தமிழ்த்தேனீ

கனகா மிக ஆர்வமாக தன் கணவன் நாராயணனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள், என்னங்க நாளைக்கு காலையிலே 8 மணிக்கு நாம ரெண்டுபேரும் மந்தைவெளிக்கு போய்ட்டு வரணும்,

என்னோட பெரியம்மா போன் பண்ணாங்க உங்களுக்கு கூட தெரியுமே என்னோட பெரியம்மா பொண்ணு அதாங்க அவங்க வீட்டுக்காரர் கூட பெரிய டாக்டர்  அமெரிக்காவுல இருக்காங்க,

அவங்க இப்போ இந்தியாவுக்கு வந்திருக்காங்களாம், அவங்களுக்கு ரெண்டு பசங்க, நாளைக்கு அவங்களுக்கு அறுபதாம் கல்யாணம் அதுனாலே நாம ரெண்டுபேரும் போய் வாழ்த்திட்டு வரலாம் என்றாள்,

நாராயணன் கனகாவிடம் ஆமாம் நமக்கு அறுபதாம் கல்யாணம் நடந்துதே அப்போ அவங்க வந்தாங்களா, என்றார்,

ஏங்க அவங்க ரெண்டு பேரும் அப்போ அமெரிக்காவுல இருந்தாங்க, எப்பிடி வர முடியும் என்றாள் கனகா,

சரி உங்க பெரியம்மாவாவது வந்தாங்களா என்றார் நாராயணன்,

அவங்களும் வரலை, ஆனா நாம் போயிட்டுதான் வரணும், அவங்க எப்பிடி நடந்துகிட்டாலும் நாம விட்டுக்கொடுக்காம நடந்துக்குவோமே என்றாள் கனகா,

சரி போய்ட்டு வரலாம், உனக்கும் உங்க உறவுக்காரங்களை எல்லாம் பாத்தா மாதிரி இருக்கும்னு ஒப்புக் கொண்டார் நாராயணன்,

மறுநாள் காலை நாராயணனும் கனகாவும் கிளம்பினர், காரை ஓட்டிக்கொண்டே நாராயணன் ஆமாம் மந்தை வெளியிலே, எங்க நடக்குது அறுபதாம் கல்யாணம் என்றார்,

இதோ பாருங்க எனக்கு அவங்க வீடு தெரியும் விலாசம் தெரியாது, ஆனா மந்தைவெளி பஸ் நிலையத்துக்கு போனா அங்கேருந்து அவங்க வீட்டுக்கு வழி தெரியும், நீங்க மந்தை வெளி பஸ்நிலையத்துக்கு காரை ஓட்டுங்க என்றாள் கனகா,

சென்னை போக்குவரத்தில் நீந்தி மந்தைவெளி பஸ் நிலையத்தை அடைந்தவுடன், அங்கிருந்து நேரா போய் இடதுபக்கம் திரும்புங்க என்றாள், ஒரு ஓட்டுனரின் கவனத்தோடு அவள் சொல்லும் இடது பக்கம், வலது பக்கம் என்றெல்லாம் காதில் வாங்கிக் கொண்டு ஓட்டிக்கொண்டிருந்தார் நாராயணன்,

அந்தசாலை ஒரு முட்டு சந்தில் சென்று முடிந்தது, மேலே போக வழியில்லாமல் காரை நிறுத்திவிட்டு கனகாவை ஏறிட்டார் நாராயணன்,

கனகா கொஞ்சம் குழம்பியவளாய்  இங்கேதாங்க அவங்க வீடு,நான் அவங்க வீட்டுக்கு  10 வருஷத்துக்கு முன்னாடி வந்துருக்கேன்,ஆனா ஒரு அடையாளம் இருக்கு அவங்க வீட்டுக்கு முன்னாடி ஒரு குப்பை மேடு பெரியமலை மாதிரி இருக்கும் அப்பிடீன்னா, கோவம் கோவமாக வந்தது நாராயணனுக்கு,

இது ஒரு அடையாளமா? எப்பவோ அந்தக் குப்பையெல்லாம் அள்ளிகிட்டுப் போயிருப்பாங்க,அவங்க வீட்டுக்கு ஏதாச்சும் பேரு இருக்குமே அதுவாவது நினைவுக்கு வருதா பாரு என்றார் நாராயணன்,

 இல்லைங்க அந்த வீட்டைப் பார்த்தா உடனே கண்டு பிடிச்சுடுவேன் என்றாள் கனகா,பொறுமை இழந்தவராய் காரை விட்டு இறங்கி ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் சென்று,ஏங்க இங்கே ஒரு குப்பைமேடு மலைமாதிரி இருந்துதாமே, அந்த இடம் எங்க இருக்கு என்று பலகீனமான குரலில் கேட்ட நாராயணனை,

அந்த ஆட்டோஓட்டுனர் மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு, ஏன் சார் பாத்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க, விலாசம் இல்லாம இது மாதிரி ஒரு அடையாளம்சொன்னா எங்கே போயி தேடறது, ஆனா நீங்க அதிர்ஷ்டக்காரங்க அப்பிடியே பின்னாலே போயி மூணாவது லெப்டுலெ திரும்புங்க அங்கே வரும் அந்தக் குப்பை மலை என்றார்,

அதே போல அவர் சொன்னது போலவே பின்னால் சென்று மூணாவது லெப்டுலெ திரும்பியவுடன் வந்தது குப்பை மலை, 10 வருஷத்துக்கு முன் கனகா பார்த்த அதே குப்பை மலை, திடீர்னு மகிழ்ச்சியோடு கனகா அதோ பாருங்க அந்த வீடுதான் என்றாள்,

அவளின் அறியாமையை கண்டு சிரிப்பதா, ஆட்டோக்காரர் சொன்னது போல தாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா, அல்லது 10 வருடமாக ஒரேஇடத்தில் குப்பை மலையை வைத்திருக்கும் அரசாங்கத்தை கண்டிக்காத மக்களின் அறியாமையை எண்ணி கோவப்படுவதா, என்று புரியாமல் திகைத்து நின்றார் நாராயணன்,

நாதஸ்வரம் ஒலிக்க அந்த கல்யாண வீடு கலகலப்பாய் இருந்தது, வந்திருந்த உறவினர்கள் அனைவருமே சென்னை வாசிகள், எல்லோருமே அந்தக் குப்பை மலையை அடையாளம் வைத்துதான் வந்திருக்கின்றனரோ என்று யோசித்தார் நாராயணன், நாமெல்லாருமே எத்தனை வருடங்கள் ஆனாலும் நடுத்தெரு நாராயணர்கள் தானா?

எங்கே போய்க்கொண்டிருக்கிறோம், எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம், என்று எண்ணியபடியே, மணமக்களை வாழ்த்திவிட்டு உணவின் சுவையையும், குப்பை மலையின் நாற்றத்தையும் ஒருசேர அனுபவித்துவிட்டு ஒரு பீடாவையும் வாயில் போட்டுக்கொண்டு அவர்கள் அளித்த தேங்காய்ப் பையையும் வாங்கிக்கொண்டு அவர்களிடம் விடைபெற்று வெளியே வந்து மறுபடியும் காரில் ஏறி உட்கார்ந்து நாட்டைக் கொஞ்சமும் கவனிக்காத அரசாங்கத்தை ஒரு முறை எண்ணி வருந்தி விட்டு,

அந்தக் குப்பை மலையை பார்த்து ஒரு பெருமூச்சுவிட்டு, நாற்றம் தாங்காமல் காரை வேகமாக ஓட்ட ஆரம்பித்தார் நாராயணன்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on ““நடுத்தெரு நாராயணன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *