Tag: தமிழ்த்தேனீ

  • “மந்திரமாவது நீறு”!…

    தமிழ்த்தேனீ 

     

    மந்திரமாவது நீறு

     

    மந்திர ஒலிகளுக்கும், இறைவன் ப்ரசாதமான திருநீறு, வில்வம்,துளசி  வேப்பிலை, மஞ்சள், இவைகள் அனைத்துக்கும் இறைவனே சக்தி கொடுத்திருக்கிறான். ஆகவே நாம் அவைகளை கையில் வைத்துக் கொண்டு மனமார ப்ரார்த்தனை செய்து அவகளை வணங்கிவிட்டு உபயோகித்தால் எப்படிப்பட்ட வியாதியும், திருஷ்டிகளும் விலகும் என்பது நான் கண்கூடாகப் கண்டவன் நான் என்  அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். மானசா என்கிற ஜரத்காரு தேவி என்கிற சக்தியின்  ஸ்லோகம் ஒன்று இருக்கிறது

    ஓம் ஐம் ஹரீம் ஸ்ரீரீம் க்லீம் ஜம் மனஸா தேவ்யை நமஹ

    கையில் கொஞ்சம் திருநீறு வைத்துக் கொண்டு, இந்த  ஸ்லோகத்தை  மானசீகமாக, ஜரத் காரு தேவியைப்  ப்ரார்த்தித்து  108 தடவைகள் உச்சரித்து பயத்தால் அல்லது த்ருஷ்டியால் அழும் குழந்தைகளுக்கு, நெற்றியில் இந்த திருநீற்றினை இட்டுப் பாருங்கள், உடனே பலன் கிடைக்கும் குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு விளையாடத் துவங்கும். இது என் அனுபவ பூர்வமான உண்மை.

    “மந்திர ஒலிகளுக்கும், இறைவன் ப்ரசாதமான திருநீறு, வில்வம்,துளசி வேப்பிலை, மஞ்சள், இவைகள் அனைத்துக்கும் இறைவனே சக்தி கொடுத்திருக்கிறான்”. மந்திர ஒலிகள் அமைதி, சாந்தம், ஆழ்நிலை உட்ப்ரயானம், இவை அத்தனைக்கும் முந்தைய படிதான் ஒலி,சப்தம், மொழி, எல்லாமே ஒவ்வொரு மனிதனும் பிறப்பதிலிருந்து  பயபக்தி, இறை கானங்கள், உச்சாடனங்கள் இவைகள் போதிக்கப் பட்டு வளர்க்கப் படுகிறான்.

    இறைவனை நம்புவோர்கள் மட்டுமே இதை நம்புவார்கள் ஆனால் இவை எல்லாமே ஒவ்வொரு படிக்கட்டுக்கள். ஒவ்வொன்றாக தாண்டவேண்டும், அமைதியாக, சாந்தமாக, ஆழ்நிலை உட்ப்ரயாணம் செய்ய, மந்திர உச்சாடனத்துக்கு நிச்சயமாக பலன் இருக்கிறது.

    அதன் ஒலி அதிர்வுகள் ஏற்படுத்தும் ஒன்று கூடிய மஹாசக்தி, எப்படிப்பட்ட நல்ல விளைவுகளையும் மிக எளிதாக ஏற்படுத்தும்.

    நம்முடைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அத்தனை விஞ்ஞான முன்னேற்றமும் “கண்டு பிடிக்கப் பட்டவையே, உருவாக்கப்பட்டவை அல்ல” ஆக  ஏற்கெனெவே இந்த ப்ரபஞ்ஜத்தில்  இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடிக்கிறார்கள் அல்லது மெய்ஞானிகள்  உணர்கிறார்கள்  அவ்வளவே

    ஒவ்வொரு விஞ்ஞானி ஒவ்வொருகண்டுபிடிப்பை நிகழ்த்தும் போதும் அவர்களுடைய அறிய செயல் திறன் அதிர்வுகளும் ப்ரபஞ்சத்தின் இயற்கையான அதிர்வுகளும் அல்லது அலை வரிசைகளும் ஒரு இணையாக சந்திக்கும் போது  நிகழ்வதுதான் கண்டுபிடிப்புகள் அல்லது  மெய்ஞானிகள் தங்களுடைய  ஆசார அனுஷ்டான வழிமுறைகளால் தம்மை உணர்ந்து உள்ளுக்குள்ளே இருக்கும்  ஆன்ம சக்தியை அடைந்து அந்த ஆத்ம சக்தியின் மூலமாக  ப்ரபஞ்சத்தின் உன்னதமான  சக்தியின் அலைவரிசையை தொடர்பு கொண்டு தம்முடைய ஆத்ம சக்தியை அந்த அலைவரிசையோடு ஒத்துப் போகச் செய்து  அதன் மூலமாக தாம் உணர்ந்த அற்புதங்களை  கண்டு பிடிப்பாக மக்களுக்கு சொல்லி அவர்களை  உய்யச்செய்வது.

    இவை தான், மந்திர அல்லது தந்திர அல்லது விஞ்ஞான அல்லது, மெய்ஞான வழிகள் ப்ரசாதம் இறைவனை நம்புகிறவர்கள் மட்டுமே ப்ரசாதம் என்னும் சொல்லையே நம்புவர். ப்ரசாதம்  என்பது நாம் அதாவது மானிடர்களாகிய  நாம்  நம்மைப் படைக்கும் முன்னரே நாம் உயிர் வாழ்வதற்காக, பிணியில்லாமல் இருப்பதற்காக,அப்படியும் மீறி பிணிகள் வந்தால்  அவற்றைப் போக்கிக் கொள்வதற்காக அனைத்து  வழிகளையும் படைத்த இறைவனுக்கு  நாம் செலுத்தும் நன்றிக் கடன்தான் அதிலும் குறிப்பாக ப்ரசாதம் என்கிற வார்த்தையை  நம்புகிறவர்களிடம் நான் நகைச் சுவையாக ஒரு கேள்வி கேட்பதுண்டு ப்ரசாதமாக  படைக்கும் உணவை நீங்கள் எந்த தெய்வத்துக்குப் படைக்கிறிர்களோ அந்த தெய்வம் உண்மையிலேயே உண்டு மிகுதியை உங்களுக்கு ப்ரசாதமாக  தருகிறது என்று நம்புகிறீர்களா…….?  என்று ஆமாம் நம்புகிறோம் என்று பதில்  சொன்னவர்களிடம்  நகைச்சுவையாக மீண்டும்  அப்படியானல் சரி நீங்கள் படைக்கும் உணவுப் பொருட்களை  உண்மையிலேயே  இறைவன்   உண்பதானால் நீங்கள் அளித்த  உணவின் அளவு கொஞ்சமாவது குறைந்திருக்க  வேண்டுமே என்று அதற்கு இதுவரை  பதிலளித்தவர்கள்  இல்லை, நட்ட  கல்லும் தெய்வமே  நம்முள் நாதன் இருந்தால் ,நம்பிக்கைதான் வாழ்க்கை  மேலும் நாம் அளிக்கும் எதுவாக இருந்தாலும் சரி  நம்மைப் படைத்த இறைவனுக்குநாம் செலுத்தும்  நன்றிக் கடனாக நாமே ஏற்படுத்திக் கொண்ட  விஷயங்கள்தான்.

    ப்ரசாதம் படைப்பது என்பது  உண்மையிலேயே நாம் படைப்பதை இறைவன்  ஏற்றுக் கொண்டு இறைவன் அதை உண்ண  ஆரம்பித்து விட்டால்  நாம் அடுத்தமுறை  படைப்போமா என்பது சந்தேகமே ப்ரசாதம்  என்பதன் தாத்பரியமே நாம் செலுத்தும் நன்றிக் கடன், மேலும் நம் நம்பிக்கை  சர்வ வல்லமை படைத்த இறைவனுக்கு படைத்துவிட்டு  நாம் சாப்பிட்டால் அந்த உணவு வகைகளில் ஏதேனும்  தோஷங்கள்,அல்லது  மருத்துவ நிபுணர்கள்  கூறுவது போல ஏதேனும் ஒவ்வாமையான விஷயங்கள்  இருக்குமானால் அவைகளை இறைவன் நீக்கிவிடுவான்  என்னும் நம்பிக்கை.

    இவ்வவளவே “மந்திர ஒலிகளுக்கும், இறைவன் ப்ரசாதமான திருநீறு, வில்வம்,துளசி,வேப்பிலை, மஞ்சள், இவைகள்  அனைத்துக்கும்  இறைவனே சக்தி கொடுத்திருக்கிறான்  “அதே இறைவன் இவை எல்லாவற்றையும் உபயோகித்து பலன் அடையும் சக்தியையும் நமக்களித்திருக்கிறான்

    ஆகவே  நம்பிக்கை உள்ளவர்கள், அல்லது இறைவன் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் யார் உபயோகித்தாலும் இவை நிச்சயமாக பலன் தரும் வண்ணம் அருள் செய்திருக்கிறான் கருணை மனம் கொண்ட இறைவன்                திரு நீறு + திருநாமம் திரு  நீறு என்பதே  பசுமாட்டின் சாணம் அதைக் காய வைத்து  அதை நெருப்பிலிட்டு அதன் மூலமாக வரும் சாம்பல்  பசுமாட்டின் சாணம் ஒரு கிருமி நாசினி என்று  விக்ஞான பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயம்  அதனால்தான் நம் முன்னோர்கள்  சுகாதாரம் கருதி பசுமாட்டின் சாணத்தை தண்ணீரிலே  கலந்து தாங்கள் வாழும் பகுதிகளில் தெளித்து  நோய்க் கிருமிகளிடமிருந்து  ஓரளவு தப்பித்து வாழ்ந்தனர்  நம்முடைய மூத்தோர்களால் மெய்ஞானம் என்று  சொல்லப் பட்ட அனைத்துமே விஞ்ஞானம்தான்

    அக்காலத்தில் மக்களுக்கு விஞ்ஞானம் என்றால் புரியாது அதனால் மெய்ஞானம் என்று சொல்லி வைத்தனர்  நான் ஒரு கவிதையில்”  வேதியல் படித்தால் தெரியும்,  வேதம் படித்தாலும் புரியும்,  வேதியல் விந்தை, வேதம் தான்  வேதியலின் தந்தை,  வேதம், வேதியலின் வர்க மூலம்,  என்று எழுதி உள்ளேன்

    இயற்கையாகவே கிருமி நாசினியாக செயல் படும் விபூதி,திருநீறு இவைகளை நாம் கையில் வைத்துக் கொண்டு மந்திர உருவேற்றினால் இன்னும் கூடுதலாக சக்தி பெற்று நம்மை பல நோய்களிலிருந்து  காப்பாற்றும் என்பதில் சந்தேகமே இல்லை .

    அதே போல் வைணவர்கள் தரிக்கும் நாமம் என்று சொல்லப்படும் வெள்ளை கட்டி அதைக் குழைத்து நெற்றியிலே  இட்டுக் கொள்ளும் போது நாமக்கட்டி என்று சொல்லப்படுகின்ற அதில் சுண்ணாம்பும் கலந்திருக்கின்ற காரணத்தால் நாமமும் அதன் நடுவிலே இட்டுக் கொள்ளும் ஸ்ரீ சூர்ணம் என்னும் சிவப்புக் கோடு மஞ்சள் என்னும் கிருமி நாசினியை உபயோகித்து உருவாக்கப்பட்டிருப்பதால்  நாம் நம் நெற்றியில் இவைகளைத் தரிக்கும் போது நெற்றியின் நடுப் பகுதியான முக்கியமான சைனஸ் என்னும் நரம்புகளில் அனாவசியமாக சேரும் தண்ணீர் நமக்கு ஏற்படுத்தும் தலைவலி கழுத்து வலி போன்ற நோய்களை தடுக்கும் கிருமி நாசினியாக செயல் படுவதால் நம் முன்னோர்கள் முன்னரே அறிந்து  தீர்கதரிசனத்துடன் கண்டு பிடித்து வைத்திருக்கும் இவைகளை இறைவன் ப்ரசாதமாக  நாம் நினைத்து அணிவதனால் செயற்கையாக தயாரிக்கும் மாத்திரைகளை உபயோகிக்கும் நிலை நிச்சயமாக குறையும்.

    அரசமரம், வில்வ மரம் இவைகள் வெளியிடும் காற்று இயல்பாகவே மக்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்க வல்லது என்று விஞ்ஞானிகளே ஒத்துக் கொண்டுள்ளனர்.

    புற்று நோய் என்னும் கொடிய நோய் வில்வ இலைகளை தினமும் சேர்த்துக் கொண்டால் தீர்ந்துவிடும் என்று விஷயம் தெரிந்தவர்கள் சொல்வர்.

    சூட்டுக்கு சூடு தான் நல்வினை பயக்கும் மருந்து, ஆகவே நம் உடல் சூடுஅதிகமாகும்போது வில்வ இலையின் சூடு நம் உடலில் சேரும்போது இயல்பாகவே நாம் சமனப் பட்டு நோய் தீரும்.

    அதை இறைவனுக்கு அவன் பாதத்தில் சமர்ப்பித்துவிட்டு ப்ரசாதமாக சேர்த்துக் கொண்டால் அவன் அருளும்  சேர்ந்து நாம் பூரண குணமடைவோம் எனபதில்  என்ன சந்தேகம்….? அரச மரத்தின் காற்று பெண்களின்  கர்பஸ்தானத்தில் இருக்கும்.

    பல ஒவ்வாமைகளை சரி செய்து அவர்களுக்கு. மகப் பேறு அளிக்க வல்லது அதனால்தான் பெரியவர்கள். மகப் பேறு கிட்டாதவர்களை அரச மரத்தை ப்ரதட்ஷனமாக வரச் செய்வர் . அவர்கள் ப்ரதட்ஷணமாக வரும்போது அந்த அரச மரக் காற்றில் இருக்கும் நல்ல விளைவுகள் ஏற்படுத்தக் கூடிய வாசம் அப் பெண்களுக்கு குறைகளை களைந்து புத்திரபாக்கியத்தை ஏற்படுத்தும் என்று சொல்லுகிறார்கள்.

    “துளசி, வேப்பிலை, மஞ்சள் “சைவ ஆலயங்களில் திருநீறு,மற்றும் வில்வ இலைகள் அவைகளை ப்ரசாதமாக கொடுக்கும் வழக்கமும் வைணவ ஆலயங்களில் துளசிகலந்த தீர்த்தமும் மஞ்சள் கலந்த குங்குமமும் ப்ரசாதமாக அளிக்கும் வழக்கமும் மிகவும் யோசித்து பெரியோர்களால்  ஏற்படுத்தப்பட்டது “முன்னோரெல்லாம் மூடர்களல்ல நமக்குண்டு பண்பாடு ” என்கிற கண்ணதாசனின் கவிதை வரிகள் நமக்கு வலுவூட்டுகிறது

    சைவம், வைணவம் அதன் பின்னே  சாக்தம் என்று சொல்லக்கூடிய சக்தி வழிபாட்டுக் காரர்கள்  வேப்பிலையில் மஞ்சளைப் பூசி அதை அம்மனாகிய சக்திக்கு அணிவித்து ,அதையே ப்ரசாதமாக வாங்கி தங்களை மேம்படுத்திக் கொள்கிறார்கள்.

    நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் வேப்ப மரத்தை நட்டு வளர்ப்பார்கள். நல்ல வெய்யில் காலத்தில் வேப்ப மரத்தடியின் கீழ் அமர்ந்து பாருங்கள் எவ்வவளவு குளிர்ச்சியாய் இருக்கிறதென்று. மஞ்சளும் வேப்பிலையும் குளிர்ச்சி  ஆகவேதான் வேனல் காலங்களில் வரும் கட்டிகள் அம்மை போன்ற நோய்கள்தீர வேப்பிலையையும் மஞ்சளையும் அரைத்து தடவுகின்றனர் வேப்பிலையும் மஞ்சளும் கருணையோடு நம்மைக் காக்கும் உலகமாதா வான அன்னையின் அருளும்  அதில் சேரும்போது நோய்கள் தீரும் என்பதில் என்ன சந்தேகம்….?

    “சிவன் “ சிவன்  அபிஷேகப் பிரியன் ஏனென்றால் ஒரு கையில் அக்னி உடல் முழுவதும் சுடுகாட்டுச் சாம்பல் என்று நம்முடைய  பாபங்களைத் தீர்க்க பெற்ற தாய் போல அவன் தாங்கிக் கொண்டிருக்கிறான்  அத்தனை வெப்பத்தையும்.  அந்த வெப்பம் தணிய அவன் அபிஷேகப் பிரியனாயும் வில்வ இலை தரித்தும் பசுஞ்சாணத்தல் செய்யப்பட்ட திருநீறையும், குளிர்ச்சியான சந்திரனையும் கங்கையையும் தலையிலே அணிந்து கொண்டு பனிமலையிலே,அதாவது கையிலாயத்திலே வாசம் செய்கிறான்

    “மஹாவிஷ்ணு” மஹாவிஷ்ணு படுத்துக் கொண்டிருப்பதே பாற்க்கடலில்.  அவன் மிகக் குளிர்ச்சியானவன், இல்லையென்றால் எப்படி அவன் நாபிக் கமலத்திலிருந்து தாமரை முளைக்கும் அதில் எப்படி நான்முகன் அமரமுடியும்….? அதனால்தான் பக்தர்களின் குளிர் கால நோய்கள் தீர்க்க எல்லாக் குளிரையும் தான் தாங்கிக் கொண்டு இருப்பதால் அதைச் சமன் செய்ய அவன் திருமகளை மார்பிலே தாங்கிக் கொண்டு

    ஆடை ஆபரணங்கள் பூண்டு, சுகவாசி போல் தோற்றமளித்துக் கொண்டு நம் பாவங்கள், பிணிகள் இவைகளைப் போக்க நெய், தேன், பால், பலகாரங்கள் இன்ன பிற வசதிகளைச் செய்து கொண்டு நம்மைக் காத்துக் கொண்டிருக்கிறான் ஆம் விஷ்ணு அலங்காரப் பிரியன் என்று சொல்வார்கள்

    “சக்தி” அது மஹா விஷ்ணுவாக இருக்கட்டும் ஈசன் சிவனாக இருக்கட்டும்  அனைவருக்கும் சக்தியாய் ஒளிர்பவள் சக்தி அதனால்தான்  சக்தியானவள் அனைவருக்கும் அருள்பாலிக்கும் படியாக  மந்திர ஒலிகளுக்கும், இறைவன் ப்ரசாதமான திருநீறு, வில்வம், துளசி வேப்பிலை, மஞ்சள், இவைகள் அனைத்துக்கும் இறைவனே சக்தி கொடுத்திருக்கிறான் என்று சொல்லக் கூடிய  இறைவனுக்கே சக்தி கொடுப்பவள் அன்னை .

    ஆதலால் தான் அவள் திருநீறு, வில்வம்,துளசி வேப்பிலை, மஞ்சள், குங்குமம் இவைகள் அனைத்துக்கும் சக்தி கொடுப்பவளாக அத்தனையையும் தான் தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு ப்ரசாதமாக அளித்துக் காக்கிறாள்.

    என்னை இந்த உன்னதமான கட்டுரையை எழுதவைத்த சக்தி, அன்னையின் அருள் அவள் திருவடி தொழுது இக்கட்டுரையை அளிக்கிறேன். அன்னை அருள் பாலிக்கட்டும்.

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

    http://thamizthenee.blogspot.com

    Share
  • “உரத்த சிந்தனை”

    தமிழ்த்தேனீ

     

    இறைவனவன் தன்வேலை அதிகமான காரணத்தால்
    உரத்துக் குரல் கொடுத்து ஓங்கியே ஒலிக்கும்
    மனசாட்சி யெனும் ஒரு தானியங்கிக் கருவியை
    உண்மைக்கு சாதகமாய் தன்சார்பாய் தன்மறுபதிப்பாய்

    நம்முள்ளே புதைத்து வைத்தான் உள்ளத்தில்
    பொதிந்து வைத்தான் அறுகிவிட்ட நேர்மைதனை
    மீட்டெடுக்க ஒரு கருவி காலம் தவறாமல்
    நேர்மை தவறாமல் தானாய் இயங்கும் கருவி

    உரத்த சிந்தனையாய் உண்மையின் பெட்டகமாய்
    தானியங்கிக் கருவியதை உயிர்தரும் போதினிலே
    உடலுடனே ஒட்டி வைத்து அனுப்பி வைத்தான்
    நம்முள்ளே ஒளித்து வைத்தான் நாமே அறியாமல்

    ஓராயிரம் சிந்தனை நம்உள்ளத்தில் விளைந்தாலும்
    சுயநலமாய் சிந்தித்தே உண்மைதனை நாம் ஒதுக்கிக்
    உறுத்துகின்ற போதிலெல்லாம் உரத்த சிந்தனையை
    ஒதுக்கி வைத்தே வாழுகின்றோம் வாய்மை மறந்து

    ஒளித்துக் கூறாது உரத்துக் குரல் கொடுக்க
    ஒளித்து வைத்தே நாமும்தான் நாடகமாடுகிறோம்
    உலகினையே உள்வாங்கும் கடல் போல
    உண்மைகளை உள்வாங்கும் திடல் போல

    உண்மைக்குப் புறம்பாய் வேறெதையோ தேடுகின்றோம்
    மனம் மறைக்கும் கபடவேடம் தரித்தே நிற்கின்றோம்
    உரத்த சிந்தனையாய் மாறுகின்ற ஒவ்வொன்றும்
    உயர்த்திப் பிடிக்கும் நம்மை ஓங்கி வளர்க்கும்

    உழைப்பெனும் உரமிட்டு உண்மையெனும் நீரூற்ற
    தழைக்கின்ற வயல்தனிலே ஓங்கிவளர் நெற்பயிர்போல
    கடவுளின் தூதுவனாம் தானியங்கிக் கருவியதாம் உரத்த
    சிந்தனைய மனிதநேய உரமிட்டு மனசாட்சி நீறூற்றி
    வளர்த்திடுவோம் மானுடமும் வளர்ந்திடவே!

     

    Share
  • “நடுத்தெரு நாராயணன்”

    தமிழ்த்தேனீ

    கனகா மிக ஆர்வமாக தன் கணவன் நாராயணனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள், என்னங்க நாளைக்கு காலையிலே 8 மணிக்கு நாம ரெண்டுபேரும் மந்தைவெளிக்கு போய்ட்டு வரணும்,

    என்னோட பெரியம்மா போன் பண்ணாங்க உங்களுக்கு கூட தெரியுமே என்னோட பெரியம்மா பொண்ணு அதாங்க அவங்க வீட்டுக்காரர் கூட பெரிய டாக்டர்  அமெரிக்காவுல இருக்காங்க,

    அவங்க இப்போ இந்தியாவுக்கு வந்திருக்காங்களாம், அவங்களுக்கு ரெண்டு பசங்க, நாளைக்கு அவங்களுக்கு அறுபதாம் கல்யாணம் அதுனாலே நாம ரெண்டுபேரும் போய் வாழ்த்திட்டு வரலாம் என்றாள்,

    நாராயணன் கனகாவிடம் ஆமாம் நமக்கு அறுபதாம் கல்யாணம் நடந்துதே அப்போ அவங்க வந்தாங்களா, என்றார்,

    ஏங்க அவங்க ரெண்டு பேரும் அப்போ அமெரிக்காவுல இருந்தாங்க, எப்பிடி வர முடியும் என்றாள் கனகா,

    சரி உங்க பெரியம்மாவாவது வந்தாங்களா என்றார் நாராயணன்,

    அவங்களும் வரலை, ஆனா நாம் போயிட்டுதான் வரணும், அவங்க எப்பிடி நடந்துகிட்டாலும் நாம விட்டுக்கொடுக்காம நடந்துக்குவோமே என்றாள் கனகா,

    சரி போய்ட்டு வரலாம், உனக்கும் உங்க உறவுக்காரங்களை எல்லாம் பாத்தா மாதிரி இருக்கும்னு ஒப்புக் கொண்டார் நாராயணன்,

    மறுநாள் காலை நாராயணனும் கனகாவும் கிளம்பினர், காரை ஓட்டிக்கொண்டே நாராயணன் ஆமாம் மந்தை வெளியிலே, எங்க நடக்குது அறுபதாம் கல்யாணம் என்றார்,

    இதோ பாருங்க எனக்கு அவங்க வீடு தெரியும் விலாசம் தெரியாது, ஆனா மந்தைவெளி பஸ் நிலையத்துக்கு போனா அங்கேருந்து அவங்க வீட்டுக்கு வழி தெரியும், நீங்க மந்தை வெளி பஸ்நிலையத்துக்கு காரை ஓட்டுங்க என்றாள் கனகா,

    சென்னை போக்குவரத்தில் நீந்தி மந்தைவெளி பஸ் நிலையத்தை அடைந்தவுடன், அங்கிருந்து நேரா போய் இடதுபக்கம் திரும்புங்க என்றாள், ஒரு ஓட்டுனரின் கவனத்தோடு அவள் சொல்லும் இடது பக்கம், வலது பக்கம் என்றெல்லாம் காதில் வாங்கிக் கொண்டு ஓட்டிக்கொண்டிருந்தார் நாராயணன்,

    அந்தசாலை ஒரு முட்டு சந்தில் சென்று முடிந்தது, மேலே போக வழியில்லாமல் காரை நிறுத்திவிட்டு கனகாவை ஏறிட்டார் நாராயணன்,

    கனகா கொஞ்சம் குழம்பியவளாய்  இங்கேதாங்க அவங்க வீடு,நான் அவங்க வீட்டுக்கு  10 வருஷத்துக்கு முன்னாடி வந்துருக்கேன்,ஆனா ஒரு அடையாளம் இருக்கு அவங்க வீட்டுக்கு முன்னாடி ஒரு குப்பை மேடு பெரியமலை மாதிரி இருக்கும் அப்பிடீன்னா, கோவம் கோவமாக வந்தது நாராயணனுக்கு,

    இது ஒரு அடையாளமா? எப்பவோ அந்தக் குப்பையெல்லாம் அள்ளிகிட்டுப் போயிருப்பாங்க,அவங்க வீட்டுக்கு ஏதாச்சும் பேரு இருக்குமே அதுவாவது நினைவுக்கு வருதா பாரு என்றார் நாராயணன்,

     இல்லைங்க அந்த வீட்டைப் பார்த்தா உடனே கண்டு பிடிச்சுடுவேன் என்றாள் கனகா,பொறுமை இழந்தவராய் காரை விட்டு இறங்கி ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் சென்று,ஏங்க இங்கே ஒரு குப்பைமேடு மலைமாதிரி இருந்துதாமே, அந்த இடம் எங்க இருக்கு என்று பலகீனமான குரலில் கேட்ட நாராயணனை,

    அந்த ஆட்டோஓட்டுனர் மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு, ஏன் சார் பாத்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க, விலாசம் இல்லாம இது மாதிரி ஒரு அடையாளம்சொன்னா எங்கே போயி தேடறது, ஆனா நீங்க அதிர்ஷ்டக்காரங்க அப்பிடியே பின்னாலே போயி மூணாவது லெப்டுலெ திரும்புங்க அங்கே வரும் அந்தக் குப்பை மலை என்றார்,

    அதே போல அவர் சொன்னது போலவே பின்னால் சென்று மூணாவது லெப்டுலெ திரும்பியவுடன் வந்தது குப்பை மலை, 10 வருஷத்துக்கு முன் கனகா பார்த்த அதே குப்பை மலை, திடீர்னு மகிழ்ச்சியோடு கனகா அதோ பாருங்க அந்த வீடுதான் என்றாள்,

    அவளின் அறியாமையை கண்டு சிரிப்பதா, ஆட்டோக்காரர் சொன்னது போல தாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா, அல்லது 10 வருடமாக ஒரேஇடத்தில் குப்பை மலையை வைத்திருக்கும் அரசாங்கத்தை கண்டிக்காத மக்களின் அறியாமையை எண்ணி கோவப்படுவதா, என்று புரியாமல் திகைத்து நின்றார் நாராயணன்,

    நாதஸ்வரம் ஒலிக்க அந்த கல்யாண வீடு கலகலப்பாய் இருந்தது, வந்திருந்த உறவினர்கள் அனைவருமே சென்னை வாசிகள், எல்லோருமே அந்தக் குப்பை மலையை அடையாளம் வைத்துதான் வந்திருக்கின்றனரோ என்று யோசித்தார் நாராயணன், நாமெல்லாருமே எத்தனை வருடங்கள் ஆனாலும் நடுத்தெரு நாராயணர்கள் தானா?

    எங்கே போய்க்கொண்டிருக்கிறோம், எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம், என்று எண்ணியபடியே, மணமக்களை வாழ்த்திவிட்டு உணவின் சுவையையும், குப்பை மலையின் நாற்றத்தையும் ஒருசேர அனுபவித்துவிட்டு ஒரு பீடாவையும் வாயில் போட்டுக்கொண்டு அவர்கள் அளித்த தேங்காய்ப் பையையும் வாங்கிக்கொண்டு அவர்களிடம் விடைபெற்று வெளியே வந்து மறுபடியும் காரில் ஏறி உட்கார்ந்து நாட்டைக் கொஞ்சமும் கவனிக்காத அரசாங்கத்தை ஒரு முறை எண்ணி வருந்தி விட்டு,

    அந்தக் குப்பை மலையை பார்த்து ஒரு பெருமூச்சுவிட்டு, நாற்றம் தாங்காமல் காரை வேகமாக ஓட்ட ஆரம்பித்தார் நாராயணன்.

    Share
  • வாரணாசிக் ‘கரப்பான் பூச்சி’

    தமிழ்த்தேனீ

      காசி  என்பது இந்துக்களின்   புனித ஸ்தலம், இப்படிப்பட்ட காசியின் புனித  வரலாற்றை எனக்கு நினைவூட்டியது ஒரு சாதாரண  கரப்பான் பூச்சி  என்பதே  மிகவும் விசேஷமான  செய்தி, இந்த கரப்பான் பூச்சியை  சாதாரண  கரப்பான் பூச்சி  என்று நான் சொன்னதே தவறு,

    காலம் காலமாக, எல்லாவித இயற்கை உற்பாதங்களையும்  கடந்து, எவராலும் அழிக்க முடியாத  அளவுக்கு எதிர்த்து  நின்று இன்று வரை  தன் இனத்தை  வெற்றிகரமாக  பெருக்கிக் கொண்டிருக்கும் சிரஞ்சீவி  இந்த கரப்பான் பூச்சிகள்,

    மிக உத்தமமான  கரப்பான் பூச்சிகள், என்பதை  நான் பிரயாணம் செய்த  பெங்களூர் எக்ஸ்பிரஸ் வண்டியில் என்னுடைய  பயணச் சீட்டை  சரிபார்க்க வந்த  அதிகாரி சொல்லும்போதுதான்  எனக்கே இந்த ஞானோதயம் உண்டானது என்றால்  அது மிகையல்ல

    இரவு  மணி 11.30   பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர்சாதன இருக்கையின் கீழே பெட்டிகளை வைத்துவிட்டு அப்பாடா  இரண்டு நாட்களாக தூக்கமில்லை, காலையில்  பெங்களூர் சென்று சேரும்வரை இன்றாவது  நிம்மதியாக  தூங்க வேண்டும் என்ற   எண்ணத்துடன்  விளக்கை   அணைத்துவிட்டு  படுக்கையில்  படுத்தேன் , காதில் ஏதோ குறு குறுவென்றது  எழுந்து விளக்கை எரியவிட்டுப் பார்த்தால் ஒரு சிறிய கரப்பான் பூச்சி,

     ஆஹா  நம் காதில் இந்தக் கரப்பான் பூச்சி  உள்ளே சென்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்  என்ற எண்ணமே  என்னை திடுக்கிட வைத்தது, பார்த்துக்கொண்டிருக்கும் போதே படுக்கையில் நிறைய கரப்பான் பூச்சிகள்  மேயத்தொடங்கின, சற்று நேரத்தில் அந்த அறை முழுவதுமே  கரப்பான் பூச்சிகள், அந்த  அறையில் இருந்த அனைவரும் எதைப்பற்றியும் கவலைப்படாமல்  தூங்கிக்கொண்டிருந்தனர்,

    என்னால் தூங்க   முடியவில்லை.  பயணச்சீட்டை  பரிசோதனை செய்யும் அதிகாரியை  அழைத்து என்ன இது, இப்படி  கரப்பான் பூச்சிகள் இருந்தால் எப்படி  தூங்குவது  என்றேன் நான், அதற்கு அந்த அதிகாரி சார் இந்த கரப்பான் பூச்சிகளை  சாதாரணமாக நினைக்காதீர்கள், இவை அத்தனையும்  வாரணாசி என்னும் புனித ஷேத்திரத்திலிருந்து  வந்தவை  என்றார் நமட்டுச் சிரிப்புடன்.

    உடனே  நான் அப்படியா  ! அப்படியானால்  இவைகளைக் கையெடுத்து  கும்பிடத்தான்  வேண்டும் என்று கூறிவிட்டு  கைகளை  மேலே உயர்த்தி  வாரணாசி கரப்பான் பூச்சிகளுக்கு  ஒரு கோவிந்தா  போட்டேன்.

    அந்த அதிகாரி  உடனே  சிரித்தார்!  சரி எப்படியும் தூங்கப் போவதில்லை  இவரிடமாவது  பேசிக்கொண்டிருப்போம்  என்று அவர் வேலைகளை  முடித்துவிட்டு  வரும் வரையில் காத்திருந்தேன்,   அவரும் வந்து  நட்பு முகத்துடன்  என் பக்கத்தில் அமர்ந்தார், என்ன சார் செய்ய முடியும் நீங்க  என்கிட்ட சொல்றீங்க, நான்  மேலிடத்தில் சொல்ல முடியும் அவ்வளவுதான் என்றார். ஆனால் மேலிடத்திலும்   அவர்கள் மிக  அக்கறையுடன் பொறுப்பாகத்தான்   செயல்படுகிறார்கள், குறிப்பாக  இந்த பெட்டி வாரணாசியிலிருந்து  வந்த  தொடர் வண்டியிலிருந்து  பிரித்து    பெங்களூர் செல்லும்  இந்த  வண்டியுடன்  இணைத்திருக்கிறார்கள்

     நீங்களே  யோசித்துப்பாருங்கள்  வாரணாசியிலிருந்து  வரும் தொடர் வண்டியில் பிரயாணம் செய்வோர்  அனைவருமே  தொடர்வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போதே  உணவுப் பொருட்களை  உண்கிறார்கள்,அது தவறில்லை ,ஆனால்  மீதமாகும் உணவுப் பொருட்களை அதற்குண்டான குப்பைத்தொட்டியில் போட்டால் நல்லது,அப்படியில்லாமல்  கண்ட கண்ட இடங்களில்  போடுகிறார்கள். அந்த உணவுப் பொருட்களை  மோப்பம் பிடித்து  கரப்பான் பூச்சிகள்  வருகின்றன, அரசாங்கத்தையே  குறை கூறிக்கொண்டிருப்பதை  விடுத்து  நாமும் நம்முடைய பொறுப்பை உணர்ந்து  நடந்துகொண்டால்  ஓரளவு  சுத்தத்தையும் ,சுகாதாரத்தையும், அதன் மூலமாக  ஆரோக்கியத்தையும் நாம் பெற முடியும், என்றார்,

    ஆமாம்  தொடர் வண்டியில் இணைக்கப்படும் பெட்டிகளை  சுத்தப்படுத்துகிறீர்களே பிறகும் எப்படி இந்தக் கரப்பான் பூச்சிகள் வருகின்றன  என்றேன்

    சார்  இந்தப் பெட்டிகளை  எல்லா ஜன்னல்கள், கதவுகள்  அனைத்தையும் மூடிவிட்டு  ஒரு குறிப்பிட்ட சிறிய மாத்திரையை  வைப்பார்கள், அந்த மாத்திரை  சற்று நேரத்தில்  காற்றில் கரைந்து  ஒருவிதமான  ரசாயன  மாற்றம் ஏற்படுத்தி அந்தப் பெட்டியில் உள்ள  அனைத்து  கரப்பான் பூச்சிகளையும் கொன்றுவிடும்,

    அதன் பிறகு குறிப்பிட்ட நேரம்  கழித்து  இந்தப் பெட்டியை  சுத்தம் செய்வார்கள், அதன் பிறகே  இந்தப் பெட்டிகளை  இணைக்கிறோம், என்றார்

    சரி  இவ்வளவு  செய்தும்  கரப்பான் பூச்சிகள்  இருக்கிறதே எப்படி என்றேன் நான், அதற்கு அவர்  அதுதான்  விசேஷம், நாம் செய்த  புண்ணியம்,  பெட்டிகளை  ஜன்னல், கதவுகள்  எல்லாம் மூடலாம்,ஆனால் இந்த இணைப்புப் பெட்டிகள் மொத்தமாக இருக்கும்   மிகப்பெரிய இடமான கேரேஜில் இந்த  மாத்திரைகளை  வைத்து  மூடிவைக்க முடியாது. அங்கே  உணவுப் பொருட்கள் இருக்கும் இணைப்புப் பெட்டிகளை நோக்கி  இந்த கரப்பான் பூச்சிகள்  படையெடுத்து  ஆக்ரமிப்பதை  தடுக்க முடியாது.  இந்தப் பெட்டி  வாரணாசியிலிருந்து வந்தவுடன்  அதிலிருந்து  பிரித்து  சுத்தம் செய்ய நேரமில்லாமல்  உடனே  இந்த  ரயிலுடன் இணைக்கப்பட்டதால்  நம்மால்  வாரணாசி கரப்பான் பூச்சிகளை தரிசனம்  செய்ய முடிந்தது.

    அது நம் கொடுப்பினை என்றார், வெகு வேகமாக விரைந்து கொண்டிருந்த வண்டி .  அப்போது காமசமுத்ரா  என்னும்  ஸ்டேஷனைக் கடந்து சென்றது, இந்தக் காமசமுத்ரத்தில் நாம் என்ன செய்தாலும் சில விளைவுகளிலிருந்து தப்பிக்க  முடியாது  என்பது புரிந்தது. பயணச்சீட்டு  பரிசோதகர் நான் மீண்டும் ஒரு முறை உள்ளே  சென்று என்னிடம் புகார் கொடுப்பவர்களை  சந்தித்து  வருகிறேன், நீங்கள்  இந்த வாரணாசிக் கரப்பான் பூச்சிகளின் மகத்துவத்தை  உணர்ந்து யோசித்துப்பாருங்கள்  என்று கூறிவிட்டுப் போனார்.

    நானும் வாரணாசியைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்,  வருணா,  அசி  என்னும் இரு நதிகள் சங்கமிக்கும்  இடமாக இந்தப் பகுதி  அமைந்திருப்பதால் , இந்த இரு நதிகளின் சங்கமத்தால்  வாரணாசி  என்னும் பெயர் பெற்றது இந்த  இடம், புகழ் பெற்ற  காசி விஸ்வநாதர். ஆலயத்தில் சைவர்கள்  வழிபடும்  பன்னிரண்டு லிங்கங்களுள் ஒரு முக்கியமான  லிங்கமான  ஜோதிலிங்கம் இருக்கும் இந்த  ஷேத்திரம்  உத்திரப் பிரதேச மாநிலத்தில் கங்கைக் கரையில்  அமைந்துள்ளது,

    ஒவ்வொரு இந்துவும்   வாழ்க்கையில்  ஒரு முறையாவது  காசிக்கு சென்று ,அங்கே  உள்ள  கங்கையில் நீராடி புனித ஸ்தலங்களை தரிசித்து வந்தால்  முக்தி கிடைக்கும்   என்று நம்புகிறார்கள், அப்படிப்பட்ட  ஷேத்திரமான  காசிக்கு செல்லும்போது  தாங்கள் மிகவும் விரும்பும் ஏதேனும் ஒன்றை  இனி வாழ்நாளில்  உபயோகப்படுத்த மாட்டேன்  என்னும் உறுதி எடுத்துக்கொள்வது  வழக்கம்,.

    சூரிய  வம்சத்தில்  தோன்றிய  சகரன்  என்னும் மன்னன் அஸ்வமேத  யாகம் செய்தான். இதைக் கண்ட  இந்திரன் தன்னுடைய  இந்திர பதவி பறிபோய்விடுமோ என்று பயந்துஅச்வமேத யாகத்துக்கு என்று தேர்வு செய்து வைத்திருந்த  குதிரையை திருடிக்கொண்டு போய், இமாலயத்தில் தவம் இயற்றிக்கொண்டிருந்த கபிலர் என்னும் மஹாமுனியின் ஆஸ்ரமத்தில்   கட்டிவைத்தான்,

    இதை அறியாத   மன்னன் சகரனின்  புதல்வர்கள் அஸ்வமேத யாகத்திற்கு வைத்திருந்த  குதிரையைத் தேடிக்கொண்டு  வரும்போது அந்தக் குதிரையை கபிலரின் ஆஸ்ரமத்தில் கண்டு  அவர்தான்  அந்தக் குதிரையை திருடிக்கொண்டுவந்து  கட்டி வைத்திருக்கிறார்  என்று தவறாக  எண்ணி அவரை துன்புறுத்தினர்,

    ஒரு தவறும் செய்யாத  கபிலர்  கோபமடைந்து   மன்னன் சகரனின் பிள்ளைகளையும், அவர்களுடன் வந்த  அனைவரையும்  தன் தவ வலிமையால்  எரித்து சாம்பலாக்கினார். இதை  அறிந்த  சகரன் மிகவும் விரக்தி அடைந்து அவனுடைய பேரன் அம்சுமானுக்கு முடிசூட்டிவிட்டு கானகம் அடைந்து தவம் செய்து  சொர்கம் புகுந்தான்.

    கபில முனிவரின்  கோபத்துக்கு ஆளான இளவரசர்கள் யாருக்குமே முக்தி கிடைக்கவில்லை, அம்சுமான் மன்னனின் அரண்மனைக்கு வந்த தவஸ்ரேஷ்டர்கள் கபிலரின் தவ வலிமையால் எரிந்து போனவர்களின் சாம்பலின் மீது தேவலோகத்தில் பிரவகிக்கும் கங்கையின் நீரைத் தெளித்தால்  அவர்கள் முக்தி அடைவார்கள்  என்று கூறியதால் கங்கையை பூமிக்கு  கொண்டுவர  அனைத்து முயற்சிகளும் செய்தான்.

    ஆனால் அவனால் இயலாமல் போனது. அம்சுமானின்  குமாரன் அசமஞ்சன் தானும் பெரு முயற்சி செய்தான் அவனாலும் முடியவில்லை,  அசமஞ்சனின்  குமாரன் பகீரதன்  அந்த முயற்சியைத் தொடர்ந்தான்.

    பகீரதன்  கங்கையை  பூமிக்குக் கொண்டு வரும் நோக்கில்கடுந்தவம் செய்தான். இதைத்தான்  பகீரதப் ப்ரயத்தனம் என்பர்,  அவனது தவத்தை ஏற்று கங்கா தேவியும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். சிவபெருமான் தனது திருமுடியில் கங்கையை விழச்செய்து பூமியில் நதியாக ஓடச் செய்தார். இவ்வாறு ஓடிய கங்கை நதியில் பகீரதனின் முன்னோர்களின் அஸ்திகள் கரைக்கப்பட்டன, இதனால் அவர்கள் முத்தி பெற்றனர். அன்றிலிருந்து கங்கையில் அஸ்தியைக் கரைத்து முன்னோர்களின் ஆன்மாக்களை முத்தியடையச் செய்து வருகின்றனர். இதுவே காசியின் சிறப்பு ஆகும்.

    காசிக்கு போவது என்பது  அந்தக் காலத்தில் மிகவும் கடினமான  ஒரு செயல், பிரயாணம் மட்டுமல்ல, காசிக்குப் போவதற்கு கொடுப்பினை இருந்தால்தான் போய்வரமுடியும் என்பது  இந்துக்களின் அசைக்கமுடியாத  ஒரு ஆன்மீக நம்பிக்கை.

