Tag: திருப்பாவை

  • திருப்பாவை – 26 | மாலே மணிவண்ணா

    திருப்பாவை – 26 | மாலே மணிவண்ணா

    திருப்பாவை – 26

    மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
    மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
    ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
    பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
    போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
    சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
    கோல விளக்கே கொடியே விதானமே
    ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 26 | மாலே மணிவண்ணா | ஸ்வேதா குரலில்

    திருப்பாவையின் முந்தைய பாடலில், வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ என்றும் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் என்றும் சங்கொடு சக்கரம் ஏந்திய தடக்கையன் என்றும் பாடியவர் ஆண்டாள்.

    கண்ணனுக்காகக் கட்டிய மாலையைத் தான் அணிந்து அழகு பார்த்து, அதன் பிறகுக் கோவிலுக்கு அனுப்பியவர் ஆண்டாள்.

    கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
    திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ
    மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
    விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே

    என நாச்சியார் திருமொழியில் சங்கிடம் கேட்டவர் ஆண்டாள்.

    பாவை நோன்புக்குச் சங்கு வேண்டும் என்றதும், பால்வண்ணத்தில் இருக்கும் உன் பாஞ்சசன்னியத்தைப் போல் சங்குகள் வேண்டும் என்கிறார். அதுவும் ஞாலத்தை எல்லாம் நடுங்கச் செய்யும் சங்கு. ஓம் என்ற நாதத்தின் விஸ்வரூபத்தைப் போல், ஓங்கி ஒலிக்கும் அந்தச் சங்கு. உறங்கிக் கிடந்த சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்தது போல், நமக்கு அறிவூட்டி விழிப்பூட்டும் அந்தச் சங்கு. அதன் பேரரவம் ஒலிக்கட்டும். மாலே மணிவண்ணனைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 25 | ஒருத்தி மகனாய்

    திருப்பாவை – 25 | ஒருத்தி மகனாய்

    திருப்பாவை – 25

    ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
    ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
    தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
    கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
    நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
    அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
    திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
    வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 25 | ஒருத்தி மகனாய் | ஸ்வேதா குரலில்

    உன்னைக் கொல்ல ஒருவன் பிறந்திருக்கிறான் என்ற செய்தியைக் கேட்டதும் கம்சன் வயிறு பற்றி எரிந்திருக்கிறது. இதைத்தான் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே என ஆண்டாள் வர்ணிக்கிறார். அடுத்தொரு பாடலில், பகைவருக்கு வெப்பம் கொடுக்கும் விமலா எனவும் பாடினார். அதே நேரம் பக்தர்கள் இந்தத் தாமோதரனை வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, அவர்கள் தீவினைகள் யாவும் தீயினில் தூசாகும் என்று முன்னரே பாடியிருக்கிறார். ஒரே தீ, பகைவரிடத்தில் ஒரு விதமாகவும் பக்தர்களிடையே ஒரு விதமாகவும் செயல்புரிகிறது. நம் வருத்தம் தீர்ந்து மகிழ்வதற்கு, இந்த நெடுமாலைச் சரண்புகுவோம். ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்தவனைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 24 | அன்று இவ்வுலகம்

    திருப்பாவை – 24 | அன்று இவ்வுலகம்

    திருப்பாவை – 24

    அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
    சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
    பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
    கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி
    குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
    வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
    என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
    இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 24 | அன்று இவ்வுலகம் | ஸ்வேதா குரலில்

    கண்ணனின் அடிபோற்றி, திறல்போற்றி, புகழ்போற்றி, கழல்போற்றி வந்த ஆண்டாள், குன்று குடையாய் எடுத்ததைச் சொல்லும்போது குணம்போற்றி என்கிறார். வேலெடுத்து வென்று பகைகெடுக்கும் நிகழ்வுகள் அனைத்தும் வேண்டிய இடத்தில் காட்டும் வீரச் செயல்கள். ஆனால், அவனது உண்மையான குணம், பக்தர்களைக் காப்பது. மலையளவு இடர் வரினும் சுண்டு விரலின் நுனியில் அதைக் களைபவன் கண்ணன்.

