Tag: சு. ரவி

  • அரவிந்தப் பொய்கையாக்கு!

    சு.ரவிGandhiji   28 June 09 2
    Sri Arabindo 2
    வணக்கம் வாழியநலம்

     

    தேசத்தந்தைக்கும், ஆகஸ்ட் 15ஆம் தேதி அவதரித்த

    சுதந்திரவீரர் மஹான் அரவிந்தருக்கும் ( மஹான் அரவிந்தரோடு

    பிறந்தநாள் கொண்டாடும்) அடியேனின் சிறு காணிக்கை..

    பார்க்க, ரசிக்க….

    “மோகத்  திரைவிலக்கி  மோனப்  புனலமிழ்த்தி

    யோகச்  சுடரெனக்குள்  ஏற்றிவிடு –  போகம்

    தருமிந்த  வாழ்வை  நெறிப்படுத்தி  நெஞ்சை

    அரவிந்தப் பொய்கையாக் கு!

    Share
  • அம்மையும் அப்பனும்

    சு.ரவி
    வணக்கம் வாழியநலம்

    திருவாரூர்த் திருத்தலத்தின்  “ஆலம்கொண்டாரும், உமாதேவியும் கோட்டோவியங்களாக…

    பார்க்க,ரசிக்க…

    சு.ரவி
    Aalam kondaar Thiruvaaruur
    UmaDevi Thiruvaaruur
    Share
  • பங்கஜ வல்லித் தாயார்

     

    சு. ரவி

     

    வணக்கம், வாழியநலம்

    திருவெள்ளரைத் திருத்தலத்தின் பங்கஜ வல்லித் தாயார்

    கோட்டோவியமாக…

    பார்க்க, ரசிக்க…

     

    PankajaVallith Thaayaaar

    Share
  • காவியா & ஓவியா

    சு.ரவி

    வணக்கம், வாழியநலம்.

    சற்றே இடைவெளி.

    தூரிகை என்ற காரிகை  யோடு
    இணைபிரி யாமல் இழைந்த நாட்கள்.
    வண்ணங் களே என் எண்ணங் களாக
    வார்த்தைகள் இன்றி வாழ்ந்த தினங்கள்
    திடீரென் றொருதினம்,திரும்பிப் பார்த்தால்,
    கவிதைக் காதலி காத்திருந் தென்னிடம்
    கண்ணீ   ரோடு நியாயம் கேட்கிறாள்!

    “எதுகை, மோனை, சீர்,தளை, தொடை என
    எத்தனை அணிகள் பூட்டிநான் மிளிர்ந்தேன்!
    வெண்பா, விருத்தம்,, வித வித சந்தம்
    எனப்பல வடிவொடு வனப்புடன் ஒளிர்ந்தேன்!

    என்னொடு களித்த இனிய தினங்களை
    மறந்திடப் போமோ? மறுபடி எனை நீ
    மருவிட வாரா திருத்தல் தகுமோ?”

    கவிதைக் காதலி பெருக்கிய கண்ணீர்
    நெஞ்சில்  நெருப்பாய்ச் சுட்ட(து;)அதுமுதல்,
    வண்ணம், வடிவம், வரைதல் மறந்து
    கவிதாயி னியைக் கலந்து  மகிழ்ந்தேன்.
    மாதங்கள் நீண்ட காதங்க ளாயின!

    ஒருநாள் காலை உலவச் செல்கையில்,
    நீளப் பரந்த நீல வானத்தில்,
    பனித்துளி உறங்கும் பசும்புல் நுனியில்,
    மரங்கள் விரித்த மரகதப் பச்சையில்,
    பூக்கள்  சிரிக்கும் புதுவண்ணத்தில்
    ஓவியப் பெண்ணாள் ஒயிலாய் அழைக்கிறாள்!

    இத்தனை நாட்கள் இவளை மறந்து
    எப்படி இருந்தேன்?   ஈசா, இனிநான்
    ஒருநா  ளேனும்  ஓவியா இன்றி
    உறங்கிட மாட்டேன் என்றொரு துணிபுடன்
    விடுவிடு வென்று  வீடு திரும்பி
    தூரிகையா லொரு காகிதப் பரப்பில்
    கோடுகள், வளைவுகள் வண்ணங்களென்று
    ஓவிய உழவனாய், உழைக்கப் புகுந்தேன்

    எனக்குள் இருந்து ஒலித்தது ஒருகுரல்:

    ” உனக்குள் இருப்பது ஒருபராசக்தி.
    ஓருபோ தவளே ஓவிய மானாள்.
    எண்ணங்களெல்லாம் வண்ணங்களாக
    அவளே அண்டம் நிறைந்தாள்; அவள்தான்
    உன்விழியானாள்; உன்விரல் வழியே
    உருப் பெறும் ஒவ்வொரு ஓவியத்துள்ளும்
    கருக் கொண்டு யிர்த்தாள்; அவளே மறுநாள்

    கலகல வென்று  கவிதையாய்ச் சிரித்தாள்!
    சிந்தனை என்ற ஆலயத்  துள்ளே
    மொழியெனும் பீடத் தமர்வாள்; வழிபடும்
    கவிதைப் பித்தர்தம் கணகளில் சரேலென்
    நொடிப் பொழு தளவில் மின்னலாய்த் தெரிவாள்
    எழுத்தும், வார்த்தையும் கழுத்தி லணிந்து
    அறிவெனும் மகுடமும், உணர்வெனும் ஆடையும்
    புனைந்து புதுப் புதுக் காவிய மென்னும்
    வாகனம் ஏறி வலம்வந்  திடுவாள்
    அருவியின் வீழ்ச்சியாய், அழகிய ஓடையாய்
    கட்டற்    றோடும்  காட்டாறு வெள்ளமாய்
    அமைதித் தென்றலாய் , அழிக்கும் புயலாய்
    எத்தனை வடிவெடுத் தாலும் உள்ளுறும்
    அனுபவமாவதும், , வெளிப்படும் கவிதையாய்
    யுகம்பல கடந்தும், படிப்பவர் நெஞ்சில்
    பரவசத் தீயைப் பற்ற வைப்பதும்
    பரா சக்தியின் செயலே உணர்வாய்!”

