Tag: க.பாலசுப்பிரமணியன்

  • வாழ்ந்து பார்க்கலாமே – 7

    க. பாலசுப்பிரமணியன்

    தடங்கல்களை எப்படித் தாண்டிச் செல்வது ?

    வாழ்ந்து-பார்க்கலாமே

    கிம் பீக் (Kim Peek) என்பவர் 1951ம் ஆண்டில் அமெரிக்காவில் பிறந்தார். பிறக்கும் பொழுதே இவருடைய மூளையில் சில குறைபாடுகள் இருந்தன. இவருடைய தலை சாதாரணமாக இருப்பவர்களின் தலையைவிடச் சிறிது பெரிதாகவும் மற்றும் இவருடைய மூளையில் வலது இடது மூளைகளை இணைத்துச் செயல்படும் கார்பஸ்கால்சோம் (CorpusCallosum) என்ற பகுதி வளர்ச்சியடையாமலும் இருந்தது. இதனால் இவ்வருடய மூளையின் செயல்பாட்டில் பல தாக்கங்கள் இருந்தன. உதாரணமாக இவரது வலது மூளையும் இடது மூளையும் தனித்தனியாக வேலைபார்த்ததால் இணைந்த ஒருங்கிணைப்பு இல்லாமலும் இருந்தது. அதன் காரணமாக இவர் ஒரு புத்தகத்தைப் படிக்கும் பொழுது இவருடைய ஒரு கண் ஒரு பக்கத்தையும் மற்றொரு கண் மற்றொரு பக்கத்தையும் பார்த்ததால் இரண்டு பக்கங்களையும் ஒரே நேரத்தில் இவரால் படிக்க முடிந்தது. அது மட்டுமல்ல. மூளை வளர்ச்சி சற்றே குறைவாக இருந்தாலும் இவருக்கு அபரிமிதமான ஞாபக சக்தி இருந்ததால் படித்த புத்தகங்களை உடனே நினைவில் கொள்ளவும் அதை முழுவதுமாக திரும்பிச் சொல்லவும் முடிந்தது. பள்ளிக்கூடங்களில் இவர் படிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் இவருடைய தந்தை இவரை அருகில் உள்ள ஒரு நூலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே அவர் தொடர்ந்து புத்தகங்களை படித்து ஒரு சிறிய காலத்திலேயே சுமார் 12000 புத்தகங்களை படித்தது மட்டுமென்றி அனைத்தையும் நினைவில் கொள்ளும் ஆற்றல் கொண்டார்.

    இவருடைய ஆற்றல்களை வெளிப்படுத்தும் வண்ணம் இவரை மையமாக  முன்னிறுத்தி ஒரு நிழற்படம் (cinema) எடுக்கப்பட்டது. “ரெயின் மேன்”(Rain Man ) எனப்படும் அந்தப் படம் ஒரு ஆஸ்கார் பரிசையும் பெற்றது. இவரை நேர்காணல் செய்த அந்தப்படத்தின் நடிகர்  காப்மான் (Hoffmaan) இவரைப் பற்றிச் சொல்லும் பொழுது ‘நானோ ஒரு நட்சத்திரமாக இருக்கின்றேன். நீங்களோ அதற்கு அப்பாற்பட்ட ஒரு சொர்க்கமாக இருக்கின்றீர்கள்” (I was only a Star. But you are from Heaven) என்றார். தொலைக்காட்சியில் ஒரு நேர்காணலில் அவருடைய உடல் இடர்ப்பாடுகளை பற்றிக் கேட்டபொழுது அவர் கூறினார் ” எந்த உடல் இடர்ப்பாடும் ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு தடங்கலாக இருக்க முடியாது” இவர் ஒரு சாதனை மனிதர். “வாழ வேண்டும்’ என்ற ஒரு தன்னம்பிக்கை, ‘சாதிக்க வேண்டும்” என்ற ஒரு ஈடுபாடு, இவரிடம் இருந்தன. ‘திறன்களை” முழுமையாக உபயோகித்தல் போன்றவை ஒருவருடைய வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகின்றது என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம்.

    வாழ்க்கையிலே பிரச்சனைகளையும் தோல்விகளையும் வளர்ச்சிப்பாதையில் தடங்கல்களை சந்திக்காத மனிதர்களே கிடையாது. ஆகவே சிறு வயதிலிருந்தே குழந்தைகளை இவை அனைத்தையும் எதிர்பார்க்கவும் சந்திக்கவும் சமாளிக்கவும் தயார் படுத்த வேண்டும். வெறும் வெற்றிகளையும் சுகங்களையும் சந்தோஷங்களையும் மட்டுமே குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்தி வாழ்க்கையில் அவைகளை மட்டுமே சந்திக்கவேண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்கி வளர்த்தால் பிற்காலத்தில் அவர்கள் தோல்விகளையும் துயரங்களையும் பிரச்சனைகளையும் கண்டு துவண்டு விடுவார்கள். தன்னம்பிக்கையை இழந்து வாழ்வே தொலைந்து விட்டது என்ற எண்ணத்தில் மனநோயாளிகளாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம்.

    பிறப்பிலே ஏற்பட்ட உடல் ஊனங்கள், வாழ்க்கைப் பாதையில் நோய்களாலோ அல்லது விபத்துக்களாலோ ஏற்பட்ட ஊனங்கள் மற்றும் மனநலக் கோளாறுகள் இவற்றைத் தாங்கிக்கொண்டு சாதனை படைத்தவர்கள் ஏராளம் .. ஏராளம்!  அமெரிக்காவில் அலபாமா என்ற இடத்தில் பிறந்த ஹெலன் கெல்லர் (Helen Keller) தன்னுடைய இரண்டு வயதிலேயே கண்களில் ஏற்பட்ட நோய் காரணமாகப் பார்வையை இழந்தார். ஆனால் அவருடைய சாதனைகள் உலகையே வியக்க வைக்கும் வகையில் அமைந்தன. லூயி ப்ரைல்லே தன்னுடைய சிறிய வயதில் ஒரு விபத்தின் காரணமாக ஏற்பட்ட தொற்று நோய் காரணமாக தன்னுடைய இரண்டு கண்களின் பார்வையை இழந்தாலும் தன்னைப் போன்ற பார்வையற்றவர்களுக்காக  பிரெய்லி எழுத்து (Braille system) முறையை வடிவமைத்து அவர்களுக்கு கற்றலுக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தார்.

    குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே கனவு காண வழிவகுக்க வேண்டும். அவர்கள் கனவுகளை ஏளனம் செய்தோ அல்லது நிராகரிக்கவோ கூடாது. அந்தக் கனவுகளை அடைய என்னென்ன வழிகள் என்பதைப்  பெற்றோர்கள் அருகில் அமர்ந்து விவாதிக்க வேண்டும். அந்த கனவுகளை அடையும் பாதையில் என்னென்ன கடினங்களை எதிர்கொள்ளவேண்டும். அதற்குத் தேவையான தயாரிப்புக்கள் என்ன என்பதை எடுத்துரைக்க வேண்டும்.

    குழந்தைகளின் வளர்ச்சி வெறும் மதிப்பெண்களை பெறுவதில் மட்டும் இருப்பதில்லை. இளம் பிராயத்தில் வாழ்க்கையின் உண்மைகளையும் தேவைகளையும் அறிந்து கொள்ளாவிட்டால் அவர்கள் தோல்வியைத் தழுவிக்கொண்டு இருப்பார்கள். இன்றைய சமுதாயத்தில் நல்ல பட்டம் பெற்ற பல பேர்கள் நேர்காணலில் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவதும், வேலையிலே சேர்ந்தபின் திறனற்றவர்களாகக் கருதப்படுவதும் நிதர்சனம்.

    வாழ்க்கை கல்வி வெறும் எழுத்தறிவு அல்ல. புத்தகங்களை படிப்பதும் காகிதங்களில் எழுதுவதும் மட்டும் கல்வியின் வெளிப்பாடாகக் கருத முடியாது. கருதவும் கூடாது. தன்னுள்ளே புதைந்து கிடக்கின்ற திறன்களை தகுந்த அளவில் தகுந்த வழியில் தகுந்த இடங்களில் வெளிப்படுத்துதல் கல்வியின் சீரிய நோக்கமாகும். இதற்குத் தன்னம்பிக்கையும் தன்னார்வமும் மிக அவசியம். சுவாமி விவேகானந்தர் கூறுகின்றார் ” நீ உன்னை நம்பு. உலகம் உன் காலடியில் நிற்கும்.” (Believe in yourself. The world will be at your feet) அலெக்சாண்டர் டூமாஸ் என்ற ஒரு மேதை கூறுகின்றார் : ” ஒரு நோயாளிக்கு மருந்துகள்  மற்றும் போதாது. நாம் பிழைத்து விடுவோம் என்ற நம்பிக்கை அதைவிட மிக்க அவசியம்”

    நாளைக் காலையில் நம்முடைய குழந்தைகள் தன்னம்பிக்கையும் முயற்சியும் உள்ள செல்வங்களாக எழுந்தால் நம்முடைய சமுதாயத்திற்கு வருங்காலத்திற்கான ஒளிவிளக்கு நிச்சயமாக ஏற்றப்பட்டிருக்கும்.

    (தொடரும்)

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்-47

    க. பாலசுப்பிரமணியன்

    இறைவன் என்றும் மனத்துணையே வழித்துணையே

    திருமூலர்-1-1-2

    சிந்தையிலே பராசக்தியை நிறுத்தி அவள் திருவருளை முழுநிலவாய் தன் அகக்கண்ணில் கண்ட அபிராமி பட்டர் பக்தியின் பரவச நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றார். எப்படி நம்மால் இவ்வாறு இறையோடு ஒன்றிய நிலையை அடைய முடியும்? இதற்காக என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டும் ? இந்த நிலையை அடைவதற்கு முன்னால் நாம் இந்த உலகின் பற்று பாசங்களிலிருந்து விடுதலை பெற வேண்டாமா? மனமோ மரம் விட்டு மரம் தாவும் ஒரு குரங்கினைப் போல் ஒரு எண்ணத்திலிருந்து இன்னொன்றுக்கு ஓடுகின்றதே ! என் செய்ய?

    அடியார்கள் பலரும் “இறைவா! இந்தத் துயர வலையிலிருந்து உன்னால் தான் என்னைக் காக்க முடியும்” என்று கூறி எப்படியெல்லாம் இறைவனால் நம்மைக் காக்க முடியும் என்று கற்பனை செய்து பார்க்கின்றனர் ‘

    பட்டினத்தார் பாடுகின்றார்:

    மந்திக் குருளையொத் தேனில் நாயேன் வழக்கறிந்துஞ்

    சிந்திக்குஞ் சிந்தையை யானென்செய் வேனெனைத் தீதகற்றிப்

    புத்திப் பரிவிற் குருளையை யேந்திய பூசையைப்போல்

    எந்தை கூறியவன் காணத்த னேகையி லாயத்தனே.

    இறைவன் என்றும் நமக்குத் துணையாக உள்ளான். அவன் துணையில்லையெனில் நாம் தனியாக நின்று வினைகளில் விழுந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ளுவது மிகக் கடினம் என்று உணர்ந்த மாணிக்கவாசகரோ  இவ்வாறு கூறுகின்றார்:

    தனித் துணை நீ நிற்க யான் தருக்கித்

    தலையால் நடந்த

    வினைத் துணையேனை விடுதி கண்டாய்

    வினையேனுடைய

    மனத் துணையே என்தன் வாழ்முதலே

    எனக்கு எய்ப்பில் வைப்பே

    தினைத் துணையேனும் பொறேன்

    துயர் ஆக்கையின் திண் வலையே

    மனத்துணையே என்று அழைத்து இறைவனிடம் தான் கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிசெய்கின்றார். “வழிமுதலே” என்று அழைக்கும் பொழுது பிறப்பிலிருந்து இறைவனுடன் தான் கொண்டுள்ள உறவுக்கும் வாழ்வின் வழியெல்லாம் அவன் துணையைப் போற்றி வளர்ப்பதற்கும் உள்ள அவர் சிந்தனை வெளிப்படுகின்றது

    அப்பர் பெருமானோ இதற்கும் மேலான ஒரு நிலைக்குச் சென்று தன்னுள் இருந்து தன்னை ஆட்டிவைப்பதே அந்த இறைவன் என்று இரண்டறக்கலந்த நிலையை விளக்குகின்றார்.

    எம்பிரான் என்றதே கொண்டு என்னுள்ளே புகுந்து நின்றிங்கு

    எம்பிரான் ஆட்ட ஆடி என்னுள்ளே உழிதர் வேளை

    எம்பிரான் என்னைப்பின்னைத் தன்னுள்ளே சுரக்கும்

    எம்பிரான் என்னில் அல்லால் என்செய்கேன் ஏழையேனே.

    திருமூலரோ அவனை ஒரு முறை நினைத்தாலே போதும். நினைத்த மாத்திரத்தில் நம்முள் வந்து அமர்ந்து நம்மோடு ஒன்றாகி நமக்கு அருள்புரிபவனாக இறைவன் ஆகிவிடுகின்றார் என்பதை உணர்த்தும் வகையில் கூறுகின்றார் :

    நினைக்கின் நினைக்க நினைப்பவர் தம்மைச்

    சுனைக்குள் விலைமலர் சோதியி னானைத்

    தினைப் பிளந்து அன்னசிறுமைய ரேனும்

    கனத்த மனத்து அடைந்தால் உயர்ந்தவரே

    சிந்தையிலே எப்படி சிவனை நிறுத்த முடியும்? அவ்வளவு சக்தி வாய்ந்த அவனை ஒரு கோயிலில் தானே வைக்க முடியும் ? கோவிலில் அவனை வைத்தல் நம் சிந்தையிலே அவன் எப்படி வருவான் என்றெல்லாம் எண்ணத் தோன்றுகின்றது. அதற்கு பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல் “

    உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்

    வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்

    தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்

    கள்ளப் புலனைந்து கால மணிவிளக்கே.

    உள்ளத்தில் அவனை நிறுத்தி உடலையே கோயிலாக்கி அவனை ஆராதித்து வந்தால் நமக்குத் துயர் எவ்வாறு வரும்? நெஞ்சில் அமைதிக்கு அதை விடச் சிறந்த வழி ஏது?

    இந்த அமைதியைத் தன் அறிவாலும் தவப்பயனாலும் கண்டறிந்த திருமூலர் நமக்கு என்ன அறிவுரை அளிக்கின்றார் ?

    இல்லனு மல்லன் உளனல்லன் எம்பிறை

    கள்ளது நெஞ்சம் பிளந்திடுங் காட்சியன்

    தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி

    சொல்லாருஞ் சோதி தொடர்ந்துநின் றானே.

    (தொடரும்)

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 6

    க. பாலசுப்பிரமணியன்

    தன்னம்பிக்கையில் நாம்  புலியா பூனையா?

    வாழ்ந்து-பார்க்கலாமே-1-1-1-1

    உலகின் மிகப்பெரிய அறிவியல் மற்றும் தத்துவ மேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஜெர்மனியில் மூனிச் என்ற நகரில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொது அவருடைய பள்ளி ஆசிரியர் அவருடைய ரிப்போர்ட்டில் ”  இவன் எதையும் சாதிக்க மாட்டான்” என்ற பொருள் படும் வகையில் He will never amount to anything”என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஐன்ஸ்டீன் அவர்களின் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் ஆர்வமும் உழைப்பும் அவரை உலக அளவிலே ஒரு மேதையாக முன்னிருத்தியது.

    ஹென்றி போர்ட் அவர்கள் மோட்டார் தொழிற்சாலைக்கான ஒரு வரைபடத்தோடு ஒரு வங்கி அதிகாரியை தொழில் முதலீட்டிற்காகக் கடன் கேட்டு அணுகியபோது “காரா? அதெல்லாம் வேடிக்கைக்கு நல்லதாக இருக்கும். குதிரை சவாரியை யாரால் நிறுத்த முடியும்?’ என்று பொருள்படப் பேசினார் அந்த வங்கி அதிகாரி ஆனால் ஹென்றி போர்டின் தன்னம்பிக்கையும் , வெற்றி பெற வேண்டும் என்ற சாகச உந்துதலும் அவரை வளர்ச்சியின் படியில் வளர்த்துக்கொண்டு சென்றன.

    ஒருவரின் வளர்ச்சிக்கு நம்பிக்கை மிகவும் அத்தியாவசியமானது. “என்னால் முடியும்” என்ற நம்பிக்கையே வெற்றியின் பாதையில் ஒருவரைக் கொண்டு நிறுத்திவிடும். ஆகவே ஒரு குழந்தையின் வளர்ச்சியில் அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பது மிகவும் தேவையானது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்த நம்பிக்கையை வளர்ப்பதற்கு ஏதுவான சூழ்நிலைகளை வீட்டிலும் பள்ளிகளிலும் வளர்ப்பது அவசியம். தன்னம்பிக்கை வளருவதற்கு பணமோ அல்லது வளமான சூழ்நிலைகளோ தேவையில்லை. அது மனதில் உள்ளே விதைக்கப்பட்டு வளர்க்கப்படும் ஒரு உன்னதமான உணர்வு.

    “இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது” என்று முட்டுக்கட்டை போட்டு ஆர்வங்களைத் தடை செய்யும் பொழுது அவைகள் ஆரம்ப நிலையிலேயே துவண்டு கீழே விழுகின்றன. “சாதிப்பதற்கு நல்ல வசதி இருந்தால் தான் முடியும்” என்ற ஒரு கருத்தை இளைஞர்களின் மனதில் வளர்ப்பது அவர்களின் நம்பிக்கையை வித்திலேயே நசுக்கிவிடுவதாக மாறிவிடும். நோபல் பரிசு பெற்ற சர் சி வீ இராமன், இந்திய துணைக்கண்டத்தின் ஏவுகணை மன்னராக விளங்கிய விஞ்ஞானி திரு அப்துல் கலாம் போன்ற பல பேர்கள் மிகச் சாதாரணமான சூழ்நிலைகளில் வாழ்ந்து, உழைத்து முன்னேற்றத்தைக் கண்டவர்கள்தான்.

    மற்றவர்கள் உன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைவிட உன்னைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்பது மிகவும் முக்கியமானது என்று மனநல வல்லுநர்கள் விளக்குகின்றார். “ஒரு மனிதனின் உருவாக்கம் அவன் சிந்தனைகளால் மட்டுமே. நீ என்ன நினைக்கின்றாயோ அவ்வாறே ஆகின்றாய் எனக் கூறினார்”  அண்ணல் மகாத்மா காந்தி. “பாதுகாப்பற்ற உன் எண்ணங்களை விட உனக்கு ஒரு மிகப் பெரிய எதிரி இருக்கமுடியாது”  என்று அறிவுரை கூறினார் புத்தர். நம்முடைய எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன. எண்ணங்களின் வலிமையே செயல்களின் வலிமைக்கு வித்தாகின்றது. நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்ற எண்ணம் மனதில் உருவாகி விட்டால் நம்மை நாம் மதிக்கக் கற்றுக்கொள்ளுவோம்  எந்த ஒரு மனிதன் தன்னைத் தானே மதிக்கவில்லையோ அவனை நிச்சயமாக மற்றவர்கள் மதிக்க  மாட்டார்கள்.

    உயிரினங்களில் புலியும் பூனையும் ஒரே இனத்தைச் சார்ந்தவைதான். ஆனால் ஒன்றோ வீரத்திற்குச் சான்று., மற்றொன்று பயத்திற்கு அடையாளமாக உலவுகின்றது. இவைகளின் எண்ணங்கள் சிந்தனைகள் காலம்காலமாக அவற்றின் உயிரணுக்களில் உறைந்து அவர்களுடய வாழ்க்கை முறையை நிச்சயப்படுத்தி விட்டன.

    வாழ்க்கையில் சாதனை படைத்த பலரும் எளிய ஆரம்பத்தில் இருந்துதான் வந்திருக்கின்றனர். அவர்களின் வெற்றிகள் அவர்களின் தன்னம்பிக்கைக்கும், சாதிக்க வேண்டும் என்ற ஒரு விடாமுயற்சிக்கும் கிடைத்த பரிசு. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? மற்றவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம் தவிர, அவர்களுடய வாழ்க்கையை நாமும் வாழ முயற்சிக்கக்கூடாது. முயன்றால் நமது வாழ்க்கை தொலைந்து விடும்.

    1. நாம் நாமாக இருக்க முயற்சிக்க வேண்டும்.
    2. நம் மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.
    3. நாம் திறமையும் தகுதியும் உள்ளவர்கள் என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டும்.
    4. நம்முடைய முயற்சிகளைத் தொடர்ந்து செய்தல் வேண்டும்.
    5. தோல்விகளைக் கண்டு தயங்காமல் மீண்டும் எழுந்து நிற்க வேண்டும்.
    6. காலத்தால் பழுக்கும் பழத்தைக் கல்லால் அடித்துப் பழுக்க வைக்க முடியாது என்பதை உணர்ந்து பொறுமையும் விவேகத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.

    சற்றே துவண்டுவிட்டீர்களா? பரவாயில்லை.! சில நிமிடங்கள் “வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்’ என்ற பாட்டை கொஞ்சம் முணுமுத்துக் கொண்டிருங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்துப் பாருங்கள். எ”உங்கள் எண்ணங்களுக்கு சக்தி அதிகம். அவைகளே உங்களுக்கு ஆற்றலைத் தருகின்றன. உங்கள் எண்ணங்களின் மூலமாக நீங்கள் உங்களுக்குத் தேவையான உலகைப் படைக்கலாம் அல்லது அதை அழிக்கலாம். உங்கள் உலகம் உங்கள் கைகளில் ” என்று பல மேதைகள் எடுத்துச் சொல்லி இருக்கின்றனர். ழுந்து வேகமாகச் செயல்பட வேண்டுமென்று தோன்றுகிறதா…?

    அதுதாங்க வாழ்க்கை.. வாழ்ந்து பார்க்கலாமே .

    (தொடருவோம்)..

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்  46

    க. பாலசுப்பிரமணியன்

    இறைவனிடம்  காட்டும் அன்புக்கு பதில் என்ன கிடைக்கும் ?

    திருமூலர்-1-1

    உலகம் போற்றும் மகானான இராமகிருஷ்ண பரமஹம்சர் தன் பக்தர்களுக்கு ஒரு சிறிய கதை மூலம் இறைவனின் அருளை விளக்கிக் கொண்டிருந்தார் .. ” ஒரு சிறிய கிராமத்தில் இறைவனிடம் அளவற்ற பக்தியைக் கொண்டிருந்த ஒரு மனிதன் தினமும் காலையிலே நீராடி திருநீறு அணிந்து கோயிலுக்குச் சென்று இறைவனின் புகழ்பாடி வலம் வந்து போற்றிக்கொண்டிருந்தான். இதை அவன் பல ஆண்டுகளாகச் செய்துகொண்டிருந்தான். வழக்கம்போல் ஒரு நாள் காலையில் அவன் இறைவனைத் துதித்து வலம் வந்து கொண்டிருந்தபோது காவலர்களுக்குப் பயந்து வேகமாக வந்துகொண்டிருந்த ஒரு திருடன் இவர் மீது மோதிவிட இவர் தடுமாறிக் கீழே விழுந்தார். அதனால் அவருக்கு காயம் ஏற்பட்டு காலில் இரத்தம் வந்துகொண்டிருந்தது.

    ஆனால் ஓடிச்சென்று கொண்டிருந்த திருடனோ தன்னுடைய காலில் ஏதோ தடுக்கிவிட குனிந்து பார்த்தான் அங்கே ஒரு சிறிய துணிப்பை கிடந்தது. அதை அவன் திறந்து பார்த்த பொழுது அதனுள்ளே நிறைய பொற்காசுகள் இருந்தன. அவன் மிக்க மகிழ்ச்சியுடன் அவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டான்.

    பரம ஏழையாக இருந்த இந்த பக்தனுக்கோ ஒரே வியப்பு! எத்தனை வருடங்களாக நான் மிகவும் பக்தியோடு இறைவனை நாடி வருகிறேன். எனக்கோ காலில் அடிபட்டு இரத்தம் வருகின்றது. ஆனால் ஒரு திருடனுக்கோ இந்தக் கோவில் வழியாக ஓடும் பொழுது பொற்காசுகள் கிடைக்கின்றன. இது என்ன அநியாயம் என்று நினைத்து இறைவனிடம் முறையிடுகின்றான். “இறைவா! நீ செய்வது உனக்கே சரியென்று தோன்றுகின்றதா?. இதுதான் நீ காட்டும் கருணையா? “

    பக்தனின் கதறலைக் கேட்ட இறைவன் கூறுகின்றான் “பக்தனே! உன்னுடைய ஊழ்வினையின் காரணமாக உனக்கு இரண்டு கால்களும் இன்று போயிருக்க வேண்டும். ஆனால் என்மீது நீ நிறைந்த பக்தி கொண்டதன் விளைவாக உனக்கு காலில் சிறிய காயம் மட்டும் ஏற்பட்டு வினை விலகியது. அவனுக்கோ அவன் ஊழ்வினையின் காரணமாக ஒரு மிகப்பெரிய செல்வம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அவன் இறை நம்பிக்கையின்றி தவறான செயலில் ஈடுபட்டுள்ளதால் அவனுக்கு ஒரு சிறிய தொகை மட்டும் கிடைத்துள்ளது.” என்று எடுத்துரைக்க அந்த பக்தன் இறைவனின் பேரருளைக் கண்டு வியந்தான்.

    ஊழ்வினையின் வலிமையை யாரறிவார்? அது நம்மை எவ்வாறு துன்புறுத்தும்? அதிலிருந்து விடுபடுவது எப்படி? அந்தப் பேரறிவாளனின் பாதங்களைத் தவிர வேறு எங்கு செல்ல முடியும்?

    மாணிக்கவாசகரின் இந்தப்பாடல் அவருடைய அந்த உள்ளநிலையை வெளிப்படுத்துகின்றது.

    பொருத்த மின்மையேன் பொய்ம்மை யுண்மையென்

    போதஎன்(று) எனைப் புரிந்து நோக்கவும்

    வருத்த மின்மையேன்  வஞ்ச முண்மையேன்

    மாண்டிலேன் மலர்க் கமல பாதனே

    அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும்

    நீயும் அங்கெழுந் தருளி இங்கெனை

    இருத்தி னாய்முறை யோஎன் எம்பிரான்

    வம்ப னேன்வினைக்  கிறுதி யில்லையே.

    இறைவன் சில நேரங்களில் நமக்குக் கொடுக்கும் சில துன்பங்களைப் பார்க்கும் பொழுது ஒருவேளை இறைவன் நம்மை வெறுக்கிறானோ என்று தோன்றும். அவன் பாரபட்சமானவனா என்றுகூட சிந்திக்கத் தோன்றும். ஆனால் இறைவனின் உண்மைப் பொருளைப் புரிந்துகொண்டால் இந்த மயக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கும். இதை நமக்கு உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ளது சுந்தரமூர்த்தி நாயனாரின் இந்தப் பாடல்

    ஒறுத்தாய் நின் அருளில்: அடியேன் பிழைத்தனைகள்

    பொறுத்தாய் எத்தனையும்: நாயேனைப்  பொருட்படுத்திச்

    செறுத்தாய்; வேலைவிடம் அறியாமல் உண்டுகண்டம்

    கருத்தாய்: தண்கழனிக் கழிப்பாலை மேயோனே !

    பல நேரங்களில் நாம் நமது இறையன்பிற்கும் பக்திக்கும் தகுந்த பலன் கிடைக்கவில்லையே என்ற எண்ணத்தில் இறையருளை சந்தேகிக்க நினைக்கின்றோம். இது மிகவும தவறான கருத்து. இறைவனிடம் செலுத்தும் அன்புக்கும் பக்திக்கும் பதில் ஏதாவது பலனை எதிர்பார்க்கின்றோம். அதுவும் நமக்கு வெளிப்படையாகத் தெரியக்கூடியதாகவும் இறைவனின் அருளின் முத்திரை பதிந்ததாகவும் எதிர்பார்க்கின்றோம். இது ஒரு விவேகமற்ற எதிர்பார்ப்பு. அன்பும் பக்தியும் பலனை எதிர்பார்த்துச் செய்யப்படுவது அல்ல. இந்த வாழவை நமக்குத் தந்த அளவற்ற கருணைக்காக நாமே காட்டும் மரியாதை உண்மையான அன்பும் பக்தியும் எதிர்பார்ப்பைக் கடந்ததாக இருத்தல் அவசியம்,  கீதையில் அர்ச்சுனனுக்கு அறிவுரை வழங்கும் கண்ணன் கூறுகின்றான் “நீ கடமையை மட்டும் செய். பலன்களை எதிர்பார்க்காதே.” பலனை எதிர்பார்த்துச் செய்யும் செயல்களில் அந்தப் பலன் நமது விருப்பத்திற்கு மாறாகவோ அல்லது சற்றே மாறுபட்டதாகவோ அமைந்துவிட்டால் நமக்கு அதனால் துயரே தோன்றும். உண்மையான மகிழ்ச்சி செய்யும் செயலைச் செவ்வனே செய்வதில் மட்டும் உள்ளது.

    இந்த நிலையில் சிந்தனையும் அவனே, செயலும் அவனே, அதன் பலனும்  அவனுடையதே என்று எண்ணி அவன் தாள்களைச் சரணடைந்தால் துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்காதோ?

    திருமூலர் மிக அழகாக சுருக்கமாக இதை நமக்கு விளக்குகின்றார்:

    சித்துக்குச் சித்தன்றி சேர்விடம் வேறுண்டோ

    சுத்த வெளியிற் சுடரிற் சுடர் சேரும்

    (தொடருவோம்)

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே -5

    க. பாலசுப்பிரமணியன்

    வீட்டில் வளரும் நம்பிக்கையின் உத்தரவாதங்கள்

    வாழ்ந்து-பார்க்கலாமே-1-1-1

    வாழ்க்கை என்பது என்ன? அதைப் பற்றி எந்தப் புத்தகத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது? அதற்கான விளக்கங்களை எங்கே நாம் பெறலாம்? அப்படி மற்றவர்களால் எழுதப்பட்ட வாழ்க்கை முறைகள் நமக்குப் பயனுள்ளதாக இருக்குமா? அவ்வாறு படித்தவை நமக்கு வாழத் துணிவும் தன்னம்பிக்கையும் கொடுக்குமா? “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா?” என்பது வழக்குமொழி. எனவே ஏட்டுக்கல்வி வாழ்க்கைப் பயணத்திற்கு உதவுமா?

    உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பலகற்றும்

    கல்லான் அறிவிலாதான் 

    என்று வள்ளுவன் கூறினானே! அப்படியென்றால் உண்மையான அறிவு கல்விச்சாலைகளில் கிடைக்கிறதா அல்லது வாழ்க்கைச் சாலையில் கிடைக்கிறதா? என்றெல்லாம் பல கேள்விகள் நம் மனத்தை அவ்வப்போது துளைத்துக்கொண்டிருக்கின்றன.

    “கல்வி என்பது ஒரு தனிமனிதனை வாழ்க்கைக்குத் தயார் செய்வதே” என்று ஒரு கருத்தும் “கல்வியே வாழ்க்கையின் பயிற்சிதான்” என்று ஒரு வாதமும் இருக்கின்றன. வீட்டிலும் வெளியிலும் கல்விக்கான கற்றலுக்கான ஏணிப்படிகள் இருக்கின்றன. கல்வி என்பது வெறும் புள்ளிவிவரங்களையோ அல்லது சரித்திர நுணுக்கங்களையோ அல்லது அறிவியல் கண்டிபிடிப்புக்களின் பயன்களையோ கற்றுக்கொள்ளுவது மட்டும் அல்ல.

    இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகக் கல்வியின் போக்கும் நடைமுறையும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி யுனெஸ்கோ (Unesco) நிறுவனம் உலகளாவிய குழு அமைத்து பிரெஞ்சு முன்னாள் அமைச்சர் திரு ஜாக்கஸ் டெல்லோர்ஸ் (Dr. Jacques Dellorss) என்பவர் தலைமையில் பரிந்துரை செய்தது.  இந்தியாவின் தரப்பில் ஒரு மிகச் சிறந்த கல்வியாளரும் மேதையுமான ஜம்மு காஷ்மீரின் முன்னாள் அரசர் டாக்டர் கரன்சிங் (Dr. Karan Singh) அதில் பங்கேற்றார். அந்தக் குழு இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் கல்வி நடைமுறைக்கான நால்வழிப் பாதையை முன் வைத்தது.  அவை:

    1. அறிவுக்காகக் கற்றல் (Learning to Know)
    2. செயலுக்காகக் கற்றல் (Learning to Do)
    3. கூடிவாழ்வதற்க்காகக் கற்றல் (Learning to Live together)
    4. தன்னிறைவுக்காகக் கற்றல் (Learning to Be)

    இந்த நான்குமே வாழ்க்கையின் முழுமைக்கும் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் இன்றியமையாதவை. இவைகளை ஒரு குழந்தையின் இளம் பிரயாத்திலிருந்தே வீடுகளில் வாழ்க்கை வழிகளோடும் முறைகளோடும் இணைத்து சொல்லிக்கொடுத்தல் அவசியமாகின்றது. “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” என்பது வெறும் வழக்குமொழி அல்ல. மூளை வளர்ச்சிகளின் ஆராய்ச்சிகளில் இளம் வயதில் கற்றலிலும் அனுபவங்கள் மூலமாகவும் உணர்ச்சிபூர்வமான செயற்பாடுகள் மூலமாகவும் பதிவு செய்யப்படுகின்ற கற்றல்கள் எவ்வாறு வாழ்வு முழுவதும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்று விளக்கப்பட்டும் உறுதிசெய்யப்பட்டும் இருக்கின்றது.

    சிறுபிள்ளைப் பருவத்தில் என்னுடைய பாட்டி மற்றும் வீட்டில் இருந்த பெரியவர்கள் கூறிய கதைகள், அனுபவச் சொற்கள், நிகழ்வுகள் வாழ்க்கையை வளப்படுத்த வாழ்க்கையைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொள்ள உதவி செய்துள்ளன என்று நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாக உள்ளது. இன்று சிந்திக்கும் திறன்கள் பற்றி வெளிவந்துள்ள பல ஆய்வுகள் –  பக்கவாட்டுச் சிந்தனை, (Lateral Thinking) ஆய்வுச் சிந்தனை,(Analytical Thinking) நுண்ணறிவுச் சிந்தனை (Critical thinking) மற்றும் இணைச் சிந்தனை  (Parallel Thinking)- போன்ற பல சிந்தனைத் திறன்கள் விளையாட்டாகக் கதைகள் மூலமாகவும், விடுகதைகள் மூலமாவும், கூட்டு விளையாட்டுக்கள் மூலமாகவும் வளர்க்கப்பட்டன. அன்று குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட  தெனாலி ராமன் கதைகள், பீர்பல் கதைகள், மரியாதை ராமன் கதைகள், விக்ரமாதித்தன் கதைகள் போன்ற பல அவர்களை சிந்திக்கவும் வழிப்படுத்தவும் உதவின. வாழ்க்கையை சந்திப்பதற்கான கருத்துக்களை அள்ளித் தந்தன. வாழ்க்கை வாழ்வதற்கே என்றும், வாழ்வில் தோல்விகளை சந்திக்காத தயங்கக்கூடாது என்றும்,  எழுந்து நில், நிமிர்ந்து நில் என்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வளர்க்கவும் மன நலத்தை வலுப்படுத்தவும் அந்தக் கருத்துக்களும் உந்துதல்களும் மிகவும் உதவின.

    கல்லூரிப் பருவத்தில் திருமதி சிவசங்கரி அவர்கள் எழுதிய “சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது” என்ற ஒரு நூலை நான் ஒரு நூறுமுறையாவது படித்திருப்பேன். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்றுக்கொடுக்காத நுண்ணறிவை அந்த நூல் ஊட்டி வளர்த்தது. ஒவ்வொரு முறையும்  ஏதாவது ஒரு பிரச்சனையை சந்திக்கும் பொழுது அந்த நூலைப் படித்து விட்டால் போதும். உங்களுக்கு விடை கிடைத்துவிடும். அதேபோல் திரு உதயமூர்த்தி அவர்கள் எழுதித் தொடராக வந்த “உன்னால் முடியும் தம்பி”  என்ற கட்டுரைகள் எத்தனை இளைஞர்கள் இதயத்தில் வாழ்க்கைக்கான நம்பிக்கை ஒளியை ஏற்றியது !

    வாழ்க்கையில் தவறி விழுவது ஒரு சாதாரணமான செயல். ஆனால் கீழே விழுந்து விட்டபின் ‘விழுந்தேனே, விழுந்தேனே” என்று அழுதுகொண்டிருப்பதை விட எழுந்து அடுத்த படிக்கு கால்களை முன்வைப்பதே புத்திசாலித்தனமான செயல்

    “சாதனை என்பது ஒவ்வொரு முறை தோல்வி அடைந்தபின்னும் மீண்டும் தோல்விக்கு நம்மைத் தயார் செய்து கொள்வதுதான்” என்று சர் வின்ஸ்டன் சர்ச்சில் என்ற முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் கூறினார். தன்னுடைய எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகொள்ளும் முயற்சியில் முதன்முறை தோல்வியடைந்த பின் திரு எட்மண்ட் ஹில்லாரி இமயத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டே சொன்னாராம் ” இமயமே ! உன்னால் இதற்கு மேல் உயர முடியாது. என்னால் என் முயற்சியில் இன்னும் உயர முடியும்.”

    நம்பிக்கை ! தன்னம்பிக்கை ! வாழ்வின் வெற்றிக்கு ஆணிவேர் !

    தன்னம்பிக்கையோடு வாழ்ந்து பார்க்கலாமே !

    (தொடருவோம்)

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 45

    க. பாலசுப்பிரமணியன்

    அன்பே சிவம்

    திருமூலர்-1-3

    சில நேரங்களில் நமது மனதில் தோன்றக்கூடிய கேள்வி – அனைத்தையும் துறந்த வாழக்கையை வாழ்ந்தால்தான் இறைவனை அடைய முடியுமா? கோவில்களுக்கோ அல்லது வேறு வழிபாட்டுத் தலங்களுக்கோ சென்றால்தான் இறைவனின் அருள் கிடைக்குமா? பக்தியுடன் இறைவனை பூஜித்தாலோ அல்லது அவனுடைய திருநாமங்களை போற்றிக்கொண்டிருந்தாலோதான் இறைவனின் அருளுக்குப் பாத்திரம் ஆவோமா? கனிகளும் மலர்களும் மற்ற படையல்களும் இறைவனுக்குப் படைத்தால் தான் இறைவனின் அருளுக்கு உகந்தவர்களாக இருக்க முடியுமா? ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்த வாழ்க்கை முறைகள் மாறிக்கொண்டிருக்கும் நேரத்தில் நாம் இந்த அருள் பெறுவதற்கு வேறு ஏதாவது வழிகள் உள்ளனவா?

    சபரி கொடுத்த எச்சில் பழத்தையும் அன்புடன் ஏற்று அருளிய இராமன், ஒரு பிடி அவல் கொண்டுவந்த நண்பனின் கால்களைக் கூட பிடித்துவிட்ட கண்ணன், பிட்டுக்கு மண்சுமந்த பரமேஸ்வரன், குருதிவழியும் கண்களைக் காலால் முட்டுக்கொடுத்துக்கொண்டு தன் கண்களையே தானமாகக் கொடுத்த வேடன் கண்ணப்பனுக்கு அருளிய ஈசன் இவர்களுக்கெல்லாம் அருளவில்லையா?

    பட்டினத்தார் பாடுகின்றார்

    கல்லா லெரியுண்டுங் காலா லுதையுண்டுங் காளைகையில்

    வில்லா லடியுண்டு முன்னாள் விடமுண்டு மேலிளித்துப்

    புல்லாற்  புறமெரி யேகம்ப வாணர் பதாம்புயத்தின்

    சொல்லார் செவியினிற் கேளா திருந்ததென் றொல்வினையை

    “மக்கள் சேவையை மகேசன் சேவை” என்று எத்தனை தவ முனிவர்கள் எடுத்துரைத்திருக்கின்றார்கள்.” ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது பக்தியின் இன்னொரு வடிவமில்லையா? – என்றெல்லாம் கேள்விகள் நம் மனத்தினில எழத்தான் செய்கின்றன.

    ஒரு சிறிய கதை நினைவுக்கு வருகின்றது. இறைவனிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒரு பக்தனின் வேண்டுதலுக்கு  இணங்கி இறைவன் அவருடைய வீட்டுக்கு உணவு அருந்துவதற்கு வருவதாக உறுதி  அளிக்கின்றான். பக்தனோ மேளதாளங்கள் முழங்க ஒரு பெரிய விருந்துக்கே ஏற்பாடு செய்கின்றான். பின்பு தன் வீட்டு வாசலில் இறைவனின் வருகைக்காகக் காத்திருக்கின்றான். ஆனால் இறைவன் வருவதாயில்லை. அங்கே ஒரு நாய் வாலைக்குழைத்துக்கொண்டு வந்து நிற்கின்றது. பக்தனோ அந்த நாயை விரட்டுகின்றான். மீண்டும் மீண்டும் அந்த நாய் அந்த இடத்தையே சுற்றி வருகின்றது. பொறுமையிழந்த பக்தன் ஒரு தடியால் அந்த நாயை மிரட்டி விரட்டுகின்றான். இறைவன் அங்கே வரவில்லை. இரவில் மனம் நொந்த பக்தன் இறைவனைச் சாடுகின்றான். கொடுத்த வாக்குப்படி நீ வரவில்லையேயென்று. இறைவன் சிரித்துக் கொண்டே கூறுகின்றான்.” நான் வந்திருந்தேன் உனக்குத் தான் தெரியவில்லை .. நான் நாயின் வடிவில் வந்திருந்தேன். நீயோ வேறெங்கேயோ தேடிக்கொண்டிருந்தாய் ” என்கிறார்.

    உலகின் எல்லா உயிரினங்களிலும் இறைவனின் ஆட்சி உள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

    சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனின் இந்தத் திருவிளையாடல்களை உணர்ந்தவராகிக் கூறுகின்றார் ” பலவுருவுந் தன்னுருவே யாய பெருமான்”

    .”காக்கை குருவி எங்கள் சாதி ..” என்று.பாடிய பாரதியின் சொற்கள் நினைவுக்கு வருகின்றன. அன்பின் வடிவமாக ஆட்சி செய்யும் ஈசன் அன்பிலே சிவமாக அவதரிக்கின்றான். இதை உணர்ந்து எல்லா  உயிரினங்களிடமும் நிபந்தனையில்லாத, எதிர்பார்ப்புக்கள் இல்லாத அன்பு செலுத்தும் பொழுது இறைவனின் அருளாட்சியை நம்மால் உணர முடிகின்றது.

    திருமூலர் கூறுகின்றார்

    அன்பினுள் ளான்புறத் தானுட ளாயுள்ளான்

    முன்பினுள் வான்முனி வர்க்கும் பிரானவன்

    அன்பினுள் ளாகிஅமரும் அரும்பொருள்

    அன்பினுள் வார்க்கே அணைதுணை யாமே

    எனவே எல்லா உயிரினங்களையும் இறைவனின் ஆட்சிக்குச் சான்றாகக் கருதி அனைத்தின்பாலும் அன்பெனும் அறத்தை கைப்பிடித்தால் அதுவே இறைவனை தரிசிப்பதற்கு இறைவனோடு இறவாடுவதற்கும் ஒரு வழியாக அமையும். “அன்பின் வழியது உயிர்நிலை” என்று வள்ளுவம் கூறியதை நினைவில் கொள்ளுதல் அவசியம். மாணிக்க வாசகரோ “அன்பில் விளைந்த ஆர் அமுதே” என்று இறைவனைப் போற்றி வணங்குகின்றார்

    உலக மக்களுக்கு அன்பின் வலிமையை எடுத்துரைக்க கபீர்தாஸ் கூறுகின்றார் “மூட்டை மூட்டையை நூல்களை படித்தும் பேரறிஞரானவர் எவருமில்லை அன்பு என்னும் இரண்டரை அட்சரங்களை படித்தவனைப் போல் அறிஞரைக் கண்டதில்லை “

    “அன்பே சிவம்” என்ற அறிய கருத்தினை நம் முன் வைக்கும் திருமூலர் ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றார்.

    அன்பு சிவம்இரண் டென்பர் அறிவிலார்

    அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்

    அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்

    அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

    (தொடருவோம் )

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே -4

    க. பாலசுப்பிரமணியன்

    பண்பான கல்விக்குப் பாதை எங்கே?

    வாழ்ந்து-பார்க்கலாமே-1-1

    அலைபேசியில் “வாட்ஸ் ஆப் ” மூலமாக வந்த அந்தச் செய்தியை பார்த்ததும் நான் ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிட்டேன். அமெரிக்காவில் வாழும் ஒரு இந்தியச் சிறுவனுக்கு ஒரு வினோதமான வியாதி. அவனுடைய எலும்புகள் வலுவிழந்து அடிக்கடி உடையும் நிலையில் உள்ளன. தன் சக்கர வண்டியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அந்தச் சிறுவன் தனக்கு 130 எலும்பு உடைப்புக்கள் வந்ததாகவும் ஒவ்வொன்றையும் வலுவான மனத்துடனும் நம்பிக்கையுடனும் பயமின்றி ஏற்றுக்கொண்டது மட்டுமின்றி வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பாடல் கற்றுக்கொண்டதாகவும் கூறினான். அவனுடைய தன்னம்பிக்கைக்கு நான் தலைதாழ்த்தி நின்றேன்.

    இங்கிலாந்தில் பிறந்த உலகப் புகழ் பெற்ற இயற்பியல், வானியல்  தத்துவ மேதை ஸ்டீபன் ஹாக்கிங் என்பவருக்கு 76 வயது நிரம்பியுள்ளது. தன்னுடைய உடலில் ஏற்பட்டுள்ள பலவிதமான உபாதைகளால் தன்னுடைய  சக்கர வண்டியில் முடக்கப்பட்டும் அவருடைய ஆராய்ச்சிகள் தடைப்படவில்லை. உலகமே வியக்கும் வண்ணம் பல வானியல் கண்டுபிடிப்புக்களை அளித்துள்ள அவர் கூறுவதென்ன?

    “வாழ்க்கை என்று ஒன்று இருக்கும் வரை நம்பிக்கை என்ற ஒன்றும் உண்டு” “எப்பொழுதும் வானிலுள்ள நட்சத்திரங்களைப் பாருங்கள், காலடியில் இருக்கும் மண்ணை அல்ல.”

    வாழ்க்கையில் பயத்தால் முடங்கிக்கிடந்தால் முன்னேற்றப் படிகளில் அடியெடுத்து வைக்க முடியாது. குழந்தைகளுக்கு பய உணர்ச்சியை ஊட்டி வளர்த்தால் அவர்களுடைய வாழ்க்கை ஒளியிழந்து போகும். பல இடங்களில் வீட்டில் குழந்தைகளைப் பாதுகாக்கும் எண்ணத்தில் அவர்களுக்கு உண்மையான வாழ்க்கையை இழக்கவைத்து விடுகின்றார்கள். குழந்தைகளுக்கு பாதுகாப்புக் கொடுத்து அவர்களைப் பேணுதல் மிக அவசியம். ஆனால் அவர்களை வாழ்க்கைப் பிரச்சனைகளிலிருந்தும், போராட்டங்களிலிருந்தும் கஷ்ட -நஷ்டங்களிலிருந்தும் விலக்கிவைத்து வெறும் பசுமையை மட்டும் காட்டிவந்தால் வாழ்க்கையின் வேனில் பருவத்தில் அவர்கள் துவண்டுவிட வாய்ப்புக்கள் உண்டு. இதைப் பல இடங்களில் நாம் பார்த்திருக்கின்றோம் .

    பயமில்லாத சூழ்நிலையில் குழந்தைகளை வளர்க்கவேண்டும் என்பது ஒரு வரவேற்கவேண்டிய கருத்து. ஆனால் அதே நேரத்தில் தவறுகளை உறுதி செய்யும் சூழ்நிலைகளிலும் வன்முறையை வலுப்படுத்தும் சூழ்நிலைகளிலும் குழந்தைகளை வளர்ப்பது அவர்களுடைய மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களிடம் வன்முறையைத் தூண்டிவிடவும் அதிக வாய்ப்புக்கள் உண்டு.

    கடந்த சில நாட்களில் பள்ளிகளில் நடந்த சில நிகழ்வுகள் நம்மை வேதனைப்பட வைத்துள்ளது மட்டுமின்றி வருங்காலத்தைப் பற்றிக் கவலைப்படவும் வைத்துள்ளன. பள்ளிக்கு விடுமுறை விடுவதற்கான வழியைத் தேடிய ஒரு 14 வயதுப்  பெண்குழந்தை அதே பள்ளியில் ஆரம்ப வகுப்பில் படிக்கின்ற குழந்தையின் கழுத்தை பள்ளிக் கழிவறையில் அறுத்துக் கொன்ற நிகழ்ச்சி. அரியானாவில் யமுனாநகரில் ஒரு தனியார் பள்ளி முதல்வர் மாணவனைக் கண்டித்ததற்காக அந்த மாணவன் தன்னுடைய தந்தையின் துப்பாக்கியை பள்ளிக்கு எடுத்துவந்து பள்ளி முதல்வரைச் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சி. சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் வகுப்பறையிலேயே ஒரு ஆசிரியையை மாணவன் கத்தியால் குத்திக் கொன்ற நிகழ்ச்சி. அடுக்கிக் கொண்டே போகலாம். காரணம்? சாதிக்கவேண்டும் என்ற வெறித்தனம், பொறாமை, இயலாமை, பொறுமையின்மை, தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியாத மன நிலை … இவ்வாறு வன்முறையில் வாழ்க்கையைக் கற்றுக்கொள்ளும் இளைய சமுதாயம் நாளை இந்த சமூகத்தில் அமைதியை எப்படி நிலை நாட்டும் ?

    அமைதியான பண்பான ஆனந்தமான வாழ்க்கையை உருவாக்க வேண்டிய இடத்தில் நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் ? ஒரு நண்பர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது  “அந்தப் பள்ளிக்கூடத்தில் எனது மகனைச் சேர்க்க வேண்டும் என்று நினைக்கின்றேன். அங்கே முதல் வகுப்பு முதற்கொண்டே மாணவர்களை ஐ ஐ டி மெடிக்கல் போன்ற தேர்வுகளுக்கான பாடங்களை சொல்லிக் கொடுக்கின்றார்களாமே ” என்கிறார். எனக்குச் சிரிப்பதா அல்லது அழுவதா என்று புரியவில்லை. அன்பையும், பண்பையும், மனித நேயத்தையும், தன்னம்பிக்கையையும் சமூக உணர்வுகளையும் வளர்க்க வேண்டிய இந்த நேரத்தில் ஏன் சில பெற்றோர்கள் இதுபோன்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ளுகின்றார்கள்? வாழ்க்கையில் வெற்றி பெற பல பாதைகள் இருக்கின்றன. எந்தப் பாதையை பின்பற்றினாலும் அதில் முன்னேறி சிறக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டுமே தவிர, அடுத்த வீட்டுக் குழந்தை இதை படிக்கின்றானே என்பதற்காக நமது குழந்தையின் விதியோடு நாம் விளையாடக்கூடாது. இதை ஆங்கிலத்தில் ஒரு மனிதன் “தானாக இருப்பதற்கும் – இன்னொருவனாக ஆவதற்கும்” உள்ள மிகப் பெரிய போராட்டம் என்று எடுத்துரைக்கின்றார்கள். (The Royal conflict between “Being” and “Becoming”)

    இந்த நிலையை மாற்ற நாம் என்ன செய்யவேண்டும்? சற்று யோசிக்கலாமே !

    (தொடருவோம் )

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 44

    க.பாலசுப்பிரமணியன்

    இறைவனை அடைய எந்த வழி சிறந்தது ?

    திருமூலர்-1-3

    பற்றற்ற நிலையை அடைய மனம் எவ்வளவோ துடிக்கின்றது. ஆனால் முடியவில்லையே. எவ்வளவோ முயற்சி செய்தும் ‘மனம் ஒரு குரங்கு’ என்ற மொழிக்கேற்ப நமது மனம் மீண்டும் மீண்டும் தேவையற்ற சிந்தனைகளில் அடைக்கலம் கொள்ளுவதேன்? இதை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்? மனதை ஒருநிலைப் படுத்த எந்த விதமான யோகத்தை அல்லது பயிற்சியை  நாம் பின்பற்றலாம்? மனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சிறந்த வழியென்ன? கீதையில் கண்ணன் கூறிய மூன்று வழிகளான – அறிவுப் பாதை (ஞான யோகம்)  செயல் பாதை (கர்ம யோகம்) மற்றும் பக்திப் பாதையில் சிறந்து எது? இப்படிப்பட்ட பல கேள்விகள் நம் மனதில் எழுகின்றன.

    இந்தக் கேள்விகளால் துயரத்தில் வீழ்ந்த பட்டினத்தாரோ இவ்வாறு சொல்லி வருந்துகின்றார் :

    வாயார வாழ்த்தி மகிழ்ந்துன்னைதான் போற்றாமல்

    காய மெடுத்துக் கலங்கினேன் பூரணமே.

    இதே துயர் நிலையை நாம் பத்திரகிரியாரிடமும் பார்க்கின்றோம்

    பலவிடத்தே மனதை பாயவிட்டுப் பாராமல்

    நிலவரையி னூடேபோய் நேர்படுவதெக்காலம் ?

    இவ்வாறு பலவிதமாக துயரப்பட்ட அடியார்களில் சிலர் ஞான மார்க்கத்தையும் சிலர் கர்ம யோகத்தையும் சிலர் பக்திப் பாதையைம் பின்பற்றி அந்தப் பேரறிவாளனை அறிந்துகொள்ள முயற்சி செய்துள்ளனர். எந்த முறையாக இருந்தாலும் சரி முழுவதுமாக அவனிடம் சரணடைந்து நம்முடைய ஆணவ மலத்தை விலக்கிநின்றால் அவனுடையதரிசனம் நிச்சயமாகக் கிடைக்கும். அவன்காட்டும் ஒளியும் நமக்குத் தென்படும்.

    திருமூலர் கூறுகின்றார் :

    காண்டற்கு அறியான் கருத்திலன் நந்தியும்

    தீண்டற்கு சார்தற்கும் சேயெனத் தோன்றிடும்

    வேண்டிக் கிடந்து விளக்கொளியான் நெஞ்சம்

    ஈண்டிக் கிடந்தது அங்கு இருள் அறும் ஆமே.

    ஒளிப்பிழம்பாய் உள்ளத்துள் வருகின்ற அந்த இறைவனை மனதில் ஏற்று உள்ளே  நிறுத்தி பக்தியுடன் போற்றினால் அவனுடைய அருளுக்குத்  தடையேது? அதனால்தான் அடியார்களெல்லாம் அவன் தங்களுடைய மனத்தை விட்டு விலகாத்திருக்கவும் அவன் அருள் புரிய வேண்டும் என்று வேண்டினர். இதே கோரிக்கையை திருநாவுக்கரசர் இறைவன் முன் வைக்கின்றார்‘

    புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா

    உன்அடி என்மனத்தே

    வழுவாதிருக்க வரம் தர வேண்டும்

    இவ்வையகத்தே.

    தன்னுடைய பதவி பொருள் அத்தனையும் ஒதுக்கித்த தள்ளி  ஊரார்கள் கேலிக்கு ஆளாகி இருந்தும் இறைவனை மட்டும் மனதில் நிறுத்தி அந்தப் பரவச நிலையில் தன்னையே மறந்த மாணிக்க வாசகர் கூறுவதென்ன?

    உத்தமன் அத்தன் உடையான்

    அடியே நினைந்து உருகி

    மத்த மனதோடு மால் இவன்

    என்ன மன நிலையில்

    ஒத்தன ஒத்தன சொல்லிட

    ஊர் ஊர் திரிந்து எவரும்

    தம் தம் மனத்தன பேச

    எஞ்ஞானறுகொல் சாவதுவே

    ஞான மார்கத்திலோ, பக்தி மார்கத்திலோ அல்லது கர்மவழியிலோ நம் சிந்தையை நிறுத்தி நாம் செயல்பட்டாலும் பல நேரங்களில் அறிந்து அறியாமலும் தவறுகள் செய்கின்றோம். ஆணவ மலத்தில் சிக்கி “நாம்” என்ற மாயையில் நமது சிந்தனையும் தவமும் சிதறிப் போகின்றது. ஆகவே, இதையெல்லாம் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கின்றானா? நமக்கு நியாயமும் அருளும் முழுதாகக் கிடைக்குமா ? அது எவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்கும் என்று மனம் சந்தேகிக்கின்றது. இதற்கு விடையளிப்பது போல் அமைந்துள்ளது திருநாவுக்கரசரின் கீழ்கண்ட பாடல்,

    தொழுது தூமலர் தூவி துதித்து நின்று

    அழுது காமுற்று அரற்றி நின்றாரையும்

    பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்

    எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே

    அவனுடைய அருள் நமக்குக் கோவிலில் கிடைக்குமா? குன்றத்திலே கிடைக்குமா? குளங்களில் நீராடி கொய்தமலர் தூவிப் போற்றிடவே கிடைக்குமா? ஊழ்வினையால் வறுமையில் அவதிப்படுவோருக்கு உதவுவதில் கிடைக்குமா? அத்தனையும் துறந்து காட்டிலே கண்மூடி அமர்ந்தால் கிடைக்குமா? தெளிவு வேண்டுமே .. எங்கு செல்ல?

    திருமூலர் எங்கெல்லாம் இறைவனைக் கண்டார்? இறைவன் அவருக்கு எப்படியெல்லாம் தரிசனம் தந்தான்? இதற்கு அவரே சொல்லும் பதில் நம்மை உண்மையில் சிந்திக்க வைக்கும்.

    பூதக்  கண்ணாடியில் புகுந்திலன் போதுளன்

    வேதக் கண்ணாடியில் வேறே வெளிப்படும்

    நீதிக்கண் நாடி நினைவார் மனத்துளன்

    கீதக் கண்ணாடியில் கேட்டு நின்றேனே

    (தொடருவோம்)

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே -3

    க. பாலசுப்பிரமணியன்

    பயம் – வாழ்க்கையின் வளர்ச்சிக்கு ஒரு முட்டுக்கட்டை

    வாழ்ந்து-பார்க்கலாமே-1

    ஒரு வீட்டில் நடந்த நிகழ்ச்சி. ஒரு தம்பதியருக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. பக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆரம்ப வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். பள்ளியில் எல்லாப் பாடங்களிலும் சிறப்பாகக் கற்றுக்கொண்டிருந்த குழந்தை சுற்றுப்புற சூழல் பற்றிய பாடத் திட்டத்தில் மட்டும் கவனமே இல்லாமலும் அதைப் பற்றிய எந்தப் பாடத்திலும் ஈடுபாடு இல்லாமலும் இருந்தது. அந்தக் குழந்தையின் தாய் என்னிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது “ஒரு வேளை இந்தப் பாடத்தை நடத்தும் ஆசிரியர் சரியாகச் சொல்லிக்கொடுக்காமல் இருக்கலாம். அல்லது குழந்தையைத் திட்டியிருக்கலாம். அதனால்தான் இந்தப் பாடத்தில் மட்டும் ஈடுபாடில்லாமல் இருக்கின்றது. நான் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் பேசலாம் என்று நினைக்கின்றேன் ” என்றார்கள் .

    “அவசரமாக எந்த முடிவுக்கும் நாம் வரக்கூடாது. இதற்கு நிச்சயமாக ஒரு காரணம் இருக்கலாம். அதை நாம் கவனித்துத்தான் செயல்பட வேண்டும்” என்று சொன்னேன். சிறிது நேரத்தில் அந்தக் குழந்தையுடன் உரையாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் “உன்னுடைய புத்தகங்களை நான் பார்க்கலாமா?” என்று நான் கேட்க அந்தக் குழந்தையும் தன்னுடைய புத்தகங்களை என்னிடத்தில் கொடுத்தாள்

    பேசிக்கொண்டே அவளுக்குப் பிடிக்காத புத்தகத்தை நான் திறந்ததும் என் கையை இழுத்துப் பிடித்துகொண்டு “அய்யய்யோ, உள்ளே திறக்காதீங்க. அங்கே ஒரு பெரிய பாம்பு இருக்கு ” என்றாள்.. எனது கேள்விக்கு விடை கிடைத்தது. உள்ளே இருக்கின்ற ஒரு படத்தைப் பார்த்து ஏற்பட்ட பயத்தில் அந்த விஷயத்தின் மீது முழுதாக வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

    பயம்…. மனித வளர்ச்சிக்கு ஒரு சாபக்கேடு .. நல்ல பல அறிஞர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் வாழ்க்கையில் பயம் என்ற உணர்வுடன் வளர்க்கப்பட்டதால் வாழ்க்கை முழுவதும் அதற்கு அடிமையாகி வாழ்க்கையில் முன்னேறாமல் இருந்ததற்கான பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

    பயம் – முன்னேற்றத்திற்கு ஒரு தடைக்கல். நம்மை அடுத்தபடிக்கு எடுத்துவைக்க முடியாமல் நமது நம்பிக்கையின் வேர்களை அழித்துவிடும்.

    பயம்-நம்முடைய திறனையும் நேர்மையையும் வல்லமையையும் நம்மைக்கொண்டே சந்தேகப்பட வைத்து இருட்டறையில் தள்ளிவிடும்

    பயம் – இது  தன் வாலை கூடாரத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட ஒட்டகம் எவ்வாறு சிறிது சிறிதாக முழுக்கூடாரத்தையும் தனதாக்கிக் கொண்டதோ அதுபோல் சிறிது சிறிதாக மற்ற உள்ளுணர்வுகளைத் தாக்கி நம்மை நம்மிடமிருந்து விலக்கிவிடும் .

    வளரும் பருவத்தில் குழந்தைகளின் மனதில் பயத்தின் வித்துக்களை விதைப்பது முட்டாள்தனமான செயல். “கடவுள் கண்ணைக்குத்தி விடுவார்” என்றும் “முருங்கை மரத்தில் பேய் இருக்கின்றது” என்றும் சில  பயத்தைத் தூண்டுவிக்கக் கூடிய வார்த்தைகளால் அவர்களுடைய தைரியத்தையும் தன்னம்பிக்கையும் பாழ்படுத்தக் கூடாது. மாறாகச் செய்கின்ற செயல்களில் எது சரி எது தவறு என்ற நிலைப்பாட்டை அறிவுப்பூர்வமாக அறிந்து கொள்ள உதவ வேண்டும். தவறுகள் செய்வதால் நம்முடைய  தரத்தை நாமே குறைத்துக்கொள்கின்றோம் என்ற கருத்தை முன்வைத்து நாம் செய்கின்ற தவறால் எவ்வாறு நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் துயரமும் தீங்கும் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன என்ற சிந்தனையை உருவாக்குதல் அவசியம்.

    அதேப் போன்று “கணக்கு கற்றுக்கொள்ளுவது மிகக் கடினம். அதற்கெல்லாம் மூளை வேண்டும். அதுதான் உன்னிடம் கிடையாதே” என்று கேவலமான தன்னம்பிக்கையை வீழ்த்தும் வாசகங்களை அள்ளிவீசி அவர்களுடைய இயலாமைக்கு உரமிடுதல் தவறான செயல். அது வீட்டிலானாலும் சரி, பள்ளிகளிலானாலும் சரி, .. இந்தத் தவறான பார்வைகளை விட்டு ” உன்னால் முடியும் தம்பி… ” என்ற நம்பிக்கையை ஊக்குவித்தல் அவசியம்.

