Tag: க.பாலசுப்பிரமணியன்

  • கற்றல் ஒரு ஆற்றல் 95

    க. பாலசுப்பிரமணியன்

    காட்சி-வெளிசார்ந்த நுண்ணறிவு (Visual-Spatial Intelligence)

    education-1

    பல்வகை நுண்ணறிவுகளில் இந்த நுண்ணறிவுக்கு ஒரு மதிப்பான இடம் அளிக்கப்படுகின்றது. இந்த நுண்ணறிவில் சிறப்புப் பெற்றோர் காட்சிகள், (visuals) கற்பனைகள், (Imageries) இட மதிப்பீடுகள் (Spatial assessments), மற்றும் இடத்துக்கும் அதன் அமைப்புக்களுக்கும் தகுந்தவாறு செயல் திறன்களைப் படைப்பதில் திறனுள்ளவர்களாக இருப்பார்கள்.

    பொதுவாக இந்த நுண்ணறிவில் சிறந்தவர்களாக விளங்குபவர்கள் :

    1. ஓவியர்கள்
    2. சிற்ப வல்லுநர்கள்
    3. கட்டட அமைப்பாளர்கள்
    4. கட்டுமானப் பணியாளர்கள்
    5. தோட்டவியலாளர்கள்
    6. விளையாட்டு வீரர்கள்
    7. சினிமாத் துறையில் பின்னணி அமைப்பாளர்கள்
    8. திரைப்பட இயக்குனர்கள்
    9. ஒளிப்பதிவாளர்கள், நடன இயல்-மேடை வல்லுநர்கள்
    10. பத்திரிகை ஆசிரியர்கள்/பதிப்பாளர்கள்
    11. நாடக மேடை அமைப்பாளர்கள் /ஒளி-ஒலி இயக்குனர்கள்
    12. கார்ட்டூன் வரைபவர்கள்
    13. நிழற்படம் எடுப்பவர்கள் – புகைப்படம் எடுப்பபவர்கள்
    14. மந்திரவாதிகள்

    இந்த நுண்ணறிவின் பின்னணியில் வெளிப்படும் சில திறன்கள்:

    1. கண்களைக் கவரும் காட்சிகளைப் படைத்தல் -பயன்படுத்துதல்
    2. வண்ணங்களைப் படைத்தலிலும் உபயோகப்படுத்துவதிலும் திறன்கள் காட்டுதல்
    3.  இடம்- அமைப்புகளுக்குத் தகுந்தவாறு செயல் படுதல்
    4. நிலம்-நீர்- இட அமைப்புக்களில் அழகு செய்தல் – கற்பனை வளம் காட்டுதல்
    5. கருத்துக்களை காட்சிகள் வரைபடங்கள் மூலம் வெளிப்படுத்துதல்

    இதைத் தவிர மற்ற பல தொழில்களில் ஈடுபட்டவர்களுக்கு இந்தத் திறன்கள் மாறுபட்ட  அளவில் இருக்க வாய்ப்புக்கள் உண்டு. ஏனெனில் எந்தத் தொழிலில் இருந்தாலும் காட்சிகள் -இட அமைப்புக்களின் தாக்கம் இருக்கும். ஆகவே இந்த நுண்ணறிவு எல்லாத் தொழில்களுக்கும் சிறிதளவில் அடிப்படையானதாகத்  தோன்றுகின்றது.

    உதாரணமாக ஒரு சாதாரண மனிதன் தனக்கென வீடு கட்டும்பொழுது அதன் உள்வரைப்படம் மனத்தளவில் வரையப்பட்டு அதற்கான உருவகத்தை வரைந்து கொள்கின்றான். அதன்படி அந்த இடத்தை எவ்வாறு அதிக அளவில் அழகுக் குறிப்புகளோடு உருவாக்க முடியும் என்பதை உணர்ந்து செயல் படுகின்றான்

    அதேபோல் கிரிக்கெட், கால் பந்து, ஹாக்கி போன்ற பல விளையாட்டுக்களில் வீரர்களுக்கு எந்த இடத்தில் எந்தத் தருணத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற நுண்ணறிவு தேவைப்படுகின்றது.

    ஒரு மேடைநாடகத்தில் நடிகர்களும் அதன் உதவியாளர்களுக்கு எந்தக் காட்சி எப்படி வரவேண்டும் எந்தப் பொருள் எந்தக்காலத்தில் எப்படி இருக்கவேண்டும் என்று அறிந்து செயல்பட வேண்டிய நிர்பந்தம் இருக்கின்றது

    இவையனைத்தும் காட்சி-வெளி சார்ந்த நுண்ணறிவின் தாக்கங்கள்.

    கற்றலின் போது பள்ளிக்கூடங்களில் நேரடியாக இந்தத் திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்புக்கள் அதிக அளவில் இருப்பதில்லை. பாடப் புத்தகங்களிலும் பாடத்திட்டங்களில் இந்த நுண்ணறிவுகளை வளர்ப்பதற்கான போற்றுவதற்கான வாய்ப்புக்கள் கொடுக்கப்படுவதில்லை. எனவே, வகுப்பறைகளில் இந்தத் திறன்களை மறைமுகமாக வளப்பதற்கு ஆசிரியர்களின் திறமையும் நுண்ணறிவும் அதிகமானதாகத் தேவைப்படுகின்றது. ஒவ்வொரு பாடத்திலும் அதனைச் சார்ந்த கருத்துக் பரிமாணங்களை அலசி ஆராய்வதற்கு இந்த நுண்ணறிவின் பல உள்ளீட்டுக்களைப் பயன்படுத்துதல் அவசியம். உதாரணமாக

    1. கருத்துக்களை ஓவியங்களாக வரைதல்
    2. நிழல் படங்கள்/ புகைப்படங்கள் தயாரித்தல்
    3. மேடை நாடகங்கள் மூலம் கருத்துப் பரிமாற்றம்
    4. விளையாட்டுகள்/ நாட்டியங்கள் மூலம் வெளிப்பாடுகள்
    5. கார்ட்டூன் வரைதல்
    6. ஓட்ட வரைபடங்கள்/ பை வரைபடங்கள்

    இதுபோன்ற பல உத்திகளைக் கையாண்டு கருத்துக்களைக்  கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொண்டதை வெளிப்படுத்தியும் கற்றலை  மேம்படுத்தலாம்.டரும்..

    (தொடரும் )

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 26

    க. பாலசுப்பிரமணியன்

    உள்ளத்தின் உள்ளே ஒளியாய்

    திருமூலர்-1-3

    உள்ளத்தில் ஒளியாய் அவன் உள்ளிருந்து நமக்கு வழிகாட்டும் போதும் நாம் ஏன் அவனை அறிந்துகொள்வதில்லை? அவன் காட்டும் பாதையில் ஏன் செல்வதில்லை? அதற்குக் காரணமே அவன் உள்ளிருந்தும் அவனை நாம் அறியாமல் வெளியே அவனைத் தேடும் மாயையால்தானே? அவனை உணர்வு பூர்வமாக, அனுபவ பூர்வமாக மட்டுமின்றி வேறெப்படி அறிந்து கொள்ளமுடியும்? இந்தக் கருத்தை விளக்கும் வண்ணம் திருவாசகத்தில் மாணிக்க வாசகர் கூறுகின்றார்:

    உண்டு ஒரு பொருள் என்று உணர்வார்க்கு எலாம்

    பெண்டிர் ஆண் அலி என்று அரி ஒண்கிலை

    தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய்

    கண்டும் கண்டிலேன் என் கண் மாயமே.

    இந்தப் பாட்டில் மாணிக்க வாசகர் சூசகமாக “உணர்வார்க்கு’ என்று கூறி அனுபவ நிலையின் முக்கியத்துவத்தை எடுத்து உரைக்கின்றார்

    இதே கருத்தை வலியுறுத்தும் வண்ணம் காரைக்காலம்மையார் “காதலால்- காண்பார்க்குச் சோதியாய் சிந்தையுள் தோன்றுமே ” என்று அன்போடு அவனை அணுகவேண்டிய நிலையையும் சோதியாய் அவனைச் சிந்தையில் அனுபவிக்க வேண்டியதன் காரணத்தையும் நம்முன் வைக்கின்றார்.

    இதே கருத்தை வலியுறுத்தும் வண்ணம் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்

    உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை

    உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை

    உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்

    உள்ளம் அவனை உருவறியாதே .

    ஆகவே அவனை அறிந்து கொள்ள, அவனை அணைத்துக்கொள்ள, அவனோடு நிரந்தரமான உறவு கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? அதற்கும் நமக்கு திருமூலரிடமிருந்து பதில் கிடைக்கின்றது

    ஒளித்துவைத்  தேன்உள்ளூர உணர்ந்து ஈசனை

    வெளிப்பட்டு நின்று அருள் செய்திடு மீண்டே

    களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை

    வெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சி யுமாமே

    அவனை உள்ளத்தால் உணர்ந்து அவனோடு அருள்சார்ந்த உறவை ஏற்படுத்தி அதை உறுதிசெய்துகொண்டால் அவன் நம் உள்ளத்தை விட்டு எங்கும் செல்ல மாட்டான்.

    உள்ளத்தின் உள்ளே அவனை நிறுத்தி அறிந்தோர்க்கு எப்படிப்பட்ட அனுபவம் கிடைக்கும்? இந்த அனுபவ  நிலையை விளக்கும் வகையில் அமைந்துள்ளது பட்டினத்தாரின் கீழ்கண்ட வரிகள்

    சிப்பியில் முத்தொளிகாண் சின்மயநோக் கில்லார்க்கு

    அப்பி லொளிபோ லமர்ந்த மெய்ப்பொருள்காண்

    என்னே அழகான விளக்கம் ! அவன் சிப்பிக்குள் அமர்ந்த முத்தாக உள்ளே நின்று ஒளி வீசுகின்றான்.

    இந்த அழகான ஒளிப்பிழம்பையும் அதனால் உண்டான அனுபவத்தையும் எப்படிப்பட்ட வார்த்தைகளால் நம்மால் வர்ணிக்க முடியும்? ஒரு முறை ஒரு சீடன் இதே கேள்வியை கபீர்தாஸரிடம் கேட்டபொழுது அவர் அவனுக்கு சிறிதளவு இனிப்பைக் கொடுத்து “இது எவ்வாறு இருக்கிறது” என்று கேட்க “அது இனிப்பாக இருக்கிறது என்று சொல்ல “இனிப்பு என்றால் என்ன” என்ற் கேள்வி எழ. அதை அனுபவத்தால் தான் உணரமுடியும் தவிர அதை வார்த்தைகளால் சொல்லமுடியாது என்ற உண்மையை உணர்ந்தான். அதே போல்தான் இறைவனை உணர்வால் தான் அறிந்துகொள்ள முடியும் என்ற கருத்து மேலோங்கி நிற்கின்றது/.

    தொடருவோம்

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 94

    க. பாலசுப்பிரமணியன்

    இயக்கம் (தசை) சார்ந்த நுண்ணறிவு (Bodily- Kinesthetic Intelligence)

    education

    “உங்க பையன் ஓரிடத்தில் அஞ்சு நிமிடம் உட்கார மாட்டேன் என்கிறான்”

    “அவனை ஓரிடத்தில் கட்டுப்படுத்த முடியாது”

    “அவனுக்கு எப்போதும் எதையாவது நோண்டிக் கொண்டே இருக்கணும்:ஒரு சாமானை உடைத்துப் போடுவது அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்”

    “அவனுக்கு படிப்பிலே கவனமே இல்லை, எப்பப்பாருங்க விளையாட்டு, அது அவனுக்கு சோறு போடுமா”

    “ஏண்டா குட்டி போட்ட பூனை மாதிரி இங்கும் அங்கும் ஓடிக்கொண்டு…. ஏதாவது ஓரிடத்தில்  உட்கார மாட்டாயா”

    –  என்றெல்லாம் ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளைப் பார்த்து விமர்சிப்பது கண்டு நீங்கள் ஆச்சரியப்பட்டிருக்கலாம்.

    இத்தகைய மாணவர்களில் பலரும் இந்த இயக்கம் சார்ந்த நுண்ணறிவில் (Bodily Kinesthetic intelligence) வல்லமையுள்ளவர்களாக இருக்க வாய்ப்புண்டு.  இவர்களை “Body Smart ” என்று அழைப்பார்கள்

    பொதுவாக இந்த நுண்ணறிவில் வல்லமையுள்ள மாணவர்களின் சிறப்பு அம்சங்கள்:

    1. இவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து செய்யும் செயல்களில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்
    2. அருகில் உள்ளவர்களைத் தொட்டுப் பேசுதல், அதிகமான உடல் அசைவுகளைக் காட்டுதல் இவர்களிடம் வெளிப்படையாகத் தெரியும்.
    3. மற்றவர்களிடம் பேசும் பொழுது மிக அருகில் நிற்கும் பழக்கம் உடையவர்கள்.
    4. ஏதாவது ஒரு பொருளையோ அல்லது செயலையோ செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்
    5. படிப்பதை விட எழுதுவதில் ஈடுபாடு அதிகம் இருக்க வாய்ப்புள்ளது.
    6. படிக்கும் பொழுது ஒரு இடத்தில அமர்ந்து படிக்காமல் நடந்துகொண்டே படிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள்.
    7. விளையாட்டு பரிசோதனை போன்றவற்றில் அதிக ஆர்வம் உள்ளவர்கள்.
    8. கூட்டங்களை ஒழுங்குபடுத்தல், சேவைகள் செய்தல், தன்னிச்சையாக உதவி செய்தல் போன்றவற்றில் முன்னிருப்பார்கள்
    9. தலைமைப் பொறுப்புக்கள் மற்றும் மேலாண்மை ஏற்பதில் தயங்க மாட்டார்கள்,
    10. இவர்கள் துடிப்புடனும் அதிக சக்தியுடனும் இருப்பது மட்டுமின்றி உடற்பயிற்சி, நீச்சல் போன்றவற்றில் அதிக ஆர்வம் உடையவர்கள்.