    ஒன்று மிக நன்றாகப் புரிந்தது! கொடுப்பினை இருந்தால்தான் வாரணாசிக் கரப்பான் பூச்சிகளின் தரிசனமும் கிடைக்கும், ஆமாம் என்னைத்தவிர அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் மேல்  வாரணாசிக் கரப்பான் பூச்சிகள்  வர்ண பேதமில்லமல், ஜாதி வித்யாசம் பார்க்காமல், ஆண் பெண்  பேதமில்லாமல், கீழ் ஜாதி, மேல்ஜாதி பேதமில்லாமல், வர்ணாஸ்ரம தர்மங்களைப் பற்றியெல்லாம்  யோசிக்காமல்  ஊர்ந்து கொண்டிருக்கின்றன,

    நான் வாரணாசிக் கரப்பான்பூச்சிகளையும், அவைகள்  ஊர்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் அனைவரையுமே  ஒரு வித பயத்துடன், பக்தியுடன் பார்த்துக்கொண்டே  இருந்தேன்,

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

    rkc1947@gmail.comhttp://thamizthenee.blogspot.com ,http://peopleofindia.net

     

    Share
  • ” திருக்குறளே தேசிய நூல் “

    தமிழ்த்தேனீ

     

    ” திருக்குறளே தேசிய நூல் ”

     

    1331

     

     

     

     

     

     

     

    இருவரியில் இணைத்தார்  இதயங்களைப் பிணைத்தார்

    ஒருவழியில் சொன்னால்  உலகத்தையே வளைத்தார்

    இருவரியில் முப்பாலும்  அப்பாலுக்கும் அப்பாலும்

    எப்பாலை உண்டாலும்  அப்பாலும்  மறுபடியும்

    தமிழ்ப்பாலாய் உரு மாறும் தாய்ப்பாலாய்த் தரமேரும்

    தமிழுக்கே உரித்தான தரமான அமிழ்தம் தருகின்ற இருவரிகள்

     

    ஓரடியார் ஈரடியார் மூவடியார் நாலடியார் யாரடியால் அளந்தாலும்

    தமிழ் வாமனனாய் குறுகி நின்று ஈரடியால் அளந்திட்ட வள்ளுவனின்

    சீரடியால் பொன்னடியால் இவ்வுலகம்  அளந்த ஈரடியாம் திருக்குறளே

    அமிழ்தாய் தொடக்கமாய் நடுவாய் முடிவாய்  மறுபடியும்

    தொடக்கமாய் தொடர்ந்தே வாழுகின்ற வள்ளுவனின்  ஈரடிகள்  ஈரம் இருக்கின்ற

    இதயங்களை வீரம் விளைகின்ற உதயங்களை மானம் காக்கின்ற

    தமிழர்களை  தலை நிமிர்ந்தே நிற்க வைத்த ஈரடிகள்  காலம்  கடந்து

    நின்று ஜாதிமத பேதமின்றி தேசங்களைத் தாண்டி தேகங்களைத்

    தீண்டி  தன்னைத் தானுணரும்  மனப்ரயாணம் மகிழ்ச்சியாய் மனிதர்

    செய்ய,  ஈரடியால் அமைந்த பாதை மனமயக்கம்  தீர்க்கும் பாதை

    இரு கரையும்  ஈரடியாம் நடுவினிலே  நாம் நடக்க  அமைத்து

    வைத்த நல்ல பாதை சாகாவரம் பெற்று நிற்கின்ற கோலத்தில் தானே

    இருந்தாலும் திருக்குறளை காலமெல்லாம் நிற்க வைத்த

    வள்ளுவனின் ஈரடியில்  மனித நீதி புகழ்மணந்து

    ஆறாய்ப் பெருக்கெடுக்க  வயல் வெளியின்

    இருமருங்கில் நியாயங்கள் பசுமையாய் ஓங்கி வளர பொது

    மறையாய்ப்  புகழ் பெற்ற இதுவன்றோ  தேசிய நூல்

    அத்துணை மாந்தருமே ஆகாவென்றே வாழ்த்துகின்ற

    திருவடியாம்  திருக்குறளே  தேசிய நூல்

    Share
  • “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து”

    தமிழ்த்தேனீ 

     

    toysசமீபத்தில் ஒரு நண்பர் வீட்டுக்கு சென்றிருந்தேன். ஒரு அலமாரி திறந்து அதிலிருந்து குழந்தைகள் விளையாடும் நவீன விளையாட்டு பொம்மைகள் கீழே சிதறின. பார்த்து மலைத்துப் போனேன். ஆமாம் ஒரு கடையில் இருப்பதைப் போல் விதம் விதமாக அவ்வளவு பொம்மைகள்.

    ஆனால் யாருக்காக அவை வாங்கப் பட்டனவோ அந்தக் குழந்தை அழுது அடம் பிடித்துத்கொண்டு கீழே விழுந்து முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது. ஆமாம்  அந்தக் குழந்தை இவ்வளவு விளையாட்டு பொம்மைகள் இருந்தும்  திருப்தி இல்லாமல் ஏதோ ஒன்றுக்கு  அடம் பிடித்துக் கொண்டிருக்கிறது.

    ஆகவே விளைவை யோசித்தால் அந்தப் பொம்மைகள் யாரால் வாங்கப்பட்டதோ  யாருக்கு கொடுக்கப்பட்டதோ இருவருக்குமே திருப்தி இல்லை,

    ஏன் இவ்வாறு குழந்தைகள் திருப்தி இல்லாமல் இருக்கிறார்கள் என்று ஆராய்ந்தால், பெற்றவர்கள் குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கிக் கொடுப்பது அவர்களுடைய வேலைகளில் அந்தக் குழந்தை தலையிடாமல் இருந்து, அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்து அவர்கள் விளையாடவேண்டும். என்னும் சுயநலம் அதிகமாக இருக்கிரதே தவிர, ஆசையாய் வாங்கிக் கொடுக்கும் நிலை மாறிவிட்டது.

    எந்தக் காரணத்தைக் கொண்டும் குழந்தைகள் அழுது அடம் பிடிக்கக் கூடாது, சொன்ன பேச்சைக் கேட்க வேண்டும் என்னும் உயரிய கொள்கைக்காக ஏற்பட்ட வாங்கிக் கொடுக்கும் பழக்கம். நாளடைவில்  அந்தக் குழந்தைகளின் பிடிவாதத்தையும்  முரட்டுத் தனத்தையும் வளர்க்கும்  பேராசை எனும் கருவியாக, திருப்தி இன்மை என்னும் கருவியாக மாறிப் போனது  கொடுமை என்றால், இந்தக் கொடுமையை உணராத பெற்றோரின் மனநிலை இன்னமும் கொடுமை.

    எந்தப் பொம்மை வாங்கிக் கொடுத்தாலும்  அந்தப் பொம்மையை விளையாட முழுதுமாகக் கற்றுக் கொள்ளாமல், அதன் அதிக விலையை[ப் பற்றித் தெரியாமல், அதன் அருமையை உணராமல், அடுத்தடுத்து கிடைக்கும் பொம்மைகளால்   கவரப்பட்டு எதிலுமே நிலையில்லாமல் தவித்து அத்துணை பொம்மைகளையும் அலக்‌ஷியப் படுத்தி அடம் பிடிக்கும் குணத்தையும், திருப்தி இல்லாமை என்னும் பிடிவாத  குணத்தையும் மட்டுமே  உள்வாங்கும் குழந்தைகள்  நாளடைவில் வாழ்க்கையில், காதலில், படிப்பில், விளையாட்டில், எதிலுமே திருப்தி இல்லாமல் எப்போதும் எதையோ பறி கொடுத்தாற் போல, காதிலே ஒரு உயர்தர செல்போனை வைத்துக் கொண்டு  சாலையில் வாகனங்கள் வருவதுகூடத் தெரியாமல், ஆபத்துக்களை உணராமல் விரக்தியாக நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

    எண்ணிப் பார்க்கிறேன்,  எங்கள் குழந்தைப் பருவங்களை, அதிகமாகத் தெரிந்து கொள்ளாமல், அதாவது  அந்தப் பருவத்துக்கு எது வேண்டுமோ அதை மட்டும் தெரிந்து கொண்டு, மனதிலே கள்ளமில்லாமல் ஆடி, ஓடித் திரிந்த  குழந்தைகளாக, ஏதேனும் ஒன்று கிடைத்தாலும் அதிலே திருப்தி கொண்டு அதை மகிழ்ச்சியாக அனுபவிக்கத் தெரிந்த குழந்தையாக இருந்து, எப்போதும் மனதிலே உற்சாகமாக, குதூகலமாக வளையவந்த அந்தக் காலங்களில்  பெற்றோர்களும்  குழந்தைகளும் எல்லோருமே  அதிக ஆசைப்படாமல், போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்னும்  பொன்னான வாசகத்தை மனதிலே வாங்கிக் கொண்டு  மகிழ்ச்சியாக வாழ்ந்தோம் என்பது புரிகிறது.

    குழந்தைகள் பல விளையாட்டுப் கேட்டாலும்  அந்தப் பல பொருட்களில்  எது அந்தக் குழந்தைக்கு வேண்டும்  என்று பெற்றவர்களும் புரிந்துகொண்டு, அதைக் குழந்தைகளுக்கும் புரியவைத்து  தேவையானதை மட்டும் வாங்கிக் கொடுத்து  வாங்கிக் கொடுத்த அந்தப் பொருளின்  உபயோகத்தையும்,, குழந்தைகளுக்கு உணர்த்து  அந்தக் குழந்தைகளின்  திருப்தி என்னும் உயரிய குணத்தை  வளர்த்து   வாழ்க்கையில் அவர்களை சிறப்பாக யோசிக்க வைத்து , உணர்ச்சி பூர்வமான முடிவுகளை எடுக்காமல் ஆராய்ந்து   முடிவெடுக்கும்  நல்ல பொறுப்பான குழந்தைகளாக வளர்த்த அந்தக் காலத்துப் பெற்றோரும், அதைப் புரிந்து கொண்டு நற்குணங்களை வளர்த்துக் கொண்ட அந்தக் காலத்துக் குழந்தைகள், இந்தக் காலத்துப் பெரியவர்களை மனதார வாழ்த்தத் தோன்றுகிறது.

    தீர்க்கமாக சிந்தித்தும் திடமான முடிவுகள் எடுக்காமல் எப்போதும் அலைபாயும் மனதோடு வாழும் இந்தக் காலத்துக் குழந்தைகளையும், அவர்களின் பெற்றோரையும், அவர்களின் வளர்ப்பு முறைகளையும் பற்றிக் கவலை வருகிறது. இந்தத் தலைமுறையினரைக் காணும் போது மனம் பதைக்கிறது.

    உடனடியாக யோசித்து உண்மைகளை உணர்ந்து மாற்றிக் கொள்ள வேண்டும்.  இந்தக் காலத்துப் பெற்றோர்களும் குழந்தைகளும் கவனித்து  தொடர்ந்து கடைப்பிடிக்க  வேண்டிய முது மொழி    “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து “  இல்லையென்றால் வாழ்க்கை இப்படித்தான் சிதறிப் போகும்.

    Share
  • பெண்மை

     

    -தமிழ்த்தேனீ

     

    ஏங்க ஒரு உதவி  என்றாள் காயத்ரி  சொல்லு என்றார் ஸ்வாமிநாதன். ஒண்ணும் இல்லே  இந்த உள்ளே  ஒரு வேலையா இருக்கேன் திடீர்ன்னு மழை வரா மாதிரி இருக்கு என்றாள் காயத்ரி

    பாத்துப் பாத்து கட்டின வீடு  மழையே வந்தாலும் அந்த உள்ளே  ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராது என்று கூறிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டார்  ஸ்வாமிநாதன்  ஏதோ விரதத்தை  மீறினாற்ப் போல்.

    அய்யே  போறும் வழியாதீங்க  கொல்லைப் புறம்  துணி காயப் போட்டிருக்கேன்   நனைஞ்சிடப் போகுது . அதையெல்லாம்  எடுத்துகிட்டு வாங்கன்னு சொல்ல வந்தேன்  என்றாள் காயத்ரி.

    சரி என்று சொல்லிவிட்டு  கொல்லைப்புறம் விரைந்தார் ஸ்வாமிநாதன்.  .

    அதிர்ந்தே பேசாமல்   இனிமையாகவே செஞ்சாலும் செய்வார், அப்பிடியே இஷ்டம் இல்லேன்னா    இனிமையாவே செய்யாம விட்டுடுவார் .கொஞ்சம் வழிஞ்சாலும்  நல்ல புருஷன்தான்  .

    அது சரி ஏன் இவரு  ரெண்டு நாளா இப்பிடி  கேட்ட கேள்விக்கு ஹும் ,இல்லே ,ஆமா  ன்னு  சுருக்கமா  பதில் சொல்றாரு  . ஏதோ  ரெண்டு வார்த்தை அவரை மறந்து பேசிட்டு  நாக்கை வேற கடிச்சிக்கறாரு , என்ன ஆச்சு இவருக்கு  திடீர்ன்னு காயத்ரிக்கு  சந்தேகம் .  சரி துணிகளை எடுத்திட்டு வரட்டும் கேப்போம் என்று  வேலையைத் தொடர்ந்தாள் காயத்ரி

    காயப் போட்ட துணிகளை எடுத்துக்கொண்டு  உள்ளே நுழைந்து மௌனமாக  ஒவ்வொரு துணியாக மடிக்கத்  தொடங்கினார் ஸ்வாமிநாதன்

    நான் மடிச்சு வெச்சிக்கறேன் .  ஆமா நீங்க பாட்டுக்கு  கலகலன்னு இருப்பீங்களே  என்ன ஆச்சு ஏன் ரெண்டு நாளா ஒரு மாதிரி இருக்கீங்க. ஏதாவது கேட்டா ஒத்தை வார்த்தையிலே  பதில் சொல்றீங்க.

    ஹும்ம்  ஒண்ணுமில்லே என்றார் ஸ்வாமிநாதன்

     

    இந்தாங்க காப்பி சாப்பிடுங்க என்று அவள் நீட்டிய காப்பியை வாங்கி ஒரு வாய் குடித்துவிட்டு  அப்படியே மேசை மேல் காப்பியை வைத்துவிட்டு   சோபாவில் உட்கார்ந்தார்  ஸ்வாமிநாதன் .. ஏன் காப்பி நல்லா இல்லையா வெச்சிட்டீங்க என்றாள் காயத்ரி

    எல்லாம் நல்லாத்தான் இருக்கு   என்று கூறிவிட்டு  தொலைக் காட்சியைப் பார்க்கத் தொடங்கினார்  ஸ்வாமிநாதன்

    ரெண்டு நாளா நான் கோவமா இருக்கேன் . ஒண்ணுமே தெரியாத மாதிரி எப்பிடி இவ்ளோ இயல்பா  இருக்கா இவ.  எனக்கு ரெண்டு நாளாக் கோவம்ன்னு இவளுக்கு  தெரியவே தெரியாதா ,  போச்சு ! எனக்கு கோவம்னே இவளுக்கு  தெரியலேன்னா  நான் கோவிச்சிகிட்டு  என்னா ப்ரயோசனம், இப்பிடி ஒரு நிலமை ஒரு ஆம்பிளைக்கு வரக் கூடாது என்று நினைத்துக்கொண்டார்  ஸ்வாமிநாதன்.

    சரி நீங்க டீவீ பாருங்க நான் போயி இருக்கற வேலையைக் கவனிக்கறேன் என்று எழுந்தாள் காயத்ரி.  இவளுக்கு எப்படியாவது  தான் கோபமாய் இருப்பதை உணர்த்த வேண்டும் என்று முகத்தை உர்ரென்று வைத்துக் கொள்வதாய் நினைத்துக்கொண்டு  சாதாரணமாய் வைத்துக்கொண்டார்.

    இதோ பாருங்க எனக்கு உங்களைப் பத்தி  நல்லாத் தெரியும் .உங்களுக்கு கோவப்படத் தெரியாது ஏன் அனாவசியமா முகத்தை கோவமா வெச்சிக்கணும்னு ட்ரை பண்ட்ரீங்க , என்றாள்   காயத்ரி

    சிரித்துக் கொண்டே என் மேலே கோவம்னா சொல்ல வேண்டியதுதானே   என்றாள் காயத்ரி.

    ஓ வாய்விட்டு சொன்னாத்தான் புரியுமா எனக்கு கோவம்னு , ரொம்பக் கஷ்டம் . என்னை கவனிச்சு பாத்திருந்தாலே  தெரிஞ்சிருக்குமே, அது சரி நீ எங்கே என்னைக் கவனிக்கறே   என்றார்  ஸ்வாமிநாதன் சுய இரக்கமாய் .

    சரி விடுங்க ரெண்டு நாளா  நிறைய வேலை, நான் ஏதோ நினைப்புலே உங்களை கவனிக்கலே  . உங்களுக்கு என் மேலே கோவமே வராதுன்னு நான் நெனைச்சிட்டு இருந்தேனே. உங்களுக்கு என் மேலே கோபம் கூட வருமா  . அடடா எங்க வீட்டுலே உங்களைப் பத்தி நல்லா விசாரிச்சுதானே  என்னை உங்களுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சாங்க ஒங்களுக்கு கோவமே வராதுன்னு சொன்னாங்களே  என்றாள் நமட்டுச் சிரிப்புடன் காயத்ரி .

    ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியைக் கொண்டு வந்து அவர் முகத்தருகே பிடித்துக்கொண்டு  இதோ இந்தக் கண்ணாடியிலே உங்க முகத்தை  பாருங்க,இப்போ சொல்லுங்க நீங்க கோவமா இருக்கீங்களா என்றாள் .

    அவருக்கே அவர் முகத்தைப் பார்க்க பாவமாய் இருந்தது. ஒரு சதவிகிதம் கூட அந்த முகத்திலே கோவமே தெரியலே. அட ஆமா என் முகத்திலே கோவமே தெரியலையே, நான் ரொம்பக் கோவமா முகத்தை வெச்சிண்டு இருக்கேன்னு  நெனைச்சிண்டு இருந்தேன். என்றார் ஸ்வாமிநாதன்.

    இப்போ சொல்லுங்க உங்களுக்கு என் மேலே, அதுவும் என் மேலே என்ன கோவம் என்றாள் காயத்ரி.  ஸ்வாமிநாதன் சொன்ன பதிலைக் கேட்டு  சிரிப்பாய் வந்தது காயத்ரிக்கு

    அதானே ப்ரச்சனை ! நான் எதுக்கு கோவிச்சிகிட்டேன்னு யோசிச்சு பாக்கறேன் . ஆனா ரெண்டு நாளா யோசிக்கறேன். எதுக்கு கோவம் வந்துதுன்னே  மறந்து போச்சே என்றார்  ஸ்வாமிநாதன். சிரித்தாள்  காயத்ரி

    இப்போ எதுக்கு சிரிக்கறே ! இந்தச் சிரிப்புலே மயங்கித்தானே கல்யாணமே பண்ணிகிட்டேன். உனக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கு நான் பயந்த சுபாவம் உள்ளவன் ஏமாளின்னு அதான் என்னை ஏமாத்தறே என்றார்  ஒரு விதப் பெருமையுடன்

    நீங்களா பயந்தவர் , நீங்களா ஏமாளி .  அடேங்கப்பா  என் கிட்டேயே இப்பிடி சொல்றீங்களே அப்பிடியே  கொஞ்சம் நேத்திக்கு  அந்த பஸ்லே நடந்ததை நெனைச்சுப் பாருங்க,  அப்பா என்னா வீரம்  என்னா வீரம்  நானே பயந்து போயிட்டேன், எல்லாருமே பயந்து போயிட்டாங்களே

    அதுவா அது ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்திலே என்னை அறியாம வந்துது. பின்ன  கல்யாணம் செஞ்சிண்டு முதன் முதலா ஆசையா உனக்குன்னு நான் ஒரு புடவை எடுத்துக் குடுத்தேன் , அதை ஒருத்தன் பஸ்லே எடுத்தான். அவ்ளோதான் எனக்கு எங்கேருந்து அவ்ளோ வீரம் வந்துதுன்னே தெரியலே. அவனைப் போட்டு சாத்து சாத்துனு நல்லா சாத்திட்டேன். ஆனா ஒண்ணு இப்போ நெனைச்சா கூட பயமா இருக்கு . அவன் என்னை ஒரு அடி அடிச்சிருந்தாக் கூட நான் மயங்கி விழுந்திருப்பேன். நல்ல வேளை கையும் களவுமா பிடிபட்டுட்டமேன்னு அவன் பயந்து போயிட்டான் அதுனாலே நான் தப்பிச்சேன் என்றார்.

    இதோ பாருங்க   கோபம் பாபம் சண்டாளம்னு சொல்வாங்க  இந்த உலகத்திலே யாரு நம்மைப் பார்த்து பயப்படறாங்களோ அவங்களுக்கு நம்ம மேலே கோவம் வரும் ,  யாரைப் பாத்து நாம பயப்படறமோ அவங்க மேலே நமக்கு   கோவம் வரும். நீங்க பயப்பட மாட்டீங்க,அதுனாலே  கோப்ப்படவும் மாட்டீங்க , வீரமான ஆம்பிள்ளை நீங்க என்றாள் காயத்ரி.

    ஸ்வாமிநாதனுக்கு அவரை நினைத்தே பெருமையாக இருந்தது

    ஏங்க உங்க கிட்டே சொல்லணும்னு நெனைச்சேன்  ஒரு குட்டிக் காக்காய் நம்ம வீட்டிலே  மரத்திலேருந்து கீழே விழுந்துடுத்து, அதுக்கு சாப்பாடு வைக்கலாம்னு போனா அந்தப் பெரிய காக்காய்  என்னைத் துரத்துது

    அட்டா பாவம் அந்தக் காக்காய் குஞ்சுக்கு பசிக்கும் இந்த மேசை மேலே இருக்கற இட்லியை போட்டுட்டு வரேன் என்றபடி புழக்கடைப் பக்கம் போய் இட்லியைக் காக்காய்க் குஞ்சுக்கு போட்டுவிட்டு  உள்ளே வந்து  காயத்ரி ஒரு அதிசியம் பாரேன்

    நான் இட்லியை போடலாம்னு போனேன். அதே காக்காய் என்னையும்  துரத்த ஆரம்பிச்சுது. நான் அந்தக் காக்காய்கிட்ட  உன் குட்டிக்கு வயிறு பசிக்கும் அதுக்குதான் இட்லி போடப் போறேன். நான் உன் குட்டியை ஒண்ணும்  செய்ய மாட்டேன்  அப்பிடீன்னு பேசினேன்.

    அது அந்தக் காக்காய்க்கு  என்ன புரிஞ்சுதுன்னு தெரியலே அப்புறம் என்னைத் துரத்தவே இல்லே , அமைதியா   மதில் சுவத்துமேலே உக்காந்து பாத்துகிட்டே இருக்கு . அதுக்கு நல்லது செய்யறவங்க யாருன்னும் புரியுது. ஆனாலும் குட்டிக்கு ஏதேனும் ஆபத்து வராம பாதுகாக்கணும்னு  ஜாக்கிரதையாவும் இருக்கு என்றார்.    ஏன் காயத்ரி இந்தக் காக்காய் கூட இவ்ளோ புரிஞ்சுக்கறதே ஆச்சரியமா இல்லே என்றார்.

    வாசலில் யாரோ ஆழைப்பு மணியை அழுத்தினார்கள் . எதிர் வீட்டு ஜானகியம்மா , அடேடே  வாங்க வாங்க   என்றாள் காயத்ரி

    இதோ பாருங்க  காயத்ரிம்மா ஏதோ என் பொண்ணு பஸ் ஸ்டாண்டிலே நின்னு ஒரு பையன்கூட  பேசிகிட்டு இருந்தாளாம் .நீங்க என் பொண்ணைக் கூப்பிட்டு கண்டிச்சீங்களாமே  என்றாள்

    ஆமாங்க ஒங்க பொண்ணு அந்தப் பையன்  நல்ல ப்ரெண்டுன்னு சொல்லுது அனுபவப் பட்டவங்களுக்கு  பாத்தவுடனே தெரியும் இது சாதாரண ப்ரெண்ட்ஷிப்  இல்லேன்னு. அந்தப் பையன்  சரியான பையன் இல்லே. நம்மவீட்டு எதிர்லே இருக்கீங்க ,உங்க பொண்ணு அவனை நம்பி ஏமாந்து போயிடப் போறாளேன்னு  எச்சரிச்சேன் . நானே உங்ககிட்ட வந்து சொல்லணும்னு இருந்தேன் நீங்களே வந்துட்டீங்க  என்றாள் காயத்ரி

    இதோ பாருங்க என் பொண்ணை எப்பிடி வளக்கணும்னு எனக்கு தெரியும். நீங்க அனாவசியமா அவகிட்ட பேசாதீங்க . நாங்க பாத்துக்கறோம் நீங்க உங்க வேலையைப் பாருங்க நான் வரேன் என்றபடி போனாள் ஜானகி

     

    என்ன காயத்ரி  இது உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை. நீ நல்ல எண்ணத்திலே சொல்றேன்னு புரிஞ்சிக்காம பேசறாங்க அந்தம்மா

    அவங்களுக்கும் தெரியும் நான் நல்ல எண்ணத்திலேதான் சொல்றேன்னு. அவங்க பொண்ணு செய்யறதும் தெரியும்  இருந்தாலும் அதை என்கிட்ட ஒத்துக்க அவங்களுக்கு மனமில்லே அதுனாலெ  அவங்க பொண்ணு கெட்டுப் போகமாட்டா  நல்ல  பொண்ணு அப்பிடீன்னு அவங்களை அவங்களே  ஏமாத்திகிட்டு என் கிட்ட நடிக்கறாங்க

    முன்னாலே பள்ளம் இருக்குன்னு சொன்னா  ஒன் வேலையைப் பாத்துகிட்டு போ அப்பிடீன்னு சொல்லிட்டு    பள்ளத்திலே விழுந்துட்டு நீ வாயை வெச்சே நான் பள்ளத்திலே விழுந்துட்டேன்னு  சொல்றவங்கதான் மனுஷங்க

    ஆனா ஒண்ணுங்க அஞ்சறிவு படைச்ச எதுக்கும் நடிக்கத் தெரியாதுங்க , ஆறறிவு  மனுஷங்கதான்  நடிப்பாங்க என்றாள் காயத்ரி    நீ சொல்றது சரிதான்  என்று மீதி இருந்த காப்பியைக் குடிக்க ஆரம்பித்த அவருக்கு   திடீர்ன்னு ஒரு சந்தேகம்

    நமக்கும் நடிக்கத் தெரியலையே   அப்போ நமக்கு  அஞ்சறிவா, ஆறறிவான்னு !  மறுபடியும் அவருக்கு கோபம் வந்தது.

    அவரையே பார்த்துக்கொண்டிருந்த காயத்ரி

    அவர் மனதைப் படித்தாற்போல்  சிரித்தாள்

     

    Share
  • ” ஒரு யோசனை “

    தமிழ்த்தேனீ

     

    ஶ்ரீராமஜெயம்

    யோசிக்காம எடுக்கற எந்த முடிவும் சரிப்பட்டு வராது. யோசித்துக்கொண்டே இருந்தால் நேரம் போய்விடும் விரைவில் ஒரு முடிவுக்கு வந்து விடுங்கள்.  இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை மிகவும் கவனமாகக் கையாண்டு பயனுள்ளதாக யோசனை செய்து  ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்

    யோசித்தேன் ! யோசித்தேன் ! யோசித்துக்கொண்டே இருக்கிறேன். யோசித்தால்தான் எந்த ஒரு செயலையும்  சரியான முறையில் செய்யமுடியும் . வருமுன் காப்பது நல்லது வந்தபின் வருத்தப்படுவது என்பது  அறிவு பூர்வமான செயல் அல்ல . என்று பல சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

    அப்படி இருக்க  யோசிக்காமல் பேசவும் கூடாது எழுதவும் கூடாது என்பது அறிவு பூர்வமாக மனதில் உறைத்ததால் யோசிக்கத் தொடங்கினேன்.   யோசித்தல் என்றால் என்ன என்று மனதில் ஒரு யோசனை உதித்தது? ஆமாம் யோசித்தல் என்றால் என்ன?

    எவ்வளவு வேலைகள் , இடையூறுகள் இருப்பினும் ஏதேனும் ஒரு கருப்பொருளை மனதில் அடி நாதமாக வைத்துக் கொண்டு  தியானம் போல் இடைவிடாது ஒரு அதைப் பற்றியே சிந்தனை செய்து கொண்டிருப்பது யோசனை என்னும் முடிவுக்கு வந்தேன்.

    ஆகவே யோசிக்கத் தொடங்கினேன்!  முதலில் நாம் எதைப் பற்றி எழுத வேண்டும் என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்து அந்த முடிவைச் செயலாக்க யோசிக்க வேண்டும் .  எதைப் பற்றி எழுதலாம் என்று யோசித்தேன். எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கிறது .

     நாம் எதைப் பற்றி எழுதலாம்?   எதைப் பற்றி எழுத வேண்டுமென்றாலும் அதைப் பற்றி யோசிக்க வேண்டும். அதன் பிறகுதானே எழுத வேண்டும் .   ஆம் முதலில் அதைப் பற்ற வேண்டும், அப்படி  முழுமையாக அதைப் பற்றினால்தான், அதைப் பற்றி யோசிக்கவே முடியும். இப்படி இருக்க பற்றுவது என்பதைப் பற்றி  முழுமையாக அறிந்து கொண்டால்தான் பற்றவே முடியும்.

    ஆகவே பற்றுவது பற்றி யோசித்தேன். பற்று என்னும் சொல்லுக்குள் இருக்கும் பற்றைப் பற்றி யோசித்தேன்.  யோசிக்க யோசிக்க பற்று வந்தது , இன்னும் ஆழ்ந்து யோசித்தேன் இன்னும் அதிகமாக ஆழமான பற்று வந்தது.

    பற்றுவது என்பது நம்மை மறந்து நம் சுயத்தை முழுவதுமாக இழந்து நாம் எதைப் பற்றி யோசிக்கிறோமோ   அதை முழுமையாகப் பற்றி  அதன் பிறகு அதைப் பற்றி யோசிப்பது  என்னும் தெளிவு வந்தது.

    இப்போது தெளிவாக யோசித்தேன். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தேன் திடமாக, தீர்மானமாக எதைப் பற்றி யோசிப்போம் என்று அதைப் பற்றினேன் . அதைப் பற்றியே யோசித்தேன் .  அதனால் வந்த  எழுத்து இது.    மீண்டும் ஒரு முறை எழுதியதைப் படித்துப் பார்த்தேன். நான் எதைப் பற்றி இது வரை ஆழ்ந்து யோசித்திருக்கிறேன் என்று புரிந்து கொள்ள மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து படித்தேன்.

    இபோதுதான் புரிந்தது நான் இவ்வளவு நேரமாக இதைப் பற்றித்தான் யோசித்திருக்கிறேன் என்று.   ஆக இன்னும் நான் எதை எழுத வேண்டும் என்று நினைத்தேனோ அதைப் பற்றி இன்னும்  யோசிக்கவே இல்லை  என்று புரிந்தது.

    இப்போது நான் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினேன் எதைப் பற்றி நான் யோசிக்க வேண்டுமென்று. கடைசியில் ஒன்று புரிந்தது,   நாம் எவ்வளவுதான் யோசித்தாலும்  அவற்றையெல்லாம் எழுத முடிவதில்லை.

     நாம்  எழுதத் தொடங்கியவுடன் நம்மை அறியாமல் நம் மனம் எதை பற்றுகிறதோ  அதிலேயே ஆழ்ந்து அதைப் பற்றியே யோசித்து ப்ரபஞ்ச  வெளியில் இணைந்து , ப்ரபஞ்ச வெளியில் அலைந்து  பல செய்திகளைச் சேகரித்து அதன் சேகரங்களின் விளைவாகிய  முழுக் கருவை உள்வாங்கி அதைப் பற்றி எண்ணங்களையே நம் மனதில் விதைத்து  நம்மை எழுதத் தூண்டுகிறது.

    ஆகவே நம் மனம் எதை விதைக்கிறதோ  அதற்கு நாம் கட்டுப் பட்டு,  நம் உணர்வுகள் கட்டுப்பட்டு அதன் விளைவாக மனதிலிருந்து  நேராக நம் கைகளுக்கு அந்த  எண்ணங்கள் அனுப்பப்பட்டு,  தாமாகவே  மனம் சொல்வதை விரல்கள் எழுதுகின்றன.   ஆக நாம் எதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைக்கிறோமோ அதைப் பற்றி  எழுத முடிவதே இல்லை  அதைத் தவிர  மற்ற எல்லாவற்றையும் பற்றி எழுதுகிறோம் என்பதே உண்மை என்று உணர்ந்தேன்.

    இப்போது  நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்  .யோசனை செய்யலாமா வேண்டாமா?   மனம் யோசிப்பதை  எழுதிவிட்டுப் போகலாமா, அல்லது நாமே  இன்னும்  ஆழ்ந்து யோசிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். யோசித்தேன் ! யோசித்தேன் ! யோசித்துக்கொண்டே இருக்கிறேன்

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

     

     

    Share
  • ” தூர தரிசனம் “

    தமிழ்த்தேனீ

     

    தொலைபேசி உரையாடல் : மனைவி பேசிக்கொண்டிருக்கிறார் அவருடைய கணவர் அருகிலிருக்கிறார்

    மனைவி :ஹலோ யாரு? ஓ கமலியா சொல்லுங்க நல்லா இருக்கீங்களா

    எதிர் முனை: ……

    மனைவி :ஐயய்யோ அப்படியா

    எதிர் முனை: ….. மனைவி : ஐயய்யோ அப்புறம் என்னாச்சு!

    எதிர் முனை : …..

    மனைவி :…. அடடா ஏன் இப்பிடி செஞ்சுட்டாங்க அடேடே ….ஐயய்யோ. போச்சு போச்சு .கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க வேண்டாமா?

    எதிர் முனை:..

    மனைவி :சரி ஒண்ணும் கவலைப்படாதீங்க . வேற வழியில்லே விதி, யாரை விட்டுது.

    எதிர்முனை:….

    மனைவி : அய்யோ… எல்லாம் தலையெழுத்து

    எதிர் முனை:….

    மனைவி: (கண்ணில் நீர் வழிய பேசுகிறார்) நான் எதிர்பார்க்கவே இல்லே இப்பிடியாகும்னு

    (இந்தத் தொலைபேசி உரையாடல் கவனத்தை ஈர்க்கவே பதைபதைப்புடன் உட்கார்ந்திருக்கும் கணவர் சைகையினால் கேட்கிறார் என்ன ஆச்சு யாரு போன்லே?)

    மனைவி : சத்தம் போடாதீங்க என்று சைகை காட்டவே அமைதியாக ஆனால் பதட்டமாகவே உட்கார்ந்திருக்கும் கணவர்

    மனைவி : சரி நாம் கவலைப்பட்டு என்ன ஆவப்போகுது . மனசைத் தேத்திக்குங்க. வாழ்க்கையிலே இதெல்லாம் சகஜம்தான்.

    நம்மோட முன்னொர்கள் எத்தனையோ பேரு செத்துப்போயிட்டாங்க அதுக்காக புருஷனோ பொண்டாட்டியோ அவங்களோடயே செத்துப் போயிர்றாங்களா?நீங்கதான் மனசைத் தேத்திக்கணும்

    எதிர் முனை: …..

    மனைவி: சரி அழுது என்னா ஆவபோகுது மேலே நடக்கறதை கவனிங்க என்னதான் ஆறுதல் சொன்னாலும் போனவங்க திரும்பி வரபோறாங்களா? இல்லே ஆறுதல் சொல்லி தீரப்போற துக்கமா இது? மனசைத் தேத்திக்கோங்க.

    எதிர் முனை:………..

    மனைவி: சரி உங்க உடம்பைப் பாத்துக்கோங்க , உணர்ச்சி வசப்படாதீங்க ஏற்கெனவே உங்களுக்கு ப்ரஷர் அதிகம். எனக்கும் இந்தச் சேதியைக் கேள்விப்பட்டதிலேருந்து படபடன்னு வருது. சரிங்க ஜாக்கிரதை நேர்லே சந்திப்போம், ஹும் வரேன், வீட்டுக்காரரையும் கூட்டிகிட்டு வரேன். சரி போனை வெச்சிடறேன். என்று புருஷன் போயிட்டாலும் நாம் இருக்கறவரைக்கும் குழந்தைங்களுக்காகவாவது வாழ்ந்து தானே ஆகணும் ,நீங்க மனசைத் தேத்திக்கங்க பாப்போம் அடுத்து என்ன நடக்குதுன்னு என்று கூறிவிட்டு ரிசீவரை வைத்தாள் மனைவி.

    கணவர்: என்னாதும்மா என்ன ஆச்சு ஏதாவது சீரியஸ்ஸான விஷயமா

    மனைவி: ஒண்ணுமில்லே என்றபடி போகிறாள்

    கணவர்: ஆத்திரத்துடன் நான் ஒருத்தன் இங்கே பயந்துகிட்டே உக்காந்திருக்கேன் நீ பேசிப் பேசியே என் ப்ரஷரை தூண்டிவிட்டுட்டு ஒண்னுமில்லேன்னு போயிகிட்டே இருக்கியே என்னா விஷயம்ன்னு சொல்லு

    காமாஷிஅம்மா அதாங்க நம்மோட உறவுக்காரங்க ,அவங்க புருஷன் ராமநாதன் சர் கூட கம்ப்யூட்டர் கம்பனிலே மேனேஜரா இருக்காரே.

    கணவன்: ஆமா அவருக்கு என்ன என்று பதறியபடி கேட்கிறார்

    மனைவி : “காவேரி” தொலைகாட்சித் தொடர்லே நடிச்சிட்டு இருந்தாரே அவரை சாகடிச்சிட்டாங்க

    புருஷன் : என்னாது ! என்கிறார் பதறியபடி

    ஆமாங்க: அவரு நடிச்சதுக்கு பணம் குடுக்காம ஏமாத்திகிட்டே இருந்திருக்காங்க. அந்தக் கம்பனிக் காரங்க ,இவரு ஒரு நாளு பெரிய சண்டை போட்டிருக்காரு இனிமே பணம் குடுத்தாதான் நடிக்க வருவேன்னு சொல்லிட்டாரு கறாரா.

    புருஷன்: நியாயம்தானே , நிறையப் பேரு பணத்துக்குதானே நடிக்கறாங்க அதக் குடுக்காட்டி கேக்க மாட்டாங்களா ? அவரு நடிச்சதுக்குதானே பணம் கேட்டிருக்காரு . அதுக்கு கொலையே பண்ணிட்டாங்களா?

    மனைவி: பாவங்க இவரு நியாயத்தைக் கேக்கப் போயி சாகடிச்சிட்டாங்க

    புருஷன்: நாட்டிலே வர வர அநியாயம் அதிகமாயிட்டே போவுது .

    மனைவி : இவரு நடிக்கறாரே அந்த அப்பா கேர்க்டருக்கு இவர் பேரையே வெச்சாங்க ராமநாதன்னு.  இவரு பணம் கேட்டு தொந்தரவு செய்யறாருன்னு அந்த கதாபாத்திர மேக்கப்போட இவங்களை போட்டோ எடுத்து அந்த வீட்டுலே இவரு போட்டோவை மாட்டி ஒரு மாலையை போட்டுட்டு ராமநாதன் செத்துப் போயிட்டாருன்னு கதையை மாத்தி எடுக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். அதான் பேசிகிட்டு இருந்தோம் என்றாள் சாவகாசமாக.

     

     

    Share
  • ” உங்களுக்கும் வியர்க்கிறதா “….

    தமிழ்த்தேனீ

     தொலைக்காட்சிப் நிகழ்ச்சியில் நடிக நடிகையர் நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டிருக்கும் தாய்மார்களே, தகப்பன்மார்களே!  தினசரி, வாராந்தரி, மாதாந்திரப் பத்திரிகைகளில் கிளு கிளு சமாச்சாரங்கள் படித்து மனதைக் கிளுகிளுப்பாக வைத்துக் கொண்டிருக்கும் தாய்மார்களே, தகப்பன்மார்களே!

    ஆங்கிலப் படங்கள் பார்த்து அதில் வரும் கொச்சையான காட்சிகளை , ரசித்துக்கொண்டிருக்கும் தாய்மார்களே தகப்பன்மார்களே!  செல்போனில் நண்பர் அனுப்பிய கிளுகிளு தொடுப்பை சொடுக்கி நீலப்படம் பார்த்துக்கொண்டிருக்கும் தாய்மார்களே தகப்பன்மார்களே!

    நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை தோலுரிக்கிறோம் பேர்வழியே என்று கண்டதையெல்லாம் , காணாததையெல்லாம் கிசுகிசுக்களாகப் பரப்பி வரும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையதளங்களில் இனிமை காணும் தாய்மார்களே, தகப்பன்மார்களே!    உங்களுக்கெல்லாம் ஒரு எச்சரிக்கைக் கடிதமாகவே இந்தக் கடிதத்தை வரைகிறேன்.

    உங்களுக்கு பருவ வயதை நெருங்கும் பிள்ளைகள், பெண்கள் இருக்கிறார்களா?  அவர்களை இன்னமும் குழந்தைகள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா.? சற்றே விழிப்புணர்வு பெறுங்கள்!

    பல வருடங்களுக்கு முன் என் தாயார் கூறியது காதில் ஒலிக்கிறது.

    1. பெண்கள் முதல் படியில் கால் வைக்கும் போதே மிகுந்த கவனத்துடன் கவனத்துடன் வைக்க வேண்டும்.

           2. தவறான அணுகு முறையில் கால் வைத்து உருண்டு விட்டால் கடைசீப் படி வரை அவளால் எழவே முடியாது.

           3.  அதே போல் ஆணோ பெண்ணோ அடிப்படை தர்மத்தை மறந்து  வேறுபாதையில் சென்றால் பலன்கள் மிகவும் விபரீதமாக இருக்கும்

           4. எப்போதும் தன் நிலை தவறாமை இருபாலருக்கும் நன்மை செய்யும்

    மேற்கண்ட வாசகங்களை இப்போதும் கவனத்தில் வைத்திருக்கிறேன்.

     தவறு செய்ய சந்தர்ப்பம் கிடைக்காமையினால் நேர்மையாக இருப்பது பெரிதல்ல . தவறு செய்ய சந்தர்ப்பம் கிடைத்தாலும் தவறு செய்யாதவரே நேர்மையாளர்கள், என்று கூறுவார் என் தாயார்.

     தீய வழக்கங்கள் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி பாயும் நீரைப் போன்றது. ஆனால் நேர்மை என்னும் ஒழுக்கம் அதே நீர் பாதாளத்திலிருந்து மலை உச்சியை அடைவதைப் போன்றது. அதற்கு முயற்சி தேவை. கடினமான முயற்சியும் ஒரு விசையும் தேவை. அந்த விசைதான் ஒழுக்கம் , மனோதிடம், என்பார்கள்.”

     இப்போது நடைமுறையில் இருக்கும் காலம் சிறுவர்களுக்கும் ,சிறுமியர்களுக்கும், இளைஞர்களுக்கும் மிகவும் மோசமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு காத்திருக்கும் தாய்மார்களே, தகப்பன்மார்களே சற்றே நினைத்துப் பாருங்கள், எத்தனை மணித் துளிகள் உங்களால் உங்கள் பிள்ளைகளோடு செலவிட முடிகிறது? மிகக் குறைவான நேரமே செலவிடமுடிகிறது என்பதை மனதில் உணருங்கள்.

     அந்தக் குறைவான நேரத்தில் உங்கள் பிள்ளைகளின் எதிர்கால மேன்மைக்கு திட்டமிடுகிறீர்களா? உங்கள் பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேச உங்களால் முடிகிறதா? அல்லது நீங்கள் பேசுவதை உங்கள் பிள்ளைகள் காதில் வாங்குகின்றார்களா? அப்படியே காதில் வாங்கினாலும் கடைப் பிடிக்கிறார்களா? எப்படி அறிந்து கொள்வது இவற்றையெல்லாம் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. இயலாது என்று ஒரு பதிலும் கேட்கிறது.

    நான் காலையில் எழுந்து சமைத்து பள்ளிக்குச் செல்ல பிள்ளைகளுக்கு எடுத்து வைத்து , கணவருக்கு வேண்டியவற்றை செய்து, அவர்களை அனுப்பிவிட்டு மீதமிருக்கும் கடமைகளை முடிக்கவே நேரம் போதவில்லையே என்று வருத்தப் படும் தாய்மார்களே , உங்கள் கஷ்டம் புரிகிறது.

    காலையில் இந்த வாகன நெரிசலில் அலுவலகத்துக்கு சென்று அங்கே கஷ்டப்பட்டு வேலை செய்துவிட்டு களைத்துப் போய்த் திரும்புகிறோம் நாங்கள் என்று கூறும் உங்கள் குரலும் காதில் விழுகிறது தகப்பன்மார்களே , உங்கள் கஷ்டமும் புரிகிறது.  நாங்களும் உங்கள் வயதில் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுத்தானே உங்களையெல்லாம் வளர்த்து ஆளாக்கினோம்.  ஆனால் இவையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்கள் எப்போதும்.

     ஏனென்றால் முடிவில் உங்கள் பிள்ளை அல்லது பெண் எப்படி வளர்ந்திருக்கிறார்கள் என்னும் முடிவை ஆராயும்போது நல்லவிதமாக வளர்ந்திருந்தால் சரி, மாறாக தீய வழிகளில் கவனம் செலுத்தி வழிமாறியிருந்தால்? இந்த வாதங்கள் அனைத்துமே ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்களாக மாறும் அல்லவா?

     யாரையும் பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை . உண்மையைச் சொல்கிறேன். உங்கள் பிள்ளைகளைக் கவனியுங்கள்.

     “பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா?

    பேணி வளர்க்க வேணும் தெரியுமா? “

     என்று ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.

    எங்கள் வாலிப வயதில் இலைமறை காய்மறைவாக இருந்த அத்துணை விஷயங்களும் அம்பலத்துக்கு வந்துவிட்டது இப்போது. தொலைக்காட்சி, இணையம், செல்போன் .எல்லாவற்றிலுமே விரல் நுனியில் உலகம் என்று எல்லாவற்றையும் பார்க்கும் வசதிகள் பெருகிவிட்டன.

    அதனால் பயமாக இருக்கிறது. சரியான நேரத்தில் முறையாக வழிகாட்டி வளர்க்கப்படும் பிள்ளைகளே எதிர்காலத்தில் சரியான பாதையில் வளர்ந்து நல்லவிதமாக வாழ்வார்கள் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.

     அலுவலகத்துக்கு போகும் மனைவியையோ, கணவரையோ, அல்லது பள்ளிக்கு, கல்லூரிக்கு செல்லும் குழந்தைகளையோ வேவு பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. அப்படி நினைத்தாலும் நம்மால் அது இயலாது ,ஆனால் கண் காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

     ஆதரவான, அனுசரணையான, அன்பான கவனிப்பினால் அவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறேன். குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று ஒரு முறையை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் பெரியவர்கள்.

     1. ஐந்து வயது வரை இளவரசனாக, அல்லது இளவரசியாக வளர்க்க வேண்டும்.

    2. ஐந்து வயதிலிருந்து 12 வயது வரை அடிமையாக வளர்க்க வேண்டும்

    3. 13 வயது முதல் 19 வயது வரை ராஜ குமாரனாக ,அல்லது ராஜ குமாரியாக வளர்க்க வேண்டும்.

    20 வயதிலிருந்து தோழனாக, தோழியாக பழகவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

     ஆனால் அப்போது குழந்தைகள் குழந்தைகளாகவே இருந்தார்கள். இப்போது ஐந்து வயதுக் குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற நம்மால் முடியவில்லை. ஆமாம் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, பொது அறிவு வளர்ச்சி போன்றவை முற்காலத்தைவிட அதிகரித்திருக்கிறது. இளம் வயதிலேயே அதிகம் யோசிக்கிறார்கள்.

     அதிகம் தெரிந்து கொள்கிறார்கள். ஆகவே நாமும் அவர்களுக்கு இணையாக தெரிந்துகொண்டால்தான் அவர்களைக் கையாள முடியும்.  ஆகவே பழைய காலம் போல் வளர்க்க முடியாது என்னும் நடைமுறை தெரிகிறது இருந்தாலும் இன்னமும் அதிக கவனம் எடுத்துக்கொன்டு அவர்களின் கவனம் வேண்டாத தீய வழக்கங்களை நாடாத அளவுக்கு , அவர்களுக்கு புரியவைத்து, அவர்களுடன் கலந்து பேசி , அவர்களை வழிநடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம்.

     இணையத்தில் மேய அவர்களை அனுமதிக்காமல் இருந்தாலோ, செல்போன் போன்ற நவீன கருவிகளை உபயோகிக்க அனுமதி அளிக்காமல் இருந்தாலோ, திரைப்படங்கள் போன்றவற்றை பார்க்க அனுமதிக்காமல் இருந்தாலோ தவிர்த்துவிடலாம் என்னும் குறுகிய மனோபாவத்தை விட்டுவிட்டு.

     எல்லாவற்றுக்கும் அவர்களை அனுமதித்து, அப்படி அனுமதிக்கும்போதே அவற்றிலுள்ள தீயவைகளைச் சுட்டிக் காட்டி அவற்றினால் வரும் கெடுதல்களை எடுத்துச் சொல்லி அவர்களை அதிலிருந்து விலக்கி, இணையம் போன்ற நவீன விஞ்ஞான முன்னேற்றத்தினால் எப்படி நற்பலன்களைப் பெறலாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்களை முன்னேற்ற வேண்டிய காலத்தில் இருக்கிறோம் நாம்.

     பொதுவாக சைக்கிளை குழந்தை ஓட்டினால் உடனே தாய் ஜாக்கிறதை இங்கேயே ஓட்டு ப்ரதான சாலைக்கு செல்லாதே என்று எச்சரிக்கிறாள், இதற்கு காரணம் குழந்தையின் மேலுள்ள அக்கறை ஒருபுறமென்றாலும் அந்தத் தாய்க்கு இருக்கும் பயம் மற்றொரு காரணம்.

    நம் பயத்தையெல்லாம் அந்தப் பிஞ்சு மனதில் ஏற்றக்கூடாது, அப்படி ப்ரதான சாலையில் சைக்கிள் ஓட்டாவிட்டால் அந்தக் குழந்தைக்கு எப்படி சாலை விதிகள், சாலையில் வண்டியோட்டும் முறை, நெளிவு சுளிவுகள் மனதில் பாடமாகும். ஆகவே அனுமதியுங்கள், ஆனால் பாதுகாப்பான முறையை கற்றுக் கொடுங்கள், அதுதான் வாழ்க்கையில் அவர்களை முன்னேற்றும் கருவி.

     இந்த உலகத்தில் இத்தனை தீமைகள் நிறைந்த உலகத்தில்தானே நம் பிள்ளைகள் வாழவேண்டும்? அப்படியானால் இந்த உலகத்தில் வாழ முறையான ,சரியான வழியை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்நாம். இந்தக் கட்டுரை எழுதக் காரணமாயிருந்த ஒரு நிகழ்வை பகிர்ந்துகொள்கிறேன்.

     ஒரு நண்பர் வீட்டிற்கு சென்றேன், வாயிலில் இருந்து குரல் கொடுத்தேன் எதிர் விளைவு இல்லை ,ஆகவே எப்போது வழக்கமாக செல்லும் நண்பர் வீடுதானே என்று உள்ளே நுழைந்தேன். எதிரே கணிணியில் அந்த நண்பரின் பிள்ளை பள்ளியில் படிக்கும் பிள்ளை தன்னை மறந்து எதையோ பார்த்துக்கொண்டிருந்தான்.

     அடுத்தவர் கணிணியை எட்டிப் பார்க்கும் வழக்கமில்லாத நான் என் கண்ணைத் திருப்பும் ஒரு வினாடிக்குமுன் என் கண்ணில் பட்ட காட்சி என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. ஆம் அது ஒரு நீலப்படம். நான் வந்தது கூடத் தெரியாமல் அந்தப் பிள்ளை அதிலே மூழ்கியிருக்கிறான். சத்தம் போடாமல் வெளியே வந்தேன்.

     வியர்த்துக் கொட்டியது எனக்கு. எனக்கு ஏன் வியர்க்கிறது என்று எண்ணிப் பார்த்தேன், நம் நாட்டின் ,நம் பாரம்பரியத்தின் நம் வம்சாவழியின் வருங்காலத் தூண்கள் இந்தப் பிள்ளைகள் , அவர்களின் வாழ்க்கை சிதறிவிடுமோ என்கிற பயம் எனக்கு வந்ததால் எனக்கு வியர்த்தது.

    உங்களுக்கும் வியர்க்கிறதா?

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

    Contact No : 9840884088    Email : rkc1947@gmail.com  ,  http://thamizththenee.blogspot.com

    Share
  • “நாகரீக பெப்பே”…….

    தமிழ்த்தேனீ

     உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே  என்று முன் காலத்தில் ஏமாற்றுபவர்கள் கொக்கரிப்பது வழக்கம் .ஆனால் அந்தக் காலத்தில் வெறும் கோமணம் அல்லது,லங்கோட்டா என்று சொல்லுவார்கள் அதை உடுத்துக் கொண்டு, பாதுகாப்பாக வாழ்ந்தவர்கள்தான் அதிகம் பேர், அதற்குப் பிறகு அரை நிஜார், அரை நிக்கர் என்று சொல்லக் கூடிய பாதி கால்சட்டை வழக்கத்துக்கு வந்தது .

    பிறகு அயல் நாட்டாரைப் பார்த்து நாமும் முழுக் கால் சட்டையை

    அணிய ஆரம்பித்தோம் .ஆனால் நம்முடைய அரைக்கால் சட்டையிலிருந்து தோன்றியதுதான் அயல்நாட்டவரின் முழுக்கால் சட்டை.

    இப்போதெல்லாம் நாம் அனேகமாக அயல் நாட்டு நாகரீகத்துக்கு

    முழுமையாக ஆட்பட்டுவிட்டோம்.

    அதன் படி வீட்டிலே வேட்டி கட்டிக் கொண்டிருந்த ஆண்களும்

    வசதி காரணமாக  நம்முடைய பழைய அரைக்கால் சட்டையின் புதுப்பிக்கப் பட்ட வடிவமான தொளதொளவென்றிருக்கும் ஷார்ட்ஸ் என்று சொல்லக்கூடிய

    உடையை அணியத் தொடங்கி விட்டோம்

    தினமலரில் மேற் கண்ட செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள்.  இந்த பெப்பே என்கிற நிறுவனம் அரைக்கால் சட்டையைத் தயாரிக்க  இந்தியாவில் 150 கோடி ரூபாய்களை முதலீடு செய்யப் போகிறதாம்….ஜாக்கிரதை  .நம்முடைய வருமானத்தில் இன்னும் அதிகமாக  நம்மிடமிருந்து அரைக்கால் சட்டைக்காக அளிக்கப் போகிறோம்.  நம்முடைய பழைய கலாச்சாரங்கள் எப்படி உருமாறி நம்மிடமே  திரும்பி வந்து நமக்கே செலவு வைக்கிறது .

    சமீப காலங்களில்  கணிணித் துறையின் அமோக வளர்ச்சியால் பல இந்திய நடுத்தரக் குடும்பங்களில் இருந்து பல இளைஞர்கள்  அமெரிக்கா போன்ற அயல் நாடுகளுக்கு  கணிணித் துறை வல்லுனர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆங்கே சென்று  வாழ்க்கையைத் தொடங்கி  நம் நாட்டுக் கலாச்சரத்திலும்  அன்னிய நாட்டுக் கலாசாரத்திலும் இங்கொரு கால்  அங்கொரு கால் என்று  வைத்துக் கொண்டு நிலைதடுமாறி விட்டு கடைசியில்  இயலாமையினால்  அன்னிய நாட்டுக் கலாசாரத்தையே  முழுமையாக கடைப்பிடிப்பது  என்கிற முடிவுக்கு வந்து விட்டார்கள்,

    அப்படி அவர்கள் கலாச்சார மாறுதல்களுக்கு உட்பட்டு , ஜீன்ஸ், ஷார்ட்ஸ் என்று ஏகத்துக்கும் மாறிவிட்டதால்  பெற்றோரை அங்கே அழைத்துச் சென்று அவர்களுக்கும் அன்னிய நாட்டுக் கலாசாரத்தை கற்றுக் கொடுத்து  வாழப் பழக்கி விடுகிறார்கள்.  அப்படிப் பட்ட பெற்றோர் மறுபடியும்  இந்தியாவுக்கு திரும்பும்போது ஜீன்ஸ் , ஷார்ட்ஸ் என்று  அணிந்து கொண்டு  உலா வருகிறார்கள்.

    வேட்டி, சொக்காய் என்பதெல்லாம் மலையேறி வெகு காலம் ஆகிவிட்டது

    ஆகவே இந்தியாவிலும்  இந்த   பெப்பே நிறுவனம் தயாரிக்கும்    ஜீன்ஸ், ஷார்ட்ஸ் போன்றவை அதிக அளவிலே விற்கிறது.    ஒரு அரை நிஜார் தைக்க அந்தக் காலத்திலே   அரையணா  ஆகுமென்று வைத்துக் கொள்வோம்.   இப்போது அதே அரை  நிஜார் ,அதாவது அரைக்கால் சட்டை   உருமாறி ஷாட்ஸ் என்று ஒப்பனை செய்து  கொண்டு  இருப்பதால்

    ஒரு ஷார்ட்ஸ்  450 ரூபாய் ஆகிறது.

     அனேக வயதானவர்களும்  ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு    கையில் உயர்தர செல்போனையும் (பிள்ளைகள் வாங்கிக் கொடுத்தது)  பிடித்துக் கொண்டு  உலா வருகிறார்கள்.    இங்கே  அயல் நாடுகளுக்கு செல்ல இயலாமல்  இருக்கும் இளசுகள்,      அடேயப்பா  இந்தப் பெரிசுகள்  அலட்டும் அலட்டல் இருக்கிறதே   தாங்க முடியலைப்பா   என்று முணுமுணுப்பது  காதில் விழுகிறதா.அடிப்படைக் கலாச்சாரம்  மாறாமல்  பெரியவர்களும்  நடந்துகொண்டு பிள்ளைகளுக்கும் நம் கலாச்சாரத்தின் மேன்மையை உணர்த்த வேண்டிய தருணம் இது.   நாம் ஷார்ட்ஸில் மட்டும் மாறவில்லை,  மொத்த நாகரீகத்தின் ஆணி வேரையே   மாற்றிவிட்டோமோ  என்று தோன்றுகிறது

    ஷார்ட்ஸ் அணிய வேண்டாம் என்று சொல்லவில்லை  நம்  நாகரீகத்தையும் , நம் கலாச்சாரத்தையும்   முறையாகப் புரிந்து கொள்ளாமல்,  வேட்டி , அரை நிஜார்  ஆக மாறி , அரை  நிஜார்  ஷார்ட்ஸ்  ஆக மாறியதைப் போல

    நம் நாகரீகத்தின் பல மேன்மைகளைக் கைவிட்டு , நம் வசதிக்காக  நம் கலாச்சாரத்தை   சுருக்கி  மாற்றிவிட்டோம்.

    அதனால்தான்  இப்போது முறையற்ற திருமணங்கள், திருமணமாகி குறுகிய காலத்துக்குள்ளே  விவாகரத்துகள்,  சிறு வயதிலேயே  முறையற்ற கர்ப்பம்தரித்தல், குழந்தையைப் பெற்று குப்பைத் தொட்டியில் வீசுதல்,

    திருமணமான பிறகும்  ஆணுக்கு அன்னிய பெண்ணின் மேல் காதலும் , பெண்ணுக்கு அன்னிய ஆடவரின் மேல காதலும்  ஏற்படும் நிலை.

    தகாத காதல்களுக்காக   கொலைகள்,   என்றெல்லாம் நம் கலாச்சாரம் சீரழிக்கப்பட்டு விட்டதே.

    நாமாக  தவறான பாதையில் சென்றாலும் தடுக்கி விழுந்துஇ  அந்தப் பாதையில் பயணித்தாலும்  விபரீத விளைவுகளே   ஏற்படும்  என்பதற்கு இந்த   ஷார்ட்ஸ் என்னும் பெப்பே   ஒரு சிறிய உதாரணம்தான்  ஆனால் தற்போதைய   நாகரீகக் கலாச்சாரம்  உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே  என்று கொக்கரித்துக் கொண்டிருக்கிறது

     திசை தெரியாமல் குழம்பி  திரு திருவென்று விழித்துக் கொண்டிருப்போரை  ஏன் இப்படி   பேபே   என்று விழிக்கிறாய் என்பார்கள் .இப்படித்தான் நாமும் விழித்துக் கொண்டிருக்கிறோம்  ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாய்

    இப்படியே நாம் விழித்துக் கொண்டிருந்தால் மொத்தக்  கலாச்சாரமும்  அழிந்து போகும் என்பதில் சந்தேகமில்லைஆமாம்  இந்தியர்கள்  என்னதான் செய்து கொண்டிருக்கிறோம்.

    விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது !

     

     

     

     

