Tag: சு.கோதண்டராமன்

  • ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ ! -4

     சு.கோதண்டராமன்

           இனி, பாட்டின் கருத்தை வேதாந்தமாக விரித்துரைக்க முடியுமா என்று பார்ப்போம். நாத உபாசனை என்ற பெயரில் இசை மூலம் இறைவனை வழிபடும் முறை நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இசையில் பாரதிக்கு இருந்த ஆர்வமும் ஞானமும் மிகுதி. அவருடைய பாடல்களில் பல பாடுவதற்கென்றே இயற்றப்பட்டவை. வந்தே மாதரம் என்ற பங்கிம் சந்திரரின் பாடலை முதலில் அகவல் பாவாக மொழிபெயர்த்த பாரதி, அது பாடுவதற்கு ஏற்றதாக இல்லை என உணர்ந்து மீண்டும் ஒரு முறை சந்தங்களுடன் தான் அதை மொழிபெயர்த்ததைக் கூறுகிறார். அவர் இசை வல்லுநராகவும் இருந்ததால் பொருளுக்கேற்ற சந்தமும் பண்ணும் அமைத்துப் பாட முடிந்தது. அவருடைய கட்டுரை ஒன்றில் அக்காலத்தில் தமிழ் நாட்டு இசை முறைகளைப்பற்றி விரிவான விமரிசனங்கள் செய்து அதை எத்திசையில் வளர்க்க வேண்டும் என்பதற்கான குறிப்புகளும் தந்துள்ளார்.

           குயிற் பாட்டு ஒரு உருவகம். இதில் இறைவன் குயிலாக உருவகப் படுத்தப் பட்டுள்ளான். ஏன் குயில்? உயிரினங்களிலே மனிதர் தவிர, பறவைகள் மட்டுமே இசை போன்ற இனிய ஓசை எழுப்பக் கூடியவை. பறவைகளுக்குள்ளே இனிய குரல் உடையது குயில். ஏழிசையாய் இசைப் பயனாய் விளங்கும் இறைவனைப் பாரதி குயிலாக உருவகித்தது பொருத்தமே.

           கதையில் வரும் கவிஞர் மானிடச் சாதியின் பிரதிநிதியாகவும், குரங்கும் மாடும் பிற உயிரினங்களைக் காட்டுவதாகவும் விளங்குகின்றனர். இறைவனின் வாயிலிருந்து நெஞ்சைக் கவரும் இனிய இசை தோன்றுகிறது. அந்த இசையின் பொருள் என்ன? வேகத் திரைகளினால் வேதப் பொருள் பாடும் புதுவை அல்லவா? அங்கு குயில் பாட்டிலும் பாரதிக்கு வேதப் பொருளே புலப்படுகிறது.

           குயிலின் இசையில் மெய்மறந்து அதன் மேல் காதல் கொண்டு இறுதியில் அதனுடனேயே ஒன்றி விடுவதாக அமைந்த இக்கதை, இசையின் மூலம் தன்னை மறந்து, உலகை மறந்து இறைவனுடன் கலக்கும் முறையை விளக்க வந்ததே குயில் பாட்டின் வேதாந்தப் பொருளென்று காட்டுகிறது.

           குயிலின் முற்பிறப்புக் கதையை அறிவதற்கு முன், குயில் மாட்டுடனும குரங்குடனும் அன்புடன் பேசுவது பிடிக்காமல் கவிஞர் அதைக் கொல்லக் கருதுகிறார். இது இறைவனைப் பற்றி நன்கு அறியாதவர் இறைவனை நிந்திப்பதைக் காட்டுகிறது.

           தேவார திருவாசக ஆசிரியர்களும் ஆழ்வார்களும் இறைவனைக் காதலனாகக் கற்பித்துப் பாடியுள்ளனர். நாயக நாயகி பாவம் எனப்படும் இம்முறையில் பண்டைப் புலவர் எல்லோரும் தன்னைப் பெண்ணாகக் கருதிக்கொண்டு இறைவன் ஆகிய ஆண் மேல் காதல் கொள்வதாகப் பாடியுள்ளனர்.  பெண் சமத்துவம் பேண வந்த பாரதி, கண்ணன் என் காதலன் என்றும் பாடினார், கண்ணம்மா என் காதலி என்றும் பாடினார். இந்தக் குயில் பாட்டில் இறைவனைப் பெண் குயிலாகக் காட்டி, பெண்மை தான் தெய்விகமாம் காட்சியடா என்றும் கூறிப் பெண்மைக்குச் சிறப்புச் சேர்க்கிறார்.

           இறைவனை அடையும் வழியில் நான்கு படிநிலைகள் உண்டு. சாலோகம்- இறைவனின் இருப்பிடத்தை அடைதல்

    சாமீப்யம்- இறைவனின் அருகாமையை அடைதல்

    சாரூபம்- இறைவனைப் போன்ற உருவம் பெறுதல்

    சாயுச்யம்- இறைவனோடு இரண்டறக் கலத்தல்

           இந்த நான்கு நிலைகளையும் குயில் பாட்டில் காண முடிகிறது. குயில் வாழும் மாஞ்சோலையைக் கவிஞர் சென்றடைதல் சாலோகம் ஆகும்.

           முதல் சந்திப்பில் மரத்தருகே போய் நின்று பேடே திரவியமே என்று கவிஞர் பேசத் தொடங்குவதும், அடுத்த சந்திப்பில்

    காதலருள் புரிவீர், காதலில்லை யென்றிடிலோ

    சாதலருளித் தமது கையால் கொன்றிடுவீர்

    என்று குயிலும் எனது கையில் வீழ்ந்தது காண்

    என்பதுவும் படிப்படியான சாமீப்யம் ஆகும்.

           துவக்கத்தில் மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாராதோ என்று கவிஞர் ஏங்குகிறார். கதை முடிவில்

    அன்புடனே யானும் அருங்குயிலைக் கைக்கொண்டு
    முன்புவைத்து நோக்கிபின் மூண்டுவரும் இன்பவெறி
    கொண்டதனை முத்தமிட்டேன். கோகிலத்தைக் காணவில்லை

    விண்டுரைக்க மாட்டாத விந்தையடா! விந்தையடா!
    ஆசைக் கடலின் அமுதமடா! அற்புதத்தின்
    தேசமடா! பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா!
    பெண்ணொருத்தி அங்குநின்றாள்;

    என்று சொல்லும்போது இறைவன் மானிட உருவம் தரித்து கவிஞருடன் சாரூபம் அடைந்ததையும் காண்கிறோம். பக்தன் தன்னைத் தேடி வரும் வரை காத்திராமல் ‘தானே வந்தெம்மை  தலையளித்தாட் கொண்டருளும்’ இறைவனின் எளிவந்த கருணைத் திறம் இதில் காட்டப்படுகிறது.

    பெண்ணவளைக் கண்டு பெருங்களிகொண் டாங்ஙனே
    நண்ணித் தழுவி நறுங்கள் ளிதழினையே
    முத்தமிட்டு முத்தமிட்டு மோகப் பெருமயக்கில்
    சித்தம் மயங்கிச் சிலபோழ் திருந்தேன்

    என்று அவர் சொல்லும்போது சாயுஜ்ய –இரண்டறக் கலக்கும்- நிலைக்கு முந்திய படியில் அவர் இருப்பதையும் அதன் விளைவான ஆனந்தத்தை அவர் அனுபவித்ததையும் அறிகிறோம்.

    Share
  • ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ ! -3

     சு.கோதண்டராமன்

     

    இசையின் பெருமை

           குக்குக்கூ என்று குயில் பாடிய பாடலில் கவிஞருக்குத் தொக்க பொருளெல்லாம் தோன்றியதாம். அதன் உள்ளுறையை ஆராய்வோம்.

    காதல், காதல், காதல், .

    காதல் போயிற் காதல் போயிற்

    சாதல், சாதல், சாதல்.

           இது பல்லவி. இவ்வாறே மேலும்  ஒன்பது கண்ணிகள். ஒவ்வொன்றிலும் ஒரு பொருளும் அதன் எதிர்ப் பொருளும் கூறப்பட்டுள்ளன. அருள், இன்பம், நாதம், தாளம், பணம், புகழ், உறுதி, கூடல், குழல் என இவை அமைந்திருக்கும் வரிசை அமைப்பைப் பார்த்தால் அதில் ஒரு செய்தி புலப்படுகிறது.

    காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;
    கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
    காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
    கானமுண்டாம்;சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
    ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே!
    அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;
    காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;
    கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்.

    என்று, பாரதி வேறு ஒரு இடத்தில் கூறியதே குயில் பாட்டிலும் வலியுறுத்தப் படுகிறது. இங்கு காதல் என்ற சொல் இரு பால் இளைஞரிடையே உடற் கவர்ச்சி காரணமாகத் தோன்றும் உணர்ச்சியைக் குறிக்கவில்லை. மாறாக, உள்ளத்தில் ஊறி உயிர் கலந்து நிற்கும் அன்பைக் குறிக்கிறது.

    வயது முற்றிய பின்னுறு காதலே

    மாசுடைத்தது, தெய்விகமன்று காண்

    இயலு புன்மை உடலுக்கின்பெனும்

    எண்ணமும் சிறிதேன்றதக் காதலால்

    என்று அவர் கூறுவதால் உடலின்பம் கலவாத காதலே தெய்விகமானது என்பது அவரது கருத்து என அறிகிறோம்.

                   ஸரஸ்வதி காதல், லட்சுமி காதல், காளி காதல் என்று தெய்வங்களின் மீதும் காதல் கொண்டவர் பாரதி. இத்தகைய அன்பின் விளைவு இறை அருளும் வாழ்வில் இன்பம். அந்த இன்பமும் எல்லை கடவாததாக  இருக்க வேண்டும். எல்லை மீறினால் துன்பம் ஏற்படும்.

           வாழ்வில் இன்பம் தரும் பொருள்களிலே தலையாயது இசை. நாதம் பண்ணோடும் தாளத்தோடும் கலந்து வரும்போது அது இசையாகி இன்பம் தருகிறது. அது காதலின் இணை பிரியாத அங்கமாக அமைகிறது. பாட்டுக் கலந்திடவே ஒரு பத்தினிப் பெண் வேண்டும் என்று பாரதி மற்றொரு இடத்தில் பாடுகிறார்.

           மனிதன் வெறுமனே இசை கேட்டுக் கொண்டு பொழுதைப் போக்கக் கூடாது. அவன் புரையற்ற புகழ் தரும் செயல்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும்.  அதற்குத் தேவையான மன உறுதியையும் உடல் உறுதியையும் அவன் இறைவனிடம் வேண்டிப் பெறல் வேண்டும். மனதிலுறுதி வேண்டும் காரியத்திலுறுதி வேண்டும்  என்று பெரிய கடவுளை வேண்டுகிறார் அவர்.

           இத்தகைய  உறுதியுடன் புகழ் தரும் செயல்களைச் செய்துகொண்டு இசை நாட்டம் கொண்ட ஒருவன் அந்த இசை மூலம் இறைவனுடன் கூட வேண்டும்.

           காதலில் ஆரம்பித்து குயிலின் பாட்டு குழலில் அதாவது இசையில் முடிவது, வெளித் தோற்றத்தில் அது ஒரு காதல் கதையாக இருந்த போதிலும் அதன் ஆத்மா இசையே என்பதைச் சூசகமாகத் தெரிவிக்கிறது.

           இசையில் மயங்காத உயிரினம் இல்லை என்பதைக் குரங்கும் மாடும் குயிலின் பாட்டால் கவரப்பட்டு அதைக் காதலித்ததைக் கொண்டு அறிய முடிகிறது.  ஆனால் இசையை எழுப்பக் கூடிய திறமை மனிதர்க்கு மட்டுமே உண்டு. எனவே இறைவன் மற்ற உயிர்களிடம் பரிவு காட்டிய போதிலும் மனிதனிடம் சிறப்பான காதல் கொள்கிறான். இசை இறைவனையும் மனிதனையும் இணைக்கிறது.

           இசையின் காரணமாகத் தான் அவருக்குக் குயிலின் மேல் காதல் ஏற்பட்டது. துவக்கத்தில் தானும் குயிலாக மாறிவிட மாட்டோமா என்று ஏங்குகிறார்.  இறுதியில் குயில் மானிடப் பெண்ணாக மாறியதாக முடித்து மானிடர்க்கு இசையின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். கதை முழுவதுமே இசையின் பெருமை கூறுவது தான் என்றாலும் இசையின் சிறப்புகளைக் கூறும் வரிகளை மட்டும் பார்ப்போம்.

                    குயில் பாடிய பாட்டினால் அந்தச் சூழலில் ஏற்பட்ட விளைவுகள் என்ன? வர்ணிக்கிறார், கேட்போம்.

    ஆண்குயில்கள் மேனி புளகமுற,
    ஆற்ற லழிவுபெற, உள்ளத் தனல் பெருக,
    சோலைப் பறவையெல்லாம் சூழ்ந்து பரவசமாய்க்

    காலைக் கடனிற் கருத்தின்றிக் கேட்டிருக்க,
    இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்ததுபோல்,
    மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய்
    வந்து பரவுதல்போல், வானத்து மோகினியாள்
    இந்தவுரு வெய்தித்தான் ஏற்றம் விளங்குதல்போல்,

    இன்னிசைத் தீம்பாடல் இசைத்திருக்கும் விந்தை

           அது ஏழுலகும் இன்பத்தீ ஏற்றுந் திறனுடையதாக உள்ளதாம்.

                    இசை என்பது மேடையில் பாடப்படுவது மட்டுமல்ல. அது அருவி நீர் முதலான எல்லா இடங்களிலும் வெளிப்படுகிறது. அதைக் கூர்ந்து கேட்கும் அறிவு இருந்தால் தான் அதை ரசிக்க முடியும். உலகில் எங்கெங்கெல்லாம் இசை காணப்படுகிறது என்று பட்டியலிடுகிறார் பாரதி.

    கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்,
    காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்,
    ஆற்று நீரோசை அருவி யொலியினிலும்,

    நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்
    ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்,
    மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்
    ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்,
    ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்குங்

    கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
    சுண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்
    பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும்
    வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
    கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்,

    வேயின் குழலோடு வீணைமுதலா மனிதர்
    வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி
    நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
    பாட்டினிலும், நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்.

           குயிலின் பாட்டுக்குக் கவிஞர் மட்டும் வசமாகவில்லை, குரங்கும் அடிமைப்பட்டதைக் காண்கிறோம்

    ஆசை ததும்பி அமுதூறப் பாடியதே: –
    காட்டின் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும்,
    பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்.
    வற்றற் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே
    முற்றும் வெறிபோல் முழுவெறிகொண் டாங்ஙனே

    தாவிக் குதிப்பதுவுந் தாளங்கள் போடுவதும்
    ”ஆவி யுருகுதடி, ஆஹா ஹா” என்பதுவும்,
    கண்ணைச் சிமிட்டுவதும், காலாலுங் கையாலும்
    மண்ணைப் பிறாண்டியெங்கும் வாரியிறைப்பதுவும்
    ”ஆசைக் குயிலே! அரும் பொருளே! தெய்வதமே!

    பேச முடியாப் பெருங்காதல் கொண்டுவிட்டேன்,
    காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்;
    காதலினாற் சாகுங் கதியினிலே என்னை வைத்தாய்,
    எப்பொழுதும் நின்னை இனிப்பிரிவ தாற்றுகிலேன்,
    இப்போதே நின்னை முத்தமிட்டுக் களியுறுவேன்”

           இறைவன் படைப்பில் பாட்டினைப் போல் ஆச்சரியமானது எதுவும் இல்லை.  அது உவமை இல்லாத இன்பம் தருவது, உலகையே மறக்க வைப்பது.

    பாட்டு முடியும்வரை பாரறியேன், விண்ணறியேன்;
    கோட்டுப் பெருமரங்கள் கூடிநின்ற காவறியேன்!
    தன்னை யறியேன்; தனைப்போல் எருதறியேன்;
    பொன்னை நிகர்த்தகுரல் பொங்கிவரும் இன்பமொன்றே
    கண்டேன், படைப்புக் கடவுளே! நான் முகனே!

    பண்டே யுலகு படைத்தனைநீ என்கின்றார்.
    நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டி வைத்தாய்
    நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய்.
    காற்றை முன்னே ஊதினாய் காணரிய வானவெளி
    தோற்றுவித்தாய், நின்றன், தொழில்வலிமை யாரறிவார்?

    உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதுங் கூடாத
    கொள்ளைப் பெரியவுருக் கொண்ட பலகோடி
    வட்ட வுருளைகள் போல் வானத்தில் அண்டங்கள்
    எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய்;
    எல்லா மசைவில் இருப்பதற்கே சக்திகளைப்

    பொல்லாப் பிரமா, புகுத்திவிட்டாய் அம்மாவோ!
    காலம் படைத்தாய் கடப்பதிலாத் திக்கமைத்தாய்;
    ஞாலம் பலவினிலும் நாடோ றுந் தாம்பிறந்து
    தோன்றி மறையும் தொடர்பாப் பல அனந்தம்!
    சான்ற உயிர்கள் சமைத்துவிட்டாய், நான்முகனே!

    சால மிகப்பெரிய சாதனைகாண் இஃதெல்லாம்!
    ஞாலமிசை நின்றன் சமர்த்துரைக்க வல்லார் யார்?
    ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே
    கானா முதம்படைத்த காட்சிமிக விந்தையடா!
    காட்டுநெடு வானம், கடலெல்லாம் விந்தையெனில்,

    பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா!
    பூதங்க ளொத்துப் புதுமைதரல் விந்தையெனில்
    நாதங்கள் நேரும் நயத்தினுக்கு நேராமோ?
    ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே,
    ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ!

           மானிடப் பெண்ணாக மாறிய குயிலியின் உடல் அழகு, கவிதை  பண் கூத்து இவற்றின் சாரத்தோடு இன்னமுதைக் கலந்து செய்தது என்று சொல்லி இசையை அமுதத்திற்கு இணையாக ஆக்கிக் கதையை முடிக்கிறார் கவிஞர்..

                       ………….கவிதைக் கனிபிழிந்த
    சாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம்
    ஏற்றி, அதனோடே இன்னமுதைத் தான்கலந்து,
    காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்

    மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்.

     

     

    Share
  • ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ !-2


    சு.கோதண்டராமன்

     

    இனி, கதையில் வெளிப்படையாகத் தெரியும் முக்கியக் கருத்துகளைக் கவனிப்போம்.