    விளையாட்டு வீரர்கள், பொறியியல் வல்லுநர்கள், தொழிற்சாலைகளில் வேலைபார்ப்பவர்கள், ஓட்டுனர்கள், விற்பனையாளர்கள், நடிகர்கள், நாட்டிய வல்லுநர்கள் போன்றவர்கள் இந்த வகையைச் சார்ந்தவர்களாக இருக்க வாய்ப்புண்டு.

    மாணவர்களை பொறுத்த வரையில் இந்த வகுப்பைச் சார்ந்த மாணவர்கலின் சில பொதுவான குறிப்பகள்:

    1. இவர்கள் வேகமாகவும் தாறுமாறாகவும் எழுதும் குணமுடையவர்கள்.
    2. இவர்களின் புத்தகங்கள் நோட்டுக்கள் மிகவும் கசக்கியும் கவனிப்பு இல்லாமலும் இருக்கும்
    3. புத்தகங்கள் நோட்டுக்களிலிருந்து அடிக்கடி காகிதங்களை கிழிக்கும் பழக்கம் இருக்கும்
    4. இவர்கள் தங்களுடைய புத்தகங்கள் நோட்டுக்களை அடிக்கடி புரட்டிப் பார்க்கும் பழக்கும் உள்ளவர்களாக இருப்பார்கள்
    5. வகுப்பறைகளிலிருந்து அடிக்கடி ஏதாவது ஒரு காரணத்திற்காக வெளியே செல்ல வாய்ப்புக்களை எதிர்பார்த்த வண்ணம் இருப்பார்கள்
    6. நாற்காலிகள் மேசைகள் ஆகியவற்றை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அடிக்கடி மாற்றும் பழக்கமுயுடையவர்களாக இருப்பார்கள்
    7. பள்ளிகளில் ஓடி விளையாடும் விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் காட்டுவர்.
    8. .அமர்ந்திருக்கும் நாற்காலிகளில் உட்கார்ந்தவண்ணம் ஆடுதல், அவைகளை நகர்த்துதல், மற்ற மேசைகளுடன் ஒட்டிப்போடுதல் போன்ற பல சில்மிஷங்களில் மனம் கொண்டவர்கள்.
    9. உடைந்த பொருள்களை சரி பார்த்தல், ஒட்டுதல் மற்றும் கைவேலைகள் சம்பந்தப்பட்டவற்றில் ஆர்வம் காட்டுவார்கள்
    10. இயங்கும் பொருள்களை வேகமாக ஓட்டுதல், இடர்களை சந்தித்தல், இடர் மேலாண்மை, தொழில் முனைவு ஆகியவற்றில் ஈடுபாடு காட்டுவார்கள்

    ஆகவே பள்ளிகளில் இந்த வகையைச் சார்ந்த மாணவர்களுக்கு இவர்களுடைய தேவை மற்றும் ஈடுபாடுகளுக்குத் தேவையான பாட முறைகள், பயிற்சிகள், பரிசோதனைகள், கேள்விகள் ஆகியவற்றை அமைத்தல் மிக்க அவசியம். இவர்களை ஆசிரியர்கள் பொதுவாக :ஒழுங்கற்றவர்கள்’ என்றும் “கட்டுப்பாடற்றவர்கள் ” என்றும் ஒதுக்கிவிட வாய்ப்புக்கள் அதிகம். உண்மையில் அவர்கள் அப்படிப்பட்டவர்களல்ல. அவர்களுடைய ஈடுபாடுகளையும் திறன்களையும் வல்லமைகளை சரியாக நாம் அறிந்து அதற்குத் தேவையான உள்ளீடுகளைக் கொடுக்காமலிருப்பதே காரணம்.

    அடுத்து நாம் காட்சிகள் மற்றும் வளி சார்ந்த நுண்ணறிவு பெற்ற மாணவர்களை பற்றி அறிந்திடுவோம்.

    (தொடரும்)

    Share
  • திருமந்திரத்தில்  சில சிந்தனைத் துளிகள் 25

    க. பாலசுப்பிரமணியன்

    திருமூலர்-1

    அந்தரத்திலும் அப்பாலும் அவனே

    ஒருமுறை ஒரு துறவி ஒரு கிராமத்தின் வழியாக இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு சிறுவன் கையில் ஒரு மெழுகுவத்தியை ஏற்றிக்கொண்டு ஒரு கோவிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். அந்தத் துறவி அந்தச் சிறுவனை நிறுத்தி வினவினார்: “சிறுவனே, இந்த மெழுகுவத்தியில் இருக்கும் ஒளி எங்கிருந்து வருகின்றது?

    உடனே அந்தச் சிறுவன் அவரைப் பார்த்து ஒரு புன்முறுவல் செய்துவிட்டு வாயினால் ஊதி அந்த மெழுகுவத்தியை அணைத்தான். பின்பு அந்தத் துறவியைப் பார்த்து “இந்த ஒளி எங்கே சென்றது?” என திருப்பிக்கேட்டான். அந்தத் துறவி பதிலளிக்க முடியாது திகைத்து நின்றார். உடனே அந்தச் சிறுவன் “இந்த ஒளி எங்கிருந்து வந்ததோ அந்த இடத்துக்கே அது சென்றுவிட்டது.” என பதிலளித்தான். அந்தத் துறவி உடனே அவன் கால்களில் விழுந்து “நீ எனக்கு குருவானாய். ஒரு மிகப் பெரிய தத்துவத்தை எவ்வளவு எளிதாக எனக்கு விளக்கிவிட்டாய்” என்றுரைத்தார்.

    இந்த அழகிய தத்துவத்தை விளக்கும் வண்ணம் திருமூலர் இறைவனின் ஒன்றுபட்ட  தன்மையை கீழ்கண்ட பாடலில் வெளிப்படுத்துகின்றார்

    தானே படைத்திடுந் தானே அளித்திடுந்

    தானே துடைத்திடுந் தானே மறைத்துடுந்

    தானே இவை செய்து தான்முத்தி தந்திடுந்

    தானே வியாபித் தலைவனு மாமே.

    அருள் வடிவாக நின்று எல்லாச் செயல்களுக்கும் பொறுப்பேற்று நம்மை ஆட்கொள்ளும் இறைவனின் அன்பினை வார்த்தைகளில் வடிக்கவும் முடியுமோ ?

    இந்தக் கருத்தின் உண்மையை விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது கம்பனின் பாடல்:

    உலகம் யாவையும் தாமுளவாக்கலும்,

    நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,

    அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!

    அன்னவர்க்கே சரண் நாங்களே”

    அந்த ஒருவனே பல வண்ணங்களில் பல வடிவங்களில் பலவிதமாகத் தோன்றும் பொழுது அவனை நாம் எப்படி வர்ணிக்க முடியும் ? அந்த பலவித வடிவங்களும் நமக்கு எப்படிப்பட்ட ஆனந்தத்தைக் கொடுக்கும்? இந்த அனுபவத்தை எடுத்துரைக்கும் வண்ணம் மாணிக்க வாசகர் பாடுகின்றார்:

    துண்டப் பிறையான் மறையான பெருந்துறையான்

    கொண்ட புரிநூலான் கோலா மா ஊர்தியான்

    கண்டம் கரியான் செம் மேனியான் வெள் நீற்றான்

    அண்டம் முதல் ஆயினான் அந்தம் இலா ஆனந்தம்

    பண்டைப் பரிசே பழ அடியார்க்கு ஈந்தருளும்

    அண்டம் வியப்பு உறுமா படும் காண் அம்மானாய்

    வள்ளலாரோ இந்த ஆனந்தத்தை வலியுறுத்தும் வண்ணம் பாடுகின்றார்

    அந்தரமாய் அப்பாலாய் அதற்கப் பாலாய்

    அப்பாலுக் கப்பாலாய் அமர்ந்த தேவே.”

    இத்தனை வடிவங்களிலும் இடங்களிலும் இருப்பவன் நம் கண்ணுக்குப் புலப்படாமல் “மரத்துள் மறைந்த மாமத யானையாக” இருக்கையில் அவனை வெறும் கற்சிலைகளிழும்  ஐம்பொன் சிலைகளில் மட்டும் காணமுடியுமா? இந்த ஐயத்தை விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது பட்டினத்தாரின் கீழ்கண்ட பாடல்:

    சொல்லிலுஞ் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும்

    அல்லினு மாசற்ற வாகாயந் தன்னிலு மாய்ந்துவிட்டோர்

    இல்லுலு மென்ப ரிடத்துலு மீசை னிருக்குமிடங்

    கல்லினுஞ் செம்பிலு மோவிருப் பானெங்கள் கண்ணுதலே.

    கல்லிலும் செம்பிலும் காணக்கிடைக்காத இறைவன் நம் உள்ளில் இருப்பதை எப்படி உணர முடியும்? இதற்க்கு ஒரே வழி நம்மிடம் உறைந்து கிடைக்கும் ஆணவ மலத்தை அடியோடு நீக்குவதே. அந்த ஆணவமலம் அகலும் பொழுது எல்லாம் அவன் செயல் என்ற உணர்வு மட்டுமின்றி “நான்”, “தான்” என்ற நினைப்பு நீங்கி உள்ளில் உலா வரும் உத்தமனை உண்மையின் உருவை தரிசிக்கவும் அனுபவிக்கவும் முடியும் இதை விளக்கும் வண்ணம் திருமூலர் கூறுகின்றார்

    நானன்றுந் தானென்றும் நாடினேன் நாடலும்

    நானென்றுந் தானென் றிரண்டிலை யென்பது

    நானென்ற ஞான முதல்வனே நல்கினான்

    நானென்று நானும் நினைப்பொழிந் தேனே.

    இத்தனை சக்திவாய்ந்த அருளின் வடிவான ஒளிப்பிழம்பை உள்ளும் புறமும் பறந்து விரிந்து நின்று ஆளுகின்ற அமரனை நாம் எப்படிப் போற்றுவது? வார்தைகளாலா, பூசைகளாலா அல்லது நமது செயல்களாலா? அது எப்படி இருந்தால் என்ன? எல்லாமே அவன் கொடுத்தது. எனவே அவனால் ஏற்றுக்கொள்ளக்கூடியது .

    அப்பர் பெருமான் கூறியபடி “வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும்  தாழ்த்த சென்னியும் தந்த தலைவன்” அதில் எதன் மூலமாக அவனைப் போற்றினாலும் வாங்கிக்கொள்ளாமல் மறுக்கவாபோகிறான்?

    தொடருவோம்

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 93

    க. பாலசுப்பிரமணியன்

    இசை நுண்ணறிவு (Musical Intelligence)

    education

    உலகின் ஆரம்பத்திலிருந்தே ஒலியும். அதன் கருவிலிருந்து பிறந்த இசையும் நம்மால் போற்றப்பட்டுவருகின்றது. இயற்கையின் பல இசைப் பரிமாணங்களை நாம் அனுபவித்தும் ரசித்தும் வந்திருக்கின்றோம். இசையின் பல வடிவங்கள், பல  வெளிப்பாடுகள் நம்முடைய உயிரோடும் வாழ்வோடும் உணர்வுகளோடும் ஒன்றியிருப்பதை நாம் அறிந்தும் அதனை உபயோகித்தும் வந்திருக்கின்றோம். இசைக்கு இணங்காத மானிடர்களை மிருகங்களுக்கு இணையாக பல கலாச்சாரங்களும் பல இயக்கியங்களும் ஒப்பிட்டு வந்திருக்கின்றன.

    ஒரு குழந்தையின் வளர்ச்சியில் பிறந்தது முதல் தாலாட்டு வழியாகவும் சிறிய பாடல்கள் வழியாகவும் இசை அவர்களது வளர்ச்சிக்கும் உணர்வுகளின் முதிர்ச்சிக்கும் காரணமாக இருந்து வந்திருக்கின்றது. மூளை நரம்பியல் வல்லுநர்கள் மூளையின் வலது பாகம் இசையை அறிந்து கொள்வதற்கும், இசை சார் உணர்வுகளையும் அனுபவங்களையும் ஏற்படுத்துவதற்கு காரணமாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். பல காலங்களாக இசையை கற்றுக்கொள்ளுவதற்கும் அதில் வல்லமை பெற்றுக்கொள்ளுவதற்கும் பாரமபரிய முறைகள் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. ஆகவே இசையை பள்ளிகளின் மூலமாக அதிகமாக் கற்றுக்கொண்டு சிறப்படைந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்துள்ளது. ஆனால் பாரம்பரிய முறைகளில் ஒரு குருவிடமிருந்து அவருடன் கூடவே இருந்து பயிற்சி மூலமாகக் கற்றுக்கொண்டு சிறப்படைந்தவர்களே அதிகமாக உள்ளனர்.

