மனதார வேண்டுகிறோம் துணையே நீகந்தா

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா 

போரொழிய வேண்டும் பேரமைதி வேண்டும்
தீராத பேயாசை தீவிழுங்க வேண்டும்
யாவருமே உறவென்னும் நல்லுணர்வு மலர
நல்லுரான் கந்தா நீயருள வேண்டும்

நல்லாட்சி வேண்டும் நற்றலைமை வேண்டும்
பொல்லாத சிந்தனைகள் பொசுங்கவே வேண்டும்
நல்வழியில் நாளும் எல்லாரும் நடக்க
நல்லை நகர்கந்தா நீயருள வேண்டும்

அறமோங்க வேண்டும் மறமழிய வேண்டும்
புறங்கூறும் எண்ணம் புதையுண்ண வேண்டும்
நலமான எண்ணம் உளமமர வேண்டும்
நல்லையின் கந்தா வழிகாட்டு நாளும்

அருளுடை ஆறுமுகம் அமைந்த பெருமாளே
அபயகரம் பன்னிரண்டு கொண்ட பெருமாளே
வள்ளி தேவயானையுடன் மயிலேறி வந்து
மாவருளைத் தந்தெம்மைக் காத்திடுவாய் கந்தா

கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் நீகந்தா
கருணையே உருவான கடவுளே கந்தா
வைதாரை மனமேற்கும் மால்மருகா கந்தா
மனதார வேண்டுகிறோம் துணையே  நீகந்தா

ஆறுபடை வீடமர்ந்த அரனாரின் மைந்தா
அரக்க மனமகற்றி ஆட்கொள்வாய் ஐயா
காதலுடன் மனமுருகி வேண்டுகிறோம் கந்தா
கையணைத்து இவ்வுலகில் காத்துவிடு ஐயா

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *