“நாகரீக பெப்பே”…….
தமிழ்த்தேனீ
உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே என்று முன் காலத்தில் ஏமாற்றுபவர்கள் கொக்கரிப்பது வழக்கம் .ஆனால் அந்தக் காலத்தில் வெறும் கோமணம் அல்லது,லங்கோட்டா என்று சொல்லுவார்கள் அதை உடுத்துக் கொண்டு, பாதுகாப்பாக வாழ்ந்தவர்கள்தான் அதிகம் பேர், அதற்குப் பிறகு அரை நிஜார், அரை நிக்கர் என்று சொல்லக் கூடிய பாதி கால்சட்டை வழக்கத்துக்கு வந்தது .
பிறகு அயல் நாட்டாரைப் பார்த்து நாமும் முழுக் கால் சட்டையை
அணிய ஆரம்பித்தோம் .ஆனால் நம்முடைய அரைக்கால் சட்டையிலிருந்து தோன்றியதுதான் அயல்நாட்டவரின் முழுக்கால் சட்டை.
இப்போதெல்லாம் நாம் அனேகமாக அயல் நாட்டு நாகரீகத்துக்கு
முழுமையாக ஆட்பட்டுவிட்டோம்.
அதன் படி வீட்டிலே வேட்டி கட்டிக் கொண்டிருந்த ஆண்களும்
வசதி காரணமாக நம்முடைய பழைய அரைக்கால் சட்டையின் புதுப்பிக்கப் பட்ட வடிவமான தொளதொளவென்றிருக்கும் ஷார்ட்ஸ் என்று சொல்லக்கூடிய
உடையை அணியத் தொடங்கி விட்டோம்
தினமலரில் மேற் கண்ட செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த பெப்பே என்கிற நிறுவனம் அரைக்கால் சட்டையைத் தயாரிக்க இந்தியாவில் 150 கோடி ரூபாய்களை முதலீடு செய்யப் போகிறதாம்….ஜாக்கிரதை .நம்முடைய வருமானத்தில் இன்னும் அதிகமாக நம்மிடமிருந்து அரைக்கால் சட்டைக்காக அளிக்கப் போகிறோம். நம்முடைய பழைய கலாச்சாரங்கள் எப்படி உருமாறி நம்மிடமே திரும்பி வந்து நமக்கே செலவு வைக்கிறது .
சமீப காலங்களில் கணிணித் துறையின் அமோக வளர்ச்சியால் பல இந்திய நடுத்தரக் குடும்பங்களில் இருந்து பல இளைஞர்கள் அமெரிக்கா போன்ற அயல் நாடுகளுக்கு கணிணித் துறை வல்லுனர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆங்கே சென்று வாழ்க்கையைத் தொடங்கி நம் நாட்டுக் கலாச்சரத்திலும் அன்னிய நாட்டுக் கலாசாரத்திலும் இங்கொரு கால் அங்கொரு கால் என்று வைத்துக் கொண்டு நிலைதடுமாறி விட்டு கடைசியில் இயலாமையினால் அன்னிய நாட்டுக் கலாசாரத்தையே முழுமையாக கடைப்பிடிப்பது என்கிற முடிவுக்கு வந்து விட்டார்கள்,
அப்படி அவர்கள் கலாச்சார மாறுதல்களுக்கு உட்பட்டு , ஜீன்ஸ், ஷார்ட்ஸ் என்று ஏகத்துக்கும் மாறிவிட்டதால் பெற்றோரை அங்கே அழைத்துச் சென்று அவர்களுக்கும் அன்னிய நாட்டுக் கலாசாரத்தை கற்றுக் கொடுத்து வாழப் பழக்கி விடுகிறார்கள். அப்படிப் பட்ட பெற்றோர் மறுபடியும் இந்தியாவுக்கு திரும்பும்போது ஜீன்ஸ் , ஷார்ட்ஸ் என்று அணிந்து கொண்டு உலா வருகிறார்கள்.