    இசையில் ஈடுபாடு வம்ச வழியாகவும் தன்னிச்சையாலும் மூளையின் வலப்பக்கத்தில் ஏற்படும் தூண்டுதல்களாலும் நுண்ணறிவாக வளர்ந்து வெளிப்படுகின்றது. `தாயின்  கருவிலே இருக்கும் சிசு தன் தாயின் இசை ஒலிகளைக்கேட்டு வெளிப்படுத்தும் அசைவுகள் அந்தக் குழந்தை பிறந்த பின்னே தாய் அதே இசையை இசைக்கும் போது முன்னிருந்ததுபோலவே வெளிப்படுவதாக ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.

    மூளை அறிவியல் ஆராய்ச்சியில் வல்லுனராக விளங்கும் திரு வி. எஸ். ராமச்சந்திரா என்ற அறிஞர் வளரும் பருவத்தில் இசையின் முக்கியத்துவத்தை விளக்கி குழந்தைப் பருவத்தில் கற்றலில் இசையின் தேவையையும் முக்கியத்துவத்தையும் விளக்குகின்றார். அவருடைய கருத்தின் படி இசை சிந்தனையின் முதிர்ச்சிக்கும், கற்பனையின் வளர்ச்சிக்கும், படைப்பாற்றல்களை வளர்ப்பதற்கும் இன்றியமையாததாகும்.. இசையைக் கற்றுக்கொள்ளுபவரின் மூளையின் இணைப்புக்கள் அபரிமிதமாக இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. ஆகவே வளரும் பருவத்தில் பள்ளிகளில் இசையை ஒரு முக்கிய பாடமாக மட்டுமின்றி கட்டாய பாடமாக ஆக்கவேண்டிய அவசியம் உள்ளது.

    இசை நுண்ணறிவின் வெளிப்பாடுகள் எப்படி வெளிப்படுகின்றன?

    1. ஒலிகளின் அசைவுகளை உணர்வும் திறன்
    2. ராகங்கள், தாளங்களை உணர்வும் திறன்
    3. இயற்கையில் இசையின் தாளங்களை அறிதல்
    4. மனமுவந்து இசையமைக்கும் திறன்
    5. பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகளில் ஒருங்கிணைப்பை உணருதல், அறிதல்

    இதுபோன்று கற்றலிலும் கற்றல் முறைகளிலும் இசையின் அடிப்படை நுணுக்கங்களை அறிந்து போற்றி அதன் அமைப்புக்களை உபயோகப்படுத்துதல் இசையின் நுண்ணறிவின் வெளிப்பாடுகளாகக் கருதப்படுகிறது.

    இந்த இசை நுண்ணறிவின் சிறப்பினால் உலகில் கௌரவிக்கப்பட்டவர்கள் பலருண்டு. உதாரணமாக திருமதி எம். எஸ். சுப்பலக்ஷ்மி, காருக்குறிச்சி அருணாசலம், ஏ..ஆர். ரஹ்மான், பீத்தோவன், மொசார்ட் , இசைஞானி இளையராஜா போன்ற எண்ணற்றவர்கள் இந்த இசை நுண்ணறிவுக்குச் சான்றாக உள்ளனர். இசையில் பட்டப்படிப்பு பெறுவதற்கும் இசை நுண்ணறிவுக்கும் அதிகமான சார்புகள் இருப்பதாக கருதப்படுவதில்லை.

    இசை வல்லுனர்களின் மூளை செயல்பாடுகளைப் பற்றி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் செய்யப்பட ஒரு ஆராய்ச்சியில், இசைக்கும் பொழுது இந்த வல்லுணர்களின் மூளையின் எந்தப்பக்கம் அதிகமாகச் செயல்படுகின்றது என்பதற்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அறிவியல் விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பின்படி அவர்களது மூளையின் வலது பக்கம் எண்பது விழுக்காடுகளும் இடது பக்கம் இருபது விழுக்காடுகளும் செயல்படுமென கணிக்கப்பட்டது.  ஆனால் இருநூறுக்கும் மேற்பட்ட வல்லுநர்கள் இசைக்கும் பொழுது அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் எதிர்மறையான முடிவுகளைக் காட்டின. அதன்படி அவர்களது இடது பக்க மூளை கிட்டத்தட்ட எண்பது விழுக்காடுகளும் வலது பக்க மூளை இருபது விழுக்காடுகளும் செயல்படுவதாக அறியப்பட்டது, இதன் காரணத்தை அலசி ஆராய்ந்தபொழுது இசை கணிதத்தின் அடிப்படைகளில் அமைந்துள்ளது அறியப்பட்டது, தாளங்கள் ராகங்கள் ஆரோகண அவரோகணங்கள் எல்லாம் ஒரு கணக்கின்படி அமைந்துள்ளதையும், ஒருவர் பாடும்பொழுது இந்த தர்க்க ரீதியான கணிப்புக்களைப் பின்பற்றும்பொழுது மூளையின் இடது பக்கம் அதிகமாக வேலை செய்வதும் அறியப்பட்டது. ஆனால் இந்த இசையை ரசிக்கும் ரசிகர்களின் வலது பக்க மூளை அதிகமாக செயல்படுவது அவர்களின் ரசனைத் திறனுக்குச் சான்றாக இருந்தது. இந்த ரசனைத் திறன் வலது மூளையின் செயல்பாடுகளில் ஒன்றாகும். இதிலிருந்து கல்வியாளர்களுக் கிடைக்கும் ஒரு செய்தி:: இசையில் வல்லமையும் நுண்ணறிவும் பெற்றுள்ள ஒருவர் கணிதத்தில் ஏன் சிறப்பாக இருக்கக்கூடாது என்பதாகும்.

    இதைத் தொடர்ந்து மேற்கொண்ட பல ஆரய்ச்சிகள் இசையின் மேலாண்மையையும் எவ்வாறு ஒரு மனிதனின் மற்ற பல திறன்களை வளர்ப்பதற்கு அது உறுதுணையாக இருக்கின்றது என்பதையும் நிரூபிக்கின்றன. எனவே எல்லாக் குழந்தைகளுக்கும் ஏதாவது ஒரு இசைத்திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்தினால் அது நல்ல பயன் தரும். அது மட்டுமல்ல,, இசை நுண்ணறிவு ஒரு தனி மனிதனின் உணர்வு நிலைகளை மேம்படுத்தி வாழ்க்கையைச் செம்மையாக்கத் தேவையான “உணவுசார் நுண்ணறிவை’ (Emotional Intelligence) வளப்படுத்த முக்கிய காரணமாக உள்ளது. அது மட்டுமல்ல கருணை, இரக்கம், மனித நேயம் ஆகிய குணங்களை வலுப்படுத்தி வாழ்க்கையின் சவால்களை சந்திக்காத தயாராக்குவது மட்டுமின்றி, அவர்களின் சமூக உணர்வுகளை (Social consciousness) வளப்படுத்தவும் உதவுகின்றது.

    இதை கருத்தில் கொண்டுதான் ஹோவர்ட் கார்ட்னர் என்ற “பல்வகை நுண்ணறிவுகள்” என்ற கருத்தின் தந்தையாகக் கருதப்படுபவர் கூறினார்: “நீங்கள் இசையில் சிறந்தவராக இருந்தால் மற்ற வகையான அறிவுகளில் நீங்கள் எவ்வளவு சிறந்தவர் என்பதை என்னால் ஒரு விழுக்காடு தவறில்லாமல் கூறமுடியும்” (If I know you’re very good in music, I can predict with just about zero accuracy whether you’re going to be good or bad in other things)

    இசையின் வல்லமையை வெளிப்படுத்த பிளாட்டோவின் சொற்களை விட வேறு அதிகம் தேவையில்லை. “இசை ஒரு தார்மீகச் சட்டம். அது  அது உலகிற்கு ஆன்மாவையும், மனதிற்கு இறக்கைகளையும் கற்பனைக்கு வேகத்தையும், வாழ்க்கைக்கும் மற்ற எல்லாவற்றிற்கும் அழகையும்  மகிழ்வையும் அள்ளித்தருகின்றது.”  ( “Music is a moral law. It gives soul to the universe, wings to the mind, flight to the imagination, and charm and gaiety to life and to everything.”  Plato)

    (தொடரும்

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 24

    இரண்டறக் கலந்த நிலை

    தன்னுள் இறைவனையும் இறைவனுள் தன்னையும் காண்பது அறிவின் மிக உயர்ந்த நிலை. ஆயின் இந்த இரண்டையும் ஒன்றாக அறிகின்ற நிலை எப்போது வரும்? நம்மைச் சுற்றி இருக்கின்ற மாயையை விலக்கியபின் தானே இந்த நிலைக்குச் செல்ல தானமாகவோ முடியும்? இந்த நுண்ணிய அறிவு நினைத்தவுடன் கிடைத்து விடுமா? இதை எங்காவது சென்ற வாங்கவோ அல்லது தானமாகவோ பெற முடியுமா? அல்லது இந்த அறிவு நமக்கு கிடைத்தபின் நாம் எந்த நிலையை அடைகின்றோம்? அதற்குப் பிறகு நாம் எதைத் தேடி அலைகின்றோம்? இப்படி பல கேள்விகள் நமது மனத்திலே அடிக்கடி தோன்ற வாய்ப்புண்டு. இவைகளுக்கு பதில் தேடித்தேடி நாம் அலுத்திருக்கின்றோம்.. இந்த நிலையைப் பற்றி திருமூலர் என்ன சொல்லுகின்றார்?

    என்னை யறிந்திலேன் இத்தனை காலமும்

    என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்

    என்னை அறிந்திட்டு இருத்தலுங் கைவிடாது

    என்னையிட் டென்னை உசாவுகின் றானே

    தன்னுள் தன்னைத் தேடி அதன் மூலமாக எங்கும் உள்ள இறைவனைக் கண்டு ஆனந்திக்கின்ற உயிருக்கு பேச்சு எப்படி எழும்? அது வெறும் பேரானந்த நிலையன்றோ?

    இந்த ஆனந்தத்தை தரும் அறிவு நிலைக்கு நம்மால் எப்படிச் செல்ல முடியும்? இந்தப் பயணத்தை தொடங்கி வைப்பவனும் இறைவனே. அதை நடத்துபவனையும் இறைவனே. அந்த அனுபவ நிலையில் நம்மை நிறுத்தி நம்மை ஆட்கொள்ளுபவனும் அவனே, அவனுடைய இந்த நாடகத்தை நாம் ரசிக்க வேண்டாமா? இந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடுகின்றார் :

    வான நாடாரும் அறி ஓணாத நீ

    மறையில் ஈறும் முன் தொடர் ஓணாத நீ

    ஏனை நாடரும் தேறி ஓணாத நீ

    என்னை இனிதாய் ஆண்டுகொண்டவா

    ஊனை நாடகம் ஆடுவித்தவா

    உருகி நான் உனைப் பருக வைத்தவா

    ஞான  நாடகம் ஆடுவித்தவா

    நைய வையகத்துடையா விச்சையே.

    சிந்தையில் இறைவனை நிறுத்தி அறிவால் மட்டுமே உணரக்குடிய நிலையில் நம்மையும் அவனையும் இரண்டற நிறுத்திப் பார்க்கின்ற நிலை மிக அரிதே.

    உள்ளத்தின் உள்ளே அமர்ந்துவிட்ட இறைவனின் அனுபவம் நமக்கு கிடைக்கும்பொழுது புறத்திலே நாம் இறைவனின் எந்த வடிவைத்த தேட முடியும்? இறைவனின் மற்ற எந்த உருவம் தான் நமக்கு இனிக்கும்?

    பட்டினத்தாரோ உள்ளத்தின் உள்ளே உனைக் கண்டபின் வேறெங்கும் உன்னைக் காண  மனமில்லை என்ற கருத்தை அழகாக முன் வைக்கின்றார்:

    உளியிட்ட கல்லையு மொப்பிட்ட சாந்தையு மூற்றையறப்

    புளியிட்ட செம்பையும் போற்றுகி லெனுயர் பொன்னவனே

    ஒளியிட்ட தாளிரண் டுள்ளே யிருத்துவ துண்மையென்று

    வெளியிட் டடைத்துவைத் தேனினி மேலொன்றும் வேண்டிலனே.