    ஓவியமாவதும் காவியமாவதும்
    உள்ளுறு சக்தியென் றுணர்ந்து மகிழ்ந்தேன்!

    இணைப்பு: பேலூர்- நாட்டிய சரஸ்வதி சாந்தலா தேவி
    பார்க்க, படிக்க, ரசிக்க…
     
    Share
  • கரி உரி போர்த்தபிரான்

     

    -சு.ரவி

     

     

    வணக்கம், வாழியநலம்

    சிதம்அரம் கீழ்க்கோபுர வாயிலருகில் உள்ள கஜசம்ஹாரமூர்த்தி

    என்னும் கரி உரி போர்த்த பிரான் திரு உருவம். அருகில் ஐயனின்

    உக்கிரம்ம்கண்டு அஞ்சி, குழந்தை முருகனை இறுகப் பற்றி விலகிச் செல்லும் உமையவள்..

    பார்க்க, ரசிக்க…

    Share
  • சம்பு நடம்பயிலும் தருணம்

     

    -சு.ரவி

    ஸ்ப்தஸ்வரங்கள் உடன் உதயம்..

    விரிசடை முகிலென வான்மேல் பரவிட

    பொறியுறு நுதலிடை எரியழல் நடமிட

    ஏழுலகங்களும் தூளி பறந்திட

    பூத கணங்களின் கோஷ மெழுந்திட

    கங்கை குலுங்கிட, தண்மதி உருகிட

    அங்கை எழுந்தொரு செந்தழல் ஆடிட

    கைத்தா மரையினில் டம டம டம வென

    வைத்தொரு டமருகம் இடியென ஒலிதர

    சிந்தை மயங்கும் நந்திம்ருதங்கம்

    மேளம், தாளம், பஞ்சமுகம், பறை

    கொட்டும் இடக்கை குமுறும் உடுக்கை

    சிவமே லயமாய், சிவமே ஸ்ருதியாய்

    விசை நடனம் தரும் இசை வடிவம்.

    சம்பு நடம்பயிலும் தருணம்

    ஸ்ப்தஸ்வங்கள் உடன் உதயம்.

     

    பார்க்க, படிக்க, ரசிக்க…

    Share
  • மதுரையம்பதியில் கால்மாற்றி ஆடும் நடராஜப் பெருமான்

    சு.ரவி

    வணக்கம், வாழியநலம்,

    பாண்டிய மன்னனுக்காக, மதுரையம்பதியில் கால்மாற்றி, வலதுகால் தூக்கி ஆடும்

    நடராஜப் பெருமான்

    பார்க்க, படிக்க, ரசிக்க….

    ஆலவாய் அழகா, ஈசா!

    ஆடலுக் கரசே!கையில்

    சூலமும் தழலும் ஏந்தும்

    சுந்தரா!அகிலம் வாழ

    ஆலமுண் டமர்ந்த தேவா!

    அடியவர் உயிரைக் காத்துக்

    காலனைக் கடிந்தாய் அன்று!

    கழலிணை பணிந்தேன் இன்று!

    வானுயர்   மதில்கள் சூழும்

    மதுரையின் வேந்தே!கையில்

    மானொடு மழுவும் தாங்கி

    மன்றினில் ஆடும் ஈசா!

    மீன்விழி  மங்கை நேசா!

    ம்ருத்யுவை உதைத்த பாதா!

    நானுனை வேண்டிக் கொள்வேன்

    நலமெலாம் பொழிந்து காப்பாய்

    அமரரும் அஞ்சும் நேரம்

    அஞ்சலென் றபயம் தந்தோய்!

    டமருகம் கையில் தாங்கித்

    தாண்டவம் ஆடும் தேவா!

    நமனணு  காமல் அன்று

    நம்பியைக் காத்தாய்! மீனாள்

    உமையொரு பாகா, காப்பாய்!

    உனதடி சரணம் ஐயா!

    வைகையின் அலைகள் சூழும்

    வளமிகு மதுரை ஆளும்

    மைவிழி மீனாள் மேவும்

    மன்னனே, சொக்க நாதா!

    கையினால் பாசம் வீசும்

    காலனிங் கணுகா  வண்ணம்

    செய்கைகள் ஓயும் போது

    சடுதியில் காப்பாய் அப்பா!

    வலதுகால் தூக்கி ஆடும்

    வண்ணமே! வார்சடைமேல்

    நிலவொடு கங்கை பொங்க

    நிர்த்தனம் செய்யும் தேவா!

    புலனெலாம் ஒடுங்கும் நேரம்

    புகல் எமக் காரும் இல்லை!

    நலம் காக்க வேண்டும் உனையே

    நம்பினோம் அம்மையப்பா!!

     

    Share
  • இன்னும் மாயை இருக்கிறது

     

    -சு.ரவி

     

    இன்னும் மாயை இருக்கிறது- அது

    என்னில் என்னை மறைக்கிறது!

    மின்னல் கீற்றாய் மெய்யுணர்(வு) அந்தோ!