    பெண்மையின் தெய்விகம்

           பாரதி பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா என்று போற்றியவர் என்பதை நாம் அறிவோம். எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண் இங்கு இளைப்பில்லை என்று கும்மி அடித்தவர். நாணும் அச்சமும் நாய்களுக்கு வேண்டுமாம் என்று பெண்களைத் திரை மறைவு அடிமைத் தளையிலிருந்து விடுவித்தவர். தெய்வத்தின் பல் வேறு வடிவங்களை அவர் பாடினாலும், தெய்வத்தின் பெண் வடிவத்தையே சக்தி என்னும் பெயரால் பெரிதும் போற்றினார். சந்திரிகையின் கதை பெண் விடுதலையையே மையக் கருத்தாகக் கொண்டது. அவருடைய பிற கதைகளிலும் பெண்மையின் உயர்வு பேசப்படுகிறது. அவருடைய கதைகளிலும் கட்டுரைகளிலும் பெரும்பாலும் பெண் குழந்தைகளே இடம் பெறுகிறார்கள். ஆண் குழந்தைகளை அவர் கதாபாத்திரமாகப் பயன்படுத்தியது மிக அரிதாகவே. கண்ணனைப் பல வடிவங்களில் பாடிய அவர் குழந்தையாகக் கற்பனை செய்யும் போது கண்ணம்மா என்ற பெண் குழந்தையாகவே வடிக்கிறார்.  இந்தப் பாட்டிலும் அவர் பெண்மையின் தெய்விகத் தன்மையைப் போற்றுவதையே முக்கியக் கருத்தாகக் கொண்டிருந்தார் என்பது இசையால் இவரைக் கவர்ந்த குயில் மானிட வடிவம் பெற்ற போது, பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா!  என்று அவர் வியப்பதிலிருந்து தெரிகிறது.

    காதலின் உயர்வு

           சின்னக் குயிலியைக் கேட்காமல் அவளுடைய தந்தை அவளை நெட்டைக் குரங்கனுக்கு மணம் முடிக்க நிச்சயிக்கிறான். அவளுடைய இரக்க சுபாவத்தைப் பயன்படுத்தி, மாமன் மகன் மாடன் தன்னை மணக்குமாறு வற்புறுத்துகிறான். மனம் அவனிடம் ஈடுபடாவிட்டாலும் அவள் கருணையினால் அவனை மணக்கச் சம்மதிக்கிறாள். (நம் சமுதாயத்தில் பெண்ணின் இயல்பான நாட்டம் பற்றிக் கவலைப்படாமல் வேறு பல காரணங்களுக்காக அவளது மண வாழ்வைப் பலி ஆக்குவது இங்குக் காட்டப்படுகிறது.) சேர இளவரசனிடம் மட்டுமே அவளுக்கு உண்மையான காதல் ஏற்படுகிறது. அது அந்தப் பிறவியில் நிறைவேறாவிட்டாலும் அடுத்த பிறவியிலாவது நிறைவேறுவது குறித்து நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. காதல் செய்வீர் உலகத்தீரே; அஃதன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம் என்று அவர் காதலை உயர்த்துவது இங்கும் எதிரொலிக்கிறது.

    கற்பின் மாட்சி

           கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் இருக்க வேண்டிய பண்பு என்று கருதப்பட்டு வந்த காலத்தில், கற்பு நிலை என்று சொல்ல வந்தார் அதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம் என்று துணிந்து கூறியவர் பாரதி. ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது தான் காதலின் இன்பம். அவ்வாறின்றி, பல பெண்களை ஒரு ஆடவன் மணப்பதால் பெண் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படுகிறாள். சமத்துவம் இல்லாவிடில் அது காதல் அல்ல. சமூகத்தில் நிலவி வரும் பல தார மணத்தைக் கண்டித்துப் புதுமைப் பெண்ணான சின்னக்குயிலி இளவரசனிடம் பேசும் வீர உரை இது.

    ”ஐயனே! உங்கள் அரண்மனையில் ஐந்நூறு
    தையலருண் டாம்; அழகில் தன்னிகரில் லாதவராம்;
    கல்வி தெரிந்தவராம்; கல்லுருகப் பாடுவராம்;
    அன்னவரைச் சேர்ந்தே நீர் அன்புடனே வாழ்ந்திருப்பீர்,
    மன்னவரே வேண்டேன், மலைக்குறவர் தம்மகள்யான்;

    கொல்லு மடற்சிங்கம் குழிமுயலை வேட்பதுண்டோ ?

    வெல்லுதிறல் மாவேந்தர் வேடருள்ளோ பெண்ணெடுப்பார்?

    பத்தினியா வாழ்வதல்லால் பார்வேந்தர் தாமெனினும்

    நத்தி விலைமகளா நாங்கள்குடி போவதில்லை,

    பொன்னடியைப் போற்றுகின்றேன், போய் வருவீர்

    பெண் குலப் பீழை

           மானிடர் போல் அல்லாமல், சுதந்தரமானது என்று நாம் கருதும் பறவைக் குலத்தில் பிறந்த போதிலும் குயிலின் காதல் அவ்வளவு எளிதாக நிறைவேறிவிடவில்லை. மாடனும் குரங்கனும் அவளைத் துரத்துகின்றனர். அபலைப் பெண் ஜன்மமான அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களைக் காதலிப்பதாக நடிக்க வேண்டியுள்ளது. அதை அவள் கவிஞரிடம் உரைக்கும் போது வேறொரு பாடலில் அவர் பாடிய,

    பெண்ணென்று பூமி தனில் பிறந்து விட்டால் மிகப்

    பீழை இருக்குதடி தங்கமே தங்கம்

    என்ற வரிகள் நம் நினைவுக்கு வருகின்றன.

    நகைச் சுவை

           சக்தியைச் சரணடைதல், நாட்டு விடுதலை, பெண் குல முன்னேற்றம், வேதநெறி தழைக்கச் செய்தல், பூமியிலே கிருத யுகத்தை நாட்டல் என்று பாரதி எடுத்துக் கொண்ட விஷயங்கள் யாவுமே கனமானவை. இத்தனை லட்சியங்களையும் சாதிக்கத் தனக்கு ஆயுள் போதாது என்ற உள்ளுணர்வால் உந்தப்பட்ட அவர் எப்பொழுதும் பக்தி, வீரம் ஆகிய உணர்ச்சிகளின் பிழம்பாக இருந்தார். எனவே அவருடைய படைப்புகளில், குறிப்பாகக் கவிதைகளில் நகைச்சுவையைக் காண முடிவதில்லை.

           ஆனால் பாரதி நகைச்சுவை உணர்வு இல்லாதவர் அல்லர். அவருடைய கவிதைகளில் இரண்டு இடத்தில் மட்டும் இது சற்றே தலை தூக்குகிறது. கண்ணன் என் சேவகன் என்ற பாடலில் சேவகரால் பட்ட தொல்லைகளை விவரிக்கும்போது,

    ஏனடா நீ நேற்று இங்கு வரவில்லை என்றால்

    பானையிலே தேளிருந்து பல்லாற் கடித்ததென்பார்

    பாட்டியார் செத்து விட்ட பன்னிரண்டாம் நாளென்பார்.

    வீட்டிலே பெண்டாட்டி மேற் பூதம் வந்ததென்பார்

    என்று சேவகர்கள் வழக்கமாகச் சொல்லும் பொய்களை நகைச்சுவையோடு சொல்வார்.

           அடுத்தது, குயில் பாட்டில் குயில் குரங்கினிடம் காதல் மொழிகள் பேசும்போது காணப்படுகிறது. குரங்கு இழிவான மிருகம் என்ற கருத்தை மாற்றி, குரங்கே மனிதரை விட மேலானது என்று சான்று காட்டிக் குயில் பேசும்போது நம்மை அறியாமல் நமக்குச் சிரிப்பு வருகிறது.

    பேடைக் குயிலிதனைப் பேசியது: – ”வானரரே!
    ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே! பெண்மைதான்
    எப்பிறப்புக் கொண்டாலும், ஏந்தலே! நின்னழகைத்
    தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ?

    மண்ணிலுயிர்க் கெல்லாந் தலைவரென மானிடரே,

    எண்ணிநின்றார் தம்மை; எனிலொருகால் ஊர்வகுத்தல்,
    கோயில், அரசு, குடிவகுப்புப் போன்ற சில
    வாயிலிலே, அந்த மனிதர் உயர்வெனலாம்.
    மேனி யழகினிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும்
    கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே
    வானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிக ராவாரோ?

    ஆன வரையும் அவர் முயன்று பார்த்தாலும்,
    பட்டுமயிர் மூடப்படாத தமதுடலை
    எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்,
    மீசையையும் தாடியையும் விந்தைசெய்து வானரர்தம்

    ஆசை முகத்தினைப் போல் ஆக்க முயன்றிடினும்
    ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே
    கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில்
    ஏறத் தெரியாமல் ஏணி வைத்துச் சென்றாலும்,
    வேறெத்தைச் செய்தாலும் வேகமுறப் பாய்வதிலே

    வானரர்போ லாவரோ? வாலுக்குப் போவதெங்கே?
    ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ?

    பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு கந்தைபோல்;
    வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே
    தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ?

    சைவசுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும் –
    வானரர் போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ?

    ஒளியைப் போற்றல்

           இறைவன் எல்லாமாக வியாபித்து நிற்பவன். வீசுறு காற்றில், நெருப்பில், வெளியில்  என்று எல்லா இடங்களிலும் இறைவன் வியாபித்து நின்றாலும் அவனை ஒளி வடிவாகவும் ஒலி வடிவாகவும் வணங்கும் வழக்கம் மிகப் பழமையானது.

    பண்ணில் இனிய பாடலோடு பாயும் ஒளியெலாம்

    பாரில் எம்மை உரிமைகொண்டு  பற்றி நிற்கவே

    …….

    வேண்டுமடி எப்போதும் விடுதலை

    என்ற  வரிகளிலிருந்து பாரதிக்கு அந்த இரண்டு வடிவங்களில் இருந்த சிறப்பான ஈடுபாடு தெரிகிறது. அந்த இரண்டு வடிவும் குயில் பாட்டின் அடிப்படைகளாக உள்ளன.

           முதலில், இறைவனின் ஒளி வடிவைக் காண்போம். பாரதிக்கு இயற்கை ஒளி மீது அளவற்ற ஆசை உண்டு. ஞாயிற்றின் ஒளி பற்றி அவர் பல பாடல்கள் பாடியுள்ளார். பல இடங்களில் இறைவனின் சோதி வடிவைப் போற்றுகிறார்.  எடுத்துக்காட்டாக, பாஞ்சாலி சபதத்தில் அவர் சூரிய உதயக் காட்சியை வர்ணிப்பதைக் காண்போம்.

    ‘பாரடியோ! வானத்திற் புதுமை யெல்லாம்,
    பண்மொழீ! கணந்தோறும் மாறி மாறி
    ஓரடிமற் றோரடியோ டொத்த லின்றி
    உவகையுற நவநவமாய்த் தோன்றுங் காட்சி
    யாரடிஇங் கிவைபோலப் புவியின் மீதே
    எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார்?
    சீரடியால் பழவேத முனிவர் போற்றுஞ்
    செழுஞ்சோதி வனப்பையெலாம் சேரக் காண்பாய்.

    ‘கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்;
    கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்;
    கணந்தோறும் நவநவமாங் களிப்புத் தோன்றும்;
    கருதிடவும் சொல்லிடவும் எளிதோ?ஆங்கே,
    கணந்தோறும் ஒருபுதிய வண்ணங் காட்டிக்
    காளிபரா சக்தி அவள் களிக்குங் கோலம்
    கணந்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர்
    கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய்.

    ‘அடிவானத் தேஅங்கு பரிதிக் கோளம்
    அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்
    இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி
    எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து,
    முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே
    மொய்குழலாய்,சுழற்றுவதன் மொய்ம்பு காணாய்!
    வடிவான தொன்றாகத் தகடி ரண்டு
    வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய்.
    **
    அமைதியொடு பார்த்திடுவாய் மின்னே! பின்னே
    அசைவுறுமோர் மின்செய்த வட்டு; முன்னே
    சமையுமொரு பச்சைநிற வட்டங் காண்பாய்.
    தரணியிலிங் கிதுபோலோர் பசுமை உண்டோ?
    இமைகுவிய மின்வட்டின் வயிரக் கால்கள்
    எண்ணில்லா திடையிடையே எழுதல் காண்பாய்;
    உமை கவிதை செய்கின்றாள், எழுந்து நின்றே
    உரைத்திடுவோம், ”பல்லாண்டு வாழ்க!” என்றே.

    ‘பார்; சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில்
    எத்தனை தீப்பட் டெரிவன? ஓகோ!
    என்னடி! இந்த வண்ணத் தியல்புகள்!
    எத்தனை வடிவம்! எத்தனை கலவை!
    தீயின் குழம்புகள்!- செழும்பொன் காய்ச்சி
    விட்ட ஓடைகள்!- வெம்மை தோன்றாமே
    எரிந்திடுந் தங்கத் தீவுகள்!- பாரடி!
    நீலப் பொய்கைகள்!-அடடா, நீல
    வன்ன மொன்றில் எத்தனை வகையடி!
    எத்தனை செம்மை! பசுமையுங் கருமையும்,
    எத்தனை!- கரிய பெரும்பெரும் பூதம்!
    நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்
    தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட
    கருஞ்சிக ரங்கள்!- காணடி, ஆங்கு
    தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும்
    இருட்கடல்!-ஆஹா! எங்கு நோக்கிடினும்
    ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!’

           இதற்கு விளக்கம் கொடுக்கையில் பாரதி குளக்கரைகளிற் போய் கருடன் பார்ப்பதென்றால் நம்மவர்கள் கூட்டம் கூட்டமாக ஓடுகிறார்கள். ஸூர்யாஸ்தமன காலத்தில் வானத்தில் தோன்றும் அதிசயங்களைப் பார்க்க ஒருவன் கூடப் போகிறதில்லை என்று வருந்துகிறார். குயில் பாட்டில் ஒளியைப் போற்றுவதற்கென்று வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்கிறார். கதையின் துவக்கமே சோதியையும் வேத ஒலியையும் கொண்டு மங்களகரமாக அமைந்துள்ளது.

    காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே
    நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்
    மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா
    வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி
    வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய

    செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்
    மேற்கே, சிறுதொலையில் மேவுமொரு மாஞ்சோலை,

           நடுவில் ஓரிடத்தில்

    சோலையிடை, செஞ்ஞாயிற் றொண்கதிரால்
    பச்சைமர மெல்லாம் பளபளென விளங்கும் காட்சியை வர்ணிக்கிறார்.

           கதை சொல்லிக் கொண்டு வரும்போதே பாதியில் ஒரு இடைவெளி ஏற்படுத்திக் கொண்டு ஒளியைப் புகழ்கிறார் பாரதி. இது கதைக்குச் சம்பந்தம் இல்லை எனினும் அவருக்கு ஒளியின் பால் இருந்த நாட்டம் காரணமாக, “குயிலின் வஞ்சகத்தால் மனமுடைந்து போனதால் மேற்கொண்டு கதை சொல்ல முடியாமல் போகவே, மன ஆறுதலுக்காக காலைக் கதிரழகை வர்ணிக்கிறேன்” என்று இதைக் கதையோடு தொடர்பு படுத்துகிறார்.

    வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான்
    மோனவொளி சூழ்ந்திடவும் மொய்ம்பிற் கொலுவிருந்தான்,

    …….

    மேலைக் கதையுரைக்க வெள்கிக் குலையுமனம்,
    காலைக் கதிரழகின் கற்பனைகள் பாடுகிறேன்.

    தங்க முருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி
    எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச்
    சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை
    ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ?
    கண்ணையினி தென்றுரைப்பார்; கண்ணுக்குக் கண்ணாகி

    விண்ணை அளக்கும் ஒளி மேம்படுமோர் இன்பமன்றோ?

    மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தை செய்யும்
    மேலவரும் அஃதோர் விரியுமொளி என்பாரேல்
    நல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை யொப் புளதோ?

    புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி

    மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து
    விண்ணை வெளியாக்கி விந்தைசெயுஞ் சோதியினைக்
    காலைப் பொழுதினிலே கண்விழித்து நான்தொழுதேன்.

    Share
  • நீத்தல் விண்ணப்பம்

     

    சு.கோதண்டராமன்

     

          திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது பழமொழி. இறையருள் பெற்ற அடியார் பலருண்டு, அவர்கள் பாடிய பனுவல்களும் பல உண்டு. இத்தனைக்கும் இல்லாத சிறப்பு திருவாசகத்திற்கு எப்படி வந்தது?

    எல்லா அடியார்களும் இறைவனைப் போற்றுவர். அவனது பேராற்றலைப் புகழ்வர். அவனது கருணையைப் பரவுவர். மணிவாசகரோ ஒவ்வொரு பாடலிலும் தன் சிறுமைகளை விரிவாகக் கூறி, இத்தனை தாழ்ந்த எனக்கும் அருள் புரிந்தாயே என்று வியக்கும் போது, இறைவனின் கருணையின் பெருமை மிகுதிப்படுகிறது. தன் சீவபோதம் ஒடுங்கும் வகையில் மாணிக்க வாசகர் தன்னைப் பற்றிக் கூறிக் கொள்ளும் சிறுமைகள் மானிட குலம் முழுமைக்கும் பொருத்தமானதாக உள்ளன. நம் சார்பில் அவர் பேசுவதாகவே தோன்றுகிறது.

    வாழ்க்கையில் தவறு செய்யாதவர் நம்மில் யார்? நாம் தவறு செய்து விட்டோம், நமக்கு உய்யும் வழி இல்லை என்று விரக்தி அடைந்த நிலையில் இருப்போர்க்கு, ‘எந்த நிலையிலும் மனம் திருந்தி இறை நாட்டம் கொண்டால் அவன் நம்மைக் கடைத்தேற்றக் காத்து இருக்கும் கருணை வள்ளலாக விளங்குகிறான்’ என்ற ஆறுதல் ஏற்பட்டு, திருவாசகம் படிக்கும் பொழுது வெளிப்படும் கண்ணீரில், செய்த பாவங்கள் கரைந்து மனம் பக்குவப்படுவது பலருடைய அனுபவம்.

    இப்படிப்பட்ட திருவாசகத்தில் நீத்தல் விண்ணப்பம் என்ற பகுதியிலிருந்து சில முத்துகளைச் சுவைப்போம், வாருங்கள்.

    பெயர் நீத்தல் விண்ணப்பம் என்று இருந்தாலும் அதில் கூறப்பட்ட விஷயம்- இறைவன் தன்னை விட்டு நீங்காது இருக்க வேண்டும் என்ற விண்ணப்பம் தான். அனைத்துப் பாடல்களிலும் வரும் ஒரு பொதுவான தொடர், விட்டிடுதி கண்டாய் என்பது. ‘என்னை விட்டு விடாதே’ என்பது பொருள்.

    நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டது. அந்தாதி முறையில் அமைந்தது. இதன் முதல் பாட்டின் முதல் சொல் ‘கடையவன்’ என்பது. அந்தாதி இலக்கணப்படி, கடைசிப் பாட்டின் கடைசிச் சொல்லும் இதுவே. முதலில் உள்ள ‘கடையவன்’ என்ற சொல்லைக் ‘கீழ்த்தரமானவன்’ என்ற பொருளில் தன்னைக் குறிக்குமாறும், கடைசியில் உள்ள ‘கடையவன்’ என்ற சொல்லைக் ‘கடைசித் தொழிலான சம்காரம் செய்பவன்’ என்ற பொருளில் சிவனைக் குறிப்பதாகவும் அமைந்துள்ளது.

    தத்துவரீதியாகப் பார்க்குமிடத்து, வாழ்க்கையை மும்மலங்களுடன் துவக்கும் சீவன் படிப்படியாகச் சீவபோதம் நீங்கி இறுதியில் சிவபோதம் அடைவதை இது குறிக்கிறது.