    ஒரு சிக்கலைப் பல வகைகளில் தீர்க்க முடியும் எனினும் எவரும் எதிர்பாராத விதத்தில், முற்றிலும் புதுமையான முறையில் அதைத் தீர்ப்பவன் கண்ணன். இத்தகைய வீறு படைத்த அதிவீரன் கண்ணனுக்கு என்றென்றும் சேவகம் புரிய அருள வேண்டும் என்பதைக் குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது என்ற வரிகளுடன் இணைத்துப் பார்க்கலாம். அன்று இவ்வுலகம் அளந்தவனைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் இன்று கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 23 | மாரி மலைமுழைஞ்சில்

    திருப்பாவை – 23 | மாரி மலைமுழைஞ்சில்

    திருப்பாவை – 23

    மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
    சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
    வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
    மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
    போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்
    கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
    சீரிய சிங்காசனத்து இருந்து யாம்வந்த
    காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 23 | மாரி மலைமுழைஞ்சில் | ஸ்வேதா குரலில்

    மழைக்காலத்தில் மலைக்குகையில் கிடந்துறங்கும் சிங்கம், உணர்வுற்று, தீயென விழித்து, மேனி உதறி, பிடரி சிலிர்த்து, தலை நிமிர்ந்து, மலையதிரக் கர்ச்சித்து கம்பீரமாக நடப்பது போல், நீல வண்ணக் கண்ணா, உன் கோயிலிலிருந்து கிளம்பி இந்தச் சிறப்பு மிக்க சிங்காசனத்தில் எழுந்தருளி, எமது தேவைகளைக் கேட்டு ஆராய்ந்து அருள வேண்டும் எனப் பாவையர்கள் வேண்டுகின்றார்கள்.

    இதில் அறிவுற்றுத் தீவிழித்து என்பதை நாம் கவனிக்க வேண்டும். நல்லறிவை உற்று (அனுபவித்து) உணர்ந்தால், அஞ்ஞான இருளில் உறங்கும் நம் அகம் விழிக்கும். அதன் பிறகு நாம் சிங்கம்போல் தலைநிமிர்ந்து நடக்கலாம். நம் காரியம் யாவும் நிறைவேறும் என்பது உட்பொருள். ஆண்டாள் ஆராய்ந்து அருளிய இப்பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 22 | அங்கண்மா ஞாலத்து

    திருப்பாவை – 22 | அங்கண்மா ஞாலத்து

    திருப்பாவை – 22

    அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
    பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே
    சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
    கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
    செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
    திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
    அங்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
    எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 22 | அங்கண்மா ஞாலத்து | ஸ்வேதா குரலில்

    தாங்கள் பெரியவர்கள் எனக் கருதிய பேரரசர்கள், நீயே உலகின் தலைவன் எனப் புரிந்து உன் காலடியில் பணிந்து நிற்கின்றார்கள். தோழிமார்கள் நாங்களும் கூட்டமாக வந்து வணங்கி நிற்கின்றோம். உறக்கத்திலிருந்து மெல்ல மெல்ல நீ விழி திறந்து பார்ப்பதைக் கண்ணாரக் காணக் காத்திருக்கிறோம். சூரிய சந்திரனைப் போன்ற உன் இரண்டு கண்களால் எங்களைச் சற்றே நோக்கினால், எங்கள் மேல் உள்ள சாபம் அனைத்தும் நீங்கிவிடுமே எனப் பாவையர்கள் பாடுகிறார்கள்.

    தாமரைப்பூப் போன்ற சிவந்த கண்கள் என்ற ஆண்டாள், அடுத்த அடியிலேயே சூரியனைப் போலவும் சந்திரனைப் போலவும் இரு கண்களால் எம்மை நோக்கு என்கிறார். தாமரைப்பூ, கண்களின் வடிவிற்கு உவமையாக வந்தது. திங்களும் ஆதித்தியனும் பார்வையின் தன்மைக்கு உவமைகளாக வந்தன. அன்பர்களிடம் கனிவுடனும் பகைவர்களிடம் கடுமையாகவும் பார்ப்பது ஒரு பொருள். ஒரே நபரிடமே சூழலுக்கு ஏற்ப, கடுமையாகவும் கனிவுடனும் பார்ப்பது இன்னொரு பொருள். அன்பர் மேல் உள்ள சாபத்தைக் கடுமையால் நீக்கி, அருட்பார்வையால் வரங்கள் தருவான் கண்ணன்.

    சலங்கையின் கிண்கிணிப் பரல்போல் கண்களைத் திறக்க வேண்டுகிறாள் ஆண்டாள். பரலுக்குள் இருக்கும் மணியும் விழிக்குள் இருக்கும் கருமணியும் ஒப்பிடத்தக்கவை. அந்தச் சிறு இடைவெளியில் மணி ஒலிக்கின்றது. கண்களும் சிறிது திறந்த நிலையிலும் அருள் பொழிகின்றன. கிண்கிணியின் பரலானது, எப்போதும் (சிறிது மட்டும்) திறந்திருப்பது. ஒருபோதும் மூடப்படாதது. கண்ணனின் உறக்கமும் அறிதுயிலே. உறக்கத்திலும் கூட அவன் கண்கள் மூடியது போலத் திறந்திருக்கும். கீற்றுப் போல அவனது பார்வை வெளிப்படும். இந்தக் கீற்று நிலையிலிருந்து தாமரைப் பூப்போல் தன் கண்களைப் பூரணமாகத் திறப்பான். சட்டென்று திறந்துவிடமாட்டான். மெல்ல மெல்லத் திறப்பான். இதைத்தான் சிறுச்சிறிதே என்கிறார் ஆண்டாள். சிறிது சிறிதாக என்பதை விட, சிறிதினும் சிறிதாக என இதற்குப் பொருள் கொள்ளலாம். ஆண்டாள் கண்ணுற்ற அந்த அருட்பார்வை, நம் மீதும் சற்றே சேரட்டும். நம் மீதுள்ள சாபங்கள் யாவும் நீங்கட்டும்.

    இந்த இனிய பாடலைச் செல்வி ஸ்வேதாவின் கிண்கிணிக் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 21 | ஏற்ற கலங்கள்

    திருப்பாவை – 21 | ஏற்ற கலங்கள்

    திருப்பாவை – 21

    ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
    மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
    ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
    ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
    தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
    மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்
    ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
    போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 21 | ஏற்ற கலங்கள் | ஸ்வேதா குரலில்

    திருப்பாவையின் 3ஆவது பாடலில் வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் என அழைத்த ஆண்டாள், 21ஆவது பாடலில் மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் என்கிறார். பசுவை நினைக்கும்போதே அதன் வள்ளல் தன்மை, ஆண்டாள் நினைவில் எழுகிறது. ஒவ்வொரு முறையும் வள்ளல் பெரும்பசுக்கள் எனப் போற்றுகிறார். இங்கே பெரும்பசுக்கள் என்பதற்கு, அளவில் பெரிய பசுக்கள் எனப் பொருள் இல்லை. பெருமை மிக்க, பேருள்ளம் படைத்த பசுக்கள் எனப் பொருள்.

    முந்தைய பாடலில் வாங்கக் குடம்நிறைக்கும் என்றார். பெரும் குடத்தையே நீட்டினாலும் அதை நிறைக்கின்றது அந்தப் பசு. அது ஒரு வகை வள்ளல் தன்மை. 21ஆவது பாடலில் சிறியது, பெரியது என எந்தக் கலத்தை வைத்தாலும் நிறைப்பதோடு நிறுத்தாமல் வழிய வழியப் பாலைச் சொரிகின்றது. இது இன்னொரு வகை வள்ளல்தன்மை. பக்தர்கள் எத்தகையவராய் இருந்தாலும் அவர்களுக்கு அருள்பொழிகின்ற கண்ணனின் உள்ளத்தை ஆண்டாள் குறிப்பால் உணர்த்துகிறார். தமிழமுதை வாரி வழங்குகின்ற வள்ளல் கோதையின் 21ஆவது பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 20 | முப்பத்து மூவர்

    திருப்பாவை – 20 | முப்பத்து மூவர்

    திருப்பாவை – 20

    முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
    கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்
    செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
    வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்
    செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
    நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
    உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
    இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 20 | முப்பத்து மூவர் | ஸ்வேதா குரலில்

    முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையில் நப்பின்னையை மூன்று இடங்களில் ஆண்டாள் பெயர் குறிப்பிட்டுப் பாடுகிறார். அதுவும் அடுத்தடுத்த மூன்று பாடல்களில் நப்பின்னை தோன்றுகிறார். நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய் (பாசுரம் 18) என்றும் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை (பாசுரம் 19) என்றும் நப்பின்னை நங்காய் திருவே (பாசுரம் 20) என்றும் வாயாரப் பாடுகிறார். கந்தம் கமழும் குழலி, மைத்தடம் கண்ணினாய், செப்பென்ன மென்முலைச் செவ்வாய் என்றெல்லாம் வர்ணிக்கிறார்.