    எப்பொழுதாகிலும் ஸ்புரிக்கிறது.                           ( இன்னும்)

     

    புலன் உணர்வெல்லாம் பொய்மைஎன்றே ஒரு

    பொறிபறந்தாற்போல் புரிகிறது;

    நிலத்தில் இவ்வாழ்வும் நிலைகிடையாதெனும்

    நிச்சய உண்மை தெரிகிறது- மனம்

    சிலபோதேனோ இனிப்பை அவாவும்

    சிறுமதலை போல் அலைகிறது-உடல்

    பலமிழந்தோய்ந்தால் பயந்து நடுங்கிப்

    பரிதவித்தேங்கிக் குலைகிறது!                            ( இன்னும்)

     

    ‘மனநிறை(வு) என்பதோர் மாரீசம் – அது

    மயக்கி இழுத்துனைச் செயும் மோசம்

    இனம் குலம் என்பவை வெளிவேஷம் “- என

    இன்னும் பலப்பல கதை பேசும்= உடன்

    தனயன், தாய், மனை இவர் முகம் பார்த்திடில்

    தயங்கும், தடுக்கும், தவறி விழும்!

    கனவும் நனவும் கடந்த பின்னாலும்

    கணப்பொழுதாசையில் கவிழ்ந்து விடும்!  ( இன்னும்)

     

    விண்ணியல் கண்டு தெளிந்தாலும்- மறை

    ஓதிய பண்டிதன் ஆனாலும்

    எண்ணிய மட்டினில் ‘யான்’ ,‘என(து)’ எனும் இவை

    எங்கோ பாதலம் ஆழ்த்திவிடும்

    திண்ணிய நெஞ்சுரம் வைராக்யம் இவை

    திரும்பவும் இடிந்து பொடியாகும்

    நுண்ணிய நூலிழைதான் பாசம்- அது

    நோற்ற தவங்களை விலைபேசும்            ( இன்னும்)

     

     

    ஓட்டம் இதற்கோர் இலக்கில்லை

    ஓடாதிருக்க விலக்கில்லை

    ஓட்டுவ தாரோ, ஓடுவ தேனோ

    ஓடும் எவர்க்கும் தெரிவதில்லை

    ஓட்டம் முடிந்தபின் ஓடு கழன்றால்

    ஓய்வுண்டோ எனில் அதுவுமிலை

    ஓட்டத்தின் ஊடே ஓராயிரம் தடை!

    ஓட்டத்தில் நாட்டம் குறையவில்லை    ( இன்னும்)

     

    Share
  • கண்ணன்-பீஷ்மர் சந்திப்பு

    சு.ரவி

    வணக்கம்,வாழியநலம்,

    மஹாபாரத யுத்தகளத்தில் கண்ணன் ஆயுதமேந்தி வரும் தருணமும், காட்சியும் என்னை மிகவும் ஈர்த்த்வை.

    பகவானுடைய சபதமும், பாகவதனுடைய சபதமும் உரசிப் பார்த்த உணர்ச்சிகரமான சம்பவம்.

    யுத்தகளத்தில் “கறங்கு போல விற்பிடித்து காலதூதனா”க நின்ற பிதாமஹர் பீஷ்மரின் விறலுக்கு முன்னே

    அர்ஜுனன் உட்பட எவராலும் எதிர்நிற்க முடியாதபோது, கண்ணன் ஆயுதமேந்தமாட்டேன் என்ற தன் சபதத்தை

    மீறி சக்கரப்படையோடு களமிறங்குகிறான். யுத்தகளத்தின் புழுதி படிந்தமேனியும், காற்றினாலும், ஓடிவரும்

    வேகத்தினாலும் குலைந்து பறக்கும் பீதாம்பரமும், மாலையும், முகத்தில் மட்டும் பீஷ்மருக்கருளும் கனிவான

    பார்வையுமாக வருகின்ற கண்ணனை பயத்துடனும், கலக்கத்துடனும் கால்களைக் கட்டித்தடுக்கும்

    அர்ஜுனனும், கைவில்லையும், படைக்கலன்களையும் கீழே போட்டு, கண்ணன் கையால் முக்தி ஏற்கத் தயாராக

    வரவேற்றுத் தேர்த்தட்டில் நிற்கும் பீஷ்மரையும் சித்தரிக்கும் இஸ்கான் ஓவியம் என்னை மிகவும் கவர்ந்த

    ஒன்றாகும்.

    இதனைப் பெரிய அளவில் எண்ணெய் வண்ண ஓவியமாக வரையும் முன்னே, ‘Net practice” போல

    முயற்சி செய்த Poster Colour painting இணைப்பாக…

     

    பார்க்க, படிக்க,ரசிக்க….

    கண்ணனும், பீஷ்மரும்..

    பாரதப் போரில் அன்று

    பாண்டவர் சேனை எல்லாம்

    வேரறு மரங்கள் போலே

    வீழ்ந்தனர்; வீரன் பார்த்தன்

    கூர்முனைச் சரங்கள் தைக்கக்

    குருதியில் நனைந்துவிட்டான்.

    மாரதன் பீஷ்மன் ஆங்கே

    மறலியாய்க் களத்தில் நின்றான்

    எதிர்ப்பவர் எவரும் உண்டோ

    எனக்கெதிர் போரில் என்று

    முதியதோர் சிங்கம் போலே

    முழங்கிடும் பீஷ்மன் முன்னே

    விதிக்கொரு விதியைச் செய்யும்

    வித்தகக் கண்ணன் கீழே

    குதித்தனன்;  பீஷ்மன் நெஞ்சைக

    குறித்தனன் புயலைப் போலே!

    எத்தனை பழிவந்  தாலும்

    ஏற்கலாம், பக்தன் வாக்கு

    பொய்த்திடக் கூடா தென்ற

    பெரியதோர் நோக்கம் கொண்டு

    அத்தனை பேரும் பார்க்க

    “ஆயுதம் ஏந்தேன்”  என்ற

    சத்தியம் காற்றில் விட்டான்

    சக்கரப் படையைத் தொட்டான்!

    “யாதவா, வருக! வேத

    நாயகா, வருக! வேணு

    மாதவா, வருக! செங்கண்

    மாலவா, வருக! வாழ்வின்

    கேதமே போக்கிக் காக்கும்

    கேசவா, வருக! ஜீவ

    நாதமே, வருக! எந்தன்

    நாரணா, வருக,வருக!

    அடியனைக் கொல்வதற்கோ

    ஆயுதம் ஏந்தி வந்தாய்!

    நெடிதுயர் மாலே,  இந்தா

    நேயமாய் என்னைத் தந்தேன்!

    நொடியிலே ஏற்றுக் கொண்டு

    நோயெனும் பிறவி தீர்ப்பாய்!

    அடிமலர் சரணம் கண்ணா!

    ஆட்கொள்ள வேண்டும்” என்றான்!

    Share
  • வைகாசி அனுஷம்- பவ சங்கர தேசிக மே சரணம்!

    -சு.ரவி

     

    வணக்கம் வாழியநலம்!

    சென்ற 25ஆம் தேதி வைகாசி அனுஷம்.

    காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்த ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி மஹாஸ்வாமிகளுடைய ஜயந்தி தினம்.

     

    ஆதிசங்கரரின் மறுஅவதாரம், அன்னை காமாக்ஷியே குரு உருவில் புரிந்த அனுக்ரஹம், நமது காஞ்சி மாநகரின் பாக்கியம் என்று பலகோடி மாந்தர் மதித்துப் பணியும் ஸ்ரீமஹாஸ்வாமிகளுடைய  பாதகமலங்களுக்கு நமஸ்காரங்கள்.

    “ஜகத்குரு” என்ற அடைமொழிக்கு, ” இந்த ஜகமே எனக்கு குரு” என்று விளக்கமளித்த எளிமை.

    பீடமேறிய தனது ஆரம்பநாட்களில் ஒருபயணத்தின் போது, ஆற்றங்கரையில், பொய்பேசிய தன் 6 வயதுத் தம்பியைத் திருத்தும் முகமாக, சத்தியத்தின் உயர்வு பற்றி எந்த வேதமும், உபநிஷத்துக்களும், புராணங்களும் சொல்லியதை விடஅற்புதமாகவும், எளிமையாகவும் விளக்கிய 8 வயது குடியானவச் சிறுமியைத் தனது குருமார்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டதாக ஒப்புக்கொண்ட நேர்மை;

    ஆன்மபரிசுத்தி எனும் அக்னியில் புடம்போட்டு ஞானக் கனலாகவும், கருணைப் புனலாகவும் விளங்கிய  மேன்மை;

    பாரத தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தமது திருவடி தோயத் தோய நடந்து விஜயம் செய்து இந்துமதத்தின் உயிர்மூச்சை, உள்ளுறை ஒளியை அணையாது காத்துக் கொடுத்த மஹான், தமது விஜயங்களின் போது “மேனா” வின் பின் நடந்து செல்லும் காட்சி

    இந்த மஹான் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற நினைப்பே நம்மைப் புனிதமாக்கிவிடும்.

     

    கருணையே வடிவான அன்னையும், கண்டித்து வழிநடத்தும் தந்தையும், தானே முன்னுதாரணமாய் நடந்து காட்டி உபதேசிக்கும் குருவும் ஒரு வடிவாய் வந்துதித்த பேரருளாளரின் ஆழ்ந்த தியானக் கோலம்.

    ஐந்து சுடர்களுக்கு நடுவே ஒருகால் ஊன்றித் தவம் செய்யும் அன்னை காமாக்ஷியும், காமகோடி பீடத்தை அலங்கரிக்கும் காஞ்சிமாமுனிவரும் வேறு வேறல்ல என உணர்த்தும் தவக்கோலம். (தற்செயலாக ஒரு அடியவருக்குக் கிடைத்த தரிசனம் இது).

    ஸ்ரீ மஹாஸ்வாமிகள் வாழ்க்கையில் நடந்த பலசம்பவங்கள் ஒரு குரு எப்படி இருப்பார் என்பதை நமக்கு உணர்த்த வல்லவை.

    நான் கேட்டறிந்த ஒரு நிகழ்ச்சி.

    திண்டிவனத்துக்கு அருகே ஆலக்கிராமம் என்றஒரு சிறு கிராமம். அங்கு ஸ்வாமிகள் செல்லும் போது பிற்பகல் ஆகிவிட்டிருந்தது.

    சிலநாட்களாகப் பெய்து வந்த கடும் மழை காரணமாக, வீடு, வாசல், பொருட் சேதமடைந்து துயருற்ற ஏழைக் குடியானவ ஜனங்கள் ஸ்வாமிகளைத் தரிசிக்கக் கூட்டமாக வந்திருந்தனர்.ஸ்வாமிகள் அம் மக்களுக்கு மடத்தின் சார்பாக உதவும்நோக்குடன் உடனிருந்த மடத்து நிர்வாகியிடம் அவர்களுக்கு வேட்டி, துண்டு, சேலைகள் வழங்க ஏற்பாடு செய்யக் கூறினார்.

    முகாம் வந்த இடத்தில் மடத்தின் கைவசம் ஸ்டாக் இல்லாததால் திண்டிவனம் சென்றுதான் வாங்கி வரவேண்டும். பெய்துகொண்டிருந்த மழைகாரணமாகப் போதுமான துணிமணிகள் வாங்கிவரத் தாமதமாகிவிட்டது. பின்னர் அவற்றைக் குடியானவர்களுக்கு ஸ்வாமிகள் தமது திருக்கரங்களால் வழங்கி முடிக்கும்போதுமாலைப்பொழுது சாய்ந்து இரவு ஆகிவிட்டது. மனநிறைவோடு எழுந்த ஸ்வாமிகளிடம் நிர்வாகி,

    ” ஆனால் பெரியவாளுக்கு சந்திரமௌளீஸ்வரர் பூஜைக்குத்தான் நேரமாயிடுத்து” என்றார்.

    அவரை ஏறிட்டு நோக்கிய ஸ்வாமிகளோ “சந்திரமௌளீஸ்வரர் பூஜை முடிஞ்சாச்சு” எனச் சொல்லிவிட்டு உள்ளேசென்றார்.

    நம்மைக் கரையேற்றுவதற்காகத் தாம் தவவாழ்வு வாழ்ந்த மஹான் கரைஏறிவரும் காட்சியும்,

    உண்மையான சந்திரமௌளீஸ்வரர் பூஜை எது என உணர்த்தியவர் பூஜை செய்யும் கோலமும்,

    யோகிராஜராக, ருத்ராக்ஷ கிரீடத்துடன் நிற்கின்ற தரிசனமும்..

     

    கோட்டோவியங்களாக…

     

    ஒரு கருத்தை விளக்கி உபதேசிப்பதில் ஸ்ரீமஹாஸ்வாமிகள் தனித்து ப்ரகாசித்தார்.நான் படித்த இரண்டு உதாரணங்கள்:

    1. அம்பாளுடைய லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்பாளுக்கு ‘அபர்ணா’ என்றொரு நாமம்.  வழக்கமாக இந்த நாமத்திற்கு ‘ கடும்தவம் செய்கையில் இலைகளைக் கூடச் சாப்பிடாமல் தவமிருப்பவள்’ என்றுபொருள் கொள்வர்.

    ஸ்ரீ மஹாஸ்வாமிகளோ, ” தவம் செய்கையில் இலைகளற்ற கொடிபோல் காட்சி தருபவள்” என்று அற்புத விளக்கம் அளித்தார்.

     

    2. ஸ்ரீ ராமானுஜர் வரலாற்றில், சைவம் தழுவிய சோழமன்னனின் கட்டளைக்காக, ஸ்ரீ. ராமானுஜருக்குப் பதிலாக மன்னனைச் சந்தித்த அவரது சீடர் ஸ்ரீ கூரத்தாழ்வார் பற்றிய நிகழ்ச்சி. மன்னன் “சிவாத் பரதரம் நாஸ்தி ( சிவத்திற்கு மேல் ஏதுமில்லை)” என்றெழுதிய ஓலையில்  பரம வைணவரான அவரைக் கையெழுத்திடுமாறு பணிக்க, அவர் அவ்வோலையில்

    ” அஸ்தி த்ரோணம் அதஃபரம்” என்றெழுதி கையொப்பம்  இட்டார். “சிவம்” என்பது சிவனைக் குறிப்பதல்லாமல் ‘ஆழாக்கு போல ஒரு முகக்கும் அளவையும் குறிக்கும். ஸ்ரீ கூரத்தார் அதை சிலேடையாக்கி  அதை விட ‘த்ரோணம்’ என்ற முகக்கும் கருவி பெரியது எனப் பொருள்படும் வாக்கியத்தை எழுதினார் என்பர்.

    ஸ்ரீமஹாஸ்வாமிகள் ” சோழமன்னன் எந்த நோக்கத்தோடு சிவனுக்கு மேல் ஒன்றுமில்லை என கூரத்தாழ்வானை ஒப்புக் கொள்ளக் கட்டாயப் படுத்தினானோ- ஆனால் மஹா ஞானியும், பண்டிதனும், பாகவதனும் ஆன கூரத்தாழவான் வேடிக்கைக்காகக்கூட சிவ தூஷணை தவனிக்கப் பதில் அளித்திருக்க மாட்டார். எனவே இதற்கு வேறு பொருள் இருக்கவேண்டும் எனத்தோன்றியது.

    சிவலிங்கத்தை அலங்கரிக்கும் போது, அதன் உச்சியில் விலவ இலைகளிச் சூடுவர். ஆம், “த்ரோணம்” என்றால் வில்வம் என்றும் பொருள்படும்.    ” சிவனுக்கு மேலே ஒன்றுமில்லை” என்பதற்குப் பரம பாகவதனான கூரத்தாழ்வார் ” அதற்கு மேலே வில்வம் இருக்கிறது” என்று பொருள்படத்தான்மாற்றுரைதிருப்பார்”  என்று விளக்கி உள்ளார்.

     

    மஹான்கள் பார்வையே தனி.

     

    அவர்கள் பூஜை செய்யும் போது அந்த அந்த மந்திரங்களின் அதிதேவதைகள் நேர்வந்து அவற்றை ஏற்கும்.

     

    அன்னாரது ஜயந்தியை ஒட்டி, அடியேனது கோட்டோவியங்களை என் காணிக்கையாக்குகிறேன்!

     

    ” பவ சங்கர தேசிக மேசரணம்! “

    Share
  • ஐயப்பன் கீர்த்தனைகள்-கேட்க,ரசிக்க…

    -சு.ரவி

    வணக்கம், வாழியநலம்,

    ஒரு மாறுதலுக்கு இம்முறை ஒலிவெளிப் பயணம்.

    ( ஓவியத்தை விட்டுக்கொடுக்கமுடியாமல், என்னை ஆட்கொண்ட சபரிகிரீசன், நெய்ப்பிரியனின் ஓவியம் பார்க்க, ரசிக்க..)

    என் சபரிமலைப் பயணங்களை இசைப்பயணங்களாக மாற்றியதில் பெரும்பங்கு

    என்நண்பன் V.K நாராயணனையே சாரும்.

    1980- 2000 களில் சபரிமலைப்பயணங்களின் போது, வழிநடையில் நாராயணனின் ராக ஆலாபனைகளைத் தொடர்ந்த இசைப்பாடல்களாகவோ, என்னில் உதித்த பாடல்களின் இசைவடிவங்களாகவோ உருவெடுத்த பாடல்கள் இவை.

    பலவருடங்களுக்கு முன் ஒரு மதியப்பொழுதில் என் இல்லத்தில் ஒரு MONO டேப் ரெகார்டரில் சுருதிப்பெட்டியுடன் நாராயணனின் குரலில் பதிவு செய்யப்பட்ட பாடல்களை வலைத்தளத்தில் ஏற்றி, அந்த இணைப்பைக் கீழே தருகிறேன்.

    http://archive.org/details/Su.raviIyyappanKeerththanaikal

    3 Track களில் உள்ள இந்தப் பாடல்களைப் பற்றிய சிறு குறிப்புகள் வருமாறு:

    ( பத்துப் பாடல்கள் உள்ளதால், பாடல்களின் முழுவரிவடிவங்களுக்குப் பதில்

    இவை உருவான பின்னணிகளிப் பற்றிய குறிப்புகளை மட்டும் தருகிறேன்)

     

    1. என்மனம் ஆனந்தக் கூத்தாடுதே- கமாஸ் ராகம்:

    பெரிய குருஸ்வாமி திருச்சியில் இருந்ததால் கட்டுநிறை திருச்சியில்.

    ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸில் திருச்சிக்குச் செல்லும் போது கமாஸ் ராகத்தில்

    நாராயணன் ஆரம்பித்த பல்லவி விழுப்புரம் வருவதற்குள் நிறைவு செய்யப்பட்டு இசைவடிவமும் பெற்றது.

    சரணத்தில் வரும் சூசித ராகமுத்திரைக்கு ( சுகமா சுகமா என) inspiration கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானாமோகனாம்பாள் நாவலில் வரும் ‘கமாஸ்’ கிட்டாவையர் சொல்லும் dialog.

     

    2. மழைச்சாரல் வரவேற்குது- அம்ருதவர்ஷிணி ராகம்

    சபரி மலையிலிருந்து திரும்பும் வழியில் வேனில் அச்சங்கோவில் செல்கிறோம்.இயற்கைஎழில்கொஞ்சும்

    வனப்பகுயதியில், அச்சங்கோவில் மலை மீது வேன் செல்லும்போது பூந்தூரலாக மழை பன்னீர் தெளிக்கின்றது.

    பஞ்சுப் பொதிகளாக மேகங்கள் தவழ்கின்றன. நாராயணனின் உற்சாகக் குரலில் அம்ருதவர்ஷிணி ராகம் பீறிட்டுவர

    பாடல் பிறந்து சன்னிதானம் சேர்வதற்குள் நிறைவடைகிறது, வன் புலியேறும் ராவுத்தனுக்குக்.காணிக்கையாக!

     

    3.’உனைக் காணும் வரை கண்கள் மூடாது- ஷண்முகப்ரியா ராகம்

    மற்றுமோர் ஜனவரி மாதம் சபரிமலைப் பயணம். சென்னையிலிருந்து வேன் ஒன்றில் நாங்கள் 12 ஐயப்பன்மார் திருச்சிக்குப் போய்க்கொண்டிருந்தோம். நள்ளிரவு. பாடல்கள் ஓய்ந்து அவரவர் கண்ணயரும் தருணம்.ஓட்டுனருக்கு அருகில் உறங்காமல் மௌனமாக நான்.

    பின்ஸீட்டிலிருந்து ஓர் ஐயப்பன் ” என்ன, சு.ர. தூங்கிட்டியா” என்று குரலெழுப்ப, அவருக்கு விடையாக ஷண்முகப்ரியாவில் எழுந்த பதில்.

    சரணத்தில் ‘நினைப் பாட’ என்ற வரிகளை ஒவ்வொரு சரண முடிவிலும் நிரவல் செய்து பாடுமாறு அமையப்பெற்றபாடல்.

     

    4. சரீர வீணை தன்னிலும் சங்கீதம் கேட்குது-அமீர்கல்யாணி ராகம்

    1987/88 வருடம் என்று நினைவு. எண்ணூர்ஃபவுண்டரி நிறுவனத்தில் பணி. ஒருநாள்காலை 8:00 மணிக்கு நணபன் க.ரவி தொலைபேசியில் அழைத்தான்.

    ” சு.ர, ‘அமரத்வனி- 2’ கேஸட்- ஐயப்பன் மீது- இன்று ஒலிப்பதிவு- நணபன் K.S ராஜகோபால் பாட, என் இசையில் சங்கீதா நிறுவனம் தயாரிக்கிறது. 9: 30 க்கு மறுபடி அழைக்கிறேன்.நீ ஒரு பாடல் தயார் செய்து தா”

    அமீர் கல்யாணியில் அப்போது உருவான பாடல்.

    பாடலை முழுவதும் ஃபோனில் கேட்ட க.ரவி, பாடலின் இறுதியில் அமைந்த சந்தப் பகுதியைப் பாடுவது கடினமாக இருக்கும் எனக்கருதி வேறு பாடலைக் கேட்க, தர்பாரி கானடாவில் ” பூதமைந்தும்” என்ற பாடலை அளித்தேன்.

    கேஸட்டில் இடம் பெறாவிடினும், நாராயணனின் குரலில் எங்கள் ஐயப்பன் பஜனைகளில் இப்பாடல் இடம் பெறும்.

     

    5.வானவர் போற்றிட- பூர்விகல்யாணி ராகம்

    கர்நாடக சங்கீதம்(வீணை) பயில்கையில், கீர்த்தனைகள் கற்றுக்கொள்ள ஆரம்பித்த காலகட்டம். நாராயணனை ராக அலாபனை செய்யச்

    சொல்லி நான் பயணத்தின் போது உருவாக்கிய முதல் கீர்த்தனை. இப்பாடலிலும், இதனை அடுத்து உருவாக்கிய தோடி ராகக்

    கீர்த்தனையிலும் பல்லவி, அநுபல்லவி, மத்யமகாலம், சரணங்கள், மத்யம காலம் என்ற ஃபார்மேட்டில், ‘குருதாஸ’ எனற

    முத்திரையும், ராகமுத்திரையும் அமைந்துள்ளன.

     

    6. உனையொருகணம் நினைவதும்- மலயமாருதம் ராகம்

    தரிசனம் முடித்து, மலையிலிருந்து திரும்புகிறோம். நண்பன் க.ரவி ” பாடல் தொட்டுத்திறக்குமா நுழைவாயிற் கதவங்கள்”

    என்ற கவிதையை ஆசுகவியாகப் பொழிந்தான். சுகமாக வீசிய மலயமாருதமும், கவிதையும், ஐயனின் தரிசன அனுபவமும் உள்ளுருக்க, மலயமாருதத்தில் உருவான பாடல். 99% குறில்களால் அமைந்த பாடல்.

     

    7. அஹங்காரத்திரை அறுபடுமோ- சுப பந்துவராளி ராகம்

    மஹனீயர் தியாகைய்யரின் ‘தெரதீயகராதா’ கீர்த்தனை கொடுத்த உந்துதல் இந்த சுபபந்துவராளி.

    சரணத்தில் வரும் கருத்துக்கு Inspiration கவிமணி மொழிபெயர்த்த உமர்கய்யாம் வரிகள்

    ” அங்கவ் வயனும் இருக்க ஒட்டான்”-

    அங்கே பிரமனும் இருக்க விடமாட்டான் – இங்கே யமனும் தங்க விடமாட்டான்” என்கிற யதார்த்த உண்மை.

    நாராயணன் ஒரு சுபபந்துவராளி ஸ்பெஷலிஸ்ட்- செம்மங்குடி மாமாவின் ‘ஸ்ரீ சத்ய நாராயணம்:” வழி…

     

    8. நெஞ்செலாம் நின் ராஜ்யம்- ரஞ்சனி ராகம்

    பாடலின் இறுதியில் வரும் சிட்டை ஸ்வரம் நாராயணனின் கற்பனை. ‘ரஞசனி’, நாராயணனுக்கு மிகவும்

    நெருக்கமான ராகம். இதில் திருமதி.ரஞ்சனிநாராயணனுக்கு விருப்பம்தான்!

     

    9. தவத்தில் நிலைத்த தயைவடிவம்- சிந்துபைரவி ராகம்

    அந்த வருடப் பயணத்தில் எங்களுடன் என் லேலண்லட் தோழன் கிருஷ்ணன் சேர்ந்து கொண்டான்.

    (T.K.S. சகோதரர்களில் இரண்டாவது சகோதரர் திரு. டி.கே. முத்துஸ்வாமி அவர்களின் இரண்டாவதுமகன் கிருஷ்ணன். அற்புதமான குரல்வளம் – இவனுக்காக, அந்த கால ஹிந்தி, தமிழ்ப்படப் பாடல்களின் மெட்டில் இயற்றிக்கொடுத்த ஸ்வாமி பாடல்கள் பல. எங்களுடன் ஒருமுறையே மலைக்கு வந்த கிருஷ்ணன் இன்று மறைந்துவிட்டான்).

    எருமேலியில், ஒரு கீர்த்தனை எப்படி உருவாகிறது என்ற அவன் கேள்விக்கு விடையாக, நாராயணன் பாட, சிந்துபைரவியில் உருவான கீர்த்தனை.

    ( இதே பயணத்தில் திரும்பும் போது, கிருஷ்ணன் ‘ஹரிவராஸனம்’ HUM செய்ய, அதே மெட்டில் “விரியும் வானெலாம்’ பாடல் பிறந்தது வேறு அனுபவம்)

     

    10. நினைத்ததுமே மெய்சிலிர்க்குதையா- ரீதிகௌள ராகம்

    நாராயணன், க.ரவி ஆகியோருடன் கட்டுநிறைக்காகத் திருச்சிக்கு ராக்ஃபோர்ட்டில் இரவுப் பயணம்.

    எங்களை மிகவும் ஈர்த்த ரீதி கௌள ராகத்தில், நாராயணன் இந்தப் பாடலின் ஆரம்ப வரிகளைப் பாட

    க.ரவியும், சு.ரவியும் மாறி,மாறி ஆளுக்கொரு வரி எனப் பாடி நிறைவு செய்த பாடலிது.

    ( இதன் தொடர்ச்சி ஒரிஜினல் கேஸட்டின் மறுபகுதிக்குப் போய் விட்டதால், நான் பிற்பாடு Up-Load செய்ய இருக்கும்

    இழையில் கேட்கலாம்)

    Share
  • புத்த பூர்ணிமா

    சு.ரவி

    வணக்கம், வாழியநலம்

     

    நேற்றைய முழுநிலா வடமாநிலங்களில் புத்த பூர்ணிமாவாகக் குறிக்கப் பட்டுள்ளது.

     

    அன்பு, அறம், அஹிம்ஸை, அவா அறுத்தல் என எளிமையும், வலிமையும் நிறைந்த

    வழிமுறைகளைப் போதித்த மஹான்!

     

    சித்தார்த்தன் புத்தராகப் பரிணாமம் பெற்றது இந்த பாரத மண்ணிலே எனினும், இவர் தூவிய விதைகள்

    பரவிச் செழித்ததென்னவோ கிழக்காசிய நாடுகளிலே!

     

    (புத்தரையும், இந்துமதம் தனது கடவுளின் அவதாரங்களில் ஒன்றாக உள்வாங்கி விழுங்கிவிட்டதோ!)

     

    அமைதிதவழும் புத்தரின் சாந்தமுகம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று!