    மணிவாசகர் கூறுகிறார், “நான் கடையவன். காமத்தின் வசப்பட்டுக் கடவுளை மறந்தவன். ஆற்றங்கரையில் உள்ள மரத்தின் வேரடி மண், ஓடும் நீரால் அரிக்கப்பட்ட நிலையில் அந்த மரம் பார்வைக்கு நேராக நின்றாலும் எந்த நேரத்திலும் விழுந்து விடக் கூடிய நிலையில் இருப்பது போல, என் ஐம்பொறிகள் காம நீரால் அரிப்புண்டு என்னை நிலையற்றவனாக்கி விட்டன. இறைவா, நீ என்னை வளைத்துப் பிடிக்க வந்தாய். நானோ உன் கையில் பிடிபடாமல் புலனின்பமே பெரிது என்று மயங்கி இன்னமும் உலகாயதச் சேற்றில் உழல்கின்றேன். தீயினைப் பழம் என்று நினைத்து அதைச் சுற்றி வட்டமிட்டு இறுதியில் தன்னை அதில் மாய்த்துக் கொள்ளும் விட்டில் போல, நான் இந்த உலக வாழ்வே இன்பம் என்று கருதி அதையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன். நீ உன் அருள் அமுதை என் வாயில் ஊட்ட வந்தாய். நான் அதை ஏற்காமல் மறுத்து விட்டேன். என்னே என் அறியாமை” என்று நொந்து கொள்கிறார்.

    செழிகின்ற தீப்புகு விட்டிலிற் சின்மொழி யாரிற்பன்னாள்

    விழுகின்ற என்னை விடுதிகண் டாய்வெறி வாய்அறுகால்

    உழுகின்ற பூமுடி உத்தர கோசமங் கைக்கரசே

    வழிநின்று நின்னரு ளாரமு தூட்ட மறுத்தனனே.

    “என் ஐம்புலன்கள் எனக்கு வஞ்சனையைச் செய்து கொண்டிருக்கின்றன. உண்மையான இன்பம் எது என்று நான் உணர அவை வாய்ப்பு அளிக்கவில்லை. அதனால் நான் உன் மணி மலர்த் தாள் குறுகாமல் வேறுபட்டேன். எறும்புகள் நெய்க்குடத்தை மோப்பத்தால் அறிந்து நாடுவது போல என் புலன்கள் உலக இன்பத்தையே நாடிக் கொண்டிருக்கின்றன. உண்மையான மெய்ப்பொருள் நீ இருக்க, நான் பொய்மை செய்து வீண் பேச்சைப் பெருக்கிக் கொண்டிருக்கிறேன். கடைகின்ற மத்துப் பொருந்திய உடனே, தயிர் சுழல்வது போல என்னைப் பற்றிய பாசங்கள் ஐந்தினால் நான் அலைப்புண்டு வருந்துகிறேன். இவ்வாறாக, மீண்டும் ஒரு பிறவிக்கு உரியவனாக என்னை ஆக்கிக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு புலன் வசப்பட்டு வாழ்ந்தது கூடப் பெரிதில்லை. அதை விடப் பெரிய தவறு ஒன்றும் செய்து கொண்டிருக்கிறேன். இறைவனை அடைய வேண்டும்  என்ற குதுகுதுப்பு (ஆர்வம்) என்னிடத்தில் எள்ளளவும் இல்லை. என் மனம் போன வழியில் சென்று கொண்டு இது தான் இறைவனின் குறிப்பு என்று தவறாக விளம்பரம் செய்து கொண்டிருக்கிறேன். இது மன்னிக்கப்படக் கூடிய குற்றமா?”

    குதுகுதுப் பின்றிநின் றென்குறிப் பேசெய்து நின்குறிப்பில்

    விதுவிதுப் பேனை விடுதிகண் டாய்

    “உன்னோடு ஒன்றுபடும் வழியும் எனக்குத் தெரியவில்லை. உன்னைப் பாடவில்லை. உனக்குப் பணி செய்யவில்லை. சிவன் யார் எங்குளான் என்று தேடவில்லை. ஓடிப் பார்க்கவில்லை. ஸ்தம்பித்து மனம் உருகவில்லை. அது மட்டுமல்ல, உன்னைப் பழிக்கவும் துணிந்தேன்.”

    திருவாசகத்தில் தோய்ந்து கிடந்த அருட் பிரகாச வள்ளலார் இதே கருத்தை எதிரொலிக்கிறார்.

    அல்லார்க்கும் குழலார் மேல் ஆசை வைப்பேன்

    ஐயா நின் திருத்தாள் மேல் அன்பு வையேன்.

    செல்லார்க்கும் பொழில் தணிகை எங்கே என்று

    தேடிடேன் நின் புகழைச் சிந்தை செய்யேன்

    கல்லார்க்கும் கடுமனத்தேன் வன்கண்ணினேன் புன்

    கண்ணினேன் உதவாத கையேன் பொய்யேன்

    எல்லார்க்கும் உதவாத பாவியேன் யான்

    ஏன் பிறந்தேன் புவிச் சுமையாய் இருக்கின்றேனே.

    “இத்துணை நாள் இப்படி வாழ்ந்தது போதும். இனி புலால் நாற்றமுடைய, நோய்களுக்கு இருப்பிடமான இந்த உடலை நான் தாங்கி இருக்க மாட்டேன். நான் தளர்ந்து விட்டேன். என்னைத் தாங்கிக் கொள்வாயாக” என்று இறைவனிடம் இறைஞ்சுகிறார்.

    தன் சிறுமைகளை எல்லாம் பட்டியலிட்ட மணிவாசகர் ஆங்காங்கு இறைவனின் கருணையையும் புகழ்ந்து பாடுகிறார். இறைவன் பேராற்றலும் பெருங் கருணையும் உடையவன் என்பது முன்னரே தெரிந்தது தான். ஆனால் இவ்வளவு குறை உடைய எனக்கும் அவன் கருணை செய்துள்ளான் என்பது அவனது கருணைக்கு எல்லையில்லை என்பதை அடிக் கோடிட்டுக் காட்டுகிறது.

    கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட

    விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல்

    உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே

    சடையவ னேதளர்ந் தேன்எம்பி ரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.

    “நான் கள்ளன் என்பது உனக்குத் தெரியும். அப்படியும் என்னை ஆண்டு கொண்டாயே அப்பா, அது என்ன காரணம் பற்றி?” என வினவுகிறார்.

    கள்ளேன் ஒழியவும் ஆண்டு கொண்டதெக் காரணமே

    “என்னை ஆண்டு கொண்டது மட்டுமல்லாமல் என் குறையை நிறையாக்கி என் பிறவிப் பிணியைத் தீர்த்தாயே இறைவா. முன்பு பாற்கடலைக் கடைந்த போது உண்டான ஆலகால விடத்தை அமுதமாக்கி  உண்டாயே அது போன்ற விந்தைச் செயல் அல்லவா நீ என்னிடம் செய்து விட்டாய்!”

    பொய்யவ னேனைப் பொருளென ஆண்டொன்று பொத்திக்கொண்ட

    மெய்யவ னேவிட் டிடுதிகண் டாய்விட முண்மிடற்று

    மையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே

    செய்யவ னேசிவ னேசிறி யேன்பவந் தீர்ப்பவனே

    “சுடர் விடும் பொருள்களுக்கு எல்லாம் ஒளி தந்த மூலப் பொருள் நீ. அதே நேரத்தில் எளிமையின் எல்லையைத் தொட்டவன். அதனால் அன்றோ, உன்னோடு கலந்து விட நான் வெளிவராத போதும் நீயாக வந்து என்னை ஆட்கொண்டாய்.”

    களிவந்த சிந்தையொ டுன்கழல் கண்டுங் கலந்தருள

    வெளிவந்தி லேனை விடுதிகண் டாய்மெய்ச் சுடருக்கெல்லாம்

    ஒளிவந்த பூங்கழல் உத்தர கோசமங் கைக்கரசே

    எளிவந்த எந்தை பிரான்என்னை ஆளுடைய என்னப்பனே

    “சிவனே, உன்னிடத்தே ஒன்றுக்கொன்று பகையான நிலவும் பாம்பும் இசைந்து வாழ்கின்றன. அது போலப் பண்பில் மேம்பட்ட பழ அடியார் பலரோடு கூட படிறு {பொய்} ஒழுக்கம் கொண்ட என்னையும் இசைத்தாயே, இந்த வித்தையை எப்படிப் புகழ்வேன்? பிறவி என்னும் ஐவாய் அரவத்துக்கு அஞ்சி என் மனம் பொந்தில் ஒடுங்குகிறது. என்னைக் கைவிட்டு விடாதே.”

    பரம்பர னேநின் பழஅடி யாரொடும் என்படிறு

    விரும்பர னேவிட் டிடுதிகண் டாய்மென் முயற்கறையின்

    அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவிஐ வாயரவம்

    பொரும்பெ ருமான்வினை யேன்மனம் அஞ்சிப் பொதும்புறவே.

    “நான் உன்னை ஏசினாலும் ஏத்தினாலும் பிழைகளை எண்ணி மனம் குழைகின்ற என்னை விட்டு விடாதே” என்று நீத்தல் விண்ணப்பத்தை நிறைவு செய்கிறார்.

    தாழ்மை உணர்வோடு பாடிக் கொண்டு வந்த மாணிக்க வாசகர் தோழமை உரிமையோடு பாடிய பாடல் ஒன்றும் நீத்தல் விண்ணப்பத்தின் இறுதிப் பகுதியில் உண்டு.

    “இறைவா, நீ கபால மாலை அணிந்து தீயை ஏந்தி அரவு பூண்டு வீரத்தின் நிலைக் களனாக விளங்குகிறாய். நீ என்னைக் கைவிட்டு விட்டால், நீ யாருடைய அடியவன் என்று ஊரார் என்னைக் கேட்கும்போது உத்தரகோசமங்கைக்கு அரசின் அடியார்க்கு அடியேன் என்று பதில் அளிப்பேன். என் கீழ்மையைப் பார்க்கும் அவர்கள் உன்னைப் பரிகசிப்பர். இது உனக்குத் தேவையா? உன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவாவது நீ என்னைக் கடைத்தேற்ற வேண்டும்” என்கிறார்.

    அடுத்த பாடலில் இன்னும் ஒரு படி மேலே போய் நிந்தா ஸ்துதியாக மிரட்டுகிறார்.

    “நான் பிழை செய்தவன் என்று என்னை நீ வெறுத்துப் புறக்கணித்தால் உன் செயல்கள் சரியல்ல என்று ஊரார் சிரிக்கும்படி செய்து விடுவேன். அப்படியும் நீ என்னை ஒதுக்குவாய் ஆயின் நீ யானைத் தோலைப் போர்த்த பித்தன், புலித் தோலை உடுத்த பித்தன், நஞ்சு உண்ட பித்தன், சுடுகாட்டுத் தீயில் விளையாடும் பித்தன், என்னை ஆண்டு கொண்டு பின்பு புறக்கணித்த பித்தன் என்றெல்லாம் ஏசி உன்னைப் பழிக்கு ஆளாக்குவேன்” என்கிறார்.

    கற்றுப் புலமை தேர்ந்து தன் அறிவுத் திறம் விளங்கப் பாடிய பாடல்கள் அல்ல இவை. பக்திச் சுவையில் தோய்ந்து கிடந்து பழுத்த மனத்திலிருந்து பீறிட்டு எழுந்தவை இவை. ஆயினும் இவற்றில் இலக்கியச் சுவைக்கும் பஞ்சமில்லை.

    மணிவாசகரின் உவமை நயம் சிறப்பு மிக்கது. புலனின்பமே மேலானது என்று கருதி வாழ்பவன் சிறப்புற வாழ்வது போலத் தோன்றினாலும் அவன் ஒரு நாள் வீழ்ந்து படுவது திண்ணம் என்பதைக் காட்ட வேரடி மண் அரிக்கப்பட்டும் நிமிர்ந்து நிற்கின்ற ஆற்றங்கரை மரத்தை உவமையாக்கியதை முதலில் பார்த்தோம்.

    புலனின்பம் தனக்கு அழிவு தர வல்லது என்பதை உணராமல் அதைத் தேடி அலைகின்ற மானிடரை தீப்புகு விட்டிலாகவும் நெய்க்குடம் மொய்க்கும் எறும்பாகவும் சித்தரித்ததையும் பார்த்தோம்.

    இறை நாட்டம் ஒரு புறமும் புலன் நாட்டம் ஒரு புறமுமாக இருப்பவர்களை இருதலைக் கொள்ளி எறும்புக்கு உவமிக்கிறார்.

    இறையருள் வெள்ளமாகப் பெருகிக் கொண்டிருந்தும் அதைப் பருக முடியாமல் தடுமாறும் மனிதக் கூட்டத்தை வெள்ளத்தில் மிதந்து கொண்டே தாகத்தால் நா வறண்டு துன்புறும் பேதை என வர்ணிக்கிறார்.

    யானைப் படை கொண்டு புரிகின்ற போரில் சிறு செடிகள் மிதியுண்டு மாய்வது போல, ஐம்புலன்கள் இன்பம் நாடிச் செல்லும் வேளையில் ஆன்மா நாசமடைகிறது என்கிறார்.

    நாங்கூழ்ப் புழுவைச் சுற்றி எறும்புகள் கூட்டமாக் மொய்த்து அதைக் கடித்து உண்ணும் வேளையில் தன்னைக் காத்துக் கொள்ள முடியாமல் புழு துடிப்பது போல், ஐம்புலன்கள் துன்புறுத்த, என் மனம் தன்னைக் காத்துக் கொள்ள முடியாமல் துடிக்கிறது என்கிறார்.

    இறைவனை அடைய வேண்டும் என்கிற இதய தாகத்துக்கு அவர் கொடுக்கும் உவமை, ‘பெரு நீர் அறச் சிறு மீன் துவண்டாங்கு.’ வெள்ளம் வற்றிய இடத்தில் உள்ள மீன் துடிப்பது போல இறைவனின் பிரிவாற்றாமையால் தான் துடிப்பதாகக் கூறுகிறார்.

    வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை

    நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

    தேன் கலந்து பால் கலந்து செழுங் கமலத்தின் சுவை கலந்து

    ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

    என்று வள்ளலார் பாடியது பொருத்தமானதே என்று உணர்கிறோம்.

     

    படத்துக்கு நன்றி: http://swarnaboomi.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/

     

    Share
  • பாரதியின் வேத முகம் -18

     

    சு.கோதண்டராமன்

    மோதி மிதித்துவிடு பாப்பா

           பாரதியின் பாப்பாப் பாட்டில் ஒரு பகுதி-

    பாதகம் செய்பவரைக் கண்டால்நீ

    பயம் கொள்ளலாகாது பாப்பா

    மோதி மிதித்துவிடு பாப்பா அவர்

    முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

    அவருடைய பகைவனுக்கருள்வாய் பாட்டில் ஒரு பகுதி-

    தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு

    சிந்தையிற் போற்றிடுவாய் நன்னெஞ்சே

    அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்

    அவளைக் கும்பிடுவாய் நன்னெஞ்சே

    இந்த இரண்டு பாடல்களின் கருத்துகளும் ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றுகின்றன. எதிரியை மோதி மிதித்து விடு என்று பாப்பாவுக்குக் கூறும் அவர் தன் நெஞ்சுக்கு அறிவுறுத்துவதோ தின்ன வரும் புலியைக் கும்பிடு.

    பாதகம் செய்யும் மனிதரைத் தண்டிக்க வேண்டுமாம். பாதகம் செய்யும் புலியைத் தண்டிக்காதது மட்டுமல்ல, அதைக் கும்பிடவும வேண்டுமாம். சாதிக்கொரு நீதியா? மகாகவியின் வாக்கில் முரண்பாடா ?

    இல்லை. ஆராய்ந்து பார்த்தால் இதில் முரண்பாடு இல்லை என்பது தெரியவரும்.

    தின்ன வரும் புலி தன் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக வருகிறது. கண்ணில் தென்பட்ட எதையாவது தின்று அது தன் பசியைப் போக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு வயிறு நிரம்பிவிட்டால் அது கொல்லப் போவதும் இல்லை, தின்னப் போவதும் இல்லை. நாம் அதைத் தொந்தரவு செய்யாத வரையில் அது தன் பாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கும். அது மனிதனைப் பகைவனாகக் கருதி வன்மம் தீர்த்துக் கொள்வதில்லை.

    ஆனால் மனிதன் அப்படி அல்ல. பாதகம் செய்பவன், தான் செய்வது தவறு என்று தெரிந்தே செய்கிறான். முன் விரோதம் அகம்பாவம் இவற்றால் ஆட்டிப் படைக்கப்பட்டுப் பாதகம் செய்கிறான். தன் செயலை நியாயப்படுத்த அவன் பல யுக்திகளையும் பயன்படுத்தி வாதிடுவான். பாதகம் செய்துவிட்ட பின்னும் அவனது வெறி அடங்குவது இல்லை.

    ஆக, மனிதனைத் தூண்டுவது ஆணவம், புலியைத் தூண்டுவது பசி. பசி என்பது சக்தியின் ஒரு தோற்றம். இது எல்லா உயிர்களிடத்திலும் நீக்கமற நிறைந்து அவற்றைச் செயல்படத் தூண்டுகிறது. பசி இல்லையேல் உயிர் இயக்கமே நின்று போகும். ஆனால் ஆணவம் என்பது சக்தியின் தோற்றம் அல்ல, இது மனிதனைப் பற்றிய ஒரு மலம்.

    தேவி பாகவதத்தில் சக்தியின் பல வேறு தோற்றங்களை வர்ணிக்கும் சுலோகங்களில் ஒன்று-

    யா தேவி ஸர்வ பூதேஷு க்ஷுதா ரூபேண ஸம்ஸ்திதா

    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் பசி வடிவில் விளங்குகிறாளோ, அவளுக்கு மீண்டும் மீண்டும் வணக்கம்.

    இதன் அடிப்படையில், பாரதியும் தின்ன வரும் புலியின் பசியில் தேவியைக் காண்கிறார். எனவே புலியை வணங்கச் சொன்னதும் பாதகக்காரனை மிதிக்கச் சொன்னதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல என்று அறிகிறோம்.

     

    Share
  • பிராயச்சித்தம்

    சு.கோதண்டராமன்

     
    (இந்த என்னுடைய கதை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ஓம் சக்தி மாத இதழில் வெளிவந்தது. மறு பகிர்வாக இங்கு வெளியிடுகிறேன்.- சு. கோதண்டராமன்)

     
    மூடிய கதவுக்கு வெளியே பெருங் கூட்டம். எல்லோர் முகத்திலும் சோகம் கப்பியிருந்தது. அவ்வப்போது சிலர் தணிந்த குரலில் பேசிக் கொண்டார்கள். ஒரு சிலர் ஜபம் செய்து கொண்டிருந்தனர்.

    அருள் நிறைந்த மரியே வாழ்க, கர்த்தர் உம்முடனே,

    பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே,

    உம்முடைய திருவயிற்றின் கனியாகிய ஏசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.

    பாவிகளாகிய எங்களுக்காக இப்பொழுதும்

    எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும்.

