Tag: மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

  • கற்பகதரு என்னும் அற்புதம் – இலக்கியத்தில் இணைந்த பனை (அங்கம் – 4)

    கற்பகதரு என்னும் அற்புதம் – இலக்கியத்தில் இணைந்த பனை (அங்கம் – 4)

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா    

    பனையின் மீது தமிழர் பெருங் காதல் கொண்டிருந்திருக்கிறார்கள். பனை என்பது தமிழர்களின் மரம் என்றே எண்ணி வந்திருக்கிறார்கள். அந்த நினைப்பு அவர்களின் உள்ளத்தில் ஆழப்பதிந்த காரணத்தால் தாங்கள் வசிக்கும் ஊர்களுக்கும் தங்களின் விருப்பத்துக்குரிய பனையினை இணைத்து பெயர் வைத்து மகிழ்ந்திருக்கிறார்கள். அந்தவகையில்த்தான் இங்கு சில ஊர்களின் பெயர்களைப்பார்க்கின்றோம். பனையின்குளம், பனகுடி, பனஞ் சாவடி, பனங்குளம், பனையூர், பனையப்பட்டி,  வடக்குப்பனைவடலி, தீய்ந்தபனைப்பட்டி, கலந்தபனை, பனங்காட்டூர், திருப்ப னையூர், பனங்காடு, பொற்பனைக் கோட்டை.

    இலக்கியங்களில் காட்டினாலும் தாங்கள் வாழுகின்ற இடங்களிலும் பனையினை விட்டுவிடத் தமிழர்கள் விரும்பவில்லை என்பதையே இந்நிலை காட்டுகிறதல்லவா!

    வெய்யில் என்று பாராமல், மழை என்று பாராமல்; ஒற்றைக் காலில் நின்று தவம் செய்து மக்களுக்கு – அவர்களின் வாழ்வில் பல நிலைகளிலும் பனையானது பயனை நல்கியே வந்திருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதே.

    கிறீத்தவ வேதமான பைபிளும் பனையினை வியந்து நிற்கிறது. “நீதிமான் பனையைப் போல் செழித்து வளருவான்” என்பதும் நோக்கத்தக்கது.

    பதநீரைப் பற்றியும், சுவையான நுங்கு பற்றியும். பனம்பழம் பற்றியும், கள் பற்றியும் இலக்கியங்கள் காட்டி நிற்பதையும் காணமுடிகிறது. பனை மாறன் என்று பெயரைக் கொண்ட மன்னர்கள் ஈழத்தை ஆண்டார்கள் என்பதையும் அறிய முடிகிறது. நுங்கின் நீரும்,  கரும்பின் சாறும், இளநீரும் அருந்தி ஆனந்தம் அடைந்தார்கள் பெண்கள் என்று ஆலத்தூர் கிழார் என்னும் புலவர் பாடுகிறார். நலங்கிள்ளை என்னும் அரசனின் படை மிகவும் பாரியது. அப்படையின் முன்னணியினர் பனையின் நுங்கினைச் சுவைத்து மகிழ்கிறார்கள். நடுவில் செல்லும் படையணியினர் பனம் பழத்தை உண்டு மகிழ்கிறார்கள். படையணியின் கடைசிப் பகுதியினர் பனங் கிழங்கினை உண்டு பசியாறுகிறார்களாம். அந்த அளவுக்கு படையின் பெருக்கமும், கடந்து செல்லும் காலத்தின் நீட்டமும் காணப்பட்டது என்றும்  பனையின் பருவத்தினையும் அதனால் வருகின்ற பயனையும் புறப்பாடல் வாயிலாக ஆலத்தூர்கிழார் காட்டி நிற்பது கருத்திருத்த வேண்டியதே!

    வீட்டுக்கு வருகின்ற விருந்தினருக்கு நாம் இப்போது தேனீர் கொடுப்போம். கோப்பி கொடுப்போம். இன்னும் எத்தனையோ வகையான பானங்களைக் கொடுப்போம். அவை அனைத்தும் உடல் நலத்துக்கு உகந்தனவா என்பதை கொடுக்கின்ற நாங்களும் உணர்வதில்லை. பருகுகின்ற விருந்தினரும் உணருவதில்லை. ஆனால் வீட்டுக்கு வருகின்றவர்களுக்கு நுங்கினைக் கொடுத்து அக்காலத்தில் எம்மக்கள் மகிழ்ந்தார்கள் என்பதை சிறு பாணாற்றுப் படை மூலம் அறிகின்றோம்.

    பனையினைப் பலவிதங்களில் பயன்படுத்திய செய்தியினையும் இலக்கியங்கள் புலப்படுத்தி நிற்பதும் நோக்கத்தக்கது. பனையின் ஓலையினால் ஆகிய உண் கலங்கள் பயன்பட்ட விதத்தினை நற்றிணை காட்டுகிறது. தட்டுவம் என்பது பனை ஓலையால் ஆன உண் கலமாகும். பனை ஓலையால் ஆன தட்டுவம் தூய்மையான கலமாகும். இன்று எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறதோ தெரியாது! கள்ளினை அருந்துவதற்கு பனை ஓலையிலான கலம் பயன்பட்டிருக்கிறது. இன்றும் அது நடைமுறையில் கிராமங்களில் இருப்பதையும் காணலாம். பனையின் பன்னாடை கள்ளை வடிப்பதற்கும், பத நீரை வடிப்பதற்கும் துணையாக இருந்தது என்பதை புறப்பாடல் காட்டி நிற்கிறது.

    தென்னம் பிள்ளை என்று செல்லமாய் அழைக்கும் தென்னை யானது வீடுகள் தோறும் இருக்கும். தென்னையைப் பிள்ளையாக்கி செல்லமாய் வளர்ப்போம். நித்தமும் நீர் ஊற்றுவோம்.கிட்டத்தட்ட பிள்ளையைப் பேணுவது போலவே தான்  தென்னையைப் பேணுவோம். ஆனால் பனையினை அப்படிப் பேணுவதும் இல்லை. அதனை வளர்த்திட நினைப்பதும் இல்லை. வளர்ந்த பனைகளைப் பார்த்துப் பாராமலும் நிற்போம். யாராவது நல்ல உயரமாய், நல்ல கறுப்பாய், நல்ல முறுக் கேறிய உடல் தோற்றத்துடன் காணப்பட்டால் – அவர்களை விபரிப்பதற்கு பனையினை எடுத்துக்காட்டி  நிற்போம். பனையோ இதனை எதையுமே கண்டு கொள்ளாமல் தனது ஒத்துழைப்பினை வழங்கியபடி தலை கவிழாமல் தலை நிமிர்ந்தபடியே தளராது நிற்கும். அடியிருந்து நுனிவரை அனைத்தையுமே எங்களுக்கு அளித்து கற்பகதருவாய், கர்ணனாய் களிப்புற்று நிற்கும். தென்னையும் இவ்வாறு தந்தாலும் பனையின் பக்குவம் வேறு ! பனையின் பயன்பாடும் வேறாகும்! பனையின் வாழும் காலமும் வேறாகும்!

    பிள்ளையென நாமழைக்கும் தென்னையில் ஆண், பெண் என்று வகை இல்லை. ஆனால் பனையில் ஆண், பெண் என்று காணப்படுகிறது. ஆண் பனையினை ‘அழகுப் பனை’ என்றும் , பெண் பனையினை ‘பருவப்பனை’  என்றும் அழைக்கின்றனர். பாளையினை மட்டும் நீட்டிக் கொள்ளுவதுடன் ஆண்பனை நின்றுவிடும். நுங்கினை வழங்கிடும் நிலை ஆண்பனைக்கு இல்லை. ஆனால் காய்ய்ப்பதும் கனிதருவதும் பெண்பனைதான். பதநீர் கூட ஆண்பனையைவிடப் பெண்பனையே தந்து நிற்கும்.

    பயிரிடப் படாமல் தானாகவே வளர்ந்து பயனளிக்கும் பனையினை மனமிருத்துவது அவசியமாகும். இளம் பனையினை ‘வடலி’ என்று அழைக்கின்றோம். பனையானது வளர்வதற்கு பதினைந்து ஆண்டுகள் எடுக்கும் என்று அறியமுடிகிறது. பனையின் வயதானது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். வளைவுகள் இன்று நேராக வளர்வது பனையின் சிறப்பு எனலாம்.

    கற்பகதருவான பனையினைக் கருத்திற்கொண்டு நாட்டுப்புற மக்களின் நாயகனான ஒருவர் தன்னுள்ளத்து உதித்தவற்றை தனது மொழியிலே கவிதையாக்கி வழங்கி இருக்கிறார். பனையின் வரலாற்றையே எப்படிக் காட்டுகிறார் பாருங்கள்.

    பனைமரமே! பனைமரமே! ஏன் வளர்ந்தாய் பனைமரமே?
    நான் வளர்ந்த காரியத்தை நாட்டாரே! சொல்கிறேன் கேட்பீர்.
    அறியாவிட்டால் சொல்லுகிறேன் அச்சோடி பெண்களா சோபனமே!
    தெரியாவிட்டால் சொல்லுகிறேன் தேசமெங்கும் சோபனமே!
    பராமரியா யிருக்காமல்  பட்சமுடன் கேட்டிருங்கள்.
    படுக்கப்பாய் நானாவேன், பாய்முடையத் தோப்பாவேன்,
    வெட்டநல்ல விறகாவேன், வீடுகட்ட வாரையாவேன்,
    பட்டுப்போற பயிர்களுக்குப் பலத்தநல்ல ஏற்றமாவேன்,
    அட்டடுக்குப் பெண்களுக்கு அடுப்பெரிய மட்டையாவேன்,
    கட்டநல்ல கயிறாவேன், கன்றுகட்டத் தும்பாவேன்,
    மட்டமுள்ள உறியாவேன், மாடுகட்டத் தும்பாவேன்,
    பசுவணைக்குங் கயிறாவேன்,  பால்தயிருக்கு உறியாவேன்,
    வாரமட்டை நானாவேன், வலிச்சல்களுந் தானாவேன்,
    தொட்டிலுக்குக் கயிறாவேன், துள்ளியாட ஊஞ்சலாவேன்,
    கிணத்துசலம்  மொண்டுவரக் கைத்தாம்புக் கயிறாவேன்,
    பலத்தசுமை பாண்டங்கட்குப் புரிமணையுந் தானாவேன்,
    ஏழைநல்ல மங்கலிக்கு ஏற்றகா தோலையாவேன்,
    மங்கலியப் பெண்களுக்கு மஞ்சள்பெட்டி நானாவேன்,
    பாக்கியமுள்ள பெண்களுக்குப் பாக்குப்பெட்டி நானாவேன்,
    விர்த்தாப்பியப் பெண்களுக்கு வெற்றிலைப்பெட்டி  நானாவேன்,
    குணமுள்ள பெண்களுக்குக் குங்குமப்பெட்டி நானாவேன்,
    பெரியோர்கள் தோள்மேலே திருப்பக்குடை நானாவேன்,
    திருப்புக்கூடைக் குள்ளிருக்குந் திருமண்பெட்டி நானாவேன்,
    திருப்பாவை சேவிப்போர்க்குத் திருத்துழாய்ப் பெட்டியாவேன்,
    எழுதுகின்ற பிள்ளைகட்கு வண்ணநல்ல தடுக்காவேன்,
    ஓதுகின்ற பிள்ளைகட்கு ஓலைத்  தடுக்காவேன்,
    நனைந்து வருவார்க்கு டம்பக்குடை நானாவேன்,
    பசித்து வருவார்க்குப் பனம்பழமும்  நானாவேன்,
    பாலர் பெரியோர்க்குப் பனம்பதநீர் நானாவேன்,
    சித்திரைக் கோடையிலே சிறந்தநல்ல நுங்காவேன்,
    காளையர்க்கும் கன்னியர்க்கும் களைதீர்க்கும் விசிறியாவேன்,
    கைப்பிள்ளைத் தாய்மார்க்குக் கருப்புக்கட்டி நான்தருவேன்,
    வேலிகட்டக் கயிறாவேன் விறகுகட்ட நாராவேன்,
    வருடத்துக் கோர்தினத்தில் சரசுவதி பூசைசெய்து
    ஆமெழுகிக் கோலமிட்டு  அச்சோடி பெண்களா சோபனமே!
    மணையலம்பிக் கோலமிட்டு மணைநிறைய புராணம்வைத்து
    பூவும் புதுமலரும் பொன்னாகும் அட்சதையும்
    அட்சதையு மலரெடுத்து அர்ச்சிப்பார் உலகமெல்லாம்,
    வித்தாரமாய் இரண்டாநாள் விசயதசமி என்றுசொல்லி,
    நாட்டிலுள்ள பிள்ளைகட்கு நாள்பார்த்து முகூர்த்தமிட்டு,
    எண்ணெய் தேய்த்து நீராட்டி இயல்புடனே அலங்கரித்து,
    மாலைபோட்டு சந்தனம்பூசி மடிநிறைய புத்தகம் வைத்துப்
    பசங்கள் படித்துவர மங்களங்கள் பாடிவரக்
    காம்பு நறுக்கியவர் கணுக்காம்பு வேரறுத்துப்
    பக்கமிரு புறம்வாரிப் பல்வரிசைக் காம்பரிந்து
    என்னைத் திருத்தியவர் எழுத்தாணி கைபிடித்து,
    வெள்ளிநெட் டெழுத்தாணி வேடிக்கை யாய்ப்பிடித்து,
    ஆரியரும் வேதியரும் அரிநமோ வென்றெழுதி,
    அரிஅரி என்றெழுதி அர்ச்சிப்பார் என்னையவர்,
    அரிச்சுவடி என்னாலே, அடுக்காய்ப் பாடம் என்னாலே,
    எண்சுவடி என்னாலே, குழிமாற்றும் என்னாலே,
    தர்க்கங்கள் என்னாலே, சாத்திரங்கள் என்னாலே,
    இராமாயணம் என்னாலே, பாரதமும் என்னாலே,
    பாகவதம் என்னாலே, பல்சாத்திரங்கள் என்னாலே,
    திருவாய்மொழி என்னாலே, திவ்வியப்பிரபந்தம் என்னாலே,
    நாலுவேதம் என்னாலே, ஆறுசாத்திரம் என்னாலே,
    கங்கைக்கும் இலங்கைக்கும் கீர்த்திமிகப் பெற்றிருப்பேன்,
    மங்கையர்க்கும் மன்னவர்க்கும் மனமறிவதும் என்னாலே,
    வர்த்தகரும் செட்டிகளும் வழியறிவதும் என்னாலே,
    கணக்கர்களும் முதலிகளும் கணக்கறிவதும் என்னாலே,
    பலசரக்கு மண்டிகளில் பத்திரமாய் நானிருப்பேன்,
    காசுக்கடை சவுளிக்கடையில் கருத்துடனே நானிருப்பேன்,
    கொடுக்கல் வாங்கல் உள்ளவர்க்குக் குறிப்புச் சொல்லி வாங்கி வைப்பேன்,
    கார்த்திகை மாதத்திலே கருத்தறிந்த பிள்ளைகட்குத்
    திருத்தமுள்ள மாபலியாய்த் தெருவெங்குஞ் சுற்றிடுவேன்,
    பட்சமுள்ள வாசலுக்குப் பட்டோலை நானாவேன்,
    காதத்துப் பெண்களுக்குக் காதோலை நானாவேன்,
    தூரத்துப் பெண்களுக்குத் தூதோலை நானாவேன்,
    கலியாண வாசலுக்குக் கட்டோலை நானாவேன்,
    சீமந்த வாசலுக்குச் சீருடனே நான்போவேன்,
    பிள்ளை பிறந்ததென்றால் பெருமையுடன் நான்போவேன்,
    மைந்தன் பிறந்ததென்றால் மகிழ்ச்சியுடன் நான்போவேன்,
    அரண்மனையில் நானிருப்பேன், ஆஸ்தானத்தில் நானிருப்பேன்,
    மச்சுள்ளே  நானிருப்பேன்,  மாளிகையில் நானிருப்பேன்,
    குச்சுள்ளே நானிருப்பேன், குடிசைக்குள் நானிருப்பேன்,
    எருமுட்டை குதிரையெல்லாம் ஏந்திக்கொண்டு நானிருப்பேன்,
    ஏரிக்கரை மேலேநான் எந்நாளும் வீற்றிருப்பேன்,
    எமலோகம் போனாலும் எல்லவர்க்குந் தெரியவைப்பேன்,
    சிவலோகம் போனவர்க்குச் சீட்டோலை யாயிருப்பேன்,
    சகலமான காரியத்துக்கும் சாக்கிரதை யாயிருப்பேன்,
    இத்தனைக்கும் உதவியென்று என்னைஅயன் சிருட்டித்தான்,
    கற்பக விருட்சமெனக்கு எல்லையுந்தான் மறந்தேன்,
    திருப்பாளை ஊர்தன்னிற் சிவன்புனைந்தான் என்நாமம்,
    நான்வளர்ந்த சேதிதனை நலமுடனே கேட்டவரும்,
    பாடிப் படித்தவரும் பட்சமுடன் கேட்டவரும்,
    சொல்லிப் படித்தவரும் சுகிர்தமுடன் கேட்டவரும்,
    எல்லை உலகளந்த எம்பெருமான் கோத்திரம்போல்,
    ஆல்போலே தழைத்து ஆதிசிவன் போல்வாழ்வார்,
    ஊழியூழி காலமட்டும் உலகுதனி லேயிருந்து,
    வாழிவாழி என்றுசொல்லி வரமளித்தார் ஈஸ்வரனும்.

    Share
  • நல்லைநகர் நாவலர் பெருமான்!

    நல்லைநகர் நாவலர் பெருமான்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா         

    நல்லைநகர் என்றாலே எல்லையில்லா இன்பம் வரும்.வல் வினைகள் போக்குகின்ற வடிவேலன் உறையும் இடம். அந்தவிடம் அமைந்த விதம் அனைத்துக்கும் பெருமைதான். சொல்ல வல்ல ஒருவர் பிறக்கின்றார். அவர் பெயருடன் நல்லைநகரும் இணைந்து விடுகிறது. நல்லை நகர் சேர்ந்ததனால் அவர் புகழ் பெற்றாரா அல்லது அந்தக் கந்தப் பெருமான் அருள் கிடைத்ததால் அவர் புகழ் பெற்றாரா என்று எண்ணி நிற்கும் அளவுக்கு அவர் சிறந்தோங்கி விளங்கினார். அப்படி விளங்கியவர்தான் நல்லைநகர் ஆறுமுக நாவலர் பெருமான்.

