Tag: பெருவை பார்த்தசாரதி

  • கல்வீச்சு

     

    பெருவை பார்த்தசாரதி

     

    Stone-Pelting

     

     

     

     

     

     

     

     

     

     

    சிறார்கள் பயிலும் பள்ளி யினருகேதான்

    சிற்றறிவை மழுங்கச் செய்யும் மதுக்கடையாம்

    சீறியெழும் சேலைகட்டிய மாந்தர்க ளங்கே

    சிறு கூட்டமாய் வெகுண்டெழுந்து ஓடியதைச்

    சின்னா பின்ன மாக்கினர் சாராயக்கடையெலாம்

    சரக்குகள் எல்லாம் சட்டென உடைகிறது

    சடுதியில் கல்வீச்சால் அழிந்தது மதுபாட்டிலெலாம்.!

     

    இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டமதை

    எதிர்த்து இறக்கைகட்டிக் குதித்தனர் களத்தில்பலர்

    அரசாங்கத்  துக்தெதிராக போர்க்கொடி யேந்தி

    அருகருகே அமைதியாய்ச் சென்றதொரு கூட்டம்

    இருவேறு கும்பலாலெழுந்த பெருஞ் சர்ச்சையால்

    ஒருவருக் கொருவர் பகையாயினர் முடிவில்

    ஊர்வல மனைத்தும் கலைந்தது கல்வீச்சால்.!

     

    கோரிக்கை பல வலியுறுத்தியிள  மாணவர்பலர்

    போராட்டத்தில் இறங்கின ரதைத் கலைக்கவல்ல

    பாதுகாப்புப் படையின ரவரிடம் வாலாட்டினர்

    கண்ணீர்புகை குண்டுகள் அங்கே வலுவிழந்தன

    துப்பாக்கிக் காரருக்கு நன்றாகத் தெரியும்

    தோட்டாவை விடகருங் கல்லுக்குபல மதிகமென்று

    கல்வீச்சு கண்டு காததூரமோடினர் காவலர்பலர்..!

     

    மருத்துவம் பொறியியல் அறிவியல் யென

    மண்டிக்கிடக்கும் கல்லூரியில் படித்துவிட்டு

    மனிதநேய எழுச்சியுடன் நியாயம் கேட்டு

    மெரினாவில் கூடிநின்று கோஷம் போட்டனர்

    மறியல்செய்ய மணலில் நுழைந்த மாணவனின்

    மகத்துவம் அறியா தடித்தது காவல்துறை

    முடிவில் கூட்டம் கலைய கல்வீச்சே உபயம்.!

     

    படிக்கும் பருவத்தை பாழ்படுத்த வரும்

    பலயிடை யூறுயதைப் புரிந்து கொண்டுநீயும்

    பக்குவமாய் கோஷம்தவிர்!…வேஷம் வேண்டா.!

    பாரைஉயர்த்திட நீநன்கு படித்திடல் வேண்டும்

    பாருலகைக் காக்க ஒழுக்கமிகப் பழகப்பா

    கல்வீச்சு வேண்டாம் தம்பியினி புதியதொரு

    சொல்வீச்சால் புரட்சிசெய்ய முயற்சி செய்..!

     

    தினமணி கவிதைமணி தந்த தலைப்பு:: “கல்வீச்சு

    நன்றி கவிதைமணி வெளியீடு::29-05-17

    படஉதவி:: கூகிள் இமேஜ்

    Share
  • குழந்தையின் குரல்

    பெருவை பார்த்தசாரதி

    crying-baby

    கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாமென்பர்

    குழந்தையில்லா வீட்டில் குதூகல இருக்காதெனலாம்..!

     

    குடும்பமொன்றில் குழந்தையின் குரலொன்று கேட்கநீ

    கோடி புண்ணியம் செய்திருத்தல் வேண்டுமம்மா..!

     

    பெருஞ்செல்வ மெளிதில் கிடைக்கும் குழந்தையெனும்

    அருஞ்செல்வம் இறையருளால் மட்டுமே கிட்டும்..!

     

    மண்டியிட்டு மண்சோறு உண்டபல நாட்கள்..

    வேண்டியவரம் கேட்டு கும்பிட்டபல கோவில்கள்..

     

    உள்ளம்குளிர நீராடிய புண்ணிய திருக்குளங்கள்..

    பிள்ளை வரம்வேண்டி பித்தாக அலைந்த நாட்கள்..

     

    இவை யனைத்தும் வீணாகவில்லை யொருநாள்..

    அவை யனைத்துப் பலனுமுடன் பலித்தது..!

     

    கும்பிடவந்த சாமியிடம் குழந்தைவரம் கேட்கும்போது..

    குழந்தையின் குரல்கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினேன்..

     

    வேண்டுவோர்க்கு வானத்தில் எழும் அசரீரிபோல..

    வேண்டாமென வீசிச்சென்ற குழந்தையினழு குரலொடு..

     

    அரும்புமலர் சோலைதனில் இறையருட் கொடையால்..

    ஆதரவின்றிக் கிடந்தன்று பிறந்த குழந்தையொன்று..!

     

    பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளைபோல்..

    பெரிதாக அரியசெல்வமென கிட்டிய தெனக்கும்..!

     

    அன்னையின் பிரசவலிகூட மறக்கும்…குழந்தையின்

    அழுகுரல் கேட்டவுடன்..பட்டதனைத்தும் மறந்தேன்..!

     

    குறையேதும் வலியேதும் இல்லாமல் குழந்தையொன்று..

    இறையருளால் பெற்றதுபெரும் பேறென்றன் பாக்கியமே..!

     

    கூப்பிடும் குரல் கேட்டு கண்ணன் வந்ததுபோலென்

    குழந்தையின் குரல்கேட்டால் ஓடோடி வருவேன்நான்

     

    குழலினிது யாழினிது என்பதம் மக்கள்

    மழலைச்சொல் கேளா தவர் . . . .எனும்

     

    ஐயன் வள்ளுவன் கூற்றுக் கிணையாக

    ஐயமுற வலிமை சேர்த்தோர் ஆருமில்லை

     

    இவ்வுலகில்..!

     

    தினமணி கவிதைமணி தந்த தலைப்பு:: “குழந்தையின் குரல்”

    நன்றி கவிதைமணி வெளியீடு::22-05-17

    படஉதவி:: கூகிள் இமேஜ்

     

    Share
  • வல்லமைக்கு வாழ்த்து..!

     

    எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் “வல்லமைக்கு” வாழ்த்து::

    =============

    av

    சிந்தனை செயல் முன்னேற்ற மெனும்..
    சீரிய நோக்கில் ஆண்டேழைக் கடந்து..

    எடுத்துக் கொண்ட மூன்றிலக்கை முற்றாக..
    எட்டுமுன் நோக்கோடு பட்டுச் சிறகுவிரித்து..

    எட்டா மாண்டிற்குள் நுழைந்து மேலும்
    எட்டு திக்கிலும்நீ பறக்க வேண்டும்..!

    மின்னி தழோடு நில்லாமல் தழைத்துமேலும்..
    மின்னு மிதழாக நானிலத்தில்நீ வரவேண்டும்..!

    எட்டாதிருக்கும் இனியபல கனியை இனி..
    எட்டிப் பறித்திட இணைந்து முயல்வோம்..!

    மற்றை ஒவ்வொன்றாக எட்டும் முன்னே..
    ஒற்றை எட்டில் அடுத்ததை எட்டுவோம்..!

    வலிய தமிழாலே உறவெமக்கு உண்டென்றாலது..
    வல்லமைக்கு ஈடாக வேறேதும் இல்லையன்றோ..!

    தேன்தமிழை தேசம்விட்டு தேசம் சென்று..
    மின்இதழால் வாசம் பரப்பும் வலையன்பருக்கும்..

    வல்லமைக்கும் வாழ்த்துச் சொல்லி தமிழால்..
    வலு சேர்க்கும் வண்ணம்நாம் ஒன்றிணைவோம்..!

    வல்லமையெனும் தமிழ்த்தேர் உலகெலாம் வலம்வர..
    வளமிக்க தமிழுடன் வடம்பிடிக்க வாரிர்வலிமையுடன்..!

    அன்புடன்
    பெருவை பார்த்தசாரதி

    Share
  • சுமைகளும் சுகங்களும்!

    -பெருவை பார்த்தசாரதி

    சுகங்களையே பெரிது மண்டும் மனிதர்கள்
    சுமைகளை வெறுப்ப துண்மை இயல்பன்றோ..!

    ஈரதன்பண்பைச் சீர்தூக்கி சிந்தையினுள் வைத்தால்சுமைகளும் சுகங்களும்
    சீராகுமுன் பயணம்..! சிறக்குமுன் வாழ்வுநிலை..!

    சூரியனும் வெண்ணிலவும் விண்ணிலே மாறிவருவதும்
    சுகமும் சுமையும் வாழ்வில்வலம் வருவதுமியற்கை..!

    இணையாகும் இவ்விரண்டும் இவ்வாழ்வில்..ஈதொரு
    நாணயத்தின் இருபக்கமென நினைவில் வையப்பா..!

    அன்னையவள் கருவைச் சுமப்பதைச் சுமையென
    அதனைக் கருதினால் சுகமாக மகவைப் பெறமுடியுமா..?

    தாயீன்ற தன்மகவைச் சுமந்தகாலம் சுமையேயாகும்
    சேயீன்ற மகிழ்வின்பின் பலசுகங்கள் பிறக்குமப்பா..!

    பதினான்கு ஆண்டுகள் இராமனேற்ற சுமைகள்பல..
    பதிவிரதை சீதாதேவி சுகமாயதை இறக்கிவைத்தாள்..!

    பிறகு தானேசுமையும் சுகமும்பல வடிவம்கொண்டு
    இறகு முளைத்து இராமாயணமென்னும் காவியமானது..!

    சுமைகண்டு வாழ்வில் துவண்டுவிடாதே எதையும்
    சுகம்கொண்டு எதிர்கொள் என்றது பகவத்கீதை..!

    சுமைகளும் சுகங்களும் நம்மிரண்டு கைகள்போலதைச்
    சமமாகப் பார்க்கப்பழகி வெற்றியடைந்தான் பார்த்தன்..!

    பாவிக்க வேண்டும் ஈரதையொன்றாக வென்பதை..மா
    பாரதக்கதை பக்குவமாக உணர்த்தியதை நீஉணர்வாய்..!

    குறையைச் சுமையாகவும் நிறையைச் சுகமாகவும்
    அரைகுறை யாகவறிந்தவராரும் சாதனை புரிவதில்லை..!

    காலிழந்த வாலிபனும் கையிழந்த நங்கையும்
    பார்புகழும் பாராலிம்பிக்கில் பதக்கம்வெல்வ தெதனாலே.?

    மிஞ்சியது எதுவுமில்லை எனயிடர்வரும் வேளையில்
    எஞ்சியவர் வாழ்வை யொருகணம்நீ நினைத்துப்பார்..!

    சுமையும்சுகமும் வாழ்க்கையெனும் நதியில் ஓடுமது
    சுழித்தோடும் சூழலை யெதிர்த்து நீவாழப்பழகு..!

    வாழ்க்கையுமொரு நற்பாடம் தானதைப் பக்குவமா
    வாழ்ந்திடலாம் முறையான பயிற்சிமேற் கொண்டால்..!

     

     

    Share
  • எழுத ஆசை

    எழுத ஆசை

    பெருவை பார்த்தசாரதி

     

    மையும் எழுதுகோலும்

    மணமக்கள் ஆனாலன்புடனே

    இரண்டும் இணைந்தால்தான்

    எழுத்தென்பது பிறக்கும்

     

    மனம் போன போக்கினிலே

    மணிக்கணக்கில் எழுதாமல்

    புவிக்குதவும் புதியசெய்திகளை

    புத்திகொண்டு நானெழுதவேண்டும்

     

    எப்படியும் எழுதுவேன்

    என்பதை விடுத்து

    இப்படியும் எழுதலாமெனஒரு

    குறிக்கோளுடன் நானெழுதவேண்டும்

     

    இளைஞருக்கு வழிகாட்ட

    எழுச்சிமிகு சிந்தனையோடு

    அவசரத்தில் எழுதாமல்நான்

    அவனிக்குதவுமாறு நானெழுதவேண்டும்

     

    இலக்கியங்கள் எடுத்துரைக்கும்

    இலட்சிய மேற்கோள்காட்டி

    இனியசெய்யுளாக எழுத்திலிட்டு

    இராப்பகலாய் நானெழுதவேண்டும்

     

    எழுத்திலே நான்பெரியவனேன

    இறுமாப்பு இடம்பெறாமல்

    எளியதமிழ் உரையுடனே

    என்றும் நானெழுதவேண்டும்

     

    அவனியில் புதையுண்ட

    அருந்தமிழ்க் காப்பியத்தை

    அகழ்வாராய்ந்து அர்த்தங்கள்பல

    அரிதாய்க் கொண்டுவரவேணும்

     

    வாய்மையும் நேர்மையும்

    தூய்மையாய் இடம்பெற

    எழுதுகோலும் மையுமிணைந்து

    நல்லெண்ணம்தனை நானெழுதவேண்டும்

     

    Share
  • வளமான தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

    ap

    வல்லமை வாசக உலகத்தமிழ் அன்பர்களுக்கு
    வளமான தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

    ====================================

    பிரமனவன் னுலகத்தைத் தோற்றுவித்த திருநாளாம்
    பிரதான சித்திரையே யாகும்..!

    அம்பிகை அவதரித்த சித்திரைத் திங்கள்
    இந்திரனின் குழந்தை சித்திரை..!

    காலபுருஷனவன் பிறப்பு இறப்பென நமை
    காலமெலாமாளப் பிறந்த மாதம்..!

    அவதாரம் பலயதில் உயிரின மூலமாம்
    மச்சாவதாரம் தோன்றிய மாதம்

    வாழும் கணக்கறிந்த சித்ரகுப்தனை வாழ்த்தி
    வணங்கும் சித்திரை முதல்நாள்..!

    சித்தபுருஷர் பலரவதரித்த திருநாளைக் கொண்டாடும்
    சித்திரை திங்களெனும் முதல்நாள்..!

    பஞ்சாங்கம் படித்து வரும்பஞ்சத்தைப் போக்கும்
    பாரம்பரியத் திருநாளே சித்திரைநீ..

    அன்னப் படைப்பில் ஆறுதல் அடைந்துநீயுன்
    அக்னிச் சிறகை விரிக்காதே..!

    சித்திரயை முதலெனவும் பல்குனியைக் கடையென்றும்
    சித்தநாடி குறி சொல்லும்..!

    புண்ணிய மாதமாம் சித்திரையில் விரதமிருக்க
    எண்ணிய தெல்லாம் நிறைவேறும்..!

    இளவேனிற் காலம்தான் வசந்தமெனப் பிறந்து
    வந்தது தான் சித்திரையதிலே..!

    இனிப்பும் கசப்பும் கலந்ததே வாழ்வென
    வேம்பும் மாவும் பூத்துக்குலுங்கும்..!

    சித்திரைப்பூ மலர்கிறாள் செந்தமிழில் சிரிக்கிறாள்
    நித்திரைகலய விழித்திடுவீர் வாழ்த்துச்சொல்ல..!

    சித்திரையின் முதல்நாளிலுன் சிந்தை மகிழ
    பக்தியா லுனை வாழ்த்துகிறோம்..!

    அன்புடன்
    பெருவை பார்த்தசாரதி

    Share
  • பொங்குக பொங்கல்!