    இந்த ஜபத்தைத் திரும்பத் திரும்பக் கூறித் தங்கள் மனத் துயரத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

    அறையின் உள்ளே அவரது அன்புக்குப் பாத்திரமான ஃபாதர் சின்னசாமி படுத்திருக்கிறார். ஒரு வாரமாகக் கண் திறக்கவில்லை. உணவு தண்ணீர் இல்லை. அருகில் இரண்டு அணுக்கத் தொண்டர்கள் அவரது தேவையை உணர்ந்து செயல்படத் தயாராக இருந்தனர். அவ்வப்போது கதவைத் திறந்து அவரது உடல் நிலை பற்றிய செய்தியை வெளியில் உள்ளவர்களுக்குத் தெரியப் படுத்தினர்.

    ஃபாதர் அசையாமல் படுத்திருந்தார். அவரது மூடிய கண் இமைகளில் ஒரு சுழிப்பு. உதடுகளில் லேசான அசைவு. ஏதேனும் சொல்ல விரும்புகிறாரோ? குனிந்து காது கொடுத்தனர்.

    “அருள் நிறைந்த அன்னையே வாழ்க”

    ஆகா, எப்பேர்ப்பட்ட தூய உள்ளம்! தன் நிலை மறந்த நேரத்திலும் இறை வழிபாட்டை மறக்கவில்லையே என வியந்தனர்.

    ஃபாதரின் உடல் தான் கிழித்த நாராகக் கிடந்ததே தவிர, அவரது மனதில் ஒரு பூகம்பமே நடந்து கொண்டிருந்தது. காட்சிகள் அவரது மனக் கண் முன் விரிந்து கொண்டிருந்தன.

    இதோ ஒரு குளத்தங்கரை மண்டபம். சிறுவர்களும் பெரியவர்களுமாகப் பல ஆண்கள் வரிசையாக உட்கார்ந்திருக்கின்றனர். ஒரு சிறுவன் அவர்களிடையே பரபரப்பாக ஓடி ஓடிப் பூணூல் வினியோகித்துக் கொண்டிருக்கிறான்.

    “சுப்புணி, எல்லாருக்கும் பூணூல் குடுத்துட்டயா?” அவனது தந்தை கேட்கிறார். அவன் தலை அசைத்ததும் கூட்டத்தைப் பார்த்து ‘ஆரம்பிக்கலாமா?’ என்று கேட்டு விட்டு “சுக்லாம்பர தரம் விஷ்ணும் …..” சொல்கிறார். கூட்டம் அவரது சொற்களை எதிரொலிக்கிறது.

    இதோ மற்றொரு காட்சி.

    பள்ளிக் கூடம். இடைவேளை. சுப்புணி தனியே உட்கார்ந்திருக்கிறான். தலைமை ஆசிரியர் அங்கு வருகிறார்.

    “ஏண்டா, சாப்பிடலையா?”

    “இல்லை, ஃபாதர்.”

    “அம்மா சாதம் கட்டிக் கொடுக்கல்லியா?”

    “இல்லை ஃபாதர்.”

    “என் அறைக்கு வா. காசு தரேன். ஓட்டல்லே போய் தயிர் சாதம் வாங்கிச் சாப்பிடு.”

    “வேண்டாம், ஃபாதர்.”

    “ஏண்டா?”

    “பிறத்தியார் கிட்டே வாங்கிக்கக் கூடாது என்று எங்கம்மா சொல்லியிருக்கா, ஃபாதர்.”

    “உங்கப்பா புரோகிதர் தானேடா. அவர் பிறரிடம் தானம் வாங்கறது இல்லையா? அது தேவலாம் என்றால் இதுவும் தப்பில்லை. வாங்கிக்க.”

    “இல்லே, ஃபாதர். எங்கப்பா தானம் வாங்கினா, கொடுத்தவாளுடைய நன்மைக்காக ஜபம் பண்ணுவார், அல்லது காவேரி ஸ்னானம் பண்ணுவார், ஃபாதர்.”

    “அந்த மாதிரி நீயும் இதை இப்ப வாங்கிக்க, பின்னாடி எனக்காகவும் இந்த ஸ்கூலுக்காகவும் ஜபம் பண்ணிடு.”

    வாதத்தில் தோற்றுப்போன சுப்புணி வயிற்றுப் பசி தீர்க்கக் கை நீட்டுகிறான்.

    அந்தக் காட்சி மறைகிறது. அடுத்த காட்சி விரிகிறது.

    ஒரு விதவைத் தாய்.

    “வாடா சுப்புணி, சந்தியா வந்தனம் பண்ணிட்டுவா, சாப்பிடலாம். காலம்பறலேர்ந்து சாப்பிடலை, பாவம்.”

    “இல்லேம்மா, மத்தியான்னம் ஸ்கூல்லே சாப்பிட்டுட்டேன்.”

    “யார்டா சாதம் போட்டா?”

    சொல்கிறான்.

    “போன வருஷம் ஒரு நாள் நீ அந்த மாதிரி சாப்பிட்ட போதே, அது தப்புன்னு சொன்னேனே அப்பா. கண்டவா கிட்டேயும் வாங்கிக்கக் கூடாதுடா. உங்கப்பா எல்லார் கிட்டேயும் தானம் வாங்கிட மாட்டார். யார் சாதம் போடறாளோ அவா குணம் நமக்கு வந்துடும்னு, நல்ல சத்துக்கள் வீட்டிலே தான் சாப்பிடுவார்.”

    “இல்லேம்மா, ஃபாதர் ரொம்ப நல்லவர். நான் நன்னாப் படிக்கறேன்னு எங்கிட்ட ரொம்ப அன்பா இருப்பார்ம்மா.”

    காட்சி மாறியது.

    அம்மா கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சுகிறாள், “வாண்டாண்டா சுப்புணி, சொன்னதைக் கேளுடா, எனக்கு ஒரு கொள்ளி போட்டுட்டு நீ எப்படி வேணுமானாலும் போ. அவன் கையிலே சோறு வாங்கித் தின்னு அவன் புத்தியே உனக்கு வந்துடுத்தேடா.”

    சுப்புணியும் கெஞ்சுகிறான். “மதம் தான் மாறுகிறேனே தவிர, உன் பிள்ளை என்பது இல்லாமல் போகமாட்டேன் அம்மா. உன்னை மறக்க மாட்டேன்ம்மா. அப்பா இறந்தபின் எனக்காக நீ எப்படி உழைச்சு ஓடாப் போயிருக்கேங்கிறதை நான் பாத்துண்டு தானே இருக்கேன். எத்தனை வீட்டிலே பத்துப் பாத்திரம் தேச்சிருக்கே, எத்தனை கல்யாணத்திலே கல்லைக் கட்டி இழுத்து மாவு அறைச்சிருக்கே, இனிமே நீ கஷ்டப்பட வேண்டாம்மா. அடுத்த மாசத்திலேருந்து எனக்குச் சம்பளம் வரும். நீ சௌகர்யமா இருக்கலாம். உன்னைக் காப்பாத்தறது என் கடமை. நான் மறக்க மாட்டேம்மா.

    “அதே நேரத்திலே எனக்கு இன்னொரு கடமையும் இருக்கும்மா. எனக்கு ஸ்காலர்ஷிப் கொடுத்துப் படிக்க வைச்சு நான் பட்டினி கிடக்க நேரிட்ட போதெல்லாம் என் முகம் பாத்து சாப்பாடு போட்ட மதத்துக்கும் நான் நன்றி செலுத்தணும் அம்மா.”

    “அதுக்காக மதம் மாறித் தான் நன்றி செலுத்தணுமோ? இந்துவா இருந்துண்டே அவா நன்மைக்கு நீ உழைக்கப்படாதா?”

    ………..

    அன்று அவன் தான் செய்தது சரி என்று கருதி வீட்டை விட்டு வெளியேறி விட்டான். அம்மா அவனை அதன் பின் வீட்டில் அனுமதிக்கவில்லை.

    ஆயிற்று. அறுபது வருஷங்கள். எத்தனை பிரசங்கங்கள்! எத்தனை கூட்டங்கள்! எத்தனை பேருக்கு ஆறுதல் அளித்திருக்கிறார் ஃபாதர் சின்னசாமி! ஆனால் அந்த ஒரு ஜீவனுக்கு மட்டும் அந்திம காலத்தில் அவர் ஆதரவாக இருக்க முடியவில்லையே! மரண நேரத்தில் அந்த நினைவு வந்து வேதனை துளைக்கிறதே! ஜபம் சொல்லிப் பார்க்கிறார் ஃபாதர்.

    “அருள் நிறைந்த அன்னையே வாழ்க..”

    ‘என்னவோ இன்றைக்கு மரியே என்பதற்குப் பதில் அன்னையே என்ற சொல் தான் உள்ளத்தில் சுழல்கிறது. அவரது அன்னையைப் பொறுத்தவரை எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்! பெண்களுக்குள் அவள் ஒரு ரத்தினம் அல்லவா? என்ன தியாகம்! இருந்த ஒரே பிள்ளையை, வயதான காலத்தில் காப்பாற்றுவான் என்று நம்பி இருந்தவனை உயிருடன் தியாகம் செய்தவள் எவ்வளவு பெரிய மனது உடையவள்! ஆனால் அவளுடைய திருவயிற்றின் கனியாகிய நானோ பாவிகளுக்கெல்லாம் மேலான பாவியாகி விட்டேனே. எத்தனை பேருடைய பாவங்களுக்கு நான் மன்னிப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறேன். என்னுடைய பிரத்தியட்சமான அன்னையைக் கடைசிக் காலத்தில் வறுமையில் வாட விட்டேனே!’

    ‘அவளுக்குத் தான் என்ன மன உறுதி! நான் அனுப்பிய பணத்தை விரலால் கூட தொட மாட்டேன் என்று மறுத்து விட்டாளே! அவளைப் பார்க்கக் கூட என்னை அனுமதிக்கவில்லையே! தான் பிறந்த மதத்தை அவள் நேசித்தது தவறா? வந்து குடி புகுந்த மதத்தை நான் நேசிக்கவில்லையா? நான் பிறந்த மதத்தை விட்டு வந்தது சரியா? என் தாயைத் தவிக்க விட்டது சரியா?

    ‘இது என்ன, இத்தனை நாள் இல்லாமல் அறுபது வருஷம் கழித்து இந்த சிந்தனை? அன்னையே, என் மரண நேரத்தில் எனக்காக வேண்டிக் கொள்ள மாட்டாயா?’

    ‘வெறும் ஜபம் செய்தால் மட்டும் ஒருவன் பாவங்களிலிருந்து தப்ப முடியாது. அவன் மனம் வருந்திப் பரிகாரமான செயல்களும் செய்து தான் திருந்தியதைத் தன் மனம் ஒப்பும் வகையில் நிரூபிக்க வேண்டும்.’

    அவர் மற்றவர்களுக்கு உபதேசித்த வார்த்தைகள் அவர் காதில் ரீங்காரமிட்டன. ‘என்ன செய்யலாம்? நாக்கைக் கூட அசைக்க முடியாத இந்த நிலையில் என் மனம் வருந்தியதை நிரூபிக்கும் பரிகாரம் நான் என்ன செய்ய முடியும்? அன்னையே, எனக்கு சக்தி கொடு.’

    அவரது உதடுகள் மெல்ல அசைந்தன. அணுக்கத் தொண்டர்கள் குனிந்து அவர் வாயருகே காதை வைத்துக் கேட்டனர்.

    “வைத்தி, வைத்தி”

    “யார் வைத்தி என்பது?” ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மீண்டும் அவரது உதடு அசைந்தது.

    “வைத்தி, பாஸ்கரராஜபுரம், பார்க்கணும்.”

    தங்கள் தெய்வத் தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றத் தொண்டர்கள் பறந்தனர். எப்படியெல்லாமோ விசாரித்து வைத்தியைக் கொண்டு வந்துவிட்டனர்.

    அங்குக் கூடியிருந்த கூட்டத்துக்குச் சற்றும் பொருத்தமில்லாத தோற்றம். குடுமி, துண்டு மட்டும் போர்த்திய மார்பு, பூணூல், பஞ்சகச்சம், நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம்.

    கூசிக் கொண்டு உள்ளே நுழைந்தார் வைத்தி. அவரது பால்ய நண்பன் சுப்புணி கட்டிலில் நார் போலக் கிடந்தான்.

    எவ்வளவு அன்யோன்யமாக இருந்தார்கள்! சுப்புணி வீட்டை விட்டு வெளியேறு முன் தாயையும் மகனையும் சேர்த்து வைக்க எத்தனை முயற்சிகள் செய்திருக்கிறார் இந்த வைத்தி. பின்னர் இவர் மூலம் தான் சுப்புணி அம்மாவுக்குப் பணம் அனுப்பினான். அம்மா காரியமும் சுப்புணி தான் செய்தார். அதன் பின் அவருடைய தொடர்பு விட்டுப் போயிற்று.

    “உட்கார்.”

    ஜாடை காட்டினார் சின்னசாமி. வைத்தி கூசிக் கொண்டே ஸ்டூலில் உட்கார்ந்தார். ‘அவரை எப்படிக் கூப்பிடுவது? சுப்புணி என்று கூப்பிடுவதா? சார் என்றா? எல்லோரையும் போல ஃபாதர் என்றா?’

    இருந்த சக்தி எல்லாம் திரட்டி ஃபாதர் பேசினார், மெதுவாக, ஆனால் நிதானமாக.

    “என் கணக்கிலே கொஞ்சம் பணம் இருக்கு. அதை நம்ம ஊர் வேத பாடசாலைக்கு சேர்ப்பித்து விடு. இந்த என் கடைசி ஆசையை நிறைவேத்துவியா?”

    அவரது குறிப்பு உணர்ந்த தொண்டர் அவரது செக் புத்தகத்தை நீட்டினார். நடுங்கும் கைகளால் அதில் கையெழுத்துப் போட்டு வைத்தியிடம் கொடுத்தார் ஃபாதர்.

    அடுத்த கணம் விவரிக்க முடியாத அமைதி அவரது உள்ளத்தில் தோன்றியது. அவரால் முடிந்த பரிகாரம் செய்துவிட்டார். மனம் லேசாகிக் காற்றில் பறப்பது போன்றும் தன் உடலைத் தானே மேலிருந்து பார்ப்பது போலவும் உணர்ந்தார். கண்கள் ஒரு கணம் மின்னின, பின் மூடிக் கொண்டன. அறுபது ஆண்டுக் காலம் இறை பணியிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தது.

    அவரது நண்பர் வைத்தி- அவரைப் போலவே அறுபது ஆண்டு காலம் புரோகிதத் தொழில் செய்து மற்றவர்களின் நன்மைக்காக வேண்டுவதிலேயே காலம் கழித்த அந்தக் கிழவர் அந்த இடத்தை விட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டே வெளியேறினார்.

     

    Share
  • அசரீரி

     

    சு.கோதண்டராமன்

    தொலை பேசி பழுதாகி விட்டது. குறை பதிவு செய்யும் அலுவலக எண்ணை வேறு ஒரு தொலை பேசி மூலமாகத் தொடர்பு கொண்டேன். ஆளிலாக் குரல் கேட்டது.

    BSNL welcomes you

    பிஎஸ்என்எல் ஆப்கா ஸ்வாகத் கர்தா ஹே

    பிஎஸ்என்எல் உங்களை வரவேற்கிறது

    To proceed in English, press one

    ஹிந்தீ மேம் ஜான்காரீ கே லியே தோ தபாயேன்

    தமிழில் விவரங்கள் அறிய எண் மூன்றை அழுத்தவும்  

    அழுத்தினேன்.

    பழுதுபட்ட தொலைபேசியின் எஸ்டிடி கோடை டயல் செய்யவும்.

    செய்தேன்.

    நீங்கள் டயல் செய்த எஸ்டிடி கோட் 044. இதை உறுதிப்படுத்த எண் ஒன்றை அழுத்தவும்.

    அழுத்தினேன்.

    பழுதடைந்த தொலைபேசி எண்ணை டயல் செய்யவும்.

    செய்தேன்.

    நீங்கள் டயல் செய்த எண் ்்்் ்்்். இதை உறுதிப்படுத்த எண் ஒன்றை  அழுத்தவும்.

    அழுத்தினேன்

    உங்கள் தொலைபேசியில் எந்தப் பழுதும் இல்லை. பிஎஸ்என்எல்லின் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொண்டதற்கு நன்றி.

    ????????????

    ………………………………………. ……………………………………………………. ……………………………………………….       இதோ மற்றொரு நிகழ்ச்சி.

    வோட­ஃபோன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

    உங்களுக்கான ஸ்பெஷல் ஆஃபர். இப்பொழுது நீங்கள் வெறும் 34 ரூபாயில் பத்து நாட்களுக்கு இலவசமாக உங்கள் போன் மூலம் இண்டர்நெட் வசதி பெற முடியும்………………………………………………………………………………………………….. …………………..  (நீண்ட விளம்பரத்துக்குப் பின்)

    தமிழில் தொடர எண் மூன்றை அழுத்தவும்.

    அழுத்தினேன்.

    பில் சம்பந்தமான விஷயங்களுக்கு ஒன்றை அழுத்தவும்.

    இண்டர்நெட் இணைப்பு தொடர்பான விஷயங்களுக்கு 2ஐ அழுத்தவும்.

    3ஜி சம்பந்தமான விஷயங்களுக்கு 3ஐ அழுத்தவும்.

    கால் டைரக்ட் சம்பந்தமான விஷயங்களுக்கு 4 ஐ அழுத்தவும்.

    ……………………………

    ………………………………..

    ………………………………….

    மீண்டும் முந்திய மெனுவுக்குப் போக 9 ஐ அழுத்தவும்.

    வரிசையாகப் போய்க் கொண்டிருந்தது. நான் வாங்கிய புதிய சிம்மை செயல்படுத்த வேண்டியிருந்தது. அதற்கான வாய்ப்பே இல்லை. மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பித்து கவனமாகக் கேட்டேன். எனக்குத் தேவைப்பட்டது இல்லவே இல்லை.

    வேறு வழியில் அவர்களைத் தொடர்பு கொள்ளவே முடியாது போல இருக்கிறதே. சரி முயன்று பார்ப்போம் என்று கருதி எண் ஒன்றை அழுத்தினேன்.

    மீண்டும் பதிவு செய்யப்பட்ட குரல்.

    எங்கள் வாடிக்கையாளர் சேவை அதிகாரி பிற வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். தயவு செய்து காத்திருக்கவும்.

    அவர்களுக்காக நான் காத்திருக்கும் நேரம் வெட்டியாகக் கழியக் கூடாது என்ற பெரிய பொறுப்புடன், என்னை மகிழ்விக்க, இசை ஒலிக்கத் தொடங்கியது. ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை இசை தடைபட்டு,

    நீங்கள் எங்களுக்கு முக்கியமான வாடிக்கையாளர். தயவு செய்து காத்திருக்கவும். எங்கள் வாடிக்கையாளர் சேவை அதிகாரி உங்களைக் கவனிக்க வருவார்,

    என்று அறிவிப்பு. தொடர்ந்து இசை. பத்து நிமிடங்களுக்குப் பின் வேறு ஒரு அசரீரீக் குரல் கேட்டது.

    எங்கள் அதிகாரியுடனான உங்கள் உரையாடல் குறை தீர்த்தல் மற்றும் தர ஆய்வுச் சோதனைக்காகப் பதிவு செய்யப்படுகிறது என்பதை அறியவும்.

    …………

    …………..

    என் பெயர் சுபாஷிணி. நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்? (அப்பாடா, கடைசியில், மனிதக் குரல்!)

    முதல்லே, புகாரைக் காது கொடுத்துக் கேட்கிற மனிதக் குரலைக் கேட்க எந்த நம்பரை அழுத்த வேண்டும், சொல்லுங்க.