    Share
  • “ திருட்டுப் பூனைகள் “

    தமிழ்த் தேனீ

    நல்ல தூக்கம்  , திடீரென்று  டொம் என்று ஏதோ விழுந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான் மாதவன் , பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த  மைதிலி  அது ஒண்ணுமில்லேங்க ,  நம்ம ஜன்னலுக்கு மேலே இருக்கே  சன்ஷேட்   அதுலே இந்தப் பூனை ரெண்டு குட்டி போட்டிருக்கு,  நம்ம கார் ஷெட்டுக்குக்கு மேலே பிளாஸ்டிக் ஷீட் போட்டிருக்கீங்களே  அதுமேலே பூனை குதிச்சிருக்கும்  அதான் சத்தம் என்றாள்  .
    ஆமா இருந்த இட்த்திலே இருந்தே  நீயா  ஏதாவது கற்பனை செய்து எதையும் சொல்லாதே, பதினோரு மணி  பாதிராத்திரி, காலம் கெட்டுக் கிடக்கு, போனவாரம் கூட ராமன் தெருவிலே ஜன்னலை உடைச்சு வீட்டிலே இருக்கறதையெல்லாம் அள்ளிகிட்டுப் போயிட்டாங்க மர்ம நபர்கள், இப்பல்லாம்  மர்ம நபர்கள் அதிகமாயிட்டாங்க,
    போலீஸ்காரங்க நிறைய மர்ம நபர்களை தேடிக்கிட்டே இருக்காங்க , என்று மைதிலிடம் கூறிவிட்டு, நீ ஒண்ணும் பயப்படாதே  நான் போயி பாத்துட்டு வரேன்  என்றபடி டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு  மெயின் கேட்டைத் திறந்து வெளியே போனான் மாதவன் .
    வீட்டைச் சுற்றி எல்லா இடத்திலேயும் பார்த்தாச்சு , ஒண்ணும் தெரியலே, யோசித்துக்கொண்டிருக்கும்போதே மறுபடியும் அதே சத்தம், கார் ஷெட்டின் அருகே சென்று டார்ச் அடித்துப் பார்த்தான்,
    ஒரு பூனை அதன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு  பிளாஸ்டிக் ஷீட் மேலே குதித்து, மிக லாவகமாக அங்கே இருந்து ஜன்னலுக்கு தாவி , குட்டிக்கு எந்த ஆபத்தும் இல்லாமல், ஜன்னலிலிருந்து கீழே குதித்து ,  பம்ப்செட் மோட்டார் இருக்கும் அறையின் கிரில் வழியாக உள்ளே போய் குட்டியை மிகப் பத்திரமாக தரை இறக்கி வைத்துவிட்டு  மாதவனைப் பார்த்து மிய்யாவ் என்றது.  அந்த மியாவ் வுக்கு என்ன பொருள் என்று மாதவனுக்கு புரிந்தது, பயப்படாதே  நான் ஒண்ணும் செய்ய மாட்டேன் உன் குட்டியை , ஏதோ சத்தம் கேட்டுதேன்னு வந்து பாத்தேன், என்று ஏதோ ரொம்பநாள் பழகினா மாதிரியும் , இவன் பேசறதெல்லாம் அந்தப் பூனை புரிந்து கொள்ளும் என்னும் எண்ணத்துடன் அதுனாலே நான் இங்கேயே இருக்கேன் நீ  மேலே போயி உன்னோட இன்னொரு குட்டியையும்  தூக்கிண்டு வா  என்றான்.
    பூனை இப்போது வேறு தொனியில் மியாவ் என்று கத்திவிட்டு குட்டிப் பூனையின் பக்கத்திலே  படுத்துக் கொண்டது. மாதவன் மனதில் அந்தப் பூனையின் மியாவுக்கு என்ன அர்த்தம் என்றும் அதன்   எண்ணம் என்ன என்பதும்  புரிந்தது . ஆமாம் அந்தப் பூனை கண்களின் பாவத்தாலும் முக அசைவாலும்  இவனுக்கு மிக அழகாக அதன் எண்ணத்தை  புரியவைத்தது.   அட கூர்ந்து கவனித்தால் இந்தப் பூனையின் மொழியைக் கூட கற்றுக் கொள்ள முடியும் போல் இருக்கிறதே என்று தோன்றியது மாதவனுக்கு.
    உன்னாலே ஆபத்தில்லேன்னு புரிஞ்சிகிட்டேன்   ஆனா இன்னொரு குட்டி அங்கே மேலே இருக்கு  அதைப் பத்தியும் கவலையா இருக்கு,  இப்போ இந்தக் குட்டியை  கொண்டு வந்து வெச்சிருக்கேனே  இந்த இடம் பாதுகாப்பா இருக்குமான்னு  யோசிச்சிண்டு இருக்கேன்  இந்த இடம் பாதுகாப்பானதுன்னு   என் மனசுக்கு பட்டால்தான்   இன்னொரு குட்டியையும் இங்கே கூட்டி வருவேன்  அப்படி என்று அந்த மிய்யாவுக்கு அர்த்தம் புரிந்து கொண்டான் மாதவன் ,
    அவனுக்கு திடீரென்று ஒரு ஆசை எப்படியும் இந்தப் பூனை மேலே இருக்கற இன்னொரு குட்டியை எடுத்துண்டு வர மேலே போகும் , அப்பிடி அந்தக் குட்டியைக் கவ்விண்டு வரும்போது ஒரு புகைப்படம் எடுக்கலாம்னு உள்ளே போயி கேமராவை எடுத்துக்கொண்டு  மைதிலி நீ சொன்னது சரியா இருக்கு, அதேதான் அந்தப் பூனைதான், குட்டியைக் கவ்விண்டு வந்து கீழே வெச்சிருக்கு, இன்னொரு குட்டியைக் கவ்விண்டு வரும்போது ஒரு போட்டோ எடுத்திண்டு வரேன்  , என்றபடி வெளியே போனான்,
    இவன் வீட்டுக்குள் வந்து மைதிலியிடம் பேசிவிட்டுத் திரும்பி வரும் நேரத்துக்குள் அந்தப் பூனை இன்னொரு குட்டியையும் கவ்விக்கொண்டு வந்து  மோட்டார் ரூமில் வைத்துவிட்டு அதன் பக்கத்தில் படுத்துக்கொண்டு இவனையே பார்த்துக்கொண்டு இருந்தது.
    மாதவன் ஜன்னல் வழியே இதோ பாரு  மைதிலி  சத்தமே போடாம பூனை மாதிரி அதுக்குள்ளே இன்னொரு குட்டியையும் கொண்டு வந்து வெச்சிடிச்சு  என்றான்  போட்டோ எடுக்க முடியாத  ஏமாற்றத்துடன்  .
    ஏங்க அது பூனைதானே   என்றாள் மைதிலி   அது அப்பிடித்தான் செய்யும் , நீங்க தள்ளி வந்துட்டீங்க இல்லே அந்த நேரத்திலே உங்களாலே கீழே இருக்கற குட்டிக்கு ஆபத்து ஏற்படாதுன்னு யோசிச்சு  நீங்க அங்கே போறதுக்குள்ளே கொண்டு வந்து வெச்சிடிச்சு பாத்தீங்களா . நம்மளைவிட எல்லாமே  புத்திசாலியா இருக்கு என்றாள்.  அட ஆமாம் என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே   அதை  போட்டோ எடுத்துட்டு   உள்ளே வந்தான்  மாதவன் ,
    நாய்   நாம குடுக்கறதை தின்னுட்டு காவல் காக்கும் , அதை வளக்கலாம் ஆனா  பூனைக்கு முன் யோசனை அதிகம், திருட்டுத் தனம் அதிகம்னு  சொல்வாங்க, அதுனாலே பூனை என்ன செய்யுமாம் அந்த வீட்டிலே இருக்கறவங்க  எப்போ போவாங்க  நாம போயி திருட்டுத் தனமா கிடைக்கறதை சாப்படலாம்னு  காத்துகிட்டு இருக்குமாம், அதுனாலே பூனை வளக்கக் கூடாதுன்னு சொல்வாங்க,  என்றாள்  மைதிலி.
    வாசற் கதவைப் பூட்டிவிட்டு வந்து படுத்தான் மாதவன், ஆமாம் அதெப்பிடி  நீ இங்கேருந்தே சரியா கண்டு பிடிக்கறே ,ஆமாம் தூங்கலையா நீ முழிச்சிகிட்டே படுத்திருந்தியா என்றான்.
    இல்லே இல்லே தூங்கிட்டேன் ,ஆனாலும்  பொம்பளைங்க  தூக்கமெல்லாம் கோழித் தூக்கம் மாதிரி, பூனைத் தூக்கம் மாதிரிதான் ,அசந்து போயி தூங்குவோம் ஆனாலும் ஒரு விழிப்பு இருந்துகிட்டே இருக்கும் , ஆனா ஆம்பிளைங்க  அசந்து போனா ஆழ்ந்து தூங்கிடுவீங்க  , அதுனாலே இந்த சத்தம் இதுனாலேன்னு  அனுபவத்திலே கண்டுபிடிக்க முடியும் எங்களாலே என்றாள்.
    அதெல்லாம் சரி மைதிலி நீ சொன்னியே பூனைக்கு திருட்டுத் தனம் அதிகம்  வீட்டிலே இருக்கறவங்க எப்போ போவாங்க அப்பிடீனு காத்துகிட்டு இருக்கும் அப்பிடீன்னு , அதை ரொம்ப தப்பா புரிஞ்சிகிட்டு தப்பா சொல்லிக் குடுத்துட்டங்களோ  நம்ம பெரியவங்க, இல்லே  பெரியவங்க சொன்னதை தப்பா நாம புரிஞ்சிகிட்டோமான்னு  தெரியலே,
    மெதுவா சத்தமே போடாம இருக்கறது பூனையோட குணம், அவ்ளோதான் உண்மை, அதுக்கு இருக்கற  இருட்டிலேயும் கண்ணு தெரியும்கிற சக்தியைப் பயன்படுத்தி அது தனக்கு வேண்டிய உணவைத் தேடிக்கிது  அவ்ளோதான், ஆனா அதுக்கு பயம் அதிகம்  அதுனாலே நாம யாரும் இல்லேன்னு தெரிஞ்சிகிட்டு அதுக்கப்புறம் வந்து அதுக்கு வேணுங்கற  உணவை சாப்பிடுது, அதை நாம திருட்டுத் தனம்னு சொல்றோம்,
    நம்மைப் பாத்து பயப்படறதாலே நாம எப்போ தள்ளிப் போவோம்ம்னு காத்திருக்கும் அவ்ளோதான், அதை தப்பா சொல்லிட்டாங்கன்னு நெனைக்கிறேன்    மனுஷன் எப்போ  போவான்னு காத்திருந்து  வந்து திருடும்னு.   இப்போ நீயே ஒத்துகிட்டே நான் அசந்து தூங்கறேன்னு , ஆனா நீ அசந்து தூங்கினாலும் ஒரு விழிப்புணர்வு இருக்கும்னு.
    அப்போ நான் அசந்து தூங்கும்போது  உனக்கு விழிப்பு வருதுன்னு வெச்சிக்கோ, அப்போ உனக்கு தாகமா இருக்கு , பிரிட்ஜிலேருந்து  ஏதாவது எடுத்து தாகத்துக்கு குடிக்கறேன்னு வெச்சிக்கோ, யதேச்சையா   எனக்கு அப்போ விழிப்பு வந்தா , உடனே நான் அசந்து தூங்கற நேரமாப் பாத்து  எனக்கு கூடக் குடுக்காமே நீ குளிர்பானம் குடிக்கறேன்னு நான் நெனைச்சிகிட்டா எவ்ளோ  முட்டாள் தனமோ அதே மாதிரிதான் பூனை நமக்குத் தெரியாம வந்து பாலைக் குடிக்கும் போது  அதைத் திருட்டுப் பூனைன்னு சொல்றதும் என்றான் மாதவன்.
    அட ஆமா .நீங்க சொல்றதும் சரியாத்தான் இருக்கு,  , நான் மாடியிலே  துணி காயப் போடும்போது நெனைச்சிகிட்டேன் , இந்தப் பூனை குட்டிகளுக்கு பால் குடுக்குதே,  ,இதுக்கு குட்டிகளுக்கு பால் குடுக்க சக்தி வேணுமே அதுனாலே  இந்தப் பூனைக்கு ஏதாவது குடுக்கலாமா ன்னு ஆனா பெரியவங்க  பூனைக்கு சாப்பிட ஏதாவது குடுத்தா அப்புறம் நம்ம வீட்டிலேருந்து போகவே போகாது  எப்போ நாம அடுத்து அடுத்து அதுக்கு குடுப்போம்னு காத்திருக்கும் , அப்பிடிக் குடுக்கலேன்னா  திருடியாவது சாப்பிடும்னு சொல்வாங்களே அப்பிடீன்னு பயந்து ஒண்ணுமே குடுக்காம விட்டுட்டேன் என்றாள் மைதிலி
    நீ சொல்றதும் சரிதான்  அதுவும் ஒரு ஜீவன்தானே , அதுக்கும் பசிக்கும், குட்டிகளுக்கு பால் குடுக்க அதுக்கும் சக்தி வேணும், அதுனாலே  நாம ரெண்டு பேரும் போயி கொஞ்ச பால் எடுத்து ஒரு கிண்ணத்திலே வெச்சு அந்தப் பூனைக்கு குடுக்கலாமா  என்றான் மாதவன்.
    இதோ எடுத்துகிட்டு வரேன் என்றபடி ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்துக்கொண்டு  வந்து வாங்க போயி அந்தப் பூனைக்கு குடுக்கலாம்னு மாதவனும் மைதிலியும் வெளியே வந்து அந்தப் பால் கிண்ணத்தை பூனையிடம் வைத்துவிட்டு , அது பாலைக் குடிக்கும் என்று காத்திருந்தனர்  இருவரும்,  ஆனால் இவர்களை நம்பலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு இவர்களையே அந்தப் பூனை இவர்களையே பார்த்துக்கொண்டு  சும்மா உட்கார்ந்து இருந்தது .
    உனக்காத்தானே பால் கொண்டு வந்தோம் , நமபவே மாட்டேங்கறையே  நாங்க உனக்கு எந்த தீங்கும் செய்ய மாட்டோம்,பாலைக் குடி என்றான் மாதவன், மியாவ் என்றது பூனை சரி  புரிஞ்சு போச்சு  யாரோட இயல்பையும் மாத்த முடியாது நம்மாலே , நாம தள்ளிப் போனாத்தான் இந்தப் பூனை பாலைக் குடிக்கும் போல இருக்கு  ,  சரி வா நாம போயி தூங்கலாம் என்றபடி உள்ளே வந்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்கள் இருவரும்,
    மெதுவே மெல்ல அடிஎடுத்து வைத்து கிண்ணத்தில் வாயை வைத்து பாலைக் கொஞ்சம் குடித்துவிட்டு மீண்டும் சந்தேகத்துடன் தலையைத் தூக்கி  சுறும் முற்றும் பார்த்துவிட்டு மறுபடியும் பாலைக் குடிக்க ஆரம்பித்த்து  பூனை. சிரித்தபடி  மாதவன் பாத்தியா  அதோட திருட்டுத் தனத்தை என்றான்.
    ஏன் திருட்டுத் தனம்னு சொல்றீங்க அதோட இயல்பு ஜாக்கிறதை உணர்வு என்றாள் மைதிலி, சபாஷ் நீயும் சரியாப் புரிஞ்சிக்கறே, அது சரி நாம எதைச் சாப்பிட்டாலும்  கடவுளுக்கு படைச்சிடு சாப்படறோமே . உண்மையாவே இந்தப் பூனை மாதிரி நாம் படைச்ச பாலை கடவுள் குடிச்சா அடுத்த முறை படைப்போமா  என்றான் மாதவன்.
    எல்லாம் மனசுதாங்க காரணம்  அங்கே பூனைக்கு சந்தேகம், இங்கே நமக்கு சந்தேகம் நாம  தயாரிச்சிருக்கற உணவுப் பொருள்லே ஏதாவது ஒவ்வாமை இருந்தா நம்மைப் பாதிக்குமே.அப்பிடீன்னு .
    அதுனாலே எல்லா வல்லமையும் படைச்ச இறைவா  ,நாங்க இதை உனக்கு படைக்கிறோம் இதிலே ஏதேனும் தோஷமிருந்தா அதைப் போக்கற சக்தி உனக்குதான் இருக்கு, இதிலே இருக்கற தோஷங்களை நீக்கி ஆரோக்கியமான  அமைர்தமா  இந்த உணவை மாத்தி  எங்களுக்கு குடுன்னு வேண்டிக்கறோம்,
    ஜீவராசிகளையும் படைச்சு அதுக்கு வேண்டிய உணவையும் படைச்ச இறைவனுக்கு நன்றி சொல்றா மாதிரிதான் அவனை அப்பப்போ நெனைச்சுக்கணும் ,மறக்க் கூடாதுங்கறதுக்காக  பெரியவங்க சில வழிமுறைகளை ஏறபடுத்தி வெச்சிருக்காங்க அதிலே இதுவும் ஒண்ணு என்றாள் மைதிலி.
    ஆமாம் மைதிலி  சாப்பாட்டிலே யாராவது எதையாவது கலந்து குடுத்துட்டா என்ன செய்யறதுன்னு  சாப்பிட்டுப் பார்த்து அதிலே ஒண்ணும் பாதிக்கறா மாதிரி எதுவும் கலக்கலே  என்று  உறுதி படுத்திக்க முன்னெல்லாம் ராஜாக்கள் ஒரு ஆளை வெச்சிருப்பாங்களாம். அவர் முதல்லெ சாப்பிட்டுட்டு  அவருக்கு எதுவும் பாதகமா ஆகலைன்னா  ராஜா சாப்புடுவாராம்.
    அது மாதிரி ஒரு ஆளா நாம தெய்வத்தை வெச்சிருக்கோம்னு எனக்கு தோணுது,  நாமளும் இந்தப் பூனை மாதிரிதான்  சந்தேகப் பிராணி என்றான் மாதவன் .   மனுஷன்தாங்க எப்பவுமே திருட்டுப் பூனை  என்றாள் மைதிலி.
    அதுசரி மைதிலி  மைதிலி அந்தப் பூனை  தன் குட்டியை வாயாலே கவ்வி எடுத்துகிட்டுப் போவுதே  குட்டிப் பூனைக்கு வலிக்காதா என்றான்.
    குட்டிப் பூனைக்கு வலிக்காம ஜாக்கிறதையா எடுத்துகிட்டுப் போவும் தாய்ப்பூனை. இது ஒரு மாதிரி தாய்மை , தாய்மைங்கறதே பக்திதானே ,  நாம பக்தீன்னு சொல்றோமே  அதை ரெண்டு விதமா பெரியவங்க சொல்வாங்க ,  ஒண்ணு  மர்க்கட நியாயம், இன்னொண்ணு மார்ஜார நியாயம்
    மர்க்கடம்ன்னா குரங்கு , குரங்கு  அது பாட்டுக்கு கிளைக்கு கிளை தாவிக்கிட்டே போவும் , ஆனா அதோட குட்டி  தாய்க் குரங்கை கெட்டியா பிடிச்சிக்கும் , குட்டிக் குரங்கு சரியாப் பிடிச்சுக்காம கையை விட்டுடிச்சுன்னா கீழே விழுந்துடம் ,அதுனாலே  கெட்டியாப் பிடிச்சிக்கும் , இது மாதிரி ஒரு பக்தி, நாமதான் தெய்வத்தை  பிடிச்சிக்கணும்னு சொல்லுது
    இன்னொண்ணு இந்தப் பூனை மாதிரி, மார்ஜாரம்ன்னா பூனை  இந்தப் பூனை குட்டிகளை எப்பவும் விடாம காப்பாத்தும், வாயாலே பூனைக்குட்டிகளுக்கு வலிக்காமே கவ்விகிட்டு போயி பத்திரமா வெச்சுக் காப்பாத்தும் . அதுனாலே குட்டிகள் கவலைப் படாமே  எல்லாத்தையும் தாய்ப்பூனையை நம்பி ஒப்படைச்சிட்டு  நிம்மதியா இருக்கும்.
    ஆனா மனுஷன் இந்த ரெண்டு பக்தியையும் முழுசா நம்பறதில்லே. வேணும்னா கடவுளைக் கும்புடறான், இல்லாட்டி கடவுளை நெனைக்கறதே இல்லேன்னு  மாறி மாறி நிலையில்லாத புத்தியை வெச்சிகிட்டு அல்லாடறான்.
    அது மாதிரிதான்  நானும் படுத்தவுடனே எல்லாத்தையும் நீ பாத்துப்பேன்னு  நம்பி நிம்மதியா தூங்க ஆரம்பிச்சிடறேன் மைதிலி , தாய்க்குப் பின் தாரம் சரிதானே என்றான் மாதவன்
    மியாவ் என்றது பூனை,   பத்தியா நான் சொன்னது சரின்னு பூனை கூட சொல்லிடிச்சு  என்றான் மாதவன். இருவரும் சிரித்துக் கொண்டே  தூங்க ஆரம்பித்தனர்.

    Share
  • “ ஐ லவ் யூ “

    தமிழ்த்தேனீ

    மேசைமேல் இருக்கும் கோப்புகள் முக்கியமானவை, அவருடைய கோடிக்கணக்கான சொத்துக்கள், அவர் தொடங்கிய பல தொழில்களின் வெற்றியின் அறிகுறியாக  அவரிடம் சேர்ந்த  அதிர்ஷ்ட தேவதையின்  கணக்குகள்  .அவரைத் தவிர யாருக்குமே தெரியக் கூடாத ரகசியங்கள் அடங்கிய கோப்புகள்.  ஆனால் நாணயமாக சேர்த்த சொத்துக்கள், முறையாக வருமான வரி செலுத்திய ரசீதுகள் அடங்கிய கோப்புகள்,
    அவற்றை மிகப் பத்திரமாக  ஒரு ப்ரீப்கேசில் அடுக்கி மறைவான பெட்டகத்தில் வைத்து மூடி அதன் மேல் இருக்கும்  நகரும் சுவர் போன்ற அமைப்பை நகர்த்தி அந்த சுவற்றின் மேல்  ஒரு முருகன் படத்தை மாட்டிவிட்டு அந்த முருகன் படத்துக்கு மாலை போட்டு வணங்கிவிட்டு தன்னுடைய சுழல் நாற்காலியில் வந்து உட்கார்ந்து  அன்று அவர் பார்க்க வேண்டிய கோப்புகளைப் பார்வையிட்டார்  கதிரேசன்.
    சார் நான் உள்ளே வரலாமா என்று குரல் கேட்டது. அதுவரை அவர் அனுமதி இல்லாமல் யாரும் திறக்க முடியாதபடி பூட்டியிருந்த அறைக் கதவை  மேசையின் அடியே இருக்கும் ஒரு குமிழை அழுத்தி திறக்கச் செய்து , யெஸ் உள்ளே வாங்க  என்றார் கதிரேசன்.  அவருடைய பெர்சனல் செகரட்ரி  முருகன்   குட் மார்னிங் சார் . என்றார் பவ்வியமாக, எஸ் குட் மார்னிங்  முருகன் என்ன இன்னிக்கு நான் ஏதாவது முக்கியமா செய்ய வேண்டிய வேலை இருக்கா என்றார்.

     

    இல்ல சார், இன்னிக்கு வெள்ளிக் கிழமை ,நாளைக்குதான் பாரின்லேருந்து டெலிகேட்ஸ் வராங்க அவங்களை நான் வரவேற்று ஸ்கைலேண்ட் ஹோட்டல்லே தங்க வெச்சிருவேன் ,அவங்களை நீங்க நாளைக்கு மூணு மணிக்கு சந்திக்கணும்.இன்னிக்கு நீங்க ப்ரீ  என்றார் முருகன்.சிரித்துக் கொண்டே.
    நீங்க எல்லாத்தையும் கவனமா கச்சிதமா செய்யறதினாலே  நான் நிம்மதியா இருக்கேன். எனக்கு ஐம்பத்து ஐஞ்சு  வயசுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டேங்கறாங்க எல்லாம்  உங்க உபயம் , அந்த அளவுக்கு  எனக்கு எந்த டென்ஷனும் இல்லாம நீங்க நடத்திகிட்டு வரீங்க, தேங்க்ஸ் முருகன் என்றார் கதிரேசன்.
    சார் என்னோட ட்யூட்டியைத்தான் செய்யறேன் அதுக்கு எதுக்கு சார் தேங்ஸ் எல்லாம், இன்னிக்கு சமூகத்திலே  நானும் ஒரு பெரிய மனுஷனா வளைய வரேன். என் குடும்பம் நல்லா இருக்குன்னா நீங்கதானே காரணம் ,நான்தான் உங்களுக்கு தேங்ஸ் சொல்லணும்.    நீங்க அடிக்கடி சொல்வீங்களே  நாம என்னதான் பிளான் செஞ்சாலும்  சில நாட்கள் அது இஷ்டத்துக்கு  நடக்கும்   நம்மகிட்ட ஒண்ணும் இல்லே. அந்த நேரத்திலே  நாமதான் கொஞ்சம் வளைஞ்சு குடுத்து போகணும்னு  , எனக்கென்னவோ  இன்னிக்கு அது மாதிரி ஒரு நாள்னு மனசிலே ஒரு பக்‌ஷி சொல்லுது என்றார் முருகன் .   ஓ அப்பிடியா என்ன விஷயம்  சொல்லுங்க என்றார்  கதிரேசன்.

    ஆமா இன்னிக்கு உங்களை சந்திக்கணும்னு பிடிவாதமா ஒருத்தர் உட்கார்ந்திருக்காங்க  வெளியிலே, என்றார் முருகன்.    ஏற்கெனவே அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருக்காங்களா என்றார் கதிரேசன்
    இல்லை சார் புதுசா இருக்காங்க. ஆனா பாத்துட்டுத்தான் போவேன்னு பிடிவாதமா உக்காந்திருக்காங்க என்றார்
    ஓ இன்ட்ரெஸ்டிங்  சரி அனுப்புங்க யாருன்னு பாப்போம்  என்றார் கதிரேசன்.
    முருகன் வெளியே சென்றார். மே ஐ  கம் இன்   என்று ஒரு குரல் கேட்டது.
    எஸ் ப்ளீஸ் கம் இன்   என்றார் கதிரேசன், ஒரு தென்றல் உள்ளே நுழைந்தது.  கதவைத் திறந்தால் காற்று வரும் என்பது உண்மைதானோ என்று தோன்றியது கதிரேசனுக்கு , இங்கே தென்றலே வருகிறதே .
    முருகனோட இன்டியூஷன் சரியாத்தான் இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டே   எதிரில் இருக்கும் நாற்காலியைக் காட்டினார் கதிரேசன்.  நன்றி கூறிவிட்டு அமைதியாக உட்கார்ந்தது தென்றல்.
    என்ன  யாரு நீங்க என்பது போல் பார்த்தார் கதிரேசன்.