    -பெருவை பார்த்தசாரதி 

    அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 

    விவசாயத்தையே முழுமையாக நம்பியிருக்கும் விவசாயிகளுக்குத் தைத்திங்களில் வரும் பொங்கல் திருநாளே தலைத்திருநாள். உழுதொழிலுக்கும், ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கும் பொங்கலுக்குத் தனிப்பெருமை கிட்டியதில் அதிகப் பங்குண்டு.

    கொண்டாட்டாட்டத்தின் உச்சக்கட்டமாகவும், குதூகலத்தின் திருப்திக்கும் அடையாளமாக விளங்கிய பொங்கல் திருநாள் இன்று   பெருந்திண்டாட்டத்திற்கு ஆளாகியிருக்கும் நிலை.

    இயற்கையாகவே உடலுறுதியும், உற்சாக உள்ளமும்pongal கொண்ட விவசாயிகள், தண்ணீரில்லாமல் பயிர்கள் வாடிக் கருகியதைக் கண்டு இடம்பெயர்வதும், தற்கொலைக்கு ஆளாவதும் நாட்டின் ஆரோக்கியத்திற்குச் சவாலாக அமையும்.

    விவசாயத்தை முன்னேற்றப் போராடி முனைந்தாலும், இயற்கைச் சதியும், எங்கிருந்தோ வருகிற அசரீர சக்தியுமொன்று குறுக்கே பாய்ந்துத் தடுத்துக் கொண்டே இருக்கிறது.

    தேவைக்கு அதிகமாக மழைபொழிந்தாலும் தேக்கிவைக்க ஆழமான ஏரிகளும், அணைத்தேக்கங்களும் இன்னும் வேண்டும், இருப்பதைச் சீரமைக்க அனைவரும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவேண்டும்.

    தமிழ்நாட்டில் 249 ஏரிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள், ஆனால், மழைபொழியும்போது அத்துணைத் தண்ணீரும் கடலிலே கலக்கிறதே தவிரச் சேகரித்து வைத்ததற்குத் தகுந்த சான்றில்லை.

    இன்று நம்முன்னே நிற்கும் விதவிதமான கோரிக்கைகளைப் பார்த்தால், பொங்கலைச் சந்தோஷமாகக் கொண்டாட மனம் வருமா என்பது கேள்விக் குறிதான்.

    தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கவேண்டும்.

    விவசாயிகள் செலுத்தவேண்டிய நிலவரி முழுமையாக ரத்து செய்யப்படவேண்டும்.

    தண்ணீர் இல்லாததால், பயிர்கள் வாடியதைக் கண்டும், வறட்சியால் பொருட்சேதமானதாலும் தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் உயிரிழந்த 215 குடும்பங்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கவேண்டும்.

    விடுமுறைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பொங்கல் விழாவை மீண்டும் பட்டியலில் சேர்க்கவேண்டும்.

    இத்துணைக் கோரிக்கைகளும் நிறைவடைந்தால்தான், பொங்கலைச் செழுமைப் பொங்கலாக மாற்ற முடியும்.

    வந்துவிட்டது பொங்கல்! இனி என்ன செய்யமுடியும், ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டுமென்ற கோரிக்கைக்காக வீதியிலே போராடிக்கொண்டிருக்கிற மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கையில், நல்லதொரு தீர்ப்பு வந்தால் ஒரு சமயம் மற்ற விவசாயிகள் துன்பங்களை மறக்க வாய்ப்புண்டு.

    சங்கடமான இத்தருணத்தில், சோகமான பொங்கல் கவிதையொன்றைப் பார்ப்போம்.

    இனிப்பில்லாப் பொங்கல் 

    தமிழென்று சொன்னாலே விறைப்பாய் நிற்கும்பயிரெல்லாம்
    தண்ணீரில்லாமல் தளர்ந்து வாடிநின்றயின்று வேதனையாகும்! 

    பொன்னிறக் கதிர்கள் பூமியை மறைத்ததோர் காலம்
    சாறிழந்த சாவியாயின்று சாய்ந்து நிற்கிற அவலம்
    மழைவேண்டி மன்றாடியதொருபக்கம்
    விளைநிலம் தண்ணீரின்றி விலைநிலமான தொருபக்கம்! 

    காவிரிநீருக்காகக் கெளரவத்தைவிட்டுக்
    கையேந்தி அக்கம்பக்கம்  வேண்டியதொருபக்கம்
    தண்ணீரென்பது உலகுக்கே பொதுவான தானாலும்
    தாகமெடுத்தால்கூட கொடுக்கமறுக்கிறது அண்டைமாநிலம்!

    வெள்ளைப்புரட்சி, பசுமைப்புரட்சி என்றொருகாலம்
    வறட்சிப்புரட்சியென வந்ததிக்காலம்
    உழவர்சந்தையில் உழுதுவிளைந்த பொருளில்லே இப்பஊரார் கொடுத்த பொருளெல்லாம் உருண்டைபாட்டிலிலே! 

    ஆட்டமும் பாட்டமும் ஆதவன் வணக்கமும்
    மஞ்சு விரட்டில்லையென்றவுடன் மங்கிவிட்டதோ?கட்டவிழ்த்துவிட்ட காளையெல்லாம்
    கட்டுக்கடங்காமல் ஓடியகாலம்போய்
    கட்டுத்தறியில் அடங்கியதேன்? 

    வீதி வழியோடிய வீரமுள்ள காளையெல்லாம்
    நீதிமன்ற உத்தரவுக்காக நிலையாக நின்றதிப்போது!ஆடியும் பாடியுங்கூடிய கொண்டாட்டமெல்லாமின்று
    கோரிக்கை நிறைவேறக் கோஷமிடும் பொங்கலானதோ!

    நெல்மணியும் இல்லை, விதைநெல்லும் இல்லை
    பொங்கலோ பொங்கலென்ற கோஷமுமில்லை
    புதுநாத்தில் புதுநெல்லைப் பிரித்தெடுத்துப்
    புதுப்பானையிலிட்டு பொங்குவதுதான் பொங்கல்
    பொங்கலன்று மகிழ்ச்சி பொங்குமில்லமெங்கும்
    பொதுவாக மஞ்சளும் கரும்புமெங்கும் வீதியெல்லாம் நிரம்பும்! 

    தனித்தனியே பொங்குவாங்க பொங்கலன்று
    சமத்துவமென்று வரும்போது அடுக்குப்பானையில்
    சமமாக ஊர்மத்தியிலொன்றாக பொங்குவாங்க
    பாலும், நெய்யுமுந்திரி பருப்பும் சேர்த்து
    பக்குவமாகச் செய்த(தைப்) பொங்கல்
    இனிப்புப் பொங்கலானாலும், இதுவரைபட்ட
    இன்னல்களை மறக்க நினைக்கும்போது
    ஓரகப்பைப் பொங்கல் வாயினுள்ளே இனிதேசெல்லும்
    ஒருகணம்நாவில் துன்பமெனும்கசப்பு லேசாகத் தெரியும் 

    வாழ்க்கையில் இன்பதுன்பமனைத்துக்கும் இடமுண்டெனினும்
    வாழ்த்துச்சொல்ல ஒருவருக்கொருவர் இசைவதுதான் மனிதஇயல்பு!

    அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

     

     

     

    Share
  • வல்லமைக் கவிஞர்!…

    பெருவை பார்த்தசாரதி

    a23491e2-7faa-4581-a8e8-aee10b8bc5ca

     c2aad4bf-ad76-4da8-a738-f6da4d4239eb

    இப்பொழுதெல்லாம், எந்த ஒரு அழைப்பிதழையும் கொடுப்பதற்கும், அவ்வளவாக யாரும் நேரில் வருவதில்லை. அலைபேசியில் அழைப்பிதழின் நகல் வந்தவுடன், என்ன சார்?.. அழைப்பிதழ் வந்ததா!..கண்டிப்பாக குடும்பத்துடன் வந்துவிடுங்கள்!.. என்கிற அன்பான வேண்டுகோளுடன் முடிந்துவிடுகிறது.

    இப்படித்தான், கவிஞர் ரவிச்சந்திரன் எழுதி வெளியிடும் “காதல் பொதுமறை” என்கிற நூலும், இந்த நூலை அது வெளிவருவதற்கு முன்பே ஆய்வு செய்து இரண்டு ஆய்வு நூல்களாக வெளியிடுபவர் முனைவர் வைகை மலர் அவர்களும் என்பதை  அலைபேசியில் வந்த அழைப்பிதழ் மூலம் அறிந்தேன்.

    “நூல் வெளியீட்டு விழா” அழைப்பிதழை பார்த்தவுடன், ஒரு மகிழ்ச்சியான விஷயம், வல்லமை மின் இதழில் எழுதிவருகின்ற பலருடைய பெயருக்கு முன்னால், “வல்லமை” என்கிற அடைமொழியோடு அச்சடிக்கப்பட்டிருந்ததோடு மட்டுமல்லாமல், அவர்களை மேடைக்கு அழைக்கும்போதெல்லாம், அரங்கமெங்கும் “வல்லமை” என்கிற வார்த்தை எதிரொலித்தது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. விழா முடிந்தவுடன், புதிதாக வந்திருந்தவர்கள் சிலர், என்னிடம் சிலர் வல்லமை என்பதற்கு விளக்கம் கேட்க, அவர்களுக்கு இந்த மின் இதழின் சிறப்பை நான் எடுத்துரைத்தேன்.

    தொகுப்புரை வழங்கிய தொகுப்புரை வழங்கிய கவிஞர் ஜோதிபாசு அவர்கள், விழாவின் முதல் பேச்சாளராக, “வல்லமை தமிழ்தேனி” என்று அழைக்க, அவரும், மிகச் சுருக்கமாக தனது உரையை முடித்துக் கொண்டார், அடுத்து வந்தது “வல்லமை புகழ் – பேராசிரியர் நாகராஜன்”, வழக்கம்போல் தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையோடு கூடிய பேச்சு, அரங்கத்தில் சிரிப்பொலி, அதற்கடுத்து “வல்லமை வில்லவன் கோதை”, நிறைய குறிப்புகளுடன் சற்று அதிக நேரம் கவிஞரின் நூல் பற்றிப் பேசினார், அடுத்து நட்சத்திரப் பேச்சாளர் என்று அழைக்க, பல வித சிரமங்களையும் பாராமல் பெங்களூருவிலிருந்து வந்த “வல்லமைப் பேச்சாளர் ஷைலஜா”, நூல் பற்றிய மதிப்பீட்டை வாசித்தார். கடைசியாகப் பேச வந்தவர் “வல்லமை ஆதிரா முல்லை” மகிழ்ச்சியாகப் பேசினார்.

    இடையே அடியேனுக்கும் ஒரு சிறுபங்கு, நான் கவிஞர் ரவிச்சந்திரனோடு நெருங்கிப் பழகிய அனுபவங்களை மட்டும் விழாவில் பேசினேன். தவிர்க்க முடியாத காரணங்களால், வல்லமை நிறுவனர் திரு அண்ணா கண்ணன் அவர்களும், தலைமை ஆசிரியர் திருமதி பவளசங்கரியும் விழாவிற்கு வரமுடியவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

    இந்த விழாவில் இரண்டு சிறப்பம்சத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

    ஒன்று..

    ஒரு நூல் வெளிவருவதற்கு முன்பே, அதைப் பற்றிய இரண்டு ஆய்வு நூல்கள் சேர்ந்து வெளிவருவது இதுவே முதல் முறை. இந்த இரண்டு ஆய்வு நூல்களையும் முனைவர் வைகை மலர் அவர்கள் எழுதி வெளியிட்டிருந்தார்கள்.

    இன்னொன்று…

    ஆங்கில நூல்களுக்கு இணையாக, தரமான முறையில் அச்சிடப்பட்டு வெளிவரும் காதல் பற்றிய தமிழ் நூல் என்பதை தலைமை உரை ஆற்றிய திரு ஜானகிராமன் தெளிவுபடுத்தினார்.

    விழாவின் நிறைவாக ஏற்புரை ஆற்ரிய காவிரிமைந்தன் அவர்கள், “தனக்கு ஏற்பட்ட சொல்லோட்டம்தான்” இந்த நூலை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தது என்பதைக் குறிப்பிட்டார்.

    இதற்கு முன் நான் குறிப்பிட்டிருந்த கவிஞர் ரவிச்சந்திரன்?..யார் அவர் என்று நினைக்கின்ற வேளையில், கவிஞர் காவிரிமைந்தனின் இயற்பெயர் ‘ரவிச்சந்திரன்’ என்பதை அறியாதவர் அறிந்துகொள்ளலாமே!.

    அழைப்பிதழில் அச்சிட்டிருந்த அனைத்து நபர்களும் அருமையாக கவிஞரின் இதர நூல்கள் பற்றியும், அயல் நாட்டில் அவர் ஆற்றிவரும் பணிகள் பற்றியும், கவிஞரைப் பற்றிய சொந்தக் கருத்துக்களையும் மேடையிலே நயம்பட எடுத்துரைத்தார்கள்.

    இவ்விழாவில் புலவர் ஆறுமுகம் பேசுகையில் ஒரு முத்தான கருத்தைப் பலர் முன்னிலையிலும் வைத்ததை நான் மிகவும் ரசித்தேன். அதாவது நாம் எந்த விழாவைக்கொண்டாடினாலும், அதில் இடம்பெற்றிருக்கக்கூடிய நாயகனை மட்டுமே புகழுகிறோமே தவிர, இச்சாதனையின் பின்னால் இருக்கக்கூடிய, அவருக்கு உறுதுணையாய் இருந்த அவரின் மனைவியைப் பற்றி ஒரு வரி கூடச் சொல்லுவதில்லை என்று சொன்னதோடு, கவிஞர் குடும்பத்தினர் அனைவரையும் மேடைக்கு அழைத்துப் பாராட்டினார்.

    நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அனைவரும், மிகச் சுருக்கமாக தனது உரையை முடித்துக் கொண்டாலும், மாலை ஆறு மணிக்குத் தொடங்கிய விழா, இரவு 10 மணி வரையிலும் சுறுசுறுப்பாக இயங்கி, பூரி, ஊத்தப்பம், கிச்சடி, இனிப்பு என்று தட்புடலாக இரவு விருந்து நடந்து முடிந்தது.

    தற்போது கவிஞர் காவிரிமைந்தன் வல்லமையோடு இணைந்து புதிய எழுத்தாளர்களையும், புதிய போட்டிகளையும் நடத்தி தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளைகுடா நாடுகளிலும் வல்லமையின் புகழைப் பரப்பிவருகிறார்.

    தற்போது, சென்னையில் நடந்த தனது சொந்த நூல் வெளியீட்டு விழாவிலும், வல்லமை அன்பர்களுக்கு வாய்ப்பளித்தற்கு, அனைவரும் வல்லமையின்  மடலாடலில் நன்றி தெரிவித்திருக்கிறார்கள் என்பது, இங்கே குறிப்பிடத்தக்கது.

    வளைகுடா நாடுகளில், வானலை வளர்தமிழ், தமிழ்த்தேர், கண்ணதாசன் தமிழ்சங்கம் போன்ற வற்றின் மூலம் தமிழர்களை ஒன்றிணைத்து, பல விழாக்களை நடத்திவருவதன் மூலம் தமிழர்களையெல்லாம் ஒன்றிணைத்து, ஊக்குவித்து வருவது, அங்கே பணிபுரியும் தமிழ் ஆர்வலர்களுக்கு நன்றாகத் தெரியும்.