    ஆகவே இறைவனை இலக்கை நோக்கி நாம் செல்லும் பயணத்திற்கு முதல் படியாகின்றது. கண்கள் கொண்டு பார்ப்பதை விட்டு அகக்கண்கள் கொண்டு பார்த்தல் அவசியமாகின்றது. அதனால்தான் திருமூலர் எளிதில் புரியும் வகையில் நமக்கு உணர்த்துகின்றார்

    முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்

    அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்

    இவ்வாறு அகக்கண்கள் கொண்டும் பார்க்கும் பொழுது நமக்கு எவ்வளவு அறியாமை இருக்கின்றது என்று எளிதில் புலப்படும் அது மட்டுமல்ல, எதை நாம் அறிவு என்று நினைத்துக்கொண்டும் நம்பிக்கொண்டும் இருக்கின்றோமோ அதுவே நமது அறியாமையின் ஆணிவேராகவும் சின்னமாகவும் ஆகிவிடுகின்றது. ஆனால் இந்த அறியாமையை அறிவதே அறிவின் இலக்கை நோக்கி நாம் செல்லும் பயணத்திற்கு முதல் படியாகின்றது. திருமூலரின் கீழ்கண்ட பாடல் இந்தக் கருத்தை வலியுறுத்தும் வண்ணம் அமைந்துள்ளது மட்டுமின்றி, திருமூலரின் ஆழ்ந்த சிந்தனைக்கு ஒரு முன்னுறையாக அமைகின்றது.

    அறிவறி  வென்றெங் கரற்றும் உலகம்

    அறிவறி யாமை யாரும் அறியார்

    அறிவறி யாமை கடந்தறி வானால்

    அறிவறி யாமை யழகிய வாறே.

    (தொடரும்)

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 92

    க. பாலசுப்பிரமணியன்

     தர்க்கரீதியான நுண்ணறிவு (LOGICAL INTELLIGENCE)

    education

    மொழிசார்ந்த நுண்ணறிவு வாழ்க்கையின் வெற்றிக்கு எவ்வளவு இன்றியமையாததாக இருக்கின்றதோ அதுபோல தர்க்கரீதியான நுண்ணறிவும் வாழ்க்கையின் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது. மொழிசார் நுண்ணறிவு எவ்வாறு வலது மூளையின் ஆக்கத்திறன்களின் வெளிப்பாடாக அமைந்துள்ளதோ அதுபோல் தர்க்கரீதியான நுண்ணறிவு இடது மூளையின் ஆக்கத்திறன்களின் வெளிப்பாடாகக் கருதப்படுகின்றது. இந்த நுண்ணறிவு ஒரு பொருள், ஒரு கருத்து அல்லது ஒரு செயலின் காரண காரியங்களை அறிந்துகொள்வதற்கும் அவைகளின் இடையே உள்ள தொடர்புகள் விளைவுகள், நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களை அறிந்துகொள்வதற்கும் அவற்றை நோக்கித் தேவையான செயற்பாடுகளுக்கான வழிமுறைகளை வகுப்பதற்கும் மிகவும் தேவையானது.

    தர்க்கரீதியான நுண்ணறிவே நாம் ஒரு செயலை ஏன் செய்கின்றோம்  எவ்வாறு  செய்ய வேண்டும் என்பதற்கான கேள்வி- பதில்களையும் அதனால் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தான் வாழ்கின்ற சூழ்நிலைகளுக்கும் ஏற்படும் பலவித பாதிப்புக்களைத் தெரிந்து அறிந்து செயல்பட உதவுகின்றது. ஆனால் இந்த நுண்ணறிவு நமக்கு கிடைப்பதற்கு நமது மூளை என்னென செயல்களைச் செய்கின்றது, எவ்வாறு மூளையின் பல பாகங்கள் ஒருங்கிணைந்து இடம் பொருள் காட்சி உறவு நிலைகள் போன்ற பல பரிமாணங்களை ஆராய்ந்து நமக்கு கண்ணிமைக்கும் நேரத்தைவிட குறைந்த நேரத்தில் அறிவிக்கின்றது என்று பார்ப்போமானால் நாம் வியப்பின் உச்ச நிலையை அடைந்து விடுவோம்.`

    இந்த நுண்ணறிவின் வல்லமை பெற்றவர்கள் கணிதம் அறிவியல், தொழில்நுட்பம், கணினி, கைத்திறன்கள், ஆராய்ச்சி, சட்டம், வாதங்கள், பட்டையக் கணக், தொழில்துறை உற்பத்தி போன்ற பல துறைகளில் விருப்பமுள்ளவர்களாகவும் மேன்மைபெற்றவர்களாகவும் இருப்பார்கள். எந்த ஒரு கருத்தையும் கோட்பாடுகளையும் செயல்முறைகளையும் மேல்நோக்காக எடுத்துக் கொள்ளாமலும், கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாதவர்களாகவும், அதைத் தர்க்கரீதியாக அலசி ஆராய்ந்து அது ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்று அறிந்து செய்யப்படக்கூடியவர்கள். இவர்களை பொதுவாக Number Smart (எண் நுண்ணறிவு) உள்ளவர்கள் என்று கூறுவார்கள்.

    இந்த நுண்ணறிவின் வல்லமை பெற்றவர்களின் சில திறன்களாவன:

    1. எண்களோடு விளையாடுதல்
    2. புதிர்களை விடுவித்தல்
    3. ஆராய்ச்சிப்பாதைகளுக்கு வழிவகுத்தல்
    4. எண்-கருத்துக்களுக்கான குறியீட்டு முறைகளை வகுத்தல்
    5. பாய்வு விளக்கப்படங்கள் தயாரித்தல்
    6. கணினி நிரல்கள் தயாரித்தல்
    7. வரவு-செலவு திட்டங்கள் வகுத்தல், கணித்தல், கண்காணித்தல்
    8. சட்ட விளக்கங்கள் அளித்தல்
    9. கேள்விக்கணைகளைத் தொடுத்தல்
    10. அளவீடு மற்றும் மதிப்பேடு செய்தல்

    இதைப்போன்ற பல திறன்களில் வல்லமை பெற்றவர்கள் இந்த நுண்ணறிவுக்குச் சான்றாக விளங்குகின்றனர். இந்த வகையைச் சார்ந்த சில நபர்கள் :

    1. 1. கணித மேதை ராமானுஜம்
    2. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
    3. சர் ஐசக் நியூட்டன்
    4. சார்லஸ் டாரவின்
    5. பொறியியல் வல்லுநர் எம். விஸ்வேஸ்வரய்யா

    இந்த வல்லமையை நாம் குழந்தைகளுக்குச் சிறிய வயது முதற்கொண்டே வளர்க்க வேண்டும். இளம் வயதில் இந்த தர்க்கரீதியான சிந்தனையை நாம் வளர்க்கத் தவறி விட்டால் அவர்களுக்கு வாழ்க்கையில் பல சந்தர்பங்களில் சவால்களைச் சந்திக்க நேரிடும். கோர்வையான சிந்தனை, தொடர் சிந்துக்கும் திறன், காரண-காரிய சிந்தனைத் திறன்கள், குறிக்கோளுடனும் வழிநெறிகளுடனும் சிந்தித்தல் ஆகிய பல திறன்கள் அவர்களுக்குப் பிற காலத்தில் பயன்படுத்த வேண்டிய நேரங்களில் தடுமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

    பள்ளிகளில் இந்தத் திறனை வளர்க்க சில சிறிய எளிதான செயல்களை பின்பற்றலாம் :

    1. எண்ணறிவுத் திறன்கள் (Skills of Nunmeracy)
    2. வரிசைமுறைத் திறன்கள் (Skills of Sequencing)
    3. தொடர்புச் சிந்தனைத் திறன்கள் (Skills of correlation
    4. ஒப்பீட்டுத் திறன்கள் (Skills of comparison_
    5. அமைப்புத் திறன்கள் ( Skills of Organization)
    6. ஆய்வுத் திறன்கள் (Skills of reseaching)
    7. பகுப்பீட்டுத் திறன்கள் (Skills of differentiation)
    8. இணைச்சிந்தனைத் திறன்கள் (Skills of Parallel thinking_
    9. பகுப்பாய்வுச் சிந்தைந் திறன்கள் (Skills of Rational Thinking)
    10. பக்கவாட்டுச் சிந்தனைத் திறன்கள் (Skills of Lateral Thinking)
    11. வகையீட்டுத் திறன்கள் (Skills of differentiation)
    12. வடிவியல் திறன்கள் (Skills of geometry)
    13. வரைவுத் திறன்கள் (Skills of graphics)

    இதைப்போன்ற பலவகையான திறன்கள் தர்க்கரீதியான நுண்ணறிவை வளர்க்கவும் மேம்படுத்தவும் உதவும். இந்தத் திறன்களை பள்ளிகளில் மட்டுமல்ல வீடுகளிலும் பெற்றோர்கள் தங்கள் குழந்ந்தைகளோடு உறவாடும் நேரத்திலும் விளையாட்டாகக் கூட வளர்க்க முடியும். இந்த நுண்ணறிவு மற்ற எல்லாவிதமான நுண்ணறிவுகளை மேம்படுத்தவும் மற்றும் ஒரு தனி மனிதனின் செயலாற்றல் முறைகளை வளப்படுத்தவும் உதவும்.

    (தொடரும்)

    Share
  •   திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் -23

    க. பாலசுப்பிரமணியன்

    அன்பே வழி 

    திருமூலர்-1

    “எவ்வாறு தன் நாபியின் உள்ளிருந்து வருகின்ற மணத்தை அறியாது ஒரு மான் இங்கும் அங்கும் அந்த மணத்தைத் தேடி அலைகின்றதோ அது போல் நான் அலைகின்றேன்” என்று கபீர்தாசர் தன்னுடைய கவிதையிலே அங்கலாய்க்கின்றார். பல நேரங்களில் அன்பின் வடிவாக அந்த இறைவன் நம் உள்ளிருந்து அருள்பாலிக்கின்றான் என்று நாம் அறிந்தாலும், அகத்திற்கும்  புறத்திற்கும் உள்ள இடைவெளி காரணமாக அந்த அன்பின் வடிவானவனை அறியாமல் தவிக்கின்றோம்.

    உள்ளதொருவனை உள்ளுறு சோதியை

    உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை

    உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்

    உள்ளம் அவனை உருவறி யாதே

    என்று திருமூலரும் அந்த நிலையை நம்முன் வைக்கின்றார்.

    இதை அறியாமை என்று சொல்வதா? அல்லது அகத்தில் படிந்த மாசினால் ஏற்பட்ட இருள் என்று சொல்வதா?

    வாழ்க்கையின் மாய வலைகளில் சிக்கி இந்த அன்பின் வடிவை நாம் உணராமல் இருக்கும் நிலையில் என்னென்ன துன்பத்தைச் சந்திக்க வேண்டியிருக்கின்றது? வழி தடுமாறிச் செல்கின்ற ஒரு வழிப்போக்கனைப் போல் ஆகிவிடுகின்றோமே! இதிலிருந்து எப்படி மீள்வது? மாணிக்க வாசகருக்கும் ஏற்பட்ட  நிலையன்றோ இது?

    புலன்கள் திகைப்பிக்க யானும் திகைத்து

    இங்கு ஒரு பொய்ந் நெறிக்கே

    விலங்குகின்றேனை விடுதி கண்டாய்

    விண்ணும் மண்ணும் எல்லாம்

    கலங்க முந்நீர் நஞ்சு அமுது செய்தாய்

    கருணாகரனே

    துலங்குகின்றேன் அடியேன் உடையாய்

    என் தொழுகுலமே !

    என்று அவர் வாடும் பொழுது அவர் உள்ளிருக்கும் வேதனையும் இறை பால் இருக்கும் மாசற்ற அன்பும் வெளிப்படுகின்றது.

    இந்த  உயந்த அன்பின் பிணைப்பினை அறியாத நெஞ்சம் எங்கெங்கெல்லாமோ அலையும் பொழுது அதை எப்படி கட்டுப்படடுத்துவது? அதற்கு எப்படி அறிவுரை வழங்குவது? இந்த அவல நிலையிலிருந்து மாற இந்த நெஞ்சம் என்ன செய்ய வேண்டும்?

    பட்டினத்தார் தன் நெஞ்சுக்கு அளிக்கும் அறிவுரை மிகவும் உண்மையானது; சிறப்பானது .. இதை விடச் சிறந்த ஒரு அறிவுரை நெஞ்சுக்குத்தான் கிடைக்குமோ?

    ஒழியாப் பிறவி டுத்தேங்கி தேங்கி யழுகின்றநெஞ்சே

    அழியாப் பதவிக் கவுடதங் கேட்டி  யநாதியனை

    மழுமான் கரத்தனை மால்விடை யானை மனத்திலுன்னி

    விழியாற் புனல்சிந்தி விம்மி யழுநன்மை வேண்டுமென்றே.

    இந்த அன்பின் வடிவத்தோடு இணைகின்ற முயற்சியில் எங்காவது தடங்கல் ஏற்பட்டு விடுமோ என்ற ஐயத்தால்தான் திருவாசகத்தில் மாணிக்க வாசகரோ

    இம்மையே உன்னைச் சிக்கெனைப் பிடித்தேன்”

    என்று சிவபெருமானிடம் தன்னுடைய அளவற்ற அன்பை வெளிப்படுத்துகின்றார்.

    இதே கருத்தை வெளிப்படுத்தும் திருமூலரோ எவ்வாறும் அன்பெனும் ஒளியை, சோதியை உள்ளத்தில் ஏற்றி அதிலே நாம் உருக வேண்டும். எவ்வாறு அந்த ஈடில்லா அன்பே இறைவனின் பாதங்களில் நம்மைச் சேர்க்கும் என்பதை எடுத்துரைக்கின்றார்.

    என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்

    பொன்போற் கனலிற் பொரிய வருப்பினும்

    அன்போ டுருகி அகங்குழைவார்க்கன்றி

    என்போல் மணியினை யெய்தஒண் ணாதே .

    (தொடரும்)

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் – 91

    க. பாலசுப்பிரமணியன்

    மொழிசார் நுண்ணறிவு (Linguistic Intelligence)

    education-1-1-1-1

    நுண்ணறிவுகளின் தன்மைகளையும் இயல்புகளையும் பல ஆண்டுகள் ஆராய்ச்சிசெய்து அதன் விளக்கங்களை அளித்துள்ள அறிவியல் மேதை ஹோவர்ட் கார்ட்னர் மனிதர்களிடம் பரவலாக உள்ள நுண்ணறிவு “மொழிசார் நுண்ணறிவு” (Linguistic Intelligence) என்று கண்டுபிடித்துள்ளார். இதன் ஆங்கில சொல்லாடலுக்கு உகந்த தமிழாக்கம் “மொழியியல் நுண்ணறிவு” என்று எடுத்துக்கொள்ளப்பட்டால் அது சில தவறான கருத்துக்களுக்கு இடம் கொடுக்க வகையுண்டு. ஏனெனில், இந்த வல்லமைக்குத் தேவையானது மொழியறிவும் மொழிசார்ந்த அறிவின் மேலாண்மையே தவிர, ஒருவருக்கு “மொழியியலில்” திறன் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. எனவே இதை நாம் “மொழி சார்” நுண்ணறிவாகவே கருதுவோம்.

    இந்த நுண்ணறிவு ஒரு சாதாரண பாமரனுக்குக் கூட இருக்கக் கூடிய வாய்ப்புக்கள் உண்டு. வார்த்தைகளின் கையாடல், அதனைத் திறம்பட உபயோகித்தல், வார்த்தைகளின் மேலாண்மை, வார்த்தைகளின்  பல்வேறு பொருள்களுக்குத் தகுந்தவாறும், இடம் பொருள் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறும் அவைகளை உபயோகித்தல், உருவாக்குதல் போன்ற பல திறன்கள் வெளிப்படுகின்றன.

    இந்த நுண்ணறிவைத் திறமையாக உபயோகிப்பவர்களை “Word Smart” மனிதர்கள் என்று அழைக்கின்றனர். பொதுவாக இந்தத் திறனில் வல்லமை பெற்றவர்கள் கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள், அரசியல்வாதிகள், மனநல மருத்துவர்கள் போன்ற பல துறையைச் சார்ந்தவர்களாக இருக்க அதிகம் வாய்ப்பு உண்டு.

    கவிஞர்கள் வார்த்தைகளைக் கையாளும் பொழுதும் அதன் கருத்துக்களைக் கையாளும் பொழுதும் தங்களுடைய மொழிசார்ந்த நுண்ணறிவின் திறனால் அவைகளுக்கு வலு சேர்ப்பதுமட்டுமின்றி அதற்கு ஒரு புதிய உயிரையும் அளிக்கின்றனர். உதாரணமாக, அனுமன் வாயிலாகக் கம்பன் “கண்டேன் சீதையை” என்று சொல்லுப்பொழுது அந்த சொல்லாடலில் இருக்கும் மேன்மையை நம்மால் காண முடிகின்றது.

    வள்ளுவர்  திருக்குறளில் எழுதிய குறள் “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை” என்று சொன்னது வார்த்தை மற்றும் மொழியின் வளமையை அவர் எவ்வாறு பயன்படுத்தியுள்ளார் என்பதற்கு முன்னுதாரணமாக அமைகின்றது.

    கவிஞர் கண்ணதாசனின் எத்தனையோ பாடல்களில் சொல்லாட்சியின் திறன் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. இதே போல் ஆயிரக்கணக்கான கவிதைகளில் மொழிசார்ந்த நுண்ணறிவுக்கான எடுத்துக்காட்டுகள் நமக்கு கிடைக்கின்றன.

    இது தமிழ் மொழி மட்டுமின்றி பிற மொழிகளிலும் பல வடிவங்களில் நமக்குத் தென்படுகின்றது. இந்தக் கவிஞர்களில் பலரும் இதற்காகக் கல்லூரிகளிலோ அல்லது பயிற்சி நிலையங்களிலோ பயின்றவரல்லர். எனவே மொழிசார் நுண்ணறிவுக்கும்  ஒரு தனி மனிதனின் கற்றலுக்கும் நேரிடையான நெருக்கமான தொடர்பு ஏதும் இல்லை. ஆனால் மொழி கற்றலும், மொழி வல்லமையும், மொழித்திறன்களும் ஒருவரின் மொழிசார் நுண்ணறிவை மேன்மைப்படுத்தவும் வளப்படுத்தவும் பெரிதும் உதவி செய்கின்றன.

    இவர்களைப் போல மேடைப்பேச்சாளர்களுக்கு இந்தத்  திறன்  அதிகமாகத் தேவை படுகின்றது. சொற்களைத் தேர்ந்தெடுத்தல், அவைகளின் பயன்பாடு, அவைகளின் பொருளாதிக்கம், கேட்பவர்களின் மீது  அந்தச் சொற்களின் தாக்கம், சொற்களின் பயன்பாட்டின் பொழுது இருக்கின்ற உணர்வு நிலைகள் ஆகியவை அந்த நுண்ணறிவின் பரிமாணத்தில் சில பகுதிகளாகத் தென்படுகின்றன. அரசியல் மேடைப்பேச்சாளர்கள் பலரும் இந்த நுண்ணறிவுத் திறனில் தேர்வுபெற்று சொற்களால் மக்களின் மனங்களைக் கொள்ளை கொள்வதிலும் , தம் மீதும் தங்கள் கொள்கை மற்றும் கட்சிகளின் மீதும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இந்தத் திறனை வெகுவாக உபயோகிக்கின்றனர். அதே போன்று பல பயிற்சியாளர்கள் திறன்களை வளர்ப்பதற்கும் சில கோட்பாடுகளின் மீது “நம்பிக்கையை” உருவாக்கவும், மேன்மைப்படுத்தவும் இந்தத் திறனை பயன்படுத்துகின்றனர்.

    வழக்குரைஞர்கள் தங்கள் வழக்குகளுக்கு ஏதுவாக சட்டக் கோட்பாடுகளை வாதங்களால் இணைக்கவும், விளக்கவும், மேற்கோள்கள் காட்டவும் இந்தத் திறனை உபயோகிக்கின்றனர். வியாபாரிகளும்  விற்பனையாளர்களும் விளம்பரங்கள் செய்பவர்களும் மொழியின் நுண்ணறிவை தங்கள் தேவைக்கும் காலத்திற்கும் தகுந்தவாறு நடைமுறைப் படுத்துகின்றனர்.

    பள்ளிகளில் மாணவர்களுக்கு இந்த நுண்ணறிவை வளர்ப்பதற்கான சூழ்நிலைகளை ஆசிரியர்கள் ஏற்படுத்திக் கொடுத்தல் அவசியம். பொதுவாக மூளை நரம்பியல் ஆராய்ச்சி மற்றும் கற்றல் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள வல்லுனர்களின் கருத்து – கவிதை மற்றும் இசை மூலமாக இந்தத் திறனை வளர்ப்பது நல்ல பலன்களை அளிக்கும் என்பதே ஆகும்.  இயல், நாடகம், இலக்கணம் சார்ந்த பயிற்சிகள் அதிகமாக இடது மூளைத்   திறன்களைச் சார்ந்தவைகளாக இருப்பதால் அவைகளைக் காட்டிலும் கவிதை, இசை சார்ந்த கற்றலும் பயிற்சியும் வலது மூளைத் திறன்களையும் அதனைச் சார்ந்த கற்பனை வளத்தை ஆக்கப்பூர்வமாக இயக்கக்கூடிய, படைப்பாற்றல்களை வளர்க்கும் திறன்களையும் கொடுப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.

    (தொடரும்)

    Share
  • தாமகோட்சி முதல் நீலத் திமிங்கலங்கள் வரை… (From Tamagotchi to Blue whales – the journey of an emotional disaster).

    க. பாலசுப்பிரமணியன்

    இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு ஆங்கிலக் கட்டுரையில் சப்பானில் தயாரித்து குழந்தைகளிடம் பழக்கத்திற்கு விடப்பட்ட “தாமகோட்சி” என்ற ஒரு மின்னணுவால் இயக்கப்பட்ட ஒரு விளையாட்டுப் பொருளின் தாக்கத்தை பற்றி எழுதியிருந்தேன். ஒரு குழந்தையின் வடிவில் இயக்கப்பட்ட இந்த மின்னணு பொம்மை பள்ளிச் சிறுவர்களிடம் பாசத்தையும் ஒழுங்கையும் குழந்தைகளைப் பேணுவதற்க்கான திறன்களை வளர்ப்பதற்காக தயாரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த உயிரற்ற மின்னணுக் குழந்தைகளை சிறுவர்கள் உயிருள்ள குழந்தைகள் போல் பேணத் தொடங்குவர். இந்தக் குழந்தைக்குப் பசியெடுக்கும் பொழுது அது ஒரு குரல் (Beep sound)  எழுப்பும்.    உடனே அதன் உரிமையாளர் அதற்கு உணவு கொடுக்கும்வண்ணம் ஒரு இயக்கத்தைச் செய்ய வேண்டும். அதே போல் அந்தக் குழந்தைக்குத் தூக்கம் வரும்பொழுது விளையாடும் எண்ணம் இருக்கும் பொழுதோ அல்லது உடல் நலக்குறைவு ஏற்படும் பொழுதோ அது அதற்கான மாறுபட்ட ஒரு ஒலியை ஏற்படுத்தும். இவ்வாறு ஒவ்வொருமுறை ஒலி வரும்பொழுதும் அதன் உரிமையாளர் அதற்குத் தகுந்த தேவையான ஒரு இயக்கத்தைச் செய்தல் வேண்டும். அவ்வாறு  தவறினால் ஒரு சில முறைகளுக்குப் பின் அந்த உயிரற்ற மெய்நிகர் பொம்மை உயிரிழந்துவிடும்

    இதன் காரணமாக பல பள்ளிச் சிறுவர்கள் இந்த மெய்நிகர் (virtual) பொம்மைகளை தங்கள் பைகளில் வைத்துப் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தனர். வகுப்பறைகளில் அந்த “பீப்” ஒலிகள் தொடர்ந்து வந்ததால் ஆசிரியர்களுக்கு பாடங்களை படுத்துவதில் தடங்கல்கள் ஏற்பட்டதால் இந்த விவகாரம் பத்திரிகைகளில் விவாதிக்கப்பட்டது. அது மட்டுமல்ல ..இந்த பொம்மைகள் உயிரிழந்த காரணத்தால் அதன் சொந்தக்காரக் குழந்தைகள் துயரத்தால் மனஅழுத்தம் ஏற்பட்டு மனநல மருத்துவர்களை அணுகியதாகச் செய்திகள் வந்தன. அது மட்டுமல்ல, தொடர்கதையாக இந்த இறந்த குழந்தைகளை அடக்கம் செய்வதற்கான ஒரு தனி வலைத்தளம் ஏற்படுத்தப்பட்டது.

    இது ஒரு விளையாட்டுப்  பொருளாக இருந்தாலும் குழந்தைகளின் மனநலத்திலும் வாழ்க்கைப் போக்கிலும் இவை ஏற்படுத்திய பெரிய அளவிலான தாக்கங்கள் பற்றி உலக அளவில்  விவாதிக்கப்பட்டது  .தொழில்நுட்பங்களில் வரும் மாற்றங்களால் புதிதாக அறிமுகமாகும் மின்னணு சார்ந்த பல விளையாட்டுப் பொருள்களின் தாக்கங்கள் உலக அளவில் வளரும் குழந்தைகளின் சிந்தனைப் போக்கு, உணர்வு நிலைகள், உறவு முறைகள் மற்றும் சமுதாயாப் பார்வைகள் பற்றி விவாதங்கள் தொடங்கின. ஆனால் வியாபார நோக்கில் இந்த மின்னணுப் பொம்மைகள் ஏற்படுத்திய பொருளாதார வளர்ச்சியும் லாபப்  போக்குகளும் இதன் தாக்கங்களை ஓரங்கட்டி வியாபாரத்தை மட்டும் பெருக்கிக் கொண்டிருந்தன.

    தாமகோட்சியைத் தொடர்ந்து பல மின்னணு விளையாட்டுப் பொருட்கள் குழந்தை உலகில் தங்கள் தோரணங்களைக் கட்டிக்கொண்டிருந்தன. அதன் கருத்துப் பரிமாணங்கள் செயல் பரிமாணங்கள் மாற்றம் கண்டு புதிய உணர்வுநிலைகளையும் சிந்திக்கும் திறன்களையும் அதன் பாதைகளையும் தொடர்ந்து தாக்கிக்கொண்டிருந்தன. ஆனால் அதை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கும் பெற்றோர்களை பொறுத்த வரையில் குழந்தைகள் தனிமைப் படுத்தப்பட்டதாலும் அவர்கள் நேரங்கள் விளையாட்டுப் பொருட்களோடு ஒதுக்கப் பட்டதாலும் தங்களுக்கு கிடைத்த “விடுதலை” உணர்வால் மகிழ்வுற்றுக் கண்மூடி நின்றனர். .

    இதன் விளைவுகள் :

    1. குழந்தைகளின் தனிமை விரும்பும் போக்கு
    2. போதையானதுபோல் விளையாட்டுக்களுக்கு அடிமையான நிலை.
    3. ஆக்கிரமிப்பு நடத்தை.
    4. பொறுமையின்மை
    5. தோல்விகளை ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு மன நிலை.
    6. வெற்றியை நோக்கிய ஒரு வெறித்தனம்

    இது போன்ற பல உணர்வுகளின் தாக்கங்கள் வீட்டிலும் பள்ளியிலும் எளிதாக வெளிப்பட்டன. விளையாடும்பொழுது பேசப்பட்ட, உபயோகிக்கப்பட்ட வார்த்தைகள் – “Attack, Shoot, kill, Fire, Destroy – போன்ற பல வார்த்தைகள் மற்றவர்களோடு உறவாடும்பொழுது சாதாரணமாக வெளிப்பட்டு உறவு முறைகளை பாதித்து வந்தன. ஆனால் வீடுகளில் சமுதாயப் போட்டிகளின் பங்காளிகளாக இதை ஏற்றுக்கொண்டும், ;இந்தக் காலத்திற்கு இது சரி ” என்ற ஒரு வறட்டு வாதத்தில் தங்கள் கௌரவங்களைக் களைந்து வந்தனர்.

    இன்று.

    நீலத் திமிங்கலங்கள் விடும் சவால்  என்ற விளையாட்டு உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்றது.

    இதன் நோக்கமும் விளையாட்டு முறையும் தான் என்ன?

    இந்த மின்னணு விளையாட்டுக்கு இரையாகும் சிறுவர்கள் இந்த விளையாட்டை மேற்பார்க்கும் சிலரின் ஆணைகளுக்கு கட்டுப்பட்டு அவர்கள் இடும் கட்டளைகள் சிரம் மேற்கொண்டு நிறைவேற்ற வேண்டும். அந்த மேற்பார்வையாளர்கள் விடும் சவாலை ஏற்றுக்கொண்டு அதை சமாளித்து தங்கள் திறனை வெளிப்படுத்தி அதற்கான சான்றுகளோடு அவர்களை அணுகி தங்கள் வெற்றிக்கு முகாந்திரமிட்டுக்கொள்ள வேண்டும். பொதுவாக விளையாடுபவர்களுக்கு இடும் ஆணைகள் சமுதாய அளவில் ஏற்றுக்கொள்ளப் படுபவைகளாக இருக்காது. ” உங்கள் கைகளை பிளேடால் அறுத்துக் கொள்ளுங்கள் .. குறிப்பிட்ட மனிதரைத் தாக்கி வாருங்கள்… இந்த இடத்திலுள்ள பொருளை நொறுக்குங்கள்… உங்களைத் தற்கொலைக்குத் தயார் செய்து கொள்ளுங்கள் ..” என்ற வினோதமான விவாதத்திற்குரிய அழிவுக்கு வழிகாட்டக்கூடிய விளையாட்டுக்கள்..

    விளைவு ?

    இது வரை உலக அளவில் பல பள்ளி செல்லும் சிறார்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.. இந்தியாவிலும் நடந்துள்ளது.

    நடப்பினைக் கண்டறிந்த அரசாங்கம் விழித்துக்கொண்டு இதற்கான விளையாட்டுத் தொடர்புகளை துண்டிக்க ஆணையிட்டுள்ளது..

    இப்படிப்பட்ட விளையாட்டுக்கள் தேவையா…? யார் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்?

    பெற்றோர்கள் எப்பொழுது விழித்துக் கொள்வார்கள்? தங்கள் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுவதில் எவ்வளவு தூரம் அவர்கள் செல்லலாம்? தங்கள் சமுதாய அந்தஸ்தையும் பணவீக்கத்தையும் வெளிப்படுத்தக் குழந்தைகளின் வாழ்வுகளோடும் அவர்கள் சிந்தனைகளை நசுக்கும் சூழ்நிலைகளையும் உருவாக்கலாமா ?

    சிந்திக்க வேண்டிய தருணம்…

    நீலத் திமிங்கலங்களின் சவால்கள் சந்திக்கப்பட்டு அவைகள் மீண்டும் கடலுக்கு அனுப்பப்பட்டாலும், நாளை அவர்கள் வேறு சுறாக்களாக அவதாரம் எடுத்தது வராதா?

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடிய பொன்னான பரிசு… தங்கள் நேரம்…!!

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (22)

    க.பாலசுப்பிரமணியன்

    அன்பின் ஆதிக்கத்தில் ஆண்டவன் அருள்

    திருமூலர்-1-3

    ஒரு மனிதனுக்கு அடிக்கடி ஏற்படும் ஒரு சிந்தனை –“ இறைவனின் தரிசனமும் இறையுணர்ந்த ஆனந்த அனுபவமும் இந்த உடலும் உயிரும் இருக்கும் வரை கிடைக்குமா?  இந்த மானுட உடலும் அதைக்கட்டிப்போடும் ஐம்பொறிகளும் இறையனுபவத்திற்கு உதவுமா அல்லது அதற்குத் தடங்கலாக அமையுமா? இந்த உடல் மறைந்த பின்பு கிடைக்கப்போகும் இறையனுபவத்திற்கு  இந்த வாழ்க்கை ஒரு முன்னுரையா?  – இது போன்ற பல ஐயங்களால் நாம் கட்டிப்போடப்பட்டு எது உண்மை எது பொய் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்றோம். இதற்க்கெல்லாம் விடை கொடுப்பது போன்று அமைந்துள்ளது திருமூலரின் கீழ்க்கண்ட பாடல்

    ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய் முன்னஞ்

    சேனாய்வா னோங்கித் திருவுருவம் அண்டத்

    தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந்

    தான் முழு தண்டமு மாகி நின்றானே

    ஊனிலும் உறைபவன் உயிரிலும் நிறைபவன்.. காணுமிடமெல்லாம் காணும் பொருளிலெல்லாம் கண்ணுக்கு குளிர்வாய் காணக் கிடைப்பவன்.. அப்படி இந்த உடலிலும் உயிரிலும் உறைபவனிடம்  நம்மால் அன்பு செலுத்தாமல் இருக்க முடியுமா?…

    இவ்வாறு அவனே உடலாகவும் அவனே உயிராகவும் அவனே உயிர் மூச்சாகவும் இருக்கும்பொழுது அவனிருக்கும் இந்த உடலையும் உயிரையும் நாம் நல்ல முறையில் பேணிக்காக்க வேண்டாமா?  உயிர் மூச்சுள்ள வரையிலும் இவை அனைத்தையும் அவனுக்குச் சேவை செய்யவும் அவன் பெயரைச் சொல்லவும் உபயோகப் படுத்த வேண்டாமா?

    ஆனால் நாம் என்ன செய்கின்றோம்? இவை அனைத்தையும் வீணடித்து மீண்டும் அவன் பாதங்களில் சென்று “இறைவா என்னைக் காப்பாற்று, எனக்கு அருள் செய்” என்றல்லவா வேண்டுகின்றோம்?  இந்தத் துயர் நம் மனத்தில் இருந்தால் எப்படி இருக்கும்? இதை விளக்குவது போல் அமைந்துள்ளது பட்டினத்தாரின் இந்தப் பாடல் :

    பொல்லா தவநெறி நில்லா தவனைம் புலன்கடமை

    வெல்லா தவன்கல்வி கல்லா தவன்மெய்  யாடியவர்பாற்

    செல்லா தவனுண்மை சொல்லா தவனின் திருவடிக்கன்

    பில்லா தவன்மண்ணி லேன்பிறந் தேன்கச்சி யேகம்பனே.

    இந்தத் துயரிலிருந்து விடுபட நாம் செய்ய வேண்டியதென்ன? நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அவனிடம் அன்பு செலுத்தி உலகத்தில் காணும் இடமெல்லாம் அவனே காட்சியாயிருக்க, காணும் பொருளெல்லாம் அவனே மூலமாக இருக்க அத்துணை பொருள்களிலும் அவனைக்கண்டு அதில் அன்பு காட்டுவதே அவனுக்குச் செய்யும் தொண்டாகும். அந்த அன்பே அவனுக்கும் நமக்கும இடையே உள்ள பிணைப்பாகும்

    ஆகவே திருமூலர் அன்பையே சிவமாக்கி, அன்பையே நிறைத் தத்துவமாக்கி காணும் பொருளிலிலெல்லாம் அன்பைப் பொழிவதே இறையுடன் நமக்குள்ள தொடர்பு என்பதை தெளிவாக விளக்குகின்றார்

    அன்பு சிவம் இரண் டென்பர் அறிவிலார்

    அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்

    அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்

    அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

    இந்த இணையற்ற இன்பத்தை பெற்ற உள்ள எப்படி இருக்கும்? காணும் காட்சியெல்லாம் அவனாயிருக்க நெஞ்சம் க்ளிப்பினிலே கூத்தாடாதோ?

    அந்த நிலையைக் கண்டதால்தானோ மாணிக்கவாசகர் திருஅம்மானையிலே இன்பக் கிளைப்பில் கூறுகின்றார் :

    சூடுவேன் பூம் கொன்றை சூடிச் சிவன் திரள் தோள்

    கூடுவேன் கூடி முயங்கி மயங்கி நின்று

    ஊடுவேன் செவ்  வாய்க்கு உருகுவேன் உள் உருகித்

    தேடுவேன் தேத் சிவன் கழலே சிந்திப்பேன்

    வாடுவேன் பேர்த்தும் மலர்வேன் அனல் ஏந்தி

    ஆடுவான் சேவடியை பாடுதும் காண் அம்மானாய்

    அன்பு இல்லாத உள்ளத்தில் இறைவன் எப்படி குடியிருப்பான்? உடலாலும், செல்வத்தாலும் வார்த்தைகளாலும் செயல்களாலும் அவனுக்கும் அவன் அடியார்களுக்கும் பணி செய்தாலும் அன்பு இல்லாத உள்ளத்தினால் செய்யும் பொழுது என்ன பயன் கிட்டும்? இதை மிகத் தெளிவாக விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது அப்பரின் இந்த தேவாரப்  பாடல்:

    கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை `

    ஆடினாலும், அரனுக்கு அன்பு இல்லையேல்

    ஓடும் நீரினை ஓட்டைக்கு குடத்துஅட்டி

    மூடி வைத்திட்ட மூர்க்கனோடு ஒக்குமே

    ஆகவே, அன்புக்கு மட்டும் கட்டுப்படுகின்ற இறைவனின் அருளாட்சியை உள்ளுணர்ந்த வள்ளலாரோ மிக அழகாக அன்பின் சிறப்பையும் அத்துடன் இறைவனின் இணைப்பையும் விளக்கும் வண்ணம் பாடுகின்றார் :

    அன்பெனும் பிடியுள் அகப்படும் மழையே

    அன்பெனும் குடில் புகும் அரசே

    அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே

    அன்பெனும் கரத்து அமர் அமுதே

    அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே

    அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே

    அன்பெனும் அணுவுள் அமைந்த பேர்ஒளியே

    அன்புருவாம் பரமசிவமே !

    (தொடரும்)

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் -90

    க. பாலசுப்பிரமணியன்

    நுண்ணறிவின் பல பரிமாணங்கள் (Multiple Intelligence)

    education-1-1-1

    நுண்ணறிவைப் பற்றிய ஆராய்ச்சி உலகளாவிய பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது கற்றலைப் பற்றிய ஆராய்ச்சி மையங்கள் (Centers of Educational Research) மூளை – நரம்பியல் பற்றிய ஆராய்ச்சி நிலையங்கள்,(cognitive Research centers) மனநலம் பற்றிய ஆராய்ச்சி மையங்கள்(Mental Health and psychometric research centers) போன்ற பல இடங்களில் நுண்ணறிவு மூளையின் இயற்பியலைச் சார்ந்ததா அல்லது வேறு காரணங்களின் தாக்கத்தால் நுண்ணறிவின் தன்மையும் திறமையும் மாறுபடுகின்றதா என்ற பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. நுண்ணறிவைப் பொதுவாக ஒரு அறிவுசால் திறனாக (cognitive intelligence) மட்டும் கருதப்பட்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் மூலமாக ஒருவருக்கு அறிவுசால் நுண்ணறிவு இருக்கும் பட்சத்தில் அதன் தாக்கம் பல மூளைத் திறன்களில் வெளிப்படுகிறது என்றும், இதன் காரணமாக ஒருவருக்கு ஏதாவது ஒரு அறிவு நுட்பத்தில் நுண்ணறிவின் அடையாளங்கள் இருக்கும் பட்சத்தில் அது மற்ற கற்றல் திறன்களிலும் வேறுபட்ட பரிமாணங்களில் வெளிப்படும் என்றும் சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து அறிவுசால் நுண்ணறிவை மதிப்பீடு (Assessment of Intelligence Quotient) செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு அதற்கான மதிப்பீட்டுக்கு குறியீடுகள் தயாரிக்கப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு வரை இந்தக் குறியீடுகள் ஒரு தனி மனிதனின், ஒரு மாணவனின், ஒரு படைப்பாளியின் சாதனைகளுக்கும் வெற்றிகளுக்கும் அடையாளங்களாகக் காட்டப்பட்டன

    ஹோவர்ட் கார்ட்னர் (Howard Gardner) என்ற ஒரு அமெரிக்க மூளை மற்றும் உளநல மேதை தன்னுடைய பல ஆராய்ச்சிகள் மூலமாக “அறிவுசால் நுண்ணறிவு” என்பது எவ்வளவு சிறப்பாக அமைந்தாலும் ஒரு மாணவனுடைய பன்முக அறிவித் திறன்களை (Multiple achievements) வெளிப்படுத்த அது போதுமானதாக இல்லை என்ற ஒரு கருத்தைத் தெரிவித்து, நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளின் சாதனையாளர்களின் மற்றும் சான்றோர்களின் வாழ்க்கை வரலாறுகளை அலசி ஆராய்ந்து இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான நுண்ணறிவு இருந்தது என்ற ஒரு கருத்தை முன் வைத்தார். ஆகவே நுண்ணறிவுக்குப் பல பரிமாணங்கள் உண்டென்றும் அவைகளை பொதுவாக ஏழு வகைகளாகப் பிரிக்கலாம் என்றும் ஒரு புதிய கருத்தை வெளியிட்டார்.

    அது மட்டுமல்ல. கால நேரங்களுக்குத் தகுந்தவரும், சமுதாய விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சிகளுக்கேற்றவாறும் கற்றலிலும் மூளை வளர்ச்சி மற்றும் செயல்களிலும் நுண்ணறிவின் செயல்பாடுகளிலும் அதன் அமைப்புகளிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு என்றும், இப்போது சொல்லப்பட்ட ஏழு நுண்ணறிவுகளைத் தவிர மேலும் பல நுண்ணறிவுகள் காலப்போக்கில் வளர செயல்பட வாய்ப்புக்கள் உண்டு என்ற ஒரு கருத்தையும் முன் வைத்தார்

    அவர் அறிவித்த ஏழு நுண்ணறிவுகள் கீழ்க்கண்டவை :

    1. இசைசார்ந்த நுண்ணறிவு (Musical Intelligence)
    2. மொழிசார்ந்த நுண்ணறிவு (Linguistic Intelligence)
    3. தர்க்கரீதியான நுண்ணறிவு (Logical Intelligence)
    4. இயக்க (தசை) சார்ந்த நுண்ணறிவு (Kinesthetic Intelligence)
    5. தனிப்பட்ட உறவுசார்ந்த நுண்ணறிவு (inter-personal intelligence)
    6. தனிப்பட்டவரின் உள்ளுணர்வுசார்ந்த நுண்ணறிவு (Intra-personal intelligence)
    7. காட்சி-வெளி சார்ந்த நுண்ணறிவு (visual-spatial intelligence)

    இதன் தொடர்ச்சியாக மேலும் இரண்டு நுண்ணறிவுகள் இத்துடன் இணைக்கப்பட்டன.

    அவையாவன:

    8.. இயற்கைசார்ந்த நுண்ணறிவு (Naturalistic Intelligence)
    9. இருத்தலியல் சார்ந்த நுண்ணறிவு (Existential Intelligence)

    இதன் தொடர்ச்சியாக டேனியல் கோல்மான் என்ற ஒரு உணர்வியல் மற்றும் மனநல ஆராய்ச்சியாளர் பத்தாவது நுண்ணறிவினைப் பற்றிய விளக்கம் தந்தார்.

    அது

    10. சமூகம் சார்ந்த நுண்ணறிவு (Social Intelligence)

    மேற்கூறப்பட்ட பத்து வகையான நுண்ணறிவுகளைப் பற்றிய விரிவான ஆராய்ச்சிகளும் அதற்கான வறைபாடுகளும் கற்றல் முறைபாடுகளும் விளக்கமாக அளிக்கப்பட்டு; கற்றல் முறைகளிலும் அறிதல் -புரிதல் செயல்களை வேகப்படுத்தவும் மேன்மைப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

    காலப்போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முன்னிறுத்தி மேலும் சில நுண்ணறிவுத் திறன்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அவற்றில் சில :

    1. கணினிசார் நுண்ணறிவு (Digital Intelligence)
    2. பாலியல்சார் நுண்ணறிவு (Sexual Intelligence)

    ஆயினும், இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளாத சில மனநல மூளையியல் வல்லுனர்கள் நுண்ணறிவு கருத்தினை வலியுறுத்தி இந்தக் கோட்பாடுகளை புறக்கணித்தும் வருகின்றனர். இருப்பினும் உலகத்தின் நாடுகளில் இந்தக் கோட்பாடுகளைத் தழுவிய கல்வித் திட்டங்களும் பரிந்துரைகளும் (curricular framework) பரிசீலிக்கப்பட்டு நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த வெவ்வேறு விதமான நுண்ணறிவுகள் எவ்வாறு செயல்படுகின்றன, பள்ளிகளிலும் வீடுகளிலும் இந்தக் கருத்தை அறிந்து எவ்வாறு நம் குழந்தைச் செல்வங்களின் வாழ்க்கையையும் கற்றலையும் மேம்படுத்தலாம் என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.

    (தொடரும் )

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்-21

    க. பாலசுப்பிரமணியன்

    எந்த வடிவில் இறைவனைக் காணலாம்?

    திருமூலர்-1-3

    உள்ளத்தில் இறைவனை நிறுத்தி வழிபட நாம் முனைகின்றபொழுது நம்முள்ளே எழும் கேள்வி “எந்த இறைவனை நாம் வழிபட வேண்டும்?” “அவன் உருவம் எவ்வாறு இருக்க வேண்டும்?” “அவன் அமைதியானவனா இல்லை கோபத்தை வெளிக்காட்டிக்கொண்டிருப்பவனா?” என்ற பல தேவையற்ற கேள்விகள் உள்ளே எழுகின்றன. இந்தக் கேள்விகள் அனைத்தும் தெளிவில்லாத மனதின் அறிகுறியாக அமைகின்றது. “உண்மை ஒன்றே; அதைக் காண்பவர்கள் தங்கள் பார்வைக்குத் தகுந்தவாறு விமர்சிக்கின்றார்கள்” என்று நமது மறைகள் அழகாகச் சொல்லுகின்றன.

    சுந்தரமூர்த்தி நாயனாரோ இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் கூறுகின்றார்:

    பலவுருவுந் தன்னுருவே யாய பெருமான்”

    இந்தக் கருத்தை மேலும் தெளிவுறுத்துவதுபோல திருமூலர் விளக்குகின்றார்:

    “திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவோர்க்கு

    புரையற்   றிருந்தான் புரிசடை யோனே.” 

    பட்டினத்தாரோ அவனுடைய எங்கும் நிறைந்த நிலையை விளக்கி அவனை அனுபவபூர்வமாக உணர வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றார்

    “நூலா லுணர்வரிய நுண்மையினு  நுண்மையன்காண்

    பாலாறு சர்க்கரைபோற் பரந்தபரி பூரணன்காண் “

    எவ்வாறு பாலில் கரைந்த சர்க்கரையின் இனிப்பு பால் முழுவதிலும் பரவி நிற்கின்றதோ அதுபோல் அவனும் எங்குமாகி நிற்கின்றான். அப்படிப்பட்ட இறைவனை நாம் எந்த உருவத்தில் காண்பது.? அவன் அணுவுக்குள்ளும் உள்ளானா? அல்லது மாமலைகளிலே இருக்கின்றானா?   இதற்குத் தீர்வு காண்பதுபோல் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்:

    ணுவுள் அவனும் அவனுள் அணுவுங்

    கணுவுற நின்ற கலப்ப துணரார்

    இணையிலி யீச னவனெங்கு மாகித்

    தணிவுற நின்றான் சராசரந் தானே..” 

    இறைவனின் இந்தப் பரந்த விரிந்த உலகளாவிய உண்மையினை விளக்கும் வகையில் நமக்கு எடுத்துச் சொல்லுகின்றார் மாணிக்க வாசகர்:

    அற்புதன் காண்க அனேகன் காண்க

    சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க

    சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க

    பத்தி வலையிற் படுவோன் காண்க

    ஒருவ னென்னு மொருவன் காண்க

    விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க

    அணுத்தருந் தன்மையில் ஐயோன் காண்க

    இணைப்பறும் பெருமையி லீசன் காண்க

    அரியதில் அரிய அரியோன் காண்க

    மருவிய பொருளும் வளர்ப்போன் காண்க

    எத்தனை வடிவத்தில் அவன் காட்சி அளிக்கின்றான் ! அவனை ஏதாவது ஒரு வடிவத்தில், ஒரு உருவத்தில் அடைத்து வைக்க முடியுமா?

    ஒன்றே பலவாகி நிற்கின்ற இந்த உண்மையை விளக்கும் வண்ணம் வள்ளலாரோ இறைவனை எவ்வாறு காண்கின்றார் எனபதை விளக்குகின்றது கீழ்கண்ட பாடல் :

    மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ

    மறை நான்கின் அடிமுடியும் நீ

    மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ

    மண்டல மிரண்டேழும் நீ.

    பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ

    பிறவும் நீ ஒருவன் நீயே

    பேதாதி பேதம் நீ பாதாதி கேசம் நீ

    பெற்ற தாய் தந்தை நீயே.

    உணர்வு பூர்வமாக, அறிவு பூர்வமாக நாம் சிந்திக்க முயன்றால் அவனே ஒன்றாகவும் அவனே பலவாகவும் தென்படுவான். எவ்வாறு ஒரே ஒளி பல வண்ணங்களில் கண்களுக்குப் புலப்படுகின்றதோ அவ்வாறே அவனது பல வண்ணங்கள் நம் கண்களுக்குத் தென்படுகின்றன. அனைத்திலும் உள்ளிருந்து அனைத்தையும் கடந்து அனைத்துமாக அனைத்தும் ஒருங்கிணைந்த ஒன்றாகத் தெரிகின்ற அவன் வடிவை நாம் எப்படிப் போற்றினாலென்ன !

    தொடருவோம்

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் -89

    க.பாலசுப்பிரமணியன்

    கற்றலும் நுண்ணறிவும் (Learning and Intelligence)

    education-1-1-1

    பல நேரங்களில் பள்ளிகளிலும் கல்வித்துறைகளிலும் கற்றலின் குறிக்கோள் மாணவர்களை ஒரு குறிப்பிட்ட தகுதிக்குத் தயார் செய்வதாகமட்டும் இருக்கின்றது. இதற்கு மையமாக ஒரு பாடப்புத்தகமும் அதைச் சார்ந்த தேர்வுகளும்  முன்வைக்கப்படுகின்றன.  பாடப்புத்தகங்களைச் சார்ந்த  தேர்வுகளும் பொதுவாக ஒரு மாணவனின் கற்றலின் திறன்களின மதீப்பீட்டிற்காக (Assessment of skills)  நடத்தப்படுகின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த  நோக்கங்கள் முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டு வெறும் நினைவுகள் சார்ந்த (Memory based) மற்றும் செய்திகள் சார்ந்த (information based) தேர்வுகளாக மாறி அதன் முழுமையான பலனைத் தருவதில்லை. இதன் காரணமாக தேர்வுகளின் மதிப்பீடுகள் ஒரு மாணவனின் முழு கற்றலையோ அல்லது கற்றல் சார்ந்த திறன்களையோ  வெளிப்படுத்திடுவதில்லை. மதிப்பெண்களின் தரக்குறைவால் அந்த எண்களுக்கும் அவை வெளிப்படுத்தும் திறன்களுக்கும் எந்த சம்பந்தமும் சமன்பாடும் இருப்பதில்லை. ஒரு மாணவனின் நுண்ணறிவை வளர்ப்பதற்க்கோ அல்லது மதிப்பேடு செய்வதற்க்கோ அவை காரணமாகவோ அல்லது கருவியாகவோ அமைவதில்லை.