    என்ன சார் விஷயம்?

    நான் ஒரு புது சிம் வாங்கியிருக்கேன். அதை ஆக்டிவேட் பண்ணணும்.

    அதுக்கு நீங்க 172ஐத் தொடர்பு கொள்ளணும், சார்.

    அது எனக்கு முதலிலேயே தெரியும். அந்த நம்பருக்குத் தொடர்பு கொண்டால் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள உங்களுக்கு உரிமை இல்லைன்னு பதில் வருதே.  அந்தக் குறையை நான் யார் கிட்ட சொல்லி அழறது? குறை தீர்க்கும் நம்பர்னு போட்டிருக்கேன்னு இந்த நம்பரை டயல் செய்தால் ஒன்றை அழுத்தவும், இரண்டை அழுத்தவும்னு போய்க்கிட்டே இருக்கே தவிர என் புகாரைத் தெரிவிப்பதற்கான வழியையே காணுமே, அம்மா.

    மன்னிக்கணும் சார். உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?

    சொன்னேன்.

    நீங்க இப்ப பேசிக்கிட்டிருக்கிற நம்பர் உங்க பேர்லே தான் இருக்கா?

    இல்லே. என் மகன் பேர்லே இருக்கு.

    அவர் பேரை தெரிஞ்சுக்கலாமா?

    சொன்னேன்.

    அவருடைய விலாசம் சொல்லுங்க.

    சொன்னேன்.

    சரியா இருக்கு. இப்ப வாங்கின சிம் யார் பேரிலே வாங்கியிருக்கீங்க?

    சொன்னேன்.

    சரி சார். கம்ப்ளெய்ண்ட் புக் பண்ணிக்கிறேன். உங்க கம்ப்ளெய்ண்ட் நம்பர் 865348974562. மறுமுறை பேசும்போது இந்த நம்பரைக் குறிப்பிடுங்க. வேற ஏதாவது தேவையா?

    கொஞ்சம் இருங்க. நீங்க பாட்டுக்குப் படபடன்னு சொல்லிக்கிட்டே போனா, நான் எப்படி இத்தனை டிஜிட்டை ஞாபகம் வெச்சுக்கறது?

    சரி எழுதிக்கங்க சார்.

    இந்தப் பேச்சு முடிந்ததும் உங்களுக்கு ஒரு எஸ்எம்எஸ் வரும். அதுக்கு மறக்காமப் பதில் அனுப்பிவிடுங்க சார். அதுக்குக் கட்டணம் கிடையாது. வோடஃபோன் சேவையைப் பயன்படுத்திக் கொண்டதற்கு நன்றி.

    தொலை பேசி அலுவலகங்கள் மட்டுமல்ல. குடிநீர்ச் சுத்திகரிப்பு யந்திரம் பழுது பார்ப்பு மையம்  போன்ற வேறு எந்த அலுவலகமானாலும் இதே நிலை தான்.

    யந்திரங்களை நாம் பயன்படுத்துகிறோமா? அல்லது அவை நம்மை ஆள்கின்றனவா?

     

    Share
  • திருக்கோட்டாறு

    சு.கோதண்டராமன்

    (காரைக்கால் அருகில் உள்ளது திருக்கோட்டாறு என்னும் பாடல் பெற்ற தலம். இன்று திருக்கொட்டாரம் என்று அழைக்கப்படுகிறது. அண்மையில் அத் தலத்தில் நான்கு நாட்கள் தங்கி இருந்தேன்.)

    அன்றொரு நாளில் ஆளுடைப் பிள்ளை
    அடியார் பலருடன் இவ்வூர் வந்தார்.
    அன்றவர் கண்ட தெண்டிரை நீர்வயல்
    குரவமர் மலர்ப் பொழில் குருந்த மாதவி
    வண்ட லார் வயற் சாலி யாலைகள்
    ஆடகம் பெறு மாட மாளிகை
    இன்றும் உண்டு. யானும் கண்டேன்.

    எங்கும் பசுமை நிரம்பக் கண்டேன்
    இடை இடை வண்ணப் பூக்கள் கண்டேன்
    தென்னை மரங்கள் தலையை ஆட்டி
    தேன் மலர் வாசம் சுமந்து வந்த
    வாயு தேவனை வணங்கக் கண்டேன்.

    காற்றில் அசையும் செடிகளின் சலசல
    கன்றை அழைக்கும் பசுவின் அம்மாவ்
    பறவைப் பாடல் பற்பல பல வகை
    பிக்விக் கொக்கொக் கிர்ரீய்ங் சிக்சிகி
    (இன்னும் உண்டு. ஏட்டில் இடமிலை)
    இத்தனை இசைகளும் இத்தனை ஒலிகளும்
    இங்குள அமைதியை அதிகப் படுத்தின.

    அகத்திய முனிவரின் ஆசிர மம் போல்
    அழகு எளிமை அமைதி தூய்மை
    இயற்கை அன்னையின் இதம் தரு அணைப்பில்
    எழிலைப் பருகும் குழவியாய்க் கிடந்தேன்.
    தவமே புரியத் தேவை இல்லை
    தானே ஈசன் பேசும் இடமிது.

    ஊரின் நடுவில் உள்ளது கோவில்
    ஞானசம் பந்தர் வாழ்ந்த காலை
    விரவி நாளும் விழாவிடைப் பொலியும்
    தொண்டர் வந்து வியந்து பண்செயும்
    கோட்டாற் றிலுயர் கோவில் என்று
    கூறிய தென்னவோ இன்று வெற்றுக்
    கனவாய்ப் பழைய கதையாய்ப் போனது.

    ஊரே அமைதி, ஆலயம் விலக்கோ?
    மணியை ஆட்டி உணவைக் காட்ட
    மதியம் ஒரு முறை குருக்கள் வருகிறார்.
    மாலையில் எவரோ விளக்கிடு வார்கள்.
    மற்றையோ ரிங்கே வருவது இல்லை
    இருக்கொடு தோத்திரம் இயம்புவார் இல்லை
    மேளம் தாளம் மணிகள் ஏது?

    பாலறா வாயர் ஆலயம் சுற்றி
    சிற்றடி யாலே சீர்வலம் வந்து
    சிறுகை தட்டித் தாளம் இட்டு
    இசைத்த செந்தமிழ்த் தேவா ரத்தின்
    இனிமையை நெஞ்சில் அசைபோட் டபடி
    வண்டார் குழலி உடனுறை நாதன்
    வானோர் பெருமான் ஐராவ தீசன்
    முன்னை நாளிக் கோயிலின் சிறப்பும்
    இன்றை நாளில் இயன்ற தாழ்வும்
    ஒப்பு நோக்கியோ உள்ளம் நொந்தோ
    தனிமையே துணையாய் தன்னில் தானாய்
    மோனத் தவத்தில் மூழ்கி இருக்கிறான்.

     

    படத்துக்கு நன்றி: http://news-amanushyam.blogspot.com/2013/01/blog-post_8882.html

     

    Share
  • பாரதியின் வேத முகம் – 16

    சு.கோதண்டராமன்

     

    வேதம் புதுமை செய்

    இடைக்காலம் வரை ஒரு சிலரிடம் மட்டுமே முடங்கிக் கிடந்த வேதங்களை மேலை நாட்டவர் கண்டுபிடித்து மிகுந்த முயற்சியுடன் கற்று மற்றவர்க்கும் பயன்படும் வகையில் அவற்றை மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளனர். அதற்காக நாம் அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். இந்த மொழிபெயர்ப்புகள் எல்லாவற்றிற்கும் அடிப்படை ஸாயணாசார்யர் என்பவர் 14 ஆம் நூற்றாண்டில் எழுதிய உரை தான். ஸாயணரோ வேதங்களுக்கு வேள்விக் கண்ணோட்டத்துடனேயே உரை எழுதி உள்ளார். வேறு வகையான உரைகள் கிடைக்காத நிலையில் மேலை நாட்டவர் இதனையே வேதத்தின் உண்மையான கருத்து என்று கருதி அதன் அடிப்படையில்  சில விளக்கங்கள் கொடுத்துள்ளனர்.

    இவர்கள் கூறுவதாவது, “பண்டைய ஆரியர்கள் மின்னல், நீர், காற்று, தீ முதலான இயற்கைத் தெய்வங்களை வணங்கினர். இந்தத் தெய்வங்களை மகிழ்விக்க வேள்விகள் செய்தனர். இவற்றில் இவர்கள் தீ வளர்த்து அதில் விலங்குகளைப் பலியிட்டும் சோமரசம் என்னும் போதை தரும் பானங்களை அளித்தும் வழிபட்டனர். தங்களை விரோதிகளிடமிருந்து காப்பாற்றுமாறு இவர்கள் தேவர்களை வேண்டினர். விரோதிகள் என அவர்கள் குறிப்பிடுவது இந்த வேள்வி முறைக்கு மாறுபட்ட கூட்டத்தினரான திராவிடர் என்னும் கூட்டத்தாரை.”

    ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்களின் கற்பனையான ஆரியர் குடியேற்றம்,  திராவிடர்களுடன் போர் முதலிய கொள்கைகள் அவர்கள் நம்மைப் பிரித்து வைத்து ஆளுவதற்கு வசதியாக இருந்தது. அவர்களது இந்தக் கண்டுபிடிப்புகளை மறு பரிசீலனை இன்றி ஒப்புக்கொண்ட நம் நாட்டு ஆசிரியர்களும் அக் கருத்துகளையே உண்மை என்பதாகப் பரப்பி வந்துள்ளனர்.

    இவ்வாறு வேதங்கள் தவறான முறையில் புரிந்து கொள்ளப்பட்டதால் பலரும் வேதத்தை இகழும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அரவிந்தரும் அவர் வழி நின்று பாரதியும் ஆன்மிகக் குறியீட்டு முறையில் வேதத்திற்குப் பொருள் கண்டு இது வரை தெளிவு படுத்தப்படாத பகுதிகளில் சிறந்த ஆன்மிகக் கருத்துகள் அடங்கி இருப்பதை வெளிப்படுத்தினர்.

    ஆன்மிகக் குறீயீடு என்பது என்ன? வேதத்தில் சொல்லப்பட்ட வேள்வி என்பது மனிதன் இறை நிலை அடையச் செய்யும் முயற்சியைக் குறிக்கும். இந்திரன் என்பது இடி மின்னல் தெய்வம் அல்ல. அது விஞ்ஞான சக்தியை அதாவது தெய்விகத் தன்மை கொண்ட மனத்தைக் குறிக்கிறது. அக்னி என்பது தீ அல்ல. அது ஞான சக்தி என்னும் அறிவுத் துணிவை அதாவது மேல்நிலை அடையவேண்டும் என்னும் இறை நாட்டத்தைச் சுட்டும். அவ்வாறே சூரியன் என்பது அறிவாகிய ஒளியையும், கோ (பசு)  என்பது அதன் கிரணங்களையும் குறிக்கும். வேள்வியில் அளிக்கப்படும் ஹவிஸ் எனப்படும் நெய்யுணவிற்கு ஞானத் தெளிவு என்று பொருள் கொள்ள வேண்டும். விருத்திரன் என்பது ஆரியருக்கு விரோதமான திராவிடர் இனத் தலைவன் அல்ல. அதன் வேர்ச் சொல்லான விருத் என்பது மறைத்தல் என்னும் பொருள் உடையது. அது அறிவை மறைக்கும்   அஞ்ஞானத்தைக் குறிக்கிறது.

    அரவிந்தர் தன் கற்பனையை வேத மந்திரங்களில் புகுத்துகிறாரோ என்ற ஐயம் எழலாம். ஸாயணருக்குக் காலத்தால் முந்தியவரான யாஸ்கர் என்பவர் வேதத்திற்கு அரும்பதவுரை எழுதியுள்ளார். அவர் சொற்களின் வேர் வரை சென்று பொருள் காண்பவர். அவரது வழி நின்றே அரவிந்தரும் இந்திரன் முதலான சொற்களுக்குப் புதிய பொருள் தருகிறார்.

    சடங்குகளைப் போற்றும் கொள்கை உடைய ஸாயணரும் சில இடங்களில் இத்தகைய குறியீட்டுப் பொருள் தருகிறார். பல இடங்களில் சடங்குகளுக்குப் பயன்படும் வகையில் வலிந்து பொருள் கொள்கிறார். இந்த முரண்பாட்டை நீக்குகிறார் அரவிந்தர். மேலும் பல சூக்தங்களில் ஸாயணரும் அவரை ஒட்டி மொழிபெயர்த்த மேலை நாட்டவரும் தரும் பொருள் புரியாத புதிராக உள்ளது. அரவிந்தரின் குறியீடு தான் அதைச் சரியாக விளக்குகிறது.

    உதாரணத்திற்கு ரிக் வேதம் 1-32 இன் மொழிபெயர்ப்பு இது.

    “1 இந்திரனுடைய வீரச் செயல்களை இங்கு சொல்லுகின்றேன். அவன் வஜ்ரி. மின்னல் அவனுக்குப் படை. அவனுடைய முன்னைத் திறமைகளைச் சொல்லுகின்றேன். பாம்பைக் கொன்றான். மலைகளின் சார்புகளை உடைத்தான்.

                    “2 மலையின் மேலே கிடந்த விருத்திரப் பாம்பை அழித்து விட்டான். வானத்தாலாகிய வயிரப் படையை இவனுக்கு த்வஷ்டா என்ற தேவன் செய்து கொடுத்தான். நதிகள் வானக் கடலை நோக்கிப் பாடிக் கொண்டு செல்கின்றன, இரைந்து கொண்டு செல்லும் ஆவினம் போல.

                    “3 இந்திரன் ஏறு போன்றான். மூன்று படிகளிலே மதுவுண்டான். அந்த மது வேள்வியிலே வடிக்கப்பட்டது.

                    “4 அரவுகளிலே முதலில் தோன்றியவனை இந்திரன் கொன்ற பிறகு மற்ற மாயாவிகளின் மாயைகளை எல்லாம் வென்றான். பின்பு சூர்யனையும் வானத்தையும் உஷாதேவியையும் தோற்றுவித்தான். அதன் பிறகு இந்திரா, உனக்கோர் பகைவனுமில்லை.

                    “5 மறைக்கும் தொழிலே கொண்ட விருத்திரனுக்குத் தோளில்லை. அவனை இந்திரன் பேரிடியாலே கொன்றான். பிளந்த விறகுகளைப் போலே விருத்திரன் மண் மீது சிதறி வீழ்ந்தான்.

                    “6 போர்த் தொழில் அறியாதவன் விருத்திரன். இவன் நேர்மை நாடுவோனும் மகாவீரனுமாகிய இந்திரனைப் போருக்கு அழைத்தான். இந்திரனுடைய அம்புத் திரளை இவனால் கடந்து செல்ல முடியவில்லை. சிதறுகிற தனது திறமைகளை இந்திர சத்ரு ஒன்று சேர்க்க முயன்றான்.

                    “7 காலும் கையும் இல்லாதவன் விருத்திரன். இந்திரனோடு இவன் போர் செய்ய வந்தான். அவனுடைய வயிரப் படை இவனை மலையின் மீது கொன்றது. பலவற்றிலே விளங்குவோன் இந்திரன். ஆணேறுகளை ஆண்மை போகிய எருதுகள் எதிர்ப்பது போல அவனை விருத்திரன் பகைத்தான், சிதறி வீழ்ந்தான்.

                    “8 ஆற்றடி பிளவுண்டு கிடப்பது போலே விருத்திரன் கிடந்தான். இவன் மீது நதிகள் சென்றன. அவை மனதின் மேல் ஏறிச் சென்றன. முன்னர் அவற்றை விருத்திரன் தனது வலிமையாலே சூழ்ந்து நின்றான். இப்போது அவற்றின் அடியிலே வீழ்ந்து கிடக்கிறான்.

                    “9 விருத்திரன் தாயும் அகல வீழ்ந்தாள். தாய் மேலும் மகன் கீழுமாயினர். இந்திரன் அவள் மீது வீசியிருந்த படையை மீட்டுக்கொண்டான். கன்றுடன் கிடக்கும் பசுவைப் போலே கிடந்தனள் தாநு.

                    “10 தங்கு தடையில்லாது பாயும் நதிகளிடையே அவனுடல் அமிழ்ந்திக் கிடந்தது. விருத்திரனது உடல் மறைவைக் கண்டு நதிகள் விரிந்து பெருகின. இந்திரனைப் பகை கொண்டோன் நெட்டிருளில் வீழ்ந்தான்.

                     “11 கதிர்களைப் பணியென்னும் பகைவன் பிடித்து வைத்தது போலே நதிகளை விருத்திரன் தடுத்துக் கொண்டான். அவை பகைவனுக்குப் பத்தினிகள் ஆயின. அவற்றைப் பாம்பு காத்தது. நீர்த் திரள் வெளிப்படும் வாயில் அடைபட்டிருந்தது. விருத்திரனைக் கொன்று இந்திரன் அதைத் திறந்தான்.

                    “12 இந்திரா, முதற் பெருங் கடவுள் உன்னைப் போரிலே செலுத்தினான். அப்போது நீ எமக்கு வலியதோர் உயிர்க் காவலன் ஆயினை. கதிர்களை வென்றாய், சூரா, மதுவை வென்றாய். ஏழு நதிகளையும் பெருகும்படி விடுவித்தாய்.

                    “13 இந்திரனும் விருத்திரனும் போர் செய்த காலத்தில் பகைவன் விளைவித்த மின்னலும் தென்றலும் இடியும் அவன் பொழிந்த மழையும் இவனைத் தீண்டவில்லை. பிறகு பகைவனுடைய சேனைகள் வந்தெதிர்த்தன. அவற்றையும் இந்திரன் வென்றான்.

                    “14 இந்திரா, பகைவனை அழித்தபிறகு, அச்சத்தோடு செல்லும் பருந்து போல, நீ எதன் பொருட்டாகத் தொண்ணூற்று ஒன்பது நதிகளையும் உலகங்களையும் கடந்து மேலேறிச் செல்கிறாய்? நீ கண்டு மனம் அஞ்சத் தகுந்த போராளி பாம்பினிடத்தில் ஏது?

                    “15 செல்வன நிற்பன அனைத்திற்கும் இந்திரனே அரசன். இவன் வயிரப் படையைக் கைக் கொண்டான். சிகரங்களுடைய அனந்த மலைக்கும் இவனே வேந்தன். தொழில் செய்வோரை எல்லாம் இவனே ஆளுகின்றான். ஆரக் கால்களை வளையம் சூழ்ந்திருப்பது போல இவன் அவர்களைச் சூழ்ந்து நிற்கின்றான்.

    மேலே கண்ட மொழி ஆக்கம் நமக்கு எதுவும் விளங்காது இருப்பதில் வியப்பு இல்லை. பாம்பு நதியைக் குகையில் அடைத்து வைத்திருந்தது, இந்திரன் அதைக் கொன்று நதிகளை விடுவித்தான் என்பது குழந்தைக் கதை போல உள்ளது. இதில் என்ன ஆன்மீகத் தத்துவம் இருக்கிறது, இது போன்ற கதைகளைக் கொண்ட வேதத்தைக் கொண்டாடுகிறார்களே என்று நமக்குத் தோன்றும். அதன் உண்மையான பொருளை அறிய அரவிந்தர் வழி நின்று பாரதி அளிக்கும் விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

    “இந்திரன் என்பது விஞ்ஞான சக்தி. இவனுக்குப் பகை அஞ்ஞானம். இந்த அஞ்ஞானத்திற்கு விருத்திரன் என்பது பெயர். (விருத்திரன்= மூடுவோன், மறைப்போன்.) விருத்திரன் இருள், அவனே தெய்வ இன்பங்களிலிருந்து நம்மைப் பிரித்து வைக்கும் அஹங்காரம், அதாவது பிரிவுணர்ச்சி. அவன் தாய்க்குத் தாநு என்று பெயர். (தாநு= பிரிப்பது)

    “நமக்குள்ளே மூன்று படிகள் இருக்கின்றன, மண், காற்று வானம் என. வானத்தின் மேலே உண்மை உலகம் இருக்கிறது. அந்த உண்மை உலகத்திலிருந்து நமது அறிவிலே ஞான ஒளியின் கிரணங்களும் தேவ இன்பங்களாகிய நதிகளும் எப்போதும் பாயும்படி செய்ய வேண்டும். இதுவே வேத ரிஷிகளின் நாட்டம்.

    “அந்த நதிகளையும் கதிர்களையும் நம்முள்ளே பாயவொட்டாதபடி விருத்திராசுரனும், பணி முதலிய மற்றப் பிசாசுகளும் தடுக்கின்றன. அச்சம், கவலை, சிறுமை, திகைப்பு, சோர்வு முதலாக நம்முள்ளே வாழும் அசுரருக்குக் கணக்கில்லை. இவர்களுக்கெல்லாம் தலைவன் விருத்திரன். இவன் மேற்கூறப்பட்ட தேவநதிகளை மண்மலையின் கீழே உள்ள ஓர் இருட்குகையில் அடக்கி வைத்து அவை நமது அறிவிலே பாயாதபடி மேலே நின்று தடுக்கிறான்.

    “இந்த விருத்திரனை வேதம் பாம்பு என்று சொல்லுகிறது. அஞ்ஞானம் ஒரு விஷப்பூச்சி. அதற்குக் கை கால் கிடையாது. வீரியம் கிடையாது. நெளிந்து நெளிந்து உள்ளே புகுந்து ஒளியையும் இன்பத்தையும் மறைக்கிறது.

    “இந்திரன் முதலிய தேவர்களை யாகத்தினாலே தோழமை கொண்டால் அவர்கள் இந்தப் பாம்பையும் இதன் சேனைகளையும் கொன்று தேவநதிகளை விடுவித்து நம்முள்ளே பாயும்படி செய்து நமக்கு அமரத் தன்மை உண்டாகும்படி செய்கிறார்கள். யாகம் என்பது நமது உடல் பொருள் ஆவி அறிவு அனைத்தையும் தேவர்களுக்கு அர்ப்பணம் செய்து விடுதல். இந்த வேள்வி செய்தால் மண் காற்று வான் (உடல் உயிர் அறிவு) என்ற மூன்று படிகளிலும் தேவர் வந்து நிலை பெற்று அமிர்த பானம் (சோமரஸம் குடித்தல்) செய்கிறார்கள். இது மகரிஷிகளின் யோகானுபவத்திலே கண்டது. இதனை நன்கு அறிந்து கொண்டால் மந்திரங்களின் பொருள் தெளிவு படும்.”

    பாரதியின் இந்த விளக்கத்துக்குப் பின் இதை மீண்டும் படிக்கும்போது நமக்கு ஒரு புதிய பொருள் விளங்குகிறது அல்லவா? இது போல மேலும் சில சூக்தங்களுக்குப் பாரதி புதிய பொருள் தருகிறார். அவர் மட்டும் நீண்ட நாள் வாழ்ந்திருந்தால் நான்கு வேதங்களையும் முழுமையாக மொழிபெயர்த்து வேதம் புதுமை செய்திருப்பார்.

    Share
  • பாரதியின் வேத முகம் – 15

     

    -சு.கோதண்டராமன்

     

    செங்கதிர்த் தேவன்

          பாரதி பூணூலைக் கழற்றி எறிந்ததாக ஒரு திரைப்படத்தில் காட்டுகிறார்கள். அதற்கான சான்று எதுவும் அவரது எழுத்துகளில் இல்லை. மாறாக அவர் பிராமண தர்மத்தில் எவ்வளவு மரியாதை வைத்திருந்தார் என்பதையே அவரது படைப்புகள் காட்டுகின்றன.

    காஷ்மீர இந்துக்கள் எல்லோருமே பிராமணர்கள், வேறு சாதியினரே அங்கு இல்லை என்கிறார் பாரதி. தமிழ் நாட்டிலும் பிராமணர் அல்லாதார்க்குப் பூணூல் அணிவித்து, மது மாமிசங்களை நிறுத்தச் சொல்லி எல்லோரையும் பிராமணர் ஆக்க வேண்டும் என்றும் சொல்கிறார் அவர். அவர் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனுக்குப் பூணூல் அணிவித்ததை நாம் அறிவோம்.

    பூணூல் என்பது யாகம் செய்வதற்கான அடையாளம் என்றும் அதற்கு மேல் அதில் ஒன்றும் முக்கியத்துவம் இல்லை என்றும் கூறுகிறார். எனவே பாரதி விரும்பியது என்னவென்றால், எல்லாச் சாதியினரும் யக்ஞம் செய்வதற்குரிய தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது தான்.

    யக்ஞம் என்பது தீ வளர்த்துச் செய்யப்படும் வேள்வி மட்டும் அல்ல, தெய்வ ஆராதனையாகச் செய்யப்படும் எல்லாச் செயல்களையும் குறிக்கும் என்கிறார். எல்லோரும் தெய்வத்தை ஆராதிக்கத் தகுதி பெற வேண்டும் என்பது அவரது விருப்பம்.

    அந்தணர்கள் செய்கின்ற ஜபத்தில் பயன்படும் காயத்ரி மந்திரத்தைப் பாரதி அழகான தமிழில் தருகிறார் கேளுங்கள்.

    செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன்

    எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக.

     

    பாரதிக்கு ஓம் என்னும் பிரணவத்தில் அளவற்ற ஈடுபாடு உண்டு. ஒலிக்கு என்று ஒரு தனிச் சக்தி இருப்பதை அறிந்த அவர் மந்திரத்தைத் தமிழில் மொழி பெயர்த்த போதும் ஓங்கார ஒலியை விடாமல் அதைச் சமத்காரமாக மந்திரத்தின் நடுவில் நுழைத்திருப்பதைக் கவனியுங்கள்.

    காயத்ரி மந்திரம் தவிர சூரியனைப் போற்றும் மந்திரங்கள் பல வேதத்தில் உள்ளன. அதனால் பாரதியார் சூரியனைக் குறிப்பிடும்போது சீரடியாற் பழவேத முனிவர் போற்றும் செழுஞ் சோதி என்று பாராட்டுகிறார்.

    காலை ஸந்த்யா வந்தனத்தில் இந்தப் பாட்டுகள் உதய சூரியனை நோக்கி ஓதப்படுகின்றன. சூரியன் பரமாத்மாவின் ஞான ஒளி. இந்த தேவன் நான்கு அம்சங்கள் உடையவன். மித்திரன், வருணன், அர்யமான், பகன். இவருள்ளே மித்திரன் அந்த ஒளியின் அன்பைக் குறிப்போன். வருணன் அதன் அனந்த நிலை (எல்லையற்ற தன்மை) ஆவான். அர்யமான் வலிமைத் தேவன். பகன் அவ்வொளியின் இன்ப உணர்ச்சியாக நிற்பவன்.

                    “முழுமுதற் கடவுளுக்கு ஒளியே விழி. ஒளியையே சூரியன் என்று போற்றுகிறோம். பூலோகத்திலே ஒளியாகத் தோன்றும் சக்தி தான் சுவர்க்க லோகத்திலே ஞானமாகச் சுடர்கின்றது. அதன் அன்பு வடிவத்தை அதாவது தெய்வீக அன்பையே மித்திரன் என்று வாழ்த்துகிறோம்.

    இந்த முன்னுரைக்குப் பின் பாரதி அந்தணர்கள் தினசரி செய்யும் சந்தியா வந்தனத்தில் சொல்லப்படும் மந்திரங்களுக்குப் பொருள் தருகிறார். எந்த மந்திரம் சொன்னாலும் பொருள் தெரியாமல் வெறுமே ஒலியைத் தியானம் செய்வதால் பயனில்லை என்பது அவரது கருத்து. அந்தக் கருத்துகளைத் தன் பாடல்களிலும் வெளிப்படுத்தி இருக்கிறார். இனி மந்திரங்களின் பொருளையும் அவற்றைப் பாரதி தன் பாடல்களில் புகுத்தி இருக்கும் அழகையும் காண்போம்.

    மந்திரத்தின் பொருள்:

    மக்களைக் காப்பவன் சூரியன். அவனது புகழத் தக்க அழிவற்ற மனம் கவரும் பெருமைகளைத் தியானிக்கிறேன். சூரியன் அனைத்தையும் அறிந்து கொண்டு மக்களை நடத்தி வைக்கிறார். பூமியையும் வானுலகத்தையும் தாங்கும் சூரியன் ஜீவராசிகளைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    பாரதியின் பாடல்

    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்

                    வாழி நோக்கிடும் வள்ளிய தேவா

                    காதல் கொண்டனை போலு மண் மீதே

                    கண் பிறழ்வின்றி நோக்குகின்றாயே

     

    மந்திரத்தின் பொருள்

                    அழியாத பலன் பெறுவதற்காக அவருக்கு நெய் ஹவிஸ் அளிக்கிறோம். சூரியனே யார் உம்மை நியமத்துடன் ஆராதிக்கிறானோ அவன் பரிபூர்ண தர்ம பலனுடன் கூடினவனாக ஆகட்டும். உம்மால் காக்கப்பட்டவன் நோய்வாய்ப்படான். பாவம் இவனைத் தூரத்திலிருந்து கூடத் துன்புறுத்தாது.

    பாரதியின் பாடல்:

    கவலைகள் சிறுமை நோய் கைதவம் வறுமைத் துன்பம்

                    அவலமாம் அனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமையாகும்

                    இவையெலாம் அறிவிலாமை என்பதோர் இருளிற் பேய்கள்

                    நலமுறு ஞானபானு நண்ணுக; தொலைக பேய்கள்

     

    மந்திரத்தின் பொருள்

    ஆன்ம ஜோதியாலும் பிரகாசத்தாலும் தேவர்களையும் மனிதர்களையும் அவரவர் கருமங்களில் புகுத்திக் கொண்டு சுற்றி வரும் சூரியன் பொன் மயமான தேரில் உலகங்களைப் பார்வையிட்டுக் கொண்டு சஞ்சரிக்கிறார்.

    பாரதியின் பாடல்

    பரிதியே பொருள் யாவற்கு முதலே

                    பானுவே பொன்செய் பேரொளித் திரளே

     

    மந்திரத்தின் பொருள்

    இருளை விழுங்கிக் கொண்டு உதிக்கும் உயர்ந்த ஜோதி, தேவர்களைக் காப்பவர். இவரைப் பார்ப்பதால் நாம் உத்தமமான ஆத்ம ஜோதியை அடைவோம். அந்த பிரசித்தமான, அனைத்தையும் அறிகிற சூரியனை கிரணக் குதிரைகள் உலகோரின் தரிசனத்திற்காக உயரத் தாங்கிச் செல்கின்றன.

    பாரதியின் பாடல்

    கடலின் மீது கதிர்களை வீசி

                    கடுகி வான்மிசை ஏறுதி ஐயா

     

    மந்திரத்தின் பொருள்

    மித்திரன் வருணன் அக்னி இவர்களது கண்ணாக விளங்கும் சூரியன் விசித்ரமான சர்வ தேவ ஸ்வரூபி. அசையும் பொருள் அசையாப் பொருள் இவற்றின் ஆத்மாவாக விளங்கும் சூரியன் தேவ லோகம், பூலோகம், அந்தரிக்ஷம் எங்கும் வியாபிக்கிறவர், கிழக்கில் உதிப்பவர், தேவர்களுக்கு நன்மை செய்பவர், கண் போன்றவர். இவரை நூறாண்டு காலம் வணங்குவோம், வாழ்வோம், உறவினருடன் குலாவுவோம், மகிழ்வோம், கீர்த்தி பெறுவோம், இனியன கேட்போம், இனியன பேசுவோம், தீமைகளை வென்று நிற்போம்.

    பாரதியின் பாடல்

    திருவளர் வாழ்க்கை கீர்த்தி தீரம் நல்லறிவு வீரம்

                    மருவு பல்கலையின் சோதி வல்லமை என்பவெல்லாம்

                    வருவது ஞானத்தாலே வையகமுழுது மெங்கள்

                    பெருமை தானிலவி நிற்கப் பிறந்தது ஞான பானு.

     

    மந்திரத்தின் பொருள்

                    சூரியனைக் காண விரும்புகிறோம். விரும்பிய பலனை அளிப்பவரும் சிவந்த கண்ணரும் எல்லாம் அறிந்தவரும் எத்திக்கிலும் பிரகாசிப்பவரும் பெரிய கடலின் நீரின் நடுவிலிருந்து காலையில் உதிப்பவரும் ஆன சூரியன் முழு மனதுடன் என்னைப் புனிதன் ஆக்குவாராக.

    பாரதியின் பாடல்

    பண்ணிய முயற்சி எல்லாம் பயனுற ஓங்கும் ஆங்கே

                    எண்ணிய எண்ணம் எல்லாம் எளிதிலே வெற்றி எய்தும்

                    திண்ணிய கருத்தினோடும் சிரித்திடு முகத்தினோடும்

                    நண்ணிடும் ஞான பானு அதனை நாம் நன்கு போற்றின்

     

    இவற்றிலிருந்து பாரதி சந்தியா வந்தனத்தைப் பொருளுணர்ந்து போற்றியதை  அறிய முடிகிறது.

     

