை நிலை என்பதை தனக்கே உரித்தான தமிழ்நடையைக் கையாண்டு காட்சிப்படுத்துகின்றார் சுதாகர்.

    வேலைதேடும் படலம், வேலைகிடைத்ததும் அதில் வரும் அடுத்தபடலம், அந்தவேலை கூடநிரந்தரமற்றது என்று ஏங்கவைக்கும் பரிதாபப் படலம், இவற்றுக்கிடையே …..  பிள்ளை பற்றியோ, மனைவி பற்றியோ, ஏன் தன்னைப்பற்றியோ எண்ணமுடியாத ஒரு சிக்கலான நிலை அத்தனையும் சொல்லிநிற்பதுதான்  “பறக்காதபறவைகள்”. ஆசைமகள் அன்போடு கேட்ட பறவை பற்றி சொல்ல மறந்த– சொல்லவே முடியாமல் உருவாகிய இக்கட்டான நிலைதான் இந்தக்கதை. பறக்க முடியாப் பறவைகள் ஆகிவிட்டோம் என்று குடும்பத்தின் தலைவன் சொல்லும் பொழுது கூடவே நாமும் அந்தக்குடும்பத்துக்குள் நுழைந்துவிடுகிறோம்

    வெளிநாட்டில் வாழ்ந்தால் சந்தோஷமாக வாழலாம் என்பதும் ஒருவித கனவுதான். அந்தக்கனவு உண்மையானது அல்ல. இங்கும் பல் உருவங்களில் பிச்சுப்  பிடுங்கல் களும் வரத்தான் செய்யும். பெரும்பாலும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டதாகவே இந்தச் சச்சரவுகள் ஏற்படுகின்றன. கணவன் வேலைசெய்ய மனைவி வேலை செய்யாது வீட்டில் இருக்கும் பொழுது தேவையற்ற செலவுகள் செய்யக் கணவன் சம்மதியான். மனைவிக்குத் தேவையானது என நினைப்பது கணவனுக்குத் தேவை அற்ற ஒன்றாக கண்ணில்படும். அங்கே வாக்குவாதம் வரும். அது சிலவேளை விஸ்வரூபம் எடுத்தாலும் ஆச்சரியம் அல்ல. அப்படி ஒரு விஸ்வரூபம் எடுத்த நிலையைத்தான் “ ஒருவகை உறவு “ கதை காட்டுகிறது.

    கணவன் மனைவி உறவு இறுக்கமானது. அந்த உறவுகூட பொருளாதாரம் சம்பந்தம் படும் பொழுது எப்படி முறுக்கமாக மாறுகிறது என்பதை அனுபவமாக்கி தரும் கதைதான் “ ஒருவகைஉறவு”. கணவன் மனைவி முறுகல் முற்றி கடைசியில் குடும்பமே இரண்டுபட்டு நிற்கும் நிலையை சுதாகரின் எழுத்து படமாக்கித்தருகிறது. சிவாஜியும் பத்மினியும் போட்டி போட்டு நடித்த பல நல்ல தமிழ்ப்படங்கள் வந்திருக்கின்றன. அதில் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காது பாத்திரமாகவே வாழ்ந்து ( நடிப்பால் ) காட்டியிருப்பார்கள். அப்படித்தான் இந்தக் கதையின் நாயகியும் நாயகனும் சுதாகர் என்னும் கைதேர்ந்த எழுத்தாளரால் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள். நடைமுறை வாழ்க்கையின் தோற்றம் இப்படித்தான் இருக்கும் என்பதை காட்டி இருக்கும்  இக்கதையும் ஒரு முத்துத்தான். பெரும்பாலான ஆண்களும் பெண்களும் சமயத்தில் இப்படி ஆகிவிடுகிறார்கள் என்பதை மிகவும் அற்புதமாகச் சித்திரித்துள்ளார் சுதாகர் அவர்கள்.

    இலங்கையும் வெளிநாடும் சங்கமிக்கும் சோகக்கதைதான் “அசலும் நகலும்“ இது நடந்து முடிந்த கதையல்ல. இப்போதும் இக்கதை ஈழத்தைப் பொறுத்தவரை தொடர்கிறது என்றுதான்  சொல்ல வேண்டும்.

    வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லாம் இருந்தும் …. பல வேளைகளில் எதுவுமே இல்லாதவர்கள் ஆகியும் விடுவார்கள். ஆனால் வெளிநாட்டில் உள்ள உறவுகளின் நட்புகளும், சுற்றி இருப்போரும் — சோகத்தைக்கூட சுறு சுறுப்பான கேளிக்கையாக்கியும் விடுவார்கள். அதையே நவநாகரிகம் என்று எடுத்தும் கொள்வார்கள். அவர்கள் மத்தியில் எல்லாமே ஒருவித நாடகம்தான். ஆனால் ஊரில் இருப்பவர்களோ பழைய பஞ்சாங்கங்கள் ஆகவே இருந்துவிடுவார்கள். எல்லாமே கானல் நீர்தான் என்பதை “ அசலும் நகலும் “ சொல்கிறது. நன்மைக்கோ தின்மைக்கோ ஊருக்கு வரமுடியாத ஒரு சோகமும் ஊரில் உள்ளவர்கள் அங்குள்ள அசாதாரண சூழலில் சிக்குண்டு சாவிலும் கூட — தனிமைப்படுத்தப்பட்டுத் தத்தளிக்கும் பரிதாபமும் படமாக ஓடுகிறதுதான் “ அசலும் நகலும் “ கதையாகும்.

    கிண்டலும் கேலியுமாக ஆரம்பித்து சீரியசாகி நிற்கும் கதைதான் “கற்றுக் கொள்வதற்கு” கற்றுக்கொள்வதற்கு — என்று தலைப்பு வைத்ததுகூட மிக மிகப் பொருந்தம்தான். சிலரை நாம் சாதாரணமாக எடை போட்டுவிடுவோம். ஆனால் அவர்களோ நம் நினைவுக்கு அப்பால் செயற்படுபவர்களாக இருப்பார்கள் அதைப் பார்க்கும் பொழுது நம்மையே நாம் நம்பமுடியாத ஒரு நிலைக்குள் வந்து நிற்போம். அப்படி ஒரு நிலையைத்தான் இக்கதையில் காண்கின்றோம். பின்தங்கியவர்கள் படிப்பறிவற்றவர்கள், என்று ஒதுக்கிவிட முடியாது. அவர்களும் சில விஷயங்களில் நம்மைவிடத் தீவிரமானவர்களாக இருந்தும் விடுவார்கள். அப்பொழுது நாம் நினைப்போம் … இவர்களிடம்  கற்றுக்கொள்வதற்கு .. நிறைய இருக்கிறது … என்ற உண்மை நிலையாகும். கதைக்களமும், கருப்பொருளும் , புதிதாக இருப்பதால் இந்தக் கதை ஒரு புதுக்கதைதான். ஏனென்றால் நாங்கள் அனைவரும் நல்லபடி “ கற்றுக் கொகோள்வதற்கு”.

    அக்கா என்பவள் குடும்பத்தின் அம்மாதான். அருமையான, அன்பான, பாசமான, பரிவான,பு ரிந்த உணர்வுள்ள, அக்கா வாய்த்தால் –அதைவிட மேலான குடும்பம் இருக்கவே முடியாது. அப்படியான ஒரு அக்காவை தேடிக்கொண்டுவந்து விடுகிறார் சுதாகர்.” எதிர்கொள்ளல்” கதையில்தான் அந்த அக்கா வருகிறார். அக்காவை பன்மையில் சுட்டுவதற்குக் காரணம் அவர் தாயாக, தந்தையாக, உற்றநல்ல  துணையாக வருவதே காரணமாகும்.