    தற்போது, தனது தமிழ்பணியில் சிறிதளவை வல்லமையோடு இணைத்துக் கொண்ட கவிஞர் காவிரிமைந்தன் எத்துணையோ பட்டம் பெற்றிருந்தாலும், இன்றிலிருந்து, தலைப்புக்கு ஏற்றவாறு, அவரை…

    “வல்லமைக் கவிஞர்”

    என்று நாம் அழைத்தாலென்ன!..

    அன்புடன்

    பெருவை பார்த்தசாரதி

    Share
  • யாத்ரானுபவம்-2013

    பெருவை பார்த்தசாரதி

    DSC05687

    இன்று நாம் எந்த ஒரு மருத்துவரிடம் சென்றாலும், அவர்கள் மருத்துச் சீட்டோடு கூடவே பரிந்துரைப்பது நடைபயிலுதலும் ஒன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, அன்றாடம், அதிகாலை நடைபயிலுதல் என்பது மனிதனுக்குள்ள அத்தியாவசியக் கடமைகளுள் ஒன்றாகிவிட்டது. ஆனால் இன்று இருக்கும் அவசர யுகத்தில் தினமும் நடைப் பயிற்ச்சி முடித்துவிட்டு அலுவலகம் செல்வதென்பது பலருக்கு சற்று சிரமம்தான்.

    அனுதினமும் நடக்கமுடியவில்லையே?..என்பவர்களுக்கு, வாரத்தில் ஒரு நாள் அல்லது 15 நாட்களுக்கு ஒரு நாளாவது எங்காவது நடந்து செல்ல வேண்டும் என்றும் தோன்றும்.   தினமும் அலுவலகம், வீடு, குடும்பம் போன்ற அன்றாட பணிகளில் ஈடுபட்டு அந்த வட்டத்துக்குள்ளேயே சுழன்றுகொண்டிருப்பவர்களுக்கு, ஒரு சில நாட்கள் இவை எல்லாவற்றையும் மறந்து, எங்காவது அடர்ந்த காடு, இயற்கைவளம் நிறைந்த வயல்வெளிகள், ஆரோக்கியமான சுற்றுச் சூழல் இவற்றையெல்லாம் கண்டு களிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது சகஜம்!..

    இப்படி ஒரு ஆசை எழுவது, பொதுவாக அனைவருக்கும் பொருந்தும்.  ஆக ஒரு தொலைதூர நடைப்பயணத்தின் அடிப்படையில் தோன்றியதுதான் “பாத யாத்திரை”. இருப்பிடத்துக்கு வெகுதொலைவில் உள்ள ஆலயங்கள், மலைமேல் எழுந்தருளியிருக்கும் இறைவனைத் தரிசிக்க நடப்பயணமாகச் சென்று வருதல் என்பது, தொன்றுதொட்டு அனைத்து மக்களாலும் கடைபிடித்து வரப்படுகிறது.

    சேர்ந்தார்ப்போல் நான்கு நாட்கள் விடுமுறை வரும்போது, வீட்டில் அடைந்து கொண்டு வெளியே செல்லாமல், தொலைக்காட்சி முன்னும். இணைய தளத்திலும் காலம் கழிவதைவிட இறையருட்தலங்களுக்கு நடைப்பயணமாக சென்று வந்தால், மனம் விசாலம் அடைந்து,, நிம்மதி நிரந்தரமாகக் குடிகொள்ளும்.

    தேக ஆரோக்கியத்திற்காக தினமும் விளையாட்டு மைதானத்திலும், பூங்காக்கள் மற்றும் சாலைகளிலும் நடந்து சென்றாலும், இறை சிந்தனையோடு நீண்ட நெடுந்தூரத்தை நடந்து கடக்க திருமலை பாத யாத்திரை கைகொடுத்தது.

    இந்த யாத்ரானுபவத்தை வல்லமை வாசகர்களோடு பங்கிட்டுக் கொள்ள விழைகிறேன்.

    சென்னை எல்லை முடிந்து, ஆந்திர எல்லை ஆரம்பித்தவுடன், வழிநெடுக பச்சைப்பசேலென்ற வயல்வெளிகள், பறவைகளும், விலங்குகளும் எழுப்பும் ஒலி மிகத்துல்லியமாகக் கேட்டதை ரசித்தபடி, சில்லென்ற தண்ணீரில் ஆங்காங்கே பசுமைமான புல்வெளியில் குளித்த படி நான்கு நாட்கள் பயணம்.

     ஒவ்வொரு நாளும், இரவில் இரண்டு மணிக்கு மேலும், பகலில் மூன்று மணிக்கு மேலும் தொடர்ந்து நடந்து சென்று, கடக்க வேண்டிய தூரத்தை மெதுவாகக் கடந்து விட்டோம்.  சூரிய, சந்திரக் ஒளிக்கதிர்கள் தொடர்ந்து நமது உடலில் பட்டுக் கொண்டே இருந்ததால் உடல் ஆரோக்கியத்தில் சற்று மாறுதல் அடைந்ததை உணர முடிந்தது.

    நமது உடலில் உள்ள ஒட்டுமொத்த நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாடுகளும் கால் பாதத்தில்தான் அமைந்து இருக்கின்றன என்பதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம். அவ்வப்போது, ஒரு சில காத தூரத்தை செருப்பு அணியாமல் நடந்து சென்றதால், காலில் சிறுமணிக்கற்கள் குத்தி வலியைப் போக்கி, பாதத்திற்கு இதம் அளித்ததோடு, இதர உடல் உபாதைகள் குறைத்ததை உணர முடிந்தது. மனமும் சாந்தி அடைந்தது.

    சிறு சிறு குழுக்களாக, நண்பர்களுடன் ஒருவருக்கொருவர் தமக்குத்தெரிந்த ஆன்மீகக் கதைகளைச் சொல்ல அனைத்தையும் கேட்டுக்கொண்டே சென்றதால், நாட்கள் போனது தெரியவில்லை. ஆந்திர எல்லைமுதல் திருப்பதி வரை வழியில் உள்ள அனேக வீடுகளில் திண்டோடு கூடிய திண்ணை கட்டி வைத்திருப்பதைக் காண முடிகிறது. யாத்திரிகர்கள் குளிப்பதற்கு தண்ணீர், ஓய்வெடுக்க இடம் எல்லாம் இலவசமாகக் கொடுக்கிறார்கள். ஒரு சில இடங்களில், யாத்திர்கர் என்று சொன்னாலே அனைத்தும் இலவசம்தான்.

    ஏழுமலையானை எளிதில் தரிசிக்க இயலாது என்பதுபோல், நான்காவது நாள் திருமலையை அடைந்தவுடன், சுமார் பத்து மணி நேரத்திற்கும் மேலாக கூண்டில் அடைக்கப்பட்ட பிறகு தான் பகவானின் அறுபுத தரிசனம் கிட்டியது.

    ஒவ்வொரு வருடமும் செல்லும் வழி ஒன்றுதான் என்பதால், சென்று வந்த தலங்களின் சிறப்புபற்றி சென்ற வருடம் வல்லமையில் வெளிவந்த பதிவை இதனுடன் இணைத்திருக்கிறேன்.

    http://www.vallamai.com/?p=30137

    Share
  • கண்ணனின் கட்டளை!…

    பெருவை பார்த்தசாரதி

    images1966 ஆம் வருடம் கவிர் வாலி இயற்றிய ‘கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் கண்ணன் பிறந்தான்’ என்ற அருமையான திரையிசைப் பாடல் இன்று அனைவரது நினைவுக்கும் வரும். வருஷம் தோறும், ஆவணி மாதம், கிருஷ்ணபட்ச அஷ்டமி தினத்தை, கண்ணனின் அவதாரத் திருநாளாகக் கொண்டாடுகிறோம். அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டப் பிறந்த கண்ணனின் பிறந்த நாளன்று வல்லமை வாசகர் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கிருஷ்ணாவதார நோக்கமும், கிருஷ்ணலீலைகளும் யாவரும் அறிந்ததே. இதைப் பற்றிச் சொல்லாதவர்களும், எழுதாதவர்களும் கிடையாது என்றே கூறலாம். ஸ்ரீகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று, கிருஷ்ணாவதாரத்தில் நடந்த ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பற்றி அனைவரும் அறிந்திருந்தாலும், வித்தியாசமான கண்ணோட்டத்தில் அதன் உட்கருத்தை மட்டும் ஆறாய்வோம்.

    வசுதேவருக்கும், தேவகிக்கும் பிறந்த ஆறு குழந்தைகளை கம்சன் மிகவும் கொடூரமாக, முறட்டுத்துத்தனமாக, எப்படிக் கொன்றான் தெரியுமா?……அந்தப் பிஞ்சுக்குழந்தைகளின் இருகாலைப் பிடித்து உயரே சுழற்றி, அதன் தலையை சுவற்றில் அடித்துக் கொல்வானாம்.

    ஆறு குழந்தைகளை கொன்றபிறகு, ஏழாவது முறையாக தேவகியின் வயிற்றில் ஆதிசேடனுடைய அம்சம், கர்ப்பமாக வந்து தங்கியது. பகவான் துஷ்டர்களை அழிக்கும் பொருட்டு திருஅவதாரம் செய்யவேண்டிய காலம் நெருங்கி விட்டதை உணர்ந்து, மாயையை அழைத்து, பின் வருமாறு கட்டளையிடுகிறார்.  ‘நீ தேவகியின் வயிற்றில் வளரும் கருவை எடுத்து,  வசுதேவரின் முதல் மனைவியான ரோகினியின் வயிற்றிக்கு மாற்றி விடு, அதற்கு பதில் நான் தேவகியின் வயிற்றில் அவதாரம் செய்வேன்’ என்கிறார். அதேநேரத்தில் நந்தகோபரின் மனைவி யசோதையின் வயிற்றில் நீ பெண்ணாகப் பிறக்கவேண்டும்.  ஆண்டவன் கட்டளை அல்லவா, இந்த மாற்றம் ஒரு சில நொடியில் நடந்துமுடிந்ததை மானுடர்கள் ஒருவரும் அறிகிலர். கம்சனின் பயத்தால் தேவகியின் கர்ப்பம் கலைந்துவிட்டது என்று, மக்கள் தினமும் கம்சனை நிந்திக்கத் தொடங்கினர்.

    சில நாட்களுக்கு பிறகு தேவகி எட்டாவது முறையாக கருவுற்றாள் என்ற செய்தி அறிந்த கம்சன், முதலில் அவளையே கொன்றுவிட எண்ணுகிறான். அதன்பிறகு, பெண் கொலை, சகோதரி கொலை, கர்ப்பிணி கொலை என மூன்று கொடும்பாவங்களும் சேர்ந்து கொள்வதால் இந்த எண்ணத்தை கைவிடுகிறான். இந்த நேரத்தில்………

    இனிநடக்கப்போவதெல்லாம் ஆண்டவன் கட்டளையாயிற்றே!…..அதன்படிதான் எல்லாம் அரங்கேரவேண்டும். அப்போது மீண்டும் ஒரு மாற்றம் நிகழ்கிறது.  வசுதேவர் தேவகிக்குப் பிறந்த தெய்வக்குழந்தையை கோகுலத்து யசோதையிடம் விட்டு விட்டு, யசோதையிடம் இருக்கும் பெண்குழந்தையை மதுராபுரி தேவகிக்கும் ஒரே நேரத்தில் மாற்றம் செய்கிறார்.

    images (2)கண்ணிமைக்கும் நேரத்தில், மாற்றங்கள் சட்டென முடிவடைகிறது, பின்னர் கம்சனுக்கு எட்டாவது குழந்தை பற்றிய விஷயம் தெரிவிக்கப்பட்டவுடன், அவன் வாளை உறுவிக்கொண்டு, தேவகியின் கூச்சலைப் பற்றி கவலைப்படாமல், குழந்தையின் இரு கால்களைப் பற்றி, ஒரு சுழற்று சுற்றி ஓங்கி சுவற்றில் அடிப்பதற்க்கு முன்னால், மஹாசக்தியின் அம்சமல்லவா அந்த மாயக்குழந்தை,  கம்சனின் கைநழுவி வானத்தில் ஓரிடத்தில் நின்று,  “ஏ மூடனே, என்னை உன்னால் கொல்லமுடியாது, தெரிந்தோ, தெரியாமலோ எனது காலை பிடித்துவிட்டாய், காலைப்பிடித்தவனை நான் ஒருபோதும் கொல்லமுடியாது, எனது காலைப்பிடித்தால் அது சரணாகதிக்குச் சமம், அதனால் உன்னை மன்னித்துவிடுகிறேன். மேலும் ‘உன்னை கொல்வதற்கு ஒருவன் ஒருத்திக்கு மகனாய்ப் பிறந்து, வேறொருத்தியிடம் மகனாய் வளர்ந்து வருகிறான்’ என்று கூறி மறைகிறாள்”.

    இச்சொல்லைக் கேட்டபிறகு, கம்ஸனுக்கு மரணபயம் வந்து, அந்த  மரணபயமே கம்சனின் பாதி உயிரை எடுத்து விடுகிறதாம். மரண பயம் என்பது மரணத்தை விடக்கொடியது. இந்த பயமே, பலரை வாட்டி, வதைப்பதை நாம் எல்லோரது அனுபவத்திலும் காணலாம். மரணத்தை மனிதன் மறந்தாலும், அது நம்மை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொண்டிருக்குமாம்.

    ஆங்கிலப் படங்களில் வரும் சில மெய்சிலிர்க்கும் காட்சியைப் பார்த்திருக்கிறோம். படம் மிகச் சுவாரஸ்யமாகப் ஓடிக்கொண்டிக்கும்போது, வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு, அனைவரையும் கொடுமைப் படுத்தி, உலகை அழிக்க சவால் விட்டுக் கொண்டிருப்பான். இதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாக கதாநாயகன் மிகச்சாதாரணமா, கண்ட்ரோல் ரூமை அடைந்து, அதன் மூலம் வில்லனின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதைப்போல்……

    images (1)இறைவன் உலகில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். வசுதேவர், குழந்தையாகிய பகவானைத் தலையில் கூடையில் வைத்து எடுத்துச் செல்வதற்காக எத்தனிக்கும்போது,  வசுதேவருடைய கைவிலங்குகள் மற்றும் கால்விலங்குகள் அவரை அறியாமலேயே கழன்று விலகும், சிறைக்கதவுகள் தானாகத் திறக்கும். வழிப்பயணத்தின் போது, ஆதிசேஷன் துணையாகவும், தனது படத்தை விரித்து குடையாக மழையிலிருந்து பகவான்சிசுவைப் பாதுகாப்பான், யமுனைநதி தனதுயிரைப் பிடித்து நிறுத்தி, நீரைப் பிரித்து,  தானே வழிவிடுவாள், இச்சம்பவத்தின் போது எல்லாமே மாயையின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். வசுதேவர், யாதொரு கவலையும் இல்லாமல், இறைவன் இட்ட கட்டளையை இச்சையுடன் நிறைவேற்றுகிறார்.