    உள்ளுண்ட பயத்தால் மனநோயாளிகளாகி  தங்கள் வாழ்வின் முழுப் பலனை அடையாதவர்களையும், வாழ்வில் வேண்டுமென்றே முன்னேற மறுப்பவர்களை நான் கண்கூடாகக் கண்டிருக்கின்றேன். வேதனையான நேரங்கள் அவை,

    பயமின்மை என்பது அடாவடித்தனம் அல்ல. பயமின்மை என்பது வெறித்தனம் அல்ல. பயமின்மை என்பது ஆணவ ஆதிக்கப் போக்கு அல்ல. பயமின்மை என்பது தேவைக்குத் தகுந்தவாறு தோள்வலிமையையும் ஆய்த அரவணைப்பையும் ஏற்பது அல்ல.  பயமின்மை என்பது தவறுகளுக்குத் துணை போவது அல்ல. அது நல்லறிவின் ஆணித்தரமமான வெளிப்பாடு. அது அறிவின் முதிர்ச்சிக்கு வழிகாட்டி. அது நம்முடைய தன்னம்பிக்கையின் தன்மானத்தின் அடையாள அட்டை.  புத்தரிடம் பயம் இல்லை. மகாத்மா காந்தியிடம் பயமில்லை. நெல்சன் மண்டேலாவிடம் பயமில்லை. ஆப்ரஹாம் லிங்கனிடமும், மார்ட்டின் லூத்தரிடமும், திருப்பூர் குமரனிடமும் பயமில்லை. அவர்கள் எடுத்துக்கொண்ட செயல்களில் துணிவையே துணையாகக் கொண்டிருந்தனர்.

    வாழ்ந்து பார்ப்பதற்கு நமக்கு பயமின்மை தேவை. ஆங்கிலக் கவிஞர் ஷேக்ஸ்பியர் தன்னுடைய ஒரு நூலில் கூறுகின்றார் “கோழைகள் ஒரு நாளைக்கு எத்தனையோ முறைகள் மரணமடைகின்றார்கள். வீரனுக்கு ஒரு முறைதான் மரணமுண்டு” நமக்கு எதற்கு வம்பு என்று பயந்து ஒதுங்கி இருப்பவர்களில் பலர் தங்கள் இயலாமைக்கு அடிப்படையாக பயம் என்ற உணர்வை வித்திடுகின்றனர்.

    `ஒன்றை மட்டும் நாம் உணர வேண்டும். பயம் என்பது நமது மனதிற்கு வெளியிருந்து வருவதல்ல. அதன் நம்முடைய மனதிலே உருவான ஒரு உணர்வே.  அதை நம்மைத் தவிர யாரால் வெல்ல முடியும்? நம்முடைய குழந்தைகளின் மனதில் பயத்தின் வித்தை விதைத்து அவர்கள் வாழ்க்கைக்கு நாம் ஏன் முட்டுக்கட்டை போட வேண்டும்?

    வாழ்ந்து பார்க்கலாமே.. பயத்தை சற்றே ஓரங்கட்டிவிட்டு….

    (தொடருவோம் )

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி) – 29

    க.பாலசுப்பிரமணியன்

     

    திருப்புலியூர் – அருள்மிகு மாயபிரான் திருக்கோவில்

     

    images (3)

    மார்கழிக் காலையிலே மனதெல்லாம் நீயிருக்க

    ஊர்வழிச் சாலையிலே உன்புகழைப் பாடிச்செல்ல

    ஊழ்வழி வந்தவினை உனைக்கண்டே ஒதுங்கிவிட

    பூவிழி மணாளனே புவிக்காக்க வந்திடுவாய் !

     

    சூடிக்கொடுத்த சுடர்க்கொடியைச் சொந்தமெனே ஏற்றவனே

    சூதுகொண்ட கௌரவரைக் குலத்தோடு அழித்தவனே

    சூதின்றித் தூணினிலும் துரும்பினிலும் இருப்பவனே

    சூதுடைய எண்ணங்களைச் சுட்டெரிக்கும் வல்லவனே

     

    நாடிவரும் நல்லவர்க்கு நாள்தோறும் அருள்பவனே

    பாடிவந்த பாசுரங்கள் பரவசமாய்க் கேட்பவனே

    பாவையிலே கோதையின் உள்ளத்தை உணர்ந்தவனே

    பாவையர்கள் நோன்பிற்குப் பலனாகி நிற்பவனே

     

    தாள்பணிந்த பீமனுக்கு அருள்செய்த மாயவனே

    தவமுனிகள் தானத்தை ஏற்றிடவே மறுத்துவிட

    தவறறியா மன்னவனும் அரக்கனையே ஏவிவிட

    தவத்தோரைக் காத்த தன்னிகரில்லாத தயாளா !

     

    நேசமுடன் உனைப்பாடி நாள்கழித்தேன் மார்கழியை

    வாசமுள்ள மலராக நெஞ்சிருந்து மலர்ந்திருந்தாய்

    பாசமுள்ள தாய்த்தமிழில் பாடிவந்தேன் புகழனைத்தும்

    தேசங்கள் நூற்றெட்டும் நினைவினில் சுழன்றிடவே !

     

    ஆழ்வார்கள் உள்ளத்தில் அருட்கனியாய் பழுத்தவனே

    ஆண்டாளின் இசைகேட்டு அனுதினமும் எழுந்தவனே

    காசினியில் உனைப்போலக் கருணையைக் கண்டதில்லை

    காத்தருள்வாய் அரங்கத்தானே அலைமகளின் அருள்சேர்த்து !

     

    (நிறைவு)

     

     

     

     

     

     

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி) – 28

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருக்கண்டமென்னும் கடிநகர் (தேவப்ரயாகை)

    images (1)

    பத்துத்தலை கொய்த பாவம் நீங்கிடவே

    பக்தியுடன் இரகுவரனும் தவம் செய்தான்

    பார்காக்கும் பரந்தாமன் பாதங்கள் போற்றிடவே

    பார்துறந்த சங்கரனும் ஆலயத்தை அமைத்தான்!

     

    அங்கமெல்லாம் தூய்மையுடன் அமைதியாய் அலகானந்தா

    பங்கமின்றி பாய்ந்துவரும் பனிமலையிருந்து  பாகீரதி

    சங்கமமாய் சரஸ்வதியும் சேர்ந்துவிடும் சத்தமின்றி

    தங்கிடவே தேவர்களும் தேடிவரும் தேவப்பிரயாகை !

     

    ஆலிலையில் படுத்து  வந்தாய் ஊழ்ப்பெருக்கில்

    ஆலிலையில் வாசம் கொண்டாயே  ஆனந்தனே

    ஆகமங்கள் ஏதுமில்லை அரவணைத்தால் போதும்

    ஆருயிர்கள் காப்பவனே அயோத்தியின் ரகுராமா !

     

    காவிரிக்கரையினிலே  கால்நீட்டி படுத்தாயே அமரேசா

    களிப்புடனே யமுனைக்கரையில் காலாற நடந்தாயே

    கருணையுடன் ஏழுமலை நின்றவனே கார்மேகா

    கடமைக்கென தேர்முனையில் சாரதியான சீதரனே !

     

    பாதங்கள் பட்டவுடன் அகலிகைக்கு விமோசனமே

    பாதங்கள் பார்த்தவுடன் அனுமனுக்கோ பரவசமே

    பாதுகைகள் அரசாள பரதனுக்கோ ஆனந்தமே

    பாதங்களை போற்றிடவே பாடலிலே தேடுகின்றேன் !

     

    பனிமலையில் வாழுமுன்னை நினைத்தாலே போதும்

    பனித்துளியாய் உருகிவிடும் பக்கம்வரும் துயரெல்லாம் !

    கனியுண்ட களிப்பாக  மனமெல்லாம் மகிழ்வுறுமே

    இனிதான உன்பெயரை ஒருமுறையே சொல்லிடவே !

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி) – 27

    க. பாலசுப்பிரமணியன்

    திருக்காட்கரை

    vaithamanidhi-perumal-temple

    அருள்மிகு காட்கரையப்ப பெருமாள் கோவில்

     

    முப்புரி நூலோடும்  மூன்றடி உயரத்தோடும்

    முன்மழித்த சடையும் மழைக்காக்கும் குடையும்

    முன்செல்லும் அறமும் முடிவில்லா அருளும்

    முன்னிருக்க அளந்தாயே மூவுலகும் வாமனனே !

     

    வாமனனாய் வந்தவனே வானெல்லாம் அளந்தவனே

    வாழையெல்லாம் வீழ்ந்திடவே வாழ்விழந்த மக்களுக்கு

    வாழ்வளித்தாயே வளமான தங்கவண்ண வாழைதந்து

    வாழியவே! வேங்கடவா வருந்துயரைக் காப்பவனே !

     

    மலைநாட்டில் குடிகொண்ட மாதவனே மாயவனே

    மடைதிறந்த வெள்ளமென அருள்சுரக்கும் அச்சுதனே

    மனம்கட்டும் கோவில்களில் மறக்காமல்  இருப்பவனே

    மகுடங்கள் தேவையில்லை மலர்ப்பாதம் போதுமய்யா !

     

    மண்ணுண்ட வாயினில் அண்டங்கள் காட்டினாய்

    மனமயர்ந்த பார்த்தனுக்கோ மூவுலகும் காட்டினாய்

    மன்றத்திலே கௌரவர்க்கோ வானுயர்ந்து நின்றாய்

    மாயவனே தூயவனே மனமெல்லாம் நிற்பவனே !

     

    ஒருபருக்கை உண்டவுடன் பசிதீர்த்தாய் பலருக்கு

    ஒருபிடியை உண்டதுமே விடைகொடுத்தாய் வறுமைக்கு

    ஒருபழத்தைத் தந்தவுடன் அருள்தந்தாய் சபரிக்கு

    ஒருமுறை அழைத்ததும் ஓடிவந்தாய் ஆதிமூலமே !

     

    கரைகாணாத் துயர்நீக்கக் கைகொடுக்கும் காட்கரையப்பா

    கலையான வாழ்விற்குக் கருத்தான மலையப்பா !

    நிலையில்லா உணர்வெல்லாம் எனைவாட்டும் நேரத்தில்

    சிலையாக நில்லாமல் சீக்கிரமே வருவாயோ ?

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி) – 26

    க. பாலசுப்பிரமணியன்

    திருப்புளியன்குடி

    images

    அருள்மிகு காசினிவேந்தர் பெருமாள் திருக்கோவில் (கள்ளபிரான் திருக்கோவில்)

    பார்போற்றும் வேதங்களைப்  பிரம்மனும் இழந்துவிடப்

    பதுக்கிவைத்த  சோமகனைப் பிடித்தவனே பாண்டுரங்கா !

    பாற்கடலும் வைகுந்தமும் விட்டுவந்தாய் புவினோக்கி

    படைத்தாயே பூவுலகில் புதியதோர் வைகுந்தமே !