    பழனி என்றொரு தமிழ்ப் படம் வந்தது. அதைப்பார்த்தால் அழதாவர்கள் இருக்கவே முடியாது. அதே போல் துலாபாரம் என்றொரு படமும் வந்தது மனத்தை அழவைத்தபடம். அதே போன்ற ஒரு உணர்வுதான் “ எதிர்கொள்ளல் “ கதையை வாசித்ததும் வரும். பாசமிக்க அக்காவும் — பரிதவிக்கும் தம்பியும்– கதிகலங்கி நிற்கும் கணவனும்… நஎம்முடனே வந்துவிடுகிறார்கள். தம்பியாலும் எதிர் கொள்ள முடியவில்லை. அக்காவின் கணவனாலும் எதிர் கொள்ள முடியவில்லை. படிக்கும் எங்களாலும் அந்தச் சோகத்தை எதிர்கொள்ளும் தைரியமும் வரவே இல்லை.

    நாட்டுச்சூழல் வாட்டுவதும், துன்பத்தைக் கூட கிட்ட நின்று பார்க்க முடியாத வெளி நாட்டு வாழ்க்கையின் பரிதாபமும், “ எதிர்கொள்ளல்” கதையிலே சங்கமிக்கிறது. அதே நேரம் அக்கறையான செய்தி ஒன்றையும் இக்கதை வாயிலாக நமக்கெல்லாம் சொல்லி நிற்கிறார் சுதாகர். தம்பியும் அழுகிறான். அத்தானும் கலங்குகிறார். வாசிக்கும் நாம் எம்மாத்திரம். நாங்களும் கண்கலங்குகின்றேம். அப்படி ஒரு உருக்கத்தைக் காட்டுவதுதான் “எதிர்கொள்ளல்” கதையின் சிறப்பாகும்.

    இந்தக் கதைத் தொகுப்பில் நிறைவாக இருக்கும் கதைதான் “புதியவருகை”. வெளி நாட்டில்  நடக்கும் பிரசவம் பற்றி இவ்வளவு சுவையாகவும் விஸ்த்தாரமாகவும் எப்படித்தான் சுதாகரால் சொல்ல முடிந்ததோ என நினைக்கையில் பிரமிப்பே ஏற்படுகிறது. ஒரு மருத்துவரோ அல்லது  மகப்பேற்றுத் தாதியோ சொல்லுவது போல இந்தக் கதையின் போக்கு செல்கிறது. ஒரு பிரசவத்தைப் பார்த்த உணர்வுதான் ஏற்படுகிறது. குழந்தை பற்றியும், பிரசவம் பற்றியும் உள்ள கருத்து நிலையும் சூசமாகச் சொல்லப் படுகிறது. கதையோடு நாங்களும் போகிறோம். பிள்ளைகள் பற்றியும், குடும்பம் பற்றியும் ஒப்பீடும் நடத்தப்படுகிறது.

    ஒரு புதுக்கரு இக்கதையில் உருவாகி நிற்கிறது. ஏனென்றால் இது பிரசவம் பற்றிய நோக்குத்தானே! வெள்ளைக்கார மாது ஒரு நல்ல பாத்திரம். அந்தப்பாத்திரம் கதையோடு ஓடிவரும் விதம் சுதாகரின் நகாசுவேலை என்றுதான் சொல்ல வேண்டும். வெள்ளைக்கார மாது இந்தக்கதையில் ஏன் என்று எண்ணும் பொழுது … அந்த மாதுதான் கதையை நிறைவு செய்யும் கைங்கரியத்தில் பங்கேற்கிறார் என்பதும் புலப்படுகிறது.

    புதுக்கரு. புதுக்கதை. புதிய முடிவு. இதுதான் “புதிய வருகை” பன்னிரெண்டு முத்துக்களைக் கொண்டு கோர்க்கப்பட்ட அழகிய — இலக்கியம் என்னும் ஆரம்தான் சுதாகரின் “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் “ என்ற கதைத் தொகுதியாகும். பன்னிரெண்டும் பலவற்றை சொல்லி நிற்கின்றன.

    இலக்கியம் படைப்பது என்பது ஒரு பிரசவம்தான். கருவைச் சுமப்பதும், அதனை நல்ல முறையில் பெற்றெடுப்பதும் சாதாரண காரியமல்ல. அப்படியொரு பிரசவம்தான் இக்கதைத் தொகுதியும். கருவைச் சுமந்து அதை நல்லமுறையில் காத்து அழகிய பிள்ளையாக அனைவருக்கும் விரும்பக் கூடிய பிள்ளையாகத் தந்த சுதாகரை மனமாரப் பாராட்டியே ஆகவேண்டும்.

    அவசரம், அவசரம், எதற்குமே நேரம் போதவில்லை என்ற நிலையில் உள்ள சூழலில் பொறுமையாக பொருள்பொதிந்த கதைகளை எப்படித்தான் இவரால் எழுதமுடிந்ததோ என்பதே ஆச்சரியம்தான் என்றாலும் கிடைத்த நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி நல்ல கதைகளை தந்த எழுத்து மன்னன் சுதாகரை வாழ்த்துகிறேன். அவர் இன்னும் இது போன்ற பல நல்ல படைப்புகளைப் படைக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி மீண்டும் எனது மனம் உவந்த வாழ்த்துக்களைக் கூறி நிறைவு செய்கின்றேன்

    Share
  • நினைத்துப் பார்க்க வேண்டும்

    நினைத்துப் பார்க்க வேண்டும்

    [ எம். ஜெயராமசர்மா B.A (Hons ) Dip. in ( Edu) Dip. In ( Soci ) M.Phil ( Edu ) ]
    (முன்னாள் கல்விப் பணிப்பாளர்)
    [ மெல்பேண் ]

    sanka_kalam

    இருபத்தொரு நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் கூட – சங்கத்தமிழை நினைத்துப்பார்க்கிறோமென்றால் அதற்குத் தக்க காரணங்கள் இருக்கத்தானே வேண்டும். அப்படிப்பட்ட காரணங்களைப் பற்றி அறிந்து கொள்வதன் மூலம் சங்கத்தமிழ் பற்றியும் அதற்கான சூழ்நிலை பற்றியும் எமக்கெல்லாம் தெரிய வருமல்லவா?

    சங்கம் வைத்துத் தமிழை வளர்க்கும் அளவுக்கு அக்காலத்தில் கற்றறிந்தோர் பலர் இருந்திருக்க வேண்டும். சங்கம் வைத்துத் தமிழை வளர்ப்பதற்கு ஏற்ற அரச, சமூகச் சூழலும் இருந்திருக்க வேண்டும். அரச ஆதரவு இல்லாவிட்டால் எந்த இயக்கமும் வளரமுடியாது. சங்க காலத்தில் அரச ஆதரவும் பெருமளவில் தமிழ் வளர்ச்சியின் அடிநாதமாகவே இருந்திருக்க வேண்டும் என்பது புலப்படுகிறதல்லவா?

    சங்க காலத்தில் அரசர்கள் பலர் புலவர்களாக விளங்கி இருந்திருக்கிறார்கள் என்பதை சங்கவரலாற்றால் அறியமுடிகிறது. அரசர்கள் புலவரை மதித்ததனர். புலவர்கள் அரசரை மதித்தனர். புலவர் வாயால் தான் பாடப்படவேண்டும் என்று அரசர்களிடத்து பேராவல் காணப்பட்டது. அறிவொழுக்கங்களில் சிறந்து விளங்கிய சங்ககாலப் புலவர்களைச் சான்றோர் என்றும் அவர்பாடிய செய்யுள்களைச் சான்றோர் செய்யுள் என்று சொல்லுவது தமிழ் வழக்காகும்.