    Share
  • மரமேறி சொன்ன மந்திரப் பொருள்

    சு. கோதண்டராமன்

    இரவு பத்து மணி இருக்கும் அப்பொழுது தான் உறங்க ஆரம்பித்திருந்தேன். கீய்ங், கீய்ங் என்று நாய்க் குட்டிகள் கத்தும் சத்தம் கேட்டுக் கண் விழித்தேன். மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தேன்.
    என் வீட்டிற்கு அடுத்தாற்போல் ஒரு மனை பல வருடங்களாகக் காலியாக உள்ளது. அதற்கு நான்கு புறமும் காம்பவுண்டுச் சுவர் உண்டு. அதில் இரண்டு சுவர்கள் சந்திக்கும் மூலையிலிருந்து தான் சத்தம் வந்தது. நாய் ஒன்று குட்டி போட்டிருக்கிறது போலும். லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. என் வீட்டுக் காம்பவுண்டு ஓரமாக நின்று பார்த்ததில் நான்கு குட்டிகள் கொழு மொழுவென்று பஞ்சுப் பந்துகள் போல அழகாக இருந்தன. பிறந்து பத்து நாள் இருக்கும்.
    நான் தற்போது சென்னை வாசி. இவ்வூருக்கு வந்து இரண்டு நாட்களாகிறது. இரண்டு நாட்களாகச் சத்தம் வரவில்லை.  இப்பொழுது ஏன் கத்துகின்றன? ஒருக்கால் மழையில் நனைவதனாலோ?
    சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. எனக்கு மனது தவித்தது. “இந்தப் பிஞ்சு உயிர்களின் துன்பத்தைப் போக்க நம்மால் ஏதேனும் செய்ய முடியுமா?” என்று சிந்தித்துப் பார்த்தேன். ஒன்றும் புலப்படவில்லை. கீழ் வீட்டில் குடியிருப்பவரை எழுப்பி என் சோகத்தைப் பகிர்ந்து கொண்டேன். அவர் ஒரு பாலிதீன் விரிப்பை எடுத்து வந்து இரு சுவர்களையும் மூடும் வகையில் பந்தல் போல் விரித்து விட்டு அது காற்றில் பறக்காமல் இருக்க அதன் மேல் நான்கு கற்களையும் வைத்துவிட்டுத் தன் கடமை முடிந்ததாக நினைத்துத் தூங்கப் போய்விட்டார்.
    அப்படியும் குட்டிகள் கத்திக் கொண்டு தான் இருந்தன. எனக்குத் தூக்கம் வரவில்லை. வாசல் சன் ஷேடின் கீழ் நின்று அந்தத் திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன். மழை சோவென்று பலத்த சத்தத்துடன் பெய்யத் தொடங்கியது. அதையும் மீறி குட்டிகளின் அவலக் குரல் கேட்டது. பாவம், குளிர் தாங்கவில்லை போலும். இவற்றை எடுத்து வந்து மேலே என் வீட்டு வரவேற்பு அறையில் ஒரு சாக்கை விரித்துப் படுக்க வைக்கலாமா என்று எண்ணினேன்.
    அடுத்த வீட்டுக் காம்பவுண்டுச் சுவரில் ஏறிக் குதித்து அவற்றை எடுத்து வருவது ஒன்றும் பெரிய வேலை இல்லை தான். ஆனால் நடைமுறைச் சிக்கல்கள் பல உண்டு. முதலில், என்னிடம் டார்ச் லைட் இல்லை. இரவில் யாரை எழுப்பி டார்ச் லைட் இரவல் கேட்பது? செல் போன் வெளிச்சத்தை வைத்துக் கொண்டு ஓரளவு சமாளிக்கலாம். ஆனால் அடுத்த மனையில் பாம்புகள் நடமாட்டம் அதிகம். என் வீட்டிற்கும் அவை வருவதுண்டு. நாங்கள் அடிப்பதில்லை. நான் இந்த வீட்டைக் கட்டி இதில் முப்பது வருடம் வாழ்ந்திருக்கிறேன். யாரையும் பாம்பு கடித்தது இல்லை. கையைத் தட்டினால் ஓடி மறைந்து விடும். எங்களுக்கும் பாம்புகளுக்கும் அப்படி ஒரு எழுதப்படாத உடன்படிக்கை. ஆனால் இந்த அரைகுறை வெளிச்சத்தில் தெரியாமல் நான் பாம்பின் மேல் காலை வைத்துவிட்டால் அது அந்த ஒப்பந்தத்தை மதித்து நடக்குமா என்பது சந்தேகமே.
    மேலும், குட்டிகளை எடுக்க முயன்றால் தாய் நாய் என்னை ஏதோ விரோதியாகக் கருதி கடித்து விடவும் கூடும். ஒரு புறாவுக்காகத் தன் உயிரைக் கொடுக்க முன்வந்த சிபி போல நாய்க்குட்டிகளுக்காக என் உயிரைக் கொடுத்து வரலாற்றில் இடம் பெற விருப்பமில்லை. ஆனாலும் இந்தச் சின்னஞ் சிறு பிராணிகளின் துன்பத்தைப் போக்க வழி தெரியாமல் இருக்கும் என் பலவீனத்தை நினைக்கும் போது வெட்கமாக இருந்தது.
    குட்டிகள் மழைச் சத்தத்தோடு போட்டி போட்டுக் கத்திக் கொண்டிருந்தன. எனக்குத் தூக்கம் வரும் என்ற நம்பிக்கை இல்லை. அங்கேயே திண்ணையில் உட்கார்ந்து கொண்டேன். இதற்கிடையில் பாலிதீன் விரிப்பில் தண்ணீர் நிரம்பி குளம் போல் நடுவில் குழிந்து விட்டது. அதன் எடை தாங்காமல் மேலே வைத்திருந்த கற்கள் விழுந்து விடவே அத்தனை தண்ணீரும் குட்டிகள் மேல் தடதடவென்று கொட்டி மூழ்கடித்தது. அதனால் கத்தல் இன்னும் அதிகமாயிற்று.
    ஆண்டவனே, எனக்கு இவ்வளவு பெரிய உடலையும் அறிவையும் இத்தனை வசதிகளையும் கொடுத்திருக்கிறாய். இந்த  அற்ப ஜீவன்களுக்கு உதவ முடியாமல் இவற்றால் என்ன பயன்? அக்கம் பக்கத்தில் இத்தனை பேர் இந்தச் சத்தத்தை லட்சியம் செய்யாமல் தூங்கவில்லையா? எனக்கு மட்டும் ஏன் இப்படி மனம் சங்கடப்படுகிறது? முல்லைக்குத் தன் தேரையே பந்தலாக்கிய பாரியைப் பற்றியும், வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரைப் பற்றியும் படித்ததை மற்றவர்களைப் போல மறந்துவிடாமல் நினைவில் வைத்திருப்பதாலா? செயல்படுத்தப்பட முடியாத நெஞ்சின் ஈரம் இருந்தும் ஒன்று தான், இல்லாததும் ஒன்று தான். திண்ணையில் சாய்ந்து யோசனை செய்து கொண்டே எப்பொழுது தூங்கினேன் என்று தெரியாமல் தூங்கி விட்டேன்.
    வழக்கமாகத் தேங்காய் பறிப்பவர் காலையில் வந்தார். அவருடன் எனக்கு முப்பது வருடப் பழக்கம். “வாங்க ஐயா, எப்போ வந்தீங்க? நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டுக் கொண்டே படியேறினார். அவருக்குப் பதில் முகமன் கூறிவிட்டு அவருடன் கொல்லைப் புறத்துக்குச் சென்றேன். “பட்டண வாசியாப் போயிட்டீங்க, இருந்தாலும் ஊரை மறக்காம வந்திட்டுப் போயிட்டு இருக்கீங்களே. அதாங்க நல்லது. ஆனா, என்ன சொல்லுங்க, நம்ம ஊருக்கு ஈடு இந்த ஒலகம் பூராத் தேடினாலும் கெடைக்காதுங்க, என்ன சொல்றீங்க?” என்றார்.
    ஆமாம் என்று ஒப்புக் கொண்டேன். மரத்தைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டு காலில் நார் வளையத்தை மாட்டிக் கொண்டு விறுவென்று மரம் ஏற ஆரம்பித்தார்.
    “அந்த மூலையிலே நாய் குட்டி போட்டிருக்கு. அந்தப் பக்கம் காய் விழாமல் பாத்துங்கண்ணே.”
    “சரிங்க.”
    அவருக்கு வயது எண்பது இருக்கும். அவரை மரம் ஏறச் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. எனக்கும் அவரை விட்டால் வேறு ஆள் இல்லை. அவருக்கும் பிழைக்க வேறு வழி இல்லை. இரண்டு பிள்ளைகள் துபாயில் இருக்கிறார்கள். பணம் காசு அனுப்புவதில்லை. ஒரு முறை சொல்லிப் பார்த்தேன். “நீங்கள் மரம் ஏறுவதை விட்டு விட்டு ஏதேனும் சின்னதாக வியாபாரம் செய்யலாமே, நான் வேண்டுமானால் பணம் தருகிறேன்” என்றேன். அவர் ஒப்புக் கொள்ளவில்லை. “நீங்க கவலைப் படாதீங்க ஐயா. என்னை முருகன் காப்பாத்துவான்” என்று உறுதியாகக் கூறுவார். அவர் மரம் ஏறி இறங்கி வரும் வரையில் என் வாய், “காக்க காக்க, கனக வேல் காக்க” என்று புலம்பிக் கொண்டிருக்கும்.
    தேங்காய்களைப் பறித்துப் போட்டு, இறங்கி வந்து, எல்லாவற்றையும் குவித்து விட்டு என்னிடம் காசு பெற்றுக் கொள்ளும் நேரத்தில் என்னைப் பார்த்தவர், “ஏன் ஐயா, மொகம் ஒரு மாதிரி இருக்கு? ஒடம்பு நல்லா இல்லையா?” என்றார்.
    நான் முதல் நாள் இரவுக் கதையைச் சொன்னேன். அவர் அதைக் கேட்டு விட்டு, “இதுக்குப் போயா இவ்வளவு அலட்டிக்கிட்டீங்க? நாய்க் குட்டிங்க அப்படித் தான் கத்தும். கத்தக் கத்தத் தான் அதுக்கு பலம். மனிசக் கொழந்தைகளுக்கும் அப்படித் தான்”. என்றார்.
    “ஆனா ரெண்டு நாளா இப்படிக் கத்தல்லியே. மழையிலே நனைஞ்சதனாலே தானே கத்துது. இப்படி ரொம்ப நேரம் நனைஞ்சா செத்துடாதா?”
    “பூனைக்கும் ஆட்டுக்கும் தாங்க மழை ஆவாது. மத்த எந்தப் பிராணிக்கும் ஒண்ணும் செய்யாதுங்க. முருகன் ரெயின் கோட்டு போட்டுத் தான் பூமிக்கு அனுப்பறான். மனுசனுக்கும் அப்படித் தாங்க. ஒங்களைப் போல ஆப்பீசிலே ஒக்காந்து வேலை செய்யறவங்க தான் மழைலே நனைஞ்சா சளி புடிக்கும்பீங்க. எங்களைப் போல வய வெளிலே கெடக்கிறவங்க கொடையைப் புடிச்சிக்கிட்டா வேலை செய்ய முடியும்? நனைவோம், காய்வோம். ஒண்ணும் ஆகாதுங்க.”
    உண்மை தான் அவரைப் பார்த்தாலே தெரிகிறது. ‘அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறா உடல் உறுதி’ என்று பாரதியார் சொன்னபடியான வைரம் பாய்ந்த உடல் அது.
    “மழை அதுக்குப் பாதிக்காதுன்னா பின்னே ஏன் அது கத்துது?”
    “நாப்பது வயசிலே நாய்க் கொணம்னு சொல்றாங்கள்ல, அது என்ன கொணம்னு தெரியுமா ஐயா ஒங்களுக்கு?”
    “நன்றியோட இருக்கறது.”
    “அது ஒசந்த கொணமில்லே. ஆனா நாய்க் கொணம்னு கேவலமால்ல சொல்றாங்க.”
    அது என்ன கேவலமான நாய்க்குணம்? யோசித்துப் பார்த்தேன். புலப்படவில்லை.
    “சொல்லுங்க.”
    “நம்ம வீட்டுக்கு யாராவது புதுசா வந்தா நாய் குலைக்குது. அவங்களே அடிக்கடி வந்தா அது குலைக்கிறதை நிறுத்திக்குது இல்லையா?”
    “ஆமாம்.”
    “நாய்க்குப் புதுசா எதுவானாலும் புடிக்காது. அது தான் அதோட பொறவிக் கொணம். குட்டிங்க பொறந்து நாலஞ்சு நாளைக்கு கண் மூடியிருக்கும். கண்ணெத் தொறந்து பாத்தா ஒரே வெளிச்சமா இருக்கா, அந்த வெளிச்சம் அதுக்குப் புடிக்காது. கத்தும். அப்புறம் அது பழகிப் போயிடும். ராத்திரிலே இருட்டைக் கண்டா புதுசா இருக்கா, கத்தும். அப்புறம் அதுவும் பழகிப் போயிடும். இப்போ மழை பெய்யிறது இதுகளுக்குப் புதுசு. புடிக்கல்லே. கத்துது. அது பழகற வரைக்கும் கத்திக் கிட்டு தான் இருக்கும்.”
    அப்படியா? அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஈவு இரக்கம் இல்லாமல் தூங்குகிறார்கள், நான் மட்டும் தான் ஏதோ புத்தர், ஏசு, காந்தியின் அவதாரம் என்று நினைத்துக் கொண்டிருந்தேனே. அவர்கள் எல்லோரும் விஷயம் தெரிந்தவர்கள்.
    “முழுக்கக் கேளுங்க ஐயா. மனுசப் பயலுக்கு நாப்பது வயசாச்சின்னா இந்த நாய்க் கொணம் வந்திடும். புதுசா எது வந்தாலும் புடிக்காது. புது ஊரிலே குடியேற மாட்டான். அப்படிப் போனாலும் எங்க ஊரு மாதிரி ஆகுமான்னு சொல்லிக்கிட்டு இருப்பான். புதுசா தொழில் ஆரம்பிக்க மாட்டான். கஷ்டமோ நஷ்டமோ பழைய வேலயையே தான் செய்வான்.
    “சின்னப் புள்ளைங்களைப் பாருங்க. எப்போப் பாத்தாலும் புதுப் புது விஷயங்களைத் தேடிப் போயிட்டு இருப்பாங்க. பொறந்த கொழந்தை தெனம் ஒரு புது வெளையாட்டு வெளையாடுது. புதுசு புதுசா வார்த்தை கத்துக்குது. புதுப் புது சினேகிதம் ஏற்படுத்திக்கிட்டு பழகுது. அது தான் எப்பவும் சந்தோஷமா இருக்குது.”
    உண்மை தான். புது மனிதர்கள், புது விஷயங்கள் என்றால் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு தானே அணுகுகிறோம்.
    “எங்க முருகனைத் தகப்பன் சாமிம்பாங்க. அப்பனுக்கே உபதேசம் பண்ணினவனுங்க. அதுக்கு என்ன அர்த்தம்? புதுப் புது விஷயங்களைப் பாத்து பயப்படாம அதை அதை அப்படி அப்படியே ஏத்துக்கணும்னு அதை மறந்து போன பெரியவங்களுக்குச் சின்னப் புள்ளைங்க தான் சொல்லித் தர  முடியும்.”
    முற்றிலும் உண்மை. பதஞ்ஜலி யோக சூத்ர உரையில் பாரதி கூறுவது எனக்கு நினைவுக்கு வந்தது. “ஓம் என்பது பிரணவ மந்திரம். இந்த மந்திரத்துக்கு ஆகமங்கள் கோடி வகைகளில் பொருள் சொல்கின்றன. ப்ரணவம் என்ற சொல் எப்போதும் புதுமையானது என்ற பொருள் தருவது.”
    முருகன் சிவனுக்கு ஓங்காரத்தின் உட்பொருளை உபதேசித்த கதையில் இவ்வளவு பெரிய சூட்சுமம் இருக்கிறதா? எவ்வளவு எளிதாகச் சொல்லிவிட்டார் படிப்பறிவில்லாத இந்த மரமேறி!

    Share
  • பாரதியின் வேத முகம் – 14

     

    -சு.கோதண்டராமன்

     

    வாயுவாகி வெளியை அளந்தனை

    வேதக் கருத்துகளைத் தன் பாடல்களில் பாரதி பயன்படுத்தியதைப் பார்த்தோம். வேத சூக்தங்களில் சிலவற்றை அவர்  மொழிபெயர்த்ததையும் அறிந்தோம். ஒரு சிறிய வேத மந்திரத்தை விளக்கிப் பாரதி பல பக்கங்களில் எழுதிய வசன கவிதை ஒன்றையும் இப்பொழுது பார்ப்போம்.

    வேதத்தில்  வரும் ‘நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி’ (காற்றே, நீயே கண் கண்ட தெய்வம்) என்பதற்கு விளக்கமாகப் பாரதி பதினைந்து அழகிய வசன கவிதைகள் எழுதியுள்ளார். அவற்றில் ஒரு சில மட்டும் கீழே சுருக்கித் தருகிறேன்

    1 ஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல். ஒரு மூங்கிற் கழியிலே கொஞ்சம் மிச்சக் கயிறு தொங்குகிறது. எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் ஸ்னேகம். நாங்கள் அடிக்கடி வார்த்தை சொல்லிக் கொள்வதுண்டு. ஒரு கயிறா சொன்னேன்? இரண்டு கயிறு உண்டு. ஒன்று ஆண். மற்றொன்று பெண். கணவனும் மனைவியும். ஆண் கயிற்றுக்குக் கந்தன் என்று பெயர். பெண் கயிற்றுக்குப் பெயர் வள்ளியம்மை. அவை இரண்டும் ஒன்றை ஒன்று காமப் பார்வை பார்த்துக் கொண்டும் புன்சிரிப்பு சிரித்துக் கொண்டும் வேடிக்கைப் பேச்சு பேசிக்கொண்டும் ரஸப் போக்கிலே இருந்தன. இங்ஙனம் நெடும் பொழுது சென்ற பின் வள்ளியம்மைக்குக் களியேறிவிட்டது.

                    நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்து விட்டு வரப் போனேன். நான் திரும்பி வந்து பார்க்கும்போது வள்ளியம்மை தூங்கிக் கொண்டிருந்தது. கந்தன் என்  வரவை எதிர் நோக்கி இருந்தது. எங்கேடா போயிருந்தாய் வைதீகம்? சொல்லிக்கொள்ளாமல் போய் விட்டாயே என்றது. அம்மா நல்ல நித்திரை போலிருக்கிறது என்று கேட்டேன். ஆகா அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து என் முன்னே நின்ற தேவனுடைய மகிமையை என்னென்று சொல்வேன்? காற்றுத் தேவன் தோன்றினான். அவனுடல் விம்மி விசாலமாக இருக்குமென்று நினைத்திருந்தேன். வயிர ஊசி போல் ஒளி வடிவமாக இருந்தது (வாயு தேவனின் உடல் ஒளி வடிவமானது என்பது வேதக் கருத்து.).

          நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி

                    காற்றே போற்றி நீயே கண் கண்ட தெய்வம்.

          அவன் தோன்றிய போதிலே வான முழுதும் ப்ராண சக்தி நிரம்பிக் கனல் வீசிக் கொண்டிருந்தது. ஆயிர முறை அஞ்சலி செய்து வணங்கினேன். காற்றுத் தேவன் சொல்வதாயினன் மகனே ஏதடா கேட்டாய்? அந்தச் சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா? இல்லை. அது செத்துப் போய் விட்டது. நான் ப்ராணசக்தி. என்னுடனே உறவு கொண்ட உடல் இயங்கும். என் உறவு இல்லாதது சவம். நான் ப்ராணன். என்னாலே அச் சிறு கயிறு உயிர்த்திருந்தது. சுகம் பெற்றது. சிறிது களைப்பெய்தியவுடனே அதை உறங்க இறக்க விட்டு விட்டேன். துயிலும் சாவு தான். சாவும் துயிலே. நான் விளங்குமிடத்தே அவ்விரண்டும் இல்லை. மாலையில் வந்து ஊதுவேன். அது மறுபடி பிழைத்து விடும். நான் விழிக்கச் செய்கிறேன். அசையச் செய்கிறேன். நான் சக்தி குமாரன். என்னை வணங்கி வாழ்க.

          நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி

                    த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்ம வதிஷ்யாமி

          2 நடுக் கடல். தனிக் கப்பல். வானமே சினந்து வருவது போன்ற புயற் காற்று. ஹதம். இரு நூறு உயிர்கள் அழிந்தன. ஊழி முடிவும் இப்படியே தானிருக்கும். சக்தி காற்றாகி விடுகிறாள். காற்றே பந்தல் கயிறுகளை அசைக்கிறான். அவற்றில் உயிர் பெய்கிறான். காற்றே நீரில் சூறாவளி காட்டி, வானத்தில் மின்னலேற்றி, நீரை நெருப்பாக்கி நெருப்பை நீராக்கி, நீரைத் தூளாக்கி, தூளை நீராக்கிச் சண்ட மாருதம் செய்கின்றான். காற்றே யுக முடிவு செய்கின்றான். காற்றே காக்கின்றான். அவன் நம்மைக் காத்திடுக.

          3 வீமனும் அனுமனும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும். உயிருடையன வெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம். உயிர் தான் காற்று. தோன்றுதல், வளர்தல், மாறுதல், மறைதல் எல்லாம் உயிர்ச் செயல். உயிரை வாழ்த்துகின்றோம்.

          4 எறும்பு உண்ணுகிறது, உறங்குகின்றது, மணம் செய்து கொள்கின்றது, குழந்தை பெறுகின்றது, ஓடுகிறது, தேடுகிறது, போர் செய்கிறது, நாடு காக்கிறது. இதற்கெல்லாம் காற்று தான் ஆதாரம். மகா சக்தி காற்றைக் கொண்டு தான் உயிர் விளையாட்டு விளையாடுகிறாள்.

          5 காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது. மலைக் காற்று நல்லது. கடற் காற்று மருந்து. வான் காற்று நன்று. ஊர்க் காற்றை மனிதர் பகைவனாக்கி விடுகின்றனர். அவன் வரும் வழியிலே எவ்விதமான அசுத்தமும் கூடாது. அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்து வைப்போம். அவன் சக்தி குமாரன். மகாராணியின் மைந்தன். அவனுக்கு நல்வரவு கூறுகின்றோம். அவன் வாழ்க. (சுற்றுச் சூழல் பற்றி இன்று ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வுக்கு அன்றே வேத அடிப்படையில் வித்திட்டவர் பாரதி)

          6 நொய்ந்த வீடு, நொய்ந்த உடல், நொய்ந்த உயிர், நொய்ந்த உள்ளம் இவற்றைக் காற்றுத் தேவன் புடைத்து நொறுக்கி விடுவான். ஆதலால் மானிடரே வாருங்கள். வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம். உடலை உறுதி கொள்ளப் பழகுவோம். உயிரை வலிமையுற நிறுத்துவோம். உள்ளத்தை உறுதி செய்வோம்.

          7 காற்றைப் புகழ நம்மால் முடியாது. அவன் புகழ் தீராது. அவனை ரிஷிகள் ப்ரத்யக்ஷம் ப்ரம்ம என்று போற்றுகிறார்கள். ப்ராண வாயுவைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக. அபானனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காக்க. வ்யானனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காக்க. உதானனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காக்க. காற்றின் செயல்களை எல்லாம் பரவுகின்றோம். உயிரை வணங்குகின்றோம். உயிர் வாழ்க. புலவர்களே, காலையில் எழுந்தவுடன் உயிர்களை எல்லாம் போற்றுவோம்.

          நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி

     

    Share
  • பாரதியின் வேத முகம் – 13

     

    -சு.கோதண்டராமன்

     

    கவிவாணர்க்கு நல்லமுது

    அரவிந்த கோஷ் சொல்கிறார், “அக்னியைப் பற்றிய வேத மந்திரங்களில் கவிதை மிகவும் செழிப்புற்றிருக்கிறது. பாட்டின் பொருளாகிய அக்னி தேவனின் தழலும் ஒளியும் பாடுகிற ரிஷிகளின் அறிவிலே தாவி விட்டன போலும்.”

    அரவிந்தரின் இந்தக் கருத்தை மேற்கோள் காட்டி விட்டு பாரதி பேசுகிறார், ஆம். உயர்ந்த கவிதையின் நெறி அது. கவியின் இஷ்டதேவதையின் காந்தி அவனுடைய உள்ளத்தில் வீசும். அந்த ஒளி பாட்டிலே தெரியும்.