வேட்டி, சொக்காய் என்பதெல்லாம் மலையேறி வெகு காலம் ஆகிவிட்டது
ஆகவே இந்தியாவிலும் இந்த பெப்பே நிறுவனம் தயாரிக்கும் ஜீன்ஸ், ஷார்ட்ஸ் போன்றவை அதிக அளவிலே விற்கிறது. ஒரு அரை நிஜார் தைக்க அந்தக் காலத்திலே அரையணா ஆகுமென்று வைத்துக் கொள்வோம். இப்போது அதே அரை நிஜார் ,அதாவது அரைக்கால் சட்டை உருமாறி ஷாட்ஸ் என்று ஒப்பனை செய்து கொண்டு இருப்பதால்
ஒரு ஷார்ட்ஸ் 450 ரூபாய் ஆகிறது.
அனேக வயதானவர்களும் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு கையில் உயர்தர செல்போனையும் (பிள்ளைகள் வாங்கிக் கொடுத்தது) பிடித்துக் கொண்டு உலா வருகிறார்கள். இங்கே அயல் நாடுகளுக்கு செல்ல இயலாமல் இருக்கும் இளசுகள், அடேயப்பா இந்தப் பெரிசுகள் அலட்டும் அலட்டல் இருக்கிறதே தாங்க முடியலைப்பா என்று முணுமுணுப்பது காதில் விழுகிறதா.அடிப்படைக் கலாச்சாரம் மாறாமல் பெரியவர்களும் நடந்துகொண்டு பிள்ளைகளுக்கும் நம் கலாச்சாரத்தின் மேன்மையை உணர்த்த வேண்டிய தருணம் இது. நாம் ஷார்ட்ஸில் மட்டும் மாறவில்லை, மொத்த நாகரீகத்தின் ஆணி வேரையே மாற்றிவிட்டோமோ என்று தோன்றுகிறது
ஷார்ட்ஸ் அணிய வேண்டாம் என்று சொல்லவில்லை நம் நாகரீகத்தையும் , நம் கலாச்சாரத்தையும் முறையாகப் புரிந்து கொள்ளாமல், வேட்டி , அரை நிஜார் ஆக மாறி , அரை நிஜார் ஷார்ட்ஸ் ஆக மாறியதைப் போல
நம் நாகரீகத்தின் பல மேன்மைகளைக் கைவிட்டு , நம் வசதிக்காக நம் கலாச்சாரத்தை சுருக்கி மாற்றிவிட்டோம்.
அதனால்தான் இப்போது முறையற்ற திருமணங்கள், திருமணமாகி குறுகிய காலத்துக்குள்ளே விவாகரத்துகள், சிறு வயதிலேயே முறையற்ற கர்ப்பம்தரித்தல், குழந்தையைப் பெற்று குப்பைத் தொட்டியில் வீசுதல்,
திருமணமான பிறகும் ஆணுக்கு அன்னிய பெண்ணின் மேல் காதலும் , பெண்ணுக்கு அன்னிய ஆடவரின் மேல காதலும் ஏற்படும் நிலை.
தகாத காதல்களுக்காக கொலைகள், என்றெல்லாம் நம் கலாச்சாரம் சீரழிக்கப்பட்டு விட்டதே.
நாமாக தவறான பாதையில் சென்றாலும் தடுக்கி விழுந்துஇ அந்தப் பாதையில் பயணித்தாலும் விபரீத விளைவுகளே ஏற்படும் என்பதற்கு இந்த ஷார்ட்ஸ் என்னும் பெப்பே ஒரு சிறிய உதாரணம்தான் ஆனால் தற்போதைய நாகரீகக் கலாச்சாரம் உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே என்று கொக்கரித்துக் கொண்டிருக்கிறது
திசை தெரியாமல் குழம்பி திரு திருவென்று விழித்துக் கொண்டிருப்போரை ஏன் இப்படி பேபே என்று விழிக்கிறாய் என்பார்கள் .இப்படித்தான் நாமும் விழித்துக் கொண்டிருக்கிறோம் ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாய்
இப்படியே நாம் விழித்துக் கொண்டிருந்தால் மொத்தக் கலாச்சாரமும் அழிந்து போகும் என்பதில் சந்தேகமில்லைஆமாம் இந்தியர்கள் என்னதான் செய்து கொண்டிருக்கிறோம்.
விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது !
அரைக்கால் சட்டை கூட எனக்கும் வசதியாக இருக்கிறது என்றுதான் நினைத்தேன், விமரிசனம் என்று வரும்போது, விழித்துக் கொள்ள வேண்டியதுதான் நியாயம்!…