Tag: சக்தி சக்திதாசன்

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (270)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் அடுத்த மடலில் இணைகிறேன். இனியவைகள் சில இந்த மடலில் உங்களுடன் பகிர்வதில் மகிழ்வடைகிறேன். வாழ்க்கை எனும் பயணம் இருக்கிறதே அதன் சிக்கலான் பாதையைக் கடந்து நாம் ஒவ்வொன்றாக பல மைல்கற்களை அடைகிறோம். அப்படி அடையும்போது இடையிடையே எமது இலக்குகளில் சிலவற்றை அடையும்போது நம் வாழ்க்கைப் பாதையில் நாம் கடந்துவந்த பாதையைச் சற்று திரும்பநோக்கி அசைபோட்டுக் கொள்கிறோம்.

    மனித வாழ்க்கை என்பது என்ன? அனுபவங்களைச் சேகரித்து வைக்கும் ஒரு வங்கி என்று கூடச் சொல்லலாம் தானே!

    சதாபிஷேகம்! ஆமாம் ஒருவர் தனது 80 அகவை பூர்த்தி செய்யும்போது அதனைச் சதாபிஷேகம் என்கிறோம். 80 வயதுஆனவர்களை இன்னும் துல்லியமாகச் சொல்வதானால் வயது10மாதம் ஆனவர்களை ஆயிரம்பிறை கண்டவர்கள் என்று சொல்லலாம். அது எப்படி ஆயிரம் பிறை கண்டவர்கள் என்கிறீர்களா?

    80 வருடத்திற்கு 960 சந்திர தரிசனம். சில வருடங்களில் 13சந்திர தரிசனம் நிகழும். 80வருஷத்தில் 30சந்திர தரிசனம் அதிகமாக இருக்கும். அதையும் சேர்த்தால் 990வரும். பத்து மாதத்தில் பத்துசந்திர தரிசனத்தையும் சேர்க்கும்பொழுது 1000பிறைகள் நிறைவுபெறும். எண்பது வயது கடந்தாலே ஒருவர் பூரணவாழ்வு அடைந்து விட்டார்கள் என்று பெருமைப்படுகிறோம். எண்பது அகவை ஏன் மிகப்பெரிய சரித்திரம் என்கிறோம்? ஒருவர் 20 வயது முதல் 80 வயது வரை காணும் வாழ்வின் அனுபவங்களே அவருடையா வாழ்வில் முக்கியத்துவம் பெற்றுப் பதிவாகிறது. இந்த 60 வருட காலத்தில் ஒவ்வொருவருடைய வாழ்விலும் வெற்றிகளும், தோல்விகளும் மாறி மாறி வந்திருக்கும். எண்பது அகவை மனிதர் வாழ்ந்து விட்டால் அவர்கள் இத்தகைய தோல்விகளைகளையும், வெற்றிகளையும் தாங்கிக் கொள்ளும் மனதைரியத்தை அடைந்தவர்களாக இருப்பார்கள் என்பதுவே முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்தது. ஓர் எண்பதாண்டுப் பெரியவரின் வாழ்க்கை 60 ஆண்டு பேசும் சரித்திரமாக எம்முன்னால் உலவும் நிகழ்வே சதாபிஷேகம் ஆகிறது. நாம்அங்கே கொண்டாடுவது அவர்களுடைய சரீரத்தை அல்ல சரித்திரத்தையே !

    சமஸ்கிருதத்தில் 60 ஆண்டுப் பூர்த்தியை சஷ்டியப்தபூர்த்தி என்றும், 70 ஆண்டுகள் பூர்த்தியை பீமரத சாந்தி என்றும், 80 வயது பூர்த்தியைச் சதாபிஷேகம் என்றும் கொண்டாடுகிறார்கள். இதுவே நான் முன்பு சொன்ன வாழ்க்கைப் பயணத்தின் வெவ்வேறு இலக்குகளுக்கான மைற்கற்கள் ஆகின்றன. ஓர் ஆண் சதாபிஷேகம் காணும்போது தம்பதி சமேதராய் இருப்பவர் சிலரே. அதனால்தான் இத்தகைய தம்பதியினரிடம் ஆசி பெறுவது மிகவும் ஒரு பாக்கியம் என்று கருதப்படுகிறது.

    இதற்கு ஒரு சிறு மகாபாரத உபகதையொன்றுண்டு. தருமர் செய்த ராஜசூய யாகத்திற்கு சனகாதிகள் போயிருந்தார்கள். அவர்கள் அங்கு சென்றதன் காரணம் அவ் யாகத்திற்கு வாசுதேவர் வருவார் அங்கு அவரை வணங்கலாம் என்பதே. அவர்கள் எதிர்பார்த்தபடியே வாசுதேவரும் வந்தார் ஆனால் அவர் அவர்கள் எதிர்பார்க்காத காரியம் ஒன்றைச் செய்தார்.

    அது என்ன என்கிறீர்களா?

    அவர் அங்கு வந்திருந்த சில முதியவர்களைப் பாத நமஸ்காரம் செய்தார். அதைக் கண்ட சனகாதிகள் திகைத்து விட்டனர். அவர்கள் கண்ணபிரானிடமே”நாங்களெல்லாம் உங்களை வணங்குவதற்காக வந்திருக்கிறோம், ஏன் இவ்வகிலமே உங்களை வணங்குகிறது. நீங்கள் எதற்காக அம்முதியவர்களை வணங்கினீர்கள்?” என்றார்கள். அதற்கு வாசுதேவர் ” உலகில் ஆறு வகையான முதியவர்கள் வணங்கத்தக்கவர்கள் 1) தினமும் அன்னம் பாலிப்பவன் 2) வாலிப வயதிலேயே யாகம் செய்தவர் 3) ஒருநாள் அல்ல இருநாள் அல்ல வருடக்கணக்கில் தவவாழ்வை மேற்கொண்டவர் 4) கற்புக்கரசியராக வாழ்ந்தவர்கள் 5) பிரம்மத்தை அறிந்த ஞானியர் 6) ஆயிரம் பிறை கண்டவர்கள்.

    இதிலிருந்து நாம் சதாபிஷேகம் காணும் பெரியவர்களின் ஆசியைப் பெறுவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.சரி, அப்படியான ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு அத்தகைய தம்பதியரின் ஆசியைப் பெற்றுக்கொள்ளும் பாக்கியம் எனக்கும் எனது மனைவிக்கும் சமீபத்தில் கிடைத்தது. செட்டிநாட்டுக்கும் எனக்கும் உள்ள சொந்தம் அலாதியானது. எனது எழுத்துக்கு வழிகாட்டியாக, மானசீகக் குருவாக இருக்கும் கவியரசர் கண்ணதாசனை ஈன்ற மண், யாதும் ஊரே! யாவரும் கேளிர் எனும் அரும்பெரும் தத்துவ வரிகளை எமக்களித்த கணியன் பூங்குன்றனார் தோன்றிய மண், புதுமையான் எழுத்துக்களுக்கு வித்திட்ட கல்கண்டை எமக்குச் சுவைக்கத் தந்த பெரியவர் தமிழ்வாணன் ஜயாவை ஈன்ற மண், மறையும்வரை என்னோடு நன்கு பழகி வந்த பதிப்புலகின் மூத்தவர், கவியரசரின் உற்ற நண்பன் வானதி திருநாவுக்கரசு ஜயா அவர்களைத் தந்த மண். என் இனிய நண்பர்களான ரவி, லேனா தமிழ்வாணன் சகோதரர்கள், அன்பு நண்பர் காந்தி கண்ணதாசன், அன்புத்தம்பி தேவகோட்டை இராமநாதன் எனப் பல சொந்தங்களை தமிழன்னை எனக்கு ஈயக் காரணமாயிருந்த மண்ணின் வாசத்தைக் கொண்டது செட்டிநாடு.

    அத்தகைய நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த ஜயா தியாகராஜன் அவர்களது சதாபிஷேகக் கொண்டாட்டம் லண்டனில் “டார்ட்ஃபோர்ட் (Dartford)” எனும் இடத்தில் இருவாரங்களின் முன் நடந்தபோது ஜயாவை வாழ்த்திப்பேசும் மகிழ்ச்சியான பணியை எனக்குத் தந்திருந்தார்கள். தியாகராஜன் ஜயா அவர்கள் சுமார் 55வருடங்களுக்கு முன்னால் இலண்டனுக்கு வந்தவர்.

    இலண்டன் தமிழ்ச்சங்கம், மற்றும் இலண்டன் நகரத்தார் சங்கம் அனைத்துக்கும் முதல் வித்திட்டு அனைவரையும் ஒன்றிணைப்பதில் முன்னின்று வெற்றி கண்டவர். இலண்டன் ஈஸ்ட்காம் முருகன் கோவில் அமைப்பதில் முன்னின்று செயலாற்றியவர்களில் ஒருவர். இப்படியாக ஐயா தமிழுக்கும், சைவத்துக்கும் பல சேவைகளை ஆற்றிக் கொண்டிருப்பவர். அத்தகைய பெரியவரின் சதாபிஷேக விழாவில் இச்சிறியேனுக்கு நாலுவரிகள் பேசக்கிடைத்த சந்தர்ப்பத்தை நல்கிய தமிழன்னைக்கும், என்றும் எனக்காக்கும் அண்ணமலையானுக்கும் நான் என்றென்றும் நன்றி செலுத்துவேன்.

    ஐயா தியாகராஜன் அவர்களுடைய குடும்பத்தோடு, இலண்டன் நகரத்தார் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், இலண்டன் தமிழ்சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து இவ்விழாவினைச் சிறப்பித்திருந்தார்கள்.. அருமையான சிற்றுண்டிகளோடு, இரவுப் போசனத்தையும் அளித்து அனைவரையும் மகிழ்வித்தார்கள். அனைத்துக்கும் மேலாக ஐயாவினதும், அம்மாவினதும் ஆசிகளைப் பெற்றுக் கொண்டது ஒன்றே அனைத்துக்கும் மேலாக நாமடைந்த பாக்கியம் என்று எண்ணுகிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில்…
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (269)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் மற்றொரு வாரத்தில் உங்களுக்கு மடல் வரைவதில் மனம் மகிழ்கிறேன். காலநீரோட்டத்தில் மிதந்து செல்லும் எம் வாழ்க்கைப்படகு எதிர் கொள்ளும் சாவால்கள் எண்ணற்றவை. அவற்றை எதிர்கொள்ளும் நிகழ்வுகளில் நாம் பெற்றுக்கொள்ளும் அனுபவங்கள் விலைமதிப்பற்றவை.பெரும்பான்மையான சமயங்களில் அவ்வனுபங்களின் அடிப்படையில் நாம் எடுத்துக்கொள்ளும் முடிவுகள் எமது வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கின்றது. சில சமயங்களில் அம்முடிவுகள் மேலும் பல பாதிப்புகளையும் அதன் மூலம் அனுபவங்களையும் புகட்டுகின்றன. ஆனால் மிகவும் சொற்பமான வேளைகளில் எமது நடவடிக்கைகள் தரும் விளைவுகள் எமது வாழ்க்கையின் முடிவிற்கே எம்மை அழைத்துச் செல்கின்றது.

    சமுதாயத்தில் நிகழ்த்தப்படும் பல நிகழ்வுகள் அன்றி எடுக்கப்படும் நடவடிக்கைகள் சட்டத்தின் கண்களில் குற்றமாகக் காட்சியளிக்கின்றன. ஆனால் நீதிதேவதையின் முன்றிலில் தீவிர விசாரணைகள் அந்நிகழ்வின் மீது பாய்ச்சும் ஒளி அந்நடவடிக்கையின் மீது செலுத்தப்படும் சட்டத்துக்குப் புறம்பானது எனும் முத்திரையைக் கேள்விக்குறியாக்குகிறது. சட்டப்புத்தகத்தில் குற்றமாகக் விபரிக்கப்படும் செயல்கள் அனைத்து,ம் நீதிமன்றத்தில் குற்றமாக நிரூபிக்கப்படுவதில்லை. எமக்கு இழைக்கப்படும் அல்லது எம்மீது இழைக்கப்படும் தாக்குதல் அன்றி எமது பிரத்தியேக வெளியில் அனுமதியின்றி நுழைந்து பயமுறுத்தும் வேளையில் அதிலிருந்து தப்புவதற்காக நாம் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கிறோம். அந்நடவடிக்கை கூடச் சட்ட விரோதமானது என்றோ அன்றி அடுத்தவர் மீது இழைக்கப்படும் தாக்குதல் என்றோ சட்டப்புத்தகத்தில் விபரிக்கப்படலாம் ஆனால் நீதிமன்றத்தில் தீர்ப்புகள் வித்தியாசமாகலாம்.

    கடந்த ஏப்பிரல் மாதம் 4ஆம் திகதி லண்டனில் உள்ள “ஹிதர் ஹிறீன் ( Hither Green ) “என்னும் இடத்தில் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது. அப்பகுதியில் வசித்து வந்த 78வயதான முதியவர் ” றிச்சார்ட் ஒஸ்போர்ன்-புறூக்ஸ் (Richard Osborne-Brooks) “என்பவரின் இல்லத்தில் இரண்டு திருடர்கள் நள்ளிரவில் புகுந்தனர். அரவம் கேட்டு விழித்த முதியவர் அவர்களை சமையலறையில் எதிர்கொண்டார். அவரை நோக்கி ஸ்குருட்ரைவர் சகிதம் வந்த ஒரு திருடனுடன் அவருக்குக் கைகலப்பு ஏற்பட்டது தற்காப்புக்காக கைகளில் கத்தியை எடுத்த அந்த முதியவரின் கத்திக்குத்துக்கு அந்தத் திருடன் ஆளானான். அதைத்தொடர்ந்து வெளியே ஒடிய அவ்விருவரில் கத்திக்குத்துக்கு இலக்கான திருடன் தரையில் விழ அவனை இழுத்துச் சென்ற மற்றைய திருடன் அவனை அப்படியே நடைபாதையில் விட்டுவிட்டு தனது வேனில் ஏறித் தப்பித்து விட்டான். தரையில் விழுந்தத் திருடனை அவ்விடத்துக்கு விரைந்த அவசர சிகிச்சை பிரிவினரால் காப்பாற்ற முடியவில்லை. இறந்தவன் 37வயதுடைய ” ஹென்றி வின்சென்ட்(Henry Vincent)” என்னும் மனிதன். மற்றைய 28வயதுடைய “பில்லி ஜீவ்ஸ்(Billy Jeeves) எனும் திருடன் தப்பியோடி விட்டான். அவனை போலிசார் வலைவிரித்துத் தேடுகிறார்கள். அவன் தப்பிச்சென்ற வேன் எரியுண்ட நிலையில் “ஓப்பிங்டன்” எனும் இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.

    இச்சம்பவம் நடந்த அடுத்தநாளே 78 வயது நிரம்பிய வயதானவர், அத்திருடனைக் கொலை செய்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார். அவருக்காக பொதுமக்கள் மத்தியில் பரந்த அனுதாப அலை வீசியது. ஊடகங்கள் பலவற்றிலும்,சமூக வலைத்தளங்களிலும் அவ்வயதானருக்கு ஆதரவான குரல்கள் ஒலித்தன. தீவிர விசாரணையின் பின்னால் அம்முதியவர் எந்தவிதக் குற்றச்சாட்டும் இல்லாமல் விடுவிக்கப்பட்டார். இது நடந்ததன் பின்னால் நிலைமை அவ்விடத்தில் கொஞ்சம் சிக்கலானது. உயிரிழந்த திருடனின் குடும்பத்தினர் அவனது அஞ்சலிக்காக அத்தெருவில் அவன் இறந்து விழுந்து கிடந்த இடத்தில் அதன் முன்னால் இருந்த ஒரு வீட்டின் வேலியில் அவனின் அஞ்சலிக்காக,மலர்க்கொத்துக்களைக் கட்டிவிட்டார்கள்.

    கொதித்தெழுந்தது சுற்றியிருந்த சமூகம். இறந்தவன் என்ன தியாகியா? இல்லை யாரையாவது காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்தவனா? அன்றி ஏதுமறியாத ஒருவன் விபத்தில் அகப்பட்டு உயிரிழந்தானா? அவனுக்காக எதற்கு மலர்க்கொத்துகள் வைக்க வேண்டும்? ஒரு வயதான 78 வயது முதியவரைத் தாக்கிக் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு அவருடைய இல்லத்துக்குள் நுழைந்த திருடனுக்கா கெளரவம் அளிப்பது ? எனும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் கட்டி வைக்கப்பட்ட மலர்க்கொத்துகளை பிடுங்கி எறிந்தனர் அத்தெருவில் வசிக்கும் அயலவர்கள்.

    இறந்தவன் திருடனாக இருந்தாலும் மனிதன் தானே! அவன் எமது மகன், சகோதரன் அவனின் இழப்புக்காக நாம் அஞ்சலி செய்வது எமது உரிமை என்று வாதடியபடி மீண்டும் மலர்க்கொத்துகளை அவ்விடத்தில் வைத்தார்கள் அத்திருடனின் உறவினர்கள். அதை மீண்டும் பிடுங்கி எறிந்தார்கள் அயலவர்களிவர்களுக்கிடையில் நடைபெறும் போராட்டத்தைக் கண்டு தலையிடாது அவர்கள் கைகலப்பில் ஈடுபடாமல் கண்காணித்துக் கொண்டி ருந்தனர் காவற்துறையினர்.

