– எம் ஜெயராமசர்மா
உறவினைப் பேண வேண்டும் 
உள்ளத்தில் துறவு வேண்டும்
அறவழி பேண வேண்டும்
அகமெலாம் அமைதி வேண்டும்
சினமதை ஒழிக்க வேண்டும்
சிந்தையை ஒடுக்க வேண்டும்
வருவதை ஏற்க வேண்டும்
வாழ்க்கையே இனிக்கும் அப்போ!
ஆசைகள் எழவே வேண்டும்
அவைநன்மை பயக்க வேண்டும்
மோசடி தவிர்க்க வேண்டும்
முதுமொழி ஏற்க வேண்டும்
தெருதனில் நடக்கும் போதும்
தீயதை ஒதுக்க வேண்டும்
அருகிலே எந்த நாளும்
அன்பையே இருத்த வேண்டும்
உருஎலாம் இறைவனாகக்
கருதிநீ வாழ வேண்டும்
பெருமைகள் உன்னைச் சேரும்
பெரும்பகை ஓடிப் போகும்
ஊரெலாம் உறவாய்ப் பாரு
உவப்புடன் உதவி நில்லு
பாரெலாம் உள்ளார் உந்தன்
பக்கமே வந்து நிற்பார்
மனதினை மாற்றிப் பாரு
மன்னிப்பை நல்கிப் பாரு
தனிமையில் உணர்ந்து பாரு
தலைவனாய் உயர்வாய் நீயும்!

Leave a Reply