    என் பேரு தென்றல்  என்றாள் .  என்னது தென்றல்னு கூடப் பேரு வைப்பாங்களா  நான் கேள்விப்பட்டதே இல்லே, என்றார் கதிரேசன்.   வெச்சிருக்காங்களே  எங்க வீட்டிலே , நான் இன்னிக்கு உங்களை எப்பிடியும் சந்திக்கணும்னு வந்தேன் . அதுவும் ரொம்பக் கிட்டத்திலே பாக்கணும்னு வந்தேன் ,பாத்துட்டேன்  மகிழ்ச்சி என்றாள் அவள்.     மிஸ் தென்றல் நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியலே என்றார் கதிரேசன்.
    ஒரு விஷயம் உங்க கிட்டே சொல்லணும்னு தோணிச்சு   அதை சொல்லிட்டுப் போகலாம்னுதான் வந்தேன் என்றவள் அமைதியாக அவரையே பார்த்துக்கொண்டே இருந்தாள். சில நேரங்களில் மௌனம் புயலைப் போன்ற ஒரு இரைச்சலை ஏற்படுத்திவிடும் என்பதைப் பரிபூரணமாக உணர்ந்தார் கதிரேசன்.  சற்று நேர மௌனத்தையே தாங்க முடியாமல்   சொல்லுங்க என்றார்.

    “ ஐ  லவ் யூ “   என்றாள் அவள்.
    கேட்ட வினாடியிலேயே வியர்த்துப் போனது அவருக்கு . என்னது ..என்னது நீங்க என்ன சொல்றீங்க என்று தடுமாறினார் கதிரேசன். ஏன் இவ்ளோ டென்ஷனாறீங்க  அமைதி அமைதி என்றாள் தென்றல்.  ஆனால் அவரால் அமைதியாக உட்கார முடியவில்லை. எழுந்துபோய் ஜன்னல் அருகே நின்றுகொண்டு நான் ஒரு சிகரெட் பிடிக்கவா என்றார்.

     

    ஓ எஸ் தாராளமா பிடிங்க  ,  எங்க அப்பாகூட பைப் பிடிப்பாரு என்றாள் அவள்.
    சிகரெட்டைப் பற்ற வைத்து நுரையீரல் முழுவதும் அந்த  நிகோடின் காற்றை உள் வாங்கி  மெதுவே வெளியே அனுப்பி சற்றே தெளிந்து அதை  ஆஷ் ட்ரேயில் போட்டு  நசுக்கி அணைத்துவிட்டு மறுபடியும் வந்து உட்கார்ந்து அவளையே பார்த்தார் .    என்னது இது நீங்க பாட்டுக்கு வந்தீங்க  இப்போ  ஐ லவ் யூ ங்கறீங்க எனக்கு ஒண்ணும்  புரியலே.

    சரி நீங்க யோசிங்க   நான் ஒரு வாரம் கழிச்சு வரேன், என்றபடி எழுந்தாள் தென்றல்.
    உங்க காண்டாக்ட்  எண் என்ன என்றார், முகவரி என்ன என்றார்,   ஒரு வாரம் கழிச்சு நானே வந்து தரேன்  அது வரைக்கும் யோசியுங்க  பை பை நன்றி வருகிறேன்  என்று கூறிவிட்டு போனாள்…போயேவிட்டாள்.
    என்ன செய்வதென்றே புரியாமல் அப்படியே சிலைபோல உட்கார்ந்திருந்தார் கதிரேசன்,  முருகன் உள்ளே வந்து சார்  காஃபி  குடிங்க என்று ஒரு கோப்பையை வைத்தார்.   காஃபியை எடுத்து  குடித்துக் கொண்டே ஆழ்ந்த யோசனையுடன் முருகன் உக்காருங்க என்றார்.

    சார்  என்றார் முருகன்  ..உக்காருங்கன்னு சொன்னேன் என்றார் கதிரேசன்.  முருகனுக்கு புரிந்தது  ஏதோ முக்கியமான விஷயம் இல்லையென்றால் அலுவலக நேரத்தில் உட்காரச் சொல்லமாட்டார்  அவர் என்று,அமைதியாக உட்கார்ந்தார் முருகன்.    முருகன்  இப்போ வந்துட்டுப் போனாங்களே  தென்றல்  அவங்களை உங்களுக்குத் தெரியுமா? இதுக்கு முன்னே எங்கேயாவது பாத்திருக்கீங்களா? நாம பாத்திருக்கோமா  என்றார்.
    இல்லே சார்  இவங்களை இப்போதான்  நான் பாக்கறேன், நீங்க பாத்திருக்கீங்களா என்றார் முருகன்.   இல்லே  முருகன் நானும் பார்த்ததில்லே. இப்போ அந்தப் பொண்ணு என்கிட்ட ஒரு விஷயம் சொன்னா   அதை எப்பிடி எடுத்துக்கறதுன்னே புரியலே. எனக்கு பேச சந்தர்ப்பமே குடுக்காம அவங்க பேசினாங்க போயிட்டாங்க  என்றார்.
    இந்த அளவுக்கு நீங்க அதிர்ந்து போற அளவுக்கு என்ன சார் சொன்னாங்க என்றார் முருகன்.    கதிரேசன்   சொன்னார்..  சார் என்னா சொல்றீங்க என்று அதிர்ந்தார் முருகன். பின் சுதாரித்துக் கொண்டு  சார் நீங்க எவ்ளோ பெரிய அந்தஸ்திலே இருக்கீங்க , உங்களுக்கு  லக்‌ஷ்மிகரமா மனைவி , தோளுக்கு மேலே வளர்ந்த பிள்ளை,
    இதெல்லாம் தென்றலுக்குத்   தெரியுமா?  , எப்பிடி இப்பிடி நேருக்கு நேரா வந்து  ஒரு வயசுப் பொண்ணாலே இப்பிடிப் பேச முடியுது? இது அசட்டுத் தைரியமா, இல்லே விவேகமான  அணுகுமுறையா ஒண்ணும் புரியலே சார் என்றார் முருகன்.
    சரி எனக்கும் புரியலே ,. காலையிலே  நீங்க சொன்னீங்களே    இன்னிக்கு அது மாதிரி ஒரு நாள்னு மனசிலே ஒரு பக்‌ஷி சொல்லுது அப்பிடீன்னு   அது சரியாப் போச்சு அது மாதிரி ஒரு நாளேதான் இது   , வளைஞ்சு குடுத்துதான் போகணும் .   ,ஆனா இவ்ளோ அதிர்ச்சியா இருக்கும்னு நெனைக்கலே .
    சரி அந்தப் பொண்ணு அடுத்த வாரம் வரேன்னு சொல்லிட்டுப் போயிருக்கா ,அவ வந்தா  நேரா என் ரூமுக்கு அனுப்பிடுங்க, இப்போ நான் வெளியிலே போய்ட்டு  மாலை நாலு மணிக்கு வரேன்.  என்றபடி கிளம்பினார்  கதிரேசன்.
    ஒரு வாரம் மிக இயல்பாக வேலைகள் தொடர்ந்தன. மறு வாரம் வெள்ளிக் கிழமை  சொல்லி வைத்தாற் போல் மே ஐ கம் இன் சார் என்று கேட்டபடி கதிரேசனுடைய அறைக்குள் நுழைந்தாள் தென்றல்,
    ஒருகணம் உள்ளுக்குள்ளே காலிலிருந்து தலை வரை ஒரு மின்னல் ஓடியது கதிரேசனுக்கு, சமாளித்தபடி புன்னகைத்து வாங்க தென்றல் உக்காருங்க என்றார். வந்து இயல்பாக நாற்காலியில் உட்கார்ந்தாள்.
    சில நொடிகள் மௌனத்துக்குப் பிறகு தென்றல் பேசத் தொடங்கினாள், நீங்க எல்லாம் வேண்டாம் ,  என்னை நீ அப்பிடீன்னே சொல்லலாம், தென்றல்ன்னு அன்பாக் கூப்பிடலாம் ,அவள் பேசிக்கொண்டே இருந்தாள் கதிரேசன் கேட்டுக்கொண்டிருந்தார், சுமார் ஒரு மணி நேரம் தென்றலின்  பேச்சை  கதிரேசன் கேட்டுக் கொண்டே இருந்தார் எந்தவித இடையூறும் இல்லாமல் .
    அவள் பேசி முடித்தாள், இதோ என்னுடைய தொலைபேசி எண் , என்னுடைய விலாசம் என்று ஒரு  ஒரு காகிதத்தில் எழுதி அவரிடம் கொடுத்துவிட்டு சரி மீண்டும் சந்திப்போம் , ஆனால் இந்த முறை நீங்களாக அழைத்தால்தான் வருவேன்  என்று கூறிவிட்டு  கிளம்பினாள் தென்றல்.
    வியர்த்துப் போயிருந்த நெற்றியை கர்சீப்பினால் துடைத்துக் கொண்டு நாற்காலியில்  சாய்ந்தார் கதிரேசன்.  சார் நான் உள்ளே வரலாமா  என்று கேட்டுவிட்டு   கதிரேசன் அனுமதித்தவுடன் உள்ளே நுழைந்தார் முருகன்.
    முருகன்  இன்னிக்கு  தென்றல் ஒரு மணிநேரம்  பேசினாங்க, எனக்கென்னவோ அவங்க சொல்றதெல்லாம்  சரின்னு படுது, அதுனாலே நான் சில முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கு. முருகன்  உங்களுக்குத் தெரியும் நான் எந்த முடிவையும் உணர்ச்சி பூர்வமா எடுக்க மாட்டேன்னு, அதுனாலே நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும். என்றார்.
    சார்  என்ன சார் இது நீங்க ஆர்டர் போட்டா  செய்யப் போறேன் என்றார் முருகன்.    முருகன் ஆர்டர் போட்டா  சொன்னதைச் செய்வீங்க  எனக்குத் தெரியும்  ஆனா அதையே உதவியா செஞ்சா  எனக்கு எது நல்லதுன்னு புரிஞ்சுகிட்டு செய்வீங்க , அதுனாலேதான் உதவின்னு சொன்னேன் முருகன் என்றார் கதிரேசன்.
    அதை சொல்றதுக்கு முன்னாலே தென்றல் என்ன பேசினாங்கன்னு உங்களுக்கும் சொல்லணும் , ஆனா  அதுக்கு சரியான நேரம் இன்னும் வரலேன்னு நெனைக்கிறேன். அதுனாலே  இப்போ நான் சொல்றதை மட்டும் செய்யுங்க என்றார் கதிரேசன்.
    இங்கே கிட்ட வாங்க முருகன்  என்று அழைத்து என்ன செய்யவேண்டும் என்பதை மெல்லிய குரலில்  கூறினார் கதிரேசன் , முருகன் ஒருகணம் அதிர்ந்தாலும்  சமாளித்து சரி சார் அப்பிடியே செய்யறேன் என்றார் .
    அலுவலகத்தில் கிளம்பியது கிசுகிசுக்கள்,  நம்ம முதலாளி எப்பவுமே சரியான முறையிலே நடப்பவராயிற்றே ,அவரா இப்படி, ,  என்ன இருந்தாலும் அழகா ஒரு பொண்ணு நெனைச்சா எப்படிப்பட்ட ஆட்களையும் கவுத்துருவாங்கங்கறது உண்மைதான், சரித்திரத்திலேயே படிச்சிருக்கோமே, இவரு மட்டும் என்ன விதிவிலக்கா?
    அடப் போடா ஆனானப்பட்ட விஸ்வாமித்ரரே  கவுந்துட்டாரு இவரு என்னா செய்வாரு பாவம், ஆனா ஒண்ணு அந்தப் பொண்ணு கெட்டிக்காரி. நல்ல புளியங் கொம்பாத்தான் பிடிச்சிருக்கா .
    இப்படி யார் எங்கே பேசினாலும்   அவர் கேட்கும் படி அமைக்கப்பட்டிருந்த மறைவான ஒலிபெருக்கிகள் கதிரேசனுடைய அறையிலே வைக்கப் பட்டிருப்பதை அறியாமலே  கிசுகிசுக்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே இருந்தது.
    ஒரு மாதம் விளையாட்டாக ஓடிவிட்டது, அந்த நிர்வாகத்தில் அவள் முக்கியமானவளாக கருதப்பட்டாள். அவளைக் கேட்காமல்  உதவியாளர் முருகன் கூட செயல்பட முடியவில்லை.
    முருகன் முகம் சுளிக்காமல் அவர் கடன் பணி செய்து கிடப்பதே என்று இயங்கிக் கொண்டிருந்தார்.   அலுவலகத்தில் இருக்கும் அனைவரும்  இந்தச் செய்தியைப் பற்றி அலுவலகத்தில் பேசக் கூட பயப்பட்டனர், ஆனால் வெளியிலே ஆசைதீர பேசிக் கொண்டனர், செய்தீ காட்டுத் தீயாய் பரவியது.
    ஆனால் மிக இயல்பாக இருப்பது போல காட்டிக்கொண்டார்  கதிரேசன், அவர் முகத்திலிருந்து எதையும் கணிக்க முடியாமல் தவித்தனர்  அலுவலகத்தில் வேலை செய்பவர்கள்,   யாரைப் பற்றியும் கவலைப்படமால் மிக இயல்பாக வந்து போய்க்கொண்டிருந்தாள் தென்றல்.  அடிக்கடி தென்றலும் அவரும் சேர்ந்தே பல விழாக்களுக்கு செல்வதை தொழிலதிபர்கள் முதற்கொண்டு, அனைவரும் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினர். மக்களுக்கு ரசமாய் இருக்க சில பத்திரிகைகள் கூட கிசுகிசுக்களை அள்ளி வழங்கி சர்குலேஷனை அதிகப்படுத்திக் கொண்டது.
    திடீரென்று ஒரு வாரமாக தென்றலைக் காணவில்லை, புயல் வந்தால் தென்றல் காணாமல் போகும்போல் இருக்கிறது, ஏதோ ஒரு புயல் வரப் போகிறது என்று எதிர் பார்த்தனர்  எல்லோருமே
    இப்படி இருக்க ஒரு நாள் முருகன் அலுவலகத்தில் இருப்போருக்கும் , பல தொழில் அதிபர்களுக்கும்  பத்திரிகைக்காரர்களுக்கும் பொதுவாக ஒரு அழைப்பிதழை அளித்துக் கொண்டிருந்தார். அலுவலக காவல்காரர் முதல், உயர்தர அதிகாரிகள் வரை எல்லோருக்கும்  ஒரு அழைப்பு .

    ஆம் கதிரேசன் அவர்கள் கட்டிய புது பங்களாவில்  வருகிற ஞாயிற்றுக் கிழமை அனைவரும் வந்து கலந்து கொள்ளும்படி  அன்பாக வேண்டுகோள் விடுத்திருந்தார் . அவரே அவர் கைப்படவே எல்லோருக்கும் பத்திரிகை அளித்து அவசியம் வரும்படி வேண்டிக் கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது அனைவருக்கும்.
    அந்தப் பத்திரிகையின் சாராம்சம் இதுதான். தொழிலதிபர் கதிரேசன் அவர்களின்  30 ஆவது  திருமண நாள் விழா. குடும்பத்துடன்  அனைவரும் வருக . அனைவரும் வந்து விருந்தில் கலந்து கொண்டு வாழ்த்த வேண்டியிருந்தார்  கதிரேசன் அவர்கள்.
    கதிரேசன் அவர்களின் பிரும்மாண்ட பங்களாவில் .அனைவரும். விருந்தின் ருசி ,அதையும்  தாண்டி செவிக்குணவு இல்லாதபோது சற்றே காதுக்கும் ஈயப்படும் என்னும் கோட்பாட்டுக்குட்பட்டு காதைத் தீட்டிக் கொண்டு காத்திருந்தனர்.  நாதஸ்வரம் முழங்கிக் கொண்டிருந்தது  கதிரேசனுடைய  மனைவி காத்யாயினி சிரித்த முகத்துடன் லக்‌ஷ்மிகரமாய் அனைவரையும் வரவேற்று உணவு உண்ண அழைத்துப்  போய் உட்காரவைத்து உபசரித்துக் கொண்டிருந்தார் .
    மனதுக்குள் இந்த அம்மாவுக்கு த்ரோகம் செய்ய  கதிரேசனுக்கு எப்பிடி மனசு வருதோ என்று எண்ணமிட்டபடி வெளியிலே புன்சிரிப்புடன்  அனைவரும் உணவு அருந்திவிட்டு  கூடத்தில் குழுமினர்.
    கதிரேசன் சூட் கோட்டுடன் வந்து நின்றார், அவருக்கு  ஒரு பக்கத்தில் அவர் மனைவி காத்யாயினி ,  மறு பக்கத்தில் அவர் மகன்   சந்தோஷ்  கையில் ஆளுயர மாலையை  எடுத்துவந்து ஒன்றை கதிரேசனிடமும் மற்றொன்றை காத்யாயினியிடமும் கொடுத்துவிட்டு  மாலை மாற்றிக் கொள்ள வேண்டினான். கதிரேசனும் காத்யாயினியும் மாலை மாற்றிக் கொண்டனர்.

    கிசுகிசுவை மறந்து  அனைவரும்  கைதட்டி ஆரவாரமாய் வாழ்த்தினர். ஒரு பெரிய ரகசியத்தை அறிந்து கொள்ளும் ஆவலில்  அனைவரும் கூடியிருந்தனர்.   வருக நண்பர்களே இந்த மகிழ்ச்சியான நன்நாளில் என் அழைப்பை ஏற்று  விழாவுக்கு வந்திருந்து  என்னை கௌரவப்படுத்திய உங்கள் அனைவருக்கும்   என் மனமார்ந்த நன்றி  .இன்று  நான் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிடப் போகிறேன்.,
    ஆமாம்  எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். எங்கள் குடும்ப உறுப்பினர்களில் புதியதாக ஒரு நபர் இன்று முதல் இணையப் போகிறார். என்று கூறிவிட்டு கண்ணைச் சிமிட்டினார் கதிரேசன்.     அழையா விருந்தாளியாக அமைதி அங்கே தானாக வந்து ஆனால் ஆர்வத்துடன் காதுகளைத் தீட்டிக் கொண்டு காத்திருந்தது.
    அதற்கு முன்பாக  இங்கே ஒரு படத்தை திரையிட்டு மூடியிருக்கிறேன்  . அந்த திரையை தென்றல் அவர்கள் திறந்து வைத்து விழாவின் முக்கிய நாயகியாக  உங்களை வரவேற்பார்  என்றார்.
    தென்றல் மிக நளினமாக நடந்து வந்து அந்த திரையை விலக்கினாள், அங்கே கதிரேசன் அவர்களின் உருவப் படம் மாட்டி அதற்கு மாலையும் போடப்பட்டு இருந்தது . ஹா ! என்று ஒருமித்த அதிர்ச்சிக் குரல் வெளிப்பட்டது  அனைவரின் வாயிலிருந்தும் , அமைதி சற்றே சலனப்பட்டது.
    ரகசியக் குரல்கள் ஆச்சரியக் குரல்கள், கூடமெங்கும் உலா வந்தது. அந்த அமைதியைக் கிழித்தார்  கதிரேசன் .  உங்களுக்கெல்லாம் தெரியாத   ஒரு ரகசியத்தை இப்போது நான் கூறப் போகிறேன்.
    நண்பர்களே இதோ இந்தப் படத்தில் இருப்பது நானல்ல . உலகில் ஒருவரைப் போலவே ஏழு பேர் இருப்பார்கள் என்று படித்திருக்கிறோம் , ஆனால் பார்த்ததில்லை. நமக்கெல்லாம் ஒரு அரிய வாய்ப்பு  இதோ என்னைப் போலவே இருக்கும் இவரைப் பாருங்கள், இவர் பெயர் சிதம்பரம், இவர் தென்றல் அவர்களின் தகப்பனார்.
    தென்றலின் தந்தை  திரு சிதம்பரம்.