    இந்நிலையில் தான் சட்டத்தின் முன்னால் எமது வீட்டில் புகும் கொள்ளையர்களைத் தடுப்பதற்கு நாம் எதுவரை போகலாம்? எனும் கேள்வி எழுகிறது. இங்கிலாந்துச் சட்டத்தின் பிரகாரம் எமது வீட்டுக்குள் புகும் கொள்ளையரிடமிருந்து நாம் தப்பித்துக் கொள்வதற்கு “ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் தற்காப்புத் தாக்குதல்களை பிரயோகிக்கலாம்” என்று கூறப்படுக்கிறது. இந்தக் “குறிப்பிட்ட வரம்புக்குள் தற்காப்புப் தாக்குதல்கள்” என்பதன் விளக்கம் முன்னர் திட்டமிடாமல் அந்தப் பொழுதில் தப்பித்துக் கொள்வதற்காகக் கையில் அகப்படும் ஆயுதத்தைப் பிரயோகிக்கலாம் என்றே கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் அத்தாக்குதல் நடைபெற்ற வேளையில் இருந்த சூழல், குற்றம் யார்மீது இழைக்கப்படுக்கிறதோ அவர் பிரயோகித்த தாக்குதல் நியாயமாகத் தான் தப்பித்துக் கொள்வதற்காகவும், தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் நிகழ்த்தப்பட்டதுதானா ஆழமாக விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

    எது எப்படியிருப்பினும் ஒரு முதியவர் தொடரும் அச்சத்துக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரால் தாக்கப்பட்டு இறந்த திருடனின் நண்பர்களிடமிருந்து அவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் தற்போது அவர் யாருக்கும் தெரியாத இடத்தில் பொலீசாரின் பாதுகாப்பிலிருக்கிறார். ஒரு தெருவில் உரிமைப் போர் நடைப்பெறுகிறது. பேராசையினால் ஒரு மனிதன் உயிரிழந்திருக்கிறான்.ஒன்றாகக் குற்றச்செயலில் ஈடுபட்டு விட்டு நண்பன் இறந்தாலும் பரவாயில்லை நாம் தப்பித்தால் போதும் என்று ஒருவன் தலைமறைவாகியிருக்கிறான்.

    இதனால் தான் “சட்டம் ஒரு இருட்டறை” என்றாரோ அறிஞர் அண்ணா?

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (266)

    அன்பினியவர்களே!
    அன்பான வணக்கங்கள் இதோ அடுத்த மடலில் உங்களைச் சந்திக்க ஆவலாய் விரைந்துள்ளேன். கல்வி என்பது ஒரு மனிதனுக்கு மேம்பட்ட அறிவையளிப்பது. வாழ்வின் பொதுவான சிக்கல்களை எவ்வாறு இலகுவாகச் சமாளிப்பது என்பது மட்டுமின்றி உலகின் பல அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றும் அறிவைக் கல்வி அளிக்கிறது என்பதுவே நிதர்சனமான உண்மை. மனித வாழ்வின் வாழ்க்கை நிலைகள் காலங்களுக்கூடாக மாறி வந்திருக்கிறது. அம்மாற்றங்களின் விளைவாக அவ்வப்போது அவர்களது தேவைகளும் தமது வடிவத்தில் மாற்றமடைந்து வந்திருக்கிறது. இம்மாற்றங்களைச் சமாளிப்பதற்காக, அதற்கான அடித்தளத்தை உள்வாங்கி அம்மாற்றங்களுக்குத் தேவையான அளவு அறிவையளிக்கக் கூடிய வகையில் கல்வியின் வடிவங்களும் மாற்றமடைந்தே வந்திருக்கிறது. இவைகள் நிச்சயமாக சமுதாயத்துக்கு இன்றியமையாத தேவை எனலாம்.

    மனித சமுதாயம் உலகளாவிய ரீதியில் தொடர்ந்து கண்டு வந்த மாற்றங்கள் அனைத்து நாடுகளிலும், அனைத்து சமுதாயங்களிலும் ஏறத்தாழ ஒரே மாதிரியான மாற்றங்களாகவே காணப்படுகின்றன. ஆனால் இம் மாற்றங்களை அவைகள் அடைந்த காலகட்டங்கள் அந்தந்த நாடுகளின் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப வேறுபட்டே இருக்கின்றன. மனிதனுடைய வாழக்கையின் மாறுதலில் மிக முக்கியமான மாறுதல்கள் அவன் வாழும் சூழலின், மாற்றங்களும் அவைகளின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் தன்மையில் தேவைப்பட்ட போக்குவரத்து வசதிகளுமேயாகும். கால்நடையாகப் பயணித்த மனிதனின் வாழ்வின் மாற்றங்கள் அவனைக் கைவண்டி, மாட்டு வண்டி, குதிரை வண்டி, கார், பஸ்,  சைக்கிள், மோட்டார் சைக்கிள், ரெயில், விமானம், ராக்கெட் என பல்வேறு பரிமாணங்களுக்கூடாகப் பயணிக்க வைத்திருக்கிறது.

    இவைகளின் மாற்றங்களுக்குப் பின்னணியில் கண்டுபிடிப்புகளும், அவற்றைக் கையாண்ட விஞ்ஞானிகளும் இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் இக்கண்டுபிடிப்புகளைக் கையாளும் திறமையைக் கல்வியே ஈந்திருக்கிறது என்றால் மிகையாகாது. சமுதாயத் தேவைகளுக்கேற்ப கல்விமுறையை விஞ்ஞானம், கலை, சட்டம், மருத்துவம், பொறியியல்,வணிகம் எனப் பல்வேறு கட்டமைப்புகளுக்கூடாகச் சீராக்கினார்கள். எந்தெந்தத் துறையை எவரெவர் தேர்ந்தெடுத்தாலும் அதற்குரிய அடிப்படைக் கல்வியறிவு அவர்களுக்கு இருக்கிறதா என்று சோதித்தே அவர்களை அத்துறைக்கு அனுமதித்தார்கள். இன்றைய காலகட்டத்தில் எந்தத்துறை தமது வாழ்வின் வசதியைப் பெருக்கிக் கொள்ளக்கூடிய வகையில் பொருளீட்ட உதவுகிறதோ அந்தத்துறையயே பெரும்பான்மையோர் தேர்ந்தெடுப்பதை அவதானிக்கலாம். அத்தகைய சூழலில்தான் சமுதாய மாற்றங்களின் தேவைகளின் முன்னிலையாக சிவில் பொறியியல் துறை நிர்வகிக்கப்பட்டது.

    19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பல கண்டுபிடிப்புகளை, பல திறமைகளை கொண்டுவரக்கூடிய அளவில் அவர்களுடைய அறிவுத்திறனை வளர்க்கக்கூடிய அளவுக்கு முன்னேற்றங்கள் நிகழ்ந்திருந்தன. அகிலத்தின் பல பாகங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து பெரிய பெரித்தானியா எனும் நிலையை அடைந்திருந்த காலகட்டமது. அபோதுதான் 1806ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி, இங்கிலாந்தின் ஹாம்ஷையர் பகுதியில் உள்ள போட்ஸ்மவுத் எனும் இடத்தில் பிரெஞ்சு சிவில் பொறியியலாளரான மார்க் இசம்பாட் புரூனெல் என்பவருக்கும் சோபியா கிங்டொம் எனும் ஆங்கிலப் பெண்மணிக்கும் அவதரித்தார் “இசம்பாட் கிங்டொம் புரூனெல்.” இவருக்கு இரண்டு மூத்த சகோதரிகள் இருந்தார்கள். வல்லமை வாய்ந்த பொறியியலாளரான இவரது தந்தை நான்கு வயதிலேயே இவருக்கு வரைதல், மற்றும் கூர்மையான அவதானம் என்பனவற்றுக்கான பயிற்சிகளை அளித்தார் என்பதும், எட்டு வயதில் கட்டிட வரைதல் பயிற்சியும், கட்டிட வரைபடங்களிலுள்ள பிழைகளைக் கண்டறியும் திறமைகளையும் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    14 வயதாயிருக்கும்போதே இளம் புரூனெல் பிரெஞ்சுப் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார். இவருக்குப் பதினைந்து வயதாக இருக்கும் போது அப்போது 5000பவுண்ட்ஸ் கடனில் மூழ்கிய அவரது தந்தை சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறையிலிருந்து விடுதலையாகும் வழி தெரியாது இருந்த அவருக்கு அன்றைய ரஸ்யா அடைக்கலம் கொடுக்க முன்வந்தது. தம்முடைய நாட்டு வல்லமை மிக்க சிவில் பொறியியலாளர் ஒருவரை இழக்க விரும்பாத அன்றைய இங்கிலாந்து அரசு தாமே அவரது கடனை அடைத்து அவரை விடுவித்தது.

    இங்கிலாந்தில் அமைக்கப்பட்ட முதலாவது ஆற்றுக்குக் கீழான சுரங்கப்பாதையை அமைக்கும் பணியில் முக்கிய பொறியியலாளராகவிருந்த இவரது தந்தையுடன் உதவியாளாராக இவர் பணிபுரிந்தார். இப்பணியின்போது ஏற்பட்ட இரண்டு பெரிய விபத்துக்கள் ஒன்றில் புரூனெல் காயமடைந்தார். இவரின் திறமைகளின் சான்றாக இன்றும் நாம் காண்பது “Clifton suspension bridge-கிளிப்டன் தொங்குபாலம்.”  இங்கிலாந்தின் பிறிஸ்டல் நகரில் இது அமைந்துள்ளது. இங்கிலாந்தின் பொற்காலம் என்று சொல்லப்பட்ட “தொழிற்சாலைப் புரட்சி” யில் முக்கிய பாகத்தை வகித்தவர் இவர் என்பதே உண்மை. இங்கிலாந்தின் ரெயில் பாதை அமைப்புக்களில் அவற்றை மிகவும் சிறப்பான முறையில் திட்டங்களைத் தீட்டி நிர்மாணிக்கும் பணியில் இவரே முதலிடம் வகித்திருக்கிறார்.

    இங்கிலாந்தின் முதலாவதாக அமைக்கப்பட்ட மிக நீண்ட ரெயில் பாதையில் ஓடும் “த கிரேட் வெஸ்டேன் ரெயில்வே (The great Western Railway) வரைபடத் திட்டமிடல் தொடங்கி நிர்மாணிப்புக்குக் கொண்டு வந்தவர் இவரே. இந்த ரெயில் சேவையின் ஆரம்பம் 1833ஆம் ஆண்டு பிறிஸ்டல் நகரில் நிகழ்ந்தது. இதன் முதன்மைப் பொறுயியலாளரான புரூனெலின் திட்டம் லண்டனில் டிக்கட் வாங்கும் பயணி அந்தப் பயணச்சீட்டுடன் நியூயோர்க் நகரை சென்றடைய வேண்டும் என்பதே! எப்படி என்கிறீர்களா ? லண்டனில் ” த கிரேட் வெஸ்டேன் ” ரெயில் சேவையில் ஏறும் பயணி பிறிஸ்டலைச் சென்றடைந்து அங்குத் துறைமுகத்தில் ” த கிரேட் வெஸ்டேன் ஸ்டீம்போட் ” எனும் கப்பற்சேவையில் தமது பயணத்தைத் தொடர்ந்து நியூயோர்க் நகரைச் சென்றடைய வேண்டும். அதுவரையும் சாதாரண “கேஜ்”எனும் அளவிலான தண்டவாளத்தைக் கொண்டிருந்த ரெயில் சேவை புரோட் கேஜ் (Broad gauge) எனும் தண்டவாள அமைப்புக்கு மாற்றியவர் எனும் பெருமை இவரையே சாரும்.

    இங்கிலாந்தின் அதிசிறந்த பொறியியலாளர் எனும் பெருமை பெற்ற இவர் அமைத்த பல ரெயில்வே பாலங்கள், சுரங்கப்பாதைகள் இன்றும் இவரது பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. 19ஆம் நூற்றாண்டின் பொறியியல் சிங்கம் எனப்பெயர் பெற்ற இவர் 2002ம் ஆண்டு பிபிஸி நடத்திய பிரித்தானியாவின் பிரபல்யமான 100 பேர்கள் எனும் பொதுமக்கள் கருத்துக்கணிப்பில் புரூனெல் அவர்கள் இரண்டாவதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

    இவருடைய பெயரால் இயங்கிக் கொண்டிருக்கும் புரூனெல் பல்கலைகழகம் இவரைப் போன்ற திறமையாளர்கள் காலத்தால் அழிக்கப்படாதவர்கள் என்பது யதார்த்தம்.

    தனது 53வது வயதில் காலன் இவரைத் தன்னோடு அழைத்துக் கொண்டு விட்டான். 1859ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி இருதய நோய்க்கு இரையாகினார் புரூனெல். ஏப்பிரல் மாதம் பிறந்த இணையற்ற ஆங்கிலப் பொறியியலாளரான இவரைப் பற்றிய நினைவுகளை உங்களுடன் மீட்டியதில் ஆனந்தமடைகிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (265)

     

    சக்திசக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் இந்த வார மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன். மனித வாழ்க்கை என்பது நம்பிக்கையின் அத்திவாரத்திலே தான் கட்டியெழுப்பப்படுகிறது. நம்பிக்கையற்ற மனிதர் வாழ்வில் வெற்றி பெற்றதாகச் சரித்திரமேயில்லை. நம்பிக்கை என்பதை ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றில் அவர்களின் அறிவுக்குத் தமது வாழ்வினைச் செப்பனிடத் தேவையானது எனும் ஏதோ ஒன்றில் வைக்கிறார்கள். இவ்வகிலத்தில் பல நாடுகள் இருக்கின்றன அப்பல நாடுகளிலும் பல இன மக்கள் பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களாக இருக்கிறார்கள். கற்கால மனிதர் தமக்கென கொண்டிருந்த நம்பிக்கைகள், தற்கால மனிதர்களிடம் நம்பிக்கைகளிலும் இருந்து வேறுபட்டவை. அன்றைய மனிதரைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவருக்கும் பொதுவாக, அனைவரையும் இணைக்கக் கூடிய வலிமை மிக்க ஒரு நம்பிக்கையாக தமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் மீது நம்பிக்கை வைக்கத் தலைப்பட்டார்கள்.

    அன்றைய அவர்களின் அறிவுக்கு எட்டியபடி அவர்களால் விளக்கப்பட முடியாத பல நிகழ்வுகளை விளக்குவதற்காகவும், மக்களின் வாழ்வை ஒரு நெறிமுறைக்குள் கொண்டு வருவதற்கும் ஏதுவாக இறை நம்பிக்கையை மக்களின் மனதில் நிலை நிறுத்தினார்கள். இவ்விறை நம்பிக்கையின் படி அவரவர் சமுதாயங்களில் வழிபடும் தெய்வங்களை முன்னிலைப்படுத்தி மதப்பிரிவுகளை ஏற்படுத்தினார்கள். அதைத் தொடர்ந்து காலகாலமாக இம்மத உணர்வுகளின் அடிப்படையே சமுதாயங்களின் ஸ்திரத் தன்மைக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. எப்படியும் வாழலாம் என்பதிலிருந்து இப்படித்தான் வாழவேண்டும் எனும் கோட்பாட்டைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மதக் கோட்பாடுகளை உபயோகித்தார்கள். அன்றைய காலகட்டத்தில் இதன் தேவை அவசியமாகவிருந்தது.

    காலச்சக்கரம் உருண்டோட மனித இனமானது பல மாற்றங்களுக்குள்ளானது. மனிதனுடைய விஞ்ஞான அறிவு விஸ்தீரணமடையத் தொடங்கியது. புரியாமல் இருந்த பல நிகழ்வுகளுக்கு விஞ்ஞானரீதியான விளக்கமளிக்கும் அறிவை மனித இனம் பெற்றது. அன்றைய மனிதன் கடவுளாக வழிபட்ட நிலவினிலே இன்றைய மனிதன் கால் பதிக்குமளவுக்கு அவனது விஞ்ஞான அறிவு வளர்ந்தது. இறைசக்தி என்று எதை நம்பினோமோ அவற்றை நோக்கிய எமது கேள்விகள் பல அர்த்தம் நிறைந்ததாகப் பட்டது. மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி இறைவன் எனும் மாயையின் மூலம் பலர் தமது வாழ்வை உயர்த்திக் கொள்கிறார்கள் எனும் எண்ணம் பலரின் மனதில் பலமாக தலைதூக்கியது. விளவு ஆத்திகம், நாத்திகம் எனும் பிரிவுகளின் வாதம் தலைதூக்கியது. அதன் அதிஉச்சக் கட்டமாக இன்றைய காலகட்டத்தைப் பார்க்கிறோம்.

    இங்கேதான் ஒரு பலமான கேள்வி எழுகிறது. “இறை நம்பிக்கை ” என்பது மக்களை ஏமாற்றுவதற்காக கையாளப்படும் ஒரு வழிமுறையா ? வாழ்க்கை என்பது நிலையற்றது. நாளை எமது வாழ்வில் என்ன நிகழும் என்பதனை யாருமே அறுதியிட்டுக் கூறமுடியாது. நாம் எதிர்பார்க்காத எத்தனையோ நிகழ்வுகள் பாதகமாக இருந்தாலும் சரி, சாதகமாக இருந்தாலும் சரி எம் வாழ்வினில் நிகழ்ந்திருக்கிறது, நிகழும் என்பதனை நாம் யாருமே மறுக்க முடியாது. இதுதான் யதார்த்தம். இது ஏன் எமக்கு நடந்தது ? எனும் கேள்வி எம் எல்லோருடைய மனதிலும் ஏதோ ஒரு கால கட்டத்தில் எழுந்திருக்கும் என்பதுவே உண்மை. எமக்கு நிகழ்ந்தவைகள், நிகழப் போகிறவைகளுக்கு விளக்கம் அளிக்க யாருக்குமே முடியாத நிலையில் நாம் சிலவேளைகளில் எமக்கும் மேலே ஒரு சக்தி எம்மீது இவற்றை நிகழ்விக்கிறது எனும் நம்பிக்கை கொண்டாக வேண்டியிருக்கிறது. அப்படியான நம்பிக்கை அலைபாய்ந்தோடும் எமது மனநிலையைச் சீராக்க உதவுகிறது. இன்று தனிமனித சுதந்திரம், ஜனநாயகம் என்பன பல இடங்களில் முன்னிறுத்தப்படுகின்றன.

    இறைநம்பிக்கை கொள்வது ஒவ்வொரு மனிதனதும் தனிஉரிமையாவது போல, இறைநம்பிக்கை அற்றிருப்பதுவும் அவர்களின் தனி உரிமையே. எங்கே எப்போது இவையிரண்டுக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுகிறது என்றால் ஒன்றின் மீது மற்றொன்றைத் திணிக்க முயலும்போதுதான்.

    சமயம், மதம் எனும் பெயரில் அடுத்தவரின் தனிஉரிமைகளைப் பறிக்கும் செயல்களை மூடநம்பிக்கை எனும் பெயரில் விமர்சித்து மாற்ற முயற்சிப்பது என்றும் தவறேயாகாது. ஆனால் அம்மூடநம்பிக்கைகள் எனும் பெயரில் ஒரு மனிதன் தன் மனதில் கொண்டிருக்கும் நம்பிக்கையின் ஆணிவேரைப் பிடுங்க முயற்சிப்பது தவறாகும். அதேபோல அர்த்தமில்லாத பல விதிமுறைகளைச் சம்பிரதாயம் எனும் பெயரில் அதை ஏற்க மறுப்போரின் மீது புகுத்த முயற்சிப்பதோ அன்றி அவற்றின் பெயரில் ஒருவரின் நியாயமான முன்னேற்றங்களைத் தடுப்பதோ தவறாகும்.

    ஆனால் இன்றைய அவசர உலகில் பலர் இறை நம்பிக்கை என்பதனைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். சமுதாயத்தில் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களால் மேற்கொள்ளப்படும் சுயநலப் போக்குகளை ஆத்திகவாதம் என்று பிழையாக அடையாளப் படுத்திக் கொண்டுள்ளார்கள். இன்றைய உலகில் ஏமாற்றிப் பிழைப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது உண்மையே ! நாளுக்குநாள் அதிகரித்து வரும் இந்த நிலையற்ற போக்கினைச் சமாளிப்பதாக பலர் ஆன்மீக விளக்கங்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையால் ஆன்மீகத்தின் பெயரால் மோசடி செய்வோர் அதிகரித்திருப்பது உண்மையே ஆனால் அதற்காக இறை நம்பிக்கை கொண்ட அனைவருமே, உண்மையாக மக்களுக்கு ஆறுதலை அளிக்க ஆன்மீக வழிகளைக் காட்டும் அனைவரையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகப் பார்ப்பதுதான் தவறான செய்கை. தமிழின் பெயரால் பலரை ஏமாற்றி வாழ்வோரும் இருப்பதனால் நாம் அன்னைத் தமிழையே எதிர்க்கிறோமா? இல்லையே ! அது போலத்தான் ஒரு சிலரின் தவறான நடவடிக்கைக்காக ஆத்திக நம்பிக்கை உடையவர்களை தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பது தவறாகிறது.

    ஒரு குழந்தைக்கு எது தவறு, எது சரி என்ற முதல் பாடம் பெற்றவர்களிடமிருந்தே கற்றுக் கொடுக்கப்படுகிறது. அப்போதிருந்தே வாழ்வில் ஒரு பிடிப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவமும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. உண்மையான இறை நம்பிக்கை உடையவர்கள் மனிதர்களுக்குள் பேதம் பார்க்க மாட்டார்கள். மனிதர்கள் அனைவருமே சமமானவர்கள் எனும் எண்ணமே அவர்கள் மனதில் நிலைநிறுத்தப்படும். தமது மனதிலுள்ள நம்பிக்கையை வெறி எனும் நிலைக்கு உயர்த்தும்போதுதான் அங்கே வேறுபாடுகளின் எல்லைகளுக்குள் தள்ளப்படுகிறார்கள். ஆனால் இன்று இறைநம்பிக்கையைக் கடைப்பிடிப்பவர்கள் கேலி செய்யப்படும் ஒரு நிலை உருவாகிறது.அதனால் பலர் தமது ந,ம்பிக்கைகளை மறைத்து வைத்து வாழும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

    “நான் ஒரு இந்து” என்று சொல்வதில் எதுவிதமான மதவெறி உணர்வும் கிடையாது. ஆனால் எனது மதம் தான் முதன்மையானது என்று அடுத்த மதங்களையும் அதனைப் பின்பற்றுபவர்களையும் அவமரியாதை செய்வதே பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறது. நாம் எவ்வாறு நாம் வணங்கும் தெய்வத்தினை நம்புகிறோமோ, அதே போலத்தான் அடுத்தவரின் நம்பிக்கையும் இருக்கும் என்பதினை நன்கு புரிந்து கொள்ளத் தவறுவதே தவறுகளின் ஆரம்பமாகிறது. அனைவரையும் மனிதர்களாக ஜாதி, மத வேறுபாடின்றி மதிக்கப் பழகுவதே முதன்மையானது. கவியரசர் கூறியது போல மதம் மனிதனுக்கு ஆடையல்ல, அணிகலன் மட்டுமே !

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (264)

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே

     

    அன்பான வணக்கங்களுடன் இந்த வார மடலிலே உங்களுடன் உறவாடுவதில் மகிழ்வடைகிறேன். காலம் யாருக்கும் காத்திராமல் அவசரமாக தனது பயணத்தை மேற்கொண்டு கொண்டிருக்கிறது. இக்காலத்தின் ஓட்டம் என்றும் ஒரே வேகத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் வித்தியாசமான காலக் கண்ணாடிகளுக்குள்ளாகப் பார்க்கும் போது எதோ சமீபகாலத்தில் காலம் மிகவும் விரைவாகக் கடந்து போய்விடுகிறது போலத் தோற்றமளிக்கிறது. இது ஒருவருக்கு மட்டுமல்ல, பலருக்கும் இதே உணர்வுதான் தோன்றுகிறது. எந்தவொருவருடனும் உரையாடும் போதும் “அப்பப்பா, நாட்கள் எத்தனை விரைவாக ஓடுகின்றன” என்பதுவே தவறாமல் இடம்பெறுகின்ற ஒரு உரையாடல்.

    நூற்றாண்டுகள் 16,17,18,19,20,21 என்று நூற்றாண்டுகள் ஒவ்வொன்றாய் கடந்து ஓடிப்போய்விட்டன. ஆனால் அவை ஒவ்வொன்றும் தம்மோடு கொண்டு வந்து அகிலத்தில் விதைத்து விட்டுப் போன மாற்றங்கள் எத்தனையோ ! அம்மாற்றங்களின் மூலம் கிடைக்கப்பெற்ற நன்மைகளும், தீமைகளும் பலவே. இம்மாற்றங்களிலே மனித வாழ்க்கைக்கு இன்றியமையாததாககவும், மனிதர்களின் அன்றாடத் தேவைகளிலும், பழக்க வழக்கங்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்றால் அது மிகையாகாது. மனித வாழ்க்கையின் பல அம்சங்களை மிகவும் இலகுவாக்கியதோடு மட்டுமல்லாமல் மனித வாழ்க்கையின் தேவைகளை அதிகரிக்கப் பண்ணி அத்தேவைகளுக்காக ஓயாத தேடல்களில் மனிதரை ஈடுபடுத்தியதும் விஞ்ஞானமே !

    நான் இங்கிலாந்துக்கு வந்த காலங்களில்(1970களின் நடுப்பகுதியில்) இங்குள்ள பி.பி.ஸி தொலைக்காட்சியில் விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட”நாளைய உலகம்(Tomorrows world) “ எனும் ஒரு நிகழ்ச்சி வாராவாரம் நடைபெறுவதுண்டு. இந்நிகழ்ச்சியில் விஞ்ஞானத்தின் வளர்ச்சியின் புதிய கண்டுபிடிப்புகளையும், இக்கண்டுபிடிப்புகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் கொண்டுவரப்போகும் மாற்றங்களைப் பற்றியும் காண்பிப்பதுண்டு. அத்தகைய நிகழ்ச்சி ஒன்றில் கணணியின் வளர்ச்சி பற்ரிப் பேசும் போது , இனிவரும் காலங்களில் கணணியின் தானியங்கும் வளர்ச்சியினால் இன்று மனிதர்கள் ஆற்றும் பணிகள் பல கணணிகளால் ஆற்றப்படும் சாத்தியமுள்ளது என்று கூறினார்கள். இக்கூற்றின் வெளிப்பாடாக , இதனால் மக்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்காதா? எனக்கேட்கப்பட்ட கேள்விக்கு இல்லை இவ்வளர்ச்சியினால் பொருளாதாரம் மேலும் விரிவடையும், மக்களின் வாழ்க்கை வசதிகள் பெருகும் எனவும், வாரத்தில் 5 நாட்கள் பணிபுரிவோர் மூன்று நாட்கள் பணிபுரிந்து 5நாட்களுக்குரிய ஊதியத்தைப் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு பொருளாதரத்தில் நாடு முன்னேற்றமடையும் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டது.

    அப்படியான ஒரு சூழலில் மனிதர்கள் அதிக ஓய்வினைப் பெறக்கூடிய வசதி உருவாகும் என்றும் கூறப்பட்டது. இன்றைய சூழலை அதன் பின்னனியில் எடுத்துப் பார்க்கிறேன். கணணியின் தாக்கம் மக்களின் வாழ்வில் இன்று எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது. ஆனால் அன்று அவர்கள் குறிப்பிட்ட அந்த வசதிப் பெருக்கம் மக்கள் வாழ்வினில் ஏற்படவில்லை. அதாவது 5 நாட்களுக்குப் பதில் மூன்று நாட்கள் வேலை செய்து அதிக ஓய்வு நேரம் கிடைக்கும் எனும் வாதம் மெய்ப்படவில்லை. பதிலாக வளரும் வசதிகளின் வாய்ப்புக்காக மனிதர்கள் இயந்திரங்கள் போல கிடைக்கும் நேரத்தையெல்லாம் பணியில் செலவு செய்து தீராத தேடல்களுடன் வாழ்வெல்லாம் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்தச் சூழலில் தான் இங்கிலாந்து அரச போக்குவரத்து திணைக்களம் ஒரு புதிய சிக்கலை எதிர்நோக்குகிறது. லண்டன் பேரூந்து மற்றும் புகையிரதச்சேவை, பாதாள ரெயில்சேவை என்பவற்றினை லண்டன் மேயரின் கீழியங்கும் டி.எவ்.எல் (T.F.L) எனும் அமைப்பே நிர்வகித்து வருகிறது. கடந்த சில வருடங்களாக நாட்டின் பொருளாதாரச் சிக்கலின் நிமித்தம் மக்களின் ஊதிய உயர்வு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் பஸ், மற்றும் ரெயில் சேவைகளின் கட்டணமோ வருடா வருடம் சம்பள உயர்வுக்கு எவ்வகையிலும் ஒப்புமை இல்லாமல் உயர்த்தப்பட்டுக் கொண்டிருந்தது. இதனால் மக்கள் அனைவரும் கட்டண உயர்வு, ஜன நெருக்கடி போன்ற இடர்பாடுகளினால் அல்லல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

    இந்நிலையிலே தான் இங்கிலாந்து அரசின் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு தலையிடியைக் கொடுக்கும் வகையில் ஒரு புதிய சிக்கல் தோன்றியுள்ளது. சமீபத்திய ஆய்வு ஒன்று தொடர்ந்து இரண்டு வருடங்களாக லண்டன் பஸ்,இரெயில் மற்றும் பாதாள ரெயில் ஆகியவற்றை உபயோகிக்கும் மக்களின் தொகை கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிவிக்கிறது. தமது சேவைகளின் மீது சுமத்தப்பட்ட இடநெருக்கடியைத் தீர்ப்பதற்காக பல புதிய இரெயில் வண்டிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இத்தகைய பாவனையாளைர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி மிகப்பெரிய சிக்கலைத் தோற்றுவித்துள்ளது.

    மக்களின் இத்தகைய நடவடிக்கைக்கான காரணிகளாக பின்வரும் சிலவற்றைக் குறிப்பிடுகிறார்கள். முக்கியமாக இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இணையதள பாவனையின் வேகமான வளர்ச்சியால் பலர் இன்று தமது இல்லங்களில் இருந்தே பணிபுரியும் வசதிகளைப் பெற்றிருக்கிறார்கள். அடுத்து இதுவரை காலமும் நல்ல ஊதியம் கிடைக்கக்கூடிய பெரிய பதவிகள் லண்டனில் தான் கிடைக்கும் எனும் நிலைமாறி லண்டனை அண்மித்த பகுதிகளில் பல முன்னனி வியாபார ஸ்தலங்களும், நிறுவனங்களும் இயங்குவாதல் பலர் தாம் வசிக்கும் நகரங்களிலேயே நன்றாக உழைக்கக்கூடிய நல்ல பதவிகளைப் பெறக்கூடியதாக இருக்கிறது. அடுத்து இன்று மக்கள் தமது உடல்நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளார்கள். இவ்வுடல்நலனின் மீதான அக்கறையோடு, இயற்கைச் சூழல் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு பலர் இன்று சைக்கிள்கள் மூலம் பணியிடங்களுக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

    இந்தக் காரணிகளின் கூட்டுச் சேர்க்கையே தற்போதைய பொது போகுவரத்துச் சேவைகளை உபயோகிப்போரின் எண்ணிக்கையின் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார்கள்

    விஞ்ஞானம் அதுபாட்டுக்கு வளர்ந்து கொண்டு போகிறது அதன் வளர்ச்சியால் ஏற்படும் புதிய தேவைகளின் தேடல்களுக்காக மனிதர்கள் தம்மது உழைக்கும் திறனைக் கூட்டிக் கொண்டே போவார்கள். இந்த ஓட்டத்தை நிறுத்தி ஓய்வினை எடுக்கக்கூடிய ஒரு நிலையை மனிதர்களுக்கு விஞ்ஞான வளர்ச்சி எமது வாழ்க்கைக் காலத்தில் கொடுக்குமா? என்பது சந்தேகமே !

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . ( 263 )

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.

    இயற்கையன்னை ஒருவாரகாலம் , ஒருமுறை சிலிர்த்து இங்கிலாந்து நாட்டினை தன்னுள் சிறையாக்கி வைத்திருந்து வெளிவந்த வேளையிது. கருமேகங்கள் கூடி வெள்ளைப் பனிமழை பொழிந்து இங்கிலாந்து நகரத்து தெருக்களையெல்லாம் பனிப்பாய் கொண்டு மூடியிருந்தது.சைபீரியாவிலிருந்து அடித்த குளிர்காற்று “கிழக்கிலிருந்து வந்த பூதம் (Beast from the east)” எனும் பெயருடன் இங்கிலாந்து நாட்டினைத் தன் கைப்பிடிக்குள் அமுக்கிப் பிடித்திருந்தது. – 5 டிகிரி செல்சியஸ் எனும் சூழல் வெப்பநிலையை வெப்பமானிகள் காட்டினாலும் இங்கிலாந்தைக் கவ்விப்பிடித்திருந்த குளிர்காற்றின் வேகம் – 12 டிகிரி செல்சியஸ் எனும் வகையிலான தாக்கத்தைக் கொடுத்திருந்தது. இப்போதுதான் ஒருவாறு அப்பிடிக்குள் இருந்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டுள்ளது. நாமும் மீண்டுள்ளோம்.

    இந்நிலையில் தான் நாம் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதியை வந்தடைந்துள்ளோம். அது சரி… அப்படி இந்த மார்ச் 8ஆம் திகதிக்கு அப்படி என்ன பெருமை என்று எண்ணினால் அது உலகின் மகத்தான “சர்வதேச மகளிர் தினத்தை ” தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளதைக் காண்கிறோம். ஆம், பெண்களின் மகத்துவத்தைக் குறிக்கும் நாள். பெண்களின் பெருமைகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் நாள். பெண்களின் சுபீட்சத்தை எடைதூக்கிப் பார்க்கும் நாள். அன்றைய பெண்களுக்கும், இன்றைய பெண்களுக்கும் இடையில் காலம் கொடுத்த மாற்றங்கள் அநேகமாக இருந்தாலும், காலத்தால் மாற்ற முடியாத ,காலத்தால் அழியாத பல பண்புகள் இன்றைய பெண்களுக்கு உண்டு. அன்று தாய்மையின் வடிவமாகப் பெண்தான் திகழ்ந்தாள் இன்றும் தாய்மையின் வடிவமாகப் பெண்கள் தான் திகழ்கிறார்கள்.

    அன்றைய பெண் தாய்மையின் வடிவமாக மட்டுமே இருந்தாள். அவளுக்கென விதிக்கப்பட்டவை இல்லம் எனும் நான்கு சுவர்களுக்குள்ளேயே மட்டுப்படுத்தப் பட்டு இருந்தன. ஆனால் இன்றைய பெண்களுக்கு வானம் கூடத் தொடும் தூரத்தில் தான் இருக்கிறது. ஆண்கள் செய்யும், ஆண்களால் மட்டுமே செய்யக்கூடியவை என்று எண்ணப்பட்ட பல பணிகள் இன்று பெண்களினால் ஆண்களை விடத் திறமையாகச் செய்யப்படுகின்றன. கணனித்துறையை எடுத்தால் என்ன, விமானம் ஓட்டும் பணியாக இருந்தாலென்ன, மருத்துவத்துறை என்றால் என்ன, விஞ்ஞானத்துறை என்றால் என்ன அனைத்திலும் இன்று பெண்கள் கொடி கட்டிப் பறக்கிறார்கள்.

    சமுதாய முன்றிலில் நடக்கும் பல அநியாயமான செயல்களைத் தட்டிக் கேட்பவர்களாகப் பல பெண்கள் செயற்படுகிறார்கள். சமூக சேவகிகளாக பலர் தம்முடைய சொந்த வாழ்க்கையைப் பணயம் வைத்துச் சமுதாயத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்று மேலைநாடுகளிலும் சரி, எமது தாய்நாடுகளானான பின்புல நாடுகளாயினும் சரி பல வியாபார நிறுவனங்களின் முக்கியப் பொறுப்புகளில் பெண்கள் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால் இன்றும் மேலைநாடுகளில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் இடையிலிருக்கும் சமதள வேறுபாடு தீர்ந்தபாடில்லை. ஒரே பணியிலிருக்கும் ஒரு பெண்ணையும், ஆணையும் எடுத்துக் கொண்டால் ஆணை விடப் பெண்ணின் சம்பளம் குறைவாகவே இருக்கிறது. இது பலமுனைகளில் பலரினால் எடுத்துக் காட்டப்பட்டுத் தொடரும் பல அரசுகளினால் விமர்சிக்கப்பட்டாலும் அவ்வித்தியாசம் மிகவும் மெதுவாகவே குறைந்து கொண்டு வருகிறது. இதற்கு ஒருவகையில் ஆண்களின் ஆணாதிக்கக் குணாம்சம் அடிப்படையாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஆண்களுடன் சமதளத்தில் போராடித்தான் தமக்கான வாழ்வாதரத்தைத் தேடிக் கொள்ள வேண்டிய நிலையிலுள்ள பெண்கள் ஆரம்பிக்கும் போதே சில அடிகள் பின்னாலிருந்தே ஆரம்பிக்க வேண்டிய காட்டாயத்துக்குள்ளாக வேண்டியுள்ளது.

    தமிழ்ப்பாட்டன் மகாகவி பாரதி தன் தமிழில்,

    ”ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
    அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
    பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
    போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
    நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
    ஞான நல்லறம் வீர சுதந்திரம்
    பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
    பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!” என்றான் பெருங்குரலில்.

    பாரதி கண்ட அப்புதுமைப் பெண்ணினைக் காணும் வகைக்கு இன்று நாம் என்ன செய்தோம்? பெண்களை ஒரு காமப்பொருளாக, நாகரிகமற்ற முறையில் விமர்சிப்பவர்கள் பலரையே காண்கிறோம். பொதுவாக நடிகைகள் என்றாலே அவர்களை மனம்போன போக்கிலே விமர்சிக்கும் உரிமை எமக்குண்டு என்பது போலேத் தம்மை நாகரிகவாதிகள் என்று கூறிக் கொள்ளும் இன்றைய ஆண்களில் பலர் நடப்பதைக் காணும்போது வேதனையாக உள்ளது. தாயாக, சகோதரியாக, அன்பு மனையாளாக எமக்குக் கிடைப்பவர்கள் கூட அப்பெண்ணினத்தைச் சார்ந்தவர்கள் தான் என்பதை மறந்தவர்கள் போல் நடப்பது வியப்பாக இருக்கிறது.

    சமீபத்தில் இந்தியாவின் பல மொழிகளில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவி அவர்கள் அகால மரணமடைந்ததையடுத்து சொற்ப நேரத்திலேயே அவரது பிரத்தியேக வாழ்க்கை மிகவும் தனிப்பட்ட முறையில் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது வேதனையளிக்கிறது. அதற்குச் சார்பாக ” நடிக்க வரும் போதே இத்தகைய நிகழ்வுகளுக்கு முகம்கொடுக்க வேண்டும் என்பதை அவரே அறிந்திருப்பார்” எனும் வாதம் சிலரால் முன்வைக்கப்பட்டது. ஒரு மிருகம் இறந்தால் கூட அதனை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் எனும் பண்பு நிறைந்த இந்நூற்றாண்டிலே அடிப்படை மனிதத்தன்மை அற்றுப் போனதைப் போல உணர வேண்டிய பல தருணங்கள் நிகழ்கின்றன. இன்றைய பெண் சமூகத்தின் ஒரு முக்கியமான அங்கம். பலநாடுகளின் தலைவர்களாகப் பெண்கள் திகழ்கிறார்கள். அதற்காக அன்றைய பெண் முக்கியமான அங்கமாக இருக்கவில்லை என்று நான் சொல்வதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆனால் அன்றைய காலத்தில் பெண்கள் குடும்பம், இல்லம் எனும் வரையறைக்குள் அடைக்கப்பட்டதினால் அவர்களின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆராய வேண்டிய தேவை இருக்கவில்லை. அத்தகைய ஒரு சூழலில் தான் மகாகவி பாரதியார் அச்சிறையை உடைத்துப் பெண்களை வெளிக்கொணர வேண்டிய உண்மையை சத்தமாகவே உரைக்கத் தொடங்கினார். அதனாலேயே,

    ”பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி
    பிறப்பித்தேன்; அதற்குரிய வெற்றி கேளீர்;
    மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்
    மனையாளும் தெய்வமன்றோமதிகெட் டீரே!
    விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்
    விடுதலையென் பீர் கருணை வெள்ள மென்பீர்,
    பெண்ணுக்கு விடுதலைநீ ரில்லை யென்றால்
    பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை.” என்று கவி படித்தார்.

    ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதமும் வருகிறது, எட்டாம் திகதியும் வருகிறது.மகளிர் தினங்களும் வந்து போகின்றன. கவிதைகள் படிக்கிறோம், கட்டுரைகள் வரைகிறோம். எம்மில் எத்தனை பேர் உள சுத்தியுடன் இப்பெண் விடுதலை தினத்தில் பெண்களின் மேன்மையைக் காக்கும் வகை எம் மனத்தில் இவ்வுறுதியை எடுக்கிறோம் என்று ஏதாவது ஓர் உறுதியை அன்றி ஒரு செயற்பாட்டை முன்னெடுத்திருக்கிறோம்?

    அடுத்த மகளிர் தினத்தில் மீண்டும் எடை போடுவோம்!!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . ( 262 )

    அன்பினியவர்களே!

    அன்பின் இனிய வணக்கங்கள். இதோ அடுத்த மடலுடன் உங்களுடன் உறவாட முனைகிறேன். நாம் விரும்பியோ விரும்பாமலோ எமது வாழ்க்கை ஓடிக் கொண்டேயிருக்கிறது. ஓடும் வேகத்தை எமது வசதிக்கு ஏற்ப குறைக்கவோ அன்றி கூட்டவோ எம்மால் முடிகிறதா? தானே தன்வழிக்கு ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வினை எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது போன்ற ஒரு பிரமையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றுக்கு எதிர்த்திசையில் நடந்து அடுத்த கரைக்குப் போவது மிகவும் சிரமமானது அதேபோல ஆறு ஓடும் திசையிலே அதன் போக்கிலே போய் அடுத்தகரைக்குப் போவது இலகுவானதும் எம்மால் அனுபவித்து பயணிக்கக் கூடியதுமாகும். அதுபோல ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையின் திசையில் அதற்கேற்ப எமது இலட்சியங்களை வகுத்துக் கொண்டு வாழ்வது எமது வாழ்க்கைப் பயணத்தை இலகுவாக்குகிறது.

    எனது இவ்வார மடல் எதற்காக இத்தகைய பாதையினூடு தனது பயணத்தை ஆரம்பிக்கிறது எனும் ஐயம் ஏற்படுவது இயற்கையே! இன்றைய வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பலரும் தம் வாழ்வின் நிலைபற்றிச் சலித்துக் கொள்பவர்களாக இருக்கிறார்களேயன்றி வாழ்வினை எண்ணி மகிழ்வுடன் அதைப்பற்றிப் பிரஸ்தாபிப்பவர்கள் மிகவும் சொற்பமானவர்களே! எதிர்பார்ப்பவை எல்லாம் எதிர்பார்க்கும் வேளையில் எதிர்பார்க்கும் வகையில் நடந்து விட்டால் இன்றைய உலகு இத்தகைய ஒரு வளர்ச்சியைக் கண்டிருக்குமா என்பது சந்தேகமே! எத்தனையோ விஞ்ஞானிகளும், அவர்களின் கண்டுபிடிப்புகளும் எதிர்பாராத வகையிலேயே நிகழ்ந்திருக்கின்றன. பாடசாலையிலிருந்து நீக்கப்பட்ட ரிச்சார்ட் பிரான்சன் இன்று வெர்ஜின் எனப்படும் பல்துறை நிறுவனத்தின் முகவராகவும், ப்ரித்தானிய தொழிலதிபர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பதுவும் அவரால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டதொன்றல்ல. இன்றைய முன்னணி சப்ட்வெயர் கம்பெனியான மைக்ரோசாப்ட் பற்றி “Accidental Empire ஆக்ஸிடென்டல் எம்பயர் ” எனும் நூலே வெளிவந்துள்ளது.

    எமது கண்முன்னாலேயே இத்தகைய சலிப்பான வாழ்வாகத் தொடங்கிப் பின்னர் மாபெரும் வெற்றிக்கதைகளை உருவாக்கியவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இத்தகைய நிலையில்தான் இன்று நான் வாழும் இந்த இங்கிலாந்து நாட்டிலும் பலரின் பேச்சுக்களிலும் ஒரு சலிப்புணர்வு தட்டுப்படுகிறது. “ப்ரெக்ஸிட்” என்று பிரித்தானிய மக்களால் எடுக்கட்ட முடிவின் மீதான முன்னுக்குப்பின்னான, முரணான வாதங்கள் ஓய்ந்த பாடில்லாமல் ஊடகங்களில் அலைமோதிக் கொண்டிருப்பதே மக்களை இத்தகைய ஒரு சலிப்பினை நோக்கித் தள்ளிவிடுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமா எனும் சர்வஜன வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருக்க வேண்டும் என்றே வாக்களித்தவர்களில் நானும் ஒருவன். என் போன்றவர்களுக்கு அச்சர்வஜனவாக்கெடுப்பின் முடிவு ஒரு மாபெரும் ஏமாற்றமாக இருந்தது என்பது உண்மையே. இவ்வேமாற்றம் கொஞ்ச காலத்துக்கு ஒரு கசப்புணர்வாக இருந்ததும் உண்மையே! ஆனால் ஜனநாயக முறையில் மக்கள் எடுத்த பெரும்பான்மை முடிவுக்குக் கட்டுப்படுவதே ஒவ்வொரு நல்ல குடிமக்களின் கடமையாகும். பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 2019ஆம் ஆண்டு மே மாதம் வெளியேறுவது தவிர்க்கப்பட முடியாத உண்மை.

    இதை ஒரு பகுதியினருக்கு மற்றைய பகுதியினரின் மீதான வெற்றி என்று கூச்சலிடுவதையோ அன்றி நாம் தோற்று விட்டோம் எனும் வகையில் ஒதுங்கிக் கொள்வதையோ விடுத்து எமது நாடு தனது அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை நோக்கி எடுக்க வேண்டிய ஒரு முக்கியமான முடிவினைச் சரியான வகையில் எடுக்க நாமனைவரும் எவ்விதம் எம்மாலான முழுப் பங்களிப்பையும் செய்வது எனும் வகையில் ஆக்கபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதே இன்றைய காலகட்டத்தின் முக்கிய தேவையாகிறது. எடுக்கும் முடிவு சரியானதாக இருக்க எமது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைக்க வேண்டியது எத்தனை முக்கியமோ, அரசு எதிர்நோக்கும் இடர்களை தீவிரப்படுத்துவதன் மூலம் இவ்வரசைக் கவிழ்த்து மீண்டும் ஒரு தேர்தலை உருவாக்கி நாம் பதவிக்கு வரவேண்டும் எனும் நோக்கில் எதிர்க்கட்சிகள் செயற்படுவது எமது நாட்டு முன்னேற்றத்துக்கு குந்தகம் விளைவிப்பதாகவே அமையும்.

    ஒரு தேர்தல் ஏற்பட்டு எதிர்க்கட்சியாக இருக்கும் லேபர் கட்சி ஆட்சியைக் கைப்பற்றுகிறது என்று ஒரு பேச்சுக்கு எடுத்துக் கொள்வோம். அதுவும் இந்த “ப்ரெக்ஸிட்” எனும் சிக்கலான தீர்வுக்கு விடைகாண வேண்டிய நிலையையே எதிர்நோக்கும். மக்களின் ஆணையை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஜனநாயக அரசியலை முன்னெடுக்கும் அனைத்துக் கட்சிகளினதும் கடமையாகும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுமுன் அதிர்ச்சிகரமான தாக்கத்தின் விளைவை எவ்வகையில் மிகவும் குறைந்த அளவுக்கு எதிர்கொள்ளலாம் என்தற்கான ஆலோசனைகளை ஆக்கபூர்வமாக வழங்குவதே இன்றைய எதிர்க்கட்சிகளின் புத்திசாலித்தனமான முன்னெடுப்புகளாக இருக்கும். இன்றும் இந்த இருபக்க வாதங்களிலும் மிகவும் தீவிரவாதப் போக்குகளைப் பிரஸ்தாபிக்கும் அரசியல்வாதிகளும், அரசியல் விமர்சகர்களும் இருக்கிறார்கள். இத்தகையோர் தமது சுயவிளம்பரத்துக்காகவும், தமது கொள்கைமீதான முரட்டு ஆதரவினாலும் சமுதாயத்தில் ஒன்றிணைந்து வாழும் பல்லின மக்களுக்கிடையிலான பேதங்களை விரிவாக்குகிறார்கள், விரிவான பேதங்களை மீண்டும் ஓர் இணைவான கோட்டிற்குக் கொண்டுவருவது எத்தனை சிரமம் என்பதனை இவர்களுக்கு வரலாறு எடுத்துக்காட்டும் துரதிர்ஷ்ட நிலை வந்து விடக்கூடாது.

    ஆற்று வெள்ளத்தின் திசைக்கு எதிர்த்திசையில் அல்லல்பட்டு அடுத்தகரையை நோக்கி நடக்கப் போகிறோமா? அன்றி வெள்ளத்தின் போக்கோடு போய் எமது பயணத்தை இலகுவாக்கப் போகிறோமா? என்பதைத் தீர்மானிக்க வேண்டியது துரதிர்ஷ்டவசமாக அரசியல்வாதிகள் கைகளிலே . . .

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (261)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.

    இதோ அடுத்தொரு வாரம். அடுத்தொரு மடல். அன்புடை வல்லமை வாசகர் மத்தியில் வலம் வரும் வாய்ப்பு. சில வாரங்கள் காணாமல் போயிருந்த என் மடல் மீண்டும் உங்கள் முன்னே துளிர்த்து விழுகிறது. எனது வருடாந்த சென்னை விஜயத்தை முடித்துக் கொண்டு கடந்த சனிக்கிழமையே திரும்பவும் லண்டனை வந்தடைந்ததுவே தாமதத்துக்குக் காரணம். மாசிப்பனியோடு கலந்த ஒரு மெல்லிய சூட்டினை அனுபவித்து விட்டு உறைநிலையைத் தாண்டுவதற்கு போராடும் லண்டன் குளிருக்குள் மீண்டும் வந்து சிக்கிக்கொண்ட வேளை.

    ஒருமாத கால இடைவெளியில் லண்டனில் அப்படி ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்குமோ என்று பார்த்தால் இல்லை என்பதுவே பதிலாகப் படுகிறது.எதிர்பார்த்த குளிர், எதிர்பார்த்தபடியே “பிரெக்ஸிட்” பற்றிய பலகோணச் சர்ச்சைகள் என ஏமாற்றமில்லாமல் என்னை வரவேற்றது லண்டன்.

    பணிபுரியும் மக்கள் தாம் பெறும் ஊதியத்துக்கேற்ப வரிப்பணத்தை அரசுக்குச் செலுத்துகிறார்கள். தாம் செலுத்தும் வரிப்பணத்தைக் கொண்டு தாம் வாழும் சமுதாயத்துக்குத் தேவையான அத்தியாவசிய சேவைகளைப் பாரபட்சமின்றி அரசாங்கம் வழங்கும் எனும் ஒரு நம்பிக்கையே ஜனநாயகம் எனும் கோட்பாட்டினை இன்னும் பல நாடுகளில் நடைமுறையில் வைத்திருக்க உதவுகிறது. ஆனால் இந்த நம்பிக்கை தகர்க்கப்படுமானால் மக்களுக்கு அரசின் மீதும் , அரச நிர்வாகத்தினை நடத்துபவர் மீதும் அவநம்பிக்கை ஏற்பட ஆரம்பிக்கிறது. இந்த அவநம்பிக்கையின் விளைவாகத் தீவிரவாதக் கொள்கைகளை அதிரடியாக முன்வைப்பவர் மக்களின் வாக்குகளைப் பெறும் நிலை ஏற்படுகிறது.

    இத்தகைய ஒரு நிலைப்பாட்டின் வெளிப்பாடே இன்று இங்கிலாந்து அரசாங்கத்துக்கு மக்கள் கொடுத்த ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறக் கோரும் “ப்ரெக்ஸிட்” எனும் கோரிக்கை. இக்கோரிக்கை வெறும் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறுவது எனும் தீர்மானத்தை மட்டும் முடுக்கி விடவில்லை, இங்கிலாந்து நாட்டில் வாழும் பலவேறு இன மக்களிடையே நிலவி வந்த புரிந்துணர்வில் கூட சிறு விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது என்பதுவே உண்மை. இந்த ஒரு நிலையில் தான் நான் கடந்த சில நாட்களின் முன்னே வானொலியில் கேட்க விழைந்த ஒரு செய்தி என்னைச் சிந்திக்கத் தூண்டியது. இங்கிலாந்தில் லண்டனின் முக்கியப் பகுதிகளில் ஒன்று “வெஸ்ட் மினிஸ்டர்” பகுதியாகும். இப்பகுதியின் நகரசபை சமீபத்தில் தமது எல்லைக்குள் வாழும் மக்களனைவருக்கும் ஒரு பொதுவான கடிதத்தை அனுப்பியுள்ளதாம். அக்கடிதத்தில் “எமது நகர எல்லைக்குள் வாழ்பவர்களில் செல்வம் கொண்ட மக்கள் தாமாகவே அந்நகர மக்களின் வாழ்வாதாரத்துக்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்குத் “தன்னார்வ” (Voluntary)அடிப்படையிலுதவும் வகையில் பண உதவி செய்யக் கோரியிருந்தார்கள். அதைப்பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்ததில் ஆச்சரியமில்லை. இங்கிலாந்து உலகத்தில் பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஐந்தாவது இடத்தை வகிக்கிறது. அத்தகைய நாட்டின் ஒரு கேந்திர பகுதி அங்கு வசிக்கும் மக்களுக்கான அத்தியாவசியத் தேவைகளை முன்னெடுப்பதற்கு மக்களின் கைகளை எதிர்பார்க்கிறார்கள் எனும் செய்தி ஆச்சரியமளிப்பதில் என்ன தவறு.

    ஆச்சரியம் மட்டுமல்ல ஆத்திரம் கூட அடைகிறார்கள் உழைக்கும் பணத்தில் 20%  தொடக்கம் 40% வரையில் தாம் உழைக்கும் ஊதியத்துக்கேற்ப அரசாங்கத்துக்கு அளிக்கும் வரிப்பணம், தாம் வாழும் தமது இல்லங்களின் பெறுமதியைப் பொறுத்து தாம் வாழும் பகுதியின் நகரசபைகளுக்கு அளிக்கும் “நகரசபை வரி அல்லது கவுண்சில் டக்ஸ்” , அத்தோடு உபயோகிக்கும் நீருக்கான வரி எனப் பலவிதமான வரிகளை மக்கள் அளிக்கும் நோக்கம், தாமளிக்கும் வரிகளைச் சரியான வகையில் கையாண்டுச் சமுதாயத்தின் அத்தியாவசியச் சேவைகளை அனைவருக்கும் பாரபட்சமின்றி அளிப்பார்கள் எனும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே என்றால் அது மிகையாகாது. ஆனால் இன்றோ அந்நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் வகையில் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மாறி மாறி வரும் அரசாங்கங்களின் மூலம் தமது அல்லல்கள் தீரும் என எதிர்பார்க்கும் மக்கள் ஏமாற்றத்தின் விளிம்புக்குத் தள்ளப்படுவது தீவிரவாதக் கொள்கைகளை முன்னேடுக்கும் கட்ச்சிகளுக்கான ஆதரவை அதிகரிக்கும் என்பதுவே உண்மை.

    தேசியவாதம் எனும் கோஷம் மெதுவாக இனத்துவேஷம் எனும் எல்லையை நோக்கி நகர்ந்து செல்வதை உணர முடிகிறது. சமுதாய முற்போக்குச் சிந்தனை கொண்ட கட்சிகள் என்று தம்மைத் தாமே விமர்சித்துக் கொள்ளும் முக்கிய அரசியல் கட்சிகள் இந்நகர்வின் நிகழ்வினைச் சரியாக எடைபோடத் தவறி விடுவார்களோ? எனும் அச்சம் பல கோணங்களில் தலைதூக்குகிறது. ஒரு தேசத்தின் அரசியல் [அயணம் என்பது பல முக்கியப் பாதைகளினூடாக பயணிப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அப்பயணங்கள் மிக முக்கியமான சந்திகளை வந்தடையும் போது எந்தத் திருப்பத்தைத் தெரிவு செய்யப் போகிறார்கள் :என்பது மிகவும் முக்கியமான கேள்வியாகும். இங்கிலாந்தின் அரசுக் கட்டிலில் மாறி மாறி ஏறிக் கோலோச்சும் இவ்வரசியல் கட்சிகள் சரியான பாதையைச் சரியான நேரத்தில் தேர்ந்தெடுப்பார்களா? என்பதற்கான விடையைக் காலம் தான் எமக்கு அளிக்குமோ?

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • குடியரசு கொண்டாடும் பாரத மாதாவுக்கு வாழ்த்துக்கள்

     

    பறக்கின்றது !

    தேசிய சுதந்திரக் கொடி

    பறக்கின்றது !
    சுதந்திரமான தென்றலதன்

    சுந்தரமான தாலாட்டில்

    தன்னை மறந்தின்று

    சோதரரின் மேன்மை பரப்பிடும்

    இந்தியத் தேசியக்கொடி

    பறக்கின்றது.
    அந்நிய ஆதிக்கத்திலிருந்து

    அன்னை பாரதமாதா

    முற்றாக தன்னை விடுவித்த

    பெருமை சாற்றுமிந்த

    குடியரசுத் தினத்தில்

    கொடி பறக்கின்றது.
    முன்னை எம் பாட்டன்

    முத்தமிழ்க் கவிஞன்

    முப்பெரும் புலவன் பாரதியின்

    முழுமுதற் கனவு மெய்ப்படவே

    பாரத தேசியக்கொடி

    குடியரசான தினத்தை

    உலகிற்கியம்பிய வண்ணம்

    வண்ணக்கொடி பறக்கின்றது
    ஜயன் வ.உ.சி, சுபாஷ் சந்திரபோஸ்

    சுப்பிரமணி சிவா, திருப்பூர் குமரன்

    வ.வெ.சு ஜயர் என எத்தனையோ

    சுதந்திரப் போராட்ட வீரர்களின்

    தாயகக் கனவுகளின் ஆதாரமாய்

    குடியரசு நாமடைந்தோம் என

    கும்மியடித்திங்கு பாரதக் கொடி

    நிமிர்ந்தே பறக்கின்றது
    உலக அரங்கிலே

    தனக்கென ஓர் தனியிடத்தை

    தன் மக்கள் உழைப்பின்

    திறன் கொண்டு பெற்றிட்ட

    பாரத அன்னை இக்குடியரசு தினத்தில்

    ஏற்றமுடன் நிமிர்ந்தே நின்று

    தேசியக்கொடி மூலம் தன் பெருமை

    பறைசாற்றும் வகையிலின்று

    கொடி பறக்கின்றது.
    குடியரசு தினத்தில் என் இனிய

    அன்பு தமிழக, மற்றும் இந்திய

    சோதர, சோதரியர்க்கு அன்பான

    வாழ்த்துக்கள் கூறி வாழ்த்துகிறேன்
    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . .(260)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். சுமார் இரண்டு வாரங்களின் பின்னால் மடல் மூலம் உங்களுடன் மனம் திறக்கிறேன். இரண்டு வாரங்கள் இரண்டே நாட்கள்போல ஓடிவிட்டன. ஆனால் இந்த இரண்டு வாரங்கள் தனக்குள் அடக்கிக் கொண்ட விடயங்களோ பற்பல. சில இனிமையானவை, சில கனமானவை, சில கசப்பானவை, சில மறக்கப்பட வேண்டியவை என எத்தனையோ ரகமான விடயங்களைத் தனக்குள் தாங்கிக் கொண்டே காலம் நடைபோடுகிறது. இந்த இரண்டு வாரங்களில் என் நிகழ்வுகளை நான் எடுத்துப் பார்க்கிறேன். இதிலே விந்தை என்னவென்றால் “இங்கிலாந்திருந்து ஒரு மடல் ” எனும் இந்தப் பத்தி இவ்வாரம் முத்தமிழின் பிறப்பிடமாம், தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து வரையப்படுவதுதான். ஆம் நான் எனது வருடாந்தர தமிழ்த்தேடல் தாகசாந்திக்காக மேற்கொள்ளும் சென்னை விஜயத்தின் நடுப்பகுதியில் இருக்கிறேன்.

    வழமைபோல இம்முறை என் விஜயத்தின் முத்தாய்ப்பாக அமையும் சென்னைப் புத்தக விழாவினோடு இம்முறை வேறு சில நிகழ்வுகளும் எனது நெஞ்சத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இம்மாதம் 13ஆம் திகதி எனது ஒன்பதாவது நூலான “உள்ளத்தின் மொழியே, தமிழெனும் நதியாய்” மணிமேகலைப் பிரசுரத்தினரால் அவர்களது வெளியீட்டு விழாவில் சென்னைப் புத்தக விழா மேடையில் வெளியிடப்பட்டது. இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியிருந்த மதிப்பிற்குரிய முன்னை நடிகர், தற்போதைய முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவரான திரு. சிவகுமார் முன்னிலையில் இந்நூல் வெளியிடப்பட்டது உள்ளத்துக்கு மேலும் மகிழ்வையளித்தது. இவ்விழாவில் நடிகை லக்ஷ்மி, இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுடன் மேலும் பல அறிஞர்கள் கலந்து கொண்டார்கள்.

    நான் சென்னைக்குக் கிளம்பும் முன்னரே எனது இனிய நண்பர்களில் ஒருவரான “இசைக்கவி” ரமணன் அவர்கள் நான் கலந்து கொள்ளக்கூடிய நிகழ்வுகளைப் பற்றிய ஒரு சிறு பட்டியலையே அனுப்பியிருந்தார். இசைக்கவி ரமணன்1ரமணன் அவர்களின் அற்புத ஆற்றலை அளவின்றி ரசிப்பவன் நான். அவருடைய சொற்பொழிவுகளை இலண்டனில் தொலைக்காட்சி மூலமும், யூ ட்யூப் மூலமும் பார்த்து ரசிப்பவன். அவரின் கவித்திறனோடு எவ்வித பின்னணி இசையுமின்றி அற்புதமாகப் பாடும் அவரது ஆற்றலையும், அன்னைத் தமிழே வியந்து போகும் வண்ணம் தமிழை உச்சரிக்கும் அவரது தமிழாற்றலையும் வியப்போடும், மகிழ்வோடும் ரசிப்பவன் நான். அவரது பட்டியலில் அவர் தான் வசனமெழுதி, நடிக்கும் “பாரதி யார்?“ எனும் நாடகத்தைப் பற்றியும் அவை சென்னையில் நான் நிற்கும் வேளையில் அரங்கேறும் இடங்களையும் மிக அழகாக அட்டவணைப் படுத்தித் தந்திருந்தார். 11ஆம் திகதி காலை சென்னை வந்திறங்கினேன். 12ஆம் திகதி மாலை சென்னை ஏக்மோரில் அமைந்துள்ள “மியூசியம் ஹால் ” நாடக அரங்கில் நன்கொடையாளர்களுக்கான நிகழ்வில் எனக்காக ஓர் இடம் ஒதுக்கி ஏற்படு செய்திருந்த அன்பு நண்பர் “இசைக்கவி” ரமணன் அவர்களின் அன்பு அவரின் இனிமையான உள்ளத்துக்கும், நல்ல நட்புக்கு அவர் கொடுக்கும் முதலிடமும் எமக்கு நன்றாகப் புரிகிறது.

    சரியாக மாலை 6.15க்கு நாடகம் ஆரம்பிப்பதாக இருந்தது. அன்றும் புத்தகக் கண்காட்சியில் நண்பர் காந்தி ரமணன்2கண்ணதாசன் அவர்களின் பதிப்பகம் வெளியிட்ட ” கலாம் ” எனும் நூலின் வெளியீடு நிகழ்ந்தது. அதனைக் காண்பதற்காகப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்ற நான் சரியாக ஆறுமணிக்கு அந்த நாடக அரங்கிலே இருக்க வேண்டும் என்று கூறியதன் பிரகாரம் நேரத்துக்கு முதன்மையளிக்கும் எனது மற்றொரு உற்ற நண்பரான ரவி தமிழ்வாணன் அவர்கள் என்னைச் சரியாக 5.55 மணிக்கு அந்த நாடக அரங்க வாயிலிலே இறக்கி விட்டிருந்தார். நாடகமும் சரியான நேரத்துக்கு ஆரம்பித்தது.

    அழகான அந்த ஆங்கிலேயக் காலத்து புராதனக் கட்டிட அரங்கம் தனக்கேயுரிய மிடுக்குடன் காட்சியளித்தது. கணினியின் உதவியுடன் அழகிய ரமணன்3பின்னணிக் காட்சிகளை நாடக அரங்கிற்குள் கொண்டு வந்திருந்தார்கள். மகாகவி பாரதியாரைப் பற்றி ஏறக்குறைய அனைத்துத் தமிழர்களும் ஏதோ ஓர் அளவில் அறிந்திருப்பார்கள். என்னைப் போன்ற கவிதை எனும் ஆழியின் கரையிலிருந்து மணல்வீடு கட்டி விளையாடுவோர் ஆர்வ மிகுதியால் பாரதியாரின் வாழ்வுச் சரிதத்தை எம்மால் படிக்கக் கூடிய அளவிற்குப் படிப்போம். ஆனால் இந்த நாடகமோ ஒரு புதுப்பரிணாமத்தில் பாரதியாரை எமக்கு எடுத்துக் காட்டியது. ஒரு விளக்கவுரையுடன் , மாபெரும் தீச்சுவலையுடன் ஆரம்பித்த அந்நாடகத்தின் ஆரம்பச்சுவாலை அந்த மகாகவியின் நெஞ்சத்தில் எரிந்த கவிதைக் கனலை எனக்கு ஞாபகமூட்டியது.

    இந்நாடகத்தின் அமைப்பு அற்புதமானது, பாராட்டத்தக்கது. பாரதியாரின் கவிதைகளில் மிகவும் புகழ்பெற்ற கவிதைகள் பாடப்பட்ட காலத்தையும், அக்கவிதை பாடப்பட்ட இடத்தையும் கட்டம் கட்டமாகப் பிரித்து அக்கவிதையின் பிறப்புக்கான ரமணன்4பின்னணியை நாடகக் காட்சிகளாகக் கொடுத்திருந்தார்கள். இதற்காக அவர்கள் பாரதியாரின் வாழ்வு பற்றிய ஆராய்ச்சியை எத்தனைத் துல்லியமாகச் செய்திருப்பார்கள் என்பதை எம்மால் உணர முடிகிறது. காட்சியமைப்பு,  அக்காட்சிகளுக்கான விளக்கம், அதனோடு சம்பந்தப்பட்ட பின்னணிக் காட்சிகளை நாடகத் திரையில் கணினியின் உதவியோடு ஏற்றிய நேர்த்தி அனைத்தும் நாடக உலகின் முத்திரையாய் இந்நாடகத்தை முன்னிலைப்படுத்தியுள்ளது.

    இந்நாடகத்தின் நாயகன் மகாகவி பாரதியாரே என்பது நான் சொல்லித் தெரிவதில்லை. அப்பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் எனது இனிய இசைக்கவி ரமணன். பாரதியார் எனும் வேடமல்ல அவர் மகாகவி பாரதியாராகவே மாறிவிட்டார். எனது வாழ்க்கைக் காலத்திலே இதுவரை எத்தனையோமுறை நான் சென்னை வந்திருக்கிறேன். எனது சென்னை விஜயங்களில் எது என்னை அவ்விஜயத்தை மேற்கொண்டதன் முழுப்பயனையும் அடைய வைத்தது எனும் கேள்வி எழுப்பப்பட்டால் அது 2018 விஜயம் என்பதே எனது விடையாகும். ஏனென்கிறீர்களா ? அவ்விஜயத்தின் போது நான் எது நடக்க முடியாது என்று எண்ணியிருந்தேனோ அது நடந்து விட்டது. ஆம் நான் “மகாகவி” பாரதியாரை நேரடியாகத் தரிசித்து விட்டேன்!  இசைக்கவி ரமணன் பாரதியாரை எமது முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிட்டார். இதுவரை வீரபாண்டிய கட்டபொம்மன், சிவபெருமான், வீரவாகு, அப்பர், இராஜஇராஜ சோழன், வ.உ.சி ஜயா அவர்களை எமது கண்முன்னால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கொண்டு வந்து நிறுத்தினார். இன்று நடிகர் திலகம் இருந்திருந்தால் நண்பர் இசைக்கவி ரமணன் அவர்களைப் பாரதியாராக மேடையில் பார்த்தப் பின்பு அவரை பாரதியார் வேடம் ஏற்கச் சொன்னால் தயங்கியிருப்பார் என்றே சொல்ல வேண்டும்.

    அத்தகையதோர் அருமையான இயற்கையான நடிப்பு. பாரதியாரின் வசனங்களை அவர் உச்சரித்த விதம், உச்சரிக்கும் போது அவர் காட்டிய பாவங்கள், கவிதைகளைத் தெளிவுற வீரமாகப் பேசிய விதம், பேச்சிலிருந்த தெளிவு, ஏற்ற இறக்கங்கள் அப்பப்பா ! இதைச் சொல்லில் விவரிப்பது மிகவும் கடினம். நாடகப் பயிற்சிக்கென இயங்கும் அமைப்புகள் அனைத்தும் தமது மாணவர்களை இந்நாடகத்துக்கு அழைத்து வரவேண்டிய கட்டாயத்தை இந்நாடகம் உருவாக்கியுள்ளது என்றே கூற வேண்டும்.

    இந்நாடகத்தில் பங்கு பற்றி நடித்த அனைவருமே தமக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரப் படைப்புகளை திறம்பட, அழகுறச் செய்தது பாரதியாராக வேடமேற்ற ரமணன் அவர்களின் நடிப்புக்கு பெருந்துணையாக இருந்தது என்பது மிகையாகாது. குறிப்பாக செல்லம்மாவாக நடித்தவரும், பாரதியாரின் நண்பராக நடித்தவரும் அப்பாத்திரங்களில் அபாரமாக நடித்திருந்தனர். இந்த நாடகத்தைப் பார்த்த பின்னால் பாரதியாரின் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளைப் பற்றி அறிவதோடு பாரதியார் தன் வாழ்வில் எத்துணைத் துயரங்களை எதிர்கொண்டார் என்பதையும், அதனை எவ்வாறு தாங்கிக் கொண்டார் என்பதனையும் தத்ரூபமாக நடித்துக் காட்டியிருந்த ரமணனின் நடிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    இந்நாடகத்தைப் பார்த்த சில நாட்களின் பின்னால் நண்பர் சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களைப் பார்க்கப் போயிருந்தேன். அன்று சாயந்தரம் இந்நாடகம் ரசிக ரஞ்சன சபாவில் நடைபெறுவதாக இருந்தது; நான்கூட இரண்டாவது தடவையாகப் போவதாக இருந்தேன். தானும் அன்று மாலை இந்நாடகத்திற்குப் போகப் போவதாக சொல்வேந்தர் குறிப்பிட்டார். சில தவிர்க்க முடியாத காரணங்களினால் என்னால் அன்று மாலை போக முடியவில்லை. ஆனால் அன்று மாலை ரசிக ரஞ்சன சபா ஹால் நிரம்பி வழிந்ததாகவும் நூற்றுக்கும் அதிகமானோர் உள்ளே செல்ல முடியா நிலையில் இருந்ததாகவும் அறிந்தேன். அத்துடன் இந்நாடக இறுதியில் சில வார்த்தைகள் பேசும்படி விடுக்கப்பட்ட அழைப்பிற்கிணங்க பேச எழுந்த சொல்வேந்தர் தொண்டை கரகரக்க உணர்ச்சிவசப்பட்டு அந்நாடகம் கொடுத்த தாக்கத்தின் உணர்ச்சிகளை வெளிக்காட்டினார் என்பது இந்நாடகத்தின் ஆழத்தைத் தொட்டுக் காட்டுவதோடு நண்பர் இசைக்கவி ரமணனின் நடிப்பாற்றலை எடுத்தியம்புகிறது.

    இந்நாடகம் தொடர்ந்து மதுரை மற்றும் பல நகரங்களில் மேடையேற்றப்படுகிறது. மீண்டும் மார்ச் மாதம் 11ஆம் திகதி வாணி மஹாலில் மேடையேற்றப்படுகிறது. இந்நாடகத்தைப் பார்க்கத் தவறினால் வாழ்வில் ஒரு மிகப்பெரிய அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டவர்களாவீர்கள் என்பது திண்ணம். “பாரதி யார்?” எனும் கேள்விக்கு “பாரதியார்” தமிழரின் சரித்திர அடையாளம் என்பது அசைக்க முடியாத உண்மையாகிறது. அதைக் கண்முன்னால் கொண்டுவந்த நண்பர் இசைக்கவி ரமணன் இதுபோல இன்னும் பல அற்புத ஆக்கங்களை அளிக்க எல்லாம்வல்ல பராசக்தி துணை புரிவாளாக.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…(259)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். புத்தம்புது ஆண்டில் கிடைத்த வெற்றுத்தாளில் உங்களுடன் எனது மனக்கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் மடலை வரையும் சந்தர்ப்பம் கிட்டியது ஓர் ஆனந்த அனுபவமே! எதைப் பேசுவது? எதை கிரகித்துக் கொள்வது? எதைப் பகிர்ந்துகொள்வது என்பது இன்றைய சமூக ஊடகவியலின் முன்னேற்றமா? இன்றி ஒரு தடைக்கல்லா? என்பது நிச்சயம் தர்க்கிக்கப்பட வேண்டிய ஒரு விடயமே!

    அரசியல், வியாபாரம் இவையிரண்டுமே சமூகத்தின் இருவேறு தூண்கள் எனும் நிலை பல சகாப்தங்களாக இருந்து வந்துள்ளது. அரசியலும், அரசியல்வாதிகளும் வகுக்கும் கொள்கைகள் ஒவ்வொரு நாட்டினதும் வியாபாரக் கூற்றைப் பாதிக்காமல் அதை வளர்ப்பதன் மூலம் சமூகத்தின் வாழ்வாதாரத்தைக் கூட்டும் வகையில் செயற்பட வேண்டும் என்பது ஜனநாயக மரபுகளின் கோட்பாடாக இருந்து வந்தது என்பது உண்மையே! ஒரு ஜனநாயக ஆட்சிமுறையில் வியாபாரம் அரசியலிலும், அரசியல் வியாபாரத்திலும் மூக்கை நுழைக்கக்கூடாது என்பது எழுதப்படாத சட்டமாகவே இருந்து வந்துள்ளது.

    ஆனால் இன்றோ?

    அரசியலே ஒரு வியாபாரமாக மாறிவிட்டதோ எனும் ஒரு நிலை எமது மனங்களில் ஓர் அச்ச உணர்வுடன் கூடிய நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளது. இதை ஏதோ எமது பின்புல நாட்டு அரசியல் களங்களின் நிலைப்பாட்டின் அடிப்படையில் கூறுகிறேனோ என்று நீங்கள் எண்ணினால் அது ஒரு தவறான கண்ணோட்டமாகும். ஏனென்கிறீர்களா? நியாயமான கேள்விதான்… இன்றைய மேலைநாட்டு அரசியல் போக்குகளை நோக்கும் போது அதைப்பற்றிய விளக்கம் ஒரு புதுப்பாதையில் அரசியல் ஓடுகிறது என்பது புரிகிறது. காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் அரசியல் கோட்பாடுகளைப் புறந்தள்ளி இன்றைய சமூகப் பின்னணியோடு கலந்த ஒரு புதுவகையிலான அரசியல் பிறப்பெடுக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

    அரசியல் பின்னணியில் பலகாலமாக அரசியல் களத்தினில் பயின்று ஒரு நிலையான அரசியல்வாதி என்று பெயர் பெற்றவர்களை நோக்கிய வாக்களர்களின் பார்வைகள் ஒரு புதிய திசையில் பரிணமிக்க ஆரம்பித்துள்ளது என்று கூறவேண்டும். இத்தகைய ஒரு நிலை தோன்றியதன் காரணம்தான் என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டிய ஒரு நிலையில் நாம் இருக்கிறோம். அரசியல்வாதிகள் எனப் பெயர்பெற்றவர்கள் மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக நடந்து கொண்டார்களா என்பது கேள்விக்குறியே! தேர்தல் பிரசாரமேடைகளிலே தாரளாமாக மக்கள் மனங்களைக் கவரும் வகையில், அப்போதைய மக்களின் மனநிலைக்கு உகந்தவாறு ஏதோ பலவிதமான நிறைவேற்றமுடியாத, அன்றி நிறைவேறும் சாத்தியமே அல்லாத வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டுப் பின்பு பதவிக்கு வந்ததும் ஏதோ பல காரணங்களுக்கு அரசியல் சாயம்பூசி மக்களின் அபிலாஷைகளை முற்றிலும் நிராகரிப்பது அரசியல் நடைமுறை வழக்கமாகியதே மக்கள் அரசியல்வாதிகள் என்று வகுக்கப்பட்டவர்களின் மீது தமது நம்பிக்கையை இழந்ததற்கு முக்கிய காரணம்.

    அடுத்து அதிகாரம்பெற்று ஆட்சி அமைத்தவர்கள் நாட்டின் நன்மைக்காக எடுக்கும் நடவடிக்கைகளின் உண்மையான தரத்தை ஆராயாமல் அனைத்தையும் எதிர்க்கும் மனப்பான்மையில் எதிர்க்கட்சிகளில் இருப்பவர்கள் நடந்துகொள்வதும், மக்களுக்கு நன்மை பயக்கும் சில வியுக்திகளை எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் பிரஸ்தாபிக்கும்போது கொள்கைகளின் அடிப்படியில் நாட்டின் நன்மையைப் புறந்தள்ளிவிட்டு ஆட்சியில் உள்ளோர் அநாயசமாக நடந்து கொள்வதும் மக்களின் மனங்களில் விரக்தி ஏற்பட வழிவகுக்கிறது.

    இத்தகைய நிலைமைகளின் விளைவை இன்று நாம் அமெரிக்க நாட்டின் அரசியல் களத்தில் பார்க்கிறோம். அரசியல்வாதிகளில் நம்பிக்கையிழந்த மக்கள் அரசியல் அனுபவம் ஏதுமற்ற ஒரு வியாபார முதலாளியின் கைகளில் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்திருப்பது அரசியல் இன்று வியாபாரத்தளமாக மாறியிருக்கிறது என்பதற்கு அத்தாட்சியாகிறது. அதற்காக நான் வியாபரத்தில் ஈடுபட்டவர்கள் ஒரு நாட்டை ஆள்வதற்கு தகுதியற்றவர்கள் என்று கூறவில்லை. எதுவித அரசியல் அனுபவமுமின்றியவர்கள் ஒருநாட்டின் தலைவராகும்போது அரசியல் நாகரிகத்தை மீறும் வகையில் நடந்து கொள்ளும் ஒரு நிலை ஏற்படுகிறது. அது குறுகியகால வெற்றியை அவர்களுக்கு நல்கலாம், அதுவே அவர்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றுக் கொடுப்பதைப் போன்ற குறுகியகால அரசியல் லாபத்தை அவர்கள் ஈட்டலாம். ஆனால் தொலைநோக்கான தீர்க்கதரிசனம் கொண்டவர்களின் பார்வையில் இது விளைவிக்கக்கூடிய எதிர்மறையான தாக்கங்களின் வலிமை புரியும். எத்தனையோ வருடங்களாக நாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வுகள் ஒரு சிறிய கால அவகாசத்தினுள் சிதறிப்போகும் நிலை ஏற்படலாம். தீவிரவாதப்போக்குக் கொண்டவர்களின் ஆதிக்கம் வலுப்பெறுவதன் மூலம் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீறப்படலாம்.

    பரந்துபட்ட உலகளாவிய ஒற்றுமையும், கூட்டுறவும் சட்டென சிதைந்து போகும்நிலை உருவாகலாம். இனத்துவேஷம், மதத்துவேஷம், நிறத்துவேஷம் என்பனவற்றிக்கு அரசியல் முலாம் பூசப்பட்டு சாதாரண அரசியல் பிரசாரங்களாக மாறலாம். அத்தகைய ஒரு நிலை சிறிதுசிறிதாகப் புரிந்துணர்வு மிக்க மேலைநாடுகளின் அரசியல் அரங்கினுள் உட்புகுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. தேசியவாத அரசியல் எனும் போர்வையில் தீவிரவாத அரசியல் நடத்தப்படுக்கிறது.

    நல்லதோர் அரசியல் செயற்பாட்டால் வியாபாரம் செழிக்கலாம் ஆனால் அரசியலே வியாபாரமாக்கப்பட்டால் ?

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • 2017 ஒரு பார்வை!

    -சக்தி சக்திதாசன்

    வருடமொன்று கடந்து செல்லுது. வாழ்க்கை தானே விரைந்து போகுது. வருவது வருவதும் செல்வது செல்வதும் யாரின் அனுமதி கேட்காமலும் தானே இயங்கிக் கொண்டு போகிறது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவருக்கும் வாழ்வில் பல நிகழ்வுகளுக்குக் காரணமாகின்றன. அது சிலரின் வாழ்வில் மகிழ்ச்சிகரமானதாகவும், சிலரின் வாழ்வில் துயரமிக்கதாகவும் அமைந்து விடுகிறது. அவ்வகையில் கடந்து செல்லும் இந்த 2017 எதை எதை விட்டுச் செல்கிறது என்பதை இந்தச் சாமான்யனின் பார்வையில் மீட்டுப் பார்க்கிறேன்.எனது மீள்பார்வை கொஞ்சம் சத்தமாக உங்கள் முன்றிலிலும் விழுகிறது.

    முதலாவதாகச் சர்வதேச அரங்கை எடுத்துப் பார்க்கிறேன். 2017ஆம் ஆண்டின் ஆரம்பம் அனைத்து உள்ளங்களையும் வித்தியாசமான உணர்வுகளால் தாக்கியது. ஜனநாயக அரசியலில் முன்னணியில் நிற்கும் மேலை நாடுகளில் ஒன்றான அமெரிக்கா எந்தத் திசையை நோக்கிப் பயணிக்கப் போகிறது? எனும் கேள்வி அரசியல் ஆர்வலர்கள் தொடங்கி, சாதாரண மக்கள் வரை சர்வதேச அளவில் மிகப்பெரிய கேள்வியாகத் தொங்கிக் கொண்டிருந்தது. தனது தேர்தல் பிரசார மேடைகளில் மிகத் தீவிரமான வலதுசாரப் போக்கைக் கடைப்பிடித்த அமெரிக்க ஜனாதிபது ட்ரம்ப் அவர்கள் பயணிக்கப் போகும் பாதையும், அப்பாதையினால் ஏற்படப்போகும் சர்வதேசத் தாக்கத்தைப் பற்றிய ஒருவிதமான அச்ச உணர்வும் மக்களிடையே பரவியிருந்தது. இன்றைய சூழலில் அவர் பதவிக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியாகப் போகும் நிலையில் அவரின் அதிகாரம் நான் எதிர்பார்த்ததை விடக் குறைந்த அளவிலான சர்வதேசத் தாக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியக் கிழக்கு நாடுகளின் மீதான அவரது செயற்பாடுகளும், அமெரிக்க உள்நாட்டு இனவாதப் பிரச்சனைகளின் மேலோக்கத்திற்குத் துணை போகும் அவரது சில செயற்பாடுகளையும் தவிர இதுவரை மட்டுப்படுத்தக்கூடிய அளவிலேயே திரு ட்ரம்ப் அவர்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

    நான் வாழ்ந்து கொண்டிருக்கும் இங்கிலாந்து தேசத்தை எடுத்துக் கொண்டால் 2016 நடைபெற்ற “ப்ரெக்ஸிட்” எனும் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் சர்வதேச வாக்கெடுப்பின் முடிவே இன்றுவரை இங்கிலாந்தின் அரசியலில் முன்னணியில் நிற்கிறது என்பதுவே உண்மை. இதன் எதிரொலியாக ஒரு தேர்தலை இங்கிலாந்து எதிர்கொண்டதும், ஒரு மைனாரிட்டி அரசாங்கம் அமைய வேண்டிய நிலை ஏற்பட்டதும் இங்கிலாந்து அரசியலில் 2017 பதித்த முத்திரைகள் என்றால் மிகையாகாது. இந்த ப்ரெக்ஸிட் என்பது ஐரோப்பிய முன்னணியின் மீதுதான் தாக்கம் ஏற்படுத்தியது என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இங்கிலாந்து மக்களின் அரசியல் களத்தையே இரு பாதிகளாகப் பிரித்துள்ளது என்பதும், ஒரு விதமான இனத்துவேஷத்தை மக்கள் மனங்களில் தூவியிருக்கிறது என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மைகளாகின்றன.

    இவ்வரசியல் பிரிவு என்பது கட்சிரீதியானது மட்டுமல்ல கட்சி பேதங்களைக் கடந்து வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களை சில சமயங்களில் இணைத்திருக்கிறது என்பதும் உண்மை. 2017ஆம் ஆண்டு இதுவரை மூன்று அமைச்சர்களைக் காவு கொண்டிருக்கிறது. வெவ்வேறு காரணங்களுக்காக இதுவரை மூன்று அமைச்சர்கள் இதுவரை தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளார்கள். இங்கிலாந்துப் பிரதமரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகவே தொங்கிக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்தின் எதிர்காலப் பொருளாதாரம் ஒரு பின்னடைவைத் தற்காலிகமாகவேனும் எதிர்கொள்ளப் போகிறது என்பது அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படும் உண்மையாகிறது. 2018 எமக்கு என்ன கொண்டு வரப்போகிறது என்பது . . .

    மற்றைய ஐரோப்பிய நாடுகளை எடுத்துக் கொண்டால், அதில் முன்னணி வகிக்கும் ஜேர்மனி, பிரான்சு, ஆஸ்ட்ரியா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் வெளிநாட்டவருக்கெதிரான ஒருவகை இனத்துவேஷ அடிப்படையிலான அரசியலே மேன்மை வகிக்கிறது என்பது கவலைக்குரிய விடயமாகவே இருக்கிறது 2017இல் தலைதூக்கிய இப்பிரச்சனை 2018இல் எத்தகைய வடிவத்தை எடுக்கப் போகிறது என்பதை அரசியல் அவதானிகள் மிகவும் அவதானத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். 2017 ஜேர்மனிய, பிரான்சு தேர்தல்களில் ஒரு புதுவிதமான அரசியல் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

    வடகொரியாவின் தொடரும் அச்சுறுத்தல்கள் எங்கே உலக அமைதிக்குப் பங்கம் விளைவித்து விடுமோ எனும் அச்சம் அனைவரின் மனங்களிலும் மேலோங்கியுள்ளது. சிரியா நாட்டின் போர் ஓரளவுக்கு அடக்கப்பட்டு விட்டாலும் மக்கள் முழுமையான விடிவுக்குள் நுழைந்து விட்டார்களா? என்பது கேள்விக்குறியே! அமேரிக்க ஜனாதிபதியின் சமீபத்திய செயற்பாட்டினால் இஸ்ரேலிய, பாலஸ்தீன அமைதிப் பேச்சுக்கள் பின்னடைந்தது போன்றதோர் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியின் முழுத்தாக்கமும் 2018இல் தான் உணரப்படும் போன்றே தோன்றுகிறது. ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் அமைதியின்மைக்கு 2018 ஒரு விடிவை நல்குமா? என்பது உலக நலம் விரும்பிகள் அனைவரின் மனங்களிலும் ஆவலோடு மேலோங்கும் கேள்வியாகிறது. ரஸ்ய நாட்டின் அரசியல் பாதை, சீனாவின் பொருளாதார மேன்மை என்பன சர்வதேச அளவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது? இதற்கான விடைகளும் 2018க்குள் தான் ஒளிந்து கிடக்கின்றன.

    2017 இயற்கை அனர்த்தங்களையும், பயங்கரவாதத் தாக்குதல்களையும், வாரி வழங்கித்தான் இருக்கின்றது. இங்கிலாந்தில் மன்செஸ்டர், லண்டன் நகரங்களில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களும், அமெரிக்க நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களும் மற்றும் ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா நாடுகளில் நிகழ்ந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களும் 2017ஆம் ஆண்டு மக்கள் மனதில் நீங்கா வடுக்களைப் பதித்திருக்கின்றது. இயற்கை அன்னை மக்களின் பேராசையின் பால் கொண்ட ஆவேசம் தான் இயற்கை அனர்த்தங்களாக உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

    அதேநேரம் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருளாதார முன்னேற்றம் துயருறும் மனங்களுக்கு ஒருவிதமான ஆறுதலை நல்குகின்றது என்பதும் உண்மையே. ஆனால் இந்நாட்டின் பொருளாதார முன்னேற்றங்கள் அடிமட்ட மக்களுக்குச் சென்றடையும் வேகம்2018இல் அதிகரிக்க வேண்டும் என்பதே அனைத்து மனங்களினதும் மாறாத அவா என்பதும் உண்மையே! தமிழ்நாட்டின் அரசியல்களம் 2017இல் மிகவும் வேதனையளிப்பதாகவே உள்ளது. அரசியல் நிலை சீரடைந்து 2018இல் மக்கள் ஒரு ஸ்திரமான நிர்வாகத்தினைக் காணவேண்டும் என்பது பிரார்த்தனையாகவே உள்ளது.

    எனது பிரத்தியேக வாழ்வினைப் பொறுத்தவரை 2017 ஒரு மிதமான ஆண்டாகவே இருந்திருக்கிறது . நான் விருப்ப ஓய்வூதியம் எடுத்து இது மூன்றாவது ஆண்டாகும்.  இருப்பினும் பல இன்னோரன்ன காரணங்களினால் எனது எழுத்துப் பணி நான் எதிர்பார்த்த வகையில் எனக்கு மகிழ்ச்சிகரமாக அமையவில்லை. சிறிது மந்தமாகவே இருந்திருக்கிறது. 2017ஆம் ஆண்டின் சிகரமாக விளங்கியது யூலை மாதம் கனடாவில் நான் கலந்து கொண்ட எனது யாழ் மத்திய கல்லூரி 70களின் மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வே ! அடுத்து என் வாழ்வில் புதுவரவாக 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எம்மிடையே வந்துதித்த எனது இனிய பேத்தியின் உறவே 2017ஆம் ஆண்டு என் மனத்தினை மகிழ்வால் நிறைத்தது என்றால் மிகையாகாது. என்னால் முடியாது என்று எண்ணியிருந்த சிலவற்றை முடித்ததும்,முடிக்கக்கூடிய பலவற்றை முடிக்காமல் விட்டதும் 2017இல் என்பதும் உண்மை. நவம்பர் நாம் மேற்கொண்ட பத்துநாட்கள் கப்பற் பயணம் கொடுத்த அனுபவங்களின் தளம் 2017 என்பதும் ஒரு மறக்க முடியா இன்ப அனுபவமே!

    வாழ்க்கை என்பது அனுபவமே! அகவை ஒவ்வொன்றும் அவசரமாய் ஓடி எனது 61வது அகவையின் நடுவில் 2018க்குள் நுழைகிறேன். 2017ஐ விட 2018 மகிழ்ச்சிகரமானதாக அமையும் எனும் நம்பிக்கையின் அடித்தளமே வாழக்கையை நடத்துகிறது. அதற்காக 2018இல் துன்பங்கள் எதுவுமே அண்டாது என்று கூறிவிட முடியுமா? எது வந்தாலும் அதிலுள்ள நன்மைகளை எடுத்து தீமைகளைத் தவிர்த்துப் பார்க்க எம்மை பக்குவப்படுத்திக் கொள்வதே சரியான மார்க்கமாகும்.

    ஆண்டொன்று போனால்
    வயதொன்று போகும்
    அதற்கு முன்னாலே வா! வா 
    அழகுடன் இளமை தொடர்ந்து வராது
    இருக்கின்ற போதே வா! வா!

    என்கிறது கவியரசரின் பாடல் வரிகள். இளமையைத் தொலைத்து விட்டு முதுமையின் வாயிலில் நிற்பவன் நான். இருப்பினும் ஒவ்வோர் ஆண்டும் தரும் இனிமைகளை மனத்தில் தேக்கி வைத்து அதன் வலிமையோடு புதுவருடத்தினுள் நுழைவது ஒன்றே எமக்கு இருக்கும் ஒரே வழி.

    இளையோர், முதியோர் அனைவருக்கும் இப்பாமரனின் எளிமையான புதுவருட வாழ்த்துக்கள்.

    சக்தி சக்திதாசன்
    லண்டன்
    30.12.1017

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…(258)

    அன்பினியவர்களே!

    அன்பினிய வணக்கங்கள். 2017ஆம் ஆண்டின் இறுதி மடலில் உங்களிடையே வந்து விழுகின்றேன். ஆம், அடுத்த எனது மடல் வரும்போது நீங்களனைவரும் 2018ஆம் ஆண்டின் மடியில் தவழ்ந்து கொண்டிருப்பீர்கள். நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி இதோ இவ்வருடத்தின் முடிவில் வந்து நிற்கிறோம். தைவ்வருடத்தின் முன்றிலில் நாம் ஒவ்வொருவரும் எத்தனையோ விதமான வித்தியாசமான அனுபவங்களினூடாக ஊர்ந்து வந்திருக்கிறோம். அடுத்த ஆண்டினுள் நாம் நுழையும்போது எமது அகவையில் மட்டுமல்ல எமது அனுபவத்திலும் நாம் முதிர்வடைந்தவர்களாகின்றோம்.

    கடந்து கொண்டு முடிவில் வந்துநிற்கும் இந்த ஆண்டில் நாம் பெற்றவை பல. இழந்தவை பல. பொருளையிழந்திருக்கிறோம், உறவுகளை இழந்திருக்கிறோம், நட்புகளை இழந்திருக்கிறோம் அதேபோல உறவுகளைப் பெற்றிருக்கிறோம், பொருளீட்டி இருக்கிறோம். ஆம் வரவும், செலவும் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள். வரவில் மகிழ்வதும், செலவில் அழுவதும் மனிதவாழ்வின் இயற்கை நியதி. 2000 எனும் மைல்கல்லைத் தொட்டு இப்போது 17 வருடங்கள் ஓடி முடிந்துவிட்டன. ஓடியதில் வருடங்கள் களைத்து விட்டனவா? இல்லையே! ஒவ்வொரு வருடமும் ஒரு புது மலரைப் போல பல வர்ணங்களைத் தன்னுள் அடக்கிய வண்ணம் மலர்கின்றது. அவற்றினுள் நாம் அறிந்திடாத, இனிமேல் அறியப் போகும் பல புதுமைகள் பதுங்கிக் கிடக்கின்றன. அவை காலம் கனியும் போது எம்முன்னே மலர்ந்து விரிகின்றன. அதேபோல பல துயர்தரும் நிகழ்வுகளையும் அது தன்னுள் வைத்துக் கொண்டுதான் மலர்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் வாழ்வை நாம் மகிழ்ச்சிகரமாக புதுவருடத்தில் தொடங்க வேண்டுமேயானால் நேரிய நம்பிக்கைகளை எதிர்நோக்கியே புது ஆண்டினுள் பிரவேசிக்க வேண்டும்.

    எத்தனையோ விதமான மனிதர்களையும், பல்வேறு கலாசாரங்களையும் கொண்டுள்ள இப்பூகோள உருண்டை எப்போதும் போலத்தான் உருண்டு கொண்டிருக்கிறது. அதனுள் வாழும் நாம்மட்டும் எமது உணர்வுகளின் மாற்றம்தரும் தாக்கத்தினால் எமக்குள்ளே பல பேதங்களை வளர்த்து எம்மை நாமே துயருக்குள்ளாக்குக்கிறோம். ஆணவம், அகங்காரம், மமதை எனும் அதீத குணங்களை ஏனோ அதிக வேகத்துடன் வளர்த்துக் கொள்கிறோம்.

    இருப்பவர், இல்லாதவர் எனும் பேதத்தின் அடிப்படையில் எமது வாழ்வின் தராதரங்களை நிர்ணயித்துக் கொள்கிறோம். போகும் பாதை வெவ்வேறாயினும் நாம் போகுமிடம் ஒன்றுதான் என்பதை நினைவிற் கொள்ள மறந்துவிடுகிறோம். நாம் விரைந்து அவசரமாக ஓடுவது எமது வாழ்வின் முடிவு எனும் கரையைத் தொடவே என்பதுவே உண்மை. ஆனால் அவ்வெல்லையைத் தேடிஓடும் பயணத்தில் சிலர் மாபெரும் செல்வந்தர்களாக, பலவிதமான வசதிகளுடன் பயணிக்கிறார்கள். பலர் பசியுடனும், தாகத்துடனும் வாழ்வின் அடிப்படை வசதிகளற்ற நிலையில் அப்பயணத்தை மேற்கொள்கிறார்கள். இவ்வோட்டப் போட்டியில் வசதியற்ற சிலர் வசதியற்ற காரணத்தினால் விரைவாக எல்லையைத்தொட்டு வெற்றி கொள்கிறார்கள். ஆனால் அதை வெற்றியாக யாரும் பார்ப்பதில்லை. இதுவே வாழ்க்கையின் யதார்த்த நிலையாகிறது.

    சாதனைகள் எதுவுமின்றி, சோதனைகளைத் தாங்குவதை மட்டுமே சாதனையாக்கிக் கொண்ட பலர் ஒருவராலும் அறியப்படாமலே புதைக்கப்படுகிறார்கள். சரித்திரப் புத்தகத்தில் ஒருவரி கூட இவர்களைப் பற்றிப் பிரஸ்தாபிக்கப்படுவதில்லை. ஆனால் அதற்காக அவர்கள் வாழ்வோடு தாம் தினமும் நடத்தும் போராட்டத்தைக் கைவிட்டு விடுகிறார்களா? அளவுக்கதிகமான செல்வத்தில் திளைத்துச் செய்வதறியாது மகிழ்ச்சி எனும் பெயரில் பணத்தைத் தண்ணீர்போல வாரியிறைக்கும் கூட்டம் ஒரு புறம், உயிரை உடலோடு தக்க வைத்துக் கொள்வதற்கு குடிப்பதற்கு இரு குவளை சுத்தமான நீர் கிடைக்காமல் கண்ணீரும் வறண்டு போன நிலையில் வாடும் கூட்டம் மறுபுறம். இவர்கள் இருவரையும் வைத்துப் பிழைப்புநடத்தி வாழ்வை ஓட்டு கூட்டம் இடையில் இவர்கள் அனைவரையும் தன்னோடு சுமந்து கொண்டுதான் 2017ஆம் ஆண்டு தன்னுடைய முடிவில் வந்து நிற்கிறது. ஏதோ ஒரு நம்பிக்கையில் தன் மடியில் கிடக்கும் அனைவரையும் 2018இன் மடியில் தள்ளிவிடக் காத்து நிற்கிறது.

    இவர்களுக்கெல்லாம் 2018 எவ்வகையில் விடியப் போகிறது என்பதனை ஒருவரும் வரையறுத்துக் கூற முடியாது. ஆயினும் வென்று விடுவோம் எனும் நம்பிக்கையில் தான் அனைவரும் அடுத்த வருடத்தினுள் கால் வைத்தாக வேண்டியிருக்கிறது. இருப்பவரோடு இல்லாதவர் சமதளத்தில் நின்றுதான் போராட வேண்டி இருக்கிறது. நம்பிக்கை இருக்குமட்டும் அனைவருக்கும் அடுத்த ஆண்டு ஆறுதலைக் கொண்டு வரட்டும் என்னும் பிரார்த்தனையோடு 2018இல் உங்களிடையே வருவேன்.

    அன்பினிய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    உருண்டு போகுது
    வருடமொன்று
    உள்ளே அழைக்குது
    வருடமொன்று

    போனது தந்த
    ஏக்கத்தினால்
    போவதா? இல்லையா?
    என்றே தயங்கும்
    எளியோர் கூட்டமொன்று

    கண்டது எல்லாம்
    மகிழ்ச்சி என்றே
    கதவைத் தள்ளித்
    திறக்க முயலுது
    அடுத்தொரு கூட்டம்

    வந்ததும் போனதும்
    போதும் என்றே
    பந்தங்கள் அறுத்து
    விடுதலையான
    பிறவிகள் சில
    சிரிக்குது
    சிலரின் வெறுமையைக்
    கண்டே . . .

    புதிதாய்ப் பிறந்த
    மழலைகள்
    அறிவரோ . . .
    வருடங்கள் தம்முள்
    வைத்திருக்கும் விந்தைகளை?

    பிரியப் போகுது
    வருடமொன்று
    பிறக்கப் போகுது
    வருடமொன்று
    பிரியும் வருடத்தோடு
    பிரியட்டும் சோதனைகள்
    பிறக்கும் வருடத்தோடு
    பிறக்கட்டும் சாதனைகள்

    உள்ளத்தோடு
    உறைந்திட்ட என்
    உன்னத உறவுகளுக்கு
    உளமார ஊறிடும்
    புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    கனவுகள் சிறக்கட்டும்
    காவியங்கள் மலரட்டும்
    வாழிய! வாழிய!
    மகிழ்வு நிறைந்திட வாழ்ந்திடுக!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…(257)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். போனவார மடலில் தொடங்கிய எனது பயணத் தொடர்ச்சியோடு இவ்வார மடலில் உங்களுடன் இணைவதில் மகிழ்கிறேன். ஆமாம் சென்ற வார மடலில் நாம் எமது “கப்பல் சுற்றுலாவில்” பங்கேற்பதற்காக “மயாமி” கப்பற் தளத்தை வந்தடைந்தோம் என்று குறிப்பிட்டிருந்தேன். இந்தக் கப்பல் பயணம் இருக்கிறதே அதுவும் ஒரு விமானப் பயணம் போன்றதே! நாம் எமது பிரயாணத்தை இங்கிலாந்தில் இருந்து ஆரம்பிப்பதன் முன்னரே இணையவழியாக அக்கப்பற் பயணத்துக்கான “போர்டிங் பாஸ்”இனைப் பெற்றுக்கொண்டதோடு மட்டுமில்லாமல் எமது பயணப் பொதிகளில் இடுவதற்கான பெயர் ஆகிய விபரங்களடங்கிய பட்டியலையும் பெற்றுக் கொண்டோம்.

    அங்கு வண்டியில் இருந்து இறங்கிய நாமனைவரும் மிகவும் ஆரவாரமாக எமது பொதிகளை கொண்டு அருகிருந்த ஒரு பணியாளை அணுகினோம். அப்பணியாள் அனைவரது பொதிகளையும் ஒரு தள்ளு வண்டியில் ஏற்றிவிட்டு எம்மைக் கப்பலுக்குள் நுழைவதற்கான நிர்வாகங்களை கவனிக்கும்படியும், நாம் கப்பலுக்குள் நுழைந்து எமக்குக் கொடுக்கப்பட்ட எமது அறையினுள் சென்ற பின்பு அவரவர் பெட்டிகள் அவரவர் அறைகளுக்கு முன்னால் கொண்டு தரப்படும் என்றும் கூறினார். நாமனைவரும் எமது நுழைவு விதிகளைப் பூர்த்தி செய்துகொண்டு உற்சாகத்துடன் எம்மைச் சுமந்து செல்வதற்காகக் காத்து நிற்கும் அந்தப் பெரிய அடுக்குக் கப்பலினுள் ஒவ்வொருவராக நுழைந்தோம்.

    அப்பாடா ! கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்துடன் கூடிய ஓர் அழகிய மாபெரும் மாளிகையினுள் நுழைவது போலிருந்தது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அனைவரும் அவசரம் அவசரமாகத் தமக்குத் தரப்பட்டுள்ள அறைகளை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். நானும் என் மனைவியும் எமது அறையைத் தேடிக் கண்டுபிடித்து திறந்து கொண்டு உள்ளே நுழைந்தோம். ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றின் அறையைப் போல கோலாகலமாகக் காட்சியளித்தது அவ்வறை. இனிவரும் ஏழு நாட்களும் இதுதானே எமது இல்லம் ! அடுத்தடுத்த மூன்று அறைகளும் எம்மோடு இணைந்து வந்திருந்த மற்றைய நண்பர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்களும் அங்கு வந்து சேர்ந்து மகிழ்ச்சியுடன் எம்முடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அடுத்தது என்ன பசி வயிற்றைக் கிள்ளியது; அனைவரும் எமது வயிற்றைக் குளிர வைப்பதற்காகப் புறப்பட்டோம். நாமிருந்தது எட்டாவது அடுக்கு. ஒன்பதாவது அடுக்கில் உள்ள ரெஸ்டாரண்டில் உணவு எடுத்துக் கொள்ளலாம் என்று ஒலிபெருக்கி அறிவித்துக் கொண்டிருந்தது.