    சங்கப்புலவர்களால் பாடப்பட்ட பாட்டுக்கள் 2381. இவற்றைப் பாடிய பெயர் தெரிந்த புலவர்கள் என்றவகையில் 473 பேர் காணப்படுகின்றனர். அதே வேளை 102 பாட்டுக்களைப் பாடியவர்கள் பெயர்கள் தெரியவராது இருக்கிறது. 235 பாட்டு க்களை கபிலர் என்னும் புலவர் பாடியிருப்பதாகவும் அறிய முடிகிறது. இவற் றைவிட வேறு புலவர்கள் நால்வர் ஒவ்வொருவரும் நூற்றுக்கு மேற்பட்ட பாட்டுக்களைப் பாடியிருக்கிறார்கள். ஒவ்வொரு பாட்டுப்பாடியவர்கள் என்ற வகையிலும் புலவர்கள் சங்ககாலத்தில் வருகிறார்கள்.

    நகரங்களைச் சார்ந்தவர்கள், சிற்றூர்களைச் சார்ந்தவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள், பொன்வணிகர், ஆடைவணிகர், மருத்துவர், தச்சர், சோதிடர், பொற்கொல்லர், கொல்லர், சேனைத்தலைவர், அமைச்சர், பாணர், கூத்தர்  இவர்களுக்கிடையே இருந்தும் பலர் புலவர்களாக இருந்திருக்கிறார்கள். பல்  வேறு தொழில்களைப் புரிந்தவர்களும் புலவர்களாக விளங்கித்தமிழை வளம்படுத்தியிருக்கிறார்கள்.

    பெண்களும் புலவர்களாக இருந்திருக்கிறார்கள். அரசர்களுள் புலமை மிக்கவர்களாக முப்பத்தொருவர் என இனங்காணப்பட்டுள்ளார்கள்.கோப்பெரு ஞ் சோழன், கிள்ளிவளவன், சோழன் நலங்கிள்ளி, பாண்டியன்நெடுஞ்செழியன் ஆகியவர்கள் புகழ்பெற்று விளங்கியுள்ளனர். புலவர்கள் அல்லாத அரசர்கள் —-  தங்களைப் புலவர்கள் பாடவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். புலவர்களால் பாடப்பெற்றுப் புகழுக்கு ஆளாகியவர்களுக்கே மறுமையில் தேவருலகம் கிடைக்கும் என்னும் நம்பிக்கையும் அவர்களிடத்துக் காணப்படடது. அதனால் கற்றறிந்த புலவோருக்கு உயிரிய இடத்தைச் சங்ககாலம் கொடுத்தது முக்கிய அம்சமாகத் தெரிகிறதல்லவா?

    கற்றறிந்த புலவர்கள் கற்றதோடு நின்றுவிடாமல் — சாந்தி, சமாதானம், நல் உறவு, ஒற்றுமை இவற்றுக்காகவும் தமது நுண்ணறிவைப் பயன்படுத்தியும் இருந்திருக்கிறார்கள். இவர்களின் இந்தச் செயற்பாடு நமக்கெல்லாம் நல்ல ஒரு பாடமாக அமைகின்றது.

    ஒரு அரசனுக்கு நாட்டு மக்களிடையே எவ்வளவு செல்வாக்கும் மரியாதை யும் இருந்ததோ அதே அளவுக்குப் புலவர்களுக்கும் இருந்தது. இதனால் அரசனிடம் சென்று எந்தவித அச்சமும் இன்றி தமக்கு மனதில் சரி என்று பட்டதைத் துணிவுடன் சொல்லும் வகையில் அக்காலப் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். உண்மையென்று கண்டால் அதனை அரசனுக்கு எப்படியும் உரைத்துவிடுவார்கள். வாழ்த்தாயினும், பாராட்டாயினும் உரியவர்க்கே வழங்குவார்கள். பொருத்தமில்லாதவருக்கு ஒருபோதும் வழங்கவே மாட்டார்கள்.

    இதனால் அரசர்கள் யாவரும் தம்மைப்புலவர்கள் பாடவேண்டும் என்னும் நோக்கோடு நல்லவற்றையே நாளும் செய்ய எண்ணுவர். வறுமையில் வாடினாலும், தக்கவரையே தமிழ்ப்புலவர் பாடினார்கள். அவர்களின் நாவில் வந்த தமிழுக்குத்தான் எவ்வளவு மரியாதை? எவ்வளவு உயர்வு? தமிழால் வைவதையும் வாழ்த்துவதையும் அக்காலச் சமுதாயம் பார்த்தது. வைதாலும் வாழ்த்தினாலும் அது வாழ்வில் பலிக்கும் என்னும் நம்பிக்கையும் திடமாக அவர்களிடத்தில் காணப்பட்டது. அந்த அளவுக்குத் தமிழ் மொழிக்கு ஆற்றல் இருந்ததை சங்காலம் நமக்கெல்லாம் காட்டி நிற்கிறது.

    முடியுடை மூவேந்தர்களுக்கிடையிலும், அவர்களுக்கும் சிற்றசர்களுக்கும் இடையிலும் பிணக்குகள் வந்து போர்மூண்ட வேளை சமாதானத்தூதுவர்களாகப் பல புலவர்கள் விளங்கி பெரும்போரையே தவிர்க்கும் படி செய்தி ருக்கின்றார்கள்.

    அதிகமான் என்னும் அரசனுக்காக ஒளவையார் தொண்டைமான் என்னும் அரசனிடம் துணிவுடன் சமாதானத்தூது சென்றுள்ளார்.சோழர்குடும்பத்தில் நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையில் பெரும்பகை ஏற்பட்ட போது புலவர் கோவூர்கிழார் தலையிட்டுச் சமாதானப் படுத்தியுள்ளார். கோப்பெருஞ்சோழனுக்கும் அவனுடைய பிள்ளைகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட வேளை, அது போராக மாறாமல் செய்தவர் புலவர் புல்லாற்றுர் எயிற்றனார்.

    மலைநாட்டுத் தலைவனான பாரியோடு தமது வாழ்வைப் பிணைத்துக் கொண்டவர் பெரும்புலவர் கபிலராவார். பாரியின் இழப்பால் பரிதவித்த அவரின் புத்திரிகைகளை தாமே பாதுகாத்து அவர்களுக்கு மணம்முடித்த தையும் சங்க இலக்கியம் காட்டி நிற்கிறது.

    அரசர்களிடம் நட்புரிமை பாராட்டி அவர்களை நல்வழிப்படுத்தும் மிகப் பெரிய கைங்கரியத்தை சங்கப்புலவர்கள் தமது தமிழ்ப்புலமையினால் செய்திருக்கிறார்கள். பொருத்தமான அறிவுரைகளை அவர்கள் அரசர்களுக்கு வழங்கி இருந்திருக்கிறார்கள். பிசிராந்தையர் என்னும் புலவர் அறிவுடைநம்பி என்னும்பாண்டிய மன்னனுக்குக் கூறிய அறிவுரை எப்படி இருக்கிறது பாருங்கள்.

    “காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
     மாநிறைவு இல்லதும் பன்நாட்கு ஆகும்
     நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
     வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்
     அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
     கோடியாத்து நாடுபெரிது நத்தும்
     மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
     வரிசை அறியார் கல்லென் சுற்றமொடு
     பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
     யானைபுக்க புலம் போலத்
     தானும் உண்ணான் உலகம் கெடுமே”

    ஒரு நாட்டை ஆளும்அரசன் மக்களிடம் எவ்வாறு வரியை அளவிடவேண்டும் என்று இந்தப்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.ச ங்கப்பாடலாக இருந்தாலும் இதில் சொல்லப்படும் கருத்து இக்கால அரசாங்களுக்கும் மிகவும் பொருத்த முடையதாகவே இருக்கிறது.

    வயலில் விளைந்த முற்றிய நெல்லை அறுவடைசெய்து அதனை அரிசியாக்கி உணவு செய்துகொடுத்தால்… சிறிதளவு நெல்லும் யானைக்குப் பலநாளுக்கு உணவாகிவிடும். அதைவிடுத்து யானை தானே வயலுக்குள் சென்று நெல்லை தின்னத்தொடங்கினால், நூறுவயல்கள் ஆனாலும் யாவும் அழிந்தே போய்விடும். வாயில் உணவாகிப் போவதைவிட காலினால் அழிவு படுவதே மிகுதியாகிவிடும். அறிவுள்ளஅரசனும் குடிகளிடம் முறையாக வரியை விதித்தால்  மக்களும் வாழ்வார்கள். அரசாட்சியும் நல்லபடி அமையும். அதைவிடுத்து பேராசையுடன் மக்களை வதைத்து வரியைப் பெற்றால் யானை புகுந்த வயலாகவே மாறிவிடும் நாடு. நாடும் வளம் பெறாது. நாட்டுமக்களும் நலன்பெறமாட்டார்கள். மிகவும் முக்கியமான செய்தியை இதைவிட இலகுவாகச் சொல்லிவிட முடியாது அல்லவா? அதனாலத்தான் சங்கத்தமிழை நினைக்க வேண்டியிருக்கிறது.

    அரசாங்கங்கள் நல்லாட்சி புரியாவிட்டால் நாடும் மக்களும் என்ன செய்வது? மோசிகீரனார் என்ற புலவர் மிகவும் சுருக்கமாக தருகின்ற அறி வுரையைப் பாருங்கள்.
    “உலகவாழ்க்கைக்கு அடிப்படையானது, உயிரானது,… நெல்லும் அல்ல! நீரும் அல்ல ! நாட்டுக்கு உயிராக உள்ள ஆட்சி புரியும் அரசனே, அதனால் யான் இந்த நாட்டுக்கு உயிராக இருக்கிறேன் என்பதை உணர்ந்து நல்ல  முறையில் ஆட்சி புரிவது அரசனுடைய கடமையாகும்”  இந்த அறிவுரை எல்லா நாட்டுக்கும் பொதுவான ஒன்றல்லவா? உயர்ந்த தத்துவங்கள், உயர்ந்த உண்மைகள் எல்லாம் சங்கப்புலவர்களால் சொல்லப்பட்டிருக்கிறது. படிக்கப் படிக்க இப்படியும் தமிழில் இருக்கிறதா என்று எண்ணவே தோன்றும்.

    “ஓரில் நெய்தல் கறங்க ஓர் இல்
    ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
    புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
    பைதல் உன்கண் பணிவார்ப்பு உறைப்பப்
    படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்
    இன்னாது அம்ம இவ்வுலகம்
    இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே”
    நிலையாமையைப் பற்றி மிகவும் எளிமையான வகையில் இதை விட எவராலும் சொல்லிவிட முடியுமா என்பது கேள்விக்குரியதே! இதுதான் சங்கத்தமிழும் சங்கப் புலவனின் சாமர்த்தியமும் எனலாம்.

    இன்றைய வாழ்க்கை ஓட்டத்திலே ஒரே ஓட்டம்தான். மனத்திலே மகிழ்ச்சி குறைவு. எந்த நேரமும் ஒரே பதட்டம். படபடப்பு. இளமையிலேயே முதுமை வந்த மாதிரியான தோற்றம். நாடும் அப்படி. வீடும் அப்படி. ஆனால் சங்ககாலத்தில் ஒரு முக்கிய காட்சி இங்கே குறும்படம் போல காட்டப்படுகிறது பாருங்கள்.

    இருவர் வழியில் சந்திக்கின்றனர். ஒருவர் மற்றவரின் தோற்றத்தைப் பார்த்ததும் அவரிடம் கேட்பதாக இந்தப் பாடல் அமைகிறது.
    “யாண்டு பலவாக நரையில ஆகுதல்
    யாங்கு ஆகியர் எனவினவுதிர் ஆயின்
    மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
    யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
    அல்லவை செய்யான் காக்க அதன்தலை
    ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
    சான்றோர் பலர் யான் வாழும் ஊரே”

    நரை இல்லை. மூப்பு இல்லை. இளமையுடன் இருப்பதற்குக் காரணம் என்ன? என்பதற்கு எப்படி விடை சொல்லப்பட்டிருக்கிறது பார்த்தீர்களா? இதனைப் பாடியவர் பிசிராந்தையர் என்னும் பெரும்புலவர். இது ஒரு மனநலம் சார்ந்த குறுந்திரைப் படமாக மனத்திலே ஓடுகிறதல்லவா?

    பாண்டியர் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெரும்வழுதி மிகவும் அருமையான ஒரு செய்தியை க்காட்டுகின்றார் பாருங்கள்.
    “உண்டால் அம்மைவ் வுலகம் இந்திரர்
    அமிழ்தம் இயைவ தாயினும் இனிதுஎனத்
    தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
    துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞ்சிப்
    புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழிஎனின்
    உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
    அன்ன மாட்சி அனையர் ஆகித்
    தமக்கென முயலா நோன்தாள்
    பிறர்க்கென முயலுநர் உண்மையானே “
    தன்னலமே இல்லாமல் பிறர் நன்மையே நாடி உழைக்கும் சான்றோர்கள் இருப்பதால்த்தான் இந்த உலகம் இருக்கிறது என்று சொல்லி அத்தகையவர்களின் பண்புகளை எல்லாம் இப்பாடல் எடுத்துக்காட்டி எமக்கெல்லாம் நல்ல ஒரு வாழ்க்கைப் பாடத்தை போதிக்கிறது எனலாம்.

    தமிழனது உயர்வினை உலகம் முழுவதும் தெரியப்படுத்தும் விதமாக இப்பாடல் அமைகின்றது. கணியன் பூங்குன்றனாரின் மனத்தில் உதித்த இக்கருத்து தமிழனும் தமிழ் இனமே தரணியில் உயர்ந்து நிற்க வைத்திருக் கிறது என்பதில் யாது ஐயம் இல்லை எனலாம். ஐக்கிய நாடுகள் சபையிலே உரத்து ஒலித்த பாடல் இதுவே ஆகும்.
    “யாதும் ஊரே யாவரும் கேளீர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா
    நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
    சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
    இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
    இன்னாது என்ரலும் இலமே மின்னோடு
    வானம் தண்துளி தலைஇ ஆனாது
    கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
    நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர்
    முறைவழிப் படுஉம் என்பது திறவோர்
    காட்சியின் தெளிந்தனம் ஆதலின் மாட்சியின்
    பெரியோரை வியத்தலும் இலமே
    சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே “
    இப்படி ஒரு ஆழமான அர்த்தம் நிரம்பிய பாட்டை தமிழைத்தவிர வேறு எந்த மொழியிலும் காணவே முடியாது எனலாம்.

    ” யாதும் ஊரே யாவரும் கேளீர் “

    இப்படிச்சொல்லும் பரந்த நோக்கு தமிழினத்துக்குத்தான் இருக்கிறது என்பதை எங்கள் சங்கப் புலவன் தங்கத்தமிழ்கொண்டு உலகம் விழிப்படையச் சொல்லிச் சென்றுள்ளான். சங்கதமிழும் சங்கப் புலவனும் இல்லாவிட்டால் எங்கள் நிலை என்ன? எங்கள் உயர்வை பெருமையை உலகுக்கு பறை சாற்றும் பணியை சங்கப் புலவர்களின் தமிழல்லவா செய்திருக்கிறது. எனவே எங்களை வழிநடத்தும் சங்கப்புலவர்களையும் அவர்தம் அரிய படைப்புக்களான சங்கத்தமிழ் நூல்களையும் நினைத்துப் பார்க வேண்டும். நினைத்துப் பார்க்கும் பொழுது தான் நாங்கள் தமிழர்களாக தலை நிமிர்ந்து நிற்போம்.

    வாழ்க தமிழ் மொழி! வளர்க தமிழ் மொழி!

    படம் உதவிக்கு நன்றி: http://www.chennaizoom.com/tamil/img/sanka_kalam.jpg

    Share
  • விடியலை நாம் தேடுகிறோம்!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

    ambaal

     

     

     

     

     

     

     

     

    கல்வியொடு செல்வம் வீரம்
    கருணை நிறை கொண்டவுள்ளம்
    நல்லதெலாம் செய்யும் ஆற்றல்
    நாளும் எனக் கீந்திடம்மா!

    வல்லவளே நல்லவளே
    வாழ்வளிக்க வந்தவளே
    தொல்லுலகில் என்னாளும்
    துயர்போக்கச் செய்திடுவாய்!

    உள்ளமெலாம் உன் நினைப்பே
    ஊற்றெடுக்க வேண்டு மம்மா
    கள்ளமெலாம் என்னை விட்டுக்
    கழன்றோடச் செய்திடம்மா!

    பள்ளமதில் வீழாமல்
    பத்திரமாய்க் காத்திடுவாய்
    அள்ளஅள்ளக் குறையாத
    அருளமுதின் நாயகியே!

    தெள்ளுதமிழ்க் கொண்டுன்னை
    சிறியேனும் பாடுகிறேன்
    சினமகன்று வாழ்ந்திடவே
    சீக்கிரமே வரமருள்வாய்!

    அன்றலர்ந்த மலர்கொண்டு
    அன்னையுனைப் பணிகின்றேன்
    ஆணவத்தை அறுத்துவிட்டு
    ஆசியெனக் கருளிடம்மா!

    நாட்டிலுள்ளோர் மனமெல்லாம்
    நல்ல எண்ணமுருவாக
    பாட்டாலே கேட்கின்றேன்
    பராசக்தி அருளிடுவாய்!

    வீரத்தை விரயமாக்கும்
    வீணர்தமைத் திருத்திடுவாய்
    கோரத்தைப் புரியுமவர்
    கொடுமைகளை அடக்கிடுவாய்!

    பாருக்குள் அவர்திருந்த
    பக்குவத்தைக் கொடுத்திடுவாய்
    ஈரமன முடையவளே
    எங்கள்பரா சக்தியம்மா!

    செல்வத்தைச் சேர்ப்பதிலே
    சீரழிவை நாடுகிறார்
    உள்ளமெலாம் நோகடித்து
    ஊரினையே சுருட்டுகிறார்!

    கள்ளமுடன் சேர்த்துநிற்கும்
    காசுநகை பயன்படவே
    நல்லவழி காட்டிடுவாய்
    நவராத்ரி நாயகியே!

    கல்விதனைக் காசாக்கும்
    கயவரெலாம் மனம்மாற
    கடைக்கண்ணால் பார்த்துவிடு
    கருணைநிறை நாயகியே!

    தனம்வரும் கல்விவரும்
    தளர்வறியா மனமும்வரும்
    நலம்வரும் நாளெல்லாம்
    நற்கருணை நாயகியால்!

    இனம்வரும் இன்பம்வரும்
    ஈடில்லா வாழ்வும்வரும்
    எமையாளும் நாயகியை
    ஏற்றியென்றும் வழிபடுவோம்!

    அகிலமுனைப் போற்றுதம்மா
    ஆதிபரா சக்தியென
    அரக்ககுணம் அழிவதற்கு
    அம்மாநீ அருளிடுவாய்!

    வேருக்கு நீராக
    விரைந்துநீ அருளிவிடு
    வினையகன்று நிற்கின்ற
    விடியலைநாம் தேடுகிறோம்!

    நவசக்தி நாயகியே
    நலமருள வேண்டுமம்மா
    நாட்டிலுள்ள மக்களெலாம்
    நாளுமுனைப் போற்றுகின்றார்!

    வீடெங்கும் விளக்கேற்றி
    விரதமுடன் தொழுதுநிதம்
    காதலுடன் நிற்பாரைக்
    கடைத்தேற்றி விட்டிடம்மா!

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    செப்டெம்பர் 15, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திரு. எம். ஜெயராமசர்மா அவர்கள்

     

    எம்.ஜெயராமசர்மா

     

    சமயக் கல்வி பயிற்றுவித்தலுக்கு  நல்லதொரு செயல் வடிவம் அமைத்து, புலம் பெயர்ந்த பெற்றோர்களுக்கு வழிகாட்டும் பணியில்  ஈடுபட்டிருக்கிறார்  திரு. எம். ஜெயராமசர்மா.  இவர் வல்லமை இதழில் சென்ற வாரம், மதக் கல்விக்கு செயல்வடிவம் தரும் நோக்கில் எழுதியக் கட்டுரைக்காக இவ்வாரத்தின் வல்லமையாளராக வல்லமை இதழ் குழுவினரால் பாராட்டப்படுகிறார்.

    சமயம் என்றால் என்ன, மதங்களின் நோக்கம் என்ன, அவை சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் யாவை   போன்ற  சமயத்தின் தேவையின் அடிப்படையை  மக்கள் மறந்து வெகுகாலமாகிவிட்டது. வெறும் சடங்கு சம்பிராதயங்களில் மூழ்குவதும், மதத்தின் அடிப்படையில் சண்டையிட்டுக் கொள்வதும் இன்று நேற்று என்று இல்லாமல் தொடர் கதைகளாக நடந்து வருகிறது. அது மனித குலமே மதம் பிடித்து  ஒன்றை ஒன்று தங்களை  அழித்துக் கொள்ளும் நிலையாக  உலகத்தில் பரவியிருக்கிறது.

    உலக மதங்கள்  அனைத்திலுமே இன்று காணப்படும் இந்த  தடம் மாறிய நிலைக்கு  இந்து மதமும் விதிவிலக்கல்ல.  இந்து மதத்தின் தாய்நாடான  இந்தியாவில் பிறந்து வளந்தவர்களுக்கும் தங்கள் இந்து  மதத்தின்  சமுதாயப் பங்கு பற்றிய தவறானக் கருத்துகள் வேரூன்றிவிட்ட  நிலையில், வரும் தலைமுறையினரை, அதுவும் தாய்நாட்டிற்கு வெளியே வாழும் அடுத்த தலைமுறையினரை, அறிவில் சிறந்து பல்நோக்கும் கொண்டு வளரும் சிறார்களை, இந்து மதம் காட்டும் உண்மை நல்வழியை உணரச் செய்வது எப்படி என்ற கேள்விகள் புலம் பெயர்ந்த பெற்றோர்கள் மனதில் எழுந்த வண்ணம்தான் உள்ளன.

    இந்து மதத்தின் பண்பு, மிகப் பண்டையத் தோற்றத் தொன்மையின் காரணமாகவே காலத்திற்குப் பொருந்தாத சில கருத்துக்களையும் கதைகளையும் உள்ளடக்கியிருப்பது.  கைபேசி வழியே உலகத்தையே அறிந்து தகவல்களை விரல் நுனியில் கொண்டிருக்கும் இக்கால சிறுவர்களிடம், நடப்புலகிற்குப் பொருந்தாத அந்தக் கதைகளே சமயக்கல்வி கொடுத்து வழிநடத்தும் முயலும் பெற்றோர்களுக்கு  மேலும் சவாலை முன் வைத்து விடுகிறது.  சமயக் கல்வியினை  சரியான முறையில் வழங்க இக்காலத் தேவைகள் யாவை? புதிய கோணத்தில் முன்னெடுத்துச் செல்ல  வழியென்ன?  இதற்கு யாரால் சரியான வழியைக் காட்ட இயலும்? என்ற கேள்விகள் நம்மிடையே தோன்றிய வண்ணம் உள்ளன.

    இந்தத் தேவையை சரியான முறையில் எதிர் கொண்டு  தீர்வு காணும் பின்புலத்தைக் கொண்டிருக்கிறார் வல்லமையாளர்  ஜெயராமசர்மா.  தமிழ்நாட்டின்  தாராபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயராமசர்மா வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்.  தற்போது  ஆஸ்திரேலியாவின் குடியுரிமை பெற்று அங்கு மெல்பேண்னில் வசிக்கிறார்.

    பேராதனை பல்கலைக்கழக தமிழ் சிறப்புப் பட்டதாரியான இவர், கல்வியியல் துறையில் டிப்ளமா, சமூகவியல் துறையில் டிப்ளமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர். உதவிக் கல்விப் பணிப்பாளராகவும், தமிழ், இந்துகலாச்சார  விரிவுரையாளராகவும் பணியாற்றி இருக்கிறார். இவரது சமயப் பணிகளில், 2008ல் மதுரை மாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ‌ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாள‌ராகவும் பங்கேற்றமையும்; அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று தமிழ், கலாச்சாரம், இந்து சமயம், சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளவையும் அடங்கும்.  சமயம், தமிழர் பண்பாடு சம்பந்தமாக பேட்டி கண்டு நேரடியாக வானொலி ஒளிபரப்புகளையும் வழங்கியுள்ளார். தற்பொழுது தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும், விக்டோரியா இந்து கல்வி மையத்தின் ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். இத்தகைய பின்புலத்தைக் கொண்டிருக்கும் இவருக்கு, சமயக் கல்வி பற்றிய வழிமுறைகளை வகுத்துத் தர  இவரது கல்வித்துறை மற்றும் சமயத்துறை அறப்பணிகள் பெரிதும் உதவியாக இருந்திருக்கின்றன எனக் கொள்வது மிகையாகாது.

    வல்லமையில் தொடர்ந்து தனது படைப்புகளைப் பகிர்ந்து வரும் இவரை வல்லமை வாசகர்கள் ஒரு சிறந்த கவிஞராகவே அறிவார்கள்.  இவர் எழுதிய பற்பல கவிதைகள் பல கருத்துகளையும் உள்ளடக்கியவை. வல்லமையின் ஆண்டுவிழா வாழ்த்து முதற்கொண்டு, சில இறைவணக்கப் பாடல்களும் வழங்கியுள்ளார்.  பொதுவாக கவிதைகள் பாடப்பெறாத இக்கால பிரபலங்கள் பலரைப் பற்றியும் கவிதைகள் எழுதியுள்ளார்.  அவரால் பாடப்பெற்றவர்கள் வரிசையில் நெல்சன்மண்டேலோ, பாலு மகேந்திரா, உ வே சா, வாரியார், அன்னை தெரசா, ராமகிருஷ்ணர், சிவாஜி, வாலி, வைர முத்து, பாலமுரளி கிருஷ்ணா,  பாரதி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, விவேகானந்தர், கண்ணதாசன் எனப் பலர் அடங்குவர்.

    அம்மா, அப்பா , குழந்தை, பெண்ணினம் போன்ற உறவுகளைப் போற்றும் கவிதைகளுடன், சமுதாய அக்கறையுடன் எழுதப்பட்ட கவிதைகள் அழகு தமிழ் பேசிட, பக்குவத்தை அடைய, தலைவனாய் உயர, தாய்ப்பால் கொடுத்திட,  பெண்ணினைக் காத்திட என்ற வகையில் விரிகின்றன.   சற்றே வித்தியாசமான கவிதைக் கருக்களைக் கொண்ட சர்க்கரை வியாதி, ஆலமரம், குருவிக்கூடு, விஞ்ஞான வளர்ச்சி, புத்தாண்டு, மாடிவீட்டு ஏழைகள், நூலகம் போன்ற கவிதைகளும் இவரது கவிதைக் களத்தில் அடங்கும்.

    எடுத்துக்காட்டாக, யாழ் நூலகம் எரியுண்ட தினமான மே 31, 1981 நினைவாக…

    “சூறை ஆடி விட்டார்கள்!”(http://www.vallamai.com/?p=46342) என்ற கவிதையில்

    […]
    யாழ்ப்பாண நூலகத்தை யாருமே மறக்கார்கள்
    வேண்டிய புத்தகத்தை விரைவுடனே தந்துநிற்கும்
    தென்கிழக்கு ஆசியாவின் சிறந்தவொரு நூலகமாய்
    சிறந்தோங்கி நின்றதனை தேசமே தானறியும்

    எத்தனையோ வகையான புத்தகங்கள் இருந்ததங்கே
    அத்தனையும் படிப்பவர்க்கு அருமருந்தாய் அமைந்தப்போ
    சொத்தாக மதித்துமே புத்தகத்தைக் காத்தார்கள்
    சுவையறியா அரக்கர்களோ சூறையாடி விட்டார்கள்

    கற்றுணர்ந்தோர் வாழ்ந்தவிடம் கல்விக்கூடம் நிறைந்த இடம்
    கண்ணியத்தின் உறைவிடமாய் கருத்திலே நின்றஇடம்
    பெற்றவர்கள் பிள்ளைகளை பெரிதாக்க நின்றஇடம்
    பித்தர்களின் வெறியாலே சொத்தையெல்லாம் இழந்தார்கள்
    […]

    என அந்த நிகழ்ச்சிக்கு வருந்தி கவிதை  வடித்துள்ளார்.

    இவரது படைப்புகள் வல்லமையில் மட்டுமின்றி திண்ணை, தமிழ் ஆஸ்திரேலியன், தமிழ்முரசு, அக்கினிக்குஞ்சு, நெற்றிக்கண், தேனீ, ஜியோ தமிழ், மாற்றம்,  ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம் பத்திரிக்கைகளில் வெளி வந்துள்ளன.  பிற கலைத் துறைகளிலும் இவர் பங்களிப்பு அதிகம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத் தயாரிப்பாளராகவும் கடமையாற்றிய இவர்,  10க்கு மேற்பட்ட நூல்களையும், 100 ஓரங்க நாடகங்களையும், 10க்கு மேற்பட்ட வில்லுப் பாட்டுக்களையும், 20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து வெளியிட்டுள்ளார்.

    பல்துறை வித்தகரான ஜெயராமசர்மா வல்லமையில் பகிர்ந்து கொண்ட கட்டுரைகள் தலைமுறை இடைவெளிகளினால் ஏற்படும் கருத்து பேதங்கள், சமையக் கல்வியின் முக்கியத்துவம் போன்ற வகைகயில் அமைந்தவை.

    சென்ற வாரக் கட்டுரையான ,

    “புலம்பெயர்ந்த நாடுகளில் சமயம் கற்பித்தலில் கையாளப்படும், கையாளப்படவேண்டிய அணுகு முறைகள்”  என்ற கட்டுரையில்  முன்னாள் கல்விப்பணிப்பாளரான இவர் தனது சிந்தனைகளையும் அனுபவத்தையும் முன்னிறுத்தி பலருக்கும் பயன்தரும் வகையில் அதை  எழுதியுள்ளார்.  சிறந்த விளக்கங்களுடன், தனது வாழ்வில் பெற்ற அனுபவங்களையும்  சான்றாகக் காட்டி இவர் அளித்தக் கட்டுரை முழுமையாக வாசிக்க வேண்டிய ஒன்று.  அக்கட்டுரையின் முக்கியக் கருத்து கீழே சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளது.

    “சமயம்” என்றால் என்ன?  “மதம்” என்றால் என்ன? என்பதை நாம் நன்றாக அறிந்துவைத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டும் ஒன்றா அல்லது இரண்டுமே வேறா என்பதே எம்மில் பலருக்கும் தெரியாத பொழுது எமது பிள்ளைகளுக்கு எப்படி இதனைப் பற்றி விளக்கிச்சொல்லமுடியும். இக்காலத்தில் வளருகின்ற பிள்ளைகள் எம்மைப் போன்றவர்கள் அல்லர் என்பதை நம்மில் பலரும் தெரிந்துகொள்ளுவது  இல்லை. அவர்களது சிந்தனைகளும், செயற்பாடுகளும் வித்தியாசமானதாக இருக்கும். நாங்கள் வளர்ந்த சூழல் வேறு. நாங்கள் படித்த சூழல் வேறு. எங்களைச் சுற்றியிருந்த சூழலும் வேறு.  அப்படியான சூழலில் இருந்து வந்த வளர்ந்தவர்களான நாங்கள் ….   எங்கள் பிள்ளைகளை எங்களைப்போல அவர்கள் நடக்கவில்லையே என்று மனக் குழப்பம் அடைதல் கூடாது.

    […]

    புலம்பெயர் நாடுகளில் சமயம் போதிக்க வருகின்றவர்கள் தாம் முன்னர் படித்தவைகளையும், தமக்கு ஆசிரியர் எப்படிப்படிப்பித்தாரோ அப்படியே படிப்பிக்க நினைத்துச் செயற்படும் பொழுதுதான் எடுத்துகொண்ட நோக்கம் குறைபடுகிறது. எனவே சமயம் போதிப்பதில் பல புதிய அணுகு முறைகளைக் கையாண்டால்த்தான் எமது நினைப்பு நிறைவேறும் என்பதை மனங்கொள்வது பொருத்தம் என நினைக்கின்றேன்.

    1) சமயத்தை ஆழமாகப் படிப்பித்தல் நல்லதல்ல.
    2) தேவையற்ற கதைகளை சொல்லிப் படிப்பித்து குழப்பமான மனநிலை உருவாக்கல் ஏற்றதல்ல.
    3) கூடியவரை இலகுவான மொழிப்பிரயோகமே கையாளுதல் நன்று.
    4) மனத்தில் பதியும் வண்ணம்  திருமுறைகளை பாடிக்காட்டி விளக்குதல் வேண்டும் .
    5) கோவிலுக்குக் கூட்டிப்போய் அங்கு நடக்கும் விஷயங்களை அவதானிக்க வைப்பதுடன் அவற்றுக்கான விளங்கங்களையும் எளிதாகக் கொடுக்கவேண்டும்.
    6) பண்ணோடு பாடப்பழக்கலாம். சமய ஆசாரங்களை இலகுபடுத்திச் சொல்லலாம்.
    7) கும்பிடும் பழக்கத்தின் விஞ்ஞான அணுகுமுறையை எடுத்துச் சொல்லலாம்.
    8) ஒளியின் முக்கியம், ஒலியின் முக்கியம், இவற்றை சமயத்துடன் சேர்த்து விளக்கலாம்.
    9) அதிர்வுகள் பற்றி பிள்ளைகள் அறிந்துள்ளதால் அதற்கும் சமயத்துக்குமான நெருக்கத்தை விளக்கலாம்.
    10) கொண்டாட்டங்களின் உட்பொருள், திருவிழாக்களின் சமூகத்தொடர்பு, சேவை செய்தலின் உயர்வு, கலைகளுக்கான முக்கியத்துவம், இவற்றோடு .. உண்மை நேர்மை, உழைப்பு, பணிவு, இரக்கம், அன்பு, அன்னதானம், வறியவர்க்கு உதவுதல், பொதுச்சேவை, பெரியோரை மதித்தல், விட்டுக்கொடுத்தல், முரண்படாமை, புறங்கூறல், கொல்லாமை, மதுவை மனத்தாலும் நினையாமை, தாயைப்போற்றல், தந்தையை மதித்தல், குருவைப் பணிதல், இவையெல்லாம் எங்கள் சமயத்தின் கரு என்பதைக் கட்டாயம் சமய போதனையின் பொழுது சொல்லிக் கொடுத்தல் வேண்டும்,

    சமயய வாழ்வு வாழத்தான் இவைகள் யாவும் தேவைப்படுகின்றன. எவ்வளவு படித்தாலும் அந்தப்படிப்பு இறையுணர்வையும் நல்வழியையும் ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும். “இளையோரின் முழுமன வளர்ச்சிக்கு சமயக்கல்விதான் முக்கிய மானது ”

    என்று கூறி செயல்முறை நடவடிக்கையாக சமயக்கல்வியை  இந்த  வழிமுறையில் முன்னெடுத்துச் செல்லலாம் என்றுக்  காட்டிய ஜெயராமசர்மா அவர்களை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • அழகு தமிழ் பேசிடுவோம்!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

    அன்புக் குழந்தைகளே
    அனைவருமே கேளுங்கள்
    அன்னைத்தமிழ் மொழியில்
    அனைவருமே பேசிடுவோம்!

    பள்ளிக்குச் சென்றுநீர்
    படித்தாலும் ஆங்கிலத்தை
    பாலூட்டும் தாயினிடம்
    பசுந்தமிழில் பேசிடுவீர்!

    தாய்ப்பாலைக் குடித்துநிதம்
    தா
    ன்வளர்ந்து நிற்கின்றோம்
    தமிழ் மொழியில்பேசிவிடின்
    தலைநிமிர்ந்து நிற்போமே!

    அப்பாவென அழைப்போம்
    அரவணைப்பார் ஆசையுடன்
    டாடி’என  அழைக்கின்
    வாடிவிடும் முகமவர்க்கு!

    மடிமீது வைத்தெம்மை
    மயக்குமொழி பேசிநிற்கும்
    மாண்புமிகு அம்மாவை
    மம்மி’யாய் ஆக்காதீர்!

    அன்புக் குழந்தைகளே
    ஆங்கிலத்தைப் படியுங்கள்
    அதேவேளை தமிழ்மொழியை
    அணைத்துமே நின்றிடுவீர்!

    பிறந்தநாள் நிகழ்ச்சிகளில்
    பேசுங்கள் தமிழ்மொழியில்
    பெற்றவரும் உற்றவரும்
    பெருமையுடன் பார்ப்பார்கள்

    வெளியிலே ஆங்கிலத்தை
    விட்டெறிந்து பேசுங்கள்
    வீட்டிலே அன்னைமொழி
    விரும்பியே பேசிடுவீர்!

    எங்குநாம் வாழ்ந்தாலும்
    என்றுமே தமிழர்நாம்
    என்கின்ற எண்ணமதை
    எள்ளளவும் மறக்காதீர்!

    வென்றதமிழ் வீரத்தமிழ்
    வியந்துலகு போற்றுந்தமிழ்
    அந்தமொழி எங்கள்மொழி
    தையுணர்ந்து நிற்போமே!

    அழகுதமிழ் பேசிடுவோம்
    அன்போடு நடந்திடுவோம்
    ஆண்டவன் துணையிருப்பான்
    னந்தமாய் இருப்போமே!

    Share
  • வாலி நீ போட்ட வேலி

     

    எம்.ஜெயராமசர்மா ….. மெல்பேண் 

    vaali1_1521227g

    கண்ணதாசன் பாடல் கேட்டு
    கையைக்கட்டி நின்ற வாலி
    கட்டவிழ்த்து வந்து நின்று
    கவிதைமழை பொழிந்து நின்றார்

    வாலி பாடி நின்றபோது
    போலிஅல்ல என்று சொல்லி
    தோழ் கொடுத்து நின்றவரே
    தோழமையில் கண்ண தாசன்

    கண்ண தாசன் பாடலோடு
    கைகுலுக்கி வாலி பாடல்
    வண்ணமாக வந்த போதும்
    வைரமாக நின்ற தங்கே

    பக்தியோடு பாடி நின்றார்
    பருவத்தார்க்கும் பாடி நின்றார்
    நித்தமே நினிவில் நிற்க
    தத்துவமும் பாடி வைத்தார்

    வெற்றிலை போட்ட வாலி
    வெற்றிகள் பலதைப் பெற்றார்
    நெற்றியில் பொட்டு இன்றி
    நின்றதே இல்லை நாளும்

    மெட்டுக்காய் எழுதி நின்றார்
    துட்டுக்காய் எழுதி நின்றார்
    பொட்டுவைத்த நெற்றி ஓடு
    பொறிபறக்க எழுதி நின்றார்

    முருகன் பாடல் பாடிநின்று
    முயன்றுவந்த வாலி நாளும்
    அருமையான பாடல் தந்து
    அமர்ந்துகொண்டார் உள்ளம் எல்லாம்

    தெருவெலாம் வாலி பாடல்
    தித்திப்பாய் ஒலிக்கும் போது
    பெரு மனதோடு மக்கள்
    பேணியே ஏற்று நின்றார்

    வாலிநீ போட்ட வேலி
    வரலாற்றில் நிற்கும் ஐயா
    போலிநீ இல்லை ஐயா
    பொங்கிடும் தமிழின் ஊற்று
    ஊழியுன் பாட்டு நிற்கும்
    உலகுளோர் மனதில் நிற்பாய்
    வாலிபக் கவிஞ்ஞரே நீ
    வையத்தில் என்றும் வாழ்வாய் !

     

    Share
  • தலைவனாய் உயர்வாய் நீயும்!

    – எம் ஜெயராமசர்மா

    உறவினைப் பேண வேண்டும்                          leader
    உள்ளத்தில் துறவு வேண்டும்
    அறவழி பேண வேண்டும்
    அகமெலாம் அமைதி  வேண்டும்
    சினமதை ஒழிக்க வேண்டும்
    சிந்தையை ஒடுக்க வேண்டும்
    வருவதை ஏற்க வேண்டும்
    வாழ்க்கையே இனிக்கும் அப்போ!

    ஆசைகள் எழவே வேண்டும்
    அவைநன்மை பயக்க வேண்டும்
    மோசடி தவிர்க்க வேண்டும்
    முதுமொழி ஏற்க வேண்டும்
    தெருதனில் நடக்கும் போதும்
    தீயதை ஒதுக்க வேண்டும்
    அருகிலே எந்த நாளும்
    அன்பையே இருத்த வேண்டும்

    உருஎலாம் இறைவனாகக்
    கருதிநீ வாழ வேண்டும்
    பெருமைகள் உன்னைச் சேரும்
    பெரும்பகை ஓடிப் போகும்
    ஊரெலாம் உறவாய்ப் பாரு
    உவப்புடன் உதவி நில்லு
    பாரெலாம் உள்ளார் உந்தன்
    பக்கமே வந்து நிற்பார்

    மனதினை மாற்றிப் பாரு
    மன்னிப்பை நல்கிப் பாரு
    தனிமையில் உணர்ந்து பாரு
    தலைவனாய் உயர்வாய் நீயும்!

    Share
  • சரித்திரத்தில் பதிந்த முத்தே

     
    எம். ஜெயராமசர்மா .. [மெல்பேண் ]

     

    vairamuthu-award

     

     

    சரித்திரத்தில் பதிந்த முத்தே
    சங்கத்தமிழ் கண்ட முத்தே
    பொறுப்புடனே கவிதை சொல்லும்
    புகழ்மிக்க வைர முத்தேEndhiranSpecial31

    கறுத்தநிற வைர முத்தே
    கவித்துவத்தின் உயர்ந்த முத்தே
    செருக்குடனே கவிதை சொல்லும்
    சிறந்த நல்ல தமிழின்முத்தே

    கண்ணதாசன் வாலி ஒடு
    கவிதை நின்று போச்சுஎன
    கவலை கொண்ட மனத்தையெலாம்
    களிப்புக் கொள்ள வைத்தாயே

    எண்ண எண்ண இனிப்பதற்கு
    ஏற்றவகையில் கவிதை தந்து
    வர்ணஜாலம் செய்து நிற்கும்
    வைரமுத்து வாழ்க வாழ்க

    மீசை கொண்ட பாரதியாய்
    மிடுக்கொண்ட வைர முத்து
    ஆசைகொண்டு தமிழை ஆண்டு
    அனைவரையும் அணைத்து விட்டார்

    வெள்ளுடையில் வந்து நிற்பாய்
    தெள்ளுதமிழ் தந்து நிற்பாய்
    துள்ளுநடை ஓடி வரும்
    சுவையுடனே கவிதை வரும்

    அள்ள அள்ளக் குறையாத
    அழகுதமிழ் பாய்ந் தோடும்
    அனைவருமே நீந்தி அதில்
    ஆனந்தம் பெற்று நிற்போம்

    தேசிய விருதை வென்றாய்
    திசையெலாம் பயணம் செய்தாய்
    காவியம் இயற்றி நின்றாய்
    கவிதைகள் பலவும் தந்தாய்

    பாவிலே பயணம் செய்தாய்
    பட்டங்கள் பலவும் பெற்றாய்
    ஓவியக் கவிதை தந்த
    உயர்முத்தே வாழ்க வாழ்க

    படித்த பின் புலம்
    பாட்டில் தெரியும்
    எடுத்த பொருளும்
    எளிதில் புரியும்
    தடித்த குரலால்
    தமிழைத் தருவாய்
    வெடித்த சிரிப்பு
    விரிந்தே பரவும்

    அடுக்கு மொழியும்
    அள்ளித் தருவாய்
    மிடுக்கு நடையும்
    விட்டு விலகாய்
    தொடுத்த கவிதை
    சுவையாய் தருவாய்
    தெறித்துச் சிதறும்
    தீந்தமிழ் அங்கே

    கல்வியில் பட்டம் பெற்று
    கவிதையால் பட்டம் வென்று
    நல்லதோர் நிலையில் நிற்கும்
    நற்றமிழ் கவிஞ்ஞரே நீர்
    வல்லமை பெற்று நாளும்
    வையத்தில் வாழ்க என்று
    நல்லதாய் வாழ்த்து கின்றேன்
    நானும் ஓர் ரசிகனாவேன்

    Share