    உருவத்தில் என்னைப் போலவே இருந்ததும் , ஏறக்குறைய  என்னைப் போலவே நேர்மையான முறையில் தொழில்கள் செய்து இலங்கையிலே ஒரு பெரிய தொழிலதிபராக  மாறி பெரும் பணக்காரராக இருந்தார். தென்றல் அவருடைய தகப்பனார் மீது அளவுகடந்த அன்பும் ,பாசமும் வைத்திருந்தார். ஆனால் காலம் சில நேரங்களில் பல கொடுமைகளைச் செய்துவிட்டு  தடையங்களே இல்லாதபடி அழித்து விடுகிறது என்பதற்கு திரு சிதம்பரம் அவர்களின் வாழ்க்கை ஒரு முன்னுதாரணம்.
    ஆமாம் ஒரே நாளில் பங்கு வர்த்தகம் சரிந்து , அவருடைய சொத்துக்கள் எல்லாம் முடக்கப்பட்டு களவாடப்பட்டு  சில மிருகங்களாலே கொலையும் செய்யப்பட்டார்  திரு சிதம்பரம் . தென்றல் ஆதரவு தேடி நம்ம நாட்டுக்கு வந்திருக்காங்க. அப்போ  யதேச்சையா என்னைப் பாத்திருக்காங்க .
    ஒருவர், தணிந்த குரலில்  சரிய்யா  முடிவு என்னான்னு எங்களுக்கு தெரிஞ்சு போச்சு அதுக்கு ஏன் இவ்ளோ பீடிகை போடறீங்க  விஷயத்துக்கு வாங்க என்று மெதுவே முணுமுணுத்தார்.
    உங்களுக்கெல்லாம் தெரியும் தென்றல் என்னிடம் வந்து   ஐ லவ் யூ சொன்னதும் ,அதன் பின்னர் நேற்று வரை நடந்ததும்.அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் உங்கள் ஊகத்துக்கு விதையாக மலர்ந்ததும்  எனக்கும் தெரியும்
    ஆனால் நாம் எல்லோருமே எதையுமே சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று எனக்கே என்னை உணர்த்தினா இந்தப் பொண்ணு  தென்றல் அவளுக்கு நான் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.
    ஐ லவ் யூ இந்த மூன்றெழுத்து மந்திரம் பலரை ஆட்டி வைக்கிறது, ஆனால் அதன் அர்த்தமே தெரியாமல், அந்த மந்திர சொற்களை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் ,ஆனால் எப்படிப் பயன்படுத்துகிறோம்  என்று எனக்கும் புரிய வைத்தாள் இந்தப் பெண்  தென்றல் .
    காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
    ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
    வேதம் நான்கிலும் மெய் பொருளாவது
    நாதன் நாமம் நமசிவாயவே
    என்று திடீரென்று சீர்காழி கோவிந்தராஜன்  மனம் உருகிப் பாடினர் .
    யாருப்பா அங்கே முக்கியமா பேசிகிட்டு இருக்கோமில்லே, பாட்டை நிறுத்துங்க  என்றார் கதிரேசன்  ,பாட்டு நின்றது.

    அகராதியிலே பாத்தேன்  ஐ லவ் யூ அப்பிடீங்கற சொல்லுக்கு எத்தனை பொருள் இருக்கு அப்பிடீன்னு
    நான் உன்னைக் காதலிக்கிறேன், நான் உன்மேல் அன்பு செலுத்துகிறேன், நான் உன்னை நேசிக்கிறேன், நான் உன்னை விரும்புறேன்  ,இப்பிடியெல்லாம் பொருள் இருக்கு .  ஆனா ஒரு இடத்திலே கூட   உன்னைத் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறேன்னு  பொருளே போடலே.
    கண்ணன் என் காதலன் அப்பிடீனு சொன்ன பாரதியார் கண்ணனை நண்பனாய்  மந்திரியாய், நல்லாசிரியனுமாய் பார்த்தாரே தவிர தப்பா பேசலை.  ஆழ்வார்கள் நாயன்மார்கள் எல்லாருமே இறைவனைக் காதலிச்சிருக்காங்க. தப்பான பொருள் யாருமே சொல்லலே.  இந்தக் காதல்ங்கற சொல்லுக்கு யாரு காமம்னு பொருள் சொன்னாங்கன்னே புரியலே,     ஜீவாத்மா  பரமாத்மா இரண்டறக் கலந்து த்வைதம் அத்வைதமா மாறுவதைத்தான் காதல்ன்னு  ஆண்டாள் கூட  உருகி இருக்காங்க.
    காதல்ன்னா காதல்தான் ,அன்புதான் பாசம்தான் ,நேசம்தான்  நிச்சயமாக் காமம்  இல்லே.இதை நாமெல்லாரும் மனசார ஏத்துக்கணும் ,  தென்றலோட அப்பா இறந்து போன துக்கத்தை தாங்க முடியாம இலங்கையிலேருந்து  இந்தியாவுக்கு வந்து என்னை யதேச்சையா பாத்திருக்காங்க, அப்பிடியே அவங்க அப்பா மாதிரியே நான் இருக்கறதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நெகிழ்ந்து போயி அவங்க மனசுக்குள்ளே அவங்க அப்பாவைப் பாக்கறா மாதிரியே ஒரு உணர்வை அனுபவிச்சு,  என்னை அவளோட அப்பாவா நெனைச்சு என் கிட்ட வந்து ,
    மனசு பூரா பாசத்தை வெச்சுகிட்டு ஐ லவ் யூ அப்பிடீன்னு சொன்னா.

     

    அவங்க அப்பாகிட்டே அப்பிடித்தான் சொல்லுவாளாம்.   நான் கூட முதலே தப்பா நெனைச்சேன் , நாம வாழற சமூகம் நமக்கு அப்பிடி ஒரு தப்பான பொருளைச் சொல்லிக் குடுத்திருக்கு. லவ் ன்னாலே அன்பு ,பாசம் , நேசம் அப்பிடிஎல்லாம் நமக்கு தோணறதே கிடையாது, நம்ம மனசைக் குப்பையா ஆக்கி வெச்சிட்டாங்க . லவ்வுன்னு சொன்ன உடனே நம்ம மனசு குப்பையை நோக்கிப் போக ஆரம்பிச்சுடுது. இந்த மனோ நிலைக்கு நம்மைத் தள்ளிய எல்லாரும்  வெக்கப்படணும். நாமெல்லாருமே வெக்கப் படணும் .
    இந்தப் பொண்ணு  என்னைப் பொறுத்த வரை  அப்பனுக்கு பாடம் சொன்ன அந்த முருகக் கடவுள் மாதிரிதான்  தெரியறா. அதுனாலே இந்த பொண்ணு  ஐ லவ் யூ அப்பிடீங்கற சொல்லுக்கு  சரியான பொருளை என்னிக்கு எனக்கு சொல்லிக் கொடுத்தாளோ  அந்த வினாடியிலேருந்து இவ என் பொண்ணுதான்  , நம்ம பொண்ணுன்னு சொல்லுங்க ,  நம்ம பையன் சந்தோஷுக்கு   தங்கைன்னு சொல்லுங்க   என்றார். காத்யாயினி .
    எஸ் நம்ம பொண்ணு இவ  .  ஐ லவ் யூ மை டியர் டாட்டர்  என்று நெற்றியிலே முத்தமிட்டு தென்றலை அணைத்துக் கொண்டார் கதிரேசன்.
    ஒட்டுமொத்த  மனிதர்களும்  கதிரேசனைப் பார்த்து அர்த்தம் புரிந்துகொண்டு   ஐ  லவ் யூ சார்   என்று ஏகோபித்த குரலில் புரிந்து வாழ்த்தினார்கள்

    Share
  • “ பயம் “

    தமிழ்த்தேனீ

    ரமேஷ் அவனுடைய முறை  வருவதற்காக காத்திருந்தான் , டோக்கன் எண் 9 என்று அழைத்தார்கள். ஓ இன்னும் ஆறு  பேர் போய்விட்டு வரவேண்டுமா, பல்வலியுடன் காத்திருந்தான் ரமேஷ். வாழ்க்கையில் தலைவலி, பல் வலி, காது வலி ,கண் வலி என்று எது வந்தாலும்  அதைத் தவிர எதுவந்தாலும் பொறுத்துக் கொள்ளலாம் என்று தோன்றும், ஆனால் எந்த வலி வந்தாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பதே உண்மை என்று தோன்றியது ரமேஷுக்கு. அட துன்பம் வரும் வேளையிலே சிரிங்கன்னு வள்ளுவர் சொன்னாப்  போலே .
    பல்வலி வந்து இங்கே வந்து உக்காந்து இருக்கையில் ஏதோ தத்துவமெல்லாம் தோன்றுகிறதே   என்று சிரிப்பாய் வந்தது  ரமேஷுக்கு.  சிரிக்க முயன்று பல் வலியினால் சிரிப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டு நிமிர்ந்தான்.  அந்தக் காட்சி கண்ணில் பட்டது.ஒரு பெரியவர்  உட்கார்ந்திருந்தார், அவருக்கு பக்கத்தில்  ஒரு பெண்மணி அவர் மனைவியாக இருக்க வேண்டும், அந்தப் பெண்மணி முகத்தில் கவலை, சற்று நேரம் கணவன் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்துவிட்டு, ஏதோ தோன்றவே தண்ணீர் பாட்டிலை எடுத்து அவருக்கு நீட்டினாள், அவரும் அந்தப் பாட்டிலை வாங்கி  தண்ணீர் குடித்துவிட்டு  அவளிடம் நீட்டினார், அந்தப் பெண்மணியும்   சற்று தண்ணீர் குடித்துவிட்டு பாட்டிலை உள்ளே வைத்தார்,
    ஏங்க பல்லை எடுக்கணும்னாலோ ,  இல்லேன்னா ரூட் கெனால் செய்யணும்னு சொன்னாலோ  வலியைப் பொறுத்துக்க முடியுமா என்றாள் கவலையோடு, எல்லாம் சமாளிச்சுதான் ஆகணும் , நீ எதுக்கும் கவலைப் படாதே  நான் பாத்துக்கறேன்  என்றார் அவர், அரை மணிக்கொரு முறை அந்தப் பெண்மணி ஆதரவாக  தண்ணீர் கொடுப்பதும் ,ஏதோ கவலையுடன் பேசுவதும் அவர் ஆறுதல் சொல்வதுமாக நேரம் நகர்ந்தது.
    டோக்கன் 15 என்று அழைத்தவுடன் அவரும் அந்தப் பெண்மணியும் மெதுவே உள்ளே  போனார்கள், சற்று நேரத்தில் அவர் மட்டும் வெளியே வந்தார்.
    நீங்க இங்கே உக்காருங்க ,அவங்களுக்கு ட்ரீட்மென்ட் செய்யும்போது  நீங்க அங்கேயே இருந்து பாத்துகிட்டு இருந்தா  உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும், அதுனாலே ட்ரீட்மென்ட் முடிச்சிட்டு டாக்டர் கூப்புடுவாங்க ,அதுக்கப்புறம் உள்ளே போங்க என்று அவரை உட்கார வைத்தாள் நர்ஸ்.
    ரமேஷுக்கு அதிர்ச்சியாய் இருந்தது . மெதுவே அவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்து  ஏங்க உங்களுக்கு பல் வலி இல்லையா  என்றான்.அட ஏன் தம்பி நீங்க வேற எனக்கு ஒண்ணும் இல்லே, அவளுக்குதான் பல் வலி  என்றார்,
    நீங்க தப்பா நெனைக்கலேன்னா நான் ஒண்ணு கேக்கலாமா  என்றான் ரமேஷ்
    கேளுங்க தம்பி , உள்ளே அவளுக்கு ட்ரீட்மென்ட் நடக்கற வரைக்கும் நமக்கும் பொழுது போகணும் இல்லே, சும்மா கேளுங்க  என்றார் பெரியவர்
    ஏதோ உங்களுக்குத்தான் பல் வலி போலவும், அடிக்கடி உங்களுக்கு ஆறுதல் சொல்லிகிட்டு  ,அடிக்கடி குடிக்கத் தண்ணீர் கொடுத்து உங்களை கவனிச்சிகிட்டாங்க உங்க மனைவி. அதுனாலேதான் நான் உங்களுக்கு பல்வலின்னு  தப்பா நெனைச்சுகிட்டு  உங்களுக்கு   பல் வலி இல்லையான்னு கேட்டேன் என்றான் ரமேஷ்
    ஓ அதுவா தம்பி உலகத்திலே பலவிதமான மனிதர்கள் இருக்காங்க, அதுலே ஒரு விதம் என் மனைவி, அவளுக்குதான் பல் வலி, ஆனா அவளுக்கு பயம் அதிகம், அதுனாலே சந்தேகம் கேட்டுகிட்டே இருந்தா. பயம் அதுனாலே அடிக்கடி  தண்ணீர் குடிச்சா, அதுவும் பத்தாக் குறைக்கு  அவளுக்கு நெனைப்பு நான் ரொம்ப பயந்த சுபாவம் உள்ளவன்னு. அதுனாலே   எனக்கு தைரியம் சொல்றாப் போலே அவ தனக்குதானே தைரியம் சொல்லிக்குவா. அவளோட பயத்தைப் போக்கிக்க  அப்பப்போ தண்ணீர் குடிப்பா, அப்பிடியே எனக்கும் குடுப்பா, அதை நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க அதான் என்றார்.
    பலபேரு அவங்க பயத்தையெல்லாம் நம்ம மேலே ஏத்திடுவாங்க, ஏனுங்க ஜாக்கிறதையா வண்டி ஓட்டிகிட்டு போயிட்டு வாங்கன்னு பொண்டாட்டி சொன்னா , அது நம்ம மேலே உள்ள அக்கரையாவும் இருக்கலாம், நம்ம மேலே உள்ள அவநம்பிக்கையாவும் இருக்கலாம். இதெல்லாம் உங்களுக்கும் கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் வாழ்ந்தப்புறம் உங்களுக்கும் புரியும்  என்றார்
    ரமேஷுக்கு உண்மையிலேயே இப்போதுதான் பயம் வந்தது, அவனுக்கு எப்படிப் பட்ட பெண் மனைவியாக வரப் போகிறாளோ  என்று
    அவன் தன் பயத்தைப் போக்கிக் கொள்ள  பெரியவரைப் பார்த்து   நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க என்றான்.
    பெரியவருடைய  மனைவி  வெளியே வந்தாள், ஓடிப்போய் அவளத் தாங்கி கூட்டிவந்து   உட்கார வைத்தார் பெரியவர்.
    டோக்கன்  எண் பதினாறு என்று குரல் கேட்டது, சார் கொஞ்சம் தண்ணி குடுங்க  என்று அவரிடம் தண்ணீர் பாட்டிலை  வாங்கி  கொஞ்சம் குடித்துவிட்டு, சார் நீங்களும் கொஞ்சம் தண்ணீர் குடிங்க என்று சொல்லிவிட்டு   பயத்துடன் உள்ளே சென்றான்   ரமேஷ்

    Share
  • “ நவீன ரோபோக்கள் “

    தமிழ்த்தேனீ

    பூம் பூம் பூம் பூம் ஐயாவுக்கு நல்ல காலம் பொறக்குது,நல்ல காலம் பொறக்குது  ,  ஐயா வீட்டுலே சுப காரியம் நடக்கப் போகுது, வூட்லே இருக்கறவங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கப் போறாங்க. என்று வாயிலில்  பூம்பூம் மாட்டுக்காரனின் குரல் கேட்டது.

    கதவைத் திறந்து எட்டிப் பார்த்தார்  சபேசன், இவரின் தலையைக் கண்டவுடன்  பூம்பூம் மாட்டுக்காரன் நம்பிக்கையுடன் , குரலில் இன்னும் உத்வேகத்துடன்  ராகத்தோடு முழங்கத் தொடங்கினான் ,ஐயா எட்டிப் பாக்கறாரு தலையை ஆட்டுடா ராசா , ஐயா பழைய துணி ,  காசு எல்லாம் குடுப்பாரு  என்று கூறிவிட்டு அவன் கையிலிருந்த  குட்டையான நாதஸ்வரத்தை  ஒலிக்கத் தொடங்கினான்.

    மாட்டுக்கு என்ன புரிந்ததோ  அந்த  நாதஸ்வரத்தின் ஓசைக்கு ஏற்ப தலையை அப்பிடியும் இப்படியுமாக ஆட்டிற்று.  எப்போதுமே   மனிதருக்கு   யானை, குரங்கு , புலி சிங்கம் போன்றவைகளை மீண்டும் மீண்டும் பார்க்க ஆர்வம் வரும், அதே போல் சபேசனும் அந்த மாட்டையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.    ஐயா பாக்கறாரு தலையை வேகமா ஆட்டுரா ராசா என்றான் பூம் பூம் மாட்டுக்காரன், மாடும் வேகமாய்த் தலையை ஆட்டத் தொடங்கியது.

    .ஏதோ ஒரு இரக்கம் தோன்றவே அவருடைய  பழைய வேட்டியை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தார்,  . பூம்பூம் மாட்டுக்காரன் ஐயாவுக்கு  நன்றி சொல்லுடா ராசா வேட்டி குடுத்தாரு மகராசன்  என்று கூறிக் கொண்டே அந்த வேட்டியை நிரந்தரமாக மாட்டுக்கே கொடுப்பது போன்ற பாவனையில் அந்த வேட்டியை மாட்டின் மேலேயே போட்டான்.

    அந்த மாட்டின் மேல் பலவிதமான  வண்ண ஆடைகள் போர்த்தப்பட்டு இருந்தன.  அனேகமாய் அந்த  வண்ணத் துணிகளை எடுத்துவிட்டால் அதன் எலும்புகள் தெரியும் என்று தோன்றியது சபேசனுக்கு,  கையோடு கொண்டு வந்த இரண்டு வாழைப்பழங்களை மாட்டுக்கு கொடுத்தார் சபேசன் , வாங்கிக்கோ ராசா ஐயா அன்போட குடுக்கறாரு என்றான் பூம்பூம் மாட்டுக்காரன்

    அவன் குரலுக்கு கட்டுப்பட்டு வாயைத் திறந்து தன்னுடைய  நாக்கை நீட்டி வாழைப்பழத்தை  கவ்விக்கொண்டு பூம்பூம்மாட்டுக்காரனிடமே  நீட்டியது பூம்பூம் மாடு.    ஆச்சரியமாய் இருந்தது சபேசனுக்கு , எப்படிக் கட்டுப் பாட்டோடு பழக்கி இருக்கிறான் இந்த மாட்டை என்று அதிசயித்துப் போனார் சபேசன்.

    அதன் வாயில் தொங்கிக் கொண்டிருந்த வாழைப் பழங்களிலிருந்து  ஒரு வாழைப் பழத்தை எடுத்து உரித்து அவன் உண்டு விட்டு இன்னொன்றை மாட்டுக்கு கொடுத்தான் . மாடும் அதை தோலோடு உண்ணத் தொடங்கிற்று

    அது சரி இயல்பாய் ஏதேனும் உண்ணக் கொடுத்தால் வாங்கி உண்ணுமே மாடுகள், இந்த மாடு  அவர் கொடுத்த வாழைப்பழத்தைக் கூட பூம்பூம் மாட்டுக்காரன் அனுமதித்த பிறகே  வாங்கி உண்கிறது, அப்படிப் பழக்கி இருக்கிறான் இந்த மாட்டுக்காரன்  என்று தோன்றியது.

    ஒரு நவீனவகை ரோபோ போல் பூம்பூம் மாட்டுக்காரன் இடும் கட்டளையை எல்லாம் நிறைவேற்றியது  மாடு.  இவன் தன் வயிறு நிரம்ப இந்த  வேலையைச் செய்கிறான், இவனுக்கு  மனோவசியம் தெரிந்திருக்கிறது, நல்ல சொற்களைக் கூறினால்  மனதில் நல்ல மகிழ்ச்சி உண்டாகும், அந்த மகிழ்ச்சி எப்படிப்பட்டவரையும்   ஏதேனும் கொடுக்கச் செய்துவிடும் என்று நன்றாகவே தெரிந்து கொண்டிருக்கிறான்.

    நம்மில் பலர்  நல்ல சொற்களை கூறக் கூட தயங்கிக் கொண்டேதானே இருக்கிறோம். அப்படிப்பட்டவர்களைக் காட்டிலும் ,ஏதோ ஒரு வகையில் இந்த பூம்பூம் மாட்டுக்காரன் சாதாரண மனிதர்களை விட  உயர்ந்தவன் என்று தோன்றியது சபேசனுக்கு.

    சபேசனுக்கு நன்றி கூறிவிட்டு  மேலும் மற்ற வீடுகளுக்கு சென்று தன்னுடைய தொழிலைத் தொடர, நாதஸ்வரத்தை வாசித்தபடியே நகரத் தொடங்கினான் பூம்பூம் மாட்டுக்காரன், தலையை ஆட்டியபடியே பின் தொடர்ந்தது பூம்பூம் மாடு. உள்ளிருந்து கனகா,  யாரு வாசல்லே  என்றாள், யாரும் இல்லே பூம்பூம் மாட்டுக் காரன் வந்தான், அவனுக்கு ஒரு பழைய வேட்டியைக் குடுத்து அனுப்பினேன்  என்றார் சபேசன்.

    அதெல்லாம் சரி காலம் கெட்டுக் கெடக்கு , வயசானவா நாம ரெண்டு பேரும் தனியா இருக்கோம், நீங்க பாட்டு தானம் தர்மம்னு கதவைத் திறந்து அவனுக்கு தானம் செய்யப் போறீங்க,   அவன் கையிலே வெச்சிருக்கற கொம்பாலே உங்களை அடிச்சுப் போட்டுட்டு  வீட்டிலே இருக்கறதை எல்லாம் எடுத்துண்டு போய்ட்டான்னா என்ன செய்யறது.

    என்னைக் கேக்காம கதவைத் திறக்காதீங்கன்னு எவ்ளோ தடவை உங்களுக்கு சொல்றது, இனிமே இப்பிடி கதவைத் திறக்காதீங்க என்றாள்.  சரி சரி என்று வேகமாய்த் தலையை ஆட்டினார் சபேசன்,

    பூம்பூம் மாட்டுக்காரன் வந்த வேலையை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தான், இவர்கள் வீட்டைத் தாண்டி செல்லும் போது  ஏனோ அந்த பூம் பூம் மாடு ஒரு முறை இவரை திரும்பிப் பார்த்துவிட்டு மேலே நடக்கத் தொடங்கியது.  ,

    அன்று மாலை ,கனகா கதவைத்  தாப்பாள் போட்டுக்கோ  ,காலார ஒரு நடை நடந்துட்டு , அப்பிடியே காய்கறி வாங்கிட்டு வரேன்  என்றபடி  வெளியே வந்தார்  சபேசன்,   சற்று தூரத்தில் அந்த மாடு படுத்துக் கொண்டிருந்தது, பூம்பூம் மாட்டுக்காரன்  அரசாங்க மதுக் கடையில் மதுபானம் வாங்கி அருந்திவிட்டு தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

    அவன் கண் விழித்து தனக்கு ஏதேனும் உண்ணக் கொடுப்பான் என்னும் நம்பிக்கையுடன்  பூம்பூம் மாடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.  அந்த மாட்டைக் கடந்து போகும்போது ஏனோ ஒரு முறை சபேசன் அந்த மாட்டைத் திரும்பிப் பார்த்தார். அதன் கண்களில் ஒரு இரக்கமும் , நன்றியும்  தெரிந்தது.

    Share