மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி) – 25
க. பாலசுப்பிரமணியன்
திருக்குளந்தை
அருள்மிகு மாயக்கூத்தர் திருக்கோவில்
அச்சமின்றி ஆடினாயே தக்கத்திமி தாளமிட்டு
அச்சமானின் ஆணவத்தை மிச்சமின்றி அழித்துவிட்டு
அச்சுதனே ! மாயவனே ! மாதவனே !மாயக்கூத்தனே !
அச்சமெல்லாம் நீங்கிடுதே ஆதிமூலா என்றழைக்க !!
வேங்கடனாய் நின்றகோலம் நினைவிருக்கும் முக்காலம்
வேண்டிவரும் அடியார்கள் விழைகின்ற அருட்கோலம்
வேதரசன் திருமகளும் விரும்பியழைத்த திருக்கோலம்
வேதவனின் திருமார்பில் கௌஸ்துபத்தின் விழாக்கோலம் !
பெருங்குளத்தில் பேரழகாய் நின்றவனே பெருமாளே
வருந்துயரை வருமுன்னே விலக்கிடுவாய் வாசுதேவா !
கருமங்கள் அனைத்தையுமே காலடியில் சமர்பித்தேன்
தருமங்கள் முன்னிறுத்தி தந்திடுவாய் நல்வாழ்வை !
காலையிலே உனைக்கண்டால் கவலையெல்லாம் தீர்ந்திடுமே
மாலையிலே உனைக்கண்டால் மனமென்றும் மகிழ்ந்திடுமே
போதையன்றோ உன்காட்சி புவனமெல்லாம் உன்அரசாட்சி !
பாதையெல்லாம் துணைவந்தால் ஆனந்தத்தின் அருளாட்சி !!
நாளெதற்கு கோளெதற்கு நானுன்னைப் பார்ப்பதற்கு ?
நடுநிசியும் நண்பகலும் நல்லுறவை வளர்த்திடுமோ ?
நாலுவேதமும் நாலாயிரமும் போற்றிடவே போதிடுமோ?
நன்நெஞ்சில் உனைவைத்தால் நல்விருந்தாய் வாராயோ ?
பாலோடு தேன்சேர்த்துப் பன்னீரால் நீராட்டி
பாயசத்தைப் பருகிடவே நானுன்னை வேண்டேன் !
பானகத்தை படைத்தவுடன் பசிதீர்ந்து நிற்பவனே
பாற்கடலை விட்டுடனே பறந்தோடி வருவாயோ ?