keshav-20

திருப்பாவை – 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்
செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

திருப்பாவை – 20 | முப்பத்து மூவர் | ஸ்வேதா குரலில்

முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையில் நப்பின்னையை மூன்று இடங்களில் ஆண்டாள் பெயர் குறிப்பிட்டுப் பாடுகிறார். அதுவும் அடுத்தடுத்த மூன்று பாடல்களில் நப்பின்னை தோன்றுகிறார். நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய் (பாசுரம் 18) என்றும் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை (பாசுரம் 19) என்றும் நப்பின்னை நங்காய் திருவே (பாசுரம் 20) என்றும் வாயாரப் பாடுகிறார். கந்தம் கமழும் குழலி, மைத்தடம் கண்ணினாய், செப்பென்ன மென்முலைச் செவ்வாய் என்றெல்லாம் வர்ணிக்கிறார்.

திருமகளே துயிலெழு, உன் மைத்துனன் பேர்பாடு, உன் மணாளனை எழுப்பு, செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிக்கக் கதவைத் திற என்றெல்லாம் வேண்டுகிறார். இந்தப் பாடலில் விசிறியும் கண்ணாடியும் தருக என்றும் கேட்கிறார். திருவே துயிலெழாய் என உருக்கம் கொண்டாடுகிறார். இதன்வழியே திருப்பாவையின் திருவே நப்பின்னை என்றும் உளம் கொள்ளலாம். தமிழ்க்குலத்தின் திருவாய் விளங்கும் ஆண்டாளின் 20ஆம் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

 

ஓவியத்திற்கு நன்றி: கேசவ்

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.