    இறைவனைச் சரணாகதி அடைந்து, அவனே கதி என்பதை ஏற்றுக் கொண்டால், மற்றதெல்லாம் நாம் நினைத்தபடி நடக்கும் என்பதுதான இந்நிகழ்ச்சியின் நீதி. 5000 வருடங்களுக்கு முன்பே இந்த மாற்றங்கள் நிகழ்ந்த போது, ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். வசுதேவரின் கை மற்றும் கால் விலங்குகள் எப்படி தாமாக விலகியதோ, பகவானைச் சரணந்தவர்களிடம், பிறப்பு, இறப்பு, வாழ்க்கை போன்ற துன்பங்கள் அனைத்தும் தாமாக விலகிவிடும். நித்தமும், அனுதினமும் கண்ணனைத் தியானிப்பவர்களுக்கு பிறவித் துன்பம் இல்லை என்பதுதான் கண்ணனின் பிறவித் தத்துவம். இந்நிகழ்ச்சிகளைக் கூர்ந்து படித்து கிரகித்துக் கொள்வதின் மூலம், இதன் உட்பொருள் அறியமுடியும்.

    இந்நிகழ்ச்சிகளின் உட்கருத்தைப் படம்பிடித்துக் காட்டுவது போல, சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள் திருப்பாவையில் உள்ளடக்கிய 25 வது பாசுரத்தில் மிக அழகாகப் பாடியதைப் பார்போம்:-

    ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்

    ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,

    தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த

    கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

    நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

    அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்

    திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

    வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

    பொருள்:

    தேவகிக்கு மகனாய் பிறந்து அதே இரவில், யசோதையின் மகனாய் ஒளிந்து வளர்ந்துவர, அதைப் பொறுக்காது உன்னைக் கொல்ல நினைத்த, கம்ஸனின் வயிற்றில் நெருப்பாக நின்றாய்!, எங்கள் குறை தீர்க்கும்படி உன்னைப் பிரார்த்தித்து, வந்தோம், நாங்கள் விரும்பியதைத் தருவாயானால், லக்ஷ்மி தேவி விரும்பும் உன் குணச்செல்வத்தையும், உன் வீரத்தையும் நித்தமும் பாடி வருத்தம் நீங்கி மகிழ்ந்து கொண்டே இருப்போம்.

    images (3)இந்தப் பாசுரத்தில் அடங்கிய எண்ணற்ற தத்துவங்களைப் போல், மேலும் பல மகிமைகளையும், உட்கருத்துக்களையும் கிருஷ்ணாவதாரத்தின் அடிப்படைத் தத்துவம் உட்பட பல தகவல்களை, ஸ்ரீமத் பாகவதத்திலுள்ள,  பத்தாம் ஸ்கந்தத்தில் படித்துத் தெரிந்து கொள்ளலாம். இச்சம்பவத்தைப் போல் வெண்ணெய் திருடுதல், ராஸ நடனம் புரிந்து கோபியர்களின் உடைகளைக் களவாடுதல், புல்லாங்குழலில் கிருஷ்ணகானம் போன்ற கண்ணனின் ஒவ்வொரு லீலைகளுக்குள்ளும் பல உண்மைத் தத்துவங்கள் அடங்கி இருக்கிறது.

    கிருஷ்ண ஜெயந்தியன்று பாகவதம் முழுவதும் படித்தால் நலம்தரும், முடியாதவர்கள் பகவத்கீதை படிக்கலாம், அதுவும் முடியாதவர்கள் கிருஷ்ணாவதாரத்தில் நிகழ்ந்த கிருஷ்ணலீலைகளுள் ஒன்றையாவது படித்தால் அதைவிடப் புண்ணியம் வேறொன்றுமில்லை என்பது, நமது பூர்வாச்சார்யர்கள் மற்றும் மஹான்களின் கருத்தாகும்.

    “ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து”

    Share
  • இனி ஒரு சுதந்திரம்!…

    பெருவை  பார்த்தசாரதி

     

    இனி ஒரு சுதந்திரம்!…

    வல்லமை வாசகர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!..

    images11

    இன்று (15-08-2013) 67 வது சுதந்திர தின விழாவை ஒட்டி, ஏழெடுக்குப் பாதுகாப்பின் அரவணைப்பில், நமது நாட்டின் தலைவர்களால் நாடெங்கிலும் நமது தேசியக்கொடி ஏற்றப்பட்டு, இந்தியாவின் சாதனைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள்.

    இந்த சுதந்திர தினத்தின்போது மிகவும் பெருமைப் படவேண்டிய முக்கியச் செய்திகளுள், இந்தியாவில் தயாரித்த பிரமாண்டமான விமானம்தாங்கிக் கப்பல் “விக்ராந்த்” கண்டிப்பாக இடம்பெற்று அனைவராலும் பாராட்டப் படவேண்டிய தகுதியான செய்தியாக இருக்கிறது. தேசியக்கொடியேற்றி தலைவர்களெல்லாம் சிறப்புரையாற்றும்போது, இதுபோல் இன்னும் பல இந்தியப் பெருமைகளை அள்ளி அடுக்குவார்கள்.

    இதே ஆண்டில் சுதந்திரம் அடைந்த அண்டை நாடுகளோடு நம்மை ஒப்பிடும்போது, 60 ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் நிறைய வளர்ச்சி பெற்றிருக்கிறோம் என்பதில் மற்ற நாட்டிற்கு இல்லாத பெருமை நமது நாட்டிற்கு உண்டு. அதே சமயத்தில் மற்ற விஷயத்திலும் அதாவது, உலக வங்கியில் இந்தியாவின் கடன் பாக்கி, பொருளாதார நிலைமை, நாட்டின் பாதுகாப்பு, தற்காப்பு இலக்கணம், அனைவருக்கும் கல்வி போன்றவற்றில், மற்ற நாடுகளை விட இன்னமும் பின் தங்கி இருப்பது வருத்தம் தரக்கூடியது.

    ஆனால், நம் சுதந்திரம் அடைந்து என்ன சாதித்திருக்கிறோம் என்று நம் வீட்டில் இருக்கும் வயதான முதியவர்களைக் (சுதந்திரம் அடைவதற்கு முன் பிறந்தவர்கள்) கேட்டுப் பாருங்கள், அவர்களுக்கு இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து இருக்காது. ஏனென்றால்?…..காலணி ஆதிக்கத்தால் அன்று பாரதம் பாதிப்படைந்திருந்த போதிலும், நேரத்திற்கு எல்லாம் கிடைத்தது, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி பற்றி, மரியாதையும் மதிப்பும் மேலோங்கி இருந்தது பற்றி, வேடிக்கையாக உதாரணங்கள் சொல்லி விவரிப்பார்கள்.

    தண்ணீர் தட்டுப்பாட்டால், அண்டை மாநில உறவுகள் மோசமடைந்தது, கல்வி வியாபாரமாகியது, லஞ்சம் தலைவிரித்தாடுவது, இப்படி நாட்டில் நிலவும் பல பிரச்சினைகளை அள்ளி அடுக்குவார்கள். மற்ற விஷயத்தைவிட இன்று அதிக அளவில் பெருகி வரும் “முதியோர் இல்லம்” அதில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.

    நாளை சுதந்திர தினம்,

    இன்றே டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்கி பதுக்கி விடத் துடிக்கும் இளைஞர் பட்டாளம்,

    புதிய சினிமாப் படம் பார்ப்பதற்கு டிக்கட் வாங்க, சுதந்திர தினத்தன்று கியூவில் நிற்கும் பாமர ஏழை மக்கள்,

    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விடுமுறையை வீணடிக்கும் கூட்டம்,

    இதுதான் சுதந்திர தினக் கொண்டாட்டமாக இன்றய நிலை.

    ஒரு காலத்தில் நமது நாடு “பாரதம்” என்ற பெயரில் உலகம் முழுவதும் அறியப்பட்டு, அங்கே நமது நாட்டின் கலாச்சாரம் மேலோங்கி இருந்தது. இன்று அது மாசு படத்தொடங்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் புதுதில்லியில் மருத்துவ மாணவிக்கு நேர்ந்த கொடுமை உலகையே உலுக்கியது, இதுபோல தருமபுரி சம்பவம் போன்ற பலவற்றைச் சொல்ல முடியும்.

    சுதந்திரம் அடைந்த ஆண்டிலிருந்து, இன்று வரை என்னன்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது?..

    எந்தந்த துறைகளில் நாம் இன்னும் முன்னேறவில்லை?…

    நம் நாட்டில் கல்வி அறிவு பெற்ற இளைய சமுதாயத்தினர் ஏன் வெளிநாட்டில் பணி செய்கிறார்கள்?..

    சுதந்திர இந்தியாவில், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களிலும், ஆலயங்களிலும் ஏன் குண்டு வெடிப்பு?…

    “சுதந்திரம்” என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?…

    பேச்சுச் சுதந்திரத்தால் வன்முறை,

    எழுத்துச் சுதந்திரத்தால் கலவரம்,

    மொழிச் சுதந்திரத்தால் இனப்படுகொலை,

    ஒவ்வொரு ஆண்டும் “சுதந்திரதின” விழாவைக்கூடத் தகுந்த பாதுகாப்பின்றி சுதந்திரமாகக் கொண்டாடமுடியவில்லையே ஏன்?..

    இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடினால்!.. எல்லாவற்றுக்கும்  இன்னும் ஒரு சுதந்திரம் தேவை  என்று போராட வேண்டி இருக்கும்.

    மஹத்மா, நேதாஜி, நேரு, திலகர், வஉசி போன்ற பல தலைவர்களை நினைத்து நாட்டுப் பற்றோடு சுதந்திர தினத்தை உண்மையிலேயே கொண்டாடுகிறோமா?.. என்றால்!…. “இல்லை” என்பதே சரியான பதிலாக இருக்கும் போலிருக்கிறது.

    downloadஇதையெல்லாம் அன்றே யோசித்துப் பார்த்ததால்தானோ என்னவோ, 200 ஆண்டுகால காலணி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சுதந்திரம் அடைந்த மகிழ்ச்சியில் நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் போது, அந்த மகிழ்ச்சியில் “மஹாத்மா” அவர்கள் பங்கெடுக்கவில்லை என்பதை இங்கே, இந்த நேரத்தில் கண்டிப்பாக நாம் அனைவரும் நினைவு கூறவேண்டும்.

    நாடு சுதந்திரம் அடைவதற்கு எவ்வளவு துன்பங்களை மக்கள் அனுபவித்தார்களோ, அது இப்போதும் குறைந்த பாடில்லை. இருந்தாலும், இதுவரை சாதித்ததை நினைத்து, நேர்மறை எண்ணங்களோடு  “சுதந்திர தின வாழ்த்துக்களை”   ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவோம்.

    “அனைவருக்கும் அறுபத்து ஏழாவது சுதந்திர தின வாழ்த்துக்கள்”

    Share
  • “பவித்ரம்”

    பெருவை பார்த்தசாரதி

     DSC04625DSC04600DSC04602

    “பவித்ரம்” என்பதற்கு புனிதமான, சுத்தமான, உண்மையான என்கிற பல அர்த்தங்கள் உண்டு. சென்னையில் இயங்கி வரும் “பவித்ரம்” என்கிற தொண்டு நிறுவனமும் பல புனிதமான நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு வருகிறது. இத்தொண்டு நிறுவனத்தின் தலைவராக திரு பேராசிரியர் கே.ஜி. ரகுநாதன் அவர்களும், பொதுச்செயலாளராக திரு ஆர். பாபுசேனன் அவர்களும், பொருளாளராக திருமதி ஜாய்ஸ் திலகம் அவர்களும், தங்களை முழுவதும் சமூக சேவையில் ஈடுபடுத்திக்கொண்டு தொடர்ந்து 10 ஆண்டுகளாக இந்நிறுவனத்தை மிகச் சிறப்பாக வழி நடத்திக்கொண்டு வருகிறார்கள். சமுதாயத்தில் பின் தங்கிய மாணவர்களின் நலனில் அக்கரை கொண்ட நிறுவனம் என்பது பவித்ரத்தின் மற்றொரு சிறப்பு.

    பத்து நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வரவேண்டும் என்கிற கொள்கையின் அடிப்படையில், முதல் நிகழ்ச்சியாக, மூன்று தமிழ் மாவட்டங்களில் “விவசாயிகளின் இன்றய நிலை” குறித்த கருத்தரங்கம்  ஒன்றை நடத்திச் சிறப்பித்தது. ஞாயிறு காலை, மைலாப்பூரில் அமைந்திருக்கும் கோகலே ஹாலில், இரண்டாவது நிகழ்ச்சியாக சிறந்த புத்தகங்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. தத்துவம், ஆன்மீகம், அறிவியல், சிறுகதை மற்றும் மொழிபெயர்ப்புக்கான நூல்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கி படைப்பாளிகளை கெளரவித்தார்கள்.

    “ராமமூர்த்தி அறக்கட்டளை” சார்பில் சிறந்த புத்தகங்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.  இந்நிறுவனத்தின் அறக்காப்பாளராக திரு ஹரிஹரசுப்ரமணியம் அவர்கள் பதவி வகிக்கிறார்.  அவருடைய நண்பரின் நினைவாக, விருப்பமாக நண்பர் சேர்த்து வைத்துள்ள பணத்தை நல்ல முறையில் மிகச்சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என்கிற மேலான எண்ணத்தில் தத்துவம், ஆன்மீகம் மற்றும் அற்வியல் நூல்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

    அடுத்து எழுத்தாளர், மொழிபெயர்பாளர் ‘காசிஸ்ரீஸ்ரீ” அவர்கள் குடும்பத்தினரின் சார்பாக சிறந்த மொழிமாற்ற நூல்களுக்கும், குறுநாவல்களுக்கும் பரிசுகளை வழங்கினார்கள்.

    அறிவியல் நோக்கில் வேதங்களை ஆய்வு செய்து, ஆக்கப் பூர்வமான அறிவியல் சிந்தனைக் களத்தின் துவக்கம் பாரதம் என்கிற நோக்கில் “வேதம் கண்ட விஞ்ஞானம்” என்கிற நூலை எழுதிய திரு பி. முத்துக்குமாரசுவாமி, திரு ஜே. வீரநாதன் எழுதிய “எம்எஸ் ஆபீஸ்”, திரு ஆர் சிவராமன் எழுதிய “எண்ணங்களின் எண்ணங்கள்”, திரு ரகுவீர பட்டாச்சார்யர் அவர்கள் எழுதிய “பாதுகா சகஸ்ரம்” என்கிற நூல், காம்கேர் புவனேஸ்வரி அவர்கள் எழுதிய “கம்ப்யூட்டரில் தமிழ்” என்கிற நூல், மிகச்சிறப்பாக மொழி பெயர்ப்பு நூல்களை எழுதிவரும்  திரு சாருகேசி அவர்களுக்கு ‘மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர்’ என்கிற பட்டமும்,  சிறந்த குறுநாவலுக்கான பரிசாக “கருவேலங்காட்டுக் கதை” என்ற குறுநாவலை எழுதிய சினிமா இயக்குனர் திரு ராஜா செல்லப்பா, இவர்கள் அனைவருக்கும் பவித்ரம் சார்பாக பரிசும், சான்றிதழும் வழங்கி கெளரவிக்கப் பட்டனர். அரசு மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம்பிடித்த மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.

    இவ்விழாவிலே, முக்கியமாக குறிப்பிட வேண்டியது, புத்தகங்களுக்கு மட்டுமல்லாமல், இணையதளத்திலே இடம்பெறுகின்ற சிறப்பான கட்டுரைகளையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு அதற்கும் பவித்ரம் சார்பாக சான்றிதழும், பரிசும் வழங்கியது. வல்லமை மின் இதழில் வெளியான ‘நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்” என்ற என்னுடைய தொடர்கட்டுரைக்கு பரிசும்  சான்றிதழும் வழங்கப்பட்டது, வல்லமைக்கு மேலும் ஒரு சிறப்பு என்பதை மிகப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பவித்ரம் தொண்டு நிறுவனம் நடத்திய பரிசளிப்பு விழாவை மிகச்சிறப்பாக வழிநடத்தியவர்கள்:: திரு கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன் (கலைமகள் ஆசிரியர்), திரு முத்துக்குமார் (டிரினிட்டி – ஆசிரியர்), திரு எஸ்.எஸ். ராஜ்குமார் (புரவலர் – பவித்ரம்), திரு டான்ஸ்ரீ குமரன் (முன்னாள் மலேசிய மந்திரி), திருமதி ஜாய்ஸ் திலகம் (மருத்துவ அதிகாரி – தமிழ்நாடு மெடிக்கல் மன்றம், மற்றும் சென்னை மாநகராட்சி, திரு ஹரிஹரசுப்ரமணியம் (டிரஸ்டி – ராமமூர்த்தி அறக்கட்டளை, துணைத் தலைவர்-இண்டியா சிமெண்ட்ஸ்)

     

     

    Share
  • நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள் – 30 (கடைசிப் பகுதி )

    பெருவை பார்த்தசாரதி

    நமக்கு நேரம் கிடைக்கும் போது, அதை நல்வழியில் செலவழிக்க விரும்புவதையே அனைவரும் விரும்புவோம் அல்லவா!….  கேளிக்கை என்று வரும்போது சினிமா, நாடகம், கடற்கரை மணலில் காற்று வாங்குதல், அலைபேசியில் அரட்டை அடித்தல், டிவி நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தல், அனேகமாக இதுபோன்ற ஏதாவொதொன்றில் நேரம் கழிந்துவிடுவது சகஜம்.

    அனேகமாக எல்லா நாட்களும் இது போன்று கழிந்து விடுகின்ற நிலையில், ஒரு மாதத்தில், ஒரு நாளில், ஒரு 2 மணி நேரத்தை நல்ல விஷயங்களைக் கேட்க சத்சங்களுக்குச் சென்று வந்தால் என்ன என்று தோன்றும். அச்சமயத்தில், மற்றவர் பேசுவதைக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துவதே, இந்த சத்சங்கத்தின் நோக்கம். ‘கற்றலில் கேட்டலே நன்று’ என்பது போல. கண்ணால் பார்த்து களிப்படைவதும், வாயால் உண்டு மகிழ்வதும், மூக்கால் வாசனை முகர்ந்து மலர்வதும், மெய்யால் உற்றறிதலும், காதால் நன்னெறிகளைக் கேட்டலும் சரிவர நடைபெற்றால்தான் உடலில் உள்ள உறுப்புகளுக்கு ஊக்கம் அளித்து உடலைச் சரிவர இயக்க முடியும்.

    ஏனைய மற்ற உடல் உறுப்புகளில் கண்ணுக்கும், காதுக்கும் தனிப்பட்ட சிறப்பு உண்டு. நாம் காணுகின்ற ஒரு பொருளின் ‘தோற்றம்’,  செவியின் மூலமாக வரும் ‘ஒலி’  இவையிரண்டும் மூளையில் பதிவு செய்யப்படுகிறது. செவிப்புலனுக்கு கண்புலனை விட சற்று மதிப்பு அதிகம். மனிதன் பெற்ற செல்வத்துள் செவிச்செல்வம் ஒப்பற்றது. அதனால்தான் “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்” என்ற சிறப்பை செவிப்புலன் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வாயால் கற்பித்தல் என்று வரும்போது காதால் கேட்டல் என்பதும் கூட வருகிறதல்லவா!….

    கற்பிப்பவரின் அறநெறிகள், அறிவுரைகள், போதனைகள், கேட்பவரின் செவி வழியே சென்று அறிவைப் புகட்டுகிறது. சிந்தனையைத் தூண்டுகிறது. மனதில் தோன்றும் எண்ணங்களை வடிகட்டி, தீயவைகளைக் களைந்து, நல்ல எண்ணங்களுக்கு வழி வகுப்பது சிந்தனை ஒன்றுதான். கேட்டலும், சிந்தனையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. கேட்கும் திறன் குறைவாக இருந்தால் சிந்தனையும் குறைவாகத்தான் இருக்கும். நாம் எப்போதுமே பேசிக்கொண்டிருக்கிறோம், என்றைக்காவது யாராவது சொல்வதை நின்று நிதானித்துக் கேட்டதை காதில் வாங்கிக்கொண்டு சிந்தித்திருக்கிறோமா?.. முயற்சி செய்து பார்த்தால் கேட்டலின் திறம் சிந்தைனை மூலம் புலப்படும்.

    இந்தக் தொடரின் கடைசி பகுதியின் மூலம், எனக்குத் தோன்றிய ஒரு சிறிய கருத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சிலசமயங்களில் நாம் பேசுவதை சற்று நிறுத்திவிட்டு, அறிவார்ந்த அறிஞர் பெருமக்கள் பலர் சொல்வதைக் காது கொடுத்து பொறுமையாகக் கேட்டாலே வாழ்க்கை முறைக்குப் பயனுள்ள தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் மிக எளிதாகப் பெற்றுவிட முடியும். நேரம் கிடைக்கும் போது, குடியிருப்புக்கு அருகில் நடந்து கொண்டிருக்கும் ஏதாவதொரு சத்சங்கத்திற்குச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் அதனால் ஏற்படும் எண்ணற்ற பலன்களையும், அனுபவங்களையும் எளிதாக உணர்ந்து கொள்ளமுடியும்.

    அனுதினமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நமக்கு, சற்று நேரம் மன நிம்மதிக்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும் சத்சங்கங்கள் துணைபுரிகின்றன. நமது வாழ்க்கையில் இடம்பெரும் அத்தியாவசிய அங்கங்களில் சத்சங்கங்களும் விலக்க முடியாத ஒன்றாகி விட்டது என்பதே உண்மை.

    நன்னெறிகளைக் கேட்பதின் மூலம் சில சங்கடங்கள் கூடத் தீரும் என்பதற்கு பாகவதம் ஒரு சிறந்த உதாரணம். “இன்னும் ஏழு நாட்களே உயிரோடிருப்பேன், அதற்குள் ஞானம் பெறுவது எப்போது” என்று கேட்ட பரீட்சித்து மகராஜாவிற்கு, சுக முனிவரின் உபதேசம் சாந்தி அளித்து, முக்திக்கும், ஞானத்திற்கும் வழிகாட்டும் கருவியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இங்கு சுகர் சொல்வதை பரீட்சித்து பொருமையாக கவனித்து காதில் வாங்கிக்கொள்வதை கவனத்தில் கொள்ளவேண்டும். பரீட்சித்து மகராஜாவின் தொடர்ந்து வரும் கேள்விக்கெல்லாம், பதிலாக வருகின்ற சுகரின் பகவத் தத்துவத்தை விளக்குகின்ற முறையில் சொல்லும் விதமாகவும் கேட்கும் விதமாகவும், அமைந்த “ஸ்ரீமத் பாகவதம்” 18000 சுலோகங்கள் கொண்டது. வியாச பகவான் இயற்றிய இந்த உபதேசம் வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்ற அரிய பொக்கிஷங்கள் அடங்கிய 18 புராணங்களில் சிறந்த ஒன்று. பாரதத்தை ஒரே தேசமாக அடையாளம் காட்டிய பெருமை மகாபாரதத்துக்கும், இராமாயணத்துக்கும், 18 புராணங்களுக்கும் உண்டு.

    ‘சத்’ என்றால் உண்மை,    ‘சங்கம்’ என்றால் ‘சங்கமித்தல்’ அல்லது ஒன்றாகச் சந்திப்பது என்பது பொருள். பலர் ஒன்றாக, ஒரு இடத்தில் குழுமியிருந்து, செவிக்கு இனிமையான, இசையோடு கூடிய  சொற்பொழிவாற்றலை கேட்பது அல்லது கேள்வி, பதில் போன்றவற்றால் உரையாடுவது என்பதே “சத்சங்கம்” என்றழைக்கப்படுகிறது. இப்போதெல்லாம், அலுவலகத்தில் அல்லது வீட்டிலிருந்தபடியே, சத்சங்களில் நடப்பதை செலவில்லாமல் தொலைக்காட்சி மூலமாகவும் பார்க்க முடிகிறது. அதிகாலை ஒவ்வொரு தொலைக்காட்சியிலும், யாராவது ஒரு மஹான் அல்லது குருஜி, மக்கள் மத்தியிலே சத்சங்கம் நிகழ்த்திக் கொண்டிருப்பதைக் காணலாம்.

    இன்றைய காலகட்டத்தில் நடத்தப்படும் சத்சங்கங்களுக்கும், பண்டைய காலத்தில் நடத்தப்பட்டவைக்கும் இருந்த வேறுபாடு என்னவென்றால், பழங்காலத்தில் எவ்வித பலனும் இன்றி நேர்மையோடும், நாணயத்தோடும் சத்சங்கம் நடத்தினார்கள், ஆனால் இன்று அப்படி இல்லை, நம் கையில் கொஞ்சம் நாணயம்(பைசா)  இருந்தால்தான் இது போன்ற மஹாசத்சங்களில் பங்கேற்க முடியும் என்பதற்கு, தலா 200 ரூபாய் கொடுத்து வாங்குகின்ற நுழைவுச் சீட்டே ஆதாரம். கலந்து கொண்ட பிறகு பணவிஷயம் மேலும் தொடரலாம் என்பது நுழைவுச் சீட்டின் பின்புறம் மிகச்சிறிய எழுத்தில் படிக்கமுடியாதபடி அச்சடிக்கப்பட்டிருக்கும்.

    கோடானு கோடி மக்களுக்கு மானசீக குருவாகத் திகழ்ந்த ஸ்ரீஆதிசங்கரர், தனது வாழ்நாள் முழுவதும் உஞ்சவிருத்தி செய்த படியே சத்சங்கம் நிகழ்த்தியதாகவும், சத்சங்கத்தின் அருமை, பெருமைகளை தனது பஜகோவிந்தத்தில் நிறைய இடத்தில் குறிப்பிட்டு இருப்பதாகவும் ஒரு நூலில் படித்திருக்கிறேன். இன்று பொருளாதார வசதியில்லாதவர்களுக்கென்றே, நகரத்தில் சில இடங்களில் நித்திய சத்சங்கள் நடத்தப்படுகிறது என்பது மகிழ்ச்சியான செய்தி. போதிய இடவசதி இல்லையென்றாலும், சாலையோரத்தில் ஓரமாக நின்று கொண்டு, நல்வாழ்க்கைக்கு வேண்டிய அறநெறிகளையும், தத்துவங்கள், போதனைகள் போன்றவற்றைப் பெற்றுவிடமுடியும்.

    சத்சங்களில் கலந்து கொள்வதால் என்ன பலன்?…என்று கேட்கிறவர்களுக்கு!….இறுகிய மனது இளகி, இயல்பான நிலைக்குத் திரும்ப வழி செய்கிறது என்பது மஹான்களின் ஆலோசனை.  அங்கிருக்கும் நிசப்தமான சூழ்நிலை, மெல்லிய இசை, உரை நிகழ்த்துபவரின் கூச்சல் இல்லாத பேச்சு இவையெல்லாம் எந்திரத் தன்மை பெற்ற நம் மனதை சிந்திக்க வைத்து, மனதுக்கு இதமளிக்கிறது என்பது அனுபவத்தில் கண்ட உண்மை. இதுபோன்ற பல காரணங்களால், மனம் அமைதி பெற்று, மறுபடி செல்லவேண்டும் என்ற ஒரு வித ஈர்ப்பு சக்தியை நம்மிடம் பரவச் செய்யும்.

    ஒரு புத்திசாலிக்குக் கூட சில சமயம் முடிவு எடுக்க முடியாமல் தத்தளிக்கும் நேரம் வருவதுண்டு.  அச்சமயத்தில் அவருக்குச் சரியான பாதை தெரியாமல் விழிக்கும் போது, சாதுக்களும், ஞானிகளும் வழிகாட்டுகிறார்கள். கோடா வெங்கடேஸ்வர சாஸ்திரிகள் நடத்திய ஆன்மீகச் சொற்பொழிவில் வெளிவந்த, இக்கட்டுரைத் தொடருக்கு தொடர்புடைய தகவல் ஒன்றை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.

    ஞானிகள் என்றுமே அசத் சங்கத்தை விரும்பாதவர்கள்.  அவர்களுடைய பேச்சு என்றுமே உண்மையானதாகவும், நேர்மையானதாகவும், ஆத்ம ஞானத்தைப் பற்றியே இருக்கும். தனது இயல்பு நிலையிலிருந்து, மனிதன் உயர்வு நிலைக்குச் செல்ல, வாழ்வில் சத்சங்கம் இருக்கவேண்டும், ஆனால் அசத்சங்கம் ஒரு போதும் இருக்கக் கூடாது.

    பொய் பேசும் மனிதனுக்கு மன நிம்மதி என்பது இராது.  ஒரு பொய்யைச் சொல்லி பிறகு அதை மறைக்க பல பொய்களை மேலும் சொல்லி, முடிவில் மன சஞ்சலத்தை அடைந்து அதிலிருந்து வெளிவரமுடியாமல் உழலும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். மன சஞ்சலத்திற்க்கும், மன உளைச்சலுக்கும் ஆளான மனிதன், ஞானிகளின் அறிவுரைப்படி நடந்தால், மனத்தெளிவு பெற்று நல்முடிவு எடுக்கும் நிலையை அடைந்து, மன ஆரோக்கியத்தை எளிதில் பெறமுடியும். ஒரு பலனையும் எதிர்பார்க்காமல், பிறருக்கு உதவி செய்தால், தனக்கு வேண்டிய உதவி பிறரிடமிருந்து தானாகவே வந்து சேரும் என்பதற்கு ஒரு சின்ன கதையையும் சொல்லி இருக்கிறார்.

    ஒரு ஏழை, தினமும் ஒரு ஞானிக்கு உணவளிப்பதைக் கடமையாகக் கொண்டிருக்கிறான். ஒரு நாள் தன்னுடைய மூதாதையர்களுக்குத் திதி கொடுப்பதற்கு தன்னிடம் எவ்வித பொருளும் இல்லாததால், ஞானியிடம் சென்று உதவி கேட்கிறான்.  தன்னிடம் கொடுப்பதற்க்கு எதுவும் இல்லாத ஞானி, ஒரு காய்ந்த சுரைக்காயை அவனிடம் கொடுக்கிறார். மனைவியிடம் விபரத்தைச் சொல்லி வெறுப்போடு, அச்சுரைக்காயைக் வைத்து ஏதாவது செய் என்று சொல்கிறான். வேறு ஒன்றும் கைகொடுக்காததால், இருக்கின்ற சுரைக்காயை வைத்து திதி கொடுத்து விடலாம் என்று நினைத்து, மிகவும் சிரத்தையோடு சுரைக்காயை நறுக்குகிறாள் மனைவி.  அச்சமயத்தில் ஒரு அதிசயம் நிகழ்கிறது. சுரைக்காய்க்குள் இருக்கும் விதைகள், வைரக் கற்களாகப் பளிச்சிடுகின்றன. இருட்டாக இருந்த அவனது வாழ்க்கைக்கு, ஞானியின் தவ சக்தியின் மூலமாக வெளிச்சம் கிடைத்தது. தன்னிடம் கொடுப்பதற்கு எதுவுமே இல்லாத ஞானி, இறைவனின் மூலமாக, நேர்மையோடும், நாணயத்தோடும் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உதவி செய்த ஒருவனுக்கு, உயர்ந்த நிலையை அடைய வழிகாட்டுகிறார். இது கதையாகத் தோன்றினாலும் “பிறருக்கு நீ உதவினால், மற்றவர் உனக்கு உதவுவார்” உண்மையைப் பிரதிபலிக்கிறது.