    இந்த முன்னுரையுடன் பாரதி வேத மந்திரங்களில் அக்னியின் புகழ் கூறுவனவற்றை மொழி பெயர்த்துத் தருகிறார். அவரது மொழி பெயர்ப்பின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது. அடைப்புக்குள் உள்ள விளக்கமும் பாரதியினுடையதே.

    அக்னிமீளே என்று தொடங்கும் ரிக் வேதம் முதல் மண்டலம் முதல் சூக்தம்.

    1 தீ வேள்வியின் முன் நிற்பவன். அதன் பருவங்களை வகுக்கும் தேவன். அங்கு வானவரை அழைப்பவன். செல்வங்களை மிகுதியுறக் காட்டுவோன். அவனை வேண்டுகிறேன். (அமிர்தத்தின் பிறப்பிடமாகிய சூர்யன் என்ற ஒளியில் நான் என்னையே ஹோமம் செய்து கொள்கிறேன் என்று வேத ரிஷிகள் கூறினர். இன்றைக்கும் காலையில் ஒவ்வொரு வேதியனும் சூர்யச்ச மாமன்யுச்ச என்ற இந்த மந்திரத்தைச் சொல்கிறான். இவ்விதமான வேள்வி நடைபெற வேண்டுமானால் அதற்குத் தீயின் துணை வேண்டும். தீயை எழும்படி செய்தால் போதும். பிறகு இந்த வாழ்க்கை வேள்வியின் பொறுப்பு. அவனே வேள்வியை அதன் பருவங்களுக்குத் தக்கவாறு மேலே ஏற்றிக் கொண்டு போகிறான். எல்லா விதமான தெய்வ சக்திகளையும் அங்கு அழைத்து வருகிறான்.)

    2 தீயை முன்னைப் புலவர் போற்றினர். புதியோரும் அவனையே போற்றுக. அவன் இங்கு அமரரைக் கொண்டு தருக.

    3 நாளுக்கு நாள் வளரும் செல்வமும் வீரமிக்க புகழும் தீயாலே பெறுக. (தீக் கடவுள் எல்லா மனிதரிடத்தும் உள்ளத் திண்மையாக நிற்கிறான். அவனை வளர்த்தால் எண்ணிய பொருள் எதுவும் எவ்வுலகத்திலும் கை கூடும்.)

    4 தீயே, நெறியில் ஓங்கும் வேள்வியதனை நீ எப்புறத்தும் சூழ்ந்து காக்கிறாய். அஃதே வானவரிடம் சேரும்வழி. (மனித நிலையிலிருந்து அமர நிலை நோக்கிச் செல்லும் வழி தான் வேள்வி போகும் வழி.)

    5 தீ வானவரை அழைப்போன். புலமையுள்ள செய்கைத் திறமை ஆவோன். ஞானக் கேள்வி தருவதில் சிறந்தோன். அவ்வானவன் வானவருடன் வருக.

    6 அன்ப, வேள்வி தருவோனுக்கு நீ சீர் தருவாய். அதுதான் தீயே உனது உண்மை.

    7 தீயே, நின்பால் நாள் தோறும் இரவும் பகலும் நாம் பணிவு ஏந்தி வருகிறோம். (அகங்காரத்தை விட்டு முழுவதும் பணிவு கொள்வதே தேவரை அழைக்கும் வழி)

    8 நெறியில் ஓங்கும் வேள்விகளின் அரசே, நேர்மை காப்பாய். சுடர் வீசுவாய். எனது மனையிலே வளர்வாய். தீயே நின்னை அடைகிறோம். (சொல்லிலும் நடையிலும் உள்ளத்திலும் முழு நேர்மை காணும்போது அங்கே அக்னி சக்தி பிறந்திருப்பதாக அறிந்து கொள்ளலாம்.)

    9 அருகே போவதற்கு எளியனாய் மகனுக்குத் தந்தை போல் நீ எமக்கு ஆகுக. நல்வாழ்வு பெறும்படி எம்மைச் சார்ந்திடுக.

    இந்த வேதக் கருத்துகளை உள்ளடக்கி எளிய தமிழில் பாரதி பாடிய பாடலின் ஒரு பகுதியைக் கீழே காண்போம்.

    நெஞ்சிற் கவலைகள் நோவுகள் யாவையும்

    நீக்கிக் கொடுப்பவனை – உயிர்

    நீளத் தருபவனை – ஒளிர்

    நேர்மைப் பெருங் கனலை – நித்தம்

    அஞ்சேல் அஞ்சேல் என்று கூறி – எமக்கு நல்

    ஆண்மை சமைப்பவனைப் – பல் வெற்றிகள்

    ஆக்கிக் கொடுப்பவனைப் – பெருந் திரள்

    ஆகிப் பணிந்திடுவோம் வாரீர்.

    வானகத்தைச் சென்று தீண்டுவன் இங்கென்று

    மண்டி எழும் தழலைக் – கவி

    வாணர்க்கு நல் அமுதைத் – தொழில்

    வண்ணம் தெரிந்தவனை – நல்ல

    தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும்

    தீம் பழம் யாவினையும் இங்கே உண்டு

    தேக்கிக் களிப்பவனைப் பெருந் திரள்

    ஆகிப் பணிந்திடுவோம் வாரீர்.

     

     

    Share
  • பாரதியின் வேத முகம் – 12

     

    -சு.கோதண்டராமன்

    நம்புவதே வழி

    இஸ்லாமிய வேதம் குர் ஆன் பல இடங்களில் அல்லா மேல் ஈமான் கொள்ளுங்கள் என்று நம்பிக்கையை வலியுறுத்துகிறது. கிருத்துவர்களின் பைபிளும் பல இடங்களில், விசுவாசியுங்கள் என்று நம்பிக்கையை முதன்மைப்படுத்துகிறது. ஆனால் இந்து மதமோ அந்த அளவுக்கு நம்பிக்கையை வலியுறுத்துவதாகத் தெரியவில்லை.

    வேதம் தனி மனித சிந்தனைக்குக் கொடுத்துள்ள சுதந்திரம் வேறு எங்கும் காணக் கிடைக்காதது. வேதத்தை ஒப்புக் கொள்ளாதவரைப் பாவி என்றோ காபிர் என்றோ இந்துக்கள் இகழ்வதில்லை. மாறாக புதிய சிந்தனைகளை வரவேற்று அவற்றின் உண்மைகளை ஆராய்ந்து அவற்றில் உள்ள நல்லனவற்றை ஏற்றுக் கொண்டு தன்னை மாற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரே வேதத்திற்கு சங்கரர் ஒரு விதமாகவும் ராமானுஜர் ஒரு விதமாகவும் மத்வர் ஒரு விதமாகவும் விரிவுரை எழுதியுள்ளனர். அவரவருக்கு எது சரி என்று படுகிறதோ அதை ஏற்றுக் கொள்ளவும் அதன்படி நடக்கவும் பிறப்புரிமை பெற்றவன் இந்து. கடவுள் இல்லை என்று சொல்பவனையும் வேத மதம் வெறுப்பதில்லை. இன்றைய பெரியார் மட்டுமல்ல, முற்காலத்தில் வாழ்ந்த ஜாபாலி என்ற முனிவரின் கருத்துகளும், சார்வாகர்கள் என்றழைக்கப்பட்ட நாஸ்திகர்களின் கருத்துகளும் இந்து சமய இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன.

    வேதம் நம்பிக்கையை வலியுறுத்துகிறதா? சாதாரண மக்கள் வழக்கில் நம்பினவருக்கு நடராசா, நம்பாதவருக்கு யமராசா என்று சொல்லப்படுகிறது என்றாலும் வேதத்தில் எந்த இடத்திலும் இந்த வேதம் சொல்வதை நம்புங்கள். நம்பினால் தான் கடைத்தேறுவீர்கள், இல்லாவிட்டால் நரகத்துக்குப் போவீர்கள் என்ற மிரட்டல்கள் காணப்படுவதில்லை.

    இத்தகைய சூழ்நிலையில் பாரதியின் இரு வரிகள் நமக்குப் புதிராக உள்ளன. முதலாவது, சக்தியைக் கும்பிடுமாறு தன் மனத்துக்கு அறிவுறுத்தும் இடத்தில்

    நம்புவதே வழி என்ற மறை தனை

                    நாம் இன்று நம்பி விட்டோம் என்கிறார்.

    இன்னொரு பாடலில்

    நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு

                    அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக நலம் பெறலாம்

    என்கிறார்.

    வேதம் நம்பிக்கையை வலியுறுத்துவதாக அல்லவா கூறுகிறார். உண்மையா? தேடினால் கிடைப்பது சிரத்தை பற்றிய ஒரு சூக்தம். ரிக்வேதம் பத்தாவது மண்டலம் 151வது சூக்தம்.

    சிரத்தை என்பது அடைய வேண்டிய லட்சியத்தில் உறுதியும் அதை அடைவதற்கான வழியில் முழு முனைப்புடன் ஈடுபடுவதையும் குறிக்கும். செய்யும் ஒவ்வொரு சிறு செயலும் தன் இறுதி நோக்கத்துக்குப் பயன்படுமா என்று ஆராய்ந்து பயன்படக்கூடிய எந்த சிறு செயலையும் விடாமல் செய்வதும் பயன் தராத எந்த சிறு செயலையும் செய்யாதிருப்பதும் இதில் அடங்கும். இதில் நம்பிக்கை எங்கே வந்தது?

    ஆதி சங்கரர் சிரத்தை என்பதற்கு நம்பிக்கை என்றே பொருள் தருகிறார். இறைவன் ஒருவர் உண்டு என்பதில் சந்தேகம் இல்லாத தெளிவான மனத்துடன் இருப்பதே நம்பிக்கை என்கிறார். அதுவே சிரத்தையின் அடிப்படை. குறிக்கோளில், அதாவது இறைவனிடத்தில், நம்பிக்கையும் அதை அடையும் வழியாகிய, குருவின் வார்த்தைகளில் நம்பிக்கையும் தான்.

    ஒரு உதாரணம் பார்ப்போம். ஒருவன் ஒரு புதிய ஊருக்குச் செல்ல விரும்புகிறான், ஒருவரிடம் வழி கேட்கிறான். அவன் அதில் நம்பிக்கையோடு பயணம் செய்ய வேண்டும். கொஞ்ச நேரம் சென்ற பின் இந்தப் பாதை சரியானது தானா? நமக்குச் சொன்னவர் சரியாகத் தான் சொல்லி இருப்பாரா? நாம் போய்ச் சேருவோமா என்று ஐயுறுதல் கூடாது.

    நம்பிக்கை இன்றி, சந்தேகம் தன்னை ஆட்கொள்ள அனுமதிப்பவன் அழிவான் என்கிறது கீதை. (ஸம்சயாத்மா விநச்யதி)

    இந்த சிரத்தை, அதாவது குறிக்கோளில் உறுதியும் செயல்பாட்டில் சந்தேகம் மற்றும் குறை இல்லாத வினைத் திட்பமும், ஒரு தேவியாக உருவகப்படுத்தப்பட்டு வேதத்தில் போற்றப்படுகிறது. அதன் சுருக்கமான மொழி பெயர்ப்பு இதோ:-

    சிரத்தை இறைவனின் தலையில் உள்ளது. அதைச் சொற்களால் போற்றுவோம். சிரத்தையே, கொடுப்போருக்கும் கொடுக்க விரும்புவோருக்கும் விரும்பிய பலன்களைக் கொடுப்பாயாக. (சிரத்தையோடு செய்தால் விரும்பிய பலன் கிடைக்கும்.) தேவர்கள் அசுரர்களுடன் இட்ட போரில் சிரத்தையைக் கைக் கொண்டனர். வெற்றி பெற்றனர். (நோக்கத்தில் வெற்றி பெற வேண்டுமென்ற) இதய தாகத்தால் சிரத்தை அடையப்படுகிறது. சிரத்தையால் செல்வம் அடையப்படுகிறது. சிரத்தையைக் காலையிலும் நண்பகலிலும் மாலையிலும் வணங்குகிறோம். சிரத்தா தேவியே, எங்களுக்கு சிரத்தையைக் கொடு.

    இந்தக் கருத்துகளைத் தான் பாரதி ஒரு வரியில் கூறுகிறார்.

                    நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு.

    சிரத்தையை, அதற்கான இதய தாகத்தை, அடைவது எப்படி? அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல சிரத்தையை அடைய சிரத்தை என்னும் அம்பிகையைத் தான் வணங்க வேண்டும். சிரத்தா தேவியே, எங்களுக்கு சிரத்தையைக் கொடு என்று தான் அந்த ரிக் வேத சூக்தம் நிறைவடைகிறது. பாரதியும் அதையே எதிரொலிக்கிறார்.

    அம்பிகையைச் சரண் புகுந்தால்

                    அதிக நலம் பெறலாம்.

     

                    நம்புவதே வழி என்ற மறை தனை

                    நாம் இன்று நம்பி விட்டோம்.

     

    Share
  • பாரதியின் வேத முகம் – 11

     

    -சு.கோதண்டராமன்

    கற்பக விநாயகக் கடவுளே போற்றி

     

    பாரதி எல்லா இந்து தெய்வங்களையும் அல்லாவையும் ஏசுவையும் போற்றிப் பாடியுள்ளார் என்றாலும் விநாயகர் ஒருவருக்குத் தான் அவர் நான்மணிமாலை பாடிச் சூடியுள்ளார். விநாயகரைக் குறிப்பதாகக் கருதப்படும் “கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே” என்ற வேத மந்திரத்தின் பொருளையும் அதில் மறவாமல் குறிப்பிடுகிறார்.

    வேத முனிவர் விரிவாப் புகழ்ந்த

                பிருகஸ்பதியும் பிரமனும் யாவும்

                தானேயாகிய தனி முதற் கடவுள்

    என்று வாழ்த்துகிறார்.

    பிற்காலத்தில் ஏற்பட்டதாயினும் தற்போது அதிகமாகப் பயன்படுத்தப்படும் விநாயகர் துதியாகிய சுக்லாம்பரதரம் விஷ்ணும் என்ற சுலோகத்தையும் அவர் மறக்கவில்லை.

    வெள்ளாடை தரித்த விட்டுணு என்று

                செப்பிய மந்திரத் தேவனை

                முப்பொழுதேத்திப் பணிவது முறையே.

    மேலும் விநாயகரை ஆர்ந்த வேதப் பொருள் காட்டும் தீபன், வேதச் சுடர், வேத காரணன் என்றும் போற்றுகிறார். விநாயகர், ஸத்தெனத் தத்தெனச் சதுர் மறையாளர் நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள். எல்லா மதங்களுக்கும் பொதுவான முழுமுதற் கடவுளுக்கு உள்ள பல பெயர்களில் விநாயகர் என்பதும் ஒன்று என்பது தான் பாரதியின் கொள்கை. அவர் விநாயகருக்குச் செய்யும் அர்ச்சனை நாமாவளியைப் பார்த்தால் தொல் பழம் தெய்வங்கள் உள்பட எல்லா தெய்வங்களின் பெயர்களும் அதில் வந்து விடுகின்றன.

    பரம் பொருளேயோ பரம் பொருளேயோ

                ஆதி மூலமே அனைத்தையும் காக்கும்

                தேவ தேவா சிவனே கண்ணா

                வேலா சாத்தா விநாயகா மாடா

                இருளா சூரியா இந்துவே சக்தியே

                வாணீ காளீ மாமகளேயோ

    இன்னொரு பாடலில் இன்னும் ஒரு படி மேலே போய்ப் பிற மத தெய்வங்களின் பெயர்களையும் சூட்டுகிறார்.

     

    விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்

                நாராயணனாய் நதிச் சடை முடியனாய்

                பிறநாட்டிருப்போர் பெயர் பல கூறி

                அல்லா யெஹோவா எனத் தொழுதன்புறும்

                தேவரும் தானாய் திருமகள் பாரதி

                உமையெனும் தேவியர் உகந்த வான் பொருளாய்

                உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்.

    புராணங்களை ஒட்டி விநாயகரைக் கறையுண்ட கண்டன் மகன், சக்தி மகன், அரங்கத்திலே திருமாதுடன் பள்ளிகொண்டான் மருகன் என்று அழைத்தாலும் அவர் புராணக் கதைகளின்படி விநாயகரைப் பெருவயிறன் (லம்போதரன்) என்றோ, அருணகிரியார் பாடியபடி ‘மிக்க அடிசில் கடலை பட்சணமெனக் கொள் அருள் விக்கின சமர்த்தன்’ என்றோ அக்காலப் பள்ளி மாணவர்களின் தோத்திரப் பாடலின்படி ‘நூறு குடலை மாம்பழம் நொடிக்கும் அளவில் அமுது செய்ய வல்ல பிள்ளாய்’ என்றோ ஓரிடத்திலும் குறிப்பிடவில்லை. ஏன்? எல்லாம் வல்ல கடவுளுக்குப் பெருந் தீனி தின்பது சிறப்புச் சேர்க்கும் ஒரு செயலா? கடவுளை உணவு உண்பதில் சமர்த்தன் என்று குறிப்பிட்டால் வழிபடுவோருக்கும் அதுவே வழக்கமாகி விடும் என்று பாரதி கருதி இருப்பார்.

    மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான மூர்த்தி மனதுக்கு ஏற்றதாக இருக்கிறது. சிவனின் உக்ர தோற்றத்தில் ஒருவருக்கு ஈடுபாடு ஏற்படுகிறது என்றால் மற்றவருக்கு நாராயணனின் பள்ளி கொண்ட தோற்றம் அமைதி தருகிறது. குறும்பு செய்யும் கண்ணன் ஒருவனுக்கு மகிழ்ச்சி தந்தால் மற்றவனுக்குக் கோபத்துடன் வேலேந்தும் முருகன் ஆறுதல் தருகிறான். சோகமே வடிவான ஏசு ஒருவனுக்கு ஈடுபாடு தருமானால் இன்னொருவனுக்கு ஆனந்தமே வடிவான கணபதி மகிழ்ச்சி தருகிறார். விநாயகரைப் பார்த்து பாரதி பாடுகிறார் கேட்போம்.

    எனக்கு வேண்டும் வரங்களை

                இசைப்பேன் கேளாய் கணபதி       

                மனதிற் சலனம் இல்லாமல்

                மதியில் இருளே தோன்றாமல்

                நினைக்கும்போது நின் மவுன

                நிலை வந்திட நீ அருள் செய்வாய்

                கனக்கும் செல்வம் நூறு வயது

                இவையும் தர நீ கடவாயே

    ‘யத்பாவயஸி தத் பவஸி’ என்ற பழமொழிப்படி எந்த உருவத்தை மனதில் தியானிக்கிறோமோ அந்த உருவத்தின் தன்மைகள் நம்மிடம் படியும். ஆம். அசையாமல் உட்கார்ந்திருக்கும் கணபதியை நாம் வழிபட்டால் நமக்கும் அவருடைய மவுன நிலை சித்திக்கும். மனதில் சலனமோ மதியில் இருளோ தோன்றாது. தலையில் இடி விழுந்தால் சஞ்சலப்படாமல் இருக்க முடியும். ஏது நிகழினும் நமக்கென்ன என்று இருக்க முடியும். சலனமற்ற மனமும் தெளிவான புத்தியும் தானே நாம் பெறக் கூடிய வரங்களுள் மிகச் சிறந்தவை.

    Share