    கந்தப்  பெருமானைத் தன் சிந்தையில் இருத்தி – தன் வாழ்க்கைப் பாதையினை அவர் அமைத்து அதன் வழியில் நடந்தார் எனலாம். கந்தப் பெருமானை மனம்முழுக்க எண்ணிய இருந்த காரணத்தால் கந்த புராணத்தை உயிராக நாவலர் பெருமான் கருதினார். “கந்த புராண கலாசாரம்” என்னும் வகையில் ஒரு புதுமையான கலாசாரம் தோன்றி இன்றளவும் ஈழத்தில் யாழ்மண்ணில்  இருப்பதற்கு மூலகாரணமாய் நாவலர் பெருமானே அமைந்தார் என்பதை அனைவரும் அகத்தில் இருத்துவது அவசியமாகும்.

    நாவலர் பெருமானை ஐந்தாங் குரவர் என்று ஏற்றிப் போற்றும் ஒரு நிலையும் காணப்படுகிறது. சமய குரவர் என்னும் பொழுது சம்பந்தர், அப்பர், சுந்தரர் , மணிவாசகர் வந்து அமைகிறார்கள். யாவருக்கும் இது தெரிந்த விடயந்தான். ஆனால் ஐந்தாம் நிலையில் ஒருவரை இவர்களுடன் எப்படி இணைப்பது? எவ்வாறு இப்படி ஒரு சிந்தனை எழுந்தது? என்றெல்லாம் எண்ண வைக்கிறதல்லவா! இங்குதான் நாவலர் தேர்ந்தெடுத்து நடந்த பாதையினைப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. சமய குரவர்கள் என்ன செய்தார்கள்? அவர்களைக் கோவிலில்களில் வைத்து அவர்களுக்குக் குருபூசை செய்வதற்குக் காரணந்தான் என்ன? பூசிக்கப்படுகிறார்கள், கொண்டாடப்படுகிறார்கள், உயர்நிலையில் வைக்கப்படுகிறார்கள் – என்றால் அவர்கள் நிச்சயம் சமூதாயத்துக்கு மிகவும் உவப்பான, அவசியமான, செயல்களைச் செய்திருப்பவர்களாகத்தான் இருப்பார்கள் என்பது புலனாகி நிற்கிறதல்லவா!

    சமயகுரவர்களில் முன்னிற்பவர் சம்பந்தப்பெருமான். அவரின் சம காலத்தவர் அப்பர் பெருமான். இவர்கள் இருவரும் எங்கள் இன் தமிழை இதயத்தில் வைத்து ஏந்தினார்கள். அது போல் சைவவத்தையும் இதயத்தில் இருத்தி வைத்தார்கள். சைவம் ஒரு கண்ணாயும் தமிழ் மற்றக் கண்ணாயும் இவர்கள் கொண்டார்கள் என்றால் அது மிகையாகாது. மாற்று மதமும், வேற்றுக் கலாசாரமும், தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும், சைவத்தையும், அடக்கி ஒடுக்கி அழிக்கின்ற வகையிலே வந்த பொழுது – அவற்றை அகற்றிட “நாமார்க்கும் குடியல்லோம்” என்னும் துணிவுடன் வந்தவர்கள்தான் சம்பந்தரும் அப்பரும். சம்பந்தர் இளையவர். அப்பர் முதிர்ந்தவர். இளமையும் அனுபவமும் இணைந்து ஒரு பெரிய போராட்டமே தமிழகத்தில் நடந்தது. அந்தப் போராட்டாத்தின் முதல் படைத் தளபதிகளாய் ஆண்டவனைத் துணையாக்கி நின்றவர்கள்தான் சம்பந்தரும் அப்பரும் ஆவர்.

    எதனை ஏற்பது? எதனை விடுவது? எது பயனானது? என்று மயக்குற்று நின்ற மக்களுக்குத் தலைமை தாங்கி அவர்களை நல்வழியில் நடத்திச் சென்றவர்கள் சம்பந்தரும் அப்பருமே என்பதை மறுத்துரைத்து விடல் இயலாது. சம்பந்தரும் அப்பரும் அக்காலத்தில் பிறந்திருக்கா விட்டால் எங்கள் சைவமும், தமிழுமே காணாமலே போயிருக்கும். செய்யெனச் சொல்லாமல் தாமே முன்னின்று செயலாக்கி நின்றார்கள். கோவில்கள் எழுந்தன. சைவம் தளைத்தது, பிழைத்தது. அவர்களின் பின்னால் சுந்தரர் வருகிறார். மணிவாசகர் வருகிறார். இவர்களும் தங்காலத்துக்கு எது ஏற்றதோ அதனைச் செவ்வனவே செய்து சைவத்தையும், தமிழையும் நிலைபெற வைக்கிறார்கள்.

    சமய குரவர்கள் நால்வரின்பின் ஐந்தாம் குரவராக நாவலரைக் கொள்வதற்கு உரிய காரணங்களை அறிவது மிகவும் அவசியமாகும். அதற்கு நாவலர் பெருமானைப் பற்றித் தெரிந்து கொள்ளுவது முக்கியமாகும்.

    சைவத்தைத் தலைமேற் கொண்ட குடும்பம் நாவலர் பெருமான் குடும்பம். ஆசார அனுட்டானங்களைக் கடைப்பிடித்த குடும்பம்  எம்பெருமானை  நீளநினைந்த குடும்பம். சைவம், தமிழ் இரண்டையும் கண்ணாய்க் கருதிய குடும்பம் அவர் குடும்பம். அந்தக் குடும்பத்தில் பிறந்ததே திருவருள் என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. பிறப்பும், குடும்பச் சூழலும் வளரும் பருவத்திலேயே நாவலரை நல்ல வழியில் பயணப்படுவதற்கு உரிய கருவை இதயத்தில் பதித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தமிழ் இலக்கியங்களை, இலக்கணத்தை, சைவத்தை  எல்லாம் கற்றிட நாவலரின் தந்தையார் உறுதுணையாக விளங்கினானர். இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பது போல – நாவலரின் இளமையில் போடப்பட்ட நல்ல உரமானது அவரின் வருங்கால வாழ்வினுக்கு, செயற்பாடுகளுக்கு நற்பாதையாய் அமைந்திருந்தது என்பது உண்மையாகும்.

    நாவலர் அவர்கள் வாழ்ந்த காலம் அன்னியர் ஆட்சியின் காலமாகும். அவர்களின் மதம், கலாசாராம், மொழி செல்வாக்கினைச் செலுத்துவதற்கு முன்வந்த காலமாகும். அன்னியரை அடிபணிந்தால் அனைத்துமே கிடைக்கும் என்னும் நிலை காணப்பட்ட காலமுமாகும். அன்னிய அரசுக்கு யார் விசுவாசமாகச் செய ற்படுகிறார்களோ அவர்களே நல்ல வசதிகளை, வாய்ப்புகளைப் பெற்று வாழும் வாழ்க்கை நிலவியது என்பதும் மனங்கொள்ளத்தக்கது. இந்தச் சூழலில் நாவலர் பெருமான் ஆங்கிலப் பாடாசாலையில் கல்வி கற்கவேண்டி ஏற்படுகிறது. தற்பொழுது யாழ் மத்திய கல்லூரியாய் விளங்கும் கல்லூரியில்த்தான் நாவலரின் ஆங்கிலக் கல்வி தொடங்கியது. நாவலர் எதையுமே நினையாமல் கற்பதைக் கருத்தாய் எண்ணிக் கற்று யாவரும் மதிக்கும் மாணவனாய் நிமிர்ந்து நின்றார். அன்னிய மொழியான ஆங்கிலத்தில் நல்ல புலமையினையும் பெற்றுக் கொண்டார். கற்ற பாடசாலையிலேயே கற்பிக்கும் ஆசானாக ஆகும் வாய்ப்பும் அவருக்கு வாய்த்தது. ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் என்று கற்று தன்னுடைய மொழி ஆற்றலை நாவலர் பெருமான் வளர்த்துக் கொண்டார். கிறீத்தவ பாடசாலை. கிறீத்தவ பாதிரிமார் ஆசிரியர். கிறீத்தவமே அங்கு முழுவதுமாய் இருந்தது. ஆனால் அவை எவையுமே தன்னைத் தொடாதவாறு நாவலர் தம்மைக் காத்து சிறந்த சைவமகனாய் ஆகியே நின்றார். இப்படி அமைந்ததற்கு அடிப்படை காரணம் நாவலர் மனதில் உதித்த நற்பாதை என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது.

    சமய குரவர்கள் வரவில்லையேல் எங்கள் சைவம் இல்லாமலே போயிருக்கும். சமயகுரவர்களின் வருகை அக்காலத்துக்கு அவசிய மானதாகவே அமைந்தது. ஐந்தாம் குரவராய் போற்றப்படும் நாவலர் வந்திருக்காவிட்டால் எங்கள் சைவமும் இல்லாமல் போயிருக்கும். அன்னியர் ஆளுகையினால் அவர்களின் மதமான கிறீத்தவம் மேலோங்கும் நிலை காணப்பட்டது. அந்த மேலோங்கலால் எங்கள் சைவம் தன்னிலை இழந்து போகாமல் – நிலைபெறச் செய்தவர் நாவலர் பெருமானே ஆவர். இதனால் ஐந்தாம் குரவராய் சைவத்தைக் காத்திட நாவலர் அன்னியர் ஆட்சிக் காலத்தில் வந்து அமைகிறார் என்பதுதான் உண்மையாகும்.

    சைவமும் தமிழும் இணைபிரியாதன. சமயகுரவர்கள் தமிழையே மூச்சாக்கி அதன் வாயிலாகவே சைவத்தின் மேன்மைகளை உணர்ந்திடச் செய்தார்கள். அத்தனையும் திருமுறைகளாக மலர்ந்தன. பண்ணமைந்ததமிழ்ப் பாடல்களாய் மக்கள் மனங்களில் பதிந்து மாற்றத்தை ஏற்படுத்தின. இவையனைத்தும் நாவலர் பெருமான் உள்ளத்தில் நிறைந்தே இருந்தது. சமயகுரவர் காலத்தில் பாடல்கள் மூலமாகவே கருத்துக்களை வெளிப்படுத்துவது வழமையாய் இருந்தது. ஆனால் நாவலர் காலம் அதற்கு உவப்பானதாக இருக்கவில்லை. அதனை நன்கு மனதிற் கொண்ட காரணத்தால் புதுப்பாதை வகுத்து அதன் வழியில் நாவலர் பெருமான் நடக்கத் தொடங்கினார். அந்தப் பாதைதான் வசன நடையாகும். சைவத்தின் மேன்மைகளை மக்கள் மனத்தில் பதியவைக்க நாவலரின் சிறப்பான வசனநடை கைகொடுத்தது மட்டுமல்லாமல் வெற்றியினையும் அளித்தது எனலாம். அவர் தமிழில் வசனத்தைக் கையாண்ட விதத்தைக் கண்ட பரிதிமாற் கலைஞரான தமிழறிஞர் அவரை “வசனநடை கைவந்த வல்லாளர்” என்று வியந்து போற்றினர்.

    கோவில்கள் தோறும்  அடியார்கள் பின் தொடர சமயகுரவர்கள் திருமுறைகளைப் பாடினார்கள். அது அக்காலத் தேவையாய் ஆகியது. ஆனால் நாவலர் தன்காலத்துக்கு எது ஏற்றதோ அதனைக் கையிலெடுத்து – கோவில்களில் தொடர் விரிவுரைகளை அறிமுகமாக்கி நின்றார். நாவலரைத்தான் முதல் மேடைப் பேச்சாளர் என்றும் கொள்ளலாம். தற்போதைய மேடைப் பேச்சுக்கு வித்திட்டவராகவும் நாவலர் பெருமான் வந்தமைகிறார் என்பது கருத்திருத்த வேண்டியதேயாகும். சைவசமயக் கருத்துக்களைப் புலப்படுத்த புராணங்களைக் கையிலெடுக்கிறார் நாவலர் பெருமான். புராணங்களை விரிவுரையாக மக்களுக்கு எடுத்து விளக்குகிறார். அவரின் சொல்லாற்றலும், பேச்சாற்றலும் மக்களை அவர் வசமாக்கி நிற்கிறது. அவர் எடுத்த முயற்சி வெற்றியாய் அமைகிறது. பேச்சுடன் நின்றுவிடாமல் மிகவும் எளிமையான் வசன நடையில் புராணங்களுக்கு விளக்கங்கள் எழுதி அவற்றை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கிறார். அச்சுக்கூடத்தை நிறுவி அதில் சைவ, தமிழ் நூல்களைப் பதிப்பித்து ஒரு புரட்சியினையே செய்து விடுகிறார். இது அவர் தேர்ந்தெடுத்த நல்ல பாதையாய் அமைகிறது எனலாம்.

    இலவசமாய் கல்வியினை அளிக்கும் புதுப்பாதையினை நாவலர் பெருமான் தொடங்கி வைக்கிறார். படிக்கும் மாணவர்களுக்கான பாட நூல்களைத் தாமே எழுதி அவற்றை அச்சடித்தும் கொடுக்கின்றார். மாணவர்களின் கல்வி உளவியலை மனதிற் கொண்டு நாவலர் பெருமானின் பாடநூல்கள் அமைந்திருந்தன என்பதுதான் மிகவும் முக்கியமாகும். தமிழகத்தில் தமிழ்ப்பாட நூல்கள் அக்காலத்தில் வந்தாலும் – அவையெல்லாவற்றையும் விட நாவலர் பெருமானின் பாடநூல்களே சிறந்தது என்று தமிழ் நாட்டவராலேயே ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். இலக்கியத்தை, இலக்கணத்தை, இலகுவாக்கிடும் வகையில் நாவலரின் செயற்பாடுகள் அமைந்திருந்தன என்பதை மறுத்துரைத்துவிடல் முடியாது. செய்யுளாய் அமைந்திருந்த இலக்கணத்தை யாவரும் விளங்கும் வகையில் அவர் காலத்தில் வசனநடையில் கொண்டுவந்து கொடுத்தமை நாவலரின் புதுப்பாதைதானே!

    ஐந்தாம் குரவராக விளங்கும் நாவலர் அஞ்ஞா நெஞ்சனாகவும் விளங்கியிருக்கிறார். தம்மை எதிர்கொள்ள வந்த அரசின் ஆணையினையே துச்சமாக எண்ணி “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்று வீரமாய் எதிர்து நின்றவர் சமயகுரவரான அப்பர் பெருமான். அப்பர் வழியிலே நமது ஐந்தாம் குரவரும் நடை பயில்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். தன் கருத்துக்கு ஒவ்வாதவற்றை, நீதிக்குப் பாதிப்பான வற்றை, சமூகத்துக்குப் பொருந்தாவற்றை, சைவத்தைத் தூஷிப்பவற்றை: அஞ்ஞாமல் எதிர்க்கின்ற போராளியாக அதாவது கண்டனக் கதாநாயகனாக நாவலர் பெருமான் விளங்கினார் என்பது உண்மையாகும். சைவத்தைத் தாழ்த்தியவர்களை எதிர்த்தார். வால்பிடிப்பாரை எதிர்த்தார். உண்மையினை உணராமல் ஊதுகுழலாய் ஆகி நிற்பாரை எதிர்த்தார். போலிச் சைவர்களை, போலிக் கிறீத்தவர்களை, எதிர்த்தார். அதுமட்டுமல்ல சமயம் அறியாத குருமாரையும் சாடினார். கண்டனங்களை சிறு துண்டுப் பிரசுரமாக வெளியிட்டார். அத்தனையும் அவரின் தர்ம ஆவேசத்தையே வெளிச்சமாக்கி நின்றது. கண்டனக் கணைகளை வீறுடன் விடுபவராய் ஐந்தாம் குரவரான நாவலர் பெருமான் இருந்தார் என்பதை யாவருமே ஒத்துக் கொள்ளுவார்கள்.

    குருவினைப் பேணுவதில் பெரும் அக்கறை மிக்கவர் நாவலர் பெருமான். குரு சொல்லினைத் தட்டாமல் விவிலியத்தை மொழி பெயர்த்துக் கொடுத்து – மிகச்சிறந்த மொழி பெயர்ப்பு என்னும் அங்கீகாரத் தையும் வாங்கிக் கொடுத்தார். அத்துடன் அவர் நின்றுவிடுகிறார். விவிலியத்தை மொழிபெயர்க்கும் வகையில் அவர் அந்தக் கிறீத்தவ வேத நூலினை மனத்தில் நன்கு பதித்தவராகவே ஆகியிருக்கிறார். அதனால் சைவத்தை எதிர்க்கும் கிறீத்தவ பிரசாரகருக்கு ஏற்ற மறுமொழியினை அளித்திடும் அறிவாற்றல் நாவலர் பெருமானிடம் நிரம்பியே இருக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. தனது சமயத்தையும், மற்றைச் சமயத்தையும் நன்றாய் அறிந்து உணர்ந்த காரணத்தால் நாவலர் பெருமான் தன் காலத்தில் கதாநாயகனாகவே ஆகி நின்றார் என்பதை மறுத்துரைத்துவிடல் முடியாது அல்லவா!

    ஆறுமுகம் என்னும் பெயருடன் தமிழகம் சென்றவர் யாழ்ப்பாணம் திரும்பிடும் வேளை “நாவலர்” என்னும் பட்டத்தினைத் தனதாக்கி  ஆறுமுக நாவலர் என்னும் புதுப் பெயருடன் வருகிறார். நாவன்மையினை மெச்சி திருவாவடுதுறை ஆதீனம் இப்பட்டத்தை ஈழத்துத் தமிழ்ப் பெரியாரான ஆறுமுகத்துக்கு வழங்கியிருக்கிறது. பட்டம் என்னவோ அவருடன் இணைந்து கொண்டுவிட்டது. அது அவருக்கு மிகவும் பொருத்தமான பட்டமாகவும் அமைந்தது என்பதும் உண்மையாகும். ஆனால் நாவலர் பெருமான் அதனால் தன்னிலையில் மாற்றமுறவில்லை. தன்பாதை எதுவோ அதன்வழியிலேதான் பயணப்பட்டார். அவர் விரும்பி இருந்தால் ஏதாவது ஒரு ஆதீனத்துக்குக் தலைவராய் ஆகி இருக்கலாம். ஆளணியுடன் வாழ்ந்திருக்கலாம். அப்படியான எண்ணம் நாவலர் பெருமானிடம் தோன்றவே இல்லை என்பதைக் கருத்திருத்தல் வேண்டும். யாழ்ப்பாணத்தில் கூட தனியனாகவே நின்று செயற்பட்டார். தன் பெயரிலே சபையோ, ஆதீனமோ நிறுவிடவும் அவர் நாட்டங் கொள்ளவில்லை. “என்கடன் பணி செய்து கிடப்பதே” என்பதே அவர் வகுத்து நட ந்த பாதையாகி அமைந்தது எனலாம்.