         தனி மனிதனுக்கு வரும் துன்பங்களுக்கும், அவசர யுகத்தில் அழுத்தம் நிரம்பிய அல்லல் வாழ்க்கைக்கு ஆறுதல் பெறவும், அருமருந்தாகச் செயல்படுவது ‘சத்சங்கம்’ என்ற கூடம். சமுதாயத்தைச் சார்ந்துதான் தனிமனிதன் வாழமுடியுமே தவிர, தனக்காக மட்டும் வாழ்வது என்பது இயலாத காரியம் என்பது சத்சங்கத்தின் விளக்கம். சத்சங்கங்களுக்கு சென்று உங்களுக்கு வரக்கூடிய சங்கடங்கள் சற்று விலகும் என்றும், பெரிய அளவில் வரும் ஆபத்துகள் தவிர்க்கப்படலாம் எனவும் ஸ்வாமி சின்மயானந்தர் அறிவுருத்துகிறார். சத்சங்கங்களில் மூலம் தங்களுக்குக் கிடைத்த அறிய செய்திகளை, இந்நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள இயலாதவர்களுடன் பகிர்ந்து கொண்டால்?….சத்சங்கங்களுக்கு மட்டுமல்லாமல், அதை மற்றவர்களுக்கு தெரியப் படுத்தியவர்களுக்கும் பெருமைதானே?….

    சத்சங்கங்களுக்குச் செல்ல முடியாதவர்கள், அதிகாலையில் டிவி சேனல்களைத் திறந்து பாருங்கள். இனிமையான காலை வேளையில்,சத்சங்கங்களில் மனதுக்கு இனிமையான வார்த்தைகளால் சொற்பொழிவாற்றி, ஆன்மிக சம்பத்தப் பட்டசந்தேகங்களுக்கும் விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்கள். இறைவன் அவதாரம் செய்த இடங்களைத் தேர்ந்தெடுத்து, சத்சங்கம் நிகழ்த்துபவர் சிலர்.  இன்னொருவர், நாம சங்கீர்த்தனத்தோடு சத்சங்கத்தையும் சேர்த்து அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டேயிருக்கிறார். வெளிநாட்டவரையும், அண்டை மாநிலத்தவரையும்  ஒன்றாக்குகிறது இந்த சத்சங்கம். சத்சங்கத்தை உதாசீனப் படுத்தாமல், மதிப்பவர்கள் என்றுமே இறைவனுக்கு பிரியமானவர்கள் என்பது மேலே குறிப்பிட்ட அனைவரும் ஒரு மனதாகச் சொல்லும் அறிவுரை.      இவர்களில் சிலர் உலகில் அதிக இடங்களுக்குச் சென்று, மஹாசத்சங்கம் நிகழ்த்தியவர்களும் உண்டு. சைனாவில் சத்சங்கம் நிகழ்த்துவதற்காக, நம்நாட்டு பிரஜைக்கு அந்நாட்டு அரசாங்கம் ஒரு தனி இடத்தையே கொடுத்திருக்கிறது என்பது பத்திரிகைச் செய்தி. இவர்கள் அனைவரையும் விட, முக்கியமாக ஒருவர் சத்சங்கம் மூலம் இந்தியாவை உலகளவில் பிரபலப்படுத்திய பெருமை சுவாமி விவேகானந்தரைச் சாரும்.

    தாம் பெற்ற அறிவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது, மறைமுகமாக மற்றவருக்கு உதவி செய்கிறோம் என்று அர்த்தமாகிவிடுகிறது. சத்சங்கம் அதற்குத் உறுதுணையாக நிற்கிறது. ஒரு மனிதன் முழு அளவில் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தையும் ‘சத்சங்கங்களின்’ மூலம் கேட்டறிந்து கொண்டால், அது என்றும் நம் நல்வாழ்விற்கு வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை.

    ஒர் அறிவிப்பு::

    இத்துடன் எனது “நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்” கட்டுரைத் தொடர் முடிவடைகிறது. தொடர்ந்து முப்பது (30) கட்டுரைகளுக்கும் மதிப்பளித்து, பொறுமையாகப் படித்து, தங்கள் கருத்துக்களையும் தவறாமல் பதிவேற்றம் செய்த அனைத்து எழுத்தாளர்கள், வாசகர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

     

    ******* முற்றும் *******

    Share
  • நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள் – 29

    பெருவை பார்த்தசாரதி

     

    அதிர்ஷ்டம் வேணும் சார், இல்லண்ணா ஒண்ணும் நடக்காது.

    ஏன் சார் இப்படிச் சொல்றீங்க?….

    அது ஒண்ணுமில்ல, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.

    அட என்ன சார், ஒண்ணுமே இல்லாத விஷயத்த, பெரிசாக்கி ஏதோ சொல்ல வர்ரீங்கன்னு நினைக்கிறேன்?…

    ‘தலகீழ நிண்ணு தண்ணி குடிச்சாலும் நடக்கிறதுதான் நடக்கும்’ போல இருக்கு.

    ‘என்ன சார்’ மறுபடியும் தத்துவம்!..

    வேற ஒண்ணுமில்ல எவ்வளவுதான் விழுந்து புரண்டாலும், ஒட்றதுதான் ஒட்டும்னு சொல்றேன்.

    சரீங்க போதும், சொல்ல வந்தத நேரடியாச் சொல்லுங்க, எதுக்கு சுத்திவளச்சு பெரிசா!….இழுக்கிறீங்க…

    ஒண்ணுமில்ல, போனவாரம், வெளிநாடு போயிருந்தேனா, அங்க வாங்கின லாட்ரி சீட்ல, ஒரு நம்பர்ல பல லட்சம் ஏமாந்துட்டேன். எனக்கு பக்கத்து நம்பர்காரணுக்கு ஒரு கோடி விழுந்திருக்கு.

    ஏங்க அதிர்ஷ்டத்த நம்பி வெளியூர் போறீங்க, இங்கதான் அறிவுக்கு முதலிடம் கொடுக்கறாங்களே, டிவில குரோர்பதில கலந்துக்க வேண்டியதுதான, கரெக்டா பதில் சொல்லி கிட்டே வந்தா, உங்களுக்கும் ஒரு கோடி கிடச்சிடுமில்ல.

    அட அதுலகூட மோசடி உண்டுங்க, வரிசயா கரெக்டா எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டே வரும்போது, கடைசி கேள்விக்கு பதில் தப்பா இருந்தா, மொத்த பணமும் அவுட்டுல்ல.

    அது போகட்டும் போனவாரம் கையில ஏதோ அடிபட்டுடுச்சுன்னு சொன்னிங்களே?..

    அத ஏன் கேக்கிற, என் போறாத பாத்ரூம்ல காலம் வழுக்கி விழுந்தேன், கையிலே சரியான அடி, ஆஸ்பிடல், செக் அப், எக்ஸ்ரே அது, இதுன்னு ஒரு வாரம் ஓடிருச்சு. ஒரே டென்ஷன், கவல. நல்லவேள பெரிசா ஒண்ணுமாகல.

    சின்ன விஷயம்தானே இதுக்கு போய் இவ்வளவு அலட்டிக்கிருங்கீளே?..

    சின்னகாயம்தான், ஆனா பெரிசா கொண்டுபோயி விட்டுட்டா?…

    சின்ன விஷயத்துக்கெல்லாம், ரொம்ப அலட்டிக்காம இருக்கிறதுக்கு, ஒரு வழி இருக்கு, அதாவது சில பிரச்சினைகள பெரிதாக்காம, கண்டுக்காம இக்னர் பண்ணிட்டா எப்பவுமே சந்தோஷம்தான் என்பது, பாண்டிச்சேரி அன்னையின் பொன்மொழிகளுள் ஒன்று……தெரியுமா!…..

    ===========

    இந்த இரண்டு பேரின் உரையாடலைச் சற்று உன்னிப்பாக கவனித்தால், ஒன்று தெளிவாகும், ஒருவர் எதிர்மறை எண்ணங்களோடு உரையாடும்போது, மற்றொருவர் நேர்மறை எண்ணங்களின் மூலம் பதில் சொல்கிறார் என்பது தெரியவரும்.

    இதுபோல் பொது இடங்களிலும், விழாக் கூட்டத்திலும், பலர் புலம்பக் கேட்டிருக்கிறோமல்லவா?… இந்த உரையாடலில் இருந்து என்ன தெரிகிறது. இருப்பதை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழாமல், தன்னிடம் திறமை இல்லை என்ற சுய பச்சாதாபம் உள்ளவர்கள்தான் இப்படிப்பட்ட புலம்பலுக்கு ஆளாகின்றனர் என்கிறது மனநல ஆய்வு ஒன்று. எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் நடக்கும் என்று அலுத்துக்கொண்டு, ‘இது நம்மால் முடியாது’ என்கிற எண்ணமே இவர்களிடம் மேலோங்கி இருப்பதைக் காணமுடியும்.

    வெற்றி வந்தால், அது கடின உழைப்பால் வந்தது என்று பீற்றிக்கொள்வது, இல்லையேல் நமக்கு ‘நேரம் சரியில்லை’ என்று வெறுத்துக் கொள்வது. தன்னால் ஒன்றும் சாதிக்கமுடியாது என்று தெரிந்ததும், மற்றவர்களின் உண்மையான சாதனையை ஒரு போதும் ஒத்துக்கொள்ளாமல் ‘ஏதோ அதிர்ஷ்டம் அவனுக்கு’ என்று  விளக்கமளிப்பது. இல்லாவிட்டால், அந்தச் சாதனைப் பற்றி ஏதாவதொரு அவதூறு சொல்வது, இதுவே எதிர்மறை எண்ணங்கள் நிறைந்தவர்களின் வாடிக்கையான வழக்காக இருக்கும் என்பதை நாம் பணிபுரிகின்ற இடங்களில் பழகுபவர்களிடம் உணரமுடியும்.

    இதுபோல் அதிர்ஷ்டத்தின் மீது பழிபோட்டு, தம்முடைய திறனைக் குறைவாக மதிப்பிட்டு தம்மைத் தாழ்த்திக்கொள்வதால் ஒரு காரியத்தையும் முழுமையாகச் செய்யமுடியாது.  துன்பங்கள் வருவது எல்லோருக்கும் சகஜம், அதை எப்படி சமாளிக்கிறான் என்பதைப் பொருத்தே அவன் மற்றவருக்கு வழிகாட்டியாகிறான். நம்மால் முடியும் என்கிற நேர்மறை எண்ணம் இருந்தால் மனிதனால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை என்பதை இதுவரை எடுத்துச் சொல்லாத எழுத்தாளர்களே இல்லை என்று கூடச்சொல்லலாம்.

    வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன், பசியினால் இளைத்தே வீடுதோ றிரந்தும், பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்” என்று பாடிய வடலூர் வள்ளலார், பயிர்கள் வாடுவதைக் கூட சகிக்கமுடியவில்லை, வயிற்றுப் பசியால் வாடும் மாந்தர்களை கண்டார், அதன் தாக்கமாக, ‘பசியால் வாடும் அனைவருக்கும் உணவளிக்க முடியும்’ என்ற அற்புதமாகத் தோன்றிய, அந்தச் சிந்தனைத்துளி என்கின்ற சிறு நெருப்புதான், இன்று அணையா நெருப்பாய் அனைவருக்கும் உணவளித்துக் கொண்டிருக்கிறது. சிந்தனை தோன்றியபோது, பணமில்லை, ஸ்பான்சர் செய்யவும் யாரும் இல்லை. ஆனால், இவரது ஆக்கப்பூர்வமான சிந்தனையாலும், மனவலிமையாலும், எந்தச் செயலையும் செய்துவிட முடியும் என்பதைத்தான் வள்ளலாரின் வாழ்க்கைமுறை நமக்கு வழிகாட்டுகிறது.

    இது போன்று, மன வலிமை கொண்ட எத்துணையோ சாதனையாளரின் வரலாறுகளைப் படிக்கிறோம். அனைத்திலும் ஒரே மாதிரியாக ஒரு உண்மை நிலவுவதை அறிகிறோம். அதாவது துன்பத்திலும், மன வலிமை ஒன்றே உயர்வு தரும் என்பதும், மனோபலம் இருந்தால் நினைத்த காரியம் கைகூடுகிறது. ஆப்பர்சுனிட்டி என்பது எல்லொர் வீட்டுக்கதவையும் ஒன்றாக ஒரே நேரத்தில்தான் தட்டுகிறது. ஆனால் சந்தர்ப்பத்தை சரியான நேரத்தில் பயன்படுத்தியவர்கள்தான் சாதனை படைத்தவனாகி வரலாற்றில் இடம் பெறுகிறார்கள்.

    அரசாங்க அலுவலங்களில் பலர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள், அதில் தினமும் வேலைக்கு வருவது மட்டுமே தன்னுடைய கடமை என்றும், வேலை செய்வது மற்றவரது வேலை என்றும் நினைப்பவர்களே அனேகர். அரசாங்க உத்தியோகம் என்றாலே, கேட்கவே வேண்டாம், ஏதோ வேலைக்கு வந்தோமா, சொந்தப் பணிகளை மட்டுமே முன்னிறுத்தி அலுவலகப் பணியைப் பின்னே தள்ளி அன்றயப் பொழுதைக் கழித்துவிட்டு வீடு வந்து சேர்வதற்குப் பெயர்தான் ‘பணி’.  இதில் சற்று விதிவிலக்காக ஒர்க்கஹாலிக்காக இருப்பவர்கள், அபாரமான திறமைகள் கொண்டவர்களுக்கு மட்டுமே, வாய்ப்புகள் அதிகமாகக் காத்திருக்கின்றன.

    இப்படிப்பட்ட திறனுள்ளவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னும், திறமைக்கு விலையாகத் தொடர்ந்து வேறு இடத்தில் பணி செய்ய முடிகிறது. இங்கே பலருக்கு அதிர்ஷ்டம் வேலை செய்யாது. திறனுக்கும், முயற்சிக்குமே முதலிடம். ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது, எத்தகய இடையூறு வந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், அசாத்தியமான மனோபலத்துடன் செயல்படுபவர்கள், முடிவில் வெற்றிகரமாக செயலை முடித்து விடுவதைப் பார்க்கிறோம். பின்னாளில், எதிர்த்து நின்றவர்கள் கூட, அச்செயலை வியந்து பாராட்டுவதும் சகஜம்.

