தமிழ்த்தேனீ

 

தொலைபேசி உரையாடல் : மனைவி பேசிக்கொண்டிருக்கிறார் அவருடைய கணவர் அருகிலிருக்கிறார்

மனைவி :ஹலோ யாரு? ஓ கமலியா சொல்லுங்க நல்லா இருக்கீங்களா

எதிர் முனை: ……

மனைவி :ஐயய்யோ அப்படியா

எதிர் முனை: ….. மனைவி : ஐயய்யோ அப்புறம் என்னாச்சு!

எதிர் முனை : …..

மனைவி :…. அடடா ஏன் இப்பிடி செஞ்சுட்டாங்க அடேடே ….ஐயய்யோ. போச்சு போச்சு .கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க வேண்டாமா?

எதிர் முனை:..

மனைவி :சரி ஒண்ணும் கவலைப்படாதீங்க . வேற வழியில்லே விதி, யாரை விட்டுது.

எதிர்முனை:….

மனைவி : அய்யோ… எல்லாம் தலையெழுத்து

எதிர் முனை:….

மனைவி: (கண்ணில் நீர் வழிய பேசுகிறார்) நான் எதிர்பார்க்கவே இல்லே இப்பிடியாகும்னு

(இந்தத் தொலைபேசி உரையாடல் கவனத்தை ஈர்க்கவே பதைபதைப்புடன் உட்கார்ந்திருக்கும் கணவர் சைகையினால் கேட்கிறார் என்ன ஆச்சு யாரு போன்லே?)

மனைவி : சத்தம் போடாதீங்க என்று சைகை காட்டவே அமைதியாக ஆனால் பதட்டமாகவே உட்கார்ந்திருக்கும் கணவர்

மனைவி : சரி நாம் கவலைப்பட்டு என்ன ஆவப்போகுது . மனசைத் தேத்திக்குங்க. வாழ்க்கையிலே இதெல்லாம் சகஜம்தான்.

நம்மோட முன்னொர்கள் எத்தனையோ பேரு செத்துப்போயிட்டாங்க அதுக்காக புருஷனோ பொண்டாட்டியோ அவங்களோடயே செத்துப் போயிர்றாங்களா?நீங்கதான் மனசைத் தேத்திக்கணும்

எதிர் முனை: …..

மனைவி: சரி அழுது என்னா ஆவபோகுது மேலே நடக்கறதை கவனிங்க என்னதான் ஆறுதல் சொன்னாலும் போனவங்க திரும்பி வரபோறாங்களா? இல்லே ஆறுதல் சொல்லி தீரப்போற துக்கமா இது? மனசைத் தேத்திக்கோங்க.

எதிர் முனை:………..

மனைவி: சரி உங்க உடம்பைப் பாத்துக்கோங்க , உணர்ச்சி வசப்படாதீங்க ஏற்கெனவே உங்களுக்கு ப்ரஷர் அதிகம். எனக்கும் இந்தச் சேதியைக் கேள்விப்பட்டதிலேருந்து படபடன்னு வருது. சரிங்க ஜாக்கிரதை நேர்லே சந்திப்போம், ஹும் வரேன், வீட்டுக்காரரையும் கூட்டிகிட்டு வரேன். சரி போனை வெச்சிடறேன். என்று புருஷன் போயிட்டாலும் நாம் இருக்கறவரைக்கும் குழந்தைங்களுக்காகவாவது வாழ்ந்து தானே ஆகணும் ,நீங்க மனசைத் தேத்திக்கங்க பாப்போம் அடுத்து என்ன நடக்குதுன்னு என்று கூறிவிட்டு ரிசீவரை வைத்தாள் மனைவி.

கணவர்: என்னாதும்மா என்ன ஆச்சு ஏதாவது சீரியஸ்ஸான விஷயமா

மனைவி: ஒண்ணுமில்லே என்றபடி போகிறாள்

கணவர்: ஆத்திரத்துடன் நான் ஒருத்தன் இங்கே பயந்துகிட்டே உக்காந்திருக்கேன் நீ பேசிப் பேசியே என் ப்ரஷரை தூண்டிவிட்டுட்டு ஒண்னுமில்லேன்னு போயிகிட்டே இருக்கியே என்னா விஷயம்ன்னு சொல்லு

காமாஷிஅம்மா அதாங்க நம்மோட உறவுக்காரங்க ,அவங்க புருஷன் ராமநாதன் சர் கூட கம்ப்யூட்டர் கம்பனிலே மேனேஜரா இருக்காரே.

கணவன்: ஆமா அவருக்கு என்ன என்று பதறியபடி கேட்கிறார்

மனைவி : “காவேரி” தொலைகாட்சித் தொடர்லே நடிச்சிட்டு இருந்தாரே அவரை சாகடிச்சிட்டாங்க

புருஷன் : என்னாது ! என்கிறார் பதறியபடி

ஆமாங்க: அவரு நடிச்சதுக்கு பணம் குடுக்காம ஏமாத்திகிட்டே இருந்திருக்காங்க. அந்தக் கம்பனிக் காரங்க ,இவரு ஒரு நாளு பெரிய சண்டை போட்டிருக்காரு இனிமே பணம் குடுத்தாதான் நடிக்க வருவேன்னு சொல்லிட்டாரு கறாரா.

புருஷன்: நியாயம்தானே , நிறையப் பேரு பணத்துக்குதானே நடிக்கறாங்க அதக் குடுக்காட்டி கேக்க மாட்டாங்களா ? அவரு நடிச்சதுக்குதானே பணம் கேட்டிருக்காரு . அதுக்கு கொலையே பண்ணிட்டாங்களா?

மனைவி: பாவங்க இவரு நியாயத்தைக் கேக்கப் போயி சாகடிச்சிட்டாங்க

புருஷன்: நாட்டிலே வர வர அநியாயம் அதிகமாயிட்டே போவுது .

மனைவி : இவரு நடிக்கறாரே அந்த அப்பா கேர்க்டருக்கு இவர் பேரையே வெச்சாங்க ராமநாதன்னு.  இவரு பணம் கேட்டு தொந்தரவு செய்யறாருன்னு அந்த கதாபாத்திர மேக்கப்போட இவங்களை போட்டோ எடுத்து அந்த வீட்டுலே இவரு போட்டோவை மாட்டி ஒரு மாலையை போட்டுட்டு ராமநாதன் செத்துப் போயிட்டாருன்னு கதையை மாத்தி எடுக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். அதான் பேசிகிட்டு இருந்தோம் என்றாள் சாவகாசமாக.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.