    தேடிச் சோறுநிதந் தின்று – பல
    சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
    வாடித் துன்பமிக உழன்று – பிறர்
    வாடப் பலசெயல்கள் செய்து – நரை
    கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
    கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
    வேடிக்கை மனிதரைப் போலே – நான்
    வீழ்வே னென்று நினைத் தாயோ

    என்று பாரதி முழங்கியதற்கு ஒப்பாய் நாவலர் பெருமானின் செயற்பாடுகள் அனைத்துமே அமைந்திருந்தன என்பதை நாமனைவருமே மனத்தில் பதித்திடல் அவசியாமாகும். தனக்குச் சரியெனப் பட்டதை யாருக்குமே அஞ்சாமல் செய்து நின்றவர்தான் எங்கள் வரலாற்று நாயகனாகிய ஐந்தாம் குரவர் நாவலர் பெருமான். பழமைக்குள் மூழ்கிடாமல் தன்காலத்துக்கு எது உகந்ததோ அதனை மனமிருத்தி செயற்பட்டவர் தான் நாவலர் பெருமான். அதேவேளை மரபினையும் மறந்தாரில்லை என்பதும் நோக்கத்தக்கதாகும். நாவலர் காலத்து நிலைமைக்கு ஏற்ப அவரின் சமயச் சிந்தனை, தமிழ் பற்றிய சிந்தனை, கல்வி பற்றிய சிந்தனை, ஒழுக்கம் பற்றிய சிந்தனை யாவுமே  அமைந்திருந்தது.

    இலக்கணம், சமயம், காப்பியங்கள் என்னும் வகையில் நாற்பத்து நான்கு நூற்களைப் பதிப்பித்திருக்கிறார். இலக்கணம் தொடர்பாகவும் சைவசமயம் தொடர்பாகவும் இருபத்து நான்கு நூல்களை ஆக்கி இருக்கிறார். அத்துடன் அமையாது பதினாறு நூல்களுக்கு உரையும் எழுதியிருக்கின்றார். வியப்பாக இருக்கிறதல்லவா? இவ்வளவும் யாருக்காகச் செய்தார்? யாவுமே மண்ணும் மக்களும் பயனுற வேண்டும் என்னும் உயரிய சிந்தனையால் செய்தார் என்பதுதுதான் உண்மையாகும். இல்லறத்தினுள் புகுந்து விடாமல் பிரம்சாரியத்தைக் கடைப்பிடித்து நல்லறமாய் நாவலர் பெருமான் செய்திருக்கிறார் என்பதால் அவர் ஒரு யுகபுரு ஷராகவே விளங்குகிறார் எனலாம்.

    தமிழ் உரைநடையின் தந்தையாய், தமிழ் மறுமலர்ச்சியின் முன்னோடியாய், சுவடிகளை பதிப்பிப்பதிலும் முன்னோடியாய், மிகவும் சிறந்த தமிழ் வசனநடை வல்லாளராய், சைவசமயத்தின் பெருங்காவலராய், நல்லைநகர் ஒளிவிளக்காய் நவலர் பெருமான் திகழ்ந்திருக்கிறார். சைவத்தையும், தமிழையும், காத்த தோடு சைவத்துக்கு எவையெவை இன்றியமைதானவோ அவற்றையும் காத்திட வைக்கும் வகையில் நல்லை நகர் நாவலர் பெருமான் தன்னுடைய பாதையினை வகுத்து அதன் வழியில் பயணப்பட்டிருக்கிறார் என்பதை மறுத்துரைத்து விடல் இயலாது. ஐந்தாம் குரவராய் அவரை ஏற்றுவதும், போற்றுவதும், குரு பூசை நடத்தி அவரை உயர்வாகப் பார்ப்பதும் மிகவும் உகந்த செயலேயாகும். அவர் தேர்ந்தெடுத்து நடந்த பாதை காரணமாக அவரை இன்று இலங்கையின் தேசியவீரனாக, தேசியப் பெருமகனாக, அரசாங்கமே அங்கீகரித்து நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. முத்திரையில் நாவலர் பெருமான் திருமுகத்தை யாவரும் பார்த்திட வைத்திடும் கைங்கரியமும் இலங்கை அரசினால் ஆகியிருக்கிறது. அனைத்துக்கும் அடிப்படை நாவலர் பெருமான் “நல்வழியைத் தேர்ந்தெடுத்து அதன் வழியில் நடந்ததுதான்”  என்பதே உண்மையாகும்.

    நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்
    சொல்லு தமிழெங்கே சுருதியெங்கே – எல்லவரும்
    ஏத்து புராண ஆகமங்கள் எங்கே ப்ரசங்கம் எங்கே
    ஆத்தன் அறிவு எங்கே அறை.

    Share
  • கற்பதரு எனும் அற்புதம் – (அங்கம் – 3)

    கற்பதரு எனும் அற்புதம் – (அங்கம் – 3)

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பனையென்பது செல்வமாகும் என்று கருதியே வந்திருக்கிறார்கள்.  பனையினைப் புலவர்கள் பல நிலைகளில் பார்த்திருக்கிறார்கள். பனையின் பயனைப் பாடி இருக்கிறார்கள். பனையினை காதலிலும் கண்டு பாடியும் இருக்கிறார்கள். காதலில் சிக்கித்தவிக்கும் நிலையில் பிரிவுத் துயரினை வெளிப்படுத்தும் பாங்கில் பனையினைக் காட்டுவதும் நோக்கத்தக்கது.

    திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப்
    பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே;
    ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலி புனற்
    பல் பூங் கானல் முள் இலைத் தாழை
    சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ
    வளி பரந்து ஊட்டும் விரிவு இல் நாற்றமொடு
    மை இரும் பனைமிசைப் பைதல உயவும்
    அன்றிலும் என்புறு நாலும்; அன்றி,
    விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்
    யாமம் உய்யாமை நின்றன்று;
    காமம் பெரிதே; களைஞரே இலரே!

    என்ன….. பாடலைப் பார்த்ததும் தலை சுற்றுகிறதா? பயப்படாதீர்கள் இதுதான் எங்களின் சங்கத்தமிழ். சங்கத் தமிழனும் பனையினைக் கொன்டாடுகிறான். தலைவனைப் பிரிந்த தலைவியானவள் கலங்குவதாய் இப்பாடல் அமைகிறது. “ஆற்றில் அலை மோதிக் கொண்டிருக்கிறது. ஆற்று நீர் பாயும் கானலில் முள்ளிருக்கும். தாழம்பூ குழியிலைக் கூடையில் போட்ட சோறு போல் மொட்டு விருந்து பூத்திருக்கும் காட்சி தென்படுகிறது. காற்று அடிக்கிறது. தாழம்பூவின் மணம்  அடிக்கும் காற்றையும் அடக்கி மணம் வீசி நிற்கிறது.

    அங்கு இருக்கும் பனைமரத்தில் அன்றில் பறவை ஒன்று தன்னுடைய துணையைத் தேடு அழைக்கிறது. அந்த அன்றில் பறவையின் குரல் எனது எலும்பையே உருக்கும்படி செய்து நிற்கிறது. என் காம உணர்வு பெருகிக் கொண்டே  போகிறது. மனமாற்றத் துக்காக யாழை மீட்டி என் விரல்கள் ஓய்ந்தனவே அன்றி நள்ளிரவுப் பொழுது போகவில்லை ” என்று விரக தாபத்தைத் தலைவி வெளிப்படுத்துவதாய் இப்பாடல் அமைகிறது. இங்கே அவளின் விரக தாபத்துக்குக் காரணமான அன்றில் பறவையின் இருப்பிடம் “எங்கள் பனை” என்பதுதான் முக்கிய கருத்தாகும்.

    பரதவர்கள் வீடுகளைப் பனையோலையால் வேய்ந்தார்கள். அவர்களின் வேலியையும் பனை ஓலை கொண்டு அமைத் தார்கள் என்று நற்றிணை தெரிவிக்கிறது

    கழி சூழ் படப்பைக் காண்டவாயில்
    ஒலி காவோலை முள்மிடை வேலி

    பனை ஓலையுடன் முட்களையும் சேர்த்து வேலி அமைத்த செய்தியை நற்றிணையின் இப்பாடல் காட்டி நிற்கிறது. இவ்வாறு அமைக்கப்பட்ட  வேலியை அடுத்து பனைமரங்கள் உயர்ந்து வளர்ந்து இருந்தன. மணல் மேடும் அங்கு இருந்தது என்று நற்றிணை காட்டி நிற்கிறது.

    தலைவியின் வருத்தத்தைக் காட்டுவதற்கு குறுந்தொகை வருகிறது. இங்கும்  பனையினத் தொட்டே பாடல் அமைகிறது.

    பனைத்தலைக்
    கருக்குடை நெடுமடல் குருத்தொடு
    கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பைக்
    கணங்கொள் சிமைய வணங்குங் கானல்
    ஆழிதலை வீசிய வயிர்ச்சேற் றருவிக்
    கூழைபெய் எக்கர் குழீஇய  பதுக்கை
    புலர்பதங் கொள்ளா வளவை
    அலரெழுந் தன்றிவ் வழுங்க லூரே

    பனையின் உச்சியிலுள்ள கருக்கினையுடைய நீண்ட மட்டையானது குருத்தோடு மறையும்படி, கடுமையான காற்றினால் குவிக்கப்பட்ட, உயர்ந்த வெண்மையான மணற்குவியல்கள், சிகரங்களாக நிறைந்திருக்கின்றன. கடற்கரையில் இத்தகைய சூழலில் தனித்து இருக்கின்ற தலைவியின் விரகதாபம் இங்கே காட்டப்படுகிறது. விரகதாபத்தை அறிவது முக்கியமல்ல. அந்த நிலையில் எங்கள் பனை காட்டப்படுவதுதான் கருத்திருத்த வேண்டியதாகும்.

    பாரியின்  பிள்ளைகளான அங்கவை, சங்கவை, திருமணத்துக்கு மூவேந்தர்களும் வந்திருந்தார்கள். வந்திருந்த மூவேந்தர்களும் தங்களுக்குப் பனம் பழம் வேண்டும் என்று கேட்டார்கள். அங்கு ஒளவையார் இருந்தார். பாரியின் பிள்ளைகளின் திருமணத்துக்கு அவரே காரணமாய் இருந்ததால் வந்த விருந்தினர் விருப்பத்தை எப்படியும் நிறைவேற்ற எண்ணங்கொண்டார். அப்பொழுது பனம் பழக் காலம் இல்லாமல் இருந்தது. ஒளவையார் பந்தலை விட்டு வெளியே  வந்தார். வெட்டப்பட்ட பனையின் துண்டங்களைக் கண்டார்.

    “திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்
    மங்கைக் கறுகிட வந்து நின்றார் மணப்பந்தலிலே
    சங்கொக்க வெண்குருத்து ஈன்று பச்சோலை சல சலத்து
    நுங்குக்கண் முற்றி அடிக்கண் கறுத்து நுனி சிவந்து
    பங்குக்கு மூன்று பழம் தரவேண்டும் பனந்துண்டமே”

    கண்டதும் இவாறு பாடினார். பாடியவுடன், பனந்துண்டம் வளர்ந்து பனையாகிப் பனம்பழத்தைத் தந்ததாம் என்று இப்பாடல் எமக்குச் சொல்லி நிற்கிறது. ஒளவையும் எங்கள் பனையினைப் பாடலால் காட்டுகிறார் என்பதும் நோக்கத்தக்கதேயாகும்.

    “கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
    மற்றையராவார் பகர்வர் பனையின் மேல்
    வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும்
    பச்சோலைக்கு இல்லை ஒலி”

    பனையினை மையமாக வைத்து அறிவுரை பகர்வதையும் புலவர்கள் விட்டு விடாரில்லை என்பதற்கு இப்பாடல் சான்றாகி நிற்கிறது.

    பனையினைப் பாடிப் பல புலவர்கள் புளக்காங்கிதம் அடைந்தார்கள் என்று தான் எண்ணலாம் அல்லவா! பாடப்படும் அளவுக்கு எங்கள் கற்பகதருவும் இருந்திருக்கிறது என்பதுதான் முக்கிய செய்தியாகும்.

    தாலவிலாசம் என்னும் நூல் மிகவும் பழமையானது. பனைமரம் பரம் பற்றிய நூல் என்னும் நிலையில் 18 ஆம் நூற்றாண்டில் வந்த இந்த நூல்தான் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. இந்த நூலினை அடியொற்றியே எங்கள் தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவர் பின்னர் “தாலவிலாசத்தை” படைத்தார். பனைபற்றி நாட்டார் பாடல்கள் பலவும் இருக்கின்றன. வடலி என்று சொல்லுவது யாழ்மண்ணுக்கு உரியதேயாகும். அந்தச் சொல் வரும் வகையில் பனை பற்றிய ஒரு நாட்டுப்பாடலைப் பார்ப்போம் வாருங்கள்.

    வழிக்கரையே நிற்கு மந்த
    வடலி மரப் பெண் பனையே
    வாறவர்க்கும் போறவர்க்கும்
    என் செய்வாய் பெண்பனையே
    இருக்கத் தடுக்காவேன்
    இட்டிருக்கப் பாயாவேன்
    கொழிக்க நல்ல தங்கையர்க்கு
    கொழி சுளகு நானாவேன்
    புடைக்க நல் தங்கையர்க்கு
    புடை சுளகு நானாவேன்
    படிக்க நல் தம்பியர்க்கு
    பட்டோலை நானாவேன்
    எழுத நல் தம்பியர்க்கு
    எழுத்தோலை நானாவேன்
    தூரத்து வன்னிமைக்கு
    தூதோலை நானாவேன்
    வாசலிலே வன்னிமைக்கு
    வழக்கோலை நானாவேன்

    என்று அந்த நாட்டுப்பாடல் எங்கள் கற்பகதருவை கண்டுகளிக்கிறது.  கற்பகதருவாம் பனையினைப் பாடல்களில் பார்த்தோம். பழமொழிகளும் பனையினை விட்டு வைக்கவில்லை. அவற்றையும் பார்ப்பதும் நல்ல தல்லவா!

    “பனை நிழலும் நிழலோ பகைவர் உறவும் உறவோ”

    “பனைமரத்துக்குக் கீழே நின்று பாலைக் குடித்தாலும் கள் என்பார்”

    “பட்டணத்து நரியை பனங்காட்டு நரி ஏய்த்துவிடும்”

    “பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்ததாம்”

    “காவோலை விழக் குருத்தோலை சிரித்ததாம்”

    (வளரும்)

    Share
  • கற்பகதரு என்னும் அற்புதம் (அங்கம் – 2)

    கற்பகதரு என்னும் அற்புதம் (அங்கம் – 2)

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    “படையை வெல்லும் பனை” என்று எங்கள் இலக்கியங்கள் வியந்து நிற்கின்றன. என்ன! …. படையை வெல்லும் பனையா அப்படி  இந்த பனையில் என்னதான் இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா?  பனையை புசித்தோர் படையை வெல்லும் ஆற்றல் பெற்றவராவார் என்று சங்கப்பாடல் காட்டி நிற்கிறது. பழம்பெரும் காவியங்கள் பனைதான் கற்பகதரு என்கிறது. அதாவது அமிர்தம். அமிர்தத்தை உண்டவர்களுக்கு இறப்பே இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இவ்பூவுலகில் இறப்பே இல்லை என்பதன் பொருள் மரணத்தை காலம் தாழ்த்தி தருவிப்பதையே குறிக்கும். பனையின் அணைப்பில் வாழ்ந்த காரணத்தால் மரணம் கூட சற்று தள்ளியே நிற்கும். இதனால் படையினையே வெல்லும் நிலை வரும் என்பதைக் குறியீடாக உணர்த்தவே “படையை வெல்லும் பனை” என்னும் மொழி உருவாகியது எனலாம்.  பனைக்கு அணை (அணைமரம்) என்ற பெயரும் உண்டு. பல கன எடையுள்ள தண்ணீரை அணை தடுத்து நிறுத்தும் ஆற்றல் பெற்றது. அதே போல் பனையை தன் வாழ்வில் துணையாக கொண்டு வாழும் மனிதனும் உறுதியானவனாக திகழ்வான் என்பதுதான் பனையால் படை வெல்லும் என்பதற்கு சான்றாய் தெரிகிறது எனலாம்.

    பனைக்கு பெண்ணை, கூந்தல், காமம், உபதாகம், ஐந்தார், ஐந்தாலம்,  கரும்புரம் ,கரும்புல், பகற்பலி,  புற்றாலி  புற்பதி, போந்து, திருணராசன், துராரோகம், திருவிராசன், குவீரம், தாளம், தருவிராசன், புல்லூதிகம்,  புற்பதி, என பல பெயர்கள் இருக்கின்றன. பனைக்கு இவ்வாறு பல பெயர்கள் இருப்பதுபோல் – பனையில்;   ஆண்பனை, பெண்பனை, கூந்தப்பனை, தாளிப்பனை, குமுதிப்பனை, சாற்றுப்பனை, ஈச்சம்பனை, ஈழப்பனை   சீமைப்பனை, ஆதம்பனை திப்பிலிப்பனை, உடலற்பனை, கிச்சிலிப்பனை குடைப்பனை, இளம்பனை, கூறைப்பனை, இடுக்குப்பனை, தாதம்பனை, காந்தம்பனை, பாக்குப்பனை, ஈரம்பனை, சீனப்பனை, குண்டுப்பனை, அலாம் பனை, கொண்டைப்பனை, ஏரிலைப்பனை, ஏசறுப்பனை, காட்டுப்பனை, கதலிப்பனை,  வலியப்பனை வாதப்பனை, அலகுப்பனை, நிலப்பனை,  சனம்பனை – எனப் பல வகைகள் இருக்கின்றன என்பதையும் கருத்திருத்தல் அவசியமாகும்.

    பூமியிலே கற்பகதரு என்று வியந்து நிற்கும் பனைபற்றி எண்ணுகின்ற வேளை பனையுடன் எங்களின் இலக்கியங்கள், புராணங்கள், திருமுறைகள், தொடர்புபட்டிருப்பதும் அவைகளினால் குறிப்பிடப்படுவதும் கருத்திருத்த வேண்டியதே. பஞ்சத்தைத் தாங்கக் கூடியதான மரமாகவே பனையினைச் சிவன் படைத்தார் என்று தலபுராணங்கள் வியந்து நிற்பதும் நோக்கத்தக்கதே. ஞானிகளாலும் அறிஞர்களாலும் போற்றப்படும் வகையில் எங்களின் கற்பகதருவான பனை விளங்கியிருக்கிறது என்பது மகிழ்வான செய்தியாக இருக்கிறது அல்லவா!

    சூரபதுமன் பனைக்கொடியினைத் தாங்கி வந்தான் என்று கந்தபு ராணம் காட்டுகிறது. கம்பனது இராமாயணமும் பனையினைப் பற்றி பாலகாண்டப் பகுதியில் காட்டுகிறது. பலராமர், வீஷ்மர் ஆகியோர் பனைக் கொடியினை வைத்திருந்தார்கள் என்றும் அறியமுடிகிறது. திருமுருகாற்றுப்படையும் பனையினைக் காட்டுகிறது. நற்றிணையில் பனையினைப் பரதவர் தெய்வமாக வழிபட்டார்கள் என்று காட்டுவதும் கருத்திருத்த வேண்டியதே! “தேம்படு பனையின் திரள் பழத் தொரு விதை” என்று ஒளவையாரும் பனையினைக் காட்டி நிற்கிறார். திருஞானசம்பந்தப் பெருமான் ஆண் பனைகளைப் பெண்பனை ஆக்கினார் என்பதை திருமுறைகள் வாயிலாக அறிகின்றோம். சம்பந்தப் பெருமானது காலத்தில் பனந்தோப்புகள் தனித் தோட்டங்களாக இருந்திருக்கின்றன. சிவன் அடியார்கள் பனைவளம் பெருக்குவதிலும் பெருதும் ஈடுபட்டிருந்தார்கள் என்றும் அறியமுடிகிறது.  தத்துவத்தையும் உலகியலையும் ஞானத்தால் பார்த்தவர் திருமூலர் என்னும் ஞானி. அவரும் பனையினைக் குறிப்பிட்டு தத்துவம் உரைப்பதும் கருத்திருத்த வேண்டியதே !

    “ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியிற்
    சாறு படுவன நான்கு பனையுள
    ஏறற் கரியதோர் ஏணியிட்  டப்பனை
    ஏறலுற் றேன்கடல் ஏழுங்கண் டேனே”

    இப்பாடலில் பனையின் பெயர் இடம் பெறுகிறது. ஆனால் அதனைத் தத்துவம் உரைப்பதற்கு திருமூலர் என்னும் ஞானி கையாழுவதுதான் குறிப்பிடத்தக்க தாகும். பாடலின் கருத்தை அறிய ஆவலுடன் இருப்பீர்கள்! கருத்தையும் காண்போம் பனையையும் காண்போம்! ‘ ஆறு ஆதாரங்களாகிய தெருவின் கீழுள்ள மூலாதாரமாகிய சந்தியில், பக்குவமடையாதபோது இருள் முகமாகத் தொழிற்படுவன ஆகிய நான்கு இதழ்களாகிய பனைகள் உள்ளன. ஏறுவதற்கு அருமையான சுழு முனையாகிய ஏணியை வைத்து அப்பனை மரத்தின் மேலேறி  சகஸ்ரதளஞ் சென்றேன். ஆதாரமாகிய ஏழுகடலும் ஒன்றாகி ஒளிமயமாகக் பொங்குவதைக் கண்டேன். (பனை – பனைமரம் போன்ற முதுகத் தண்டு) காஞ்சிபுரத்திலிருந்து தென்மேற்கே இருபத்தெட்டு கிலோ மீற்றர் தொலைவில் வந்தவாசி செல்லுகின்ற வழியில் திருவோத்தூர் என்னும் தலம் இருக்கிறது. இத்தலத்தின் தலவிருட்சமாய் இருப்பது கற்பகதரு வான பனையாகும். சம்பந்தப் பெருமானால் பாடப்பட்ட தலமாகும். இத்தலத்தைவிட – திருப்பனந்தாள்,  திருப்பனையூர், திருவன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு),  புறவர் பனங்காட்டூர் ஆகியவையும் பனையினைத் தலவிருட் சமாய் கொண்டிருக்கின்றன என்று அறியக்கிடக்கிறது.

    திருவோத்தூர் தலத்தை வலம் வருகின்ற வேளை வடக்குப் பகுதியில் தலமாரமாகிய பனை ஓங்கி வளர்ந்திருப்பதைக் காணலாம். இந்தத் திருவோத்தூரில் இருந்த சிவன் அடியார் ஒருவர் – சிவனுக்காகவே பனைகளை வளர்த்து வந்தார். அப்பனைகளோ ஆண்பனைகளாகி காய்க்காது இருந்தன. இந்த அன்பர் காலம் சமணம் சைவத்தை எதிர்த்து நின்ற காலப் பகுதியாகும். சைவரான சிவனடியாரைச்  “உமது ஆண் பனை யினை உங்கள் சிவன் பெண் பனை ஆக்குவாரா” என்று சமணர்கள் கேலி செய்தபடியே இருந்தனர். அடியாரும் கவலையில் மூழ்கியே இருந்தார். சம்பந்தப் பெருமான் இத்தலத்துக்கு வருகைதந்த வேளை அடியார் தமது மனக்கவலையினை வெளியிடுகிறார். சம்பந்தப் பெருமான் இறைவனைப் பிரார்த்தித்து

    “பூத்தேர்ந்து ஆயன கொண்டு நின் பொன்னடி” என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி – நிறைவில்

    “குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்
    அரும்பு கொன்றை அடிகளை
    பெரும்பு கலியுள் ஞானசம்பந் தன்சொல்
    விரும்பு வார்வினை வீடே”

    என்று பாடியவுடன் “நெருங்கும் ஏற்றப் பனையெல்லாம் நிறைந்த குலைகளாய்க் குரும்பை அரும்பு பெண்ணை ஆகின” என்று சேக்கிழார் வாக்கால் அறியக் கிடக்கின்றது. “அரும்பு பெண்ணை ஆகி இடக் கண்டோர் எல்லாம் அதிசயித்தார்” என்னும் சேக்கிழார் வார்த்தை மனமிருத்த வேண்டியதே!

    மணிவாசகப் பெருமானும் பனையின் அழகினை “கண்ணார்ந்த பெண்ணை” என்று திருக்கோவையாரில் தொட்டுக் காட்டுகிறார்.

    “தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட
    பனையளவு காட்டும் படித்தால் – மனையழகு
    வள்ளைக் குறங்கும் வளநாட  வள்ளுவனார்
    வெள்ளைக் குறட்பா”

    என்னும் பாடலில் திருக்குறள் பனைபற்றிக் கூறும் செய்தி காட்டப்படுகிறது.

    “பெண்ணை தாலம் புல் தாளி போந்தை என்று எண்ணிய நாமம் பனையென இசைப்பர்” என்று திவா கரம் காட்டுவதும் நோக்கத்தக்கது.

    சைவநாயன்மார் பனைபற்றிப் பாடியதுபோல் வைணவ அடியார்களான ஆழ்வார்களும் பாடியிருக்கும் செய்தியையும் காணக்கூடியதாய் இருக்கிறது.

    திருமழிசைப் பிரான் திருச்சந்த விருத்தமாய்

    “கரண்டம் ஆடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
    புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய்
    திரண்ட தோள் இரணியன் சினங்கொளாகம் ஒன்றையும் இரண்டு கூறு
    செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே”

    இப்பாடல் அமைகிறது. இப்பாடலில் பனைபற்றிய செய்தியும் இடம் பெறுவது நோக்கத்தக்கதே. ‘நீர்க் காக்கைகள் உலாவும் பொய்கையில் கரிய பனம் பழங்கள் விழவும், வாளைமீன்கள் அவற்றை நீர்க்காக்கையாகக் கருதி விழுங்கப் பாயும் – திருக்குறுங்கடியில் எழுந்த பெரியோனே! ஆளரியாய்த் தோன்றி இர ணியனை இரு கூறாக்கியதும் நீ தானே! என்று இப்பாடல் கருத்து அமைகிறது. இங்கு பனையின் பழம் காட்டப்படுவது பனையினை உட்புகுத்தி நிற்கிறது அல்லவா!

    நம்மாழ்வார்  திருமொழியில்  பனைமரம் பற்றி “பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமினோ”  என்கின்றார். திருமங்கை ஆழ்வார் – “ஏடு ஒத்து ஏந்தும் நீள் இலைவேல் எங்கள் இராவணனார் ஓடிப் போனார்” என்று குறிப்பிடுகிறார்.

    பனைபற்றி பல செய்திகளை இலக்கிய வழியில் பயணப்பட்டால் காணக் கூடியதாக இருக்கிறது. தோடு என்றால் அது பெண்கள் காதில் அணிவதுதான். சிவனின் ஒரு காதில் தோடு இருக்கிறது. இதனைச் சம்பந்தர் “தோடு டைய செவியன்” என்று காட்டுகிறார். சிவனின் இடது செவியில் தோடு இருக்கிறது. வெண்தோடானது பனம்பூவின் புறவிதழ் போலிருக்கிறதாம் –

    “பெருமடற் பெண்ணைப் பிணர்ந்தோட்டுப் பைங்குரும்பை” என்று கலித் தொகையும், “இனமடற் பெண்ணை ஈர்ந்தோடு திருத்தி” என்று பெருங்கதையும், “இரும்பனை வெண்தோடு மலைந்தோன்” என்று புறநாநாறும்,

    “தோடே  மடலே ஓலை என்றா
    ஏடே  இதழே பாளை என்றா
    ஈர்க்கே குலை என நேர்தான பிறவும்” என்று தொல்காப்பியம் தொட்டுக் காட்டுவதும் கற்பகதருவாம் பனை பற்றியதே என்பதை கருத்துவது அவசியம் அல்லவா!

    தங்கத்தாத்தா என்று வியந்து போற்றப்படும் எங்கள் நவாலியூர் தந்த புலவர் பெருமான் கற்பகதருவாம் பனைபற்றி “தாலவிலாசம்” என்று காவியமே பாடிப் பெருமகிழ்வு அடைகின்றார். அவரின் உள்ளத்திலிருந்து எழுந்த எண்ணங்களை அவரின் தாலவிலாசத்தின் வாயிலாக கண்டு களிப்படையலாம். கற்பகதருவாம் பனையினை எங்கள் தங்கத்தாத்த அணுவணுவாய் இரசிக்கிறார்! அணுவணுவாய் ஆராய்கிறார்! பனைபற்றி சிறந்த நூலொன்றினை அவரின் அகத்தினின்று எழுந்த அரிய வார்த்தைகளால் கவிதை வடிவில் தந்திருக்கிறார்! அவரின் அந்த வண்ணத்தமிழ் கவிதைகளைப் படிப்பவர்கள் கற்பக தருவாம் பனையினை நிச்சயம் கருத்திருத்தாமல் விடவே மாட்டார்கள். அந்த அளவுக்கு எங்கள் தங்கத்தாத்தாவின் மந்திரச் சொற்கள் கற்பகதருவை காட்டி நிற்கிறது எனலாம்.

    “மன்னுயிர் ஞாலத்து வான்பனையின் மேன்மையெலாம்
    பன்னுகலி வெண்பாவாற் பாடவே – முன்னவர்வரு
    போதனே விக்கினங்கள் போக்குகின்ற பூதகண
    நாதனே முன்னே நட”

    என்று தாலவிலாசத்துக்குக் காப்புச் சொல்லி – பின்னர் நூல் நிலை பற்றி சொல்லி ……

    “ஓங்கார மூலத் தொருவனிரு தாடொழுது
    பாங்கார் தமிழ்க்கலிவெண்பா பாட்டினால் – வீங்குபுகத்
    தால விலாசந் தனையுரைப்பேன் தெண்டிரைசூழ்
    ஞால முணர்க நயந்து”

    நிறைவாக கற்பகதருவை வியந்து வாழ்த்தி மகிழுகின்றார்.

    “பொன்னின் மழைவாழி பூமி நலம்வாழி
    மன்னுயிர்கள் வாழி யறம்வாழி – எந்நாளும்
    கற்பகம்போ லீயுங் கடவுட் பனைவாழி
    நற்றமிழும் வாழி நயந்து”

    தங்கத்தாத்தா நினைவுக்கு வருகிறார். கூடவே சின்னத்தம்பிப் புலவரும் வந்து நிற்கிறார். அவரும் கற்பகதருவை விட்டுவிடவில்லை…….

    “கோள்நிலைகள் மாறி மாரிமழை வாரி வறண்டாலும்
    கொடிய மிடி வந்து மிகவே வருந்தினாலும்
    தான் நிழலளிதுயர் கலாநிலையமே போல்
    தந்து பல வேறு பொருள் தாங்கு பனையே”

    என்று சின்னத்தம்பிப் புலவரும் கற்பகதருவை வியந்து நிற்கிறார் என்பதற்கு இக்கவியே சான்று.

    பனை நூறு என்னும் நூலும் கற்பகதருவினை எப்படிச் சொல்லுகிறது பாருங்கள்…….

    “நீண்ட வுடலும் நேரிய கோடும் கார்நிறமும்
    பூண்டா யன்ன பூவுலகத்தில் நின்னைப்போல்
    யாண்டு மிலாதால் வைரமுடைநற் றாருவெனில்
    தூண்டும் மன்பே தூயதலாது தோற்றம்மே”

    “நீற்றைப்பூசும் வானம் பரவும் நிறையும்நூல்
    ஏற்றுக் கொள்ளும் யாண்டு முவக்கு மெவர்க்கும்
    சாற்றும் ஞானந் தந்திடு மன்பிற் றலைநிற்கும்
    போற்றந் தணர்கள் போலப் பனையும் பொலியுமே”

    “வேண்டிய யாவு மீயும் வியன்றரு மியல்புகண்டே
    ஆண்டுபல் லாயி ரம்முன் நறிவுடை யெமது முன்னோர்
    காண்டரு தாலந் தன்னைக் கற்பகத்தாரு வென்றார்
    நீண்டநா ளோம்பி இஃதை நீவிரின் புற்று வாழ்வீர்”

    பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராய் இருந்தவர் கணபதிப்பிள்ளை அவர்கள். சுவாமி விபுலானந்தரின் நேரடி மாணவராக விளங்கியவர். மொழி ஆராய்ச்சி வல்லுனர். அதே வேளை நாட்டர் வழக்கியலிலும் ஆற்றல் மிக்கவர். இவரின் கவிகள் படிக்கப் படிக்கச் சுவையினை நல்கும். அவரின் எண்ணத்தில் கற்பகதரு வருகிறது பார்ப்போமா ……..

    “அழகுறு வன்னம் அமைவுறப் போட்டுத்
    தொழிலமை வனிதையர் திறமையாலிழைத்த
    பெட்டியாய் குட்டான் பெயர் பெறு கதிர் பாய்
    அடுக்குப் பெட்டியும் சுடும்
    பிட்டவி நீத்துப் பெட்டியும் சுண்டும்
    பனையின் குருத்தை பதனமாய் வார்த்து
    பன்னிறம் தீட்டிய பன்னோலை கொண்டு
    கைவல் இளையர் கருதி இளைத்த
    ஆனைப் பெட்டியும் அழகிய தேரும்
    கொட்டைப் பெட்டியும் கிலுக்குப் பெட்டியும்
    எனவாங்கு,
    இன்னணம் நெருங்கிடு பன்னங் கடைகளும்”

    என்று சொல்லியதோடு அமையாமல், கற்பகதருவில் மனத்தை இருத்தி

    “நரைதோல் இயனம் அரையில் கட்டி
    அதன் கீழ் முட்டி அசைதர விட்டு
    மார்போடணையத் தோளது தூக்கி
    உரனுரு தளை நார் காலினை மாட்டிக்
    கால் மடித்து உன்னிக் கரு நெடும் பனைமிசை
    பாளை தட்டி பார்த்துச் சீவி
    ஏர் தரும் ஊசலோடு இயனத்தசையும்
    இன் கள் முட்டியொடு இறங்கும் போதில்
    அடி மரத்திருந்து நுனி வரை நோக்கி
    நாநீர் ஊற உதடு வருடி
    பெரு மகிழ்வோடு பிளாவை ஏந்தி
    அருவிலை கொடுத்து நறவினை மாந்திக்
    களிப்புறு மாக்கள் விளிப்புறு கும்பலும்”

    என்று பேராசிரியர் மனமெழுந்த காட்சி இப்படிக் கவியாய் விரிகிறது.

    நாட்டார் பாடல்களிலும் பனைபற்றி வருவருகிறது. அப்பாடல்தான் என்ன சொல்லுகிறது எப்படிப் பனையைக் காட்டுகிறது என்று பார்ப்போமா….

    “பட்டாங் கத்தி பள பளென
    பாலையன் கோட்டை நறறென
    பனையும் கருத்திருக்கும்
    பனை வட்டும் சிவந்திருக்கும் – அதிலே
    இறக்கிய பதநீரைப் பருகினால்
    தலை கிறு கிறுக்கும்”

    “தேடுதற்கும் வகையறியேன் – உன்
    திருக்கோயில் தவறணையைத் தோடிக்கொண்டு
    ஓடுவரும் பக்தர்க்கு குறைவே இல்லை
    உன்னுடைய கிருபையினைச் சொல்லி சொல்லிப்
    பாடுதற்கு வகையறியேன் – பாளை வேந்தா
    பாவிகளை மகிழ்விக்கும் பான தேவா
    நீடுலகில் என் போன்ற ஏழைகட்கு
    நீயின்றி யாருதவி சொல்லுமையா”

    “சண்டையிலே பிறப்பாய் போற்றி
    சல்லியைப் பறிப்பாய் போற்றி
    மண்டையை உடைப்பாய் போற்றி
    மகளிரை அடிப்பாய் போற்றி
    பாளையில் பிறப்பாய் போற்றி
    பனைதரும் கொடையே போற்றி”

    என்று நாட்டுப்பாடலிலும் பனைபற்றி வருவதும் – பனையின் நிலையினை பாமரர் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை காட்டி நிற்கிறதல்லவா!

    “நாராய் நாராய் செங்கால் நாராய்
    பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
    பவளக் கூர்வாய் செங்கால் நாராய்”

    இந்தப்பாடல் யாரால் எழுதப்பட்டது என்பது தெரியாத நிலையில் கவிதையில் வருகின்ற (முழுக்கவிதையைப் பார்க்க) சத்திமுத்த வாவி என்பதை எண்ணி அப்புலவரை சத்திமுத்துப் புலவர் என்று அடையாளப்படுத்தி விட்டார்கள். அப்பெயரே நிலையாகியும்விட்டது, “பழம்படு பனையின் கிழங்கு பிழந்தன்ன பவளக் கூர்வாய்” என்னும் வரிகள் புலவரின் அழகான படிமமாய் இங்கே அமைகிறது. எங்களின் கற்பகதருவாம் பனையினை – பெயர் தெரியா ஒரு புலவரும் தன்னுடைய மனத்தில் இருத்தி நல்லதொரு கவிதையாய் வடித்திருக்கிறார். சிறிய வயதில் படித்துப் பாடமாக்கிய இக்கவிதையும் கற்பகதருவாம் பனையினைக் காட்டியே நிற்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டியது அல்லா!

    (வளரும்)

    Share
  • கார்த்திகை தீபம் ஏற்றுவோம் வாரீர்!

    கார்த்திகை தீபம் ஏற்றுவோம் வாரீர்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மாலயன் மருளது போக்கிய காலம்
    மலரடி திருமுடி உணர்த்திய காலம்
    தேவரும் தெரிசனம் கண்டநற் காலம்
    திருவிளக்கு ஏற்றிடும் கார்த்திகைக் காலம்

    கந்தனை வந்தனை செய்திடு காலம்
    கனற்பொறி குழந்தையாய் ஆகிய காலம்
    நொந்திடு அடியவர் பவவினை போக்கிட
    செந்திரு விளக்கதை ஏற்றிடும் காலம்

    ஒளிர்வளர் விளக்காய் ஒளிர்ந்திடும் காலம்
    தெளிவதைக் கருத்தில் அமர்த்திடும் காலம்
    பொலிவுடன் பேரொளி தோன்றிய காலம்
    போற்றியே தீபத்தை ஏற்றுவோம் வாரீர்

    ஆண்டவன் நினைப்பை அகற்றிய ஆணவம்
    தாண்டவம் தகர்ந்த தகைவுடைக் காலம்
    நீண்டிடும் மாயையை நிர்மலம் ஆக்கிய
    நிலைபெறு சக்தியை உணர்த்திய காலம்

    நெறிபிறழ் நினைப்பினை நீக்கிய காலம்
    அறிவெனும் உண்மையை அமர்த்திய காலம்
    பொறிபுலன் சிவனருள் புகுத்திய காலம்
    போற்றிடும் கார்த்திகை பொன்னிகர் காலம்

    ஆலயம் எங்கணும் தீபங்கள் ஒளிரும்
    அனைவரும் தீபத்தை நாடியே நிற்பார்
    வீதிகள் வீடுகள் ஒளியினை நல்கும்
    விளக்குகள் ஏற்றிடும் சிறப்புடைக் காலம்

    ஒளியிலே இறையினை இருத்திடும் காலம்
    உவப்புடன் தீபத்தை ஏற்றிடும் காலம்
    மனவிருள் போக்கிட வந்திட்ட காலம்
    மண்ணிலே மலர்ந்திட்ட மாண்புடைக் காலம்

    அண்ணா மலையினை அகத்தில் அமர்த்திட
    உண்ணா முலையாள் ஒளிர்ந்திட்ட காலம்
    அருட் பெரும்ஜோதி தனிப்பெருங் கருணை
    அளவிலா ஆற்றலை அருளிய காலம்

    மரத்தில் மறைந்த மாமத யானையை
    பரத்தில் மறைந்த பார்முதல் பூதத்தை
    இருத்தி மனத்தில் ஏற்றுவார் தீபத்தை
    கொளுத்துவார் சொக்கப் பனையைக் கோவிலில்

    மாதொரு பாகனை மனமதில் இருத்தி
    மங்கலம் பொங்கிட, தீபத்தை யேற்றி
    தீமைகள் அகல கார்த்திகை விளக்கைச்
    சிறப்புடன் ஏற்றிடச் சேருவோம் வாரீர்

    விஞ்ஞான உண்மை விளக்கினில் இருக்கு
    மெஞ்ஞானம் அதனுள் வியாபித்தே இருக்கு
    ஒளியினை அறிவாய்க் கொண்டிடும் வேளை
    ஒளியினை உணர்வாய் ஆக்கிடும் சமயம்

    இருளது சூழின் எதுவுமே தெரியா
    இருளது இருப்பு மருளவே வைக்கும்
    ஒளியது வந்தால் தெளிவது பிறக்கும்
    தெளிவது சிவமாய் ஒளியென ஒளிரும்

    அகமதில் இருளை அகற்றிட வேண்டும்
    அருளெனும் ஒளியை இருத்திட வேண்டும்
    அருளெனும் ஒளியை அளிப்பது இறையே
    இறையினை எண்ணி ஏற்றுவோம் விளக்கினை

    கார்த்திகை தீபம் ஏற்றுவோம் வாரீர்
    கந்தனைச் சிந்தையில் இருத்துவோம் நாளும்
    ஊற்றிடும் எண்ணெயாய் ஆகுவோம் நாங்கள்
    உணர்விலே பக்தியை இருத்தியே வாழ்வோம்

    Share
  • மனதார வேண்டுகிறோம் துணையே நீகந்தா

    மனதார வேண்டுகிறோம் துணையே நீகந்தா

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    போரொழிய வேண்டும் பேரமைதி வேண்டும்
    தீராத பேயாசை தீவிழுங்க வேண்டும்
    யாவருமே உறவென்னும் நல்லுணர்வு மலர
    நல்லுரான் கந்தா நீயருள வேண்டும்

    நல்லாட்சி வேண்டும் நற்றலைமை வேண்டும்
    பொல்லாத சிந்தனைகள் பொசுங்கவே வேண்டும்
    நல்வழியில் நாளும் எல்லாரும் நடக்க
    நல்லை நகர்கந்தா நீயருள வேண்டும்

    அறமோங்க வேண்டும் மறமழிய வேண்டும்
    புறங்கூறும் எண்ணம் புதையுண்ண வேண்டும்
    நலமான எண்ணம் உளமமர வேண்டும்
    நல்லையின் கந்தா வழிகாட்டு நாளும்

    அருளுடை ஆறுமுகம் அமைந்த பெருமாளே
    அபயகரம் பன்னிரண்டு கொண்ட பெருமாளே
    வள்ளி தேவயானையுடன் மயிலேறி வந்து
    மாவருளைத் தந்தெம்மைக் காத்திடுவாய் கந்தா

    கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் நீகந்தா
    கருணையே உருவான கடவுளே கந்தா
    வைதாரை மனமேற்கும் மால்மருகா கந்தா
    மனதார வேண்டுகிறோம் துணையே  நீகந்தா

    ஆறுபடை வீடமர்ந்த அரனாரின் மைந்தா
    அரக்க மனமகற்றி ஆட்கொள்வாய் ஐயா
    காதலுடன் மனமுருகி வேண்டுகிறோம் கந்தா
    கையணைத்து இவ்வுலகில் காத்துவிடு ஐயா

    Share
  • திருவருள் சுரந்து காத்திடு முருகா!

    திருவருள் சுரந்து காத்திடு முருகா!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பெற்ற வரத்தைப் பேணிடா நின்று
    குற்றம் இழைத்தார் கொடிய அசுரர்
    அசுரர் மாற அவதாரம் செய்தாய்
    ஆறு முகவா அடிதொழு கின்றோம்

    மாறாச் சூரர் மாறிட வைத்தாய்
    சேவலாய் மயிலாய் உன்வசம் ஆக்கினாய்
    அருளைக் கொடுத்தாய் ஆணவம் போக்கினாய்
    அரனின் மைந்தா அழகுடைக் குமரா

    வேலை ஏந்தினாய் வெற்றியைக் காட்டினாய்
    மூலப் பொருளாய் ஆகியும் நின்றாய்
    வேதம் விளக்கினாய் விண்ணவர்க்கு உதவினாய்
    பாதம் பணிகிறோம் பார்த்திடு முருகையா

    ஓடி ஓடி உன்னடி தொழுகிறோம்
    பாடிப் பாடிப் பரவசம் அடைகிறோம்
    தேடித் தேடி உன்னிடம் வருகிறோம்
    திருவருள் சுரந்து காத்திடு முருகா

    Share
  • கந்தா கடம்பா காத்திடு எம்மை!

    கந்தா கடம்பா காத்திடு எம்மை!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    உருகிடும் அடியார் உளமுறை வோனே
    மருள் நிலையகல வரமருள் வோனே
    கருணையின் உருவாய்த் திகழ்ந்திடு வோனே
    கந்தா கடம்பா காத்திடு எம்மை

    ஆசா னாகியே அப்பனுக்கு உரைத்தாய்
    அறு படையேகி அமர்ந்தே கொண்டாய்
    அவ்வைப் பாட்டியின் அருந்தமிழ் சுவைத்தாய்
    ஐயா கந்தா அடைக்கலம் நீயே

    மாறா மனத்தை மாற்றிட வல்லாய்
    ஆறா சினத்தை அடக்கியே வைப்பாய்
    பாறாங் கல்லென இருப்பார் தம்மைப்
    பக்குவம் ஆக்குவாய் பரமனின் மைந்தா

    தாகம் தீர்ப்பாய் வேகந் தடுப்பாய்
    மோகம் கலைப்பாய் முறுவல் கொடுப்பாய்
    நாளும் ஆவாய் கோளும் ஆவாய்
    நம்பிடும் அடியார் நற்றுணை நீயே

    Share
  • கந்தசக்ஷ்டி 3 ம் நாள் சங்கடம் அனைத்தும் போக்கிடு கந்தா!

    கந்தசக்ஷ்டி 3 ம் நாள் சங்கடம் அனைத்தும் போக்கிடு கந்தா!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    சஷ்டி விரதம் நோற்கிறோம் கந்தா
    சங்கடம் அனைத்தும் போக்கிடு கந்தா
    காவடி சுமந்து சேவடி வருவோம்
    காத்திடு எம்மை, கருணைக் கடவுளே

    இல்லம் அனைத்தும் சிறக்க வேண்டும்
    இருக்கும் குறையும் அகல வேண்டும்
    சொல்லும் செயலும்  நன்றாய் இருக்க
    நல்லைக் கந்தா அருள்வாய் நாளும்

    மனத்தில் உறுதி நிலைத்திட வேண்டும்
    வாக்கில் வாய்மை நிறைந்திட வேண்டும்
    கனவும் நனவும் உந்தன் நினைப்பை
    மனத்தில் இருக்க அருள்வாய் கந்தா

    நாளும் உன்னை நயமாய்ப் பாட
    நற்றமிழ் வல்லமை தந்திடு முருகா
    சேவற் கொடியுடன் மயிலில் அமர்ந்து
    சீரா யிருக்கச் செய்திடு முருகா

    Share
  • கற்பகதரு என்னும் அற்புதம் – இலக்கியத்தில் இணைந்த பனை (அங்கம் 2)

    கற்பகதரு என்னும் அற்புதம் – இலக்கியத்தில் இணைந்த பனை (அங்கம் 2)

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா

    “படையை வெல்லும் பனை” என்று எங்கள் இலக்கியங்கள் வியந்து நிற்கின்றன. என்ன! …. படையை வெல்லும் பனையா அப்படி  இந்த பனையில் என்னதான் இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா?  பனையை புசித்தோர் படையை வெல்லும் ஆற்றல் பெற்றவராவார் என்று சங்கப்பாடல் காட்டி நிற்கிறது. பழம்பெரும் காவியங்கள் பனைதான் கற்பகதரு என்கிறது. அதாவது அமிர்தம். அமிர்தத்தை உண்டவர்களுக்கு இறப்பே இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இவ்பூவுலகில் இறப்பே இல்லை என்பதன் பொருள் மரணத்தை காலம் தாழ்த்தி தருவிப்பதையே குறிக்கும். பனையின் அணைப்பில் வாழ்ந்த காரணத்தால் மரணம் கூட சற்று தள்ளியே நிற்கும். இதனால் படையினையே வெல்லும் நிலை வரும் என்பதைக் குறியீடாக உணர்த்தவே “படையை வெல்லும் பனை” என்னும் மொழி உரு வாகியது எனலாம்.  பனைக்கு அணை (அணைமரம்) என்ற பெயரும் உண்டு. பல கன எடையுள்ள தண்ணீரை அணை தடுத்து நிறுத்தும் ஆற்றல் பெற்றது. அதே போல் பனையை தன் வாழ்வில் துணையாக கொண்டு வாழும் மனிதனும் உறுதியானவனாக திகழ்வான் என்பதுதான் பனையால் படை வெல்லும் என்பதற்கு சான்றாய் தெரிகிறது எனலாம்.

    பனைக்கு பெண்ணைகூந்தல்காமம்உபதாகம்ஐந்தார்ஐந்தாலம்,  கரும்புரம்கரும்புல், பகற்பலி,  புற்றாலி  புற்பதிபோந்துதிருணராசன்துராரோகம்திருவிராசன்குவீரம்தாளம்தருவிராசன்புல்லூதிகம்,  புற்பதிஎன பல பெயர்கள் இருக்கின்றன. பனைக்கு இவ்வாறு பல பெயர்கள் இருப்பதுபோல் – பனையில்; ஆண் பனை, பெண்பனைகூந்தப்பனைதாளிப்பனைகுமுதிப்பனைசாற்றுப்பனைஈச்சம்பனைஈழப் பனை   சீமைப்பனைஆதம்பனை திப்பிலிப்பனைஉடலற்பனைகிச்சிலிப்பனை குடைப்பனைஇளம்பனை, கூறைப்பனைஇடுக்குப்பனைதாதம்பனைகாந்தம்பனைபாக்குப்பனைஈரம்பனைசீனப்பனை, குண்டுப்பனை, அலாம் பனைகொண்டைப்பனை, ஏரிலைப்பனை, ஏசறுப்பனை, காட்டுப்பனைகதலிப்பனை,  வலிய ப்பனை வாதப்பனை, அலகுப்பனைநிலப்பனை,  சனம்பனை – எனப்பல வகைகள் இருக்கின்றன என்பதையும் கருத்திருத்தல் அவசியமாகும்.

    பூமியிலே கற்பகதரு என்று வியந்து நிற்கும் பனைபற்றி எண்ணுகின்ற வேளை பனையுடன் எங்களின் இலக்கியங்கள்புராணங்கள்திருமுறைகள்தொடர்புபட்டிருப்பதும் அவைகளினால் குறிப்பிடப்படுவதும் கருத்திருத்த வேண்டியதே. பஞ்சத்தைத் தாங்கக் கூடியதான மரமாகவே பனையினைச் சிவன் படைத்தார் என்று தலபுராணங்கள் வியந்து நிற்பதும் நோக்கத்தக்கதே. ஞானிகளாலும் அறிஞர்களாலும் போற்றப்படும் வகையில் எங்களின் கற்பகதருவான பனை விளங்கியிருக்கிறது என்பது மகிழ்வான செய்தியாக இருக்கிறது அல்லவா!

    சூரபதுமன் பனைக்கொடியினைத் தாங்கி வந்தான் என்று கந்தபுராணம் காட்டுகிறது. கம்பனது இராமாயணமும் பனையினைப் பற்றி பாலகாண்டப் பகுதியில் காட்டுகிறது. பலராமர்வீஷ்மர் ஆகியோர் பனைக் கொடியினை வைத்திருந்தார்கள் என்றும் அறியமுடிகிறது. திருமுருகாற்றுப்படையும் பனையினைக் காட்டுகிறது. நற்றிணையில் பனையினைப் பரதவர் தெய்வமாக வழிபட்டார்கள் என்று காட்டுவதும் கருத்திருத்த வேண்டியதே! “தேம்படு பனையின் திரள் பழத் தொரு விதை” என்று ஒளவையாரும் பனையினைக் காட்டிநிற்கிறார். திருஞானசம்பந்தப் பெருமான் ஆண் பனைகளைப் பெண்பனை ஆக்கினார் என்பதை திருமுறைகள் வாயிலாக அறிகின்றோம். சம்பந்தப் பெருமானது காலத்தில் பனந்தோப்புகள் தனித் தோட்டங்களாக இருந்திருக்கின்றன. சிவன் அடியார்கள் பனைவளம் பெருக்குவதிலும் பெருதும் ஈடுபட்டிருந்தார்கள் என்றும் அறியமுடிகிறது.  தத்துவத்தையும் உலகியலையும் ஞானத்தால் பார்த்தவர் திருமூலர் என்னும் ஞானி. அவரும் பனையினைக் குறிப்பிட்டு தத்துவம் உரைப்பதும் கருத்திருத்த வேண்டியதே !

    ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியிற்
    சாறு படுவன நான்கு பனையுள
    ஏறற் கரியதோர் ஏணியிட்  டப்பனை
    ஏறலுற் றேன்கடல் ஏழுங்கண் டேனே”

    இப்பாடலில் பனையின் பெயர் இடம் பெறுகிறது. ஆனால் அதனைத் தத்துவம் உரைப்பதற்கு திருமூலர் என்னும் ஞானி கையாழுவதுதான் குறிப்பிடத்தக்க தாகும். பாடலின் கருத்தை அறிய ஆவலுடன் இருப்பீர்கள்! கருத்தையும் காண்போம் பனையையும் காண்போம்!ஆறு ஆதாரங்களாகிய தெருவின் கீழுள்ள மூலாதாரமாகிய சந்தியில்பக்குவமடையாதபோது இருள் முகமாகத் தொழிற்படுவன ஆகிய நான்கு இதழ்களாகிய பனைகள் உள்ளன. ஏறுவதற்கு அருமையான சுழு முனையாகிய ஏணியை வைத்து அப் பனை மரத்தின் மேலேறி  சகஸ்ரதளஞ் சென்றேன். ஆதாரமாகிய ஏழுகடலும் ஒன்றாகி ஒளிமயமாகக் பொங்குவதைக் கண்டேன். (பனை – பனைமரம் போன்ற முதுகத் தண்டு).

    காஞ்சிபுரத்திலிருந்து தென்மேற்கே இருபத்தெட்டு கிலோ மீற்றர் தொலைவில் வந்தவாசி செல்லுகின்ற வழியில் திருவோத்தூர் என்னும் தலம் இருக்கிறது. இத்தலத்தின் தலவிருட்சமாய் இருப்பது கற்பகதரு வான பனையாகும். சம்பந்தப் பெருமானால் பாடப்பட்ட தலமாகும். இத்தலத்தைவிட – திருப்பனந்தாள், திருப்ப னையூர்திருவன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு) புறவர் பனங்காட்டூர் ஆகியவையும் பனையினைத் தலவிருட் சமாய் கொண்டிருக்கின்றன என்று அறியக்கிடக்கிறது.

    திருவோத்தூர் தலத்தை வலம் வருகின்ற வேளை வடக்குப் பகுதியில் தலமாரமாகிய பனை ஓங்கி வளர்ந்திருப்பதைக் காணலாம். இந்தத் திருவோத்தூரில் இருந்த சிவன் அடியார் ஒருவர் – சிவனுக்காகவே பனைகளை வளர்த்து வந்தார். அப்பனைகளோ ஆண்பனைகளாகி காய்க்காது இருந்தன. இந்த அன்பர் காலம் சமணம் சைவத்தை எதிர்த்து நின்ற காலப் பகுதியாகும். சைவரான சிவனடியாரைச்  “உமது ஆண் பனை யினை உங்கள் சிவன் பெண் பனை ஆக்குவாரா” என்று சமணர்கள் கேலி செய்தபடியே இருந்தனர். அடியாரும் கவலையில் மூழ்கியே இருந்தார். சம்பந்தப் பெருமான் இத்தலத்துக்கு வருகைதந்த வேளை அடியார் தமது மனக்கவலையினை வெளியிடுகிறார். சம்பந்தப் பெருமான் இறைவனைப் பிரார்த்தித்து

    பூத்தேர்ந்து ஆயன கொண்டு நின் பொன்னடி” என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி – நிறைவில்

    குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்
    அரும்பு கொன்றை அடிகளை
    பெரும்பு கலியுள் ஞானசம்பந் தன்சொல்
    விரும்பு வார்வினை வீடே”

    என்று பாடியவுடன் “நெருங்கும் ஏற்றப் பனையெல்லாம் நிறைந்த குலைகளாய்க் குரும்பை அரும்பு பெண்ணை ஆகின” என்று சேக்கிழார் வாக்கால் அறியக் கிடக்கின்றது. “அரும்பு பெண்ணை ஆகி இடக் கண்டோர் எல்லாம் அதிசயித்தார்” என்னும் சேக்கிழார் வார்த்தை மனமிருத்த வேண்டியதே !

    மணிவாசகப் பெருமானும் பனையின் அழகினை “கண்ணார்ந்த பெண்ணை” என்று திருக்கோவையாரில் தொட்டுக் காட்டுகிறார்.

    தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட
    பனையளவு காட்டும் படித்தால் – மனையழகு
    வள்ளைக் குறங்கும் வளநாட  வள்ளுவனார்
    வெள்ளைக் குறட்பா”

    என்னும் பாடலில் திருக்குறள் பனைபற்றிக் கூறும் செய்தி காட்டப்படுகிறது.

    பெண்ணை தாலம் புல் தாளி போந்தை என்று எண்ணிய நாமம் பனையென இசைப்பர்” என்று திவாகரம் காட்டுவதும் நோக்கத்தக்கது.

    சைவநாயன்மார் பனைபற்றிப் பாடியதுபோல் வைணவ அடியார்களான ஆழ்வார்களும் பாடியிருக்கும் செய்தியையும் காணக்கூடியதாய் இருக்கிறது.

    திருமழிசைப் பிரான் திருச்சந்த விருத்தமாய்

    கரண்டம் ஆடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
    புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய்
    திரண்ட தோள் இரணியன் சினங்கொளாகம் ஒன்றையும் இரண்டு கூறு
    செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே”

    இப்பாடல் அமைகிறது.இப்பாடலில் பனைபற்றிய செய்தியும் இடம் பெறுவது நோக்கத்தக்கதே.நீர்க் காக் கைகள் உலாவும் பொய்கையில் கரிய பனம் பழங்கள் விழவும்வாளைமீன்கள் அவற்றை நீர்க்காக்கை யாகக் கருதி விழுங்கப் பாயும் – திருக்குறுங்கடியில் எழுந்த பெரியோனே! ஆளரியாய்த் தோன்றி இர ணியனை இரு கூறாக்கியதும் நீ தானே! என்று இப்பாடல் கருத்து அமைகிறது. இங்கு பனையின் பழம் காட்டப்படுவது பனையினை உட்புகுத்தி நிற்கிறது அல்லவா!

    நம்மாழ்வார்  திருமொழியில்  பனைமரம் பற்றி பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமினோ”  என்கின்றார். திருமங்கை ஆழ்வார் – “ஏடு ஒத்து ஏந்தும் நீள் இலைவேல் எங்கள் இராவணனார் ஓடிப் போனார்” என்று குறிப்பிடுகிறார்.

    பனைபற்றி பல செய்திகளை இலக்கிய வழியில் பயணப்பட்டால் காணக் கூடியதாக இருக்கிறது. தோடு என்றால் அது பெண்கள் காதில் அணிவதுதான். சிவனின் ஒரு காதில் தோடு இருக்கிறது. இதனைச் சம்பந்தர் “தோடு டைய செவியன்” என்று காட்டுகிறார். சிவனின் இடது செவியில் தோடு இருக்கிறது. வெண்தோடானது பனம்பூவின் புறவிதழ் போலிருக்கிறதாம் 

    பெருமடற் பெண்ணைப் பிணர்ந்தோட்டுப் பைங்குரும்பை” என்று கலித் தொகையும், “இனமடற் பெண்ணை ஈர்ந்தோடு திருத்தி” என்று பெருங்கதையும் , “இரும்பனை வெண்தோடு மலைந்தோன்” என்று புறநாநாறும் ,

    தோடே  மடலே ஓலை என்றா
    ஏடே  இதழே பாளை என்றா
    ஈர்க்கே குலை என நேர்தான பிறவும்” என்று தொல்காப்பியம் தொட்டுக் காட்டுவதும் கற்பகதருவாம் பனை பற்றியதே என்பதை கருத்துவது அவசியம் அல்லவா!

    தங்கத்தாத்தா என்று வியந்து போற்றப்படும் எங்கள் நவாலியூர் தந்த புலவர் பெருமான் கற்பகதருவாம் பனைபற்றி “தாலவிலாசம்” என்று காவியமே பாடிப் பெருமகிழ்வு அடைகின்றார். அவரின் உள்ளத்திலிருந்து எழுந்த எண்ணங்களை அவரின் தாலவிலாசத்தின் வாயிலாக கண்டு களிப்படையலாம். கற்பகத ருவாம் பனையினை எங்கள் தங்கத்தாத்த அணுவணுவாய் இரசிக்கிறார்! அணுவணுவாய் ஆராய்கிறார்! பனைபற்றி சிறந்த நூலொன்றினை அவரின் அகத்தினின்று எழுந்த அரிய வார்த்தைகளால் கவிதை வடிவில் தந்திருக்கிறார்! அவரின் அந்த வண்ணத்தமிழ் கவிதைகளைப் படிப்பவர்கள் கற்பக தருவாம் பனையினை நிச்சயம் கருத்திருத்தாமல் விடவே மாட்டார்கள். அந்த அளவுக்கு எங்கள் தங்கத்தாத்தாவின் மந்திரச் சொற்கள் கற்பகதருவை காட்டி நிற்கிறது எனலாம்.

    மன்னுயிர் ஞாலத்து வான்பனையின் மேன்மையெலாம்
    பன்னுகலி வெண்பாவாற் பாடவே – முன்னவர்வரு
    போதனே விக்கினங்கள் போக்குகின்ற பூதகண
    நாதனே முன்னே நட”

    என்று தாலவிலாசத்துக்குக் காப்புச் சொல்லி – பின்னர் நூல் நிலை பற்றி சொல்லி ……

    ஓங்கார மூலத் தொருவனிரு தாடொழுது
    பாங்கார் தமிழ்க்கலிவெண்பா பாட்டினால் – வீங்குபுகத்
    தால விலாசந் தனையுரைப்பேன் தெண்டிரைசூழ்
    ஞால முணர்க நயந்து”

    நிறைவாக கற்பகதருவை வியந்து வாழ்த்தி மகிழுகின்றார்.

    பொன்னின் மழைவாழி பூமி நலம்வாழி
    மன்னுயிர்கள் வாழி யறம்வாழி – எந்நாளும்
    கற்பகம்போ லீயுங் கடவுட் பனைவாழி
    நற்றமிழும் வாழி நயந்து”

    தங்கத்தாத்தா நினைவுக்கு வருகிறார். கூடவே சின்னத்தம்பிப் புலவரும் வந்து நிற்கிறார். அவரும் கற்பகதருவை விட்டுவிடவில்லை…….

    கோள்நிலைகள் மாறி மாரிமழை வாரி வறண்டாலும்
    கொடிய மிடி வந்து மிகவே வருந்தினாலும்
    தான் நிழலளிதுயர் கலாநிலையமே போல்
    தந்து பல வேறு பொருள் தாங்கு பனையே

    என்று சின்னத்தம்பிப் புலவரும் கற்பகதருவை வியந்து நிற்கிறார் என்பதற்கு இக்கவியே சான்று.

    பனை நூறு என்னும் நூலும் கற்பகதருவினை எப்படிச் சொல்லுகிறது பாருங்கள்…….

    நீண்ட வுடலும் நேரிய கோடும் கார்நிறமும்
    பூண்டா யன்ன பூவுலகத்தில் நின்னைப்போல்
    யாண்டு மிலாதால் வைரமுடைநற் றாருவெனில்
    தூண்டும் மன்பே தூயதலாது தோற்றம்மே”

    நீற்றைப்பூசும் வானம் பரவும் நிறையும்நூல்
    ஏற்றுக் கொள்ளும் யாண்டு முவக்கு மெவர்க்கும்
    சாற்றும் ஞானந் தந்திடு மன்பிற் றலைநிற்கும்
    போற்றந் தணர்கள் போலப் பனையும் பொலியுமே”

    வேண்டிய யாவு மீயும் வியன்றரு மியல்புகண்டே
    ஆண்டுபல் லாயி ரம்முன் நறிவுடை யெமது முன்னோர்
    காண்டரு தாலந் தன்னைக் கற்பகத்தாரு வென்றார்
    நீண்டநா ளோம்பி இஃதை நீவிரின் புற்று வாழ்வீர் “

    பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராய் இருந்தவர் கணபதிப்பிள்ளை அவர்கள். சுவாமி விபுலானந்தரின் நேரடி மாணவராக விளங்கியவர். மொழி ஆராய்ச்சி வல்லுனர். அதே வேளை நாட்டர் வழக்கியலிலும் ஆற்றல் மிக்கவர். இவரின் கவிகள் படிக்கப் படிக்கச் சுவையினை நல்கும். அவரின் எண்ணத்தில் கற்பகதரு வருகிறது பார்ப்போமா ……..

    அழகுறு வன்னம் அமைவுறப் போட்டுத்
    தொழிலமை வனிதையர் திறமையாலிழைத்த
    பெட்டியாய் குட்டான் பெயர் பெறு கதிர் பாய்
    அடுக்குப் பெட்டியும் சுடும்
    பிட்டவி நீத்துப் பெட்டியும் சுண்டும்
    பனையின் குருத்தை பதனமாய் வார்த்து
    பன்னிறம் தீட்டிய பன்னோலை கொண்டு
    கைவல் இளையர் கருதி இளைத்த
    ஆனைப் பெட்டியும் அழகிய தேரும்
    கொட்டைப் பெட்டியும் கிலுக்குப் பெட்டியும்
    எனவாங்கு,
    இன்னணம் நெருங்கிடு பன்னங் கடைகளும்”

    என்று சொல்லியதோடு அமையாமல் , கற்பகதருவில் மனத்தை இருத்தி

    நரைதோல் இயனம் அரையில் கட்டி
    அதன் கீழ் முட்டி அசைதர விட்டு
    மார்போடணையத் தோளது தூக்கி
    உரனுரு தளை நார் காலினை மாட்டிக்
    கால் மடித்து உன்னிக் கரு நெடும் பனைமிசை
    பாளை தட்டி பார்த்துச் சீவி
    ஏர் தரும் ஊசலோடு இயனத்தசையும்
    இன் கள் முட்டியொடு இறங்கும் போதில்
    அடி மரத்திருந்து நுனி வரை நோக்கி
    நாநீர் ஊற உதடு வருடி
    பெரு மகிழ்வோடு பிளாவை ஏந்தி
    அருவிலை கொடுத்து நறவினை மாந்திக்
    களிப்புறு மாக்கள் விளிப்புறு கும்பலும்”

    என்று பேராசிரியர் மனமெழுந்த காட்சி இப்படிக் கவியாய் விரிகிறது.

    நாட்டார் பாடல்களிலும் பனைபற்றி வருவருகிறது. அப்பாடல்தான் என்ன சொல்லுகிறது எப்படிப் பனையைக் காட்டுகிறது என்று பார்ப்போமா ….

    பட்டாங் கத்தி பள பளென
    பாலையன் கோட்டை நறறென
    பனையும் கருத்திருக்கும்
    பனை வட்டும் சிவந்திருக்கும் – அதிலே
    இறக்கிய பதநீரைப் பருகினால்
    தலை கிறு கிறுக்கும்”

    தேடுதற்கும் வகையறியேன் – உன்
    திருக்கோயில் தவறணையைத் தோடிக்கொண்டு
    ஓடுவரும் பக்தர்க்கு குறைவே இல்லை
    உன்னுடைய கிருபையினைச் சொல்லி சொல்லிப்
    பாடுதற்கு வகையறியேன் – பாளை வேந்தா
    பாவிகளை மகிழ்விக்கும் பான தேவா
    நீடுலகில் என் போன்ற ஏழைகட்கு
    நீயின்றி யாருதவி சொல்லுமையா”

    சண்டையிலே பிறப்பாய் போற்றி
    சல்லியைப் பறிப்பாய் போற்றி
    மண்டையை உடைப்பாய் போற்றி
    மகளிரை அடிப்பாய் போற்றி
    பாளையில் பிறப்பாய் போற்றி
    பனைதரும் கொடையே போற்றி”

    என்று நாட்டுப்பாடலிலும் பனைபற்றி வருவதும் – பனையின் நிலையினை பாமரர் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை காட்டி நிற்கிறதல்லவா!

    நாராய் நாராய் செங்கால் நாராய்
    பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
    பவளக் கூர்வாய் செங்கால் நாராய்”

    இந்தப்பாடல் யாரால் எழுதப்பட்டது என்பது தெரியாத நிலையில் கவிதையில் வருகின்ற (முழுக்கவிதை யைப் பார்க்க) சத்திமுத்த வாவி என்பதை எண்ணி அப்புலவரை சத்திமுத்துப் புலவர் என்று அடையாளப்படுத்தி விட்டார்கள். அப்பெயரே நிலையாகியும் விட்டது, “பழம்படு பனையின் கிழங்கு பிழந்தன்ன பவளக் கூர்வாய்” என்னும் வரிகள் புலவரின் அழகான படிமமாய் இங்கே அமைகிறது. எங்களின் கற்பகதருவாம் பனையினை – பெயர் தெரியா ஒரு புலவரும் தன்னுடைய மனத்தில் இருத்தி நல்லதொரு கவிதையாய் வடித்திருக்கிறார். சிறிய வயதில் படித்துப் பாடமாக்கிய இக்கவிதையும் கற்பகதருவாம் பனையினைக் காட்டியே நிற்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டியது அல்லா !

                                         (வளரும்)

    Share
  • மனமுறை தீபாவளி மகிழ்வினைத் தரட்டும்!

    மனமுறை தீபாவளி மகிழ்வினைத் தரட்டும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

    உல்லாசம் பொங்க உள்ளம் மகிழ்ந்திட
    உறவுகள் கூட உணர்ச்சி பொங்கிட
    ஒளியில் இல்லம் மூழ்கிச் சிறந்திட
    வருகின்ற நாளே மனமுறை தீபாவளி

    பட்டாசு மத்தாப்பு கைகளை நிறைக்க
    பாங்குடன் சிறியவர் பெரியவர் மகிழ
    வெடித்திடும் போதும் விரிந்திடும் போதும்
    வேதனை துன்பம் காணாமல் போகுமே

    சமயமும் சேரும் சமூகமும் சேரும்
    சாத்திரம் சடங்கு சேர்ந்துமே நிற்கும்
    இல்லமும் இணையும் இன்பமும் இணையும்
    நல்லதை உணர்த்திடும் நம்தீபா வளியும்

    மணமக்கள் வாழ்வில் மகிழ்வினை ஊட்ட
    மாமனார் வீட்டை நாடியே நிற்க
    விருந்துகள் நடக்க வெகுமதி கிடைக்க
    நலந்திகள் தீபாவளி நல்வழி சமைக்கும்

    புத்துடை மனதில் புத்துணர் வூட்டும்
    புதுப் பொலிவுடனே யாவரும் திகழ்வார்
    தித்திக்க பண்டம் வீடெலாம் மணக்கும்
    தித்திக்கும் உணர்வை ஊட்டுமே தீபாவளி

    இசையுடன் விழாக்கள் எங்குமே நடக்கும்
    இயற்றமிழ் அரங்கம் சிறப்பாய் இருக்கும்
    ஆடலும் பாடலும் அரு விருந்தாகும்
    அனைவரும் இணைந்து ஆனந்தம் அடைவார்

    ஆலயம் நோக்கி அனைவரும் ஏகுவார்
    ஆண்டவ னிடத்து வேண்டுவார் பலவரம்
    பரவசப் பக்தியில் மூழ்குவார் பலருமே
    பண்ணிசை பாடியே பரவுவார் பணிவுடன்

    சிறியவர் ஓட பெரியவர் தடுக்க
    விழுந்தவர் எழும்ப இளசுகள் சிரிக்க
    குதூகலம் என்பது விதம் விதமாக
    தீபா வளியின் அங்கமாய் மிளிரும்

    இருப்பவர் இனிப்பை நிறையவே சுவைப்பார்
    இல்லார் இனிப்பை எண்ணியே ஏங்குவார்
    கொடுத்துமே மகிழ்வோம் கொண்டாட்டம் சிறக்கும்
    நிலத்தினில் தீபாவளி நிறைவினைத்  தரட்டும்

    நிம்மதி மனத்தில் நிலைத்திடச் செய்வோம்
    சொல்லினைச் சுவையாய் கொடுத்துமே நிற்போம்
    இல்லவர் உள்ளவர் பேதத்தைக் களைவோம்
    எல்லோர் மனத்திலும் இன்பத்தை நிறைப்போம்

    Share
  • மாநிலம் பயனுற வந்த மகான் வள்ளலார்

    மாநிலம் பயனுற வந்த மகான் வள்ளலார்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா

    மண்ணில் நல்ல வண்ணம் வாழ வேண்டும். வையத்துள் வாழ் வாங்கு வாழ வேண்டும்.துன்பமில்லா மல் வாழ வேண்டும். குறை வில்லாது வாழ வேண்டும். வாழும் வாழ்வு நிறைவுடையதாக அமைய வேண்டும் என்னும் நோக்கில்தான் சமயங்களும் அதன் வழி முறைகளும் காலத்துக் காலம் வந்தபடி இருந்து கொண்டே இருப்பதைக் காண்கின்றோம்.இப்படி வருகின்ற சமயங்களில் எது உயர்ந்தது எது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது எது மிகவும் தீவிரமாக வந்திருக்கிறது நடைமுறைக்கு ஒவ்வாதவற்றை எது தாங்கி வந்திருக்கிறது என்னும் நிலை மண்ணிலே பூதாகரமாகவே வியாபித்து நிற்பதையும் காணமுடிகிறது.

    வேதங்களை முதன்மைப் படுத்திய சமயநெறிகள். சித்தாந்தத்தை முதன்மை படுத்திய சமய நெறிகள். கடவுளைப் பற்றியே எண்ணாத சமய நெறிகள். அறத்தினையே முழுமையாய் வலியுறுத்தும் சமய நெறிகள். புராண இதிகாசங்களை நம்பும் சமய நெறிகள். திருமுறைகளைஆகமத்தைஆலயத்தை மையமாகக் கொண்ட சமய நெறிகள். உருவ வழிபாட்டை முதன்மைப்படுத்தாத சமயநெறிகள். வேள்வி யினை விரும்பி நிற்கும் சமய நெறிகள். இல்லறத்தை ஒதுக்கித் துறவறத்தையே முதனிலைப்படுத்தும் சமய நெறிகள். உருவ வழி பாட்டினை உரித்தாக்கிக் கொண்ட சமய நெறிகள். இப்படிப் பல சமய நெறிகள் சமுதாயத்தை சூழ்ந்து இருந்தன என்பதைக் கட்டாயம் கருத்திருத்தல் வேண்டும்.

    சமய நெறிகள் பல தோன்றி சமுதாயத்தை பல கோணங்கள் ஆக்கி விட்டிருக்கின்றன என்பதையும் மறுத்துரைத்துவிட முடியாது. சமணம் வந்தது. பெளத்தம்வந்தது. இஸ்லாம் வந்தது. கிறித்தவம் வந்தது. இந்தியாவில் வைதீக நெறியே மேலோங்கி இருந்தது. இந்தியாவுக்கு புதிதாக வந்த சமய நெறிகளாலும். இந்தியாவில் முகிழ்த் தெழுத்த சமய நெறிகளாலும் – வைதீக சமய நெறிகள் சற்று தடுமாற்றமுறகின்ற நிலை ஏற்பட்டது. ஆனால் வைதீகம் என்பது தன்னிலையில் இறுக்கமாகவே இருந்தது . இருந்தும் வருகிறது என்பதும் மனங் கொள்ளத்தக்கதாகும்.

    இந்தியாவுக்குள் நுழைந்த சமய நெறிகள் பால் பலர் ஈர்க்கப்பட்டார்கள். அந்த சமய நெறிகளின் வழியில் நடந்திடவும் விரும்பிச் சென்றார்கள். வைதீக நெறியில் மாற்றங்கள் கொண்டுவருவது அவசியம் என்று உணரும் ஒரு நிலையும் அப்பொழுது அவசியமாகக் காணப்பட்டது. அந்தவகையில் கெளதம புத்தர் வருகிறார். மகாவீரார் வருகிறார். தயானந்த சரஸ்வதி வருகிறார். ராஜாராம் மோகன்ராய் வருகிறார். இராம கிருஷ்ண பரமஹம்சரும் வருகிறார். இவர்களின் சிந்தனைகள் ஒவ்வொன்றுமே வேறுபட்டனவாக இருந்தாலும், சீர்திருத்தம் என்னும் கருமட்டும் அனைவரது சிந்தனைகளிலும் அமைந்தே இருந்தது என்பதுதான் முக்கியமாகும்.

    வந்த சமய நெறிகளில் காணப்பட்ட நல்ல சிந்தனைகள் வைதீக சமய நெறியிலே சீராக்கம் செய்திட வேண்டும் என்னும் நிலைக்கு உந்தித்தள்ளுகிறது. கல்வி அறிவின் பெருக்கமும் சிந்தனைகளில் புத்தூக் கத்துக்கு உந்து சக்தியாகிறது. இந்த நிலையில் தமிழ் நாட்டில் இறைவனது பெருங்கருணையினால் மண்ணில் வந்து பிறக்கிறார் வள்ளலார் பெருமான்.

    வைதீக சமய நெறியினை மனதில் இருத்திய குடும்பத்தில்த்தான் வள்ளலார் வந்து பிறக்கின்றார். அவரின் உள்ளத்தில் முருகப்பெருமானே நிறைந்து இருக்கிறார். ஞானப்பாலை முன்று வயதில் அம்மையின் அரவணைப்பில் உண்ட  சீர்காழி தந்த ஞானக் குழந்தை சம்பந்தப் பெருமானைப் போற்றுபவராக வள்ளலார் விளங்கினார். மணி வாசகத்தை மனமுருகப் பாடினார். உருகாதார் மனத்தினையே உருக்கும் திருவாசகத்தைத் தேனாகக் கருதியே சுவைத்து தன்னையே அதன் வசமாக்கி நின்றார்.

    சிறிய வயதில் அன்னையையும் தந்தையும் இழந்து நின்றார். அண்ணனின் அரவணைப்பில் அவர் வாழும் நிலை ஏற்படுகிறது. அண்ணன் வீட்டிலிருந்து பள்ளிப்படிப்பை ஆரம்பிக்கிறார். பள்ளிப் படிப்பில் செல்லும் கவனம் கலைந்து அவரின் கவனம் – தியானம்யோகம் பக்கமாய் திரும்புகிறது. கல்வியினைக் கற்காமலேயே அவருக்குக் கலைமகள் கருணையினைத் தாராளமாகவே கொடுத்து விடுகிறாள். வள்ளலார் மனத்திலிருந்து கருத்துக்கள் மழையாகக் கொட்டி சிந்தனை வெள்ளமாய் பெருக்கெடுத்தது.

    உருவ வழிபாட்டை ஏற்று நின்றவர் மனத்தில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. பரம்பொருளானவன் அரு வாய், உருவாய், அருவுருவாய் இருக்கிறான் என்றுதான் சமய நெறிகள் சாற்றுகின்றன. வள்ளலார் உள்ளம் மற்றவர்கள் உள்ளத்தைவிட வித்தியாசமாய் சிந்திக்கத்  தொடங்குகிறது. எல்லாச் சமயங்களையும் பார்க்கிறார். பார்த்தோடு அமையாமல் அவற்றின் உட்கருத்துக்களையும் உள்வாங்கிக் கொள்ளுகின்றார். அவர் மனதில் ஒரு புது மாற்றம், புதுத்தெளிவு உதய மாகிறது. அந்தத் தெளிவினால் அளப்பருங்கருணையுடைய அந்தப் பரம் பொருளை அவர் அளப் பெருஞ் ஜோதியாகவே அகமிருத்தியும் கொள்ளுகிறார். நிறைவில் “ஜோதி தரிசனமே” அவரின் நிலையாக மாறுகிறது. “சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே”, “ஒளி வளர் விளக்கே”. “தீபமங்கள ஜோதி நமோ நம” என்றெல்லாம் அடியார்கள் அந்தப் பரம்பொருளை விழித்ததைப், ஏற்றிப் போற்றியதயெல்லாம் வள்ளலார் மனம் உள்வாங்கிக் கொண்டது. அவர்களே அந்தப் பரம் பொருளினை ஜோதி வடிவில் உருவகப்படுத்தி இருக்கிறார்கள் என்னும் பொழுது நானும் அவர் வழியில் ஜோதி தரிசனத்தைச் சொல்லுவதில் ஏதும் மாற்றுக்கருத்துகள் கொள்ள வேண்டாம் என்று அவர் மக்களைப் பார்த்து புகன்று நிற்கிறார். ஆனாலும் அவரின் இந்த கருத்தினுக்கு எதிர்ப்பாளர்களும் நிறையவே இருந்தார்கள்.

    வைதீக சமயம் மேன்மை மிக்கதான கருக்களைக் கொண்டிருந்த பொழுதிலும், அதனை வழி நடத்த வந்தவர்களின் மனங்களால் விளைந்தவை சமூக நலன்களைப் பாதித்து நின்றதை வள்ளலார் மனம் ஏற்க மறுத்தது. வள்ளலாருக்கு முன்னர் வந்த பலரின் சீர் திருத்தக் கருக்கள் – வள்ளலாரிடம் பதிந்தே இருந்தது. சமத்துவம் இல்லாமை என்பதுதான் வள்ளலார் உள்ளத்தைக் குத்திக் காயப்படுத்திய பெரிய கூரான முள்ளாகவே இருந்தது. அந்தச் சமத்துவத்தை உருவாக்கிட வேண்டும் என்னும் அவா அவரிடம் பேரலையாகவே எழுந்தது. சமரசம் நிலவுவதே சமய நெறிகளின் உயிர் நாடியாக இருக்கவேண்டும் என்ப துதான் வள்ளலாரின் ஆணித்தரமான கொள்கையாகவே அமைந்தது.

    பெளத்தத்தின் அட்டசீலம், பஞ்சசீலம், சமணத்தின் அறக்கருத்துகள், இஸ்லாத்தின் சகோதரத்துவம், கிறித்தவத்தின் தொண்டு மனப்பாங்கு யாவற்றையும் வள்ளலார் அகத்திருத்தி தன்னுடைய சமரச சன்மார்க்கப் பாதையினை ஆக்கி நின்றார். வள்ளலாரின் சுத்த சமரச சன்மார்க்க நெறியினை உற்று நோக்கினால் அங்கே வள்ளுவமே கைகொடுத்து நிற்பதையே பெரும்பாலும் காணக்கூடியதாக இருக்கும். கொல்லாமை, புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, பொய் கூறாமை, துறவு, விருந்தோம்பல், பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்னும் உண்மை, அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்னும் கரு, நன்னயம் செய்தல் என்னும் பெருநோக்கு, பழித்தது ஒழித்து விடும் கரு, உற்ற நோய் நோற்றல் உயிக்கு உறுகண் செய்யாமை என்னும் எண்ணம், அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் உயிர் செகுத்து உண்ணாமை என்னும் உயரிய நோக்கு, அத்தனையும் வள்ளலாரின் புது நெறியாக முகிழ்த்து வந்தது எனலாம். வள்ளலார் சமூகத்தில் மிகவும் சிறப்பான ஒருமைப் பாட்டினை நிலை நிறுத்திடவே தன் வாழ்வெல்லாம் எண்ணியே செயற்பட்டார் என்பதை கருத்திருத்துதல் அவசியமாகும்.

    பசிப்பிணி மருத்துவராய் வள்ளலார் விளங்கினார். “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்பதை வள்ளலார் மிகவும் தீவிர மாகவே மனமிருத்திச் செயற்படுத்தி நின்றார். பசித்தவர்களுக்கு முன்னால் தத்துவங்கள் பயனற்றவை என்பதில் வள்ளலார் பெருதும் உறுதியாகவே இருந்தார். அதனால் பசிப்பிணியினைப் பெரும் பிணியாக எடுத்து அதனைப் போக்குவதையே தம்முழைய சுத்த சமரசசன் மார்க்க சபையின் முக்கிய குறிக்கோளாக்கி நின்றார் வள்ளலார் எனலாம். அவரால் தொடங்கப்பட்ட இப்பாரிய பணி இன்றும் அவரின் சபையினால் அவரின் அன்பர்களினால் தொடர்கிறது என்பது மனங் கொள்ளத்தக்கதேயாகும்.

    துறவியாக விளங்கினார். இயற்கை மருத்துவரானார். ஞானியாக ஒளிவிட்டுப் பிரகாசித்தார். துறவியாக தூய்மையினைக் காட்டி நின்றார். திருமூலரின் பல சிந்தனைகளை வள்ளலாரும் உள்வாங்கி நின்றார். திருமூலரைப் போலவே கருத்துக்களை நுட்பமாகச், செப்பமாக நல்ல தமிழில் அருமையான பாடல்களாக ஆயிரம் ஆயிரமாய் ஆக்கி அளித்தார். அவை அத்தனையும் பல திருமுறைகளாக வகுக்கப்பட்டு “திரு வருட் பாக்களாக” சமூகத்துக்கு பெரு வெளிச்சத்தைக் காட்டியபடியே இருக்கின்றன என்பதை மறுத்து ரைத்து விடல் இயலாது.    

    ருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
    உத்தமர் தம் உறவு வேண்டும்
    உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
      உறவு கலவாமை வேண்டும்
    பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
       பொய்மை பேசாது இருக்க வேண்டும்
    பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்
        மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
    மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
        உனை மறவாதிருக்க வேண்டும்
    மதி வேண்டும்நின் கருணை நிதி வேண்டும்
       நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
    தரும மிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
      தலமோங்கு கந்த வேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவ மணி
      சண்முகத் தெய்வமணியே! சண்முகத் தெய்வமணியே!

    சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
    தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஓர்
    கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருட்
    கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே!

    இப்பாடல்கள் வாயிலாக வள்ளலாரின் ஆரம்ப நிலையினக் கண்டு கொள்ள க்கூடியதாக இருக்கிறதல்லவா !

    ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்
    உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்
    அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்
    ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்
    என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்
    யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்
    ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே
    ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

    ஏகன் அநேகன் என்னும் கருத்த்தில் , ஏகன் என்பதையே வள்ளலார் அகதில் உறுதியாக்கிக் கொண்டிரு ந்தார். அவரின் மனதில் பல சிந்தனை கள் மலர மலர கடவுள் பற்றிய கொள்கைகளையும் மாற்றியவ ராகவே வள்ளலார் வந்து நிற்கிறார் என்று அவரின் பாதையினைப் பார்க்கும் பொழுது அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

          சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப
    நீதியில் ஆச்சிர நீட்டென்றும் – ஓதுகின்ற
    பேயாட்டம் எல்லாம் பிதிர்த்தொழத்தலேபிறர்தம்
    வாயாட்டம் தீர்த்தன்வே மற்று

                  வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
    வேதாக மத்தின் விளைவறியீர் – சூதாகச்
    சொன்ன வலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
    என்ன பயனோ இலை.

    வள்ளலாரின் கருத்தோட்டங்கள் எவ்வாறு பரிணமிக்கின்றன என்ப தற்கு அவரே தன்னுடைய பாடல் களை எமக்கு வழங்கி நிற்கிறார். சாதியினைச் சாடுகிறார். வேதாகமங்களை மிகவும் கடுமையாக எதி ர்க்கும் நிலை வள்ளலாரிடம் ஏன் ஏற்பட்டது என்பதற்கு – அவரின் சீர்திருத்த மனப்பாங்குதான் என்றே கருதைட வைக்கிறதல்லவா !

                  பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை
    முத்தி பெற்றிடவும் பெற்றிலேன்
    உரியதோர் இச்சை எனக்கிலை என்தன்
    உள்ளம் நீ அறிந்ததே எந்தாய்
    ஆதலால் இரக்கம் பற்றி நான் உலகில்
    ஆடலே யன்றி ஓர்விடயக்
    காதலால் ஆடல் கருதிலேன் விடயக்
    கருத் தெனக் கில்லை

    வீடும் வேண்டா விறலினராகவும் வள்ளலார் தன்னை இங்கே வெளிப்படுத்தி நிற்கின்றார். முத்தியே வேண்டா நிலை என்பதே மிகவும் உன்னதமான நிலை என்று சேக்கிழார் பெருமானே சுட்டிக் காட்டி நிற்பது இங்கு நோக்கத்தக்கதேயாகும்.

              மரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்
    புனைந்துரையோ பொய்புகலேன் சத்தியஞ் செய்கின்றேன்
    இயற்றிதனைத் தடுத்திடலாம் என்னோடுஞ் சேர்ந்திடுமின்
    என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் தானே

    தன்னால் உருவாக்கப்பட்ட மார்க்கத்தை எந்த அளவுக்கு உறுதியானது, பயனானது, புதிய சிந்தனை களைக் கொண்டது என்பதை தனது பாடல் வாயிலாகவே எவ்வித அச்சமுமின்றி துணிவாய் வெளிப்படுத்தி நிற்பதைக் கருத்திருத்த வேண்டியது முக்கிய மாகும். மரணமிலாம் பெருவாழ்வு என்பதைச் சொல்வதற்கு எவ்வளவு மனவுறுதியும், தெளிவும் வேண்டும். அந்தத் தெளிவும் உறுதியும் மிக்கவராய் வள்ளலார் விளங்கி இருந்திருக்கிறார்.

    செத்தாரை எழுப்புவேன் என்றார். சித்துக்கள் செய்யும் சித்தராயும் விளங்கினார். செத்தாரை எழுப்பு வேன் என்பதைப் பலருமே தவறாக விளங்கிக் கொண்டு – அவரையே பல வேளைகளில் வருந்திடும் வண்ணம் செய்திருக்கிறார்கள் என்றும் அறிய முடிகிறது. உயிரோடு வாழ்கின்ற பலர் நல்ல சிந்தனைகளை தூக்கி எறிந்து விட்டு, தனக்கும் பயனில்லாமல், மற்றவர்களுக்கும் பயனில்லாமல், ஏன் சமுதாயத்துக்கே பயனில்லாமல் வாழுவதைக் காண்கின்றோம். அப்படியானவர் உயிருடன் வாழ்ந்தாலும் அவர்களைச் செத்தார் என்றுதான் கணக்கில் எடுத்திட வேண்டும். அப்படியானவர்களுக்கு நல்ல உபதே சங்களைச் செய்தால் அவர்களை நல்லுணர்வுள்ளவர்களாக எழுச்சி பெறச் செய்துவிடலாம் என்னும் கருத்தில்த்தான் வள்ளலார் “செத்தாரை எழுப்பலாம்” என்று சொன்னார் என்பதுதான் உண்மை நிலையாகும்.

    வள்ளலாரின் கொள்ளகைகளை நிறையவே பலரும் விமர்சித்தார்கள். அவரின் கொள்கைகள் ஏற்பதற்குக் கஷ்டமாக இருந்தும் இருக்கலாம். ஆனால் அவர் தான் கொண்ட கருத்தைமட்டும் எதற்காகவும், யாருக்காகவும் மாற்றிவிட நினைக்கவே இல்லை. தன்மனத்துதித்த சீர் திருத்தங்களை உள்ளடக்கி தன்னுடைய “சுத்த சமரச சன்மார்க்க நெறியினை” முன்வைத்தார். அதனை நடைமுறைப்படுத்தவும் தன் காலத்தில் அவர் செயற்பட்டு நின்றார். அவருக்கென்றே ஒரு அடியார் திருக்கூட்டமும் திரண்டது. அவரின் ஜோதி வழிபாட்டினையும் ஆதரித்தும் நின்றது. இன்றும் அந்த ஜோதி தரிசன வழிபாடு நிற்காமலே நடந்த படியேதான் இருக்கிறது என்பது முக்கியமாகும்.