    எத்துணையோ பேருக்கு எண்ணம்தான் பெரிதாக இருக்கிறது. ஆனால் அதை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபாடு இல்லை. அப்படியென்றால் ஆசை மட்டும் இருந்தால் போதுமா?…குழந்தைகள் மேதையாகவேண்டும் என்று நினைக்கிறோம். அதற்கான முயற்சி ஏதும் எடுத்தால்தானே ஓரளவுக்கு நடக்கும். வெறும் ஆசை மட்டும் இருந்தால் போதுமா?..ஆக “ஆசை இருக்கு தாசில் பண்ண அருகதை இருக்கு கழுதை மேய்க்க” என்பது போல், ஆசை மட்டும் இருந்தால் போதுமா?.. முயற்சி எடுத்தால் முடியாது உண்டா. எடுத்த காரியத்தை முடிக்க மனோபலம் அவசியம் என்பதை சாதனையாளரின் வரலாற்றிலிருந்து அறிகிறோமல்லவா?…

    ஒவ்வொரு நிமிடமும் உலகில் ஏதாவதொரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பு நிகழ்ந்து கொண்டுதானிக்கிறது. புதிய, புதிய கண்டுபிடிப்புகளுக்கு குறிக்கோள்தானே முன்னோடியாக இருக்கிறது. இன்றய உலகத்தில் நான்கு சக்கர வாகனங்களின் வசதிகளில் வளர்ச்சி, அலைபேசியின் அபரிமிதமான செளகர்யங்கள் இதெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு.  நித்தம் ஒரு சிந்தனையோடு, புதிது புதிதாக ஆராய்ச்சி செய்து புகழின் உச்சிக்கு சென்ற ஆப்பிள் நிறுவனர் ‘ஸ்டீவ் ஜாப்ஸ்’ என்பவரை அவ்வளவு எளிதில் உலகம் மறந்து விடுமா?… மேன்மேலும் சாதிக்க வேண்டிய தருணத்தில், இளம் வயதிலேயே இறந்து விட்டார் என்பதுதான் வருந்துதற்குறியது.

    நமது உடலில் எல்லா அவயங்களும் நன்றாக வேலை செய்கிறது. அங்க ஹீனம் இல்லை. ‘எப்படி இருக்கிறீர்கள்’ என்று கேட்டால் ‘ஏதோ இருக்கிறேன்’, ‘காலம் ஓடிக்கிட்டுருக்கு’ என்ற சலிப்பான பதில் வருவதைப் பார்க்கிறோம். கால்கள் நன்றாக இருந்தும். அவசரமாக ஒரு பஸ்ஸைப் பிடிப்பதற்குக்கூட சிறிது தூரம் ஓடமுடியவில்லை. ‘நேற்று இடுப்பிலே ஒரே வலி, கால்களிலே வெரிகோஸ் ப்ராப்ளம்’, ஒரு வேலையுமே செய்ய முடியலே, கொஞ்சதூரம் நடக்க முடியல’ இப்படி தினமும் அலுத்துக் கொள்பவர்களை நம்மிடம் பழகுபவர்களிடம் அதிகம் காண முடியும்.

    குழந்தைகள் படித்து, பட்டம் பலபெற்று நல்வாழ்க்கை வாழவேண்டுமென்பதுதானே, அனைவரின் லட்சியம். அதற்காகத்தானே எல்லாத் தாய்மார்களும் எத்தகய துன்பம் வந்தாலும் சகித்துக் கொண்டு மனோபலத்துடன் பிள்ளகளின் வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இப்படித்தான், ஒரு தாயும் கனவு கண்டாள். எட்டு வயதே நிரம்பிய தன்னுடைய பிள்ளை எப்போதும் போல் அன்றும் பள்ளி சென்றான். அங்கு குளிர் மிகுந்த வகுப்பறையை சூடேற்றுவதற்காக ஸ்டவ் பற்ற வைத்தான், ஸ்டவ் வெடித்து, வகுப்பறை முழுவதும் தீ பரவியது, மாணவனின் உடம்பும் இடுப்புக்கு கீழ் பாதிக்குமேல் எரிந்து விட்டது. கெரோசினுக்கு பதில் தவறுதலாக கேஸோலின் நிரப்பி இருந்ததால் இந்த விபத்து நிகழ்ந்தது. தீ விபத்தில், 13 வயதான தனது சகோதரரை இழந்தார்.

    உடம்பில் ஒரு பாதி முழுவதும் தீக்காயங்களுடன் எரிந்து விட்டதால், இவன் இனி வாழ்ந்து துன்பத்தை அனுபவிப்பதைவிட இறப்பதே மேல் என்று தன் அன்னையிடம் டாக்டர் சொல்வதை, அரைகுறை நினைவோடு இருந்த அந்த தைரியமான மாணவன் கேட்கிறான். பள்ளிக்கூடமே பாதி எரிந்து அணைந்து விட்டாலும், கடவுள் பக்தி நிரம்பிய அவன் மனதில் “நான் வாழ்வேன்” என்கிற மன வலிமை, மனோசக்தி(‘தீ) மட்டும் அணையவில்லை.

    மருத்துவரே வியக்கும்வண்ணம் எப்படியோ பிழைத்து விடுகிறான். ஆனால் செயலிழந்த கால்கள் இரண்டையும் வெட்டி எடுத்துவிடவேண்டும் என்ற மருத்துவரின் கோரிக்கையை, அவனது அம்மா நிராகரித்து விடுகிறார். தினமும் தந்தையும் தாயும், அவனது கால்களுக்கு மருந்துகள் தடவி நீவி விடுகின்றனர். காலில் சுரணையோ, சக்தியோ ஒரு முன்னேற்றமும் இல்லை. “நான் கண்டிப்பாக நடந்து காட்டுவேன்” என்ற எண்ணம் மட்டும் சிறுவனின் மனதை விட்டு அகலவில்லை.

    ஒரு நாள் அவனது தாய், தன் மகனை ஒரு தள்ளு வண்டியில் உட்காரவைத்து, தோட்டத்தின் பக்கம் சுகாதாரமான காற்றைச் சுவாசிக்கும்படி அழைத்துச் செல்கிறாள். திடீரென்று எழுந்த அவன், காம்பெளண்ட் சுவரின் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு தரையில் தவழ்ந்த வாறு சிறிது தூரம் செல்கிறான். தினமும் அவ்வாறு செய்ய ஆசைப் படுகிறான். தாயும், தந்தையும் அவனது கால்களுக்கு மஸாஜ் செய்து, தினமும் தெம்பூட்டுகிறார்கள்.

    படுக்கையையும், வீல்சேரையையும் வெறுத்த அவன், எப்படியாவது ஒரு நாள் நடந்து விடவேண்டும், ஓடிக் காட்டவேண்டும் என்ற வைராக்கியம் அவனை தினமும் இதே முறையில் பயிற்சி செய்ய வைக்கிறது. இரும்பு மனதால் ஆன அவனால், இப்போதெல்லாம் சிறிது சிறிதாக அவனால் நடக்கமுடிந்து பல நாள் தொடர்ந்தது. எதிர்பாராதவிதமாக ஒரு நாள், தன்னால் ஓடமுடிவதைக் கண்டு அவன் மனம் மேலும் சக்தி பெற்றது.

    நீண்ட நாள் ஆசையை நிறைவு செய்ய, நடந்து செல்லவேண்டிய பள்ளிக்கு, ஓடிச் சென்றடைகிறான். நினைத்த இடத்திற்கெல்லாம், அவனால் ஓடமுடிகிறது. அவனைப் பார்த்த அனைவருக்கும் வியப்பு. மன வலிமையால் “எந்த இடத்திற்கும் என்னால் ஒடிச் சென்றடய முடியும்” என்று நிரூபித்துக் காட்டிய அவனுக்கு ‘கான்ஸாஸ் ஃப்ளையர்’ (&), கான்ஸாஸ் இரும்புமனிதன் என்ற அடைமொழியைக் கொடுக்கிறார்கள்.

    இச்சிறுவனால் வாழமுடியாது,

    இவனால் நடக்க முடியாது,

    இவனால் ஒருபோதும் ஓடமுடியாது,

    என்று எல்லோராலும் கருதப்பட்ட, அவ்வாலிபன், 1934 ல், நியூயார்க்கில் புகழ்பெற்ற ‘மேடீஸன் ஸ்கொயர் கார்டன்’ (Madison Square Garden) என்ற இடத்தில் நடந்த போட்டியில் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடம் எட்டு நொடிகளில் கடந்து சாதனை புரிந்ததை, 25000 பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். வலிமையான எண்ணமும், மன வலிமையும் கொண்ட அவ்வாலிபனின் பெயர் ஃக்ளன் கன்னிங்காம். தொடர்ந்து 1936, 38, 40 என்று அனைத்து போட்டிகளிலும் முதலிடம் வகித்தார்.

    இவரைப் பற்றிய மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள:-

    http://en.wikipedia.org/wiki/Glenn_Cunningham_(athlete)

    உடம்பிலே ஒரு குறையும் இல்லாத, இன்றய இளைய சமுதாயத்தினர், ‘ஃக்ளன் கன்னிங்ஹாம்’ (Glen Cunningham) என்ற வீரரின், சுயரசரிதையை முழுவதுமாகப் படித்து, அவரது மன வலிமையையும், திறமைகளையும் அறிந்து கொள்ள முயற்ச்சி செய்தால், கண்டிப்பாக நாமும் சாதனை புரிய வேண்டும் எண்ணம் உருவாகும். இதேபோல் இரண்டு கால்களையும் இழந்த பிறகு, செயற்கைக் கால்களுடன் எட்டு முறை ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற ஆஸ்கார் பிஸ்டோரியஸ்’ (Oskar Pistorius) என்ற ஓட்டப்பந்தய வீரரை ‘பிளேட் ரன்னர்’ (Blade runner) என்ற பெயரில் உலகமே அறியும். இவர்களைப் போன்றோரின் வரலாறுகளை தேடிக் கண்டுபிடித்து அறிந்து கொள்ளவேண்டும்.

    உடல் நலத்தைப் பேணுவதற்கு, சத்தான உணவு தேவைப்படுவதைப்போல, மனநலத்துக்கும், மனஉறுதிக்கும், மனவலிமைக்கும் தேவை நல்ல எண்ணங்கள். இத்தகய எண்ணங்களைத் தூண்டும் தகவல்களை, இளைஞர்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருந்தால், படிப்படியாக வெற்றிப் படிகளை எட்டி சாதனை படைக்க முடியும்.

    கட்டுரையின் சாராம்சமாக,

    ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம், பெரிதாக மனதைப் போட்டு அலட்டிக்கொண்டிராமல், கடந்தகாலத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிராமல், இருப்பதை வைத்துக் கொண்டு, இன்புற்று வாழ, தினமும் புதிது புதிதாக சிந்தனை செய்தால், இன்பம் என்றும் நிலையானது என்பதை மஹாகவி பாரதி, தனது பாடல் ஒன்றை மிக அருமையாக, பாமர மக்கள் கூட எளிதில் அறிந்துக்கொள்ளும் விதமாக அமைத்திருக்கிறார்:-

    சென்றது இனி மீளாது மூடரே!… நீர்

    எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

    கொன் றொழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து

    குமையாதீர்!… சென்றதனைக் குறித்தல் வேண்டாம்

    இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்

    எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

    தின்று விளையாடி இன்புற்று வாழ்வீர்

    தீமை எல்லாம் அழிந்து போம் திரும்பி வாரா!…

    இன்றய இளய சமுதாயத்துக்கு எழுச்சியூட்டும் விதத்தில் இப்பாடல் அமைந்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

     தொடரும்……..

     

    Share
  • நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள் – தொடர்-28

    பெருவை பார்த்தசாரதி

    மனித சமுதாயம் முன்னேறும் விதமாக வாழ்ந்து காட்டிய அறிவாளிகள், சாதனையாளர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள், மாமேதைகள் இவர்களின் வெற்றி வழியைப் பின்பற்றிதான், பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், வாழ முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு துறையில் சிறந்து விளங்கி ஒவ்வொரு நூற்றாண்டிலும், தோன்றி மறைந்த மாமேதைகள் பலர் பின்வரும் சந்ததியினருக்கு அன்புடன் வழிகாட்டினார்கள் என்கிறது வரலாறு. பயணம் தொடர பாதை முக்கியம் என்பதுபோல, வழிகாட்டுதல் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    “அன்பில்லாதவர்கள் தமக்காகவே தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். பிறரிடத்தில் அன்புடையவர்கள் தமது வாழ்க்கையை பிறருக்காக அர்ப்பணிக்கின்றனர்” என்கிறார் தோழர் விலாடிமிர் லெனின். பிறருக்கு வழிகாட்டுகின்ற பலர், ஒரு வகையில் அன்புக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்திருந்திருக்கலாம் என்ற நோக்கில், லெனின் அவர்கள் இதைச் சொல்லி இருப்பார் போலும்….இதைப்பற்றிய சிந்தனையை மேலும் விரிவாக்கும்போது, ஒரு சில கேள்விகளும் நம் மனதில் எழுகின்றது.

    நாம் எவ்வளவோ பேரிடம் அன்றாடம் பழகுகிறோம்.  அவ்வளவு பேரும் நம்மிடம் அன்பு செலுத்துகிறார்களா?…….

    எல்லோரிடத்திலும் நம்முடைய சொந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறோமே, உண்மையில் அவர்கள் எந்தக் கண்னோட்டத்தோடு அதைப் பார்க்கிறார்கள்?…….

    சொந்த விஷயங்களை, பிறரிடம் அன்னியோன்யமாகப் பகிர்ந்து கொண்டாலும், அவர்கள் அதைப் பொருட்படுத்துவார்களா?….

    பல மணி நேரங்கள் பொருமையாக நம்முடைய சொந்தக்கதை, சோகக்கதை இவற்றையெல்லாம் கேட்டவரிடமிருந்து, ஒரு சில நிமிடமாவது அன்பான, இரக்கமான ஆறுதல் வார்த்தைகளை எதிர்பார்க்கமுடியுமா?……..

    ஏழையின் கூக்குரலை பணக்காரர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?

    அலுவலகத்தில் பொருப்பான உயர் பதவி வகிப்பவர்கள், என்றாவது ஒரு நாளாவது, சக ஊழியர்களுடைய துக்கத்தில் பங்கு கொண்டு, துன்பம் நேருகின்ற சமயத்தில், அன்பு செலுத்தி ஆறுதல் சொல்லி ஊக்கப்படுத்துபவர்கள் எண்ணிக்கையில் ஒரு சிலரே என்பது அனுபவத்தில் காணும் உண்மை.

    இந்நாளில், நண்பர்களோ, உறவினர்களோ, ஒருவருக்கு ஒருவர்  சுகதுக்கங்களில் பங்கெடுத்துக்கொண்டு அவ்வப்போது அறிவுரையோ?……..ஆறுதலோ?……சொல்லிக்கொள்கிறோமா?…..

    இத்தகய கேள்விகளுக்கு, இன்றளவும் பதில் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம்.

    வெளியூரிலிருக்கும் மிக நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் இறந்து விட்ட செய்தி அறிந்தும்கூட உடனடியாகச் சென்று துக்கம் விசாரிப்பவர்கள் ஒரு சிலரே எனலாம். உடனடியாகச் சென்று  சோகத்தில் மூழ்கியிருக்கும் அக்குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லாமல், ‘ ஒரு முக்கியமான வேலை இருந்தது, உடனே போக நேரமில்லை’ என்று காலம் கடந்து வரும் பதிலே அநேகரிடமிருந்து வரும் பதிலாக இருப்பதை நம் அனுபவத்தில் காண்கிறோம்.

    பொதுவாக மேலேழுந்த கேள்விகளுக்கெல்லாம் நம்முடைய உள்மனது என்ன பதில் தரும். ஆறுதல் வார்த்தை என்பது நம்மில் எத்துணை பேருக்கு உதிக்கிறது அல்லது உதவுகிறது. ஆறுதலோ அறிவுரையோ சொல்லி, தக்க சமயத்தில், யாருக்காவது நாம் நல் வழிகாட்டியிருக்கிறோமா?..பிறரால் கடும் துயரத்துக்கும், வேதனைக்கும் ஆளாகியிருக்கும் இருக்கும் ஒருவரது மனம் நொந்து போயிருக்கும் சந்தர்ப்பங்களில், ஆறுதல் சொன்னால், பாதிக்கப்பட்டவருடைய பலவீனமான இதயம் பலப்படும் என்பது மருத்துவத்தில் கண்டறிந்த உண்மை.

    ஆறுதல் சொல்லக்கூடிய மனப்பக்குவத்தைப் பெற்றவனை, உதவும் எண்ணமுள்ளவனை ‘இளகிய நெஞ்சம் படைத்தவன்’ என்று சொல்வதில்லையா.   இதைத்தான் கவியரசு அவர்கள் அர்த்தமுள்ள இந்துமதத்தில் “இதயம் என்று எடுத்துக்கொண்டாலே ‘கனிந்த உள்ளம்’ என்ற பொருள் மறைந்தே இருக்கும். அவற்றில் இரக்க குணமும் இதயத்தை சார்ந்தே சொல்லப்படுகிறது. கல்நெஞ்சக்காரனை “இதயமில்லாதவன்” என்றே கூறுகின்றோம்” மேலும் நிரந்தரமற்ற நம் வாழ்வில் எவரும், எப்போதும் இல்லாமல் போகலாம், இப்படி இருக்கையில், ஒருவர்மேல் ஒருவருக்கு எதற்கு தேவையற்ற ஆதங்கங்கள், கோபங்கள், துவேஷங்கள்?……என்று மிக அருமையாக இதயத்தைப் பற்றி இதமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

    கடந்த வருடங்களில், ஒரு மூன்று நிமிட நேரத்திற்குள், ஆழிப்பேரலை (tsunami) பல ஆயிரம் பேர்களை அள்ளிக்கொண்டுசென்றபோது, எண்ணற்ற உயிர்கள் பலியாயின. இறந்த உடல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில்தான் எரியூட்ட முடிந்தது. பெற்றோர்களை இழந்த குழந்தைகள், சகோதரனை இழந்த சகோதரிகள் இப்படி பாதிக்கப்பட்டவர்களையெல்லாம் தூக்கி நிறுத்தி மறுவாழ்வு கொடுத்ததை உலகமே கண்ணுற்றதல்லவா?……ஒவ்வொரு மூலையிலிருந்தும் மற்றவர்கள் ஆறுதல் என்ற பலத்தைக்கொடுத்ததால்தான் இன்றும் பலர் உயிர் வாழ்கிறார்கள்.

    உலகத்தில் நடக்கின்ற பலவிதமான கொடுஞ்செயலுக்கெல்லாம் ஆளாகி வருந்துகின்ற மனிதர்களுக்கு, ஆறுதல் ஒன்றே மறுவாழ்விற்கு உறுதுணையாக அமைகிறது என்பதே உண்மை.

    திடீரென்று நிகழும் ஒரு அசம்பாவிதம், சட்டென்று முடிந்துவிடும் மரணம், எதிர்பாராத பேரதிற்ச்சி போன்றவைகளால் நம்முடைய மூளையில் ஒருவித அமிலம் சுரந்து, மூளையைச் செயலிழக்கச் செய்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இம்மாதிரி சந்தர்ப்பங்களில், தாங்கமுடியாத துயரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மரணத்தைக் கூட சந்திக்க நேரிடுமாம். இதைத் தவிர்ப்பதற்கு ‘ஆறுதல்’ வார்த்தைகளும், சமாதானமும் அருமருந்தாகச் செயல்படும் என்பதும் உண்மை.

    பட்டாசுத்தொழிற்சாலை, பள்ளிகள், திரையரங்குகள், இப்படி பலர் கூடும் இடத்தில் தொடர்ந்து ஏற்படும் தீவிபத்துகள் மற்றும் ரயில் விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பொதுநலத்தொண்டு புரிபவர்கள், இரக்ககுணம் மிக்கவர்கள், பரிவு காட்டுபவர்கள் அன்றாடம் ஆறுதல் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள். இதிகாசங்களில் இறைவனுக்குக்கூட சில சந்தர்ப்பங்களில், தர்ம சங்கடமான நேரங்களில், ‘ஆறுதல் வார்த்தைகள்’ அவசியமானது என்பதைத் தெரிந்து கொள்வோம்.

    சப்தரிஷிகளில், ப்ருகு மகரிஷிக்கு அக்னிதேவன் சகோதரனாவார். ஒரு சமயம், அவர் மனைவி கருவுற்றிருக்கும்போது, அவளைப் பாதுகாக்க அக்னிதேவனுக்குக் கட்டளையிட்டிருந்தார்.

    ராட்சதன் ஒருவன், அவளை அபகரிக்கத் திட்டமிட்டான். மகரிஷி இல்லாத சமயத்தில், அக்னிதேவனையே தன் பேச்சுத்திறமையால் மடக்கி, அவளை அபகரித்துக் கொண்டான். ராட்சதனின் பிடியிலிருந்த மகரிஷியின் மனைவி, ஒருவாறு பலவந்தமாக தன்னை அவனிடமிருந்து விடுவிக்கும் தருணத்தில், அங்கே ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அவள் பிரகாசத்துடனும், பேரொளியுடனும் தோன்றிய ஒரு ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். பேரொளியின் கதிர்வீச்சைத் தாங்கமுடியாத ராட்சதன் சாம்பலானான். பேரொளியையும், பிரகாசத்தையும், சக்தியையும் ஒருங்கே பெற்ற இவனே “ச்யவனன்” என்ற பெயரால் அழைக்கப்பட்டான். இதனால்தானோ என்னவோ, ஆயுர்வேத மூலிகையால் ஆன, உடலைத் தேற்றுகின்ற பல வஸ்துக்களில் ஒன்றாகிய லேகியமும் இப்பெயருடன் இன்று வியாபாரமாகிக் கொண்டிருக்கிறது.

    ஞானதிருஷ்டியினால், நடந்ததை அறிந்த ப்ருகு முனிவருக்கு, தன் மனைவியைப் பாதுகாக்கத் தவறிய அக்கினிதேவன்மீது அளவுகடந்த கோபம் உண்டானது. “அக்னிதேவனே நீ யாகங்களுக்கும், ஹோமங்களுக்கும் நற்தீயாகச் செயல்பட்டாலும்,  இனி நீ தீயசெயல்களுக்கும்  காரணமாகி, இழிந்த நிலையை அடைந்து, உன்னைக்கண்டாலே எல்லொரும் பயந்து ஓடுவார்கள். என்னுடைய மனைவியைக் காக்கத் தவறிய நீ இத்தகய நிலையை அடைவாய். அனைத்து ஜீவராசிகளும் உன்னை வேண்டும்போது மட்டுமே சேர்த்துக்கொள்வார்கள்!…..என்று சாபமிட்டார்.

    பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய அக்னி இல்லாமல் உலகம் உய்ய முடியுமா?…நிலமையை அறிந்த படைப்புக் கடவுளான ப்ரம்மா, அக்னிதேவனுக்கு ஆறுதல் சொல்ல ஓடோடிவந்தார். அவன் பெற்ற சாபத்தில் திருத்தம் பல செய்து, மனம் வருந்திய அக்னிதேவனுக்கு பின்வருமாறு ப்ரம்மா சமாதானப் படுத்தியதாக மகாபாரத்தில் ஒரு சிறிய சம்பவம் இடம் பெற்றிருக்கிறது.

    “உலகம் இயங்குவதற்கு நீ மூலக்காரணமாதலால், உன்னால் அழியப் போகும் அனைத்துமே, இவ்வுலகத்திற்குத் தேவையானதாக இருக்காது. கர்மவினையால் அவதிப்படுபவர்கள் மட்டுமே தன்னுடைய உடமைகளையும், உயிரையும் உன்னால் இழக்க நேரிடும். மேலும், உலகில் இயங்கும் அனைத்துக்குமே நீ என்றும் உறுதுணையாக இருப்பாய். நீயல்லால் ஒர் அணுவும் இயங்காது. உயிர் இயங்க உயிராகவும், மறியாதைக்கு மறுபெயராகவும் விளங்குவாய்” என்று சொன்னதாக கதையில் வரும் இச்சிறிய சம்பவம் இக்கட்டுரைக்குப் பொருத்தமானதாக இருக்கும்.

    இதிகாச உதரணங்களை சற்று நிறுத்திவிட்டு, இன்றய உலகில் நடந்த ஒரு சில நிகழ்வுகளைப் பார்ப்போம்.  ஒரு குடும்பத்திலே கூட கணவன் மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு, இன்பம் வரும்போது பங்கிட்டுக்கொண்டு, துன்பத்தில் உழலும்போது ‘ஆறுதல்’ சொல்லி இன்பமயமான வாழ்க்கை முறையை எடுத்துக் கூறினால்தான் வாழ்க்கைப் பயணம் இனிதே நடக்கும் என்பதை இந்த நூற்றாண்டில் வாழ்ந்த மிகச்சிறந்த எழுத்தாளனின் வாழ்க்கை நமக்கு எடுத்துரைக்கிறது.

    எழுதுவது, எழுதிக்கொண்டே இருப்பது என்பதைத் தவிர இவருக்கு வேறு எதுவும் தெரியாது. வேறு தொழில் தெரியாததால், எழுத்தை நம்பி வருமையிலே கூட வாடினார்.  தினமும் தாம் எழுதுவதை, எல்லாப் பத்திரிகைகளுக்கும் எழுதி எழுதி அலுத்துப் போய், வருமையின் எல்லைக் கோட்டிற்குச் சென்று, வாழ்க்கையை வெறுத்துவிட்ட நிலையில், இனிமேல் எந்தப் பத்திரிகையிலும் தன்னுடைய எழுத்துக்களுக்கு இடமில்லையா?..இனிமேல் குடும்பத்தை எப்படி நடத்துவது?…என்பதுபோல் மனைவியிடம் புலம்பிக் கொண்டிருந்தாராம். ஒரு பெண்ணைப்பற்றி கதை எழுத ஆரம்பித்து, மன சஞ்சலத்தால் அதை பாதியிலேயே நிறுத்தி இருந்தார். எழுதிய படைப்புகளையும் விட்டேறிந்தார், அவரது மனைவி அதைப் பாதுக்காத்து, அவருக்கு ஆறுதல் சொல்லியதோடு, தன்னம்பிக்கை அளித்து, அந்தக் கதையை முடிப்பதற்கு பேருதவி புரிந்தார். பிறகு ஒரு பத்திரிகை அலுவலகத்துக்கு, அவரது படைப்புகளை அங்கு அனுப்பி வைத்தார்.

    சில நாட்கள் கழித்து, பத்திரிகை அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது, முதல் முறையாக அவரது எழுத்துக்களைப் பிரசுரிக்கப் போவதாகவும் அதற்காக ஒரு சொற்ப சன்மானம் ஒன்றையும் சேர்த்து அனுப்பியிருந்தார்கள். அன்றே அவரது வாழ்வில் துளிர்விட ஆரம்பித்த, அந்த நம்பிக்கைதான், 1976 ல் ஒரு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அவர் எழுதிய “கேரீ ”  (carrie), என்ற நாவல், 1976 ல் சுமார் 50 லட்சம் பிரதிகள் விற்று அவரது வருமையைத் தொலைத்து, வளமையைப் பெருக்கியது.  அதன் பிறகு, கேரீ எடுத்த முடிவு என்ன தெரியுமா?. அனுதினமும் 1500 வரிகளாவது எழுதிவிட்டுத்தான் தூங்குவது என்ற தீர்மானமான முடிவுக்கு வந்தாராம். இதை எழுதும் போது இவ்வரிகள் அனைத்தும் ஒவ்வொரு எழுத்தாளர்களளின் மனதில் நீங்காத இடம் பெற வேண்டும் என்பதே என் விருப்பம். உற்சாகம், அன்பு, இரக்கம் இவை கிடைக்காமல் யாரும் எதுவும் சாதிக்கமுடியாது என்பதுபோல் இவரது வாழ்க்கை பிறருக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

    திறமையான எழுத்துக்களை திகில் கதை மூலம் வெளிப்படுத்தி, உலகத்தில் அதிக அளவில் வாசகர்களைப் பெற்ற இவர், தன் வாழ்நாளில் சம்பாதித்த செல்வத்தின் பெரும்பகுதியை, பள்ளிக் குழந்தைகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் உதவும் வகையில் ஒரு பகுதியை எழுதி வைத்தார். எழுத்துக் கலையை ஊக்கப்படுத்துகின்ற பணிகளுக்கும் பெருந்தொகையை நன்கொடையாக அளித்தார். இவரது சரித்திரத்தைப் படித்து முழுவதுமாக ஆராய்ந்து பார்த்தோமானால், வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இவருக்குக் கிடைத்த அன்பும், ஆதரவும், ஊக்கமும், உற்சாகமுமே என்பதை அறியமுடியும். அவர்தான் ஸ்டீஃபன் எட்வின் கிங் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர், அவருக்கு சரியான தருணத்தில் ஊக்கமும், உற்சாகமும், அன்பும், பரிவும் அளித்த பெருமைக்குறிய அவரது மனைவி பெயர் தபிதா கிங்.

    இந்தக் கட்டுரை வெளியாகும் இதேவாரத்தில் வெளியான, இன்னொரு செய்தியும் இக்கட்டுரையின் தலைப்புக்குப் பெருமை சேர்க்கிறது. அடையார் புற்று நோய் மருத்துவ மையத்தின் நிறுவனர் திருமதி டாக்டர் சாந்தா அவர்களுக்கு தமிழக அரசாங்கம் சர்வதேச மகளிர் தினத்தன்று “அவ்வையார்” விருது (2013) வழங்கி கெளரவித்து இருக்கிறது. ‘நாளை என்பதே நிச்சயம் இல்லை’ என்ற நிலையில், அனுதினமும் புற்றுநோயால் அவதியுறும் மக்களிடம், அன்பு, ஆறுதல், பரிவு, இரக்கம், பொதுநலம் மூலம் தம் வாழ்நாளை அற்பணித்தற்காக இந்த உயரிய விருது அவருக்கு பெயரையும், புகழையும் தேடித் தந்திருக்கிறது என்பதையும் இங்கே நினைவு கூறுவோம். ‘ராமன் மெகஸேஸே’ பரிசு பெற்ற இவருக்கு வழிகாட்டி (Rollmodels) என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லையாகிலும், 78 வயது நிரம்பிய இவர் வாழ்வில் உயர்ந்ததற்கு, அகத்தூண்டுகோலாக அமைந்தவர்கள் நோபல் பரிசு பெற்ற சர் சி.வி. ராமனும், டாக்டர் சந்திரசேகர் அவர்களும் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    மிகச்சிறந்த கவிஞனாக, ஓவியனாக, சிற்பியாக, இலக்கியவாதியாக, எழுத்தாளனாக அமைவது பிறவியிலேயே என்று சொல்வது சம்பிரதாயமாக அமைந்துவிட்டாலும், தக்க சமயத்தில் ஊக்கமும், உற்சாகமும், அன்பும், ஆறுதலும், உழைப்பும், முயற்சியும் ஒன்று சேர்ந்துவிட்டால், ஒரு மனிதனுக்கு சாதனை படைப்பதற்கு உறுதுணையாகும் என்பதையே இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

     தொடரும்……….

    Share