     

    வண்ணப்படமாக இணைப்பில்..

     

    பார்க்க, ரசிக்க

     

     

    Share
  • சின்னஞ் சிறிய உன் சிந்தைக்குள்ளே…

     

    -சு.ரவி

     

    “சின்னஞ் சிறிய உன் சிந்தைக்குள்ளே

    என்னென்ன கனவுகள் நிகழ்கின்றவோ!

     

    அன்னை அணைத் துன்னைக் கொஞ்சினளோ-அவள்

    ஆசைமுகம் அங்கே தோன்றியதோ

    பின்னணி யாயவள் தீங்குரலில்-ஒரு

    பாடலும் காதினில் கேட்கின்றதோ

     

    வண்ணங்கள் நாட்டியம் ஆடினவோ-ஏழு

    ஸ்வரங்களும் வானவில் ஆயினவோ

    கண்ணனும், கந்தனும் உன்னுடனே- உன்]

    கனவினிலே விளையாடினரோ

     

    கண்ணிமை மூடியுன் கையினிலே-பட்டுக்

    கன்னம் அழுந்திடத் தூங்குகிறாய்

    வண்ண ரோஜாஇதழ் மொட்டினைப்போல்-செப்பு

    வாயைச் சுழித்து உறங்குகிறாய்

     

    கண்மணியே உந்தன் சொப்பனத்தில்-நீ

    காண்பதெல்லாம் இங்கே தீட்டிவிட

    வண்ணமில்லை, ஒரு வார்த்தையில்லை-இதை

    ரசிப்பதல்லாதொரு வாழ்க்கையில்லை!”

     

    Share
  • நரஸிம்ஹ ஜயந்தி

     

    சு.ரவி

    இன்று(24.5.2013) நரஸிம்ஹ ஜயந்தி!

     

    தமிழ் இலக்கிய உலகம் மறக்க முடியாத சிங்கங்கள் என திரு கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் குறிப்பிடுவார்:

    ஒன்று- “மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடந்துறங்கி… மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டெழுந்த” சிம்மம்- ஆண்டாள் பாடியது.

    மற்றது, கம்பன் வாக்கிலே “ககன முட்டை, கிளர்ந்து கீழும், மேலுமாய்க் கிழிபடத்”தோன்றியது.

    திருவரங்கத்தில் கம்பராமாயண அரங்கேற்றத்தின்போது,கம்பனின் வாக்கிற்குப் பிரமாணமாக மேட்டழகிய சிங்கரி கருவறையிலிருந்து “ சிரித்தது செங்கட் சீயம்”.

    நரசிம்மன் என்னை மறுபடியும் தன்னை வரையத் தூண்டினான்.

    இம்முறை சோளிங்கரில் கோயில் கொண்டமர்ந்த யோக நரசிம்மர்.

    “உன்னை வரைவதற்கும் நீயே கைகொடுப்பாய் நரசிம்மா!”

    ” லக்ஷ்மீந்ருஸிம்ஹ, மமதேஹி கராவலம்பம்!”

     

    பார்க்க, படிக்க, ரசிக்க….

    வார்த்தை பிளக்கும் நரசிம்மம்

    அவன் வேதங்கள் மீட்டுக் கொடுக்க ஆழ்கடல் தோன்றிய ஒருமத்ஸ்யம்!

    அவனே      பாற்கடல்  கடையும்  நேரம்  வடவரை  தாங்கிய  ஒருகூர்மம்!

     அவனே     ஏனம்,      எனவடி   வங்கள்  பலவாய் எடுத்துத் தோன்றிடினும்  

    அவதா       ரத்தின் பரிணா    மத்தில் அற்புத    வடிவம்          நரசிம்மம்

     

    விரிவெளி எங்கும் வியனுல கெங்கும் விரவிப்பரவிய தொருவடிவம்!

    எரியழல், நீர்,நிலம்,காற்றென எங்கும் எல்லாப் பொருளிலும் அது உறையும்!

    சிறிதொரு துகளிலும், அணுவிலும் அணுவின் கருவிலும் கூட அது நிறையும்! 

    இரணியன் பிள்ளை சொல்லிய சொல்லைச்  சத்தியமாக்கும்    நரசிம்மம்! 

     

    அகந்தைக் கால்கள் அறிவுத் தூணை எட்டிஉ தைக்கும் அந்நேரம்

    யுகங்கள், கணங்கள் ஒடுங்கும் கலங்கும் உள்ளே  சீயம்  கர்ஜிக்கும்

    அகமும்புறமும், அவனே என்னும் அடியார் அன்பில் அதுசிக்கும்! 

     நகங்கள் படாமல், பக்தனை நாவால் நக்கிக் கொடுக்கும் நரசிம்மம்!

     

    அழகிய சிங்கம் துளஸி  தரிக்கும்அபயமளிக்கும், துயர்நீக்கும்

    அழகிய  வடிவினள்  திருமக ளைத்தன் மடியிலிருத்தும், மகிழ்விக்கும்

    கழலிணை பணிவோர், அறவழி மறவோர், அடியவர் வாழ்வின் கலிதீர்க்கும்

    பழவினை   யெல்லாம்  பானகமாக்கித் தாகம் தணிக்கும் நரசிம்மம்!

     

    போக்கும்வரவும் புரியும் வரையில் புதிராய்த்தோன்றும் இவ்வாழ்வும்!

    யாக்கைக் குள்ளே யார்? இது செல்லும் யாத்திரை எங்கே போய்ச்சேரும்?

    கேட்கும் மனமே! கேள்விகள் எல்லாம் விடைபெறும் ஒருநாள்! அதுமட்டும்

    வாக்கில் பிறக்கும் கவிதைக் குள்ளே  வார்த்தை பிளக்கும் நரசிம்மம்!

     

     

    Share