    சைவத்திருமுறைகளை நாமனைவரும் ஏற்றிப் போற்றுகின்றோம். வள்ளலாரின் அருட்பாடல்களும் திருமுறைகளாகப் பலராலும் போற்றப்பட்டு வருகிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதே. அன்னைத் தமிழை நேசித்தார். அந்த தமிழில் அரிய தத்துவக் கருத்துக்களை எமக்கெல்லாம் அள்ளியும் வழங்கினார். தமிழால் தன்கருத்துக்களைக் கூறுவதையே அவர் பெருமையாகவும் பெரும் பேறாகவுமே எண்ணினார். விமர்சனங்கள் பல – அவரின் கொள்கைகளுக்கும், அவரின் அருட்பாடல்களுக்கும் முன்வைக்கப்பட்டாலும் அவர்; ஞானியாக, யோகியாக, சீர்திருத்தச் செம்மலாக, சமூகத்தின் அழுக்குகளை அகற்ற வந்த சமூக மருத்துவராக, எல்லாவற்றுக்கும் மேலாக இந்த மாநிலம் பயனுற வந்த “பெரு வெளிச்சம்” ஆகவே ஆகியிருக்கிறார் என்பதுதான் உண்மையாகும்.

    Share
  • கற்பகதரு என்னும் அற்புதம் – இலக்கியத்தில் இணைந்த பனை (அங்கம் – 1)

    கற்பகதரு என்னும் அற்புதம் – இலக்கியத்தில் இணைந்த பனை (அங்கம் – 1)

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மனிதவாழ்வுக்கும் மரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனிதன் தன்னுடைய ஆரம்பத்தை ஆரம் பித்ததே மரங்களுக்கு மத்தியிலேதான். அப்படி ஆரம்பித்த மனிதன் நாளடைவில் மரங்களின் இணைப்பிலிருந்து விடுபட்டு  மரங்களை ஒருபக்கமாக ஒதுக்கி விட்டுமரமற்ற இடங்களை வாழ்வாக்கி வாழத் தலைப்பட்டு விட்டான். மனிதன் ஒதுக்கினாலும் மரங்களின்றி மனித வாழ்வு திருப்தி அடைவதாக இல்லை என்றே சொல்லலாம். மரங்களும் மனிதனை விட்டு விடுவதாகவும் இல்லை. காட்டு மரங்கள் என்னும் நிலை மாறி நாட்டு மரங்களிடையே மனிதன் வாழும் ஒரு நிலை உருவாகி இருப்பதை இன்று கண்டு கொள்ளமுடிகிறது எனலாம்.

    இந்திலையில் கற்பகதரு என்று போற்றப்படும் பனையையும்அதன் வரலாற்றையும்அதன் பயன்பாட்டையும்அதன் முக்கிய த்துவத்தையும் அறிந்து கொள்ளுவது பொருத்தமாய் இருக்கும் என்று கருதுகிறேன்.

    பனை என்பது உலகில் பல இடங்களையும் தொட்டே வருகிறது எனலாம். உலக அளவில் நோக்குகையில் பனையின் தொகையானது ஏறத்தாள நூற்று ஐம்பது மில்லியன்கள் வரை இருக்கலாம் என்று புள்ளிபிபரங்கள் மூலம் அறியக்கிடக்கின்றது.

    கற்பகதருவான பனையின் தொடக்கம் எப்போது எனும் வினாவுக்கு – சரியான விடையினை பனைபற்றி ஆராய்ந்த தாவரவியலாளர்களே கூறமுடியாத நிலையில் மிகவும் தொன்மை மிக்கதாய் விளங்குகிறது என்பது  முக்கிய கருத்தெனலாம். ஆபிரிக்காவில்த்தான் இம்மரம் முதலில் தோன்றி இருக்கலாம். அதன் பின்னரே  தான் மற்றைய இடங்களுக்கும் பனையானது வந்து சேர்ந்திருக்கலாம் என்னும் கருத்தும் காணப்படுகிறது.

    இந்தியாஇலங்கைஇந்தோனேஷியாமடகஸ்கார்கம்பூச்சியாதாய்லாந்துமியன்மார்என்று பல இடங்களில் பனை காணப்படுகிறது. இலங்கையில் குறிப்பாக வடமாகாணத்தில் பெருமளவு பனைகள் இருக்கின்றன. கிழக்கு மாகாணத்திலும் கணிசமாக பனை காணப்படுகிறது. கிழக்கில் பனை இருந்தாலும் பனையின் எழுச்சி என்பது இலங்கையில் வடபகுதியிலேயே இருக்கிறது என்றே கொள்ளலாம். ஏனென்றால் அங்கு காணப்படும் வரட்சிதான் முக்கிய காரணமாய் அமைகிறது என்பதும் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    பனை மரத்தைப் பற்றி எங்கள் இலக்கியங்களும் கூறி நிற்கின்றன. இலக்கியங்களில் கையாளப்படும் அளவுக்கு எங்கள் கற்பதரு இருக்கிறது என்றால் அதன் பெருமையினை நாங்கள் கருத்திருத்துவதும் அவசியம் அல்லவா !

    பனையினைத் தமிழர் தங்கள் மரம் என்று பெருமையுடன் கூறிக் கொள்ளுவார்கள். நினைப்பதைக் கொடுக்கும் நிலையில் இருப்பதால் இதனை கற்பகதரு என்று போற்றிவருதும் வழமையாய் இருந்துவருகிறது.

    குழந்தைகள் முதல் பெரியோர்கள்வரை பனையோடு நெருக்கமாய் உறவாடியே வந்திருக்கிறோம்! பனை முறத்தால் எங்கள் மறத் தமிழ் பெண் புலியையே விரட்டினாள் என்பதையும் எங்கள் இலக்கியங்கள் காட்டுவதையும் நாம் கருத்திருத்த வேண்டும் !

    சங்க இலக்கியம் தொடக்கம் எங்கள் தங்கத் தாத்தா சோமசுந்தரப் புலவர் வரை கற்பகதருவாம் பனையினை வியந்தே நிற்பது கருத்திருத்த வேண்டிய விஷயம் அல்லவா !

      ” ……………………….. ஏந்துபுகழ்
    போந்தை வேம்பே ஆரென வரூஉம்
    மாபெருந்தானை மலைத்த பூவும் “

    என்று தொல்காப்பியம் காட்டி நிற்கிறது. இங்கு பனையினைக் காணவில்லையே என்று எண்ணுகிறீர்களா? “போந்தை” என்னும் சொல் பனையின் பூவினைக் குறிக்க சங்ககாலம் பயன்படுத்திய தாகும். அதனையே தொல்காப்பியம் காட்டி நிற்கிறது. “ஏந்துபுகழ் போந்தை” என்றால்  – உயர்வான புகழினை உடைய பனம் பூ – என்பது அர்த்தமாகும். பனையானது பழந்தமிழர் வாழ்வில் எந்தளவுக்குச் சிறப்பினைப் பெற்றிருக்கிறது என்பது கருத்திருத்த வேண்டிய விஷயம்தானே !

    புறநானூறிற்றிலும் பனையின் பெருமை சுட்டிக் காட்டப்படுகிறது.

      ” கையது வேலே காலது புனைகழல்
    மெய்யது வியரே மிடற்றது பசும்புண்
      வட்கர் போகிய வளரிளம் போந்தை “

    கையிலே வேல்காலிலே வீரக்கழல்உடலிலிலே வேர்ப்புகழுத்திலே பசும்புண்இவற்றுடன் பனம்பூம் மாலையும் – உடைய வனாய் அதியமான் என்னும் அரசன் காணப்பட்டான் என்று புற நானூறு புகன்று நிற்கிறது. இங்கும்போந்தை” என்னும் சொல்லானது பனம்பூவினாலான மாலையைக் குறிக்க வந்திருகிறது. அரசனின் போர்க்கோலத்தில் பனையின் பூவினால் ஆகிய மாலை அக்காலத்தில் முக்கியமான ஒன்றாக விளங்கி இருக்கிறது என்பது பனைக்குக் கிடைத்த முக்கியத்துவத்தை தெரிவிக்கிறது அல்லவா!

    இரும்பனையின் குரும்பை நீரும்” – (பனை நுங்கின் நீர்), “இரும் பனை வெண்தோடு மலைந்தேன் அல்லன்” (பனம்பூச் சூடிய சேரன் அல்லன்)

    என்றும் புறநானூறு காட்டி நிற்கிறது. பனைபற்றிய எடுத்துக் காட்டுகள் புறநானூற்றில் இன்னும் பல இடங்களில் சுட்டப்படுவதும் கருத்திருத்த வேண்டியதே. மடல் இலக்கியத்திலும் பனையினைக் காணுகிறோம்.

    கலித்தொகைநற்றிணைகுறுந்தொகைஅகநானூறு ஆகிய சங்கத் தமிழும் பனையினைத் தொட்டுக் காட்டுகின்றன என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

    சிலம்பும்வள்ளுவமும் பனையினை விட்டுவிடவில்லை. சிலம்பில் மூவேந்தர்களுடைய மாலைகள் பற்றி வரும்வேளை பனையும் வந்து நிற்கிறது.

        ” தோள் நலம் உணீய கம்பைப் போந்தையொடு “

        ” பலர் தொழ வந்து மலாவிழ் மாலை
    போந்தைக் கண்ணிப் பொலம்பூ தெரியல் “

    என்னும் சிலம்பின் பாடல்கள் பனையின்பூ மாலைகள் பற்றிக் காட்டி நிற்கிறது.

      “தினைத் துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
    கொள்வர் பயன் தெரிவார்”

    என்று வள்ளுவம் பனையினைப் பக்குவமாய் காட்டி இருக்கிறது.

    கடையார் நட்பிற் கமுகனையர் ஏனை
    இடையாயார் தெங்கின் அனையர் – தலையாயார்
    எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்றிட்டதே
    தொன்மை யுடையார் தொடர்பு “

    என்று நாலடியார் என்னும் அறநூல் பனையின் பெருமையையைப் பறைசாற்றி நிற்பதும் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம். நால டியார் பனையினைப் போற்றுவதைக் காண்பதிலிருந்து பனையென் னும் கற்பகதரு அக்காலத்தும் பெருமைமிக்கதாய் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது அல்லவா !

      ” நடுவூருள் வேதிகை கற்றுக்கோட் புக்க
    படுபனை யன்ன பலர்நச்ச வாழ்வார்
    குடிகொழுத்தக்க கண்ணுங் கொடுத்துண்ணா மக்கள்
    இடுகாட்டுள் ஏற்றைப் பனை “

    நாலடியார் இங்கும் பனைபற்றி சொல்கிறது. பெண்பனையினை யாவரும் – நல்லவர்களை அதாவது வள்ளல்களை விரும்புவது போல் ஊர் நடுவே விரும்பிபுவர் என்று காட்டுவது நோக்கத்தக்கது. ஆண்பனை அப்படி அல்ல என்று காட்டினாலும் பனைபற்றிய நிலை காட்டப்படுவது கருத்திருத்த வேண்டியதே !

    (வளரும்)

    Share
  • இலக்குமி சிரிப்பாள் இல்லம் சிறக்கும் !

    இலக்குமி சிரிப்பாள் இல்லம் சிறக்கும் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண். ஆஸ்திரேலியா.

    வாழ்வினில் விரதம் வரமாகும்
    மனமது ஒடுங்குதல் நலமாகும்
    தேவைகள் மனத்தில் எழும்போது
    தேவியை நினைப்பார் நிலமீது

    தேவியை நினைப்பார் பலவாறு
    தினமுமே துதிப்பார் பலபேரும்
    சிறப்புடன் எடுப்பார் சிலநாளை
    அதனை அகத்தினில் அமர்த்திடுவார்

    அப்படி அமைவது இவ்விரதம்
    அதுவே அலைமகள் தினமாகும்
    மங்களம் கிடைக்க யாவருமே
    அலைமகள் விரதம் அனுட்டிப்பார்

    மங்கள நாயகி வரலட்சுமி
    வளம்தனைக் கொடுப்பாள் வரலட்சுமி
    எங்களின் வாழ்வு விடிவுறவே
    என்றுமே அவளே துணையாவாள்

    தளர்வினைத் தகர்க்கும் தாயாவாள்
    உளமதை உறுதி ஆக்கிடுவாள்
    நிலமதில் நிம்மதி தந்திடுவாள்
    அளவிலாச் சக்தியும் அவளாவாள்

    செல்வம் என்பது சிறப்பாகும்
    தெய்வம் தந்தால் அருளாகும்
    தெய்வமாம் லட்சுமி பூஜையினை
    சிரத்தையாய்ச் செய்குவார் இந்நாளில்

    அலைமகள் கலைமகள் மலைமகளாய்
    அமைந்தவள் ஆதிசக்தி யாவாள்
    அலைமகள் அருளும் அமைந்திட்டால்
    அனைத்துமே வசமாய் ஆகிடுமே

    வீட்டினில் பெண்கள் விளக்கேற்றி
    மெய்யன்புடனே துதி பாடி
    இலக்குமித் தாயை மனமிருத்தி
    ஏற்றிடு வார்கள் விரதமதை

    காப்புக் கட்டி நின்றிடுவார்
    கையால் குங்கும் தொட்டிடுவார்
    மஞ்சள் வைத்துப் பூஜிப்பார்
    மங்கலம் என்றே மகிழ்ந்திடுவார்

    பெண்களே சிறப்பாய்ப் பிடித்திடுவார்
    பீடுகள் பெருக வேண்டிடுவார்
    கொண்டவர் நலத்தை மனமிருத்தி
    பெண்களே விரதம் நோற்றிடுவார்

    மாங்கல்யம் நிலைக்க வேண்டிடுவார்
    மனமது சிறக்க வேண்டிடுவார்
    வாழ்வெலாம் ஒளிர வேண்டிடுவார்
    வரலட்சுமி பாதம் பணிந்திடுவார்

    அம்மன் ஆலயம் அனைத்திலுமே
    அபிசேகம் ஓமம் இடம்பெறுமே
    அனைத்துப் பெண்களும் ஆலயத்தில்
    அம்மனைத் துதிப்பார் காதலுடன்

    பூஜை நிறைவில் பெண்களெலாம்
    புனித நூலைக் காப்பாக
    கைகளில் கட்டிக் காத்திடுவார்
    கணவர் குடும்பம் நலன்காக்க

    வீடுகள் விளக்கால் ஒளியாகும்
    வெற்றிகள் வரவு விரைவாகும்
    இலக்குமித் தேவி சிரித்திடுவாள்
    இல்லம் அனைத்தும் மங்கலமே

    Share
  • பெற்றுவிட்ட சுதந்திரத்தைப் பேணிவிடல் முக்கியமே !

    பெற்றுவிட்ட சுதந்திரத்தைப் பேணிவிடல் முக்கியமே !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    இன்னுயிரைப் பலர் ஈந்தார்
    ஈன்ற மண்ணை மீட்பதற்கு
    பல் கொடுமை அனுபவித்தார்
    பாரதத்தாய் துயர் களைய
    காந்தியெனும் மகான் வந்தார்
    கைப்பிடித்தார் அனைவரையும்
    சாந்தி சாந்தி என்று
    சத்தியத்தைத் தூக்கி நின்றார்  !

    கொள்ளை கொண்ட வெள்ளையர்
    குமுறிக்  கனல் கொப்பளித்தார்
    வெள்ளமாய்க் குருதி மண்ணில்
    பெருகிவிட வழி சமைத்தார்
    ஈரமின்றி உயிர் பறித்தார்
    இரக்கமதை மறந்து நின்றார்
    பாரத்தாய் துயர் அறியா
    பாதகராய் மாறி நின்றார்

    படைபலத்தைக் கொண்டு நின்றார்
    பணபலத்தைப் பெருக்கி நின்றார்
    பாதகர்கள் பல பேரைப்
    பக்கபலம் ஆக்கி நின்றார்
    பாரதத்தாய் படு துயரைப்
    பரிகாசம் செய்து நின்றார்
    கயவர் பலர் கைகோத்துக்
    கண்ணியத்தை மறந்து நின்றார்

    அடிமை கொண்ட வெள்ளையர்
    ஆணவத்தில் அமிழ்ந்து நின்றார்
    அசுரராய் உரு மாறி
    அழித்தொழித்து மகிழ்ந்தார்
    அவர் முன்னே வந்தார்
    அகிம்சையைக் கை எடுத்தார்
    ஆள வந்த வெள்ளையரை
    ஆட அவர் செய்திட்டார்

    ஆண்டவனின் அருள் பெற்ற
    அவரே நம்மண்ணல் காந்தி
    ஊதிவிட்டால் பறந்திடுவார்
    உலர்ந்த உடல் கொண்டவவர்
    ஆன்மீக பலம் மிக்கார்
    அகிம்சையினைத் துணை கொண்டார்
    பலங் கொண்ட வெள்ளையரைப்
    பாரதம் விட்டோடச் செய்தார்

    ஏறி நின்ற வெள்ளையரை
    ஏற்றிவிட்டார் கப்பலிலே
    மாறி அவர் மனமாற
    வைத்திட்டார் காந்தி மகான்
    ஆகஸ்டு பதின் ஐந்தில்
    அனைவருமே வியப்படைந்தார்
    அகிம்சையால் பாரதத் தாய்
    அடைந்திட்டாள் சுதந்திரத்தை

    பாடினார் ஆடினார் பரவசமாயினார்
    கூடினார் கொடி ஏற்றினார்
    கொண்டாடி மகிழ் வெய்தினார்
    அடிமை இருள் அகன்றது
    ஆதவன் ஒளி பரப்பினான்
    காந்தி எனும் சக்தியால்
    கண்டு விட்டார் சுதந்திரத்தை

    பெற்று விட்ட சுதந்திரத்தைப்
    பேணி விடல் முக்கியமே
    காந்தி கண்ட சமுதாயம்
    குலைந்து விடச் செய்யாதீர்
    கிடைத்திட்ட சுதந்திரத்தை
    மதித்துமே போற்ற வேண்டும்
    ஆணவத்தில் ஏறி நின்று
    அதை மதிக்க மறக்காதீர்

    Share