    திருமகளே துயிலெழு, உன் மைத்துனன் பேர்பாடு, உன் மணாளனை எழுப்பு, செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிக்கக் கதவைத் திற என்றெல்லாம் வேண்டுகிறார். இந்தப் பாடலில் விசிறியும் கண்ணாடியும் தருக என்றும் கேட்கிறார். திருவே துயிலெழாய் என உருக்கம் கொண்டாடுகிறார். இதன்வழியே திருப்பாவையின் திருவே நப்பின்னை என்றும் உளம் கொள்ளலாம். தமிழ்க்குலத்தின் திருவாய் விளங்கும் ஆண்டாளின் 20ஆம் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    ஓவியத்திற்கு நன்றி: கேசவ்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 19 | குத்து விளக்கெரிய

    திருப்பாவை – 19 | குத்து விளக்கெரிய

    திருப்பாவை – 19

    குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
    கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
    வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
    மைத்தடம் கண்ணினாய் நீயுன் மணாளனை
    எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
    எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
    தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 19 | குத்து விளக்கெரிய | ஸ்வேதா குரலில்

    திரைக்கதை எழுதும்போது, காட்சியை அணு அணுவாக விவரிப்பார்கள். எழுத்திலும் குறிப்பார்கள். அந்தக் காட்சியில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், பேசும் வசனம், அவர்கள் அணிந்திருக்கும் உடை, அந்தக் காட்சியில் இடம்பெறும் இதர பொருட்கள் என ஒவ்வொன்றையும் வர்ணித்து, காட்சியை நம் கண்முன் கொண்டு வருவார்கள். இவ்வாறு திரைக்கதை எழுதுவதில் ஆண்டாள், ஒரு முன்னோடி. சங்க இலக்கியத்திலும் இப்படியான வர்ணனைகள், பல உண்டு.

    திருப்பாவையின் 19ஆவது பாடலில் ஆண்டாள் இப்படியாக விவரிக்கிறார். அழகு துலங்கும் குத்து விளக்கு எரிகிறது. அதன் சுடரொளி, அறையைப் பேரழகாய் ஆக்குகிறது. எதிரே ஓர் அழகிய கட்டில். அதன் கால்கள், தந்தத்தால் செய்யப்பட்டுள்ளன. கட்டில் மீது மெத்தென்ற படுக்கை. அதன் மீது நப்பின்னை படுத்திருக்கிறாள். அவள் கூந்தலில் கொத்தாக மலர்ந்த வண்ண மலர்கள். அவற்றிலிருந்து நறுமணம் கமழ்கின்றது. அவள் மார்பின் மீது கண்ணன் தலைசாய்த்து, வாய்மூடி லயிக்கிறான். அவன் மார்பில் மலர்மாலைகளைச் சூடியிருக்கிறான். நப்பின்னையின் கூந்தல் மலர்களும் அவன் மார்பில் உதிர்ந்து கிடக்கின்றன.

    நப்பின்னையின் கண்களோ, மையால் வரைந்த தடம் கொண்டவை. வாயிலில் தோழிகள் வந்து எழுப்புகிறார்கள். அவளது மை வரைந்த கண்ணைத் திறந்து பார்க்கிறாள். ஆனால், மார்பில் தலைசாய்த்து உறங்கும் கண்ணனை எழுப்பினால், அவன் பிரிந்து சென்றுவிடுவான். எனவே நப்பின்னை அவனை எழுப்ப மறுக்கிறாள். மூச்சையே மெல்ல விடுகிறாள். அவளது மூச்சுக்கு ஏற்ப, அவன் முகம் ஏறி இறங்குகிறது. ‘உனது நலனுக்காகக் கண்ணனை எழுப்பாமல் இருப்பதா? இது நியாயம் இல்லை. உன் இயல்பும் இல்லை’ எனத் தோழிகள் செல்லமாகக் கோபிக்கிறார்கள்.

