கந்தா கடம்பா காத்திடு எம்மை!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா

உருகிடும் அடியார் உளமுறை வோனே
மருள் நிலையகல வரமருள் வோனே
கருணையின் உருவாய்த் திகழ்ந்திடு வோனே
கந்தா கடம்பா காத்திடு எம்மை

ஆசா னாகியே அப்பனுக்கு உரைத்தாய்
அறு படையேகி அமர்ந்தே கொண்டாய்
அவ்வைப் பாட்டியின் அருந்தமிழ் சுவைத்தாய்
ஐயா கந்தா அடைக்கலம் நீயே

மாறா மனத்தை மாற்றிட வல்லாய்
ஆறா சினத்தை அடக்கியே வைப்பாய்
பாறாங் கல்லென இருப்பார் தம்மைப்
பக்குவம் ஆக்குவாய் பரமனின் மைந்தா

தாகம் தீர்ப்பாய் வேகந் தடுப்பாய்
மோகம் கலைப்பாய் முறுவல் கொடுப்பாய்
நாளும் ஆவாய் கோளும் ஆவாய்
நம்பிடும் அடியார் நற்றுணை நீயே

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *