மாதவ. பூவராக மூர்த்தி

நான் பகுத்தறிவாளனும் இல்லை நாத்திக வாதியும் இல்லை. கடவுள் நம்பிக்கை கொண்டவன். சைவ வைணவ சமயங்களின் பால் ஈடுபாடு கொண்டவன். அப்பர் ஸ்வாமிகளின் பாடல் களைப் பாடியும் படித்தும் பரவசமானவன் தான். ஆனால் இந்த தலைப்பில் என்னுடன் இருக்கும் அப்பர் அவரல்லர். அஃறிணைப் பொருள். ரயில் பயணத்தின் போது நம்மை மிகவும் சிரமத்தில் ஆழ்த்தும் படுக்கை வசதி.அப்பர் பெர்த் .

29train13

இரவுப் பயணத்தில் இரயிலில் தூங்கும் வசதி பெட்டிகள் குளிர் பதனப் பெட்டிகளில் படுக்கை வசதியும் முன் பதிவும் வந்துவிட்டது. அதிலும் “தட்கல்” என்ற இரண்டு நாட்களுக்கு முன் கூட பயணப்பதிவு செய்யக் கூடிய வசதியும் வந்து விட்டது.

ஆனால் படுக்கை வசதி என்று பெயரே தவிர அதில் வசதி என்பது மிகக் குறைவுதான். மூன்று அடுக்கு வசதி உள்ள பெட்டிகளில் நம் கஷ்டங்கள் மிக அதிகம். அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு இந்த அனுபவம் கிடைக்கும். நான் இப்போது சீனியர் சிட்டிசன். ரயில் பயணங்களில் எனக்கு அரசாங்கம்

சலுகை கட்டணத்திலும் கொடுக்கிறது. படுக்கை வசதியிலும் தனியாக லோயர் பெர்த் கோட்டா என்று கொடுக்கப் படுகிறது.

இதையும் மீறி இந்த இணைய தள கணினிப் பதிவில் என் பயணம் தீர்மானிக்கும் போது தட்கலில், ஊருக்குப் போக டிக்கட் கிடைத்தால் போதுமென்ற நிலையில் வேகமாக முயன்று இருக்கை வாங்கி விடுவான் என் மகன். அது கடைசியில் அப்பர் பெர்த்தாக இருக்கும். பயண நாளில் நம் உடன் வரும் பயணிகளிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற அசட்டு நம்பிக்கையில் புறப்பட்டு விடுவேன்.

பொதுவாக ரயில் நிலையங்களில் நடைமேடையில் வண்டி வந்ததும் நம் பதிவு செய்த இருக்கை இருக்கும் பெட்டியில் பயணிகள் பட்டியல் ஒட்டிய பிறகு அதைப் பார்த்து நம் பெயர் இருக்கிறதா என்று ஊர்ஜிதம் செய்து கொண்ட பின் , இந்த மாதிரி அப்பர் நாட்களில் என்னுடன் பயணிப்போர் முழு விபரமும் தெரிந்து கொள்ள எனக்கு ஆசை வந்து விடும். காரணம் நம்முடன் பயணிப்பவர்களில் யாரிடம் வேண்டுகோள் விடுத்து அவரை அந்த உயர்ந்த பதவிக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்ய வேண்டுமல்லவா. அந்த பட்டியலிலேயே நம் தலைவிதி சில சமயம் நமக்கு அப்பர் பெர்த் தான் என்று நிர்ணயிக்கப்பட்டுவிடும். நம்மோடு பயணம் செய்வோர் நம்மை சேர்த்து ஆறு பேர் என்றால் அதில் இன்னொரு அப்பர் பெர்த் இளங்கோவன் ஆண் வயது 25 என்று இருக்கும்

மற்ற நாலு பேரில் ஒரு பெண்மணி 45 வயதிலும் ஒரு குழந்தை 8 வயதிலும் இன்னொரு தம்பதி ரங்கன் 72 அலமேலு 65 லோயர் பெர்த் என்றும் இருக்கும் . இதில் யாரையும் மேலே அனுப்ப முடியாது. அந்த ஆண்டவன் மனசு வைத்தால் தான் முடியும்.

மனதை கல்லாக்கிக் கொண்டு அப்பர் பெர்த்துடனான நம் உறவை இந்த இரவு சுமுகமாக கழிக்க தேவாரம் ஒன்று பாட வேண்டியது தான். காலச் சக்கரத்தின் பின்னோக்கிப் போனால் என் வாலிப வயதில் எனக்கு பயணங்களில் எனக்கு வாய்த்த லோயர் மிடில் பெர்த்துகளை நான் அவர்கள் கேட்டும் பல சமயங்களில் அவர் கேட்காமலும் மனமுவந்து அவர்களுக்கு ஈந்திருக்கிறேன்.

ரயில் விதிகளில் இரவு ஓன்பது மணி முதல் காலை 6 மணி வரை படுக்கை வசதி உபயோகப் படுத்த வழி வகை இருக்கிறது. முதல் நாள் காலை புறப்பட்டு மறுநாள் காலை அல்லது மதியம் சென்றடையும் வண்டிகளில் இது பொருந்தும்.

இப்போதெல்லாம் வண்டிகளின் வேகம் அதிகரித்து பயணநேரம் வெகுவாக குறைந்து விட்டது..முன்பு பாம்பே மெயிலில் சென்னையில் முதல் நாள் இரவு பத்து மணிக்கு புறப்பட்டாள் அன்றிரவும் அடுத்த நாள் இரவும் ரயிலில் தான் ஒரு நாள் விட்டு மறு நாள் காலை தான் தாதர் போகும்.

இப்போது பெங்களூர் மெயில் இங்கு இரவு. 11.15 புறப்பட்டு காலை 5.20க்கு பெங்களூர் சிட்டி நிலையத்திற்குள் நம்மைக் கொண்டு சேர்க்கிறது. இம்மாதிரி பயணங்களில் படுக்கை வசதி எங்கிருந்து வரும். முன்னால் வந்தவர்கள்  லக்கேஜ் செட்டில் பண்ணி விடுவார்கள் நாம் தாமதமாக வந்தால் நம் பெட்டிக்கு இடம் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.

அதன்பிறகு நாம் உட்கார்ந்து கொள்ள பிரயத்தனப் படுவோம். உங்களுக்கு என்ன சீட் என்று கேட்டு சொன்னவுடன் கொஞ்சம் நகர்ந்து இடம் விடுவதுபோல் ஒரு பாவனை செய்வார்கள். நாம் கஷ்டப்பட்டு இருக்கும் இடத்தில் உட்கார்ந்தவுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்கள் பேச்சு வார்த்தை தொடரும். இடையில் கீழே இருக்கும் பெட்டியில் முக்கியமான சாமான் பத்திரமாக இருக்கிறதா என்று ஒருவர் கேட்க அதைப் பார்ப்பதற்காக நம் காலைபிடிப்பார் பிறகுதான் தெரியும் அவர் நம் காலுக்குப் பின்னால் இருக்கும் பெட்டியின் கைப்பிடியைப் பிடிக்கிறார் என்று. நாம் அவசரமாக காலை நகர்த்திக் கொள்ளவேண்டும் பெட்டியை நகர்த்தியவர் பெரிய பெட்டியை நம் காலுக்கு முன் வைத்து திறந்து தேட ஆரம்பிப்பார். நாம் நம் கால் பத்திரமாக இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருப்போம்.

    அவர் தேடிய பொருள் நம் துரதிருஷ்டம் அந்த பெட்டியில் இருக்காது. அதற்குள் ஒருவர் நினைவு வந்தவராக அம்மா பெட்டியில இருக்கும்னு நினைக்கிறேன். என்பார். தேடும் நபர் இந்த பெட்டியை அப்படியே விட்டு விட்டு அவர் காலுக்கு கீழ் இருக்கும் அம்மா பெட்டியையும் வெளியே எடுத்து அந்த குறுகிய இடைவெளியில் பரப்பி திறந்து ஒரு வழியாக அவர் தேடிய பொருள் கிடைத்தவுடன் அந்த பெட்டியை முதலில் உள்ளே தள்ளி தான் வசதியாக கால் வைத்துக் கொள்வதில் அவரை அறியாமலேயே முனைப்பாக இருப்பார்.

ஆனால் இந்த ரயில்வே விதியே இதுதான். நம் வண்டி முதலில் வந்து ஒரு நிலையத்தில் எதிரில் வரும் வண்டிக்கு கிராஸிங்கிற்காக நிற்கும். அதன் பிறகு எதிர் திசையில் நாம் வந்து சில நிமிடங்களுக்கு பிறகு வண்டி வரும். ஆனால் புறப்படும்போது முதலில் அந்த வண்டிதான் புறப்படும். நம் வண்டி பின்னால் தான் புறப்படும். அதே போல் பின்னால் எடுத்த பெட்டியை வைத்த பிறகே நம் கால் முன்னால் இருக்கும் பெட்டி உள்ளே தள்ளப்படும் நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாலோ படித்துக் கொண்டிருந்தாலோ நம் காலுக்கு சேதாரம் ஆகிவிடும். பேசிக்கொண்டே தள்ளுவார்கள் நாம் வலிதாங்காமல் கத்தும்போதுதான் நினைவுக்கு வந்து ஞாபகமாக ஸாரி சொல்வார்கள்.

பல சமயம் அவர்கள் தள்ளும் வேகத்தில் நாம் கழற்றிவிட்ட செருப்பு உள்ளே போய்விடும். பிறகு தான் நம் செருப்பு இல்லை என்பதை உணருவோம். அப்பர் பெர்த்தில் ஒரு சௌகர்யம் நாம் பாட்டுக்குப் போய் படுத்து விடலாம். இந்த மிடில் லோயர் பெர்த் காரர்கள் ஒருவரை ஒருவர் அனுமதி கேட்டுத்தான் போட முடியும். மிடில் பெர்த் போடும்போது ஒரு கலவரம் ஏற்படும் பாருங்கள். லோயர் பெர்த் காரர்கள் கையோடு வைத்திருக்கும் சாமான்களை நகர்த்தி முதுகுப் பக்கத்தில் இருக்கும் பலகைப் பிடுங்குவார்கள். மேலே உள்ள கொக்கியை யார் எடுப்பது என்பது ஒரு மௌன யுத்தம் நடக்கும். பிறகு எடுத்து அதில் இந்த பலகையை மாட்டி அந்த திரிசங்கு சொர்க்க படுக்கை வசதியை தயார் செய்வார்கள்.

தூக்கம் வராத மிடில் பெர்த் கார்ர் அடிமைப் பெண் எம்.ஜி.யார் மாதிரி முதுகை வளைத்து கழுத்து மிடில் பெர்த்தில் இடிக்க அபத்திரமாக உட்கார்ந்திருப்பார். லோயர் பெர்த்  கார்ர் சீக்கிரம் தூங்குபவராக இருந்தால் அவர் படுக்க அவர் காலடியில் பாரதப் போருக்கு உதவ வேண்டும் என்று கேட்டு கிருஷணர்  காலடியில் உட்கார்ந்த அர்ஜுனன் மாதிரி உட்கார வேண்டியதுதான்.

நான் டென்சிங் நார்கே உதவியில்லாமல் அப்பர் பர்த் பிடிக்க புறப்பட்டேன். ரயில் நிலையங்களில் நிற்கும் போது கழிவறையை உபயோகப் படுத்தாதீர்கள் என்ற ரயில்வேயின் வேண்டுகோளை மதித்து நான் ரயில் புறப்படும் வரை காத்திருப்பேன். புறப்பட்டவுடன் என்னைப் போலவே காத்திருந்தவர்கள் முன்னால் சென்றுவிட அவர்கள் வரும் வரை காத்திருப்பேன்.

அதன் பிறகு டிக்கெட் பரிசோதகர் வரும் வரை அப்பர் பெரித்தில் ஏற முடியாது. முதல் காரணம் அவர் வந்து அவரிடம் ஆவணங்களைக் காட்ட வேண்டும். இரண்டாவது கடைசி முயற்சியாக அந்த பெட்டியில் வேறு எங்காவது மிடில் லோயர் பெர்த் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா என்று வேண்டுகோள் விடுக்கவும். என் பரிதாபமான முகத்தையும் நெஞ்சை உருக்கும் குரலும் சிலரின் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தி எனக்கு கீழ்தள வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

சில சமயம் இல்லை ஸார் சான்ஸ் இல்லை எல்லாம் வந்துட்டாங்க என்பார். நான் என் முடிவை மாற்றிக் கொண்டு கம்பியைப் பிடித்து ஏற ஆரம்பிப்பேன். இதில் ஏறி நம் உடலை வளைத்து அதில் நம்மை பொருத்திக் கொள்வது ஒரு கலை. சென்றடையும் முன் நம் தேவைகளெல்லாம் எடுத்துக் கொண்டுவிட்டோமா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். யாரையும் கேட்க முடியாது. அதிலும் குளிர் பதன பெட்டியில் வரும் பயணிகள் குளிரால் விறைத்துப் போனவர்கள் போல மனதாலும் விறைத்துவிடுவார்கள். சக பயணிகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அவர்களுக்கு பெரிய இடர்பாடாக இருப்பதை உணர்த்துவதாக அவர்கள் முகபாவம் இருக்கும்.

அண்மையில் தொலைக்காட்சியில்  ஒரு துணி சோப் விளம்பரத்தில் காட்டுவதுபோல் “முத தடவை ஓட்டலுக்கு வந்துஇருக்காங்க போலிருக்கு” என்று அம்மாவுடன் போர்வை போர்த்திக் கொண்டு வரும் பெண்ணைப் பார்த்து சொல்வது போல நம்மை பார்ப்பார்கள், நம்மிடம் நடந்து கொள்வார்கள்.

போன வாரம் நான் பெங்களூரில் இருந்து சென்னை காவேரி துரித வண்டியில் குளிர்பதன வகுப்பில் ஒரு அப்பர் பெர்த். நடுங்கிக் கொண்டே(பெங்களூர் குளிர் மட்டுமல்ல வண்டியில் அப்பர் பெர்த் மாற்ற முடியுமா என்றா கவலையில்) பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருந்தேன்.. ரயில் வரும் நேரம் காட்டும் ஒளித்திரையில் 11.30 என்று வண்டி வரும் நேரம் ஒளிர்ந்து மறைந்து கொண்டிருந்த்து. அறிவிப்பு 12.45 வருவதாக தெரிவித்தது. வண்டி இரண்டுமில்லாமல் 1.35 வந்தது. உள்ளே போனால். லோயர் பெர்த்தில் ஒரு வயதான மூதாட்டி, எதிரில் மாற்றுத்திறனாளியான மகன். இந்த மிடில் பெர்த்துக்கான இளைஞன் உடல் மிகப் பருத்து என்னிடம் லோயர் பெர்த் இருந்தால் நானே அவனுக்கு கொடுத்துவிடும் வகையில் இருந்தான். எதிர் மிடில் மற்றும் அப்பரில் இரண்டு இளைஞர்கள் யாரிடமும் பேச்சு கொடுக்காமல் படுத்து விட்டார்கள்.

கிட்டத்தட்ட ஒரு இரண்டு மணிக்கு பரிசோதகர் வந்தார். எல்லோரிடமும் டிக்கட் கேட்டார். நான் என் அடையாளக் கார்டை நீட்டினேன். உங்க பெர்த் நம்பர் என்றார். 3 என்றேன். டிக்கட் என்றார் . என் புது மோட்டோ ஜியை தடவி பதிவு விபரங்களை காட்டினேன். என் துரதிருஷடம் அவர் பட்டியலில் என் பெயர் இல்லை. பயணம் செய்யும் நாள், வண்டி, பெட்டி  எல்லாம் சரியாக இருக்கிறது. சரி படுங்க பாக்கலாம் என்றார். எனக்கு குழப்பம் இருந்தாலும் படுக்க பிரயத்தனப்பட்டு ஏறி ஒருமாதிரி படுத்தேன் மணி 2.20 . வண்டி போய்க்கொண்டிருந்த்து. சரியாக 2.45 நான் எழுப்ப்ப் பட்டேன். ஒரு இளைஞர் அசந்து தூங்கிக்கொண்டிருந்த என்னை எழுப்பி ஸார் இறங்குங்க இது என் பெர்த் என்றார். நான் விளக்கினேன். அவர் ஒத்து கொள்வதாக இல்லை வாங்க டி.டி. ஆரைப் பார்க்கலாம் என்றார்.

ஒரு மூன்று பெட்டி கடந்து அவரை கண்டுபிடித்தோம் நல்ல வேளை அவர் தூங்க வில்லை. நிலைமையை சொன்னோம். பிறகு அவர் என்ன சார் பண்ணலாம். எங்க லிஸ்ட் படி அவர் பேர் இருக்கு நீங்க போங்க வரேன் என்று வந்தார். பிறகு லிஸ்டை இன்னொருதரம் பார்த்து உங்க பேர் எம்.பி. மூர்த்தி வயது 60 உங்களுக்கு அப் கிரடேஷன்ல டூ டயர் 36 அதுவும் அப்பர் பெர்த்தான் போறீங்களா என்றார். நான் இங்க செட்டில் ஆயிட்டேன். அவரை போகச்சொல்லுங்கள் என்று சொல்லி என் அபிமான அப்பர் பெர்த்தில் நான் இரண்டாவது முறையாக ஏறும்போது மணி 2.45.

எத்தனை நேரம் தாமதமாக படுத்தாலும் 5.30 மணிக்கு எழுந்துவிடும் பழக்கம் என்னை எழுப்பி விட்ட்து. இறங்கி வந்து கழிவறைக்குப் போய் உட்கார இடமில்லாமல் ஏ.சிக்கு வெளியே நின்று போனைத்திறந்தால் இரவு எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்திருக்கிறது. படித்தேன்.

Your ticket upgrated your seat A2/36 chart prepared.

யாரும் பார்ப்பதற்கு முன் செல்போனை மூடினேன்.  ஜன்னல் வழியாகப் பார்த்தால் வண்டி திருவள்ளூர் வந்திருக்கிறது. பத்து மணிக்கு வீட்டிற்கு வந்து என் வீட்டு கட்டிலில் படுத்து தூங்கினேன். அடுத்த முறையாவது எனக்கு லோயர் பெர்த் கிடைக்க வேண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அப்பரும் நானும்.

  1. இது பழைய கஷ்டம் பழைய தொந்திரவு என்றாலும், மூர்த்தி எழுதும் விதம் எப்போதுமே ஹாஸ்ய குதூகல கொண்டாட்டம்தான்…

    ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால்
    ஓர்நொடிக்குள்
    ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
    ஒப்பொப்பர் ஆகிவிடுவார்
    உணரப்பா நீ

    என்றார் பாவேந்தர் பாரதிதாசன்

    எல்லா பெர்த்களையும் லோயர் பெர்த்களாக அமைக்காலாம் தான்
    அப்போது ரயில் ஒரு நடமாடும் மருத்துவமனை போல் இருக்கக் கூடும்..
    யார் கண்டது, அப்போது லோயர் பெர்த் வேண்டாம் இந்த ரயில்வேக்கு அறிவு இல்லையா, எவ்வளவு இடம் நஷ்டம் என்று அப்பர் பெர்த் கேட்டு சில அறிவுஜீவிகள் டுவீட் செய்யக் கூடும்…

    எஸ் வி வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.