    இந்த அழகிய பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 18 | உந்து மதகளிற்றன்

    திருப்பாவை – 18 | உந்து மதகளிற்றன்

    திருப்பாவை – 18

    உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
    நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
    கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்
    வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
    பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
    பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்
    செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
    வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

    கண்ணனுக்கு ஆண்டாள் வழங்கிய அடைமொழிகள் தனித்த அழகுடையவை. கூர்வேல் கொடுந்தொழிலன், யசோதை இளஞ்சிங்கம், கதிர்மதியம் போல்முகத்தான், ஓங்கி உலகளந்த உத்தமன், ஆழி மழைக்கண்ணா!, ஊழி முதல்வன், மாயன், மாமாயன், வடமதுரை மைந்தன், யமுனைத் துறைவன், மாவாய் பிளந்தான், மல்லரை மாட்டிய தேவாதி தேவன், முகில்வண்ணன், மனத்துக்கு இனியான், புள்ளின் வாய் கீண்டான், பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான், சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன், பங்கயக் கண்ணான், வல்லானை கொன்றான், உம்பர் கோமான்… எனப் பலவாறாகக் கண்ணனைப் பாடிய ஆண்டாள், இந்த 18ஆம் பாடலில், உந்து மதகளிற்றன், ஓடாத தோள்வலியன் என அடுத்து எடுத்துப் பாடுகிறார். எண்ணி எண்ணி மகிழத்தக்க இனிய இப்பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 17 | அம்பரமே தண்ணீரே

    திருப்பாவை – 17 | அம்பரமே தண்ணீரே

    திருப்பாவை – 17

    அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
    எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
    கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
    எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
    அம்பரம் ஊடறுத்து ஓங்கி உளகளந்த
    உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
    செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
    உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 17 | அம்பரமே தண்ணீரே | ஸ்வேதா குரலில்

    கொழுந்து என்பது புத்தம் புதியது, இளையது, முகப்பில் உள்ளது, முதன்மையானது. புதுமையின், மரபின் தொடர்ச்சியாய், அடையாளமாய்த் திகழ்வது. கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம்பெருமாட்டி என ஆண்டாள், யசோதையைப் பாடும் அருள்மொழிகள் அனைத்தும் ஆண்டாளுக்கும் பொருந்தும். அம்பரம் ஆகிய வானை ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான், நம் இடர்களை எல்லாம் ஊடறுத்து, இன்பம் ஓங்கச் செய்ய வேண்டுவோம். தேமதுரத் திருப்பாவையின் 17ஆவது பாடல் அம்பரமே தண்ணீரே, இதோ செல்வி ஸ்வேதாவின் குரலில். கேட்டு மகிழுங்கள், இணைந்து பாடுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 16 | நாயகனாய் நின்ற

    திருப்பாவை – 16 | நாயகனாய் நின்ற

    திருப்பாவை – 16

    நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
    கோயில் காப்பானே கொடிதோன்றும் தோரண
    வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய்
    ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
    மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
    தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
    வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ
    நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 16 | நாயகனாய் நின்ற | ஸ்வேதா குரலில்

    கதவு என்பதை இலக்கிய நடையில் கதவம் என எழுதுவர். கதவம் என்ற சொல், திருப்பாவையில் மூன்று இடங்களில் வருகிறது. 9ஆம் பாடலில், மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய் என்கிறார். 16ஆவது பாடலில் இரு இடங்களில் கதவம் வருகின்றது. வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய் என்றும் நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய் என்றும் பேசுகின்றார். இதே கதவை வாசற்கடை என்றும் சொல்வதுண்டு. நின் வாசற் கடை பற்றி என்றும் கந்தம் கமழும் குழலி கடை திறவாய் என்றும் ஆண்டாள் பாடுகிறார்.

    2020ஆம் ஆண்டு முடிந்து, 2021ஆம் ஆண்டின் மணிக்கதவம் திறக்கும் தருணம், இது. புதியன பிறக்கட்டும், நல்லன நடக்கட்டும் என நாயகனை வேண்டுவோம். நாயகனாய் நின்ற நந்தகோபனைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 15 | எல்லே இளங்கிளியே

    திருப்பாவை – 15 | எல்லே இளங்கிளியே

    திருப்பாவை – 15

    எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
    சில்லென்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
    வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
    வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
    ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
    எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
    வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
    வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 15 | எல்லே இளங்கிளியே | ஸ்வேதா குரலில்

    மரபுக் கவிதைக்குள் உயிர்ப்புள்ள ஓர் உரையாடலை இயல்பாக அமைக்க முடியும், ஒரு காட்சியை நம் கண்முன்னே கொண்டு வந்து காட்ட முடியும் என்பதற்கு, திருப்பாவையின் 15ஆம் பாடல் ஓர் எடுத்துக்காட்டு.