    எந்த ஒரு பொருள் கருத்து அல்லது  அறிவுத் துகளையோ அலசி ஆராய்ந்து அதை புத்திக்கூர்மையுடன் உபயோகிப்பதே நுண்ணறிவாகக் கருதப்படுகின்றது. ஆகவே நுண்ணறிவை வெளிப்படுத்துவதற்குத் தேவையான நிகழ்வுகள் – அறிதல்,(Cognition) புரிதல் (understanding). இடம், பொருளுக்குத் தகுந்தவாறு ஒரு கருத்தை உபயோகித்தல்,(contextiual application of knowledge) அந்த உபயோகத்திற்கான  முழுமையான பலனை  அடைதல் (Maximizing the application of knowledge)  ஆகியவையாகும். எப்பொழுது இந்த நிகழ்வுகளைச் சார்ந்த கற்றல் ஏற்படவில்லையோ அப்பொழுது கற்றலின் நோக்கம் பலவீனமாகி  “நுனிப்புல் மேய்தல்” என்ற சொற்றொடருக்கு விளக்கமாக அமைந்துவிடும்.

    பல நூற்றாண்டுகளாக “நுண்ணறிவு” (Intelligence) என்பதை வெறும் “அறிவுசால்  நுண்ணறிவாகவே”  (Cognitive Intelligence) கருதிவந்தனர். அறிவு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் ஒருவர் காட்டும் திறனை  வைத்து அவர்களுடைய  நுண்ணறிவு மதிப்பிடப்பட்டு அதற்கான குறியீடுகள்  Cognitive intelligence scales ) தயாரிக்கப்பட்டன. இதன் காரணமாக குறிப்பிட்ட அறிவுத்திறன்களை வெளிப்படுத்த முடியாதவர்கள் நுண்ணறிவில் குறைந்த தகுதி உள்ளவர்களாகக் கருதப்பட்டு சிறப்பான வேலைகளுக்கும் செயல்களுக்கும்  தகுதியற்றவர்களாகக்  கருதப்பட்டனர்.. “நுண்ணறிவு எண்கள்”(Cognitive Index)  ஒரு மனிதனின் சிறப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

    பல ஆராய்ச்சிகளின் காரணமாக, ‘நுண்ணறிவு’ என்பது வெறும் ‘அறிவுசால்” வெளிப்பாடு அல்ல என்றும்   அதிகமான நேரங்களில் அது ‘உணர்வுசால்”  நிகழ்வென்றும் அறியப்பட்டு “உணர்வுசால்  நுண்ணறிவுக்கான ” (Emotional Intelligence) விளக்கங்களும் அதற்கான குறியீடுகளும்  கண்டுபிடிக்கப்பட்டன. நடைமுறையில் “உணர்வுசால் நுண்ணறிவில்” மேம்பட்டவர்கள் ‘அறிவுசால் நுண்ணறிவில் மேம்பட்டவர்களைக் காட்டிலும் திறனுடையவர்களாகவும் வாழ்க்கைப் பாதையில் வெற்றிப்படிகளை எளிதாக அடைபவர்களாகவும் அறியப்பட்டனர். ஆகவே  கல்வி பாடத்திட்டங்களில் “உணர்வுசால் நுண்ணறிவை” வளர்ப்பதற்கான  வழிகளையும் கோட்பாடுகளையும், நடைமுறைத் திட்டங்களையும் கொணருவதற்க்கான முயற்சிகளின் அவசியம் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

    உணர்வுசால் நுண்ணறிவு பற்றிய ஆராய்ச்சிகளின் விளக்கத்தையும் கற்றலுக்கும் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் அதன் பயன் பற்றிய பல மேபட்ட விளக்கங்களை டேனியல் கோல்மான் என்ற அறிஞர் மற்றும்  ஆராய்ச்சியாளர் விளக்கமாக எழுதி  உள்ளார். ஒரு தனி மனிதனின் தன்னறிவு, தன்னடக்கம், முயற்சிகள், உறவுமுறைகள், செயல் பரிமாணங்கள், வாழ்க்கைப் போராட்டங்கள், வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளும் மனப்பாங்கு, சமூக உள்ளுணர்வுகள் போன்ற பல பரிமாணங்கள் இந்த உணர்வுசால் நுண்ணறிவால்  பாதிக்கப்படுகின்றன.

    எனவே கற்றல் நடக்கும் காலங்களில் அதற்கான பாடத் திட்டங்கள், பாடம் நடத்தும் முறைகள், அதற்கான பயிற்சிகள் ஒரு மாணவனின் உணர்வுகளை வலுப்படுத்துவதாகவும், வளப்படுத்துவதாகவும், மேம்படுத்துவதாகவும் அமைய வேண்டும். இவைகள் வெறும் புத்தகக் கட்டமைப்புக்குள் இருக்கும் எழுத்துக்களுக்கும் பின்னப்படுவதில்லை. இதனால்தான் “பாடத் திட்டங்களும், புத்தகங்களும் ஒரு விமானத்திற்குத் தேவையான ஓடுகளத்தைப்  போல் கருதப்படுகின்றன.” எவ்வாறு ஒரு விமானம் ஓடுகளத்தை    உபயோகப்படுத்தி வானில் பறந்து உயர்காணலைத் தேடிச்  செல்கின்றதோ அதே போல் கற்றலின் நோக்கம் புத்ததகங்களையும் பாடங்கள் நடத்தப்படும் முறைகளையும் உபயோகப்படுத்தி நுண்ணறிவின் உச்சங்களைத்  வேண்டும் இந்த நுண்ணறிவு அறிவுசால் நுண்ணறிவு மற்றும் உணர்வுசால் நுண்ணறிவு ஆகிய இரண்டு வளங்களின் இனப்பிப்பில் வளர்ந்து வளப்பட்டு மேன்மை அடைதல் வாழ்க்கையின் வெற்றிக்கு மிக்க அவசியம்.

    நுண்ணறிவின் மற்றொரு பரிமாணமாக ‘திறன் நுண்ணறிவு’ (Skill Quotient ) கருதப்படுகின்றது . ஒரு மாணவன் தன்னுடைய அறிவுசால் நுண்ணறிவோடும், உணர்வுசால் நுண்ணறிவோடும் எவ்வாறு தன கருத்து சார்ந்த மற்றும் கைத்திறன் சார்ந்த நுண்ணறிவை  வெளிப்படுத்துகின்றானோ  அவனுக்கு  வெற்றிப்படிகளின் பயணம் மிகவும் எளிதாக அமைகின்றது. அறிவும், உணர்வும் சார்ந்த நுண்ணறிவுகள் எவ்வளவு இருந்தாலும் அவைகள் அவனுடைய செயல் பரிமாணங்களில் வெளிப்படவில்லையென்றால்  விழலுக்கிறைத்த நீரைப்போல் வீணாகிவிடுகின்றது. ஆகவே கற்றலின்  முழுமையின் வெளிப்பாடாக செயல்திறன்கள் அமைய வேண்டும். எப்போது இந்த செயத்திறன்கள் அவனுடைய அறிவு மற்றும் உணர்வுசால் நுண்ணறிவுகளோடு இணைந்து ஒளிர்கிறதோ அப்பொழுது அவனுடைய முழுத்திறனும் உலகுக்கு வெளிச்சம்போட்டுக்  காட்டப்படுகின்றது. ஆகவேதான் பல நாட்டுக் கல்வித்திட்டங்களில் இந்த மூன்று நுண்ணறிவுகளின் சங்கமத்தை (IQ, EQ and SQ) உயர்த்துவதற்கான முயற்சிகள் தளர்வின்றி எடுக்கப்படுகின்றன. நம்முடைய பாடத்திட்டங்களும் அதன் வரைபாடுகளும் இதைக் கருத்தில் கொள்ளுதல் இன்றியமையாததாக ஆகின்றது.

    தொடருவோம்

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (20)

    க. பாலசுப்பிரமணியன்

    இறையுணர்விற்கு என்ன வழி?

    திருமூலர்-1

    ஒரு முறை ரோமாபுரியின் பேரரசராக இருந்த  ஜூலியஸ் சீசர் தன்னுடைய குருவை சந்திக்கச் சென்றார். அவரை வணங்கிய மாமன்னர் குருவிடம் “நான் தங்களுக்கு என்ன சேவை செய்யலாம்” என்று கேட்டாராம். அவனைப் பார்த்துச் சிரித்த குருவோ ” நீ என்னுடைய வெளிச்சத்தில் நிற்காமல் இருந்தாலே போதும்” என்றாராம். ஒவ்வொரு குருவும் இதையே தான் விரும்புகின்றார். தன்னுடைய சீடனுக்குத் தான் வழிகாட்டியாக இருந்தாலும், தன்னுடைய வழியை அவன் தானே  தேடிக்கொள்ள வேண்டும் என்பதே உட்கருத்து. எந்த ஒரு குருவும் தன்னுடைய சீடனின் கைகளை பிடித்துக் கடைசி வரை நடப்பதில்லை.

    இறைவனைத் தேடும் ஒவ்வொரு மனிதனும் இருளை நீக்கும் குருவின் துணைகொண்டு தன் உள்ளத்துள்ளே இருக்கும்  ஆன்மீகப் பாதையில் பயணம் செய்கின்றான். அவ்வாறு செல்லும் பொழுது அவனுக்கு கிடைக்கும் அனுபவங்கள் ஏராளம், ஏராளம் ! அந்த அனுபவங்களைத் தருவதற்கு குரு என்னவெல்லாம் செய்கின்றார்? பின் வரும் பாடல் அதை நன்கு விளக்குகின்றது

    பத்தி பணித்து பரவும் அடிநல்கிச்

    சுத்த உரையால் துரிசறச்  சோதித்துச்

    சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால்

    சித்தம் இறையே சிவகுருவாமே.

    அனுபவங்களின் முத்தாய்ப்பாக சீடனுக்குக் கடைசியில் அறிவும் ஒளியும் கிட்டுகின்றன. இது ஒரு ஆனந்தமான அனுபவம். இந்த ஆனந்த அனுபவத்தை உணர்கின்ற ஒருவன் இறைவனைத் தன்னுடைய இதயத்தில் நிறுத்தி மகிழும் பொது அவனுக்கு இந்த வெளி உலகையெல்லாம் துறந்து ஆன்ம உலகின் வெளிச்சமும் அதைச் சார்ந்த ஒரு முக்தி நிலையும் தென்படுகின்றது. இந்த நேரத்தில் அந்த குருவே இறைவனின் உருவாகாத்  தென்படுகின்றார் . அந்த இறைவனும் குருவின் வடிவில் தோற்றமளிக்கின்றார் . இந்த இனிய பயணத்தை விளக்குவது போல் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்

    மாடத்து  ளானலன் மண்டபத் தானலன்

    கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன்

    வேடத்து ளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில்

    மூடத்து ளேநின்று முக்திதந் தானே .

    இதயத்தின் உள்ளே இறைவன் அமர்ந்தாலும் அவனை அறிந்து கொள்ளக்கூடிய அறிவும் அதற்கான முயற்சியும் அனைவருக்கும் இருப்பதில்லை. குருவின் துணைகொண்டு இந்த அறிவை பெற்றால் உள்ளும் புறமும் இறை சக்தியே சூழ்ந்திருப்பதை உணரமுடியும். இந்த உன்னத அறிவு நிலையே உண்மையான முக்தி நிலை. இதை உணர்ந்த பட்டினத்தார் கூற்று இதோ :

    எனக்குள்ளே நீயிருக்க உனக்குள்ளே நானிருக்க

    மனக்கவலை தீர வரமருள்வாய் பூரணமே.

    இந்த முக்தி உணர்வு நிலையை விளக்கும் அப்பரோ தேவாரத்தில், இந்த நிலையை அடைவதற்குக் காரணம் கூட அந்த பரம்பொருளின் அருள்தான் என்று எடுத்துச்  சொல்லும் வண்ணம் பாடுகின்றார் :

    “ஊனாகி உயிரோடு யதனுள் நின்ற உணர்வாகிப்

    பிறவனைத்தும் நீயாக நின்றாய்

    நானேதும் அறியாமே என்னுள் வந்து

    நல்லனவும் தீயனவுங் காட்டா நின்றாய் ..”

    இப்படிப்பட்ட உன்னதமான உணர்வுநிலைக்கு வழிகிடைத்தாலும் அதைச் சரியாக பயன்படுத்திக்கொள்ளாத நெஞ்சை எப்படிப் போற்றமுடியும்? அதனால்தானோ மாணிக்க வாசகர் எல்லாம் இருந்தும் அவனை அறிய முயலாத நெஞ்சை “பிண நெஞ்சே” என்ற சொற்றொடரால் அழைக்கின்றார்

    அறிவு இல்லாத என்னைப் புகுந்து ஆண்டுகொண்டு

    அறிவதை அருளி மேல்

    நெறி எலாம் புலம் ஆக்கிய எந்தையைப்

    பந்தனை அறுப்பானைப்

    பிறவி இலாத இன்னருள்கள் பெற்றிருந்தும்

    மாறு ஆடுதி பிண நெஞ்சே

    கிரி எலாம்  மிகக் கீழ்படுத்தாய் கெடுத்தாய்

    என்னைக் கெடுமாறே

    (தொடரும்)

    Share