     

    கறந்திடவே பாலனைத்தும் கண்மறைவில் பசுவொன்றும்

    கலங்கிட்ட மன்னவனும் களம்காண வந்திடவே

    கண்மறைவில் காலமெல்லாம் வாழ்ந்தவனே வைகுந்தா

    கள்ளனன்றோ கார்மேகா கனிந்துவந்தாய் காட்சிதர !

     

    கள்வனென்ற பெயரெடுத்தாய் வெண்ணையுண்டு கோகுலத்தில்

    கள்ளபிரான் பெயர்கொண்டாய் கள்வனின் உடைதன்னில்

    கள்ளத்தனம் எத்தனையோ கோபியர்கள் கூட்டத்தினில்

    கள்ளமனம் ஏதுமின்றி கருணைசெய்வாய் என்னிடத்தில் !

     

    கோலாட்ட போதையிலே நிலைமறைந்த கோபியரின்

    போராட்ட மனத்தினிலே தேரோட்டம் விட்டவனே  !

    மாறாட்டம் செய்யாமல் ஆடினாயே அனைவரோடும்

    பாராட்ட வார்த்தையில்லை பரமாத்மா நீயன்றோ !

     

    சரணமென்று வந்தவுடன் சங்கடங்கள் தீர்ப்பவனே

    மரணமென்ற பயத்தினையே மனதிலிருந்து நீக்கிடுவாய்

    கரணமிடும் வாழ்கையைக்  கலக்கமின்றி மாற்றிடுவாய்

    சரணமென்றே வந்துவிட்டேன் சந்நிதியே திறந்திடுவாய் !

     

    ஓரடியை முன்வைத்தால் ஓடிவரும் பரந்தாமா

    ஈரடியை வைத்தவுடன் ஈகையுள்ளம் கொள்பவனே

    மூவடியால் உலகளந்து முக்திதந்த முகுந்தா

    நாலடியில் உனைப்பாட நற்கதியே தந்திடுவாய் !

     

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 43

    க. பாலசுப்பிரமணியன்

    பற்றற்ற நிலைக்கு எப்படிச் செல்வது?

    திருமூலர்

    எல்லா உறவுகளையும் விலக்கிவிட்டு இறைவனோடு சிந்தனையால் ஒன்றாகி இருப்பது என்பது விரும்பத்தக்க ஒன்றுதான். ஆனால் ஒரு குடும்பத்தில் ஒரு சமூகத்தில் அங்கத்தினராக இருக்கின்ற நாம் எவ்வாறு அனைத்தையும் துறந்து வாழமுடியும்? உலகம் என்பது அனைத்து மக்களோடும் சேர்ந்து இருப்பது தானே என்ற எண்ணம் நமக்குள் எழுகின்றது. எல்லோராலும் உண்மையான துறவு என்ற நிலைக்குச் செல்லமுடியாது. அதற்கான அவசியமும் இல்லை. இறைவனை உணருவதற்கு நாம் இந்த சமூகத்தில் அங்கத்தினராக இருப்பதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், இந்த உறவுகளுக்குள் ஏற்படும் பற்றுக்களை ஆசாபாசங்களை நாம் அறிந்து கொண்டு அவைகளுக்கு அடிமையாகாமல் இருப்பது அவசியம். உறவுகள் அன்பை வளர்க்கவும் செய்யும். ஆனால் அதே உறவில் அளவற்ற பற்று வைத்துவிட்டால் அதுவே துன்பத்திற்கு அடிப்படையாக அமையவும் வாய்ப்புக்கள் உண்டு. அதனால்தான் முன்காலத்தில் நமது பெரியோர்கள் “தாமரையிலைத் தண்ணீர் போல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார்கள்.

    இந்த சம்சார வலைக்குள் விழுந்து துயரப்பட்ட பட்டினத்தாரோ இவ்வாறு புலம்புகின்றார்:

    மெய்வாழ்வை நம்பி விரும்பிமிக வாழாமல்

    பொய்வாழ்வை நம்பிப் புலம்பினேன் பூரணமே

     பெண்டுபிள்ளை தந்தைதாய் பிறவியுடன் சுற்றமிவை

    உண்டென்று நம்பி யுடலழிந்தேன் பூரணமே

    உறவு என்னும் பந்தத்தில் இருந்து ஆசைக்கு அடிமையாகி பிறப்பு-இறப்பு என்னும் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு படுகின்ற துயரை தனக்கே உரிய பாணியில் மாணிக்கவாசகர் கூறுகின்றார்

    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

    மெய்யே உன் பொன்னடிக் கண்டின்று வீடுற்றேன்

    இந்தத் துயரை நாம் வள்ளலாரிடமும் காண்கின்றோம்.

    தாயா ரிருந்தென்ன தந்தையு மிருந்தென்ன

    தான்பிறவி யுறவு கோடி

    தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன

    தாரணியை யாண்டுமென்ன …

    …,,,,,,,,,,,,,,

    யார் மீது உன்மன மிருந்தாலு முன்கடைக்

    கண்பார்வை யது போதுமே…

    இதனை அறிந்தபின்பும் கூட நாம் வாழ்க்கை என்ற மாயச்சக்கரத்தில் விழுந்து ‘எனக்கு இது வேண்டும் அது வேண்டும்” என்றும் “இது இல்லாமல் நான் எப்படி உயிர் வாழ்வது’ என்பது போன்ற தவறான கருத்துக்களை வாழ்க்கைக்கு முதலீடாக்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.  இதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது திருமூலரின் ப்பாடல்

    மனத்தில் எழுந்ததோர் மாயக்கண்ணாடி

    நினைப்பின் அதனில் நிழலையும் காணார்

    வினைப்பயன் போக விளக்கியும் கொள்ளார்

    புறக்கடை இச்சித்து போகின்ற வாறே

    மனப் பக்குவம் அடையாதவருக்கு நமது மனம் ஒரு மாயக்கண்ணாடியாகத் தான் விளங்கும். இந்த மாயையை அறிந்துகொள்வதும், அதன் நிழலிலிருந்தும் விடுபட்டிருப்பதும்தான் வாழ்க்கையின் சீரிய நோக்கம்

    இந்த உடல் சார்ந்த, உள்ளம் சார்ந்த, உறவு சார்ந்த  மாயப் பற்றினை அறிந்திட   முயற்சித்தல் மிக்க அவசியம். பற்றற்றவர்களாகத் திரிந்த ஞானியர்கள் யோகிகள் இந்தக் கருத்தைப் பின்பற்றியது மட்டுமின்றி அதே குறிக்கோளுடன் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு இருந்த ஒரே பற்று இறைவனின் திருவடி ஒன்றுதான். இதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்

    பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்

    கற்றற் றவர்கற்றுக் கருதிய கண்ணுதல்

    சுற்றற் றவர்சுற்றி நின்றாய் சோதியைப்

    பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரன்றே

    இந்தப் பற்றற்ற நிலையை அடைவதற்கு அந்த இறைவனின் தாள்களையே சரணடைய வேண்டும். இந்தக் கருத்தை வள்ளுவரும் அழகாக வலியுறுத்துகின்றார்

    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

    பற்றுக பற்று விடற்கு

    ஆனால் நிஜ வாழ்க்கையில் பலர் பற்றற்றவர்கள் போல் நடித்து உள்ளத்தில் பற்றுக்களை பேணிக்கொண்டும் வளர்த்துக்கொண்டும் வருகின்றனர். இதைவிடக் கொடிய செயல் ஒன்றுமில்லை என்பது வள்ளுவர் கருத்து

    நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

    வாழ்வாரின் வன்கணா ரில்

    பற்றற்ற நிலையை அடைவதற்கு இறைவன் அருள் தேவைப்படுகின்றது. ஆனால் இறைவனிடம் நம்பி சரணடைந்தால் நமக்கு அவனுடைய பரவச நிலையின் அடையாளம் தெரிகின்றது. அந்தப் பரவச நிலையை நம்மிடையே மாணிக்க வாசகர் தெளிவாக்குகின்றார்

    வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத்

    தனிச்சிறிதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை

    எனைப்பெரிதும் ஆட்கொண்டென் பிறப்பறுத்த இணையிலியை

    அனைத்துலகத் தொழுந்தில்லை  அம்பலத்தே கண்டனே …

    (தொடருவோம்)

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி) – 25

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருக்குளந்தை

    அருள்மிகு மாயக்கூத்தர் திருக்கோவில்

    26219293_1732776533440727_6333504764046447991_n

     

    அச்சமின்றி ஆடினாயே தக்கத்திமி தாளமிட்டு

    அச்சமானின் ஆணவத்தை மிச்சமின்றி அழித்துவிட்டு

    அச்சுதனே !  மாயவனே ! மாதவனே !மாயக்கூத்தனே !

    அச்சமெல்லாம் நீங்கிடுதே ஆதிமூலா என்றழைக்க !!

     

    வேங்கடனாய் நின்றகோலம் நினைவிருக்கும் முக்காலம்

    வேண்டிவரும் அடியார்கள் விழைகின்ற அருட்கோலம்

    வேதரசன் திருமகளும் விரும்பியழைத்த திருக்கோலம்

    வேதவனின் திருமார்பில் கௌஸ்துபத்தின் விழாக்கோலம் !

     

    பெருங்குளத்தில் பேரழகாய் நின்றவனே பெருமாளே

    வருந்துயரை வருமுன்னே விலக்கிடுவாய் வாசுதேவா !

    கருமங்கள் அனைத்தையுமே காலடியில் சமர்பித்தேன்

    தருமங்கள் முன்னிறுத்தி தந்திடுவாய் நல்வாழ்வை !

     

    காலையிலே உனைக்கண்டால் கவலையெல்லாம் தீர்ந்திடுமே

    மாலையிலே உனைக்கண்டால் மனமென்றும் மகிழ்ந்திடுமே

    போதையன்றோ உன்காட்சி புவனமெல்லாம் உன்அரசாட்சி !

    பாதையெல்லாம் துணைவந்தால் ஆனந்தத்தின் அருளாட்சி !!

     

    நாளெதற்கு கோளெதற்கு நானுன்னைப்  பார்ப்பதற்கு ?

    நடுநிசியும் நண்பகலும் நல்லுறவை வளர்த்திடுமோ ?

    நாலுவேதமும் நாலாயிரமும் போற்றிடவே போதிடுமோ?

    நன்நெஞ்சில் உனைவைத்தால் நல்விருந்தாய் வாராயோ ?

     

    பாலோடு தேன்சேர்த்துப் பன்னீரால் நீராட்டி

    பாயசத்தைப் பருகிடவே நானுன்னை வேண்டேன் !

    பானகத்தை படைத்தவுடன் பசிதீர்ந்து நிற்பவனே

    பாற்கடலை விட்டுடனே பறந்தோடி வருவாயோ ?

     

    Share