    வாசலில் நின்று அழைக்கும்போது, சற்றே உரக்க அழைப்போம். அப்படித் தோழியை உரக்கக் அழைக்கிறார். ஏய் என்பதன் அக்கால வடிவம், எல்லே. எல்லேஏஏஏ என்று அதை நாம் எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டலாம். அவர்களின் உரையாடல் இப்படிப் போகிறது.

    ஏடீ பொண்ணே இன்னுமா தூங்குறே?

    சில்வண்டு போல் காதுகிட்ட ங்கொய்ய் என்று கூப்பிடாதீங்க, பெண்டுகளா. இதோ வந்துட்டேன்.

    கதை விடுவதில் நீ கெட்டிக்காரி. உன் வாயளப்பு எல்லாம் எப்பவோ எங்களுக்குத் தெரியும்.

    நீங்களே வல்லவர்களாக இருங்கள். நானே ஏமாற்றுக்காரியாக இருந்துட்டுப் போறேன்.

    சீக்கிரமா வா. உனக்கு மட்டும் தனியா என்ன வேண்டியிருக்கு?

    எல்லாரும் வந்தட்டாங்களா?

    வந்துட்டாங்க, நீயே வந்து எண்ணிப் பார்த்துக்கோ. குவலய பீடம் என்ற யானையைக் கொன்றவனும் பகைவர்களை நேருக்கு நேர் சந்தித்து வென்றவனுமாகிய மாயக்கண்ணனைப் பாடுவதற்கு வாடீ, இளங்கிளியே.

    இந்த இனிய உரையாடலை அழகிய கவிதையாய்ப் படைத்த ஆண்டாளின் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 14 | உங்கள் புழக்கடை

    திருப்பாவை – 14 | உங்கள் புழக்கடை

    திருப்பாவை – 14

    உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
    செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
    செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
    தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
    எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
    நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
    சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
    பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 14 | உங்கள் புழக்கடை | ஸ்வேதா குரலில்

    ஆஹா, நாம் எப்பேர்ப்பட்ட காலத்தைக் கடந்து வந்திருக்கிறோம். ஒவ்வோர் வீட்டிலும் புழக்கடை (வீட்டின் பின்புறப் பகுதி) இருந்தது. அங்கே தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் ஒரு குளம் (வாவி) இருந்தது. அதில் காலையில் செங்கழுனீர்ப் பூக்களும் இரவில் ஆம்பல் மலர்களும் மலர்ந்தன.

    இந்த இடத்திலிருந்து குறுகி, நாம் இன்றைய சதுர அடி வீடுகளுக்கு வந்திருக்கிறோம். இன்றும் மிகப் பெரிய மாளிகைகளில் வீட்டோடு இணைந்து நீச்சல் குளம் உண்டு. அதுவும் நீச்சல் குளம் தான். பூந்தடாகம் இல்லை. இன்றும் பலர் வீடுகளில் தோட்டம் உண்டு. ஆனால், அதில் செங்கழுனீர், ஆம்பல் மலர்கள் இல்லை. இன்றும் கிராமப்புற வீடுகளில் புழக்கடை உண்டு. ஆனால், வீட்டுக்கு வீடு குளம் இல்லை.

    வீட்டுக்கு வீடு தண்ணீர்த் தொட்டி வைத்து, வாளிகள் வைத்து, அதில் லாரியில் தண்ணீர் வாங்கி நிரப்பும் இந்தக் காலத்தில், வீட்டுக்கு வீடு ஒரு வாவி (குளம்) என்பது எப்பேர்ப்பட்ட கனவு. நாம் இழந்த பொற்காலத்தை நினைவூட்டுகிறது ஆண்டாளின் இந்தப் பாடல்.

    அதிலும் உன் வீட்டுத் தோட்டத்து வாவியில் செங்கழுநீர்ப் பூக்கள் மலர்கின்றன. நீ இன்னும் உறங்குகிறாயே எனக் கேட்கிறார். அந்தப் பூக்களை மட்டுமில்லை, பூக்கள் மலரும்போதே விழிக்கின்ற வழக்கத்தையும் நாம் இழந்திருக்கிறோம் எனப் புரிகிறது. திருப்பாவையின் 14ஆவது பாடல் உங்கள் புழக்கடை, செல்வி ஸ்வேதாவின் குரலில் இதோ.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 13 | புள்ளின்வாய் கீண்டானை

    திருப்பாவை – 13 | புள்ளின்வாய் கீண்டானை

    திருப்பாவை – 13

    புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
    கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
    பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
    வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
    புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
    குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
    பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
    கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 13 | புள்ளின்வாய் கீண்டானை | ஸ்வேதா குரலில்

    நீரில் பாய்ந்து மூழ்கிக் குளிப்பதைக் குடைதல் (dive) என அக்காலத்தில் அழைத்தனர். சங்க இலக்கியத்தில் இதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. புனல் ஆடு மகளிர் கதுமெனக் குடைய (பொரு. 241) எனப் பொருநராற்றுப்படையிலும் கயம்குடைந்து அன்ன இயம்தொட்டு இமிழ்இசை (மது 363) என மதுரைக் காஞ்சியில் காண்கிறோம்.