    வித விதமான பலநாட்டு உணவுவகைகள் ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்தன. பிறகென்ன…ஒரு வெட்டு வெட்டி முடித்தாயிற்று. அன்றைய பொழுது எமது பெட்டிகளைத் திறந்து எமது அறையினை வசதி செய்து கொள்வதில் கழிந்து போயிற்று. சரியாக மாலை நாலு மணிக்கு எம்மைச் சுமந்து கொண்டு கப்பல் சுற்றுலாவை ஆரம்பித்தது. எமது அறையோடு சேர்ந்திருந்த பால்கனியில் வந்து நின்று கப்பல் பிராயாண ஆரம்பத்தைக் கண்டு களித்தோம். எமது பிரயாண அட்டவணையின் பிரகாரம் அடுத்தநாள் முழுவதும் எமது பிரயாணம் கடலில் தான். ஆனால் கப்பலினுள் பல் பகுதிகளில் பலவகையான நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. கப்பல் சுற்றுலாவுக்குப் பொறுப்பாக இருக்கும் அக்கப்பற் சிப்பந்தி ஒருவர் அனைவருக்கு கப்பலின் விதிகளையும், மற்றும் தேவையான முக்கிய விடயங்களையும் பற்றிய ஒரு விரிவான உரையையும் தந்தார்.

    அடுத்தநாள் காலை கப்பல் “கொஸ்மொல்” எனும் தீவையடைந்தது. இத்தீவு மெக்சிகோ நாட்டிற்குச் சொந்தமான தீவாகும். காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு ஏற்கனவே கப்பலின் மூலமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு சிறிய சுற்றுலாவில் பங்கேற்றோம். அழகிய காட்சிகளைக் கொண்ட இத்தீவில் கடற்கரையோரமாக ஒரு சிறிய படகுப் பிரயாணத்தையும், அதைத் தொடர்ந்து சிலமணிநேரம் கடற்கரையோரமான பொழுது போக்கினையும் நடத்தினோம். மாலை மூன்று மணியளவில் திரும்பவும் கப்பலுக்குள் ஏறினோம். 6 மணியளவில் கப்பல் மீண்டும் தனது பிரயாணத்தைத் தொடங்கியது.

    அதற்கு மறுநாள் காலை ” பெலீஸ் ” எனும் தீவையடைந்தோம். இத்தீவு 1981ஆம் ஆண்டு வரையும் இங்கிலாந்து நாட்டின் கீழ் இருந்த தீவாகும். அழகிய பச்சைப் பசலேன்ற காட்சிகளைக் கொண்ட இத்தீவில் எம்மை பண்டைய “மாயன்” காலக் கண்டுபிடிப்புக்களான புராதனக் கண்டுபிடிப்புகள் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு “மாயன்” கால மன்னர்களைப் பற்றியும், அவர்களது ஆட்சிகுறை பற்றியும் ஒரு சிறிய விளக்கமளித்தனர்.அன்றைய மக்களின் கலாசார விழுமியங்களின் அடையாளங்கள் பிரமிப்பூட்டின. அங்கு பலரும் பல நினைவுப் பரிசில்களை அங்கு சுற்றுலாப்பயணிகளுக்காகவே திறக்கப்பட்டிருந்த சிறிய கடைகளில் வாங்கிக் கொண்டனர். மீண்டும் கப்பலையடைந்து மற்றொரு இரவுப் பயணம் ஆரம்பமானது.

    கடலின் மீது நகர்ந்து கொண்டிருக்கும் அக்கப்பலினுள் இருந்து கடலை நோக்கினால் அன்றி நாம் பிரயாணித்துக் கொண்டிருக்கிறோம் எனும் உணர்வே தோன்றாத வகையில் எதுவிதமான் ஆட்டங்களும், குலுக்கல்களும் இல்லாமல் கப்பல் பிரயாணித்துக் கொண்டிருந்தது. ஆமாம் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு தீவில் நாமனைவரும், வசிப்பது போன்றே இருந்தது. அடுத்தநாள் காலை எமது தரிப்பிடம் “மகோகனி பே” எனும் தீவாகும். இத்தீவு “கொண்டூரஸ் (Honduras)” எனும் நாட்டிற்குச் சொந்தமான தீவாகும். அழகிய விசிறி வாழைமரங்கள், தென்னை மரங்கள் என எமது பின்புல நாடுகளின் அத்தனை வகையான மரங்களையும் உள்ளடக்கியிருந்தது அத்தீவு. அழகிய பறவைகள் அங்குமிங்கும் இனிய கீதங்கள் இசைத்துக் கொண்டிருந்தன. எமது பிரயாணத்தில் அன்று மட்டும் வருணபகவான் தனது அருளைத் தாராளமாக வழங்கி எம்மைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அன்று மாலை தனது அடுத்த கட்டத்தை நோக்கி எமது கப்பல் எம்மைச் சுமந்த வண்ணம் நகர்ந்தது.

    அடுத்தநாள் காலை எமது கடைசித் தரிப்பிடமான “கேமன் ஐலன்ட்” எனும் தீவை அடைந்தோம். இத்தீவு இன்றும் இங்கிலாந்து மகாராணியாரைத் தமது தலைவியாகக் கொண்டுள்ளது. பல மாபெரும் செல்வந்தர்கள் தமது நாட்டின் வரிகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக இந்நாட்டு வங்களில் தமது செல்வத்தை சேமித்து வைத்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இந்நாட்டில் வங்கிகள் அதிக அளவில் இருக்கின்றன. பல இங்கிலாந்து செல்வந்த வியாபாரிகளுக்குச் சொந்தமான விடுமுறை பங்களாக்கள் இங்குண்டு. இங்கும் நீரிலும், நிலத்திலும் பயணிக்கக்கூடிய வாகனமொன்றில் எமக்கு ஒரு சுற்றுலா வசதி செய்து தந்தார்கள். பல அழகிய காட்சிகளையும், கடலில் நீந்தி மகிழும் மீனினங்களையும் கண்டு மகிழ்ந்தோம். அன்றிரவு மீண்டும் புறப்பட்ட அக்கப்பல் அடுத்தநாள் முழுவதும் கடலில் பயணித்து எம்மை மீண்டும் நாம் ஆரம்பித்த “மியாமி” நகருக்கு இட்டுச்சென்றது.

    அழகிய ஒருவாரச் சுற்றுலாவில் பல புதிய நாடுகளின் பகுதிகளைக் கண்டு ரசித்துவிட்டு அனைவரும் ஒன்றாக அவ்வவுஸ்திரேலிய நண்பரை அனுப்பிவிட்டு மீண்டும் இங்கிலாந்தை வந்தடைந்தோம். 2017க்குள் நுழைந்த நாம் பல புதிய அனுபவங்களின் சொந்தக்காரர்களாகி ஒருவாறு தேவமைந்தன் யேசுநாதரின் பிறந்தநாளாம் கிறீஸ்துமஸ் பண்டிகையை நோக்கி நெருங்கி விட்டோம்.

    மாட்டுத் தொழுவமொன்றில்
    மாறா மனித சமுதாயத்திற்காக
    மானிட உருவில் பிறந்த
    மகத்தான தேவமைந்தன் யேசு

    அன்பின் பிள்ளையாய்
    அருளின் பிறப்பிடமாய்
    மனிதர்கள் பாபச்சுமையை
    மரணித்தில் சுமந்தார் யேசு

    கேட்டுப் பெறுவதும் அருளைத்
    தட்டித் திறப்பதும் கடமையென
    தரணியைக் காக்க வந்த தனயன்
    தங்கமென மிளிர்ந்த இறைமைந்தன்

    பொறுமை ஒன்றே மனிதர்க்குப்
    பெருமை என்பதனை வலுவாய்
    போதித்த இயேசுபிரானின்
    பிறந்தநாளில் யாசிக்கின்றோம்

    இன்றும் , இனியும் அனைவரும்
    இன்பமும், மகிழ்வும் கண்டே
    இகத்தினில் வாழ்ந்திட மனதால்
    இன்புற வாழ்த்துக்கள் பொழிகின்றேன்

    அனைத்து கிறீஸ்தவ நண்பர்களுக்கும் அன்பான நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . ( 256 )

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள். சிலவார இடைவெளிக்குப் பின்னால் இம்மடலுடன் உங்கள் முன்னால் வருவதில் பெருமகிழ்வடைகிறேன். வருடம் முழுவதும் வாழ்க்கை எனும் சிக்கல் மிகுந்த புதிருக்கான விடைதேடி ஓடிக்களைத்ததினால் சிறிது இடைவெளி வேண்டி கொஞ்சம் ஓய்வெடுக்க எண்ணியதின் விளைவே எனது சிறிய மறைவுக்குக் காரணம். மிகவும் மகிழ்வான , ஆனந்தமான, அலாதியான ஒரு விடுமுறை என்றுகூடச் சொல்லலாம். நாங்கள் குடும்ப வாழ்வில் இணைந்து இப்போது சுமார் 36 வருடங்கள் ஓடி விட்டன. ஆரம்பகாலத்தில் வாழ்வினைத் தூக்கி நிறுத்துவதற்கான முயற்சிகளைத் தவிர வேறு எதையுமே எண்ணிப்பார்க்க முடியாத ஒரு வாழ்க்கை. அதைத்தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வாழ்வில் முன்னேற்றமடைந்த ஒரு நிலையில் எமது ஒரே மகனை வாழ்வில் நிலைநிறுத்தும் பணியில் முழுநேரச் செலவு இப்படியாகத்தான் ஓடியது எமது வாழ்க்கை.

    சில வருடங்களாகவே குறூஸ் ( Cruise ) எனும் கப்பல் மூலமான விடுமுறையில் ஆர்வம் காட்டி வந்த என் மனைவியின் விருப்பத்தை நான் அறிந்திருந்தேன்.. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தன்னார்வ ஓய்வெடுத்த பின்னால், என் மகனின் திருமணம் முடிந்த பின்னால் கடந்த வருடம் எனது மனைவியின் பலநாள் கனவு நிறைவேறியது. ஆம் கப்பல் விடுமுறையில் ஆர்வம் கொண்டிருந்த எனது சகோதரிகளும் வேறு சில நண்பர்களும் இணைந்து ஐரோப்பிய நாடுகளில் சிலவற்றுக்கான கப்பல் விடுமுறையை கடந்த வருடம் அதாவது 2016 யூலை மாதம் மேற்கொண்டோம். அவ்வகையான் விடுமுறையின் மீதான நாட்டம் அதில் ஈடுபட்ட அனைவருக்குமே அதிகமாகியது.

    அவ்விடுமுறையில் இருந்து திரும்பிச் சில மாதங்களிலேயே இவ்வருடம் அதாவது 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் மற்றுமொரு கப்பல் விடுமுறைக்கு முன்பதிவு செய்து கொண்டோம். இப்பயணம் வெஸ்டேர்ன் கரிபியன் குறூஸ் ( Western Caribean cruise ஆகும். அதே கூட்டத்துடன் மேலும் இருவர் இணைந்து 14 பேரடங்கிய குழுவாக இப்பயணத்துக்குத் திட்டமிட்டோம். இங்கிலாந்திலிருந்த 12 பேருடன் அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த இருவர் இணைந்து கொள்வதாக இருந்தது. நவம்பர் மாதம் 23ம் திகதி லண்டன் கட்விக் விமான நிலையத்திலிருந்து 12 பேரும் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஒர்லாண்டோ நகருக்கு விமானம் மூலம் பயணித்தோம். எமது நாட்டின் விமான நிலையத்தை எத்தனையோ முறை விமர்சித்த எமக்கு மற்றொரு நாட்டின் விமான நிலையத்தின் அல்லகல்லோலங்களைப் பார்த்ததும் தான் எமது நாட்டு விமான நிலையத்தின் அருமை புரிகிறது போலும் ! அப்பப்பா ஒர்லாண்டோ நாட்டின் விமான நிலையத்தின் குடிவரவுப் பகுதி இருந்த பகுதியில் சுமார் 500 பேர் வளைந்து, வளைந்து ஒரு பத்து வளைவுகள் கொண்ட வரிசையாக நின்றிருந்தோம். வியர்வை வழிந்தோடியது அத்தனை பேருக்கும் பொதுவாக ஒரு பெரிய மின்விசிறி மட்டும் நடுப்பகுதியில் ஓடிக்கொண்டிருந்தது. ஒருவாறு சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னால் குடிவரவு அதிகாரியின் முன்னால் நானும், மனைவியும் போய் நின்றதன் பின்னால் தான் அமெரிக்க நாட்டு விமானநிலையத்தில் மரியாதை என்பது மட்டளவில் கூடக் கிடையாது என்பதைத் தெரிந்து கொண்டோம்.

    ஒருவாரு அனைவரும் இணைந்து அங்கு வந்து எம்மோடு இணைந்த அவுஸ்திரேலிய தம்பதியினரையும் இணைத்து ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இரண்டு வாகனங்களில் எமக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு பங்களாவை நோக்கிச் சென்றோம். எமது வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதி எம்மோடு பேசிக்கொண்டு வந்தாலும் அவர் முகம் கடுகடுப்பாக இருந்தது. அப்புறம் தான் புரிந்தது அன்று அமெரிக்க நாட்டின் முக்கிய விடுமுறை தினமான ” தாங்ஸ் கிவிங் டே ( Thanks giving day , அன்று இரவு ஒரு விருந்துக்குப் போக வேண்டிய அச்சாரதி எமது தாமதமான வரவால் அவ்விருந்துக்கு தாமதமாகிக் கொண்டிருப்பதே அவரது கடுகடுப்புக்குக் காரணம் என்பது. ஒருவாரு எம் அனைவரையும் விடுதியில் இறக்கி விட்ட போதுதான் கூறினார் அன்று விடுமுறையாதலால் அனைத்து சாப்பாட்டுக் கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும் என்று. எமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இரவு 9 மணிக்குப் பின்னால் ஏதாவது பிட்சா கடை திறந்தாலும் திறக்கும் என்றார். அன்றைய இரவு பட்டினி போலும் என்று எண்ணிக் கொண்டோம்.

    பங்களாவினுள் சென்று உடை மாற்றிக் கொண்ட பின்னால் ஆர்வப்பிரியையான என் மனைவி வெளியே சென்று அடுத்த வீட்டு கதவைத் தட்டியுள்ளார். அங்கே இவ்விடுமுறையைக் கழிப்பதற்காக தனது குடும்பத்துடன் வந்திருந்த ஒரு அமெரிக்கரைப் பார்த்துள்ளார். அவரிடம் எமது நிலையை விளக்கிக் கூறிய போது, அவர் சில பிட்சா கடைகளின் தொலைத்தொடர்புகளைக் கொடுத்ததும் அதை வாங்கிக் கொண்டு திரும்ப வந்து தொலைபேசி மூலம் சில பிட்சாக்களுக்கு ஆர்டர் கொடுத்ததும் தான் அனைவருக்கும் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது அட பிட்சா இத்தனை சீக்கிரம் வந்து விட்டதே எனும் ஆச்சரியத்தில் கதவைத் திறந்தால் அங்கே அந்த அடுத்த வீட்டு நண்பர் கையில் பல பொருட்களுடன் நின்றார். கோகா கோலா போத்தல், பால் போத்தல் காப்பித்தூள், பாண் என அனைத்தையும் எம்மிடம் கையளித்தார். ஜொஸுவா எனும் அந்த அமெரிக்க நண்பர் அது தமது “தாங்ஸ் கிவிங் டே ” அன்பளிப்பு என்று கூறி பணமமெதுவும் வாங்க மறுத்து விட்டார். அப்போதுதான் கவியரசரின் பாடல் ” பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா ” வரிகளின் உண்மை அர்த்தம் புரிந்தது.

    கப்பல் பிரயாணத்தை ஆரம்பிக்கும் முன்னால் இரண்டு நாட்கள் ஒர்லாண்டோவில் கழிப்பது என்பதே எமது திட்டம். அடுத்த நாள் காலை மீண்டும் ஒழுங்கு செய்திருந்த பெரிய கறுத்த காரில் நாம் அருகிருந்த ஒரு ஷாப்பிங் மாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இறக்கி விடப்பட்டோம். அங்கு ஜோடி ஜோடியாக அனைவரும் பிரிந்து சென்று அமெரிக்க கடைகளை ஒரு கை பார்த்துத் திரும்பினோம். திரும்பியது என்னவோ வெறுங் கையுடன் தான். அன்று இரவு எம்முடன் வந்திருந்த ஒரு நண்பரின் மனைவி தான் கொண்டு வந்திருந்த பலசரக்குப் பொருட்களை உபயோகித்து அருமையான சாப்பாடு தயார் பண்ணி விட்டார் போங்கள். அடுத்த நாள் எமது திட்டப்படி ஒர்லாண்டோவில் உள்ள யூனிவர்சல் வேர்ல்ட் எனும் கேளிக்கை இடத்துக்கு விஜயம் செய்தோம். ஆளுக்கு 125 டாலர்கள் கொடுத்து உள்ளே நுழைந்த நாம் பல விடயங்களைப் பார்வையிட்டு விட்டு, சிம்சன் ரைடு எனும் ஒரு ரதத்தில் ஏறி அமர்ந்து விட்டோம். அனைவரும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர். அப்பாடா அந்த சுற்றூர்தியில் இருந்து இறங்கியதும் தான் உயிருடன் தப்பி விட்டோம் என்று எண்ணத் தோன்றியது. அத்தனை அபாயகரமான ஆனால் பாதுகாப்பான ஒரு தேரோட்டம். அதைப் போல பல தினுசான வினோதங்களைப் பார்த்து விட்டுக் களைத்துப்போய் வீடு திரும்பினோம். அடுத்த நாள் எமது கப்பல் பிரயாணத்தைத் தொடங்குவதற்காக மயாமி நகருக்குச் செல்வதற்காக எம்மை அழைத்துச் செல்வதற்கு இரண்டு வாகனங்கள் வந்திருந்தன. சுமார் நான்கு மணி நேர பிரயாணத்தின் பின்னால் மயாமி கப்பற் தளத்தை வந்தடைந்தோம்

    மிகுதி அடுத்த வாரம் தொடரும்

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share