    திருப்பாவையின் 13ஆவது பாடலில் குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ என ஆண்டாள் பாடுகிறார். திருவெம்பாவையின் 11ஆவது பாடலில், பொய்கை புக்கு முகேர் என்னக் கையாற் குடைந்து குடைந்து என்றும் 12ஆவது பாடலில் பூத்திகழும் பொய்கை குடைந்து என்றும் மாணிக்கவாசகர் பாடுகிறார். திருப்பாவையின் 13ஆவது பாடலை இதோ செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள். ஆண்டாளின் தமிழ்ப் பொய்கையில் குடைந்து நீராட வாருங்கள்.

     

    திருப்பாவை – 13 | புள்ளின்வாய் கீண்டானை | சேகர் முத்துராமன் குரலில்

    புள்ளும் சிலம்பினகாண் என்பது திருப்பாவையில் இரு இடங்களில் வருகின்றது. 6ஆவது பாடல், ‘புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்’ எனத் தொடங்குகின்றது. 13ஆவது பாடலில் ‘புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்’ என வருகின்றது. சிலம்புதல் என்றால் இரட்டிப்பொலி எழுப்புதல், மாறி மாறி ஒலித்தல் எனப் பொருள். புள் எனில் பறவை. பறவை விதவிதமாக இரட்டிப்பு ஒலி எழுப்புவதை நாம் கேட்டிருப்போம். ‘கீசுகீசு’ என ஆனைச்சாத்தன் பேசுவதை ஆண்டாளே பதிவு செய்துள்ளார். அரிய, அழகிய வாழ்வியற்கூறுகள் நிறைந்த திருப்பாவை, நாம் பெற்ற செல்வம். புள்ளின் வாய் கீண்டானை என்ற 13ஆவது பாடலைச் சேகர் முத்துராமன் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 12 | கனைத்து இளம்

    திருப்பாவை 12

    கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
    நினைத்து முலை வழியே நின்று பால்சோர
    நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
    பனித்தலை வீழ நின் வாசற் கடைபற்றிச்
    சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
    மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
    இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
    அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 12 | கனைத்து இளம் | ஸ்வேதா குரலில்

    11ஆவது பாடலில் ஆயர்கள், கறவைக் கணங்களிடம் தாங்களே பால்கறக்கிறார்கள். 12ஆவது பாடலில், கற்றெருமை கன்றை நினைத்து, நின்று பால்சொரிந்து, தான் நின்ற இடத்தையே நனைத்துச் சேறாக்குகிறது. நின்று பால்சோர என்றால், மாடு நிற்கிறது எனப் பொருள் இல்லை. மழை நின்று பெய்கிறது என்றால், நீடித்துப் பெய்கிறது எனப் பொருள் கொள்வோமே அப்படி இந்த எருமை நின்று பால்சொரிகிறது. கன்றை நினைத்த உடனே தாய்க்கு இப்படிப் பால் பெருகும். அப்படிப் பக்தர்களுக்காக அருள் சொரிகின்ற மனத்துக்கு இனியானைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    திருப்பாவை – 12 | கனைத்து இளம் | சேகர் முத்துராமன் குரலில்

    குளிர்ந்தேலோர் எம்பாவாய் என உள்ளம் குளிர்தலைப் பற்றி முன்னர் பார்த்தோம். மார்கழிக் குளிரையும் ஆண்டாள் பாடியுள்ளார். தலையில் பனி வீழ, நின் வாசற்கடை பற்றி நிற்கின்றோம். ஈதென்ன பேருறக்கம்? இப்போதாவது எழுந்திரு எனத் தோழியைக் கோதை எழுப்புகிறார். உள்ளம் குளிரச்செய்யும் திருப்பாவையின் 12ஆவது பாடலைச் சேகர் முத்துராமனின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share